முதலில் கதை.
பாஸ்டனில் இன்று அடித்த லேசான பனி போன்ற குளிர் இரவு. ஆனால், கதை நடப்பது பழைய தில்லி. இராஜாதி ராசா அக்பர் அலுங்காமல் குலுங்காமல் நடை பயிலுகிறார். வானத்தில் நிலா பளிச்சென்று பாடலுக்கு மேக்கப் போட்ட அசின் போல் சிரிக்கிறது. அரண்மனை சிற்றோடையில் அசின் தெரிவதாய் நினைத்து தொட்டுப் பார்க்க சில்லென்று காதலில் ஷாக்கடிக்காமல், கை உறைய வைக்கும் குளுமை.
சமாளித்துக் கொண்டு, ஜொள்ளைத் துடைத்துக் கொண்டு பாதுகாப்புக்கு ‘ஆமாம் அரசே‘ போடும் பொடியர்களிடமும், புத்திசாலியாக தன்னைக் காப்பாற்றும் வகை அறிந்த பீர்பாலிடமும் சவடால் விடுகிறார். ‘இந்தத் தண்ணீரில் பகலவன் உதயமாகும் வரை எவனாவது நிற்க முடியுமா?’
தான் எதற்கும் பொறுப்பேற்று தர்மம்/சங்கடம் போன்றவற்றில் மாட்டிக் கொள்ளாத மந்திரி தண்டோரா போடுகிறார். அரசருக்கும் எவனோ அகப்பட்டு இரா முழுக்க frozen to death ஆனது தனிக்கதை.
ஈழப்போரில் பிரபாகரனும் பீர்பால் போல் ‘கரும்புலியாவது யாரு’ என்று வினவ அப்பாவிகள் வந்து கொண்டேயிருக்கிறார்கள். அக்பர் சாலை போட்டார். அசோகர் மரம் நட்டார் மாதிரி விடுதலைப்புலிகள் ஏதாவது பாடம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்தது புத்தகம்: One Day the Soldiers Came: Voices of Children in War – Charles London
கடைசியாக இரு தலைவர்கள்: சிட்டி க்ரூப்பும் மெர்ரில் லின்ச்சும் கொண்டாடிய சி.யீ.ஓ.க்கள்.
அமெரிக்காவில் கடன் கொடுப்பதில் எல்லோரும் தாராளமாக இருந்த காலம், கடந்த காலம். வீடு வாங்குவதற்காக வரவுக்கு மேலே பத்தணா கேட்கும் பத்திரங்கள் விற்று வந்தார்கள். அப்படி தாராளமாக திறந்து விட்டு, தங்கள் நிறுவனத்தின் வருவாயைப் பெருக்கிக் கொண்டார்கள்.
இந்த இருவர்கள் மட்டுமல்ல. அனைத்து நிதித்துறையும் செய்ததுதான். இருந்தாலும் இருவரும் பணால் ஆகி இருக்கிறார்கள்.
நேரடியாக களத்தில் இறங்கி தானப்பிரபுவாக அள்ளிவிடச் சொன்னது இவர்கள் அல்ல என்றாலும், பொறுப்பு என்றோ, கடமை என்றோ, பலிகடா வேண்டும் என்றோ, பிறருக்கு நம்பிக்கையூட்ட இன்னொருவர் தேவை என்றோ விலகிக் கொண்டிருக்கிறார்கள்.
தியாகம் என்று சொல்ல முடியாதபடி பல மில்லியன் வருவாயை வழித்துக் கொண்டு சென்றாலும், தவறான பாதையில் அழைத்து சென்றதற்காக நிறுவனத்தின் தலைவர்கள் பதவியிழந்தார்கள்.
பிராயசித்தமாக, பிறிதொரு பாதையில் செல்வதற்கு புது முகம் தேவை என்பதற்காக, மாற்றுவழியை உறுதியுடன் நம்புபவர் வேண்டும் என்பதற்காக கழற்றி விடப்பட்டார்கள்.
பங்குச்சந்தை ப்ரெஷருக்கு மட்டுமல்ல… உலக அரங்கிலும் நம்பிக்கையூட்ட பிரபாகரன் விலகினால்தான் ஈழத்துக்கு விடுதலை.
பின்னணி/தொடர்புள்ள பதிவுகள், செய்திகள்/தொகுப்பு: Snap Judgement: LTTE











