ஆஸ்டர்லிட்ஸ் நாவலை முன்வைத்து

வில்லியம் ஜார்ஜ் செபால்ட் என்பவர், எவ்வாறு மற்ற எழுத்தாளர்களில் இருந்து தன்னை வித்தியாசப்படுத்திக் கொள்கிறார்? அலைபாயும் பயணக் குறிப்புகள் போன்ற நாவல்களை பிறர் எழுதியிருக்கிறார்கள். குந்தர் கிராஸுக்குப் பிறகு ஜெர்மனியில் இருந்து வேறு எந்தக் குறிப்பிடத்தக்க எழுத்தாளரும் தோன்றவில்லை என்பதால் புகழடைந்தாரா? செபால்டைப் போல் நினைவில் தங்கத்தக்க குறிப்புகளையும் ஆழமாக மனதில் பதிக்கத்தக்க தொடர்புகளையும் மற்றவர்களும் அவர்களின் புனைவுகளில் கொண்டு வருகிறார்கள். அப்படி இருந்தும் செபால்டை ஏன் இந்தப் பதிவில் எடுத்துக் கொண்டேன்?

செபால்ட் கவிதைகளில் தன் வாழ்வின் பெரும்பகுதியை செலவிட்டார். கவிதைகள் மட்டுமே எழுதிவந்தார். உதாரணமாக, இங்கே ஒன்று:

எவ்வளவு சிரமமாக இருக்கிறது
நிலப்பரப்பை புரிந்து கொள்ள
ரயிலில் அதை கடக்கும்போது
இங்கிருந்து அங்கிருந்து
பேசா மடந்தையாக அது
நீங்கள் மறைவதை பார்க்கும்

(1964)

நிறைய கவிதைகள் குறிப்பிடத்தக்கனவாக இருந்தாலும், அவரின் நாவல்களினாலேயே செபால்ட் புகழடைந்தார். அவரின் கதைகள் வசீகரசக்தியால் மனத்தைக்கவர்ந்தன. அவரின் இறுதி நாவல் 2001ல் அவரின் மறைவிற்குப் பிறகு வெளியானது. அதில் கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்குமான பேதம்; கனவிற்கும் நினைவிற்குமான இடைவெளி; கலைக்கும் வாழ்க்கைக்கும் நடுவே உள்ள வித்தியாசம்; உண்மையின் வரையறையைக் கடந்து புனைவு உள்ளே புகுந்து நம்மை எல்லையில்லாமல் உள்ளிழுத்துக் கொள்கிறது. இருந்தாலும் மற்றவர்களும் இதை சாத்தியப்படுத்தியவர்கள்தானே? வாசகர்களும் விமர்சகளும் செபால்டை தூக்கிப் பிடித்துக் கொண்டாடுவது இருக்கட்டும். நான் ஏன் இன்று அவரை ரசிக்கிறேன்? அவரின் கதை எவ்வாறு என்னோடு மறக்கமுடியாதவாறு உறைக்கவைக்குமாறு உரையாடுகிறது?

2001ல் ஜெர்மனியில் ஆஸ்டர்லிட்ஸ் நாவல் வெளியாகிறது. அடையாளமிழப்பையும் தாய்நாட்டை விட்டு அகல்வதையும் அதுவரை அவ்வளவு தீவிரமாகவும் முழுமையாகவும் செபால்ட் எடுத்ததில்லை. தனி மனிதனின் மனசாட்சியை அந்தக் கதை தேடுகிறது. ஒருவன் எவ்வாறு இழப்பை எதிர் கொள்கிறான் – தன் குடும்பத்தினை இழப்பது; தன் கடந்த காலத்தை இழப்பது; மிக முக்கியமாக தாய்மொழியை இழந்து விடுவது. ஆஸ்டர்லிட்ஸ் என்று இப்போது அழைக்கப்பட்டாலும், அந்தக் கதையின் நாயகனின் பெயர் டேஃபிட் எலியஸ். இங்கிலாந்தில் இருக்கும் வேல்ஸ் பகுதியில் வளர்ந்தவன். வயதிற்கு வந்தபிறகே அவன் வேல்ஸில் பிறக்கவில்லை என்பதும், செக்கோஸ்லவேகியாவில் பிறந்தவன் என்பதையும் அறிந்து கொள்கிறான். அவனுடைய பெற்றோரை அவனுக்கு நினைவேயில்லை.

அவனுடைய நாலரை வயது வரை ப்ரேக் நகரத்தில் இருந்திருக்கிறான். இந்தப் பகுதி அகழ்வாராய்ச்சி போல் தோண்டி எடுக்கப்படுகிறது. சரித்திர கல்வெட்டைப் படிப்பது போல் எலியஸின் பூர்விகம் பற்றி மெல்லத் தெரிந்து கொள்கிறோம். எலியஸிடமிருந்து பறிக்கப்பட்டதைக் குறித்து, அவன் ஆராய, ஆராய, நமக்கும் அந்தப் பனி விலகி தெரியவருகிறது.

கதைசொல்லியின் பெயர் என்னவென்று ஆஸ்டர்லிட்ஸ் நாவலில் சொல்லவில்லை. கதைசொல்லியோடு தற்செயலாக எலியஸுக்கு பரிச்சயம் ஏற்படுகிறது. அப்போது தன் கதையைச் சொல்கிறான். அவனுடைய தற்போதைய பெயர் ழாக் ஆஸ்டர்லிட்ஸ். அவனுடைய யூத அம்மவினால் இங்கிலாந்திற்கு நாடுகடத்தப்பட்டு, வளர்ப்புக் குடும்பத்தினால் தத்தெடுக்கப்பட்டவன். ஹிட்லரின் ஜெர்மனியில் யூதனாய் பிறந்திருந்தாலும் தப்பித்தவன். இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு சற்றே முன், நாஜிக்களிடம் இருந்து சின்னஞ்சிறார்கள் தப்பிப்பதற்காக ‘அன்பு பரிமாற்றம்’ என்றழைக்கப்பட்ட திட்டத்தில் இப்போதிருக்கும் அயல்தேசத்திற்கு அனுப்பப்பட்டவன். அதனால் உயிர்பிச்சை கிடைத்தாலும், அவன் அன்னையிடமிருந்தும் சொந்தங்களிடமிருந்தும் நிரந்தரமாகப் பிரிக்கப்பட்டவன்.

வாழ்வில் தற்செயலாக எதுவும் நிகழாத நாளே அபூர்வமான நாள். எலியஸ் எனப்படும் ஆஸ்டலிட்ஸுக்கு தற்செயலாக சில விஷயங்கள் தெரியவருகின்றன. நாவல் முழுக்க சில சமயம் கதைசொல்லி சம்பவங்களை விவரிக்கிறார்; பல்வேறு சமயங்களில் ஆஸ்டர்லிட்ஸே தன் கதையை நமக்கு விவரிக்கிறார். தான் உண்மையில் யாரென்பதை கண்டுபிடிக்கும் பயணத்தின் கதையை ஆஸ்டர்லிட்ஸ் நமக்குச் சொல்கிறார். அதற்காக ஆவணக்கோப்புகளைப் பார்வையிட்டு சேகரிக்கிறார்; பல்வேறு தேசங்களில் பலரை நேர்காணல் எடுக்கிறார்.

1960ல் பெல்ஜியம் நாட்டில் பயணிக்கும்போது முதன் முறையாக ஆஸ்டர்லிட்ஸை கதைசொல்லி சந்திக்கிறார். கதைசொல்லிக்கு சரித்திரத்திலும் கட்டிடக் கலையிலும் பெரும் ஈடுபாடு; அதே போல் ஆஸ்டர்லிட்ஸுக்கும் அவற்றில் ஈடுபாடு; கட்டடங்களின் வரலாற்றைச் சுற்றி அவர்களின் சம்பாஷணை வளர்கிறது. தனிப்பட்ட சொந்த விஷயங்களைக் குறித்து பல்லாண்டுகள் கழித்தே பேசிக் கொள்கின்றனர். தசாப்தங்கள் கழிந்து அவர்கள் தற்செயலாக லண்டனில் மீண்டும் சந்திக்கின்றனர். அப்போது, ஆஸ்டர்லிட்ஸ் தன் ரிஷிமூலத்தையும் சுய அடையாளத்தை கண்டடையும் சுவடுகளையும் விவரிக்கிறார்.

எச்சில் தொட்டு அழிப்பது மாதிரி, வரலாற்றை அழிப்பதை இங்கே செபால்ட் லாவகமாக முன்வைக்கிறார். தனி மனிதனின் குழந்தைப் பருவம் வரலாற்றில் இருந்து துடைத்தழிக்கப்படுகிறது. அதே சமயம் இங்கே ஒருவரேயொருவர்க்கு மட்டும் இவ்வாறான சரித்திரச் சிதைவு நிகழவில்லை. சரித்திரத்தை மனசாட்சிப்படி உள்ளது உள்ளபடி வைக்காமல், அதை நகர்த்தியும் மறைத்தும் வேறொரு நிலைக்குக் கொணர்ந்து மத்திம சமரசத்தில், ‘சரி… சரி…’யென்று தேய்த்தொதுக்கி கலைத்துப் போடும் கலையை செபால்ட் விவரிக்கிறார். குறிப்பிட்ட காலகட்டத்தில் வாழ்ந்தவர்களின் அவஸ்தையை அர்த்தமற்றதாக்குவதை ஆஸ்டர்லிட்ஸ் நாவல் சொல்கிறது.

“நாம் தற்போது பேசிக் கொண்டிருக்கும் வார்த்தைகள் கூட
நேரத்தைத் திருடுகின்றன
களவாண்டு போய்விட்டன
ஒன்றும் திரும்ப வரப்போவதில்லை”
ஹொரேஸ் சிறுபாட்டுகள்

நான் சும்மா இருந்தாலும் நேரம் சும்மா இருப்பதில்லை. நான் பேசாமல் இருக்கிறேன். ஒன்றும் நடக்கவில்லை. நான் எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. நேரம் கழிவதை கேட்கிறேன். மீன் எப்படி நீரில் வாழ்கிறதோ, நாம் அதுபோல் நேரத்தில் வாழ்கிறோம். நம் இருப்பு என்பது நேரத்தில் வாசம் செய்வது. இதை ஹிந்து புராணங்களில் கேட்டிருப்பீர்கள்:

“பிறப்பும், இறப்பும் நிற்பதே இல்லை. அதுபோல், பிரபஞ்சம் என்கிற தத்துவத்தின் அடிப்படையில் அணுக்களின் நடனம், அணுக்களின் பிறப்பினாலும் இறப்பினாலும் நிற்காமல் தொடர்கிறது. கோடானுகோடி அணுக்கள் வினாடிக்கு வினாடி உருவாகி, மறைவதுதான் பிரபஞ்சத்தின் நடனம். அதுவே தான் நடராஜரின் நடனம்” என்கிறார் ப்ரிட்ஜாப் காப்ரா என்கிற பௌதிக விஞ்ஞானி ‘The Dance of Shiva: The Hindu view of matter in the light of Modern Physics’ (சிவனின் நடனம் : நவீன பௌதிகத்தின் பார்வையில் வஸ்த்துக்களை பற்றிய ஹிந்துக்களின் நோக்கு)

“கரந்துங் கரந்திலன் கண்ணுக்குங் தோன்றான்
பரந்த சடையான் பசும்பொன் நிறத்தான்
அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே”
திருமூலர்

எல்லாவற்றிலும் கலந்தும் கலக்காமல் இருப்பவன். கண்ணுக்கு தெரியாதவன்; பரந்த கொடிக்காற்பயிர் அழிபட்டு வரும் நிலத்தின் நதி போல் பீரிட்டு பொழியும் சடையுடையவன்; பசும் பொன்னிறத்தில் இருப்பவன் நினைபவர்க்கெல்லாம் கிடைக்காதவன்; அனைவரையும் மயக்கும் வெண்ணிலவானவானே: இதை அவர் அணுவின் / சிவனின் உருவமாக சொல்கிறார். நேரம் ஓடிக்கொண்டேயிருப்பது போல் சிவனும் ஆடிக் கொண்டேயிருக்கிறார்.

நேரம், துகள் என்று சற்றே செபால்டிற்கு சம்பந்தமில்லாமல் சென்றது போல் இருக்கலாம். செபால்டைப் பொருத்தவரை, நேற்று – இன்று – நாளை எல்லாம் ஒரே சமயத்தில் இருக்கலாம். புனைவில் ஒரு நேர்க்கோட்டை எதிர்பார்க்கிறேன். குறைந்த பட்சம் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரேயொரு காலகட்டத்தை மட்டும் குறிப்பிடுவதை வழமையாக பார்த்திருக்கிறேன். முன்னும் பின்னும் பயணிக்கும் நாவலில் கூட வரிகளுக்குள்ளே அந்தத் தாவல் நிகழாது. மேட்ரிக்ஸ் என்போம்; மைக்ரோசாஃப்ட் எக்ஸெல் போன்ற அட்டவணைச்செயலி (ஸ்ப்ரெட் ஷீட்) என்போம்; அது போல் புவிசார்ந்தும் மாபெரும் மனைகள் சார்ந்தும் அதனை சென்றடையும் சாலைவழிகள் சார்ந்தும் கட்டமைக்கப்பட்ட நாவலில், கால நேர பிரமாணங்களை விட குறியீட்டு ஓவியம் போன்ற முப்பரிமாண நாடக அரங்கை ஒப்பிடலாம்.

ஆஸ்டர்லிட்ஸ் நாவலின் துவக்கத்திலேயே இந்த ஒப்புகை வருகிறது. இரயில் நிலையத்திற்கு அருகே அந்த மிருகக்காட்சி சாலை இருக்கிறது. இரவு நேரத்தில் உலாவும் இராக்கால மிருகங்கள் எப்படி இருக்குமோ, அந்த மாதிரி ஓரிடத்தை இருட்டாக்கி, அந்த விலங்கியல் பூங்காவில் வைத்திருக்கிறார்கள். கும்மிருட்டிற்குள் சென்றவுடன் எதுவும் மனிதக் கண்களுக்குத் தெரியவில்லை. சற்றே பழகிய பின் இருட்டில் மினுக்கும் கண்களும் உலவும் ஆந்தைகளும் தென்படத் துவங்குகின்றன. மேலேயுள்ள படத்தில் குரங்கின் கண்களையும் ஆந்தையின் கண்களையும் நாவலின் நடுவில் செபால்டு நுழைக்கிறார். அந்த மிருகங்களுக்குக் கீழே இரண்டு மனிதர்கள் வாசகராகிய நம்மைப் பார்க்கிறார்கள். ஓவியர்களைப் போலவும் தத்துவவாதிகளின் ஊடுருவும் பார்வையை ஒத்தும் அந்த இரவுயிரிகளின் கவனம் வெளிப்படுகிறது. செபால்டின் வார்த்தைகளிலேயே சொல்வதானால்: “…களங்கமில்லாத சிந்தையினாலும் எதையும் தவறவிடாத உண்மையான கவனிப்பினாலும், நம்மைச் சுற்றி இருக்கும் இருளைத் துளைக்கிறது.” நிஜமான நினைவுகூரல் சாத்தியமா என்பதை கதை நெடுக சிந்திக்க வைக்கிறார். அதன் கூடவே இருளான அடிநில ரயில் வளைகள் வழியே பயணிக்கிறார்கள். எதேச்சையாக சூரிய அஸ்தமனம் நிகழும்போது புகைவண்டி நிலையத்திற்குள் கதைசொல்லி நுழைகிறார். அப்போது அந்தி நேரத்தில் காத்திருக்கும் ட்ரெயின் பயணிகளை மறையும் ஞாயிறு, கவிந்து, அவர்களின் நிழல்களை கபளீகரம் செய்வது, பாதாள லோகத்தை நினைவுக்குக் கொணர்வதாகச் சொல்கிறார்.

அவகாசத்தில் நடந்தைதை நினைவில் வைத்திருக்கிறோம்; ஆனால், எதிர்காலத்தை நினைவுகூர்கிவோமா? நாம் நேரத்தில் இருக்கிறோமா அல்லது நம்முள்ளே நேரம் இருக்கிறதா? காலம் கழிந்துவிட்டது என்பதைச் சொல்லும்போது என்ன உணர்த்துகிறோம்? நாம் மனிதராக ஆயுள்காலத்தில் இருப்பதற்கும் சமயத்திற்கும் என்ன சம்பந்தம்? அது எவ்வாறு நம்முடைய நல்ல வேளை என்பதிலும் நெருக்கடி நேரம் என்பதிலும் கொண்டு சேர்க்கிறது?

காலப்போக்கில் எல்லா நாகரிகங்களும் அழிந்து மண்ணோடு மண்ணாகின்றன. ஆனால், செபால்ட் அதை மட்டும் உணர்த்தவில்லை. நேரங்கடந்துவிட்டதைச் சொல்லும்போது, தற்கால கலாச்சாரத்தில் சற்றுமுன்பு நடந்த அசிரமமான செயல்பாடுகளின் மூலம் அத்தாட்சிகளை அழிப்பதையும் உணர்த்துகிறார். புதிய ஒழுக்கம் மனதைக் குத்துவதால் பழைய ஒழுங்குமுறைகளின் ஆதாரங்களை, திட்டமிட்டு, பெரிய அளவில் நீக்கி மறைப்பதை நாவலில் கொணர்கிறார். இருபதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நடந்தது போல் அக்கிரமங்கள் வேறெங்கும் தலைவிரித்து, நீக்கமற பாயவில்லை. எனினும், சற்றுமுன்பு நடந்த சரித்திர உண்மைகளை எவ்வாறு அசத்தியமாக்கும் வேலைகள் மூலம் வரலாற்றைக் குழப்பி குலைக்கின்றன என்பதை விவரிக்கிறார்.

ஆஸ்டர்லிஸுக்கு முன்னாளில் பரிச்சயமானவர் ஹென்றி லெமாயின். நாவலின் இறுதி அத்தியாயங்களில், ஹென்றி லெமாயின் இவ்வாறு சொல்கிறார். “நாகரிக வாழ்க்கை என்பது பழங்காலத்தோடு தொடர்புடைய ஒவ்வொறு முக்கிய இழையையும் அறுத்துவிடுவதிலேயே குறியாக இருக்கிறது.” ஹென்றி நூலகத்தைப் பார்த்த பிறகு இந்தக் கருத்தை முன் வைக்கிறார்.

பாரிஸ் மாநகரின் “தேசிய நூலகம்” (பிப்ளியோதெக் நேஷனல்) கட்டிடம் எப்படி காலப்போக்கில் உருமாறுகிறது என்பது குறித்த விரிவான விவரணை நாவலின் இறுதியில் வருகிறது. மாபெரும் கட்டிடம்; இருந்தாலும் நூல்களை எடுக்க வயதானோரால் முடியாத மாதிரி மிரட்டும் புத்தக அடுக்குமுறை; நூலகம் என்றால் எல்லோரையும் வரவேற்குமாறும் அமர்ந்து நேரங்கழிக்குமாறும் சுலபமாக பயன்படுத்துமாறும் இருக்க வேண்டும். செபால்டின் துப்பறியும் பாணியையே இந்த ஃப்ரான்சுவா மித்தராண்ட் கட்டிய நூலகத்திற்கும் பயனடுத்தி பார்ப்போம். ஃபிரான்ஸ் நாட்டின் தேசிய நூலகம் எழுப்பிய இடத்தில் முன்பு என்ன இருந்தது என்பதைப் பார்த்தால், இந்த துவேஷத்தின் வீரியம் புரியும்.

நாஜிக்கள் பிரான்ஸை ஆக்கிரமித்த காலத்தில் இந்த இடம்தான் பட்டுவாடா தலைமையகமாக இருந்தது. பிரான்ஸின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் யூதர்களின் சொத்துக்களையும் உடைமைகளையும் கொள்ளையடித்து இங்கே பத்திரப்படுத்தினார்கள். நூலகத்திற்கு முன்பு அங்கிருந்த சேமிப்புக் கிடங்கில் நாஜித் தலைவர்கள் ஒன்றுகூடி அதை பங்கு போட்டு, தங்களின் சொந்தங்களுக்கும் தாய்நாட்டிற்கும் பிரித்துக் கொடுத்து, ஜெரிமனிக்கு அனுப்பி வைத்தார்கள். எண்ணற்ற நகைகள், விலைமதிப்பற்ற ஓவியங்கள், பாத்திரம், பண்டம், வீட்டு உரிமை, பங்கு மற்றும் நிலப் பத்திரங்கள், மேஜை, நாற்காலி, தட்டுமுட்டு சாமான் என்று எதையும் விடாமல் கொள்ளையடித்து, ஒவ்வொன்றுக்கும் கணக்கு எழுதி, எடுத்துக் கொண்டு போனார்கள். இன்றளவும் இந்த சொத்துக்கள் எங்கே இருக்கின்றன என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இருந்தாலும், அதை கண்டும் காணாமல் கமுக்கமாக போய் விடுகிறோம்.

பணம் போனால் மீண்டும் சம்பாதிக்கலாம். ஆனால், தான் என்னும் தனி மனிதரின் அடையாளம் திருடப்பட்டுவிட்டால் எங்கிருந்து மீட்பது? எத்தனை பேரின் வாழ்க்கை மழுங்கடிக்கப்பட்டு மாற்றப்பட்டு வேறு மாதிரி கற்பிக்கப்படுகிறது? அவர்களின் சுயத்தை எவ்வாறு கண்டெடுத்து, அவர்களிடம் ஒப்படைப்பது? ஆஸ்டர்லிட்ஸ் நாவல் தேடுகிறது.

மயிலாப்பூரில் அடைஞ்சான் முதலி தெரு என்று ஒரு சாலை இருக்கிறது. அப்படி ஒன்றும் அடைத்து வைத்திருக்கமாட்டார்கள். காற்றோட்டமாகவே இருக்கும். இந்த ஆஸ்டலிட்ஸ் நாவல் பட்டியல் மயம்; அதில் கொஞ்சம் மூச்சு முட்டுகிறது. நீள வாக்கியங்களும், முன்பின்னாக பயணிக்கும் காலக் குறிப்புகளும் படித்த வாக்கியத்தை, பத்தியை, பக்கத்தை மீண்டும் வாசிக்க வேண்டுமோ என்னும் மறதியும் குழப்பமும் கலந்த சந்தேகத்தை எழுப்பியது. கதை என்னும் சுவாரசியம் சற்றே பின்னுக்கு தள்ளப்பட்டதால், சாதாரணமாக படிக்கும் சுவாரசிய புனைவு என்பது இல்லாமல் போகிறது. பட்டியல்களும் விவரிப்புகளும் ஆங்காங்கே மொழிபெயர்க்காத ஜெர்மன் மொழி சொற்றொடர்களும் செல்லாத நகரங்களும் போகாத ஊர்களும் மேலும் அன்னியத்தை ஊட்டி சலிப்பை உண்டாக்கின. படித்து முடித்த பிறகு, இன்னொரு தடவை ஊன்றி படித்தால் இன்னும் கிரகிக்க முடியும் என்றும் தோன்றுகிறது. அப்படியே அவரின் பிற ஆக்கங்களையும் இன்னும் கொஞ்சம் நிதானமாக வாசித்துவிட்டு ஆஸ்டலிட்ஸுக்கு கொஞ்ச வருடம் கழித்து திரும்ப வேண்டும்.

எல்லாவற்றையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு முழுமையாகச் சொல்லிச் செல்வது ஒரு வகை. செபால்டு அந்த வகை அல்ல. அவர் நிறைய துளிகளையும் துண்டுகளையும் உங்கள் முன் போடுகிறார். நம்முடைய அறிவின் பரப்பளவைப் பொருத்தும், வாசிப்பனுவத்தின் விசாலத்தை வைத்தும் அதில் சில பொறிகள் கிளம்புகின்றன; சில துப்புகள் துலங்குகின்றன. அந்தக் கிளையில் சிந்தையை செலுத்தினால் நாவலை மூடி வைத்துவிட்டு, வேறெங்கோ சென்று விடுகிறோம். கிட்டத்தட்ட இணையத்தில் ஒரு கட்டுரையை படிக்கச் சென்று, அதில் இருந்து இன்னொரு உரல், அங்கிருந்து மற்றொரு உரல் என்று தாவுவது போல் தொலைந்துவிடும் அபாயம், ஆஸ்டர்லிட்ஸ் நாவலில் நிறையவே உண்டு. ப்ரௌஸ்ட், பெர்ன்ஹார்ட் என்று முயல்குழிக்குள் வீழ்ந்து காணமல் போய்க் கொண்டே இருக்க வேண்டுமானால் மட்டுமே செபால்டுக்குள் நுழையுங்கள்.

உதவிய நூல்கள்:
1. Austerlitz by W.G. Sebald and James Wood
2. Across the Land and the Water: Selected Poems, 1964-2001 by W.G. Sebald and Iain Galbraith
3. Understanding W.G. Sebald by Mark Richard McCulloh
4. W.G. Sebald – Image, Archive, Modernity by JJ Long
5. The Emergence of Memory: Conversations with W.G. Sebald: Lynne Sharon Schwartz (Editor)
6. W.G. Sebald: Expatriate Writing by Gerhard Fischer
7. W.G. Sebalds Hybrid Poetics by Lynn L. Wolff

அடிக்கப்பட்ட நோட்டுப்புத்தகம்

இது “Birdman” திரைக்கதை எழுதிய நிக்கொலஸ் Nicolas Giacobone-இன் சமீபத்திய ஆக்கம்.

அதில பட இயக்குநரால் கதாசிரியர் கடத்தப்பட்டு மூலையிடத்தில் அடைக்கப்படுகிறார். படத்தை எழுதி முடித்தால் மட்டுமே விடுதலை கிடைக்கும். அதில் இருந்து குட்டி நறுக்கு கீழே:

திரைக்கதையை எழுதி முடிக்கும்போது, ‘இது பரவாயில்லையே… சுலபமாகத்தானே இருக்கு’னு நினைத்தாலோ, திரைக்கதை எழுதுவதற்கெல்லாம் எந்த சிதம்பர ரகசியமும் கிடையாதுனு சொன்னாலோ, அந்தக் கதை மயிருக்குத்தான் சமானம். நீங்கள் அல்லாட வேண்டும். சுவற்றில் மண்டையை முட்டிக் கொள்ள வேண்டும். இதெல்லாம் எந்த எழவுக்கும் பிரயோஜனம் இல்லையோ என்று நெருநெருக்க வேண்டும். உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்து அந்த முகத்தின் மூடத்தனத்தை உணரவேண்டும்; ஏனென்றால் எல்லோருக்கும் முழுமூட முகங்களே உள்ளன – அவ்வளவு ஏன் மூடத்தனமான கண்களைக் கொண்டுள்ளோம். வாரத்திலொரு முறையாவது பைத்தியம் போல் விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும். நீங்கள் அழவேண்டும். எழுதியதைப் படித்தவுடன் அழவேண்டும் – காட்சிகள் சோகமாக இருப்பதால் அல்ல; அவை படுமோசமாக இருப்பதால். மணிக்கணக்கில், நாள்கணக்கில், மற்ற தொழில்கள் செய்வதை கற்பனை செய்து பார்க்கவேண்டும். மணிக்கணக்காக பெருஞ்சாமங்கள் செலவழித்து தகுதியான சால்ஜாப்புகளை பொய்யாகவேனும் தோற்றுவித்து தோல்விகளை நியாயப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நனவூஞ்சல்

கல்லூரியை முடித்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது.

அதற்காக எல்லோரையும் ஒன்று சேர்க்கும் வைபவம் நடக்கிறது. ஏற்கனவே 96 பார்த்து, அந்தக் கடுப்பில் இருந்தவனை இந்த விழா சுணங்க வைத்தது. 96 மாதிரி, கபீர் சிங் (நீங்கள் தெலுங்கர் என்றால் அர்ஜுன் ரெட்டி) மாதிரி எல்லாம் இனக் கவர்ச்சி என்றவன், இன்றும் பாலுணர்வு என்பவன் நான். நாளைக்கு என்ன நடக்கும் என்பது ரஜினிக்கேத் தெரியாது… எனக்கு என்ன நினைப்பு இருக்கும் என்பதை குணாவே உணர்வார்.

ரீயுனியன் சபலம் இருந்தாலும் விடவில்லை. இணைய எழுத்தாளன்; கௌரவமான உத்தியோகம்; யாருக்குத் தெரியும் சொல்வனம்.காம் பத்திரிகைக்கு எழுதுவதற்குக் கூட பிலானியில் ஆள் கிடைக்கலாம்! போக வேண்டும் என்னும் எண்ணம் எழுந்தது.

அப்பொழுது வாட்ஸப் குழுவில் இணைத்தார்கள். அந்தக் கால புகைப்படங்களைப் போட்டார்கள். எல்லோரும் சேர்ந்து எடுத்துக் கொண்டது; கொண்டாட்டங்களில் திளைத்த தருணங்களில் க்ளிக்கியது… அதையெல்லாம் பார்த்தால் அப்படியே நினைவோடையும் நனவூஞ்சலும் கொஞ்ச வேண்டுமே!?

இல்லை.

சற்றே வயிற்றைப் பிசைந்தது. எதை மதித்திருக்கிறோம்?

பணம்… செல்வாக்கு… ஸ்டைல்… பெண்களை அலட்சியப்படுத்தி மயக்கும் வித்தை… தற்பாலுணர்வு போன்ற சிறுபான்மையை கூனிக் குறுக வைக்கும் நடத்தை. தலித்தை பார்ப்பானும் பார்ப்பனனை மற்ற சாதியினரும் சாதிக் கண்ணோட்டம் மட்டுமே கொண்டு கணிக்கும் குறுகிய பார்வை.

எதைக் குறித்து பேசிக் கொண்டோம்? எப்படி மற்றவர்களை மதிப்பிட்டோம்? #மீடு இயக்கமோ, அறச்சீற்றமோ — எவ்வளவு அக்கறையையும் புரிதலையும் விவாதிக்கும் தன்மையும் இன்றாவது கொண்டிருக்கிறோம்?

பசுமையான நினைவுகள் என்று மனதில் ஏதோ மூளையின் மூலையில் எங்கோ தங்கி இருக்கிறது. அது அப்படியே பாசி பிடித்து இருக்கட்டும். இன்று போய் கருத்து சொன்னால், “உன் டெசிக்னெஷன் என்ன? என் பெஸ்ட் செல்லர் என்ன? உன் வால்யூவேஷன் என்ன?” என்று மட்டுமே சீர் தூக்கும் சமூகம் போதனையை விரும்பாது. உன்னால் என்ன காரியம் ஆகும், என்ன ஆதாயம் கிடைக்கும், எவ்வாறு வருமானம் பெருகும், எங்ஙனம் நெட்வொர்க் விரிவடையும் என்றே உன்னை கணிப்பிடும்.

உனக்கு அன்று அது முக்கியமானது என்பதை உணர்த்தினார்கள். இன்று எது உனக்கு முக்கியம் என்பதைப் புரிந்த பிறகும் நண்பர்களின் அருகாமைக்கும் தோழிகளின் தோற்றக் கவர்ச்சி எட்டிப் போன செல்ஃபீக்கும் என்ன வாத பரிபாலனம் கிட்டப்போகிறது?

போகாமல் இருப்பது – விட்டுப் போனதை எண்ணி நெஞ்சம் நிறைந்தது.

#Justice4உதயமானBaby

உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் ஓடையில் இருந்து:

செய்தி

தலைப்புக்கேற்ற கீச்சுகள்

உதயநிதி கடந்து வந்த பாதை
மெரினாவுல இடம்
சுபவீ ,வீரமணி
அன்றும் இன்றும் என்றும் திராவிடம்
ஸ்டாலின் பாபு
அப்பா திமுக
தாத்தா எவ்வழி

நக்கீரன்

‘திருமணம் ஆனவருடன் தவறான உறவு வைத்திருந்தேன்’ ஆண்ட்ரியா ஓபன் டாக்! | wrong relationship with married man says andrea | nakkheeran:  பெங்களூரில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார் ஆண்ட்ரியா. அப்போது, முறிந்த சிறகுகள் என்ற தலைப்பில் சோகமான கவிதைகளை வாசித்துள்ளார். சோகத்தை பிரதானப்படுத்துவதை போன்று அந்த கவிதை அமைந்திருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது ரசிகர்கள் அதற்கான காரணத்தை கேட்டுள்ளனர். இதைதொடர்ந்து பேசிய ஆண்ட்ரியா, ” நான் திருமணம் ஆன ஒருவரோடு உடல் ரீதியாக தொடர்பில் இருந்தேன். ஆனால் அவர் என்னை மனதளவில் காயப்படுத்தினார். அதில் இருந்து மீள முடியாமல் இருந்த போதுதான் இந்த கவிதையை எழுதினேன்” என்றார். ஆயுர்வேத சிகிச்சைக்கான காரணமும் இதுதான் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்றைய ஜூனியர் விகடன் கிசுகிசு

டபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ?

I suppose it is submerged memories that give to our dreams their curious air of hyper-reality. But perhaps there is something else as well, something nebulous, gauze-like, through which everything one sees in a dream seems, paradoxically, much clearer. A pond becomes a lake, a breeze becomes a storm, a handful of dust is a desert, a grain of sulfur in the blood is a volcanic inferno.                    —W. G. Sebald, The Rings of Saturn

செபால்ட் எழுத்துக்களின் அடிநாதம் நினைவுகள். பழைய விஷயங்களை நினைவில் வைத்திருப்பதால் சித்திரவதைக்குள்ளாவோம். அதனால், பழையதை மறக்க எத்தனிக்கிறோம். ஆனால், நடந்ததை மறப்பதால் எவ்வளவு பெரிய கொடூரத்தை அரங்கேற்றுகிறோம்?

அவரின் ஆஸ்டர்லிட்ஸ் நாவல் முழுக்க ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைகிறது. இடங்களும் மனிதர்களும் மனிதர்களின் வாழ்க்கைக் கதைகளும் அவர்களின் அனுபவங்களும் இடறி, அகஸ்மாத்தாகவோ அல்லது வலிந்தோ தட்டுப்பட்டு உரசிக் கொண்டேயிருக்கின்றன. அதுவும் எனக்கு இது நடந்ததாக நான் சொல்லும்போது, அந்த சம்பவத்தின் மாந்தர்கள் கிடைக்கிறார்கள். நான் சொல்லும் வார்த்தை என்னும்போது அந்த நிகழ்வின் உண்மைத்தன்மை உணரப்பட்டு ஆவணப்படம் போல் உரைக்கிறது.

செபால்ட் எழுத்துக்களைக் குறித்த அறிமுகத்தையும் சீபால்ட் குறித்த விமர்சனங்களின் மொழிபெயர்ப்புகளையும் தாங்கி இந்த சொல்வனம் இதழ் வெளியாகி இருக்கிறது.

“It seems to me then as if all the moments of our life occupy the same space, as if future events already existed and were only waiting for us to find our way to them at last, just as when we have accepted an invitation we duly arrive in a certain house at a given time.” 

WG Sebald, Austerlitz

  • ஸெபால்டின் நடையை சுருக்கமாகச் சொன்னால்
    • மனப்பதிவு கலந்த பயணக்குறிப்புகள்
    • புனைவில் கொஞ்சம் சரித்திரமும் தொன்மமும்
    • கதைசொல்லி என்பவர் சில சமயம் செபால்ட்; பல சமயங்களில் செபால்டுக்கே கதை சொல்லுபவர்
    • அந்தக் கதைசொல்லி அலைபாயும் தன்மை கொண்டவர்; மற்றவரின் அந்தரங்கங்களை அனுசரணை கலந்த பரிவுடன் அணுகுபவர்.
    • நாவலில் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவிக் கொண்டேயிருக்கும் போக்கு
    • ஸெபால்டின் கதைக்களன் அனைத்தும் ஐரோப்பாவையும் அதன் வரலாற்றையும் மட்டுமே சுற்றி வருபவை.
    • அவரின் எழுத்தில் பத்திப் பிரிவினைகள் எதிர்பார்க்கக் கூடாது.
    • ஒப்புமைகள், உருவகங்கள், உவமானங்கள் கிடையாது. வெறும் நேரடி.
    • புகைப்படங்கள் நிறைந்திருக்கும்; கருப்பு-வெள்ளை நிழற்படங்கள் அவை; அந்தப் படங்களுக்கு எந்த அடிக்குறிப்பும் இராது; அவை தோற்ற மயக்கத்தை ஏற்படுத்தும்.
    • யோர்ஹே லூயி ஃபோர்ஹே (Jorge Luis Borges) அவரின் ஆதர்சம்

செபால்ட் படிக்கும்போது கோணங்கியின் கல்குதிரை படிப்பது போல் இருக்கலாம். அவரின் வாசகங்கள் சுழல்பவை; ஆரம்பித்த இடத்திற்கு திரும்ப வருபவை; பிரதிபலிக்கும் கண்ணாடி போல் நிகழ்வை சொல்பவை. கதை கொஞ்சம் முன்னே நகர்வது போல் தோன்றினாலும் நடந்த அந்தக் கால விஷயத்திற்கே கவனத்தைக் கோரி திரும்பத் திரும்ப பழைய காலத்திற்கு கொண்டு நிறுத்துபவை.

“We learn from history as much as a rabbit learns from an experiment that’s performed upon it.” 

― W.G. Sebald

பொட்டு வைத்த சிறுத்தை

சொல்வனத்தின் இந்த இதழ் எழுத்தாளர் அம்பை குறித்த விமர்சனங்களையும் அவரின் சமீபத்திய கட்டுரைகளையும் தாங்கி வந்திருக்கிறது. இந்த இதழ் தயாரிப்பில் சற்றே பங்கு கொள்ள முடிந்தது.

அம்பையின் ஆக்கங்களைக் குறித்தும் அவருடன் பழகிய சில நாள்கள் குறித்தும் எழுத நினைத்திருந்தேன். எனக்கு மறதி அதிகம். ஒருவரை சந்தித்த உடன் அவரைப் பற்றி எழுதி விட வேண்டும். இல்லையென்றால் மொத்த கருத்தும் உருமாறி, பட்டாம்பூச்சி ஆகி பறந்து போய் விடும். பட்டாம்பூச்சி என்னும் எழுத்தாளர்களை ஏன் என் பார்வையில் புழுவாகக் குறுக்க வேண்டும் என்றும் யோசிக்க ஆரம்பித்ததால், இந்த மாதிரி குறுக்குவெட்டுத் தோற்ற மதிப்பீடுகளைக் குறைத்துவிட்டேன்.

எனினும், மற்றவர்கள் எழுதும் கட்டுரைகள் உதவியாக இருக்கின்றன. அவற்றை எங்கிருந்தாலும் (நியு யார்க் ரிவ்யூ ஆஃப் புக்ஸ் முதல் ஜெயமோகன் வரை) வாசிக்கிறேன். இந்த இதழில் அம்பை குறித்த மதிப்பீடுகள் வந்திருக்கின்றன.


In hot dry summer, the grass becomes drier, some part of the grass get burned. When grasshoppers feel the fire (more than warm), they begin to sweat, which can make the environment so wet that can effectively damp the prorogation of the fire

The Turing Guide
By Jack Copeland, Jonathan Bowen, Mark Sprevak, Robin Wilson

பெரியதொரு சோலை இருக்கிறது. அந்த சோலையின் தரை முழுக்க பச்சை பசேலென்று புல் முளைத்து கணுக்கால் காணாமல் போகுமளவு உயர்ந்திருக்கிறது. அங்கே நெருப்பு பற்றிக் கொள்கிறது. சோலை முழுக்க எரிந்து சாம்பலாக வேண்டியதுதான் பாக்கி. அந்த இடத்தில் வெட்டுக்கிளிகளும் இருக்கின்றன. அது வரை அங்கும் இங்கும் தாவி மண்ணில் கிடைத்த புழுக்களையும் காட்டு மலரின் அரும்பையும் சாப்பிட்டு பரவலாக ஓடித் திரிகின்றன.

பெருகும் நெருப்பின் வெம்மை வெட்டுக்கிளிகளையும் தாக்குகின்றன. அந்த வெட்டுக்கிளிகள் ஆங்காங்கே ஒன்று சேர்கின்றன. சிறு சிறு கூட்டங்களாக அமைத்துக் கொள்கின்றன. தீயினால் வெட்டுக்கிளிகளுக்கு வேர்க்கிறது. வியர்வையையும் பதற்றத்தையும் கட்டுப்படுத்த இறக்கைகளை அடித்துக் கொள்கின்றன. வியர்வைத் துளிகள் மண்ணை அடைகின்றன. படபடவென்று அடித்துக் கொள்ளும் இறக்கைகள் புல்வெளியின் பிரதேசங்களைக் குளிர்விக்கின்றன.

சோலை பெரும்பாலும் வெந்து எரிந்து சாம்பல் மட்டுமே எஞ்சி நிற்கின்றன. அப்போது, அதில் ஆங்காங்கே பசும்புல் இன்னும் தெரிகிறது. அது எப்படி சாத்தியம்?

மொத்த சோலையும் அல்லவா எரிந்து போயிருக்க வேண்டும்? எப்படி அந்த பாலைவனச் சோலைகள் உருவாகின?

அதற்கு அந்த வெட்டுக்கிளி கூட்டம்தான் காரணம். அவை ஒன்றாக ஒற்றுமையாக சேர்ந்து அருகருகில் நின்று கொண்டன. தங்களின் அச்சத்தை உழைப்பை வியர்வையாக சிந்தின. தங்கள் குட்டி சிறகுகளைக் கொண்டு விசிறி வீசின. அதில் பூமி குளிர்ந்தது. அந்தக் குளிர்ச்சி பசுமை எச்சத்தை விட்டு வைத்தது.

இந்த சொல்வனம் இதழ் அப்படி பல பெண்களின் பங்களிப்போடு உருவாகி இருக்கிறது.

சிறுத்தைப்புலியின் உடலைப் பார்த்தால் ஆங்காங்கே கரும்புள்ளிகள் தென்படும். அந்த மாதிரி ஆங்காங்கேதான் பெண்களின் பங்களிப்பு இந்த இதழில் தென்படுகிறது. எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கிறது.

வரிக்குதிரையின் முதுகைப் பார்த்தால் பத்து வெள்ளைக் கோடு இருக்கிறது என கணக்கிட மாட்டேன். சற்றே ஏறக்குறைய கருப்பும் வெண்மையும் சமமாக இருப்பதை உணர்வேன். ஆண்களும் பெண்களும் சமமாக மக்கள்தொகை கொண்ட நிலையில் இப்படி ஒரு கணக்கு போட்டு பட்டியல் போடுதல் அஞ்சத்தக்க நிலையே.

இருந்தாலும் காலங்கார்த்தாலே எழுந்து இன்று என்ன ஸ்டேட்டஸ் போடலாம் என்று இருபாலாரும் இன்று சமமாகவே யோசிக்கிறார்கள். நிலைத்தகவலுக்கு அடுத்த நிலைக்குச் செல்ல ஊக்கமும் எழுச்சியும் கிடைத்து வெட்டுக்கிளிகளும் பருந்தெனப் பறக்க வேண்டும்

குன்றின் மீது அமர்ந்த குமரன்

அரூ: கனவுருப்புனைவு காலாண்டிதழ் – அறிவியல் சிறுகதைப் போட்டி முடிவுகளை முன்வைத்து சில அறிமுகக் குறிப்புகள

இன்று அடுத்த கதை: நகுல்வசன் எழுதிய கடவுளும் கேண்டியும்

“பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடுக்காதீர்கள்; உங்களிடமுள்ள முத்துக்களைப் பன்றிகளுக்கு முன்னால் போடாதீர்கள்” என்று இயேசு சொல்கிறார். (மத்தேயு 7:6)

“பூமிக்கு நீங்கள் உப்பாக இருக்கிறீர்கள். தன் சுவையை உப்பு இழந்தால் மீண்டும் அதை உப்பாக மாற்றவோ, வேறு எதற்கும் பயன்படுத்தவோ முடியாது. அது தெருவில் எறியப்பட்டு மக்களால் மிதிக்கப்படும்.

“உலகுக்கு ஒளித்தரும் விளக்கு நீங்களே. ஒரு குன்றின் மேல் அமைந்த பட்டணம் மறைந்திருக்க முடியாது. மக்கள் எரிகின்ற விளக்கைக் குடத்தின் கீழ் வைத்து மறைப்பதில்லை. மாறாக, அதை மக்கள் விளக்குத் தண்டின் மீது வைக்கிறார்கள். அப்பொழுது தான் விளக்கு வீட்டிலுள்ள அனைவருக்கும் வெளிச்சம் தருகிறது. ( மத்தேயு 5 )

“நான் சொன்ன இந்த விஷயங்களைக் கேட்டு, இவற்றின்படி நடக்கிறவன் பாறைமேல் தன் வீட்டைக் கட்டிய புத்தியுள்ள மனுஷனைப் போல் இருக்கிறான். கனமழை பெய்து, வெள்ளம் வந்து, பயங்கர காற்றடித்து, அந்த வீட்டின் மேல் மோதியபோதும், அது இடிந்து விழவில்லை. ஏனென்றால், அது பாறைமேல் அஸ்திவாரம் போடப்பட்டிருந்தது” என்று இயேசு சொல்கிறார். (மத்தேயு 7:24, 25) இந்த வீடு ஏன் இடிந்து விழவில்லை? ஏனென்றால் அந்த மனுஷன், ‘ஆழமாகத் தோண்டி, பாறைமேல் அஸ்திவாரம் போட்டிருந்தான்.’ (லூக்கா 6:48) இதிலிருந்து, இயேசுவின் வார்த்தைகளை வெறுமனே கேட்டால் மட்டும் போதாது, அவற்றின்படி ‘நடக்க’ நாம் தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்கிறோம்.

பிரச்சாரம் போதும். பிரசங்கத்தை நிறுத்திக் கொள்கிறேன். கிறித்துவின் மலைப் பிரசங்கத்தை ஏன் இந்தக் கதைக்கு எடுத்துக் கொள்கிறேன்?

  1. யேசு ஒன்றும் புதிய விஷயத்தைச் சொல்லிவிடவில்லை. கிறித்துவ கடவுள் அபவாதம் பேசவில்லை. அது முழுக்க முழுக்க கிறித்துவ கடவுளின் வார்த்தை. ஒத்துக் கொள்கிறேன். யூதர்களைப் பொருத்தவரை யேசு ஒரு தேவதூதர். அரூ போட்டியைப் பொருத்தவரை நகுல்வசன் எழுதியது அறிவியல் கற்பனை. அதே சமயம் சாமானியரை பொருத்தவரை, கடவுளும் கேண்டியும் இலக்கிய பாரம்பரியத்தின் தொடர்ச்சி. கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் என்று புதுமைப்பித்தன் எழுதினார். அதை நகுல்வசன் சற்றே தொட்டுக் கொண்டு நவீனமாக்கி புதுமையாகத் தந்திருக்கிறார்.
  2. கடவுள் நேரில் வருவாரா? யேசு எப்படி தன்னிடம் கடவுள் சொன்னதை மலைமேல் பிரசங்கமாகப் பொழிந்தார்? யேசு இந்தியாவுக்கு வந்து புத்தமதத்தின் தத்துவங்களைக் கற்றுக் கொண்டு, அதன் பின் வளைகுடா நாட்டிற்குச் சென்று கிறித்துவமாக மாற்றிச் சொன்னாரா? இந்த மாதிரி வித விதமாக இந்தப் புனைவையும் அணுகலாம்.
  3. கிறிஸ்து சொன்ன கருத்தில் தெளிவு இருந்தது; குரலில் தீர்க்கம் இருந்தது; சொற்பொழிவில் கோர்வையான சிந்தனை தெரிந்தது; அதே சமயம் சுவாரசியமாகவும் கவர்ந்திழுக்கும் தன்மையுடனும் நம்பிக்கையும் அன்பும் கொடுக்கும் கருத்துக்களை முன்வைக்கிறார். அதெல்லாம் இந்தக் கதையில் கிடைக்கிறது.

கதையில் இருந்து…

கடவுள் ஹெட்செட்டைப் பொருத்திக்கொண்டார். திரையில் தெரிந்த நினைவுப் பட்டியலிலிருந்து அவர் நினைவுகளிலேயே மிகப் புராதன ஒன்றைத் தேர்ந்தெடுத்தார்.

இருப்பு இல்லாமை இரண்டுமற்ற இருளை இருள் சூழ்ந்திருந்த வெளி.

இரவு பகல்கள் அற்று திசைகளின்றி வேறுபடுத்தலில்லாத வெறுமையால் போர்த்தப்பட்டிருக்கும் வெளி!. அப்படிப்பட்ட ஒரு வெளியில் வெப்பத்தின் திண்மையிலிருந்து அவர் உயர்த்தெழுகிறார். ஒருமையின் தனிமையால் அவருள் விழைவு ஊடுறுவுவதை அவரால் உணர முடிந்தது, அவ்விழைவின் அதிகரிப்பில் ஒர் உச்சம். அதன் தகிப்பில் பீஜம். அதன்பின், அதன்பின்… திரையில் இருள் கவிந்தது.

“End of selected memory” என்ற அறிவுப்பு திரையில் ஓடியது

கதையின் சவால்கள்

  1. துவக்கத்தில் வரும் பாஸ்டன் சமாச்சாரங்கள் பச்சைத்தமிழனை அன்னியமாக்கும்
  2. அந்தத் தத்துவப் பகுதிகள் கனவுகளில் வருவது தெளிவாக வெளிப்பட்டிருந்தாலும், இன்னும் சற்றே தத்வமசியை விவரித்து வாசக இடைவெளியைக் குறைத்திருக்கலாம்
  3. மனதில் பதியும் ஆக்கம் என்றாலும் இவ்வளவு ஜாலியான கதையின் முடிவில் “எல்லாமே நிராவிடம் தானோ?” என்ற எண்ணத்தை நிரப்பியிருக்கலாம்.

சென்ற பதிவு: குக்குரன்

குக்குரன்

அரூ: கனவுருப்புனைவு காலாண்டிதழ் – அறிவியல் சிறுகதைப் போட்டி முடிவுகளை முன்வைத்து சில அறிமுகக் குறிப்புகள்

ஒவ்வொரு கதையும் ஒரு நாயைப் போல. சில வளர்ப்பு நாய்கள் தங்களின் எசமானர்கள் சொன்னபடி கேட்டு நடக்கும். பெரும்பாலான ஜாதி நாய்கள் தங்கள் பெருமைக்கேற்ப நடந்து கொள்ளும். தெருவில் சுயம்புவாக விடப்பட்ட அனாதரவான நாய்கள் விதவிதமாக தங்கள் சுயரூபத்தை சமயத்திற்கேற்ப காட்டும்.

இந்தப் போட்டில் வெற்றிபெற்ற கதைகளும் அந்த நாய்களைப் போன்றவை. சில கதைகள் தங்கள் புனைவாளரின் நடைக்கும் பாவனைக்கும் கட்டுப்பட்டவை. அனேக கதைகள், ஜாதி நாய்களைப் போல், தமிழில் வரும் அறிவியல் புனைவுகளுக்கே உரிய வகையில் அமைக்கப்பட்டவை. தெரு நாய்கள் போல் சுதந்திரமான போக்கில் தான்தோன்றித்தனமான கதைகளும் இருக்கிறது.

போட்டி முடிவுகளை இங்கே பார்க்கலாம்.

அரூ போட்டியில் வெற்றி பெற்ற கதைகள் - தமிழ் எழுத்தாளர்கள்

ஒவ்வொரு கதைக்கும் ஒரு குறியீட்டை வைத்து அறிமுகம் செய்து வைக்கலாம். இன்று எடுத்துக் கொண்டிருக்கும் படைப்பு: பல்கலனும் யாம் அணிவோம்ரா.கிரிதரன்.

அப்பாவுடன் புராதனமான கோயில் வளாகத்துக்குச் சென்றபோது, “மயக்கும் கண்களைப் பாருடா. எப்படிச் செருகிக்கிடக்கு பார். தூங்கறான்னு நினைச்சியா? மனசு அப்படியொரு விழிப்போடு இருக்கு.” என்பார். “மனசா?”. “ஆமாம்,” எனச் சொன்னவர் என் கண்களை நேராகப் பார்க்கவில்லை. மனசு என்பது புராணப்பொருள். இன்றைக்கு மனசுக்குள் இருக்கும் பல அடுக்குகளுக்கு இடையே செய்தி பகிர்ந்துகொள்ளும் விதம் பற்றி எல்லாருக்கும் தெரியும். அப்பாவிடம் கேட்டால், அந்தச் செய்திகளை முழுமையாகத் தெரிந்துகொண்டால்கூட மனதைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியாது என்பார். மனசு எனப் பேசுவதுகூடப் பழைய பாணி ஆகிவிட்டது. பல தலைமுறைகளுக்கு முன்னர் வாழ்ந்த மூத்தக்கிறுக்கர் வரிசையில் உங்களைச் சேர்த்துவிடுவார்கள்.

நாய்க்குட்டியை வளர்ப்பதற்கென்று விதிமுறைகள் இருக்கின்றன. அதனுடன் நிறைய நேரம் செலவிட வேண்டும். அது பீ பெய்வதற்கு, அந்த நாய்க்குட்டி எங்கெல்லாம் இழுக்கிறதோ அங்கெல்லாம் செல்ல வேண்டும். அந்த நாய்க்குட்டி திடீரென்று பின்னிரவு இரண்டரை மணிக்கு உங்களை எழுப்பும். அப்பொழுதும் கவனமாக விழிக்க வேண்டும். நாய்க்குட்டிகள் அச்சுபிச்சென்று வெறி கொண்டு துள்ளியோடும். அப்பொழுது அதைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு, கொஞ்சினால், உறவாடினால்… உங்களிடம் பெட்டிப் பாம்பாக உள்ளடங்கி வசப்படும். அதற்கு பதிலாக, அந்த மாதிரியான வெறியாட்டா நேரங்களில், அதனுடன் முரண் கொண்டு விளையாடினால், கவனமாக நம் உடம்பை ரணமாக்காமல் பாதுகாப்பாக ஓட வேண்டும். நாய்க்குட்டிகள் வளர்ந்து முதிர்ச்சியடைய இருநூறு நாள்களுக்கு மேல் காத்திருக்க வேண்டும். நன்றியுள்ள நாயை அடைய எருமைப் பொறுமை அவசியம்.

இந்தக் கதையும் நாய்க்குட்டி போல் தறிகெட்டு ஓடுகிறது. எதற்காக எந்த வாயிலைப் பிராண்டுகிறது என்பது புலப்படுவதற்குள் அடுத்த ஏவுகணையை நோக்கி ஓடுகிறது. நிறைய நேரமும் சிரத்தையும் கவனத்தையும் கோருகிறது. மீண்டும் மீண்டும் சொன்னதையேத் திரும்பச் சொல்லி நாய்க்குட்டிக்கு புரிய வைப்பது போல், சில பத்திகளை மீண்டும் மீண்டும் வாசித்து புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. முக்கியமான திறப்புகளை இந்தக் கதை மூலம் அடைய எருமைப் பொறுமை அவசியம்.

கதையின் பலங்கள்

  • அக்காவிற்கும் தம்பிக்குமான பாசம்
  • அப்பா மேல் உள்ள ஆதர்சம்
  • வேதாந்த மேற்கோள்கள்
  • கனவு விவரிப்புகள்

கதையின் சவால்கள்

  • தற்கால சிறு பத்திரிகை வாசிக்கும் தமிழ் வாசகர்களை குறிவைத்த அசுவாரசிய நடை
  • கதாமாந்தர்கள் மீது ஈர்ப்போ இரக்கமோ ஏற்படாத தன்மை
  • நிறைய பொறுக்கு தகவல்கள் ஏற்படுத்தும் குவியமின்மை

இங்கே வாசிக்கவும். உங்கள் வாசிப்பின் முடிவில் என்ன தோன்றுகிறது என்பதைப் பகிருங்கள்.

Lenin

இந்தப் பாடலை கய் டவன்பொர்ட் எவ்வாறு புனைந்திருக்கிறார்? எட்டுக்கால் பூச்சி சிலந்தி வலை பின்னுவது போல் எனலாம். பூச்சியின் திரவ நூல், எவ்வாறு திட நூலாக மாறுகிறதோ, அது போல் இந்தக் கவிதையும் மீளவொண்ணாத மாற்றத்தை நம்மிடம் உருவாக்குகிறது. தாமிரபரணி ஆற்றின் கரையில் விளையும் கோரைப்புல் கொண்டு செய்யப்படும் பத்தமடைப் பாய் போல் நெய்திருக்கிறார் எனலாம். பச்சை பசேலென விற்கப்படும் கொள்கையை அறுத்து, ஈரப்பதமில்லாத சூழலில் உலர்த்துகிறார். கவிதையின் கருத்தை பட்டென்று தறியில் போட்டால் கருத்துவிடும். எனவே, நனைய வைத்து காயப் போடுகிறார். இப்படி உலர்ந்த புல்லை ஓடும் தண்ணீர் என்னும் பத்து அசைகள் கொண்ட பாவின் அடிகளில் அமிழச் செய்கிறார். அப்போது அது மும்மடங்கு பருத்து மனதில் தைக்கிறது. அதன் பின் நுண்புரி நூல் கொண்டு கோரையின் புறவுறையை உரித்து தன் கவிதையைப் புனைகிறார்.

எவ்வாறு புனைகிறார்? யாப்பு என்றால் யாக்கையைக் கட்டுதல். அதாவது நம் உடம்பானது ரத்தம், தோல், எலும்பு, நரம்பு போன்றவற்றால் கட்டப்பட்டிருப்பதைப் போல எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பவற்றால் தமிழ்ப் பாட்டு, கட்டப்பட்டுள்ளது என்பதனால் இதற்கு யாப்பு என்று பெயர். அவ்வாறு இயற்றப்படும் பாக்களில் நமக்கு உறுப்புக்கள் இருப்பது போல, அவற்றுக்கும் உள் உறுப்புக்கள் அமைத்து செய்வதனால், செய்யுள் என்கிறார்கள். இது சோவியத் சித்தரவதையில் துண்டு துண்டாகப் பிரிப்பதை நினைவுறுத்தினால், அதற்கு நான் பொறுப்பல்ல.

ஒரெழுத்து தனித்தோ இணைந்தோ ஒலிப்பது அசை.

அசைகள் பல சேர்ந்து அமைவது, சீர் எனப்படும்.

சீர்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்த அமைவது தளை எனப்படும்.

இரண்டு அல்லது பல சீர்கள் சேர்ந்து அமைவது அடி எனப்படும்.

அடிகள் இரண்டு முதலியனவாகத் தொடர்ந்து அடுக்கிப் பாடுவது பா எனப்படும்.

உங்களுக்கு குறள், வெண்பா தெரிந்திருக்கும். நம்பி மொழியாக்கம் செய்த இந்தக் கவிதை பத்து அசைகள் கொண்ட பா. குறில் நெடில் ஈரசைச் சீர் கொண்டு எழுதப்பட்ட ஐஞ்சீரடி எனலாம்.

புலவர் நம்பி கிருஷ்ணன் மொழிபெயர்த்த இந்தப் பாடல் அடிமறி மண்டில ஆசிரியப்பாவா அல்லது கொச்சகக் கலிப்பாவா அல்லது பஃறொடை வெண்பாவா என்பதை உங்களின் வீட்டுப்பாடமாக வைத்துக் கொள்ளவும். அதை நான் சொல்லப் போக புலவர் புகழேந்தியை ஒட்டக்கூத்தர் ஜெயிலுக்குள் தள்ளியவாறு என்னையும் நேரசை, நிரையசை கம்பி எண்ண அனுப்பி விடுவீர்கள்.

புலவர் புகழேந்தியை ஏன் இழுக்க வேண்டும்? அபிதான சிந்தாமணியில் புகழேந்திப் புலவரின் வரலாறு வருகிறது. 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குறுநில மன்னன் ‘சந்திரன் சுவர்க்கி’ புகழேந்திப் புலவரை ஆதரிக்கிறான். பின்னர்ப் பாண்டிய மன்னனின் அவைக்களப் புலவராகப் பதவி ஏற்றுள்ளார். பாண்டிய இளவரசி சோழ மன்னனின் மனைவியானபோது புகழேந்திப்புலவர் சீதனமாகச் சோழ நாட்டுக்கு அனுப்பப்படுகிறார். அங்கே சோழநாட்டு அவைப் புலவரான ஒட்டக்கூத்தரின் காழ்ப்புணர்ச்சியால் (பொறாமையால்) வெறுக்கப்பட்டுச் சிறை வைக்கப்படுகின்றார்.

அதே போல் நம்பி கிருஷ்ணன் மொழிபெயர்த்த கவிதை நாயகரான ஓசிப் மண்டெல்ஸ்டம் (Osip Mandelstam) என்பவரும் சிறையில் வதங்கியிருக்கிறார். ஓசிப் மண்டெல்ஸ்டமின் மனைவியை ஒத்த நபர் இந்த ஆக்கத்தில் வருகிறார். பழங்காலப் பெருமிதத்தைக் குறித்துப் பாடுகிறார்; அந்தக் கால நினைவேக்கத்தை காய்ச்சுகிறார்; அவளின் பெயர் நடெஸ்டா மண்டெல்ஸ்டம் (Nadezhda Mandelstam).

இந்த ஆக்கத்தை மூலத்தின் அளவிலும் நேர்த்தியிலும் எந்த சேதமும் இல்லாமல் தமிழுக்குக் கொணர்கிறார் நம்பி. ”அந்த கிழ கரப்பான் பூச்சி” என்னும்போது அப்படியே ஸ்டாலின் நிழலாடுகிறார்.

நடெஸ்டாவின் கணவன் ஓசிப் — “இரும்பு மனிதர்” ஜோசப் ஸ்டாலின் அரசாங்கத்தின் குலாக் வதைமுகாமினால் கொல்லப்பட்டவர். சோசலிச சோவியத் ரஷ்ய தலைவராக விளங்கிய ஸ்டாலின் பல லட்சம் பேரைக் கொன்றவர் என்பது குருஷ்சாவ் போன்ற ருஷியத் தலைவர்களே ஒத்துக் கொண்ட ஒன்று. உக்ரைன் உள்ளிட்ட ரஷியாவின் நட்பு நாடுகளிலேயே செயற்கை பஞ்சங்களை ஏற்படுத்தியவர். சோல்ட்ஸ்னீட்ஸின் எழுதிய குலாக் தீபகற்பம் பல கோடி மக்களின் சித்திரவதையைக் காட்டும். முப்பதாண்டுகள் கொடுங்கோலனாக ஆட்சியில் இருந்த ஒருவன், நீண்ட கொடிய யுத்தத்தையும் சந்தித்து வெற்றிபெற்ற சர்வாதிகாரி — மனிதநேயனல்லாத ஒரு கொடூரன் என்பதற்கு புனைவுகள் தேவையில்லை. அதற்கு சரித்திர ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன.

இந்தக் கவிதை கணவனை இழந்த நடெஸ்டா மண்டெல்ஸ்டம் பார்வையில் புனையப்பட்டிருக்கிறது. கவிஞரை நாடு கடத்தி, சிறையில் தள்ளி, கொல்லப்பட்டதை எண்ணிப் பார்த்து, தற்கால சோவியத் இராணுவ வீரனிடம் நினைவுகூறும்விதமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதற்குத் தொட்டுக்கொள்ள மேகரா நாட்டின் தியோக்னி (Theognis of Megara)யும் ஸ்விட்சர்லாந்து நாட்டின் ராபர்ட் வால்ஸர் (Robert Walser)ம் துணைக்கு அழைத்துக் கொள்ளப்படுகின்றனர். வதை முகாமில் வாடுவது ஒரு பொருட்டேயல்ல. அவர்களின் தியாகம் அலட்சியப்படுத்தப்படுவதும் அவர்களின் குரல் சரித்திரத்தில் ஒலிக்காமல் பார்த்துக்கொள்ளப்படுவதும் எவ்வளவு பெரிய குமுறலை எழுப்பும்?


இந்த மாதிரி பத்து அசைகள் கொண்ட பா பாடல்களாக தன் படைப்பை உருவாக்குவது குறித்து கய் டவன்பொர்ட்டிடம் கேட்டபோது:

விகாரப்படுத்துகருவிகள் என்றோ இடர்ப்பாடுகள் என்றோ அதை நான் சொல்ல மாட்டேன். என்னுடைய ஒவ்வொரு படைப்பின் நடையும் சட்டதிட்டங்களுக்குள் இருக்கின்றன. ஒரு நாவலை எடுத்தால் அத்தியாயங்களாகப் பிரிக்கிறோம். அத்தியாயங்களில் உரையாடல்களை போதிய இடைவெளிகளில் நுழைக்கிறோம். அதில் ஒன்றில் என்னுடைய பத்திகளை சமநீளமாக்கி புனைந்திருக்கிறேன். செய்யுள் பத்தி என்பது இடம். அதன் மேல் என் கட்டமைப்பு நிகழ்கிறது. என்னுடைய ஒவ்வொரு ஆக்கத்திலும் கட்டமைப்பு வேறு வேறாக அமைக்கிறேன். அதில் ஒரு லயம் கிடைக்கிறது. அது காப்பியத்தின் தாளத்தை நிகழ்த்துகிறது. பிரபந்தத்தின் சீர் அமைப்பை இயைபாக்குகிறது.

பத்தமடைப் பாய் பார்த்தால் ஓட்டைகள் இருக்கும். பட்டு மெத்தைகள் எல்லாம் அதனிடம் பிச்சை வாங்க வேண்டும். பாயில் இருக்கும் அந்த இடைவெளிகள்தான் இந்தக் கவிதையை உயர்த்துகின்றன. முறுக்கின் நடுவே ஓட்டையே இல்லாமல் இப்போது மெஷின்கள் பிரதியெடுக்கின்றன. அதைப் போல் இல்லாமல், மணப்பாறை முறுக்கு போல் நட்ட நடுவே ஒரு பெரிய சுழியத்தை வைத்து இந்தக் கவிதையை அதன் மூலச்சுவை கெடாமல் மொழிபெயர்த்திருக்கிறார் நம்பி கிருஷ்ணன்.

வாசியுங்கள்

ஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு

புத்தகத்திற்கான பீடிகை போதும். புத்தகத்தை கொஞ்சம் மேம்போக்காக பார்த்து விடலாம்:

  1. தன்னுடைய அணுகுமுறைக்கு “காரண நியாயம்” என ஜுடேயா பெர்ல் பெயரிட்டு இருக்கிறார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ‘ஏன்’ என்பதையும் ‘எப்படி’ என்பதையும் ஊகிக்கும் திறனை – மனிதர் மட்டுமே அறிவாரா?
  2. காரண ஆய்வின் அடிப்படையில் “செயற்கை நுண்ணறிவு” உடனே பூத்துக் குலுங்காது. அதற்கு இன்னும் பல படிக்கட்டுகளும் தடைகற்களும் உள்ளன. ஆனால், “காரண நியாய”த்தை கணினிக்கு கற்பிப்பதன் மூலம், சற்றே புரட்சி பூக்க செய்யலாம்.
  3. தற்போதைய “எந்திர தற்கற்றல்” முறைகள் எல்லாமே ஒட்டுறவு (Correlation) மற்றும் கருத்துத்தொடர்பு (association) கொண்டே நடக்கிறது. சிந்தனை முறையில் இது எளிமையான பால பாடம். ஆனால், இது மழலைக் காலத்திலேயே தேங்கி நிற்கிறது.
  4. கோழி கூவியவுடன் பொழுது விடிவதை கணினி பார்த்துக் கொண்டே இருக்கிறது. கோழி கூவாவிட்டால் சூரியன் உதிக்க மாட்டார் என முடிவு செய்கிறது. இது ஒட்டுறவு.
  5. அலாஸ்காவில் இருக்கிறோமா? எந்த பருவகாலத்தில் இருக்கிறோம்? தற்போது என்ன நேரம்? என்பதை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும் என்பதை சொல்லிக் கொடுக்காமலே புரிந்து கொள்வது “எந்திர தற்கற்றல்”.
  6. மனிதருக்குப் புரிகிற விஷயத்தை எந்திரங்களால் விளக்க இயலும். ஆனால், அனுமாணிக்க முடியாத விஷயங்களையும், காரண நியாயங்களோடு, சுவாரசியமான தர்க்கத்தோடு விளக்க தற்கால கணினியால் இயலவில்லை. அதுதான் உண்மையான “எந்திர தற்கற்றல்”.
  7. உள்ளே கோபம் புகைந்து கொண்டிருந்தாலும், முகத்தில் புன்சிரிப்போடு மனிதரால் அளவளாவ இயலும். எள்ளலுக்கும் நகைச்சுவைக்கும் உள்ள வித்தியாசத்தை, எக்காலமும் அறிந்துகொள்ள கணினியால் இயலாமல் போகலாம். சொல்லப் போனால் அதற்கான அவசியமும் கிடையாது. ஆனால், ஒருவரை நம்பி முதலீடு செய்யலாமா என புரிந்து கொள்ள கணினியால் முடியலாம். அந்த முடிவிற்கு வந்த காரணத்தையும் விளக்கலாம். இது “காரண நியாயம்”.
  8. கணினிக்கு சதுரங்க ஆட்டத்தைப் புரிந்து கொள்வது எளிது. ஆனந்த், காஸ்பரோவ் போன்ற #1 ஆட்டக்காரர்களை வீழ்த்துவது கூட முடியும். ஆனால், சாலையில் மனிதர் எப்படி நடந்து கொள்வார், எவ்வாறு வண்டி ஓட்டுவார் என புரிந்து கொள்ள இயலுமா? கணினியால் நம்மை விட லாவகமாக, வேகமாக வண்டியோட்ட முடியும். ஆனால், நம்மைப் போல், நம்முடன் வண்டியோட்ட இயலுமா?
  9. “செயற்கை நுண்ணறி”வினால் இதையெல்லாம் தானாகவே கற்றுக் கொள்ள வைக்க “ஆதார காரணம்” உதவுகிறது. மனிதரை எது தூண்டி எவ்வாறு இயங்க வைக்கிறது? நம்முடைய பயமாக இருக்கலாம்; இறப்பின் அச்சமாக இருக்கலாம்; விளையாட்டாக இருக்கலாம்; சவாலாக இருக்கலாம்; கிண்டலாகக் கூட இருக்கலாம். அந்த நியாயங்களை எல்லாம் கணினிக்கு புரிய வைக்க வேண்டுமா?
  10. கணினியால் முகத்தைப் பார்த்தவுடன் ஆளை கணிக்க இயலாமல் போகலாம். ஆனால், மனிதரைப் போல் காரணம் இல்லாமல் ஒரு விஷயத்தை நம்பாமல் இருக்கும். கணினியால் நோயாளியைப் பார்த்தவுடன் வியாதியை கண்டுபிடிக்க இயலாமல் போகலாம். ஆனால், மனித மருத்துவரைப் போல் இல்லாமல் பல்லாயிரக்கணக்கான விஷயங்களையும் கருத்தில் கொண்டு தன் முடிவிற்கான நியாயத்தை நிறுவ முடியும்.

வாலியின் உதவியைக் கோரி இருந்தால் ராவணனை மிக மிக எளிதாக ராமன் வென்றிருப்பான். எனினும் சுக்ரீவனின் உதவியை ஏன் ராமன் நாடினான்? இவ்வாறு யோசிப்பது எதிர்மெய் (அ) மறு உண்மை. ஒரு பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கு பதில், இன்னொரு பாதையை எப்படி நாடிச் செல்கிறோம், என்று யோசிப்பது எதிர்மெய் (அ) மறு உண்மை. இப்படி முடிவெடுப்பதற்கு மாற்றாக, அந்த மற்றொரு முடிவை எடுத்தால் என்ன ஆகும் என்று பின் விளைவுகளை புரிந்து கொள்வது எதிர்மெய் (அ) மறு உண்மை. பதின்ம் வயதில் பார்த்த அந்தத் தோழமையிடம் உங்கள் காதலைச் சொல்லி மணம் முடித்திருந்தால் உங்கள் வாழ்க்கை இன்று எப்படி இருக்கும் என்று எண்ணி பார்ப்பது எதிர்மெய் (அ) மறு உண்மை. 9 முதல் 5 வரை உழைக்காமல், சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தோற்றுவித்து, உங்களின் லட்சியப் பாதையில் தொடர்ந்தால் நாளைய மகிழ்ச்சி எவ்வாறு நிறைவாக இருக்கும் என்று கணக்கிடுவது எதிர்மெய் (அ) மறு உண்மை. மூலக்காரணங்களின் அடிப்படையில், அறிவியல் பூர்வமாக இதை எவ்வாறு நியாயப்படுத்துவது என்பதை ஜுடெயா பெர்ல் புத்தகத்தில் பத்து அத்தியாயங்களில் விளக்குகிறார்.

குழந்தைகளுக்கு எதை வேண்டுமானாலும் புரிய வைத்து விடலாம். ஆனால், கணினிகள் அவ்வாறு எளிதில் நம் சூட்சுமங்களைப் புரிந்து கொள்ளாது. எந்த விஷயத்தையும் குழந்தைக்குக் கூட புரிகிற மாதிரி விளக்க வேண்டியது திறன்மிக்க, பண்பட்ட மனிதர்களின் மாண்பு. நெருப்பென்றால் சிவப்பு வண்ணத்தில் இருக்கும். அதைத் தொட்டால் சுடும் என்பதை விளக்கலாம். தொலைக்காட்சித் திரையில் தீ தகதகவென்று எர்ந்தால் தொட்டுப் பார்த்தாலும் ஒன்றும் ஆகாது என்பதையும் புரிய வைக்கலாம். இந்த வித்தியாசத்தை, கணினிக்கு தானாகவே விளங்கிக் கொள்ளுமாறு எப்படி புரிய வைப்பது? எந்தக் காரணத்தால் கையைச் சுட்டுக் கொள்வது மனிதருக்குத் தீங்கு விளைவிக்கும் செயலாக உள்ளது என்பதை பல வகையிலும் ஆராய்ந்து, இறுதி முடிவிற்கான அடிப்படை நியாயத்தை விளக்கச் சொல்லலாம்?

அறிந்தததைக் கொண்டு அறியாததைப் பற்றிக் கருத்துக் கொள்வதை கீழே இருக்கும் படம் மூலம் விளக்கலாம்:

இந்தப் பொறி கொண்டு ஊகிப்பதற்கு மூன்று விஷயங்களை உள்ளே தள்ள வேண்டும்.
1. ஊகம், கற்பிதம்
2. கேள்வி
3. தகவல், தரவு

அவற்றைக் கொண்டு இந்தப் பொறி மூன்று விஷயங்களை வெளியே துப்பும்:
1. கொடுத்த உள்ளீடுகளைக் கொண்டு விடையை ஊகிக்க இயலுமா? இயலாதா?
2. கேட்ட கேள்விக்கான விடையை மதிப்பிட இயலும் என்றால், எந்தக் கேள்விக்கான விடையை எவ்வாறு கணிப்பது?
3. உத்தேசமாக எவ்வளவு துல்லியமாக விடையை அறுதியிட்டுச் சொல்ல இயலும்?

ஒரு எளிய உதாரணம் கொண்டு இதைப் பார்க்கலாம். தமிழகத்தில் உள்ள அனைத்து பெண்களின் சராசரி உயரம் எவ்வளவு என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும்?
அ) தமிழ் நாட்டில் இருக்கும் அனைத்துப் பெண்களையும் கண்டுபிடிக்க வேண்டும்.
ஆ) ஒவ்வொருவரின் உயரத்தையும் அளவெடுக்க வேண்டும்.
இ) மொத்த உயரத்தை, மொத்த பேர்களைக் கொண்டு வகுத்தால், சராசரியை கணக்கெடுக்கலாம்.

இதெல்லாம் நடக்கிற காரியமா? நிஜத்தில் என்ன செய்வோம்:
அ) மாவட்டத்திற்கு – தலா பத்து பேரை பிடிப்போம்.
ஆ) இவர்கள் எல்லோரின் உயரத்தையும் அளப்போம்.
இ) இந்த சராசரிக்கும், மொத்த தமிழ்ப் பெண்களின் உயர சராசரிக்கும் பெரும்பாலும் வித்தியாசம் இருக்காது என்று சொல்வோம்.

இந்த உதாரணத்தில்
1. ஊகம், கற்பிதம் = தமிழ்நாட்டில் தமிழ்ப் பெண்கள் மட்டுமே வசிப்பார்கள்.
2. கேள்வி = மகளிருக்கான நுழைவாயில் வைக்கும் போது, அவர்கள் தலை இடிக்காமல் உள்ளே வர எவ்வளவு உயரம் வைக்க வேண்டும்?
3. தகவல், தரவு = மாவட்டவாரியாக பத்து பெண்களின் உயரம்.

புத்தகத்தின் பத்து அத்தியாயங்களைப் பற்றியும் பார்த்து விடலாம்:

1. முதல் அத்தியாயம் எளிமையாக வாசிக்க முடிகிறது. எந்த விஷயத்தையும் மூன்றாகப் பிரிக்கிறது:
– கவனிப்பு
– தடை தலையீடுகள்
– எதிர்மெய் (அ) மறு உண்மை

இந்த மூன்றையும் “தூண்டு காரணம்” என்னும் ஏணியில் ஏற்றிப் பார்க்கிறது. அதன் பின் கீழ்க்கண்டவாறு காரணப்படம் போட்டு அதை விளக்கச் சொல்கிறது. வெறும் தகவல்களைக் கொண்டு கணினியின் தரவு அறிவியலர் வரும் முடிவுக்கு பதில் இவ்வாறான தருக்கமுறைக் கூற்றுகளும், கட்டுமானச் சமன்பாடுகளும் எவ்வாறு நம்பகமான முடிவை அறுதியிட்டுச் சொல்கின்றன என்பதை அறிமுகம் செய்கிறது.

2. இரண்டாம் அத்தியாயத்தில் புள்ளியியல் துறையின் குறைபாடுகளை ஜுடேயா பெர்ல் விளக்குகிறார். தன்னுடைய கண்ணை தானே குத்திக் கொள்வது போல் காரணத்தை ஆதாரபூர்வமாக விளக்குகிறேன் என்று கிளம்பிய புள்ளிவிபரவியலாளர்கள், பார்வையற்றவர்களாகிறார்கள். கணிதம் பயன்படும் எல்லா துறைகளிலும் தங்கள் புள்ளிவிபர அணுகுமுறையால் சேதம் உண்டாக்குகிறார்கள். 1920களில் இவர்களுக்கு மாற்றாக செவால் ரைட் தோன்றுகிறார். முதல்முறையாக காரணப்படம் கொண்டு தரவுகளை மட்டும் கண்மூடித்தனமாக நம்புவதை மாற்றுகிறார்.

3. மூன்றாம் அத்தியாயத்தில் தனக்கு ஏன் தூண்டு காரணம் மீது நம்பிக்கை பிறந்தது என்பதை டானா மெக்கின்சி உதவியுடன் ஜுடேயா பெர்ல் விளக்குகிறார். செயற்கை நுண்ணறிவிலும் பேயீசிய தொடர் முனைகளிலும் ஆர்வம் கொண்டிருக்கும் எவரும், எவ்வாறு தூண்டு காரணத்திற்கு வந்தடைய வேண்டும் என்பதைப் பகிர்கிறார்கள். ”ஜனாதிபதிகளும் பிரதம மந்திரிகளும் நாட்டின் நன்மைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்” என்னும் வாசகத்தை வாக்காளர் எவ்வாறு ஐயத்தோடு பார்ப்பாரோ, அதே ஐயத்தை கணினிக்கும் சொல்லிக் கொடுப்பதுதான் செயற்கை நுண்ணறிவிற்கான சூட்சுமம் என்று துவக்கத்தில் நம்புகிறார் பெர்ல். அதை பலமாக முன்னிறுத்தி பிரசங்கித்து, ஆராய்ச்சிகளை முன்னெடுக்கிறார். ஆனால், 1980களில் இந்த நம்பிக்கை தவிடுபொடியாகிறது. அந்தப் பயணத்தை இந்த அத்தியாயம் விவரிக்கிறது. பழைய கொள்கைகளைக் கைவிட்டு விடுகிறார். பேயிஸிய கோட்பாடுகளுக்கான அறிமுகமாகவும் இந்த அத்தியாயம் விளங்குகிறது.

4. புள்ளியியலுக்கும் “காரணத் தெரிவு” பாதைக்கும் உள்ள தொடர்பை நான்காம அத்தியாயம் விளக்குகிறது. சமவாய்ப்புள்ள கட்டுப்படுத்தப்பட்ட சோதனை – புள்ளிவிபரத்தில் முக்கியமானது. ஒரே வீட்டில் இருக்கும் பத்து பேரை வைத்து ஒரு மாவட்டத்தின் சராசரி உயரத்தை கணக்கிட முடியாது. சம்பந்தமில்லாத விஷயங்களை புள்ளிவிபரக் கணக்கில் இருந்து நீக்க வேண்டும். உங்களுக்கு உடல் கொழுப்பு உண்டா என்பதற்கும் செல்பேசியே கதியாக இருப்பதற்கும் சம்பந்தம் இருக்கலாம். ஆனால், அதை விட உங்களின் பெற்றோருக்கு இதய நோய் இருந்ததா என்பதும், உங்களின் உணவு உட்கொள்ளும் முறை எவ்வாறு என்பதும், உடற்பயிற்சியின் பங்கும் பெரிது. அதை எவ்வாறு காட்சிபூர்வமாக விவரிப்பது, ஒவ்வொரு காரணப்பாதைக்கும் எவ்வாறு நம்பிக்கை எண்ணை கண்டுபிடிப்பது என்பதை விளக்குகிறார்கள்.

5. புகை பிடிப்பதால் நுரையீரலில் புற்றுநோய் வருமா? ஒரு காலத்தில் இந்தக் கேள்விக்கு உறுதியான பதிலைச் சொல்ல முடியாமல் புள்ளியியலாளர்கள் திண்டாடினார்கள். “சமவாய்ப்புள்ள கட்டுப்படுத்தப்பட்ட சோதனை”யை பயன்படுத்தினார்கள்; அதன் புள்ளிவிபரங்கள் குழப்பியது. கோடிக்கணக்கானோர் புகை பிடித்தலால் இறந்து போனார்கள். அதை முளையிலேயே கிள்ள “தூண்டு காரணம்” உதவியிருக்கும். சமீப காலம் வரை அறிவியலாளர்களால், மூலக்காரணத்திற்கான விடைகளைத் தேடி கண்டுபிடிப்பதற்கான தேற்றங்கள் இல்லை.

6. சென்ற அத்தியாயத்தின் அறச்சீற்றத்திற்குப் பிறகு, இந்த அத்தியாயம் சற்றே இளைப்பாறலாக அமைகிறது. ஒன்றுக்கொன்று முரண்படும் கருத்துகள் போலத் தோன்றினாலும் முரண்படாத உண்மைகளை இந்த அத்தியாயம் அறிமுகம் செய்கிறது. மாண்டி ஹில் முரண்பாடு, சிம்ஸனின் முரண்பாடு, பெர்க்சன் முரண்பாடு என பல முரண்தோற்ற மெய்களை உதாரணம் கொண்டு விளக்குகிறார்கள். விருந்தில் நண்பர்களுடன் பேசும்போது இந்த முரண்போலிகளை வினாக்களாக முன்வைக்கலாம். அப்போது இரு பக்கமாக பிரிந்து கொண்டு வாதிட்டு பார்க்கலாம். அதையும் மீறி இதை தூண்டு காரண நோக்கில் ஆராய அழைக்கிறார்கள்.

7. “தூண்டு காரணம்” என்னும் ஏணியின் படிநிலைகளை இந்த அத்தியாயம் ஆழமாக அலசுகிறது. இடையூறு என்னும் தடைகற்களை எவ்வாறு கணக்கில் கொள்வது என்பதை புள்ளிவிவரத்தின் அடிப்படையில் விளக்குகிறார்கள். ஒரு கேள்விக்கு எளிமையான பதிலை நம்பகபூர்வமாகத் தர வேண்டும். ஒன்று “ஆமாம்”; அல்லது “இல்லை”. அதற்கு அஸ்திவாரமாக
– பின் வாயில் ஒழுங்குசெய்தல்
– முன் வாயில் ஒழுங்குசெய்தல்
– கருவிசார் மாறிகள்
போன்ற கணிதக் கோட்பாடுகளை எப்படி பயன்படுதலாம் என்பதை அறியலாம்.

8. வரலாறுதோறும் எதிர்மெய் (அ) மறு உண்மை எவ்வாறு கையாளப்பட்டிருக்கிறது என்பதை இந்த அத்தியாயத்தில் பார்க்கிறார்கள். 1748ல் டேவிட் ஹ்யூம் கொண்டு துவங்கி, 2001ல் மறைந்த டேவிட் லூயிஸ் வரை எவ்வாறு தூண்டு காரணத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து விளக்கினார்கள் என்பதை அலசுகிறார்கள். வெறுமனே வாதாடாமல், சமன்பாடுகள் மூலம் எப்படி முடிவுக்கு வர வேண்டும் என்பதையும் உதாரணங்கள் கொண்டு கணக்கு போடுகிறார்கள். விபத்தில் காயம் பட்டதற்கு குற்றஞ்சாட்டப்பட்டவரின் பங்கு என்ன என்பது காப்பீடுகளில் உதவும். உலக வெம்மைக்கு மனிதர்களின் பங்கு எவ்வளவு என்பதையும் இவர்கள் முறையில் கணக்கிட்டு பார்க்கலாம்.

9. ஒவ்வொரு விஷயத்திலும் இடைத்தரகர் இருக்கிறார்கள். மருந்து உட்கொண்டால் ரத்த அழுத்தம் குறையும். ரத்த அழுத்தம் குறைந்தால் ஆயுள் அதிகரிக்கும். மருந்து உட்கொண்டால் ஆயுள் அதிகரிக்கும் என்று சொல்லலாமா? அப்படியானால், சர்க்கரை வியாதிக்கும், தூக்கம் வருவதற்கும் மாத்திரை உட்கொண்டால், எப்படி கணக்கிடுவோம்? ஒவ்வொரு மருந்தும், ஆயுளை அதிகரிக்கிறதா? இதை அல்ஜீப்ரா கொண்டு விளக்குகிறார்கள். பத்து மாத்திரைகளை ஒரே மாத்திரையாக மாற்றினால் உட்கொள்பவருக்கும் மகிழ்ச்சி; பின் விளைவுகளும் குறைச்சல்; மருத்துவமனை செலவுகள் குறைவதால் காப்புறுதி நிறுவனங்களுக்கும் லாபம். இந்த மாதிரி அனைத்து வாழ்வியல் நிகழ்ச்சிகளையும் மூலக்காரண அலசல் செய்து, ஒவ்வொன்றுக்கும் மத்தியஸ்தர் எண் கொடுத்து, இறுதி விளைவை நிர்ணயிக்கும் வித்தையைக் கற்றுக் கொடுக்கிறார்கள்.

10. இது வரை புள்ளியியல்; கணிதம்; தேற்றம்; சூத்திரங்கள்; கோட்பாடுகள் – சம கால சமூகச் சிக்கல்களை எவ்வாறு கணக்கிட்டு வருங்காலத்தைத் திட்டமிடுவது என சொன்னார்கள். இந்த அத்தியாயத்தில் அதை எல்லாம் எவ்வாறு கணினிக்கு சொல்லித் தருவது எனப் பார்க்கிறார்கள். “செயற்கை நுண்ணறிவு” கொண்டு மனிதரைப் போல் கணினியையும் எப்படி புத்திசாலி ஆக்கலாம்?

– மனிதருக்கு கொள்கைப் பிடிப்பு இருக்கும். கணினிக்கும் அதை எவ்வாறு புகட்டலாம்?
– நாலைந்து விதமாக சோதனை செய்துவிட்டு நாம் முடிவுக்கு வருகிறோம். அந்தச் சோதனைகளை எவ்வாறு வடிவமைக்கிறோம் என்பதை கணினிக்கு எப்படி புரிய வைக்கலாம்?
– நமக்கு வருத்தங்களும் சோகங்களும் இருக்கும். ஒரு தடவை தவறு செய்தால், அதேத் தவற்றை மீண்டும் செய்யாமல் இருப்போம். அந்த மாதிரி அனுபவ அறிவை எவ்வாறு கணி புத்தியில் ஏற்றுவது?
– பொறுப்பு இல்லாமல் பதவி இல்லை. அந்தப் பொறுப்பை ஒழுங்காக நிறைவேற்றத் தவறினால் மரியாதை இழக்கிறோம். தலைமையின் கையில் சாவி கொடுப்பது போல் கணினியின் பொறுப்பில் நம்பகமாக ஒப்படைக்கலாமா? அதற்கு சிரத்தையையும் அக்கறையையும் எவ்வாறு உணர வைக்கலாம்?

உங்கள் தரவுகளை விட நீங்கள் புத்திசாலிகள். தரவுகளுக்கு ஏன் இப்படி நிகழ்ந்தது என்று தெரியாது. இப்படி செய்வதற்கு பதில், அப்படி செய்தால் என்ன நடந்திருக்கும் – என்று வெற்றுத் தகவல்களால் ஊகிக்க முடியாது. ஆனால், எல்லாவற்றையும் “மனசு சொல்கிறது” என்று அணுகவும் கூடாது. அறிவியல் பூர்வமாக, புத்தி கொண்ட பார்வையுடன் முடிவுகளை எப்படி எடுப்பது? நாம் எடுக்கும் முடிவுகளை எவ்வாறு விளக்கி, மற்றவர்களையும் நம் அணியில் கை கோர்க்க வைப்பது?

அதற்கு இந்த நூல் உதவும்.

மேலும்:

கட்டுரை தலைப்பிற்கான பொருள்: கடிய பாதையில் எவரிடத்தில் சென்றாலும் பெற இயலாத அறிவினை அடைவது (கம்ப ராமாயணம்)