இது நம்முடைய அர்த்தம். ஒன்றைக் கண்டு பிரதிபலித்தலை ‘ஏப்’ (ape) என்கிறோம். அகரமுதலியில் ‘ஏப்’ எனத் தேடினால், பாவித்தல், பாசாங்கு செய்தல், கிளிப்பிள்ளை போல் யோசிக்காமல் பிரதிபலித்தல் என அர்த்தம் சொல்கிறார்கள்.
ஆனால், அறிவியல் ஆராய்ச்சியின் படி பார்த்தால் ஒரு விஷயத்தைக் காண்பித்தால் மனிதக் குரங்கு அதனை நினைவில் வைத்திருக்கிறது. வெறுமனே கண்ணாடியாக புத்தியில்லாமல் பிரதிபலிப்பதில்லை. அந்தச் செய்கையை வருங்காலத்தில் எதிர்பார்க்கிறது. ஒவ்வொரு செயலையும் நினைவுகூர்ந்து அதற்கேற்ப தன் கண்ணோட்டத்தைச் சொல்கிறது. சொல்லையும் அதற்கேற்ற செய்கையையும் அந்த செய்கையின் பின் விளைவுகளையும் நினைவில் நிறுத்திக் கொள்ளும் குரங்குகள், சிந்தித்த பின் செயல்படுகிறது. நான் கூட இவ்வளவு நிதானமாக என் தரப்பின் செய்கைகளுக்கு, யோசித்து நிதானமாகச் செயல்படுவதில்லை
கொரில்லாக் குரங்கு மட்டுமல்ல… நாய் கூட ஆயிரக்கணக்கான வார்த்தைகளைக் கற்றுத் தேர்ந்திருக்கிறது. நாம் சொல்வதைப் புரிந்து கொள்கிறது. நம்மிடம் பதிலுக்கு பதில் உரையாடாமல், நாம் சொல்லும் வார்த்தையை வைத்து, அது ஒரு பொருளா அல்லது வினைச் சொல் கட்டளையா என பகுக்கத் தெரிந்திருக்கிறது. நாம் உரைப்பது – பந்தா, எந்த நிறப் பந்து, அல்லது எந்த பொம்மை என்று புரிந்து கொண்டு, அதற்கேற்ப ஈடு கொடுக்கிறது: What a Border Collie Taught a Linguist About Language | WIRED
மொழி எவ்வாறு உருவானது? கபிகள் பேசுமா? சைகை மொழியை சிம்பன்ஸிக்கு எப்படிக் கற்றுத் தருவது? மிருகங்களை சுதந்திரமாக வாழவிடாமல், நம் கண்காட்சிக்கென, விலங்கியல் பூங்காவில் அடைத்து வைப்பது தகுமா? அவற்றின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்து கொள்கிறேன் என்னும் சாக்கு சொல்லி, வீட்டிற்குக் கொண்டு வந்து தத்துவவியல் விஞ்ஞானியோ அறிவியல் ஆய்வாளரோ ஆராயலாமா?
இதெல்லாம் மிருகங்களைப் பற்றின செய்திகள். மனிதனுக்கு ஆறறிவு இருக்கிறது. அவனுக்கும் இந்த மந்தைக் கூட்டத்துக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் உறுமுவது எனக்குக் கேட்கிறது. உங்களுக்கு ஒரு சம்பவத்தை நினைவு கூறுகிறேன்.
நடிகர் சூர்யாவின் உயரம் 5′ 7″
நடிகை அனுஷ்காவின் 5′ 10″
சிங்கம் படப்பிடிப்பில் ஸ்டூல் போட்டார்களா அல்லது சூர்யாவிற்கு ஹை- ஹீல்ஸ் செருப்பு கொடுத்தார்களா என்பதை பட்டிமன்றத் தலைப்பாக்கலாம். இது மிருகத்தின் சுபாவம். மண்டியிட வைப்பது மன்னனின் சுபாவம் என்றால், ஆண்மகனுடன் டூயட் பாடும் காதலி தாழ்தளத்தில் நின்று சிருங்கார ரசம் முகத்தில் கொணர வேண்டும் என்பது சினிமா சுபாவம்.
அது சினிமா. நிஜமல்ல. அதைக் கூட விட்டுவிடலாம். நீங்கள் தற்படம் (செல்ஃபீ) எடுப்பதையும் அது எவ்வாறு நம் முன்னோரின் குணநலனோடு ஒத்துப் போகிறது என்பதையும் எவ்வாறு ஒவ்வொரு சுய புகைப்படத்திலும் உங்களின் விலங்கு மனோபாவம் வெளிப்படுகிறது என்பதையும் இங்கே ஆராய்கிறார்கள்: The Psychology of Selfies | Psychology Today
இது தற்கால ஆராய்ச்சி. கொஞ்சம் சங்க காலத்திற்குச் செல்வோம். தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம் மணிமேகலை ஆகும். இந்நூல் பவுத்த மத சார்புடைய நீதிகளை எடுத்துச் சொல்லும் பேரிலக்கியம் என்ற பெருமை கொண்டது. குமரி முனையிலிருநது இலங்கைக்குக் குரங்குப் படைகள் அணை அமைத்தன என்று மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையில் கூறுகின்றார். அதில், ஐந்தாவது மணிமேகலை உதயகுமரன்பால் உள்ளத்தாள் என மணிமேகலை தனக்கு மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய பாட்டில்:
பழ வினைப் பயத்தான் பிழை மணம் எய்திய
எற்கெடுத்து இரங்கி தன் தகவு உடைமையின்
குரங்கு செய் கடல் குமரி அம் பெருந் துறைப்
பரந்து செல் மாக்களொடு தேடினன்
– (மணிமேகலை 5133 – 38)
குரங்கு செய்கடல் குமரியம் பெருந்துறை-குரங்குகளாலே இயற்றப்பட்ட திருவணையையுடைய கடலின்கண் அமைந்த பெரிய புண்ணியத் துறையாகிய கன்னியாகுமரித் துறையில் ஆடுதற் பொருட்டு என்பது பொருள். குரங்கு செய்கடல் என்றது தென்கடலை அறிவிக்கிறது. குமரி என்பது கன்னியாகுமரியைக் குறிக்கிறது.
”நம் உலகத்தில் இரு வகை மனிதர்கள் இருக்கிறார்கள்: ஒருவர் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்பவர்; இன்னொருவர் உலகை இரண்டாகப் பிரிப்பவர்கள்.” என்பதற்கேற்ப, 1968ல் முதன் முதலாக ‘பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ்’ படப்பிடிப்பு நடத்தியபோது அந்த சம்பவம் நடந்தது. திரைப்படத்தில் இரு தரப்பினருக்கு இடையே போர் நிகழுமாறு காட்சியைப் படமாக்கிக் கொண்டிருந்தார்கள். ஒரு தரப்பில் கொரில்லாக்கள். அவர்களுக்கு எதிராக குரங்குகளாக ஆயிரக்கணக்கான துணைநடிகர்கள் போர் புரிந்தார்கள். இடைவேளை வந்தது. கொரில்லாவாக வேஷம் கட்டியவர்கள் எல்லோரும் ஒரு பக்கம் சேர்ந்து உணவு உட்கொண்டார்கள். அதன் எதிர்ப்புறம் குரங்காக வேடம் தரித்தவர்கள் கொரில்லா வேஷதாரிகளிடம் இருந்து விலகி தனியே உணவு உண்டார்கள். நாம் எங்கே பார்த்தாலும் பேதம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். இனம், மதம், பூர்விகம், நிறம், பிறப்பிடம், மொழி, உடலமைப்பு, பால், மொழி, வசிப்பிடம், வேலை, பணம், வயது… எண்ணற்ற வகைகளில் நம்மவர்களைத் தேர்ந்தெடுக்கிறோம்: Why Your Brain Hates Other People: And how to make it think differently – Overcoming Us vs. Them
’பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ்’ வரிசைப் படங்கள் இதையெல்லாம் சற்றே நீட்டித்து அறிவியல் புனைவாக, கற்பனை செய்து பார்க்கின்றன:
இந்த ஜூலை மாதம் ”வார் ஃபார் தி பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ்” வெளிவந்தது. சமீபத்தில் தூசி தட்டி மீண்டும் இந்த குரங்கு சாம்ராஜ்யத்தை படமாக்கத் துவங்கிய பிறகு, வரும் மூன்றாம் படம் இது. இந்தப் படத்திலும் குரங்குகள் பேசுகின்றன. மனிதர்கள் மெதுவாகப் பேச்சை இழந்து வருகிறார்கள். மனிதனின் அறிவியல் ஆற்றல் அவனின் அழிவிற்கு இட்டுச் சென்றிருக்கிறது. சண்டை ஆயுதங்களைக் கொண்டு ஒருவரையொருவர் கொன்று குவிக்க தொழிநுட்ப முன்னேற்றங்களைப் பயன்படுத்தும் வர்க்கமாக மானுடம் சித்தரிக்கப்படுகிறது. குடியுரிமைக்காகக் குரங்குகள் குரல் எழுப்புகின்றன. சம அந்தஸ்துடன் வாழாவிட்டாலும், தங்களின் காட்டில், ஒரு மூலையில் ஒதுக்குப்புறமாக, மனிதனின் நகரங்களுக்குள் வராமல் ஒளிந்து வாழப் போராடுகின்றன.
2011-ல் முதல் பகுதி வந்தது – ஏற்றம்: rise
2014-ல் இரண்டாம் பகுதி வெள்ளித்திரையில் வெளியானது – வைகறை: dawn
இந்த வருடம் இறுதி பாகம் – யுத்தம்: war
ஹாலிவுட் மசாலப் படங்களைப் பார்க்கும்போது மூளையைக் கழற்றிவைத்து விட்டு பார்ப்பது உங்களின் அறிவிற்கு குந்தகம் விளைவிக்காது. அதற்காகவே இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் இந்தப் படம் நிஜத்திலேயே நடக்கும் என்னும் தோற்றமயக்கத்தை ஏற்படுத்தும் உண்மைச் செய்திகளைப் பகிர்ந்து கொண்டேன். அந்தச் செய்திகளைப் போல் இந்தப் படமும் படு தீவிரமாக குரங்குகளின் ராஜாங்கத்தை விளக்குகிறது. வந்தியத்தேவனை குதிரையில் கற்பனை செய்த எனக்கு, ஒராங்குட்டான் அதே குதிரையை ஓட்டுவதை திரையில் பார்க்கும்போது மெல்லிய சிரிப்பு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. எனினும், இந்தப் படமும் முந்தையப் படங்கள் போலவே வெறுமனே கேலி செய்து ஒதுக்க முடியாதபடி யோசிக்கவும் வைத்தன.
அது எப்படி சாத்தியமாகிறது?
முதலில் சீஸராக நடித்தது மனிதன். அவர் பெயர் ஆண்டி செர்கிஸ். கோச்சடையான் படத்தின் ரஜினி போல் நிழல் உருவமாக உயிர் கொடுக்கிறார்.
இரண்டாவதாக படத்தின் துவக்கக் காட்சியில் “விவேகம்” அஜீத் போல் சீஸர் அறிமுகம் செய்யப்படுகிறார். போரில் வெற்றியை அடைகிறார். அதன் பின் ஒவ்வொரு விதமான குரங்கும் அவர் வரும் வழிவிட்டு விலகி, வணக்கம் செலுத்தி, மரியாதையையும் தலைவன் என்னும் மதிப்பையும் உணர்த்துகின்றன. அதன்பின் வரும் இரண்டரை மணி நேரமும் சீஸரின் பார்வையிலேயே கதை சொல்லப்படுகிறது. சீஸர் எவ்வாறு தன் குடும்பத்தை இழக்கிறது என்பதில் துவங்கி, மனிதன் போல் கோபம் தலைக்கேறி பழிவாங்கும் வெறி தலைதூக்குவதிற்குச் சென்று, கடைசியில் சிறைபிடிக்கப்பட்டு, தப்பிக்க யோசிப்பது வரை எல்லாம் சீஸர். ”அபாயம் தவிர்த்துத் தடுத்தாட் கொண்டருள்வாய்; நிழல் வெயில் நீர் நெருப்பு மண் காற்று வானதிலும் பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர் உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்; யான்/எனது அற்ற மெய்ஞ்ஞானமது அருள்வாய் நீ” என சீஸர் குரு கவசம் பாடாத குறையொன்றுதான் படத்தில் பாக்கி.
சக மனிதர்களைக் கொல்லத் துடிக்கும் கர்னல் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் தன் சக உயிர்களைக் காத்து பேண நினைக்கும் சீஸர். சாதாரண மாஸ் ஹீரோ படத்தில் கர்னலை வில்லன் என்று நிலைநிறுத்துவார்கள். இந்தப் பக்கம் சீஸரை தலைவராக, அதிநாயகராக உயர்வு நவிற்சியில் அமிழ்த்துவார்கள். கர்னலின் ஒரு கொடூரச் செய்கையைக் காட்டிவிட்டு; அதற்கு மாற்றாக சீஸரின் உன்னதமான பதிலை காட்சியாக நிறுத்துவார்கள். அப்படியெல்லாம் அல்பத்தனம் இந்தப் படத்தில் இல்லை. சீஸர் கம்பியெண்ணுகிறாரா… நாமும் கூண்டில் இருக்கிறோம். சீஸர் பிரம்படி வாங்குகிறாரா… நமக்கும் ரத்தம் வருகிறது. சீஸர் மண் சுமக்கிறாரா… நமக்கு பாரம் அழுத்துகிறது. கையாலாகவராக சீஸர் இருக்கிறாரா… நமக்கும் அடுத்து எப்படி அவரின் நண்பர்கள் யோசிப்பார்கள்; எவ்வாறு தைரியமாக செயலில் இறங்குவார்கள், அதில் எவ்வளவு வெற்றி பெறுவாரகள் என்பதெல்லாம் அவ்வப்போதுதான் தெரிகிறது.
படத்துவக்கத்தில் குரங்கிற்கு கோபம் வந்தால் மனிதத்தன்மையை இழக்குமா என்பது கேட்கப்படுகிறது. மனிதத்தன்மை என்பதை மன்னித்தருள்வது என்று பார்க்கிறேன். மனிதனே காருண்யத்தை விட்டுவிட்டு ஒரு கண்ணிற்கு இரண்டு கண் என்று பிடுங்கிக் கொண்டிருக்கும் காலகட்டம் இது. எனவே, ஆத்திரம் அட்டுமீறினால், மனிதன் குரங்காவானா? கொஞ்சம் நேரம் கழித்து சூதானம் திரும்பியவுடன் குரங்காக நடந்தவரை மனிதனாகக் கருதலாமா?
ஸ்காட் எஃப் ஃபிட்ஸ்ஜெரால்ட் மொழியில் சொல்வதனால்:
“முதல் தரமான புத்திசாலித்தனத்திற்கான சோதனை எதுவென்றால் – மண்டைக்குள் எதிரும் புதிருமான இரு கருத்துகளை மோதவிட்டுக் கொண்டிருந்தாலும், செயல்பாட்டில் எந்த சுகவீனமும் இல்லாமல் இருத்தல்”
நம் சிந்தனையை நாம் இழந்தால் அப்போதும் மனிதத் தன்மையோடு நடந்துகொள்வோமோ? மொழி என்னும் பேசும் சக்தியை ஏதோவொரு கொடிய வியாதி தாக்கி கொள்ளை போய்விட்டால், அப்போது எப்படி யோசிப்போம்? மனிதனோடு வளர்வதால் உரையாடும் சக்தி பெற்ற குரங்கு, தன் சொந்த பாஷையான ஊளை சத்தத்தை மறந்து விடுமா? ஆந்தை அலறும், யானை பிளிறும் என்பது போல் குரங்கு அலப்பும் என்பது மரபு. விலங்கியல் பூங்காவில் வளரும் குரங்கு சகமாந்தர் போல் பேசினால் மனிதர் எனக் கருதலாமா?
பாகுபலி போன்ற மெகா பட்ஜெட் இந்தியப் படங்களில் வரும் கிராஃபிக்ஸ் யானைகளைப் பார்த்தால் கேலிச் சித்திரங்கள் போல் விழுந்து விழுந்து விலா நோக சிரிக்கவைக்கின்றன. ஆங்கிலப் படங்களில் இந்தக் குறை கிடையாது. செய்வதை செவ்வனே சிறப்பாகச் செய்கிறார்கள். அரைகுறை வேலை கிடையவே கிடையாது. அந்தக் குரங்கு பேசினால் வாயசைப்பு முதல் உடல் மொழி வரை மனதில் நம்பவைக்கும்படி இருக்கிறது. அதன் கண்ணில் அப்படியொரு தீவிரம். அதன் முகத்தில் தலைமைப் பண்பு. தோள் அசைவில் ”முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே வனே வனே வனே” என முழங்க வைக்கும் பாவம். குரங்குகள் அழுதால் நானும் கிட்டத்தட்ட பரிதாபம் கலந்த சோக மனநிலைக்குச் செல்கிறேன். அந்த ஜந்துக்கள் மனிதரைப் போல் தன்னைத் தானே ஆராய்ந்து அலசி சுய பகுப்பாய்வு செய்தால், அப்படித்தானே ஒருவர் தன் வாழ்வின் முடிவுகளை ஆராய்வார் என எண்ணுகிறேன்.
அதை சிறைப் பிடித்து குரங்கைக் கூண்டில் அடைத்தால், ஏதோ தப்பாக செய்வதாக உணரவைப்பதில் திரைக்கதாசிரியரும் மாயாஜால வடிவமைப்பாளரும் வாகை சூடுகிறார்கள். குரங்குகளும் மனிதர்கள்தானே என தோன்றவைப்பதில் இந்தத் திரைப்படம் வெற்றியைடைகிறது.
அடுத்த படத்தில் டிவிட்டரில் 140 எழுத்துகளுக்குள் தன் கருத்தை வெளிப்படுத்தி, “ஓவியா ஆர்மி”யை உருவாக்கும் என தோன்றவைப்பதில் பிக் பாஸ் யார் என்பதை தெளிவாக உணர்த்துகிறது. அப்போது நான் மரம் விட்டு மரம் தாவிக் கொண்டிருப்பேன்.
1968-1970க்குப் போக வேண்டும். 35 ஆண்டுகளுக்கும் மேல் பின்னோக்கி, எல்லாவற்றையும் பதிந்த நினைவுகளிலிருந்தே அக்காலகட்ட மனப்பதிவுகளை மீட்க வேண்டும். ஆய்வாளனின் காரியமில்லை. அப்படித்தானா என்று சரிபார்த்துக் கொள்ள பழைய இதழ்கள் கூட இல்லை. பத்திரப்படுத்தி வைத்திருந்தவற்றை யார் எடுத்துப் போய்… சரி, நல்லபடியாகத்தான் நினைப்போமே, திரும்பக் கொடுக்க மறந்துவிட்டார்களோ?
‘எழுத்து’ பத்திரிகையோடு கிட்டத்தட்ட பத்து வருடங்கள் வலர்ந்தாயிற்று. அது ஒரு புத்துணர்வு தந்து, புதிய பாதைகளைக் காட்டிய பத்திரிகை. கிண்டல்களோடும், எதிர்ப்புகளோடும், வசைகளோடும், எல்லாவற்றிற்கும் மேலாக வறுமையோடும் போராடி வளர்ந்த பத்திரிகை. அது கண்டெடுத்தவர்களை வளர்த்த பத்திரிகை. ‘எழுத்து’ தோன்றியிராவிட்டால் எங்களில் பலர் என்னவாக வளர்ந்திருப்போம் என்று சொல்லமுடியாது. 70-க்குப் பிறகு கேட்கப்பட்ட பெயர்கள், “நாங்கள் பிச்சமூர்த்திக்கு முன்னோடிகளாக்கும்” என்று அதற்கும் வெகு வருடங்கள் பின்னால் தங்களுக்கு முடிசூட்டிக்கொள்ள இருந்தார்கள். இப்படிப் பலர் தங்கள் ஜாதகத்தைத் தாங்களே திரும்பக் கணித்துக் கொண்டார்கள். அன்று எதிர்ப்பும், கண்டனங்களும், ஆதரவின்மையும் மாத்திரமே எழுந்தன. இன்று 80-க்குப் பிறகு, அதில் பார்ப்பனீய எலீட்டிஸமும் இருந்ததாகக் கண்டுபிடித்துச் சொல்கிறார்கள்.
எங்களுக்கும் இவர்களுக்கும் நாங்கள் குரல் எழுப்ப மேடை அமைத்ததும், அமைத்துக் கொள்ளும் வழிகாட்டித் தந்ததும் ‘எழுத்து’. அதற்கு முன்னர், ‘எழுத்து’ மூலமும், அது போன்ற பின் வந்த மேடைகள் மூலமும் கேட்ட குரல்களை, சுட்டிய புதிய பாதைகளை முன்னர் யாரும் கேட்டதில்லை; கண்டதில்லை.
இலக்கியச் சிறுபத்திரிகை, புதுக்கவிதை, விமர்சனம் என இம்மூன்றையும் மரபுகளாக, இன்றைய தமிழுக்கு ‘எழுத்து’தான் தந்தது. அது ஒரு கொடை. இவ்வலவும் நான் முன்னர் சொன்னதுதான். ஆனால் இன்று மறுபடியும் சொல்லியாக வேண்டியிருக்கிறது. இவ்வளவையும் சொல்லி, அங்கீகரித்துப் பின்னர் மேற்சொல்வதுதான் முறையும் நியாயமும் ஆகும். ‘எழுத்து’ வை செல்லப்பாவை மீறிச் செல்வது, நிராகரிப்பதாகாது.
ஆக, எழுத்துவோடு வளர்ந்த பிறகு, ஒரு காலகட்டத்தில், எங்களில் சிலருக்கு, எழுத்து பத்திரிகையில் எல்லை வரையறுப்பில் அதிருப்தி. நாங்கள் யாரும் எக்கருத்தையும் எழுத்துவில் வெளியிடும் சுதந்திரம் எங்களுக்கு இருந்தது. செல்லப்பா மிகவும் மதித்த, அவருக்கு மிகவும் நெருக்கமானவர்களின் எழுத்துக்களையே நான் குறை சொல்லி விமர்சித்திருக்கிறேன். என்னையே ‘சாமிநாதன் பதம் பார்த்திருக்கிறார்’ என்று செல்லப்பாவே சொல்லியிருக்கிறார். ஆனால் செல்லப்பாவின் அக்கறை இலக்கியம் என்ற வட்டத்திற்குள்ளேயேதான் இருந்தன. அதிகம் போனால் நாடகம் பற்றி கொஞ்சம் எட்டிப் பார்க்கலாம். ஆனால் எனக்கு எழுத, சொல்ல, கருத்துக்கள் பரிமாறிக் கொள்ள நிறைய விஷயங்கள் இந்த எல்லைகளை மீறி இருந்தன. எனக்குத் தெரியும், சச்சிதானந்தத்தின் ஈடுபாடுகளும் அக்கறைகளும் பரந்த அளவிலானது என்பது. தருமு சிவராமுவின் விஷயத்திலும் அப்படியே. இருப்பினும் என் முதல் கட்டுரையிலேயே, இந்த எல்லைகளை நான் மீறி இருந்தாலும் செல்லப்பா அதற்குத் தடை சொல்லவில்லை என்றாலும், இலக்கியம் மீறிய விஷயங்களுக்கு அதிக இடம் கொடுக்க அவர் விருப்பப்பட்டதில்லை. ஒரு சிறிய பத்திரிகை, இலக்கியம் என்ற எல்லைக்குள்ளேயே செய்ய வேண்டியவை நிறைய இருக்க, அவர் வார்த்தைகளில் “அகலக்கால் வைக்க” அவருக்கு இஷ்டமில்லை. இவ்வளவையும் மீறி நானும் சிவராமுவும் ஒன்றிரண்டு எழுதத்தான் செய்தோம். யூகோஸ்லாவியா க்ராஃபிக்ஸ் பற்றி எழுதியது எனக்கு ஞாபகம் வருகிறது.
எஸ். பொன்னுத்துரை மட்டக்களப்பிலிருந்து சென்னைக்கு வந்திருந்தபோது, தற்செயலாக நானும் சென்னையிலிருந்தேன். செல்லப்பா வீட்டில் அவர் முன்னிலையில் நான் பொன்னுத்துரையும் விவாதித்துக் கொண்டிருந்தோம். இரண்டு விஷயங்கள்: ஒன்று இலங்கையில் தமிழர் போராட்டம்; மற்றது பக்கத்தில் ஓடிக் கொண்டிருந்த டேபிள் ஃபான். அது art-ஆ அல்லது craft-ஆ என்று எங்களுக்குள் பட்டிமன்றம். எங்களுக்குள் முதல் படிவமைப்பு art. பின்னர் அது லஷக்கணக்கில் தயாரிக்கப்பட்டது craft என்றேன் நான். எஸ். பொ. என்ன சொன்னார் என்பது என் நினைவில் இல்லை. ஒரு கட்டத்தில் செல்லப்பா “போதுமே, நீங்கள் இரண்டு பேரும் பேசியது. இனி இலக்கியம் பேசலாம் கொஞ்சம்” என்று கடிந்து கொண்டார்.
எதற்காகச் சொல்ல வந்தேன் என்றால், எதற்கும் ஓர் அளவுக்கு செல்லப்பா பொறுமை காப்பார். வரம்பு மீறிப் போவதாக, தன் இலக்கிய அக்கறைகள் பாதிக்கப்படுவதாக அவருக்குத் தோன்றினால் ஒரே இடுக்கிப் பிடிதான்.
செல்லப்பா வழியில் நாமும் ஒரு பத்திரிகை நடத்தினால் என்ன என்று தோன்றிற்று. எனக்குத் தெரிந்த இலக்கிய நண்பர்களுக்கெல்லாம் எழுதினேன். எல்லோரும் சம்மதம் தெரிவித்தார்கள். பத்திரிகை நடத்தப் பணம் கொடுப்பவர்கள் அல்லாத ஒருவர் பொறுப்பேற்க என்று வல்லிக்கண்ணனை ஆசிரியராக இருந்து பொறுப்பேற்கக் கேட்டேன். நாங்கள் பத்து பதினைந்து பேர் ஆளுக்கு ரூபாய் நூறு முதலில் முதலாகவும், பின்னர் மாதம் பத்து ரூபாய் என பத்திரிகை தானே தன்னை நிறுத்திக் கொள்ளும்வரை கொடுப்பது என்றும் தீர்மானம். பத்திரிகை தன் காலில் நிற்கும் வரை இலவசமாகத் தான் பொறுப்பேற்பதாக வல்லிக்கண்ணன் எனக்கெழுதினார். “எல்லா வேலைகளையும் அநேகமாக வல்லிக்கண்ணனே பார்த்துக் கொள்வார். அவ்வப்போது அவர் ஏதாவது உதவி வேண்டினால் செய்யுங்கள் அது போதும்” என்று அசோகமித்திரனுக்கு எழுதினேன். கணையாழி அனுபவம் அவருக்கு உண்டு என்ற நோக்கில். அவர் உடனே எனக்கு மிக விரிவான பதில் எழுதினார். அதன் முக்கிய வாக்கியம், “பின் கழுத்துப் பட்டு சட்டையின் காலர் அழுக்குப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. மாதம் ரூ.300 தனக்கு தந்தால் உதவுவதாக” அவர் எழுதினார்.
இதற்குப் பிறகு நான் அதிகம் பிரயாசைப்படவில்லை. இது நம்மால் ஆகாது என்று நான் அந்த எண்ணத்தைக் கை விட்டேன். 1967-இல் என் சம்பளமே ஒரு 350-400 என்று தான் ஞாபகம்.
நான் யார் யாருக்கெல்லாம் எழுதினேனோ அவர்களுக்கு ஒரு வேளை ஞாபகமிருக்கலாம். ”‘எழுத்து’வின் எல்லைக் கட்டுப்பாடு அதிருப்தி தருகிறது. நம் எல்லைகளை விஸ்தரித்து நாமே ஏன் ஒரு பத்திரிகை நடத்தக் கூடாது?” என்றுதான் எல்லோருக்கும் எழுதியிருந்தேன்.
இந்த அதிருப்தி எங்களில் பலருக்கு இருந்தது. அதே சமயம் ஆங்காங்கே பலரும் இவ்வாறு சிந்திக்கத் தொடங்கியிருந்தார்கள் என்பதும் பின்னர் தெரிந்தது. ஒன்றை மாத்திரம் இப்போதும் நினைவுறுத்திக் கொள்ள வேண்டும். இம்மாதிரியான சிந்தனைகளுக்கே வழிகாட்டி, க.நா.சு.வின் இரண்டரை வருட ‘இலக்கிய வட்டமும்’, செல்லப்பாவின் ‘எழுத்து’வும்தான்.
அந்த சமயத்தில்தான் நடை என ஒரு காலாண்டு பத்திரிகை தொடங்கப் போவதாக ந. முத்துசாமியும், சச்சிதானந்தமும் எனக்கு எழுதினார்கள் என்று நினைவு.
நடை இரண்டு வருட காலம் நீடித்தது. எட்டு இதழ்கள் சில மெலிந்தும் சில பருத்தும் வெளிவந்தன. இதழ்கள் இல்லாததால் நினைவிலிருந்துதான் நான் பல விஷயங்களைத் தொட்டுப் பேச முடியும்.
கவிதை என்றும் பாடல் என்றும் பன்முக மாயம் செய்யும் திரைப்படப் பாடல்களில் என்ன கவித்துவமோ பாடலோ இருக்கிறது என்று ஒருவர் ஆராய்ந்தார். இது எழுத்துவில் வருவது சந்தேகம்தான். அப்போது காலமாகிவிட்டிருந்த பத்மினி என்னும் ஓவியர் பற்றி, அவரது ஓவியப் பிரதிகளோடு ஒரு கட்டுரை, சச்சிதானந்தம் எழுதியிருந்தார் என்று நினைவு. புதுக்கவிதையில் காணும் யாப்பு மீறல் அத்தனைக்கும் பழம் இலக்கணங்களில், தொல்காப்பியம், யாப்பருங்கலக்காரிகை, விருத்தி இத்யாதிகளில் விதி அமைத்துக் கொடுத்திருப்பதை ஒரு சிறு புத்தக இணைப்பாகவே, செல்வம் தந்திருந்தார். அதற்கு எந்த பண்டிதரும் இதுவரை மறுப்பு சொன்னதில்லை.
நடையின் முதல் இதழிலேயே ஞானக்கூத்தன் என்னும் ஒரு புதிய குரல் கேட்கத் தொடங்கியது. அக்குரல் எனக்கு அப்போது மிக உற்சாகம் தந்தது. இன்றுவரை தொடரும் தமிழரின் பரிசில் வாழ்க்கை அவர் கவிதை ஒன்றில் நினைவுறுத்தப்பட்டிருந்தது. சி. மணியும், தனது இயல்பான விமர்சன எள்ளலுக்கு புதிய குரல் கொடுத்து வே. மாலி என்று நாமகரணம் கொடுத்தார்.
தாமோதரன், தக்ஷ்ணாமூர்த்தி, ஆதிமூலம் போன்றோரின் கோட்டுச் சித்திரங்கள் ஒவ்வொரு இதழிலும் வெளியாயின. இவைதாம் தமிழ் எழுத்துலகுக்கும் தமிழ் ஓவியர் / சிற்பிகளுக்கும் இடையிலான முதல் பரிச்சயம், பரஸ்பர உறவின் தொடக்கம். இது இன்று 35 வருடங்களுக்குப் பின் என்னவாக வளர்ந்து பெருகியுள்ளது என்பது, இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாது. அதன் எளிய ஆரம்பங்கள் நடையில் என்பதையும், அவர்களுக்குச் சொல்ல வேண்டும், வேதாள உலகமும், மனோகராவும் பம்மல் சம்பந்த முதலியாரிடமிருந்து தொடங்கியது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
ந. முத்துசாமி, முன்னால் சிறந்த கதைகள் எழுதியவர் என்பதும் பலருக்குத் தெரியாமக் இருக்கலாம். ந. முத்துசாமிக்கேக் கூட அது மறந்து விட்டதோ என்னவோ. “அப்படியா? அப்படியானால் நல்லதாச்சு” என்று நினைக்கும் சிறுகதைக்காரர்கள் இருக்கக்கூடும். இன்று ந. முத்துசாமி இந்தியா அறிந்த சங்கீத நாடக அகாடமி விருது வாங்கிய, கொலம்பியாவில் தன் புகழ்நாட்டிய, கூத்துப்பட்டறையை உருவாக்கியவர் என்று இந்தியா அறிந்த நாடகாசிரியர். அதன் ஆரம்பம் நடை பத்திரிகையில்தான். நாடையில் அவரது இரண்டு நாடகங்கள் பிரசுரமாகியிருந்தன. முதலாக வந்தது காலம் காலமாக. முதல் தடவையாக நாடகம் என்று தமிழில் சொல்லத் தகுந்ததன் தொடக்கம் காலம் காலமாகவிலிருந்துதான் என்று அன்றும் இன்றும் என் அபிப்ராயம். அத்தொடக்கம் கண்ட மகிழ்ச்சியில் அதை நான் மொழிபெயர்த்து, டெல்லியிலிருந்து வெளியான நாடகத்துக்கேயான Enact என்ற பத்திரிகையில் வெளியிடக் கொடுத்தேன். அது வெளியானது. பின்னர் நடந்தவை சரித்திரம். தமிழில் நாடகத் தொடக்கம் நடை பத்திரிகையில்தான்.
ஞானக்கூத்தன். தன் கவிதைகளை செல்லப்பா ஏற்பதில்லை என்றும் எழுத்துவில் பிரசுரிக்க மறுத்துவிட்டார் என்றும் சொல்லக் கேட்டதுண்டு. எழுதியுமிருக்கிறாரோ? இருக்கலாம். ஆனால் ஞானக்கூத்தன் கவிதைகள் நடையின் முதல் இதழிலிருந்தே நிறைய பிரசுரமாகியிருக்கின்றன. நடையின் எழுத்து மூலம்தான் அவர் இலக்கிய உலகுக்குத் தெரிய வந்தார் என்று சொல்லவேண்டும். தொடக்கம் நடையில்தான். எழுத்து காலாண்டு இதழாகிய எண் 115 இதழில் செல்லப்பா எழுதுகிறார்: “கவிதைகளில் ஞானக்கூத்தனின் பிரச்னை சிறப்பானது” என்று.
இத்தோடு இன்னொன்றையும் என் கூற்றுக்கு எதிராகச் சொல்லவேண்டும். எழுத்து செல்லப்பாவோடு அதிருப்தி கண்டு அவர் காட்டிய வழியிலேயே பின் கிளை பிரிந்து நடை தொடங்கப்பட்டது. அல்லது அதிருப்தி அடைந்தவர்களின் பத்திரிகையாக நடை இருந்தது – என்று சொன்னேன். க.நா. சுப்பிரமணியமும், ”சி.சு. செல்லப்பா, தன் அச்சிலேயே மற்றவர்களையும் வார்க்கப் பார்க்கிறார். அதிலிருந்து அதிருப்தி கொண்டவர்களால் நடை தொடங்கப்பட்டது” என்று டெல்லி பத்திரிகைகளில் எழுதினார். ஆனால் செல்லப்பா எழுத்து 115-இல் எழுதும்போது, நடை பத்திரிகையை ஆதரவுடனேயே வரவேற்று, அதில் வந்துள்ள ஒவ்வொன்று பற்றியும் உற்சாகமூட்டியே எழுதியிருந்தார்.
இதெல்லாம் அன்றைய சூழல்: நடையின் தோற்றத்திற்கு முன்னும், அதன் ஜீவிய காலத்திலும் நிலவிய போக்குகள்.
எழுத்து நடந்த காலத்தில், க.நா.சு.வும் செல்லப்பாவும் தோற்றுவித்த புதுக்கவிதையையும், விமர்சனத் திருப்பத்தையும் கடுமையாக எதிர்த்த சக்திகளில் முன்னிற்பது அன்றைய தமிழ் முற்போக்கு முகாம். கருத்து வேறுபாடு கொண்டு எதிர்ப்பது பற்றிச் சொல்ல ஏதும் இல்லை. கருத்துப் பரிமாற்றம் அவசியம் வேண்டியதுதான். ஆனால் எந்தப் புதிய மாற்றத்தையும் தனது அரசியல் எதிரியாகக் கண்டு வசைபாடுவது முற்றிலும் வேறானது. இதற்கு வலுச்சேர்க்க, முற்போக்குப் பட்டயமும், பண்டிதத்தனமும் ஒருங்கே கொண்ட கைலாசபதியையும் சிவத்தம்பியையும் பெருந்தலைகளாக, இங்குள்ள முற்போக்கு முகாமும் பண்டித உலகமும் தங்கள் பிரச்சாரத்தின் மூலம் கட்டமைக்கத் தொடங்கினார்கள். இதில் அதிகார வேட்கையும், பதவி ஆசையும் கொண்ட கைலாசபதி, மிகக் கேவலமான முறையில், க.நா.சு.வையும் செல்லப்பாவையும் புறந்தள்ளி, தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் ஆசை கொண்டு க.நா.சு.வுக்கு சாதிச் சாயம் பூசும் காரியத்தில் இறங்கினார். இலக்கிய சர்ச்சைகளில் சாதிக் குண்டாந்தடியை சுழற்ற ஆரம்பித்ததில் முன்னோடி, கைலாசபதிதான். வேறு யாரும் அன்று இத்தகைய கேவலங்களில் இறங்கவில்லை. இவ்வளவுக்கும் கைலாசபதி வாழ்ந்த வளர்ந்த ஈழத்தில் பார்ப்பன எதிர்ப்பு கோஷம் எழ எந்தச் சமூகக் காரணமும் கிடையாது. அங்கு நிலவுவது சைவ வேளாள மேலாண்மை. கைலாசபதியின் பிரக்ஞையில் மேலோங்கி இருப்பது, தாழ்த்தப்பட்ட நண்பர் வீட்டுக்கு வந்தால், வீட்டுக்கு வெளியே அழைத்துச் சென்று “நிலவிலே கதைக்கும் முன்னோடி புரட்சியாளர் அவர். இங்கு பார்ப்பன எதிர்ப்பு கோஷம் எழுப்பியது தமிழ் நாட்டில் செலாவணியாகும்” என்ற நோக்கில்.
கைலாசபதியின் முற்போக்கு வறட்டு யாந்தீக வாய்பாடுகள் கொண்டது. அச்சமயத்தில் வெளியான அன்று இங்கு பலருக்கும் மயக்கம் தந்த அவரது ‘தமிழ் நாவல் இலக்கியம்’ என்ற புத்தகத்தை எடுத்துக் கொண்டு, அதன் போலித்தனத்தையும், சிந்தனை வறட்சியையும், இலக்கிய / கலை உணர்வின்மையையும் விரிவாகவே முன் வைத்தேன். இது நடை பத்திரிகையின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று. கைலாசபதி உயிரோடிருந்த வரையில் இதற்கு பதில் அளித்ததில்லை. ஒரு முற்போக்கு அணி திரண்டு, கூட்டுச் செயலாக கோஷிப்பதன் மூலம் எந்த போலியையும் பிரபலப்படுத்திவிட முடியும் என்பதற்கு தமிழ்நாட்டு முற்போக்குகளும் கைலாசபதியும் நல்ல உதாரணங்கள்.
நடை எட்டு இதழ்களே வெளிவந்தன. செல்லப்பாவிடம் அதிருப்தி கண்டு தன் வழி சமைக்க வந்தவர்களுக்கு, செல்லப்பாவின் பிடிவாதமும், மனந்தளரா செயலூக்கமும் இருக்கவில்லை.
க.நா.சு. அடிக்கடி சொல்வார். “எந்த இலக்கியச் சிறுபத்திரிகையும் இரண்டு வருடங்களுக்கு மேல் ஜீவிக்கக் கூடாது. அவ்வளவு காலம்தான் அதன் தீவிரமும் செயலூக்கமும் இருக்கும். புத்துணர்வு இருக்கும். பின் பழகிய இடத்தில் நிலத்தி விடும் ஸ்தாபனமாக மந்தித்துப் போகும்” என்பார்.
நடை நின்ற காரணம் எதுவானாலும், பின்வரும் பத்திரிகைகள், எவ்வழிகளில் எல்லாம் பயணிக்க வேண்டும் என்று வழிகாட்டிவிட்டது. அது நின்றதும் உடனே – ஒரு சில மாதங்கள் இடைவெளிக்குள்ளேயே – கசடதபற தொடங்கியது. நடையில் விட்டது, கசடதபறவில் தொடர்ந்தது. இவையெல்லாம் தமிழ் இலக்கிய/ கலைச்சூழலில் ஒவ்வொரு காலகட்டங்கள், பாதை திருப்பங்கள்.
இன்றைய இலக்கிய / கலைப் பத்திரிகைகள், தம்முடைய இன்றைய அக்கறைகள், குணமாற்றங்கள் – இவற்றிற்கு உந்துசக்தியாக இருந்தவற்றின் ஆரம்பங்களை அறியமாட்டார்கள். அன்றைய கால உணர்வையும் அறிய மாட்டார்கள். இவர்கள் ஏதும், சுயம்புவாக திடீரென அவதரித்த பன்முக ஜோதிப் பிரகாசங்கள் இல்லை. இந்த ஜோதிகளின் ஒருமுக ஆரம்பம் எழுத்து பத்திரிகையில். இன்னும் சில முகங்கள் நடையில். இன்னும் சில தொடர்ந்து மற்றவைகளில்.
—-
நடை இதழ் தொகுப்பு – முன்னுரை
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
முதற் பதிப்பு : 2004
தொகுப்பு: கி. அ. சச்சிதானதம்
1. அன்றைய வறட்சியிலிருந்து இன்றைய முயற்சி வரை (நாடகக் கட்டுரைகள்) வெளியீடு: அன்னம், சிவகங்கை (1985)
2. பாவைக்கூத்து – வெளியீடு: அன்னம், சிவகங்கை
3. என் பார்வையில் சில கவிதைகள் (விமர்சனக் கட்டுரைகள்): வெளியீடு: கலைஞன் பதிப்பகம், சென்னை (2000)
4. என் பார்வையில் சில கதைகள் நாவல்கள் (விமர்சனம்): வெளியீடு: கலைஞன் பதிப்பகம், சென்னை (2000)
5. சில இலக்கிய ஆளுமைகள். வெளியீடு: காவ்யா, சென்னை (2001)
6. பான்ஸாய் மனிதன் (விமர்சனம்). வெளியீடு: கவிதா, சென்னை (2001)
7. இச் சூழலில் (கலாச்சார விமர்சனம்). வெளியீடு: மதி நிலையம், சென்னை (2001)
8. கலை வெளிப் பயணங்கள் (கலை விமர்சனம்) அன்னம் வெளியீடு: தஞ்சை (2003)
9. திரை உலகில் (சினிமா விமர்சனம்) காவ்யா, சென்னை (2003)
II. தொகுப்புகள்
10. தேர்ந்தெடுத்த ந. பிச்சமூர்த்தி கதைகள் – தொகுப்பு: வெங்கட் சாமிநாதன், வெளியீடு: சாகித்ய அகாடமி (2000)
11. பிச்சமூர்த்தி நினைவாக – பிச்சமூர்த்தி நினைவாஞ்சலிக் கட்டுரைகள் தொகுப்பு: வெங்கட் சாமிநாதன். வெளியீடு : மதி நிலையம், சென்னை (2000)
III. மொழி பெயர்ப்புகள்
12. A Movement for Literature: க. நா. சுப்பிரமணியம். தமிழிலிருந்து ஆங்கிலத்தில்: வெங்கட் சாமிநாதன், சாகித்ய அகாடமி வெளியீடு
13. ஏழாம் முத்திரை (ஸ்வீடிஷ் திரைக்கதை) – இங்மார் பெர்க்மன் (தமிழ் மொழிபெயர்ப்பு: வெங்கட் சாமிநாதன்). வெளியீடு: தமிழினி, சென்னை (2001)
14. தமஸ் (இருட்டு) ஹிந்தி நாவல் : பீஷ்ம ஸாஹ்னி. மொழிபெயர்ப்பு: வெங்கட் சாமிநாதன். வெளியீடு சாகித்ய அகாடமி, சென்னை
15. ஆச்சரியம் என்னும் கிரகம் (குழந்தைக் கதைகள், சுற்றுச்சூழல் பற்றியவை; ஜப்பானிய மூலம்). ஆங்கிலத்திலிருந்து தமிழில்: வெங்கட் சாமிநாதன், வெளியீடு சாகித்ய அகாடமி, சென்னை
IV. திரைப்பிரதி (ஃபிலிம் ஸ்கிரிப்ட்)
16. அக்கிரகாரத்தில் கழுதை (திரைப்பிரதி) இரண்டாம் பதிப்பு. வெளியீடு: காவ்யா, சென்னை. (1997)
V. இன்ன பிற
17. உரையாடல்கள் (பேட்டிகளின் பதிவு) வெளியீடு: நவீன விருட்சம், சென்னை
18. விவாதங்கள்… சர்ச்சைகள். (எப்ரல் 1969 – இலிருந்து டிசம்பர் 2003 வரை) அமுதசுரபி வெளியீடு
VI. வெ.சா.வைப் பற்றி
க.நா.சு.
என்னுடைய மற்ற நண்பர்களுக்கு எரிச்சலூட்டும் அளவுக்கு நான் வெங்கட் சாமிநாதனின் அபிப்ராயங்களை மதிக்கிறேன்
– Financial Express 23.9.84
க.நா.சு.
சிந்தனையைத் தூண்டும் புஸ்தகங்கள் தமிழில் குறைவாகவே இன்னமும் வெளிவருகின்றன. அதுவும் புதுச் சிந்தனைகள் என்றால் பலரும் ஓடி விடுகிறார்கள். சிந்தனைக்குப் பல விஷயங்களை அள்ளித் தருகிற வெங்கட் சாமிநாதனின் நூல், பாராட்டப்படவேண்டிய ஒன்று.
– தினமணியில் மதிப்புரை :: அன்றைய வறட்சியிலிருந்து இன்றைய முயற்சி வரை: அக்டோபர் 1986
சி.சு. செல்லப்பா
சாமிநாதன், ஒரு ‘ப்ரொவோகேடிவ்’ விமர்சகர். இக்கட்டுரைகளில் பாலையின் உஷ்ணம் இருக்கிறது. நம்மைச் சுடவும் செய்கிறது. கசப்பான உண்மைகளை நாம் விழுங்கவும் வேண்டி இருக்கிறது. தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் இரண்டிலும், மற்ற கலைத் துறைகளிலும் அக்கறை எடுத்து அவற்றின் போக்கு, நிலை, சாதனை பற்றி சுய விமர்சனம் செய்து, உரிமையுடன் குந்தகமானவற்றை கடுமையாகச் சாடும் சாமிநாதனது பேனா வரிகள், ‘புலிக்குத் தன் காடு பிறகாடு வித்யாசம் கிடையாது’ என்றபடி சகலத்தையும் பதம் பார்க்கும் கூர்மையிலே யார் யாருக்கோ, எங்கெங்கெல்லாமோ சுடக்கூடும்…
– பாலையும் வாழையும் (27.2.76) முன்னுரையில்
கோமல் சுவாமிநாதன்
மகாபாரதத்திலுள்ள கர்ணனின் பாத்திரம், போற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் மிகவும் ஆளான ஒன்று. இலக்கிய உலகில் வெங்கட் சாமிநாதன், நிறைய போற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் ஆலானவர். போற்றுதலை விட தூற்றுதலையே அதிகமாக வாங்கிக் கொண்டவர். கானகத்தில் தனிக்குரலாக இவர் – இலக்கிய உலகில் தனக்குத் தோன்றிய விஷயங்களைப் பக்கபலம் சேர்த்துக் கொள்ளாமல், கொடி பிடிக்கும் ஆட்களைத் திரட்டாமல், ‘ஆமாம் சாமி’ போடுகிறவர்களை அணுகவிடாமல் ஒலித்து வருகிறார், எவ்வித சமரசமுமின்றி. தன் மனதிற்குப் பட்டதை பளிச்சென்று எழுதும் வழக்கம் உள்ளவர். எழுத்து பத்திரிகையின் மூலம் அறிமுகமான இவர் தனது பாலையும் வாழையும் என்ற விமர்சன நூலால், தமிழ் இலக்கிய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர். எந்த மேல் நாட்டு விமர்சன பாணியையும் கைக் கொள்ளாமல், தன்சுவைக்கு உட்பட்டதை, படைப்பின் கலாச்சாரப் பின்னணியோடு பார்க்கும் தனி ரகம், இவரது விமர்சனம்… இவர் விமர்சனத்தை நாம் ஏற்றுக் கொள்கிறோமா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் “இதோ ஒரு விமர்சகர்” என்று சுட்டிக் காட்டுவதற்கு கோபுர உச்சியிலே உட்கார்ந்திருக்கும் ஒரு விமர்சகர், வெங்கட் சாமிநாதன். இலக்கியம் மட்டுமல்லாமல் – இசை, ஓவியம், நாடகம், சினிமா போன்ற பல துறைகளிலும் கால் பதித்து, அவைகளைப் பற்றியெல்லாம் விமர்சனம் எழுதுபவர்.
– சுபமங்களா அக்டோபர் 1995
சுந்தர ராமசாமியைத் தவிர வெங்கட் சாமிநாதன் மட்டும் தான் என் தோள்மீது கையைப் போட்டுக்கொண்டு நடப்பார். – இமையம்
வெங்கட் சாமிநாதனின் ‘மார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல்’ அச்சுக் கோக்கப்பட்ட சமயம். தலைப்புக் கீழ் ஒரு பெரிய அடிக்கோடு வேண்டும் என்று சுந்தரத்திடம் சொல்லியிருந்தேன். ‘ஜாப் ஒர்க்’ செய்கிற – திருமண அழைப்பிதழ், ரசீதுகள், துண்டுப் பிரசுரங்கள் முதலியன; மிக நீண்டது என்றால் ‘புக் ஒர்க்’ மாதிரி வருவது, திருமண வாழ்த்துப் பா முதலியன செய்கிற – இந்தத் தொழிலாளர்களுக்கு ‘ஸ்டிக்’கில் வரி, வரி, அடுத்த வரி என்று அடுக்கிக் கொண்டே போவது சலிப்பூட்டும் வேலை; அதோடு எரிச்சலூட்டுவதும் கூட. சில தடவை அடிக்கோடு இன்னும் கொஞ்சம் பெரிதாக என்றதால், சுந்தரம் அந்தத் தலைப்புக்கு பார்டர் கட்டி விட்டார்; இருக்கட்டும்; ஆனால் ‘மேட்டரை’ இன்னும் கீழே இறக்கணும் அப்போது சரி என்றார். அச்சாகி வந்தபோது தோழர்கள் அதைத் தவறாகப் புரிந்து கொண்டதாகத் தெரிந்தது. அது, அப்படி எடுத்துக் கொள்ளப்படும் சாத்தியம் எனக்குப் படவேயில்லை. ஈமக்கிரியை அட்டைக்குத்தானே அப்படி, அதுவும் இன்னமும் சிறிய அலவில் என்று சுந்தரத்திற்கும் கூட தோன்றவில்லை. இதை அவரிடம் நான் சொன்னதாக ஞாபகமில்லை. அடுத்த இதழில் அது பற்றிய சிறு விளக்கம் தரலாம் என்ற எண்ணத்தையும் நாங்கள் விட்டுவிட்டோம்.
– சில நினைவுகள் – சி. மணி
மலேரியா சுரம் நிறைந்த பிரதேசத்தில் வாழும்போது, எவ்வளவோ அதிக முக்கியமான தேவைகள் முன் நின்றாலும் அவற்றையெல்லாம் பின்னொதுக்கு, முதன் முதலாக, நாம் வாங்குவது கொசு வலை. பின்னர், நீர்த்தேக்கங்களில் கொசுக்களைக் கொல்ல மருந்து வகைகள். சாப்பாட்டுத் தேவைகள் கூட அவ்வளவு முக்கியமல்ல. சூழ்நிலையைய் பொருத்து நேரும் தலைகீழ் முக்கியத்துவங்கள் இவை. இன்றைய தமிழ் இலக்கியச் சூழ்நிலையில், இக்கல்லறைக் குரலையும் பொருட்படுத்த வேண்டுவதாகிறது. அது, அநாவசிய நிர்பந்தம்.
மார்க்ஸின் நித்தாந்தம் பிறந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு, சகல துறைகளிலும் பொருள்நோக்கு (Materialism) நிறைந்த ஒரு காலம். விஞ்ஞானத்திலும், தத்துவ சிந்தனைகளிலும், பொருள் நோக்கு ஆதிக்கம் செலுத்தி வந்தது. பிரபஞ்சம் முழுவதையுமே ஒரு யந்திர ரீதியான அமைப்பாக பார்த்த, இதன் விளைவாக ஒரு குட்டிப் பிரபஞ்சத்தைப் பரிசோதனை சாலைகளில், working model ஆக அமைத்துக் காட்டிவிட முடியும் என்றும், மனித வாழ்க்கையும், பிரபஞ்ச இயக்கமும் ஒரு வரையறுப்பில் அடங்கிய, எனவே, அவற்றின் எதிர்காலமும் முன் அறியப்படக்கூடிய ஒரு நிர்ணய இயக்கமே என்ற கருத்துகள் மேலோங்கியிருந்த காலம். இத்தகைய யந்திர ரீதியான சூழ்நிலையில் மார்க்ஸ், உலகத்தின் ஒரு நாட்டில், ஒரு சமுதாயத்தில், ஒரு காலக்கட்டத்தில், அதன் புறவாழ்வின் ஒரு அம்சத்தில், நிகழ்ந்த மனிதத் தன்மையற்ற அநீதிப் போக்குகளைக் கண்டு, அவற்றின் இயல்பை, நேர்ந்த காரணங்களை ஆராய்ந்தார். அவருடைய ஆராய்வு, சில முடிவுகளைத் தந்தது. அம்முடிவுகள், அவ்வளவு ஒன்றும் புரட்சிகரமானவை, வெறுமையிலிருந்து பிறந்து திடுக்கிட வைப்பன அல்ல. உண்மையில் மார்க்ஸ் வரைய சிந்தனை வளர்ச்சி, சமுதாய வளர்ச்சி, அன்றைய மனிதநிலை, மார்க்சை எதிர்பார்க்க வைத்தன என்று சொல்லவேண்டும். மார்க்ஸுக்கும் முன்பு, பொருள் முதல் நோக்குகள் இருந்தன. தத்துவார்த்த ரீதியில், பொருளாதாரத்துறையில் கூட மார்க்ஸுக்கு முன் ராபர்ட் ஓவன், ரிக்கார்டோ முதலானோர், மார்க்ஸின் தோற்றத்திற்கு வழிவகுத்திருந்தனர். ஹெகல், மார்க்ஸுக்கு முன்னோடி. ஆனால், மார்க்ஸின் சிந்தனையில் இத்தகைய பரந்த, எல்லாத் துறைகளையும் உள்ளடக்கிய ஒரு பூரண சித்தாந்தத் தோற்றத்திற்கு விஞ்ஞான வளர்ச்சியும், சமூக மாறுதல்களும் வழிவகுத்தன. அக்கால இயல்பிலேயே, யந்திரப் பிரபஞ்சப் பார்வையில் மார்க்ஸ் ஒரு நாட்டில் அதனுள்ளும் குறுகி ஒரு சமுதாயத்தில், அதனுள்ளும் குறுகி அதன் ஒரு காலக் கட்ட நிகழ்வில், அதனுள்ளும் குறுகி அதன் புறவாழ்வின் ஓர் அம்சத்தில் தான் கண்ட தத்துவப் பின்னணியைப், பிரபஞ்ச அகண்டத்திற்கு விரித்து எல்லாச் சமுதாயங்களையும், எல்லாக் காலங்களையும், எல்லாத் துறைகளையும், தன் விதிமுறைகளில் உள்ளடக்கியதான ஒரு சித்தாந்த அமைப்பாக (System)க் கண்டார். மார்க்ஸின் சித்தாந்த்தின் பின் தூண்டுதலாக இருந்த அவருடைய மனிதாபிமானத்தையோ, அவருடைய மஹோன்னத மேதைமையையோ இது குறை கூறுவதாகாது. இவரை சரித்திர நிர்ப்பந்தங்கள். இத்தகைய சித்தாந்த அமைப்புகள் (System Building) பல நூற்றாண்டுகளாக, 19-ஆம் நூற்றாண்டு வரை தத்துவ தரிசிகளின் சிந்தனைகள் கட்டுப்பட்ட ஒரு பழக்கம். ஆமாம், அதைப் பழக்கம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், 20-ஆம் நூற்றாண்டில் இப்பழக்கம் கைவிடப்பட்டுள்ளது. காரணம், விஞ்ஞானத் துறைகளிலும், சிந்தனைத் துறைகளிலும் ஏற்பட்டுள்ள வளர்ச்சியும், பிரபஞ்சம் தன்னுள் கொண்ட சிக்கல்களின் ஞானமும் , இவை ஒரு புறம் இருக்கட்டும்.
மார்க்ஸின் முடிவுகள், மனித சிந்தனை வளத்திற்கு அளித்த பங்கு, உண்மையிலேயே அதிகம். அவரது காலம் வரை, இல்லாத அல்லது குறைபட்ட ஒரு பார்வை. மனித சிந்தனை இதுவரை தன்னை அவ்வளவாக ஈடுபடுத்திக் கொள்ளாத ஒரு பார்வையை அளித்தது. அப்பார்வை, எத்தனையோ பார்வைகளுடன் உடன்கொள்ள வேண்டிய ஓர் அவசியமான என்பதல்லாது, அதுவேதான் பார்வை, ஒரே பார்வை, மற்றவை இதன் சமன் தூக்கில் உட்கொள்ளப்பட வேண்டியவை, அல்லது வேண்டாது ஒதுக்கப்பட வேண்டியவை என்ற நிலை மார்க்ஸின் காலத்தில், அவர் வாழ்ந்த சூழ்நிலையில், அவர் காலம் வரை, கிடைத்த விஞ்ஞான, அறிவுத்துறை வளர்ச்சியில் நிர்ப்பந்தமாகிப் பெற்ற ஒன்று. மார்க்ஸ், இத்தகைய சிந்தனை அமைப்பு நிர்ணயத்திலிருந்து, தன்னைக் காத்துக் கொண்டிருக்க முடியாது. தவிர்த்திருக்க முடியாது.
எனவே, மார்க்ஸின் சித்தாந்தம் ஒரு காலக் கட்ட வளர்ச்சியின் சிறைக்குள் அகப்பட்ட ஒன்று. இது மாக்ஸுக்கு மாத்திரம் நிகழும் துரதிருஷ்டம் அல்ல. மனித சமுதாய வளர்ச்சியில், அறிவு விஸ்தாரத்தில், விஞ்ஞானப் பெருக்கத்தில், எந்த சித்தாந்தத்திற்கும் ஏற்படும் நிகழ்வு, இது. மார்க்ஸின் சித்தாந்தம் மனித சமுதாயத்தின் ஒரு துணுக்கில் ஒரு காலகட்டத்தில், ஒரு புறவாழ்வு அம்சத்தின் ஆராய்வில் பெற்ற சில முடிவுகளை விஸ்தரித்துப் பெற்ற பிரபஞ்ச நிர்ணய அமைப்பு. அதன் பிறப்பிடமான பொருளாதாரத்திலேயே அதன் முடிவுகள் செலாவணி அழிந்தது, குறையாகாது. அதுவே, அதன் நிறையும் ஆகும். அதிலேயே அதன் லட்சிய பூர்த்தியும் ஆகும். ஒரு நோக்கில், எந்நிகழ்ச்சிகள், அநீதி முறைகள், மார்க்ஸின் பொருளாதார சமுதாய நோக்குக்குக் காரணமாகவிருந்தனவோ, அம்முறைகளும் நிகழ்வுகளும் அழியக் காரணம், மார்க்ஸின் சித்தாந்தப் பிறப்புதான். அது அழியவே சித்தாந்த ஜீவிய நியாமும் உடம் மறைந்துவிட்டது. பொருளாதாரத் துறையிலும் சமூகவியல் துறையிலும் இம்மாற்றம் நிக்ழ்ந்து மாக்ஸின் சித்தாந்தம் மறைந்தபின், அப்பார்வையில் விஸ்தரிக்கப்பட்ட மனவியல், பௌதீகம், தத்துவம், இலக்கியம், கலைச் சித்தாந்தம், ஜீவ அணுஇயல், சரித்திரம் ஆகிய இவற்றில் அச்சித்தாந்தப் பார்வைகளும் அழிந்துவிட்டன.
ஆனால், அவற்றின் உயிர் இழப்பிற்குப் பின்னும், இச்சிந்த்தாந்தங்களினால் சவ உருவம் (mummies) பாதுகாக்கப்பட்டு நடமாட வைக்கப்படுகின்றன, காலம் கடந்து, ஜீவிய நியாயமற்று. காரணம், இச்சித்தாந்த அமைப்பு (Philosophic system), ஒரு ‘மூடுண்ட’ (closed system), வளர்ச்சி மறுக்கப்பட்ட ஓர் அமைப்பு. இதன் சிருஷ்டி இயல்பிலேயே இச்சித்தாந்தத்தின் பிறப்பிற்குப் பின், ஏற்பட்டுள்ள எந்த வளர்ச்சியும், மாறுதல்களும், அறிவுத் துறைகளிலும், சிந்தனைப் பாதைகளிலும், விஞ்ஞானப் பிரிவுகளிலும் சரி, எவையுமே, அவற்றின் முன் இவ்வமைப்பு, உரசி, அவற்றின் எதிர்ப்பில் இதன் நியாயத்தை, உண்மையைச் சரிபார்க்கவொட்டாதவாறு, ஒரு மூடுண்ட அமைப்பாக, சிருஷ்டிக்கப்பட்டு, எத்தகைய எதிர்ச்சிந்தனையும், விஞ்ஞானத் தெரிவுகளும், இவ்வமைப்பின் கட்டடத்தில் மார்க்ஸ் தன் காலச் சூழ்நிலையின் நிர்ப்பந்தத்தில், தான் நின்று பார்த்த கோணத்திலிருந்தே, பார்வையிலிருந்தே, காலத்தால் வளர்ச்சியால் பிற்பட்ட எந்த வளர்ச்சியின் எதிர்நோக்கும் நின்று பார்க்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை தன் உடன் அடக்கியது. இந்நிலையை, மார்க்ஸைத் தவிர வேறு எந்த மார்க்ஸிஸ வாதியாலும் எதிர்க்க, மறுக்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஓர் உதார்ணம்: வான சாஸ்திரத்தில் ஒரு புதிய கண்டுபிடிப்பு. பல்ஸார் (Pulsar) எனப்படும் ரிஷபக் கூட்டத்தில் (Taurus Constellation) காணப்படும் நட்சத்திர கோளங்கள். இக்கோளங்களிலிருந்து கிளம்பும் ரேடியோ அலைகள், ஒரு வருடத்திற்கு முன்னதாகத்தான் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் கண்டுபிடிப்பிற்குப் பிறகு பழைய பௌதிக சாஸ்திரத்தையே சிருஷ்டிக்க வேண்டியிருக்குமா என்பதே. உண்மையில் எந்த விஞ்ஞானமும், அறிவுத்துறையும் ஒரு மூடுண்ட அமைப்பாக இருக்க முடியாது. ஆனால் மார்க்ஸின் சித்தாந்த அமைப்பு அது பிறந்த நாளிலிருந்து இதுவரை ஏற்பட்டுள்ள எத்தகைய துறை வளர்ச்சிகளையும், மாறுதல்களையும், எதிர் கொண்டதுமில்லை; அவற்றைக் கண்கொண்டு பார்த்ததுமில்லை. அவை ஏதும் இச்சித்தாந்தத்தைப் பொருத்தவரை நிகழாதவை. ஒரே வரியில் 1848-க்குப் பிறகு உலகம் சிலையாகி நின்று விட்டது, மார்க்ஸியவாதிகளின் நோக்கில். இவர்கள் இங்கிலாந்தில் உள்ள Flat Earth Society-க்காரர்கள் போன்றவர்கள். நம் ஜோதிட நிபுணர்கள், ராவணனின் புஷ்பக விமானத்தைத் தாண்டி எதையும் நோக்க மறுக்கும் மடிசஞ்சிகள் போன்றவர்கள். டார்வின் சித்தாந்தம் பிறந்த காலத்தில், பைபிளின் Genesis-ஐ விடாப்பிடியாக அரவணைத்துக் கொண்டு விஞ்ஞான ஆராய்ச்சி முடிவுகளைக் கண்கொண்டும் பாராது, குருட்டுத்தனமாக எதிர்த்தா டார்வின் காலத்திய கத்தோலிக்க சர்ச்சுக்காரர்களைப் போன்றவர்கள் இவர்கள்.
இச்சித்தாந்தத்தில் மூடுண்ட இயல்பிற்கும் ஒரு யதேச்சதிகாரத்தின் நிழலில், அதன் கருவியாக வளர்ந்த துரதிருஷ்டமும், இக்காலங்கடந்த சவ வாழ்விற்குப் பெரும் காரணமாகும். மற்ற துறைகள் போல, கலையும் இலக்கியமும் அவற்றின் தன் இயக்கம், சுய வளர்ச்சி மறுக்கப்பட்டு சித்தாந்தத்தின் பிரசார அம்சமாகக் கருதப்பட்டதாலும் சோஷலிஸ யதார்த்தம் பிறந்தது. சோஷலிஸ யதார்த்தவாதம் மார்க்ஸின் படைப்பும் அல்ல; இலக்கிய நோக்கும் அல்ல. ஒரு யதேச்சதிகாரம், தன்னைப் பலப்படுத்திக்கொள்ள, தன் வாழ்வை ஸ்திரமாக்கிக் கொள்ள சிருஷ்டித்துக் கொண்ட பிரசாரக் கருவி. மேலும், சோஷலிஸ யதார்த்தத்தின் கட்டுண்ட, இழிநிலைக்குக் காரணம், எந்த யதேச்சதிகாரத்தின் பிரசரா கருவியாயிற்றோ அதன் மூலகர்த்தா, கலை, இலக்கிய விகாரங்களில் ஒரு நிரட்சர குக்ஷியாக (Philistine) இருந்ததும் காரணம்.
ஆகவே, இப்பார்வை, மார்க்ஸியத்தின் பிறழ்ச்சி, இலக்கியத்துக்கும், கலைக்கும் சம்பந்தமில்லாத ஒரு அரசியல் பார்வை, அதிலும் ஒரு தனி மனித அதிகாரம், அரசியலாகிவிட்ட நிலையில் பிறந்த அரசியல் பார்வை.
…
எளிமை நாடும் மனம், ஒரு பத்திரிகை மனம், நோய்க்கூறான பண்பில், பொது ஜன நோக்கம் கொண்ட மனம் (demagogic mind) இதற்கும் சிந்தனை, இலக்கியம் போன்றவற்றிற்கும் உறவு ஏதும் இல்லை. இதைத் தெளிவாகச் சொல்வது என்றால் நான் C.E.M. Joad-ஐத்தான் மேற்கோள் காட்ட வேண்டும்.
“There is no necessary reason – atleast I know of none – why the universe should be readily comprehensible by a twentieth – century mind. or why persons of average capacity should be enabled easily to grasp the thoughts of the profoundest intelligences that life has yet succeeded in evolving.” (Guide to Philosophy – p.11)
—-
நடை, இதழ்கள் 3,4,5,6
பூரணு இதழ் 8, 1974 (இலங்கை)
அந்த 240 பக்க நாவல், இரண்டு மணி நேர திரைப்படமாக பிளேட் ரன்னர் (Blade Runner) என்னும் தலைப்பில் 1982ல் வெளியானது. முப்பத்தியேழு ஆண்டுகள் முன்னகர்ந்து, 2019ஆம் வருட அமெரிக்காவும் லாஸ் ஏஞ்சலீஸ் நகரமும் எவ்வாறு இருக்கும் என்பதை காட்சிபூர்வமாகக் கற்பனையில் காண்பித்தது.
முதல் பிளேட் ரன்னரில் தனி ஒருவனின் உளச்சோர்வை பிரதானமாக முன்னிறுத்தினார்கள். நம்முள்ளே பொதிந்து கிடக்கும் ஆற்றலிழப்பையும் தனிமையில் புழுங்கி செயலிழக்கும் தன்மையையும் உணர்த்தினார்கள்.
இப்போது அந்தப் படத்தின் அடுத்த பாகம் பிளேட் ரன்னர் 2049 (Blade Runner 2049) வெளிவந்திருக்கிறது. படம் வெளிவருவதற்கு முன்பே, நடுப்பட்ட முப்பதாண்டுகளில் என்ன நடந்திருக்கிறது என்பதற்கு முஸ்தீபாக மூன்று குறும்படங்களை முன்னோட்டம் விட்டார்கள். இவற்றில் முதல் குறும்படம் ஜப்பானிய மாங்கா வகையில் எடுக்கப்பட்டது. அது 2036ஆம் ஆண்டில் பிளேட் ரன்னர் குறிப்பிட்ட சமூகம் எப்படி நிலவியது என்பதை அசைபடமாகச் சொல்கிறது. அதற்கு அடுத்த இரண்டாம் குறும்படம் 2048ல் நடப்பதாக அமைந்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் பிரதான எதிர்நாயகன் ஆன நியாண்டர் வாலஸ் (நடிகர் ஜாரெட் லீடோ) இதில் தோன்றியிருக்கிறார்.
அந்தப் படங்களை இங்கே பார்க்கலாம்:
மூன்றாவது குறும்படம் தற்போதைய ப்ளேடு ரன்னருக்கு அஸ்திவாரம் அமைக்கிறது. அதில் வரும் முக்கிய கதாபத்திரமான ஒட்டன் (Sapper) 2049ன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் சந்து பொந்துகளை சமாளிப்பதில் குறும்படம் துவங்குகிறது. மனிதர்கள் உயர்வானவார்களாகவும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களாகவும், ரோபாட் எந்திரன்கள் அடிமைகளாகவும் வாழும் காலகட்டம் அது. மனிதத்தன்மை என்பது என்ன என்பதைக் குறித்த விமர்சனத்துடனேயே அந்தக் காட்சி அரங்கேறுகிறது. தாயையும் அவளின் பதின்ம வயதுச் சிறுமியையும் மனிதத்தனம் இல்லாமல் கொடூரத்திற்கு உள்ளாக்கும் மனிதர்களை அடித்து நொறுக்குகிறான் எந்திரன் ஆகிய ஒட்டன். மனிதர்களைத் தாக்கியதால் எந்திரனுக்கு கண்டதும் கொலை தண்டனை விதிக்கப்படுவதில் அந்தக் குறும்படம் முடிகிறது.
அதில் மாட்சியும் புகழும் (The Power and the Glory) என்னும் புத்தகம் பரிசளிக்கப்படுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ’தி பவர் அண்ட் தி குளோரி’ புத்தகம் கிரஹாம் க்ரீன் என்பவரால் 1940ல் எழுதப்பட்டது. இதன் தலைப்பு அஷ்டோத்திர நாமாவளிகளில் “போற்றி” என்று முடிவது போல்… “எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று ஆஸ்கார் விருது ஒப்புதல் பேச்சின் முடிவில் ஏ ஆர் ரெஹ்மான் அனுஷ்டிப்பது போல்… ”உமக்கே புகழ், உமக்கே மாட்சி, ஆமென்.” என்று கிறித்துவ நற்செய்திகளின் முடிவிலும் ஜெபப் பாடல்களின் இறுதியிலும் மீண்டும் மீண்டும் வரும் சொற்றொடர் ஆகும்.
இந்த நாவலின் கதைக்கும் பிலிப் கே டிக் எழுதிய “எந்திரன்கள் மின்-ஆட்டை குறித்து கனவு காணுமா?” கதைக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. ”விஸ்கி பாதிரியார்” என்பவர் ”மாட்சியும் புகழும்” நாவலின் முக்கிய கதாபாத்திரம் ஆவார். விஸ்கி பாதிரியாரை ஒரு சமயம் பார்த்தால் பரிதாபமாக இருக்கும். இப்படித் தன்னைத் தானே அழித்துக் கொள்கிறாரே என வருத்தம் எழும். தன் மதம் சொன்ன குருமார்களுக்கான லட்சணத்தை மீறி ஒரு குழந்தைக்குத் தந்தையாக விஸ்கி பாதிரியார் இருக்கிறார். முன் செய்த பாவத்திற்காக வருந்தி வாழும் தவ ஒழுக்கத்தைப் பார்த்தால் கொஞ்சம் உன்னையே மன்னித்துக் கொள்ளுங்களேன் என சொல்லத் தோன்றும். அவரின் பிராயச்சித்தத் தேடலை முடிவுக்குக் கொணர்ந்து அவருக்கு நற்கதி கொடுக்கக் கூட நாம் எண்ணுவோம்.
விஸ்கி பாதிரியாருக்கு எதிர் நாயகராக காவல்துறை அதிகாரி உலாவருகிறார். இந்த இரு கதாபாத்திரங்களுக்கும் மாட்சியும் புகழும் நாவலில் பெயர்கள் எதுவும் தரப்படவில்லை. காவல்துறை அதிகாரிக்கோ திருச்சபை மீதும் தேவாலயம் மீதும் அப்படியொரு வெறுப்பு. அவர் சோஷலிஸத்தை சிரத்தையாக பின்பற்றும் காம்ரேடு ஆவார். சர்ச் அமைப்பு, காவல்துறை அதிகாரியின் இளமையில், அவரை சின்னாபின்னமாக்கியுள்ளதாலும் காவலருக்கு மாதாகோவில் மீது கோபம் கலந்த பழிவாங்கும் உணர்ச்சி நிலவுகிறது. அந்தக் காவலரைப் பொருத்தவரை தேவாலயம் என்பது திருடர் கூட்டத்தின் பதுங்குமிடம். திருச்சபை குருக்கள் எல்லோரும் கொலைகாரர்கள். மார்க்ஸ் சொன்னது போல் அது வெகுசனத்தின் அபின் என்னும் எண்ணம் கொண்டவர்.
இவர்கள் இருவரும் கொண்ட கொள்கையில் சிரத்தையாகப் பயணிப்பவர்கள். இவர்களுக்கு நடுவே மூன்றாவது முக்கிய கதாபாத்திரமாக முன்னாள் அருட்தந்தை ஹோஸே வருகிறார். அவர் முந்தைய அரசின் ஆணைப்படி கிறித்துவ மதத்தை போதிக்க வந்தவர். ஆனால், போர் முடிந்து அரசு மாறிய பிறகு, தன் மார்க்கத்தை கைவிட்டு மனைவியைக் கைப்பற்றியவர். முன்பு மதத்தின் வழி சென்றவர், இப்பொழுது மனைவியின் பின் செல்கிறார். மக்களுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையூட்டும் பிரச்சாரகராக விளங்கியவர், இப்போது எவ்வளவுதான் நம்பிக்கையாளர் கெஞ்சினாலும் – எந்தவித ஜெபமும் வழிபாடும் நடத்தாமல், அரசு கொடுக்கும் பென்சன் பணத்தில் காலந்தள்ளுகிறார். அதனால், மக்களின் மதிப்பை இழக்கிறார். தன் சுய கௌவரவத்தையும் இழந்து நிற்கிறார். காவல்துறைக்கு பயந்து அஞ்சி நடுங்கி வாழ்கிறார்.
கத்தோலிக்க மதம் தடை செய்யப்பட்ட கிராமத்தில் விஸ்கி பாதிரியார் நுழைவதுடன் கதை துவங்குகிறது. மெக்ஸிகோ எங்கும் ரோமன் கத்தோலிக்கத்தை பரப்பவியலாத நேரத்தில், சமயக்கோட்பாடுகளை நிறுவி மெக்சிக மக்களை மதம் மாற்றுவதை குறிக்கோளாகக் கொண்ட விஸ்கி பாதிரியாரின் பயணங்களை இந்த நாவல் விவரிக்கிறது. அவர் அனாதரவாக விட்ட அவரின் பெண் குழந்தையை அவர் தன் பாதையின் நடுவே சந்திக்கிறார். ஆனால், அந்த இளமைக்கால தவற்றுக்காக அவர் வருந்தி தன் மதம் பரப்புக் கொள்கையை விட்டு விலகுவதில்லை. தன் பாட்டுக்கு உறுதிப் பூசுதல், ஒப்புரவு வழங்குவது, ஆன்ம சோதனைகளை நிறைவேற்றுவது, என்று மதகுருவாக உலாவுகிறார்.
கதையின் இறுதியில் இறக்கும் தருவாயில் இருப்பவருக்காக கத்தோலிக்கம் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் மதபோதகர் நுழைய வேண்டுமா என்னும் உச்சகட்டத்தில் நிற்கிறது. சோதனைகள், மனித பலவீனம், உலக துன்பங்கள், மாயக் கவர்ச்சிகள், பேராசை, சுயநலம் போன்றவற்றில் வீழ்த்தாட்டும் மனிதரை பாவத்தில் இருந்து மீட்டு புதுவாழ்வுக்கு அழைத்துச் செல்லும் பாவசங்கீத்தனம் செய்ய விஸ்கி பாதிரி செல்வாரா? அப்படிச் சென்றால் காவல்துறையினரால் கைது செய்யப்படுவாரா? கைதாகினால் மரண தண்டனை நிறைவேற்றப்படுமா? இந்த ஒரு மதபோதகரை நீக்கினால் மட்டும் கத்தோலிக்கம் நசுங்குமா? வாத்திகன் திருத்தூதரக அரண்மனையில் இருந்து மற்றுமொரு தூதர் அனுப்பப்படுவாரா?
இதே போன்ற பல கேள்விகளை ப்ளேட் ரன்னர் 2049 எழுப்புகிறது.
கிட்டத்தட்ட, முதல் பாகத்தைப் போலவே, ப்ளேட் ரன்னரின் இரண்டாம் பாகத்தை ”அரைவல்” (பார்க்க: உங்கள் வாழ்க்கையின் கதை – வருகை – சொல்வனம்) திரைப்படத்தின் இயக்குனர் அமைத்திருக்கிறார். எந்திரகதியையும் மனிதத்தனத்தையும் எந்த குணாதிசயம் வேறுபடுத்துகிறது? புறத்தோற்றத்தில் மானுடர் போல் இருந்தாலும் அகத்தில் எவ்வாறு நல்லுயிர் ஞானம் இருப்பதை உணர்வது? – போன்ற கேள்விகளை எழுப்பி விடை தேடிக் கொள்ளச் சொல்கிறார்கள்.
ப்ளேட் ரன்னர் என்பவர் யார்?
வருங்காலத்தில் மனிதரைப் போலவே தோற்றமளிக்கும் இயந்திரன்கள் உலாவுகிறார்கள். இவர்களை நகலன் (Replicant) என்று அழைக்கிறார்கள். மனிதர்கள் வெறுத்து ஒதுக்கும் வேலைகளை நகலர்கள் நிறைவேற்றுகிறார்கள். இந்த நகலன்களை, தெய்வத்தை ஒத்த முதலாளி என்னும் கடவுள் ஆன நியாண்டர் வாலஸ் படைக்கிறார். அவரின் நிறுவனம், பாலியல் வக்கிரங்களுக்கு துணைபோகும் அடிமைப்பெண்ணை, ”தேவதை” என்னும் வர்த்தகச் சின்னத்தின் கீழ் விற்பனை செய்கிறது. திரைப்படத்தில் தோலிகள் என்றும் தோல்-வேலயாட்கள் என்றும் கீழ்மையான விளிப்புகளின் மூலம், மனிதர்களின் கொத்தடிமைகளாக இவர்கள் நடத்தப்படுகிறார்கள்.
இதனால் சில நகலன் இயந்திரன்கள், அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கின்றன. மனிதர் கொடுக்கும் அறமற்ற கட்டளைகளை அவர்கள் செவிமடுக்க மறுக்கின்றன. அந்த அயோக்கிய நகலன்களைக் கொன்று அடக்குவோரே ப்ளேட் ரன்னர்கள்.
1982ல் வெளியான ப்ளேட் ரன்னரில், நெக்ஸஸ்-6 ரக நகலன்களை வேட்டையாடிக் கொல்வது கதாநாயகன் ஹாரிஸன் ஃபோர்டின் வேலை. தற்போதைய ப்ளேட் ரன்னரில், நெக்ஸஸ்-8 ரக நகலன் ஆன ஒட்டன் என்பவனைக் கொல்வதில் படம் துவங்குகிறது. படத்தின் நாயகனின் பெயர் வெறுமனே “கே” எனப்படுகிறது. அவனின் உற்பத்தி எண் ஆன KD6.3-7 என்பதன் சுருக்கம் “கே”. அவனும் ஒரு நகலன் தான். அவன் மனிதரின் கட்டளையை எந்த வித எதிர்க்கேள்வியுமின்றி அடிபணிந்து நிறைவேற்றுபவன். அவன் நெக்சஸ்-9 ரகத்தை சேர்ந்த நகலன்.
அந்த KD6-3.7 என்னும் நகலன் தன் வாழ்வின் ரகசியங்களை ஆராய்வதுதான் ப்ளேட் ரன்னரின் திரைக்கதை. எங்கிருந்து உருவானான்? எப்படிப்பட்ட நினைவுகளை தன்னகத்தேத் தேக்கியிருக்கிறான்? எவ்வாறு அந்த அவதானங்கள் தன்னுணர்ச்சியாக மாற்றம் பெறுகின்றன? ஒருவருடைய உறுதியான நம்பிக்கை, எவ்வாறு பொய்யாக கட்டமைக்கப்படிருக்கலாம்? முன்னோர் சொன்ன பொய்களும் அவர்கள் கற்பித்த கதைகளும் எவ்விதமான உணர்ச்சி வசப்படல்களை அவனுள் உருவாக்குகின்றன?
அறிபுனை திரைப்படங்களில் பட்டாசு வெடிப்பது போல் எல்லாம் வெடித்துச் சிதறும். மாயாஜாலம் போல் அனைத்தும் மின்னும். கார்கள் பறக்கும். ஸ்டார் வார்ஸ் போன்ற ஹாலிவுட் அறிவியல் படங்களில் இது போன்ற சாகசக் கற்பனைகளைப் பார்த்திருப்பீர்கள். பிளேட் ரன்னர் படங்கள் இதில் நிறைய வித்தியாசப்படுகின்றன. எப்போது பார்த்தாலும் சள்ளென்று ஜலதாரையாக மழை பொழிகிறது. மேகம் போல் நச்சுப்புகை படர்ந்திருக்கிறது. நடு நடுவே சாம்பல் நிறத்தில் பனிப்பொழிகிறது. மக்கள் வாழும் நகரைச் சுற்றி குப்பையினால் எழுந்த மலைகள் சூழ்ந்திருக்கின்றன. மலையெனும் கழிவுகளைத் தாண்டினால் கதிரியக்க பயனிலா பாலைவன நிலத்திற்குச் செல்கிறோம்.
ஆனால், இதையெல்லாம் விட ஒன்றேயொன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், அது – இசை. ’ச்சும்மாஆஆ அதிருதுல்ல..’ என அதிநாயகத் தமிழ்த் திரைப்படத்தில் வரும் இரைச்சல், அச்சுறுத்தாமல், நம்மை பல்லிளிக்க வைக்கும். இங்கே அதே பேரோசை நம்மை முற்றுகையிடுகிறது. 1982ல் வெளியான அசலைப் போலவே புதிய படத்தின் இசையும் இருக்கிறது. கொஞ்சம் போல் ஈ.டி.எம் எனப்படும் ‘எலெக்ட்ரானிக் டான்ஸ் மியூஸிக்’ வகை இசைக்கோர்வையைக் கலக்கிறது. காட்சியில் மூழ்கடித்து அந்த வெறுமையில் அமிழ்த்துகிறது. கரையை நோக்கி வரும் கப்பல் எழுப்பும் மூடுபனி எச்சரிக்கைக் கொம்பாக எதிர்பார்த்த தாக்குதலாகத்தான் பின்னணி ஒலித்தாலும், அதன் சிலிர்ப்பு தரும் வசைதாக்குதல், பிறழ்ந்த உலகில் நம்மை நிலைநிறுத்துகின்றது.
படத்தின் நாயகன் “கே” ஒரு நகலர் பொம்மையை தன் வீட்டில் வைத்திருக்கிறான். அந்த பொம்மையின் பெயர் “மகிழ்ச்சி” (Joi). அது “கே” என்ன விரும்புகிறானோ அந்த ஆடையை அணிகிறது. “கே” செத்தால் தானும் உடனே மரிக்க நினைக்கிறது. “கே” என்னும் நகலனை உயிருக்கு உயிராகக் காதலிக்கிறது. “கே” என்ன நினைக்கிறானோ, அதை அப்படியே கிளிப்பிள்ளை போல் திரும்பி உறுதி செய்து அவன் முன்மொழிந்த எண்ணங்களை மறுமொழிகிறது. இது அத்தனையையும் சொந்தமாக சிந்தித்து நிதானமாக யோசித்து தன்னுள்ளே விவாதித்த பின் தீர்மானித்தது போல் நம்பகமாக “கே”யின் முடிவுகளை ஆதரித்து அவனை குஷியாக்குகிறது. கடையில் இந்த “மகிழ்ச்சி” என்னும் பொம்மையை “காதல் (Luv) என்னும் இன்னொரு நகலர் கதாபாத்திரம் கொன்றுவிடுகிறது.
“மகிழ்ச்சி” என்பது ஒலிமப் பருவரை (ஹாலாகிராம்) நிரலி பொம்மை. அதை வில்லன் நியாண்டர் வாலஸ் நடத்தும் கடையில் “கே” வாங்கியிருக்கிறான். அதற்கு முப்பரிமாண படிமம் கொடுக்குமாறு, மற்றுமொரு நிரலியை வாங்கி “மகிழ்ச்சி”யின் திறத்தை உயர்த்துகிறான். தான் ஒரு நகலன் என்பதை “கே” அறிந்திருக்கிறான். அவனைப் போலவே ”மகிழ்ச்சி”க்கும் தான் ஒரு எந்திரம் என்பது தெரிந்தே இருக்கிறது. இருந்தாலும் அவளும் ஆன்மா என்னும் சுயம் அறியும் பயணத்தை மேற்கொள்கிறாள்.
ப்ளேட் ரன்னர் படத்தில் வரும் நகலன்களுக்கும் ரத்தமும் சதையும் கொண்ட நமக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. ப்ளேட் ரன்னர் படத்தின் நகலர்கள் போல் நாமும் எண்ணற்ற சக்திகள் கொண்டவர்கள். நம்முடைய உடலின் ஒவ்வொரு உறுப்பும் மிக சிக்கலான வடிவமைப்பு கொண்டவை. மூளையில் எவ்வளவு விஷயம் வேண்டுமானாலும் ஏற்றிக் கொள்ளலாம். அடிபட்டால் தானாகவே குணமாகும் வழியை நம் தோல் கொண்டிருக்கிறது. கணினி உருவான தேதி போல் நமக்கும் பிறந்த நாள் இருக்கிறது. கணினி காலாவதி ஆவது போல் நாமும் ஓய்வு பெறுகிறோம். படத்தில் வரும் நகலன் அஞ்சி அஞ்சி சாவது போல் நமக்கும் நிறைய பயம் இருக்கிறது. நகலர்களைப் போலவே யாருக்காவது அடிமையாகக் குழப்பத்தில் வாழ்கிறோம். நாளை எனும் நம்பிக்கையில் காலம் கடத்துகிறோம்.
சித்தார்த்த முகர்ஜி எழுதிய மரபணு (ஜீன்) படித்திருப்பீர்கள். நம்முடைய உயிரின் எல்லாத் தகவல்களுக்கும் ஒரு சின்ன மரபீனி முதல் துவங்குகிறது. கணினி எவ்வாறு ஆமாம்/இல்லை என்னும் இருமி எண்மத்தில் அமைக்கப்பட்டிருக்கறதோ… அவ்வாறே, நாமும் உருவாகிறோம். நம்முள் மரபணுத் தகவல் இருக்கிறது. கணினியில் இரும இலக்கங்களின் தொகுதி இருக்கிறது. இரண்டுமே துண்டுகளின் சேர்க்கைதான்.
தங்கம் ஏன் மினுமினுக்கிறது? கரியம் எப்படி படிம எரிபொருள் ஆகிறது? ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு குணாதிசயம். ஆனால், எல்லாப் பொருள்களுக்குள்ளும் அணுக்கள் இருக்கிறது. ஒரேயொரு அணுவில் இருந்து எல்லா பருப்பொருள்களும் உருவாகின்றன. கணினி ஏன் பிழற்ந்து செயல்படுகிறது என்பதற்கு இரும இலக்கம், 0, 1. தகவலின் அடிப்படையலகு சிக்கல்களைச் சொல்ல வேண்டும். அதே போல் மனிதன் எவ்வாறு பிழற்கிறான் என்பதற்கு மரபணுவிற்கு செல்லவேண்டும்.
இப்பொழுது படத்தில் அடிக்கடி வந்து போகும் விளாடிமிர் நபகோவ் எழுதிய ”மங்கிய தீ” (Pale Fire) என்னும் நாவல் ஏன் பொருத்தமாகிறது என எண்ணிப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.
Cells interlinked within cells interlinked
Within one stem. And dreadfully distinct
Against the dark, a tall white fountain played.
உயிரணுக்கள் ஒன்றொடு ஒன்று உயிரணுக்கள் இணையும்
அதில் ஒன்று. வியத்தகு வகையில் தனிப்படும்
இருட்டினுள்ளே, உயரமான வெள்ளையருவி விளையாடும்
இந்தக் கவிதையின் வார்த்தைகளை அதன் அர்த்தம் புரியாமலே திரும்பத் திரும்ப சொல்ல “கே” பணிக்கப்படுகிறான். அதாவது, கணினி ஒழுங்காக வேலை செய்கிறதா என சோதிக்க சில பரிசோதனைகளை மேற்கோள்வோம். அதன் நினைவகத்தில் ஏதேனும் பழுதாகி இருக்கிறதா அல்லது அதன் கட்டளை மையத்தில் நச்சுச் செயலிகள் குடிகொண்டுவிட்டதா என்னும் துப்புரவை தினமும் அனுசரிப்போம். அது போல், “கே”விற்கு நடக்கும் சோதனையில், ‘உயிரணு’ என்னும் வார்த்தையையும் ‘இணை’ என்னும் சொல்லையும் கவிதையின் பொருளோடு பார்க்காமல், இயந்திரத்தனமாக தனித்து உச்சரிக்க வைக்கிறார்கள். கணினி கொஞ்சம் போல் யோசிக்கவோ ஆராயவோ ஆரம்பித்தால், “கே” பழுதுப்பட நகலன் என்று ஓய்வுகொடுத்துவிடுவார்கள்.
முதல் படத்தில் வாழ்வதற்காக நகலர் இறைஞ்சினார். ஏன் தாம் படைக்கப்பட்டோம் என்னும் கேள்விக்கு விடை தேடினார். கடவுளையே பார்த்து அந்த வினாவிற்கான விடையைக் கேட்டாலும், தம் சுய அச்சத்திற்கும் அதனால் எழுப்பும் குழப்பங்களுக்கும் எளிமையான ஒரு வார்த்தை பதில்கள் கிடையாது என்பது புரிந்தது. நமக்கு வேண்டியது எல்லாமுமேக் கிடைக்கப் பெற்றாலும், ஏன் இந்த உலகில் நாம் இருக்கிறோம் என்பதற்கான தேடலையும் நாம் மனிதராக வாழ்வதற்கான கடமை என்ன என்பதற்கான பதிலையும், மகிழ்ச்சிக்கும் திருப்திக்குமான இடைவெளியை “கே” இங்கே ஆராய்கிறான். உங்களுக்கு விடைகள் கிடைக்காது. ஆனால், சரியான கேள்விகளை எழுப்பிக் கொள்வீர்கள்.
என் கணக்கில் இந்த வருடத்தின் தலை பத்து இந்தியர்கள் யார் என்பதை பட்டியலிட எண்ணம். அந்தப் பட்டியலை ஞாநி சங்கரன் கொண்டு துவக்குகிறேன்.
அவரைப் போன்ற மிதமான குரலில் தீர்க்கமாக பிரச்சினையை அணுகி, சுயசிந்தனையுடன் இயங்குபவர் குறைவு. அதுவும் தொலைக்காட்சியும், சமூக ஊடகங்களும், அரசியல் பிரச்சார கோஷங்களும் ஆக்கிரமித்திருக்கும் தமிழ் வெளியில் தொடர்ச்சியாக தன் குரலை வாதங்களுடன் முன்னிறுத்தி செயலிலும் கூட்டு செயல்பாடுகளிலும் முன்னெடுப்பவர் அதனினும் குறைவு. சினிமா மயக்கம், பதவி ஆசை, பண லட்சியங்கள் என்று சமரசம் செய்து கொள்ளாமல், சொந்த வாழ்விலும் அறவிழுமியங்களை பின்பற்றுபவர் ஓரிருவர் மட்டுமே நான் அறிவேன்.
அவர் சென்ற வருடம் மறைந்தார்.
சில காரணங்கள்
ஆம் ஆத்மி ஆகட்டும்; நோட்டா – 49 ஓ போடு ஆகட்டும் – ஏதாவது சிக்கலான விஷயம் என்றால் தலை பதுங்கும் கூட்டத்தினுள், தன் குரலை தீர்க்கமாக முன்வத்தவர்
மூத்திர சட்டி தூக்க இன்னொருவரின் உதவி தேவைப்படும் வயதில் திறமையாக தலைமைப் பதவியை செயலாற்ற முடியுமா என்று கருணாநிதியின் முதல் மந்திரி பேராசையை போட்டுடைத்தவர் – ஓ பக்கங்கள்
எளிமையானவர்; அழைக்கும் போதெல்லாம் நெருக்கமாக உரையாடியவர்; எசகு பிசகான கேள்வியானாலும் வெளிப்படையாக பதிலுரைத்தவர் – மனிதன் பதில்கள்
இன்று மனுசங்கடா திரைப்படம் காணக் கிடைத்தது. கூடவே, ‘திண்ணை’ கோபால் ராஜாராமும் இருந்தது படத்தைக் குறித்த பார்வையை விசாலாமாக்கியது.
படத்தைக் குறித்து சில எண்ணங்கள்:
கோலப்பனாக நடித்தவர் அம்ஷனின் மகனாமே! நன்றாக செய்திருக்கிறார். அழகாகாவும் இருக்கிறார்.
பையனே அப்பாவை ‘பாடி’ என்று சொல்வது சற்றே நெருடியது.
அம்ஷனின் முந்தையப் படம் ‘ஒருத்தி’ சற்றே மறந்து போனது. ‘மனுஷங்கடா’ நிறைய தசாப்தம் நினைவில் நிற்குமாறு இருக்கிறது.
கீழ்வெண்மணி என்றவுடன் நெஞ்சம் படபடக்கும். அதை சொல்லாமல் சொல்லும் காட்சியமைப்பு பதைபதைக்க வைத்தது.
தமிழகத்தில் கூட படம் எடுக்க முடியாமால், மொழி புரியாத ஆந்திராவிற்குச் சென்று காட்சியாக்கமும் ஒளிப்பதிவும் செய்தது, இந்தியாவைக் குறித்த எதிர்மறை எண்ணத்தை அய்ர்வாக எழச் செய்தது.
“அண்ணன்” ஆக நடித்தவருக்கு நல்ல குரல்வளம். ஆனால், நடிப்பு சற்றே சீரியல்தனம்
உணர்ச்சிக் கொந்தளிப்புடன் கதையைக் காட்சியாக்கி இருக்கிறார். கிட்டத்தட்ட ஷங்கர் படம் பார்த்த ஆக்ரோஷத்துடன் படம் முடிகிறது. இந்த மனித உரிமை மீறல் அக்கிரமத்தை படம் பார்த்த திருப்தியோடு கை கழுவாமல் இருக்க வேண்டும்.
வாழும் போது மட்டுமல்ல, வாழாமல் செத்த பிறகும் சாவிலும் கூட விடாமல் துரத்துகிறது சாதியம். சட்டமும் நீதியும் கூட கெட்டி தட்டிப் போன அந்த இறுக்கத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. கோலப்பன் தேடுவது தந்தையின் பிணத்தையல்ல, இந்தியாவின் ஜனநாயகத்தை, அதன் அரசியல் அமைப்பு சட்டத்தையே குழிகளில் தேடுகிறான் என்கிற சமிக்ஞையோடு படம் முடிந்ததாக எனக்குப் பட்டது.
எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் எளிய அலங்காரத்துடன் படம் நேர்மையாக நகர்கிறது. இதனாலேயே சிலர் சலிப்படையக்கூடும். ஜோடனைகள் இல்லாத உண்மை அத்தனை சுவாரசியமானதாக இருக்காதுதான்.
சமீபத்தில் நிகழ்ந்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு நோ்மையானதொரு தலித் சினிமாவை உருவாக்கியிருக்கிறார் அம்ஷன் குமார். ‘தீண்டாமை என்பது பெருங்குற்றம்’ என்பது பாடப்புத்தகங்களில் அல்ல, மனித மனங்களில் ஆழமாக எழுதப்பட வேண்டியது என்கிற செய்தியை இயல்பாக சொல்லிச் செல்கிறது இந்த திரைப்படம்.
இதில் வரும் நடிகர்கள் இயல்பான நடிப்பைத் தந்துள்ளனர். சினிமா ஆர்வலர்களின் ஆதரவு நிச்சயம் தரப்பட வேண்டிய திரைப்படம் இது.
விரிவான கட்டுரை வரும்.
மனுஷ்யபுத்திரன்
இன்று காலை அம்ஷன் குமாரின் ‘ மனுசங்கடா’ திரைப்படத்தை தியாகராய நகர் ஏஜிஸ் ல் பார்த்தேன். இரண்டு மூன்று வரிசைகளே நிரம்பியிருந்தன. பெரும்பாலான இருக்கைகள் காலியாக கிடந்தன. சென்னையில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு ஏழாம்தர குப்பைப்படத்தைக் கூட முன்பதிவு செய்யமல் பார்த்துவிடமுடியாது. இன்றைய காலி அரங்கம் எனக்கு மனதை பிசைவதாக இருந்தது. நண்பர்களுக்கான தனிப்பட்ட ஒரு ஷோ போல இருந்தது.
இத்தனைக்கும் ‘ மனுசங்கடா’ தமிழின் மிக முக்கியமான படம். சாதியத்தின் கோரமுகத்தை வெளிப்படுத்தும் படம். தன் தந்தையின் பிணத்தை பொதுவழியில் இடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல உயர்நீதிமன்றம்வரை சென்றுபோராடும் ஒரு தலித் இளைஞனின் கதை. எந்த வணிக சமரங்களும் இல்லை. அவலத்தின் நடுவே காதல் கிளுகிளுப்புகளின் பூச்சுகள் இல்லை. ஒரு மனிதன் இறந்து அடக்கம் செய்யப்படும் வரையிலான இரண்டு நாளின் கதை. படத்தில் பிண்ணனி இசை என்று தனியாக எதுவும் இல்லை. சுற்றுச் சூழலின் அசலான ஒலிகளே பிண்ணனி இசை. சினிமாவின் அலங்காரங்கள் இல்லாமல் எதார்தத்தை மறுபடைப்பு செய்ய அம்ஷன் குமார் படம் முழுக்க முனைகிறார். அதில் பார்க்கும் கோர்ட் நாம் நிஜத்தில் பார்க்கும் கோர்ட். நாம் பார்க்கும் வருவாய் துறை அதிகாரியும் காவல்துறை அதிகாரியும் நாம் அன்றாடம் காணும் அதிகாரிகள். அதில் வரும் தலித் சமூக தலைவரை நானே நேரில் பலமுறை சந்தித்திருக்கிறேன்.
இந்தப்படம் தெளிவாக சொல்லும் செய்தி ஒன்று உண்டு. இந்த நாட்டில் அரசியல் சாசனமோ நீதிமன்ற உத்தரவுகளோ சாதிய அதிகாரத்தை, அதன் சட்டங்களை வெல்ல முடியாது என்பதுதான். ஒடுக்கப்பட்ட மக்கள் வன்முறையின் மூலமாகவோ போலி சமரசங்கள் வாயிலாகவோ பொய் வாக்குறுதிகள் மூலமாகவோ தங்கள் உரிமைகளை விட்டுத்தர நிர்பந்திக்கப்படுகிறார்கள். தன் தந்தையின் பொதுவழியில் கொண்டு சென்று புதைப்பதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெற்றுவரும் இளைஞனால் கடைசியில் தன் தந்தையை காவல்துறையினர் பலவந்தமாக எங்கே புதைத்தார்கள் என்பதைக்கூட அறியமுடியாமல்போவது அவலத்தின் உச்சம்.
நடிகர்கள் தங்கள் பாத்திரத்தின் எல்லைமீறாமல் நடித்திருந்தார்கள். நவீன நாடகபாணியிலான நடிப்புமுறை சில இடங்களில் தூக்கலாக வெளிப்படுவதை தவிர்த்திருக்கலாம். எந்த ஊர் அடையாளமும் சாதி அடையாளமும் வெளிப்பட்டுவிடாமல் கதையை நகர்த்தியிருப்பது இயக்குனரின் வெற்றி என்றாலும் ஒரு முழுமையான எதார்த்த சினிமாவாக அது மாறுவதை பலவீனப்படுத்துகிறது. ஆனால் அத்தகைய அடையாளங்களை சுட்டினால் படம் வெளியே வந்திருக்காது. உயர் சாதிகளை சாதிப்பெருமை பேச மட்டுமே திரைப்படங்களில் வெளிப்படுத்த லைசன்ஸ் உண்டு. அம்ஷன் குமாரின் திரைப்பயணத்தில் நிச்சயம் இப்படம் அவருக்கு மிக முக்கியமான இடத்தைப்பெற்றுத்தரும்.
பல சர்வதேச விழாக்களில் படம் காட்டப்பட்டு கவனமும் பாராட்டும் பெற்றிருக்கிறது. விழாக்களில் மட்டுமல்ல, பொது சமூகத்தின் மனசாட்சியை இதுபோன்ற படங்கள் உலுக்கவேண்டும். பெரும் போராட்டத்திற்குப்பிறகு சென்னையின் சில திரையங்குகளில் சில காட்சிகள் மட்டுமே இந்த மூன்று நாட்களில் இப்படம் திரையிடப்ப்பட்டது
நாளை இருக்குமா என்று தெரியவில்லை. விளம்பரத்திற்கு கோடிகளை கொட்ட முடியாத, தியேட்டர்களை பிடிக்கும் வலிமையற்ற குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்கும் ஒரு சமூகமாற்றத்திற்கான இயக்குனர் தமிழ்சினிமாவின் மிருகவிதிகளின் முன் தன் படைப்பை அத்தோடு மறந்துவிட வேண்டியதுதான்.
சினிமா என்பது தமிழர்களின் கலை அல்ல, அபின். இங்குவேண்டப்படுவது மிகையுணர்ச்சிகளின் அதீத நாடகமேயன்றி எதார்த்தத்தின் சித்திரங்கள் அல்ல
இன்குலாப்பின் கனல் தீராத கவிதை வரியை தலைப்பாக்கி வெளியாகி இருக்கும் திரைப்படம்.
நேற்றுப் பார்க்க வாய்த்தது.
சாதியத்தின் கோரமுகத்தை மூக்கு உரசும் தூரத்தில் உணர்ந்த அனுபவம்.
திருநாள்கொண்டசேரி சம்பவம் திரையாக்கமாகி இருக்கிறது.
பிறப்பில் துவங்கி ஒவ்வொரு நொடியிலும் உணரும் சாதிய ஒடுக்கு முறையை இறந்த பின்னாலும் பிணமாய் அனுபவிக்க நேரும் கொடூரமே கதைக் களம்.
பொது வழியில் ஒடுக்கப் பட்டோரின் பிணங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்க மறுக்கும் சாதிய திமிர் கொழுத்த கிராமங்களில் ஒன்று அம்மையப்பன் கிராமம்.
ஒடுக்கப் பட்டவர்களின் பிணத்தை எடுத்துச் செல்ல ஒதுக்கப் பட்ட தனிப் பாதை என்பது வெறும் முட்காடு. அதை பாதையாக்க எந்த முயற்சியும் செய்யாத ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள்.
இறந்த தன் தந்தையை பொதுவழியில் எடுத்துச் செல்ல முடிவு செய்து நீதிமன்றத்தை நாடுகிறான் கதாநாயகன் கோலப்பன். அதிசயமாய் நீதி வெல்கிறது. பொதுப்பாதையில் பிணத்தை எடுத்துச் செல்ல உத்தரவிடுகிறார் நீதிபதி. பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கும் அதிகாரிகளுக்கும் ஆணையிடப்படுகிறது.
அந்த தீர்ப்பின் படி, பிணம் பொது வழியில் அனுமதிக்கப் பட்டதா? எப்படி ஆதிக்க சாதியினரும் அதிகாரிகளும் அதற்கு எதிர்வினை ஆற்றினார்கள் என்பதே ஆழமும் அழுத்தமுமான கதை.
உண்மையின் கதையாடல்கள் வலியோடு பதிவாகி இருக்கிறது. எவ்வளவு கேவலமான சமூகத்தில் வாழ்கிறோம் என்கின்ற எதார்தத்தின் சூடு கட்டாயம் உரைக்கும் உணர்வுள்ளவர்களுக்கு.
சிறிய முதலீட்டில் சமூக அக்கறையுள்ள படைப்பை வழக்கிய அம்ஷன் குமார் அவர்களுக்கு மதிப்பு மிகுந்த வாழ்த்துக்கள்.
திரைக்கதையில் உதவிய எழுத்தாளர் அழகிய பெரியவன் அவர்களுக்கும் வாழ்த்துகள்.
சாதியை வெறுக்கும் முற்போக்கு மனநிலை உள்ளவர்கள், மாற்றுத் திரைப்படங்களை ஆதரிப்பவர்கள், கொஞ்சம் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கும் திரையரங்களில் மனுசங்கடாவைப் பார்ப்பதை தனது கடமையாக உணர வேண்டும்.
அது அப்படி இருந்திருக்கல்லாம், இது இப்படி இருந்திருக்கலாம் என்கிற சில லாம்கள் உண்டு தான்.
அதையெல்லாம் மீறி உண்மையும் நேர்மையுமான அக்கறையுமான ஒரு திரைப்படம் என்பதை உறுதியாய் உணர முடிகிற படைப்பு மனுசங்கடா ..
அம்பேத்கரின் நூற்றாண்டு விழாவிற்குப் பிறகு எழுந்த ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி கலை இலக்கியங்களில் பிரதிபலித்தது. சாதி குறித்த பார்வையும் அழுத்தமும் பல விதங்களில் வெளிப்பட்டன, அப்பார்வையை ஆவணப்படங்கள்
அர்ப்பணிப்போடு முன்னெடுத்துச் சென்றன,,,ஆனால் நம்முடைய புனைவுத் திரைப்படங்களோ 25 வருடங்களுக்கு மேலாகியும் நேரடியாகச் சாதி குறித்துப் பேசவில்லை அல்லது தயங்குகின்றன. எளிமையான ஆவணத்தன்மையுடன் “மனுசங்கடா” அதனைப் பேசுகிறது. 25 வருடங்களாக நடந்த சாதி குறித்த விவாதங்களைப் புறக்கணிக்காமல் சாதி வன்கொடுமையைப் பேசுவது , சாதியை நேரடியாகத் தாக்குவது இக்காலத்தின் தவிர்க்க முடியாத கருப்பொருளாகும்.
வில்லன் -கதாநாயகன் என்ற எதிர்நிலைகளை உருவாக்கி ஒருவொரையொருவர் வெற்றி கொள்வது, தோல்வி அடைவது இது வணிக சினிமா மனோபாவம், மனுசங்கடா படத்தில் எதிரிகளில் குறிப்பிட்ட நபர்கள் என்று யாருமில்லை, வெகு தூரத்தில் அவர்கள் யாரென்று தெரியாமலே படமாக்கப்படுள்ளது, ஏனெனில் எதிரி தனிப்பட்ட ஒருவர் அல்ல,, அமைப்புதான்(System) எதிரி.அதை விவாதிப்பதே முக்கியம்.
சாதிக்கொடுமைகளின் உச்சமான அன்றாடம் நடக்கும் “புதைக்கும் உரிமை” மறுக்கப்பட்ட சமூகத்தின் குரல் திரைப்படத்தில் புனையப்பட்டது வரலாற்று முக்கியத்துவமானது.
திருநாள்கொண்டசேரி. நாகப்பட்டினம் மாவட்டம் , மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள வழுவூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமம். இக்கிராமத்தில் வசிக்கும் தலித் மக்களுக்கு தனியாக வசிப்பதற்கென சேரி ஒதுக்கப்பட்டிருப்பது போல, செத்துப் போனால் புதைப்பதற்கென தனியாக இடுகாடு ஒதுக்கப்படவில்லை. ஒரே இடுகாடு என தப்பர்த்தம் கொள்ள வேண்டாம். இடுகாடே கிடையாது. ஒதுக்கப்படவில்லை.
பிறகு, செத்துப் போகிறவர்களை எப்படித்தான் அடக்கம் செய்வார்களாம் என்றால், அக்கிராமத்திலிருத்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் மதிமலை என்கிற இடத்தின் ஆற்றங்கரையில்தான் புதைக்க வேண்டும். அதுதான் அந்த பகுதியில் காலங்காலமான நடைமுறை. அவ்வளவு தூரம் சுமந்து சென்றுதான் பிணங்களைப் புதைத்து வருகிறார்கள் தலித் மக்கள்.
ஆனால் ஒரு கண்டிஷன். அவர்கள் பிணத்தைத் தூக்கிக் கொண்டு ஊரின் பொதுப் பாதையில் செல்லக் கூடாது, கல்லும் முள்ளும் பாவிக் கிடக்கும் வரப்பின் வழியாகத்தான் பிணத்தை எடுத்துச் செல்ல வேண்டும். எப்பேர்ப்பட்ட நீதிபதிகளும் கூட மீறவியலாத இந்த கண்டிஷனை போட்டு வைத்திருப்பது அக்கிராமத்தின் சாதி இந்துக்கள்.
அவர்களுடைய அடாவடியிலிருந்து விலகியிருக்க நினைக்கும் தலித் மக்கள் , தங்கள் பகுதியிலேயே தங்களுக்கென தனித்த சுடுகாடு வேண்டும் என்கிற கோரிக்கையை வைக்கிறார்கள். ஓராண்டில்லை. ஈராண்டில்லை. சுமார் நாற்பதாண்டு காலமாக எழுப்பப்பட்டு வரும் அந்த கோரிக்கையை அரசாங்கம் கண்டுகொள்ளவேயில்லை. ஆயிரமாயிரம் புகார்கள். ம்ஹூம். நடவடிக்கையே இல்லை. தலித் மக்களில் எவரேனும் இறந்து போகும் ஒவ்வொரு முறையும், சாதி இந்துக்கள் தங்களின் மனநோயை வெளிப்படுத்தத் தவறியதே இல்லை. பொதுப் பாதையில் பிணம் எடுத்துச் செல்ல முயற்சிக்கும் தலித்துகளை கடுமையாகத் தாக்கியும் அவமானப்படுத்தியும் வருகின்றனர்.
இந்நிலையில், கடுமையான ஒரு மழை காலத்தில், தலித் மூதாட்டி ஒருவர் இறந்து போகிறார். வழக்கமாகப் பிணம் தூக்கிச் செல்லும் வரப்பில் தண்ணீர் அதிகமும் தேங்கி இருந்ததால் பொதுப்பாதையில் செல்ல காவல் துறையினரிடமும் மாவட்ட ஆட்சி நிர்வாகத்தினரிடமும் அனுமதி கேட்கின்றனர் தலித் மக்கள். அப்படிப்பட்ட தனிமனித உரிமைக்கான சட்டம் இருப்பதையும் எடுத்துச் சொல்லி கெஞ்சுகின்றனர். தலித் மக்கள் பொதுப்பாதையில் சடலத்தைத் தூக்கிச் செல்லலாம் என கோர்ட் ஆணையிட்டுவிட்டது. தலித் மக்களின் கெஞ்சலைக் கண்டும் கோர்ட் ஆணையை நிறைவேற்றும் பொருட்டும் போலிஸ்காரர்கள் சாதி இந்துக்களிடம் செல்கின்றனர். அவர்களிடம் கெஞ்சுகின்றனர். “ஐயா.. போனா போகட்டுங்யா.. எப்படியாவது அவங்களுக்கு வழி உட்ருங்யா ப்ளீஸ்” எந்த கெஞ்சுதல், வேண்டுதல், சாதி இந்துக்களிடத்தில் நிறைவேறியிருக்கிறது?
அவர்கள்தான் மனநோயாளிகளாயிற்றே! கொஞ்சமும் மசியவில்லை. மட்டுமின்றி, காவல் துறையினரையும் கூட மிரட்டுகின்றனர். அவர்களின் மிரட்டலுக்கு அடிபணிந்து, அவமானப்பட்ட காவல்துறையினர் அந்த அவமானத்தால் கொண்ட ஆத்திரத்தையும் வெறித்தனத்தையும் தலித் மக்கள் மீது காட்டியுள்ளனர்.
“தலித் மக்கள் பொதுப்பாதை வழியாக சடலத்தைக் கொண்டு செல்லலாம்” என்கிற தீர்ப்பை கனம் கோர்ட்டாரே சொல்லிய பிறகும் அதை ஒரு டேஷ்க்கும் மதிக்காமல் ’கோர்ட்டாவது மயிராவது’ எனச் சொல்லி ( நன்றி : பாஜகவின் ஹெச். ராஜா ) போலிசையே எதிர்க்கும் ஆற்றல் சாதி இந்துக்களுக்கு இருக்கிறது என்றால் அந்த ஆற்றல் எங்கிருந்து வருகிறது? ஏன் வருகிறது?
சாதியுணர்வு ஒரு மனநோய் என்று பாபாசாகேப் அம்பேத்கர் சொன்னது எவ்வளவு உண்மை.
அந்த மன நோயாளிகளிடம் மல்லுக்கட்ட முடியாமல் போலீசே பிணத்தைச் சுமந்து சென்று அடக்கம் செய்திருக்கிறது. (இச்சம்பவம் தோழர் எவிடென்ஸ் கதிர் அவர்களின் கட்டுரை ஒன்றிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. அவருக்கு நன்றி. )
இப்படியான கேவலமான ஒரு செயல் உலகில் எந்த நாட்டிலாவது நடக்குமா?
இப்படியான சம்பவங்கள் ஒருமுறை இருமுறை, மும்முறைகளல்ல. காலங்காலமாக நடந்து வருகின்றன. இன்றைய டிஜிட்டல்இந்தியா வரை. இந்த டிஜிட்டல் தேசத்தைக் காறித்துப்ப வைக்கும் இப்படிப்பட்ட நிலைமை ஒவ்வொரு நாளும் ஏதோவொரு சேரியில் நடந்து கொண்டிருந்துதானிருக்கிறது.
அன்னாடம் நடந்துவருகின்ற இப்படியான சாதிய அசிங்கங்கள் குறித்து நம்மூரார் யாரேனும் வாய் திறக்கிறார்களா என்றால் இல்லை. மட்டார்கள். அவர்களுக்கு வேறு பல கேளிக்கைகள் இருக்கின்றன. சமயங்களில் இப்படிப்பட்ட செய்திகள் ஊடகங்களில் இடம் பெறும்தான். மற்ற செய்திகள் ஏதும் கிடைக்காத போது.
செத்தாலும் மறையாத இப்படிப்பட்ட சாதியக் கொடுமைகளை, (வெகுசன) அச்சு ஊடகங்களிலேயே சொல்ல முடியாத போது, திரைப்படங்கள் என்கிற வெகுமக்களுக்குப் பிடித்தமான கலையின் மூலம் காட்டுவது என்பதெல்லாம் சாத்தியமில்லாத ஒன்று. ஆனால், அதை சாத்தியப்படுத்தியிருக்கிறது ‘மனுசங்கடா’ திரைப்படம்.
பல்வேறு ஆவணப்படங்கள், ‘ஒருத்தி’ உள்ளிட்ட சுயாதீன படம் ஆகியவற்றின் இயக்குனரும், எழுத்தாளருமான அம்ஷன் குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். பல்வேறு படவிழாக்களில் கலந்து கொண்டு அங்கீகாரத்தைப் பெற்ற இப்படம் இப்போது, வெகுமக்களின் பார்வைக்கு வந்துள்ளது.
திருநாள்கொண்டசேரியில் நடந்தைப் போல பல்லாயிரம் கிராமங்களில் இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கும் சாதிய அசிங்கத்தை அப்பட்டமாகவும் அதிர்ச்சியுடனும் காட்டியிருக்கிறது இப்படம். மட்டுமின்றி, சமத்துவம் பேசும் திரைப்படங்களைக் கூட பல கோடிகளில்தான் உருவாக்க முடியும் என்கிற மாயையையும் இப்படம் உடைத்திருக்கிறது.
சினிமா என்கிற கலையை எளிய மக்கள் அனைவராலும் உருவாக்க முடியும், (உருவாக்க வேண்டும்) அதில் மக்களின் பாடுகளைச் சொல்ல முடியும் (சொல்ல வேண்டும்) என்கிற வகையிலும், சாதியத்தின் அசிங்கத்தைக் அவ்வளவு வெளிப்படையாகக் காட்டியிருக்கும் வகையிலும் ’மனுசங்கடா’ முக்கியமான அரசியல் படமாகின்றது. படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டுகிறேன்.
இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ட்ரைபாட் இல்லாமல், காமிராவை கையால் வைத்தபடியே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனாலும் நேர்த்தியான படப்பதிவு. டப்பிங்கே இல்லை என்பதை நம்ப முடியவில்லை. துல்லியமான ஒலிப்பதிவு. சபாஷ் அம்ஷன் குமார் & குழுவினர்.
படத்தில் நடித்திருக்கும் அத்தனை நடிகர்களும் (ஓரிரு இடங்களைத் தவிர) நேர்த்தியாக நடித்திருக்கின்றனர். குறிப்பாக மையப்பாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் ராஜிவ் ஆனந்த் கவனிக்க வைக்கிறார். படம் தொடங்கியதிலிருந்து இறுதிவரை கொந்தளிப்பான முகத்தை கடைபிடித்திருக்கிறார் அவர். எல்லோரும் நவீன நாடக கலைஞர்கள். ஆகவே, ஒரு தேர்ந்த நடிப்பு வெளிப்பட்டிருக்கிறது ( அந்த வழக்கமான மாடுலேஷனை மட்டும் அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்).
நீதிமன்ற காட்சி அதன் சமன் குலையாமல் இருக்கிறது. அக்காட்சி முழுக்க, முழுக்க பாபாசாகேப் அம்பேத்கரின் கருத்தியலை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டிருக்கிறது என்பேன். அவர் உருவாக்கிய சட்டம் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமைகளையும் மனதில் கொண்டு அவற்றைப் பாதுகாக்கும் நோக்கத்தில் மட்டுமே இருக்கிறது. அப்படிப்பட்ட சமத்துவ சிந்தனையாளர் அண்ணல் அம்பேத்கர்.
அரசின் சட்ட விதிமுறைகள் யாவும் அனைவருக்கும் சமமாகத்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதில்தான் பாகுபாடுகளும் தாழ்வுகளும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன என்கிற அவலத்தை சமரசமின்றி சொல்லிச் செல்கிறது இப்படம்.
பெரும்பாலான வழக்குகளில் நீதிமன்றங்கள் நீதியற்ற தீர்ப்புகளைச் சொல்லி தங்களை அம்பலப்படுத்திக் கொள்கின்றன. அரிதாக, எப்போதாவது நீதிமன்றமே நீதியை நிலைநாட்டச் சொன்னாலும் கூட, அந்த தீர்ப்பு சாதியத்தின் மசுருக்குக் கூட சமானமாவதில்லை என்பதாகத்தான் இருக்கிறது.
அப்படிப்பட்ட அவலத்தைத் தான் பேசியிருக்கிறது இப்படம்.
சமூகத்தின் மீது அக்கறை கொண்டியங்கும் ஒவ்வொருவரும் அவசியம் காண வேண்டிய திரைப்படம் இது. இப்படத்தை ஒவ்வொருவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டிய, விவாதிக்க வேண்டிய அக்கறையும் பொறுப்பும் நமக்கிருக்கிறது.
வணிக அடிப்படையில் பார்த்தால் இம்மாதிரியான சுயாதீன திரைப்படங்களுக்கான ஆரோக்கியமான சூழல் இல்லாததால் குறைந்தளவு காட்சிகள் மட்டுமே திரையிடப்படுகின்றன. ஆகவே, உடனடியாக இப்படத்தைப் பார்த்து விடுங்கள் தோழர்களே!
மேலும், இப்படிப்பட்ட அக்கறையான படங்களுக்காகவும் நம் குரல் ஒலிக்க வேண்டும். சமூக வலைதளங்களில் அதற்கான குரல் வலுவாக எழுப்பப்பட வேண்டும். இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலமாக சுயாதீன படங்களுக்கான ஆரோக்கியமான வெளியை உருவாக்க முடியும். அதன் மூலமாக வணிக சினிமா உருவாக்கியிருக்கும் கவர்ச்சியையும் அதுசார்ந்த போலியான பிம்பங்களையும் உடைக்க முடியும்.
இறுதியாக, ஒரு வேண்டுகோள் தலித்துகள் சாதி இந்துக்களைப் பார்த்து, ’நாங்க மனுசங்சடா…’ ’நாங்க மனுசங்கடா..’ என்கிற உண்மையைப் பலகாலமாகச் சொல்லி வருகிறார்கள். இனி கேட்க வேண்டியது, சாதி இந்துக்களைப் பார்த்துத்தான்.
அண்மையில் சென்னையில் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டுமே திரையிட வாய்ப்புகள் பெற்ற அம்ஷன்குமாரின்
மனுசங்கடா திரைப்படம் இன்றைய தமிழ் சமூகத்தின் முக்கிய பிரச்னையான சாதிய கட்டுமான இறுக்கத்தை ஒரு நேரிடையான மிகையற்ற யதார்த்த மொழியில் அதற்குரிய தீவிரத்தன்மையுடன் தோலுரித்துக்காட்டிய ஒரு சிறப்பான திரைப்படம்.
அண்மைக்காலங்களில் விளிம்புநிலை வாழ்வியல் பற்றிய சித்தரிப்புகள் குறித்த ஆர்வங்கள் தமிழ் சினிமாவில்பெருகத் துவங்கியிருக்கிற ஒரு சூழலில் தமிழ் சினிமாவின் வழமையான ரொமாண்டிசிஸத்தையும்,குரூரத்தையும் தவிர்த்துதீவிரத்தன்மை கெடாத ஒரு யதார்த்த சூழலை வடிவமைத்திருப்பது ஒரு சிறப்பான உத்தி.
அண்மைக்காலங்களில் தீண்டாமைச் சுவர்களும்,ஆணவக் கொலைகளும்தமிழ் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கிக்கொண்டிருக்கிற ஒரு காலகட்டத்தில்தலைநகரத்திலிருந்து நூறு கிலோமீட்டர் தூரமே உள்ள ஒருகிராமத்தில் இன்றும் நிலவிவரும் ஒரு தீண்டாமை நடைமுறையை திரைமொழியின் வீச்சுடன் அம்பலப்படுத்தியிருப்பது ஒரு சமூக நோக்கம்கொண்ட துணிச்சலான முயற்சி.
இன்றைய ஜனநாயக அமைப்பில் தங்களுடைய அடிப்படை உரிமைகளைப் பெற நீதிமன்றம் மற்றும் ஊடகங்களை நாடுவதற்கு வாய்ப்பு பெற்றுள்ள கல்வி அறிவு பெற்ற தலித் இளைஞர்கள் கூட சாதியக் கட்டுமானம் ஆழமாக ஊடுருவியுள்ள கிராமிய அடிமட்ட அமைப்புகளை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாத அவல நிலைதான் இத்திரைப்ப டத்தில் காட்சிகளாக வடிவம் பெறுகிறது.
நகரத்தில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு தலித் இளைஞன் கிராமத்திலுள்ள தன்னுடைய தந்தையின் திடீர் மரணச் செய்தி கேட்டு துக்கத்துடன் கிராமத்துக்கு விரைகிறான்.அங்கு பொதுவழியில் தந்தையை மயானத்துக்கு எடுத்துச் செல்லமுடியாத சூழல் நிலவுகிறது.அவர்களுக்கென்று உள்ள முட்கள் நிறைந்த பாதை உபயோகிக்க பயனற்றதாக இருக்கிறது. பொதுவழியை உபயோகிக்கும் தங்கள் உரிமையை நிலைநாட்ட நீதிமன்றத்தை அணுகி உத்தரவுபெற்ற பிறகும் கூட கிராமிய அதிகாரிகளும் காவல்துறையும் ஆதிக்க சக்திகளுக்கு துணைநின்று பிணத்தைப் பறித்து தாங்களே எடுத்துச்சென்று புதைக்கின்றனர்.தந்தையின் புதைக்கப்பட்ட இடத்தைக்கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியாதஅவலத்தையேயே தலித் எதிர்கொள்கிறான். .மரணத்துக்குப்பிறகும்ஒரு தலித் உடல் அவமானத்துக்குரிய பொருளாகவேஇருக்கிறது. மூன்று நாட்களில் நடைபெறும் இச்சம்பவங்களின் மூலமாக இன்றைய கிராமிய
யதார்த்தம் ஒரு வலுவான அழகியல் ஆவணமாக முன்நிறுத்தப்படுகிறது.
எந்தவிதமான செயற்கைத்தன்மையும் அற்று ஒரு இயல்பான உயிரோட்டம் கொண்ட பாத்திரங்களாக நடிகர்கள் இயங்குகின்றனர்.ஹீரோதன்மை அற்ற ஆனால் இயல்பான கோபம் கொண்ட தலித் இளைஞன்,கூட வேலை பார்க்கும் அவன் சுக துக்கங்களில் பங்குகொள்ளும் சகதோழி,நிலைமைகள் குறித்த புரிதலும் அணுகுமுறையும் கொண்ட தலித் தலைவர்,விரைந்து செயலாற்றி நீதிபெற்றுத்தர உறுதிபூணும் வக்கீல்,நிலைமைகளை உணர்ந்து தெளிவான தீர்ப்பு வழங்கும் நீதிபதி,கணவன் இறந்த துக்கத்தை ஒப்பாரிப்பாடல்களால் அரற்றித் தீர்க்கும் வேளையிலும் தன் மகனுக்கு மனைவியாகப் போகிறவளை வாஞ்சையுடன் தடவிப் பார்க்கும் தாய் என பாத்திரங்கள் மிகவும் உயிர்ப்புடன் வெளிப்படுகின்றன. பிணத்தை வீட்டுக்குள் எடுத்துச் சென்று தாழிட்டுக் கொள்வது, காவல்துறை அச்சுறுத்தல்களுக்கிடையிலும் பிணத்தை தர மறுப்பது, இறுதியில் காவல்துறை வன்முறையை பிரயோகித்து பிணத்தை பறித்துப் புதைப்பது என இறுதிக்காட்சிகள் ஒரு அதிகபட்ச நாடக உயிர்ப்புடன் வெளிப்படுகின்றன.
இத்தகைய மிகைத்தன்மையோ குரூரங்களோ அற்ற ஒரு இயல்பான காட்சிமொழி க்கு நம் பொது தமிழ்சினிமா மனநிலை அதிகம் பழக்கப்படாததால் இது ஒரு நவீன நாடகம் போன்றும் ஆவணப்படம் போன்றும் நகர்வதாக நம் சூழலில் தயக்கங்கள் நிலவுகின்றன.ஆனால் மாற்று சினிமா குறித்த அறிவும்,ஆவணப்பட அனுபவமும்,நவீன நாடக நடிகர்களை தன்னுடைய படைப்புகளில் தொடர்ந்து உபயோகப்படுத்தியும்வரும் இயக்குனர் அம்ஷன்குமார் இத்துறைகளின் ஊடாட்டத்தை ஒரு செறிவான காட்சிமொழியாக இத்திரைப்படத்தில் உருமாற்றி இருப்பதை பல காட்சிகளில் காண முடிகிறது.
முக்கியமாக பிணத்தை எடுப்பதற்கு முன்பாக அந்த தலித் இளைஞர்கள் ஆடும்பறையாட்டமும்,தான் குழியில் தள்ளப்பட்டு மண்வீசப்படுவதாக அந்த தலித் இளைஞன் காணும் முடிவற்ற கனவும் காலம்காலமான கூக்குரலின் குறியீடுகளாக உள்ளன.
வெற்று முழக்கங்களோ,உரத்த குரல்களோ இன்றி ஒரு படைப்புக்கலைஞன்செய்யத்துணியும்இத்தகைய ஆதிக்கத்துக்கு எதிரானஅழகியல் பதிவுகள் தான். இப்பிரச்னை குறித்த அதிகபட்ச கவனத்தை வேண்டுவதாக இருக்கின்றன.
அம்ஷன் குமார்
தோழர் ஆர்.நல்லகண்ணு (ஆர்என்கே) தோழர் சி .மகேந்திரன் ஆகியோருக்கு மனுசங்கடா படத்தை போட்டுக்காட்டினேன். 93வயதான பெருமதிப்பிற்குரிய தோழர் ஆர்என்கே அவர்கள் இந்திய கம்னியூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர். மக்கள் நலப்போரட்டங்களும் தியாகங்களும் நிறைந்த நெடிய வரலாறாக அவரது வாழ்க்கை விளங்குகிறது. படத்தை வெகுவாகப் பாராட்டினார். திரையரங்குகளைத் தாண்டி படத்தை மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் கொண்டுசெல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தினார். பள்ளிகளில் திரையிட்டுக் காட்டவேண்டும் என்றார். மனுசங்கடா பாடல் எழுதிய கவிஞர் இன்குலாப் பற்றி பேச்சு எழுந்தது. படத்திற்காக சமீபத்திய சாதி வெறித்தனங்களை அவர் பாடல் வரிகளில் சேர்த்திருப்பதை கூறினேன். அதனால் பழைய பாடல் வரிகளில் இடம் பெற்ற குளப்பாடி சம்பவம் இதில் இடம் பெறவில்லை என்பதை தெரிவித்தேன்.1980 இல் பெரம்பலூரிலுள்ள குளப்பாடி கிராமத்தில் ஜாதி வெறிபிடித்த சிவசாமி தனது கிணற்றில் தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் குளித்தது பொறுக்கமுடியாமல் நீரில் மின்சாரம் பாய்ச்சிக் கொன்ற சம்பவம் இன்குலாபை பின்வருமாறு எழுத வைத்தது.
தோழர் ஆர் என்கே அவர்கள் அச்சமயம் விவசாய சங்கத் தொழிலாளர் தலைவராக இருந்தார்.அவரது முயற்சியின் விளைவாக அப்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரான திரு.அழகர்சாமி சட்டமன்றத்தில் இதுபற்றிய கவனத்தைக் கொண்டுவந்தார்.
தோழர் சி.மகேந்திரன் எனது நெடுநாளைய அன்புத்தோழர். படம் பற்றி நுணுக்கமாக பல கருத்துகளை தெரிவித்தார். இருவர் பேசியதையும் விரைவில் காணொளியாக யூடிபில் பார்க்க முடியும். அவர்களுக்கு படத்தைக் காட்ட முடிந்தது எனக்கு வாய்த்த அரிய சந்தர்ப்பம்.
ஹாரி பாட்டரை படித்திருப்பீர்கள். குறைந்த பட்சம் பார்த்திருப்பீர்கள். அலிபாபா மாதிரி “அல்லா கா கசம்! அபு கா ஹுகும்! திறந்திடு சீசேம்!” என்று சொல்வார். எல்லா மாயங்களும் நடக்கும். நானும் அது மாதிரி நிறைய சொல்லி பார்த்திருக்கிறேன். எதுவும் நடக்கவில்லை. லத்தீன் உச்சரிப்பில் பிழை இருந்திருக்கலாம்.
ஜாதகம், ராசிக்கல், நாடி ஜோசியம், ஏடு பார்த்தல், மை போடுதல், கைரேகை, எண் கணிதம், நட்சத்திர பலன் என்று நம் ஊரில் பல வகை இருக்கிறது. துவக்கத்தில் ஜெயலலிதாவின் ராசி எண் 9. பின்னர், எம்.ஜி.ஆர். அவர்களுடைய ராசி நம்பர் 7 ஆக, அது மாறியது. கூடிய சீக்கிரமே 5 என்று கூறப்பட்ட நிலையில் கடைசியில் 2தான் ஜெயலலிதாவின் ராசியானது. அவருக்கு பச்சை நிறம் என்றால் கருணாநிதிக்கு மஞ்சள் துண்டு. நானும் வீட்டை மாற்றி, பெயரை மாற்றிப் பார்த்தேன். உழைப்புக்கேற்ற பலன் கிடைத்ததே ஒழிய, எண்ணியதெல்லாம் மாயமாக ஈடேறவில்லை.
இதெல்லாம் இந்தியாவில். மேற்குலகமோ அறிவியல் லோகம் என்னும் நம்பிக்கையுடனேயே நுழைந்தேன்.
இஸ்ரேலின் யூரி கெலர் (Uri Geller) தென்பட்டார்; அவர் கரண்டிகளை கண்ணாலே வளைத்தார்; மாற்றுகிரகவாசிகளுடன் உரையாடினார். மேற்கத்தியர்கள் அவரை அபரிமிதமாக நம்பினர். காற்றில் இருந்து பெட்ரோல் கிடைக்கும் இடங்களை கண்டுபிடிக்கலாம் என நம்பி, ஃப்ரெஞ்சு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பல மில்லியன் டாலர்களை எல்ப் அக்விடேன் (Elf Aquitaine) ஆருடத்தில் கரைக்கிறார். புற்று நோய் உருவாகுவதற்கு காரணமாக இருக்கும் “பூமிக் கதிர்”களை, அறிவியல்பூர்வமாக இல்லாமல் முள்கரண்டி குச்சிகளால் நீரோட்ட கணிப்பாளர்களைக் கொண்டு ஜெர்மனியில் தேடுகிறார்கள். ஃபிலிப்பைன்ஸில் ஆவியின் துணை கொண்டு அறுவை சிகிச்சை நடக்கிறது. ராணி எலிசபெத் முதற்கொண்டு கடைநிலை குடிமகன் வரை எல்லோரும் பேய், பிசாசு பைத்தியமாக இங்கிலாந்தில் திரிகிறார்கள். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எக்கச்சக்கமான மதங்களை ஜப்பான் கண்டுபிடித்திருக்கின்றது. ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட குறி சொல்வோரை ஜப்பான் மட்டுமே தழைக்கவைக்கின்றது. ஆறாம் அறிவு கொண்டு காற்றில் அந்தரமாக எழமுடியும் என்று நம்பி ஓம் ஷின்ரிக்யோ (アレフ) என்னும் மதக்குழு டோக்யோ ரயிலில் நச்சுவாயு மூலம் பலரைக் கொல்கிறது. அதன் தலைவர் அசஹாரா குளித்த தண்ணீரை, காசு கொடுத்து குடிப்பது சகல ரோக நிவாரணி என்று ஆயிரக்கணக்கானவர்கள் அவரின் பின் சென்றார்கள். புனித மறைநூலில் இருந்து தயாரான கஷாயம் மூலம் தங்கள் நோய் குணமாகும் என்று தாய்லாந்தில் இன்னும் நம்புகிறார்கள். இன்றும் கூட சூனியக்காரிகளை தென்னாப்பிரிக்காவில் எரித்துக் கொல்கிறார்கள். கூரை விட்டு கூரை பாய்ந்து பறந்து செல்கிறாள் என்று நம்பும் பெண்ணொருத்தியை ஹைதி நாட்டில் மரத்தில் கட்டி வைத்து உதைக்கிறார்கள். ருஷியாவில் எயிட்ஸ் குணபடுத்துவேன் என்று புருடா விடும் நடாலி முக்கியமான அரசியல் தலைவராக இருந்தார்.
இவ்வளவு ஏன்? இந்த டி-ஷர்ட் போட்டுக் கொண்டு இன்ன இடத்தில் உட்கார்ந்தால்தான் தங்கள் அணி விளையாட்டுப் போட்டியில் வெல்லும் என்கிறோம். மாய மோதிரம், தாயத்து, கையில் கங்கணம், இடுப்பில் அரைஞாண் கயிறு, குரங்கின் மூளை சமையல் என்று விரித்துக் கொண்டே போகலாம். இதெல்லாம் ஏதோ சுயநம்பிக்கையற்றவர்களுக்கான தன்னம்பிக்கைக்கான வழி என்று விட்டு விடலாம்.
ஆனால், மேற்குலகில் ஜோதிடத்தையும் அறிவியலாக்கி விட்டிருக்கிறார்கள்.
நவம்பர் 24, 1912
சிக்மண்ட் ஃப்ராய்ட் தனக்கான வாரிசை தேடிக் கொண்டிருக்கிறார். கார்ல் குஸ்டாவ் யங் (Carl Jung) என்பவர் சரியான நபராகப் படுகிறார். ஆனால், யங்கோ ஜோசியத்தை புதிய மோஸ்தரில் வடித்து, விற்றுக் கொண்டிருந்தார். கடைசியாக ஒரு முறை பார்த்து பேசலாம் என்று எல்லா பெருந்தலைகளையும் அழைக்கிறார் பிராயிட். அதற்குப் பின் அவர்கள் இருவரும் இன்னொரு முறை சந்திப்பார்கள். நவம்பர் 24, 1912 அன்று, மனநோய் மருத்துவத்தின் தந்தை அழைத்த மிகப் பெரிய ஜமாபந்தி மியுனிக் நகரத்தில் நடக்கிறது.
இரவு உணவு சாப்பிட்ட பிறகு வட்ட மேஜை களைகட்டுகிறது. எகிப்திய இக்நடன் அரசர் குறித்து விவாதிக்கிறார்கள். தன் தந்தையின் பல்வேறு கடவுள் பொம்மைகளை இக்நாடன் அழிக்கிறான். அதன் பின், அந்த ஆயிரக்கணக்கான கடவுள்களுக்கு பதில் ‘ஒன்றே தேவன்’ என முழங்கி, புதிய மதத்தை இக்நாடன் தோற்றுவிக்கிறான். ஏன் என்பதற்கான காரணத்தை பிராயிடும் யங்கும் மற்ற உளவியல் நிபுணர்களும் ஆராய்ந்து வாதங்களை முன்வைக்கிறார்கள். சிலர் அவனுடைய தந்தைபால் கொள்ளும் எரிச்சல் என்றார்கள். யங் அதை நிராகரித்துப் பேசுகிறார். இக்நாதனுக்கு தன் தந்தை மீது மோகம் இருந்திருக்கிறது. அவரை மதிக்கிறான்; அவரை ஆதர்சமாகப் பார்க்கிறான். அதனால் அவரின் குறியீடாக அந்த ‘ஒன்றே குலம்’ மந்திரத்தை உபாசிக்கிறான் என்கிறார் யங். இதைக் கேட்டுக் கொண்டிருந்த பிராயிட் மயங்கி விழுகிறார். ஆறு அடி இரண்டு அங்குலம் உயரமுடைய ஆஜானுபாகுவான யங் அவரைத் தூக்கி சோபாவில் கிடத்துகிறார்; ஆசுவாசப்படுத்துகிறார்.
இந்த மாதிரி ஃபிராயிட் மயங்கி வீழ்வது இது முதன் முறையல்ல. 1909ல் இதே காட்சி அரங்கேறி இருக்கிறது. அப்போது ஃபிராயிடும் யங்கும் அமெரிக்காவின் கிளார்க் பல்கலைக்கழகத்தில் சொற்பொழிவாற்ற பயணித்துக் கொண்டிருந்தார்கள். (இந்தப் பல்கலை பாஸ்டன் அருகேயுள்ள என் வீட்டின் அருகாமையில் இருக்கும் வூர்ஸ்டர் என்னும் நகரத்தில் மாஸசூஸ்டஸ் மாநிலத்தில் இருக்கிறது.) அப்போதும் யங் தனக்கே உரிய உக்கிரத்துடன், பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் பதப்படுத்தப்பட்ட பிணங்களைப் பற்றி அளவளாவுகிறார். அந்த சடலங்களின் முக்கியத்துவத்தை உணர்ச்சிகரமாக விவரிக்கிறார். அந்த சமயத்திலும், ஏதோ ஒரு காரணத்தால், பிராயிட் மயக்குமுற்றார். ஆனால், காக்காய் உட்காரவும் பனங்காய் விழவும் காரணமாக இருந்த மாதிரி, யங் தன் மீது சாவு வசை இட்டதால்தான் மயக்குமுற்றதாக ஃபிராயிட் குற்றஞ்சாட்டுகிறார்.
அதன் பின் நடந்த 1912 உச்சிமாநாட்டிலும், ஃப்ராயிட் அதே பல்லவியைப் பாடுகிறார். தான் சாக வேண்டும் என்று யங் விரும்பியதாகவும், அதனாலேயே தான் அசர்ந்ததாகவும் வசை பாடுகிறார் ஃபிராயிட். 1913ல் இவர்கள் இருவரின் உறவு மொத்தமாக முறிகிறது. அதன் பின் ‘என் வழி… தனிவழி!’ என்று யங் தனக்கான ஜோசியத்தை முன்வைக்கிறார்.
யங்கின் இந்த ஜோசியம் இன்றளவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அவரின் இந்த சாஸ்திரம் மையர்ஸ் – ப்ரிக்ஸ் குறியீடாக (Myers-Briggs Type Indicator – MBTI)வும் கெயர்சீ உளப்பண்பு பிரிவினையாகவும் (Keirsey Temperament Sorter) உருமாறி, ஒவ்வொருவருக்கும் அளவு மானியாக இருக்கிறது. மேற்குலகின் முக்கிய நிறுவனங்களும், மேலாண்மையைக் கற்றுத்தரும் முக்கிய கல்லூரிகளும், மானுட ஆற்றலைப் புரிந்துகொள்ளும் மேற்படிப்புகளிலும் யங், இன்றும் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறார். உங்களுக்கு மேற்பதவி வேண்டுமா? சகாதேவர் அருளிச்செய்த தொடுகுறி சாஸ்திரம் மாதிரியே, யங் சொல்லும் 4×4 = 16 கட்டத்தில் எங்கே விழுகிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்களுக்கு பதவி உயர்வு கொடுக்கப்படும்.
யங்கும் சுயமாக இதை சிந்திக்கவில்லை. அவருக்கு டாலமி தேவைப்பட்டிருக்கிறார். டாலமி கொஞ்சம் போல் வானியல் கற்றவர்; மீதத்தை தன் கற்பனையும் பேச்சாற்றலும் ஆளுமையாலும் விற்றவர். வான்கோளங்களின் ஆய்வியல் மூலம், பூமி மனிதர்களின் குணாதிசயங்களைப் பகுக்கலாம் என்று சாதித்தவர். உலகில் உள்ள எல்லாரையும் பன்னிரெண்டாகப் பிரிக்கலாம் என்கிறார். அந்த 12 ராசியையும் நான்காக வகுக்கிறார்.
நெருப்பு ராசிகள் :- மேஷம், சிம்மம், தனுசு நிலம் ராசிகள் :- ரிஷபம், கன்னி, மகரம் காற்று ராசிகள் :- மிதுனம், துலாம், கும்பம் நீர் ராசிகள் :- கடகம் , விருச்சிகம், மீனம்
இதை யங் அப்படியே உள்வாங்கிக் கொண்டு, உல்டா செய்கிறார்:
யங் இதை இந்தக் காலத்திற்கேற்ப நவீன மோஸ்தரில் அடைத்திருக்கிறார். அவருக்கும் நெடிய பாரம்பரியம் இருந்திருக்கிறது. ஏற்கனவே சொன்னதை, கொஞ்சம் நல்லமுறையில், எல்லோருக்கும் உவப்பான வகையில் மாற்றிக் கொடுக்கிறார்.
ஜோசியத்திற்கேயுரிய சில சாமர்த்தியமான சாமுத்ரிகா லட்சணங்களை யங் செய்து கொண்டார்:
1. இப்படித்தான் இருப்பீர்கள் என்று சொல்ல இயலாது. நான்கில் ஒன்று மேலோங்கி இருக்கும்.
2. எல்லா குணமுமே நல்ல குணாதிசயமே! ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேலைக்கு உதவும்.
3. சில சமயம் உங்களின் அவதானிக்கும் குணத்தை பரிபாலிப்பீர்கள். சில சமயம் உங்களின் தீர்ப்பெழுதும் மனோபாவத்தைக் கொண்டிருப்பீர்கள்.
4. நீங்கள் எல்லோருடனும் பழகிக் கொண்டாடும் மனநிலையில் இருப்பவரா அல்லது தனிமையிலே இனிமை காண்பவரா என்பதைப் பொறுத்து இவை சற்றே மாறும்.
5. நீங்கள் எங்கே பிறந்தீர்கள் என்பதைப் பொறுத்து, உங்களின் தசை இருப்புகளும் எந்த கிரகம் எங்கே இருக்கிறது என்பது மாறும் என்பதைப் போல், இப்படித்தான் ஒவ்வொருவரும் இருப்பார் என்பதை இந்த பதினாறு பிரிவுக்குள் அடக்கிவிட முடியாது.
எனவே, உங்களுக்கென்றே பிரத்தியேகமான கணிப்பை நாங்கள் கணிப்போம் என்கிறார்கள். அதைக் கொண்டு மேட்ரிமொனி, டிண்டர் காதல், மணப் பொருத்தம், யோனி அளவு எல்லாம் கண்டு தாம்பத்தியத்தை அளக்கிறார்கள்.
ஜோசியம் என்பதும், ஆளுமைக்கான குணச்சித்திர பரீட்சை என்பதும் உங்களுக்கு தன்ன்ம்பிக்கை ஊட்டவே என்பதை புரிந்து கொள்வதற்கு இன்னும் சில கதைகளும் புத்தகங்களும் பார்க்கவேண்டும். அவற்றை அடுத்த பகுதியில் கவனிக்கலாம்.
* டிரொஃபோனியஸ் கூறிய அசரீரி என்ன? அது எவ்வாறு ஒரு மனிதனின் குணாதிசயங்களின் தொகுப்பு என்னும் கணிப்போடு தொடர்புடையது?
* மேட்ச்.காம், ஒகே க்யூபிட், பாரத் மேட்ரிமனி போல் பல்வேறு வகையான தளங்கள் எவ்வாறு நவீன விஞ்ஞானம் என்ற பேரிலும் அறிவியல் முறையிலான பொருத்தம் என்னும் பரிசோதனைத் தேர்வு என்னும் பம்மாத்துகளினாலும் புதிய காதலர்களுக்கு நம்பிக்கையூட்டி, மணவாழ்வில் வெற்றியடைய வைக்கிறார்கள்?
* நம் ஒவ்வொருவருக்குள்ளும் மந்தாரை என்ற கூனி பாத்திரம் இருப்பதை எவ்வாறு யங் உபயோகிக்கிறார் என்பதையும், அழையா விருந்தாளி என்னும் அந்த குணச்சித்திரத்தை எவ்வாறு நிர்வாகத்திறமையில் நுழைக்கிறார் என்பதையும் வரும் பகுதியில் அறியலாம்.
நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் அழிவதில்லை,
என்றும் அது கலைவதில்லை,
எண்ணங்களும் மறைவதில்லை
பாலு மஹேந்திராவின் முதல் தமிழ்ப்படம்.
உதவி இயக்குநராக ஷோபா பணியாற்றி இருக்கிறார். இன்னும் கொஞ்ச நாள் நடிகை ஷோபா இருந்திருந்தால் இன்னும் என்னவெல்லாம் செய்திருப்பார்!
பிரதாப் போத்தனுக்கு இது அறிமுகப் படம். இதில் பாலு மகேந்திராதான் பிரதாப்புக்கு டப்பிங் பேசியிருக்கிறார்.
இந்தப் படத்தில் பல அதிர்ச்சிகளை எதிர்பார்த்த சமயத்தில், எந்த அதிர்ச்சிகரமான திருப்பங்களும் இல்லாமல் முடிந்ததே அதிர்ச்சியைத் தந்தது. என் கற்பனையில் சிலவற்றை எதிர்நோக்கி இருந்தேன்:
– சிறுவர்களை முதன்மையாகக் கொண்டு வரும் படங்கள் தோல்வி அடையும். முக்கிய கதாபாத்திரமாக ஆண் இல்லாவிட்டால், அந்தப் படத்துடன் ரசிகர்கள் ஒன்றமாட்டார்கள். (கிடையாது)
– குண்டுப்பையன் தான் முதலில் வரும் கமல் (கிடையாது)
– அந்தச் சிறுவன், இந்து டீச்சரின் கையைப் பிடித்து இழுக்கப் போகிறான் (கிடையாது)
– பிரதாப் போத்தன் அநியாயமாய் சாகப் போகிறார்; வெண்ணிறாடை மூர்த்திக்கும் ஷோபாவிற்கும் திருமணம் என்னும் க்ளைமாக்ஸ் (கிடையாது)
ஆனால் படத்தில் நிறைய உதாரண காட்சிகள், இலட்சிய இலக்குகள் உண்டு:
– கிராமம் என்றால் ஜாலி.
– புருஷன், பொண்டாட்டி என்றால் எப்போதும் மகிழ்ச்சியாக, இணைந்து சுகமாக காலம் கழிப்பார்கள்.
– பெண்கள் எல்லோரும் ஆற்றில் சுதந்திரமாகக் குளிப்பார்கள்.
இதெல்லாம் எப்படி சாத்தியம், இப்படியெல்லாம் நடக்குமா என்றெல்லாம் ஆராயாமல், படத்தை அனுபவியுங்கள்.
கானா பிரபா வழியாக: “அழியாத கோலங்கள்” பாடல் பிறந்த கதை | றேடியோஸ்பதி: “நான் என்னும் பொழுது…” என்னும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் கங்கை அமரன் வரிகளில் வந்த பாடல். பாடலுக்கு இசையமைத்தவர் பிரபல இசையமைப்பாளர் சலீல் செளத்ரி அவர்கள்
விடலைப் பையன்களின் காதல் உணர்வுகளையும், அவர்களது இளம் வயது பள்ளிப் பிராயத்து சம்பவங்களையும் வைத்து உருவான படம் ‘அழியாத கோலங்கள்’. கத்தி முனையில் நடப்பது போன்ற, மாணவர்களிடையே காணப்படும் சில ‘ஆபாசமான’ சம்பவங்களைக் கொண்டிருந்த அழியாத கோலங்களைத் திறமையாகக் கையாண்டது.
ஒரு ஆறு, ஒரு ஏரி, மரங்கள் சூழ்ந்த சாலை, வயல்வெளிகள், வாய்க்கால்கள், பூக்கள், வானம், உறுத்தல் இல்லாத வீதிகள், வீடுகள், இயல்பான சினிமாத்தனம் இல்லாத மனிதர்கள் அவ்வளவுதான் அழியாத கோலங்கள் படம் முழுதும்.
தன்னை வெளிப்படுத்தி தான் இருப்பதை அழுத்தமாய் தெரிவித்து விட்டு தன் இல்லாமையையும் ஆழமாய் பதிவு செய்து சென்ற ஒரு எரிநட்சத்திரம் என்றுதான் அவர் ஷோபாவை சொல்கிறார். ஷோபா அவருக்கு அவர் நித்தம் காணும் வானத்தின் வித்தியாச கோணத்தைப் போன்றவள், மரங்கள் அடர்ந்த பகுதியில் படிந்து கிடக்கும் பெரு நிழலைப் போன்றவள், ஓடும் ஆற்றில் ததும்பி நகரும் அலை அவள், பட்டாம்பூச்சியின் படபடப்பும், புற்களின் மீது படிந்திருக்கும் பனித்திவலைகளும் எப்படியோ அப்படித்தான் ஷோபா பாலு சார்க்கு. ஷோபா ஒரு அதிசயம். அத்தனை ஒரு இயல்பான பெண்ணை அதுவரையில் அவர் பார்த்திருக்கவே இல்லை. ஏன் அவர் மட்டுமா மொத்த தமிழ் ரசிகர்களும்தான்.
பாலுமகேந்திரா தனது படங்களில் கதாபாத்திரங்களின் மனநிலையை வெளிப்படுத்துவதற்கும், இருவருக்குள் ஏற்படும் உறவின் வளர்ச்சியை அடையாளப்படுத்துவதற்குமே பாடல்களை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார். அழியாத கோலங்களில் அப்படியான ஒரு பாடலிருக்கிறது:
பூவண்ணம் போல நெஞ்சம்
பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
எங்கெங்கும் இன்ப ராகம்.. என்னுள்ளம் போடும் தாளம்
பி,சுசிலாவும் ஜெயச்சந்திரனும் இணைந்து பாடும் இப்பாடலுக்கு இசையமைத்தவர் சலீல் சௌத்ரி, இவர் செம்மீன் உள்ளிட்ட பல முக்கியத் திரைப்படங்களுக்கு இசையமைத்த மகத்தான இசைஆளுமை.
சிரிப்பையும் வெட்கத்தையும், காதலர்கள் இருவரின் அந்நியோன்யத்தையும் இவ்வளவு கவித்துவமாக வேறு எவரும் திரையில் காட்டியதேயில்லை. அவர்கள் கண்களால் பேசிக் கொள்கிறார்கள். பாட்டு முழுவதும் ஷோபா சிரித்துக் கொண்டேயிருக்கிறார். அந்தச் சிரிப்பு ஒரு தூய வெளிச்சம். மறக்கமுடியாத ஒரு வாசனை. ஆற்றின் கால்வாயில் நீந்தும் வாத்துகளைப் போல அவர்களும் இயற்கையின் ஒருபகுதியே என்பது போல ஷோபாவும் பிரதாப்பும் ஒன்று கலந்திருக்கிறார்கள். பாடல் முழுவதும் காற்று லேசாகப் படபடத்துக் கொண்டேயிருக்கிறது.
நாணல்பூத்த ஆற்றங்கரையோரத்தில் உட்கார்ந்து கொண்டு ஷோபா சிரிக்கிறார், அந்தச் சிரிப்பு வாழ்வில் இது போன்ற தருணம் இனியொருமுறை கிடைக்கவே கிடைக்காது என்பதைப் போலவே இருக்கிறது, ஷோபாவின் சிரிப்பில் வெட்கமும், ஆசையும் குறும்பும் ஒன்று கலந்திருக்கிறது, அடிக்கடி தன் மூக்கை தடவி கொள்வதும் பிரதாப்பின் தலையைக் கோதிவிட்டுச் செல்லமாக அடிப்பதும், கண்களில் காதலை கசியவிட்டு தானும் காற்றைப் போன்றவளே என்பது போல அவனோடு இணையாக நடப்பதும் எனக் காதலின் பரவசம் பாடல் முழுவதும் ஒன்று கலந்திருக்கிறது.
ஷோபா பிரதாப்புடன் கைகோர்த்துக் கொண்டோ தோளுடன் தோள் உரசியபடியோ நடந்து செல்லுவதும், ஷோபா சொல்வதை மௌனமாகப் பிரதாப் கேட்டுக் கொண்டிருப்பதும் மண்சாலையில் அவர்கள் உற்சாகமாக நடந்து செல்வதும் காதல் மயக்கத்தின் அழியாத சித்திரங்களாகப் பதிவாகியிருக்கின்றன.
இணைந்த வாழ்வில் பிரிவும் இல்லை.. தனிமையும் இல்லை
என்ற வரி நமக்குள் ஏதேதோ நினைவுகளை ரீங்காரமிட்டடபடி இருக்கிறது.
ரகு ஒருவன் தான் பால்யத்திற்கும் பதின்வயதிற்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறான், அதனால் தான் அவன் செக்ஸ் புத்தகத்தைக் காட்டும் போது பெண் உடல் பற்றிப் புரியாமல் கேள்விகேட்கிறான். தபால் ஊழியரின் புணர்ச்சியை நெருங்கி காணமுடியாமல் தயங்கி தயங்கி பின்னால் நடந்து வருகிறான். பிறகு விலகி ஒடிவிடுகிறான். அவன் தனது நண்பர்களின் கனவுகளைத் தன் கனவாக்கி கொள்கிறான்.
அதை ஒரு காட்சி அழகாகக் காட்டுகிறது. சாலையில் கடந்து வரும் தாவணி அணிந்த பெண்களில் யார் யாருக்கு என்று பேசிக் கொள்ளும் போது ரகு எந்தப் பெண்ணைத் தேர்வு செய்து எனத் தெரியாமல் நண்பன் சொல்லிய மஞசள் தாவனி பெண்ணைத் தானும் தேர்வு செய்வதாகச் சொல்வான். அது தான் அவன் மன இயல்பு.
அழியாத கோலங்கள் தமிழ்சினிமா வரலாற்றில் மிக முக்கியமானபடம். காரணம் இப்படம் போல அசலாகப் பருவ வயதின் ஆசைகளை யாரும் திரையில் பதிவு செய்த்தேயில்லை. அதுவும் வசனங்கள் அதிகமில்லாமல், நீண்ட காட்சிகளாக, நாம் அவர்களின் உலகை மறைந்திருந்து எட்டி பார்ப்பது போலப் படம் உருவாக்கபட்டிருப்பது இதன் தனிச்சிறப்பு.
பரபரப்பான நகரத்தில் அலுவல் நிமித்தமாக காரில் பயணிக்கிறார் கமல்ஹாசன். லிஃப்டில் ஏறி தன் இருக்கையை அமர்ந்ததும், அங்கு வரும் உதவியாளரிடம் மெயில் குறித்து ஆங்கிலத்தில் எழுதச் சொல்கிறார்.
ஒரு போன் கால் வருகிறது. அதற்குப் பிறகு அந்த உதவியாளர் வந்திருக்கும் பெர்சனல் கடிதங்களை கமலிடம் கொடுக்கிறார். எல்லா கடிதங்களின் அனுப்புநர் முகவரியைப் பார்க்கும் கமலுக்கு, ஒரு கடிதம் மட்டும் புன்னகையை வரவழைக்கிறது.
“10 நிமிடங்களுக்கு நோ போன் கால்ஸ். வந்தாலும் கொடுக்காதீங்க” என்ற கட்டளையிட்டு, கடிதத்தைப் பிரித்துப் படிக்கிறார் கமல்.
“டேய் ராஸ்கல். நான் பட்டாபி எழுதுறேன்டா… எப்படிடா இருக்கே? ஊர் பக்கமே வர்றதில்லை. வருஷத்துக்கு ஒரு முறை வருவ. இப்போ அதுவும் இல்லை… நான் ஏன் இந்த லெட்டரை எழுதுறேன்னா… இந்து டீச்சர் இல்ல… நம்ம இந்து டீச்சர். அவங்க முந்தாநாள் காலமாயிட்டாங்கடா” என்று எழுதியிருக்கும் கடிதத்தைப் படித்ததும் கமலின் நினைவுகள் பின்னோக்கி நகர்கின்றன.
அந்த கிராமம், அந்த ஜனங்க எதையும் மறக்கலை நான் என்று வாய்ஸ் ஓவரில். ஒரு கிராமம் நம் கண் முன் விரிகிறது.
ரகு, கௌரி, பட்டாபி எனும் மூன்று நண்பர்களை நீங்கள் எந்த கிராமத்திலும் சந்தித்திருக்கலாம். ‘அழியாத கோலங்கள்’ படத்தில் இந்து டீச்சர் முக்கியமான படலம். இந்து டீச்சராக ஷோபாவின் நடிப்பு அத்தனை இயல்பாய் இருந்தது.
“என் பேரு இந்து. உங்க பேர்லாம் சொல்லுங்கம்மா” என தயக்கமும், வெட்கமும், படபடப்புமாய் சொல்லும்போது அந்த வகுப்பறை இன்னும் அழகாகத் தெரிந்தது. பக்கத்து வகுப்பறையில் பாடம் நடத்தும் சத்தமும் பின்னணியில் ஒலித்துக்கொண்டிருக்கும்.
பிரதாப் போத்தன் படத்தைக் காட்டி, “எப்படி இருக்காரும்மா? அவர் தான் என் வருங்காலக் கணவர்” என்று இந்து டீச்சர், கௌரியிடம் சொல்கிறார். அவரை கௌரி பிடிக்காமல் பார்க்கிறான். தன் கனவைக் கலைக்க வந்த வில்லனாகவே பார்க்கிறான். பிரதாப் போத்தன் சிகரெட் பிடிப்பதைப் பார்த்து ரசித்து சிரிக்கிறார் இந்து டீச்சர்.
சிகரெட் பிடித்தால் ஆம்பளையாகிடலாம் போல என்று மூவரும் சிகரெட் பிடிக்க ஆரம்பிக்கிறார்கள். இப்படிக் கழியும் விடலைப் பருவத்தில் பட்டாபிக்கு அத்தை மகள் வருகை அவன் வாழ்வை வசந்தமாக்குக்கிறது.
மட்டக்களப்பில் பிறந்த பெஞ்சமின் எந்த சமரசமும் இல்லாமல் இந்தப் படத்தை எடுக்கத் துணிந்தார். சம்மர் ஆஃப் 42 என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல் கிழுவல் என்றெல்லாம் உலக சினிமா போராளிகள் சொன்னாலும், தமிழ் சினிமாவில் பதின்ம வயதினரின் பாலுணர்வுகளை இவ்வளவு அழகாக, நேர்த்தியாக, வரம்பு மீறாமல் நம் மண்ணுக்கே உரிய தன்மைகளுடன் பதிவு செய்தவர் எவரையேனும் சுட்டிக் காட்ட முடியுமா?
பாலு மகேந்திரா
“அப்ப எனக்கு பதினஞ்சு வயதிருக்கும், என் அத்தை பொண்ணு எங்க கிராமத்து வீட்டுக்கு வந்திருந்தா. அவள் எங்க வீட்ல தங்கி இருந்த நாட்கள் ரொம்ப விஷேசமானது, அவள் தான் என் வாழ்க்கைல வந்த முதல் பெண். மெல்லிசா ஒரு குறுகுறுப்பு, ஈர்ப்பு, தயக்கம், வெட்கம், அவள் உடல் பற்றிய ஆர்வம், பாலுணர்வு பத்தின யோசனைகள் எல்லாம் சேர்த்து முதிராத இளம் மீசை ரோமங்கள் ஆக முகத்தில் எட்டிப் பார்த்த ஞாபகம் இன்னும் அப்படியே இருக்கு…” என்றார் பாலு மகேந்திரா.
“என் கூட, என் பால்ய காலத் தோழன், என் அண்டை வீட்டுக் காரன் இன்னொருவனும் உண்டு” என்றார் பாலு. அவரின் வழி நெருப்பு வரி. ஈழம் சுமக்கும் இதயம். கவியில் தமிழரின் மானம் உணர்த்துபவர். காசி ஆனந்தன் அவர் பெயர். அழியாத கோலங்களின் மூன்று சிறுவரில் ஒரு கதாபாத்திரம்.
அம்மூவரில் வயது குறைந்த, மற்ற இருவரின் சோதனை எலி ரகு. வெளேரென்று, வெண்ணெய் திரண்ட உடல் அமைப்புடன், பருத்து தொங்கும் மார்புகளுடன், வயதுக்கு மீறிய பார்வையுடன். பால்யத்தின் சூட்சமங்கள் இவர்கள். இவர்களின் சட்ஜம் காமம்.
அன்றைய கிராமம் ஒன்றின் சூட்சமதாரிகள் யாரேனும் இருக்கலாம் இவர்களில். போஸ்ட் மாஸ்டர், ரயில் நிலையம், தண்டவாளங்கள், பாழடைந்த கோயில், ரயில்வே கேட், ஓடைகள், வயல் வெளிகள், ஒற்றை வரப்புகள், ஊர் தாண்டிய கூத்தாடிகள் தங்கும் வீடு, கல்யாணம் ஆகாத யுவதிகள், அவர்களைச் சீண்டிப் பார்க்கும் முன் வழுக்கை மனங்கள், களவாடக் கிடக்கும் மாந்தோப்புகள், உப்பு பரப்பி, மாங்காய் குத்த எதுவாய் சாலையோர சிமெண்ட் அல்லது கல் பெஞ்சுகள், ஒற்றை மளிகைக் கடை, ராமாயணமும், கிருஷ்ண லீலாவும் மட்டுமே ஓட்டும் டூரிங் டாக்கிஸ்கள், பேருந்து அண்டா ஊர் எல்லைகள், காற்றும், புற்களும் மட்டுமே துணை இருக்கும் விடலைகளின் வானம் பார்த்த படுக்கை அறைகள், மற்றும் ஒரே ஒரு பள்ளிக் கூடம்.
இவை அனைத்தும் ததும்பி வழியும் அழியாத கோலங்களின் முதல் பகுதியில்.இந்து டீச்சரும் இம்மூவரும் தான் அடுத்த பகுதி. இதுவே அழியாத கோலங்களின் மய்யம்.
கிஸேப் தொர்னதொரவை (Giuseppe Tornatore) என்ற இத்தாலிய இயக்குனரின் பால்ய காதல், உலக சினிமாவாகிறது. சினிமா பாரடிசோவை தெரிந்திருக்கும். பெட்ரிகோ பெல்லினியின் அநேகப் படங்கள் பால்ய அவஸ்தைகளை சுமந்து அலைபவை. அமர்கார்ட் (amarcord – 1974) அவற்றுள் மிக முக்கியமானது. டொர்னடோரின் பெல்லினியின் சாயல் சுமப்பவர், பாலு.
சினிமாவை நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள். சினிமாவின் மொழியில் சினிமாவைச் சொன்னவர் பாலு மகேந்திரா. ஒளியின், காட்சியின், நிழலின், முகபாவங்களின், மன இருண்மையின், மழையின்,மலையின்,மனப் பிறழ்வுகளின், ஆணாதிக்கத்தின், பெண்ணியத்தின், காதலின், காமத்தின், இசையின், மௌனத்தின், இயற்கையின், அறையின் செயற்கையின், வசனங்களின், பேசா மொழியின்,வன் மனதின், மென் இயல்பின், தத்துவங்களின், விசாரங்களின், வாழ்க்கை விளையாட்டுக்களின், வன்ம விதியைத் தமிழ் மற்றும் இந்திய சினிமாவில் நிறுவியவர் பாலுமகேந்திரா.
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde