Tag Archives: ராமாயணம்

இராசாளி – ஜெயிலர்

அமெரிக்காவின் தேசியப் பறவை கழுகு. அந்தக் கழுகைப் போலவே நாலைந்து போலிப் பறவைகள் உண்டு,

கழுகைப் போலவே உலா வரும். Prairie Falcon (Falco mexicanus), Red-Tailed Hawk (Buteo jamaicensis), Turkey Vultures (Cathartes aura), Black Kite (Milvus migrans) என நால்வரை உடனடியாக நினைவு கூறலாம். பருந்து, ராசாளி, கூளி, சுவணம் எனத் தமிழில் சொல்கிறார்கள்.

தூரத்தில் இருந்து பார்த்தால் எல்லாம் பெரிதாக இருக்கிறது. இறக்கையைப் பெரிதாக விரித்து பிரும்மாண்டமாகப் பறக்கிறது. கூகை குழறும் என்பார்கள்; கழுகு வீருடுகிறது என்பார்கள்; இரண்டும் முன்னே பின்னே கேட்காதவருக்கு அனைத்தும் கத்தல் சப்தம்.

உயரப் பறக்கும் கழுகிற்கும் இராஜாளிக்கும் என்ன வித்தியாசம் என்று இப்பொழுது ஏன் ஆராய வேண்டும்?

ஏன் என்றால், தலைவர் ஏதோ கழுகு, காகம் உவமேயம் சொல்லியிருக்கிறார் அல்லவா!?

கங்க பத்திரம் ஓர் கோடி கை விசைத்து அரக்கன் எய்தான்;
கங்க பத்திரம் ஓர் கோடி கணை தொடுத்து இளவல் காத்தான்;
திங்களின் பாதி கோடி, இலக்குவன் தெரிந்து விட்டான்
திங்களின் பாதி கோடி தொடுத்து, அவை அரக்கன் தீர்த்தான்.
6.18.109 (௧௦௯)

–கம்பராமாயணம், நாகபாசப் படலம்–இந்திரஜித், இலக்குவன் போர்.

பொருள்:– இநத்திரஜித், கழுகின்‌ சிறகுகளையுடைய அம்புகள்‌ ஒரு கோடியைக்‌ கைகளால்‌ தொடுத்து விரைந்து எய்தான்‌ ; இளவலாகிய இலக்ஷ்மணனும்‌ கழுகின்‌ சிறகுகளையுடைய ஒரு கோடி அம்புகளைத்‌ தொடுத்து அவ்வம்புகளைத்‌ தடுத்தான்‌ ; அரைச்சந்திரன்‌ போன்ற முகப்பினையுடைய கோடி அம்புகளை இலக்குவன்‌ ஆராய்ந்து இந்திரசித்தின்மேல்‌ விட்டான்‌ ; இந்திரசித்தும்‌ அரைச்சந்திர அம்புகளை கோடி தொடுத்து அவ்வம்புகளை அறுத்தான்‌.

குறிப்பு: – கங்கம்‌ – கழுகு. பத்திரம்‌ – சிறகு. கழுகின்‌ சிறகுகள்‌ பொருந்திய அம்புகள்‌ கங்கபத்திரம்‌ எனப்பட்டன. பாதிமதி போன்‌.ற முகப்பினை உடைய அம்புகள்‌ என்பார்‌, ’திங்களில்‌ பாதி’ என்றார்‌. இதுகாறும்‌ இந்திரசித்து விடுத்த அம்புகளை மட்டுமே அறுத்துக்‌ கொண்டிருந்த இலக்குவன்‌ இப்போது திங்களிற்‌ பாதியை ஒத்த அம்புகளை இந்திரசித்தின்மேல்‌ விடுத்தான்‌ என்றவாறு. தீர்த்தல்‌ – அழித்தல்‌.

விக்ரம் படத்தில் கமல் விதவிதமானத் துப்பாக்கிகளை வைத்து சுட்டுத் தள்ளுவார். அவருக்கு சளைக்காமல் ஜெயிலரில் ரஜினியும் ‘மனிதன்’ போல் ரகரகமாக குண்டு போடுகிறார்.

நடுவில் எதற்கு கம்பராமாயணம் என்று கேட்கிறீர்களா?

1993ல் ’கலைஞன்’ படத்தில் இந்திரஜித் என்னும் கதாபாத்திரத்தில் கலைஞானி நடிக்கிறார். அந்தக் கலைஞன் விக்ரமில் விட்ட அம்புகளை சமாளிக்க இளவல் ஜெயிலரில் எய்கிறார். இதைத்தான் அன்றே கம்பர் பாடியிருக்கிறார். அந்த கங்கபத்ரம் = பின் நுனியில் கழுகின் சிறகுகள் பொருத்தப்பட்ட அம்புகளை (பத்ரம் என்றால் சிறகு) இசை வெளியீட்டு விழாவில் குறிப்பால் உணர்த்துகிறார் இரஜினி.

அதெல்லாம் இருக்கட்டும்? படத்தை ரசித்தேனா? மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கிறதா? தமிழ் சினிமாவின் மைல் கல்லா? ரஜினியின் நடிப்பிற்கு சிகரமா? அடுத்த ஆர்.ஆர்.ஆர். மாதிரி ஆஸ்காருக்கு அனுப்பலாமா?

அகாடெமி விருதுகளில் புதியத் தலைப்பாக ‘செயற்கையாக தானியங்கியாக உருவாக்கிய உயிர் போன்ற இயக்கம் காட்டும் படங்களுக்கான விருது’ ஒன்றை வழங்கினால், அது நிச்சயம் ஜெயிலருக்குக் கிடைக்கும்!

Ravanan & Angaadi Theru

குரங்கு மாதிரி கார்த்திக் மட்டும் அல்ல; அங்காடித் தெரு இராமனின் உற்ற நண்பர் மாரிமுத்துவும் குதிக்கிறார் என்பது இந்தப் பதிவின் தோற்றுவாய். அங்காடித் தெருவிலும் தாழ்த்தப்பட்டவரை ‘பன்றி’ என்று விளிக்கும்போது வெகுண்டெழாத சமூகம் ஆசனவாய்.

இராவணன் பிரும்மாண்டம். அங்காடித் தெரு குடிசை வீடு. இருந்தாலும் இந்த வருடம் வந்ததில் இந்த இரண்டு மட்டுமே முக்கியமான ஆக்கம்.

இரஜினிகாந்த் படங்களில் வருவது போல் ஐஸ்வர்யா, விக்ரம், பிரபு, கார்த்திக் நட்சத்திரப் பட்டாளம் கொண்டது ராவணன். புதுமுகங்களும் கூடிய சீக்கிரமே கூத்துப் பட்டறை கலைராணி மாதிரி அலுத்துவிடக் கூடிய விக்கிரமாதித்யர்களும் நிறைந்தது ‘அங்காடி தெரு’.

அங்காடித் தெருவில் வசனம் பலம். சுஜாதா இல்லாத உயிர்மையை ஜெயமோகன் மட்டும் வாழவைக்காவிட்டாலும், சாரு நிவேதிதாவிற்கும் வசனம் வராதது மணி ரத்னத்தின் இராவணப் பிரச்சினை.

பவிசு, பரதேசம், சில்லாட்டை என்று வட்டார வழக்கு ஆகட்டும்; வேலையில் சக்கை பிழியபட்டு வீடு திரும்புபவரின் செல்பேசி அலறல் பதில் அன்யோன்யம் ஆகட்டும். வசந்தபாலன் இயக்கமும் ஜெயமோகன் உரையாடலும் நகைச்சுவையையும் வாழ்க்கையையும் இழையவிடுகிறது. இராவணனில் ‘வினவு‘ தளத்துக்கு நுழைந்துவிட்ட அஜீரணம் கலந்த பிரச்சாரப் போலி பித்தளை.

சகோதரிகளுக்கு அப்பாவின் சட்டை; சரவணா ஸ்டோர்சுக்கு ஜோதிலிங்கம் கிளம்பும்போது பள்ளிக்கூட சீராடை. கேரளா விளக்கைத் தூக்கும்போது நெருங்கும் கை; போன்ற நுணுக்கங்கள் நிறைந்தது ‘ரங்கநாதன் தெரு’. இராமாயணத்தில் அன்றும், இன்றும், என்றும் லாஜிக் இல்லா மேஜிக் ரியலிசம்.

இவ்வளவு வித்தியாசம் நிறைந்த படங்களை எப்படி ஒரே பதிவாக்கலாம்?

நான் அங்காடித் தெருவிற்கு விமர்சனம் எழுதவில்லை; படம் வந்தும் நாளாகி க்ளாசிக் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது முதல் காரணம்.

இரு படங்களுமே ஜாலியான மசாலா என்பது முக்கிய காரணம்.

இரண்டு படங்களிலும் அசல் வாழ்க்கை நாயகர்களான காவல்துறையும் தொழில் துறையும் வில்லன்கள்.

மெதுவாகத்தான் அறிமுகம் ஆகிறார்கள். மிடுக்கோடு; கொஞ்சம் அப்பாவியாக; அவர் தொழிலுக்கு பக்தி என்றால், அண்ணாச்சி இறைபக்தி.

அங்கே ராமர்/சீதை/அனுமன்/இலக்குவன்/ஜடாயு/சூர்ப்பநகை சொல்ல பிரும்மப் பிரயத்தனம் என்றால், இங்கே சரவணா ஸ்டோர்ஸுக்கு பல்வேறு முன்னிறுத்தல்.

சாதாரணமாக நாயகியின் அப்பா, எதிர்மறை கதாபாத்திரம் செய்வார். அங்கே நாயகியின் கணவன். இங்கே நாயகிக்கு சம்பளம் தருபவர். இந்த இடத்தில் பெரும்பாலான திரைப்படங்களை ஒத்தே அமைந்திருக்கிறது. மூவருமே நிஜ வாழ்வில் சிம்ம சொப்பனம். அவர்கள் கிண்டலடிக்கப்படும்போது ஒடுக்கப்பட்ட மனம் கிளர்வது இயல்பு.

‘ஓசியில கொடுக்க அரசாங்கமா’ என்னும் கலைஞர் டிவி நையாண்டி அங்கே; ‘எந்தப் பொந்தில் போய் ஒளிஞ்சுண்டிருக்கான்’ என்று வாலியை மறைந்தடித்த ராமரும் இராவணரில் உண்டு.

இரண்டு படத்திலும் மூலக்கதைக்கு சம்பந்தமில்லாத தொகுப்புக் காட்சிகளும் கதாபாத்திரங்களும் மான்டேஜ் சித்திரங்களாக எக்கச்சக்கம். அவை பிரமிக்க வைக்கின்றன; அல்லாட வைக்கின்றன.

சத்தமாக அருளாசி வழங்குவதில் அங்காடித் தெரு ஜொலி சொலிக்கிறது. இராவணனில் புனித பிம்பங்களைக் குறித்து வினா மட்டுமே வைக்கப்படுகிறது.

படத்திற்கும் பாடல்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும், மணி ரத்தினம் அதற்கான கெத்தை நிலைநாட்டுகிறார். இரண்டாவது பல்லவியும் வராதா என்று ஏங்கவைக்கிறார். ‘நான் கடவுள்’இல் ‘பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்’ பாடல் எம்டிவி அடியொற்றி உண்டியல் குலுக்கியது. ஜெயமோகனின் இந்தப் படத்திலும் ‘கண்ணில் தெரியுது வானம்’ நீர் கோர்க்க வைக்கும் புலம்பல். அடுத்ததாக ஜெயமோகனார், சாஃப்ட்வேர் எஞ்சினீயர்களின் பிரச்சினைகளை முன்வைத்து அழுவாச்சி மூன்று நிமிஷம் கொடுக்க விண்ணப்பம் வைத்துவிடுகிறேன்.

இட்டமொழியில் பாரம்பரியச் சின்னம் போன்ற கோவில் இருப்பதை ஆராய முடியாது. அதே போல் திருநெல்வேலியில் வாரணாசி கோபுரமும் கிடைக்கும்.

அ.தெ.வில் ‘வானாகி மண்ணாகி’ காதல் ஊடல். இராவணனில் வீராப்புடன் கோபாவேச பாரதியார் வசன கவிதை.

சூர்ப்பனகைக்கு ஒரு நியாயம்? சீதைக்கு இன்னொரு கற்பு நிலையா? என்று கேட்பது மணிரத்னமாயணம். படி ஏறி இறங்காத நாயகி கனி (அஞ்சலி)க்கு ஒரு நியாயம்? நாயகன் அடி வாங்கும்போது மட்டும் இரக்கநிலையா என்று வினவுவது அங்காடி இராமாயணம்.

காதலியைக் காப்பாற்ற இயலாத கையாலாகாதவர்களினால்தான் இரு கதைகளுமே முன்னகருகிறது. ப்ரியாமணியின் கணவன் நடுங்குகிறான். கன்னுக்குட்டி செல்வராணி சௌந்தரபாண்டியனால் அனாதரவாகும் காட்சி அதனினும் மிரட்சி.

வேலையைத் தக்கவைத்துக் கொள்ளும் ஆபத்பாந்தவம் லிங்குவிடமும் உண்டு; எஸ்.பி.யும் அதே பயத்துடன் நாயகியை நிராகரித்து வீராவிடமே அனுப்பி வைக்கிறார். இரு இடங்களிலும் ஏமாற்றம்.

அண்ணாச்சி அறியாமல் கனியும் காதல் அங்கே; அண்ணன் ராமனுக்குத் தெரியாமல் மலரும் காதல் இங்கே.

சரி… காதல் எத்தனை வகை?

1. ஆசை: அங்காடித் தெருவில் அஸ்வினி வகை. இராவணனில் வீராவிற்கு வருவது – காமம்; உடல் சார்ந்தது.

2. உடைமை: இது வீராவிற்கும் கைக்கடிகாரத்திற்கும் இடையே உள்ளது. ‘என்னுடைய வாட்ச்’ என்னும் ஆக்கிரமிப்பு சார்ந்தது. பயம் கொணர்வது.

3. சார்புநிலை: அங்கே லிங்குவிற்கும் கனிக்கும் இடையே உள்ளது.

4. சுய அடையாளம்: எஸ்.பி பிருத்விராஜூக்கு இருக்கும் தொழில்பக்தி. காதலுக்கு பதில் அகந்தை தலைதூக்கும்.

சினேகாவின் ஒரிஜினல் பெயர் சுகாசினி. ராவண் வசனம் எழுதியவர் சுஹாசினி. இரண்டு பேருமே இரு படத்திலும் சம்பந்தமில்லை என்பதுதான் சம்பந்தம்.

Ravanan movie with Kamba Ramayanam

கம்பராமாயணம் என்பதற்கு பதிலாக கம்பராவணாயணம் என்பதே பொருத்தமோ என்பது போல், கம்பன், வில்லனைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். எனவே, மணி ரத்னத்திற்கும் ஆர் எஸ் மனோகருக்கும் இன்ஸ்பிரேசன் கம்பர் (அல்லது வான்மீகி?)

ராவணனின் வீரத்தைப் புகழும் கம்பர்:

காளி போன்றனன் இராவணன்; வெள்ளிடைக் கலந்த
பூளை போன்றதப் பொருசினத் தரிகள்தம் புணரி

மலர் மென்மையானது. [ஐஸ்வர்யா ராயை சொல்லவில்லை]. பூளைப்பூ காற்றால் சிதறியோடுவதை, வீரர் முன் வீரமிலாப் படை சிதறியோடுவதற்கு உவமையாக்குகிறார் கம்பர்.

இராமனை இகழும் இராவணன்:

தேறுதி; நாளையேயல் விருபது திண்டோள் வாடை
வீறிய பொழுது, பூளை வீயென வீவன்.

கரன் [கனகவேல் காக்க அல்ல] போன்ற தளபதிகள் இறந்தார்கள் என்னும் சூர்ப்பனகையின் சொல்லைக் கேட்டவுடன் கிளர்ந்தெழுந்த சினத்தன்மை:

ஆழித்தீயில் நெய் ஊற்ற ஆழித்தீ கனல்தலென இராவணன் சினந்தான்

மலையில் தோன்றிப் பாய்ந்த நீர், ஆறாக ஓடிக் கடலோடு கலந்தது. – ப்ருதிவிராஜில் தொடங்கும் காதல், விக்ரமில் சங்கமம் ஆகிறது.

தொடக்கத்தில் ஒரே இடத்தில் தோன்றிப் பல இடங்களில், பல்வேறு விதமான அளவுகளிலும் வடிவத்திலும் பாய்ந்து, வழிநெடுகிலும் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு, இறுதியில் கடலில் கலந்து, வேறுபாடின்றிக் கலக்கும் உயிர்களின் தன்மைக்கு விளக்கமாக இரு தரப்பினரும் உரைப்பதை ஒத்து இருந்தது.

கல்லிடைப் பிறந்து, போந்து, கடலிடைக் கலந்த நீத்தம்,
எல்லை இல் மறைகளாலும் இயம்ப அரும் பொருள் ஈது’ என்னத்
தொல்லையில் ஒன்றே ஆகி, துறைதொறும், பரந்த சூழ்ச்சிப்
பல் பெருஞ் சமயம் சொல்லும் பொருளும்போல், பரந்தது அன்றே.

ராமன் உலாவரும் காட்சியைக் கண்ட மிதிலைப் பெண்களின் நிலையைக் கூறுமிடத்தில், இராமனையே முழுமையாகப் பார்க்காதவர்கள் என்னும் நையாண்டி:

தோள்கண்டார் தோளேகண்டார் தொடுகழற் கமலமன்ன
தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கைக்க ண்டாரும் அஃதே
வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்
ஊழ்கண்ட சமயத்து அன்னார் உருவு கண்டாரை ஒத்தார்

சீதையைப் பற்றி கம்பர் எப்படி வர்ணிக்கிறார்?

  • மாதரார் வடிவு கொண்ட, நஞ்சு தோய் அமுதம்
  • சீதை என்று ஒரு கொடுங் கூற்றம்
  • சனகி எனும் பெரு நஞ்சு உன்னைக் கண்ணாலே நோக்கவே, போக்கியதே உயிர்;

போர்க்களத்தில் சமையல் நடக்கும் பாடலில், யானைகளின் மேலிடும் தவிசும், அம்பும், தேரும், வில் முதலிய படைகளும் — கொடிய விறகுகளாய் அமைய, இறந்த வீரர்களுடைய சினமிக்க கண்களாகிய தீயில் பிணங்கள் வெந்து அவை பேய்கட்கு உணவாகின்றன:

சிந்துரங்களின் பருமமும், பகழியும், தேரும்,
குந்து வல் நெடுஞ் சிலை முதல் படைகளும், கொடியும்,
இந்தனங்களாய், இறந்தவர் விழிக் கனல் இலங்க,
வெந்த வெம் பிணம் விழுங்கின, கழுதுகள் விரும்பி

வீராவின் [படத்தில் விக்ரம்] மற்றொரு பாதி அவனின் தங்கை. அவளுக்கு நடந்த வன்முறை பிறரால் அன்று. இராவணனாலேயே நிகழ்ந்தது. தோன்றாதவை, அல்லது தோன்றியவை அவனைத் தவிர வேறொன்றும் இல்லை. அவன் கொலை செய்கிறான்; அல்லது வாழவைக்கிறான். பற்பலவற்றைப் படைத்த பிறகும் அவன் மட்டுமே எச்சம். ஊரார் எல்லாம் அவனின் தோற்றங்களே. பல்வேறு வகைப்பட்ட இவற்றின் அழிவிற்குப் பிறகும், அவனே இருப்பான்:

வில்லும் வேலும்வெங் குந்தமும் முதலின விறகாய்
எல்லு டைச்சுட ரெனப்புக ரெஃகெலா முருகத்,
தொல்லை நன்னிலை தொடந்துபே ருணர்வன்ன தொழிலச்
சில்லி யுண்டையிற் றிரண்டன படைக்கலச் சாலை

எம்.ஃபில்லோ, முனைவரோ ஆகுமளவு மணி ரத்தினமும் கம்ப ராமாயணத்தை அடியொற்றியே ‘இராவணன்’ அமைந்திருக்கிறார்.

நாயகனின் ‘அந்தி மழை மேகம்’ உங்களுக்குப் பிடிக்குமா? கிழவிகள் கொட்டமடிக்கும் ‘ருக்குமணி ருக்குமணி’ ரீங்காரமிடுகிறதா? ‘திருடா திருடா’வின் லாஜிக்கின்மை கவருகிறதா? உங்களுக்கு இந்தப் படம் பிடித்துப் போகும் வாய்ப்பிருக்கிறது.

ப்ரியாமணியுடையது, பருத்தி வீரனில் ஏற்கனவே செய்யப்பட்ட கதாபாத்திரம்! பிருத்விராஜைப் பார்த்தால் ‘டூயட்’ ரமேஷ் அர்விந்த் மாதிரி ஐஸ்வர்யாவோடு பொருந்தாமை!! வீரப்பன், நக்சல்பாரி, விடுதலைப் புலிகளின் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன், ‘பேராண்மை‘ என்றெல்லாம் +2 படிக்கும் மாணக்கனாக பக்கம் பக்கமாக பதிபவரா நீங்கள்? உங்களுக்கு இந்தப் படம் நிறையவே பின்னூட்ட வருகை பிராப்திரஸ்து ஆசீர்வதிக்கும்.

அவ்தார் போன்ற கொடுமையை மெச்சும் ஹாலிவுட் அர்ச்சகரா? ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்று பச் பச்சென்று பறித்த சாலட் கொறிப்பாளரா? உயிர்மை போன்ற நவீன குமுதங்களில் இடம்பிடிக்க விழைபவரா? உங்களுக்கும் உள்ளேன் அய்யா போட்டுக் கொள்ளலாம்.

அங்காடித் தெரு’ போன்று கருப்பு வெள்ளையாக எல்லா கதாபாத்திரமும் உங்களுக்கு உலா வர வேண்டுமா? ‘மெகாதீரா‘ போன்று அல்டாப்பு நிறைந்த மாய்மால ரசிகரா? ‘Shutter Island‘ போன்று குப்பாச்சு, குழப்பாச்சு மூக்குச்சுற்றி மூச்சுத்திணறல்களின் விரும்பியா? ஐ எம் வெரி சாரி மேடம். வெயிட் ஃபார் ‘யாவரும் கேளிர்’.