இன்று மைக்ரோசாஃப்ட் நிரலிகளில் வல்லுநர்களுக்கான அ-கலந்துரையாடலுக்கு சென்றிருந்தேன். நிறைய கற்றுக் கொடுத்தார்கள். முழுக்க முழுக்க தன்னார்வலர்களின் சொற்பொழிவு.
அம்சமான சனிக்கிழமையன்று காலை ஐந்தரைக்கே எழுந்து ஒண்ணரை மணி நேரம் வண்டியோட்டி வந்து, தொண்டை கிழிய சொல்லிக் கொடுப்பதற்கு கோடி கூலி கேட்டிருக்கலாம். ஆனால், இவர்கள் எல்லோரும் தானாக முன் வந்து நுட்பத்தின் நுட்பம் எல்லாம் செய்முறை விளக்குகிறார்கள்.
ஏன்?
முதல் பிரிவில் மைரோசாப்டிற்காக வேலை பார்ப்பவர்கள். தங்கள் நிறுவனத்தின் புதிய மென்பொருள்களை மார்க்கெடிங் செய்பவர்கள்.
இரண்டாமவர் கன்சல்டிங் துறைக்காரர்கள். தங்களுக்கு கணினித் துறையில் எவ்வளவு தெரியும் என்பதை நாசூக்காக முன்வைக்கிறார்கள். அவர்களின் அனுபவத்தையும் திறமையும் பலருக்கு வெளிப்படுத்த இதை விட சிறந்த அரங்கு கிடைக்காது.
கடைசியாக என்னைப் போன்றோரும் உண்டு. சிலரின் பேச்சைக் கேட்டதும், இவர்களுக்கு, ‘நானே இவரை விட நன்றாக கற்பிப்பேனே’ என்று நம்பிக்கை பிறந்திருக்கும். அல்லது, புத்தம்புதிய விஷயங்களை அறிவதற்கு, அதைக் குறித்து பிரசண்டேஷன் கொடுப்பதுதான் சிறந்த வழியாக கருதுபவர்கள்.
நீச்சலைக் குறித்து கற்றுக் கொடுக்கப்படுவதை விட, கிணற்றுக்குள் குதித்து தத்தளித்து எழுவதை விரும்புபவர்கள்.