Tag Archives: USA

போடுங்கம்மா வோட்டு!

வாக்கு போட்டாச்சா?

நன்றி: GOOD » Project 001: If You Can Read This…»

மாலன்: பராக் ஒபாமா: கனவுகளுக்கும் நிஜங்களுக்கும் இடையில்…

கறுப்பின அமெரிக்கர் ஒருவர் வெள்ளை மாளிகையில் குடியேறும் வாய்ப்பினைப் பெற்றார் என்ற ஒற்றைச் சரித்திர வரி ஒரு புள்ளி விபரமாக முடிந்துவிடுமா? அல்லது அமெரிக்காவிற்கும், உலகிற்கும் கூட, தேவைப்படும் ஒரு திருப்புமுனையாக மாறுமா?

ஒபாமாவினுடைய தேர்தல் வெற்றியை கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கிடைத்த வெற்றியாகத்தான் ஊடகங்கள், முக்கியமாக இந்திய ஊடகங்கள், சித்தரிக்க விரும்புகின்றன. அங்கீகரிக்கப்பட்ட அடிமைத்தனம், பாரபட்சம், இனத்தைத் ‘தூய்மைப்படுத்தல்’ போன்ற இழைகள் கொண்ட அமெரிக்க வராலாற்றின் பின்னணியில் பார்த்தால் ஒபாமாவின் வெற்றி சிறப்பு மிக்கதுதான்.

அமெரிக்கக் கறுப்பினத்தவர்கள் இன ஒதுக்கலை எதிர்த்து மார்ட்டின் லூதர் கிங் போன்றவர்கள் போராடியது ஏதோ நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பல்ல, ஒரு தலைமுறைக்கு முன்னர்தான். இன்றும் கூட சிறையில் இருப்பவர்களின் எண்ணிக்கை உலக அளவில் மிக அதிகமாக (2.3 மில்லியன்) இருக்கும் நாடு அமெரிக்கா; அதில் 40 சதவீதம் பேர் கறுப்பினத்தவர்கள்.

ஆனால் ஒபாமாவின் வெற்றி முற்றிலும் இன ரீதியாக ஈட்டிய வெற்றியல்ல. அது ஒரு வகையில் அமெரிக்க நடுத்தர வர்கத்தின் ஆசைகள் விழைவுகள் ஆகியவற்றின் பிரதிபலிப்பாக அமைந்த வெற்றி. அதிபரை மையமாகக் கொண்ட அமெரிக்க அரசிய்ல் அமைப்பு பெருமள்விற்கு அங்குள்ள வணிக நிறுவனங்களின் பொருளுதவியைச் சார்ந்த அரசிய்ல் அமைப்பு. Corporate Funded) என்பது உலகறிந்த ரகசியம்.

இந்தப் பின்னணியில் மத்தியதர வர்க்கத்தின் குரலில் பேசும் ஒபாமாவின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் காரணமாகவே அதிபர் ஒபாமாவின் முன் நிற்கும் சவால்கள் வேட்பாளர் ஒபாமாவின் முன்னிருந்த சவாலகளைவிடக் கடுமையானவை. அவரே அவரது பிராசரத்தின் போது சொன்னதைப் போல, புஷ் இருந்த இடத்தில் ஒரு ஜனநாயகக் கட்சி வேட்பாளரை அமர்த்திவிடுவதன் மூலம் மட்டுமே தேவையான மாற்றங்களை ஏற்படுத்திவிடமுடியாது.

“உலகமயமான பொருளாதாரத்தில் சிலர் கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு வளம் அடைந்திருக்கும் அதே வேளையில் மத்திய வர்க்க அமெரிக்கர்களது, மத்தியவர்க்கத்தை எட்டிவிட வேண்டும் எனக் கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பவர்களது அமெரிக்கக் கனவு மேலும் மேலும் நழுவிப் போய்க் கொண்டிருக்கிறது” (“While some have prospered beyond imagination in this global economy, middle-class Americans — as well as those working hard to become middle class — are seeing the American dream slip further and further away,”) இவை அயோவா மாநிலத்தில் பிரசராத்தின் போது ஒபாமா சொன்ன வார்த்தைகள்.

ஒரு நிலைக்கு மேல் வளர்ச்சி அடையமுடியாமல் பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடக்கும் நடுத்தர வர்க்கத்தின் இந்த யதார்த்தத்தை ஒபாமா நன்றாக அறிந்திருக்கிறார். இதற்கான தீர்வு என்ன என்பதையும் அவர் சிந்தித்திருக்கிறார்:

இந்த “முன்னேற்றத்திற்குக் குறுக்கே நிற்கும் வணிக நிறுவனத் தரகர்களுக்கு எதிராக நாம் எழாதவரை நாம் அந்தக் கனவை மீட்டெடுக்கப் போவதில்லை.மக்கள் எதைக் கேட்கவிரும்புகிறார்களோ அதை அல்ல, அவர்கள் என்ன அறிந்து கொள்ள வேண்டுமோ அதைச் சொல்கிற தலைமை ஏற்படாதவரை நாம் அந்தக் கனவை மீட்டெடுக்கப் போவதில்லை.” (“We’re not going to reclaim that dream unless we stand up to the corporate lobbyists that have stood in the way of progress. Unless we have leadership that doesn’t just tell people what they want to hear but tells everyone what they need to know.”)

இன்று அமெரிக்கப் பொருளாதாரம் இருக்கும் நிலையில் ஓபாமாவால் ‘ முன்னேற்றத்திற்குக் குறுக்கே நிற்கும் வணிக நிறுவனத் தரகர்களு’க்கு எதிராக எவ்வளவு தூரம் ஓபாமாவால் செயல்பட முடியும்?அப்படி செயல்பட ஆரம்பித்தால் அவரால் எத்தனை நாளைக்குத் தாக்குப் பிடிக்க முடியும்? முதலீட்டை முதன்மையாகக் கொண்ட (Captalist) பொருளாதார அமைப்பில் ‘கார்ப்போரேட்’களை எதிர்த்து – எதிர்க்கக் கூட் வேண்டாம், புறக்கணித்து விட்டு- செயல்படுவது சாத்தியமா? சாத்தியமில்லை என்றால், ‘கை நழுவிப் போன கனவை’ மீட்டெடுப்பது எப்படி?

இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒபாமா தன் பிராசாரத்தைத் துவக்கியபோது, இராக் போருக்கு எதிரான மனநிலை அமெரிக்க மத்தியதர வர்க்கத்திடம் விரவிக் கிடந்தது. அதிலும் தங்கள் பிள்ளைகளை போர்முனைக்கு அனுப்பிவிட்டு நெருப்பின் மேல் நின்று கொண்டிருந்த தாய்மார்களின் நம்பிக்கை ஒபாமா பக்கம் நின்றது.

இன்று, பொருளாதாரம் உருகி ஓடும் நிலையில், இராக் யுத்தம் நாளிதழ்களில் காணாமல் போய்விட்டது. 16ம் பக்கத்தில் ஆறாம் பத்தியில் 10 செ.மீ செய்தியாகக் கூட இடம் பெறுவதில்லை. ஆனால் அந்த யுத்தம் மக்கள் மனதில் இப்போதும் இருக்கிறது. அந்தத் தாய்மார்கள் நெஞ்சில் அந்த நெருப்பு இப்போதும் கனன்று கொண்டிருக்கிறது. ஆரம்ப நாள்களில் தனது பிரசாரத்தின் போது இராக் யுத்தத்தை வன்மையாகக் கண்டித்துப் பேசி வந்தார். ‘இந்த யுத்தத்தை முதலில் இருந்தே எதிர்த்து வந்திருக்கிறேன்’ என்ற ரீதியில் அவரது பேச்சுகள் இருந்து வந்தன. ஆனால் அண்மைக்காலமாக பேச்சின் தொனி மாறி வருகிறது.

‘தாக்குதல் நடத்தும் படைகள் மெல்ல மெல்ல 16 மாத காலத்தில் மெல்ல மெல்ல விலக்கிக் கொள்ளப்படும்’ என்று சொல்லும் அவர் அதே மூச்சில், ‘எனினும் பயங்கரவதத்திற்கு எதிரான பாசறைகள்’ (bases against counter terror) அங்கே தொடர்ந்து நீடிக்கும் எனறும் சொல்கிறார். அதை விடத் திடுக்கிட வைக்கும் விஷயம், ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானலும் யுத்தத்தை அதிகரிப்பேன் அவை ‘பயங்கரவாதத்திற்கு எதிரான மையமான புள்ளியாக’ விளங்கும் என்ற அவரது அறிவிப்பு.

இவற்றைக் கொண்டு பார்க்கும் போது அதிபர் ஒபாமா ஆட்சிப் பொறுப்பேற்றதும் சில அறிவிப்புக்களை – குவான்டநாமோ கொடுஞ்சிறையை மூடுவது, இராக்கிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுவது போன்ற அறிவிப்புக்களை வெளியிடுவார். ஆனால் வெறும் அடையாள அறிவிப்புக்களாகவே (Tokenism)இருக்கும்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ வேறு ஏதோ ஒரு தேசத்தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.உலகில் உள்ள 195 நாடுகளில் 130 நாடுகளில் தன் ராணுவத்தை நிறுத்தி வைத்திருக்கும் நாடு அமெரிக்கா என்பதை நினைவில் கொண்டால் எந்த அமெரிக்க அதிபரும் சமாதானப் புறாவாக சிறகு விரிக்க முடியாது, பிணந்தின்னிக் கழுகாவே வட்டமுடியும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஒபாமா தனது ஆரம்ப நாட்களின் அடையாள அறிவிப்புகளுக்குப் பின் பொருளாதாரத்தின் பக்கம் தன் கவனத்தைத் திருப்புவார். வேலை வாய்ப்புக்களை அதிகரிக்கும் முயற்சிகளில் ஆர்வம் காட்டுவார். வசதிபடைத்தவர்களுக்கு அதிக வரி, மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்தில் சலுகை, பணியிலிருந்து ஓய்வு பெறுபவர்களின் சேமிப்பைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள், பலருக்கு மருத்துவக் காப்பீடு போன்ற சில திட்டங்களை அறிவிக்கலாம்.

ஆனால் அவற்றிற்கு அப்பால் பெரும் அற்புதங்கள் நடந்துவிடும் என நான் எதிர்பார்க்கவில்லை.

அற்புதங்கள் நிகழ்த்த அமெரிக்க அரசியல், அதன் அடிஆழத்தில் சுழித்தோடும் நீரோட்டங்கள் இடமளிக்காது. உலகெங்கும் உள்ள மத்தியதர வர்க்கத்து மனிதர்களைப் போல தனது கனவுகளுக்கும், யதார்த்தங்களுக்கும் இடையே ஒரு சம்ன்பாட்டைக் காணுவதிலேயே தனது ஆற்றல்களை செலவிட வேண்டிய ஒருவராகவே அதிபர் ஒபாமா ஆகக்கூடும்.

மாலன்

தமிழ்ப்பதிவுகளில் அமெரிக்க அதிபர் தேர்தல்

ஒரு அகதியின் நாட்குறிப்பு

அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்படும் சாத்தியக்கூறுகள் மிகப்பிரகாசம் – பேராசிரியர் எரிக் அஸ்லானர் நேர்காணல் :: வீரகேசரி நாளேடு – 10/27

கேள்வி: இலங்கை போன்ற நாடுகளில் கடைசி நேர அனுதாப அலைகள் தேர்தல் முடிவில் தாக்கம் செலுத்துவது வரலாற்றில் நிருபணமாகியுள்ளது அந்தவகையில் தற்போது பின்னிலையிருக்கும் மக்கெய்னுக்கு சாதகமாக ஏதேனும் திடீர் திருப்பங்கள் ஏற்படச்சாத்தியமுள்ளதா?

:::
கேள்வி: இந்தத்தேர்தலுக்கு முன்னர் அதிகம் அறியப்படாத பராக் ஒபாமாவின் எழுச்சிக்கு காரணம் யாது?

பதில்:

  • ஒபாமா ஒரு ரொக் இசைக்கலைஞர் போன்று மக்களை வசீகரிக்கக்கூடிய அபார பேச்சாற்றல் மிக்கவர்
  • தேர்தலில் முன்பெல்லாம் அதிக நாட்டங்காண்பிக்காத இளைஞர் யுவதிகளை தேர்தல் பிரசார மேடைகளுக்கு இழுத்துவந்தமை அவரது வெற்றிக்கு காரணம்
  • இணையம் கைத்தொலைபேசி குறுஞ்சேவை உட்பட நவீன தொலைதொடர்பு சாதனங்களை மிக உச்சளவில் பயன்படுத்தியமையும் அவரது ஏற்றத்திற்கு காரணம்

ஏன் ஒபாமா வெற்றி பெற வேண்டும்?

– முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை

மிகவும் நோயுற்றிருக்கும் அவருடைய தாய் வழிப் பாட்டியைப் பார்க்க ஹவாய்க்குப் போயிருக்கும் ஒபாமா தான் அமெரிக்கப் பிரஜை இல்லை என்பதற்கான ஆவணங்களை அழிக்கப் போயிருக்கிறார் என்ற வதந்தியைக் கிளப்பியிருக்கிறது.

:::

ஸ்பெயினைத் தோற்கடித்து கியூபாவை அமெரிக்கா தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது. அது மட்டுமல்ல, பிலிப்பைன்ஸ், போர்ட்டரீகோ மற்றும் பசிபிக் கடலில் உள்ள குவாம் என்னும் தீவு ஆகியவற்றையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது.

:::

இந்திய பத்திரிக்கையாளர் எம்.ஜே. அக்பர் கூறுவது போல் உள்நாட்டைப் பொறுத்தவரை அமெரிக்கா ஜனநாயக நாடு என்றாலும் உலகைப் பொறுத்தவரை ஒரு சர்வாதிகாரி.

:::

அமெரிக்காவின் முழு ஆளுமையிலிருந்து இந்தியாவைக் காப்பாற்றிய பெருமை, மறைந்த பாரதப் பிரதமர் இந்திரா காந்தியைத்தான் சேரும்.

:::

தன் சிறு வயதில் இந்தோனேஷியாவின் ஜாகர்த்தாவில் வளர்ந்து வந்த போது எப்போதும் சண்டை போட அமெரிக்கா தயாராக இருப்பதையும், தன்னுடைய பொருளாதார அமைப்பை மற்ற நாடுகளின் மீது திணிக்க விரும்புவதையும், தன் நலனுக்காக ஊழல் நிறைந்த சர்வாதிகார்களை அமெரிக்கா ஆதரித்து வந்ததோடு அந்த நாடுகளில் நடக்கும் ஊழலைக் கண்டுகொள்ளாமல் இருந்ததையும் அறிந்ததாகவும் தன் புத்தகத்தில் கூறியிருக்கிறார்.


ஒளியேற்றுவாரா ஒபாமா

ஸதக்கத்துல்லாஹ், கடையநல்லூர்

அமெரிக்கத் தேர்தல் முடிவை விட அங்குள்ள மக்கள் அதிகம் எதிர்பார்ப்பது பொருளியல் பிரச்சினைக்கான தீர்வைத்தான். ஓராண்டுக்கு முன் அதிபர் தேர்தல் பிரசாரம் தொடங்கியபோது, அமெரிக்கப் பொருளியல் நிலைத் தன்மையோடு இருந்தது.


4. Conservative Tamils for McCain | Asian Americans for McCain

உங்களுக்குப் பிடித்த அமெரிக்க ஜனாதிபதி யார்?

அமெரிக்க அதிபராக நடித்தவர்களுள் ஹாரிஸன் ஃபோர்ட் மிகவும் சிறப்பாக மிளிர்ந்ததாக கருத்துக்கணிப்பு வந்துள்ளது.

குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் ஜான் மெகயினுக்கும் ஹாரிசன் போர்டுக்கும் ஆறு வயசுதான் வித்தியாசம். இரண்டாம் நிலையில் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஒபாமாவை ஒத்த மார்கன் ஃப்ரீமன் வந்துள்ளார்.

செய்தி: Harrison Ford voted best U.S. movie president | Entertainment | Reuters

தலை ஐந்து நடிகர்கள்:

1. Harrison Ford in Air Force One

2. Morgan Freeman in Deep Impact

3. Michael Douglas in The American President

4. Bill Pullman in Independence Day

5. Kevin Kline in Dave.

அது சரி. ‘தமிழக முதலமைச்சர்களாக எவ்வளவு பேர், எந்த எந்தப் படங்களில் நடித்திருக்கிறார்கள்?’ என்று ட்விட்டரில் கேட்டதற்கு வந்த பதில்கள்:

வாஸந்தி: 'தமிழ்நாட்டிற்கும் ஒபாமா தேவை'

ஒபாமா: மாற்றத்தின் மந்திரச் சொல் : வாஸந்திஉயிர்மை

ஒபாமா எழுதியிருக்கும் The audacity of hope‘ என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அமெரிக்க அரசியலின் மிக அருமையான அதன் அலசலும் பட்சமற்ற விமர்சனமும் புதிய அறிவார்த்த முதிர்ச்சி மிகுந்த பார்வையும், அதில் தொனிக்கும் நேர்மையும் என்னை ஆட்கொள்கிறது.

:::

கருப்பர் என்பதால் பேச்சில் காழ்ப்பையோ, சரித்திர கால உள்ளார்ந்த வெறுப்போ பேச்சில் காண்பிப்பதில்லை.

::

அமெரிக்காவில் மட்டுமல்ல, இன்றைய தமிழ் நாட்டு அரசியல் சூழலிலும் மாறுபட்ட சிந்தனைக்கு ஒரு அவசரத் தேவை ஏற்பட்டிருகிறது.

  • கண்ணியமும் நாணயமும் மிக்க பரந்த உலகளாவிய பார்வைக்கு இடம் தேவை.
  • புதிய எழுச்சி மிகுந்த நேர்மையான பார்வை.
  • பலகாலமாக சித்தாந்தம் கொள்கை தமிழ் உணர்வு என்கிற போர்வையில் எழும் கூக்குரல்களும் அரங்கேறும் நாடகங்களும் மக்களுக்கு அலுத்துவிட்டன.
  • யாருக்காகக் குரல் கொடுக்கப் படுவதாகச் சொல்லப்படுகிறதோ அவர்களுக்கு நிச்சயம் உதவுவதாக இல்லை.
  • நாட்டுப் பற்று, மக்கள் நலன் என்பது வெற்று கோஷங்களில் நீர்த்துப் போகின்றன.
  • அரசியல் அரங்கில் இருக்கும் போட்டா போட்டிகளும் தலைவர்கள் ஒருவரை ஒருவர் நாகரீகமில்லாமல் சாடுவதும் சோர்வைத் தருகிறது.
  • எல்லாவிஷயங்களும், எல்லா துயரங்களும்- வெள்ளச் சேதம், சுனாமி சேதம், மனித உறிமை மீறலினால் அவதியுறும் இலங்கைத் தமிழர் பிரச்சினை என்ற எல்லாமே அரசியலாக்கப்பட்டு அவற்றில் சுயலாபத்தைத் தேடும் அவலமாகிவிட்டது.
  • உண்மையான மனித நேயக்குரல்கள் அடிபட்டுப் போகிண்றன.

நமது தலைவர்கள் ஏதோ ஒரு சக்கிரவியூகத்தில் மாட்டிக்கொண்டு அவஸ்தை படுவதுபோல இருக்கிறது.

முழுக்கட்டுரையின் பிரதி இனியொரு வலையகத்திலும் கிடைக்கிறது.

பணம் படைத்தவன்

விவரிப்பு:

  • அமெரிக்காவின் முக்கிய தொலைக்காட்சி எல்லாவற்றிலும் பராக் ஒபாமாவின் அரை மணி நேர விளம்பரம் ஒளிபரப்பாகியது.
  • பெரும்பாலான அமெரிக்கர்கள் டிவியின் முன் உட்காரும் இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்புவதற்காக சற்றேறக்குறைய ஐந்து மில்லியன் டாலரை ஒபாமா கரைத்துள்ளார்.

வியப்பு:

  • சன், ஜெயா, மக்கள், கலைஞர் எல்லாவற்றிலும் ஒரு கட்சி ஒரே சமயத்தில் பிரச்சாரம் செய்யும் சூழல் இல்லாத தமிழ்நாடு.
  • எதிராளிக்கு சம இடம் தராமல், தனியாளாக பிரச்சார போதனை செய்யும் அமெரிக்க நிலை.
  • பொது நிதியை மட்டும் பயன்படுத்தி மெகயினோடு சமமாக மோதுவேன் என்னும் வாக்குறுதி காற்றில் பறந்த மாதிரி இதுவும் பார்வையாளர் காதில் பூச்சூட்டலோ?

விளம்பரம்:

விமர்சனம்:

  • ஒபாமாவின் பிரச்சாரம் போலவே விளம்பரமும் அமைந்திருந்தது. நிறைய வசனம்; கொஞ்சமாய் கொள்கை விளக்கம்.
  • தன்னுடைய அம்மாவின் கடைசி காலம், மருத்துவ செலவுகளோடு மன்றாடுவதை சொல்லி அனுதாபம் தேடியது.
  • குழந்தைகள், தாத்தா, பாட்டி, குடும்பம் என்று ஒபாமாவின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும் விமர்சனங்களுக்கு பதில் தந்தது.
  • நிகழ்ச்சி முழுக்க சோகமயமாக, அமெரிக்காவின் எதிர்காலம் குறித்த பயமுறுத்தல்களைக் கொடுத்தது. ‘நான் ரொம்ப செலவழிக்கிறேனோ? வேலை போயிடுமோ??’ என்னும் அச்சமூட்டுவதாக அமைந்தது.
  • இறுதியாக நேரடி ஒளிபரப்பாக ஃப்ளோரிடா பேச்சைக் காட்டினார்கள். டிவியில் பார்க்கும் போதே உத்வேகம் எழும்பியது.

விளைவுகள்:

  • ஒவ்வொரு முறை டிவியில் தோன்றிய பிறகும் ஒபாமாவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. இந்த முறையும் வாக்காளர்களிடையே மதிப்பு உயரலாம்.
  • ஜனநாயகக் கட்சி மாநாட்டில் வெள்ளை மாளிகை போல் மேடை அமைத்தார். இதில் ஜனாதிபதி அறை போன்ற தோற்றம், மக்களிடையே ‘இவர்தான் தலைவர்’ என்னும் பிம்பத்தை வளர்க்கலாம்.
  • அரை மணி முழுக்க ‘வரி விலக்கு’ என்பதே தாரக மந்திரமாக உச்சாடனம் செய்யப்பட்டது. சில சமயம் மெகயின்/குடியரசுக் கட்சி விளம்பரமோ என்று எண்ண வைக்குமளவு.
  • பென்சில்வேனியா உழைப்பாளிகள் முதல் ஃப்ளோரிடாவின் முதிர்ந்தோரைக் குறி வைத்த நிகழ்ச்சி. இந்த விளம்பரம் அவர்களை ஒபாமா பக்கம் சாயவைக்காது.
  • ஹில்லரியின் ப்ளூ காலர் வெள்ளைக்காரர்களையும் பேலின் வந்ததால் குடியரசுக் கட்சி வாக்காகி போன பெண்களையும் இந்த மாதிரி கவர்ச்சிகள் ஈர்க்குமா? அடுத்த வாரம் தெரிந்துவிடும்.

விளம்பரத்தின் உரை வடிவம்: Complete Text (and video) of Barack Obama campaign infomercial | Top of the Ticket | Los Angeles Times

அலசல்: All Obama, all the time – 2008 Presidential Campaign Blog – Political Intelligence – Boston.com

'ஒபாமாவிற்கு மிருத்யுஞ்சய ஹோமம் & இளநீர் தாரா தேவை': தினமலர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பராக் ஒபாமா வெற்றி பெற 75 சதவீத வாய்ப்பு உள்ளதாக, கோவை ஆரிய வைத்திய பார்மசியின் ஜோதிடர் குழு கணித்துள்ளது.

ஒபாமா வெற்றிக்காகவும், அவர் சிறந்த உடல் ஆரோக்கியம் பெறவும், கோவையில் சிறப்பு ஹோமம் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து கோவை ஆரிய வைத்திய பார்மசியின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணகுமார் கூறியதாவது: அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஒபாமா, அங்குள்ள மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார். 1961ல் பிறந்த அவரது ஜாதகப்படி, அவருக்கு இப்போது ‘வியாச (குரு) திசை‘ நடக்கிறது. அவரது ‘கர்மா’வின்படி, டிசம்பர் 2008க்குப் பின் அனைத்து விஷயங்களும் அவருக்கு சாதகமாக அமையும். அவர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபர் ஆக 75 சதவீத வாய்ப்பு உள்ளது.

ஏப்ரல் 2008 முதல் ஏப்ரல் 2009 வரையிலான காலகட்டத்தில் அவருக்கு வேலை மாற்றம் அமையும். இந்த காலகட்டத்தில் அவர் உயர்ந்த நிர்வாக பொறுப்பை அடைய வாய்ப்பு உள்ளது. ‘நிபுண யோகக்காரர்’ என்பதால் இவர் சிறந்த வாதத் திறமை உள்ளவர். இறைவனின் சகல அனுகிரகங்களும் இவருக்கு உண்டு.

ஜாதகத்தின்படி ‘நீசபங்க ராஜ யோகம்‘ உள்ள இவர், கடும் போராட்டங்களுக்குப் பின், ‘ராஜ யோக நிலை’யை அடைவார்; நம்பிக்கைக்கு உரியவர்; அடிக்கடி டென்ஷன் ஆவது மட்டுமே இவரது ஒரே பிரச்னை. அதனால், இவரது உடல் நிலை பாதிக்கப்படலாம். இவர் 2010 வரை, வாகனப் பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது. இதற்கு, ‘மிருத்யுஞ்சய ஹோமம்‘ செய்து தீர்வு காணலாம். டென்ஷனால் பணிகள், உடல் ஆரோக்கியம் பாதிக்காமல் தடுக்க, சிவபெருமானுக்கு ‘இளநீர் தாரா‘ வழங்க வேண்டும் இவ்வாறு, கிருஷ்ணகுமார் கூறினார்.

ஒபாமாவின் நலனுக்காக, கோவை, ராமநாதபுரத்திலுள்ள ஆரிய வைத்திய பார்மசியில், அதிகாலை நேரத்தில் ‘மிருத்யுஞ்சய ஹோமம்’ மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. “அதிபராக தேர்வு செய்யப்பட்டால் ஒசாமா பின்லேடனை பிடிக்காமல் ஓயப் போவதில்லை” என பிரசாரம் செய்து வரும் ஒபாமாவுக்கு, நிறைய எதிரிகள் இருக்க வாய்ப்புள்ளது. அவர்களை முறியடிக்க ‘சத்ரு சம்ஹார பூஜை’யும் நடத்தப்படுகிறது.

“ஒபாமா இந்தியாவுக்கு ஆதரவான மனநிலையை கொண்டவர். அமெரிக்கா ஒரு பெரிய நாடு என்பதால், இந்தியா போன்ற வளரும் நாடுகள் நன்மை பெற, அந்நாட்டில் ஒரு சிறந்த மனிதர் அதிபர் அமைய வேண்டியது முக்கியம். எனவேதான், அவரது நன்மைக்காகவும், இந்தியாவின் எதிர்கால வளர்ச் சிக்காகவும் இந்த ஹோம பூஜைகள் நடத்தப்படுகின்றன,” என, ஹோமம் நடத்துவதற்கான காரணத்தை விளக்கினார், கிருஷ்ணகுமார்.

குஜராத் முதல்வராக நரேந்திரமோடி வெற்றி பெறவும், இவர் ஹோம பூஜைகள் நடத்தியுள்ளார். “ஜோதிடம் ஒரு அறிவியல் கலை; துல்லியமாகக் கணித்தால் பரிகாரங்கள் மூலமாக பெரும் இழப்புகளை தவிர்க்கலாம். நாட்டின் முக்கிய பொறுப்புகளுக்கான தேர்தலுக்கு முன், வேட்பாளரின் ஜாதகத்தை கணிப்பது நாட்டு வளர்ச்சிக்கு நல்லது,” என்று முத்தாய்ப்பாக அவர் குறிப்பிட்டார்.

நன்றி: தினமலர்

ஒபாமாவை கொல்ல சதி: 2 பேர் கைது (செய்தித் தொகுப்பு)

சிஃபி: ஒபாமாவைக் கொல்லச் சதி

டென்னசி மாகாண போலீசார் சந்தேகத்திற்கிடமான இரண்டு வாலிபர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இருவரும் துப்பாக்கிகள் விற்கும் கடையில் கொள்ளையடித்து ஆப்ரிகன், அமெரிக்கன் பள்ளியில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.

மேலும் 88 வெள்ளையர்களையும், 14 கருப்பர்களையும் மொத்தம் 102 பேரை கொல்வதற்காக அவர்கள் திட்டம் தீட்டியிருந்தனர்.

டேனியல் கோவர்ட் (வயது 20) மற்றும் பால் ஷெல்ஸ்மான் (வயது 18) ஆகிய இரண்டு பேரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்த துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


தமிழ் செய்தி: ஒபாமாவைக் கொல்ல சதி திட்டம்: 2மாணவர்கள் கைது!

ஒபாமா தேர்தல் பிரசாரம் செய்யும் போது காரை வேகமாக ஓட்டிச் சென்று அவரைக் கொலை செய்ய திட்டம் தீட்டியியிருந்ததாக கைது செய்யப்பட்ட 2 மாணவர்களும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.


மாலைமலர்: அமெரிக்க அதிபர் தேர்தல்: ஒபாமாவை கொல்ல சதி; 2 பேர் கைது

ஏற்கனவே தனது தாத்தாவிடம் இருந்து டேனியல் ஒரு துப்பாக்கியை திருடி வைத்திருந்தான். ஒபாமா பொதுக்கூட்டத்தில் பேசும் போது அவரை நோக்கி வேகமாக காரை ஓட்டிச் செல்லவும் காரின் ஜன்னல் வழியாக துப்பாக்கியால் சரமாரி சுடவும் திட்டமிட்டு இருந்ததாகவும் டேனியல் தெரிவித்துள்ளான்.


தட்ஸ்தமிழ்: ஓபாமாவை கொல்ல சதி: 2 வெள்ளையர்கள் கைது

வெப்துனியா: ஒபாமாவை கொல்ல சதி: 2 பேர் கைது!

சொ. சங்கரபாண்டி – இந்த வார சிறப்பு விருந்தினர்

1. ஒபாமாவா? மெகெயினா? இரண்டும் பேரும் சரியில்லை என்று தப்பிக்கக்கூடாது. இருப்பதற்குள் எவர் ஒகே? ஏன்?

சந்தேகமேயில்லாமல் ஓபாமாதான். பல காரணங்கள் உண்டு, எனக்கு மிக முக்கியமாகப் பட்ட இரண்டு மட்டும் இங்கே (பெருவாரியான அமெரிக்க மக்கள் வாக்களிப்பதற்கு இவை அடிப்படையாக இருக்காது என்றும் கருதுகிறேன்) :

(அ) அமெரிக்காவின் தலைவராக யார் தேர்ந்தெடுக்கப் படவேண்டும் அல்லது யார் தேர்ந்தெடுக்கப் படக் கூடாது என்பதில் அமெரிக்க நலன் மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த உலக நலனும் அடங்கியிருக்கிறது.

சோவியத் யூனியன் இருந்தவரை இரு வல்லரசுகளிடையேயிருந்த போட்டியில் இரண்டு நாடுகளும் ஓரளவுக்காவது தங்கள் ஏகாதிபத்தியச் சண்டித்தனத்தை எச்சரிக்கையுடன் கையாண்டன. அதனால்தான் ரீகன் தலைமையிலான அமெரிக்க முதலாளித்துவ ஆதிக்கவெறியர்கள் சோவியத் யூனியனை எப்படியாவது உடைத்தெறிவதில் முழுமுனைப்பாக இருந்து வெற்றியும் கண்டனர். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, அமெரிக்காவின் தன்னிச்சையான போக்கை மட்டுப்படுத்துவதில் எந்த பெரிய நாடும் அமெரிக்காவுடன் மோதிக் கொண்டதில்லை.

பொதுவுடைமைப் போலியான சீனா போன்ற நாடுகள் தங்களுடைய குறுகிய தேச நலனுக்காக எல்லாவிதச் சமரசங்களைச் செய்து கொள்வது மட்டுமல்லாமல், தம்மளவில் புதிய மக்கள் விரோதச் சண்டிநாடுகளாகத்தான் இருந்து வருகின்றன. எனவே அமெரிக்காவின் தலைவராக வருபவர் உலக ஒற்றுமைக்கும், அமைதிக்கும் முனையாவிட்டாலும் (எ.கா: ஜிம்மி கார்ட்டர் முயற்சி செய்தார்) பரவாயில்லை, சுயநலத்தின் உந்துதலால் உலக அமைதியைச் சிதைப்பவராக இல்லாமல் இருப்பதே பெரிது (எ.கா: புஷ்-சேனி கும்பல் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது).

அமெரிக்காவில் உள்நாட்டில் எத்தனையோ பொருளாதார மற்றும் சமூகப் பிரச்னைகளுள்ளன. அவற்றின் மேல் முதலில் அக்கறை செலுத்துபவராகவும் இருந்தால், உலகத்தைச் சீர்குலைப்பதில் குறைவான கவனம் செலுத்தக் கூடும் (எ.கா: பில் கிளிண்டன்).

மேலும் அமெரிக்க அரசிடம் ஏகோபித்த செல்வாக்கு செலுத்தி வரும் இஸ்ரேலிய ஆதாயக் கூட்டத்தின் முழுமையான கைப்பாவையாகச் செயல்படக்கூடியவராக (எ.கா. மெக்கெய்ன் – பேலின்) இல்லாமல் இருக்க வேண்டும்.

உலகெங்கும் இசுலாமிய அடிப்படைப் பயங்கரவாதம் உருவாக முக்கியமானதொரு காரணம் அமெரிக்க அரசை ஆட்டிப்படைக்கும் இஸ்ரேலிய ஆதரவுக் கும்பல்தான். விளைவு பயங்கரவாதத்தை ஒடுக்குகிறேன் என்ற போர்வையில் பல நாடுகளில் தற்பொழுது அரசு பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது.

மெக்கெய்னுக்கும், பேலினுக்கும் இஸ்ரேல் மட்டும்தான் செல்ல நாடுகள் என்பது அவர்களுடைய வாதங்களிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. எனவே அவர்கள் வந்தால் நிலைமை மோசமாகவே வாய்ப்பிருக்கிறது. மெக்கெய்ன்- பேலின் தேர்ந்தெடுக்கப் பட்டால் போரும், இராணுவமும் பூதாகரமான வளர்ந்து எல்லா நாடுகளிலும் மக்களை வறுமை, வேலையிழப்பு, பட்டினி என இட்டுச் செல்லும் வாய்ப்பு அதிகம்.

(ஆ) கடந்த தலைவர் தேர்தலுக்குப் பின் உருவான ஓபாமா என்ற புதிய நட்சத்திரத்தை(அல்லது பிம்பத்தை)ப் பற்றி நண்பர்கள் பேசியபொழுதெல்லாம் நான் ஓபாமாவைப் பற்றிய நல்லதொரு அபிப்ராயத்தைக் கொண்டிருக்கவில்லை. ஒபாமவை தமிழரங்கம் சொல்லியதுபோல் ”பாரக் ஒபாமா: அமெரிக்காவின் மாயாவதி“யாகத்தான் அல்லது சன்னாசி-சுந்தரமூர்த்தி-செல்வராஜ் போன்ற நண்பர்களின் கருத்துப்படி சரக்கில்லா வெறும் பிம்பமாகத்தான் எண்ணிக் கொண்டிருந்தேன். இன்னமும் அவர்கள் எழுப்பிய ஐயங்கள் பொய்யாகத்தோன்றவில்லை. சன்னாசியின் இந்த இடுகையுடன் எனக்கு உடன்பாடில்லை என்றும் சொல்லி வைக்கிறேன். ஆனால், ஓபாமாவின் இனங்களுக்கிடையேயான சிக்கல்களைப் பற்றிய பேச்சில் தெரிந்த யதார்த்தமும், நேர்மையும் அவரைப் பற்றிய நம்பிக்கையைக் கூட்டியிருக்கிறது.

தலைமையும், வழிகாட்டலுமில்லாமல் வெள்ளை மேட்டுக்குடியினரிடம் பல துறைகளில் போட்டியிட இயலாத கருப்பினத்து மக்களிடையே தன்னம்பிக்கையுடன் சில மாற்றங்களைக் கொண்டுவர ஓபாமாவின் தேர்வு மிகப் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.

மிக எளிமைப் படுத்திச் சொல்வதாயிருந்தால், இராஜாஜியையும், சிதம்பரத்தையும் விட கல்வியறிவிலும், மேதாவித்தனத்திலும் பின்தங்கியிருந்தாலும், கருணாநிதியும், மாயாவதியும் ஆட்சிக்கு வந்தபின்னால் பிற்படுத்தப் பட்ட மற்றும் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு ஏற்பட்ட தன்னம்பிக்கை மிக முக்கியமானது என்று நான் கருதுகிறேன்.

மூதறிஞர் என்று சொல்லப் பட்ட இராஜாஜி சாதித்ததை விட கல்வியறிவும், அனுபவமுமில்லாத எம்.ஜி.ஆர் சாதித்தது எவ்வளவோ மேல்.

மற்றபடி மருத்துவ நலம், கல்விக்கட்டணங்கள், வேலை வாய்ப்பு என எத்தனையோ உள்நாட்டு விசயங்களில் பெரிய மாற்றங்களையெல்லாம் கொண்டுவரக்கூடிய சூழ்னிலையில் அமெரிக்கப் பொருளாதாரம் இன்றைக்கில்லை. எனவே யார் வந்தாலும் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படபோவதில்லை.

2. ஒபாமாவின் எந்தக் கொள்கை உங்களை அதிகம் கவர்ந்திழுத்து ஒத்திசைவாக தலையாட்ட வைக்கிறது?

சுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க தேர்தலும்: வாரயிறுதி விஐபி

பத்ரி:

1. தமிழக அரசியல் களத்திற்கும் அமெரிக்க அரசியல் களத்திற்கும் என்ன ஒற்றுமை?

இரண்டு தேர்தல்களிலும் மக்கள் அனைத்து ‘வயதுக்கு வந்தவர்களும்’ வாக்களிக்கிறார்கள் என்பதைத் தவிர ஒரு பொருத்தமும் இல்லை. அமெரிக்கத் தேர்தலில் இரண்டே இரண்டு ‘அங்கீகரிக்கப்பட்ட’ கட்சிகள்தான். சுயேச்சை வெற்றிபெறுவது கடினம். தேர்தல் கூட்டணி என்பது காணப்படாத ஒன்று.

2. அங்கு நடக்கும் தேர்தலுக்கும், இங்கு நிகழும் தேர்தலுக்கு ஆறு வித்தியாசங்கள் சொல்ல முடியுமா?

1. தமிழகத்தில் கொள்கை குறைவு – அல்லது இல்லவே இல்லை. வெறும் வாக்குறுதிகளும் ஹை-வோல்டேஜ் பிரசாரங்களும் மட்டுமே. அமெரிக்காவில் கொள்கைகளைப் பற்றி அலசுதல் அதிகம். மக்களுக்கு சற்றே அதிகமாக மதிப்பு கொடுக்கப்படுகிறது.

2. தமிழகத் தேர்தலில் வேட்பாளர்கள் பெரும்பாலும் டம்மிகள். தலைவர்களைப் பொருத்தும், கூட்டணி பலத்தைப் பொருத்துமே வெற்றியும், தோல்வியும். அமெரிக்காவில் உள்ளதே இரண்டு கட்சிகள்தான். கூட்டணி கிடையாது. ஒவ்வொரு தொகுதியிலும் யார் நிற்கிறார்கள் என்பதைப் பொருத்தும் அந்த இடத்தில் எந்தக் கட்சிக்கு செல்வாக்கு அதிகம் என்பதைப் பொருத்தும்தான் ஜெயம்.

3. தமிழகத்தில் நன்கு அறியப்பட்ட பொறுக்கிகள், ரவுடிகள், என்கவுண்டரில் போட்டுத் தள்ளப்பட்ட ரவுடிகளின் மனைவிகள் என்று மணி மணியான வேட்பாளர்கள் களத்தில் நிற்பது சகஜம். அமெரிக்காவில் அந்த அளவுக்கு மோசம் என்று சொல்லமுடியாது.

4. தமிழக தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் மக்கள் ஜே ஜே என்று கூடுவார்கள். நிறைய நேரம் காத்திருந்து, அம்மாவோ, அய்யாவோ கையசைத்து நாலு வார்த்தை பேசுவதைக் கேட்பார்கள். அமெரிக்காவில் கன்வென்ஷன் தவிர வேறு எங்கும் கூட்டம் சேரும் என்று சொல்ல வாய்ப்பே இல்லை.

5. அமெரிக்காவில் தேர்தல் செலவுக்கு எப்படிப் பணம் வசூலாகிறது என்று ஓரளவுக்கு டிராக் செய்யமுடியும். தமிழகத்தில் சான்ஸே இல்லை. ஆனால், பெட்டி பெட்டியாக பணம் மட்டும் செலவாகிறது.

6. ஆனால் ஒன்று… மத்திய தேர்தல் ஆணையம் நடத்தும் தமிழகத் தேர்தல்களில் தில்லுமுல்லுகள் நடக்க வாய்ப்பு இல்லை. அமெரிக்கத் தேர்தல்களில் மிகவும் நுண்ணிய வகையில் தேர்தல் தில்லுமுல்லுகள் எப்பொதும் நடக்கின்றன என்று நான் கருதுகிறேன்.

3. இலவச கலர் டிவி போல் ஒபாமாவும் ‘வறியவர்களுக்கு வரி விலக்கு’, ‘வீட்டின் விலைமதிப்பு குறைந்ததற்கேற்ப வங்கிக்கடன் தள்ளுபடி’ என்று பற்பல சலுகைகளை வாக்கு வங்கிக்காக அள்ளி வீசி வருகிறார். ‘NAFTAவை மீண்டும் பேரம் பேசுவேன்’ போன்று கட்சிக்குள் நடக்கும் ப்ரைமரியில் ஜெயிக்க ஒரு பேச்சு. பொதுத் தேர்தலில் ஒரு மாகாண வேட்பாளர்களைக் கவர இன்னொரு பேச்சு; அதே நாளில் இன்னொரு மாகாணம் சென்றால் முரணாண மற்றொரு பேச்சு. இன்னும் ஒபாமாவை நம்புகிறீர்களா?

ஒருமித்த கொள்கைகளை முன்வைப்பதில் சில பிரச்னைகள் உள்ளன. ஒருவருக்கு ஏற்புடையது இன்னொருவருக்கு இல்லை. ஆனால் தேர்தலில் ஜெயிக்க அனைவரது – அல்லது பெரும்பான்மையினரது – வாக்குகள் தேவை. எனவே சில இடங்களில் மழுப்பவேண்டியுள்ளது. ஒபாமா இதனைச் செய்கிறார். மற்றவர்கள் அதிகமாகச் செய்கிறார்கள். இதெல்லாம் நியூட்ரல் வாக்காளர்களை எப்படியாவது கவர்வதற்கான வழி.

இது எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும், ஒபாமா, மெக்கெய்னை விட 100 மடங்கு சிறந்தவர் என்பது என் கருத்து.

4. பச்சை பார்ட்டி, ரால்ஃப் நாடர், பாப் பார் என்று இன்னும் சிலர் கூட அமெரிக்க அதிபராக முயற்சிக்கிறாங்களே… அவங்களப் பத்தி உங்க எண்ணங்களை சொல்லுங்களேன். இவர்களை ஏன் நீங்க ஆதரிக்கவில்லை?

இவர்கள் எல்லாம் ஒருவகையில் சுப்ரமணியம் சுவாமி போன்றவர்கள். அமெரிக்கத் தேர்தல் முறையில் இவர்கள் யாருமே ஜெயிப்பதற்கு வாய்ப்பே இல்லை. அந்த முறையை மாற்றுவதற்கான வழிமுறையில் இறங்காமல் கையில் இருக்கும் காசைக் கொட்டி வீணாக்கி, கோமாளியாகத் தோல்வியடைபவர்களை வேறு என்ன சொல்லலாம்? இவர்களை நான் அதற்கு ஆதரிக்கவேண்டும்?

5. திடீரென்று தற்போது நடக்கும் பொருளாதாரப் பிரச்சினையினால் அமெரிக்க தேர்தல் முறை மாற்றியமைக்கப்படுகிறது. தமிழ்நாட்டு நடிகரை ஜனாதிபதியாக்க முடிவெடுக்கிறார்கள். எவர் பொருத்தமானவர்? ஏன்?

வடிவேலு.

ஜார்ஜ் புஷ்ஷைவிட மோசமாக இவரால் நடந்துகொள்ள முடியாது. ஒருவேளை அமெரிக்கா படுவேகமாக சுபிட்சமான நாடாக ஆகவும் வாய்ப்புகள் உள்ளன.

எல்லாவற்றுக்கும் மேலாக, அவரது நிறம், பல கருப்பர்களுக்கு மன ஆறுதலை அளிக்கும். வெள்ளை மாளிகையில் கருப்பு அதிபர்.

பத்ரி