இந்தியாவில் வசிக்கும் இன்னொரு தமிழரின் பார்வை:
“கமலாவா டிரம்பா என்பதை விட வெல்லப்போவது இலான் மஸ்க், பாலாஜி ஸ்ரீனிவாசன் முதலியவர்களின் conviction-ஆ அல்லது அமெரிக்காவின் (டிவி) ஊடகங்களின் கணிப்பு (எ) பிரசாரமா என்பதில்தான் எனக்கு அதிகம் சுவாரசியம்! என்னுடைய மற்றுமொரு கணிப்பு என்னவென்றால் அமெரிக்கவாழ் இந்தியர்கள் டிரம்ப் வருவதை (அவர் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரானவர் என்பதனாலேயே) விரும்பவில்லை. கமலாம்மா இந்தியர் என்பதைக் காட்டிலும் டிரம்ப் வந்தால் என்ன பண்ணித் தொலைவாரோ (னோ) என்பதுதான் அவர்களின் கவலையாக உள்ளது.”
———-
இனி என் பார்வை:
அமெரிக்க இந்தியர் கொள்கைப் பற்றாளர் கிடையாது.
அமெரிக்க இந்தியருக்கு மூன்றே குறிக்கோள்:
1. பணம் – பங்குச் சந்தையில் காசு பார்த்தல்
2. குழந்தை – அவர்களை ஒரு வழியாக்குதல்
3. சோம்பேறி – ஓய்வு, டிவி, வம்பு பேசுதல்
அவர் செங்கொடி ஏந்தி சித்தாந்தத்தைத் தூக்கிப் பிடித்ததில்லை.
அவர் அரியணையில் அமர்ந்து மார்கஸ் அரேலியஸ் (Marcus Aurelius) மாதிரி ‘தியானங்களின் சுருக்கம்’ சிந்திப்பதில்லை.
அவர் அரசியல் பற்றி கவலைப்படாத நடுத்தர வர்க்கம்.
அவருக்கு தங்கம் வேண்டும். திருட்டு டிவி வேண்டும். கிசுகிசு வேண்டும். கிளுகிளுப்பு வேண்டும். முகப்புத்தகமும் இன்ஸ்டா ரீலும் வேண்டும். விஜய்யும் அஜீத்தும் வேண்டும்.
சொல்லப் போனால் தமிழ்நாட்டில் வசிப்பதாகவே நினைப்பு.
அவருக்கு தமிழக அரசியல் விவரமாகத் தெரியும். அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கையோ உக்ரெயினுக்கான உதவிக்கான பின்புலமோ அறிய வேண்டிய ஆர்வமோ தேவையோ இல்லாத ஜந்து.
புலம் பெயர்ந்தோருக்கு எதிரானவர் டிரம்ப் என்பதே ஆதிசங்கரரை ‘மாயாவாதி’ எனத் திட்டுவது போல் அர்த்தமற்றது.
சட்டபூர்வமாக உள்நுழைந்தோருக்கு குடியுரிமை தருவதற்கு தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும் கமலா ஹாரிசும் இழுத்தடிக்கிறார்கள்.
அந்த மாதிரி எச்1.பி., பி1 விசாக்களில் வந்தவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் சட்டு புட்டென்று குடியுரிமைத் தருவதாக விவேக் ராமசாமியும் டொனால்ட் டிரம்ப்பும் உறுதியளிக்கிறார்கள்.
எல்லோருக்கும் இருபது டாலர் குறைந்த பட்ச ஊதியம் தருவதாக கமலா ஹாரிஸ் வாக்குறுதி அளிக்கிறார்.
அது வாங்க முடியாமல் அல்லாடும் அப்பாவி அத்துமீறி ஊடுருவல்வாதிகளை, அவர்களின் சொந்த ஊருக்கே திருப்பி அனுப்புவதாக வாக்குறுதி அளிக்கிறார் டிரம்ப்.
கமலா வழிப்படி பார்த்தால் ஏழைகளை உறிஞ்சும் சக்தி டெமொகிரட்ஸ் தான்.
டிரம்ப் வழிப்படி பார்த்தால் சட்டபூர்வமாக வசிப்போருக்கு சரியான சம்பளம் வரும் பாதைக்கான கால்கோள் இடுபவர் ரிபப்ளிகன் தான்.
முழு ராஜ்ஜியமும் கையில் இருந்த போதும் துப்பாக்கிகளைத் தடை செய்யும் திட்டமோ, புவி வெப்பமயமாதலைக் குறைக்கும் சட்டமோ இயற்றாத ஒபாமா போன்ற ஹாரிஸை நம்பும் இந்திய வம்சாவழியினர் அதிகம்.
அவர்கள் மாற்றத்தை விரும்பாதவர்கள்.
ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டால் பங்குச் சந்தை சரியாது. பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும். ஆள் குறைப்பு நடக்காது.
நேற்று போல், நாளையும் இருக்கும்.
டிரம்ப் வந்தால் களை பிடுங்கப்படும். அரசாங்க ஊழியர் முதல் கடைநிலை இட்லி கடை எல்லோரும் ஓராண்டிற்காவது சிரம தசைக்கு உள்ளாவார்கள்.
ட்ரம்ப் ஆதரவாளர்கள் இந்த அறுவை சிகிச்சையை விரும்புகிறவர்கள்.
குற்றங்கள் குறைய வேண்டும் என நினைப்போர் டிரம்ப் பக்கம். குழந்தைகளுக்கு அறியா வயதிலேயே பாலியல் கல்வி கூடாது என நினைக்கும் பழமைவாத கலாச்சார காவலர்கள் டிரம்பின் பக்கம்.
முந்தா நாள் போல் நாளையும் இருக்கும்!














அமெரிக்கத் தேர்தலும் தமிழ்த் தொலைக்காட்சிகளும்
எதிர்பார்க்காமல் அது நிகழ்ந்தது. மாலன் சார் பாரிந்துரைத்ததாக சிங்கை மீடியாகார்ப் அணுகினார்கள்.
ஒரு சவுண்ட் பைட் வேண்டும் என்றார்கள். முன்பின்னே கொடுத்ததில்லை. அனுபவம் கிடையாது என்றேன்.
சரி… அழைத்துப் பேசுகிறோம். அதன் பின் வெட்டி எடுத்துக் கொள்கிறோம் என்று சம்மதித்தார்கள்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினோம்.
– சமூக ஊடகங்களில் எவ்வாறு இளைஞர்கள் வீழ்ந்து, அமிழ்ந்து, கலந்திருக்கிறார்கள் என்றும்
– அமெரிக்கத் தேர்தலில் ட்விட்டரும் ஃபேஸ்புக்கும் இன்ஸ்டாகிராமும் யூடியூபும் ஆக்கிரமித்திருக்கிறது என்றும்
– தேர்தலுக்கு முன் நடந்த ஆர்ப்பாட்ட ஒத்திகைகள் எவ்வாறு அரங்கேறின என்றும்
அது கொஞ்சம் தன்னம்பிக்கையை அதிகரித்து, பாட்காஸ்டிங் துவங்கலாமா, நாமும் பொக்கிஷம் டிவி விக்கி ஆகிவிடலாமா என்று ஆசை கொடுத்தது.
அதன்பின் வழக்கம் போல் காலை எழுந்ததும் கட்டஞ்சாயா, அதன் பின் நாள் முழுதும் அலுவல் சந்திப்பில் கேமிராவைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே பேசுவது என்று பழைய வழக்கமான வாழ்க்கைத் தொடர்ந்தது.
தேர்தல் நாளில் திடீரென்று வாட்ஸப் அழைப்புகள் பறக்க ஆரம்பித்தன. எல்லாமே சடாரென்று நடந்தது. நியூஸ் 18 நேரலையில் டொனால்டு டிரம்ப் குறித்தும், வாக்களிப்பு குறித்தும், ஜோ பைடன் குறித்தும், கமலா ஹாரிஸ் குறித்தும், அமெரிக்காவின் இந்தியக் கொள்கை குறித்தும் நிறையப் பேசினேன். ஆசைதீருமளவு வாய் வலிக்குமளவு கருத்துகளை அள்ளிக் கொட்டினேன்.
பின் இரவு ஒரு மணி அளவில் உத்தரவு வாங்கிக் கொண்டேன். தீபாவளிக்கு முந்தின இரவு வெடி வெடிப்போம். எல்லாரும் தூங்கிய பிறகு… அனைத்து வெடிச்சத்தமும் அடங்கிய பிறகு… கடைசி வெடியைப் போடுவோம். சொல்லப் போனால் தூங்காமலேயே, முன்றரை மணிக்கு மீண்டும் வெடியைத் துவங்கி விடுவோம்.
அன்றும் அப்படித்தான். news18 முடிந்ததும் சன் தொலைக்காட்சியில் துவங்கினார்கள். சிவராத்திரியே தான்!
அரைத்த மாவையே அரைத்தேன். காட்டமான எண்ணங்களைச் சொல்வது; அதன் பின் எதிர்த் தரப்பிற்கும் சற்றே வக்காலத்து வாங்குவது. வழவழா கொழகொழா ஆக முத்தாய்ப்பு வைத்து முடிப்பது – இப்படியே த் தொடர்ந்தேன்.
அந்த உலகம் அவசரமும் சுவாரசியமும் பரபரப்பும் நிறைந்த உலகம். எவரோ நுழைகிறார்கள். ஸ்கைப் அழைப்பில் நேரடி ஒலிபரப்பைப் பார்க்கும் போதே, “சற்றுமுன்” என்று மாறிவிடுகிறார்கள். அந்தத் தொலைக்காட்சியில் ஆளுங்கட்சிக்கு ப்ரேக்கிங் நியுஸ்; இந்தத் தொலைக்காட்சியில் கொரோனா நோய் பீடிப்பில் இறந்தவர்களின் கணக்கு – நடுவில் நானும் ஃபாக்ஸ் டிவி (ரிபப்ளிகன் சார்பு), எம் எஸ் என்பிசி (டெமொகிராட்ஸ் ஆதரவு), பி.பி.எஸ். (தூர்தர்ஷன் மாதிரி) எல்லாம் மாற்றி மாற்றி பார்க்கிறேன்.
காபி துளிக் கூட அருந்தாமலே மூளை சுறுசுறுப்பாக இருந்தது. சாந்தோம் பள்ளி மாணவர்கள் எனக்கு செய்திச் சுருக்கங்களை நறுக் நறுக்கெனக் கொடுத்துக் கொண்டிருந்தது வெகு உதவியாக இருந்தது.
நியூஸ் பதினெட்டு கன்னலில் எட்வர்ட் சார் கூடவும் ஜூனியர் விகடன் காலத்தில் இருந்து வாசித்தும் எஸ். ராமகிருஷ்ணன் வந்திருந்தபோது நியூ ஜெர்சியில் வைத்து சந்திக்கவும் செய்த பிரகாஷ் எம் ஸ்வாமி கூடவும் நேரலையில் பேசியது அளவொண்ணா மகிழ்ச்சியைத் தந்தது.
அமெரிக்காவில் அடிக்கடி தேர்தலும் வாக்குப் பதிவும் நடந்தால் எனக்கு வாழ்க்கை விறுவிறுப்பாக இருக்கும். மிட்ச் மெக்கானல் உடனோ ஜான் ராபர்ட்ஸ் கூடவோ பேசி நடத்தி விட வேண்டும்.
போதையில் இருந்து மீண்டு கொண்டிருக்கும்,
பாபா
பின்னூட்டமொன்றை இடுக
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது America, அமெரிக்கா, சன் செய்திகள், ஜனாதிபதி, டிவிட்டர், தொலைக்காட்சி, நியுஸ், பிடன், பைடன், வாக்கு, வோட்டு, Commentary, Elections, Experience, Live, News, News18, Opinion, Polls, Sun News, TV, USA, Votes