Drones

2008ன் ஜனாதிபதி தேர்தலில் நின்ற ஒபாமா நிறைய வாக்குறுதிகள் கொடுத்தார். அவற்றில் ஒன்றை செவ்வனே நிறைவேற்றி இருக்கிறார். பாகிஸ்தானிலும் இன்ன பிற தேசங்களிலும் பதுங்கியிருக்கும் அல் கொய்தா தீவிரவாதிகளை டிரோன் கொண்டு குறி வைத்து தாக்கி அழிப்பேன் என்றார். ’இளம் அமெரிக்க உயிர்களை இழக்கக்கூடிய ஆபத்து நிறைந்த காலாட்படை அனுப்ப மாட்டேன். கடுமையானப் பொருட்செலவில் அதிவேக விமானங்களை அனுப்ப மாட்டேன். அதே சமயம் தீவிரவாதிகள், நம்மை தாக்கி அப்பாவி உயிர்களை கொல்வதையும் தடுப்பேன். அதற்கு டிரோன் உபயோகிப்பேன்.’ என்றார்.

அதை எப்படி தொழில்நுட்பம் கொண்டு நிறைவேற்றினார் என்பதைப் பார்ப்போம்.

சொல்வனம் இதழ் 59ன் மகரந்தத்தில் இந்தக் குறிப்பு இடம் பெற்றிருக்கிறது:

கொல்லுவதை மட்டும் மேன்மேலும் கூர்மையாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் கொலையாளிகள் மறைந்து இருந்து கொல்லும் ராட்சத யுத்தம் மேன்மேலும் பெருகி வருகிறது. மறைந்து கொல்வதை விமான குண்டு வீச்சு, ராக்கெட் குண்டு வீச்சு, பன்னாடு தாண்டித் தாக்கும் மிஸைல்கள்-இப்படிப் படிப்படியாக தூரத்திலிருந்தும், உயரத்திலிருந்தும் தாக்குவதை முனைந்து வளர்க்கிறார்கள் மேலையர். ஒரு காரணம், மிக அடிப்படையானது. இதை எத்தனை பேர் யோசித்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. மேற்கில் குழந்தைகள் பிறப்பது மிகவும் குறைந்து விட்டது. போருக்குப் போய்ச் சாக இளைஞர்கள் முன்னளவு தயாராக இல்லை, அத்தனை எண்ணிக்கையிலும் அவர்கள் இல்லை. முதியோர்கள் கூட்டம் பெருத்து வருகிறது. உலக வளங்களில் பெரும்பகுதியை இன்னமும் கபளீகரம் செய்து வாழும் மேற்குக்குத் தம் வாழ்விலும் வசதி குறையக் கூடாது, தம் நிலங்களில் இதர நிலப்பகுதிகளிலிருந்து மனிதர்கள் உள்ளே நுழையக் கூடாது. அதே நேரம் பிற நிலப்பகுதிகளில் கிட்டும் கனிமங்களும் எரிபொருட்களும், தொழிலுற்பத்திப் பொருட்களும் தம் நாடுகளுக்கு மலிவு விலையில் பாய்ந்த வண்ணம் இருக்க வேண்டும். இப்படிப் புலி வாலைப் பிடித்த கதை அவர்களுடையது.

எனவே போர்களில் ஆட்களை இழக்காது ஆயுதங்களால் மட்டும் தாக்க மேன்மேலும் திட்டமிட்டு சாதிக்கிறார்கள். கொல்லப்படும் மனிதரை அருகில் பார்த்தால், தொலைக்காட்சிகளில் ஊறி வளர்ந்து எதையும் உளநிலைப் பார்வையிலேயே பார்த்துப் பழக்கமான முதலியப் பண்பாட்டு மனிதர்களுக்கு மிக்க மன உளைச்சல் ஏற்படுகிறதாம். ஆனால் அதனால் கொல்வதை விடுவார்களா என்றால் அதெப்படி முடியும்? அது பண்பாட்டில் ஊறிப் போய் விட்டது. அதனால் நேரில் பார்க்காமல் பல ஆயிரம் அடி உயரத்திலிருந்து கொல்வதை ஒரு பெரும் தொழில் நுட்பமாக வளர்க்கிறார்கள். ட்ரோன் என்று அழைக்கப்படும் ஆளில்லாப் போர் விமானங்கள் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவை மிக்க பயனுள்ளவையாக இன்று ஆகி விட்டன என்றாலும், அதையும் விட அணுக்கமாகத் தாகக வேண்டும், ஆனால் சிறிதும் குறி தவறாமல் தாக்க வேண்டும். எப்படி? ராட்சதப் போராளிகளுக்குக் கற்பனையா பஞ்சம். இந்திரஜித்தர்களாயிற்றே. எனவே இந்தக் கருவி தயாராகிறது. இது ட்ரோன்கள் குஞ்சு பொறித்தால் எப்படி இருக்கும் அது போல, முட்டையிட்டு முட்டைகளைத் தரையெங்கும் உருள விடுவது போல. உருண்டு வரும் சாவு இது. படியுங்கள், நேற்றைய அறிவியல் கதைகளில் வந்த கற்பனை உத்திகள் இன்று நிஜமாகின்றன என்பது புரியும்.

அமெரிக்காவில் இருந்து கொண்டு கூடுவாஞ்சேரியில் பறக்கும் விமானத்தை இயக்கினால், அந்த விமானத்தை டிரோன் எனச் சொல்லலாம். துவக்க காலத்தில் பெரும்பாலும் வேவு பார்ப்பதற்கு ட்ரோன்கள் உதவின. கொஞ்ச நாள் கழித்து தொலைதூர கண்காணிப்புக்கு டிரோன்கள் பயன்படுத்தப்பட்டன. இப்பொழுது, குறி பார்த்து அடிக்கவும் டிரோன்கள் செயல்படுகின்றன. தீவிரவாதிகளின் வீட்டை முகவரி தேடி, அவர்கள் இருக்கும் இருப்பிடத்திற்கு வண்டியோட்டியோ, பொடி நடையாகவோ செல்லும் காலத்திற்குள், தீவிரவாதிகள் வீடு மாற்றி விடுகிறார்கள். அப்புறம், அந்த வீட்டின் முகவரியைத் தேடும் படலம், என கண்ணாமூச்சி விளையாடாமல், இருந்த இடந்த்திலிருந்து ரிமோட் பொத்தானை அமிழ்த்தி, தொலைக்காட்சியை இயக்குவது போல், தொலைக்கட்டுப்பாட்டில் தீவிரவாதியைப் போட்டுத் தள்ள டிரோன்கள் இயங்குகின்றன.

உலக வர்த்தக மையம் தகர்க்கப் பட்டபிறகு இதன் உபயோகம் அதிகரித்தது. செய்திகளில் பரவலாக அடிபட்ட மட்டில் – யேமன், சொமாலியா, ஆஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் ஆளில்லா விமானங்கள் மூலமாக தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. அமெரிக்க வான்படையில் 2,300த்து சொச்சம் விண்கலங்கள் இருக்கின்றன. படைவீரர் ஓட்டிச் செல்லும் விமானங்க்ளில் இருக்கும் பல விஷயங்கள் டிரோன்களிலும் இருக்கின்றன. தானியங்கியாகப் பறக்கும் வசதி உண்டு; எந்த இடத்தில் இருக்கிறோம், எங்கு செல்ல வேண்டும் என்பதை அறியும் புவிநிலை காட்டி (GPS) உண்டு; கொடூரமான ஆயுதங்களும் உண்டு; ஆனால், விமான ஓட்டி மட்டும் கிடையாது. எனவே, இவற்றை ‘ஆளில்லா விமான வாகனங்கள்’ (unmanned aerial vehicles) அல்லது ’தொலை ஓட்டுந‌ர் விமானங்கள்’ (remotely piloted aircraft) என அழைக்கிறோம்.

ஆங்கிலத்தில் டிரோன் என்றால் ஆண் தேனீ. இவற்றால் தேன் சேமிப்பில் பங்குபெற இயலாது. பிறரை கொட்ட இயலாது. சோம்பேறி. ஒவ்வொரு தேனீக்கூடாக சென்று, அங்கு, இனப்பெருக்கம் செய்வது மட்டுமே, இதன் ஒரே வேலை. இந்த அப்பாவி ஆண் தேனீயான ’ட்ரோன்’, எப்படி ஆபத்தான தானியங்கி விமனத்திற்கு பெயர் ஆனது?

1935ல் இங்கிலாந்தில் தொலைதூரத்தில் தானியங்கியாகப் பறக்கும் விமானத்தை இன்னொரு விமானம் இயக்கும். அதற்கு டி.எச். 82பி இராணித் தேனீ (DH 82B Queen Bee) எனப் பெயரிட்டார்கள். இராணி இல்லாமல் அந்த மற்றொரு தேனீ இயங்காது என்பதால், அந்த பலிகடா விமானத்திற்கு ‘டிரோன்’ எனப் பெயர் சூட்டினார்கள். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனிக்கு எதிராகப் பயிற்சிக்கு உபயோகித்த இலக்குகளை டிரோன் என அழைக்கத் துவங்குகிறார்கள். அன்று இலக்காக பயன்பட்ட டிரோன்கள், இன்று தங்கள் இலக்குகளை பலி கொள்கின்றன.

வியட்நாம் போரின் போது மட்டும் ஆறாயிரத்து சொச்சம் விமானிகளை அமெரிக்கா இழந்தது. அது தவிர பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்களை இழக்கிறது. விமானங்கள் தரைக்கு அருகே பறப்பது முதல் காரணம். விமானிகளால் டக்கென்று தப்பித்து ஓட முடியாத சரேல் திருப்பங்கள் செய்ய இயலாத விமானங்கள் இரண்டாம் காரணம். விமானியின் திறமைக்கேற்பவே விமானம் இயங்கும்; அந்த சாமர்த்தியம் இல்லாத விமானிகள் மூன்றாம் காரணம். இந்தப் பிழைகளை ஆளில்லா விமானங்கள் போக்குகின்றன.

ஆளில்லா டிரோன்களில் உயிர்ச்சேதம் கிடையவே கிடையாது. அதாவது, தாக்குபவர், தாக்கப்படுவார் என்பதற்கு இடமே கிடையாது. தரைக்கு ஐந்து மைல் மேலே நின்று கொண்டிருக்கும் டிரோன்களை கண்டுகொள்வது வெகு துர்லபம். அதே சமயம் ஒரே இடத்தில் ஸ்திரமாக இருபத்து நான்கு மணி நேரம் கூட நிற்கும் திறமை கொண்டது. மனிதரைப் போல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும், காலைக்கடன் கழிக்க வேண்டும் போன்ற உடல் உபாதைகளும் பசியும் கிடையாது. ஒரே வேலையையே, திரும்பத் திரும்பச் செய்யச் சொன்னால், ‘போரடிக்கிறது’ என அலுத்துக் கொள்ளாமல் இயந்திரகதியில் மீண்டும் மீண்டும் துல்லியமாக கண்காணிக்கும்; கால் கடுக்க விழி இமைக்காமல் தன் பிடியில் சிக்கியவர் எங்கெல்லாம் செல்கிறாரோ, அங்கெல்லாம் பின் தொடர்ந்து அவரும் அறியாவண்ணம் காவல் காக்கும்.

விமானி இயக்கும் சண்டை ஜெட்களை இரண்டு மணி நேரத்திற்கு மேல் இயக்க இயலாது. போனோமா.. வந்தோமா என்று இருக்க வேண்டும். கடைசியாக, டிரோனிற்கு ஆகும் செலவும் கம்மி. விமானியுள்ள போர்விமானத்தில் ஒரு கிலோமீட்டர் செல்வதற்கு ஆகும் செலவில், டிரோன் விமானங்கள் முன்னூறு கிலோமீட்டர் பறந்துவிடும். அவ்வளவு இலேசானது. காரைப் போல் எடை கொண்டது. சோப்புத் துண்டு போல் போர் விமானம் கனக்கும். டிரோன்களோ நுரை போல் பறக்கும். விமானியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இருக்கும் இராட்சத உபகரணங்களோ, பாதுகாப்பு அம்சங்களோ, துரத்துவோரிடமிருந்துத் தப்பித்துச் செல்ல அதிவேகமாக பறக்கவேண்டும் என்னும் நிர்ப்பந்தமோ இந்த உலோகப்பறவையிடம் இல்லை. எதிராளி தாக்க வந்தால் தற்கொலப் படை – மௌனமாக தன்னுடைய விஷக்குப்பியை அருந்துவது போல், தன்னைத் தானே வெடித்துக் கொள்ளக் கூட முடியும்.

ஏன் இதெல்லாம் திடீரென்று முக்கியமாகிறது?

இராக்கில் இப்பொழுது அமெரிக்கப் படை இல்லை. ஆப்கானிஸ்தானை விட்டும் கூடிய சீக்கிரமே அமெரிக்கா மூட்டை கட்டப் போகிறது. இன்றைய நிலையில் பாகிஸ்தானில் வசிக்கும் பயங்கரவாதிகளைத் தாக்க ஆப்கானிஸ்தானில் இருந்து டிரோன்களை அனுப்ப முடிகிறது. ஆனால், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வாசஸ்தலம் இல்லாவிட்டால். உள்ளூர் ஃப்ளோரிடாவில் இருந்தும், நெவாடாவில் இருந்தும் டிரோன்களை அனுப்பலாம். மணிக்கு ஐநூறு மைல் வேகத்தில் ஐம்பதாயிரம் அடியில் பறக்கும் டிரோன்களைக் கொண்டு சொமாலியா அல்க்வெய்தாவும் பாகிஸ்தான் தாலிபான் தலைவர்களும் என்ன திட்டமிடுகிறார்கள் என்பதை அறியலாம். தேவைப்பட்டல், அவரின் தலை மட்டுமே சகஸ்ரபத்தலாக வெடிக்குமாறு ஆணையும் பிறப்பிக்கலாம்.

இப்போதைக்கு இந்த உளவாளி டிரோன்களை இயக்கும் பொறுப்பு முழுக்க முழுக்க சி.ஐ.ஏ. (மத்திய புலனாய்வுத் துறையிடம்) இருக்கிறது. அதாவது, உளவு பார்ப்பது உளவுத்துறையின் வேலை. எனவே, உளவு பார்க்க டிரோன்கள் அனுப்புவது உளவுத்துறையின் கடமை. ஆனால், இப்பொழுதோ, உளவு என்பதைத் தாண்டி, தாக்குதல் என்னும் பயனிற்காக டிரோன்களை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம். இதை இராணுவத்திற்கு மாற்றிக் கொடுக்குமாறு ஒபாமா விண்ணப்பித்திருக்கிறார். இதை இரகசியமாகச் செயல்படும் சிஐஏ-வில் இருந்து ஓரளவு வெளிப்படையாக இயங்கும் பெண்டகனுக்கு மாற்றிவிட்டால், ஒபாமா மேல் பாயும் ஊடகங்களும் இடதுசாரி கருத்துடைமையாளர்களும் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் மீது தங்கள் விமர்சனத்தைச் செலுத்துவார்கள்.

ஏன் இராணுவத்திற்கு கை மாற வேண்டும்?

மூன்றடி நீளமே இருக்கிறது ‘ரேவன்’ (Raven). இராணுவ வீரரின் தோள்பையில் அடக்கமாக உட்கார்ந்திருக்கும். எப்பொழுது தேவையோ, அப்பொழுது பையில் இருந்து வெளியில் எடுத்து, கை கால் நீட்டி. முழு உருவமும் கொடுத்து, பேப்பர் ராக்கெட் விடுவது போல், அம்பைப் போல் கையால் வீச வேண்டும். அதன் பிறகு, பொம்மை ஹெலிகாப்டர் ஓட்டுவது போல், அதை எங்கு வேண்டுமானாலும் பறக்க வைக்கலாம். பாகிஸ்தான் இராணுவத்திடம் கூட நூற்றுக்கணக்கான இந்த ரேவன் டிரோன்கள் இருக்கின்றன.

ஒசாமா பின் லாடனைப் பிடிக்க சி.ஐ.ஏ. செண்டினல் (sentinel) டிரோன் விமானத்தை உபயோகித்தது. ஆனால், அதே போன்ற பழைய பஞ்சாங்க டிரோன்களை சீனாவிற்கும் ருஷியாவிற்கும் வேவு பார்க்கவோ, வெடி வெடிக்கவோ அனுப்பித்தால் பாதி வழியிலேயே நசுக்கி விடுவார்கள். அதற்கு அடுத்த தலைமுறை கொலைகார டிரோன்கள் தயாரிக்க வேண்டும். நீர்மூழ்கிக் கப்பல்களிலிருந்து, தானியங்கியாக வெளிவந்து, சமயம் பார்த்து விண்ணில் பறந்து, அயல்நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கேயே யார் கண்ணிற்கும் எந்த ரேடாருக்கும் தெரியாமல் பறக்கும் டிரோன்கள் தேவை. அதற்கு இராணுவத்தின் பணபலமும் தேவை.

இங்கிலாந்தில் இந்த மாதிரி புத்தம்புதிய டிரோன்களை டரானிஸ் (Taranis) என பறக்க விடுகிறார்கள். பிரான்சும் நியுரான் (Neuron) தயாரித்திருக்கிறது. இரானும் சவூதி அரேபியாவும் வைத்திருக்கிறார்கள். அமெரிக்காவில் நான்கு நிறுவனங்கள் விதவிதமான பெயர்களில் கள்ளமாக தாக்கும் டிரோன்களைத் தயாரிக்கின்றன. நார்த்ரப் (Northrop) டிரோன்களுக்கு எக்ஸ் 47பி (X-47B) என மறைபெயர் சூட்டியிருக்கிறது. லாக்ஹீட் மார்டின் (Lockheed Martin) ஆர்.கியூ 170 (RQ-170); ஜெனரல் அடாமிக்ஸ், போயிங் என எல்லோரும் எம்.க்யூ 9 (MQ-9 Reaper) ரீப்பர் வடிவமைப்பில் மும்முரமாக இருக்கிறார்கள்.

உங்கள் செல்பேசியில் இருக்கும் புகைப்படக் கருவிகள்தான் இங்கேயும் பயன்படுத்தப்படுகிறது. செல்பேசியில் மிஞ்சி மிஞ்சிப் போனால் இரண்டு கேமிராக்கள் இருக்கும். இந்த புதிய வகை டிரோன்களில் அது போல் ஐநூறு கேமிராக்கள் அதன் உடலெங்கும் பதிக்கப்பட்டிருக்கிறது. இதனால், தன் அடியே நடக்கும் அனைத்து விஷயங்களையும் வெகு துல்லியமாக கண்காணிக்க இயலுகிறது. அதே சமயம், பருந்துப் பார்வையாக, மொத்த விஷயங்களையும் பார்க்க முடிகிறது. அதாவது கூகுள் வரைபடத்தில், கொஞ்சம் கொஞ்சமாக ஆழமாக பெரிதாக்கிக் கொண்டே போய், உங்கள் வீட்டினுள் நுழைவதைப் போல் ஐம்பதாயிரம் அடியில் இருந்து இந்த டிரோன்கள் உங்களை இருபத்து நான்கு மணி நேரமும் ரோந்து சுற்றலாம். அப்படியே ஒட்டும் கேட்கலாம். எந்த வீடு எப்பொழுது தேவையோ, அந்த வீட்டின் செயல்பாடுகளை மட்டும் தேவைக்கேற்ப அகலமாக பிக்சல் பிக்சலாக விருத்தியாக்கி நோக்கலாம். அங்கே நடக்கும் உரையாடலை பதிவு செய்ததைப் போட்டு தானியங்கியாக மொழிபெயர்க்கலாம்.

இந்த வகை டிரோன்களிடம் இப்போதைக்கு எதிர்ப்பு சக்தி என்பது ரொம்பவேக் குறைவு. காலுறை கிழிந்தால் தூக்கிப் போட்டுவிட்டு, புதியது மாற்றிக் கொள்வது போல், அவ்வப்போது ஒரு டிரோன் பழுதாகிவிட்டாலோ, எதிரியால் சுடப்பட்டாலோ, அதை தாரை வார்த்துவிட்டு, புதிய டிரோனை அதே பகுதிக்கு ஏவுவது வழக்கம். ஆனால், அதற்கு பதில் எதிராளியின் விமானத்தை சுதந்திரமாகத் தாக்குவது, தற்காப்பாக ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துவது என ரோபோ போல் தனக்குத் தானே முடிவெடுக்கும் திறனும் எடுத்த முடிவை செயலாக்கும் வசதியும் அமையப் பெற்றால், இவ்வகை டிரோன்களை அயல்நாட்டால் அழிக்க இயலாது.

முதலாம் உலகப் போரின் போது விமானங்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டதோ அவ்வாறுதான் இப்போது டிரோன்கள் இளம்பிராயத்தில் இருக்கின்றன. இனிமேல்தான் முழுமூச்சில் என்னவெல்லாம் பிரச்சினைகள் வரும், எப்படியெல்லாம் உபயோகிக்கலாம், எங்ஙனம் கட்டுப்பாடுகள் வைக்கலாம், எங்கே பறக்கலாம், எவர் கையில் கொடுக்கக் கூடாது போன்ற சட்டதிட்டங்களையும் சமூக வழக்கங்களையும் தயாரிக்க வேண்டும்.

அவற்றை பிறகு பார்ப்போம்.

புருஷ லட்சணம்வேறு; பொறி லட்சணம் வேறு என்று வித்தியாசப்படுத்தாமல், இயந்திரங்களுக்கும் சிந்தித்து முடிவெடுக்கும் திறனும் பிறரின் எண்ணங்களை உணரும் குணநலனும் அமையப்பெறுவதை அறி-புனை கதைகளில் மட்டுமே படித்து வந்த காலம் போயே போயாச்சு. இன்றைய ரோபோக்கள், தரைப் பெருக்குவது, நீச்சல்குளத்தை சுத்தம் செய்வது போன்ற ஒரேயொரு வேலையை மட்டும் செய்வதற்காக தயாரிக்கப்படுவதில்லை.

உதாரணத்திற்கு வீட்டிற்கு வீடு வந்து, கதவு தட்டி வாடிக்கையாளர்களின் பொருள்களை விநியோகிக்கும் அமேசானின் தூரயியங்கியை (டிரோன்) எடுத்துக் கொள்வோம். அதைப் பாதி வழியில் திருடர்கள் வழி மறிக்கிறார்கள். அந்த தூரயியங்கியிடமிருந்து திருடுகிறார்கள். இதை அந்தத் தூரயியங்கியே தடுத்தாட் கொள்ளும் வசதியைத் தரலாமா? இன்னொருவருக்கு சொந்தமான பொருளைத் திருடு போகாமல் பாதுகாக்கலாமா? யாராவது தாக்கினால், திருப்பி அவர்களையே அடிக்கும் சக்தியை தூரயியங்கிகளுக்கு வழங்கலாமா?

தூரயியங்கிகளுக்கு இந்த தற்காப்பு சக்தி வழங்காவிட்டால், அவற்றை நடுவில் யாராவது அபகரித்து தவறான காரியங்களுக்குப் பயன்படுத்தும் ஆபத்து இருக்கிறது. ஆனால், அவற்றிற்கான சட்டதிட்டங்கள் இன்னும் உருவாகவில்லை. இப்போதைக்கு தூரயியங்கியை ஆளில்லா காடுகளில் மட்டுமே உபயோகிக்கிறார்கள். ஆர்க்டிக் முனையில் பனிப்பாறைகள் எவ்வாறு உருகுகின்றன என்பதை தூரயியங்கி படம்பிடித்து நமக்கு அனுப்புகிறது. துருவங்களில் தெரியும் புவிவெப்பமயமாதலை உடனடியாக அறிய முடிகிறது. ஆப்பிரிக்க, அமேசான் காடுகளில் அருகிவரும் உயிரினங்களை கண்காணிக்க தூரயியங்கியை பயன்படுத்துகிறார்கள்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு மும்பையின் ஃப்ரான்செஸ்கோ பீட்சா கடை தூரயியங்கி மூலம் பீட்சாவை தந்திருக்கிறது. டி.சி.எஸ்.ஸின் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் துப்பு துலக்க தமிழகக் காவல்துறை தூரயியங்கியைப் பயன்படுத்தியது. உரிமம் பெறாமல் கருங்கற்களை உடைப்பதையும் மணற்கொள்ளையையும் கண்காணிக்க தூரயியங்கியை மதுரை காவல்துறை பயன்படுத்துகிறது. இமானுவேல் சேகரனின் நினைவாஞ்சலி ஊர்வலத்தை தள்ளி இருந்து பதிவு செய்யவும், தேவர் குரு பூஜையில் சட்டம் ஒழுங்கைப் பேணவும் தொண்ணூறு இலட்ச ரூபாய் செலவில் மூன்று தூரயியங்கிகள் உதவியிருக்கின்றன. ராஜ் தாக்கரே ஊர்வலங்களில் தூரயியங்கி கடமையாற்றி இருக்கிறது. 2013ல் மட்டும் 1,467 ஆர்ப்பாட்டங்களிலும், 1,183 தர்ணாக்களிலும், 683 ஊர்வலங்களிலும், இன்ன பிற 6,500 இடங்களிலும் தூரயியங்கிகள் களத்தில் பறந்திருக்கின்றன.

ஆபத்தான வேலைக்குப் போகும் காவல்துறைக்கு தூரயியங்கி துணை போகலாம் என உலகெங்கும் இப்பொழுது முடிவெடுக்க ஆரம்பித்திருக்கின்றனர். பெருந்திரளான கொந்தளிப்படந்த மக்கள் கூட்டத்தின் நடுவே கண்ணீர் புகை போடவும், மாலடோவ் குண்டு வீசுபவனை குறி பார்த்து வீழ்த்தவும் தூரயியங்கி உபயோகமாகிறது. தூரயியங்கி கொண்டு இந்த மாதிரி போராட்டங்களை கண்காணிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவை சட்டத்தின் உதவியோடு காவலர்களுக்கு நெடுங்காலமாக உதவுகிறது. ஆனால், அதே தூரயியங்கியிடம் துப்பாக்கியும் பிளாஸ்டிக் தோட்டாக்களும் கண்ணில் மிளகாய்ப்பொடியை தூவும் வசதியையும் கொடுத்தனுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

தென்னாப்பிரிக்க சுரங்கத் தொழிலாளர் போராட்டங்களை நசுக்க ஸ்கன்க் (Skunk) நிறுவனம் இவற்றைத் தயாரிக்கிறது. ஐம்பதாயிரம் அமெரிக்க டாலர்களுக்கு இவை விற்கப்படுகின்றன. நாலாயிரம் துப்பாக்கி ரவைகளையோ மிளகாய்ப்பொடி பொட்டலங்களையோ ஒரே சமயத்தில் வைத்திருக்கும். ஒரு திசை வீதம் நொடிக்கொருமுறை இருபது பொட்டலங்களை குறி பார்த்து ஏவும். எனவே, ஒவ்வொரு நொடியிலும் நாலாபக்கமும் எண்பது குட்டி குண்டுகள் போடலாம். போராட்டக்காரர்களை பல்வேறு வகையினராகப் பிரித்து குறிப்பிடும் வசதியும் இவற்றில் இருக்கிறது. ‘சிவப்பு’ வகையினர் என்றால் கையில் பயங்கரமான ஆயுதங்களை வைத்திருப்பவர்; இவருக்கு துப்பாக்கி ரவை கொண்டு தாக்குதல். ‘நீல’ வகையினர் என்றால் மூர்க்கமாக தாக்குபவர்; இவர்களுக்கு மிளகாய்த்தூள் அபிஷேகம். ‘பச்சை’ வகையினர் என்றால், வேடிக்கை பார்க்கவோ, வலைப்பதியவோ வந்து நடுவில் திருதிருவென முழிப்பவர்; இவர்களை எந்தவித உபத்திரவமும் இல்லாத பிரகாசமான ஒளிவிளக்கு கொண்டு ஸ்தம்பிக்கச் செய்கிறார்கள். இவ்வாறு இலக்கு அறிந்த தாக்குதல்களை ’பாலை ஓநாய்’ (Desert Wolf) கொண்டு நிகழ்த்தலாம். குறி தவறாது. ‘நாங்கள் போராட்டத்தில் ஈடுபடவே இல்லை!’ என கற்பூரம் அடித்து மறுத்தாலும், தான் செய்யும் ஒவ்வொரு தாக்குதலையும் அதற்கு முன்னும் பின்னும் நிகழ்ந்தவற்றையும் விழியமாகப் பதிந்தும் வைத்துக் கொள்கிறது.

இந்த மாதிரி தூரயியங்கி கொண்டு வருமுன் காப்போனாக கிளர்ச்சிகளின் போதும் நிகழும் வன்முறையையும், அதன் பிற்பாடு நிகழும் எண்ணற்ற ஊரடைப்புகளும், பழிவாங்கல்களும், பதற்ற நிலையையும் முளையிலேயேக் கிள்ளலாம். அமைதியானப் போராட்டம் நிகழும்வரை, தூரயியங்கி வெறுமனே கண்காணித்திருக்கும். போராட்டத்தை அசம்பாவிதமாக்க ஒருசிலர் தோன்றினால், அவர்களை மட்டும் நசுக்கும். அதை வைத்து அடுத்த கட்டத்திற்குக் கிளர்ச்சியை கிண்டிவிட நினைப்போருக்கு வீடியோ ருசுவை உடனடியாகப் பகிரங்கமாகப் போட்டுக் காட்டும். உயிர்ச்சேதம் கிடையாது; ஊழல் வராது; வெளிப்படையான செயல்பாடாகவும் இருக்கும். ஆனால், பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் சமாதான உடன்படிக்கையைக் கையெழுத்திடவும் இன்னும் மனிதர்கள்தான் தேவைப்படுகிறார்கள்.

எல்லாவிதமான தூரயியங்கிகளிலும் பலவிதமான ஒளிப்படக் கருவிகள் இருக்கின்றன. சிலவற்றில் ஆயிரக்கணக்கில் உள்ளன. இரவில் படம் பிடிக்க உதவும் அகச்சிவப்பு (infrared) படமிகள் இருக்கும். வெப்பம் சார்ந்து (Thermographic – thermal imaging) இயங்கக் கூடிய படமிகள் இருக்கும். இந்த உணரி (sensor) கீழே இருக்கும் மனிதர்களையோ, இன்ன பிற விஷயங்களையோ துல்லியமாகக் குறிக்க உதவுகின்றன. லேசர் கொண்டு இவர்களை தொடர்ச்சியாக பின் தொடர் முடிகிறது. அந்த லேசர் எங்கே சுட்டுகிறதோ, அந்த இடத்தை ஏவுகணைகள் மூலம் தாக்குகின்றன. இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் வரும் பிரம்மாஸ்திரம், நாகாஸ்திரம் போல் விதவிதமாக செயல்படுகிறது.

இப்போதைக்கு தூரயியங்கி விமானங்களை தானியங்கியாக செயல்பட அமெரிக்க இராணுவம் ஒப்பவில்லை. அதை இயக்க, கண்காணிக்க, இருவர் கொண்ட அணி இயங்குகிறது. கீழே இருக்கும் பயங்கரவாதியை சுடுவதானாலும் சரி; இருபத்து நான்கு மணி நேர கண்காணிப்பு தூரயியங்கி ஆனாலும் சரி; அதை எப்பொழுதுமே மேற்பார்வையிட விமானிகளை வைத்திருக்கிறார்கள். இது கொந்தர்களிடமிருந்து (hackers) விமானத்தை மீட்கவும் உதவுகிறது. ‘இவன் நமது எஜமானன்; இவன் எதிரி’ என்று தூரயியங்கியை சிந்தித்து பிரித்துப் பார்க்க வைப்பதெல்லாம் நிரலியும் அதை இயக்க வைத்திருக்கும் ரகசிய கடவுச் சொற்களும்தான். அவற்றை யாராவது நடுவில் வந்து கொத்திக் கொண்டு போய்விட்டால்?

மூன்றாண்டுகள் முன்பு இந்த மாதிரி வேவு பார்த்த அமெரிக்க தூரயியங்கியை இரானியர்கள் கடத்திச் சென்றுவிட்டார்கள். தூரயியங்கிக்கும் தான் கைப்பற்ற பட்டோம் என்று கண்டுபிடிக்கத் தெரியவில்லை. தன்னுடைய செயல்பாடு, தன்னை இயக்கும் நிரலி, தூரயியங்கியைத் தயாரிக்கும் மூலப்பொருள் என எல்லாவற்றையும் வெகுளியாக சொல்லிவிட்டது. அந்த நிரலியையும் தொழில்நுட்பத்தையும் வைத்தே ஈரான், தன்னுடைய தூரயியங்கி நுட்பத்தை மேன்மேலும் வளர்த்துக் கொண்டது. இப்போது இந்த மாதிரி தூரயியங்கி விமானக் கடத்தல்கள நீக்குவதற்கு இரண்டு உபாயங்களை அமெரிக்கா வைத்திருக்கிறது. எவராவது தூரயியங்கியைக் கைப்பற்றினால், அதை வெடிக்க வைத்துவிடுவது; அல்லது அதனிடம் சேமிக்கப் பெற்ற அத்தனை விஷயங்களையும் அழித்துவிடுவது.

1990கள் வரை இஸ்ரேலிடமிருந்துதான் தூரயியங்கிகளை(http://www.indiandefencereview.com/news/uavs-gaining-currency-with-indian-armed-forces/0/ ) இந்தியா வாங்கி வந்தது. ஆனால், 2000 ஆண்டில் இருந்து டி.ஆர்.டி.ஓ. (Defence Research and Development Organisation – DRDO) வழிகாட்டலில் சொந்தமாக தூரயியங்கியைத் தயாரிக்கத் துவங்கியது. காற்றினூடே செல்ல ஏதுவான வடிவமைப்பு, தொலைவுக் கணிப்பியல், மூலப்பொருள் ஆராய்ச்சி, முன்செலுத்தலில் புதிய வழிமுறை, விமானத்தை இயக்கும் நிரலி, பதிவு செய்தவற்றை இரகசியமாக பாதுகாக்கும் தகவல்மறைப்பியல், உணரிகள், பொறிகள் என ஒவ்வொரு பாகத்திலும் தனித்தன்மையும் தற்கால தொழில்நுட்பத்தையும் கொண்டு புதிய வகை தூரயியங்கியை உருவக்கி இருக்கிறார்கள்.

பெங்களூரூவிற்கு அருகில் இருக்கும் சித்ரதுர்காவில் தூரயியங்கி கட்டுப்பாடு மையம் அமைந்திருக்கிறது. காஷ்மீர், அருணாச்சல் பிரதேசம் போன்ற பிரச்சினைக்குரிய எல்லைப் பிரதேசங்களில் பாகிஸ்தானின் அத்துமீறலையும் சீனாவின் நடவடிக்கைகளையும் கண்காணிக்க இவற்றை இந்தியா உபயோகிக்கிறது. அது தவிர கடற்படையில் மீனவர்களைப் பாதுகாக்கவும் கடத்தல்களை வேவு பார்க்கவும் கேரளா, குஜராத் போன்ற எல்லை மாநிலங்களும் தூரயியங்கியை புழக்கத்தில் வைத்திருக்கின்றன. 2008 சுனாமியின் போது தூரயியங்கி கொண்டு மீட்புப் பணியில் ஈடுபட்டார்கள். மாவோயிச செயல்படுகள் அதிகம் உள்ள பிஹார், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களிலும் சிறிய கிராமங்களையும் மரங்களால் மூடப்பட்ட வனங்களையும் ஊடுருவி உளவுபார்க்க தூரயியங்கியை இந்தியா செயல்படுத்துகிறது.

ஆனால், அடர்ந்த காடுகளிலும் தொடர்ந்து பெருமழை பொழியும் புயல் சமயங்களிலும் இந்தத் தூரயியங்கி பெரிதாக கைகொடுக்கவில்லை. இதற்கெனவே 1,163 கோடி ரூபாய் செலவில் ‘லஷ்யா’ என்னும் தூரயியங்கியை இந்தியா கண்டுபிடித்திருக்கிறது. சூரிய ஒளியில் பறக்கும் தூரயியங்கி மேகங்கள் மூடிய மழைக்கால தூரயியங்கி என பற்பல கண்டுபிடிக்கப்பட்டாலும், இன்னும் தானியங்கியாக கிளம்பி, தான்கியங்கியாக தறை இறங்கும் நுட்பத்தை இந்தியா பெறவில்லை. இந்தியாவில் ஓய்வுபெற்ற அல்லது உடல் ஊனமுற்ற முன்னாள் விமானிகளையே இந்த தூரயியங்கியை செயல்படுத்த வைக்கிறார்கள்.

அமெரிக்கா இதற்கு நேர் எதிர். முன்னாள் விமானிகளுக்கு விமானம் ஓட்டி பழக்கம் என்பதால் அதே எண்ணத்திலேயே இந்த தூரயியங்கியையும் இயக்குகிறார்கள். அது சரிப்படவில்லை. இந்தப் புதிய வகை போர்விமானங்கள் போல் வேகமாக செயல்படுவதில்லை. எதிராளியிடமிருந்து அழித்துக்கொண்டால் போதும். தப்பிக்கவேண்டிய அவசியம் இல்லை. அதாவது வீடியோ விளையாட்டில், உங்கள் குறிக்கோள் என்பது அதிக அளவு மதிப்பெண் எடுப்பது என்பது போல், அதிக நேரம் விமானத்தை கண்காணிக்க வைத்தால் போதுமானது. கணினி விளையாட்டில் எத்தனை முறை உயிரிழந்தோம் என்பது முக்கியமேயல்ல என்பது போல், எவ்வளவு தூரயியங்கி இழந்தோம் என்பது பொருட்டே அல்ல.

இதனால்தான் 1970களிலும் எண்பதுகளிலும் இருபது மணி நேரத்திற்கு ஒரு முறை தூரயியங்கி வெடித்துச் சிதறியது. மில்லியன் டாலர் கணக்கில் செலவழித்தாலும் நம்பகமாக நீடித்துப் பறக்கும் தூரயியங்கிக் கிடைக்கவே இல்லை. ரிமோட் மூலமாக இயக்குதல் – ரேடியோ அலைகள் மூலம் இயக்குதல் என்பது பல பத்தாண்டுகளாக இருக்கிற தொழில் நுட்பம். ட்ரோன் வருவதற்குப் பல பத்தாண்டுகள் முன்பே அண்ட வெளியில் பயணிக்கும் பயனீயர் விண்கலங்களை நாசா இயக்கிக் கொண்டுதான் இருக்கிறது. ஆளில்லாக் கலங்களை இயக்குதல் என்பதும் பல பத்தாண்டுகளாக இருக்கிறது. சிறுவர் விளையாட்டுப் பொருட்களிலும் தானியங்கி விளையாட்டுச் சாமான்களும் சரி, ரிமோட் மூலமாக கட்டுப்படுத்தப் படக்கூடிய சிறு கருவிகளும் இருந்திருக்கின்றன. விமானம், ஹெலிகாப்டர் போன்றன கூட சிறுவர் விளையாட்டுக் கருவிகளாகக் கொஞ்ச வருடங்களாக இருக்கின்றன. அப்படி இருக்கையில் பெரிய அளவு விமானங்களை, ஆளில்லாது தொலைதூரத்திலிருந்து கட்டுப்படுத்தி இயக்கப்படக் கூடிய விமானங்களைத் தயாரிக்க இந்தனை காலம் ஆனது ஏன்?

இங்கேதான் ஆபிரஹாம கரீம் (Abraham Karem) வருகிறார். வெறும் பதினெட்டாயிரம் டாலர் செலவில் ஐயாயிரம் மணி நேரமாகப் பறந்தாலும் வீழாத தூரயியங்கியைக் கண்டுபிடிக்கிறார். அந்த மூல தூரயியங்கியை வைத்துதான் இன்றைய பெரும்பாலான டிரோன்கள் உருவாகின்றன.

கரிம் முதல் காரியமாக விமானத்தின் ஓட்டுங்கருவியையும் இயக்குறுப்புகளையும் பின்னுக்கு தள்ளினார். முன்புறத்தில் இருக்கும் உணரிகளுக்கும் படப்பிடிப்புக் கருவிகளுக்கும் இதனால் எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் விழியங்களைப் பதிய முடிந்தது. அடுத்ததாக விமானத்தின் வால் இறக்கைகளை கீழ்நோக்கி அமைத்தார். சாதாரணமாக மேல்நோக்கியோ, பக்கவாட்டிலோ தூரயியங்கியின் வால் இருக்கும். சிறப்பாக பறப்பதற்கு இந்த வடிவமைப்பு உதவும். ஆனால், தூரயியங்கிக்கோ வேகமாக எழும்புவது என்பது இலட்சியம் அல்லா. கரடுமுரடான பிரதேசங்களில் கூட பாதுகாப்பாக தரையிறங்கி தன்னுடைய இயக்கத்தைத் தொடர்ச்சியாக வைத்திருப்பதற்கு, இந்த கீழ்நோக்கிய வால் வடிவமைப்பு இன்றளவும் உதவுகிறது.

கரீம் வடிவமைத்த தூரயியங்கி, ஆல்பட்ராஸ் என அழைக்கப்படுகிறது. அண்டரண்டப்பறவையைப் போலவே இந்த தூரயியங்கியும் இருந்த இடத்தில் இருந்து எழும்பி, உயரத்தில் பறக்கக் கூடியவை. வேகத்தை விட நீடித்துப் பறப்பவை. தன்னுடைய உடலைவிட இருபது மடங்கு பெரிய அகலமான இறகுகளைக் கொண்டது. இந்தத் தூரயியங்கிக்கு எஞ்சினாக டிவிஎஸ்-50 போன்ற கோ-கார்ட் (go-cart) பொறியை பயன்படுத்துகிறார். அதுவரை இராட்சத விமானத்திற்குறிய பொறியை உபயோகுத்தவர்களுக்கு இந்த வழிமுறையெல்லாம் அதிர்ச்சியைத் தந்தது. எனினும், முடிவுகளைப் பார்த்தால், விமானத்தைப் பார்த்து உருவாக்கிய தூரயியங்கியை விட கரீம் கண்டுபிடித்த தூரயியங்கி சிறப்பாக, நெடுநாளைக்கு, இடையூறுகளைத் தவிர்த்து செயல்பட்டது.

கரீம் கண்டுபிடித்த பறக்கும் வடிவமைப்பு, செயற்கைகோள்களின் வளர்ச்சி, இயந்திரமே சொந்தமாக முடிவெடுக்கும் சக்தி, புவிநிலை காட்டி (GPS) முன்னேற்றங்கள், தொலை தூரத்திற்கு தகவல் அனுப்பும் வசதி, அறை முழுக்க அடைத்துக் கொண்டிருக்கும் கணினி நுட்பத்திற்கு பதிலாக மடியில் வைத்துக் கொண்டு இயக்கும் புதிய தலைமுறை கணிப்பொறிகள், இலேசாக இருந்தாலும் தொடர்ந்து தாக்குப் பிடிக்கும் மூலப்பொருள்களின் வருகை, விமானத்தை அனலாக் முறையில் இயங்குவதை விட்டு டிஜிட்டல் வழியில் கட்டுபடுத்தும் பொறிகள் என பல தொழில்நுட்பங்கள் ஒன்று சேர்ந்துதான் இன்றைய தூரயியங்கிக்கு வித்திட்டு இருக்கின்றன.

Open_Source_Arducopter_Quad_3d_Robotics_drones_Military_Army

இணையம் வந்த புதிதில் பலரும் கேட்ட கேள்வி. ‘இன்டெர்நெட்டினால் என்ன பயன்? தினசரி இரண்டு ஜோக் மடல் அனுப்பலாம்… அதைத் தவிர என்ன மாறப் போகிறது!’

தூரயியங்கி இன்னும் விடலைப் பருவத்தில் இருக்கும் இந்தக் காலத்திலும் இதே கேள்வி புழக்கத்தில் இருக்கிறது. ‘டிரோன்களினால் என்ன உபயோகம்? அடுத்த வீட்டை எட்டிப் பார்க்கலாம்… சாலையில் கார் ஓட்ட வயதிற்கு வராத பாலகர்கள் வேண்டுமானால் கூரையேறாமல் கோழி பிடிக்கலாம்!’ என்கிறார்கள்.

நிஜத்தை சொல்லப் போனால், தூரயியங்கிகளால் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதன் சாத்தியக்கூறுகளுக்கான ஆராய்ச்சிகளையும் அதன் முழுமையான பயன்களையும் நாம் இன்னும் துவங்கக் கூட இல்லை. ஐஃபோன் போல் எல்லோர் கைகளிலும் தூரயியங்கி வைத்திருக்கும் காலம் இன்னும் ஐந்தாண்டுகளுக்குள் நிகழும். அப்பொழுதுதான் தூரயியங்கிகளின் உண்மையான வீச்சு எல்லோருக்கும் ஓரளவிற்காவது தெரியவரும்.

உலக நாடுகளின் இராணுவத்திடம் உள்ள தூரயியங்கிகளை விட இரண்டு மடங்கு அதிகமான அளவில் தனிநபர்கள் தங்களுடைய ஓய்வு நேரத்தில் தங்களுக்குச் சொந்தமான தூரயியங்கிகளை இயக்குகிறார்கள். இராணுவத்தினால் குண்டு போட முடியும்; இந்த தனி நபர் பரிசோதனைகளில் குண்டு போட முடியாது என்பதைத் தவிர வேறு எந்த வித்தியாசமும் இந்த தூரயியங்கிகளில் கிடையாது.

அடுத்த வருடத்தில் (2015ல்) இருந்து வர்த்தக வேலைக்காக தூரயியங்கிகளை எவர் வேண்டுமானாலும் இயக்க ஆரம்பிக்கலாம். தூரயியங்கிகளை எவ்வாறு செய்வது, எப்படி வடிவமைப்பது என்னும் திட்டங்களையும் வரைபடங்களையும் தன்னார்வலர்கள் பலர் இணையக் குழுமங்களில் பகிர்கிறார்கள். இதைக் கொண்டு சீனாவில் இருந்து எக்கச்சக்கமான இரகவாரியான தயாரிப்புகள் சந்தைக்குள் புகுகின்றன. காசே இல்லாமல் செய்முறை சொல்லப்பட்டு, மிகக் குறைவான பொருட்செலவைக் கொண்ட உபகரணங்களைக் கொண்டு உருவாகி, திறமுல நிரலிகளை உள்ளடக்கிய இந்த தூரயியங்கிகள் ஆயிரக்கணக்கில் விற்கப்படுகின்றன.

உதாரணத்திற்கு டேவிட் ஷ்மேல் (David Schmale http://www.popsci.com/science/article/2013-09/david-schmale) என்னும் காற்றியல்-உயிரியல் வல்லுநரை எடுத்துக் கொள்வோம். காற்று வழியாகப் பரவும் நுண்ணுயிரிகளைக் கண்டுபிடிக்க தூரயியங்கிகளை இவர் பயன்படுத்துகிறார். மேகத்தினூடே பயணிக்கும் நுண்கிருமிகளையும் வான்வெளியில் சஞ்சரிக்கும் நுண்ணுயிரிகளையும் கண்டுபிடிக்க, துரும்பைப் போல் எங்கும் தாவி, சோதனைச் செய்யப்படும் ஜந்துக்களுடனேயே பயணிக்க தூரயியங்கிகளைக் கொண்டு சோதனைகளை வெற்றிகரமாக முடித்திருக்கிறார். இவரின் கண்டுபிடிப்புகள் நடைமுறைக்கு வரும்போது, வருமுன் காப்போனாக பயிர்களைக் காப்பாற்றலாம். நோய்களைத் தடுக்கலாம்.

ஆப்பிரிக்காவில் இருந்து வரும் எபோலாவை அறிய இந்த ட்ரோன் முறை பயன்படும். ஆனால், ஆப்பிரிக்காவில் இணையத்தை பரவலாக்கவும் ட்ரோன்கள் பயன்படுகின்றன.

WWW_Internet_Usage_Worldwide_Web_Mobile_Computing_LIght_up_Reach_Ping_GlobaL_Devices_Tech_Reach

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இந்தியாவிலும் ஃபேஸ்புக் நீக்கமற நிறைந்திருக்கிறது. இது போன்ற இடங்களில் இணையப் பயன்பாடும் செல்பேசிகளும் சிறு கிராமங்களையும் அனைத்து வயதினரையும் சென்றடைந்திருக்கின்றன. ஆனால், ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் எல்லாவிடங்களிலும் வையவிரிவு வலை கிடைப்பதில்லை. பலரிடம் செல்பேசியும் செயற்கைகோள் கொண்டு தொலைபேசும் வசதியும் இருந்தாலும், அந்த செல்பேசியில் இணையம் கிடைப்பதில்லை. இணையம் கிடைத்தால்தான் ஃபேஸ்புக் பார்க்க முடியும். ஃபேஸ்புக் பார்க்க முடிந்தால், அதன் மூலம் அந்தத் தளத்தின் பயனர்களும், அதனால் கிடைக்கும் விளம்பரங்களும், வருவாயும் பல்கிப் பெருகும்.

இண்டு இடுக்குகளையும் இணையம் சென்றடைய என்ன வழி?

சூரிய ஒளியில் இயங்கும் தூரயியங்கியை ஆப்பிரிக்காவின் மூலை முடுக்கில் எல்லாம் ஃபேஸ்புக் நிறுத்தப் போகிறது. ஆப்பிரிக்காவில் வருடம் முழுக்க நல்ல வெயிலும் அடிக்கிறது. கடுமையான வெப்பத்தைத் தேக்கி வைக்கும் இராட்சத சக்தியும் தூரயியங்கியின் உள்ளே அமைக்கப்பட்டிருக்கிறது. எனவே, அடிக்கடி பெட்ரோல் போட வேண்டும் என்னும் தடையும் இல்லை. ஃபேஸ்புக் நிறைய பணம் வைத்துக் கொண்டிருப்பதால், இது போன்ற பிரும்மாண்டமான திட்டங்களை செயலாக்குவதில் எந்த சிரமமும் இல்லை. மேலும், பங்குச்சந்தையில் உலவும் பணத்தை விட, அசையாச் சொத்துக்களான விமானங்கள், அந்த தூரயியங்கிகளின் மூலம் இணையச் சேவை என்று நிலையான முதலீடுகளில் கால்கோள் இடவும் ஃபேஸ்புக் விரும்புகிறது. அதே சமயம், இணையம் என்றால் ஃபேஸ்புக்; ஃபேஸ்புக் என்றால் இணையம் என்று புதுப்பயனர்கள் நெஞ்சில் ஊன்றிப் பதியவும், நிரந்தமாக அடையாள இலச்சினை போட்டு குடிகொள்ளவும் ‘ஃபேஸ்புக தூரயியங்கிகள்’ உதவுகின்றன.

ஃபேஸ்புக வந்துவிட்டால் கூகுள் சும்மா இருப்பாரா?

கூகிளைப் பொருத்தமட்டில் அது சேவை இயங்குத்தளத்தில் இருக்கிறது. பணம் பரிமாற வேண்டுமா? கூகுள் வாலே (wallet) நாடுகிறோம். விளம்பரம் செய்ய வேண்டுமா? கூகுள் ஆட்வோர்ட்ஸ் (AdWords) நாடுகிறோம். செல்பேசியை இயக்க வேண்டுமா? ஆன்டிராய்ட் நாடுகிறோம்.

அதே போல், ஏதாவது பொருளை எங்காவது கொடுக்க வேண்டுமா… அதற்கும் கூகிளை நாடுங்கள் என்று உலகெங்கும் சொல்வதற்கு தூரயியங்கியை சேவையாகத் தருவதற்கு கூகுள் திட்டமிட்டு வருகிறது. தானியங்கியாக ஓடும் கார்களை கூகுள் வைத்திருக்கிறது. அதே போல், தானியங்கியாக ட்ரோன்களை நீங்களே துவக்கலாம்; எங்கு வேண்டுமோ அங்கே இறக்கலாம்; பொருள்களை பட்டுவாடா செய்யலாம்.

ஒரு பொருளை பயன்படுத்தியபின் என்ன செய்கிறோம்? அதை வீட்டின் மூலையில் போட்டு வைக்கிறோம். அதன் பிறகு அந்த சுத்தியலோ, தயிர் கடையும் மத்தோ, இன்ன பிற உபகரணமோ பயனின்றி உறங்கிக் கிடக்கும். அனைவருக்கும் அனைத்தும் என்று வாழும் காலம் இது; அதே சமயம் வீட்டை அடைத்து வைத்துக் கொண்டிருக்கும் பொருள்களும் இல்லாமல் எளிமையாக வாழ வேண்டும் என்னும் விருப்பமும் உள்ள காலம்; தேவை என்னும்போது தருவிக்கலாம்; தேவை முடிந்தபின்பு இன்னொருவருக்கு தந்து உதவலாம் எனக் கூட்டுச் சமுதாயச் சிந்தனைக்கும் தூரயியங்கிகள் உதவுகின்றன.

உங்களுக்கு எந்தப் பொருள், எப்பொழுது வேண்டுமோ, அப்பொழுது, அந்தச் சமயத்தில், தூரயியங்கிக் கொண்டு அந்தப் பொருளை தருவிக்கலாம். உங்களின் தேவை முடிந்தபின்பு ‘யதாஸ்தானம் ப்ரதிஷ்டயாமி’ என்று பொதுவிடத்தில் கொடுத்துவிடலாம். சிக்கனமாகவும் இருக்கலாம். சுற்றுச்சூழலையும் பேணலாம்.

தூரயியங்கிகளின் வளர்ச்சியை தனித்துப் பார்க்க முடியாது. முப்பரிமாண நகலி (3D printing http://solvanam.com/?p=25176), எந்திரனியல் (robotics) போன்ற பிற துறைகளுடன் இணைத்தே தூரயியங்கிகளின் சாத்தியங்களைப் பார்க்க வேண்டும். இதுதான் அமேசான்.காம் வர்த்தகத் தளத்தின் திட்டம்.

வானகத்தில் ஆங்காங்கே, நகரத்திற்கு ஒன்றாகவோ, மாவட்டத்திற்கு ஒன்றாகவோ மாபெரும் தூரயியங்கிகள் நிறுத்தப்பட்டிருக்கும். அதனுள்ளே முப்பரிமாண வார்ப்பி (3D Printer) இருக்கும். அவை சிறிய பொருள்களை அச்செடுத்துக் கொடுக்கும். அந்தக் குட்டி குட்டி வடிவங்களை ஒருங்கிணைக்க எந்திரன்கள் உள்ளே இருக்கும். முழுப்பொருளும் தயாரானவுடன் அதை தரையிறக்க இன்னும் சில வேறுவகையான தூரயியங்கிகள் உதவும். இவையெல்லாம் நொடி நேரத்தில் நடக்கும்.

சீனாவை நம்பி இறக்குமதி செய்யவேண்டாம். மாபெரும் தொழிற்சாலைகள் உருவாக்க வேண்டாம். ஒவ்வொருவரும் தயாரிக்கலாம். உங்களுக்கான செருப்பை நீங்களே உருவாக்கலாம். உங்களின் முகத்தின் கோணல்களுக்கேற்ப கண்ணாடியை செதுக்கலாம். வீட்டின் மூலையில் அமர்ந்தபடி தயாரிக்கலாம்.

நீங்கள் தயாரா?

உதவியவை:

12 Years a Slave and Ferguson

பன்னிரெண்டு வருடங்களாக அடிமையாக வாழ்ந்த தன்னுடைய சொந்தக் கதையை சாலமன் நார்த்ரப் (Solomon Northup) சுயசரிதையாக எழுதியிருக்கிறார். பதினெட்டு வயது வரை கருப்பராக வளர்ந்த கதையை மைக்கேல் பிரவுன் எழுதவில்லை. அதற்குள் சுடப்பட்டு செத்துவிட்டார். முன்னது “12 Years a Slave” — என திரைப்படமாக வெளிவந்து ஆஸ்கார் விருது கூட வென்றிருக்கிறது. பெர்குசன் நகரத்தில் தெருவில் நடந்த குற்றத்திற்காக கொல்லப்பட்ட மைக்கேல் பிரவுனின் அகால மரணத்திற்கு எதிரான கண்டனப் போராட்டங்களை செய்தித்தாள்களில் படிக்கிறோம்; தொலைக்காட்சியில் பார்க்கிறோம்.

“பன்னிரெண்டு ஆண்டு அடிமை” திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி இன்றும் மனதைப் பிசைகிறது.

கதாநாயகன் சாலமனின் கண்காணிப்பாளராக டிபீட்ஸ் (Tibeats) இருக்கிறான். சாலமனுக்கும் டிபீட்ஸுக்கும் பொதுவான மேற்பார்வையாளராக இன்னொருவர் உண்டு. சாலமனுக்கு வயது நாற்பதுகளில் இருக்கலாம். டிபீட்ஸ்க்கு இருபது கூட ஆகியிருக்காது. சாலமன் கருப்பர். டிபீட்ஸ் வெள்ளை. சிரத்தையாக பல மணி நேரம் வெயிலில் உழைத்து சாலமன் செய்து முடித்த மரவேலையை சின்னாபின்னமாக்கி விடுகிறான் டிபீட்ஸ். அந்த ஆத்திரத்தில் தன்னுடைய அதிகாரியை நோக்கி கையை நீட்டி விடுகிறார் சாலமன்.

டிபீட்ஸிற்கு ஆத்திரம் பொங்குகிறது. ‘கருப்பு நீக்ரோ நாய்! எப்படி எதிர்த்து பேசுவாய்!’ என கருவிக் கொண்டு, நாலைந்து பேரோடு திரும்பி வருகிறான். சாலமனை கழுவில் ஏற்றுகிறான். அதைப் பார்த்த சாலமனின் மேற்பாற்வையாளர் உடனே விரைந்தேறி வந்து, தன்னுடைய முதலாளியின் சொத்து பறிபோகாமல் இருப்பதற்காக சாலமனின் உயிரை மீட்கிறான்.

அதாவது கழுத்தில் சுருக்கு நெருக்குகிறது. கால்களோ மண் தரையில் உழலுகிறது. பாதம் தரையில் படாமல் விந்தி விந்தித் தரையைத் தொடுகிறார் சாலமன். சாலமனின் தாம்புக்கயிறை அவிழ்ப்பதற்கு, மேற்பார்வையாளனுக்கு உரிமையில்லை. சாலமனின் கழுத்தில் தொங்கும் தூக்குக் கயிறை நீக்குவதற்கு முதலாளி வர வேண்டும். அது வரை குற்றுயிராய் இருக்கும் சாலமன் தன்னுடைய மூச்சைத் தக்கவைத்துக் கொள்ள குதியங்காலில் நின்று எட்டு மணி நேரம் போராட வேண்டும்.

அவனைச் சுற்றி உலகம் எப்பொழுதும் போலவே இயங்குகிறது. திரையில் அந்தக் காட்சி மூன்று, நான்கு நிமிடங்கள் அப்படியேக் காட்டப்படுகிறது. எட்டு மணி நேர மூச்சுத் திணறலைக் காண்பிக்க மூன்றே மூன்று நிமிடம் பார்ப்பது கூட மனதைக் கூச வைக்கிறது. சாலமன் கூட வேலை பார்க்கும் சக அடிமைகள் தங்கள் கடமையை செய்து கொண்டிருக்கிறார்கள். மாடுகள் பாட்டுக்கு மேய்கின்றன. கதிரை அறுக்கிறார்கள். வாளியில் தண்ணீர் கொண்டு போய் தொட்டியில் நிரப்புகிறார்கள். எவருக்கும் ஒரு சக மானிடன் நாக்கு வறண்டு சாவின் விளிம்பில் தத்தளிப்பது பொருட்டாகவே இல்லை.

இதே போல் மைக்கேல் பிரவுன் நான்கு மணி நேரம் அனாதையாக சாலையில் கேட்பாரற்று பிணமாக இருந்திருக்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் கல்லூரிக்கு செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்திருக்கிறார் பிரவுன். நண்பருடன் காரில் உலா வந்தபோது, காவல்துறையினரால் நிறுத்தப்பட்டிருக்கிறார். அதன் பின் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலமுறை சுடப்பட்டார். நிராயுதபாணியாக இருந்தும் சுடப்பட்டார். இறுதியாக நெற்றிப்பொட்டில் சுடப்பட்டதால் இறந்தார். இறந்தவரின் சடலம், இறந்த இடத்திலேயே தொடுவாரற்று, சீந்துவாரற்று நான்கு மணி நேரத்திற்கு மேலாக நூறு டிகிரி கோடை வெயிலில் அனாதராவாக இருந்திருக்கிறது.

1840களில் சாலமன் அனுபவித்த கொடுமை இன்றும் மைக்கேல் பிரவுன்களுக்குத் தொடர்கிறது. அன்று நடந்ததை திரையில் பார்க்கிறோம். இப்படியும் கூட சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் வாடுதல் கண்டும், காணாத சொரணையற்றவர்கள் இருந்தார்களா என்று நாணுகிறோம்.

1840ல் சாலமன் கழுத்திற்கு தூக்குக் கயிறு மாட்டப்பட்டது ஒரு குறியீடு. வெள்ளையனை எதிர்த்தால், எஜமானனை கை நீட்டிப் பேசினால், கொல்லப்படுவீர்கள் என்று அனைத்து கருப்பு அடிமைகளுக்கும் உணர்த்துவதற்காக சாலமனுக்கு தூக்குக் கயிறு போடப்பட்டு, எட்டு மணி நேரத்திற்கு மேலாக உயிர் ஊசலாட விடப்படுகிறது.

இன்று 2014. அதே அமெரிக்கா. கருப்பராக இருந்து கொண்டு சாலையில் நடமாடினால் ஆபத்துதான் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்கள். சில மாதம் முன்பு ஃப்ளோரிடா மாநிலத்தில் டிரெவான் மார்டின் என்னும் இளைஞன். சென்ற வாரத்தில் மிஸௌரி மாநிலத்தில் மைக்கேல் பிரௌன். வெள்ளைத்தோல் இல்லாதவர் தைரியமாக நிமிர்ந்து நடந்தால் என்னவாகும் என்பதை பாடம் கற்பிக்க இவர்களை உதாரண புருஷர்கள் ஆக்குகிறார்கள்.

சாதாரணமாக இதற்கு சொல்லப்படும் காரணங்கள், ‘காக்க… காக்க’ போன்ற போலீஸ் திரைப்படங்களில் சொல்லப்படுவதுதான்: “என்கவுன்டர்” என்பது இல்லாவிட்டால் சட்டம் – ஒழுங்கு சீர்குலையும். இவ்வாறு கண்டவுடன் சுடுவதால் மட்டுமே கேங் (gang) எனப்படும் ரவுடிக் கும்பல்களை ஒழிக்கமுடிகிறது. பயங்கரவாதிகள் பெருகிவிட்ட இன்றைய அச்சம் நிறைந்த துப்பாக்கிகள் எங்கும் எவருக்கும் கிடைக்கும் சூழலில், பாதுகாப்பை நிலைநிறுத்த, இதுபோன்ற வருமுன்காப்போன் தற்காத்தல்களை தவிர்க்க இயலாது – போன்று பற்பல சொல்லப்படுகின்றன.

அமெரிக்காவில் வருடந்தோறும் ஆயிரம் பேராவது இப்படி காவல்துறையினரால் சுடப்பட்டு இறக்கிறார்கள். இவர்களில் எவ்வளவு பேர் நிஜமாகவே ஆபத்தானவர்கள், எவ்வளவு பேர் அனாதைகள், எவ்வளவு பேர் மைக்கேல் பிரவுன் சந்தர்ப்பவசத்தால் செத்தவர்கள் என்பதை உள்ளூர் காவல் அமைப்புகள் தெரிவிப்பதில்லை. எனவே, தெளிவான தகவல் கிட்டுவதில்லை. ஆனால், காவல்துறையினாரால் நிறுத்தப்பட்டால், சகல மரியாதையுடன் முன்ஜாக்கிரதையாக, அவர்கள் சொல்லும் ஒவ்வொரு காரியத்தையும் சிரமேற்கொண்டு நிறைவேற்றாவிட்டால், ‘பயங்கரவாதி பிடிபட்டான்’ எனத் தலைப்பு செய்தி ஆகாமல் நாம் தப்பிப்போம்.

1853ல் “பன்னிரெண்டு ஆண்டு அடிமை” புத்தகமாக வெளிவந்தது.

அப்போதைய அமெரிக்காவில் வடக்கு பகுதி – அடிமை முறையை ஆதரிக்கவில்லை. ஆனால், தெற்குப் பகுதிகளில், அடிமை முறை சட்டபூர்வமாக அமலில் இருந்தது. கருப்பராக இருந்தால், விலையாளாக இல்லை என்பதை நிரூபிப்பதற்கு பத்திரங்கள் தேவையாக இருந்தது. சுதந்திரம் பெற விரும்பிய ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் நியு யார்க் நகரத்திற்கு தப்பித்து விட்டாலும், கையில் அதற்குரிய சாட்சியங்கள் இல்லாவிட்டால், மீண்டும் அடிமை சேவகத்திற்கே அனுப்பப்படுவார்.

இந்தக் காலகட்டத்தில் சாலமன் நியு யார்க் மாநிலத்தில் மனைவியுடனும் மகனுடனும் மகளுடனும் வசித்து வருகிறார். அவருக்கு வயலின் வாசிக்க மிகவும் பிடிக்கும். அந்த வயலினை வாசிப்பதற்காக நிறைய சம்பளமும் வாஷிங்டன் வரை ஊர் சுற்றவும் சர்க்கஸ்காரர்கள் அவரை அழைக்கிறார்கள். நிறைய பணம் சம்பாதிக்கும் ஆசையுடனும், தன்னுடைய வயலின் திறமையை ஊர் ஊராகச் சென்று வெளிக்காட்டும் வாய்ப்பும் கிடைத்த சந்தோஷத்தில் சாலமனும் ஒப்புக் கொள்கிறார். ஆனால், சாலமனை போதையேற்றி, அதன் பின் அந்த போதை மயக்கத்திலேயே அடிமையாக்கி விற்று விடுகிறார்கள் அந்த சர்க்கஸ்காரர்கள்.

இந்த சமயத்தில் அமெரிக்காவின் தலைநகரத்தின் புகழ்பெற்ற காங்கிரஸ் கட்டிடமான கேபிட்டல் கட்டிமுடிக்கப்படவில்லை. அதாவது அமெரிக்கா என்னும் நாடு இன்னும் முழுமையாகவில்லை. தன்னுடைய சித்தாந்தமான ‘சுதந்திரம்’ என்பது பிரகடனத்தில் மட்டுமே இருந்த காலம். வெள்ளை ஆண்களுக்கு மட்டுமே முழுச் சுதந்திரம் என்பதை சொல்லாமல் சொல்லி இருந்த விடுதலை சாற்றுரையை குறிக்கும் விதமாக, அந்த ‘கேப்பிடல்’ கட்டிடம் பாதி கட்டி, மீதி தொக்கி நிற்கும் காட்சி காட்டப்படுகிறது.

இன்று 2014. அமெரிக்க காங்கிரஸ் கூடும் இடமான ‘கேப்பிடல்’ கட்டிடம் கம்பீரமாக எழுந்து நிற்கிறது. பெண்களும் வாக்களிக்க சட்டத்தில் உரிமை கிடைத்துவிட்டது. அமெரிக்க ஜனாதிபதியாக ஆப்பிரிக்க அமெரிக்கர் பராக் ஒபாம இருக்கிறார்.

ஆனால், அவர்கள் கட்சி நிலைமை எப்படி இருக்கிறது? கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது.

எட்டாண்டுகளுக்கு முன்பு ஜார்ஜ் புஷ் இருந்தார். அப்பொழுது இராக் போரில் பதின்ம வயதினர் எக்கச்சக்கமாய் காவு கொடுக்கப்பட்ட காலம். அதை முன்வைத்து, இராக் போரை வாபஸ் பெறுவதை வாக்குறுதியாக வைத்து டெமொகிராட் கட்சி வாகை சூடியது.

அதைப் பின் தொடர்ந்து, இரண்டாண்டு கழித்து அடுத்த தேர்தலில் பராக் ஒபாமா வென்றார். இப்பொழுது மொத்த பொருளாதாரமே வீழ்ச்சி அடைந்திருந்தது. அதை மீட்க, ஆளூங்கட்சியைத் தோற்கடிப்போம் என எதிர்க்கட்சியாக கோஷம் போட்டார். நிதிநிலை மோசடிகளை உருவாக்கிய குடியரசுக் கட்சிக்கு எதிரான அலை, இந்தத் தேர்தலில் வீசியது.

ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு அலை வீசும். சாமானிய மக்களுக்கு உரிமை வேண்டும் என்றும் வருமான வரியே கூடாது என்றும் போராடிய ‘டீ பார்ட்டி’ அலை வீசியது. அதன் பின் பெருநிதிக்கிழார்களிடம் இருந்து சட்டசபையை மீட்டு, சாமானியனுக்கு உதவும் அரசாங்கத்தைக் கோரும் ‘ஆக்குப்பை வால் ஸ்ட்ரீட்’ போராட்டம் உதவியது.

கடைசியாக நடந்த தேர்தலிலும் அலை உண்டு. ஒரு பக்கம் ஒபாமாவின் சேமநல நிதித் திட்டத்தை விரும்புபவர்கள் ஒன்று கூடினார்கள். அரசாங்கமே வேண்டாம் என்று சொல்பவர்களும், சட்டம் எதிலும் மூக்கை நுழைக்கக் கூடாது என்று கருதுபவர்களும், இந்த உடல்நலக் காப்பீட்டை மறுதலித்து இன்னொரு அணியில் குடியரசுக் கட்சி பக்க சாய்ந்தார்கள்.

ஆனால், இந்தத் தேர்தலில் எந்த அலையுமே வீசவில்லை. ஒபாமாவின் சேமநலத் திட்டத்தை அனைவரும் ஒப்புக் கொண்டுவிட்டார்கள். ஈராக் போர் முடிந்துவிட்டது. ஆப்கானிஸ்தானில் இருந்தும் வீரர்கள் திரும்பி, ஆளில்லா தூரயியங்கி விமானங்கள் உபயோகிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பொருளாதாரம் தலை நிமிர்ந்துவிட்டதால் ‘டீ பார்ட்டிக்காரர்’களும், ‘ஆக்குபை வால் ஸ்ட்ரீட்’காரர்களும் வேலையில் அமர்ந்துவிட்டார்கள்.

இந்த மாதிரி விட்டேற்றியான காலத்தில் மக்களை உசுப்பேத்துவது எப்படி? ஒவ்வொரு வாக்காளரையும் வோட்டுச்சாவடிக்கு அனுப்புவது எப்படி? தங்களுடைய ஆதார பலத்தை நிரூபிப்பது எப்படி? அதற்கும் ஃபெர்கூசன் போராட்டங்கள் உதவுகின்றன. பராக் ஒபாமாவிற்கு மவுசு குறைந்து விட்டது. அவரின் டெமோகிரட்ஸ் கட்சிக்கு வாக்கு திரட்ட இந்த மாதிரி நடவடிக்கைகள் உதவும்.

கம்பரின் இராமாயணத்தில் ‘கண்ணிழந்தான் பெற்றிழந்தான் எனவுழந்தான் கடுந்துயரம் காவவேலான்’ என்னும் பிரயோகம் வெகு பிரசித்தமானது. ஏற்கனவே கண் பார்வையற்ற ஒருவன், தன்னுடைய பார்வையைப் பெறுகிறான். உலகத்தின் ஒவ்வொரு அதிசயத்தையும் பார்க்கிறான். சூரியன் உதிக்கும் காலையையும், பறவைக் கூட்டத்தின் ஒருங்கையும், நாணல்களின் அலையோரத்து அசைவையும் ரசிக்கிறான். பின், கண் பார்வை பறிபோகிறது.

சேவகம் மட்டுமே செய்து வாழ்ந்த வம்சாவழியில் வந்த சாலமன் விடுதலை பெற்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறான். தன் குழந்தைகளுக்கு நல்ல வாழ்வு, தன்னுடைய விருப்பமான துறையில் ஈடுபாடு என நினைத்தபடி வாழ்முடிகிறது. பின் அதை இழக்கிறான்.

இழந்ததை எவர் கண்டுகொண்டார்கள்? சாலமப் இவ்வாறு விலையாள் ஆகிப்போனது யாருக்கு தெரியும்?

ப்ரூகல் வரைந்த இகாரஸின் வீழ்ச்சி (http://en.wikipedia.org/wiki/Landscape_with_the_Fall_of_Icarus) ஓவியம் நினைவிற்கு வருகிறது. நம்முடைய அனுமான் போல் இகாரஸும் அசகாய சூரர். சூரியனைத் தொட்டுவிட நினைக்கிறார். ஆனால், இறக்கைகள் இல்லை. அதனால் என்ன! கோந்து போட்டு பிரும்மாண்டமான இறக்கைகளை ஒட்டிக் கொள்கிறார். அப்பாவின் அறிவுரையைக் கேட்காமல், பகலவனை நோக்கிப் பறக்கிறார். கதிரோன் ஒளியின் வெபந்த்தில் மெழுகு கரைகிறது. ஐகாரஸ் கடலில் வீழ்கிறான்.

ஐகாரஸின் கால்களை மட்டும் கடலில் காண்கிறோம். அதுவும் உன்னிப்பாக பார்த்தால் மட்டுமே தெரியும். ஓவியத்தின் முகப்பில் குதிரை உழவர் தெரிகிறார். கொஞ்சம் போல் சென்றால் வானத்தைப் பார்க்கும் மேய்ப்பன் புலப்படுகிறார். யாருடைய கால்களோ, தண்ணீரில் தத்தளிப்பது அதன் பின் தெரிய வரலாம். சொந்த உயிர் வாடுவது நமக்குத் தெரிவதேயில்லை. நம் வாழ்க்கையின் அர்த்தமற்ற தருணங்களிலேயே நாம் லயித்து மூழ்கிவிடும்போது, மைக்கேல் பிரவுன் சுடப்படுவதை நாம் கண்டுகொள்வதேயில்லை.

பெர்கூசன் நகரத்தில் சுடப்பட்ட மைக்கேல் பிரவுனுக்கும் பன்னிரெண்டு ஆண்டுகள் அடிமையாக இருந்து மீண்டும் சுதந்திரம் பெற்ற சாலமன் நார்த்ரப்பிற்கும் முக்கிய வித்தியாசம் உண்டு.

முதலாமவர் ஃபிரான்சிஸ்கோ கோயாவின் ‘மே மூன்றாம் தேதி, 1808’ (http://en.wikipedia.org/wiki/The_Third_of_May_1808) ஓவியத்தின் நாயகன் போல் நிராயுதபாணியாக துணிந்து எதிர்த்து நின்றவர். தான் சுடப்படுவோம் என்பதைத் தெரிந்து இருந்தாலும், பயப்படாமல் நெஞ்சை நிமிர்த்தியவர்.

ஆனால், சாலமன் நார்திரப் வளைந்து கொடுக்கத் தெரிந்தவர். சரியான சந்தர்ப்பத்திற்காக காத்து இருந்தவர். அவசரமாக ஆத்திரத்தில் முடிவெடுக்காமல், பொறுமை காத்தவர். அவர் எழுதிய புத்தகத்திலேயே கூட பருத்தியை எவ்வாறு பறிப்பது என்பது குறித்தும், கறும்பு சாகுபடியை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்தும் விலாவாரியாக அனுபவித்து எழுதியிருக்கிறார். நாயைப் போல் நடத்தப்பட்டாலும், நல்ல காலம் என்றாவது பிறக்கும் என்னும் நம்பிக்கையைக் கைவிடாதவர்.

அமெரிக்கப் பள்ளிக்கூடங்களில் பாடப்புத்தகங்களாகவோ, பதின்ம வயதினருக்கான புத்தகப் பரிந்துரையாகவோ, அடிமை வாழ்விற்கு உதாரணமாக – இரு புத்தகங்களை முன்வைக்கிறார்கள்: Narrative of the Life of Frederick Douglass and The Interesting Narrative of the Life of Olaudah Equiano.

இந்தப் புத்தகங்கள் எல்லாமே மொழியாளுமையையும் அறிவுக்கூர்மையையும் முன்னிறுத்துகின்றன. படிப்பினால் முன்னேறலாம். வாசிப்பை விசாலமாக்கினால் பதவி கிடைக்கும். அதன் மூலம் சுயத்தை அடையாளம் காணலாம். அதனால் தங்களைக் கட்டியிருந்த தளைகள் அறுகின்றன.

சாலமன் நார்திரப்போ, ஏற்கனவே கற்றறிந்த, எழுதப் படிக்கத் தெரிந்தவர். அவருக்கு, எழுத்துக் கூட்டி பாலபாடம் படித்து, அதன் பிறகு பெரிய பெரிய நூல்கள் வாசித்து முன்னேற வேண்டிய நிலை இல்லை. ஆனால், தன்னுடைய வாசிப்பறிவை பகிரங்கமாக்கினால், சவுக்கடி மட்டுமே மிஞ்சும். எனவே, பட்டறிவை சொல்லாமல் நடிக்க வேண்டிய சூழ்நிலை.

ஒரு வகையில் நானும் அவ்வாறே பொதுவில் நடந்து கொள்கிறேன். அலுவலில் அரசியல் பேசுவதில்லை. மைக்கேல் பிரவுன் குறித்தோ, ஹமாஸ் குறித்தோ, அலுவல் சார்ந்த தொழில்துறையாளர்கள் கூடும் சந்திப்புகளில் வாய் திறப்பதேயில்லை. மௌனமாக பொதுவான நுட்பங்கள் குறித்தும் வானிலை குறித்தும் விளையாட்டு குறித்தும் அளவளாவுகிறோம். சில சமயம் உறவினர்கள் புழங்குவதால், ஃபேஸ்புக்கிலும் கூகுள் பிளஸ்சிலும் கூட அமைதி காக்கிறேன்.

—-

“பன்னிரெண்டு ஆண்டு அடிமை” திரைப்படத்தில் வரும் இன்னொரு மிக முக்கியமான பாத்திரம் பாட்ஸி (Patsey). சாலமனைப் போலவே பாட்ஸியும் இன்னொரு கலைஞர். இவர் சின்னக் குழந்தை. பதின்மூன்று வயது இருக்கும். அந்த வயதிற்கேயுரிய அழகும் குறும்பும் உற்சாகமும் ததும்புகிறது. சோளகொல்லை பொம்மைகளை விதவிதமாக செய்கிறார்.

காலை முழுவதும் பருத்தியை பறிப்பது. மாலையில் எஜமானனின் தாசியாக இருப்பது. வன்சிறை என்பதால் தாசிகளுக்குக் கிடைக்கும் சன்மானமும் கிடைக்காது. எஜமானனின் விருப்பத்திற்குரியவராக இருப்பதால், எஜமானியிடமிருந்து அடியும் வதையும் வன்மத்துடன் கொடுக்கப்படுகிறது. சாலமனைப் போல், ‘என்றாவது விடுதலை கிட்டும்! குடும்பத்தோடு இணைவோல்.’ என்னும் நம்பிக்கை ஆதாரமும் கிடையவே கிடையாது.

பாட்ஸியின் கதையைப் படித்தால் தலைமுறை தலைமுறையாக அடிமைப்பட்டிருக்கும் கதை தெரியவரும். வாழ்க்கை வருங்காலம் இருட்டு குகையாக மட்டுமே தெரிவதை உணரமுடியும். உயிரை விட முடியாத அவலமும் இரண வேதனையை தினமும் அனுபவிக்கும் சவுக்கடியும் சித்திரவதை பயமும் நிறைந்த இருட்டுகள் புலப்படும்.

அதை எதிர்த்துதான் கோயாவின் The Third of May 1808 (http://en.wikipedia.org/wiki/File:El_Tres_de_Mayo,_by_Francisco_de_Goya,_from_Prado_thin_black_margin.jpg) மைக்கேல் பிரவின் நிற்கிறான். செத்து பிழைத்தது போதும் என்று நெஞ்சை உயர்த்துகிறான்.
-பாலாஜி
———————

Minecraft

மேற்கத்திய உலகில் இருக்கும் அனேக இந்தியர்கள் கணினித்துறையில் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் நிரலி எழுதுகிறார்கள். ஐ-போன் வைத்திருக்கிறார்கள். பி.எம்.டபிள்யூ போன்ற கார் ஓட்டுகிறார்கள். கூகுள் தொலைக்காட்சிப் பெட்டி உபயோகிக்கிறார்கள். முதல் நாள், முதல் காட்சியில், நெடிய வரிசையில் கால்கடுக்க நின்று எக்ஸ் மென், அயர்ன் மென், போன்ற ஹாலிவுட் படங்கள் பார்க்கிறார்கள். சாதாரணமாக கீக் (geek) என்று சொல்ல இவை போதுமானது.

ஆனால், உண்மையான கீக் என்பதற்கு சில சாமுத்ரிகா லட்சணங்கள் இருக்கின்றன.

Star_Wars_XKCD

அறிவியல் புனைவுகளை அதிகம் படிப்பது முதல் தகுதி. எச்.பி.ஓ.வில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் (Game of Thrones) வருவதற்கு பன்னெடுங்காலம் முன்பே அவற்றை வாசிப்பது கீக் பட்டத்திற்கான எல்.கே.ஜி. படிக்கட்டு. ஸ்டார் வார்ஸ், ஸ்டார் ட்ரெக், டாக்டர் ஹூ எல்லாம் பார்ப்பது யூகேஜி. ஜப்பானிய மாங்கா படங்கள், நெட்ஃப்ளிக்ஸின் இண்டு இடுக்கில் ஒளிந்திருக்கும் மேட்ரிக்ஸ் கார்ட்டூன் என மூன்னேறலாம். எக்ஸ் பாக்ஸ், ப்ளேஸ்டேஷன் எல்லாம் வைத்துக் கொண்டு, அதன் புகழ்பெற்ற, பெறாத கணி விளையாட்டுகளில் சாதனையாளர் பட்டம் பெறுவது கீக் பள்ளிக்கூடத்தைத் தாண்ட வைக்கும். நேரப்பயணத்தை (time travel) திட்டமிடுதல்; டஞ்சன்களும் டிராகன்களும் விளையாட்டை ஒருங்கிணைத்தல் ; Tor உபயோகித்து இணையத்தின் உள்ளரங்குகளில் உலவுதல்; காமிக் கான் (Comic-Con) கூட்டத்திற்கு தவறாமl செல்லுதல்; எப்பொழுதும் ஹவாய் செப்பலுடன் (சாலையில் தண்ணீர் ஊற்றினால் பனிக்கட்டி ஆகிவிடுமே, அந்தக் கடுங்குளிரில் கூட) முண்டா பனியனில் தலை சொறிய வைக்கும் சொற்றொடருடன் எவரொருவர் உலா வருகிறாரோ – அவரே முழுமையான கீக்.

இதன் ஒரு அங்கமாகத்தான் மைன்கிராஃப்ட் (Minecraft) எனக்கும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. இது எந்த மாதிரியான விளையாட்டு?

Minecraft_Large_Fortress_Buildings_Game_Of_thrones_Westeros_Kingdoms

சதுரம் சதுரமாக பொட்டிகளை உடைத்து, அதை சேமித்துக் கட்டும் கலை. உங்களால் பிரும்மாண்டமான கோட்டை எழுப்ப முடியும். கோவில் கட்டலாம். மாபெரும் மலைகளை உருவாக்கலாம். தோண்டத் தோண்ட வளரும் ஆழ்துளைகளில் பூதங்களை உலவ விடலாம். திடீரென்று சாத்தான்கள் எட்டிப் பார்க்கும். வெள்ளம் வரலாம். எரிமலைக்குள் விழுந்து விடலாம். தப்பித்து ஓட வேண்டும். இருட்டிய பிறகு, பாதுகாப்பாக இருக்க, அரண்கள் ஏற்படுத்த வேண்டும். மற்றபடிக்கு, மற்றவர்கள் என்னவெல்லாம் கட்டியிருக்கிறார்கள், எப்படியெல்லாம் கற்பனைகளை கணித்திரையில் மிரட்டியிருக்கிறார்கள் என பராக்கு மட்டுமே கூட பார்த்து காலம் கழிக்கலாம்.

எல்லா விளையாட்டுகள் போலவே கற்றுக் கொள்ளுதல் மிக எளிது. கற்றுக் கொண்ட பின், இன்னொருவரைப் போல், அந்தக் கட்டிடத்தைப் போல் நாமே நமக்குத் தோற்றுவிக்க வேண்டும் என எண்ணுவதும் எளிது. அதை உருவாக்குவது, உருவாக்கியதைப் பாதுகாப்பது, நண்பர்களை அழைப்பது, என் ஒன்றன் பின் ஒன்றாக பதினாறு மில்லியன் மக்களைக் கணினியில் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது மைன்கிராஃப்ட். ஒரே ஒரு விளையாட்டைக் கொண்டு நூறு மில்லியன் டாலருக்கு மேல் வருவாய் ஈட்டி இருக்கிறார்கள்.

Minecraft_World_Games

மார்கஸ் பெர்ஸ்ஸ்ன் (Markus Persson) என்பவரால் 2009ஆம் ஆண்டு அறிமுகம் ஆனது. ”இதென்ன, வெட்டுவதும், தோண்டுவதும்?!” என வந்த புதிதில் வெகு சிலரே உபயோகித்தார்கள். 2011 வாக்கில் அரசல் புரசலாக அலுவலில் பேசிக் கொண்டார்கள். ”சிவந்த கண்களுக்கு என்ன காரணம்? ஃபைட் கிளப் மாதிரி எங்காவது சென்றாயா?” என சகாக்களைக் கேட்டபோது குசுகுசுவென ‘மைன் கிராஃப்ட்’ விடை கிடைக்கப் பெற்றேன்.

துவக்கத்தில் கணினி வல்லுநர்களுக்கு மட்டுமே மொழுதுபோக்காக இருந்த விளையாட்டு, இப்போது, மெதுவாக, பல்வேறு புனைவுலக கலைஞர்களின் முக்கிய அங்கமாக மாறியிருக்கிறது. பதின்ம வயதில் எவரைக் கேட்டாலும் ஒரு நாளில் பத்து மணி நேரமாவது உலகை சிருஷ்டிப்பதில் செலவழிக்கிறார்கள்.

வெட்டிய சதுக்கங்களையும் மரக்குச்சிகளையும் கொண்டு விதவிதமாக கருவிகளை உருவாக்குவதில்தான் மைன்கிராப்ட் விளையாட்டின் சூட்சுமம் இருக்கிறது. உங்களுக்குத் தரப்பட்ட 3×3 தளத்தில், நீங்கள் சேமித்த பொருள்களை கலந்து கட்டி, புதுமையான ஆயுதங்களை வடிவமைக்க வேண்டும். சமையற்குறிப்புகள் மாதிரி இந்த இரகசியங்களை சொல்லிக் கொடுக்கவே சில வலையகங்கள் இருக்கின்றன. அவையும் கை கொடுக்கும்.

Minecraft_Crafting_Table_Tools_Construction_Recipes

இதற்கெல்லாம் எது ஆரம்பம்? தமிழில் ஒரு திரைப்படம் வெளிவந்தால், அதன் மூலம் எங்கே என தேடுவோமே… அந்த மாதிரி மைன்கிராஃப்டின் ஆதி மூலம் எங்கே இருக்கிறது?

அதன் பெயர் டிவார்ஃப் ஃபோர்ட்ரெஸ் (Dwarf Fortress). உங்களின் கணித்திரையெங்கும் வண்ண வண்ணமாக எண்ணும் எழுத்தும் இருக்கும். இது ஓவியங்களும் படங்களும் அறவே இல்லாத பத்திர பூமி. சித்திரக்குள்ளர்கள் இருப்பார்கள். அவர்களைக் கொண்டு மதிற்சுவர்கள் எழுப்ப வேண்டும்; மீன் பிடிக்க வேண்டும்; வேட்டையாட வேண்டும்; சமைக்க வேண்டும்; அரிய கனிமங்களை சேமிக்க வேண்டும். நாச சக்திகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும். ஃபேஸ்புக்கில் கூட என்னை அடிக்கடி ‘ஃபார்ம்வில்’ (FarmVille) விலையாட வா… வா… என அழைக்கிறார்கள். அந்த விளையாட்டும், கிட்டத்தட்ட இதே தாத்பர்யம்தான்.

ஆனால், சில வித்தியாசங்கள் உண்டு!

சாதாரணமாக கணினி விளையாட்டு என்றால் அதில் வரும் மிருகங்களின் நகம் கூட ஜொலிக்கும். மேற்படி குள்ளர்களின் கோட்டையில் வைரமும் வைடூரியமும் கூட வெறும் “£” குறி காட்டி முடித்து விடுகிறார்கள். பயமுறுத்தும் நட்டுவாக்கலிகளுக்கு பழுப்பு நிறத்தில் “S”. படுக்கையைக் குறிக்க வெளிறிய மஞ்சள் நிற “+”. மரங்களுக்கும் செடி கொடிகளுக்கும் பச்சை நிற புள்ளிகளும் முக்கோணங்களும் கொடுக்கப்பட்டிருக்கும். சிரிப்பான்களைக் கொண்டு குள்ளர்களை அடையாளம் காண்கிறோம். ‘கற்பனையை விட எது பெரிய பயமுறுத்தும் சக்தி’ என்பதுதான் இதை உருவாக்கியவரின் வாதம்.

கற்பனையில் எதை வேண்டுமானாலும் உண்டாக்கலாம் என்பதற்கு இந்த விளையாட்டு முன்னோடியாக இருந்தது. இங்கிருக்கும் நாலைந்து மூலப் பொருள்களைக் கொண்டு ஆயிரக்கணக்கான பாதைகளும் வழிகளும் குழப்பங்களும் உருவாக்கலாம் என்பதை இந்த ஆட்டம் நடைமுறையில் விளக்கியது.

இன்னொரு முக்கிய வித்தியாசம்: பெரும்பாலான கணினி விளையாட்டுக்களில் முடிவு என்று ஒன்று இருக்கும். கடைசி குகை, இறுதி கதவு என்று ஒன்று கண்டுபிடித்தால்… அவ்வளவுதான். ஆட்டம் முடிந்தது. பள்ளிக்காலத்தில் ப்ரின்ஸ் ஆஃப் பெர்சியா அடும்போது, பன்னிரெண்டாம் கட்டத்தை முடித்தவுடன் வெறுமையாக இருந்தது. “இதற்குத்தானே ஏமாற்றி விளையாடினாய் பாலாஜி!” என சோகம் கலந்த கோபம் வந்தது. அதெல்லாம் இந்த இந்த மைன்கிராஃப்ட் போன்ற விளையாட்டுகளில் ஏற்படாது. கட்டுங்கள். கட்டியதை சீரமையுங்கள். பிறர் கட்டுவதைப் பாருங்கள். பயணித்துக் கொண்டே இருங்கள் என்பதுதான் இதன் இலட்சியம்.

Markus_Notch_Persson_minecraft1

மார்க்க்ஸ் பன்னிரெண்டாம் வகுப்பு முடியும் போது அவருடைய பள்ளி ஆலோசகரிடம் செல்கிறார். அவருடைய ஆலோசகரும், “கல்லூரியில் என்ன படிக்கப் போகிறாய்? என்னவாகப் போகிறாய்?” என வினவுகிறார். இவரோ, “எனக்கு கணினி விளையாட்டு ரொம்பப் பிடிக்கும்! எனவே அவற்றை எழுதப் போகிறேன்!” என சொல்கிறார். பள்ளி ஆச்சாரியரும் அவருக்குத் தெரிந்த நல்ல வார்த்தையெல்லாம் சொல்லி அந்த வழியில் சென்றால் உருப்பட மாட்டாய் என உபதேசித்து அனுப்பியிருக்கிறார்.

இவருடைய வழிகாட்டுனர் சொன்னதையும் மீறி காலை 9 முதல் ஐந்து வரை அலுவலில் வேலை பார்த்துவிட்டு, குளிரான ஸ்வீடனின் இரவு நேரங்களில் மைன்கிராஃப்ட் உருவாக்குகிறார் மார்க்கஸ். அதன் வெற்றியின் வாசனையை சற்றே முகர்ந்தவுடன் வேலையை விட்டு விட்டு முழுக்க இறங்குகிறார். அவருடன் பணிபுரிபவர்கள், இந்த மாதிரி ஸ்திரமான உத்தியோகத்தை விட வேண்டாம் என அறிவுறுத்தலை புறக்கணித்து களத்தில் முழுமூச்சாக இறங்குகிறார்.

இன்று மைன்கிராஃப்ட் அலுவலகத்தில் மொத்தம் பதின்மூன்றே பேர்கள்தான் வேலை செய்கிறார்கள். இத்தனைக்கும் ஆண்டிராய்ட், ஐ போன், ஐ பேட், எக்ஸ் பாக்ஸ், என எல்லாக் கருவிகளுக்கும் மைன்கிராஃப்ட் கிடைக்கிறது.

ஆனால், மைன்கிராஃப்ட் என்றால் மார்க்கஸ் மட்டும்தான் தெரிகிறார். விளையாட்டு குழுமங்களில் இவருடைய புனைப்பெயர் நாட்ச் (Notch). நாட்ச் என்றால் நவீன மொழியில் ’யேசுவிற்கு இன்னொரு பெயர்’ என்று அர்த்தமாகிறது. திரைப்படங்களில் யாருடைய இயக்கம் என பார்க்கிறோம், கிறிஸ்டொபர் நோலன், ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் என்றால் தனி மரியாதை. ஃபாக்ஸ் வெளியிடுகிறதா, சோனி தயாரித்ததா என கவனிப்பதில்லை. ஒலிக்கோப்பு வாங்கும்போது, இளையராஜாவா, ஏ. ஆர். ரெஹ்மானா எனப் பார்க்கிறோம். எச்.எம்.வி. வெளியிட்டிருக்கிறதா, எக்கோ போட்டிருக்கிறதா என்பது முக்கியமேயல்ல. ஆனால், கணினி விளையாட்டில் அப்படி கிடையாது. எந்த நிறுவனம் வெளியிடுகிறதோ, அவர்களின் பெயரே பிரதானமாக இருக்கும். EA என்கிறார்கள்; ஜிங்கா என்பார்கள்; ஆக்டிவிஷன் என்பார்கள். மார்க்கஸ் வந்த பிறகுதான் ‘இது மார்க்கஸ் உருவாக்கம்’ என்கிறார்கள்.

st_alphageek_minecraft4_f

மைன்கிராஃப்டில் இருக்கும்போது, ‘உலகம் ரொமப் பெருசு மாமே!’ என எண்ணவைக்கிறது. இத்தனை பேர் நிறைந்த பொம்மை ஜகம் கண் முன்னே விரியும் போது, ‘என்னத்தப் பார்த்து, எதக் கட்டி, எப்படி எல்லாத்தையும் முடிக்கப் போறே!’ என மலைப்பு வரும். கூடவே இரவு முழுக்க, விடிய விடிய நாமும் ஏதாவது புத்தம்புதியதாக உருவாக்கும் உந்துதல் அடைகிறோம்.

மகாபாரதம் மாதிரி மைன்கிராஃப்ட் உருவாகியிருக்கிறது. ஆங்காங்கே கிளைக் கதைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒரு தாத்பர்யம் இருக்கிறது. போர் உண்டு. வரைபடங்கள் உண்டு. வில்லன்கள் உண்டு. கண்ணக் கட்டிய மன்னனாக கதை எங்கே ஆரம்பிக்கிறது, எப்பொழுது முடியும் என்றும் தெரியவில்லை. ஆபத்துகளும் இரகசிய பாதைகளும் வரங்களும் சாபங்களும் நிறைந்திருக்கின்றன. மொத்தத்தில் பொழுது போவதே தெரிவதில்லை.

மைன்கிராஃப்ட் குறித்த ஆவணப்படம்: https://www.youtube.com/watch?v=wxrrKkfRHvs

http://www.wired.co.uk/magazine/archive/2012/07/features/changing-the-game/viewall
http://www.wired.co.uk/magazine/archive/2012/07/features/changing-the-game
http://www.wired.com/2013/11/minecraft-book/all/
http://www.polygon.com/2014/4/29/5665834/minecraft-sales-15m-copies-pc

அரசு சாரா அமைப்புகளின் மஹாராஜாக்கள்

வெளிநாட்டு நிதி மற்றும் அரசு சாரா அமைப்புகளில் இருக்கும் மஹாராஜாக்கள்

http://www.moneylife.in/article/foreign-funding-and-the-maharajas-among-ngos/37943.html

– பேராசிரியர் ஆர் வைத்தியநாதன்

கோடிகள் ஈட்டும் இலாப-நோக்கற்ற நிறுவனங்களுக்கும் எங்கிருந்து பணம் கிடைக்கிறது என்று அறிய முடியாத என்.ஜீ.ஓக்களுக்கும் உகந்த பூமியாக இந்தியா இருக்கிறது. இந்த நிறுவனங்களுக்கு வரவாகும் தொகையில் பெருமளவு, அரசியல்வாதிகளுக்கும் அதிகாரத்துவம் கொண்டவர்களால் நடத்தப்படும் வியாபாரங்களுக்கும் செல்கிறது என்று ஊகிக்கப்படுகிறது. அதைக் குறித்த கட்டுரை:

இந்தியா ஒரு விசித்திரமான நாடு. உத்தியோகபூர்வமாக இங்கு 20 பங்கு சந்தைகள் இருக்கின்றன. ஆனால் இவற்றுள் இரண்டு மட்டுமே இயங்குகின்றன. மும்பை பங்கு சந்தையில் [பி.எஸ்.ஈ] பட்டியலிடப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை மட்டும் கிட்டத்தட்ட 9,000. இதில் குறைந்த பட்சம் 3,500 பங்குகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே விற்கப்படுகின்றன. அதிகம் வாங்கி/விற்கப்படும் 50 பத்திரங்கள் மட்டும் கிட்டத்தட்ட மொத்த சந்தையின் மூன்றில் இரண்டு மடங்கை ஆக்கிரமித்திருக்கினறன. உண்மையில் 250 முதல் 300 “முக்கிய” பங்குகள் மட்டுமே  வர்த்தகத்தில் புழங்குகின்றன. இதில் சுவாரசியம் என்னவென்றால், இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) மூலம் வெளியிடப்பட்ட இந்திய பத்திர சந்தை புள்ளிவிபரங்களின் சமீபத்திய கையேட்டில் மும்பை பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் எண்ணிக்கையை சொல்வதை நீக்கி விட்டது! குறையும் எண்களின் பிரச்சினையைத் தீர்க்க இப்படியும் ஒரு வழி இருக்கிறது.

இதே பாணியில், நாம் இந்தியாவில் இயங்கும் இலாபத்திற்காக இயங்காத அல்லது அரசு சாரா நிறுவனங்களை (என்.ஜி.ஓ) ஆய்வு செய்ய முடிவு செய்தோம். கல்வி போதனைத்துறையில் இருப்பதால், நாம் சராசரியாக ஆய்வுக்கு எடுக்காத விஷயங்களை விசாரணைக்கு எடுத்தோம்! இந்த மாதிரி சமயங்களில் தூங்கும் கும்பகர்ணனை எழுப்ப வேண்டாம் என்பதுதான் தேசிய வழக்கு.

NGOக்கள் என்றால் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள். இவர்கள் VOs எனப்படும் தொண்டு நிறுவனங்களின் கோப்பு அல்லது தன்னார்வ நிறுவனங்கள் (VAs).  மிக சமீபத்தில் தன்னார்வ அபிவிருத்தி நிறுவனங்கள் (VDOs) என்றும் அழைக்கப்படுகிறார்கள். மற்றும் அரசு சாரா அபிவிருத்தி நிறுவனங்கள் (NGDOs) அல்லது இலாப நோக்கற்ற நிறுவனங்கள் (NPIs) என்றும் பிரிகிறார்கள். பல்வேறு இந்திய மொழிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு சமமான பெயர்கள் உள்ளன. இந்தி தொண்டு நிறுவனங்கள் சுயம்சேவி சன்ஸ்தாயேன் அல்லது ஸ்வயம்ஸேவி சங்காத்தன் என அழைக்கப்படுகின்றன.

1860 சங்கங்கள் பதிவு சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னதாக, தன்னார்வ நடவடிக்கை, மத மற்றும் கலாச்சார பண்பாட்டை முக்கியமாக பின்பற்றியது. பின்னர், இலாப நோக்கற்று இயங்கும் துறை சார்ந்து பல்வேறு சட்டங்கள் அமலாகின. இதன் தொடக்க புள்ளியாக இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 19வது ஷரத்தில் குடிமை உரிமைகள் பல அங்கீகரிக்கப்பட்டது. அதில், “அமைப்புகள் அல்லது சங்கங்களின் அமைக்க ….” உரிமை தரப்பட்டது . இது இலாபம் ஈட்டா துறைக்கு பொருத்தமான சட்ட விதிகளை சட்ட அடிப்படையில் அமைக்கிறது. சட்டபூர்வமாக பதிவு செய்யாத ஒரு நிறுவனம் தன்னுடைய இலாப நோக்கற்ற, தன்னார்வ அல்லது நற்பணி தொடங்கும் நோக்கத்தை அனுமதிக்கவும் குழுவாக இயங்கவும் கட்டாயமற்ற விதிகளும் இதில் உள்ளன. இந்த விதிகள் என்.ஜி.ஓ.வின் விருப்ப இயல்புக்கு ஏற்ப இயங்க சுதந்திரம் தருகின்றன. இந்த நெகிழ்வுத்தன்மையால், பதிவு செய்யாத தன்னார்வ அமைப்புகள் எக்கச்சக்கமாக இருக்கின்றன.

இந்தியாவிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்ட (UNDP) மற்றும் ஐ.நா. தொண்டர்கள் (UNV) திட்டமும் UNDP யின் தில்லி அலுவலகத்தில் ஜனவரி 2006 ல் ஒரு கருத்துக்களம் ஏற்பாடு செய்தன. இலாபம் ஈட்டாத நிறுவனங்கள் (NPIs) குறித்த சிக்கல்களை விவாதிக்கவும் ஐ.நா. கையேடு செயல்படுத்துவது தொடர்பான பிரச்சினைகள் பற்றி பேசவும் சிஸ்டம் ஆஃப் நேஷனல் அக்கவுண்ட்ஸ் [System of National Accounts (SNA)] கீழ் கூடினார்கள்.

உலகம் முழுவதும் இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கான (NPI) ஐ.நா. கையேட்டை செயல்படுத்தும் முயற்சியில் ஒரு அங்கமாக இந்தக் கூட்டம் அமைந்தது. இந்தக் கூட்டத்தில் திட்ட கமிஷன், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், UNV தலைமையகம், மற்றும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சிவில் சமூகம் கல்வி மையத்தின்பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த அரங்கில், ஐ.நா. குடியுரிமை ஒருங்கிணைப்பாளரும், UNDP இந்தியா குடியுரிமை பிரதிநிதியும் தேசிய பொருளாதாரத்திற்கு NPIகளின் பங்களிப்புகளை அறியும் பொருட்டு ஐ.நா. கையேட்டை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். தன்னார்வ துறை நாட்டின் பொருளாதார மற்றும் சமூக மாற்றத்திற்கான முக்கிய பங்கை ஆற்றுகின்றன என்றும்; கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளின் வளர்ச்சியில் என்.பி.ஐ.க்களுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, கருத்துக்களத்தில் இந்தியாவில் இயங்கும் NPIக்களுக்கு ஐ.நா. கையேட்டை அமல்படுத்த வேண்டும்; மற்றும் நாட்டில் செயல்படும் NPI கணக்குகளை தொகுக்க பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

தேசிய ஆலோசனை கவுன்சில் மறைமுகமான வழிகாட்டுதலின் கீழ், மே 2007 ல் தன்னார்வத் துறைக்கான தேசிய கொள்கை உருவானது. சுயாதீனமாக இயங்கவும், சொந்தமாக வழிவகுத்து தீர்க்கமாக இயங்கும் தன்னார்வ துறையை ஊக்குவித்தது. மாறுபட்ட இந்திய சமூகத்தைப் போலவே, மாறுபட்ட மனிதர்களை அதிகாரத்திலும், வடிவத்திலும் பதவி செயல்பாடுகளிலும் கொண்டு, அதை செய்ய முடியும் என்று நம்பியது. இந்திய மக்களின் சமூக, பண்பாட்டு, பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களிக்கும்  என உறுதி மொழி கோரியது. இது தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தன்னாட்சி மற்றும் அடையாளத்திற்கு பங்கம் இல்லாமல், அரசாங்கம் மற்றும் தன்னார்வத் துறை இடையே ஒரு புதிய உறவு கண்டுபிடிக்க ஒரு செயல்முறை தொடக்கமாக அமைகிறது (GOI / திட்டக்குழு, 2007) . அதன்படி, இதை செயல்படுத்தினால் இலாபம்-சாரா துறையின் செயலில் ஈடுபடும் தன்மையினால், தொண்டுச்சூழல் பரவலாகப் பெருகி, சமூக விவகாரங்கள் மற்றும் மேம்பாட்டு முயற்சிகளில் , இந்திய வளர்ச்சியை ஊக்குவிக்கும் செயல்களை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எனவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) ‘ன் இரண்டாவது ஆட்சிக்கால தொடக்கத்தில், தன்னார்வ அல்லது அரசு சாரா நிறுவனங்கள் தன்னிச்சையாக முடிவெடுக்கவும் நிதி நடவடிக்கைகளில் சுதந்திரமாக இயங்கவும் முழுமையான அதிகாரம் இருந்தன என்பதை அறியலாம்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல சட்டங்களின் கீழ் பதிவு செய்யலாம் அல்லது எந்தவொன்றிலும் பதிவு செய்யாமல் இயங்கலாம் –  எதிலும் பதிவு செய்யாமல் இயங்குவதே அதிகமாக காணப்படுகிறது.

இலாப நோக்கற்ற நிறுவனங்களைப் பதிவதற்கு, பல்வேறு வகையான சட்டங்கள் இருக்கின்றன:

  • சங்கங்கள் பதிவு சட்டம், 1860;
  • இந்திய அறக்கட்டளைகள் சட்டம், 1882;
  • பொது அறக்கட்டளை சட்டம், 1950;
  • இந்திய நிறுவன சட்டம் (பிரிவு 25), 1956

இலாப நோக்கற்ற மத நிறுவனங்கள் கீழ் பதிவு செய்யும்போது:

  • சமய அறநிலைய சட்டம், 1863;
  • தொண்டு மற்றும் சமய அறக்கட்டளை சட்டம், 1920;
  • முஸல்மான் வக்ஃப் சட்டம், 1923;
  • வக்ஃப் சட்டம், 1954
  • பொது Wakfs (வரம்பு நீட்டிப்பு) சட்டம், 1959

“சங்கங்களின் சங்கங்கள் பதிவு சட்டம் / மும்பை பொது அறக்கட்டளை சட்டத்தின் கீழ் பதிவு” அடியில் 2009 ஆம் ஆண்டு வரை மட்டும், மொத்தம் 33 லட்சம் சங்கங்கள் இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவற்றில் 22.58 லட்சம் சங்கங்களைப் பற்றி பொருளியல் மற்றும் புள்ளியியல் மாநில இயக்கம் [DESs]  தகவல் சேகரிக்க முடிந்திருக்கிறது அவற்றுள் 21 லட்சம் சங்கம் தொடர்பான தகவல்களை கணினிமயமாக்க முடிந்திருக்கிறது.

மாநிலங்கள்தோறும் இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களைத் தேடி மத்திய புள்ளியியல் அலுவலகம் (சி.எஸ்.ஓ) மக்களை அனுப்பிய போது, அது அவர்களில் இலட்சக்கணக்கானோரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தான் சரிபார்க்க முயன்ற 22 லட்சம் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில்,வெறும் 6.95 லட்சம் பேரை மட்டுமே காண முடிந்தது.

இந்த புள்ளிவிவர கணக்குகளில், தொண்டு மற்றும் சமய அறக்கட்டளை சட்டம், 1920, கீழ் பதிவு செய்த இலாப நோக்கற்ற நிறுவனங்களை சேர்க்கவேயில்லை. அதையும் கூட்டிக்கொண்டால், இன்னும் சில பல ஆயிரங்களை சேர்க்க வேண்டும். அதன் பின்னர் இந்திய கம்பெனி சட்டம் 1956 இருக்கிறது. அதன் மேல் அறக்கட்டளைகள் அமைக்க உதவும் மற்ற சட்டங்களின் கீழ் இலாபமடையா  நிறுவனங்கள் நிறுவப்பட்டு உள்ளன.

மேலும் இந்தத் தொகைகளில் கிராமங்களில் இயங்கும்  பல குழுக்கள் மற்றும் சங்கங்களையும், வழக்கமாக குறிப்பிட்ட நோக்கத்திற்காக அல்லது பிரச்சாரங்களுக்கு பெரிய நிறுவனங்களில் ஒரு அங்கமாக அவ்வப்போது தோன்றுவதையும் சேர்க்கவில்லை.  இவை அந்தந்த நேரங்களில், தொகுதி மற்றும் கிராம மட்டங்களில் இயக்க, வெகுஜன சார்ந்த குழுக்கள் என குறிப்பிடப்படுகிறது. PRIA மற்றும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகமும் செய்த ஆய்வின்படி இந்தியாவின் மொத்த தன்னார்வ நிறுவனங்களில் கிட்டத்தட்ட 50% எந்த சட்டத்தின் கீழும் பதிவு செய்யப்படவில்லை.

இந்த பதிவு குழுக்கள் வகைப்படுத்தும் போது பழமையான சங்கங்கள் பதிவு சட்டம் குருடாகிறது. அனைத்து பதிவு சமூகங்களையும் அதே வழியில் நடத்துகிறது. இந்த அட்டவணையில் அதி இலாபகரமான பள்ளிகளும், கொள்ளையாக சம்பாதிக்கும்கல்லூரிகளும், மிகுகொழிப்பில் இருக்கும் மருத்துவமனைகளும் நாட்டின் விளையாட்டு சங்கங்களும் அடங்கும். இந்திய கிரிக்கெட் (பிசிசிஐ) கட்டுப்பாட்டு வாரியம் தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு அரசு சாரா என்ஜிஓ என்பதை நினைவில் கொள்ளவும். இந்திய தொழில் கூட்டமைப்பும் (சிஐஐ) ஒரு அரசு சாரா என்.ஜி.ஓ.

சி.எஸ்.ஓ. சர்வேயில் இருக்கும் முக்கிய கண்டுபிடிப்புகள்:

சி.எஸ்.ஓ. கருத்துக்கணிப்பு மூன்றே மூன்று பிரிவை மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொண்டன:

  • ஆய்வு சங்கங்கள் பதிவு சட்டம் 1860
  • பம்பாய் பொது அறக்கட்டளைகள் சட்டம், 1950
  • இந்திய நிறுவனங்கள் சட்டம் 1956 – 25 பிரிவு

– இவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே ஆய்வில் இடம்பிடித்தன.

முதல் கட்டத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் பார்த்தால் 31.7 லட்சம் NPIகள் இந்தியாவில் பதிவாகின. இதில் 58.7% கிராமப்புறங்களில் உள்ளன. பெரும்பாலான NPIகள் சமுதாய, சமூக மற்றும் தனிப்பட்ட சேவைகள், கலாச்சார சேவைகள், கல்வி, சுகாதார சேவைகளில் ஈடுபட்டுள்ளன.

1990 ஆம் ஆண்டுக்கு பிறகு உருவாக்கப்பட்ட NPIகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. பொருளாதார சீர்திருத்தத்திற்கு பிந்தைய காலகட்டமான அந்த நேரத்தில், உலக வல்லரசுகளும் இந்தியாவில் ஆர்வம் காட்ட தொடங்குகிறன.

  • 1970 ம் ஆண்டு வரை 1.44 லட்சம் சங்கங்கள் மட்டுமே பதிவு செய்திருந்தன.
  • அதன் பிறகு 1971 ல் இருந்து 1980 வரையான காலத்தில் 1.79 லட்சம் சங்கங்கள் பதிவு செய்துகொண்டன.
  • 1981 இல் இருந்து 1990 வரை காலத்தில் 5.52 லட்சம் பதிவானார்கள்.
  • 1991 இல் இருந்து 2000 வரையிலான காலத்தில் 11.22 லட்சம் பதிவு பெற்றார்கள்.
  • 2000 ஆம் ஆண்டிற்கு பிறகு மட்டும் 11.35 லட்சம் சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

செயல்படாத சங்கங்களின் பதிவை ரத்து செய்ய எந்த ஷரத்தும் இல்லை. எனவே முதல் கட்ட கணிப்பில் சங்கங்கள் எண்ணிக்கை மற்றும் பதிவு அதிகாரிகளிடமிருந்து கிடைக்கின்ற பதிவேடுகள் அடிப்படையில் ஆய்வு அமைகிறது.

18 லட்சம் சங்கங்களை இரண்டாம் கட்ட ஆய்வில் விஜயம் செய்தோம். இந்தத் தொகை பதிவு செய்தவர்களில் 57.6% சதவிகித சங்கங்கள் ஆகும். இவற்றில், 4.65 லட்சம் சங்கங்களுக்கு தகவல் கிடைக்கும். அவர்கள் பின்வரும் தலை மூன்று துறைகளில் ஈடுபட்டனர்:

  • சமூக சேவைகள் (35%)
  • கல்வி மற்றும் ஆராய்ச்சி (21%)
  • கலாச்சாரம் & உல்லாசம் (15%).

முதல் மூன்று நடவடிக்கைகளில் மட்டும் 71% பதிவு செய்த சங்கங்கள் பங்களிக்கின்றன.

தரவுகளின் அடிப்படையில் மொத்த ஜனசக்தியில் தொண்டர்களும் இருக்கிறார்கள்;  சம்பளத்திற்கு அமர்த்தும் தொழிலாளர்களும் அடங்குவார்கள். மொத்தம் 144 லட்சம் பேர் உழைக்கிறார்கள். இவர்களில் 11 லட்சம் பேருக்கு சன்மானம் வழங்கப்படுகிறது.  சி.எஸ்.ஓ. கணக்குப்படி அவர்களின் செயல்பாட்டு செலவுகளுக்காக பயன்படுத்தப்படும் தொகையைக் கொண்டு பொருளாதார உற்பத்தியை மதிப்பிட்டால் ரூ. 41, 292 கோடி அளவிற்கு வரும்!

லாபம் ஈட்டா நிறுவனங்களை இந்திய நிறுவன சட்டம் (பிரிவு 25), 1956 கீழும் பதியலாம். நிறுவன விவகார அமைச்சகத்தினால் பட்டியலிடப்பட்ட 2,595 நிறுவனங்கள் தொடர்பான நிதி தரவுகள் பெறப்பட்டு, அவையும் பகுப்பாய்வு செய்யப்பட்டது. எனினும், இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளில் எத்தனை  தொழிலாளர் ஈடுபட்டனர் என்ற தகவலையும் அந்த அமைப்புகளின் நோக்கங்களுக்காக எவ்வளவு ஊதியம் கிடைத்தது போன்றவற்றையும் அறிய முடிவதில்லை.

சங்கங்கள் பதிவு சட்டம் 1860 , மும்பை டிரஸ்ட் சட்டம் மற்றும் இந்திய நிறுவனங்கள் சட்டம் (பிரிவு 25), 1956 கீழ் இயங்கும் சங்கங்களை மட்டும் ஆய்வுக்குட்படுத்த  சி.எஸ்.ஓ.  முடிவு செய்தது. பெரும்பாலான NPIகள் சங்கங்கள் பதிவு சட்டம் 1860ன் கீழ் பதிவு செய்யப்படுவதுதான் இதற்கு காரணம். பல்வேறு மத இலாப நோக்கற்ற நிறுவனங்கள் என்னும் குடையின் அடியில் இருக்கும் என்.ஜீ.ஓ.க்களை இந்த ஆய்வில் சேர்க்கவில்லை. அவர்கள் தொகை பூதாகரமானது.

நிதி அறிக்கைகளை சமர்ப்பிக்கும் ஏற்பாட்டை பெரும்பாலான மாநிலங்கள், ஒழுங்காக அமலாக்குவதில்லை என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது. சங்கங்களே பதிவாளர் அலுவலகத்தில் நிதி அறிக்கைகளை சமர்ப்பித்தாலும் கூட, அந்த தகவல்களை பராமரிக்க எந்த நடைமுறையும் கிடையாது.

அரசு சாரா அமைப்புகளின் மஹாராஜாக்கள்:

தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ஒரு வகையினர் உள்துறை அமைச்சகத்துடன் பதிவு செய்து கொள்ள வேண்டும். அயல்நாட்டு பங்களிப்பு விதிமுறைகள் விவகார சட்டம் [FCRA] கீழ் இந்த தனியார் அறக்கட்டளைகள் வரும்.  அதே போல் வெளிநாட்டு அரசு நிறுவனங்களின் நிதி கிடைக்கும் என்.ஜி.ஓ.க்களை யூரோ அல்லது டாலர் தொண்டு நிறுவனங்கள் என அழைக்கிறார்கள்.
2011-2012 ஆம் சிறப்பம்சங்கள்:

1. FCRAவின் கீழ் 31 மார்ச் 2012 வரை மொத்தம் 43,527 சங்கங்கள்  பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2011-12 ம் நிதியாண்டில், இரண்டாயிரத்திற்கும் மேலான கூட்டமைப்புகள் பதிவு பெற்றன. 304 நிறுவனங்களுக்கு வெளிநாட்டு பங்களிப்புகளை பெற முன் அனுமதி வழங்கப்பட்டது.

2.  22,702 அமைப்புகளில் இருந்து  ரூ. 11,546.29 கோடிகளுக்கு வெளிநாட்டு பங்களிப்பு என  மொத்தம் ரசீது பதிவாயின. [இவற்றில் கணக்கில் வராமலும் குறைவாகக் கணக்கு காட்டும் நோக்கும் பொதுவானது]

கடந்த பத்தாண்டு போக்கு:

வருடம்

பதிவு செய்த அமைப்புகள்

அறிவிக்கும் அமைப்புகள்

வெளிநாட்டு வருமானம்

[ரூ.  ₹ கோடிகளில்]

2002-2003

26404

16590

5,046.51

2003-2004

28351

17145

5,105.46

2004-2005

30321

18540

6,256.68

2005-2006

32144

18,570

7,877.57

2006-2007

33937

18,996

11,007.43

2007-2008

34803

18796

9,663.46

2008-2009

36414

20088

10,802.67

2009-2010

38,436

21,508

10,337.59

2010-2011

40,575

22,735

10,334.12

2011-2012

43,527

22,702

11,546.29

மொத்தமாக

2002 -2012

97,383.53

 

ஆதாரம்: உள்துறை அமைச்சகம் –வெளிநாட்டினர் துறை, FCRA பிரிவு

3. அயல்நாட்டு நிதியில் மிக அதிகமான நன்கொடைகள்

  • தில்லிக்கு வந்தன – ரூ. 2,285.75 கோடி
  • தமிழ்நாடு (ரூ. 1, 704,76 கோடி)
  • ஆந்திர பிரதேசம் (ரூ. 1, 258,52 கோடி)

4. மாவட்டங்களுக்கு மத்தியில் மிக அதிகமான நன்கொடைகள்

  • சென்னை – ரூ. 889.99 கோடி
  • மும்பை (ரூ. 825.40 கோடி)
  • பெங்களூர் (ரூ. 812.48 கோடி)

5. கொடை நாடுகளின் பட்டியலில்

  • அமெரிக்கா (ரூ. 3, 838.23 கோடி)
  • இங்கிலாந்து (ரூ. 1, 219,02 கோடி)
  • ஜெர்மனி (ரூ. 1, 096,01 கோடி).

6. வெளிநாட்டு நன்கொடையாளர்கள் பட்டியலில்

  • Compassion International, அமெரிக்கா (ரூ. 183.83 கோடி),
  • Church of Jesus Christ of Latter day Saints, பிந்தைய நாள் புனிதர்களின் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை (எல்.டி. சர்ச்), அமெரிக்கா (ரூ. 130.77 கோடி)
  • Kinder Not Hilfe (KNH), ஜெர்மனி (ரூ. 51.76 கோடி).

7. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (என்.ஜீ.ஓ.) மத்தியில் அதிக அளவு வெளிநாட்டு நன்கொடைகளைப் பெற்றவர்கள்

  • இந்திய உலக பார்வை, சென்னை, தமிழ்நாடு, (ரூ. 233.38 கோடி)
  • நம்பிக்கை சர்ச் இந்தியா பத்தனம்திட்டா, கேரளா (ரூ. 190.05 கோடி)
  • கிராமப்புற மேம்பாட்டு அறக்கட்டளை, அனந்தப்பூர், ஆந்திரா (ரூ. 144.39 கோடி)

8. வெளிநாட்டு பங்களிப்பு பெற்ற துறைகளில்

  • ஊரக வளர்ச்சி (ரூ. 945.77 கோடி)
  • குழந்தைகள் நலன் (ரூ. 929.22 கோடி)
  • கட்டுமானம் மற்றும் பள்ளி / கல்லூரிகளில் பராமரிப்பு (ரூ. 824.11 கோடி)
  • ஆராய்ச்சி (ரூ. 539.14 கோடி)
  • மேலே குறிப்பிட்டுள்ளதை விட மற்ற செயல்பாடுகள் – ரூ. 2, 253,61 கோடி

நடைமுறை செலவுகளுக்குத்தான் [கட்டிடம் / கார்கள் / ஜீப்புகள் / கணினி / கேமராக்கள் முதலியன] தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மிகவும் செலவு செய்கின்றன என்பது இதில் கவனிக்க வேண்டிய தகவல்.

காலத்தின் தேவை:

வெளிநாட்டு நிதி பெறும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக புலனாய்வு பணியகம் (IB) அறிக்கை தெரிவிக்கிறது. இதன் பின்னணியில், இந்தத் துறையை  முழுமையான அலசலுக்குள்ளாக்க அறிஞர் சபை தேவை. இந்த நிபுணர்கள் குழுவில் IBயைச் சேர்ந்தவர்களும் இருக்கலாம். மேலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை கையாள்வதில் அனுபவம் வாய்ந்த ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்க போன்ற பிற நாடுகளின் அனுபவங்களை பயன்படுத்தலாம். என்.ஜி.ஒ.க்களுக்கான ஆட்சி கட்டுப்பாடுகளை உருவாக்கலாம். இந்திய நிறுவனங்களுக்காக 2013-ல் அறிமுகப்படுத்தப்பட்ட கட்டாய சமூக பொறுப்புணர்வு பங்களிப்புகளின் பின்னணியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை மீள்பார்வை நோக்கலாம். வெள்ளையனின் சுமையாக இல்லாமல் இருப்போம்!

 

(ஆசிரியர் ஐஐஎம் பி  நிதி பேராசிரியர் – கட்டுரை அவரின் தனிப்பட்ட கருத்து)

(ஆர் வைத்தியநாதன், நிதி மற்றும் ஆளுகை பேராசிரியர், மூன்று தசாப்தங்களாக ஐ.ஐ. எம் பெங்களூர் பல்கலையில் கற்றுத்தருகிறார். தொடர்ச்சியாக மிகவும் பிரபலமான ஆசிரியர்களுள் ஒன்றாக மதிப்பிடப்படுகிறார். இந்திய பொருளாதாரத்தின் மிகப் பெரிய அங்கமாக சிறிய தொழில் முனைவோர்களும் குடும்பங்களும் அடங்கியிருப்பதைக் கொண்டு,  பேராசிரியர் வைத்தியநாதன் இந்தியா Uninc என்னும் கூற்றை உருவாக்கினார். பேராசிரியர் வைத்தியநாதன் செபி மற்றும் ரிசர்வ் வங்கி ஆலோசனை பலகைகளில் அமர்ந்திருக்கிறார்.)

Uncharted: Big Data as a Lens on Human Culture by Erez Aiden, Jean-Baptiste Michel

kim-kardashian-donut-Glazed_Break_The_Internet

ரஜினிகாந்த் குறித்து எத்தனை பேருக்குத் தெரியும்! என் பாட்டனார் தலைமுறையில் ஆரம்பித்து என்னுடைய பேத்தி தலைமுறை வரை எல்லோருக்குமே அறிமுகமான பெயர் – ரஜினி. ஆனால், திருவள்ளுவர் என்று சொன்னால், என் மகளுக்கே தட்டித் தடுமாறி, “இந்த வசனமாகப் பேசித் தள்ளும் சீரியல் படம் எல்லாம் எடுப்பாரே? ரெண்டு பொண்டாட்டி ‘ஒகே’ என்பாரே! அவரின் படத்தில் வருபவர்தானே?” என்பாள். திருவள்ளுவரைக் குறித்து எத்தனை புத்தகம் இருக்கும்? சூப்பர் ஸ்டாரைக் குறித்து எத்தனை புத்தகம் இருக்கும்?

எவர் காலத்தினால் அழியாமல் இருக்கிறார்? எப்படி ஆராயப்படுகிறார்? எவ்வாறு அந்தந்தக் காலத்தில் முக்கியமானவர் அறியப்படுகிறார்? எங்ஙனம் இவற்றை தெரிந்துகொள்வது?

இதுதான் இந்தப் புத்தகத்தின் மூலக்கரு. 1800களில் ஆரம்பித்து இதுகாறும் 130 மில்லியன் புத்தகங்களுக்கு மேல் வெளியாகி இருக்கிறது. தூரத்தில் இருப்பதைப் பார்ப்பதற்கு டெலஸ்கோப் இருக்கிறது. கிட்ட இருப்பதை நுண்மையாக நோக்குவதற்கு மைக்ரோஸ்கோப் இருக்கிறது. அதே போல் இந்த பதின்மூன்று கோடி நூல்களை எப்படி ஆராயலாம்? அவற்றில் சொல்லி இருக்கும் கலாச்சாரக் குறியீடுகளையும், அரசியல் நிலைப்பாடுகளையும், சரித்திர தகவல்களையும், பொருளாதார ஆராய்ச்சிகளையும் எப்படி வரலாற்றுப் பார்வையோடு கணினி துணையோடு அணுகுவது?

கூகுள் ஸ்காலர் நுழைகிறார். உலகின் மிகப் பெரிய நூலகமான ‘லைப்ரரி ஆஃப் காங்கிரஸி’ல் முப்பத்தி ஆறு மில்லியன் புத்தகம் இருக்கிறது. ஹார்வார்டு பல்கலை வாசகசாலையில் பதினேழு மில்லியன் புத்தகங்கள். இவற்றில் கிட்டத்தட்ட முப்பது மில்லியன் நூல்களை கூகிள், கணினி மூலம் கிடைக்க வகை செய்கிறது. இவற்றைக் கொண்டு, அதில் இருக்கும் வார்த்தைகளை அளக்க என் – கிராம் வசதியை கூகுள் தருகிறது.

அடக்குமுறையாக சமூகத்தில் சத்தமாகப் பேசுவோரின் குரல் மட்டுமே ஒலிக்குமா? நாஜி ஜெர்மனியில் மார்க் ஷகால் ஓவியங்களையும் பால் க்ளீ வரைபடங்களையும் பேசவிடாமால் வைத்திருந்தார்கள். கருத்துகளை மொத்தமாக ஜடமாக்கமுடிகிறது. ஒரே ஒரு சித்தாந்தத்தை மட்டுமே முழங்குபவர்களை கல்லூரிகளிலும் ஆட்சி பீடங்களிலும் வைத்திருந்தால் என்ன ஆகும் – என்பதைப் பார்க்க முடிகிறது. ஆனால், ஹிட்லர் வீழ்ந்த பின் இவர்களின் புகழ் பன்மடங்கு உயர்வதையும் பார்க்க முடிகிறது.

ரஷியாவின் ஸ்டாலின் ராஜாங்கம் இன்னும் மோசம். ஸ்டாலின் வீழ்ந்தபின்னும், அவரால் கொன்று குவிக்கப்பட்ட அரசியல் தலைவர்களின் பெயர்களும் சிந்தனாவதிகளின் சித்தாந்தங்களும் வெளிவரவே இல்லை. 1980களில் கம்யூனிசம் மொத்தமாக நொறுங்கிய பிறகே, அந்த மனிதர்களின் வாழ்க்கையையும் செயல்பாட்டையும் அறிய முடிகிறது.

அப்படியானால்… புத்தகங்களில் பிழையே இருக்காதா? ஒட்டுமொத்தமாக அலசினால் கூட ஆட்டுமந்தை சிந்தை வெளிப்படுவதை தடுக்க இயலாதா?

புகழ்பெற்ற ஜப்பானிய பழமொழியை எடுத்துக் கொள்வோம்: “ஓராயிரம் வார்த்தைகளால் சொல்வதை ஒரேயொரு படம் உணர்த்திவிடும்!” – இது ஜப்பானில் உதித்ததே அல்ல! அமெரிக்காவின் செய்தி ஆசிரியர் ஆர்த்தர் ப்ரிஸ்பேன் 1911ல் சொன்னது. இந்த மாதிரி மூல ஆராய்ச்சிகளை செய்யவும் எந்த வார்த்தை எப்பொழுது புழக்கத்திற்கு வந்தது என்பதை ஆராயவும் கூகுள் என்-கிராம் தேடுபொறி உதவுகிறது. அவற்றை எப்படி பயன்படுத்தலாம் என்னும் சிந்தனையை விசாலமாக்க இந்தப் புத்தகம் உதவுகிறது.

சரி… இவ்வளவு சொல்லியாகி விட்டது. கடந்த இரு நூற்றாண்டுகளின் அதிநாயகர்கள் எவர்?

  1. அடால்ஃப் ஹிட்லர்
  2. காரல் மார்க்ஸ்
  3. சிக்மன்ட் ப்ராய்ட்
  4. ரொனாலடு ரேகன்
  5. ஜோசஃப் ஸ்டாலின்
  6. விளாடிமிர் லெனின்
  7. ட்வைட் ஐஸனோவர்
  8. சார்லஸ் டிக்கன்ஸ்
  9. பெனிடோ முஸோலினி
  10. ரிச்சர்டு வாக்னர்

Fame is a bee.
It has a song—
It has a sting—
Ah, too, it has a wing.
– by Emily Dickinson

Uncharted_Big_data_As_lens_On_Human_Culture

Dataclysm: Who We Are (When We Think No One’s Looking) by Christian Rudder

Dataclysm Who We Are When We Think No Ones Looking Hardcover

புத்தகத்தை கிடுகிடுவென படித்துவிட முடிகிறது. ஏற்கனவே அரைத்த மசாலாவைப் போட்டு தமிழ் சினிமா எடுப்பது போல் சுவையாகவும் எளிமையாகவும் இருக்கிறது. மீண்டும் மீண்டும் வாசித்து, புதிய தரிசனங்களை, காலந்தோறும் சேமித்து வைக்கும் இரகசியங்களை எல்லாம் சொல்வதில்லை. மாலை நேரத்தில் சமீபத்தில் எம்.பி.ஏ முடித்த நண்பர் ஒருவருடன் நேர்ப்பேச்சு உரையாடல் போல் இலகுவான, ஆழ்ந்து பத்தி பத்தியாக வாசிக்க வேண்டாத நடை.

இந்தியாவின் பிக் பஜார் போல் அமெரிக்காவில் டார்கெட். தான் கருவுற்று இருக்கிறோமா என்பதை சோதிக்கும் சாதனத்தை பெற்றொருக்குத் தெரியாமல் பதின்ம வயது மகள் வாங்கிக் கொண்டு வீட்டிற்குப் போகிறாள். இரண்டே நாளில் அவருக்கு “தாய்மை”, “குழந்தை வளர்ப்பு” போன்ற பத்திரிகைகளுக்கு இலவச சந்தா கொடுக்கும் விளம்பரங்கள் முதல் ஆரோக்கியமான குழந்தை பிறக்க என்ன உட்கொள்ள வேண்டும் என்பதற்கான மாதிரி மருந்துகள் வரை, வந்து கொண்டேயிருக்கின்றன. பெற்றொருக்கும் பெண்ணின் இரகசிய கர்ப்பம் அம்பலமாகிறது.

அது போல் கூகுள் தேடலின் மூலம் ஜுரம் பரவுவதைக் கண்டுபிடிப்பது போன்ற பரவலாகப் பேசப்பட்ட தகவல்களையும் ஆராய்ச்சிகளையும்தான் புத்தகம் பேசுகிறது.

இளை தளபதி விஜய் பாஷையில் சொல்ல வேண்டுமானால், ‘இதயத்தை நம்பி முடிவெடுக்காமல், தகவலையும் அதன் மேற்சென்ற ஆய்வையும் வைத்து முடிவெடுப்பது என் விருப்பம்.’ இப்படிச் செய்தால் “நன்றாக அமையும்” என்று குருட்டாம் போக்கில் கடவுளை நம்பி காலை விடக் கூடாது. விரிவான தரவுகளை சேமிப்பது; அந்தத் தரவுகளின் நம்பகத்தன்மையை கூடிய மட்டும் அலசுவது; அந்தத் தரவுகளைக் கொண்டு தெளிவு அடைவது; தெளிந்த போக்குகளைக் கண்டு கொண்டு அறுவிதி அடைவது – இதுவே முறைமை.

1854ஆம் வருடம். லண்டனில் எங்கு பார்த்தாலும் காலரா நோய். இப்பொழுது எபோலா பரவி ஒபாமாவையும் அவருடைய டெமொகிராட் கட்சியையும் வீழ்த்த பயன்பட்டது மாதிரி, ஏதேனும் அரசியல் சதி இருக்குமோ என எல்லோரும் ஆராய்கிறார்கள். ஜான் மட்டும் வேறு மாதிரி ஆராய்கிறார். “நோய் எங்கே அதிகமாக காணப்படுகிறது?” கேம்ப்ரிட்ஜ் தெரு முக்கில் இருந்துதான் பெரும்பாலானோருக்கு நோய் வந்திருக்க வேண்டும் என அவருக்கு தரவுகள் தெரிவிக்கிறது.

ஆனால், அதே தெரு முக்கில் சிறைச்சாலை இருக்கிறது. அங்கிருக்கும் கைதிகளுக்கு காலெரா வரவில்லை. சாராயக்கடை உபாசகர்களுக்கும் காலரா வரவே இல்லை. ஏன்? மேலும் உள்ளே சென்று தீவிரமாக ஆராய்கிறார். சாராயக்கடையே கதியென இருப்பவர்கள், வேறு நீரை உட்கொள்ளவே இல்லை. அதே போல் ஜெயிலுக்கென்று பிரத்தியேகமாக கிணறு இருக்கிறது. அதனால்தான் அந்த இரு குழுக்களும் பாதுகாப்பாக காலரா நோயை தடுத்துவிட்டார்கள். அதே தெரு மக்களின் மூச்சுக் காற்றை சுவாசித்தாலும், நோய் தீண்டவே இல்லை.

இது போல் சுவாரசியமான விஷயங்களும் தற்கால ஆராய்ச்சிகளும் காதலில் விழுவதற்கான அட்டவணைகளும் இனக்கவர்ச்சிக்கான சூட்சுமங்களும் இதில் கிடைக்கிறது. உங்கள் மேலாளர் gut-feeling கொண்டு முடிவெடுப்பவராக இருந்தால், இந்தப் புத்தகத்தைப் பரிசளிக்கலாம்.

அனுராகமாலை எடுத்தேற்றம்

மேலாளர் கனவில் வருவது அவ்வளவு சிலாக்கியமில்லை. எனினும் வந்திருந்தார்.

“போன ப்ராஜெக்ட் நன்றாக செய்திருக்கிறாய்!”

“இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் கலக்கிறீர்கள். இலவசகொத்தனார் பார்த்தால் பிலுபிலுவென்று ஆடி மாச சாமியாடுவார் சார்!”

”உனக்கு அடுத்த வேலை தயார். நம் தலைநகரமாம் வாஷிங்டன் டிசி செல்கிறாய். அங்கே படு ரகசியமான அடுத்தகட்ட ஆளில்லா விமானத்திற்கு நீதான் பொறுப்பு.”

காட்சி அப்படியே கட் ஆகிறது. நாலு பேர் தீவிரமான கலந்தாலோசனையில் இருக்கிறோம். ஒருத்தரைப் பார்த்தால் திருவள்ளுவர் போல் குருலட்சணம். இன்னும் இருவர் சிவகார்த்திகேயனின் நாயகிக்கான தேர்ந்தெடுப்பிற்காக வந்தவர்கள் போல் துள்ளலாக விளம்பர அழகி போல் காணப்படுகிறார்கள். கிட்டத்தட்ட வடிவமைப்பை முடித்து விட்டோம். பரிசோதனைக்குத் தயார்நிலையில் இருக்கிறோம்.

பணிகளைத்தான் எவ்வளவு சீக்கிரமாக கனவு முடித்துக் காட்டுகிறது. இதைத்தான் ’கனவு காணச்சொனார்!’ கலாம்.

செய்தவற்றை சொல்லிக்காட்ட மேலிடத்திடம் செல்கிறோம். அவர்களோ, சோதனை மாந்தர்களாக எங்களையேத் தேர்ந்தெடுத்து தானியங்கி விமானிகளை ஏவுகிறார்கள். சைதாப்பேட்டை கொசுவிடமிருந்தும் மந்தைவெளி மாடுகளிடமிருந்தும் ஓடி ஒளிந்தவனுக்கு drone எம்மாத்திரம். விமானியில்லா விமானத்திற்கு மாற்றாக ஏவுகணைகளை அனுப்புகிறேன். பயனில்லை. திடீரென்று எட்வர்டு ஸ்னோடென் கூட பறந்து பறந்து தாக்குகிறார். பின்னர் அவரும் எங்கோ ஓடி ஒளிந்துவிட்டார்.

“நியாயமாப் பார்த்தா என்னை பார்த்துதான் இந்த டிரோன் அனுப்பிவைக்கப்பட்டிருக்கணும்!” என்று சாரு நிவேதிதா சொல்கிறார். “நீங்க லத்தீன் அமெரிக்க கதைதானே மொழிபெயர்க்கறீங்க! இனிமேல் இரானிய கட்டுரைகளை கொண்டாங்கனு” சொல்லிட்டு அவரிடமிருந்து தப்பிக்கிறேன்.

“நீங்க இப்போ கண்விழிக்கலாம்! உங்க சாதனம் ஒழுங்கா வேலை செய்யுது. எல்லாவிதமான இடர்களிடமிருந்தும் அதற்கு தப்பிக்கத் தெரிஞ்சிருக்கு! ஆனா”.

”தமிழ்ல எனக்குப் பிடிக்காத வார்த்தை… ’ஆனா’”.

“சரி… அபப்டினா, But போட்டுக்கறேன். உங்களுக்கு உடற்பயிற்சி போதாது. உங்க விமானம் ஓடற மாதிரி நீங்க ஓட மாட்டேங்கறீங்க. உங்களுக்கு இந்த காண்டிராக்ட் கிடையாது.”

இதைத்தான் Rice Ceiling என்கிறார்களா!?

நேற்றைய கதைக்கு செம வரவேற்பு.

சொல்புதிது குழுமத்தினர் Show, don’t tell என்றார்கள். இதை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த யுவகிருஷ்ணா “அப்படியானால், உங்க கூட வேலை செஞ்ச அந்த இளம்பெண்களின் கவர்ச்சிப் படங்களை ப்ளோ-அப் ஆக போட்டிருக்கணும்.” என்றார்.

“மழையில் நனையலாம். அணைக்கட்டில் தண்ணீர் தேக்கி வைப்பதை போல் காட்ட முடியாத சொல்லில் வடிக்க முடியாத அனுபவம். அது போல் கனவு தேவதை ஸ்டரக்சரா ஆப்ஜெக்டா என்பதை C# தான் சொல்லணும்.”

நக்கீரர் எட்டிப் பார்த்தார். “உமக்கு நேர்ந்த அனுபவத்தை மட்டுமே நீங்கள் எழுத முடியும். அது மட்டுமே அகத்திறப்பை தரும். உங்களுக்கு டிரோன் உண்டா? அது துரத்தியதா? எப்படி பிழைத்தீர்கள்? என்பது இல்லாத பதிவு பொருட்குற்றம் கொண்டது!”

“ஏன்யா… உம்மை கொசு கடிச்சதே இல்லியா? எண்பது கோடி ஆண்டுகள் முன்பே கல் தோன்றி முன் தோன்றா தமிழகத்தில் டிரோன் கொண்டு சோழனும் பாண்டியனும் சண்டையிட்டது சரித்திரம்!”

இப்பொழுது ஹரிகிருஷ்ணன் முறை. “என்ன ஹரியண்ணான்னு சொன்னால் போதும். ’இலங்கு வெஞ்சினத்து அம்சிறை எறுழ்வலிக் கலுழன் உலங்கின் மேல் உருத்தன்ன நீ குரங்கின் மேல் உருத்தால்’ என்கிறான் கம்பன். இதன் தாத்பர்யமாவது என்னவென்றால், பட்டாம்பூச்சி விளைவைக் கண்டு பயப்பட்டு தோட்டத்தையே உருவாக்காமல் விடக்கூடாது. மைரோசாஃப்ட் முதல் அப்பிள் வரை பிழை இல்லாத மென்பொருளை உருவாக்குவதில்லை. உலங்கைக் கண்டு அஞ்சேல்!”

“இதுதான் இன்றைய தமிழ் உலகமா?” என்றபடி இராம.கி அய்யா புகுகிறார். “Malinga என்பதில் இருந்து வந்ததுதான் உலங்கு. மளிங்கா தலைமுடியில் கொசு மாட்டிக் கொண்டுவிடும். உள்ளங்கையில் அடிப்பதால் உலங்கு என்றும் ஆனதாக சொல்வோர் உண்டு. அது பிழையான கருத்து. எல்லோரும் கொசு வந்தால் ’மளிங்க’ என விளித்தனர். இது மளிங்க > அடிங்க் > உலங்கு என்றானது.”

தமிழ் என்றவுடன் ஃபெட்னா நச்சுநிரல் விழித்து தானியங்கியாக பதிலிடத் துவங்கியது. ”அமெரிக்காவில் தமிழ் உலகம் என்றால் ஃபெட்னா. நாங்கள் கோத்திரம் பார்த்து செவ்வாய் தோஷம் நீக்கி ஒரே சாதியில் ஜாதகக பரிவர்த்தனத்தை வருடா வருடம் ஜூலை நான்கு நடத்துகிறோம். எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. ‘நாம் தமிழர்’. நியு யார்க்கில் கொசுத் தொல்லை அதிகம். பிரகாஷ் எம் சுவாமி என்னும் கொசு எங்களைக் கடித்ததுண்டு.”

ஆட்டத்தை தவறவிடாத மனுஷ்யபுத்திரன், “அமெரிக்கரின் காதல் என்பது சிற்றோடை போன்றது. சமயத்திற்கேற்ப, தேவைக்கேற்ப, பருவத்திற்கேற்ப, முக்கியத்துவத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். தமிழனின் காதல் என்பது காவிரி போல… கர்னாடகா திறந்தால் மட்டுமே வளரும். தமிழச்சியின் காதல் என்பது பாக்கெட் தண்ணீர் போல் காசு கொடுத்தால் மட்டுமே கிடைக்கும்.”

சொம்படி சித்தர் விடுவாரா… “அமெரிக்கரின் காதல் என்பது RAM போன்றது. சமயத்திற்கேற்ப, தேவைக்கேற்ப, பருவத்திற்கேற்ப, முக்கியத்துவத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். தமிழனின் காதல் என்பது hard disk போல. சூடாகும்… தமிழச்சியின் காதல் என்பது cloud storage போல் எவருக்கு வேண்டுமானாலும் திறக்கும்.”

நொந்து போன வேல்முருகன் சொன்னார். “இதற்கு பெயரிலி சமஸ்தானமே பெட்டர் அப்பா!”

யாருக்கு வாக்களிப்பது? பத்திரிகைகளின் பரிந்துரை

இந்தியன் எக்ஸ்பிரெஸ், தினமணி, ஹிந்து போன்ற பத்திரிகைகள், தலையங்கங்கள் வெளியிடும். தேர்தல் நாளன்று வாக்கு சாவடிக்கு சென்று வரிசையில் காத்திருந்து அவசியம் வாக்களிக்க சொல்லும். ஆனால், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சொல்லமாட்டார்கள்.

இங்கே ‘இவருக்கு வாக்களியுங்கள்’ என்று வெளிப்படையாக சொல்லிவிடுகிறார்கள். உள்ளூர் கவுன்சில் தேர்தலில் துவங்கி, அமெரிக்க ஜனாதிபதி வரை எல்லோருக்குமே பரிந்துரை வழங்குகிறார்கள். நாளிதழ்கள் ஆதரவு தருபவர்கள்தான் ஜெயிப்பார்கள் என்பது நிச்சயமில்லை. ஆனால், மதில் மேல் பூனைகளை ஒரு பக்கமாக சாய்க்க, இந்த பத்திரிகை பரிந்துரை உதவுகிறது.

பெரிய அதிபர் தேர்தல்களில் இன்ன பத்திரிகை இன்ன கட்சி ஆளை தேர்ந்தெடுக்கும் என்பதை கணித்து விட முடிகிறது. ஆனால், உள்கட்சி தேர்தல்களிலும், எம்.எல்.சி. போட்டிகளிலும் யாரை சொல்வார்கள் என்பதை வாசகர்கள் ஆர்வமுடன் எதிர்நோக்குகிறார்கள்.

இதிலும் மேலிடத்து ஊடுருவல் இருக்கிறது. பதிப்பாளருக்கு ஒருவரைப் பிடித்திருக்கிறது. ஆசிரியருக்கு இன்னொருவரைப் பிடிக்கிறது. நிருபர்கள் மூன்றாமவரை விரும்புகிறார்கள். எடிட்டரை விடுமுறையில் ஓய்வெடுக்க சொல்லிவிட்டு, சந்தடி வெளியே தெரியாமல், சந்தில் தன்னுடைய விருப்பமான வேட்பாளரை ஆதரித்து தலையங்கம் வெளியிடுகிறார்கள் பத்திரிகை முதலாளிகள்.

நியு யார்க் மேயருக்கு டைம்ஸ் யாரை தேர்ந்தெடுக்கும் என்பது குறித்த கட்டுரை.

முகவிழி சபைகள்: சேட்படுத்துதல்

Meetup_Eventbrite_Mixer_Pizza_Beer_Software_Demo_Pitch_Forums_Events_Talks_Chat_Discussions
சாயங்காலம் ஆனால், கால்கள் தானாக அந்தப் பக்கம் சென்றுவிடுகிறது. மனைவி இல் நானும் இருப்பது ஒரு காரணம். இலவசமாக பீட்சா பரிமாறுகிறார்கள் என்பது இன்னொரு காரணம்.

என்ன இலவசம்? காரை நிறுத்த முப்பது சொச்சம் டாலர் செலவு. அந்தி மயங்கும் வேளையில் வீடு திரும்பும் எண்ணற்ற ஜனத்திரளில் ஊர்ந்து ஊர்ந்து செல்ல பெட்ரோல் செலவு. நியு யார்க்கை விட மோசமாக ஓட்டும் பாஸ்டன் நகர கட்டுமானத்திற்கு இடையே நுழைந்து வளைத்து இடிபடாமல் செல்லும் இதய நோய் உண்டாக்கம் கூட செலவு.

புற்றுநோய் வந்தவர்களுக்கான ஆதரவுக் குழு; மதுவின் பிடிக்குள் சிக்கினவருக்கான வாராந்திர சந்திப்புகள்; பொதுமேடையில் பேசுவதற்கான அச்சம் நீக்கும் டோஸ்ட்மாஸ்டர் கூட்டங்கள்… போல், இதுவும் ஒத்த பயனீட்டாளர்களின் ஊற்றுக்களம். ஒரு சிந்தனையாளரை அழைத்து, அவரைப் பேசவிட்டு, அவரின் வாயும் பவர்பாயின்ட்டும் பார்க்கும் களம்.

செவ்வாய் என்றால் ஜாவா; புதன் அன்று நோ சீக்வல்; வியாழன்தோறும் பத்தாண்டுகளுக்கு மேலாக புத்தம்புதியதாக மிளிரும் அதிவிரைவு மென்பொருள் உருவாக்கம் (agile software development). வாரத்தின் முதல் நாள் என்பதால் திங்கள் கிடையாது; இளவயதினர் ஜோடிப் பொருத்தத்திற்காக கிளப் விட்டு கிளப் மேய்வதால் வெள்ளிக்கிழமையும் விடுமுறை.

வாரயிறுதிகளில் இன்னும் பெரிய ஜமா கூடும். முழுவதுமாக ஆழ்ந்து பயிற்சிப் பெறும் செய்முறை விளக்கக் காட்சிகள் உண்டு; சொந்தக் கணினி எடுத்துக் கொண்டு போனால், புதிய நிரலிகளை உருவாக்குவதில் சரிசமமாக அனைவரும் பங்குப் பெற்று, முழுவதாக தயார் ஆன புத்தம்புதிய பயன்பாட்டை உலகிற்கே உடனடியாக உலவ விட சனியும் ஞாயிறும் போதுமானது.

ஆனால்… உங்களுக்குத்தான் பரிசிலோ பங்கோ சன்மானமோ கிடைக்காது. சொவ்வறை எழுதினோம்; அது நாளைய கூகிளிலோ, வருங்கால யாஹூவிலோ ஒரு அங்கமாக இருக்கக் கூடும் என்னும் மனத்திருப்தி மட்டுமே வாய்க்கப் பெறும்.

ஃபைட் கிளப் போல் இப்படி மன்றம் மன்றமாக சென்று வருவதும் மாலையானால் ‘என்ன கச்சேரி’ என்று தி ஹிந்துவில் எங்கேஜ்மென்ட் பார்ப்பதும் ஒன்றா என்பதை ஆராய தீஸிஸ் பரிந்துரை இட்டிருக்கிறேன்.

A Novelist Who Made Crime an Art, and His Bad Guys ‘Fun’

புகழ்பெற்ற குற்றப்புனைவு எழுத்தாளரான எல்மோர் லெனார்ட் மறைந்தார். திரைப்படங்களான இவருடைய கதைகள் Get Shorty, Be Cool, Out of Sight, Jackie Brown போன்றவற்றை பார்த்திருக்கிறேன்.

எழுத்தாளர்களுக்கான அவரின் பத்து கட்டளைகள்:
1. தட்ப வெப்ப நிலையை எழுதி கதையைத் துவங்காதே
2. முன்னுரையைத் தவிர்
3. ’சொன்னார்’ என்பதைத் தவிர மற்ற வினைச்சொற்களை உபயோகிக்காதே

கதையில் யார் கையை வேண்டுமானாலும் பிடித்திழுக்கலாம்; புனைவில் எவரை வேண்டுமானாலும் சைட் அடிக்கலாம்… ஆனால், கட்டுரையில் கவனமாக இருக்கவேண்டும் போன்ற உபதேசங்களை அவர் சொன்னாரா என்பதை அறிய பாக்கியை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.