ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம்


சீடர்: தி டிஸ்சிப்பிள்

மேவும் பிரமனே விண்டு உருத்திரன்
மேவுமெய் யீசன் சதாசிவன் மிக்கப்பால்
மேவும் பரம்விந்து. நாதம் விட ஆறா(று)
ஓவும் பொழு(து)அணு ஒன்றுள தாமே.

திருமூலர் இயற்றிய திருமந்திரம்: எட்டாம் தந்திரம் – 15. ஆறந்தம்

பொழிப்புரை :

பஞ்ச கலைகட்கு அதிதேவராகப் பொருந்துபவருள் பிரமனது அதிகாரத்திற்கு உட்பட்டது. நிவிர்த்தி கலை. இது `பிருதிவி` என்னும் தத்துவத்தைத் தன்னுட் கொண்டது. இதற்குமேல் இதனை உள்ளடக்கிப் பரந்திருப்பது பிரதிட்டா கலை. இஃது அப்பு முதல் பிரகிருதி முடிவாக உள்ள இருபத்து மூன்று தத்துவங்களைத் தன்னுட் கொண்டது. இதற்கு மேல் இதனை உள்ளடக்கிப் பரந்திருப்பது வித்தியா கலை. இதற்கு அதிதேவன் மாயோன். இதற்குமேல் இதனை உள்ளடக்கிப் பரந்திருப்பது வித்தியா கலை. இது வித்தியா தத்துவம் ஏழினையும் தன்னுட்கொண்டது. இதற்கு அதிதேவன் உருத்திரன். இதற்கு மேல் இதனை உள்ளடக்கிப் பரந்திருப்பது சாந்தி கலை. இது சிவதத்துவங்களில் கீழ் உள்ள சுத்த வித்தை, ஈசுரம், சாதாக்கியம் என்னும் மூன்று தத்துவங்களைத் தன்னுட் கொண்டது. இதற்கு அதிதேவன் மகேசுரன். இதற்குமேல் இதனை உள்ளடக்கிப் பரந்திருப்பது சாந்தி யதீத கலை. இது சிவதத்துவங்களுள் எஞ்சி நின்ற, `சத்தி, சிவம்` என்னும் இரண்டு தத்துவங்களைத் தன்னுட் கொண்டது. இதற்கு அதிதேவன் சதாசிவன். இங்குக் கூறிவந்த தத்துவங்களில் இறுதியாக எல்லாவற்றிற்கும் மேலே உள்ளனவாகச் சொல்லப்பட்ட `சத்தி, சிவம்` – என்னும் தத்துவங்களே `விந்து, நாதம்’ என்றும் சொல்லப்படும். ஆகவே, இவைகளையும் கடந்தால்தான் முப்பத்தாறு தத்துவங் -களையும் கடந்தததாகும். அவ்வாறு கடந்தபொழுதுதான் கருவி கரணங்களின் வேறாய், `ஆன்மா’ என ஒன்று உளதாதல் விளங்கும்.

Aditya Modak plays an aspiring Hindustani classical musician in The Disciple.
Netflix

உபதேசகலை

சதுரங்க ஆட்டம் விதிகளுக்கு உட்பட்டது. அதே போல் இஸ்லாமிய மதம் புத்தகத்தில் எழுதப்பட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது. கடவுளின் பேச்சை மொகமது நூலாக மொழிகிறார். குரான் என்றால் “ஒப்பித்தல்”. இந்தப் படத்தில் குருவின் வித்தையை சீடன் எப்படி புரிந்து கொள்கிறான் என்று காண்பிக்கிறார்கள். குருவின் குருவான மாயி எனப்படும் சரஸ்வதி கடாட்சம் பெற்ற மகாமேதையின் எண்ணங்களை “பாராயணம்” செய்கிறார் சீடர்.

இந்து மதத்திற்குள் செல்ல வேண்டாம். எந்த வேதங்களை எவர் அருளினார்கள், எவரெவர் அதற்கு எந்தெந்த காலகட்டத்தில் பாஷ்யம் எழுதினார்கள், எந்த உபநிஷத்துகளை எப்பொழுது எடுத்துக் கொள்ள வேண்டும், இதிகாசம், கீதை, யோகம் என்று ஆல மரக் கிளைகளாக வேர் விட்டு தாவி தொலைந்து விடுவோம். எளிமையாக யூத மதத்தையும் கிறித்துவத்தையும் எடுத்துக் கொள்ளலாம்.

ஹீப்ரூ பைபிள் நூலில் இருப்பதில் மிகச் சிறிய பாகமே சினாய் மலையில் தூதர் மோஸசுக்கு நல்கப்பட்டது. யூதர்களின் புனித நூல் 24 புத்தகங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அது மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன:

  1. தோரா (கல்வி)
  2. நெவீம் (தூதர்கள்)
  3. கெடுவிம் (எழுத்துகள்)

முதல் எழுத்துக்களைச் சேர்த்தால் யூதர்களின் புனித நூலான ”தனக்” கிடைக்கிறது. பொ.யு.மு. ஆறாம் நூற்றாண்டில், மோசஸ் மறைந்து எழுநூறு வருடங்கள் கழிந்த பிறகே முதல் நூலான ”தோரா” தோற்றம் அடைகிறது. ”கெடுவிம்” நூலில் சேர்க்கப்பட்ட டேனியலின் நூல் 150 பொ.யு.மு.-இல் சேர்க்கப்பட்டது. மதநூல் வருவதற்கு ஆயிரம் ஆண்டுகள் முன்பே யூதர்கள் நியமங்களையும் அனுஷ்டானங்களையும் கடைபிடித்தார்கள்; சரித்திரங்களையும், புராணங்களையும் வாய்மொழியாக சொன்னார்கள்; சட்டங்களையும் கடமைகளையும் நிறைவேற்றினார்கள். கடவுளுக்கும் பக்தர்களுக்கும் இருந்த உறவை வார்த்தை வடிவில் செம்மையாக்க நாளாகி இருக்கிறது.

கிறித்துவ மதத்தில் கிறிஸ்து மரித்ததும் மரித்த பின் எழுந்ததும், கிறிஸ்துமஸின் போது பிறந்ததும் – எதுவும் யேசுவால் பதிவு பெறவில்லை. யேசு எதையும் எழுதிவைத்துவிட்டுப் போகவில்லை. அவரின் உடனடி சீடர்களும் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். யேசு மறைந்து பல தசாப்தங்கள் கழித்து பால் என்பவர் கடிதங்கள் எழுதுகிறார். அவை “புதிய ஏற்பாடு” துவங்க வித்திடுகின்றன. பால் எழுதிய “கொயின்” (Koine) கிரேக்க மொழி யேசு கிறிஸ்துவிற்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை. உள்ளூர் சிக்கல்களை, பஞ்சாயத்துத் தகராறுகளைத் தீர்ப்பதற்காக அவ்வப்பொழுது எழுதிய அஞ்சல்கள் அவை. யேசுவின் வாக்கியத்தை வெகு வெகு அரிதாகவே பால் மேற்கோள் காட்டுகிறார்.யேசுவின் வாழ்க்கையில் இருந்து எந்த சம்பவத்தையும் எவ்வித பைபிள் கதையையும் பால் இந்த மடல்களில் எழுதவில்லை.

பால் மறைந்த பின் இன்னொரு தலைமுறை கடக்கிறது. மத்தேயு, மார்க், லூக் வருகிறார்கள். இவர்கள் காலம் கடந்து இன்னொரு தலைமுறை உருண்டோடுகிறது. நான்காவது நற்செய்தி ஜான் உருவாகிறது. விவிலிய காலம் என்று சொல்லப்பட்ட காலகட்டத்தில் விவிலியமே இருந்திருக்கவில்லை. அதன் பின் உருவாக்கப்பட்டிருக்கிறது.

வேதம் என்பதற்கும் நியதி என்பதற்கும் என்ன வித்தியாசம்? இந்த ராகத்தை இப்படியெல்லாம் ஆலாபனை செய்யலாம், இந்தப் பாடலை இப்படியெல்லாம் கொண்டு செல்லலாம், இந்த கீர்த்தனையை இந்த ராகம் கொண்டுதான் பாட வேண்டும் என்று ஹிந்துஸ்தானி சங்கீதம் கட்டமைக்கிறது. இது குரு – சிஷ்ய பாரம்பரியத்தில் மட்டுமே வளர்கிறது. அதாவது ‘கரானா’ — என்றால் பாணி / பள்ளி / குரு பரம்பரை.

ஹிந்துஸ்தானி இசையில், ‘கரானா’ வுக்கு முக்கிய இடம் உண்டு. அனேகமாக, ஒவ்வொரு கலைஞரும் ஏதாவதொரு ‘கரானா’வை சேர்ந்தவராக இருப்பார். ‘கரானா’ என்றால், ‘குடும்ப பாரம்பரியம்’ என்றும் சொல்லலாம். (அரியக்குடியார் பாணி, ‘செம்மங்குடியார் பாணி’, டைகர் வரதாச்சாரியார் பாணி, என்று கர்நாடக இசைக்கலைஞர்களையும், ‘தஞ்சாவூர் பாணி’, ‘பந்தநல்லூர் பாணி’, ‘வழுவூரார் பாணி’ என்று பரதநாட்டியக் கலைஞர்களையும் குறிப்பிடுவதுபோல!)

ஒவ்வொரு இசைக்கலைஞரும் ‘கரானா’ வை வைத்து அடையாளம் காட்டப் பட்டாலும், தரமான இசை என்று வரும்போது, அந்தக் குறிப்பிட்ட ‘கரானா’ வின் சிறப்பியல்புகள் என்னென்ன, இசைக்கும் முறையில் உள்ள சிறுசிறு வேறுபாடுகள் எவை, கலைஞரின் இசை-ஞானம், கலை-நுணுக்கம், ஆகியவற்றைத்தான் கவனிக்க வேண்டும். ஒவ்வொரு ‘கரானா’ வையும் தோற்றுவித்தவரின் தனிப் பட்ட குரல் வளம், அதன் தன்மை, அதன் தரம், அதன் இனிமை ஆகியவற்றை வைத்துத் தான் இனம் கண்டு கொள்வது வழக்கம்.

பரதரின் நாட்டிய சாஸ்திரம் என்ற இசைக் கட்டுரைகளில் (பொ.யு. இரண்டாம் நூற்றாண்டு) இந்தக் கொள்கைகள் செம்மைப்படுத்தப்பட்டன. அவற்றில் தாளத்துக்குச்‌ சிறப்பிடம்‌ கொடுத்திருக்‌கிறார்கள்‌. பரத சாத்திரத்தில்‌ பரதாசாரியர்‌ தாம்‌ பரதசாத்திரத்தைச்‌ சாண்டில்யர்‌, வாதஸ்யர்‌, கோசலர்‌, தத்திலர்‌ ஆகிய (ஞான) புத்திரர்களுக்குக்‌ கற்பித்தார். இவர்களில் தத்திலமுனி அவர்கள் தத்திலம்‌ என்ற ஒரு தாள நூலை பொ.யு. மூன்றாம் நூற்றாண்டில் தாள சாத்திரமாக்குகிறார். அதன்‌ சில துண்டுப்‌ பகுதிகள்‌ இன்று கிடைக்கின்றனவே தவிர, நூல்‌ முழுமையாகக் கிடைக்கவில்லை.

இப்படி குருகுலம், வாய்ப்பாட்டு, செயல்முறை பயிற்சி, பிறவிஞானம் என்றே இருந்த இந்துஸ்தானி இசையில் நாராயண பத்கண்டேயை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். ஆரம்பத்தில் இந்துஸ்தானியில் இராக, இராகினி, பரிவார முறையே காணப்பட்டது. இவ்வாறு இராகங்களைப் பாகுபடுத்தாமல் விஷ்ணு நாராயண பாத்கண்டே பத்து தாட்முறையை அறிமுகம் செய்கிறார். இவர் தான் இராகங்களை வகைப்படுத்தி, பட்டியலிட்டு, அவற்றிற்குக் குறியீடுகளையும் ஏற்படுத்தி, பாடும் வகைகளையும் உருவாக்கியிருக்கிறார். இந்துஸ்தானி இசையையும் குறியீடுகள் (notation) மூலம் எழுத, படிக்க, பாட வழி வகுத்தவர் இந்த மராத்தியர் ஆவார். பத்கண்டே எழுதிய ‘லட்சிய சங்கீதம்’ என்ற நூல் இங்கு குறிப்பிடத்தகுந்தது.

யேசுவின் மறைவிற்கு பிறகு முன்னூறு ஆண்டுகள் கழித்து அவரது வாழ்வும் வாக்கும் உருவான மாதிரி ஸாம வேதத்திலிருந்து தோன்றிய ஹிந்துஸ்தானி இசை முகம்மதியர்கள் கைப்பற்றிய பின்னர் பாரசீக இசை, அரேபிய இசை என்பவற்றின் கலப்பினால் மாற்றம் கண்டு உருவானது. பதினாறாம் நூற்றாண்டில் தான் மார்ட்டின் லூதர் “சோலா ஸ்க்ரிப்ச்சுரா” (Sola scriptura) கோட்பாட்டைக் கொணர்ந்து, கிறித்துவர்களுக்கு ஒரேயொரு மத நூல் – பரிசுத்த வேதாகம நூல் என்று ஒருங்கிணைக்கிறார். ஒரே இடத்தில் எல்லா விஷயமும் கிடைப்பது மனித முளைக்கு எளிமையாக அணுகக்கூடியது. பொதுத்திரளுக்கு செல்லக்கூடிய வகையில் சுலபமாக ஆக்கிய மார்ட்டின் லூதரைப் போல் அமீர்குஸ்ரு வருகிறார்.

துருக்கி நாட்டின் அபூ அல்-ஹஸன்யாமினுத்தின் குஸ்ரூ, அவர் காலத்தில் பிரபலாமாகவிருந்த பல சிக்கலான இந்தியப் பாடல்களை எளிமையாக்கி மாணவர்களும் கற்றுக்கொள்ள வழிவகுத்தார். பல புதிய இராகங்களை உருவாக்கினார். அத்தோடு புதிய உருப்படி வகைகளான குல்பானா, தரானா குவாலி – கயல் போன்றவற்றையும் அறிமுகப்படுத்தினார். வீணையின் அமைப்பில் சில மாறுதல்களுடன் ஸிதாரையும் மிருதங்கத்தின் அமைப்பில் சில மாறுதல்களுடன் தபேலா என்ற வாத்தியத்தையும் புழக்கத்தில் விடுகிறார்.

இஸ்லாமிய அலாவுதீன் கில்ஜி காலகட்டத்தில், அமீர்குஸ்ரு இந்துஸ்தானி இசையை மொகமது குரானை நூலாக்கியது போல் ஹிந்துஸ்தானியை ஒருங்கிணைத்து ஒரு சட்டகத்துக்குள் கொண்டு வருகிறார். அன்றும் பாடப்பட்டு வந்த, இன்றும் பலரால் பின்பற்றப்படும் பாணிக்கு ‘துருபத்‘ அல்லது ‘துருபத் காயகி’ இந்த படத்தின் பின்புலம். இது கிட்டத் தட்ட ‘இராகம் – தானம்’ இரண்டுக்கும் இணையானது என்று சொல்லலாம். பாடகரின் மனோதர்மத்திற்கும், கற்பனை வளத்திற்கும் ஏற்பப் பாடப்படும் ‘ஆலாபனை’ இதில் பிரதான அம்சம். (‘ஆலாபனை’க்கு வடக்கே ‘ஆலாப்’ என்று பெயர்.) இதைத் தொடர்ந்து பாடப்படும் பாட்டுக்கு ‘தமார்’ என்று பெயர். இது ‘பல்லவி’க்கு இணையானது.

‘துருபத்’ பாணியில் பாடலுக்கு நான்கு பகுதிகள் உண்டு. அவை: தாயிஸ் / ஸ்தாயி, அந்த்ரா, சஞ்சாரி, மற்றும் ஆயோக் / ஆபோக்; ‘தமார்’ தாளத்தில் பாடப்படும் பல்லவி’க்கு ‘தமார்’ என்றே பெயர். தமார், ஹோரி ஆகிய இரண்டு உருப்படி வகைகளும் துருபத் பாடுபவர்களால் பாடப்படுகின்றன.

பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘அதாரங், சதாரங்’ என்ற இருவரால் அறிமுகப்படுத்தப்பட்ட பாணி ‘கயால்‘ என்று குறிப்பிடப்படுகிறது. இன்று இந்த கயால் பாணிதான் பெருமளவு பின்பற்றப்படு கிறது. தற்காலத்தில் கெயால்கள் நான்கு வகைகளில் பாடப்பெறுகின்றன. ஆக்ரா-குவாலியர் வகை – முதலில் இருந்து கடைசி வரை தாளத்தினால் கட்டுப்பட்டிருக்கும். இதில் ஆலாபனையும், பாடலும் இரண்டறக் கலந்து பயன்படுகின்றன. கயாலில், ‘படா கயால்,’ ‘சோட்டா கயால்’ என்று இரு பிரிவுகளுண்டு.

‘துருபத்’ பாணிதான் பழமையானதும் கம்பீரமானதும் ஆகும். ‘துருபத்’ பாடகர் ஒரே ஸ்வரத்தில் உலகையே பிடித்துக் கொண்டு வந்து விடுவார். கயால் பாடுபவர் இந்த விளைவை ஏற்படுத்த பல ஸ்வரங்களின் கலவையை நம்ப வேண்டும்.
இந்துஸ்தானி இசையில் ‘ஆலாப்’ (ஆலாபனை)க்குத் தான் முக்கியத்துவம். பாடலுக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது. மணிக்கணக்காக ‘ஆலாப்’ பாடும் மரபு இந்துஸ்தானி இசையுலகில் சாதாரணம். அதனால்தான், இந்துஸ்தானி இசையில் பாடலாசிரியர்கள் (சாகித்ய கர்த்தாக்கள்) என்று எவருமே பிரபலமடையவில்லை. பாடகர்கள் தான் பிரபலமடைந்திருக்கிறார்கள்.

“The Disciple” contains extraordinary performances from a music teacher, played by Arun Dravid, that show the complex interplay between him and his student accompanists.

அன்னபூர்ணாதேவி – மாயி

1973-இல் ரிஷிகேஷ் முகர்ஜி-யின் அபிமான் என்னும் ஹிந்திப் படம் வெளியானது. அதில் புகழ்பெற்ற பாடகராக அமிதாப் வருவார். கூச்ச சுபாவமுள்ள பாடகியாக அமிதாபின் மனைவியாக ஜெயா பச்சன் நடித்திருந்தார். அந்தப் படத்தின் அசல்கள் பண்டிட் ரவிஷங்கரும் அவரது முதல் மனைவியுமான அன்னபூர்ணாதேவியும் எனலாம். இருவரும் இணைந்து சில கச்சேரிகளில் மேடையேறி இருக்கிறார்கள். “அவரை விட என் இசைக்கு ரசிகர்கள் தலையாட்டினார்கள். அது ரவிசங்கருக்கு உவப்பாக இல்லை. எனக்கு மக்களுக்காக வாசிப்பதிலும் அவ்வளவு விருப்பமில்லை. எனவே நிறுத்தி விட்டேன். சாதகத்தைத் தொடர்வேன்.” என்று அன்னபூர்ணா தேவி கூறியிருக்கிறார்.

ரவிசங்கரின் மாணவரான மதன்லால் வியாஸ் என்பவரின் கருத்தும் இதோடு ஒத்துப் போகிறது: “கச்சேரிகள் முடிந்தவுடன் ரசிகர்கள் ரவியை விட அன்னபூர்ணாவை மொய்ப்பார்கள். பண்டிட்ஜியால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை. அவரால் மேடையில் சரிசமமாக பங்களிக்க இயலவில்லை. அன்ன்பூர்ணா ஒரு ஜீனியஸ்.”

அப்பா (உஸ்தாத் அலாவுதீன் கான்), அண்ணாவை (உடன் பிறந்த உஸ்தாத் அலி அக்பர் கான்) உட்கார்த்தி கற்றுக் கொடுப்பார். அப்போது ஒரு வினாடி கூட சிதாரிலிருந்து கையை எடுக்காமல் பயிற்சி செய்ய வேண்டும் என்று கடுமையாக கட்டளையிட்டுவிட்டு கடைத்தெருவிற்கு செல்லுவார். அவர் எனக்கு கற்பிக்க மாட்டார். ஆனால், நாள் முழுவதும் அண்ணா, ரவிஷங்கர் மற்றும் எல்லா மாணவர்களுக்கும் பயிற்சிக்கு வாசிப்பதைக் கேட்டு கேட்டு. அவரை அறியாமலே இசை தேவி அவரின் மனத்தினுள் குடி கொண்டு விட்டாள். ஒரு நாள் பயிற்சி செய்து களைத்துவிட்ட அண்ணா, சற்றே இளைப்பாற நிறுத்தி இருக்கிறார். அப்போது சிறுமி. அண்ணா நிறுத்திவிட்டத்தைக் கண்டு ‘ அண்ணா, ஏன் நிறுத்தி விட்டிர்கள்?’ என்று அப்பாவைப் போலவே சொல்லி அடுத்த பகுதியை ம, த, நி, ஸா, ம, த, மத, தநி, சாரே, தநி, தநி என்று எந்தத் தவறும் இல்லாமல் பாடத்தொடங்கி விட்டார். அண்ணா அப்போது தலையைக் குனிந்து கொண்டே இருந்தார். அவர் வாசிப்பதற்கு தயாராக இல்லை. ‘என்ன ஆயிற்று? வாசியுங்கள்’ . அண்ணாவின் கண்களின் பார்வையைக் கண்டு திரும்பிப்பார்த்தால், அங்கே பின்னால் அப்பா அலாவுதீன் நின்று கொண்டிருக்கிறார். அக்கா பயத்தில் சிலையாகிப் போனாள். அப்பா இப்போது கோபப்படப்போகிறார், என்று பயந்து அப்படியே இருந்தார். இறைவனின் கட்டளையைப் போல அவரின் வாயிலிருந்து சொற்கள் புறப்பட்டன, ‘மகளே! நீ தான் சாட்சாத் சரஸ்வதி தேவி. நான் இத்தனை நாட்களாக இதைப் புரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டேன்’ என்றார்.

Annapurna Devi, Acclaimed but Reclusive Indian Musician | Tamil Archives

இப்படிப்பட்ட ஒரு மாமேதை என்னும் எதிர்பார்ப்புடன் ரசிகர்களைத் திருப்தியுற வைப்பதும் சிரமமாகிறது. சபா அரசியலை எதிர்கொள்ள வேண்டும். காரியஸ்தர்களுடன் சமரசங்கள் செய்ய வேண்டும். அவர்கள் அழைக்கும் விருந்துகளுக்கு செல்ல வேண்டும். பதில் உபசரிப்பு நல்க வேண்டும். புகைப்படங்களுக்கு அழகு காண்பிக்க வேண்டும். விதவிதமாக ஆடைகளும் சிகையலங்காரங்களும் இன்ன பிற ஆபரணங்களும் அணிய வேண்டும். அவை அலுங்காமல் முகப்பூச்சு கலையாமல் வேர்வை சிந்தாமல் வாயசைக்க வேண்டும். தனியாக இணையத்தளம் துவங்கி விசிறிகளை வரவழைக்க வேண்டும். விழாக்களுக்கு பயணிக்க வேண்டும். விமான தாமதங்கள், பாதையில் ஏற்படும் சுணக்கங்கள் என்று தடைகள் வந்தாலும் சொல்லிய நேரத்திற்கு டாணென்று ஆஜர் ஆகி உரையாற்ற வேண்டும். இன்றைய காலகட்டத்தில் ஒலிநாடா வெளியானவுடன் அதற்கான முன்னெடுப்புகளில் வெகுஜனங்களை ஈடுபடுத்த வேண்டும். நன்றாக செவ்வனே ஹிந்துஸ்தானியைக் கொடுத்தால் மட்டும் போதாது. அது எங்கிருந்து தோன்றியது, எவ்வாறு இவரின் குரலில் மிளிர்கிறது என்று நான்கைந்து பேரைக் கொண்டு பத்து ஊடகங்களில் கொண்டு சேர்க்க வேண்டும். இந்த சந்தையாக்க வேலையில் “மா”விற்கு விருப்பமில்லை.

ஆனால், அதே சமயம் தான் கற்ற வித்தையை தூய பாரம்பரியத்துடன், இசையில் மசாலா கலக்காமல் தன்னுடைய உண்மையான சீடர்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் அவருக்கு கடும் ஆர்வம் இருந்தது. இதிலும் ரவிஷங்கர் மாறுபட்டார். பீட்டில்ஸ் குழுவின் ஜார்ஜ் ஹாரிசன் என்று கிளை மாறினார். அன்னபூர்ணா “மா” ரொம்பவும் கண்டிப்பான குரு என பெயர் பெற்றவர். எனவே, குருகுலத்தில் கற்க சென்ற ஹரிபிரசாத் சௌராஸியா போன்ற வெகு சிலரே கரையேறி இருக்கின்றனர்.

மிருதங்கம், தபலா போன்ற கருவிகளின் சொற்கட்டுக்களை இராக தாளங்களுடன் பாடுவது திரிபாத் எனப்படும். அன்னபூர்ணா தன் அப்பாவிடம் இருந்து கற்றுக் கொண்ட துருபத் செவ்வியல் பயிற்சி குறித்து ஷாஜியின் கட்டுரையில் இருந்து ஒரு நறுக்கு:

அங்கிருந்த வெவ்வேறு குறுநில மன்னர்களின் அரசரவைகளில் ஆஸ்தான பாடகர்களாக 12 தலைமுறைகளாக பாடிவந்த ஒரு பரம்பரையில்தான் மெஹ்தி ஹசன் பிறந்தார். ஆனால் அவர்கள் பாடிவந்த துருபத் எனும் செவ்வியல் இசை வடிவம் இஸ்லாமியர்களின் இசையல்ல!

நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்துமதக் கோவில்களில் பாடப்பட்டுவந்த மரபான பக்திப்பாடல்களை சீரமைத்து உருவாக்கின இசைவடிவம்தான் துருபத். அதை பேணிக் காத்தவர்கள் இந்து மதத்தைச் சார்ந்த அரசர்கள். பாரசீகத்திலிருந்து வந்த இசைமுறைகளின் தாக்கத்தாலும் இஸ்லாமிய மன்னர்களின் ஆதரவினாலும் பதின்மூன்றாம் நூற்றாண்டு முதல் வளர்ந்து வந்த கயால் இசைமுறைதான் இஸ்லாம் மதத்தைச் சார்ந்த பாடகர்கள் முன்னெடுத்து வந்தனர். ஆனால் மெஹ்தி ஹசனின் மூதாதையர்கள் கயாலுக்கு மாறவில்லை. அவர்கள் இந்துமத ராஜாக்களின் அரசரவைகளில் துருபத் பாடுபவர்களாகவே இருந்து வந்தனர்.

’உஸ்தாத்’ என்று இஸ்லாம் மதத்தைச் சார்ந்த இசை விற்பன்னர்களை அழைப்பதும், ’பண்டிட்’ என்று இந்து மதத்தைச் சார்ந்த இசை மேதைகளை அழைப்பதும்தான் வழக்கம். ஆனால் மெஹ்தி ஹசனின் பரம்பரை அவர்களது துருபத் இசையினால் ’பண்டிட்’ என்றே அழைக்கப்பட்டனர். ஹிந்துஸ்தானி இசையின் இமையங்களாக கருதப்படும் மியான் தான்ஸேன், அப்துல் கரீம் கான் போன்றவர்களெல்லாம் ஒரு காலத்தில் இந்துமதத்திலிருந்து இஸ்லாமுக்கு மதம் மாறியவர்களே. தீபக் ராகம் பாடி தீபத்தை எரியவைத்தார் என்றும் மேகமல்ஹார் ராகம் பாடி மழை பொழிய வைத்தார் என்றும் நம்பப்படும் தான்ஸேனின் இயர்ப் பெயர் ராம்தனு மிஸ்ரா! ஆக்ரா கரானாவை நிருவியவரான உஸ்தாத் அப்துல் கரீம் கானின் பாட்டன் இஸ்லாமுக்கு மதம் மாறியவர்

ஷாஜி: மெஹ்தி ஹசன் – முடிவின்மையின் இசை (musicshaji)

”மா” – ரோஷனாரா கான் எனும் இயற்பெயர் கொண்டவர். மாயிஹர் என்னும் ஊரில் பிறந்தவர். இப்பொழுது படத்தில் மாயி என்னும் கதாபாத்திரத்தின் தாக்கத்தை உணரலாம். திரைப்படத்தில் “மாயி” என்பவரின் குரல் ஆங்காங்கே ஒலிக்கிறது. நாயகனுக்கு வழிகாட்டுதலாக அமைகிறது.

படத்தின் நாயகன் தனிமையில் தன் பைக் ஓட்டிச் செல்லும் நடுநிசி இரவுகளில் இந்தக் குரல் ஒலிக்கிறது. மாயி கொடுக்கும் ஆலோசனையில் தூய்மையும், நிலை சார் பார்வையும் உள் உண்மையைக் கண்டறிவதும் அடங்கும். இந்தக் காட்சிகள் ஸ்லோ மோஷனில் வருவதால் நம்மிடம் அமைதி குடிகொள்கிறது. இது நாயகனின் கண்ணோட்டத்தை உணர்த்துகிறது. தீர்க்கமான குரலின் பின்னணியில் தம்பூரா நாதம் கோவில் மந்திர உச்சாடனம் போல் தாள சுருதியுடன் ஜெபமாகிறது.

அந்த மேற்கோள்களில் சில:

1. சரஸ்வதியிடம் நம்பிக்கை வை. இசையின் தெய்வத்திடம் உறுதி பூண். அவளின் அனுக்கிரஹம் அப்படியே உனக்கு வரும். வெறும் இசையை மட்டும் பயிலாதே. நீடித்திருக்கும் திறனையும் விடாமுயற்சியையும் கற்றுக் கொள். இந்தப் பயணம் நீண்டது; கடினமானது. ஜொலித்திருக்க வேண்டியவர் கால்வாசியில் சுருண்டதைப் பார்க்கிறேன். ஆயிரம் முறை தோல்வியடைந்தாலும் எழுந்திரு. உன் சிந்தையை நெறிப்படுத்து. எந்த அசந்தர்ப்பத்திலும் நீ தேர்ந்தெடுத்த பாதையை விட்டு வழுவாதே!

2. இசையின் வழியாக சான்னித்தியத்தின் பாதையைக் கண்டடைவோம். இந்திய சாஸ்திரீய சங்கீதத்தை நித்திய தேடுதல் என்கிறோம். இந்த இரைதேர்தலுக்கு முழுச் சரணாகதியும் தியாகமும் கைகோர்க்கும். காசு வேண்டும், குடும்பம் குட்டி வேண்டும் என்றால் சினிமாவிற்குப் போய் டூயட் பாட்டைப் பாடு. இங்கே வராதே. இந்தப் பாதையில் தனித்து பயணி. பசியோடு நடப்பாயாக.

3. அமைதியற்ற மனதால் காயல் பாடலை ஆழமாகவும் சுத்தமாகவும் பிராமாணியமாகவும் பாடவே இயலாது. ஒவ்வொரு அட்சரத்தையும், ஒவ்வொரு தாளத்தின் உள்நுணுக்கத்தையும், உருவேற்றி வணங்கி உள்வாங்க தூய்மையான கள்ளம் கபடமற்ற அகம் கொள். காயல் என்றால் என்ன? அந்த நேரத்தில், அந்த குறிப்பிட்ட தருணத்தில் பாடுபவர்களின் மனநிலை. ராகத்தின் துணைகொண்டு இதை இன்னொருவரிடன் கொண்டு சேர்க்கிறாய். பாடும் போது, ராகத்தின் எந்தப் புதிய அம்சத்தை நீங்கள் வெளிப்படுத்துவீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது. ராகத்தின் உண்மை தன்னிச்சையாக வெளிப்பட வேண்டுமென நீங்கள் விரும்பினால், நீங்கள் உங்கள் மனதில் பொய்யையும் பேராசையையும் அசிங்கமான எண்ணங்களையும் அகற்ற வேண்டும். இதற்குத் தேவையான உள்ளார்ந்த ஒழுக்கமும் நம்பிக்கையும் எல்லோரிடமும் இருப்பதில்லை.

4. நீங்கள் எனது இசையைக் கற்றுக்கொள்ள விரும்பினால், ரசிகர்கள் போன்ற கருத்துக்களை மறந்து விடுங்கள். நான் பார்வையாளர்களுக்காகவோ புரவலர்களுக்காகவோ பாடவில்லை. நான் எத்தனை சிக்கலான ராகங்களில் தேர்ச்சி பெற்றுள்ளேன் அல்லது எவ்வளவு பயிற்சி பெற்றுள்ளேன் என்பதைக் காட்டுவதில் எனக்கு விருப்பமில்லை. நான் என் குருவுக்காகவும் கடவுளுக்காகவும் மட்டுமே பாடுகிறேன். அன்றொரு நாள் ஒருவர் என்னிடம் கேட்டார், “ஆனால் மாயீ, பார்வையாளர்களைப் பொறுத்து ராகத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டாமா?”. நான் சொன்னேன், “ஒரு அரங்கில் இருநூறு பேர் இருக்கிறார்கள். இருநூறு பேருக்கு இருநூறு நினைப்பு. எத்தனை பேரை மகிழ்விக்க முயற்சிப்பீர்கள்? நீ என்ன சர்க்க்ஸ் குரங்கா?” இங்கே எக்கச்சக்கமான கலைஞர்கள் சாஸ்தீரிய இசை என்னும் பேரில் குரலை வைத்து எல்லாவிதமான கஜ கர்ணங்களும் குட்டிக்கரணங்களும் அடிக்கிறார்கள். நல்லவேளையாக என் ஆசானிடமிருந்து அந்த மாதிரியானப் பயிற்சி எனக்குக் கிடைக்கவில்லை. அவர் எப்போதும் சொல்லுவார், “நீங்கள் கண்களை மூடிக்கொண்டு முதல் குறிப்பை உச்சரித்தவுடன், ராகத்தைத் தவிர வேறு எதுவும் உங்கள் மனதில் நுழைய அனுமதிக்கப்படக்கூடாது. அப்படியானால் அன்று நீங்கள் தோல்வியடைந்தாலும் பரவாயில்லை… ஏனென்றால் குறைந்த பட்சம் நீங்கள் மனப்பூர்வமாக முயற்சித்தீர்கள்.”

பிற படங்கள்

சங்கீதத்தை மையமாக வைத்து வேறு என்ன இந்தியப் படங்கள், தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்கள் நினைவிற்கு வருகின்றன?

தெலுங்கில் கே விஸ்வநாத் நிறைய எடுத்திருக்கிறார். சாகர சங்கமம், சங்கராபரணம்.

தமிழில் ”சிந்து பைரவி”யை சொன்னால் என்னை சரஸ்வதி தேவி வித்தியாபிரஷ்டம் செய்துவிடுவார்.

சமீபத்தில் தொலைக்காட்சித் தொடராக ”பேண்டிஷ் பண்டிட்ஸ்” (Bandish Bandits) பார்த்தேன். அதில் காதல் தொண்ணூறு சதவிகிதமும் கலந்திசை எட்டு சதவிகிதமும் கரானா வகையறா ஊறுகாயாகவும் வந்து போயின.

ராம்பிரசாத் கி தெஹ்ர்வி (रामप्रसाद की तेरहवीं) மாதிரி நிறைய படங்களில் இசைக் குடும்பம், சங்கீத ஆசிரியர்கள் வந்து போகிறார்கள். தல ரசிகர்களுக்கு “முகவரி” முக்கியமான படமாக இருக்கும்.

அதன் பிறகு சர்வம் தாளமயம், ஸ்வாதி திருநாள் எல்லாம் பட்டியலில் இருக்கிறது. விக்கிப்பிடியா சொல்லும் திரைப்படங்கள் இன்னும் தாராளமாக இருக்கிறது. பாலசரஸ்வதி அவர்கள் குறித்து சத்யஜித்ரே எடுத்த “பாலா” ஆவணப்படமும், எம்.எஸ். சுப்புலஷ்மி நடித்த 1945 மீராவும் ஹேமமாலினி நடித்து பண்டிட் ரவிசங்கர் இசையமைத்த 1979 மீராவும் கேள்விப்பட்டிருப்போம்.

மூபி தளத்தில் ஐந்து குறிப்பிடத்தக்க படங்கள் கிடைக்கின்றன:

  1. உஸ்தாத் அலாவுதீன் கான் – ரித்விக் கடக், 1963
  2. துருபத் – மணி கௌல், 1983
  3. சித்தேஷ்வரி – மணி கௌல், 1989
  4. அமர் பூபாலி – சாந்தாராம் ராஜாராம், 1951
  5. பைஜு பாவ்ரா – விஜய் பட், 1952

சாதகன்

படக்கதை

படத்தின் நாயகனின் மூன்று காலகட்டங்களில் படம் முன்னும் பின்னுமாக பயணிக்கிறது. அவன் பெயர் சரத். இருபதுகளில் இருக்கிறான். இது 2006-ஆம் ஆண்டு. அவனின் தோழர்களுக்கு வேலை கிடைக்கிறது; திருமணங்கள் ஆகிறது. சரத் தன் வாழ்க்கையயே இசைக்கு அர்ப்பணிக்க நினைக்கிறான். குருஜியின் பாடங்களை வேதவாக்காக பயில்கிறான். தினமும் இரவு சாதகம் செய்கிறான். குருவிற்குத் தேவையான எல்லா பணிவிடைகளும் சிசுருஷைகளும் செய்கிறான். குருவோ நாற்பது வயது வரையாவது சீடன் கற்றுக் கொண்டால்தான் கொஞ்சமாவது இசைக்கலை அப்பழுக்கில்லாமல் ஒட்டும் என்று சொல்லிவிடுகிறார். அவனுக்கு இசை கை வந்த கலையானதா? ரசிகர்களின் கரகோஷத்தைப் பெற்றானா? விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றானா? மேடையில் வெற்றி அடைந்தானா? எது வெற்றி?

உபகதை

அன்னபூர்ணாதேவி அறக்கட்டளையை நிர்வகிக்கும் நித்தியானந்த் ஹல்திபூர் இந்த சம்பவத்தை நினைவு கோருகிறார். “அன்றைக்கு எனக்கு செம களைப்பு. வாசிக்கவே உடல் ஒத்துழைக்காது போல் இருந்தது. ஆனால், தினசரி பாடம் எடுக்கும் வேளையில் ஆஜராகவிட்டால் ‘மா’விற்கு கெட்ட கோபம் வந்துவிடும். கடனேயென்றுதான் சென்றேன். என் பிரார்த்தனை எல்லாம் என் உடல்வலியை ‘மா’வே உணர்ந்து என்னை பயிற்சிக்குள் செலுத்தாமல் விட்டுவிடவேண்டும் என்பதாக இருந்தது. ஐந்து நிமிடம் புல்லாங்குழல் வாசித்தவுடன் என் சோர்வை கண்டுபிடித்துவிட்டார். ஆனால், வேண்டுதல் நிறைவேறவில்லை. என் பக்கத்தில் வந்து ”மஞ்ச் கம்மாஜ்” ராகத்தின் ஆரோகணத்தையும் அவரோகணத்தையும் கற்றுக் கொடுத்தார். அது அவரின் தந்தையால் இயற்றப்பட்ட இராகம். அதை இரண்டரை நணி நேரத்திற்கும் மேலாக வாசித்துப் பயின்றுகொண்டிருந்தேன். அதன் பின், ‘இப்பொழுது எப்படி உணர்கிறாய்?’ என்றார். என்னால் நம்பவியலவில்லை. என்னுள் ஒளி நிறைந்திருந்தது. நான் முற்றிலும் புத்துணர்ச்சியுடனும் ஆற்றலுடனும் உணர்ந்தேன். அப்பொழுது ‘மா’ சொல்வார்கள், ‘இந்த ராகம் ஓய்வைத் தரவல்லது. நோக்கம் தூய்மையாக இருக்கும் போது அந்த ராகத்தின் பலன் உன்னை வந்தடையும்.’”

சாதகம் என்றால் ‘அமைதியை ஆராய்வது’.

  • ‘சா’ – ஏக்கம்
  • ‘த’ – சாரத்தை தக்கவைத்தல்
  • ’க’ – உன்னதத்தில் நாட்டம்

தி டிஸ்சிப்பிள் படத்தின் நாயகன் சரத் இசைக்காக கன்னாபின்னாவென பிரத்தியாசைப் படுகிறான். கிளிப்பிள்ளையாக பாடுகிறான். எதற்காக சங்கீதத்தைப் பாடுகிறோம், யாருக்காக இசை பயில்கிறோம் என்பதில் அவனுக்கு குழப்பங்கள் உண்டு.

இசைக் குடும்பம்

அவன் தந்தை ஒரு புத்தக மேதை. தான் மட்டும் முயன்றிருந்தால் பெரிய வித்துவான் ஆகியிருப்பேன் என அங்கலாய்ப்பைக் கொண்டவர். அனேக கச்சேரிகளை சுப்புடுவாக கடுமையாக விமர்சிப்பவர். ‘சுரபி’ போன்ற நிகழ்ச்சியைத் தொகுத்தளிப்பவர். நல்ல இசையை சின்ன வயதிலேயே சரத்திற்கு கற்றுக் கொடுத்தவர். வயதுக்கு மீறிய அறிவை சரத்திடம் நுழைத்து பால்ய பருவத்திலிருந்தே இசையில் சாதிக்க வேண்டும் என்னும் வெறியை புகுத்தியவர்.

சரத் அவனுடைய அத்தையுடன் வாழ்ந்து வருகிறான். அன்றாடங்காய்ச்சி. பழைய வானொலி ஒலிப்பதிவுகளை புதிய சிடி / டிவிடி-க்களாக மாற்றித் தந்து விற்கும் நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட இலவசமாக வேலை பார்க்கிறான். யாருமே கேட்காத, எவருக்குமே தெரியாத முகங்களின் அரிதான அற்புதங்களை சபாக்களில் விற்கப் பார்க்கிறான்.

படமொழி

எனக்கு கர்னாடக இசையோ மேற்கத்திய இசையோ முறைப்படி தெரியாது. இந்த மாதிரி ஹிந்துஸ்தானி தெரியாத பார்வையாளரை எவ்வாறு இசையனுபவத்திற்குள் நுழைப்பது?

நான் கச்சேரிகளுக்கு சென்றிருக்கிறேன். கொஞ்சம் சீக்கிரமே சென்றுவிட வேண்டும். இல்லையென்றால், பாரதீய வித்யா பவன் மாதிரி இலவச சபாக்களில் சீட் கிடைக்காது. மின்விசிறி பக்கமாக இருக்கை இருக்காது. ஒரு சிலர் பக்கத்தில் உள்ளவரிடம் சொல்லிவிட்டு வெளியில் தம் போட போய்விடுவார்கள். இன்னும் சிலர் சபா காண்டீன் பக்கம் எட்டிப் பார்த்துவிட்டுச் செல்லப் போய்விடுவார்கள். நிகழ்ச்சிநிரலை விசிறியாக்கி காற்றுவாங்கிக் கொள்வார்கள். இதெல்லாம் இந்தப் படத்தில் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு முன்பும் அந்தச் சூழலை, ரம்மியத்தை, உணர்வை நம்முள் பாய்ச்சுகிறது. பாடகர் தன் நிகழ்ச்சியைத் துவங்கியவுடன் காமிரா மேடையில் இருக்கும் பக்கவாத்தியக்காரர்கள் மீது அலைபாய்கிறது; வித்வான் மீது சற்று நிலைக்கிறது; பின்னால் கவனத்துடன் தம்பூரா மீட்டும் சிஷ்யர்களிடம் மெதுவாக கவனத்தைத் திருப்புகிறது. பார்வையாளர்கள், விழா விருந்தினர்கள், போட்டி நடுவர்கள் என சகலரின் கண்ணோட்டங்களையும் நிரப்புகிறது.

அதன் பின் சரத் வருகிறார். அவரின் பார்வை தருணத்திற்கேற்ப மாறுகிறது. சில சமயம் ஆதுரம்; சில சமயம் ஆதரவு; சில சமயம் பொறாமை; சில சமயம் அதிவினயம்; சில சமயம் மனத்தாழ்மை; சில சமயம் பாதுகாப்பற்ற பயம். குருஜியின் பாடலை விட அந்த மாணாக்கனின் நவரச பாவங்கள், ‘போதும்டா… இதுக்குப் போய் அலட்டிக்காதே!’ என தட்டிக் கொடுக்க நினைக்கவைக்கிறது.

அனேக காட்சிகள் உள்ளடுக்குகள் நிறைந்தவை. உதாரணத்திற்கு ஒன்றே ஒன்று. நாயகனுக்கு இப்பொழுது நாற்பது வயது ஆகப் போகிறது. தற்காலத் தொலைக்காட்சியை மாலை நேரத்தில் புரட்டிக் கொண்டிருக்கிறான். செய்திகளில் மாட்டிறைச்சி தின்றவரை கழுவிலேற்றியதைச் சொல்லும் செய்தியை வினாடி நேரத்தில் கடந்து செல்கிறான். இன்னொரு கன்னலில் அதிரடி சிங்கரில் பாப் பாடல் ஒன்றைக் கேட்கிறான்.

கேள்வி நேரம்

  • கலை மேன்மையை அடைவதற்காக பலிகொடுக்கும் இழப்புகள், அந்தவிதமான உன்னத லட்சியங்கள் இல்லாமல் சமரசம் செய்து கொண்டு பொதுவெளியில் நட்சத்திரமாக வாழ்வதை விட திருப்திகரமானதா?
  • தூய்மையான இசை எது என்று தீர்மானிப்பதற்கு சரத் யார்?
  • அந்தரங்கத்தில் சந்தோஷமாக இருக்க வைத்த சங்கீதம், சாஸ்திரீய சங்கீதம் இல்லையென்பதற்கு நாம் தர்மசங்கடப்பட்டு, அந்த சிலாகிப்பை மறைத்துவிட வேண்டியதுதானா?
  • முசுடு என்பதற்கும் விமர்சகர் என்பதற்கும் என்ன வித்தியாசம்?
  • ஒழுங்கு மரியாதையாக கர்னாடக சங்கீதத்தின் பாலபாடம், ஹிந்துஸ்தானியின் ராகங்கள் எல்லாம் தெரிந்தால்தான் இந்த கச்சேரிகளின் நுணுக்கங்களைப் புரிந்து ரசிக்க முடியும் என்பது முக்கால்வாசி பேரை துரத்திவிடாதா?
  • ”உங்களுக்கு எது பிடிக்கிறதோ, அதைக் கண்டுபிடி. அது உன்னைத் தின்னட்டும்” என்பார்கள். அப்படித்தானா?
  • விருதுப் படங்கள் என்றால் கையடிக்கும் காட்சிகள் அவசியம் இடம்பெற வேண்டுமா?
  • தேசியத் தலைவர்கள் இறந்தால் போடப்படும் இசை என்று நான் கேட்ட இசைக்குள் இத்தனை அரசியல்கள்! எவ்வளவு சங்கதிகள்? அத்தனைக்கும் மேலாக எம்புட்டு வம்புதும்புகள்!?!

பாடப் புத்தகம்

பரிசுத்த வேதாகமத்தில் கோட்பாடுகளும் விதிமுறைகளும் மட்டும் இல்லை. பைபிள் கதைகளுக்கு புகழ்பெற்றது. ஆதாமும் ஏவாளும் தோன்றுகிறார்கள்; பெரு வெள்ளப்பெருக்கு வருகிறது; நோவா பேழை உருவாக்குகிறார்; ஆபிரஹாமும் ஐஸாக்கும் வம்சாவழியை கேள்விக்குள்ளாக்குகிறது; சாம்சன் மற்றும் டெலிலா தொன்மம் மோகமும் துரோகமும் விசுவாசமும் உணர்த்துகிறது. இசையை ஓடவிட்டு ஒலிக்கப் போட்டு ரசிப்பது ஒரு வகை. அது கதை வகை.

இந்தப் படம் அந்த வகை. இது இந்துஸ்தானி இசையின் அடிநாதம் என்ன, எவ்வாறு சீரழிகிறது என்றெல்லாம் மேடையில் இருந்து கதறவில்லை. இது திறமையற்றவனின், தோல்வியுற்றவனின் கதை. இது காலமாற்றத்தின், சமூக ஊடகத்தின், சூப்பர் சிங்கர் தலைமுறையின் கதை.

பைபிள் யேசுவின் வாழ்க்கையை குறிக்கவில்லை; அது போல் இந்தப் படம் மாயீ என்னும் சரஸ்வதி பிரத்தியட்சமாக தாண்டவமாடும் கலைஞரின் புராணமோ, ஹிந்துஸ்தானி குரு பரம்பரை சரித்திரமோ, ஒரு சீடனின் தன் வரலாறோ அல்ல. சங்கீதம் ஒரு உலகப் பொது மொழி. எந்தவோர் இசையும் அது எந்த விதிக்குட்பட்டது, எவ்வாறு மரபிற்குட்ப்பட்டது, என்றெல்லாம் யோசியாமல பாடமாகப் படிக்காமல் கற்பனைக்கு இடங்கொடுத்து புரிதல்களை விரிவாக்குமாறு பாடுங்கள்.

”ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குழந்தைக்கு ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசையை கற்றுக் கொடுத்திருந்தால் இந்த நாடு பிரிந்திருக்காது”

உஸ்தாத் படே குலாம் அலி கான்

ஹிந்துஸ்தானி இசை 101

‘கிரானா-கரானா’

அப்துல் வாஹித் கான், அப்துல் கரீம் கான் ஆகியோர் இந்தக் கரானா வின் முன்னோடிகள். இதன் சிறப்பியல்புகள்: ‘விளம்பித்’ லயத்துக்கு அதிக முக்கியத்துவம்; இனிமையான சஞ்சாரம், அருமையான ஸ்வரபிரஸ்தாரம், நுணுக்கமான ‘கமகங்கள்’. இந்தக் கரானா மூலம் புகழ் பெற்ற கலைஞர்கள்: ஒம்கார்நாத் தாகூர், பீம்சேன் ஜோஷி, சுரேஷ்பாபு மானே, நியாஸ் அஹமத், பிரபா ஆத்ரே, பர்வீன் சுல்தானா, சவாய் கந்தர்வா, பண்ஜேஸ்வரி புவா.

‘பாட்டியாலா-கரானா’

படே குலாம் அலிகான் தான் இந்தக் கரானாவை உருவாக்கியவர். இதன் சிறப்பியல்புகள்: ‘துரித’ லயத்திற்கு முக்கியத்துவம்; இனிமை; மனத்திற்கு அமைதி அளித்தல், வேகமான ஸ்வரபிரஸ்தாரம்; இலக்கண சுத்தம்.

மேற்சொன்ன கரானாக் களைத் தவிர இன்னும் சில கரானாக்களும் புழக்கத்தில் உள்ளன. அவை:

  • குவாலியர் கரானா
  • பனாரஸ் கரானா,
  • ஆக்ரா கரானா,
  • ராம்பூர் சஹஸ்வான் கரானா,
  • இந்தோர் கரானா,
  • மேவாத்தி கரானா,
  • ஜெய்ப்பூர் கரானா,
  • டெல்லி கரானா,
  • பெண்டி பஜார்-கரானா.

இந்துஸ்தானி இசை மரபில் புழங்கும் சில சொற்களுக்கு விளக்கம்

ஆமாத் – ஆலாபனையின் உச்சகட்டத்தில் நளின மாக வந்து சேரும் லய வின்யாசம்.
அடி – லயத்தின் குறுக்காக வாசித்தல்.
ஆகார் – (ஆ’காரம்) ‘ஆ’ வென்று வாயை முழுதுமாகத் திறந்து பாடுதல்.
அலங்கார் – ஸ்வரங்களை அழகாகப் பின்னிப் பிணைத்து இனிமையாக அலங்கரிப்பது.
ஆலாப் – ஆலாபனை.
அந்தோலன் – ஸ்வரத்தை மெதுவாக அசைத்துப் பாடுதல்.
‘தய்யாரி’ = வல்லவர்
‘டப்பா’ = பஞ்சாபைச் சேர்ந்த ஒட்டகம் ஓட்டுபவர்களின் நாட்டுப் பாடல் பாணி.
‘தரானா’ = அவசியமற்ற ‘தா’ மற்றும் ‘நா’ போன்ற ஸ்வர சொற்களைச் சேர்த்துப் பாடும் ஒரு பாணி.
‘டோக்’ = அலங்காரமாக வந்து விழும் ‘கார்வை’.
‘தீஹை’ = ஒரு ‘சங்கதி’ யை மூன்று முறை பிடித்த பின் உச்சகட்டத்தை (சாம்) அடைதல்.
‘தீர்வத்’ = மூன்று வெவ்வேறு தால்களைப் பயன்படுத்தி அமைக்கப் படும் மெட்டு.
‘தீயா’ = ஒரே சங்கதியை மூன்று முறை தொடர்ந்து பிடித்தல்.
‘உபாஜ்’ = கல்பனாஸ்வரம்.
‘வக்ர’ = வக்கிரம்.
‘வியாபிச்சாரி பாவ’ = (உப) துணை உணர்ச்சி பாவம்
‘ஜோர்’ = தபலாவின் துணையின்றி, (தாலில்லாமல்) சிதாரில் லயத்துடன் ஸ்வரங்களை வாசித்தல்.
”காலி’ = அழுத்தத்தை தவிர்த்தல்.
‘கராஜ்’ = அடித்தொண்டையில் ராக-ஆலாப் செய்தல்.
‘கட்கா’ = இது ஓர் ‘அலங்காரம்’ – ஒரு ஸ்வரத்திலிருந்து அடுத்து வரும் ஸ்வரத்திற்கு துடிப்புடன் தாவுதல்.
‘லராஜ்’ = கீழ்ஸ்தாயியில் ‘ஆலாப்’ செய்தல்.
‘போல்-தான்’ பாடலின் சொற்களை விரைவான துரித கதி சங்கதிகளால் பின்னுதல்.
‘தமார்’ = 14 சொற்கட்டுகளுடன் அமைக்கப்பட்ட தாலும் அந்தத் தாலில் அமைந்த பாடலும்.
‘கமக்’ = ‘கமகம்’ = மிகைப் படுத்தப் படும் குரல் ஏற்ற இறக்கங்கள்.
‘காத்’ = இசைக்கருவிகளில் வாசிப்பதற்கென்றே இயற்றப்படும் ‘சங்கதி’
‘காயகி’ = ‘பாணி’ ‘துருபத்-காயகி’ மற்றும் ‘கயால்-காயகி’ (‘சோட்டா கயால்’ மற்றும் ‘படா=கயால்’)
‘கரானா’ = ஒரு குறிப்பிட்ட இசைப் (குரு) பாரம்பரியம்.
‘கஜல்’ = உருது மொழியில் இயற்றப் பட்டுள்ள மெல்லிசைப் பாடல்கள்
‘ஜதி’ = ஒரு தால-வடிவை ஏற்படுத்தப் பயன்படும் ‘மாத்ரா’ க்களின் கூட்டு.
‘ஜலா’ = ‘சிதார்’ கருவியை இசைக்கும்போது ஒரு குறிப்பிட்ட தந்தியை தொடர்ந்து தாலுக்கேற்றவாறு மீட்டுதல்

மேலும்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.