Tag Archives: Daughter

ஔவையார் வேஷம்: நியு இங்கிலாந்து தமிழ் சங்கம்

அங்கும் இங்கும் – ட்விட்டரில் கதைத்த விவரம்

  1. மகளுடன் (மனைவியுடனும்) இரண்டு படங்கள் மீண்டும் பார்த்தேன்.’திருடா திருடா’ இன்னும் முடிக்கவில்லை. எஸ்.பி.பி. சீக்கிரமே நடிக்க வந்திருக்க வேண்டும்.
  2. இருவர்: ‘இந்தப் படம் இம்புட்டு நல்லா இருக்குமா?’ என்று நான் குசேலன் பார்த்தபிறகு ஆச்சரியப்பட்ட மாதிரி மனைவி அசந்து போனாள். நிறுத்தி நிதானமாக எம்ஜியாரின் ‘நான் ஏன் பிறந்தேன்’ ஆரம்பித்து ஜெயலலிதாவின் சுய வரலாறு எழுதிய கதை வரை பின்னணியோடு படம் பார்த்தாள். நிறையக் கேள்வி கேட்டாள்; நிறைய அளக்க முடிந்தது. படம் பார்த்து முடிக்க ஒரு வாரம் ஆனது:
    • எம் ஆர் ராதா சுட்டாரா? ஏன்?
    • வி என் ஜானகி முதல் மனைவி இல்லையா?
    • மு க.வுக்கு எத்தனை மனைவி? முக முத்து படத்தில் உண்டா?
    • கனிமொழிக்கு சொல்லிக் கொடுக்கும் பாடல் எதில் வருகிறது? என்ன அர்த்தம்?
    • ப்ரூக்ளின் ஆஸ்பத்திரி சென்றதெல்லாம் வரவில்லையே
    • ரிக்ஷாக்காரனா? கட்சி சின்னம் வருமா?
    • அண்ணா யார்? பெரியார் எங்கே?
    • ஆர் எம் வீரப்பனா அல்லது அமைச்சர்களுமா?
  3. அஞ்சலி: மணி ரத்னம் என்றாலே போர் என்ற மகளை நிமிர்ந்து உட்கார வைத்தது. Of course, அழுது விட்டோம்.
  4. மகளுடன் அமெரிக்க அரசியல்: பக்கத்து பென்ச் தோழி மெகயின் ஆதரவாளராம். இரண்டு காரணங்கள் – டினா ஃபே; அப்புறம் ஜான் வந்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அதிகரிப்பதாக அவளிடம் சொல்லி இருக்கிறாராம்.
  5. உருளைக் கறி: நாலு கிழங்கை எடுத்தோமா; குக்கரில் வேக வைத்தோமா; தோசைக் கல்லில் ரென்டு பெரட்டு பெரட்டினோமா என்பது என் பாணி. மனைவியோ மைரோவேவ் பயன்படுத்தி நாலு நாழி வேக வைக்கிறார். அதன் பிறகு தோலை உறிக்கிறார் (ஐய்யோ! அய்யய்யோ!!! சத்தெல்லாம் போவுதே); அதற்குப் பிரகு நான் ஸ்டிக் தவ்வா அழுமளவு ரோஸ்ட் நடக்கிறது. பசி வயத்தைப் பிடுங்க எந்த ஷேப்பில் காய் இருந்தாலும் கபளீகரம் ஆகிறது.
  6. ஸீக்வல்: எனக்குத் தெரியாத டேட்டாபேஸா என்று மிதப்போடு வகுப்புக்கு சென்றால் என்னென்னவோ சொல்லிக் கொடுத்தார்கள். கற்றது மைக்ரோசாஃப்ட் அளவு; கல்லாதது ஓபன் சோர்ஸ் அளவு!
  7. கட்டாந்தரையில் அண்ணாமலை: ஆர்வக்கோளாறில் டென்ட் அடித்து தூங்குவது போல் மெத்தையை வீட்டு கீழே படுத்து பார்த்ததில் முதுகு பேந்துவிட்டது. அடுத்த நாள் படுக்கையில் புரண்டு கூட உறங்க முடியாத அவஸ்தை. வாழ்ந்து கெட்ட குடும்பம் என்றால் இதான் அர்த்தமா?
  8. கல்யாணம், காதல்: முஸ்லீம்களுக்கு நடுவில் நிலவும் நிச்சயிக்கப்பட்ட திருமணம் குறித்து என்.பி.ஆர் புலம்பல் கலந்த பழைய பல்லவியை ஒப்பித்தது. புதிதாக எதுவும் இல்லாவிட்டாலும், போக்குவரத்தில் சிக்கிய காலைப்பொழுதில் கேட்டு வைத்தேன். ‘உங்களிருவருக்கும் காதல் உண்டா?’ என்று கொக்கி போட்டு தொக்கி நிற்கவிட்டார்கள். இந்தக் காதல் என்றால் என்ன?
    • வெள்ளி இரவு வெளியில் சாப்பிடுவது
    • அவ்வப்போது ‘ஐ லவ் யூ’ சொல்லிக் கொள்வது
    • அவ்வப்போது இன்னொருவரின் வேலையை எடுத்துக் கொண்டு ஆச்சரிய சந்தோஷம் அளிப்பது
    • எதிர்பாராத நேரத்தில் முத்தமோ சில்மிஷமோ நடத்துவது
    • கண்ணீரைத் துடைத்து விடுவது
    • பெற்றோரை நினைத்து ஏங்க வைக்காத சூழலை உருவாக்குவது
    • பொண்ணுக்கும் பூ பிடிக்கும் என்று மறக்காதது
    • எதிர்பார்ப்புகளில் சிக்கிக் கொள்ளாதது
  9. தமிழ் சங்கமும் ஹாலோவீனும்: பாஸ்டன் தமிழர்கள் மாறுவேடப் போட்டி நடத்துகிறார்கள். அமெரிக்காவில் சூனியக்கார கிழவியும் இளவரசிகளும் (சாரா பேலினும்தான்) ‘ட்ரிக் ஆர் ட்ரீட்’ சென்றால் இவர்கள் ஔவையார், கண்ணகி, வள்ளுவர், பாரதி, கட்டபொம்மன் கேட்கிறார்கள். நான் ‘பெரியார்’ ஆக போகட்டும். கவனம் திருப்புவாள் என்று நினைத்தேன். மனைவியோ ‘சிலப்பதிகாரம்’ என்று வசனத்திற்காக தேட என்னுடைய பதிவே கூகிளில் விடையாக வந்தேற ‘கொடும… கொடும என்று கோவிலுக்குப் போனா.. அங்கே’ என்று சொலவடைத்தாள்.
  10. ஒட்டுக்கேட்டல்: அவனுக்கு நாற்பத்தைந்து வயதிருக்கலாம். நான் முதன் முதலாக சென்ற உணவகத்தில் சரியான க்யூவில் நான் நின்றிருக்க, அவனோ தவறான க்யூவில் நின்றிருந்தான். கூட வந்திருந்தவள் (ஐம்பது இருக்கும்) அவனை என் பின்னே நிற்க சொன்னாள். அவர்களுடன் முப்பது பிராயத்தை பத்தாண்டுகள் முன்பு கடந்தவளும் வந்திருந்ததை என் அருகில் உள்ள இருக்கைகளில் அவர்கள் அமரும்போதுதான் கவனித்தேன்.

அவள்: ‘உன்னோட டேட்டிங் கதை என்னவாச்சு?’

அவன்: ‘ரெண்டு வாரம் முன்னாடி அந்த ரெஸ்டாரென்ட் போயிருந்தோம் இல்லியா? ரொம்ப யதார்த்தமா பேசிண்டிருந்தோம். ரொம்ப நல்லாப் போச்சு. என் வீடு வரைக்கும் வந்தா. ஞாயித்துக்கெழம கூப்பிட்டப்ப ‘ஏர்போர்ட்ல இருக்கேன்‘னு கட் பண்ணிட்டா. அந்த திங்கட்கிழம என்ன அவக் கூப்பிட்டிருந்தா! அவளே கூப்பிட்டா! நான் போன் செய்யாம அவளே பேசினது எனக்கு டென்சன குறைச்சது. சனிக்கிழம சந்திக்கலாம்னு சொன்னா. போன வாரம் நானும் ரெடியா இருந்தேன். ரெண்டரை ஆச்சு; மூன்றரை ஆச்சு; போன் பண்ணினா ரிங் போவுது; நாலரை ஆச்சு. எனக்கு அப்பவே தெரிந்து போச்சு. அஞ்சு ஆச்சு. நான் என் போன ஆஃப் செஞ்சுட்டேன். ஆறு ஆச்சு. இன்னும் அவ போன் ரிங் போயிண்டே இருக்கு. வாய்ஸ் மெஸேஜ் போவுது. ஆஃப் பண்ணல… எடுக்க மாட்டேங்கிறா! திண்ணக்கம். எல்லாம் அந்த ஏர்போர்ட் விவகாரமாத்தான் இருக்கும். டெக்ஸ்ட் மெஸேஜ் செஞ்சேன். அதுக்கும் பதில் இல்ல. அடுத்த நாள் கூப்பிட்டா! ஏதோ சால்ஜாப்பு சொல்றா. எனக்குத் தெரியும்! அவ என்ன ஏமாத்தறா! கடுப்பா பேசி கட் பண்ணிட்டேன். டெக்ஸ்ட் செஞ்சா. மரியாதையா இருக்காதுன்னு நானும் பதில் போட்டேன். திங்கள், செவ்வாய், புதன்… டெக்ஸ்ட்டா செய்யறோம். எனக்குப் பொறுக்கல. போன் செஞ்சேன். அவ எடுக்கல. ஆனா, டெக்ஸ்ட்டுக்கு மட்டும் உடனுக்குடன் பதில்!’

இன்னொருவள்: ‘அவ டீச்சர்னு சொன்னியே? க்ளாஸ்ல இருந்திருப்பாளா இருக்கும்?!’

அவன்: ‘அதெப்படி? க்ளாஸில் இருந்தா — டெக்ஸ்ட் ஒண்டி செய்ய முடியுமா? நேத்திக்குக் கூப்பிட்டா. கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டேன். சரிப்பட மாட்டேன்னு. அவ இந்த சனிக்கிழம கூப்பிடுவான்னு நெனக்கிறேன். அந்த ஃப்ளைட் பார்ட்டி இந்த வீகெண்ட் போய் சேர்ந்துரும். அதற்கப்புறம் என்ன சாப்பிட அழைப்பான்னு எனக்குத் தோணுது’

நான் சாப்பிட்டு முடித்துவிட்டதால் நடையைக் கட்டிவிட்டேன். அவர் தொடர்ந்து கொண்டிருந்தார்.

கடவுள் அமைத்து வைத்த மேடையோ, கல்யாண மாலை கொண்டாடுமோ, மனைவி அமைவதெல்லாமோ முணு முணுக்காமல் – போகிற வழிக்கு ஸீக்வல் பாராயணித்துக் கொண்டேன்.

Dasavatharam – Eight Year old’s Take

XKCD - Butterfly EffectHi Daddy,

I saw Dasavatharam. It was good but for the fights, monkey scene, villian dying and the tsunami, I closed my eyes. I liked all the different Kamal roles. I had a doubt if the japanese guy was a Kamal. I did’nt really like it because I closed my eyes most of the times. Now, I know what a tsunami is.

You were right. 10A did go fast. Mostly there was only the normal Kamal named Govindaraj. I liked the first song in the movie. I know the first line in the first song. 10A is not made for kids!!!!!!!!!!!!!!!

கார்ட்டூன்: xkcd – A webcomic of romance, sarcasm, math, and language – By Randall Munroe

சுயசரிதை அல்ல

சன் டிவியின் திருவிளையாடலை விட இராமாயணம் சிறுவர்களைக் கவரும் விதமாக இருக்கிறது. மாதுரி தீட்சிட் & சல்மான் கான் மணம் செய்யும் ‘ஹம் ஆப் கே ஹை கௌன்’ போல் ஆற அமர கல்யாணத்தை சொல்லாததால் இருக்கலாம். தினமும் திருவிளையாடல் வந்து அலுப்பூட்டுவதாலும் இருக்கலாம்.

‘இராமருக்கு அப்புறம் சீதாவுடைய மகள்தான் அரசேறுவாள் என்பதாலா?’

‘அடுத்து என்ன நடக்கும்’ என்று பின் கதை சுருக்கமாக தங்கிலீஷில் இராமாயணத்தை விவரித்த போதுதான் மகளிடமிருந்து அந்தக் கேள்வி வந்தது. பரதனுக்கு முடிசூட்டுமாறு ஏன் கைகேயி உசுப்பேற்றப்பட்டாள் என்பதை பரம்பரை வாரிசுகளை கொண்டு விளக்கும்போது கேள்வி எழுப்பினாள். லவ குசா எல்லாம் தொடாமல், மையமாய் தலையை ஆட்டி வைத்தேன்.

Adam at Home - cartoons & Comics

நன்றி: Adam@Home

மனைவியிடம் எத்தனையோ முறை சொல்லியாகி விட்டது. ஆண்கள் முகத்தைப் பார்ப்பதில்லை; முடியையும் பார்ப்பதில்லை என்று. அரக்கர்களின் உயிர்கள் எங்கோ ஏழு கடல் தாண்டி இருக்கும் புறாவின் கண்ணில் இருப்பதாக அம்புலிமாமா கதை சொல்லும். உண்மைதான். புருவத்தை நெறிமுறை செய்தபிறகோ, புதிய காதணியைக் கண்டு கொள்வதிலோ, சமையலில் வித்தியாசம் காட்டியதையோ கண்டுகொள்வதில்தான் தாம்பத்தியத்தின் நாடி இருக்கிறது.

மேற்கண்ட கார்ட்டூன் போல் துப்புகளை சேமித்து ‘கணவன்மாருக்கான டம்மீஸ்’ புத்தகம் தொகுத்தால் ஐ.பி.எல்., என்.பி.ஏ., ரசிகர்கள் வாழ்த்துவார்கள்.

தன்னைச் சுற்றி விரிந்து அலையடிக்கும் வாழ்க்கையிலிருந்து சில துளிகளை மட்டுமே அள்ள முடியக்கூடியவன் மனிதன். ஆகவே முடிவில்லாத மர்மங்களின் நடுவே அவன் வாழ்கிறான். அவனுக்கு கிடைக்கும் பிரபஞ்ச அனுபவம் என்பது அந்த மர்மங்களில் இடறி விழுவதேயாகும். அப்போது அவன் ஒரு அதிர்ச்சியையும் கணநேர மனவிரிவையும் அடைகிறான்.அந்தத் தரிசனத்தைக் கொண்டு அவன் ஒரு வாழ்க்கை நோக்கை உருவாக்கிக் கொள்கிறான். அது அவன் வரைக்கும் சரியானது. அந்த எல்லைக்கு அப்பால் அதற்குப் பொருள் ஏதும் இல்லை. மீண்டும் மீண்டும் மனிதன் இயற்கையின் பெருவிதிகளினால் சதுரங்கக் காயாக ஆடப்பட்டு அதைப் புரிந்துகொள்ள தன் தரிசனத்தால் ஓயாது முயன்றபடி வாழ்ந்து மெல்ல மெல்ல மறைகிறான். – ஜெயமோகன்: “சொல்லிச் சொல்லி எஞ்சியவை: யுவன் சந்திரசேகர் கதைகள்

திங்கள் அன்று இரண்டு சோக செய்திகள். முதலில் நண்பரிடமிருந்து சினிமாவில் மட்டுமே பார்க்கும் வியாதி வந்திருப்பதைத் தாங்கி வந்த மின்னஞ்சல். வலைப்பதியவே மனம் ஒப்பவில்லை. ட்விட்டர் மட்டும் செய்து வைத்தேன்.

மாலையில் வீட்டை அவ்வப்போது சுத்தம் செய்பவருக்கு ட்யூபில் வந்திருந்த கட்டி குறித்து அறிந்ததும் வாழ்வின் நிலையாமை எல்லாம் எட்டிப் பார்த்தது.

என்னால் ஆனது… அலுவலில் தரும் ஆயுள் காப்பீட்டுத் தொகையை அதிகரித்தேன்.

அலுவலில் சீனாவில் நடந்த நிலநடுக்கத்துக்கு நிதி சேகரித்தார்கள். எவ்வளவு தானம் கொடுக்கிறோமோ, அதை இரட்டிப்பாக்கினார்கள். 50,000+ பலி. தெரிந்தவருக்கு என்றால் மனம் பதை பதைக்கிறது. எங்கோ ஒருவர் என்பதால் எண்ணிக்கையாக போய்விட்டது.

பர்மா சூறாவளி நிவாரணம் குறித்து அலுவலில் மனிதவளத் துறையினரிடம் விசாரித்தேன். எழுபத்தெட்டாயிரமோ, 150,000-ஓ மறைந்த மியான்மர் வாசிகளுக்கு எதுவும் உண்டியல் குலுக்கவில்லையா என்று. நம் நிறுவனத்தில் இருந்து எவரும் வேலையும் செய்யவில்லை; தொண்டு நிறுவனங்களும் தெரியாது என்று தோள்குலுக்கிவிட்டார்கள்.

நாள்தோறும் தனிமடலிலும், பொதுவிலும் அண்ணா பல்கலை சார்ந்த பொறியியல் கல்லூரிகளின் தரப்பட்டியல் குறித்து விசாரிக்கிறார்கள்.

அமெரிக்காவில் கின்டர்கார்டன் படிப்பதற்கு எது #157வது சிறந்த பள்ளி என்பதற்கு கூட யுஎஸ் நியூஸ் & வோர்ல்ட் ரிப்பொர்ட், நியுஸ்வீக், டைம் என்று பல பத்திரிகைகள் வரிசைப்படுத்துகின்றன. தமிழ்நாட்டில் ‘கனவுக்கன்னி 2007’ நடத்தும் சன் டிவியும் சரி. ‘அழகிரியா/ஸ்டாலினா/உதயநிதியா?’ என்று கருத்துக்கணிப்பு நடத்தும் தினகரனும் சரி… யாரும் பட்டியல் போடுவதில்லை.

  • தேர்ச்சி சதவீதம் என்ன?
  • வளாக வேலைவாய்ப்பு எவ்வாறு உள்ளது?
  • தங்கும் வசதிகள் எப்படி?
  • சோதனைச்சாலைகள், பயிற்சிக்களங்கள் எங்ஙனம் இருக்கிறது?
  • பலரும் அங்கேயே தங்கிப் படிக்கிறார்களா, மாநகரத்தில் இருந்து வந்து போகிறார்களா?
  • எத்தனை ஆண்டுகளாக இயங்குகிறது?
  • படித்தவர்கள் எங்கே இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள்? எவ்வளவு சம்பளம் கிடைக்கிறது?
  • எந்தப் படிப்புக்கு எந்தக் கல்லூரி உகந்தது?
  • அங்கே படிக்கும் மாணவர்களுடன் சந்திப்பு, நிறைகுறை பேட்டிகள்
  • ரேகிங், கடுமையான நடைமுறை, கண்டிப்புகள், வசதிகள் குறித்த அலசல்
  • நிர்வாகமே கடைசி வருட தொழிற்சாலை பயிற்சிக்கு உதவுகிறதா?
  • செலவு எவ்வளவு?

தேர்தல் காலத்தில் குமுதமும் விகடனும் முண்டியடித்து, ஒவ்வொரு ஊராக சென்று வாக்கெடுப்பு நடத்தி, லயோலா கல்லூரி கணிப்பில் இன்னார் வெற்றி; என்டிடிவி நடத்திய வோட்டுப்பதிவில் இந்தக் கூட்டணி முன்னணி என்று பறைசாற்றுவது போல் இந்த மார்க்கெடிங் ரிசர்ச்சும் செய்தால், பலருக்கு பயனாக இருக்கும். டிஆர்பி ரேட்டிங் பிராப்திரஸ்து என்று வாழ்த்துவார்கள்.

இந்தப் பதிவில் கூட தசாவதாரம் என்று முணுமுணுக்காவிட்டால், கூகிள் தெய்வம் சீந்தாது என்பது போல் திரைக்கடியில் தெரியும் ஸ்க்ராலில் ஷாரூக்கானை நாயாக்கிய செய்தியை இட்டு நிரப்பி, மாணவர்களுக்கும் தெளிவு பிறந்தால் மகிழ்ச்சி.

jack\'s found a new religion on craigslist

நன்றி: Finding religion – Life – The Phoenix

வாழ்தலின் பிரதான கேள்விகளையும், மர்மங்களையும், சிக்கல்களையும் போர்ஹேவால் ஒரு குண்டூசியின் தலையில் உட்கார வைக்க முடியும். தனக்கென ஒரு விவரணை மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள அவர் மேற்கொண்ட பயணத்தின் வாயிலாக லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களுக்கும் அதன் இலக்கியத்திற்கும் பெரும் பயனை ஈட்டிக் கொடுத்தவர்.

போர்ஹேவைக் (Jorge Luis Borges) குறித்த பிரம்மராஜனும் சன்னாசியும் சொல்வது போன்ற வாழ்வின் விவரிப்பை பாவண்ணன் தொடர்ந்து நிறைவேற்றுகிறார். ‘If I only had a little humility, I’d be perfect.’ என்னும் டெட் டர்னர் போல் தன்னடக்கமின்றி சொல்லவேண்டுமானால், இப்படி மேற்கோள் காட்டி காட்டியே போர்ஹேயாகும் எண்ணம்தான் இந்த மாதிரி பதிவுகளின் தோற்றுவாய்.

What helped him overcome the block that had prevented him, almost until he was forty, from moving from essays to narrative prose was to pretend that the book he wanted to write had already been written, written by someone else, by an unknown invented author, an author from another language, another culture, and then to describe, summarize or review that hypothetical book.Part of the legend that surrounds Borges is the anecdote that the first, extraordinary story that he wrote using this formula, ‘The Approach to Almotaism’, when it first appeared in the journal Sur, convinced readers that it was a genuine review of a book by an Indian author – Italo Calvino (Why Read the Classics)

பெரும்புதிர்களின் இடையில் : லங்கேஷ் சிறுகதைகள் – பாவண்ணன்: தமிழில் இறையடியான். காவ்யா பதிப்பகம்

அன்பை நிராகரிக்கத் தூண்டியது எது? புறக்கணிப்பின் வலியால் உள்ளூர மனம் நொந்திருந்தாலும் அவருடைய கோபத்திலிருந்து மீள்வதற்காக புனைந்துரைத்த ஒரு சின்னப் பொய்யால் பூபாலனைக் குற்ற உணர்வுக்கு ஆளாக்க பார்வதியைத் தூண்டிய உணர்வு எத்தகையது? நெருங்கிப் பழகியபிறகும் ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் ஏன் இப்படி நிராகரிக்கிறார்கள்? நெருக்கத்தின் அனுபவம் ஏன் நிராகரித்தலைத் தடுப்பதில்லை? இந்த உறவு ஏன் இப்படி புரிந்துகொள்ள முடியாத புதிராக இருக்கிறது?
:::
ஆண்பெண் உறவு போலவே, இந்தியமண்ணில் சாதி அபிமானமும் விளங்கிக்கொள்ள முடியாத ஒரு பெரும்புதிர். எல்லாச் சாதியினரிடையேயும் மாற்றுச் சாதியில் தனக்குப் பிடித்தமான இணையைத் தேடிக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது. சாதி என்னும் பேரமைப்பு அத்தகு நிகழ்ச்சிகளை தற்செயல்கள் என்றும் பிறழ்வுகள் என்றும் அடையாளமிட்டு சில காலம் தனித்துவைக்கிறது. பிறகு மெல்லமெல்ல தன் மையத்தைநோக்கி இழுத்துக்கொள்கிறது. சாதிக்கலப்பு என்பதை சாதிப் பேரமைப்பின் மையம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. நிகழாதவரை அது அனுமதிக்கப்படாத ஒரு விதி. நிகழ்ந்தபிறகு, இணைத்துக்கொள்ளத்தக்க ஒரு விதிவிலக்கு. அவ்வளவுதான்.
::
மீண்டும் இந்த உறவும் வாழ்வும் ஏன் இப்படி புதிராக இருக்கிறது என்னும் வினா நம்மை அசைக்கிறது.

Happy Mothers Day – Daughter’s Poem

பள்ளியில் வாழ்த்து அட்டையில் எழுதுவதற்காக மகள் எழுதிய கடிதக் கவிதை.

I will try my best

in every way

To be extra sweet

On Mother’s Day

But if you become

upset with me,

Please relax and

have some tea