Daily Archives: ஓகஸ்ட் 24, 2014

நுழையுரிமை முதல் குடியுரிமை வரை

ஒழுங்குமுறையாக அமெரிக்காவிற்கு குடிபுகுந்த இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் எப்போதும் இருக்கும் அச்சம் என்பது ‘நிரந்தரக் குடியுரிமை’ வருமா? எப்போது வரும்? வருவதற்குள் பெற்றோர் மண்டையைப் போட்டால், இந்தியாவிற்கு அவசரமாக செல்ல முடியுமா? அப்படி சென்றால், திரும்பி அமெரிக்கா நுழைவதற்கு விசா போடவேண்டுமா? விசா கிடைப்பதற்கு எத்தனை நாள் இந்தியாவிலேயே காத்திருக்க வேண்டும்? விசா படிவத்தில் என்ன எல்லாம் கேட்பார்கள்? பிறப்பு சான்றிதழ் வைத்துக் கொண்டிருக்கிறோமா? எச்1-பி எப்போது காலாவதி ஆகிறது? எப்பொழுது நீட்டிக்க வேண்டும்? அதற்கு என்ன எல்லாம் ஜெராக்ஸ் போட வேண்டும்? எப்படி தபாலில் அனுப்ப வேண்டும்?

இப்படி எண்ணிலடங்கா கவலைகளும், தாள்களும், தகவலேடுகளும், கோப்புகளும், தேதிகளும், அறிக்கைகளும், ஆய்வுகளும் நிறைந்தவை.

நாளைக்கு நடக்கப் போவதை நமக்கு கடவுளோ அறிவியலோ தேதிவாரியாக சொல்வதில்லை. வருங்காலத்தை மட்டும் அட்டவணை போட்டு மாதாமாதம் ஆருடம் வெளியிட்டால், அதை விடப் பெரிய மனக்கிலேசம் எதுவும் இருக்காது.

ஆனால், அமெரிக்க குடிபுகல் துறை இந்த வேலையை கர்மசிரத்தையாக செய்கிறது. இளங்கலை மட்டும் படித்தவருக்கு எப்பொழுது ‘பச்சை அட்டை’ வேலை துவங்கும்; முதுகலை மட்டும் வாங்கியவருக்கு எந்தத் தேதியில் குடிநுழைவு விண்ணப்பம் வாங்கப்படும்; அமெரிக்காவிலேயே மேற்படிப்பு படித்தவருக்கு எத்தனை நாள் இன்னும் அமெரிக்காவிலேயே இருக்க பாத்யதை; வேலைக்காக வந்தவர் எந்த நாளில் தகுதிக்கான தடவுகளை தர வேண்டும் என்று பட்டியல் போட்டு இணையத்தளத்தில் சொல்லுகிறது.

பங்குச்சந்தை மேலே ஏறும்… இறங்கும். அது போல் இந்தத் தேதிகளும் தடாலென்று முன்னேறும்… அவ்வாறே பின்னோக்கியும் பயணிக்கும். பங்குச்சந்தைகளில் சில நிறுவனங்களின் மதிப்பு உயரும்… அவ்வாறே சில நாட்டு மக்களின் குடிமைப் பத்திரம் வேகமாக நடக்கும். அங்கே பணத்தோடு விளையாட்டு; இங்கே வருங்கால வாழ்க்கைக்கான கணக்கு.

என்னதான் குடியுரிமை கிடைத்து பரமபதத்தை அடைந்துவிட்டாலும், ட்ரெவான் மார்ட்டின் மாதிரி சில வழக்குகள் நமக்கு உண்மை நிலையை இடித்துரைத்துக் கொண்டே இருப்பது வேறு விஷயம்.

பூச்சி சங்கீதம்: வண்டுகளில் இசை லயமும் சத்தங்களும்

Bug Music: How Insects Gave Us Rhythm and Noise – by – David Rothenberg சமீபத்தில் வாசித்தேன்.

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடியாம் தமிழ் குடிமக்கள் இளையராஜாவா, ஏ ஆர் ரெஹ்மானா என பிணக்குப் போட்டு கொள்வதற்கான மூத்த காரணத்தை இந்தப் புத்தகம் ஆராய்கிறது. பல கோடி மில்லியன் ஆண்டுகள் முன்பே பூச்சிகள் இருந்ததை நாம் அறிவோம். அதில் இருந்து புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய் ஆனதும் அறிவோம்.ஆனால், அந்தப் பூச்சிகளிடம் இருந்துதான் ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் என்று அறிந்து கொண்டதை அறிவோமா?

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கொருமுறை குறிஞ்சி பூப்பது இருக்கட்டும்; பதினேழு ஆண்டுகள் கருத்தரிக்கப்பட்டு 17 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அளபெடை இசைக்கும் சிகாடா (cicada) பூச்சிகளை கவனித்திருக்கிறார். இவர் மட்டுமல்ல… இவருக்கு முன்னோடியாக 1690இலேயே மட்சுவோ பாஷோ என்பவர் சிக்காடாக்களின் தாளங்களை ரசித்து ஹைக்கூ ஆக்கியதையும் கவனிக்கிறார். 1980களில் வந்த ஆராய்ச்சி பத்திரிகைகளைப் புரட்டி அதில் கவனிக்கப்பட்ட பூச்சிகளின் ராகங்களையும் ஆய்கிறார். புத்தகத்தின் ஆசிரியர் டேவிடுக்கு அசாத்திய பொறுமை கலந்த விடா ஆர்வம்.

பறவையின் குரலில் பாட்டு கேட்பது எளிது. வைரமுத்து கூட குக்கூ எனக் இந்தக் குயில் கூவாதோ எனத் தொட்டு, மைனா, மயில், கோழி, வாத்து எல்லாவற்றையும் மெல்லிசையில் மடக்கியுள்ளார். டேவிட் ராதன்பெகும் அவ்வாறே. புறாக்கள் விருத்தம் போடுகிறதா, கிளி செப்பலோசையில் உருகுகிறதா, மஞ்சக் காட்டு மைனா எகனை மொகனையுடன் மெல்லிசைக்கிறதா என துவங்கி இருக்கிறார். இந்தப் புத்தகம் முடிந்தவுடன் கிரிக்கெட் பூச்சிகள், சுவர்க்கோழிகள் துணையுடன் இசைத் தொகுப்பே வெளியிட்டிருக்கிறார்.

இந்த சினிமாப் பாடல் எங்கிருந்து சுடப்பட்டிருக்கிறது என்பதற்கான ஆதி வேர், எங்கோ பூச்சிகளின் மெட்டில்தான் இருக்கும் என்று நீங்களும் ஆய்வுபூர்வமாக நம்பவேண்டுமானால், புத்தகத்தை வாசிக்கணும்.

படுத்து உருள ஒரு பாத்ரூம்

இந்தியாவில் இருந்து அமெரிக்கா வந்தவுடன் என்னை முதன் முதலில் ஈர்த்தது பாத்ரூம்தான். அதுவும் சாதாரண பாத்ரூம் அல்ல… ‘Disabled Bathroom’.

விமானத்தில் இருந்து இறங்கியவுடன் அவசரமாக வந்தது. பத்து மணி நேர விமானத்தின் இறுதியில், நீங்கள் டாய்லெட்டுக்கு சென்றால், உங்களுக்கு ‘வானூர்தியத்து செருவென்ற சலக்கசெழியன்’ என்னும் பட்டம் கொடுக்கலாம். லண்டனில் இருந்து கிளம்பியவுடன் கிடைக்கும் பழரசங்களும், பொறைகளும், ஏ.வி.எம்.எல்.களும், கோழிக் குருமாக்களும் கலந்து கிடைக்கும் சுகந்தத்தின் நடுவில் உட்கார்வதற்கு நேரடியாக புத்தரிடமே ஞானோபதேசம் பெற்றிருந்தாலும் இயலாது.

எனவே, காத்துக் கிடந்த வேகம். அதனுடன், பீறிடும் உற்சாகம். நுழைந்தவுடன் காலியாக இருந்த கழிவறைக்குள் நுழைந்தால், நான் பம்பாயில் இருந்த பெட்ரூமை விட பெரிய அறை. இந்த மாதிரி விசாலமான இடத்தில் நால்வரை வாடகைக்கு அமர்த்தலாமே என எண்ண வைக்கும் தேம்பத் தவள உருள வைக்கும் புழக்கப் பிரதேசம். கொணர்ந்த பெட்டிகளை ஈசானிய மூலையில் சார்த்துவிட்டு, போட்டிருந்த கவச கோட்டுகளை வாஸ்துப்படி மாட்டிவிட்டு, கையில் குமுதத்தை எடுத்துக் கொண்டு, நிம்மதியான வெளியீடு.

பீடம் கூட கொஞ்சம் உயர்வாக அசல் ராஜாக்களின் சிம்மாசனம் போல் சற்றே வசதியாக காணக்கிடைத்தது. பிருஷ்டத்தை அமர்த்துவதற்கு எந்தவித சமரமும் செய்யாமல், சாதாரணமாக அமர முடிந்தது. வேலை ஆனவுடன், உள்ளேயே கை அலம்பும் இடம். சொந்த ஊர் மாதிரி சோப் போட்டு சுத்தம் செய்த பிறகு ஆற அமர ஆடைகளை மாட்டிக் கொள்ளும் வசதி.

முடித்துவிட்டு, வெளியில் வந்தால், சக்கர நாற்காலிக்காரர் முறைத்துப் பார்க்கிறார். அவருக்காக பிரத்தியேகமாக இருக்கும் இடத்தில், அத்துமீறி, சகல போஷாக்குடன் இயங்கும் ஒருவன் ஆக்கிரமித்துக் கொண்டால் கோபம் வராதா? ஆனால், என்னவாக இருந்தாலும் வாய்ப்புக் கிடைத்தால், மாற்றுத்திறனாளிக்களுக்கான கழிப்பிடத்தை உபயோகிப்பதை தவறவிடாதீர்கள்.

லண்டன் சுற்றுலா

victoria-railway-station-london-david-french
லண்டன் அசப்பில் பார்த்தால் தேர்ந்த அமெரிக்க நகரம் போல் இருக்கிறது. சொல்லப் போனால் நியு யார்க்கின் ஒன்று விட்ட தம்பி போல் தெரிந்தது. ஆங்காங்கே சூதாட்ட மையங்கள்; இரயில்வே ஸ்டேஷனிலேயே ’வை ராஜா வை’ விளையாடலாம் எல்லாம் பார்த்தால் கோட் சூட் போட்ட லாஸ் வேகாஸ் வந்துவிட்டோமோ என்னும் சந்தேகத்தைக் கொடுக்கும்.

காய்கறி மார்க்கெட்டுக்கு செல்வோர் கையில் பை இருக்கும். அது மாதிரி லண்டனில் வேலை முடிந்து வீடு திரும்புபவர் கையில் பியர் இருக்கும். பொதுவில் பியர்சாந்தி செய்வதை லாஸ் வேகாஸ் மட்டுமே தரிசனம் செய்திருக்கிறேன். லண்டனில் குடி கொண்டாட்டமாக இல்லாமல் உதிரமாக இணைந்திருக்கிறது.

கண்காணிப்பு கேமிராக்களின் அணிவரிசை, நிஜமாகவே ’The Truman Show’ படப்பிடிப்பில் அங்கம் வகிக்கிறோமோ என சினிமாவை வாழ்க்கையோடு இணைத்தது. நட்ட நடு பாரிஸ் நாட்டர்டாம் தேவாலயத்தின் எதிரேயே ஒன்றுக்கிருப்பவர்கள் போல் எல்லாம் இல்லாமல் லண்டனில் சந்து பொந்துகளில் எங்காவது எச்சில் துப்பினால் கூட தபாலிலே சம்மன் அனுப்புவார்கள் என இங்கிலாந்துக்காரர்களை மிரட்டி உருட்டி வைத்திருக்கிறார்கள்.

மதிய உணவிற்கான இடைவேளையை கர்ம சிரத்தையாக பின்பற்றுகிறார்கள். அமெரிக்க நகரங்களின் அலுவல் வாழ்க்கையில் பெரும்பாலானோர் ஓடிக்கொண்டேதான் சாப்பிடுவார்கள். ஒரு கவளம் சாப்பாடு; நாலு வரி நிரலி. அல்லது ஒரு கடி சாண்ட்விச்; எட்டு வரி பதிவு… இப்படி வேலையும் கையுமாக உண்ணாமல் ஆற அமர புல்தரையில் ஜோடி ஜோடியாக அமர்ந்து போஜனம் புசிப்பதையும் இங்கேக் கொட்டிக் கொள்வதையும் பார்த்தாலே டம்ஸ் கேட்டது என்னுடைய அமெரிக்க வயிறு.

குப்பை போல் ஒதுக்கித்தள்ளும் குடிசைவாசிகளின் ஒதுக்குப்புறங்களும், காடுகளுக்குள் வீடு அமைக்கும் புறநகர் கலாச்சாரங்களும், அடுக்குமாடி கட்டிடங்களும், அவற்றில் கோடானு கோடிகளை அள்ளும் வங்கிக்கூலிகளும், அறிமுகமில்லாதவர்களுக்கு உள்ளீடற்ற ஷோ கேஸ் சிரிப்பு முகமும், தவறுதலாக இடித்தால் கண்டிப்பு நிறைந்த போலி மன்னிப்புகளும், மேற்கத்திய நாகரிகமாகக் கருதும் புறப்பூச்சு நாசூக்குகளும், இன்னொரு அமெரிக்காவையே எனக்கு இங்கிலாந்தில் காட்டிக் கொண்டிருந்தது.
TrainView_Slums_Ghetto_London_England_UK_Victoria_Station-Railways_Poor

அனுபவம் இல்லாத ராஜா

ஒரு ஊருக்குப் போகாமலேயே அந்த ஊரைப் பற்றி கட்டுரை எழுதுவது அநியாயம் என்பது பாரிஸ் நகருக்கு சென்ற பிறகுதான் உதித்தது. லூயிக்கள் குறித்தும், மேரி ஆண்டொனெட் பட விமர்சனங்களும், புரட்சிப் போராட்டங்கள் விவரணையும், சார்கோசி அரசியலும் எழுதி இருக்கிறேன். அசலூர்க்காரன் அந்தப் பதிவுகளை படித்திருந்தால், ‘Autobiography of a Yogi’ படிப்பது போன்ற அசட்டுத்தனம் கலந்த ஆய்வுரையாக எடுத்துக் கொண்டிருப்பார்.

ஒரிரு வருடங்களாவது அந்தந்த நகரத்தில் தங்க வேண்டும். உள்ளூர் மக்களோடு மக்களாக அன்றாடம் புரளவேண்டும். அவர்களோடு நேர்ந்து ‘அமூர்’ போன்ற பிரென்சு படங்கள் பார்த்து திரைப்பட அறிமுகம் எழுதுவதற்கும், அமிஞ்சிகரையில் இருந்து கொண்டு சொந்த அனுபவத்தை வைத்தும் துணையெழுத்தின் தயவிலும் எழுதுவது சினிமாப் பார்வையாக இல்லாமல் தனிநபர் நனவோடையாக மட்டுமே மிஞ்சி விடுகிறது.

பாரிசின் மூத்திர வாசமும், நதிக்கரைகளில் இரவு பன்னிரெண்டு மணிக்கு அணி திரளும் மக்களுடன் மிதமாக தண்ணியடிக்கும் கொண்டாட்டமும், பூங்காக்களில் படைக்கலன் போல் மிகுதியானவர்கள் வாரநாள் மதியம் படுத்து சூரியக்குளியல் அனுபவிக்கும் மனப்பான்மையும், ராஜாக்களை சிரச்சேதம் செய்ததை வெற்றித் திருவிழாவாக்கும் எண்ணமும் ரிமோட் கண்ட்ரோலிலும் புத்தக வாசிப்பிலும் என்றும் உறிஞ்ச முடியாது.

சுற்றுலா நகைச்சுவை

பாரிஸ் நகர வாயிலில் வருகையாளர்களுக்கான தகவல் மையம் அமைத்திருந்தார்கள். முதலாவதாக ஒருத்தன் விசாரிக்க வந்தான்.

“நான் நாலு மாசம் இங்கேயே இருக்கப் போறேன். முழுப் பாரிஸையும் சுத்திப் பாத்துடலாம் இல்லியா?”. கவுண்ட்டருக்கு அந்தப் பக்கத்தில் இருந்து பதில் வந்தது: “பத்து சதவிகிதம் கூட பார்த்து முடிக்க முடியாது!”

வரிசையில் அடுத்தவர் வந்தார்: “நான் நாலு வாரம் இங்கேயே இருக்கப் போறேன். சொஞ்சமாவது பாரிஸையும் சுத்திப் பாத்துடலாம் இல்லியா?”. பரிமாற்றகர் கொஞ்சம் பிரகாசமடைந்து “ஐம்பது சதவிகத சுற்றுலாத் தலங்களை பார்த்துடலாம்!”

இரண்டையும் கேட்ட மூன்றாமவர் கேட்கிறார்: “நான் நாலு மணி நேரம்தான் இங்கே இருக்கப் போறேன். எவ்வளவு பாரிஸைப் பார்க்கலாம்?”. கல்லாகாரர் தீர்க்கமாக சொல்கிறார். “உங்களால் அனைத்து நகரத்தையும் முழுமையாகப் ரசித்து சுற்ற முடியும்.”

நானும் அடுத்த வாரம் முதல் பாரிஸ் பக்கம் செல்கிறேன். பாரிஸில் ஒரு ட்வீட் அப் போடணும். நீங்க சந்திப்புக்கு வர விருப்பம் என்றால் தொடர்பு கொள்ளுங்களேன்

ஆக்கிரமிப்பு – அணில் – அழகு

Squirrel_Eating_Bird_Feeder

வீட்டின் கொல்லைப்புறத்தில் நிறைய மரங்கள். அப்படியே கொஞ்சம் பின்னோக்கி பார்த்தால் நீர்நிலை. அற்ற குளமாக இல்லாததால் அறுநீர்ப் பறவைகள் எக்கச்சக்கம். குயில், வாத்து, வாலாடி என்று கலவையாக என்னுடைய முற்றத்தில் எட்டிப் பார்க்கும். பழுப்பு நிறத்தில் மரத்தோடு மரமாக கலந்திருக்கும் முன்றிலை அடர் சிவப்பிலும் வெளிர் நீலத்திலும் வண்ணமயமாக்கும். எங்கள் இடத்தில் வீடு அமைத்திருப்பதற்கு பரோபகராமாக கொஞ்சமாவது தானியம் இடலாமே என்று கேட்பது போல் கீச்சிடும்.

நானும் காஸ்கோ சென்று இருப்பதற்குள் பெரிய மூட்டையாக பறவை உணவு வாங்கி வந்தேன். அதை நாள்தோறும் இட்டு வந்தேன். இப்பொழுது புதிய விருந்தினர்கள் வந்தார்கள். மொட்டைச் சுவரில் போவோர் வருவோரை வம்புக்கு இழுக்கும் வேலையற்ற தமிழக இளைஞர்கள் போல் அணில்கள் அமர்ந்திருந்தன. மூன்று பேர் திண்ணைப் பரணில் உட்கார்ந்து கொண்டு கிட்ட நெருங்கும் தேன்சிட்டுகளையும் நாகணவாய்களையும் விரட்டி விட்டு, சூரியகாந்தி விதைகளை மொக்கிக் கொண்டிருந்தன.

இந்த அணில்களின் முதுகில் இராமர் போட்ட கோடுகள் இல்லை. சேதுத் திட்டத்திற்கு உதவாததால் கோடுகள் இல்லாத பெரிய இராட்சதர்கள். கிட்டப் போனால் ஓடி விடும். தள்ளிப் போனபின், தீனிக் கலத்தில் குடி கொள்ளும். எனவே, பறவைகளுக்கு… மன்னிக்க அணிற்குஞ்சுகளுக்கு சாப்பாடு போடுவதை நிறுத்தி வைத்தேன்.

அந்தப் பெரிய பை நிறைய பறவை தானியம் அம்போவென்று கார் நிறுத்தும் கொட்டகையில் இறுக்கிக் கட்டப்பட்டு தூங்கிக் கொண்டிருந்தது. பட்சிகளுக்காக நல்லதொரு கலயம் கிடைக்கும்வரை, அணிற்பிள்ளைகள் திருடமுடியாத கலயம் கிடைக்கும்வரை, தானியத்தை அங்கேயே வைத்திருப்பதாக திட்டம்.

நேற்று காரை நிறுத்த கொட்டகைக்குள் நுழையும்போது அணிலை பார்த்த மாதிரி சம்சயம். நடுநிசியில் கண்ணாடி பார்த்தால் ஆவி தெரிவது போல், மனைவியின் கைப்பக்குவத்தில் ருசி தெரிவது போல், நிரலி சரிபார்ப்பவருக்கு பிழை தெரிவது போல், இதுவும் இல்லாத ஒன்று. நம் மனப்பிரமை என ஒதுக்கினேன்.

மனம் ஒப்பவில்லை. தீவிர ஆராய்ந்ததில், மூலத்தையே கண்டுபிடித்து விட்டிருந்தது அணில்கள். ஆதார மூட்டைக்குள்ளேயே சென்று சாப்பிட்டு திரும்ப ஆரம்பித்திருக்கின்றன. கார் கொட்டகை திறக்கும்போது நுழைவது; அதன் பின் இரண்டு காரும் செல்வதற்குள் தப்பிச் செல்வது. முழு தானியங்களும் கிட்டத்தட்ட அம்பேல்.

மனிதனுக்கு ஆறறிவு என்று கண்டுபிடித்த தமிழர், அணிலுக்கு எத்தனை அறிவு என்று அறிந்திருக்கிறார்கள்?

Schadenfreude in Tamil

பிடிக்காதவர்களை மட்டம் தட்டும் பிரயோகங்கள் என்ன? ஆங்கிலத்தில் carpetbaggers and scalawags என்பார்கள்.

1. சோப் போடுதல்
2. காக்கா பிடித்தல்
3. குல்லாப் போடுதல்
4. சொம்பு அடித்தல்
5. முதுகு சொறிதல்
6. நெஞ்சை நக்குதல்
7. விளக்கு பிடித்தல்
8. தலையாட்டி பொம்மை
9. ஆமாம் சாமீ
10. அல்வா கொடுத்தல்.
11. துதி பாடுதல்
12. அடி வருடுதல்

எந்த வார்த்தைகள் கொண்டு மற்றவரின் சாமர்த்தியத்தை குறைத்து மதிப்பிடலாம்?

அறுவடை இல்லாத விளைச்சல் திருவிழா

செம்புற்றுப் பழம் விளைவித்துக் கொண்டிருந்த காலத்தில், அதை அறுவடை செய்வதை கொண்டாட்டமாக செய்திருக்கிறார்கள். அறுவடை முடிந்தவுடன் பொங்கல் திருநாள் போல், கோடை காலம் ஆரம்பித்தவுடன் ஸ்டராபெரி திருநாள் வருகிறது.

கலிஃபோர்னியாவில் இருந்தும் ஃப்ளோரிடாவில் இருந்தும் இறக்குமதி ஆகிற காலகட்டத்தில் உள்ளூரில் சாஸ்திரத்திற்காக காக்காவிற்கு பிண்டம் வைப்பது போல் ஸ்டிராபெர்ரி திருநாளும் சந்தையாக மாறி இருக்கிறது. பொம்மைகளுக்கு ஆடை தைப்பவர்களும், ஊசிமணி/பாசிமணி விற்பவர்களும், இரும்புக்கொல்லர்களும் தங்கள் தொழிலை கலையாக காண்பிக்கும் விழா.

முன்னொரு காலத்தில் கேமிரா கிடையாது. புகைப்படம் எடுக்க முடியாது. ஓவியம் வரைந்து, தங்களை பிரதிபலிப்பது புகழ் பெற்ற பண வருவாய் மிக்க உத்தியோகமாக இருந்தது. இன்றோ ஓவியம் என்பது கலை வெளிப்பாடு. இயந்திரங்களை வைத்து நகைகளும், பாத்திரங்களும் தயாரிக்கும் காலத்தில் கொல்லர்களும் தச்சர்களும், தங்கள் புராதன பணியகத்தை கலைக்கூடமாக மாற்றி செய்முறை விளக்கம் அளித்து பொழுதுபோக்கு சாதனமாக மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை.

நான் கணினி நிரலியாளன். இன்னும் கொஞ்ச காலத்தில் வேர் அல்காரிதங்கள் கொண்டு மென்கலன்கள் தானே தயாரித்துக் கொள்ளும் நிலை வரும்போது, இப்படித்தான் if தீர்மானம் எழுத வேண்டும் என்று பூங்காவில் கடை விரித்து டெமோ தர வேண்டுமோ!?

Westford_Arts_Crafts_Strawberry_Festival_Commons_Summer_Seasons_Harvest

செல்பேசிக்காக பாடலா? கருவிக்காக திரைப்படமா?

பெருந்தலைகளை விளம்பரத்திற்கு பயன்படுத்துவது தொன்றுதொட்ட வழக்கம்.

இந்தியாவில் லக்ஸ் சோப் விளம்பரங்களுக்கும், விலையுயர்ந்த ஆடை வகைகளுக்கும் வந்து கொண்டிருந்தார்கள். இப்பொழுது வலி நிவாரணி முதல் வீடு விற்பனை வரை செலபிரிட்டி மயம். நைக்கி, ரீபாக் என்றாலே விளையாட்டு நட்சத்திரங்கள் நினைவிற்கு வருவார்கள். ‘யெஹி ஹை ரைட் சாய்ஸ் பேபி’ போன்ற இனிப்பு பானங்களுக்கு புகழ்பெற்றவர்கள் தேவை. ஆனால், செல்பேசி வாங்கும்போது “இன்னார் சொன்னார்… நல்லா இருக்கும்” என்று நினைத்து வாங்குவதில்லை.

கணினியின் தரம் என்ன? ஆண்டிராய்ட் இருக்கிறதா? நமக்கு தோதுப்படுமா? சி.பி.யூ எப்படி? புத்தம்புதியதாக என்ன தருகிறார்கள்? இப்படி எல்லாம் ஆராய்ந்து பார்த்தது ‘ஒலியும் ஒளியும்’ காலம். இன்றைய எம்.டி.வி. நிஜ நாடகங்களைக் கொண்டு இளைய தலைமுறையினரைக் கவர்வது போல், சாம்சங் நிறுவனம் பாடகரைக் கொண்டு புதிய செல்பேசியை விற்கிறது.

ஜே-சீ வெளியிடும் அடுத்த ஆல்பம் சாம்சங் கேலக்ஸி எஸ்4 வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே கிடைக்கும். அவர்களின் செல்பேசி மூலமாக மட்டுமே கிடைக்கும். இளையராஜா ரசிகராக இருப்பது போல் ஜே-ஸீ வெறியர்களுக்கு சாம்சங் தூண்டில் போட்டு இருக்கிறது.

விண்டோஸ்8 வாங்கினால் டெம்பிள் ரன் கிடைக்காது. ஐஃபோன் வாங்கினால் வரைபடம் சரியாக வராது. கூகிள் ஆண்டிராய்ட் செல்பேசிகளில் ஆப்பிள் ஐபாடில் இருப்பது போல் கலை நுணுக்கமும் ஆக்க மிளிர்வும் கொண்ட ’ஆப்ஸ்’ இருக்காது. இதையெல்லாம் மறைக்க, நம் குரல்மொழியை கண்டுபிடிக்க இயலாத செயலியின் செயலற்ற ஆற்றலை அமுக்க ஜெஸிகா ஆல்பா, சாமுவேல் ஜாக்ஸன் வகையறாக்கள் தேவைப்படுகிறது.

இசை என்றால் ஆப்பிள் ஐ-ட்யூன்ஸ் என்னும் மனப்பதிவை உடைக்கவும் இந்த ஜே-ஸீ உடன்படிக்கை உதவுகிறது. வெறுமனே வந்து மைக்ரோசாஃப்ட் உபயோகியுங்கள் என்று சொல்வதற்கு பதில் எக்ஸ் பாக்ஸ் வைத்திருந்தால் மட்டுமே நம்முடைய அபிமான சீரியலைப் பார்க்க முடியும் என்பதன் அடுத்த கட்டம் ஆரம்பித்துவிட்டது.