Tag Archives: அறிமுகம்

‘பாரதி யார்’ @ பாஸ்டன்

பாரதி யார் நாடகம் முடிந்தவுடன் இதை எழுதியிருக்க வேண்டும்!
அமரன் படத்தில் ‘அச்சமில்லை! அச்சமில்லை!!’ பார்த்த பிறகாவது பகிர்ந்திருக்க வேண்டும்!!
டிச. 11 பிறந்த தினத்திற்காகவாது முடித்திருக்க வேண்டும்.

மனதிலேயே இருப்பதை எப்படி முகநூலிற்கான கவர்ச்சிகரமான பதிவாக்குவது?

அமெரிக்காவில் வசிக்கும் முக்கால்வாசி (நான்கில் மூன்று) பேர் தங்கள் மழலைச் செல்வங்கள் பங்கேற்காவிட்டால் பார்க்க வர மாட்டார்கள் என்னும் அங்கலாய்ப்பு எழக்கூடாது.
பாரதியார் பற்றித்தான் எல்லாம் தெரியுமே என்று பாக்கி 25% சதவிகிதத்தினர் ‘பாரதி சின்னப் பயல்’ ஆக தங்களை எண்ணுகிறார்கள் என்னும் விமர்சனம் சொல்லக்கூடாது.
ஞாயிறு பின் மதிய வேளையில் – சாப்பிட்டோமா… தூங்கினோமா! என்று ஓய்வு வேளையில் இந்த அரங்கப் புயலைக் கொணர்ந்தோம் என்னும் ஏற்பாட்டு புலம்பல்களைப் பகிரக் கூடாது.

இதை எழுதுவதால் பாஸ்டன் தமிழர் அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கு வரமாட்டார்கள் என்னும் முன் முடிவு.
நியு இங்கிலாந்து தமிழ்ச்சங்கமோ; தமிழ் மக்கள் மன்றமோ; மாஸசூஸட்ஸ் தமிழ் அமைப்புகளோ; தமிழ்ப் பள்ளிகளோ; சிஷு பாரதி ஆசிரியர்களோ – எல்லோருமே ‘நல்லா நடக்கட்டும்!’ என வாழ்த்தினார்களே தவிர, நுழைவ்வுச்சீட்டையோ, தங்கள் நண்பர்களையோ, குடும்பத்தினரையோ முடுக்கிவிட்டு அலைகடலென திரளாமல் ஐபிடிவி.யில் அரதப் பழசான ‘கயல்’, ‘இdli சட்னி காபி’ என்று நெடுந்தொடர் பிக் பாஸாக உதாசீனாம் செய்தது பின் விளைவு.

புலம்பல் போதும்.

இரமணன் வந்தார்; Isaikkavi Ramanan
நியூ ஜெர்சி தமிழர்கள் அரங்கேறி ஸ்டேஜ் ஃப்ரெண்ட்ஸ் என துணை நின்றார்கள்.
தமிழ் மக்கள் மன்ற அறங்காவலர்களும் அமைப்பாளர்களும் நிகழ்ச்சிக்கு ஆரம்பம் முதல் இறுதி வரை கரம் பற்றி கூட நடந்தார்கள்.

நன்றி டி.எம்.எம். Tamil Makkal Mandram, USA
பாரதியை எங்களுடன் கர்ஜிக்கவிட்ட இசைக்கவிக்கு நன்றி.
பிராட்வே அரங்கை உருவாக்கிய எஸ்.பி. கிரியேஷன்சுக்கு நன்றி. SB Creations / Raman Sbs
அவரை பாஸ்டனுக்கு அழைத்து நாடக நடிகர்களை உபசரித்து என் தொல்லைகளைப் பொறுத்துக் கொண்ட ரமணனின் மகன் ஆனந்திற்கு அவர் குடும்பத்திற்கும் கோடானுகோடி நன்றி.

சரி…. நாடகம் எப்படி?

இரமணன் எழுதிவிட்டார்.
இணையத்திலும் கிடைக்கிறது.

அந்த நிகழ்வு முடிந்தவுடன், நம்மவர், என்னிடம் கேட்ட கேள்வி: “வீடியோ கிடைக்குமா?”

இந்த மாதிரி கொண்டாட்டம் எல்லாம் மனதிற்கு விரும்பியவர்களுடன் நேரில் பார்த்து ரசிக்க வேண்டிய நிகழ்ச்சி.
தமிழர்கள் எதையும் திருட்டி விசிவி-யில் பார்த்து ரசிப்பவர்கள்.
அவர்களுக்கு இந்த மனநிலை வாய்க்குமா!
அந்த அரங்கிற்குள் பாராதியார் காலத்திற்கு சென்றிருப்பார்களா!?
அப்படியே அவரின் எண்ணங்களுக்குள், பாடல்களுக்குள், வசன கவிதைகளுக்குள் தங்களை மீட்டெடுப்பார்களா!

இருநூறு டாலர் கொடுத்து (நியூ யார்க்கில்) லயன் கிங் பார்ப்பார்கள்.
வேட்டையனுக்கு (ஒருவருக்கு) 28$ கொடுப்பார்கள்.
இளையராஜாவின் திரைப் பாடல்களை ரஞ்சனி – காயத்ரி பாடினால் ($50) காசு கொடுத்து லயித்துக் கேட்பார்கள்.

அவர்களிடம் எட்டயபுரத்துக்கும் காசிக்கும் புதுச்சேரிக்கும் திருவல்லிக்கேணிக்கும் அழைத்துச் செல்கிறோம் என்றால் – ‘நாங்களே போயிக்கிறோம்!’ என்று ஒதுங்கி விடுகிறார்கள்.
’என் பையன்…’, ‘என் மகள்…’, என் குடும்பம் என்று ரத்தமும் சதையுமாக தங்களின் வழித்தோன்றலின் தத்தக்கா பித்தக்கா ஆட்டத்தை ரசிப்பர்வகள், – பாரதிதாசன், சுப்பிரமணியம் சிவா, வ.உ.சி. என்றால் எதற்கு அந்த ஆளையும் அவரின் விழுமியங்களையும் இலட்சியங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்… என ஜகா வாங்குகிறார்கள்.

’பாரதி யார்’ நாடகம் என்பதை விட அனுபவம்.
பாரதியாரின் வாழ்வு; பாரதியின் நியாயங்கள்; பாரதியின் பாடல்கள்; பாரதியின் சொற்றொடர்கள்; பாரதியின் எண்ணங்கள் – ஏற்கனவே நீங்கள் சீனி. விசுவநாதனாக இருந்தாலும் பாரதியைக் கண் முன்னேக் கொணரும் மகா காவ்யம்.
’பாரதி யார்’ அரங்க அனுபவம் என்பது சொல்லால் எழுதப்பட்டு புரிந்து கொள்வது அல்ல. அந்த அரங்கத்தில் பல்வேறு பார்வையாளர்களருடன் ஒருங்கிணைந்து இலட்சியப் பாதையில் பயணிக்க உறுதி மொழி கொள்வது.

அடுத்த முறை இது போன்ற வாய்ப்பைத் தவற விடாதீர்கள்.

நீலத்தில் இத்த்தனை நிறங்களா!

டா வின்சி ஓவியமான தி லாஸ்ட் சப்பர் மீது இசைக் குறிப்புகளை வைத்தால், அந்த ஏற்பாடு சிம்பொனி இசையை ஒத்திருக்கும். அந்த ஆபரா இசைக்கும்போது, யூடியுப் குறுஞ்சுருள் போன்ற 40 விநாடிகளில் இராகமாலிகை இன்னிசையை உருவாக்கும், இது கலை ஆர்வலர்களையும் இசைக் கலைஞர்களையும் ஈர்க்கிறது. இது வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் இது டா வின்சியின் புகழ்பெற்ற படைப்பின் உற்சாகமான விளக்கமாகும்.

சொல்வனம் 330-ம் இதழ் இப்படிப்பட்ட இதழ்.

https://solvanam.com/category/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-330/

ஓவியம் போன்ற கவிதைக்காரருடன் நேர்காணல் – சந்திப்புகள் தரிசனம் ஆவது அபூர்வம் – அது இங்கே பூரணம். நன்றி நம்பி!
மூன்றே முன்று தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் – ஒவ்வொன்றும் சீலைச்சித்திரம். அகநானூறு அந்தக் காலம்; சொல்வனம் 400 இந்தக்காலம்.
ஆலமும் நீலம்; கங்கையும் நீலம்; காதுகள் மட்டும் நீல நிறமுடைய குதிரை சியாமகன்னம் – அது போன்று அருணாச்சலம் ரமணன் எங்கும் கண்ணஞ்சனம் இட்டு துலக்குகிறார்.
கமலதேவியில் ஔவையார் – பெருங்களிறு என்ற படிமத்தை விவரிக்கிறார்.
அரிதான விஷயங்களை தமிழுக்குக் கொணரும் மைத்ரேயன் – முக்கியமான இன்னொரு ஆக்கத்தை மொழியாக்குகிறார்.

நீலத்தில் இத்தனை நிறங்களா!

உங்களின் #1 இடுகை என்னவென்றால் – என்னுடைய ஜெய் மஹேந்திரன் அறிமுகமும் ஆய் கதைகளும் என்று சொல்வீர்கள் என நம்புகிறேன்.

டாலி “மனநோய்-விமர்சனம்” என்னும் ஓவிய முறையைஉருவாக்கினார், அவரின் மிகையதார்த்தவாத படங்களை ஊக்குவிப்பதற்காக தன்னை ஒரு சுய-தூண்டப்பட்ட, மாயத்தோற்ற நிலையில் வைப்பார். அப்படியெல்லாம் திரிபுணர்வாகாத சகுனங்களும் சம்பவங்களும் – 5 : வாசித்து விடுங்கள்.

சொல்வனம் #329 – அக். 2024 இதழ்

சொல்வனம் இதழின் தீபாவளி இதழ் வெளியாகி இருக்கிறது.

இந்த தீபாவளி சிறப்பிதழை அறிவியலுக்கான இதழ் எனச் சொல்லலாம்.

https://solvanam.com/category/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-329/

அறிவியல் பகுதிக்கான ஆலோசகர் அருணாச்சாலம் ரமணன் – புத்தம்புதிய பகுதியை ஆரம்பிக்கிறார்.

முக்கியமான ஆராய்ச்சிகள். நேற்றைய ஆய்வுத்தாள்கள்; சுருக், நறுக் அறிமுகம்.

சொல்வனத்தில் மகரந்தம் என்றும் நிரந்தரம்.

தீபா ராம்பிரசாத் தன்னுடைய சிறப்பான தேர்வை மீண்டும் நிரூபிக்கிறார். அவர் எடுத்த கதை சுவாரசியம் + புதுமை. அவசியம் தவற விடாதீர்கள்.

‘அதிரியன் நினைவுகள்’ மஹா காவ்யம். அதை முழுக்க முழுக்கத் தமிழுக்குக் கொணர்ந்து விட்டார் நாகரத்தினம் கிருஷ்ணா. தமிழில் என்றுமே அசல் இலக்கியவாதிகள் எக்கச்சக்கம் ஆக அமைதியாக செயல்பட்டு செழுமையாக்குகிறார்கள் என்பதற்கு இந்த மொழியாக்கமும் பிரெஞ்சுத் தமிழரும் உதாரணம் + இலட்சியம்.

வெங்கட் ரமணின் பத்திகள் தமிழுக்குக் கிடைத்த கொடை. அவரின் ‘காலம் எரித்ததும், கணினி மீட்டதும்’ நியு யார்க்கர் போன்ற இதழ்களில் வரும் அசல் கருத்து + பிரத்தியேக ஆராய்ச்சி கொண்ட ஆக்கங்களுக்கு சற்றும் சளைத்ததல்ல. அவரைப் பார்த்து எழுத வந்தவன் நான். டொரொண்டோ வெங்கட்டிற்கு நன்றி.

நானும் ‘சகுனங்களும் சம்பவங்களும்’ நான்காம் பகுதி தந்திருக்கிறேன். வாசித்து உங்கள் எண்ணங்களைச் சொல்லுங்கள்.

மற்ற ஆக்கங்களை வாசித்து முடிப்பதற்குள் அடுத்த இதழைக் கொணர்ந்து விடுகிறார்கள்.

எதை எடுப்பது!? எதை வாசிப்பது!? எதைப் பகிர்வது!!!

நீங்களே பதில் போடுங்க… வாசகர் கடிதங்களும் உண்டு : )

  • 1. ஆராயும் தேடலில் – அறிவியல் சிந்தனை அருணாச்சலம் ரமணன்
  • 2. கிருஷ்ண லீலை – சார்பினோ டாலி
  • 3. காலம் எரித்ததும், கணினி மீட்டதும் – வெங்கட்
  • 4. 1941 ஆண்டின் குளிர்காலம் – அமர்நாத்
  • 5. நிற(ப்)பிரிகை – பானுமதி ந
  • 6. விதைகளின் பயணம் – பெத் கோடர் – தீபா ராம்பிரசாத்
  • 7. மழைக்காலம் – ஆமிரா
  • 8. அதிரியன் நினைவுகள்-46 யூர்செனார்
  • 9. நேர்கோணல் – மர்ஸல் துஷா (Marcel Duchamp) – ஆர் சீனிவாசன்
  • 10. வாழ்க தலைவரே! – ஜெகதீஷ் குமார்
  • 11. ஆக்கன் ஊற்றுப்பட்டை – விவேக் சுப்ரமணியன்
  • 12. மிளகு-81 – இரா. முருகன்
  • 13. பெருங் கூத்தின் நெடுந்துயர். – ரவி அல்லது.
  • 14. ஆரன்யக் நாவலை நாம் 21ம் நூற்றாண்டில் ஏன் வாசிக்க வேண்டும்? – நிர்மல்
  • 15. டால்ஸ்டாய் புக் ஷாப் – தமிழ் கணேசன்
  • 16. சகுனங்களும் சம்பவங்களும் – 4 பாஸ்டன் பாலா
  • 17. ராகவேனியம் 2024 – நூருத்தீன்
  • 18. தாமஸ் செக்கின் ‘தி கேடலிஸ்ட்’: ஆர்என்ஏ-வும் அதன் அதிதிறன்களும் – அருணாச்சலம் ரமணன்
  • 19. பட்டியலில் 12வது நபர் – தேஜு சிவன்
  • 20. ஜப்பானியப் பழங்குறுநூறு 95-96 – கமலக்கண்ணன்
  • 21. கருப்பு எஜமானி – இ. ஹரிகுமார் – தி.இரா.மீனா
  • 22. கவிதைகள் – அரா
  • 23. குமார சம்பவம்-13 – ஜானகி க்ருஷ்ணன்
  • 24. சகுனியாட்டம் – ஆர் வத்ஸலா கவிதைகள்
  • 25. யாதேவி – பானுமதி ந
  • 26. வாசகர் கடிதங்கள்

சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு மடைதீ உறுக்கும் வன்னி மன்றம்

நீங்கள் இலக்கிய கூட்டங்களுக்குச் சென்றதுண்டா?
அந்த எளிமையான அனுபவத்தை இந்தப் புனைவு பகிர்கிறது.

சமீபத்தில் பாஸ்டனில் ரமணன் சார் நடிப்பில் எஸ்.பி. க்ரியேஷன்ஸ் தயாரிப்பில் ‘பாரதி யார்’ நாடகம் அரங்கேறியது.
அது அற்புதமான காட்சி + உணர்வு + பாக்கியம்!

ஆனால், அதில் கூட இந்தக் கதையில் வரும் நிகழ்வுகள் போல் சில பல நடந்தன.
எனவே, கதை எனக்குக் கவர்கிறது; ரசிக்க வைக்கிறது.

அழகியசிங்கர் நடத்தும் ‘நவீன விருட்சம்’ சந்திப்பு.
’குவிகம்’ அமைப்பு கூடும் வாசகர் ரசனை கூட்டம்.
எதற்காக நீங்கள் அந்த அமைப்பின் சபைகளுக்குச் செல்கிறீர்கள்?
உங்களுக்கு அவை ஊற்றுக்களமாக அமைகிறதா?

ஜாலிலோ ஜிம்கானா!
டோலிலோ கும்கானா!!

பி.கு. #1: கதை எழுதியவரை எனக்குத் தெரியாது.
பிகு. #2: கதையை வாசித்து விட்டு கோட்பாடு ரீதியாக வாசிப்பவருக்கு @ஃபாலோயர், @ஹைலைட் எல்லாம் எரிதமாக அனுப்பப்படும்.

“அழல் பெய் குழிசியும் புழல் பெய் மண்டையும்
வெள்ளில் பாடையும் உள்ளீட்டு அறுவையும்
பரிந்த மாலையும் உடைந்த கும்பமும்
நெல்லும் பொரியும் சில் பலி அரிசியும்
யாங்கணும் பரந்த ஓங்கு இரும் பறந்தலை”

Manimegalai | 6. சக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை

நெருப்பு எடுத்து வந்த சட்டிகளும், நீர் தெளிக்கும் பானைகளும், சிதைந்த பாடைகளும், கிழிந்த துணிகளும் (அறுவைகள்), பிணத்திற்கு அணிந்து களையப்பட்ட மாலைகளும், அதற்கு இடப்பட்டு சிதறிக்கிடக்கும் வாய்க்கரிசி முதலியவையும், உடைக்கப்பட்ட கொள்ளிக் குடங்களும், இறைக்கப் பட்ட நெல்லும் பொரியும் எங்கும் சிதறிக் கிடக்கின்றனவாம்!!

இப்படியாக இந்த சுடுகாட்டின் காட்சிகளை மணிமேகலா தெய்வம், மணிமேகலையாம் காப்பிய நாயகிக்கு கூறிக் கொண்டே மனிதர்களின் விசித்திர மனப்பான்மையை இகழ்ந்தும் உரைக்கிறது.

வரலாற்று அதிர்ச்சிகளை எதிர்கொள்வதற்கும் மனித வாழ்க்கையின் பலவீனத்தை அம்பலப்படுத்தற்குமான தீவிரமான கவிதை உரைநடை

”பொற்குகை ரகசியம்” எழுதிய ஜெகதீஷ் குமார் நோபல் பரிசு பெற்ற ஹான் காங் என்னும் எழுத்தாளரை அறிமுகம் செய்கிறார்.

இரண்டே மணி நேரம்தான் கெடு. அதற்குள் அப்படி ஒரு அடர்த்தி; அதே சமயம் எளிமை; எந்தவித சமரசங்களும் அவசரமும் இல்லாத அற்புதமான விருதுக் குறிப்பு!

இப்படிப்பட்ட எழுத்தாளர்கள் இருப்பது தமிழுக்குக் கிடைத்த கொடை. புனைவிலும் பின்னுகிறார்கள். விமர்சனங்களிலும் மிளிர்கிறார்கள். மொழியாக்கங்களுக்கும் சளைத்தவர்கள் அல்ல.

இலக்கியம் இனி நிறைய வளரும். வியுற்பன்னர்கள் நிறைய உருவாகும் தமிழ்.

மகிழ்ச்சி!

வேட்டையன் வ.கே.கே.

1. இது ரஜினி படமா?
ஆமாங்க… அப்படித்தாங்க தலைப்பிலும் முன்னோட்டத்திலும் சொல்லிக் கொள்கிறார்கள்

2. அனிருத் இசை எப்படி?
ரஜினி படத்துக்கு யார் இசையமைச்சாலும் ஒரே மாதிரிதானே இருக்கும்! தர்பார் மாதிரி, ஜெயிலர் மாதிரி… ஒரே மாதிரி!

3. படம் எப்படி இருக்கு?
ரஜினி வெறியர்னா பல முறை பார்க்கலாம். இயக்குநர் ஞானவேல் பிரியர்னா இரண்டு முறை. சினிமா தாகம் கொண்டவர்னா நீலச்சட்டை மாறன் அலுக்கும் வரை.

4. உங்களுக்கு படம் பிடிச்சிருந்ததா?
நான் ப்ரியா முதல் லிங்கா வரை எல்லாமே நல்லா இருந்ததா நெனக்கிறவன். அவர் நடிச்சா அது ஆஸ்கார்.

5. அபிராமி?
முத்தமென்றால் கமலின் விருமாண்டி..
நடிப்பென்றால் ரஜினியின் வேட்டையன்.
நினைப்பென்றால் ஹம்மா… ஹம்மா (மிடில் கிளாஸ் மாதவன்)

6. வெள்ளித்திரையில் ஓடுமா?
தீபாவளிக்கு சன் டிவி.
கிறிஸ்துமசுக்கு அமேசான்.
அதன் பிறகு ஐபிடிவி.

7. இது யாருடைய படம்?
ஃபாஹத் ஃபாசில் மீண்டும் மீண்டும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பின்னப்படும் என்பதை நிரூபிக்கும் படம்.

8. கதையும் வசனமும்?
அதெல்லாம் ரஜினி படத்தில் தேவையா என்ன? இருந்தாலும் ஓரிரண்டு ‘பேட்ட’ போன்ற அரிதாரங்களும் ’உன்னையக் கட்டிப் பிடிச்சுக்குவேன்; இல்லே வெட்டி சரிச்சுடுவேன்’ போன்ற அண்ணாத்த பன்ச்கள் கூட இல்லாதது ஞானவேலின் திமிர் கலந்த அலட்சியம்.

9.படம் உங்களுக்குப் பிடிக்கலையா?
இந்தியன் 2 போன்ற ஷங்கர் கொடுமைகளுக்கு இதெல்லாம் கோடி தரம் மேல். மெக்காலே என்பவர் இந்திய நவீனக் கல்வியின் பிதாமகன் என்பதெல்லாம் கோடி தரம் புளித்துப் போன பிரச்சாரம். படம் வேலை செய்வது இந்த இரண்டு துருவ உச்சநிலைகளுக்கு நடுவே எங்கேயோ கேட்ட குரல்.

10. லிங்கா போல்… பாபா போல் இருக்கிறதா?
அதெல்லாம் மசாலா. இது தீபாவளி லேகியம்.

குட்டி ஆர்.என்.ஏ.

கிரி அறிவியல் புனைவொன்றை எழுதுகிறார்.

மருத்துவத்திற்கான நோபல்பரிசு இன்று அறிவிறிக்கிறார்கள்.

இரண்டையும் தெரிந்து கொள்ள சொல்வனம் வர வேண்டுகிறோம்.

நன்றி பேராசிரியர் ரமணன்.

புரதத்தின் எம்ஆர்என்ஏவை மாற்றியமைப்பதன் மூலம் மற்ற புரதங்களை ஒழுங்குபடுத்தும் மைக்ரோஆர்என்ஏ (மைஆர்என்ஏ) ஐ அவர்கள் கண்டுபிடித்தனர், புரதத்தின் படியெடுத்தல் அல்ல.

இதற்கு முன்னர், மரபணுக்கள் (புரதங்கள்) பெரும்பாலும் டிஎன்ஏவின் வரிசைமுறைகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன என்று கருதப்பட்டது, அவை படியெடுத்தல் காரணிகளைக் கட்டுப்படுத்தின.

புரத உற்பத்தியை நிறுத்துவதன் மூலம் படியெடுத்தல் காரணிகளைக் காட்டிலும் மரபணு வெளிப்பாட்டின் செயல்பாட்டில் பிற்பகுதியில் இந்த ஒழுங்குமுறை ஏற்படுவதை நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் கவனித்தனர்.

விவரங்களை அறிய:

உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2024 – சொல்வனம் | இதழ் 327 | 22 செப் 2024 (solvanam.com)

தி.மு.க.வும் லவ்வர் திரைப்படமும்

”லவ்வர்” திரைப்படத்தைக் குறித்து பக்கம் பக்கமாக நண்பர்கள் எழுதி இருக்கிறார்கள்.

பட்டியல் கொஞ்சம் பெரிய பட்டியல்: சுரேஷ் கண்ணன் மட்டும் ஐந்தாறு தடவை; அபிலாஷ் இரண்டு, மூன்று முறை; அரவிந்த் வடசேரி; ச.ந. கண்ணன்; ஹரன் பிரசன்னா கொஞ்சம் காண்டாகி இருக்கிறார்; சுகுணா திவாகர்; தாமிரா ஆதி; அய்யனார் விஸ்வநாத்; விஷ்வக்சேனன்; பிரபு தர்மராஜ்; தமிழினி கோகுல் ப்ரசாத்; பக்கம் பக்கமாக எழுதித் தள்ளும் யமுனா இராஜேந்திரன் (நாலந்து வரிகள்தான்); சௌம்யா ராகவன்; தனுஜா ஜெயராமன்; ப்ரீதம் பீதாம்பரம்; தமிழ்ப்பிரபா; சிவகுமார் வெங்கடாசலம்

இவர்களின் விரிவான பார்வையைத் தாண்டி என்ன புதியதாய் எழுதி விட இயலும்?

முன்னெல்லாம் விகடன் மதிப்பெண் போட்டால் சரியாக இருக்கும் என்பார்கள்.
இப்பொழுது வெ. சுரேஷோ ஹரன் பிரசன்னாவோ சுரேஷ் கண்னனோ சொன்னால் சரியாக இருக்கும் எனலாம்.

லவ்வர் நல்ல படம். தமிழில் இந்த மாதிரி தரமான சம்பவங்கள் எப்பொழுதாவது மட்டுமே நிகழும். வசனம், கதாபார்த்திரம், இடம், சூழல், என எல்லாம் களை கட்டும் படம்.

எல்லா பிம்பங்களையும் இரு வேறு பார்வையால் உடைக்கும் ஆக்கம்:
1. பெண்கள் பின்னாடி போகும் ஆண் என்றால் அந்தக் காரணம் மட்டுமே.
2. கல்லானாலும் காதலன்; புல்லானாலும் புருஷன் என்பது ஆணுக்கும் பொருந்தும்.
3. கல்லூரி காலத்தில் ‘மின்னலே’ என ‘அலைபாயுதே’ மணம் புரிந்து ஐந்தாண்டுகள் ஆனால் என்ன நடக்கும்?
4. தம் அடித்தால் கெத்தாக இருக்கும்; ஆனால், ஜம்மென்று மலையேறுவது எல்லாம் நாக்கு தள்ளும்.
5. 96 மாதிரி கல்லூரி மீள் சந்திப்பிற்கு வருவோருக்கு எல்லாம் ஒரே குறிக்கோள்: ‘நீ நல்ல, பெரிய ஆளாயிட்டியா? உன்ன விட எனக்கு சம்பளம் ஜாஸ்தியா?’
6. அர்ஜுன் ரெட்டி, அனிமல், வரிசையில் படம் எடுத்தால் பெண்களும் ரசிப்பார்கள்

7. படமே ஒரு பெரிய குறியீடு:

  • அ) மணிகண்டன் – திராவிடக் கட்சிகள்
  • ஆ) கௌரி ப்ரியா – தமிழக மக்கள் / வாக்காளர்கள்
  • இ) சாஃப்ட்வேர் நிறுவனத்தில் அவளுடைய மேலாளராக (அல்லது டீம் லீடர்) – அண்ணாமலை
  • ஈ) அலுவலகக் குழு – பா.ஜ.க.
  • உ) ‘அம்மா’ கீதா கைலாசம் – சசிகலா (புருஷனும் சரியில்லை; பையனும் ஆதரவில்லை)
  • ஊ) ’அப்பா’ சரவணன் – இராகுல் காந்தி (எல்லோருக்கும் சம பங்கில் லட்சங்களைப் பிரித்துக் கொடுக்கிறார்)

இந்த பின் நவீனத்துவ புரிதலுடன் அச்சுறுத்தல், பயம், ஆசை, சொத்து, உல்லாசம் எல்லாவற்றையும் இன்னொரு தடவை பாருங்கள்!

புனைவுப் புதைவும் அகவெழுச்சி ஆக்கங்களும்

சிறுகதைக் களஞ்சியம் ஆக சொல்வனம் மாறிக் கொண்டிருக்கிறதோ என்னும் பயம் உங்களுக்கு வந்திருக்கும்.

வருகிற எல்லா புனைவுகளையும், பொறுமையாகப் படித்து, ஒவ்வொன்றுக்கும் கருத்தும், எதற்காக மறுதலிக்கிறோம், எப்படி தேர்ந்தெடுப்பில் வைக்கிறோம் என்று ஒவ்வொரு நாளும் (பதினைந்து நாளுக்கு ஒரு முறைதான் என்றாலும்… தினமும் கொஞ்சம் கொஞ்சமாக வாசித்தால் மட்டுமே வீட்டுப்பாடத்தின் பளு) குறையும், நிறையும் சொல்லும் அனைத்து பதிப்பாசிரியர்களுக்கும் நன்றி.

முக்கியமாக லண்டன் சிவா.

https://solvanam.com/category/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-318/

சரி… சுய புராணம் போதும்.

இந்த 318ஆம் இதழைப் பார்த்தால்
ஏழு கதைகள்
ஏழு மொழியாக்கங்கள்

மொழிபெயர்ப்புகள் எல்லாவற்றையும் கடகடவென்று ஓட்டியதில்:
1. நம்பி – சுய முன்னேற்ற கட்டுரையைத் தந்திருக்கிறார். அமெரிக்காவில் உழைத்துத் தள்ளுவோருக்கான ஊக்க விட்டமின்

2. மயக்கமா… கலக்கமா… என்பது போல் டொடரொண்டோ வெங்கட் ஆக்கம் – இன்னும் ஆழமாக வாசிக்க வேண்டும். ஓவியம், மதம், புத்தம் என்று காக்டெயில் போட்டிருக்கிறார்.

3. ரேமண்ட் வில்லியம்ஸ் – நம்பிக்கைக்கான ஆதாரங்கள் : இப்பொழுது உங்களுக்கு இந்த இதழ் தினுசாக மன ஊக்கத்திற்க்காக, உள் உற்சாகத்திற்காக உருவானதோ என்னும் சந்தேகம் வர வேண்டும்.

4. நாம் அனைவரும் அர்ஸுலா லெ க்வினை அதிகம் படிக்க வேண்டும் – விபி வெங்கட் பிரசாத்தின் தமிழாக்கம். லெ குவின் எழுதிய ‘Sea Road’ போன்ற அதிகம கவனம் பெறாத ஆக்கங்களை அடுத்துக் கையில் எடுக்க வேண்டும். இது தெரிந்த விஷயங்களை அர்சுலா மூலமாகத் தொட்டுச் செல்கிறது.

5. எல்லா நேரத்திலும் அதிகபட்ச முயற்சியைக் கொடுங்கள் – பால் ஆஸ்டர் : நியு யார்க் நகரமும் நகரத்தின் எழுத்தாளர்களும் நியு யார்க்கை சுற்றி நடக்கும் எந்தக் கதையும் திரைப்படமும் எனக்கு ரசிக்கும். பால் ஆஸ்டர் இதெல்லாம் ஒருங்கேக் கொடுத்தவர். கூடவே ஃப்ரெஞ்சு வாசிப்பு + வளர்ப்பு வேறு உண்டு.

கூடவே…
யூதர்களைப் பற்றி, மார்கெரித் யூர்செனார் என்ன சொல்லியிருக்கிறார்?

இவ்வளவு சொல்லிவிட்டு அந்த ஏழு கதைகளைப் பற்றி ஒன்றுமே சொல்லாவிட்டால்…
நவீன உணவுமுறையில் பாரம்பரிய சோற்றை விரும்பும் தற்கால ஆண்களைச் சாடும் ’அறிவுப்புருசன் ‘ வாசித்தேன்.

சிறுகதை என்றால்
அ) முடிவுக்கு அருகில் துவங்க வேண்டும்
ஆ) சம்பவங்கள் நிறையவும் தாவல்கள் குறைவாகவும் இருக்க வேண்டும்
இ) போதனை வேண்டாம்; புரிதல் கொடுக்க வேண்டும்.

இது எதுவுமே அந்தக் கதையில் இல்லை. தமிழில் ஒரு பக்கம் காமம் + சுயம் குறித்து எழுதி அலுக்க வைக்கிறார்கள். இன்னொரு பக்கம் எண்பதுகளில் இருந்தே மீளாமல் புரளுகிறார்கள்.

நன்றாக எழுதுபவர்கள் எல்லாம் சினிமாவில் வாசம் செய்கிறார்களோ!?

சொல்வனம் #312

புதிய சொல்வனம் இதழில் பல முக்கிய ஆக்கங்கள் இருக்கின்றன. முகப்புக் கட்டுரையை விட்டுவிடலாம். எழுதியவரும் எழுதப்பட்டவரும் சொல்வனம் ஆசிரியர் குழுவில் தொடர்ந்து காத்திரமாகப் பங்களிப்பவர்கள். பத்து சிறுகதைகள். ஒவ்வொன்றையும் தனித்தனியாக பின்னொரு ரத சப்தமி அன்று அறிமுகம் செய்யலாம். ஐந்தாறு தொடர்கள்; இரண்டு வாசகர் கடிதங்கள் போன்றவற்றையும் ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என எங்கேனும் ஏற்கனவே எழுதியிருப்பேன்.

312ஆம் சொ.வ. இதழில் என்னைக் கவர்ந்தவை:
1. செமிகோலன் எழுதிய கவிப்பித்தனின் சாவடி தொகுப்பிற்கான எண்ணங்கள்
2. வெங்கட்ரமணன் எழுதிய கிணற்றிலிருந்து வெளிவரும் உண்மை

முதல் பதிவு நேர்மையாக சக காலப் படைப்பாளியின் ஆக்கங்களை அணுகுகிறது. ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் பத்து, பதினைந்து புதிய எழுத்தாளர்களின் புத்தம்புதிய நாவல்களையும் தொகுப்புகளையும் வாங்கினாலும், எவரைக் குறித்தும் பதிவு செய்வதில்லை. அந்தக் குறையை அரைப்புள்ளி நீக்குகிறார். அதற்காக “வாழ்க!” (“தொடர்க”வும் கூடவே சொல்லி வைக்கிறேன்).

கனடா வெங்கட் எழுதிய கட்டுரையை அலுவலில் திறந்து விடாதீர்கள். அக்கம்பக்கம் பார்த்துப் படியுங்கள். (சரோஜாதேவி புத்தகம் என்று ராம்பிரசாத் எழுதியதைப் பொதுவிடங்களில் பலர் பார்க்க புரட்டுவதில் எந்த ஆபத்தும் இல்லை). க.வெ. (இவர் டொரொண்டோ பக்கம் இருப்பதால் என்னைப் போன்றோரால் டொரொண்டொ வெங்கட் என்றும் அழைக்கப்படுகிறார்) தத்துவத்தில் துவங்கி, ஓவியத்திற்கு பாய்ந்து கர்ண பரம்பரைக் கதைகளைச் சொல்லி சிறுவாணியாகப் பாய்ந்தோடுகிறது.

உண்மையாக ஓவியத்தைப் பார்த்தால் இளமையாக இருக்கிறது. இன்றைய டிக்டாக் காலத்தில் போலி முகத்தைப் பொருத்தி உலா வருவது சகஜம். அந்தக் காலத்தில் செயற்கை நுண்ணறிவு இல்லாமலே சொந்தமாக வேஷம் போட்ட பொய்யை எல்லோரும் தீட்டிக் கொண்டிருக்க, உண்மையை படம் வரைந்தவரின் கதையைப் படியுங்கள்.