சட்டசபை தேர்தலில் வாக்களித்தவர்களின் இடதுகை ஆள் காட்டி விரலில் அழியாத மையால் கோடு போடப்பட்டது. கடந்த தேர்தலின்போது அழியாத மையால் புள்ளி வைக்கப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மாகாணியம் கிராமம், விருத்தாசல தொகுதி முகவை, பாரூர் கிராமம் ஆகிய 3 கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு
அறந்தாங்கி தொகுதி ஆவுடையார்கோவில் அருகே உள்ள பொன்பேத்தி கிராமத்தில் சுமார் ஆயிரத்து 500 ஓட்டுகள் உள்ளன. இங்கு உள்ள வாக்குச் சாவடியில் பகல் 1 மணி நிலவரப்படி ஒரு ஓட்டுகூட பதிவாகவில்லை.
விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் 9 தொகுதியிலும் மகத்தான வெற்றி கிடைக்கும். தி.மு.க. கூட்டணி மக்களை நம்பாமல் பண பலத்தையும், வன்முறையையும் நம்பியது. பத்திரிகைகளின் கருத்து கணிப்புகள் பொய்யாக்கப்பட்டு அதி.மு.க. தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும்.
– விடுதலை சிறுத்தைகள் அமைப்பாளர் திருமாவளவன்
ஆரணி ஆதனூரில் வாக்குச்சாவடியில் புகுந்த 20 பேர் கும்பல்: கதவை பூட்டிக்கொண்டு வாக்களித்தனர். அங்கு முன்னாள் ராணுவத்தினர் 2 பேர் மட்டுமே பாதுகாப்புக்கு நின்றனர்.
குளச்சல் தொகுதிக் குட்பட்ட சேரமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் ஓட்டுப்போட சென்றவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. காரணம் ஓட்டுப்பதிவு எந்திரத்தில் வாக்காளர்கள் பெயர் மற்றும் சின்னங்கள் தலைகீழாக இருந்தது.
குளச்சல் தொகுதிக்குட்பட்ட மண்டைக்காடு தேவசம் மேல்நிலைப்பள்ளியில் கீழக்கரையைச் சேர்ந்த முருகன் என்ற 65 வயது முதியவர் இன்று காலை ஓட்டுப்போட வந்தார். தேர்தல் பணியில் ஈடுபட்ட பெண் ஊழியர் அவரது கையில் ‘மை’ வைத்தார். பின்னர் அதே ஊழியர், முருகனை அழைத்துச் சென்று ஓட்டுப்போடச் செய்தார். முருகனின் விரலால் 4வது இடத்தில் இருந்த பொத்தானை பெண் ஊழியர் அழுத்தினார். இதனால் முருகன் அதிர்ச்சி அடைந்தார்.
நான் வேறுகட்சிக்கல்லவா ஓட்டுப்போட நினைத்தேன். எனக்கு உதவுவதாக கூறி மோசடி செய்துவிட்டீர்களே என முருகன் சத்தம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தார்.
சேலம் அருகே உள்ளது பனமரத்துப்பட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட உடை யாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (வயது 55). அயோத்தியாபட்டணம் முன்னாள் ஒன்றிய தி.மு.க. செயலாளரான இவர் இன்று காலை தன் மகளுடன் உடையாப்பட்டி பகுதியில் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு ஓட்டுப் போட வந்தார்.
அப்போது அவர் தி.மு.க. கரை வேட்டி அணிந்திருந்தார். இதைப்பார்த்த போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் கரை வேட்டி அணிந்து கொண்டு வாக்குச்சாவடிக்குள் வரக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது. எனவே வேறு உடை அணிந்து வருமாறு கூறினர். ஆனால் ராஜன் அதற்கு மறுத்தார். தொடர்ந்து போலீசார் வாக்குச்சாடிக்குள் விட மறுத்ததால் திடீரென ராஜன் தான் கட்டி இருந்த தி.மு.க. கரைவேட்டியை அவிழ்த்து தூக்கி வீசி எறிந்தார்.
கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு நிர்மல்குமார், இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் இப்படி அநாகரீகமாக உள்ளாடையுடன் வாக்கு சாவடிக்குள் செல்லக்கூடாது என்று கூறி வேறு வழியில்லாமல் அதே தி.மு.க. கரை வேட்டியை எடுத்துக் கொடுத்தனர். பின்னர் அவர் தன் கரை வேட்டியை கட்டிக்கொண்டு வாக்களித்தார்.
Thanks: Maalai Malar.com