Tag Archives: வாசிப்பு

பாணர் சென்னியும் வண்டுசென்று ஊதா

புதுமையான சூழ்நிலை உதவுகிறது. சந்தேகமற்ற முறையில் மனவலுவால் நகர்த்தப்படுகிறது. தன்னைக் கட்டுப்படுத்திய சங்கிலிகளையும் உடல் பலவீனங்களையும் தள்ளிவைத்து துள்ளி எழுகிறாள் அம்மையார். அவளது “இல்லை” மறைந்து, அதன் இடத்தில் “புதியது” மற்றும் “இப்பொழுது” மலருகின்றன.

மார்ச், மா, மற்றும் சகுரா – கீதாஞ்சலி ஷ்ரீ எழுதிய இந்த கதையை அனுராதா கிருஷ்ணசாமி மொழிபெயர்த்துள்ளார். கதையின் மையமாக எழுபதுகளில் உள்ள முதியோள், ஜப்பானில் தனது மகனை சந்திக்க வருகிறார். ஆரம்பத்தில், அவள் தயக்கத்துடன் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்தாள்; தெரு முனைக்குக் கூட செல்ல மறுக்கிறாள். ஆனால் பிப்ரவரி, மார்ச் மாதங்கள் உருண்டோடிக்கொண்டிருக்கும் போது, அவளது மாற்றம் வெளிப்படுகிறது. மகனின் பார்வையில்—அதே நேரத்தில் கதையாசிரியையின் பார்வையிலும்—ஒரு முழு தேசமே அவளுடன் இணைந்து மலர்கிறது.

மகனின் பயணமும் கதைக்கு அவ்வளவு முக்கியமானது. தாய் மாறுவதோடு, ஒரு தாய், ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான மகனின் உள்ளார்ந்த எண்ணங்கள் வெளிப்படுகின்றன—அச்சத்துடனும் சந்தேகத்துடனும். பழையதை விட்டு வெளியேறுவது, மகனுக்கும் அவ்வளவு அவசியமான செயலாக மாறுகிறது.

சொல்வனம்.காம் மொழியாக்கங்கள் முக்கியமானவை. தி. இரா. மீனா, எம். ஏ. சுசீலா போன்றோர் தொடர்ந்து எழுதுவடு சிறப்பு,

அனுராதா கைவண்ணத்தில் தமிழுக்குக் கிடைத்த மறக்க முடியாத கதை.

நீலத்தில் இத்த்தனை நிறங்களா!

டா வின்சி ஓவியமான தி லாஸ்ட் சப்பர் மீது இசைக் குறிப்புகளை வைத்தால், அந்த ஏற்பாடு சிம்பொனி இசையை ஒத்திருக்கும். அந்த ஆபரா இசைக்கும்போது, யூடியுப் குறுஞ்சுருள் போன்ற 40 விநாடிகளில் இராகமாலிகை இன்னிசையை உருவாக்கும், இது கலை ஆர்வலர்களையும் இசைக் கலைஞர்களையும் ஈர்க்கிறது. இது வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் இது டா வின்சியின் புகழ்பெற்ற படைப்பின் உற்சாகமான விளக்கமாகும்.

சொல்வனம் 330-ம் இதழ் இப்படிப்பட்ட இதழ்.

https://solvanam.com/category/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-330/

ஓவியம் போன்ற கவிதைக்காரருடன் நேர்காணல் – சந்திப்புகள் தரிசனம் ஆவது அபூர்வம் – அது இங்கே பூரணம். நன்றி நம்பி!
மூன்றே முன்று தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் – ஒவ்வொன்றும் சீலைச்சித்திரம். அகநானூறு அந்தக் காலம்; சொல்வனம் 400 இந்தக்காலம்.
ஆலமும் நீலம்; கங்கையும் நீலம்; காதுகள் மட்டும் நீல நிறமுடைய குதிரை சியாமகன்னம் – அது போன்று அருணாச்சலம் ரமணன் எங்கும் கண்ணஞ்சனம் இட்டு துலக்குகிறார்.
கமலதேவியில் ஔவையார் – பெருங்களிறு என்ற படிமத்தை விவரிக்கிறார்.
அரிதான விஷயங்களை தமிழுக்குக் கொணரும் மைத்ரேயன் – முக்கியமான இன்னொரு ஆக்கத்தை மொழியாக்குகிறார்.

நீலத்தில் இத்தனை நிறங்களா!

உங்களின் #1 இடுகை என்னவென்றால் – என்னுடைய ஜெய் மஹேந்திரன் அறிமுகமும் ஆய் கதைகளும் என்று சொல்வீர்கள் என நம்புகிறேன்.

டாலி “மனநோய்-விமர்சனம்” என்னும் ஓவிய முறையைஉருவாக்கினார், அவரின் மிகையதார்த்தவாத படங்களை ஊக்குவிப்பதற்காக தன்னை ஒரு சுய-தூண்டப்பட்ட, மாயத்தோற்ற நிலையில் வைப்பார். அப்படியெல்லாம் திரிபுணர்வாகாத சகுனங்களும் சம்பவங்களும் – 5 : வாசித்து விடுங்கள்.

அஞ்சனி

நல்ல சிறுகதை என்பது நல்ல நாவலைப் போல. முழு வாழ்க்கையையும் உணர்த்தும்.

நியு யார்க்கரில் லாரா (Lara Vapnyar) எழுதிய Siberian Wood அந்த ரகம்.

கதை எதைப் பற்றியது?

அ) திருமணம்; விவாகரத்து; மறுமணம் என்னும் சுழற்சியில் எவ்வாறு சிக்குகிறார்கள்?

I was too focussed on the struggles of motherhood at that age to see the magnitude of suffering that childlessness could cause. I’d spend hours discussing with other young mothers how tied down we felt. It was so much easier to list the hardships of having a child than to pinpoint the things that made it worthwhile. What was it that made it worthwhile, anyway? It was not about being fulfilled, no, though it was about being full—full of care, full of worry, full of affection, full of a love so great and pressing that it was almost indistinguishable from pain, full of something heavy and real that made you feel grounded, rather than weightless. You felt more there. That was precisely what Daria desperately wanted—to feel rooted, securely tied down.

ஆ) அமெரிக்காவில் குடிபுகுவதற்காக காதல் பாவ்லா கல்யாணம் செய்யும் வந்தேறி நிலைமை என்ன?

He was in awe of New York City—the streets, the buildings, the traffic, the people, the energy, the art! The Met was just stunning, especially the wooden sculptures made by the Asmat people. They were breathtakingly complex—it was as if tree roots were growing out of a person’s body, connecting her to her ancestors, who had roots growing out of their bodies, too, connecting them to the deeper past, and it went on and on. It was a brilliant way to show continuity of life, to hint at immortality.

இ) எல்லோருக்கும் பிடித்தமாக இருக்கும் டாரியா (Daria), குழந்தையைப் போன்ற பேரெல்லை இலட்சியக் கனவாக, எவ்வாறு எல்லாவற்றிலும் முழுமையை எதிர்பார்த்து நிராசையை எதிர்கொள்கிறாள்?

Mark thought that there was something silly and artificial about Daria’s fantasies. As if she had no idea what a family was or how it operated but took her clues from children’s picture books.

ஈ) நெகிழ்ந்து வளையும் நாணலையும் நெடிந்து தனித்து நிற்கும் பனை மரத்தையும் கடற்கரையில் பார்ப்போம். வாழ்வில் இணைத்தால்?

She was vegetarian and knew her way around vegetables, often using ingredients that Mark hadn’t even heard of, like kohlrabi or Japanese turnips or chicory.

உ) நிச்சயமின்மையை எண்ணிப் பார்த்து விளையும் பயங்களைக் கண்டு அஞ்சி நடுங்கி எலிவளையத்துக்குள் சிக்குறுகிறோமா? அடுத்த வேளை எங்கு இருப்போம், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், இன்னொருவருடன் ஓப்பிடாமல் — இலக்கை அடைய உயரப் பறக்கும் பட்டாம்பூச்சியாக பறந்து திரியலாமா?

There was a photo of Daria in the middle of a sea of volcanic ash, kneeling over a puny tree. She had her head cocked to one side, and her self-conscious smile suggested that she knew some people might find her endeavor ridiculous, like that of a child “planting” a stick in the sand. And yet she was doing it anyway. There was something inspiring in her insistence on continuing to try when most people would have given up, in her ability to preserve hope, no matter how absurd it was.

வாரயிறுதி விருந்தில் கதை ஆரம்பிக்கிறது. அந்த சந்திப்பில் நமக்கு கதாமாந்தர்கள் அறிமுகம் ஆகிறார்கள்.

துள்ளலான துவக்கம். தொடர்ந்து வாசிக்க வைக்கும் ஆர்வம். நடுநடுவே அருங்காட்சியக விமர்சனம்; கலையரங்க நையாண்டி; பலான விஷயம்; சுவையான தகவல் சரடு. எல்லாவற்றையும் விட சம்பவங்களினால் கோர்க்கும் லாவகம். இருபதாண்டு கால விஷயங்களை பத்து பக்கங்களில் பசுமையாகத் தரும் சாமர்த்தியம்.

தமிழ்ச் சிறுகதைகளோடு ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.

நீதி போதனை இல்லை. “இது மட்டுமே சரி!” என்னும் தீர்ப்புகள் இல்லை. வட்டார வழக்கு ஜாலங்கள் இல்லை. கேள்விகளை எழுப்பி, பக்கத்து வீட்டு மனிதர்களை உணர்த்தி, உக்ரெயின் – ரஷியா போரையும் நினைவிற்குக் கொணர்ந்து, நீண்ட நாள் நினைவில் தங்கும் குணச்சித்திரங்களை சிந்தையில் தேக்கும் ஆக்கம்.

கச்சிதம்.

தி டிஸைப்பிள் / டிஸ்சிப்பிள்

சென்ற வருடம் வந்த படங்களுக்கான, பல சிறந்தத் திரைப்பட பட்டியல்களில் முக்கிய இடத்தை இந்தப் படம் பிடித்திருக்கிறது.

தலைப்பு யேசுநாதரின் அணுக்க சீடர்களை நினைவுறுத்தும். நெட்ஃப்ளிக்சில் ஆறு மாதம் முன்பு வந்த போதே பார்த்திருந்தேன். கிறிஸ்துமஸை ஒட்டி குடும்பத்தினருடன் மீண்டும் பார்த்தேன்.

வருடத்திற்கு ஒரு முறையாவது இந்த மாதிரி பெரிய கட்டுரை எழுத நேரம் கிடைக்கிறது. இந்த வருடம் இந்த சினிமாவிற்கான விமர்சனம் + அறிமுகம்:

இது எதற்காக இந்த வடிவம்:

  1. மத நூல்கள், சாம வேதம், ஹிந்துஸ்தானி இசையை ஒருங்கிணைப்பது
  2. படத்தில் வரும் கிசுகிசுக்களுக்கு உருவம் தருவது
  3. கலை, தாகம், தேடல் என்பதற்கு வரி வடிவம் கொடுப்பது
  4. சமகாலப் படங்களை ஒப்பிடுவது
  5. சங்கீதமும் சமயமும் ஒன்றா என ஆராய்வது
  6. படத்தில் வரும் மேற்கோள்களை அப்படி மொழியாக்கம் செய்வது
  7. வட இந்திய இசைக்கு சற்றே அறிமுகம் தருவது
  8. படத்திற்கு விமர்சனம் என்பது இந்த தொகையறாக்களை ஒருங்கிணைக்கும் சபை

நீங்கள் ‘கல்லி பாய்’ பார்த்திருப்பீர்கள். அது மசாலா சினிமா. ஹீரோ கீழே விழுவான்; ஃபீனிக்ஸ் பறவை என எழுந்திருப்பான். அது சீடரின் வெற்றியை பிரும்மாண்டமாக்கி, சாகசத்தை நிஜம் போல் காட்டும்.

டிஸ்சிப்பிள் மாதிரி படங்கள் நிஜம்.

படத்தின் இன்னொரு பாதி குருநாதர். அதற்கு “டெட் பொயட்ஸ் சொஸைட்டி” மாதிரி மசாலா காவியங்கள் பார்த்திருப்பீர்கள். ஆசான் வழிநடத்துவார். நெறிப்படுத்துவார். அதுவும் நிஜத்தில் கப்ஸா.

வெறுமனே, இது உண்மை; அது பொய் என போட்டு உடைக்காமல் உணர்த்தும் படம் எதுவுமே சிறந்த படம்.

விரிவான விமர்சத்திற்கு #சொல்வனம் / #solvanam வாருங்கள்.

வாசித்து உற்சாகமூட்டிய மீனாக்ஷி பால்கணேஷ்-க்கு நன்றிகள்.

Climbers by Helen DeWitt

”உங்களுக்கு பொருட்டில்லாததை விற்கிறீர்கள். தேவடியாத்தனம் செய்யும்போது அது உடம்பு. பதிப்பிக்கும்போது, அது மூளை. மூளையை வைத்துதானே புத்தகம் எழுதுகிறோம்…”

ஆஃபீஸ் ஸ்பேஸ் (Office Space) படம் பார்த்திருப்பீர்கள். அந்தப் படத்தை இன்னும் கொஞ்சம் இலக்கியத்தரமாக எழுதினால், வாசகனை கொஞ்சம் யோசிக்க வைக்குமாறு புத்தகமாக உருவாக்கினால் எப்படி இருக்கும்? ஹெலன் டூயிவிட் எழுதிய மின்னல் தடிகள் (Lightning Rods) போல் இருக்கும். அந்தப் புத்தகம் குறித்த அறிமுக விமர்சனங்கள்தான் எனக்கு ஹெலன் என்னும் எழுத்தாளரை அறிமுகம் செய்தது.

அந்தப் புத்தகத்தின் கதை என்ன?

சந்தையிலே செல்லுபடியாகாத விற்பனையாளர் அறிமுகம் ஆகிறான். எதையும் சாமர்த்தியமாகப் பேசி ஒழுங்காக விற்கத் தெரியாதவன். வெட்டிப் பேச்சும் அழையா ஆலோசனைகளுமாக காலத்தைப் போக்குபவன். அனைத்து நிறுவனங்களிலும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக மனிதவள மேலாளர்கள் கெடுபிடியான நடைமுறைகளை வைத்திருக்கிறார்கள். அதற்கு மாற்றாக புத்தம்புதிய சாதனத்தை அறிமுகம் செய்கிறான். அலுவலில், பாலியல் தொல்லைகளை அதிகரிக்கும் சாதனம் – அனைத்து கழிப்பறைகளிலும் பொருத்தி விட வேண்டும். இந்தப் பொருளை நிறுவி விட்டால் உடன் பணிபுரியும் பெண்களைப் புணரலாம். யார் புணர்கிறார்கள் என்று தெரியாது. அலுவல் அழுத்தங்களும் அடக்கி வைத்த ஆசைகளும் இந்த மாதிரி சாதனத்தை நிறுவுவதால் நீங்கும் என்று அந்த விற்பனையாளன் அமோகமாக சந்தையில் சொல்லி, ஜாம்ஜாமென்று பணம் புரட்டுகிறான்.

இந்தக் கதையின் நாயகன் குறித்த பேட்டியில் ஹெலன் இவ்வாறு சொல்கிறார்:

“நான் பெண்ணாக இருந்தாலும், ஆண் பார்வையில் இந்தக் கதையை எழுதினேன். சொல்லப் போனால் பெண்களை முக்கிய பாத்திரமாக வைத்து எழுதுவதை விட ஆண்களை கதாநாயகனாகப் போடுவது எளிதாகவே இருக்கிறது.

என்னுடைய சின்ன வயதில் கை பாட்டுக்கு தானாக எதையாவது வரையும். ஆனால், பெண்களைத்தான் வரைய முடியும். என்னால் பசங்களை வரையவே முடியவில்லை. அந்த உருமாற்றம் எப்பொழுது நடந்தது என்று தெரியவில்லை. ஆண்களுடன் பழகும்போது கவனித்தேன்; அவர்களால் தங்களைப் பற்றியே பேச முடிந்தது. ஒரு ஆண் கதாபத்திரத்திற்குள் சென்று, அந்த பாத்திரம் மாதிரி யோசிக்க வேண்டுமானால், ரொம்ப சிரமப் பட வேண்டாம். அந்த ’ஆணுக்கு’ ஒருவிதமான மனப்பிடிப்பைக் கொடுக்க வேண்டும். அந்தப் பிடிப்பின் மேற்சென்று மிகைவிருப்பமாக்க வேண்டும். அது எப்படி அவனை ஆட்டிப்படைக்கிறது என்று எழுதினால் போதுமானது.

பெண்களை கதாபாத்திரங்களாக்குவது அவ்வளவு நேர்ப்படையானதல்ல. அவர்கள், அவ்வளவு சீக்கிரம் உணர்வு வசம் சிக்கி மாற்ற இயலா எண்ணத்திற்குள் சுழல்வதில்லை.

மின்னல் தடிகள் (Lightning Rods) நாவல் செக்ஸைப் பற்றியது. சாப்பிடும்போது கூட செக்ஸை குறித்து சகஜமாகப் பேச ஆடவர்களால் முடிகிறது. எந்த ஆணுடன் பேசினாலும் சரி… அவர்கள் இந்த மாதிரி ஏதாவது ஒன்றை உதிர்க்கிறார்கள்: ‘பருத்த மார்புகள் எல்லாருக்கும் பிடிக்கும்!’ உடனே எனக்கு நூறு கேள்விகள் தோன்றும். உனக்கு எப்படி இது தெரியும்? உனக்கு உன்னைப் பற்றித் தெரியும்… எல்லா ஆண்களும் இப்படித்தான் என்று எப்படி உன்னால் சொல்ல முடிகிறது? கருத்துக்கணிப்பு எடுத்தாயா? இதே ரீதியில்தான் என்னுடைய நாயகனும் இருக்கிறான். நம்பிக்கையாகப் பேசுவான். அவனுடைய இச்சையை வைத்து அனைவரைக் குறித்தும் அடித்துப் பேசுகிறான்.

இதே மாதிரி மக்களை பதிப்புத்துறையிலும் தொடர்ச்சியாக சந்தித்தேன். புத்தக வெளியீட்டிற்காக அவர்களுடன் உரையாடும்போது… மன்னிக்கவும்… பின்னாலிருந்து முகந்தெரியாத எவனோ ஒருத்தன் புணருவது போல் உணர்ந்தேன். தேவையில்லாத அறிவுரைகளைக் கேட்டு காது புளித்துப் போனபோது, இந்த நாவல் உருவானது.”

சரி… இப்பொழுது நவம்பர் ஹார்ப்பர்ஸ் இதழில் வெளியான ஏறுபவர்கள் (Climbers) கதைக்கே வந்து விடுவோம்.

ஹார்பர்ஸ் பத்திரிகையில் ஹெலன் (Helen DeWitt) எழுதிய ஏறுபவர்கள் (Climbers) கதை இங்கே கிடைக்கிறது: http://harpers.org/archive/2014/11/climbers/ (சந்தாதாரர்களுக்கு மட்டும் படிக்க இயலும்)

கதையில் நான்கு கதாபாத்திரங்கள். முதலாவதாக நமக்கு கில் அறிமுகமாகிறான். துடிப்பானவன். சுவாரசியமாகப் பேசுகிறான். நியு யார்க்கில் வசிக்கிறான். நிறைய படம் பார்த்து, புத்தகம் படித்து, இசை கேட்டு, கணினி மேய்ந்து, விளையாட்டுகள் களித்து வாழ்பவன். அவனுடைய உபசரிப்பு விழாவில் நமக்கு சக எழுத்தாளினியான ரேச்சல் அறிமுகமாகிறாள். பரபரப்பான கல்யாண ரிசப்ஷனில் தனியே போய் பஃபே சாப்பாடு எடுத்துக் கொள்வது போல், கில் வசிக்கும் வீட்டில் நடக்கும் இலக்கிய கூட்டத்தின் நடுவே விடப்பட்டிருக்கிறாள்.

இரண்டாவதாக சிஸ்ஸி தோன்றுகிறாள். (நீங்கள் என்னை முறைப்பது தெரிகிறது. ரேச்சல் என்பவள் இரண்டாம் எண்ணுக்குரியவள் அல்லவா என்று மறுமொழியில் கேட்காதீர்கள். பெயரில் என்ன இருக்கிறது? சிஸ்ஸியாக இருந்தால் என்ன… ரேச்சல் ஆக இருந்தால் என்ன போச்சு… அல்லது இருவருமே ஒருவர்தான் என்றாலும் உங்களுக்கு என்ன? நீங்கள் தொடருங்கள்) அவள் ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நகரத்தில் பீட்டர் டிஜிக்ஸ்டிரா என்னும் எழுத்தாளரை அகஸ்மாத்தாக சந்திக்கிறார். இந்த எழுத்தாளர்தான் கதையின் மையக் கரு. இவரைச் சுற்றித்தான் எல்லாம் நகர்கிறது.

எழுத்தாளர் என்று ஒருவர் இருந்தால் நாவல் என்று ஒன்று உருவாகும். நாவல் என்று ஒன்று உருவானால், அதைப் பதிப்பிக்க பதிப்பாளர் என்று ஒருவர் வேண்டும். பதிப்பாளரிடம் பத்திரமாக எழுத்தாளரையும், அவ்வளவு பத்திரமில்லாமல் அவருடைய நாவலையும் கொண்டு சேர்க்க ஏஜெண்ட் என்று ஒருவர் வேண்டும். அவர் ரால்ஃப்.

கால்ஃப் ஆடுவது போல் நல்ல பெயர் ரால்ஃப். பெயருக்கேற்ப நல்ல ஆடைகளையும், கவின்மிகு பழரசங்களையும், திடகாத்திரமான கண்கவர் வழக்கங்களையும், கொண்டவன். கொஞ்சம் போல் படாடோபம். நேர்த்தியான விற்பனையாளனைப் போல் எழுத்துக்களை அற்புதமாக பிரபலமாக்குபவன். சன்னமான எழுத்துக்களையும் கோட்டையில் கோலோச்ச வைப்பவன். அவனுடைய கைபட்டு நூல் வெளியானால், ஆப்பிரிக்காவில் இருந்து எபோலா பரவுவது போல் உலகெங்கும் அந்தப் புத்தகம் நோபல் பரிசுக்காக பேசப்படும்.

இந்த நாலு பேருக்கு நடுவில் ராபர்ட்டோ பொலானோ (Roberto Bolaño) எழுதிய 2666 உருளுகிறது. எழுத்தாளர் பீட்டர் டிஜிக்ஸ்டிராவைப் அசப்பில் பார்த்தால் ராபர்ட்டோ பொலானோ கூட நினைவிற்கு வரலாம். எழுத்தாளர் பீட்டருக்கு சீக்கிரம் பணம் புரட்ட வேண்டும். சிகரெட் பிடிக்க பணம் வேண்டும். நாலு சுவற்றுக்குள் அடைந்து கிடக்க வாடகைப் பணம் கட்ட வேண்டும். காலாற நடக்க பணம் வேண்டும். அதற்காகவாது எழுத வேண்டும். பணத்திற்காக எழுத வேண்டும்.

ராபர்ட்டோ பொலானோவின் 2666 குறித்து இரண்டு விதமான விமர்சனங்களை ரேச்சலும் சிஸ்ஸியும் சொல்கிறார்கள். ஒருவரால் இரண்டு பக்கத்திற்கு மேல் படிக்க முடியவில்லை. ’இந்த வாழ்க்கையில் ஒரே ஒரு புத்தகம் மட்டும் படித்தால் போதும் என்றால் அது ரொபார்ட்டோ போலானோ எழுதிய 2666 மட்டும்தான்’ என்னும் வகையில், இன்னொருவரால் 2666ன் சில பகுதிகளைப் படித்தாலே ஜென்ம சாபல்யம் கிட்டுகிறது.

பொலானோ எழுதிய பிரும்மராட்சஸ துப்பாறிவாளர்கள் (The Savage Detectives) நாவலை நீங்கள் படித்ததுண்டா? அதில் நாற்பதுக்கும் மேற்பட்ட கவிஞர்களின் பார்வையில் கதை விரியும். புலவர்களுடன் உரையாடல், புலமைக் காய்ச்சல்கள், கவிஞர்களின் வாழ்விலே ஒரு நாள் என்று கலவையாகச் சொல்லப்பட்டிருக்கும். இந்த ஏறுபவர்கள் (Climbers) கதையும் இவ்வாறே நாலு எழுத்தாளர்களின் வாழ்வியல் சித்திரங்களுடன், பேச்சுக்களுடனும், விமர்சனங்களுடனும், எழுதவியலா தருணங்களின் தவிப்புகளுமாக விரிகிறது.

ஏறுபவர்கள் (Climbers) கதையில் – நிஜ எழுத்தாளர் ராபர்ட்டோ பொலானோ போல் உடனடியாக பணம் தேவைப்படும் கதாநாயகனாக பீட்டர் டிஜிக்ஸ்டிரா; ஆனால் ஏறுபவர்கள் (Climbers) கதையோ பொலானோவின் தி சாவேஜ் டிடெக்டிவ்ஸ் நாவலைப் போல் கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது.

எழுத்தாளர்களைப் பற்றி எழுதுவது சிக்கலானது. இவரைப் போல் இருக்கிறது, அவரைத்தான் குறிப்பிடுகிறார் என்று குற்றச்சாட்டுகள் எழாமல் பொதுப்படையாக, அதே சமயம் சம்பவங்களும் + விஷயங்களும் கலந்து எழுத வேண்டும். குறியீடுகள் சொல்லப் போய், கதையே புரியாமலும் போக விடாமல், நேரடியாகவும் பூடகமாகவும் புரிய வைக்க வேண்டும். எழுத்தாளர் என்றாலே இப்படித்தான் இருப்பார் என்னும் அரைத்த + புளித்த மாவான வார்ப்புருவிற்குள் சிக்காமல் கதை வளர வேண்டும். அவற்றை இந்த ஏறுபவர்கள் (Climbers) கதையில் ஹெலன் இயல்பாகக் கொண்டு வருகிறார்.

அந்த நாலு ஏறுபவர்களையும் கொஞ்சம் பார்ப்போம்.

பீட்டர் டிஜிக்ஸ்டிரா மனநல மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டவர். சிறிது சரிந்தாலும், மீண்டும் மனநல காப்பகத்திற்கே அனுப்பி வைக்கப்படுவார். அவருக்கு ஆங்கிலம் இரண்டாம் மொழி. தாய்மொழியில் எழுதி பணம் சம்பாதிக்க முடியவில்லை. ஷிவாஸ் ரீகல் வேண்டாம். நல்ல பியர் கூட வாய்க்கப் பெறுவதில்லை. எனவே, ஆங்கிலத்தில் எழுத முயல்கிறார். முதலில் வார்த்தைகள்; தேர்ந்தெடுத்த வார்த்தைகளாகப் பொறுக்க வேண்டும். வார்த்தைகள் கிடைத்த பின் வாக்கியங்கள். வாக்கியங்களை எப்பொழுது நேரம் கிடைக்குமோ, அப்பொழுது மனிதர்களிடம் ஏற்றிவிடப் பார்க்கும் எழுத்தாளர்.

கில் ஒரளவு புகழடைந்துவிட்ட எழுத்தாளன். விளக்கு வைப்பதற்குள் வோட்கா ஏற்றிக் கொள்பவன். இலக்கியவாதி பீட்டர் டிஜிக்ஸ்டிராவிற்கு மாடியறையைக் கொடுப்பதால் சமூக அந்தஸ்திலும் ஏற நினைப்பவன். உண்மையை எழுத்தில் ஏற்ற எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று தேடியலைபவன்.

ரேச்சல் புத்தகம் எழுதி அச்சில் கண்டவள். பீட்டர் டிஜிக்ஸ்டிராவை ஏற்றிவிடத் துடிப்பவள். வான் கோ வரைந்த ஓவியம் பிடிக்கும் என்பதால் வான் கோ வரைந்த ஊருக்கே சென்று, அவருடைய வீட்டினுள்ளே வசித்துப் பார்க்க விழையும் ஜாதி. எழுத்தாளருடன் அளவளாவினால், என்ன சங்கதி கிடைக்கும் என்று அளந்து பார்க்காமல், எழுத்தாளனின் எழுத்தை அடித்தல் திருத்தலோடு, முதல் பிரதியை வாசிக்க விழையும் ஜாதி. எழுத்தாளரின் ஒரு கதை பிடித்துப் போனதால், மொழி புரியாத அயல்நாட்டுப் புத்தகங்களை அள்ளிக் கொண்டு வீட்டின் புத்தக அலமாரியில் கொலு வைத்து அழகு பார்க்கும் ஜாதி. ஒரேயொரு புரிதல் கலந்த ஆற்றுப்படுத்தும் சிணுங்கலில் எவரையும் ஆசுவாசப்படுத்தி தரைக்கு இறக்கும் ஜாதி.

இறுதியாக முகவர் ரால்ஃப். பாரிஸ் என்றால் சாக்லேட் காதல்; லத்தீன் அமெரிக்கா என்றால் மாந்திரீகம் தூவிய எதார்த்தம்; ஜப்பான் என்றால் தனிமைத் துயரின் விரக்தி; என்ற பாசறையில் டட்ச்சு மொழிக்கான இலக்கணமாக எழுத்தாளர் பீட்டர் டிஜிக்ஸ்டிராவை கணிப்பவர். அமெரிக்காவின் அமெரிக்கர்களின் எடுத்துக்காட்டாக கதையில் வருகிறார். கண் துஞ்சாமல், கருமமே கண்ணென இலக்கியத்தை செய்து முடிப்பவர். இவர் போன்றோர் ஏவுவதனாலேயே, எழுத்தாளர்கள் தங்கள் காவியங்களுக்கு இறுதி வடிவைத் தருகிறார்கள்; விமர்சகர்கள் பயபக்தியோடு அந்த இலக்கியபீடத்தை அணுகுகிறார்கள்; நூல் வெளியீட்டாளர்களும் லாபம் சம்பாதித்து பங்குச்சந்தையில் ஏறுகிறார்கள்.

கதையின் அமைப்பு மிகவும் சிக்கலான அமைப்பு. சிறுகதையில் இத்தனை கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு நாட்டில் உலாவுகிறது. முடிவிற்கு வெகு அருகில் கதை துவங்குகிறது. அந்த முடிவிற்கு சற்றே முன்பாக கதை முடிகிறது. முன்னும் பின்னுமாக கதை உலாவினாலும் குலுக்கிக் குலுக்கிக் கதையை விட்டு தூரப் போடாமல், சுவாரசியமாக முன்னேறுகிறது. அந்த அமைப்பிற்காகவே இன்னொரு முறை படித்தேன். மீண்டும் படிக்கும்போதுதான், வார்த்தைகளின் தேர்வும், கதாபத்திரங்களின் குணாதிசய அறிமுகங்களும், சொல்லாட்சியும் பிடிபட்டது. அந்தச் சுவைக்காக மீண்டும் மூன்றாம் முறை படித்தேன். அப்பொழுதுதான் மற்ற புத்தகங்களின் விமர்சனமும், வேற்று மொழி கற்றுக் கொள்வதை சொல்லும் நேர்த்தியும், சுற்றுலா தலங்களை விவரிக்கும் வர்ணனையும் ஈர்த்தது. அதற்காக இன்னொரு முறை படிக்க வேண்டும்.

http://en.wikipedia.org/wiki/Theodor_W._Adorno

முதல் நாவல்

ஒவ்வொரு மொழியிலும் “தலைச்சன் குழந்தை” என்று பெயர் பெறும் முதல் நாவல்களின் பட்டியல் கீழே:

  • தமிழ்: வேதநாயகம் பிள்ளையின், “பிரதாப முதலியார் சரித்திரம்” (Prathapa Mudaliar Charitram by Samuel Vedanayagam Pillai. Written in 1857, it was published only in 1879)
  • அசாம்: ஹேம் சந்திர பாருவாவின், “பாகிரே ராங்-சாங்-வித் தாரே கோவபத்தூரி” (Padmanath Gohain Baruah’s Bhanumoti, published in 1890)
  • வங்காளம்: பாங்கிம் சந்திரரின், “ஆனந்த மடம்” (Bankim Chandra Chatterjee, Bengali novel, Durgeshnandini in 1865)
  • குஜராத்தி: கோவர்த்தன் ராமின், “சரஸ்வதி சந்திரர்” (அல்லது Nandshankar Mehta’s Karan Ghelo (1866))
  • இந்தி: பிரேம் சந்தின், “சேவாசதன்” (or Pariksha Guru by Srinivas Das, published in 1882 or popular novel in Hindi was Chandrakantha by Devaki Nandan Khatri, published in 1888)
  • கன்னடம்: கெம்பு நாராயணாவின், “முத்ரா மஞ்சூசா.” (or Kannada, Indira Bai by Gulvadi Venkata Rao, was published in 1899)
  • மலையாளம்: அப்பு நெடுங்காடியின், “குண்டலதா” (Kundalatha (1887) by Appu Nedungadi.)
  • மராத்தி: யமுனா, “பர்யாதன்” (Yamuna Paryatan (1857) written in Marathi by Baba Padamji)
  • ஓரியா: பிரஜநாத் பாட்ஜேனாவின் “சதுர்பினோத்” (or Saudamani, written by Ramashankar Ray in 1878 or Chaa Mana Atha Gunta written by Fakir Mohan Senapati and published in 1897)
  • சிந்தி: மீர்சாகலிச் பெக்கின் “திலாராம்”
  • தெலுங்கு: கண்துகூரி வீரேசலிங்கம் பந்துலுவின் “ராஜசேகர சரித்திரா” (Sri Rangaraju Charitra, written by civil servant Narahari Gopalakrishnama Setty and written in 1867)
  • பஞ்சாபி: பாய் வீர் சிங் எழுதிய “சுந்தரி” (Sundari (1898) by Bhai Vir Singh has the distinction of being Punjabi)
  • மணிப்புரி: லமம்பம் கமல் சிங் எழுதிய “மாதவி” (Lamabam Kamal Singh’s Madhavi (1930))
  • காஷ்மீரி: அக்தர் மொயுதீன் எழுதிய “டாட் டாக்” (நோயும் வலியும்) (Kashmiri, Dod Dag (Sickness and Pain) written by Akhtar Mohi-ud-din, was published in 1957)
  • உருது: நசீர் அகமது எழுதிய “மிரட்-அல்-உருஸ்” (Mirat-al-Urus (The Bride’s Mirror, 1868-69) by Deputy Nazeer Ahmed)
  • ஆங்கிலம்: பங்கிம் சந்திர சாடர்ஜி எழுதிய “ராஜ்மோஹனின் மனைவி” (1864, English Rajmohan’s Wife was written Bankim Chandra Chatterjee)

டபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ?

I suppose it is submerged memories that give to our dreams their curious air of hyper-reality. But perhaps there is something else as well, something nebulous, gauze-like, through which everything one sees in a dream seems, paradoxically, much clearer. A pond becomes a lake, a breeze becomes a storm, a handful of dust is a desert, a grain of sulfur in the blood is a volcanic inferno.                    —W. G. Sebald, The Rings of Saturn

செபால்ட் எழுத்துக்களின் அடிநாதம் நினைவுகள். பழைய விஷயங்களை நினைவில் வைத்திருப்பதால் சித்திரவதைக்குள்ளாவோம். அதனால், பழையதை மறக்க எத்தனிக்கிறோம். ஆனால், நடந்ததை மறப்பதால் எவ்வளவு பெரிய கொடூரத்தை அரங்கேற்றுகிறோம்?

அவரின் ஆஸ்டர்லிட்ஸ் நாவல் முழுக்க ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைகிறது. இடங்களும் மனிதர்களும் மனிதர்களின் வாழ்க்கைக் கதைகளும் அவர்களின் அனுபவங்களும் இடறி, அகஸ்மாத்தாகவோ அல்லது வலிந்தோ தட்டுப்பட்டு உரசிக் கொண்டேயிருக்கின்றன. அதுவும் எனக்கு இது நடந்ததாக நான் சொல்லும்போது, அந்த சம்பவத்தின் மாந்தர்கள் கிடைக்கிறார்கள். நான் சொல்லும் வார்த்தை என்னும்போது அந்த நிகழ்வின் உண்மைத்தன்மை உணரப்பட்டு ஆவணப்படம் போல் உரைக்கிறது.

செபால்ட் எழுத்துக்களைக் குறித்த அறிமுகத்தையும் சீபால்ட் குறித்த விமர்சனங்களின் மொழிபெயர்ப்புகளையும் தாங்கி இந்த சொல்வனம் இதழ் வெளியாகி இருக்கிறது.

“It seems to me then as if all the moments of our life occupy the same space, as if future events already existed and were only waiting for us to find our way to them at last, just as when we have accepted an invitation we duly arrive in a certain house at a given time.” 

WG Sebald, Austerlitz

  • ஸெபால்டின் நடையை சுருக்கமாகச் சொன்னால்
    • மனப்பதிவு கலந்த பயணக்குறிப்புகள்
    • புனைவில் கொஞ்சம் சரித்திரமும் தொன்மமும்
    • கதைசொல்லி என்பவர் சில சமயம் செபால்ட்; பல சமயங்களில் செபால்டுக்கே கதை சொல்லுபவர்
    • அந்தக் கதைசொல்லி அலைபாயும் தன்மை கொண்டவர்; மற்றவரின் அந்தரங்கங்களை அனுசரணை கலந்த பரிவுடன் அணுகுபவர்.
    • நாவலில் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவிக் கொண்டேயிருக்கும் போக்கு
    • ஸெபால்டின் கதைக்களன் அனைத்தும் ஐரோப்பாவையும் அதன் வரலாற்றையும் மட்டுமே சுற்றி வருபவை.
    • அவரின் எழுத்தில் பத்திப் பிரிவினைகள் எதிர்பார்க்கக் கூடாது.
    • ஒப்புமைகள், உருவகங்கள், உவமானங்கள் கிடையாது. வெறும் நேரடி.
    • புகைப்படங்கள் நிறைந்திருக்கும்; கருப்பு-வெள்ளை நிழற்படங்கள் அவை; அந்தப் படங்களுக்கு எந்த அடிக்குறிப்பும் இராது; அவை தோற்ற மயக்கத்தை ஏற்படுத்தும்.
    • யோர்ஹே லூயி ஃபோர்ஹே (Jorge Luis Borges) அவரின் ஆதர்சம்

செபால்ட் படிக்கும்போது கோணங்கியின் கல்குதிரை படிப்பது போல் இருக்கலாம். அவரின் வாசகங்கள் சுழல்பவை; ஆரம்பித்த இடத்திற்கு திரும்ப வருபவை; பிரதிபலிக்கும் கண்ணாடி போல் நிகழ்வை சொல்பவை. கதை கொஞ்சம் முன்னே நகர்வது போல் தோன்றினாலும் நடந்த அந்தக் கால விஷயத்திற்கே கவனத்தைக் கோரி திரும்பத் திரும்ப பழைய காலத்திற்கு கொண்டு நிறுத்துபவை.

“We learn from history as much as a rabbit learns from an experiment that’s performed upon it.” 

― W.G. Sebald

பொட்டு வைத்த சிறுத்தை

சொல்வனத்தின் இந்த இதழ் எழுத்தாளர் அம்பை குறித்த விமர்சனங்களையும் அவரின் சமீபத்திய கட்டுரைகளையும் தாங்கி வந்திருக்கிறது. இந்த இதழ் தயாரிப்பில் சற்றே பங்கு கொள்ள முடிந்தது.

அம்பையின் ஆக்கங்களைக் குறித்தும் அவருடன் பழகிய சில நாள்கள் குறித்தும் எழுத நினைத்திருந்தேன். எனக்கு மறதி அதிகம். ஒருவரை சந்தித்த உடன் அவரைப் பற்றி எழுதி விட வேண்டும். இல்லையென்றால் மொத்த கருத்தும் உருமாறி, பட்டாம்பூச்சி ஆகி பறந்து போய் விடும். பட்டாம்பூச்சி என்னும் எழுத்தாளர்களை ஏன் என் பார்வையில் புழுவாகக் குறுக்க வேண்டும் என்றும் யோசிக்க ஆரம்பித்ததால், இந்த மாதிரி குறுக்குவெட்டுத் தோற்ற மதிப்பீடுகளைக் குறைத்துவிட்டேன்.

எனினும், மற்றவர்கள் எழுதும் கட்டுரைகள் உதவியாக இருக்கின்றன. அவற்றை எங்கிருந்தாலும் (நியு யார்க் ரிவ்யூ ஆஃப் புக்ஸ் முதல் ஜெயமோகன் வரை) வாசிக்கிறேன். இந்த இதழில் அம்பை குறித்த மதிப்பீடுகள் வந்திருக்கின்றன.


In hot dry summer, the grass becomes drier, some part of the grass get burned. When grasshoppers feel the fire (more than warm), they begin to sweat, which can make the environment so wet that can effectively damp the prorogation of the fire

The Turing Guide
By Jack Copeland, Jonathan Bowen, Mark Sprevak, Robin Wilson

பெரியதொரு சோலை இருக்கிறது. அந்த சோலையின் தரை முழுக்க பச்சை பசேலென்று புல் முளைத்து கணுக்கால் காணாமல் போகுமளவு உயர்ந்திருக்கிறது. அங்கே நெருப்பு பற்றிக் கொள்கிறது. சோலை முழுக்க எரிந்து சாம்பலாக வேண்டியதுதான் பாக்கி. அந்த இடத்தில் வெட்டுக்கிளிகளும் இருக்கின்றன. அது வரை அங்கும் இங்கும் தாவி மண்ணில் கிடைத்த புழுக்களையும் காட்டு மலரின் அரும்பையும் சாப்பிட்டு பரவலாக ஓடித் திரிகின்றன.

பெருகும் நெருப்பின் வெம்மை வெட்டுக்கிளிகளையும் தாக்குகின்றன. அந்த வெட்டுக்கிளிகள் ஆங்காங்கே ஒன்று சேர்கின்றன. சிறு சிறு கூட்டங்களாக அமைத்துக் கொள்கின்றன. தீயினால் வெட்டுக்கிளிகளுக்கு வேர்க்கிறது. வியர்வையையும் பதற்றத்தையும் கட்டுப்படுத்த இறக்கைகளை அடித்துக் கொள்கின்றன. வியர்வைத் துளிகள் மண்ணை அடைகின்றன. படபடவென்று அடித்துக் கொள்ளும் இறக்கைகள் புல்வெளியின் பிரதேசங்களைக் குளிர்விக்கின்றன.

சோலை பெரும்பாலும் வெந்து எரிந்து சாம்பல் மட்டுமே எஞ்சி நிற்கின்றன. அப்போது, அதில் ஆங்காங்கே பசும்புல் இன்னும் தெரிகிறது. அது எப்படி சாத்தியம்?

மொத்த சோலையும் அல்லவா எரிந்து போயிருக்க வேண்டும்? எப்படி அந்த பாலைவனச் சோலைகள் உருவாகின?

அதற்கு அந்த வெட்டுக்கிளி கூட்டம்தான் காரணம். அவை ஒன்றாக ஒற்றுமையாக சேர்ந்து அருகருகில் நின்று கொண்டன. தங்களின் அச்சத்தை உழைப்பை வியர்வையாக சிந்தின. தங்கள் குட்டி சிறகுகளைக் கொண்டு விசிறி வீசின. அதில் பூமி குளிர்ந்தது. அந்தக் குளிர்ச்சி பசுமை எச்சத்தை விட்டு வைத்தது.

இந்த சொல்வனம் இதழ் அப்படி பல பெண்களின் பங்களிப்போடு உருவாகி இருக்கிறது.

சிறுத்தைப்புலியின் உடலைப் பார்த்தால் ஆங்காங்கே கரும்புள்ளிகள் தென்படும். அந்த மாதிரி ஆங்காங்கேதான் பெண்களின் பங்களிப்பு இந்த இதழில் தென்படுகிறது. எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கிறது.

வரிக்குதிரையின் முதுகைப் பார்த்தால் பத்து வெள்ளைக் கோடு இருக்கிறது என கணக்கிட மாட்டேன். சற்றே ஏறக்குறைய கருப்பும் வெண்மையும் சமமாக இருப்பதை உணர்வேன். ஆண்களும் பெண்களும் சமமாக மக்கள்தொகை கொண்ட நிலையில் இப்படி ஒரு கணக்கு போட்டு பட்டியல் போடுதல் அஞ்சத்தக்க நிலையே.

இருந்தாலும் காலங்கார்த்தாலே எழுந்து இன்று என்ன ஸ்டேட்டஸ் போடலாம் என்று இருபாலாரும் இன்று சமமாகவே யோசிக்கிறார்கள். நிலைத்தகவலுக்கு அடுத்த நிலைக்குச் செல்ல ஊக்கமும் எழுச்சியும் கிடைத்து வெட்டுக்கிளிகளும் பருந்தெனப் பறக்க வேண்டும்

பியானோ ஆசிரியரின் கண்மணி

சிறுகதையை இங்கு வாசிக்கலாம் – The Piano Teacher’s Pupil | The New Yorker

அவசரமில்லை… படித்து விட்டு வாருங்கள். ஜான் அப்டைக் போல் இந்தக் கதையை எழுதியவரையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்தானே?

சாதாரணமான நியு யார்க்கரின் கதைகள் போல் நீளமான சிறுகதையும் அல்ல. இரண்டாயிரம் வார்த்தைகளுக்குள் அடங்கி இருக்கிறது. மூன்றே பக்கங்கள்தான். சட்டென்று வாசிக்க முடியும். படித்து விட்டீர்களா?

ஆசிரியர் என்பவர் யார்? ஒரே இடத்திலேயே தேங்கி நிற்பவர் ஆசிரியர். கற்றுத்தரப் பட்டவர்கள் முன்னேறி வித்தை காண்பித்து புகழும் பணமும் பெறக்கூடியவர்கள். ஆனால், கற்றுத் தந்தவருக்கு அந்த வித்தையை அப்படி ஆக்கத் தெரிவதில்லை. வித்தகர் ஆக முடியாதவர் வாத்தியார் ஆகிறார். வர்த்தகமாக்க தெரியாதவர் வாத்தியாராக மட்டுமே வதங்குகிறார். எப்படி செய்ய வேண்டும் என்பது பியானோ ஆசிரியருக்குத் தெரியும். ஆனால், எதை எல்லாம் உருவாக்க முடியும் என்பது ஆசிரியர்களுக்கு புலப்படுவதில்லை.

இந்தக் கதை பியானோ ஆசிரியரைப் பற்றியது. மிஸ் நைட்டிங்கேல் (செல்வி வானம்பாடி) ஐம்பது வயதொத்த பெண்மணி. தன்னுடைய முப்பதுகள் வரை தந்தையோடு வசித்தார். தந்தைக்குத் தெரியாமல் மணமான ஒருவரின் காதல் பரத்தையாக பதினாறு ஆண்டுகள் இருந்திருக்கிறார். அந்தக் காதலர் இப்பொழுது அவளை நாடுவதில்லை. திங்கள் முதல் வெள்ளி வரை பல்வேறு தரப்பட்ட மாணவர்களுக்கு பியானோ வாசிக்கக் கற்றுத் தருகிறார்.

அவளிடம் ஒரு புத்தம்புது மாணவன் படிப்பு சொல்லிக் கொள்ள சேர்கிறான். வெள்ளி சாயங்காலம் அந்த மாணவன் வருகிறான். அவனிடம் கடவுள் கொடுத்த திறமை மட்டுமல்ல; அதற்கு மேற்பட்ட மேதாவித்தனம் கைவரிசையாக பியானோ இசையில் வெளியாகிறது. அவளுக்கெனவே பிரத்தியேகமாக வாசிக்கிறான். அவனுடைய கற்பனாசக்தியைத் தாண்டி கற்றுக் கொடுக்க என்று அவளுக்கு எதுவுமில்லை.

அவன் புறப்பட்ட பிறகு வீட்டில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒரு பொருள் காணாமல் போகிறது. மிகச் சிறிய கலைப்பொருள். அவளுடைய தந்தையார் ஞாபகார்த்தமாக சேமித்த சின்னச் சின்ன ஷோகேஸ் சின்னங்கள் மறைந்துவிடுகின்றன. அவளுடைய கழுத்தைச்சுற்றித் தொங்கவிடும் துகிலை, அவன் ஒரு சமயம் திருடி விடுகிறான். இன்னொரு சமயம் காலணியில் போட்டுக் கொள்ளும் அற்பமான அணிகலனை கவர்ந்து விடுகிறான். நகை போட்டு வைக்கும் பெட்டியை அவளுக்குத் தெரியாமல் எடுத்துச் சென்றுவிடுகிறான்.

கதை சொன்ன விதம் சுவாரசியமாக இருந்தது. டக்கென்று முடிந்ததும், முடிவு தெளிவாக புரியாததும் சற்றே எமாற்றம் தந்தது. வாழ்நாள் பறந்து சென்றுவிடுகிறது. நேரம் காணாமல் போகிறது என்பது புரிகிறது. இளமை கழிந்த பிறகே நமக்கு அதை இன்னும் பயனுள்ள முறையில் செலவிட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

வில்லியம் டிரெவரைக் குறித்து இணையத்தில் தேடினால், ‘பதாகை’ தளத்தில் உருப்படியாக அறிமுகம் செய்திருக்கிறார்கள். அந்தக் குறிப்பில் இருந்து:

ட்ரெவரிடம் சிறுகதையின் வரையறை என்ன என்று கேட்கப்படுகிறது. அதற்கு பதிலளிக்கும் ட்ரெவர், அது ஒரு கண்ணுறு கலை என்று சொல்கிறார் (‘art of the glimpse‘). அதைத் தொடர்ந்து, சிறுகதையின் உண்மை வெடித்துத் தெறிக்க வேண்டும் என்று அவர் சொல்வதை, அதன் மிகச் சிறிய வடிவத்தில் மிகப் பெரிய ஆற்றல் பொதிந்திருக்க வேண்டுமென்பதாய் புரிந்து கொள்கிறேன். அது எதைச் சொல்லாமல் விடுகிறதோ, அதுவே சிறுகதையின் பலம் என்கிறார் அவர். அர்த்தப்படுத்துதல் மட்டுமே அதன் நோக்கம் – வில்லியம் ட்ரெவரின் சொற்களில், ‘It is concerned with the total exclusion of meaninglessness‘. வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில் நாவல் வடிவம் பெரும்பாலும் பொருளற்றதாகவும் அலைவுகள் கொண்டதாகவும் இருக்கலாம், ஆனால் சிறுகதை வடிவம் கலையின் சாரம் என்று அவர் வரையறை செய்கிறார் (‘It is essential art‘). நாவல்கள் ரத்தமும் சதையும் கொண்ட மனிதர்களைக் காட்டினால் சிறுகதை மனித வாழ்வின் ஆதார எலும்புகளை தொட்டுக் காட்டுகிறது.

இரக்கமே இல்லாமல் சிறுகதையை வெட்டித் தள்ளுபவர் டிரெவெர். அவருடைய கார்டியன் பேட்டியில் இவ்வாறு சொல்கிறார்:

திரைப்படத்தை உருவாக்குவது போல் நான் சிறுகதையை செதுக்குகிறேன். நாம் எதை சொல்லாமல் விடுகிறோமோ அதுதான் ஒரு கதையின் முக்கியமான அங்கம். ஒரே சிறுகதையை பல மாதம் வைத்து மறுபடியும் மறுபடியும் அந்தச் சிறுகதையை எழுதுவேன். ஒரு சிறுகதை என்பது ஒருவரின் வாழ்க்கையை போகிற போக்கில் காண்பிப்பது; அல்லது அந்த ஒருவரின் ஏதோவொரு உறவை புகைப்படமாகக் கண்ணுறுவது.

எழுதுவது என்பது எனக்கு அறியவியலாத இரகசியம். அது மறைபொருள் என்று நான் நம்பாவிட்டால், எழுதுவதே உபயோகமற்றதாகிவிடும்.

எனவே நாம்தான் கதையின் ஒவ்வொரு ரகசியத்தையும் அர்த்தம் கொள்ள வேண்டும். கதையில் பதினாறு ஆண்டு கழிந்ததை குறிப்பிடுவதை, நான் ஆயுர்வேதத்தில் ஷோடஷ சமஸ்காரம் என பதினாறு வகையாக வாழ்க்கையை பிரிப்பதோடு ஒப்பிடுவேன். மானுட வாழ்வில் பதினாறு சமஸ்காரங்கள் உள்ளன.

ஷோடச கர்மாக்களை ஐந்து வகையாக பிரிக்கலாம்:

அ) கார்பிகா சமஸ்காரம் (குழந்தை பிறப்பு சம்பந்தமானவை)
1) கர்ப்பாதனம்
2) பும்சவனம்
3) சீமந்தம்

மேலே உள்ளவை தம்பதியரால் அனுஷ்டிக்கப்படுபவை.

ஆ) சைஷவ சமஸ்காரம் (குழந்தை சம்பந்தமானவை)
4) ஜாதகர்மம்
5) நாமகர்ணம்
6) நிஷ்கிரமணம்
7) அன்னப்பிராசினம்
8) சூடாகர்மம்
9) கர்ணவேதம்

மேலே உள்ளவை பெற்றோரால் கடைபிடிக்கவேண்டியவை.

இ) சைக்ஷ்னிகா சமஸ்காரம் (கல்வி சம்பந்தமானவை)
10) உபநயனம்
11) வேதாரம்பம்
12) சமாவர்த்தனம்

மேலே உள்ளவை உபாத்தியாயரால் செய்யவேண்டியவை.

ஈ) ஆஷ்ரமிகா சமஸ்காரம் (மணம் புரிந்தவர்கள் சம்பந்தமானவை)
13) விவாகம்
14) வானப்பிரஸ்தம்
15) சன்யாசம்

மேலே உள்ளவை சுயமாக செய்யவேண்டியவை.

உ) பிரயான் சமஸ்காரம் (மரணம் சம்பந்தமானவை)
16) அந்தியேஷ்டி

மேலே உள்ளவை உங்களின் இறப்பிற்கு பின் உங்கள் குழந்தைகளால் செய்யப்பட வேண்டியவை ஆகும்.

பதினாறு வகையாக இப்படி வாழ்க்கையை பிரித்து நம் நடவடிக்கைகளை வகுக்கலாம். இந்தப் பதினாறை இவ்வளவு வலியுறுத்த என்ன அவசியம்?

கதையில் மீண்டும் மீண்டும் இந்தப் பதினாறு வருகிறது. முதல் தடவை பியானோ ஆசிரியையின் கள்ளக் காதல் பருவம் குறித்த விவரிப்பில் எடுத்த எடுப்பிலேயே பதினாறு சொல்லப்படுகிறது.. இரண்டாவது தடவையும் அதே பதினாறு என்னும் எண் இன்னொரு பக்கத்தில் வலியுறுத்தப்படுகிறது – அவளின் தந்தையின் கடைசிக் காலத்தை நேசத்துடன் கவனித்துக் கொண்டு கழித்த பதினாறு ஆண்டுகள் என்கிறார் டிரெவர். தன்னுடைய ஒவ்வொரு பேட்டியிலும் தான் ஒரு கிறித்துவ ப்ராடெஸ்டண்ட் என்பதை ஊக்கமாக சொல்லிக் கொள்கிறார்.

கிருத்துவ மதத்தின் திருத்தூதர் பால் என்பவரும் விவிலியத்தில், தன்னுடைய முதல் நூலில், 16 வகையான நேசம் இருப்பதாக விரிவுரை எழுதுகிறார்.

Corinthians 13:4 – 8:

  1. அன்பு பொறுமையும்
  2. கருணையும் உள்ளது.
  3. அன்பு பொறாமைப்படாது,
  4. பெருமையடிக்காது,
  5. தலைக்கனம் அடையாது,
  6. கேவலமாக நடந்துகொள்ளாது,
  7. சுயநலமாக நடந்துகொள்ளாது,
  8. எரிச்சல் அடையாது,
  9. தீங்கை கணக்கு வைக்காது,
  10. அநீதியைக் குறித்து சந்தோஷப்படாமல்
  11. உண்மையைக் குறித்து சந்தோஷப்படும்.
  12. எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும்,
  13. எல்லாவற்றையும் நம்பும்,
  14. எல்லாவற்றையும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும்,
  15. எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும்.
  16. அன்பு ஒருபோதும் ஒழியாது.

இந்தக் கதையை எழுதிய வில்லியம் ட்ரெவர் (William Trevor) கடந்த நவம்பரில் தன்னுடைய 88ஆம் வயதில் மறைந்துவிட்டார். அவரின் இறப்பிற்கு பிறகு வெளியாகும் கதை இது. கடைசிக் காலத்தில் எழுதிய இந்தக் கதை முற்றுப்பெற்றதா? இதுதான் இந்த இந்தச் சிறுகதையின் இறுதி வடிவமா? இவ்வளவு சிறிய ஆக்கமாக இருப்பதற்கு அவரின் அந்திமக் காலமும் ஒரு காரணமா? கல்கியின் மறைவிற்குப் பின் அவருடைய புதல்வர் நிறைவாக்கிய ‘பொன்னியின் செல்வன்’ போல் வில்லியம் எடுத்திருந்த குறிப்புகளைக் கொண்டு இந்தக் கதை வடிவாக்கம் பெற்றதா?

வில்லியம் டிரவர் “The Piano Tuner’s Wives” என்னும் கதையை 1995ல் எழுதியிருக்கிறார். அந்தக் கதையை இங்கே வாசிக்கலாம்.

டிரெவரின் பெரும்பாலான சிறுகதைகள் போலவே இந்தக் கதையும் முன்னும் பின்னும் பயணிப்பவை. துவக்கத்தில் முடிவிற்கு வெகு அருகே இருக்கும். கொஞ்ச நேரம் படித்தவுடன் கதாபாத்திரங்களின் இளமைக் காலத்திற்கு சென்றிருப்போம். வாசிப்பவரின் ஆர்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்னும் அக்கறையை டிரவெர் எடுத்துக் கொள்வதில்லை. அதாவது வலிந்து அந்த விறுவிறுப்பைக் கொணர மாட்டார். நீங்கள் எப்பொழுதோ தூண்டிலில் சிக்கி இருப்பீர்கள்.

”கதையில் உணரவேண்டியதை விரித்துரைத்து சொல்லக் கூடாது; சம்பவங்களினால் காட்ட வேண்டும்; அன்றாட செயல்களினால் விஷயங்கள் புலப்பட வேண்டும்.” என்பதை சிறுகதையின் பாலபாடமாக அறிவுறுத்துவார்கள். ’அது எப்படி?’ எனக் கேட்பவர்களுக்கு வில்லியம் ட்ரெவரின் இந்த “பியானோவிற்கு சுருதிசேர்ப்பவரின் மனைவிகள்” கதையையும் சுட்டலாம்.

அவரின் இன்னொரு கதைய அவரே வாசிப்பதை இங்கு பார்க்கலாம்:

மீண்டும் இந்தக் கதைக்கே வந்து விடலாம்.

ஆசிரியை எண்ணற்ற பொருள்களை சேமித்து இருக்கிறாள். ஒரு இடத்தின் ஞாபகமாக சில பொருள்கள் இருக்கின்றன. இருவரின் நினைவை சொல்லும் பொருட்டு சில பொருள்கள் அலங்காரமாக இருக்கின்றன. ஒரு வயதை, அந்தக் காலத்தை எண்ணிப் பார்க்கும்வகையில் சில பொருள்கள் அவளின் வீட்டை நிரப்புகின்றன. நம் பொருள்கள் காணாமல் போன பிறகே அவற்றின் அவசியத்தையோ, அல்லது அவசியமற்ற தன்மையையோ உணர்கிறோம். பொருள் இருக்கும் அந்த அறை எப்படிப்பட்டது?

அதற்கு அவளின் மூன்று பருவங்கள் நினைவுகூறப்படுகிறது. முதலில் பால்ய காலம். சாக்லேட் என்றால் உயிர். ஒவ்வொரு நாளும் அவளுடைய அப்பா புதிய இனிப்புகளை அவருடைய வினோத சாக்லேட்களைக் கொண்டு வருவார். அதே அறையில்தான் அவளுடைய ரகசியக் காதலன் அவளை இறுக்கி தேய்த்து, அவளை ஒரு அழகி என கிசுகிசுத்தான். அந்த பியானோ அறையில்தான் இப்பொழுது வாத்தியஜாலம் நிகழ்கிறது. வசீகரிக்கும் இசை வருடுகிறது; அந்த மாணவன் அவளுக்கு மட்டுமே நிகழ்த்திக் காட்டும் கச்சேரி அரங்கேறுகிறது. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்.

அவள் வாழ்வில் வந்த அந்த மூவரும் திருடர்களே. அவளின் அப்பா அவளுக்கு மணமுடிக்கவில்லை. தன் கடைசிக் காலத்தில் தன்னைப் பாத்துக் கொள்ள அவருக்கு ஒரு தாதி தேவைப்பட்டு இருக்கிறது. அதற்காக மகளை வீட்டோடு வைத்துக் கொண்டார்.

அதே போல் அவளின் இளமை அந்தக் காதலருக்குத் தேவைப்பட்டு இருக்கிறது. அவளின் அழகைத் திருடி இருக்கிறார்.

ஒன்றை இழந்தால்தான் இன்னொன்று கிட்டுகிறது. அவளுக்கு காதல் வார்த்தைகள் தேவைப்பட்டது. அதற்காக திருட்டுக் காதலை வைத்துக் கொண்டாள். அந்தக் கூடாவொழுக்கத்திற்கு விலையாக தன் இளமையை இழக்கிறாள். ஆசிரியையின் காதலனின் முதல் மனைவியின் நிலை என்ன? அந்த மனைவியின் அன்பை அவள் கவர்ந்ததற்கு மாற்றுப் பண்டமாக தன் மணவாழ்க்கையை அர்ப்பணிக்கிறாள். அந்த இரு பெண்மணிகளில் யார் பெருந்தன்மையானவர் என்று முடிவெடுப்பதை நம்மிடமே விட்டிருக்கிறார்.

இறுதியாக ஆசிரியரின் மாணவன் விலை மதிப்பில்லாத சங்கீத சதிராட்டம் கொடுக்கிறான். அதற்கு பதிலாக தன் வாத்தியாரின் இசைவைக் கோருகிறான். அவனுடைய அந்த இசைக் கச்சேரியில் சுயநலம் இல்லை. தன் ஆசிரியருக்கான அந்த அரங்கேற்றத்தில் அங்கீகாரத்தை மட்டுமே விலையாகக் கேட்கிறான். நம் குழந்தைகள் நம்மிடம் அதைத்தானே எதிர்பார்க்கின்றன… நம்முடைய கௌரவம் என்பது நம் வழித்தோன்றலின் மதிப்பில் அமைந்திருக்கிறதா? கதையை மீள்வாசித்தால் விடை கிட்டும்.

இந்தக் கதையை வாசித்தபோது ஜானி கேஷ் (Johnny Cash) நினைவிற்கு வருகிறார். அமெரிக்காவில் புகழ் பெற்ற பாடகராக ஜானி காஷ் விளங்கினார். அவரின் குழந்தைப் பருவத்தில் குரல் மேம்படுவதற்கு பாட்டு வாத்தியாரிடம் அனுப்பினார்கள். மூன்றே வகுப்புகளுக்குப் பின் அவருடைய ஆசிரியர் “உன்னுடைய பாடும் வித்தையை எந்தப் பொழுதிலும் எவர் சொன்னாலும் மாற்றிக் கொள்ளாதே! இயற்கையாக அமைந்த குரலை விட்டு விடாதே!” என்று சொல்லி உச்சிமுகர்ந்து ஜானியின் பாடல் வகுப்பை பூர்த்தியாக்கிவிட்டார். (ஆதாரம்: biography.com)

வில்லியம் ட்ரெவரின் கதை நாயகர்கள் ஜானி காஷ் போல் புகழ்பெற்றவர்களை அடிப்படையாகக் கொண்டவர்கள் கிடையாது. அவருடன் ஆன ‘கார்டியன்’ நேர்காணலில் இவ்வாறு சொல்கிறார்:

”என்னுடைய கதைகளில் கொள்ளை கொள்ளையாக உணர்வுகள் வரும். எல்லாவித உணர்ச்சிகளும் சத்தியாமனவை. ஒவ்வொரு விநோதமாக ஆராய்ந்து விதந்து கூறுகிறேன். மற்ற நிஜங்களுக்கு கதையில் ரொம்ப இடம் தர மாட்டேன். உண்மை சம்பவங்களை விட விசித்திரங்களை குடைந்து எழுத்தில் கொணர்கிறேன். அதனால்தான் பெண்களைக் குறித்து எழுதுகிறேன். நான் பெண் இல்லை. அவர்கள் எண்ணங்கள் எப்படிப்பட்டவை என்பது தெரியாது. இது என்னை உற்சாகம் கொள்ளவைக்கிறது. அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சிந்திக்கிறேன். என்னால் அவர்களாக முடியாது. அதனால் ஆர்வத்துடன் அந்த அனுபவத்திற்குள் நுழைந்து ஆராய்கிறேன்.

தினசரி காரியங்களை செய்யும்போது மனம் தாவிச் சென்று என்றோ நடந்ததை அசை போடுகிறது. ஏதோவொரு வார்த்தையைக் கேட்கும்போது அந்த வார்த்தை வரும் பாடலை வாய் தானாகப் பாடத் துவங்கி, அதன் வழியே நினைவு நம் வாழ்வின் பழைய சம்பவத்தில் சென்று நிலைக்கிறது. பழசை திணித்து மூலையில் ஒதுக்கி வைக்கலாம். ஆனால், நீக்க முடிவதில்லை. அந்த மாணவனின் நினைவுச் சின்ன வேட்டைகளை பியானோ ஆசிரியை கண்டுகொள்வதில்லை. ஏன் அவள் அதை அவனிடம் கேட்கவில்லை? அவளே அந்தப் பொருள்களின் நினைவுகளை மறக்க நினைக்கிறாளா? தன்னால் கலையில் சாதிக்க இயலாததை தன் மாணவன் சாதிக்கிறான் என்னும் சந்தோஷமா? தன் கள்ளக் காதல் செய்கைகளுக்கான பிராயச்சித்தமா? தன்னுடைய குற்றவுணர்வை தவிர்க்கமுடியாதது போல், அந்த மாணவனிடமும் இந்த சில்லறைத் திருட்டு அவமானத்தை பிற்காலத்தில் தேக்கும் என்னும் தூரதிருஷ்டியா? அவனில் புதிய ஒளியைப் பார்ப்பதால் நம்பிக்கைக் கீற்றின் வெளிப்பாடா? இவ்வளவையும் யோசிக்க வைப்பதில் வில்லியம் ட்ரெவர் நிலைக்கிறார்.

தமிழ் மின் இதழ்: ஒரு பார்வை

தமிழ் மின்னிதழ் பிடிஎஃப் வடிவில் வருகிறது. இது போன்ற முயற்சிகளுக்கு 2003ல் தமிழோவியம் தீபாவளி, பொங்கல், ஆண்டு விழா சிறப்பிதழ் மலர்களையும் ஸ்ரீதர் நாராயணன் தயாரித்த பண்புடன் மடலாடற் குழும சிறப்பிதழ்களையும் முன்னோடியாகப் பார்க்கிறேன்.

Tamil_Magazine_Specials_issues

எழுத்தாளர்களுக்கு சிறப்பிதழ் கொண்டு வருவது நல்ல விஷயம். ஆனால், கருப்பொருள் சார்ந்து, ஒரே ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு இரு பக்க எண்ணங்களையும் மாற்றுக் கருத்துக்களையும் ஆழமாக அலசுவது அதனினும் சாலச் சிறந்தது.

அந்த மாதிரி ஏன் — தமிழ் மேகசின், பதாகை போன்ற தமிழில் வரும் சிற்றிதழ்கள் செய்வதில்லை?

இதழை வெளியிட்ட ‘காலச்சுவடு’ கண்ணன் இவ்வாறு சொல்லி இருக்கிறார்:

பெருமாள் முருகன் சிறப்பிதழாக, அவர் படைப்புகளை விவாதித்து இந்த இதழ் வெளிவருவது பெரு மகிழ்ச்சி.

நிஜமாகவே பெருமாள் முருகனை அலசி ஆராய்ந்து இருக்கிறார்களா அல்லது

  • புத்தக அறிமுகம்,
  • அவர் எழுதிய நாவலை விதந்தோதுதல்,
  • ஏற்கனவே இணையத்தில் கிடைப்பதை வைத்து வாந்தியெடுத்தல்,
  • கதைச் சுருக்கத்தை மட்டும் சொல்லி விமர்சனம் என்று பஜனை செய்யுதல்,

போன்றவை மட்டுமே செய்துவிட்டு

  • சம காலத்தின் மற்ற ஒப்புமையான படைப்புகளுடன் சீர்தூக்கி அலசுதல்,
  • எழுத்தாளனின் வளர்ச்சி: துவக்க காலப் படைப்புகளுக்கும் பிற்கால ஆக்கங்களுக்கும் இடையே உள்ள ஒப்பீடு,
  • எழுத்தாளரின் சிறுகதைகளுக்கும் நெடுங்கதைகளுக்கும் உள்ள வித்தியாசங்கள் / ஒற்றுமைகள்,
  • எழுதியவரின் நடை, கதைக்கரு, களன், உத்தி போன்றவை சார்ந்த குறுக்குவெட்டுத் தோற்றம்,

போன்றவையும் அலசப்பட்டிருக்கிறதா என்று இனிதான் ஆராய வேண்டும்.

இப்போதைக்கு புறத்தோற்றம் பற்றிய குறிப்புகள். புறத்தோற்றம் ஏன் முக்கியம் ஆகிறது?

மத நம்பிக்கையாளருக்கு அந்த மதத்தின் சின்னங்கள் முக்கியம். இஸ்லாமியருக்கு தொப்பியும் தாடியும். வைணவருக்கு திருமண். பௌத்தருக்கு அவர்களின் சிவப்பும் ஆரஞ்சும் கலந்த வஸ்திரம். இறைவரை பின்பற்றுவர்களுக்கும் இலக்கியத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று விட்டுவிட்டாலும், கல்யாணம் / காட்சி என்றால் ஒவ்வொருவருக்கும் ஒரு உடை பாவனை இருக்கிறது. மோதிரம் மாற்றிக் கொள்வது, வேட்டி கட்டுவது என்று ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அலங்காரம் தேவைப்படுகிறது.

இவ்வளவு ஏன்? கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு கோடைகாலத்தில் கடற்கரைக்கு சென்றால், எப்படி எடுத்துக் கொள்ளப்படும்? ஒன்று அங்கிருக்கும் பிகினி அழகர்களை தரிசிக்க வந்த பரதேசி என நினைத்து தர்ம அடி வழங்கப்படும். இரண்டாவது, அத்தனை வெயில் அடிக்கும் அந்தச் சூழலுக்கு, அவ்வளவு தடிமனான மேலாடை தேவை கிடையாது.

“தமிழ் பத்திரிகை”யின் வடிவமைப்பும் சோபையாக இருக்கிறது. அட்டைப்படம் எடுப்பாக இருப்பது போல், பிடிஎஃப் கோப்பின் உள்ளே, சுவாரசியமான, கவர்ச்சியான, பக்க அமைப்பு கிடைக்கவில்லை.

Layout_woes_Thamizh_Magazine_Pages_Titles_Headings_Headers

– தலைப்புகளுக்கு சிறிய எழுத்துரு, அதே தடிமனில் எழுத்தாளரின் எழுத்துரு என்று ஏனோ தானோ என்று அவசரகதியில் போட்டிருக்கிறார்கள்.

– ஒவ்வொரு கட்டுரையும் தனித் தனிப் பக்கங்களில் துவங்காமல், முந்தைய கட்டுரை முடிந்த சடுதியில், அடுத்த கட்டுரை, முக்கால் பக்கத்தின் இறுதியில் உட்கார்ந்து இருக்கிறது.

– கவிதா முரளிதரனுக்கு பெருமாள் முருகனை விட மிகப் பெரிய புகைப்படம் போட்டு இருக்கிறார்கள். சுரேஷ்கண்ணன் போன்ற ஆண்களுக்கு தபால்தலை அளவு ஒளிப்படம் கூட கிடையாது.

– திடீரென்று @iAgarshana எல்லாம் வருகிறது. அது ஃபேஸ்புக் முகவரியா, எல்லோருக்கும் இது போல் சுட்டல் உண்டா, எந்த வலையகத்தின் உரல் இது என்று எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை. இந்த மாதிரி இடங்களில் இந்தப் படைப்பு குறித்த சிறு முன்னோட்டத்தையும் அது எந்த மாதிரி ஆக்கம் (புனைவு, கட்டுரை, டிவிட் தொகுப்பு) என்பது குறித்த அறிமுகமும் அவசியம். அவை போன்ற எதுவும் இல்லாமல், அந்தப் படைப்பும் மேலெழுந்தவாரியாக சேமிக்கப்பட்டிருக்கிறது. கண்டதையும் கண்ட மேனிக்குத் தொகுக்க, இது நோட்டு புத்தகம் அல்ல. காலாண்டுக்கு ஒரு முறை வரும் அச்சிதழ். அதற்குரிய சிரத்தையும் பொறுப்புமில்லாமல் வெளியாவது உள்ளடக்கத்தையே ஏளனம் செய்கிறது.

No_Author_Notes_Who_Is_This

– மேலே இருக்கும் பக்கத்தின் இறுதியில் ஒருவரின் ஒளிப்படம் இருக்கிறது. அவர் யார்? அவரின் கதையை எப்படி இந்த இதழுக்குத் தேர்ந்தெடுத்தார்கள்? எழுதியவரே அந்தக் கதையை ‘தமிழ்’ மின்னிதழுக்காக மொழிபெயர்த்தாரா? ஏன் இந்தப் புனைவை மொழிபெயர்த்தார்? இப்படி எதுவும் இல்லாமல், ‘எடுத்தோமா… சிரைத்தோமா!’ என்பதற்கும் வலைப்பதிவில் கண்டதையும் கிறுக்குவதற்கும் என்ன வித்தியாசம்?

How_was_This_Created

– அதே போல் இந்தப் படத்தையும் எடுத்துக் கொள்ளலாம். நாகராஜ் இதை எவ்வாறு உருவாக்கினார்? அவரே வரைந்தததா? எந்த வகை உத்திகளை வைத்து எத்தனை கால அவகாசத்தில் இந்தப் படத்தை உருவாக்கினார்? ஃபோட்டோஷாப் போன்ற கருவிகளை உபயோகித்தாரா? தாளில் வரைந்தாரா? நாகராஜின் மற்ற படைப்புகள் எங்கே கிடைக்கும்?

– சுதந்திரம் என்று பக்கத்திற்கு பக்கம் அடிக்குறிப்பு இட்டிருக்கிறார்களே… எது சுதந்திரம், எப்பொழுது சுதந்திரம், யாருக்கு சுதந்திரம், எதற்கு சுதந்திரம் என்று ஒரு குவிமையம் கிடைக்காமல், தமிழ் சினிமாவிற்கு தமிழில் தலைப்பு வைப்பது போல், இந்த இதழுக்கும் ஏதோவொரு தலைப்பு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இரண்டாவது இதழை வெளியிட்டிருக்கும் மனுஷ்யபுத்திரன் இவ்வாறு சொல்கிறார்:

சமீபத்தில் ஒரு நேர்காணலில் தமிழில் சிற்றிதழ் இயக்கதிற்கு எதிர்காலம் இருக்கிறதா? என்று என்னிடம் கேட்டார்கள். நான் அதற்கு ‘நிச்சயம் இருக்கிறது. ஆனால் அச்சு வடிவிலான சிற்றிதககள் பெருமளவு மறைந்து அவை இணைய இதழ்களாக நீடித்திருக்கும்’ என்று சொன்னேன். இந்த இதழை பார்க்கும்போது அந்த எண்ணம் வலுப்படுகிறது. பத்திரிகை நடத்துவதன் லெளகீக கஷ்டங்கள் இல்லாமல் படைப்பு சார்ந்து மட்டும் ஒரு இதழாளன் முக்கிய கவனம் செலுத்த இந்த தளம் பெரிதும் பயன்படும்.

ஞாநி இவ்வாறு எழுதுகிறார்:

மின்னிதழ்களையும் படைப்பாளிக்கும் வாசகருக்கும் இடையே இருக்கக்கூடிய அச்சிடுபவர், விநியோகஸ்தர், கடைக்காரர் என்ற சக்திகளைத் தவிர்த்து நேரடியாக உறவு கொள்ள உதவும் முக்கிய வடிவமாகவே நான் பார்க்கிறேன். இந்த முயற்சியில் எந்த வணிக சமரசமும் ஊடுருவாமல் இயங்கும் வசதி படைப்பாளிகளுக்குக் கிட்டுவது என்பது மிக முக்கியமான மாற்றமாகும். நவீன தொழில்நுட்பம் என்பது வணிக நுகர்வுக் கலாசாரத்துக்குத்தான் பயன்படும் என்ற புரிதலையும் இது மாற்றியமைக்கிறது. இதழ் நடத்துதல், படம் எடுத்தல் ஆக்கியவற்றையெல்லாம் மேலும் ஜனநாயகப்படுத்துகிறது. எனவே இதை நாம் எல்லாரும் வரவேற்கவேண்டும்.

– எல்லாமே தெரிந்த, புழக்கமான பெயர்கள், இணையப் பிரமுகர்கள். இந்த மாதிரி பிரபலங்களை மட்டும் வைத்து மின்னிதழ் எதற்காக நடத்த வேண்டும்? அறியாத எழுத்துக்களை, புகழ் பெறாத எழுத்தாளர்களை, தெரியாத ஆக்கங்களை முன்னிறுத்துவதற்கு சிற்றிதழ் வாயிலாக இருக்க வேண்டும். அச்சிதழ்கள் போல், நாலாயிரம் ஃபாலோயர்ஸும் நாற்பது வலைப்பக்க வாயிலும் கொண்டவர்களை வைத்து வாந்தி எடுக்கக் கூடாது.

சம காலத்தில் ஆங்கிலத்தில் வெளிவரும் சில பத்திரிகைகளை இங்கு ஒப்பிட்டு பார்க்கலாம். கீழே ஆறு பத்திரிகைகளின் சமீபத்திய இதழ்களின் முகப்பும் அமைப்பும் பார்க்கலாம்:

PN_Review_Literary_Quarterly_Essay_Weekly_Issues_Magz_Magazines

தமிழ் மின்னதழின் ஆசிரியர் சரவணகார்த்திகேயன் இவ்வாறு சொல்கிறார்:

அச்சிதழில் ஒவ்வொரு பக்கமாய்ப் புரட்டித்தான் குறிப்பிட்ட படைப்பை அடைவோம். ஒருவேளை உள்ளடக்கம் கொடுக்கப்பட்டிருந்தால் அதன் மூலம் பக்க எண்ணை அறிந்து கொண்டு குறிப்பிட்ட படைப்புக்குத் தாவலாம். இது வரை தமிழ் இதழிலும் சாத்தியம். உள்ளடக்கம் கண்டு, பக்க எண் அறிந்து, நீங்கள் பயன்படுத்தும் PDF reader-ல் பக்க எண் கொடுத்தால் அழைத்துச் சென்று விடும். ஹைப்பர்லிங்க் கிடையாது! (சேர்ப்பது சுலபமெனினும் தவிர்த்தேன்.)

சுருங்கச் சொன்னால் ஓர் அச்சு இதழை நீங்கள் எப்படிக் கையாள முடியுமோ அப்படியே இதையும் கையாள வேண்டும்.

இந்தக் கருத்து ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. ஓலைச்சுவடியில் ஒற்றெழுத்து இல்லாமல் எழுதினோம், நாலு வரி மட்டுமே எழுதினோம் என்று இன்றும் தொங்கிக் கொண்டிருக்கவில்லை. நவீன சாதனங்களை, புதிய நுட்பங்களை, வசதியான வடிவங்களை கையாள்கிறோம். கியாஸ் அடுப்பு வந்தபிறகும் கரி அடுப்பில்தான் சமைப்பேன் என்று அடம்பிடிப்பது முட்டாள்தனமானது.

எழுதுபவர்களுக்கு காசும் தரமாட்டேன்; எழுதியவற்றை வெளியிடுவதிலும் புதுமை செய்ய மாட்டேன்; எழுதுபவர்களிலும் புதியவர்களை அடையாளம் காட்ட மாட்டேன்; எழுதப்படும் கருத்திலும் சிதறலாக, கிடைப்பதை வைத்து ஒப்பேற்றுவேன் – என்ற முன்முடிபை இதன் தயாரிப்பாளர்கள் கைவிட வேண்டும்.

அன்பர்களுக்கு நான் மீண்டும் நினைவூட்ட விரும்புவது ஒன்றைத் தான். தற்போதைக்கு தமிழ் தீவிர இலக்கிய இதழ் அல்ல; போலவே வெகுஜன இதழும் அல்ல. இடைப்பட்டது. ஆனால் இதன் எதிர்காலப் பயணம் தீவிர இலக்கிய இதழ் என்பதை நோக்கியதாகவே இருக்கும். அதுவரை கசியவிருக்கும் சுஜாதாத்தனங்களை தீவிரர்கள் பொறுத்தருளலாம்.

இந்த இதழில் எழுதியவர்களில் பார்த்தவுடன் பரிச்சயமான வலை / அச்சுப் பத்திரிகைப் பெயர்கள் சிலவற்றை இங்கு சொல்லிப் பார்க்கிறேன்
– கவிதா முரளிதரன்
– சுரேஷ் கண்ணன்
– கிருஷ்ண பிரபு
– லேகா
– கவின் மலர்
– நர்சிம்
– யுவகிருஷ்ணா
– அதிஷா
– என் சொக்கன்
– முரளிகண்ணன்
– எஸ்.கே.பி. கருணா
– ஜிரா

இதழ் பெரும்பாலும் என் உழைப்பில் மட்டுமே வெளியாகப் போகிறது என்பதால் லேஅவுட் எளிமையானதாகவே அமையும். படைப்பிற்குப் பொருத்தமான‌ ஓவியம், புகைப்படம் சேர்த்திருக்கலாம் எனக் குறைப்பட வேண்டாம்.

‘செய்வன திருந்தச் செய்’ என்பது ஆத்திச்சூடி. வேலையை எடுத்துக் கொண்டால் அதில் நம்முடைய 100% மின்ன வேண்டும். சால்ஜாப்பு சொல்வதை விட்டுவிட்டு, பொருத்தமான நபர்களிடம் பொறுப்புகளை பகிர்ந்தளித்தல், ஆக்கங்களில் மேலும் செப்பனிடுதலை — அதே இதழில் வெளியாகும் சக படைப்பாளிகளிடம் கருத்து கேட்டு செதுக்குதல் என்று இந்த விஷயம் மேன்மையுற வேண்டும்.

ஜெயமோகன் இவ்வாறு எழுதுகிறார்:

இணையத்தில் உதிரி குறிப்புகளாக வெளியாகிக்கொண்டிருக்கும் எழுத்துக்களை ஒரே இடத்தில் பிரசுரிப்பது இதன் நோக்கம். பொதுவாக இணையதளம் என்பதே இணையஇதழாக இங்கே கொள்ளப்படுகிறது. ஆனால் இவ்விதழ் இணையம் மூலம் வாசிக்கக் கிடைக்கும் இதழ். தரவிறக்கம் செய்தோ நேராகவோ வாசிக்கலாம்.

இணையத்தில் கிடைக்கும் வலைப்பதிவு ஒருங்கிணைப்பாளர்களையும் திரட்டிகளையும் இணையப் பத்திரிகைகளையும் பார்க்கலாம்:

இவை எல்லாம் விகடன் மாதிரி ஒரே தரத்தில், கொள்கையோடு இயங்காவிட்டாலும், அட்டையில் ஏமி ஜாக்ஸனின் கவர்ச்சிப்படம் போட்டுவிட்டு, நடிகையின் பாகங்களை மறைக்குமாறு ‘மதுவருந்தி சீரழியும் தமிழன்’ என்று போலி பம்மாத்துகளில் ஈடுபடுவதில்லை.

கீழே விகடனின் ஃபேஸ்புக் பக்க உரையாடலும் சாம்பிள் அட்டைப்படமும்:

AV_Tamil_Magazine_Porn_Anandha_Vikadan_Timepass_Online_Vikatan_Com

ஆனந்த விகடன் மாதிரி இதழ்களுக்கு அகம் போன்ற மின்னிதழ்கள் நல்ல மாற்று என்பதில் விகடன் குழுமத்திற்கே சந்தேகம் இருக்காது. ’தமிழ்’ இதழை விட, வடிவமைப்பில் ‘அகம்’ போன்ற மின்னிதழ்கள் மிளிர்கின்றன என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து கிடையாது

மீண்டும் பெருமாள் முருகன் + சுதந்திரம் + தமிழ் மின்னிதழ் விமர்சனத்திற்கே வருவோம்.

தமிழில் வரும் சிற்றிதழ்கள் என்று தமிழ் ஸ்டூடியோ பக்கத்தில் இவற்றைச் சொல்லி இருக்கிறார்கள்:

  1. அணங்கு
  2. அணி
  3. அதிர்வு
  4. அநிச்ச
  5. அம்ருதா
  6. ஆக்காட்டி | aakkaddi.com
  7. ஆயுத எழுத்து
  8. இனிய நந்தவனம்
  9. இனிய ஹைக்கூ
  10. உங்கள் நூலகம்
  11. உயிர்மை
  12. உழைப்பவர் ஆயுதம்
  13. உன்னதம்
  14. கணையாழி
  15. கதை சொல்லி
  16. கலை
  17. கல்வெட்டு பேசுகிறது
  18. கவிதாசரண்
  19. கனவு
  20. காலச்சுவடு
  21. காலம்
  22. கிழக்குவாசல்
  23. குழலோசை
  24. கூட்டாஞ்சோறு
  25. சமரசம்
  26. சோலைக்குயில்
  27. சௌந்தரசுகன்
  28. தச்சன்
  29. தமிழ் நேயம்
  30. தமிழ் பணி
  31. தலித்முரசு
  32. தாமரை
  33. தாய்மண்
  34. திரை
  35. தீராநதி
  36. தை
  37. நடவு
  38. நம் உரத்த சிந்தனை
  39. நவீன விருட்சம்
  40. நறுமுகை
  41. நிழல்
  42. படப்பெட்டி
  43. பன்முகம்
  44. புதிய பார்வை
  45. புதிய புத்தகம் பேசுது
  46. புதுகைத் தென்றல்
  47. புதுவிசை
  48. பெண்ணியம்
  49. மண்மொழி
  50. மலர்
  51. மீண்டும் கவிக்கொண்டல்
  52. முகம்
  53. மெய்யறிவு
  54. யாதும் ஊரேமது
  55. வடக்கு வாசல்
  56. வல்லினம்
  57. விழிப்புணர்வு

இவற்றில் பல – இன்று வெளியாகவில்லை. இவற்றில் சில பெரும் குழுமங்களான குமுதம் போன்றவற்றில் இருந்து அதற்கான நிதியாதாரங்களுடன் வெளியாகின்றன. இவற்றில் – மனுஷ்யபுத்திரன் வெளியிடும் உயிர்மை போல் சில பத்திரிகைகள் அரசியல் கட்சி சார்பானவை. அவற்றின் கொள்கைகளை, தலைவர்களை, சித்தாந்தங்களை – விமர்சன நோக்கு இல்லாமல் முன்னிறுத்தி வெளியிடப்படுபவை.

ஆனால், பலவும் தனி மனிதரின் விருப்பத்தால் உண்டாகுபவை. அவற்றில் காணக் கிடைக்காத நேர்த்தியும் வெரைட்டியும் இணைய இதழ்களில் கிடைக்க வேண்டும். அச்சுக்குரிய நிர்ப்பந்தந்தங்களும் பொருட்செலவும், வலைவெளியில் கிடையாது.

No_Images_where_they_are_required_No_Notes_All_Caps_Wiki_Style_Entry

– விக்கிப்பிடியா போன்ற இந்தப் பக்கத்தின் அவசியம் என்ன? ஆங்கில எழுத்துக்களை எல்லாம் பெரிய அப்பர்கேஸ் எழுத்துக்களாகவே போடுதல் போன்றவை சிறிய பிழைகள். காலச்சுவடு ஆசிரியர் குழுவில் எப்போது இணைந்தார் போன்ற தகவல் விடுபடுதல்கள் இன்னும் ஆபத்தானவை. எளிதில் தவிர்க்கக்கூடியவை.

– மோசமான புற உருவத்தை வைத்து அகத்தை மதிப்பிட முடியாது. முழுக்க படித்துவிட்டு, உள்ளடக்கத்தின் செறிவை தனியாக எழுத முயல்கிறேன்.

நான் எழுத நினைப்பதை எல்லாம், ஜெயமோகன் எண்ணியும் எழுதியும் வைத்திருக்கிறார்:

பெரும்பாலான இணைய இதழ்களில் எதுவும் வெளியாகும் என்ற நிலை உள்ளது. அதை அதன் ஆசிரியர்களே வாசிப்பதில்லை. அதில் ஒரு தேர்வு இல்லை. விளைவாக ஏராளமான தரமற்ற பக்கங்கள் முன்வைக்கப்படும்போது வாசகன் காலப்போக்கில் சலித்து விலகிவிடுகிறான்

சமீபத்தில் வாசித்த ஆங்கில சிறு பத்திரிகைகள், குறுகிய வட்டத்திற்குள் வெளியாகும் சஞ்சிகைகள் குறித்த என்னுடைய பதிவு: நூலகம் – 2015 புத்தகங்கள்