Tag Archives: சிறுகதை

StoryJudge: TamilOsai on Air with Siva Durai: இந்த வார இலக்கியம்

லிட்ஃபெஸ்ட் செல்லும் முன் நடந்தது:
இந்தியாவின் பிரபலமான இலக்கிய முகவர்: “இந்த மாதிரியான கதை இந்தியாவில் வேலை செய்யாது.”
ஆனால் என் முகவர்: “உங்களிடம் திறன் இருக்கிறது. இதை நான் வெற்றி பெறச் செய்கிறேன்.”
என்ன நடந்தது… அது இறுதியில்

நான்கு வாரமாக “சென்ற வார இலக்கியம்” குறித்த அறிமுகப் பதிவு இடவில்லை.

டாக்-ஜட்ஜ் தினேஷ் என்றால் பாஸ்டன் வந்து வட்டியும் முதலுமாக வசூலித்திருப்பார்.
ஸ்டோரி-ஜட்ஜ் சிவா சாந்த சொரூபி.

அதனால் தான் இந்த வாரம் பெருமாள், தேசாந்திரி, ஆசான் என எல்லோருக்கும் 33.33%.

அவர் உன்னதம்.
நான் என்றும் ஞானபீடம்.

அவர் இலக்கிய கோளாறு.
நான் அசல் கோலார்.

அதிருக்கட்டும்.

5 இல் பேசியது:

1. நல்லக்கண்ணு x சோ.தர்மன்: த.மு.க.எ.ச x இயக்கம் சாரா எழுத்து - இலக்கியத்திற்குள் இருக்கும் இடது/மார்க்சிஸ்ட் அரசியல்
2. அகழ் & வல்லினம் இதழ்
3. வண்ணநிலவன், போகன் சங்கர், சுரேஷ் வெங்கடாத்ரி இன்ன பிறர் விவாதத்தில்: ஜெயகாந்தன் வெகுசனமும் x தி. ஜானகிராமனின் காமத்துப்பாலும்

6 இல் பேசியது:

1. வரலாற்றாய்வாளர் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய களப்பிரர் ஆட்சியில் தமிழகம் நூலை : களப்பிரர் காலத்து இலங்கை - பாலா கருப்பசாமி
2. வாசகசாலை : ஆலிவ் விதைகளைச் சுமந்த அகதி – ஷாராஜ் குறுநாவல்
3. ஞானபீடம் : ஜெயமோகன் ஏன் பொங்கினார்? - வைரமுத்து, கங்கை அமரன், பஞ்சு அருணாச்சலம் என நீளும் பாடல் நோபல்

7 இல் பேசியது:

1. எஸ். ராமகிருஷ்ணன் - அமைதிப் புயல்: அட்சரம் முதல் அகிலம்!
2. ஆனந்த சந்திரிகை & இயல் | சிறார் மின்னிதழ்
3. 2026 - எழுத்தாளர் பி.ச. குப்புசாமி இலக்கிய விருது - க. மோகனரங்கன்.

8 இல் பேசியது:

1. விபரீத ராஜயோகமும் அகத்திக்கீரை தண்ணிச்சாறும் - சாரு நிவேதிதா கதை
2. விமலாதித்த மாமல்லனின் சிபிஐ கதைகள் தொகுப்பு - நியாயங்களின் திரிசங்கு: காளிப்பிரசாத்
3. இலக்கியம் பற்றிய தவறான புரிதல்கள் : சுரேஷ் ப்ரதீப்

மேலும்:
வல்லினம்
அ) டோன் கனவில் கண்ட இல்லறம் by ஷஃபிக் கசாலி : தமிழில்: சல்மா தினேசுவரி
‘Bahagia di Dalam Balang Kaca’ சிறுகதை தொகுப்பில் வெளியிடப்பட்டது. (மலேசிய புத்தக மற்றும் மொழிபெயர்ப்பு நிறுவனம், 2016); ‘Cerpen Syafiq Ghazali’ (Buku Fixi, 2024) இல் மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

ஆ) பனிக்குடில் by ரோஸ்லான் ஜொமெல் : தமிழில்: பிருத்விராஜூ
‘செரங்கா டீ டாலாம் கெப்பாலா’ (Serangga di Dalam Kepala) எனும் சிறுகதை தொகுப்பில் இடம்பெற்றது.

இ) அப்பா தற்கொலை செய்து இறந்தார் by நூர் அடிலா : தமிழில்: ஆசிர் லாவண்யா
ஸ்வரா இதழ் 5இல் (ஜனவரி-மார்ச் 2021) இல் வெளியிடப்பட்டது. தும்பொ மென்ஜாடி போஹோன் சகுரா (Tumbuh Menjadi Pohon Sakura) (கவா புத்தகம், 2024) என்ற சிறுகதைத் தொகுப்பில் சேர்க்கப்பட்டது.

ஈ) பெண்களின் நாட்டியம் by ஃபஸ்லீனா ஹிஷாமுடின் : தமிழில்: கி. இளம்பூரணன்
‘வனித்தா’ இதழில் (செப்.2017) வெளியிடப்பட்டது. ‘தாரி பசார் பெரெம்புவான்’ சிறுகதை தொகுப்பில் (Roman Buku, 2018) இடம்பெற்றது

உ) மூன்று பெண்களின் உரையாடல் by ரெஜினா இப்ராஹிம் : தமிழில்: விஜயலட்சுமி
சிறுகதைத் தொகுப்பில் (புக்கு ஃபிக்ஸி, 2015) வெளியிடப்பட்டது. இந்தச் சிறுகதை, புக்கு ஃபிக்ஸி மற்றும் புத்ரஜெயா சர்வதேச புத்தகக் கண்காட்சியின் ஏற்பாட்டில், 2015ஆம் ஆண்டின் சிறந்த இருபது சிறுகதைகளுள் (புக்கு ஃபிக்ஸி, 2016) ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஊ) சிறுகதை → பேங்கோ → by சுனில் கிருஷ்ணன்
எ) சிறுகதை → சுழலும் ஆழி → by கமலதேவி
ஏ) சிறுகதை → நச்சுப்புன்னகை → by கெளதம் நாராயணன்
ஐ) சிறுகதை → பெருமுலை → by பிரபு முருகானந்தம்
ஒ) கட்டுரை → மொழியும் சொல்லும் → by அ.பாண்டியன்
ஓ) மலாய் சிறுகதைகளை தமிழுக்கு மொழிபெயர்க்கும் பணி
ஔ) கட்டுரை → கலை பண்பாடு ஆவணமாக்கல் → by ரம்யா
ஃ) புத்தகப்பார்வை → நாடு விட்டு நாடு: தனிமனிதக் கதையில் சமூக ஆவணம் → by இன்பா
க) பதிவு → முன்னோடிகளின் வரிசையில் → by அரவின் குமார்

வாசகசாலை

  1. எழுத்தாளர் சுபியின் யாறு, பன்னிரண்டு சிறுகதைகளைக் கொண்ட யாறு – சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து : —> ஆழ்மனத் திசைகள் – ராஜேஷ் வைரபாண்டியன்
  2. செங்காட்டுப் பூ :: சிறுகதைத் தொகுப்பு ::முகிலன் பாரதி ::தமிழ் வெளி வெளியீடு —> தடமற்ற வாழ்வில் தடயமற்ற வாக்குறுதிகளின் நகரதலில்… – இளையவன் சிவா
  3. கவிஞர் நரனின் கவிதைத் தொகுப்பின் தலைப்பு ‘மிளகு-பருத்தி- மற்றும் யானைகள்’. சால்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள். 2020ஆம் ஆண்டில் வெளிவந்த புத்தகம். :: -தயாஜி, மலேசியா
  4. பழைய கணக்கு (வாத்தியார்)…..! – கே.ரவிஷங்கர் சிறுகதை
  5. முத்தத்தின் வாசனை! – ராம் சங்கர் சிறுகதை
  6. வேரல் புக்ஸ் வெளியிட்டுள்ள எழுத்தாளர், கவிஞர் கண்ணன் விஸ்வகாந்தி அவர்களின் தாழ்வரை நாவல் பற்றிய கண்ணோட்டம் – கமலா முரளி
  7. குணுக்கம் – சுதர்சன் சிறுகதை
  8. எடுபிடி – கனகா பாலன் சிறுகதை
  9. அந்த இரண்டாயிரம் ரூபாய் சிறுகதை —> ந. அருண் பிரகாஷ் ராஜ்

அகழ்
அ) நேர்காணல் · மம்மர் அறுக்கும் மருந்து (1) – “நமது பல்கலைக்கழகங்கள் வெறும் வகுப்பறைகளாகச் சுருங்கிவிட்டன!” : பெருமாள்முருகன் – விஜயகுமார்
ஆ) ஈழ இலக்கியம்·சிறுகதைகள் · கட்டுச் சோறு : சு. தவச்செல்வன்
இ) நகுலனின் “நினைவுப் பாதை” நாவல் குறித்த “அஹம் மந்திராஸ்மி” கட்டுரை : விஷால் ராஜா

கனலி

  1. நீலவியாபகம் By சு. வெங்கட்
  2. சுருட்டை By கிரிசாந்
  3. நூல் விமர்சனம் : ராஜம் கிருஷ்ணன் கட்டியெழுப்பியமணலூர் மணியம்மையின் வரலாற்றுச் சித்திரம் By சுப்பிரமணி இரமேஷ்

எஸ்.ரா

https://www.sramakrishnan.com/category/cat-60/

அ) தங்கள் பொறுப்பு
ஆ) நிழலானை
இ) நீரறியா அன்னங்கள்
ஈ) காற்றில் மிதக்கிறோம்
உ) கிளி சொல்லாதது
ஊ) தொடுவிரல்
எ) மன்னிப்பு : EMI வசதி உண்டு
ஏ) ஐந்தாவது எம்.ஏ.
ஐ) பறக்கத் தெரிந்த யானை

நிற்க…
துவக்கத்தில் சொன்ன சம்பவம்?

இரு வழிகள்:

  1. என்ன நடந்தது என்றால்…
    கதை இந்தியாவில் வேலை செய்யவில்லை.
    ஆனால் கொரியாவில் நூறாயிரம் பிரதிகள் விற்றது.
    “இந்திய ஆன்மா, யுனிவர்சல் வலி” என்று அவர்கள் சொன்னார்கள்.
  2. கதை published ஆனது.
    Reviews வந்தது — “derivative, over-written, tries too hard.”
    வெளிநாட்டிற்காக இன்னொரு பிரத்தியேக பார்சல் தயார்.

சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு மடைதீ உறுக்கும் வன்னி மன்றம்

நீங்கள் இலக்கிய கூட்டங்களுக்குச் சென்றதுண்டா?
அந்த எளிமையான அனுபவத்தை இந்தப் புனைவு பகிர்கிறது.

சமீபத்தில் பாஸ்டனில் ரமணன் சார் நடிப்பில் எஸ்.பி. க்ரியேஷன்ஸ் தயாரிப்பில் ‘பாரதி யார்’ நாடகம் அரங்கேறியது.
அது அற்புதமான காட்சி + உணர்வு + பாக்கியம்!

ஆனால், அதில் கூட இந்தக் கதையில் வரும் நிகழ்வுகள் போல் சில பல நடந்தன.
எனவே, கதை எனக்குக் கவர்கிறது; ரசிக்க வைக்கிறது.

அழகியசிங்கர் நடத்தும் ‘நவீன விருட்சம்’ சந்திப்பு.
’குவிகம்’ அமைப்பு கூடும் வாசகர் ரசனை கூட்டம்.
எதற்காக நீங்கள் அந்த அமைப்பின் சபைகளுக்குச் செல்கிறீர்கள்?
உங்களுக்கு அவை ஊற்றுக்களமாக அமைகிறதா?

ஜாலிலோ ஜிம்கானா!
டோலிலோ கும்கானா!!

பி.கு. #1: கதை எழுதியவரை எனக்குத் தெரியாது.
பிகு. #2: கதையை வாசித்து விட்டு கோட்பாடு ரீதியாக வாசிப்பவருக்கு @ஃபாலோயர், @ஹைலைட் எல்லாம் எரிதமாக அனுப்பப்படும்.

“அழல் பெய் குழிசியும் புழல் பெய் மண்டையும்
வெள்ளில் பாடையும் உள்ளீட்டு அறுவையும்
பரிந்த மாலையும் உடைந்த கும்பமும்
நெல்லும் பொரியும் சில் பலி அரிசியும்
யாங்கணும் பரந்த ஓங்கு இரும் பறந்தலை”

Manimegalai | 6. சக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை

நெருப்பு எடுத்து வந்த சட்டிகளும், நீர் தெளிக்கும் பானைகளும், சிதைந்த பாடைகளும், கிழிந்த துணிகளும் (அறுவைகள்), பிணத்திற்கு அணிந்து களையப்பட்ட மாலைகளும், அதற்கு இடப்பட்டு சிதறிக்கிடக்கும் வாய்க்கரிசி முதலியவையும், உடைக்கப்பட்ட கொள்ளிக் குடங்களும், இறைக்கப் பட்ட நெல்லும் பொரியும் எங்கும் சிதறிக் கிடக்கின்றனவாம்!!

இப்படியாக இந்த சுடுகாட்டின் காட்சிகளை மணிமேகலா தெய்வம், மணிமேகலையாம் காப்பிய நாயகிக்கு கூறிக் கொண்டே மனிதர்களின் விசித்திர மனப்பான்மையை இகழ்ந்தும் உரைக்கிறது.

புனைவுப் புதைவும் அகவெழுச்சி ஆக்கங்களும்

சிறுகதைக் களஞ்சியம் ஆக சொல்வனம் மாறிக் கொண்டிருக்கிறதோ என்னும் பயம் உங்களுக்கு வந்திருக்கும்.

வருகிற எல்லா புனைவுகளையும், பொறுமையாகப் படித்து, ஒவ்வொன்றுக்கும் கருத்தும், எதற்காக மறுதலிக்கிறோம், எப்படி தேர்ந்தெடுப்பில் வைக்கிறோம் என்று ஒவ்வொரு நாளும் (பதினைந்து நாளுக்கு ஒரு முறைதான் என்றாலும்… தினமும் கொஞ்சம் கொஞ்சமாக வாசித்தால் மட்டுமே வீட்டுப்பாடத்தின் பளு) குறையும், நிறையும் சொல்லும் அனைத்து பதிப்பாசிரியர்களுக்கும் நன்றி.

முக்கியமாக லண்டன் சிவா.

https://solvanam.com/category/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-318/

சரி… சுய புராணம் போதும்.

இந்த 318ஆம் இதழைப் பார்த்தால்
ஏழு கதைகள்
ஏழு மொழியாக்கங்கள்

மொழிபெயர்ப்புகள் எல்லாவற்றையும் கடகடவென்று ஓட்டியதில்:
1. நம்பி – சுய முன்னேற்ற கட்டுரையைத் தந்திருக்கிறார். அமெரிக்காவில் உழைத்துத் தள்ளுவோருக்கான ஊக்க விட்டமின்

2. மயக்கமா… கலக்கமா… என்பது போல் டொடரொண்டோ வெங்கட் ஆக்கம் – இன்னும் ஆழமாக வாசிக்க வேண்டும். ஓவியம், மதம், புத்தம் என்று காக்டெயில் போட்டிருக்கிறார்.

3. ரேமண்ட் வில்லியம்ஸ் – நம்பிக்கைக்கான ஆதாரங்கள் : இப்பொழுது உங்களுக்கு இந்த இதழ் தினுசாக மன ஊக்கத்திற்க்காக, உள் உற்சாகத்திற்காக உருவானதோ என்னும் சந்தேகம் வர வேண்டும்.

4. நாம் அனைவரும் அர்ஸுலா லெ க்வினை அதிகம் படிக்க வேண்டும் – விபி வெங்கட் பிரசாத்தின் தமிழாக்கம். லெ குவின் எழுதிய ‘Sea Road’ போன்ற அதிகம கவனம் பெறாத ஆக்கங்களை அடுத்துக் கையில் எடுக்க வேண்டும். இது தெரிந்த விஷயங்களை அர்சுலா மூலமாகத் தொட்டுச் செல்கிறது.

5. எல்லா நேரத்திலும் அதிகபட்ச முயற்சியைக் கொடுங்கள் – பால் ஆஸ்டர் : நியு யார்க் நகரமும் நகரத்தின் எழுத்தாளர்களும் நியு யார்க்கை சுற்றி நடக்கும் எந்தக் கதையும் திரைப்படமும் எனக்கு ரசிக்கும். பால் ஆஸ்டர் இதெல்லாம் ஒருங்கேக் கொடுத்தவர். கூடவே ஃப்ரெஞ்சு வாசிப்பு + வளர்ப்பு வேறு உண்டு.

கூடவே…
யூதர்களைப் பற்றி, மார்கெரித் யூர்செனார் என்ன சொல்லியிருக்கிறார்?

இவ்வளவு சொல்லிவிட்டு அந்த ஏழு கதைகளைப் பற்றி ஒன்றுமே சொல்லாவிட்டால்…
நவீன உணவுமுறையில் பாரம்பரிய சோற்றை விரும்பும் தற்கால ஆண்களைச் சாடும் ’அறிவுப்புருசன் ‘ வாசித்தேன்.

சிறுகதை என்றால்
அ) முடிவுக்கு அருகில் துவங்க வேண்டும்
ஆ) சம்பவங்கள் நிறையவும் தாவல்கள் குறைவாகவும் இருக்க வேண்டும்
இ) போதனை வேண்டாம்; புரிதல் கொடுக்க வேண்டும்.

இது எதுவுமே அந்தக் கதையில் இல்லை. தமிழில் ஒரு பக்கம் காமம் + சுயம் குறித்து எழுதி அலுக்க வைக்கிறார்கள். இன்னொரு பக்கம் எண்பதுகளில் இருந்தே மீளாமல் புரளுகிறார்கள்.

நன்றாக எழுதுபவர்கள் எல்லாம் சினிமாவில் வாசம் செய்கிறார்களோ!?

புதிய தமிழ்க் கதைகள் – 293

புத்தம்புதிய சொல்வனம் இதழில் வந்துள்ள கதைகளுக்கான அறிமுகம் + விமர்சனம்:

1. ஜா. ராஜகோபாலன் எழுதிய தெய்வநல்லூர் கதைகள்:
நன்றாக எழுதக் கூடியவர்; கட்டுரைகளில் கவர்ந்தவர் புனைவில் மிளிர்வது கடினம். கட்டுரையாசியராக மிளிர்ந்த ஜாஜா கதாசிரியராகவும் நடத்திக் காட்டுகிறார்.

கதைகளில் அரசியல் சரிநிலை பயங்கள் கூடாது. இன்றைய கதைகளில் உள்ளதை உள்ளபடியே காண்பது அரியதாக உள்ளது. இந்தப் புனைவு சிறப்பான துவக்கம். அந்தக் காலத்திற்கு நம்மை அழைக்கிறது. நீங்கள் பார்த்த, சந்தித்த மனிதர்களைச் சொல்லுகிறது.

எல்லாவற்றையும் விட சுவாரசியமாக இருக்கிறது!


——

2. சாந்தி மாரியப்பன் எழுதிய கொடுக்கு:

முடிவை நோக்கி ஓடும் கதை. “ஆறும் அது ஆழமில்ல…” என, பெண்களுக்குள் இத்தனை விஷயம் இருக்குமா?

நாலு மாதம் கழித்து இந்தப் புனைவின் சமபவங்கள், மனதோரத்தில் கீறலாக நிலைத்திருக்குமா – இல்லை.
படிக்கும்போது திருப்தி கிடைக்கிறதா – ஆம்.

சற்றே சமீபத்திய ‘தப்பட்’, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘அம்மு’, ‘ஜெய ஜெய ஜெய ஹே’ – போல் இன்னொரு முடிவு.

கதையின் நடுவே சம்பவங்கள் பலஹீனம். கதையின் உச்சகட்டம் நிறைவு.


——

3. அர்ஸுலா லெ க்வின் எழுதிய உள்ளும் வெளியும்

இதைக் குறித்து தனியாக எழுத வேண்டும். எழுதலாம்


——

4. பத்மகுமாரி எழுதிய அறுவடை

நெகிழ்வான கதை.

இந்த மாதிரி ஆக்கங்களின் ஆகப் பெரிய சிக்கல் என்னவென்றால், ஐம்பதாண்டுகள் முன்பே இதைப் படித்திருக்கிறோமோ என்னும் சந்தேகம் வரவழைக்கும் விஷயங்களைச் சொல்லும்.

இன்றைய காலகட்டத்தில், இக்கால இளைஞர்களுக்கு இந்த மாதிரி செண்டிமெண்ட் பிழிசல்கள் ஒத்து வருமா?


——

5. ந.சிவநேசன் எழுதிய சைக்கிள்

“வானத்தைப் போல”, விக்கிரமன் படம் போல் இன்னும் ஒரு எளிமையான சம்பவம்.

நடக்கக் கூடியதுதான். நல்லா இருக்கிறதுதான்.

இன்னும் நம் தமிழ் சமூகம் தொலைக்காட்சி நெடுந்தொடர் பிடியில் இருந்து வெளிவரவில்லை என்பதை நினைவூட்டிக் கொண்டால், எவ்வாறு இவ்வாறான புனைவுகள் ஹிட் ஆகின்றன என்பது புரியும்.


——

6. ஜாபாலன் எழுதிய இன்வெர்ட்டி-வைரஸ்

Reactance theory கேள்விப் பட்டிருப்பீர்கள். அதனுடன் கொஞ்சம் கோவிட், நிறைய காத்தாடி ராமமூர்த்தி, எஸ்.வி. சேகர், கிரேசி மோகன் நடை.

தத்துவார்த்தமாக “எதனால் ஊக்கம் கொள்கிறோம்?”, ‘எப்படி சொன்ன காரியத்தை, நம் மனம் செய்ய மறுக்கிறது?’ என்று சென்றிருக்கலாம். ஆராய்ச்சி, சிந்தை வளர மனம் மாறும் நிலை போன்றவற்றை உணர்த்தியிருக்கலாம்.

இப்போதைய அளவில் – ஏதோ நகைக்க வைக்க முயல்கிறார்.


——

நன்றி #solvanam

மேற்கத்திய உலகுடன் ஒப்பிட்டால் இந்தக் கதைகள் இன்னும் மூன்று அல்லது நான்கு தலைமுறை பின் தங்கியே இருக்கிறது. தமிழுலகின் தீவிர சிந்தனையாளர்கள் பணத்தைத் துரத்துவதாலோ அல்லது சீரிய முறையில் புனைவுலகை நெறியாண்டு கற்றுத் தரும் ஆசிரியர்களின் போதாமையினாலா?

Solvanam Stories – 292nd Issue

சொல்வனம் இதழின் 292வது வெளியீட்டில் நிறைய கதைகள் வந்திருக்கின்றன.

ஒவ்வொன்றையும் பற்றி எனக்குத் தோன்றியவை:

  1. 1/64, நாராயண முதலி தெரு: சித்ரூபன் எழுதியிருக்கிறார்

அந்தக் கால நினைவுகள். சொல்வனம் என்றாலே நொஸ்டால்ஜியா என்னும் தேய்வழக்கிற்கு பொருத்தமான ஆக்கம். அவ்வப்போது, அந்தக் கால ‘ரெட்டை வால் குருவி’, ‘அழியாத கோலங்கள், ‘கோகிலா’ என்று பழைய படங்களைப் பார்ப்பேன். இதுவும் அது போன்ற ஒண்டுக் குடித்தன பதிவு. இங்கு சென்றிருக்கிறேன். பார்த்திருக்கிறேன். பழகியிருக்கிறேன். அனுபவித்திருக்கிறேன். அதை சிறப்பாக மலரும் நினைவுகள் கொடுக்கிறார்.

  1. இப்படியும் ஒரு நாள், ஒரு கதை: மோஹன் ஹரிஹரன் எழுதியிருக்கிறார்

இது “Everything Everywhere All at Once” போன்று எல்லாமுமாக இருக்கிறது.
அதி புனைவா… உண்டு
அறிவியல் புனைவா… உண்டுங்க அம்மா
நிஜ சம்பவங்கள்… உண்டு ஐயா
கட்டுரை தளத்தில் தகவல்கள்… அதுவும் உண்டு
இதையெல்லாம் கிண்டலடிக்கும் சுய எள்ளல்… எல்லாம் உண்டு

  1. ஒரு குழந்தையும் இரு உலகங்களும்: விக்னேஷ்

இது சிறப்பான ஆக்கம். மனதில் பதியும் சித்திரங்கள். பாத்திரப் படைப்பு. இருண்மையைக் கோரும் விவரிப்பு. நல்ல படைப்பு!
வாழ்த்துகள்!!

  1. Femino 16: சப்னாஸ் ஹாசிம்

இதை விமர்சித்தால் மாட்டிக் கொள்வீர்கள். முதலில் கதை புரிந்ததா என்று கேட்டுக் கொள்ளுங்கள்… அப்புறம் பெண்ணியம், அரசியல் சரிநிலை, இஸ்லாம் மதம் – வேண்டாம்… மாட்டிக்குவேன். விளங்கிக் கொண்டு வருகிறேன்.

நீங்கள் படித்துப் பார்த்து உங்களுக்குப் புரிந்ததை சொல்லுங்கள்

  1. சுத்தமும் ஐரீனும்: பிரதீப் நீலகண்டன்

கோகுலம் படித்த திருப்தி கிடைக்கிறது. குழந்தைகள் பகுதி துவங்கியிருப்பதை அறிவிக்க மறந்து விட்டார்கள் #Solvanam

  1. ஒரு தபலா, சாரங்கி, கே.கே மற்றும் நான்: தேஜூ சிவன்

தமிழ் தொலைக்காட்சிகளின் சீரியல் பார்த்த நிறைவைத் தரும் நெகிழ்வான உருக வைக்கும் கண்ணீர் காட்சிகள் நிறைந்த சிந்து பைரவி. ‘சுந்தரி’, ‘எதிர் நீச்சல்’, ‘மிஸ்டர் மனைவி’, ‘இனியா’, ‘கயல்’, ‘இலக்கியா’, ‘அன்பே வா’, ‘அருவி’ எல்லாம் பார்த்து கொலை வெறியில் உருவாகிய கதை.

  1. பனிக்காலத்தின் பகல்: ராஜேஷ் வைரபாண்டியன்

தேவலாம். முடிவை நோக்கி ஓடும் கதை. Everything Everywhere All at Once பார்த்ததன் மல்டிவெர்ஸ் விளைவு!

தமிழில் இவ்வளவு பேர் தீவிரமாக இலக்கியத்தை பேணுவது ஆரோக்கியமான விஷயம். பல்சுவையும் உண்டு. உட்பொதியும் கிடைக்கிறது.

உங்களுக்கு எந்தக் கதை கவர்ந்தது?

அநுமானத்திலடங்கும் பிரமாணங்கள்

சொகுசான இடங்களில் வாழ்பவருக்கு வறுமையும் தெரியாது. அங்கிருப்போரின் கதைக்களனும் ரம்மியமாக உளச்சிக்கல்களைக் கொண்டிருக்கும்.

இது பெரும்பாலானோருக்கு உவப்பானது. பெரும்பாலானோர் கதை எழுதுவதில்லை. அவர் நிம்மதியை நாடுபவர்.

அமெரிக்காவாக இருக்கட்டும். பணத்தில் புரளும் மேற்குலகம் ஆகட்டும். ஒவ்வொரு நியு யார்க் லண்டனிலும் நுழையக்கூடாத பிரதேசங்கள் உண்டு. அது வரைபடத்தில் இருந்தாலும் கூகிள் மேப்ஸ் அனுப்பாத சாலையைக் கொண்ட அரணாக இருக்கும். அங்கு போதை வஸ்துவும் கிடைக்கும். ராப்பிசாசாக அலைபவருக்கு வேண்டியவையும் விற்கப்படும்.

இது பெரும்பாலானோர் விரும்புவது. நல்லவர் எல்லாம் சொர்க்கத்தில் மிதப்பது வசதி. அல்லவர் எல்லாம் நரகத்தில் கண் காணாமல் இருப்பது தெரியாது.

நல்ல உணவு; கொண்டாட்டமான கேளிக்கை; நடந்தால் வரும் சுகந்தம் – இது சொர்க்கவாசி.

சாலை நடுவில் திக்கற்ற பார்வதி; பச்சை குத்திய தடிமாடு; சாயம் போன கார்; பேட்டையில் நுழைந்தாலே வரும் பயம் – இது சுவர்க்கவிரும்பி ஹாலிவுட் படத்தில் மட்டும் பார்க்கும் அக்ரஹாரம்.

இவ்வளவு முன்னுரையும் எதற்கு?

அமெரிக்காவில் கருப்பினத்தவரை பிச்சை எடுத்து பார்த்திருக்கிறேன். வயதானவரை சாலையோரமாக தட்டி வைத்துக் கொண்டு உண்டியல் குலுக்குவதைக் கண்டு அவசரமாக நகர்ந்திருக்கிறேன்.

சிலர், “இந்த தானம் எனக்காக இல்லை! எங்கள் அமைப்புக்காக!!” என்று சொல்வார். சிலர், “நானும் என் குடும்பமும் சாப்பிட்டு ஆறு வேளை, மூன்று நாள் ஆகி விட்டது. இந்தக் கடுங்குளிரில் ஒரு வாய் கவளத்துக்காவது காணிக்கை கொடுக்கவும்.” என்பார். சிலர், “உனக்காக நான் இராக் சண்டைக்குப் போனேன்! அப்படிப்பட்டவனை இப்படியா நடு ரோடில் விடுவது?” எனக் கேட்பார்.

அவருக்கு உருக்குலைந்த தோற்றம் இருக்கும். வெறித்த பார்வை இருக்கும். போருக்குச் சென்று திரும்பியவர் என்றோ சமீபத்திய பொருளாதராச் சரிவில் வேலை இழந்தேன் என்றோ எழுதியிருக்கும். புகைக்கு அடிமையானவர் என்பது முக அடையாளம்.

கருப்பர்; நோஞ்சான்; எலும்புருக்கி; கிழவி; வெடவெடக்கும் கை; பதற்றமான நடை; இறைஞ்சும் பார்வை – இதைக் கடந்து போக மனதை சிந்தையின் நியாயம் கொண்டு அடக்குவேன்.

ஆனால்… இன்று…

சாலையின் இந்தப் பக்கம் இந்தியப் பெண்மணி. அசப்பில் மணிரத்னம் கதாநாயகி போல் இருந்தார். சாலையின் இன்னொரு பக்கம் போஷாக்கான பூசியத் தோற்றம் கொண்ட பழுப்பு நிற தெற்காசியன். தமிழனோ? தெலுங்காக இருக்குமோ? வட இந்தியராகவும் இருக்கலாம். பக்கத்தில் மூன்றோ, நான்கு வயதோ மதிக்கத்தக்க குழந்தை. அதற்கான தள்ளுவண்டி.

பிற இரப்பாளர் இடத்தில் பார்த்தது போன்றே அழுக்கான கம்பளி. உடைமையைக் கொண்ட தரைவிரிப்பு. நம்மவர் ஏன் இப்படி வருவோர், போவோரிடம் கையேந்த வேண்டும்?

எல்லா தேஸி மக்களும் சுந்தர் பிச்சை மாதிரி அந்தஸ்துடன் சௌக்கியமாக இருப்பவர்கள் அல்லவா? நல்ல சம்பளம். சொகுசான கார். வீட்டு வேலை உதவிக்கு பெற்றோர். ஞாயிறு ஆனால் ஊர்சுற்றல். இப்படிப்பட்ட குடிபுகுந்தவரை மட்டுமே பார்த்தவனுக்கு அறிவு இயங்க மறுத்தது.

யாசகத்துக்கு என்ன காரணமாக இருக்கும்?

மனைவியை விற்கும் அன்னக்காவடியோ?

குழந்தையை வைத்து மிரட்டுகிறானோ?

இந்த ஆண்களே இப்படித்தான். எருதாண்டிமாடு ஆண்வர்க்கம்.

தன் வீடு, வாசல் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டு ஓட்டாண்டியானவரோ?

சாஃப்ட்வேர் இல்லாத உணவக வேலை போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவரோ?

ஆடலுடன் பாடல் கச்சேரி நிகழ்ச்சிக்கு வருவோர் ஓரிருவரை தொலைத்துவிட்டுச் சென்றுவிடுவார். அந்த மாதிரி அனாதையாக்கப்பட்டோரோ?

ஆள்குறைப்பு, வேலையிழந்து நெடுங்காலம் காத்திருத்தல் போன்ற திடீர் தரித்திரத்தால் இந்த மாதிரி இறங்கினாரா?

கலிஃபோர்னியா போன்ற வேறு ஊரில் இருந்து வந்து கொள்ளையடிக்கப்பட்டு அனைத்து விஷயங்களையும் இழந்தவரோ?

பேருந்து நிலையத்தில் பயணத்திற்கு சொந்த ஊருக்குத் திரும்பிப் போக காசு வேண்டும் என்று இறைஞ்சுவாரே… அவரோ?

செய்வதறியாது திகைத்து கையறு நிலையில் இந்த இறுதி மார்க்கத்தில் இழங்கியவரோ?

சீவகராக பிஷை எடுத்து உண்ணவேண்டும் என்பது ஜாதகப் பரிகாரமாக சொல்லப்பட்டதால் அதற்காக இந்த மாதிரி பொன்னம்பலத்தார் ஆனாரோ?

பிட்காயின், டாஜ்காய்ன், எதிரீயம் என்று பணத்தை சூதாடி அழித்தவரோ?

அந்தப் பெண்ணின் அறிவிப்புத் தட்டியைப் படிக்க எத்தனித்தேன். அந்த அட்டை என்ன சொல்கிறது என்று பார்ப்பதற்குள் பச்சை விழ சாலையை விரைந்து விட்டேன்.

கூட வந்த நண்பர் செந்தில் சொன்னார்: “ரொம்ப யோசிக்காதீங்க பாலா… குறும்பட ஷுட்டிங் ஆக இருக்கும்!”

பின்புறம் காவலர் வருவது தெரிந்தது. அந்தத் தம்பதியரையும் சிறுவனையும் போலிஸ் ஜீப்பில் ஏற்றியனுப்புவது தூரப்புள்ளியாக மறைந்தது.

பெட்டிகளும் பூட்டுகளும் திறப்புகளும்

ரொம்ப நாள் கழித்து நல்ல கதை ஒன்றைப் படித்த திருப்தி பிரஜேஷ்வர் மதன் எழுதிய “தபால் பெட்டி”யில் கிடைக்கிறது.

ஆங்கிலம் வழி தமிழாக்கம் என்பது அமெரிக்க உணவகங்களில் இந்தியச் சாப்பாடு உண்பது போல், “உங்களுக்கு காரம் எவ்வளவு வேண்டும்? மைல்ட்? மீடியம்?? ஹாட் அண்ட் ஸ்பைசி???” என்பது போல் தூவப்பட்ட மசாலாவோடு இருக்கும்.

தலைப்பாகட்டிக்கோ அஞ்சப்பருக்கோ போனால் அதெல்லாம் கேட்கமாட்டார்கள். அவர்களாக இஷ்டத்துக்குப் போட்டுத் தருவார்கள். ஹிந்தி வழி தமிழாக்கம் செய்யும் அனுராதா க்ருஷ்ணஸ்வாமி அந்த வகை லோக்கல். எல்லாம் சரியாக இருக்கும்.

இந்தக் கதை ஏன் கவர்கிறது?

  • சும்மா அங்குமிங்கும் பாய்கிறார்: தபால் பெட்டியை வைத்து என்னைக் குறி வைக்கிறார் பிரஜெஷ்வர் மதான்.
  • சிந்து பைரவியில் ஜனகராஜ் கதாபாத்திரம் போன்று இதுவும் செம்மையாக செதுக்கப்பட்டிருக்கிறது.
  • சம்பிரதாயமான சம்பவங்கள்; முடிவை நோக்கி பயணிக்கும் பாணி இல்லை. அதுபாட்டுக்கு இழுத்துச் செல்கிறது.
  • அதற்காக கோணங்கித் தனமாக புரியாமல், நான்கைந்து வாட்டி வாசித்தாலும் குழப்பாமல் சீராகச் சொல்லப்பட்டிருக்கிறது.
  • எல்லாம் இரட்டை அர்த்தம்; ஆனால், வலிந்து எல்லாம் திணிக்கவில்லை. எல்லாம் குறியீடு; எனவே, உங்கள் அனுபவத்திற்கேற்ப சொடேர் சொடேரென்று அடிக்கும்.

முன்னுமொரு காலத்தில் மாந்திரீக யதார்த்தம் எல்லாம் உலா வந்து கொண்டிருந்த காலத்தில் இப்படியாகப் பட்ட புனைவுகளை தமிழிலும் சந்தித்து இருக்கிறேன். இன்றைய காலகட்டத்தில் எவர் இப்படி கொடுக்கிறார்கள்?

தபால் பெட்டிக்குள் உங்களால் புக முடிந்ததா?

சொல்லுங்களேன்…

தமிழில் கருத்துருவக (allegory) நாவல்கள் உண்டா?

வாசகர்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் படித்ததில் எந்த ஆக்கத்தை நவீன உருவகக் கதையாக கருதுகிறீர்கள்? எவை படிமத்தை தன்னுள்ளே கொண்டே நாவலின் தன்மையையும் தன்னுள்ளே வைத்திருக்கிறது?

வெ.சா.

ஆர்தர் கெஸ்லர் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விரக்தியும் ஏமாற்றமும் அடைந்து விலகினார். அது பற்றி ஒரு குறியீட்டு (allegorical) நாவlலும் எழுதினார். Darkness at Noon என்று அதற்குப் பெயர். அது உடனே உலகம் முழுதும் புகழப்பட்ட, கெஸ்லருக்கு உலகப் புகழ் அளித்த நாவலும் ஆயிற்று. நாவல் முழுதும் நிகழ்வது ஒரு சிறைச்சாலையில். அரசியல் கைதியின் சிறைவாசம் பற்றியது. ஒரு கைதிக்கும் இன்னொரு கைதிக்கும் (அவனும் அரசியல் சதிச்செயலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவன்} இடையே பழக்கம் ஏற்படுவது கதவைத் தட்டித்தான். கதவையா, சுவரையா? என்பது மறந்து விட்டது. அந்தத் தட்டலிலும் ரகசியக் குறிப்புகள் உண்டு. எல்லாமே அன்றைய ரஷ்யாவில் நடந்த அரசியல் சதிகள், வழக்குகள், கொலைகளைப் பிரதிபலிப்பதாகத் தான் சிறைச்சாலை நடப்புகளை நாம் புரிந்து கொள்வோம். இதே போல இன்னொரு குறியீட்டு நாவலும் அப்போது பெரும் சலசலப்பை உண்டாக்கியது. ஜியார்ஜ் ஆர்வெல் என்னும் ஆங்கில நாவலாசிரியரின் மிருகங்களின் பண்ணை ( Animal Farm) என்னும் ஒரு நாவல். பன்றிகள் அந்தப் பண்ணையைக் கைப்பற்றி விடுகின்றன. முன்னால் இரண்டு கரடிகள் ஓன்றையொன்று அழிக்கத் திட்டமிட்டு இரண்டுமே அழிகின்றன. பன்றிகளின் ராஜ்யத்தில் ஒரு கோஷம் “எல்லாரும் சமம் இங்கு. ஆனால் கொஞ்சம் கூட சமம் கொண்ட பன்றி தான் அதிகாரம் செய்கிறது. (All are equal. But some are more equal) நமக்குப் பரிச்சயமான பஞ்ச தந்திரக் கதைகள் பாணியில் ரஷ்யாவில் நடைமுறையிலிருந்த கோஷங்களையும் அதன் நடைமுறை அர்த்தங்களையும் கிண்டல் செய்தது மிருகங்களின் பண்ணை.

– வெங்கட் சாமிநாதன் (நினைவுகளின் சுவட்டில் …)

கருத்துருவகம் (அலிகரி) ஒரு திட்டவட்டமான பொருளைச் சுட்டும் பொருட்டு உருவாக்கப்பட்ட இன்னொரு பொருள் அல்லது அமைப்பு அல்லது கூற்று.

பராசக்தி ஒரு உருவகக்கதையாக (allegory) அமைக்கப் பட்டிருந்தது 1952 வெளிவந்த இந்தப்படக்கதை பிரிட்டீஷ் இந்தியாவில் அதாவது 1952 நடப்பதாக அமைக்கப்பட்டிருந்தது. அதிலும் அந்த புகழ்பெற்ற நீதிமன்றக் காட்சி, நீதிபதியின் இருக்கைக்கு மேலிருக்கும் பிரிட்டீஷ் அரசின் சின்னத்தின் வெகுஅண்மைக்காட்சியுடன் தொடங்குகின்றது. தணிக்கை முறையிலிருந்து தப்ப பலநாடுகளில் இத்தகைய உத்தி அமைக்கப் பட்டிருந்தாலும் பராசக்தி தணிக்கை வாரியத்தில் சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது

– சு. தியடோர் பாஸ்கரன் (மீதி வெள்ளித்திரையில்)

என் பார்வையில் கீழ்க்கண்ட தமிழ்ப் படைப்புகளைச் சொல்வேன்:

  1. காடு – ஜெயமோகன்
  2. வெயிலைக் கொண்டு வாருங்கள் – எஸ். ராமகிருஷ்ணன்
  3. ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி (சூரியனுக்கு அருகே சென்று கருக விரும்பும் பறவையாக ஜோசப் ஜேம்ஸை கற்பிதம் செய்வது)
  4. பூனைக் கதை – பா. ராகவன்
  5. அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன் – எம்.ஜி. சுரேஷ்
  6. ஜி.கே. எழுதிய மர்ம நாவல் – தமிழவன்
  7. சொல் என்றொரு சொல் – ரமேஷ் – பிரேம்
  8. ராஸ லீலா – சாரு நிவேதிதா
  9. அரசூர் வம்சம் – இரா முருகன்
  10. புயலிலே ஒரு தோணி – ப. சிங்காரம்

உங்களின் எண்ணங்களைப் பகிருங்கள்.

தி. ஜானகிராமன் – ”வெங்கிட்டு சார் ஏன் ஓடினார்”

ஒரு எழுத்தின் சாயல் உங்கள் மீது பட்டு விடாமல் இருக்க கண்டதையும் படிக்க வேண்டும். வித விதமாக வாசிக்க வேண்டும். ஆய்வுக் கட்டுரை முதல் ஆன்மிகம் வரை எதையும் விடக் கூடாது.

அதுவும் அறிவியல் புனைவு மாதிரி எழுத நினைக்கும் போது ஃபிலிப் ராத் கதைகளும் ஜெயகாந்தன் புனைவுகளும் கையில் எடுக்க வேண்டும். சம்பந்தமே இல்லாத துறையில் ஆழ்ந்து, அமைதியாக மூழ்கினால் நல்ல எழுத்து வரும்.

அந்த நினைப்பில் மீண்டும் தி.ஜா.வை எடுத்தேன். பயப்பட வேண்டாம். இன்னும் எதுவும் எழுத ஆரம்பிக்கவில்லை. எனினும், அரூ போட்டி முடிவவில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளும், அதில் சில கதைகள் ஜெயமோகனின் சாயலில் இருப்பதாக வெளியான கட்டுரைகளும் இந்த முன்குறிப்பை எழுத வைத்தது.

தலைப்புக்கு போய் விடலாம்: ”வெங்கிட்டு சார் ஏன் ஓடினார்” – குறுநாவல் அளவில் ஒரு சிறுகதை. நல்ல வேளையாக இணையத்தில் கிடைக்கவில்லை.

கதையை சொல்லாமல், இந்த ஆக்கம் ஏன் எனக்குப் பிடித்தது என்று பட்டியல் போடலாம்:

  1. பா. ராகவன் சொல்வார் (அவர்தான் என்று நினைக்கிறேன். இல்லாவிட்டாலும் சிக்கலில்லை) – ஒரு நல்லவர் கெட்ட விஷயத்தை செய்ய வேண்டும். கெட்டவராக சித்தரிக்கப்படும் கதாபாத்திரம் ஏதாவதொரு உத்தமமான விஷயத்தை செய்ய வேண்டும். அதெல்லாம் இந்தக் கதையில் நடக்கிறது.

2. என்னுடைய மாமா அன்னதாதா. நிறைய தான தருமங்கள் செய்பவர். தினமும் வீட்டு வாசலில் வரும் மாடு முதல் எங்கோ இருக்கும் குப்பைமேட்டில் பொறுக்குபவர் வரை தேடிச் சென்று உணவுப் பொட்டலங்களும் ஆடைகளும் தருபவர். கோடையில் அவரின் நிலத்தடி நீர் வற்றி விட்டது. கிணற்றை தூர் வார ஆட்களை அழைத்திருந்தார். நூறடி வரை புரட்டிப் போட்டு வெளியகற்றுவது என்று ஒப்புதல். வந்த மூன்று பேரும் காலை ஏழில் இருந்து மாலை நான்கு வரை அடைப்பை நீக்கி தெளிவாக்கின்றனர். வண்டலை இழுத்து வெளியேற்றி விட்டதாகச் சொல்கின்றனர். நீர்நிலைகளின் கொள்ளளவு அதிகமாகி நீரேந்தும் அளவும் மேம்பட்டதாக கண்ணுக்கு பட்டது. ஆனால், என் மாமாவோ, “இது நூறடி இல்லை!” என்றார். அவர்கள், “சாமீ… இது சத்தியமா நீங்க சொன்ன கூலிக்கு, ஒப்பந்தப்படி முழுக்க தூர் வாரிட்டோம்.” என இறைஞ்சுகிறார்கள்.

கடகடவென் மாமா கிணற்றில் கயிற்றைப் பிடித்துக் கொண்டு அதல பாதாளத்தை நோக்கி இறங்க ஆரம்பித்தார். கையில் நூறடியை அளக்கும் அளவுகோல் வேறு. நான் மிரண்டு விட்டேன். அவர்களும் அரண்டு விட்டார்கள். கடைசியில் அளந்து பார்த்ததில் எண்பத்தி ஏழு அடிதான் ஆகி இருந்தது. தானம் கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்க மாட்டார்; ஆனால், ஆற்றில் போடும் ஊதியத்தை அளந்து பார்ப்பார்கள் மனிதர்கள்.

  1. மீண்டும் பாரா: சிறு சிறு விவரங்கள் சிறுகதைக்கு முக்கியம். ஒரு கதையில் ஆள், உயரம்,வாசனை,நடை, நாற்றம்,லே அவுட், மேனரிசம், கோபம், புன்னகை,அழுகை, துடிப்பு, வேகம்,சூழல், செயல், செயலின்மை, பேச்சு, மௌனம் இதெல்லாம் வரவேண்டும்; தெரியவேண்டும். – இதெல்லாம் வைத்திருக்கிறார் ஜானகிராமன்.
  2. இதைத்தான் சிவசங்கரி “சின்ன நூற்கண்டா உங்களை சிறைப்படுத்தும்?” என்று அ-புனைவாக ஆக்கினார்?
  3. தி.ஜா.ரா.வின் வார்த்தையிலே சொல்வதானால்: “எடுத்துக்கொண்ட விஷயம் உணர்வோ, சிரிப்போ, புன்சிரிப்போ, நகையாடலோ முறுக்கேறிய, துடிப்பான ஒரு கட்டத்தில்தான் இருக்கமுடியும். சிறிது நேரத்தில் வெடித்துவிடப் போகிற ஒரு தெறிப்பும், ஓர் அவசரத் தன்மையும் நம்மை ஆட்கொள்ள வேண்டும். தெறிக்கப் போகிறது பட்டுக் கயிறாக இருக்கலாம். எஃகு வடமாக இருக்கலாம். ஆனால் அந்தத் தெறிப்பும் நிரம்பி வழிகிற துடிப்பும் இருக்கத்தான் வேண்டும். இந்தத் தெறிப்பு விஷயத்திறகுத் தகுந்தாற்போல் வேறுபடுவது சகஜம். கதையின் பொருள் சோம்பல், காதல், வீரம், தியாகம், நிராசை, ஏமாற்றம், நம்பிக்கை, பக்தி, உல்லாசம், புதிர் அவிழல் அல்லது இவற்றில் சிலவற்றின் கலவைகளாக இருக்கலாம். அதற்குத் தகுந்தபடி அந்தத் தெறிப்பு பஞ்சின் தெறிப்பாகவோ, பட்டின் தெறிப்பாகவோ, எஃகின் தெறிப்பாகவோ, குண்டு மருந்தின் வெடிப்பாகவோ சத்தம் அதிகமாகவோ குறைந்தோ மௌனமாகவோ மாறுபடும். ”

இந்தக் கதையில் என்னத் தெறிப்பு என்பதை வாசித்து விட்டு சொல்லுங்கள்.

ஜெயமோகனின் “குமிழிகள்” சிறுகதை

எழுத்தாளரைப் பற்றி சற்றே தெரிந்திருப்பது சிறுகதை வாசிப்பிற்கு சற்றே இடைஞ்சல். சுஜாதாவைக் குறித்தும் புதுமைப்பித்தன் குறித்தும் எதுவும் தெரியாது. என்ன ஜாதி, எந்த ஊர், எவ்வளவு வயது, இருக்காரா, போயிட்டாரா, ஆணா, பெண்ணா, நாலைந்து பேர் ஒரே பேரில் எழுதுகிறார்களா, நாலைந்து பேரில் எழுதுகிறாரா…

எதுவும் தெரியாது. எனவே, இந்தக் கதை பிடித்திருந்தது; இந்தக் கதை எரிச்சலூட்டுகிறது; இந்த கதையை கால்வாசியோடு நிறுத்திக் கொள்ளலாம் என்று முடிவெடுப்பதில் தர்மசங்கடங்களோ முன்முடிவுகளோ எதிர்பார்ப்புகளோ கிடையாது.

சௌகரியமாக வாசித்த காலம். மீண்டும் அவ்வாறு கண்ணைக் கட்டிக் கொண்டு வாசிக்க வேண்டும்.

ஒரு கதையை எதற்காக நான் வாசிக்கிறேன்? அதில் இருந்து புதிய வாசல்கள் ஏதேனும் திறக்கிறதா என்னும் சுயநலம்; புரியாத விஷயங்கள், அறியாத மனிதர்கள், புலப்படாத தீர்மானங்கள் என்று விடை கிடைக்காத புதிர்கள் அவிழ்கிறதா என்னும் ஆர்வம்; சுவாரசியம், வாசிப்பின்பம், மகிழ்ச்சி போன்ற வேற்றுலகப் பிரவேசத்திற்கான சந்தோஷம்.

இந்தக் கதையில் அப்படி எதுவும் கிடைக்கவில்லை.

அறிந்த மனிதர்கள்; தேய்வழக்கான உரையாடல்கள்; போரடிக்கும் வாக்குவாதங்கள்; நானே இதை அறிவார்ந்து எழுதியிருந்தால் கூட கொஞ்சம் தர்க்கபூர்வமாக எழுதியிருப்பேனோ என்னும் அலட்சியம் கலந்த ஊக்கத்தைக் கொடுக்கும் நகர்வுகள்.

எடுத்த களம் – பாலச்சந்தர் காலத்து பெண்ணியம். சொல்லிய விதமாவது பாலு மகேந்திரா பாணியில் கவர்ச்சியாக இருந்ததா என்றால் அதுவும் இல்லை.

சரி… வாசகர் கடிதங்களைப் பார்ப்போம்…

கதையை விட கடிதங்கள் மோசம். இந்தப் படைப்பில் எந்த விஷயங்களை ஆசிரியர் கையில் எடுத்திருக்கலாம்? நிஜ வாழ்வில் இந்த மாதிரி சம்பாஷணைகள் எத்தனை நாள் நீடிக்கும்? சுயம்புவாக ஒருவர் மட்டுமே முடிவெடுத்தால் அது எத்தகைய எதிர்வினைகளை உருவாக்கும்? இந்த மாதிரி பெரும்பாலும் அமைவதில்லை.

இதில் “விக்னேஷ் ஹரிஹரன்” கடிதம் தேவலாம். ஓரளவிற்கு மேல் சர்க்கரை திகட்டிப் போகிறது. அதையேத் தொடர்ந்து வாசகர் எதிர்வினையாகப் படித்துக் கொண்டிருந்தால்… அயர்ச்சி ஏற்பட்டு, கடிதங்கள் பிரிவையே ஒதுக்க நேரிடுகிறது.

கதை விமர்சனத்திற்கே வந்து விடுகிறேன்: https://www.jeyamohan.in/142864/

கதையை வாசித்துவிடுங்கள்.

தமிழில் இவ்வாறு ஆங்கில்ப் பேச்சுகளை பாவனைகளை இயல்பாக எழுதும் பலரை இப்போதைய காலகட்டத்தில் நான் அதிகம் பார்க்க / படிக்கவில்லை. எனவே, அது “பேஷ்”.

இந்த மாதிரி விஷயங்களைக் கையிலெடுக்க அனேகர் கூசுவார்கள். சாரு நிவேதிதா இந்தக் கதையை வேறு மாதிரி பலான பாதையில் கொண்டு சென்று ஜிகினாத் தோரணமாக்கியிருப்பார். எடுத்த சப்ஜெக்ட் மற்றும் சொல்ல நினைத்த விதம் – “பேஷ்”.

விவாதங்கள், உரையாடல்கள், வாதங்கள் – விடலைத்தனமாக முதிர்ச்சியடையாமல் வந்திருக்கிறது. போர்ட் ஆஃப் டைரக்டரில் இருப்பவர்கள் இவ்வளவு சின்னபிள்ளைத்தனமாக விவாதிக்க மாட்டார்கள். நம்பகத்தன்மை இல்லாததால் – ”அழுகல்”.

கடைசியில் வரும் ஒயின் அருந்தல் இன்னும் சோகமானது. ஒரு குடிகாரன் இதை எழுதியிருந்தால் அமர்க்களமாகி இருக்கும். இங்கே நீர்த்துப் போன காக்டெயிலாகவும் இல்லாமல், காத்திரமான விஸ்கி போல் குடலையும் எரிக்காமல் உப்பு சப்பற்ற பார்லி தண்ணீராக – “உவ்வே”.

கையடித்தல், முஷ்டிகைமைதுத்தனம் என்று பலவகையில் இன்னும் உள்ளே சென்று உளவியல் சிக்கலையும் ஆராயவில்லை. அவர்களின் வாழ்க்கைத் தேர்வுகளுக்கான காரணங்களையும் மேலோட்டமாகவே பார்க்கிறது “குமிழிகள்”. அரைகுறைப் படமாகவே முடிந்தும் விடுகிறது.

ஒரு நாட்குறிப்பில் நாலு வார்த்தை எழுதும்போது பாதி சித்திரத்தைத் தீட்டி விட்டு ஓய்ந்து விடலாம். ஒரு சிறுகதைக்கு தன்னளவில் முழுமை தேவை. ஒரு படைப்பு அதன் கர்த்தாக்களின் காரியங்களுக்கான நியாயத்தை ஆராய வேண்டும். அவர்களின் முடிவுகளுக்கான பாதையை வரைபடமாக்க வேண்டும். புதிர் போல் ஒருங்கிணைந்து பூர்த்தியாக வேண்டும்.

தகவல்களும் வித்துகளும் புனைவிற்கு முக்கியம். ஆனால், புனைவாக நினைவில் தங்க அது மட்டும் போதாது.