Tag Archives: நியு யார்க்கர்

பியானோ ஆசிரியரின் கண்மணி

சிறுகதையை இங்கு வாசிக்கலாம் – The Piano Teacher’s Pupil | The New Yorker

அவசரமில்லை… படித்து விட்டு வாருங்கள். ஜான் அப்டைக் போல் இந்தக் கதையை எழுதியவரையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்தானே?

சாதாரணமான நியு யார்க்கரின் கதைகள் போல் நீளமான சிறுகதையும் அல்ல. இரண்டாயிரம் வார்த்தைகளுக்குள் அடங்கி இருக்கிறது. மூன்றே பக்கங்கள்தான். சட்டென்று வாசிக்க முடியும். படித்து விட்டீர்களா?

ஆசிரியர் என்பவர் யார்? ஒரே இடத்திலேயே தேங்கி நிற்பவர் ஆசிரியர். கற்றுத்தரப் பட்டவர்கள் முன்னேறி வித்தை காண்பித்து புகழும் பணமும் பெறக்கூடியவர்கள். ஆனால், கற்றுத் தந்தவருக்கு அந்த வித்தையை அப்படி ஆக்கத் தெரிவதில்லை. வித்தகர் ஆக முடியாதவர் வாத்தியார் ஆகிறார். வர்த்தகமாக்க தெரியாதவர் வாத்தியாராக மட்டுமே வதங்குகிறார். எப்படி செய்ய வேண்டும் என்பது பியானோ ஆசிரியருக்குத் தெரியும். ஆனால், எதை எல்லாம் உருவாக்க முடியும் என்பது ஆசிரியர்களுக்கு புலப்படுவதில்லை.

இந்தக் கதை பியானோ ஆசிரியரைப் பற்றியது. மிஸ் நைட்டிங்கேல் (செல்வி வானம்பாடி) ஐம்பது வயதொத்த பெண்மணி. தன்னுடைய முப்பதுகள் வரை தந்தையோடு வசித்தார். தந்தைக்குத் தெரியாமல் மணமான ஒருவரின் காதல் பரத்தையாக பதினாறு ஆண்டுகள் இருந்திருக்கிறார். அந்தக் காதலர் இப்பொழுது அவளை நாடுவதில்லை. திங்கள் முதல் வெள்ளி வரை பல்வேறு தரப்பட்ட மாணவர்களுக்கு பியானோ வாசிக்கக் கற்றுத் தருகிறார்.

அவளிடம் ஒரு புத்தம்புது மாணவன் படிப்பு சொல்லிக் கொள்ள சேர்கிறான். வெள்ளி சாயங்காலம் அந்த மாணவன் வருகிறான். அவனிடம் கடவுள் கொடுத்த திறமை மட்டுமல்ல; அதற்கு மேற்பட்ட மேதாவித்தனம் கைவரிசையாக பியானோ இசையில் வெளியாகிறது. அவளுக்கெனவே பிரத்தியேகமாக வாசிக்கிறான். அவனுடைய கற்பனாசக்தியைத் தாண்டி கற்றுக் கொடுக்க என்று அவளுக்கு எதுவுமில்லை.

அவன் புறப்பட்ட பிறகு வீட்டில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒரு பொருள் காணாமல் போகிறது. மிகச் சிறிய கலைப்பொருள். அவளுடைய தந்தையார் ஞாபகார்த்தமாக சேமித்த சின்னச் சின்ன ஷோகேஸ் சின்னங்கள் மறைந்துவிடுகின்றன. அவளுடைய கழுத்தைச்சுற்றித் தொங்கவிடும் துகிலை, அவன் ஒரு சமயம் திருடி விடுகிறான். இன்னொரு சமயம் காலணியில் போட்டுக் கொள்ளும் அற்பமான அணிகலனை கவர்ந்து விடுகிறான். நகை போட்டு வைக்கும் பெட்டியை அவளுக்குத் தெரியாமல் எடுத்துச் சென்றுவிடுகிறான்.

கதை சொன்ன விதம் சுவாரசியமாக இருந்தது. டக்கென்று முடிந்ததும், முடிவு தெளிவாக புரியாததும் சற்றே எமாற்றம் தந்தது. வாழ்நாள் பறந்து சென்றுவிடுகிறது. நேரம் காணாமல் போகிறது என்பது புரிகிறது. இளமை கழிந்த பிறகே நமக்கு அதை இன்னும் பயனுள்ள முறையில் செலவிட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

வில்லியம் டிரெவரைக் குறித்து இணையத்தில் தேடினால், ‘பதாகை’ தளத்தில் உருப்படியாக அறிமுகம் செய்திருக்கிறார்கள். அந்தக் குறிப்பில் இருந்து:

ட்ரெவரிடம் சிறுகதையின் வரையறை என்ன என்று கேட்கப்படுகிறது. அதற்கு பதிலளிக்கும் ட்ரெவர், அது ஒரு கண்ணுறு கலை என்று சொல்கிறார் (‘art of the glimpse‘). அதைத் தொடர்ந்து, சிறுகதையின் உண்மை வெடித்துத் தெறிக்க வேண்டும் என்று அவர் சொல்வதை, அதன் மிகச் சிறிய வடிவத்தில் மிகப் பெரிய ஆற்றல் பொதிந்திருக்க வேண்டுமென்பதாய் புரிந்து கொள்கிறேன். அது எதைச் சொல்லாமல் விடுகிறதோ, அதுவே சிறுகதையின் பலம் என்கிறார் அவர். அர்த்தப்படுத்துதல் மட்டுமே அதன் நோக்கம் – வில்லியம் ட்ரெவரின் சொற்களில், ‘It is concerned with the total exclusion of meaninglessness‘. வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில் நாவல் வடிவம் பெரும்பாலும் பொருளற்றதாகவும் அலைவுகள் கொண்டதாகவும் இருக்கலாம், ஆனால் சிறுகதை வடிவம் கலையின் சாரம் என்று அவர் வரையறை செய்கிறார் (‘It is essential art‘). நாவல்கள் ரத்தமும் சதையும் கொண்ட மனிதர்களைக் காட்டினால் சிறுகதை மனித வாழ்வின் ஆதார எலும்புகளை தொட்டுக் காட்டுகிறது.

இரக்கமே இல்லாமல் சிறுகதையை வெட்டித் தள்ளுபவர் டிரெவெர். அவருடைய கார்டியன் பேட்டியில் இவ்வாறு சொல்கிறார்:

திரைப்படத்தை உருவாக்குவது போல் நான் சிறுகதையை செதுக்குகிறேன். நாம் எதை சொல்லாமல் விடுகிறோமோ அதுதான் ஒரு கதையின் முக்கியமான அங்கம். ஒரே சிறுகதையை பல மாதம் வைத்து மறுபடியும் மறுபடியும் அந்தச் சிறுகதையை எழுதுவேன். ஒரு சிறுகதை என்பது ஒருவரின் வாழ்க்கையை போகிற போக்கில் காண்பிப்பது; அல்லது அந்த ஒருவரின் ஏதோவொரு உறவை புகைப்படமாகக் கண்ணுறுவது.

எழுதுவது என்பது எனக்கு அறியவியலாத இரகசியம். அது மறைபொருள் என்று நான் நம்பாவிட்டால், எழுதுவதே உபயோகமற்றதாகிவிடும்.

எனவே நாம்தான் கதையின் ஒவ்வொரு ரகசியத்தையும் அர்த்தம் கொள்ள வேண்டும். கதையில் பதினாறு ஆண்டு கழிந்ததை குறிப்பிடுவதை, நான் ஆயுர்வேதத்தில் ஷோடஷ சமஸ்காரம் என பதினாறு வகையாக வாழ்க்கையை பிரிப்பதோடு ஒப்பிடுவேன். மானுட வாழ்வில் பதினாறு சமஸ்காரங்கள் உள்ளன.

ஷோடச கர்மாக்களை ஐந்து வகையாக பிரிக்கலாம்:

அ) கார்பிகா சமஸ்காரம் (குழந்தை பிறப்பு சம்பந்தமானவை)
1) கர்ப்பாதனம்
2) பும்சவனம்
3) சீமந்தம்

மேலே உள்ளவை தம்பதியரால் அனுஷ்டிக்கப்படுபவை.

ஆ) சைஷவ சமஸ்காரம் (குழந்தை சம்பந்தமானவை)
4) ஜாதகர்மம்
5) நாமகர்ணம்
6) நிஷ்கிரமணம்
7) அன்னப்பிராசினம்
8) சூடாகர்மம்
9) கர்ணவேதம்

மேலே உள்ளவை பெற்றோரால் கடைபிடிக்கவேண்டியவை.

இ) சைக்ஷ்னிகா சமஸ்காரம் (கல்வி சம்பந்தமானவை)
10) உபநயனம்
11) வேதாரம்பம்
12) சமாவர்த்தனம்

மேலே உள்ளவை உபாத்தியாயரால் செய்யவேண்டியவை.

ஈ) ஆஷ்ரமிகா சமஸ்காரம் (மணம் புரிந்தவர்கள் சம்பந்தமானவை)
13) விவாகம்
14) வானப்பிரஸ்தம்
15) சன்யாசம்

மேலே உள்ளவை சுயமாக செய்யவேண்டியவை.

உ) பிரயான் சமஸ்காரம் (மரணம் சம்பந்தமானவை)
16) அந்தியேஷ்டி

மேலே உள்ளவை உங்களின் இறப்பிற்கு பின் உங்கள் குழந்தைகளால் செய்யப்பட வேண்டியவை ஆகும்.

பதினாறு வகையாக இப்படி வாழ்க்கையை பிரித்து நம் நடவடிக்கைகளை வகுக்கலாம். இந்தப் பதினாறை இவ்வளவு வலியுறுத்த என்ன அவசியம்?

கதையில் மீண்டும் மீண்டும் இந்தப் பதினாறு வருகிறது. முதல் தடவை பியானோ ஆசிரியையின் கள்ளக் காதல் பருவம் குறித்த விவரிப்பில் எடுத்த எடுப்பிலேயே பதினாறு சொல்லப்படுகிறது.. இரண்டாவது தடவையும் அதே பதினாறு என்னும் எண் இன்னொரு பக்கத்தில் வலியுறுத்தப்படுகிறது – அவளின் தந்தையின் கடைசிக் காலத்தை நேசத்துடன் கவனித்துக் கொண்டு கழித்த பதினாறு ஆண்டுகள் என்கிறார் டிரெவர். தன்னுடைய ஒவ்வொரு பேட்டியிலும் தான் ஒரு கிறித்துவ ப்ராடெஸ்டண்ட் என்பதை ஊக்கமாக சொல்லிக் கொள்கிறார்.

கிருத்துவ மதத்தின் திருத்தூதர் பால் என்பவரும் விவிலியத்தில், தன்னுடைய முதல் நூலில், 16 வகையான நேசம் இருப்பதாக விரிவுரை எழுதுகிறார்.

Corinthians 13:4 – 8:

  1. அன்பு பொறுமையும்
  2. கருணையும் உள்ளது.
  3. அன்பு பொறாமைப்படாது,
  4. பெருமையடிக்காது,
  5. தலைக்கனம் அடையாது,
  6. கேவலமாக நடந்துகொள்ளாது,
  7. சுயநலமாக நடந்துகொள்ளாது,
  8. எரிச்சல் அடையாது,
  9. தீங்கை கணக்கு வைக்காது,
  10. அநீதியைக் குறித்து சந்தோஷப்படாமல்
  11. உண்மையைக் குறித்து சந்தோஷப்படும்.
  12. எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும்,
  13. எல்லாவற்றையும் நம்பும்,
  14. எல்லாவற்றையும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும்,
  15. எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும்.
  16. அன்பு ஒருபோதும் ஒழியாது.

இந்தக் கதையை எழுதிய வில்லியம் ட்ரெவர் (William Trevor) கடந்த நவம்பரில் தன்னுடைய 88ஆம் வயதில் மறைந்துவிட்டார். அவரின் இறப்பிற்கு பிறகு வெளியாகும் கதை இது. கடைசிக் காலத்தில் எழுதிய இந்தக் கதை முற்றுப்பெற்றதா? இதுதான் இந்த இந்தச் சிறுகதையின் இறுதி வடிவமா? இவ்வளவு சிறிய ஆக்கமாக இருப்பதற்கு அவரின் அந்திமக் காலமும் ஒரு காரணமா? கல்கியின் மறைவிற்குப் பின் அவருடைய புதல்வர் நிறைவாக்கிய ‘பொன்னியின் செல்வன்’ போல் வில்லியம் எடுத்திருந்த குறிப்புகளைக் கொண்டு இந்தக் கதை வடிவாக்கம் பெற்றதா?

வில்லியம் டிரவர் “The Piano Tuner’s Wives” என்னும் கதையை 1995ல் எழுதியிருக்கிறார். அந்தக் கதையை இங்கே வாசிக்கலாம்.

டிரெவரின் பெரும்பாலான சிறுகதைகள் போலவே இந்தக் கதையும் முன்னும் பின்னும் பயணிப்பவை. துவக்கத்தில் முடிவிற்கு வெகு அருகே இருக்கும். கொஞ்ச நேரம் படித்தவுடன் கதாபாத்திரங்களின் இளமைக் காலத்திற்கு சென்றிருப்போம். வாசிப்பவரின் ஆர்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்னும் அக்கறையை டிரவெர் எடுத்துக் கொள்வதில்லை. அதாவது வலிந்து அந்த விறுவிறுப்பைக் கொணர மாட்டார். நீங்கள் எப்பொழுதோ தூண்டிலில் சிக்கி இருப்பீர்கள்.

”கதையில் உணரவேண்டியதை விரித்துரைத்து சொல்லக் கூடாது; சம்பவங்களினால் காட்ட வேண்டும்; அன்றாட செயல்களினால் விஷயங்கள் புலப்பட வேண்டும்.” என்பதை சிறுகதையின் பாலபாடமாக அறிவுறுத்துவார்கள். ’அது எப்படி?’ எனக் கேட்பவர்களுக்கு வில்லியம் ட்ரெவரின் இந்த “பியானோவிற்கு சுருதிசேர்ப்பவரின் மனைவிகள்” கதையையும் சுட்டலாம்.

அவரின் இன்னொரு கதைய அவரே வாசிப்பதை இங்கு பார்க்கலாம்:

மீண்டும் இந்தக் கதைக்கே வந்து விடலாம்.

ஆசிரியை எண்ணற்ற பொருள்களை சேமித்து இருக்கிறாள். ஒரு இடத்தின் ஞாபகமாக சில பொருள்கள் இருக்கின்றன. இருவரின் நினைவை சொல்லும் பொருட்டு சில பொருள்கள் அலங்காரமாக இருக்கின்றன. ஒரு வயதை, அந்தக் காலத்தை எண்ணிப் பார்க்கும்வகையில் சில பொருள்கள் அவளின் வீட்டை நிரப்புகின்றன. நம் பொருள்கள் காணாமல் போன பிறகே அவற்றின் அவசியத்தையோ, அல்லது அவசியமற்ற தன்மையையோ உணர்கிறோம். பொருள் இருக்கும் அந்த அறை எப்படிப்பட்டது?

அதற்கு அவளின் மூன்று பருவங்கள் நினைவுகூறப்படுகிறது. முதலில் பால்ய காலம். சாக்லேட் என்றால் உயிர். ஒவ்வொரு நாளும் அவளுடைய அப்பா புதிய இனிப்புகளை அவருடைய வினோத சாக்லேட்களைக் கொண்டு வருவார். அதே அறையில்தான் அவளுடைய ரகசியக் காதலன் அவளை இறுக்கி தேய்த்து, அவளை ஒரு அழகி என கிசுகிசுத்தான். அந்த பியானோ அறையில்தான் இப்பொழுது வாத்தியஜாலம் நிகழ்கிறது. வசீகரிக்கும் இசை வருடுகிறது; அந்த மாணவன் அவளுக்கு மட்டுமே நிகழ்த்திக் காட்டும் கச்சேரி அரங்கேறுகிறது. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்.

அவள் வாழ்வில் வந்த அந்த மூவரும் திருடர்களே. அவளின் அப்பா அவளுக்கு மணமுடிக்கவில்லை. தன் கடைசிக் காலத்தில் தன்னைப் பாத்துக் கொள்ள அவருக்கு ஒரு தாதி தேவைப்பட்டு இருக்கிறது. அதற்காக மகளை வீட்டோடு வைத்துக் கொண்டார்.

அதே போல் அவளின் இளமை அந்தக் காதலருக்குத் தேவைப்பட்டு இருக்கிறது. அவளின் அழகைத் திருடி இருக்கிறார்.

ஒன்றை இழந்தால்தான் இன்னொன்று கிட்டுகிறது. அவளுக்கு காதல் வார்த்தைகள் தேவைப்பட்டது. அதற்காக திருட்டுக் காதலை வைத்துக் கொண்டாள். அந்தக் கூடாவொழுக்கத்திற்கு விலையாக தன் இளமையை இழக்கிறாள். ஆசிரியையின் காதலனின் முதல் மனைவியின் நிலை என்ன? அந்த மனைவியின் அன்பை அவள் கவர்ந்ததற்கு மாற்றுப் பண்டமாக தன் மணவாழ்க்கையை அர்ப்பணிக்கிறாள். அந்த இரு பெண்மணிகளில் யார் பெருந்தன்மையானவர் என்று முடிவெடுப்பதை நம்மிடமே விட்டிருக்கிறார்.

இறுதியாக ஆசிரியரின் மாணவன் விலை மதிப்பில்லாத சங்கீத சதிராட்டம் கொடுக்கிறான். அதற்கு பதிலாக தன் வாத்தியாரின் இசைவைக் கோருகிறான். அவனுடைய அந்த இசைக் கச்சேரியில் சுயநலம் இல்லை. தன் ஆசிரியருக்கான அந்த அரங்கேற்றத்தில் அங்கீகாரத்தை மட்டுமே விலையாகக் கேட்கிறான். நம் குழந்தைகள் நம்மிடம் அதைத்தானே எதிர்பார்க்கின்றன… நம்முடைய கௌரவம் என்பது நம் வழித்தோன்றலின் மதிப்பில் அமைந்திருக்கிறதா? கதையை மீள்வாசித்தால் விடை கிட்டும்.

இந்தக் கதையை வாசித்தபோது ஜானி கேஷ் (Johnny Cash) நினைவிற்கு வருகிறார். அமெரிக்காவில் புகழ் பெற்ற பாடகராக ஜானி காஷ் விளங்கினார். அவரின் குழந்தைப் பருவத்தில் குரல் மேம்படுவதற்கு பாட்டு வாத்தியாரிடம் அனுப்பினார்கள். மூன்றே வகுப்புகளுக்குப் பின் அவருடைய ஆசிரியர் “உன்னுடைய பாடும் வித்தையை எந்தப் பொழுதிலும் எவர் சொன்னாலும் மாற்றிக் கொள்ளாதே! இயற்கையாக அமைந்த குரலை விட்டு விடாதே!” என்று சொல்லி உச்சிமுகர்ந்து ஜானியின் பாடல் வகுப்பை பூர்த்தியாக்கிவிட்டார். (ஆதாரம்: biography.com)

வில்லியம் ட்ரெவரின் கதை நாயகர்கள் ஜானி காஷ் போல் புகழ்பெற்றவர்களை அடிப்படையாகக் கொண்டவர்கள் கிடையாது. அவருடன் ஆன ‘கார்டியன்’ நேர்காணலில் இவ்வாறு சொல்கிறார்:

”என்னுடைய கதைகளில் கொள்ளை கொள்ளையாக உணர்வுகள் வரும். எல்லாவித உணர்ச்சிகளும் சத்தியாமனவை. ஒவ்வொரு விநோதமாக ஆராய்ந்து விதந்து கூறுகிறேன். மற்ற நிஜங்களுக்கு கதையில் ரொம்ப இடம் தர மாட்டேன். உண்மை சம்பவங்களை விட விசித்திரங்களை குடைந்து எழுத்தில் கொணர்கிறேன். அதனால்தான் பெண்களைக் குறித்து எழுதுகிறேன். நான் பெண் இல்லை. அவர்கள் எண்ணங்கள் எப்படிப்பட்டவை என்பது தெரியாது. இது என்னை உற்சாகம் கொள்ளவைக்கிறது. அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சிந்திக்கிறேன். என்னால் அவர்களாக முடியாது. அதனால் ஆர்வத்துடன் அந்த அனுபவத்திற்குள் நுழைந்து ஆராய்கிறேன்.

தினசரி காரியங்களை செய்யும்போது மனம் தாவிச் சென்று என்றோ நடந்ததை அசை போடுகிறது. ஏதோவொரு வார்த்தையைக் கேட்கும்போது அந்த வார்த்தை வரும் பாடலை வாய் தானாகப் பாடத் துவங்கி, அதன் வழியே நினைவு நம் வாழ்வின் பழைய சம்பவத்தில் சென்று நிலைக்கிறது. பழசை திணித்து மூலையில் ஒதுக்கி வைக்கலாம். ஆனால், நீக்க முடிவதில்லை. அந்த மாணவனின் நினைவுச் சின்ன வேட்டைகளை பியானோ ஆசிரியை கண்டுகொள்வதில்லை. ஏன் அவள் அதை அவனிடம் கேட்கவில்லை? அவளே அந்தப் பொருள்களின் நினைவுகளை மறக்க நினைக்கிறாளா? தன்னால் கலையில் சாதிக்க இயலாததை தன் மாணவன் சாதிக்கிறான் என்னும் சந்தோஷமா? தன் கள்ளக் காதல் செய்கைகளுக்கான பிராயச்சித்தமா? தன்னுடைய குற்றவுணர்வை தவிர்க்கமுடியாதது போல், அந்த மாணவனிடமும் இந்த சில்லறைத் திருட்டு அவமானத்தை பிற்காலத்தில் தேக்கும் என்னும் தூரதிருஷ்டியா? அவனில் புதிய ஒளியைப் பார்ப்பதால் நம்பிக்கைக் கீற்றின் வெளிப்பாடா? இவ்வளவையும் யோசிக்க வைப்பதில் வில்லியம் ட்ரெவர் நிலைக்கிறார்.

தெளிவு + துல்லியம் + கொஞ்சம் உல்லாசம் = நியு யார்க்கர்

நூலின் பெயர்: Cast of Characters: Wolcott Gibbs, E. B. White, James Thurber, and the Golden Age of the New Yorker
எழுதியவர்: Thomas Vinciguerra

வெளியான தேதி: நவம்பர் 9, 2015
ISBN: 978-0393240030
பக்கங்கள்: 464
பதிப்பாளர்: நார்டன்

Cast-of-Characters

பத்திரிகையில் என்ன எழுதினார்கள் என்பதை விட, பத்திரிகையை யார் நடத்துகிறார்கள் என்பதில் எப்போதுமே எனக்கு ஆர்வம் அதிகம். ஆனந்த விகடனில் நடந்த பிணக்குகள் காரணமாக கல்கி தனியாக வாராந்தரி துவங்கியது எல்லாம் ரொம்பவே பிற்பாடுதான் தெரிய வந்தது. அதற்கு முன்பாகவே சாவி பத்திரிகையும் இதயம் பேசுகிறது மணியனும் விகடனில் இருந்துதான் கிளை பரப்பினார்கள் என்பதில் இந்த என்னுடைய வம்பார்வம் துவங்கியிருக்க வேண்டும். நிஜத்தில் முதன் முதலில் ஆர்வத்தைத் தூண்டியது ‘அரசு பதில்கள்’ எனப்படும் குமுதத்தின் மும்மூர்த்திகள் – எஸ்.எ.பி. அண்ணாமலை, ரா.கி. ரங்கராஜன், துமிலன், புனிதன், ஜ.ரா.சுந்தரேசன் – சமயத்திற்கேற்றபடி மாறிக்கொண்டிருந்தார்கள்.

அவர்களைக் குறித்து உயிர்மைக் கட்டுரையில் பிரபஞ்சன் எழுதியது:

Prabanchan_brabhanjan-1அண்ணாமலை அரசர், வள்ளல் அழகப்பர் ஆகியோரின் குடும்பப் பின்னணியிலிருந்து வந்த ஒரு செட்டியார் குடும்பத்து இளைஞர், ஒரு ஐயங்கார் நண்பரைத் துணைக்கு வைத்துக்கொண்டு தொடங்கிய பத்திரிகையாக, நிலம் தோயாமல் அந்தரத்தில் நின்றது குமுதம்.

பள்ளி, கல்லூரிக் காலங்களில் வாசிப்பில் ஈடுபாடு கொண்ட அண்ணாமலை என்கிற இளைஞர், படிக்கும் பழக்கம் தந்த உற்சாகத்தில் கதைகள் எழுதத் தொடங்கி இருக்கிறார். அவர் கதையை அக்காலத்திய புகழ்பெற்ற எழுத்தாளரும் பத்திரிகையாளருமான நாரண துரைக்கண்ணன் (ஜீவா), தன் பத்திரிகையில் பிரசுரம் செய்திருக்கிறார். எம்.எ.பி.எல். படித்த, பணக்காரக் குடும்ப இளைஞர், இன்னொரு முதலாளியிடம் சென்று பணியாற்றிச் சம்பளம் பெற விருப்பம் இன்றி, வள்ளல் அழகப்ப செட்டியார் துணையோடு தானே பத்திரிகை தொடங்கிச் சொந்த வியாபாரியாகவும், முதலாளியும் ஆனார், எஸ்.ஏ.பி. அண்ணாமலை என்கிற இளைஞர். கல்லூரி நண்பராக இருந்த கூரிய மூளையும் உழைப்பும் மிகுந்த பார்த்தசாரதியைப் பிரசுரிப்பாளராகக் கொண்டு குமுதத்தைத் தொடங்கினார் எஸ்.ஏ.பி.

Kumudam_Arasu_Parthasarathy_Jawahar_Palaniappan_Sundaresan_Pundihan_PRABANJAN

இன்னொரு கட்டுரை – பகவத் கீதை பாடமும் பலான படங்களும்

SAP_Annamalai_Kumudham_Kumudam_Kumuthamஆசிரியர் அறைக்கு அடுத்த அறை துணை ஆசிரியர்களுடையது. வலது பக்கத்தில் நுழைவாயிலையொட்டி முதல் இருக்கை சண்முக சுந்தரத்துடையது. அடுத்த இருக்கை ஜ.ரா. சுந்தரேசனுடையது. இந்த இருக்கைகளுக்குப் பின் பலகைத் தடுப்புக்கு உள்ளே ரா.கி.ரங்கராஜன். சுந்தரேசனுக்குப் பக்கத்தில் என் இருக்கை.

சரியாகப் பத்து ஐந்துக்கு ஆசிரியர் வருகை புரிந்தார். கதவைத் திறந்துகொண்டு எட்டிப் பார்த்தார். நாங்கள் உள்ளே வரலாம் என்பதன் சமிக்ஞை அது. அறையின் உள்ளே நுழைவதையும் ஒரு ஒழுங்கோடு செய்ய நேர்ந்தது. முதலில் சீனியரான ரா.கி.ரங்கராஜன். அதன்பிறகு சின்ன சீனியரான சுந்தரேசன். அதன்பிறகு சின்னச் சின்ன சீனியரான சண்முக சுந்தரம். அதன்பிறகே படு சின்னப் புதுமுகமான நான். ஆசிரியர் இருக்கைக்குமுன் எங்கள் நாற்காலிகள். அதிலும் ஒரு ஒழுங்கு கடைப்பிடிக்கப்பட வேண்டும். முதல் நாற்காலி சீனியருடையது. அடுத்து அடுத்து உள் நுழைந்த வரிசைப்படி அமரவேண்டும். என் நாற்காலியில் நான் மட்டும் அமரலாம். ஒழுங்கு. ஒழுங்கு. ஒழுங்கு உயிரினும் மேலானது.

குமுதம் குறித்து இவ்வளவு பெரிய ஆலாபனை எதற்கு?

அமெரிக்கா வந்தபிற்கு அதே போல் உளம்கவர் கள்வனாக ‘நியு யார்க்கர்’ இதழ் அமைந்து இருந்திருந்தது. சின்ன வயதில் வெள்ளிக்கிழமைக்காகக் காத்திருந்தது போல், இங்கேயும் நியு யார்க்கர் இதழுக்காக காத்திருத்தலும், நூலகத்தில் கிடைத்தவுடன் எடுத்து வாசிப்பதும் சுகம் தந்தது. இசையைப் பற்றி வார்த்தையால் விளக்க முடியாது என்பார்கள். அது போல் நியு யார்க்கர் வாசிப்பனுபவர்த்தைச் சொல்லி புரியவைப்பதும் சற்றே சிரமமே.

தொடர்புள்ள பதிவு: Love The Music Of Coen Brothers Films? You Can Thank Carter Burwell : NPR — Unlike the Coens, Burwell says, Haynes loves to dig into the subtext and meaning of the music. “Not everyone, including musicians, is good at discussing music in verbal terms — but Todd is.” Burwell says. “He’s actually very good at listening to a piece of music and saying in words what that music is doing to the scene, or to the characters, or to the film.” For Carol, Burwell and Haynes agreed that even though the music was critical in communicating those unexpressed feelings and desires, less was more.

நியு யார்க்கர் நல்ல பத்திரிகைதான்… அது தெரிந்த விஷயம்தானே. அதற்கும் இந்தப் பதிவிற்கும், மேலே சொல்லப்பட்டிருக்கும் புத்தகத்திற்கும் என்ன தொடர்பு?

1925ல் நியு யார்க்கர் பிறக்கிறது. அன்று தொடங்கிய பாரம்பரியம் இன்றும் மிகச் சிறப்பாக செயல்படுகிறது. கொஞ்சம் கேலி, நிறைய விமர்சனம், ஆதாரம் சார்ந்த செய்திக் கட்டுரைகள், ஒவ்வொரு இதழுக்கும் முத்து முத்தாக ஒரேயொரு கதை, சற்றே சிலேடையாக இருந்தாலும் பஸ் டிக்கெட் பின்னாடி எழுதப்படும் காதல் பாக்கள் போல் இல்லாமல் நெஞ்சைத் துளைக்கும் கவிதைகள், நியு யார்க் நகர சங்கதிகள், அரசல் புரசலாகப் பேசப்படும் மாநகர வம்பு விஷயங்கள் என்று சுவாரசியமாகவும், ஆழமாகவும், கவன ஈர்ப்பைத் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றது. நியூ யார்க்கரில் இடம்பெற வேண்டும் என்பதற்காக தங்கள் படைப்புகளை அனுப்பிவிட்டு பல்கலைக்கழக பேராசிரியர்களும் புலிட்சர் பரிசு வென்றவர்களும் காத்திருக்கின்றனர்.

இப்பொழுது எச்.பி.ஓ.வில் வெளியாகும் ’வினைல்’ தொடரின் முதல் எபிசோடை ஹாலிவுட் இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்சிஸீ இயக்குகிறார். முதலில் துவங்கியவர்கள் எப்படி செய்கிறார்களோ, அதை அப்படியே பின் தொடரும் கலையை டிவி முதல் நியு யார்க்கர் வரை பின்பற்றுகிறார்கள். கால்கோள் இட்டவர்கள் செலுத்திய பாதையில் அடியெடுத்துச் செல்கிறார்கள். சொல்வனத்தில் ’மேற்கில் சின்னத்திரை’ கட்டுரையில் சத்தியமூர்த்தி இவ்வாறு சொல்கிறார்:

இந்தத் திரைக்கதையை இயக்குவதற்கான இயக்குனர்கள் தேர்வும் வித்தியாசமானது. முதல் எபிசோட் மட்டும், திரையுலகத்தின் பிரபலமான இயக்குனரை வைத்து இயக்குவார்கள். பிறகு அவர் பயன்படுத்திய அதே வழிமுறையை வைத்துகொண்டு, அதாவது காட்சி அமைப்பு, ஒளிப்பதிவுக் கோணங்கள், நடிக்கும் முறை ஆகியவற்றை பின்பற்றி வெவ்வேறு இயக்குனர்களை வைத்து இயக்குவார்கள். இந்த தொடர்களைப் பார்க்கும் போது எனக்கு ஏற்படும் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் இவற்றில் முதல் ஸீசனின் முதல் பகுதியில் இருந்து கடைசி ஸீசன், கடைசிக் காட்சி வரை ஒரே முறை, பாணி (Pattern) பயன்படுத்தப் படும். ஒரு சிறு மாற்றம் கூட இருக்காது.

அது போல் அன்று ஆரம்பித்து வைத்தவர்களின் வழிமுறையை நியு யார்க்கர் இன்றளவும் பயன்படுத்தி வருகிறது. துவக்கியவர்களின் பங்கு எவ்வாறு முக்கியம் என்பதை உணரவைக்கிறது. இந்தப் புத்தகம் நியு யார்க்கர் பத்திரிகையைத் துவக்கியவர்களின் வரலாறு. யார் ஆரம்பித்தார்கள், என்ன வழிமுறையைப் பின்பற்றினார்கள், எவ்வாறு எடிட்டிங் செய்தார்கள், எங்ஙனம் தரத்தை நிலைநாட்டினார்கள், எப்படியெல்லாம் பதில் போட்டு கட்டுரையாளர்களையும் படைப்பாளிகளையும் தட்டிக்கொடுத்து வேலை வாங்கினார்கள், எங்கே ஓய்வெடுத்தார்கள், எப்படி பணியில் மூழ்கினார்கள், எப்பொழுது வேறு புத்தகங்களை எழுதினார்கள், வேலையை விட்டு எப்போது விலகினார்கள் என்று சரித்திரத்தை சுவாரசியமாகச் சொல்கிறது.

நாலைந்து பேரைப் பற்றி, அதுவும் ஒரேயொரு வார இதழில் பணியாற்றிய ஆசிரியர் குழுவைப் பற்றி, எழுதிய புத்தகத்தை நான் ஏன் விரும்பி வாசித்தேன்?

சொல்வனம் ஆசிரியருக்கு என்னுடைய கட்டுரைகளைக் கொடுக்கும்போது அவர்களிடமிருந்து கறாரான பதில் வரும். பதாகை எடிட்டருக்கு என்னுடைய படைப்புகளைக் கொடுத்தால் கட் அண்ட் ரைட்டான ஆக்கபூர்வமான ஆலோசனைகளைத் தாங்கிய மறுமொழி மடல் வந்து சேரும். இது போன்ற பதிப்பாசிரியர் + பத்திரிகையாசிரியர் தொடர்புகள்தான் எனக்கு இந்தப் புத்தகத்தின் மீதான சுவாரசியத்தைக் கூட்டியது.

புத்தகத்திற்குள் செல்வதற்கு முன் நியு யார்க்கரின் 90 வருட பாரம்பரியத்தைப் பற்றி மட்டும் அறிந்து கொள்ள விரும்பினால், அவர்களின் இந்த சமீபத்தியப் பதிவுகள் உங்களுக்கு உதவும்:

  1. Ninety Years of The New Yorker – The New Yorker
  2. Out Loud: Ninety Years of The New Yorker – The New Yorker

இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றோர் யார்?

1. வால்காட் கிப்ஸ் (Wolcott Gibbs)

தியேட்டர் விமர்சகர்; நியு யார்க்கில் பிராட்வேயில் நடக்கும் இசை நாடகங்களை அறிமுகம் செய்து ஆராய்பவர். கடுமையான உழைப்பாளி. புனைகதை எழுத்தாளர். இரக்கமின்றி வெட்டித் தள்ளி, — வரும் விஷயங்களை நேர்த்தி ஆக்குபவர். குசும்பு பிடித்தவர். ஹெமிங்வே எழுதும் ஆர்ப்பாட்டங்களை ஜெயமோகன் தொப்பி, திலகம் என்று நக்கலடித்தது போல் இயல்பாக சுட்டுகிறார்.

’இந்தியா டுடே’ போல் இரண்டுங்கெட்டானாக அமெரிக்காவில் டைம் (Time) பத்திரிகை பல்லாண்டுகாலமாக வெளியாகிறது. செக்ஸ் கருத்துக் கணிப்பு, ரஜினி-50 சிறப்பிதழ் என்று வெகு தீவிரமாக இயங்கும் வாராந்தரி. அந்த இதழை நக்கலடித்து 1936ல் ‘நியு யார்க்கர்’ இதழொன்றைக் கொணர்கிறார். அதன் மூலம் காலாகலத்திற்கும் சாஸ்வதமான சிம்மாசனத்தில் ஏறுகிறார்.

New_Yorker_Time_Wolcott_Gibbs_Luce_Profile_Nov_28_1936_Backward_Run_Sentences

இவருடைய எடிட்டிங் கருத்துகள் பயமுறுத்துபவை. “இவ்வளவு தப்பும் தவறுமா எழுதித் தருவதற்கு பதில் உங்க வீட்டு குப்பைத் தொட்டியை சுத்தம் செய்யலாமே” என்னும் ரீதியில் கறாராக செயல்பட்டிருக்கிறார். அச்சுப்பிழைகள், தகவல்பிழைகள், ப்ரூஃப் பார்த்தல் என்று கர்மசிரத்தையாக செயல்பட்டவர். பள்ளியில் படிக்கும் மகன் எழுதும் தபால்களைக் கூட வெகு சீரியஸாக சரி பார்த்து, பிழை திருத்தி, எவ்வாறு தூய ஆங்கிலத்தில் இலக்கணச்சுத்தமாய் எழுதுவது என்று பதில் போட்டவர். (நிஜமாகவே… அதீதமாகச் சொல்லவில்லை)

ஒரு கட்டுரை ரொம்பவே வேலை வாங்குகிறது என்றால், பக்கத்தில் உள்ள ஹோட்டலில் ரூம் போடுகிறார் கிப்ஸ். அந்தக் கட்டுரையின் ஒவ்வொரு பக்கத்தையும் தரையில் பரப்புகிறார். ஒவ்வொரு பத்தியையும் கத்திரிக்கோலால் வெட்டுகிறார். இப்போது நூற்றுக்கணக்கான பத்திகளை கலைத்துப் போட்டு ஒவ்வொன்றாக ஒருங்கிணைக்கிறார். நடு நடுவே விடுபட்ட பத்திகளைக் குறித்து புதிய பக்கங்களில் தட்டச்சுகிறார். அதை ஆங்காங்கேக் கோர்க்கிறார். இப்போது அசல் ஆசிரியர் எழுதிய பத்திகளின் போதாமையும் தொடர்பின்மையும் தேவையான விளக்கங்களும் புலப்படுகிறது.

ஒரு உதாரணத்திற்கு டுல்ஸா பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியாகும் நிம்ராட் சஞ்சிகையை எவ்வாறு கோர்க்கிறார்கள் என்பதை நேற்று இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார்கள்:
Nimrod_Journal_Magazine_Print_Media_Publisher_Books_Magz_Layout_Papers

ஒரு வார்த்தை எங்காவது தவறான பொருளில் வந்தால் குடிமுழுகிப் போனதாகவேக் கருதுகிறார். “கொஞ்சம் தாமதமாக தவணையை செலுத்தினார் என்பது நேர்மையின்மையைக் குறிக்காதே?” என ஒரு கட்டுரையாளருக்கு வினா எழுப்புகிறார். “அதற்கு வறுமை என்று பெயர் என்றே நினைக்கிறேன்” எனக் குறிப்பிடுகிறார்.

2. ஹாரொல்டு ராஸ் (Harold Ross)

நியு யார்க்கரைத் துவக்கியவர்; மற்றவர்களிடமிருந்து வேலையைக் கறப்பதில் கெட்டி. கொண்ட பதிப்புக் கொள்கையில் இம்மியும் விட்டுக் கொடுக்காதவர். இவருடைய புகழ்பெற்ற மேற்கோள்: “நீ மேதையாக இல்லாமல் இருப்பதால்தான், நான் உன்னை வேலையை விட்டுத் தூக்குகிறேன்!”

What was at stake in the spat between Henry Luce and Harold Ross?

What was at stake in the spat between Henry Luce and Harold Ross?

எஸ்.ஏ.பி. (குமுதம் இதழின் முதலாளி அண்ணாமலை) போல் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமாக ராஸ் தெரிந்திருக்கிறார்.

’அறிமுகமான சில நிமிஷங்களிலேயே உங்களை இயல்பிற்குக் கொணர்ந்து நெருங்குபவர்’: ஹார்ப்போ மார்க்ஸ்
– ‘முகஞ்சுளிக்கவைக்கும் முட்டாள்தனம் கலந்து கொடுரமான வில்லத்தனமான செய்கைகளையும் நிகழ்த்துபவர்’: எட்மண்ட் வில்ஸன்
– ‘அன்பானவர்’: ஹாரியத் வால்டன்
– ’மற்றவர்களிடம் முழுமையாக அன்பு செலுத்த கஷ்டப்பட்டவர்’: ஏ. ஜே. லைபிளிங்
– ’விவேகம் ததும்பும் புத்திசாலி மனிதர்’: ஜானெட் ஃப்ளானெர்
– ‘அவரை மாதிரி சமரசம் செய்து கொள்ளாத காட்டுவாசி மண்ணாந்தை அராஜகவாதியை நான் பார்த்ததே கிடையாது’: டேவிட் கொர்ட்

அலுவலில் நடைபாதையில் எவராவது பேச்சுக் கொடுத்தால் அலறியடித்துக் கொண்டு கண்டும் காணாத மாதிரி அவர்களை புழு போல் ஒதுக்கிவிட்டு ஓடுகிறார். நிறைய கெட்ட வார்த்தை பேசுகிறார். ”வெளிப்படையாக நேர்பட எழுது” என்பதில் உறுதியாக இருந்தவர். வழவழா கொழகொழா என்றில்லாமல் கூறியதையேத் திரும்பக் கூறாமல் எழுது என்று சித்தாந்தம் வைத்தவர். செய்தியாசிரியராக வாழ்வைத் துவக்குகிறார். ’ஒரு இடத்தில் இரண்டு வாரத்திற்கு மேல் இருந்தால் அது நரகம்’ என்று நினைத்தவர்.

ஆனால், ராஸ் தனக்கென்று சில பதிப்பாசிரிய தர்மம் வைத்திருந்தார். அவரைப் பார்த்துதான் மற்ற நால்வரும் கண்கொத்திப் பாம்பாகப் பிழைகளைக் கண்டுபிடித்து, எழுதியவருக்கு விளக்கம் கேட்டு, அதற்கு பதில் விளக்கம் கேட்டு, பிரதியை செம்மையாக்கினார்கள். ‘இதற்கு என்ன ஆதாரம்?’, ‘இவர் எப்போது பிறந்தார்?’, ‘ஏன் இந்தப் பிரயோகம்?’, ‘இது தேய்வழக்கு’, ‘இது சரியான சொலவடை அல்ல’, ‘இதை கொஞ்சம் வாசகர் படிக்கும்படி மாற்றலாமா?’, ‘இது அருவருக்கத்தக்க முறையில் சொல்லப்படுகிறதே’ என வினா மேல் வினா போட்டு, மறுபடி திருத்தி எழுத வைக்கும் முறையை நடைமுறையாக்கினவர்.

பிரதியை அனுப்பியவர்களுக்கு மின்னஞ்சல் இல்லாத அந்தக் காலத்தில் இவர் எழுதிய அஞ்சல்கள் பிரசித்தி பெற்றவை: “தேறாது”, “இது வேண்டாம்”, “இது எங்களுக்கானது இல்லை”, “ரொம்ப லேசாக இருக்கிறது”, “இந்த முறை பிரகாசிக்கவில்லை”, “இப்படி எழுதினால் போதாது”.

இந்த ஐவரைத் தாண்டி தேர்ந்தெடுக்கப்படும் நிலைக்கு ஏதாவதொரு கட்டுரை அடுத்த கட்டத்திற்குச் சென்றால், — புகழ்பெற்ற, நிலையான, சாஸ்வதமான எழுத்தாளருக்கு இருபது முதல் முப்பது பதில் கேள்விகளும் சந்தேக விளக்கங்களும் அனுப்பப்படும். 20/30 மட்டுமே அனுப்பிவைக்கப்பட்டால், அந்தக் கட்டுரை மிகச் சிறப்பாக வந்திருக்கிறது என்று அர்த்தம்.

ஒரு சமயம் ஹாரிமன் என்பவர் பன்னிரெண்டு பக்க கட்டுரையை நியு யார்க்கருக்கு சமர்ப்பிக்கிறார். அவருக்கு ஆறு பக்கத்திற்கு விளக்கம் கேட்டு பதில் அனுப்பப்பட்டிருக்கிறது; நொந்துபோய்விட்டார். ஜாஃப்ரி டி ஹெல்மன் என்பவர் மெட்ரோபாலிடன் அரும்பொருளகம் குறித்து அபுனைவு அனுப்பியிருக்கிறார். அவருக்கு 147 கேள்விகள் விளக்கமாக கேட்டு அனுப்பப்பட்டதாம். ”அதெல்லாம் ரெகார்டே இல்லீங்க”, என்கிறார் ஹெல்மன்.

இது வெறும் முதல் கட்டம். அதன் அடுத்த கட்டமாக தகவல் சோதனை; அதன் பின் விஷயங்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்களுடன் சரிபார்த்தல். அதன் பின் சம்பவங்களின் உண்மைத்தனம் குறித்த ஆராய்ச்சி. அதன் பின் ப்ரூஃப் பிழை பார்த்தல்; அச்சுக்கோர்த்தல் இன்ன பிற விஷயங்கள் நடக்கும்.

இவ்வளவிற்குப் பிறகும் சில பிழைகள் நுழைந்து விடும். இப்படித்தான் ஒருமுறை குத்துச்சண்டை வீரரான Joe Louis (ஜோ லூயிஸ்) என்னும் பெயர் Joe Lewis (ஜோ லூவிஸ்) என்று தான் எழுத்துக் கோர்க்கும் நியூ யார்க்கரில் அச்சாகிவிட்டதைப் பார்த்து, பலருடன் பயணிக்கும் பேருந்தில், அதிர்ச்சியில் பேப்பரைக் கீழே தவறவிட்டு, கதறிக் கதறி அழுதவர்களை வேலைக்கு வைத்திருந்தவர்.

Helen_Hayes_What_Every_Woman_Knows_1934

ஹெலன் ஹெய்ஸ் என்னும் நடிகையைக் குறித்து ஹாரிமன் இவ்வாறு எழுதுகிறார்: “சாஸ்திரோப்தமாகப் பார்த்தால் அழகில்லைதான்”. ராஸ் பொங்கியெழுந்துவிடுகிறார். “அவள் எப்பேர்ப்பட்ட அழகு! நளினமும் ஒயிலும் சிருங்காரமும் கலந்த அவளின் அழகை ஒழுங்காகச் சொல்லத் தெரியாதவன் எல்லாம் நிருபன் என்று சொல்லிக்கொள்ளவே லாயக்கில்லாதவர்கள்”, என பதில் போடுகிறார். ஏழு நாட்கள், மூன்று கலந்துரையாடல்கள் கழித்து ஒரு ஒப்பந்தத்திற்கு வந்து சேர்கிறார்கள். அச்சில் இவ்வாறு செல்கிறது: “அவள் திரும்பிப் பார்க்கவைக்கும் அழகு அல்ல”.

3. ஜேம்ஸ் தர்பர் (James Thurber)

கடைசிக் காலத்தில் கண் தெரியாமல் போனாலும் மூளை மழுங்காமல் கார்ட்டூன் வரைந்தவர். பதிப்பாளர் ராஸ் சொல்வது போல் ‘ஒரே குரல்; ஒரே நடை; ஒரே விதமான கட்டுரைப் பாங்கு!’ என்னும் ஒழுங்கு தாங்கவியலாமல் அலுத்துப் போகிறார். நியு யார்க்கரில் எழுதுவது, எடிட்டுவது எல்லாம் போரடித்துப் போய்விட, பிராட்வே நாடகம் போடச் சென்றிருக்கிறார். எங்கே இருக்கிறார் எனும் அடிச்சுவடே தெரியாமல் போகுமாறு பெர்முடாவில் போய் இரண்டு மாதம் காணாமல் போக்கிக் கொண்டிருக்கிறார்.

james thurber_Secret_Life_Of_Walter_Mitty_new_Yorker_Mind

‘இவர்கள் என்ன ஆனார்கள்?’ என்று தர்பர் எழுதிய பகுதி பெரும் புகழ்பெற்றது. சின்னவயதிலேயே சாதித்தவர்கள், வயதான பிறகு என்னவாக இருக்கிறார்கள் என்பதையும், பத்தாண்டுகள் முன்பு புகழின் உச்சியில் இருந்தவர்கள், இப்பொழுது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று துப்புதுலக்கி ஆராய்ந்து அவர்களின் வாழ்க்கையை விவரிப்பதும் வாசகர்களைக் கவர்ந்தது. அதனால், சில பல சட்டப் பிரச்சினைகளும் அவதூறு வழக்குகளும் தனி மனிதர்களின் அந்தரங்கத்தில் அத்துமீறி எட்டிப்பார்ப்பதாகக் குற்றச்சாட்டும் வந்துசேர்ந்தது.

அந்தக் காலத்தில் நியு யார்க்கரின் சில பகுதிகளை எவர் எழுதினார் என்று தெரியாமல், பெயர் போடாமல் வெளியானது இவருக்கு உவக்கவில்லை. தன்னுடைய முத்திரை பதிக்கும் துணுக்குகளிலும் நகரம் குறித்த நடப்புக் கட்டுரைகளிலும் தன் பெயர் வரவேண்டும் என தர்பர் எதிர்பார்த்தார். ஆனால், முதலாளி ராஸ் அதற்கு ஒப்பவில்லை.

ராஸ் என்பவருக்கு பயணத்தின் முடிவில் எங்கே செல்ல வேண்டும் என்னும் இறுதி குறித்த தூரப்பார்வை இருந்தது. தர்பர் என்பவருக்கு அதற்கான செயல்முறை திட்டமும், வழியில் அமைக்கவேண்டிய கூடாரங்களும், ஒவ்வொன்றையும் எவர் செய்வார் என்பது குறித்த பணிப் பகிர்தல்களும் முக்கியமாக இருந்தது. யாருடன் எப்பொழுது தொலைபேசுவது, எவரைத் தொடர்பு கொண்டால் எது கிட்டும், யார் எதைத் திருத்துவார்கள், எப்பொழுதுக்குள் வேலையை முடிக்க வேண்டும் என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாகச் சொல்லிச் சென்றார்.

4. ஈ.பி. வொயிட் (E.B. White)

இவரை இவரின் குழந்தைகளுக்கான புத்தகங்களால் அறிந்திருப்பீர்கள். நால்வரில் அமைதியானவர்; ஆனால், பதிப்பாசிரியர் ஹாரொல்டின் செல்லப்பிள்ளை. மனைவியையும் (கேத்தரின்) நியு யார்க்கரில் கண்டுபிடித்து, ஆசிரியர் குழுவை ஆற்றுப்படுத்தியவர். இன்றளவும் நியு யார்க்கரில் அலங்கார வார்த்தைகளோ, ஆடம்பரமான சொல்ஜாலங்களோ பெரிய சிலம்பாட்ட உருவகத்தோரணங்களோக் கிடைக்காது. இதற்கு தோற்றுவாயாக ஈபி ஒயிட் இருக்கிறார். நேரடித்தன்மை; அதன் பிரதிபலிப்பு – அம்புட்டுதானே விஷயம் என்பதை விவரிக்கும் நடையைத் தந்திருக்கிறார்.

E_B_White_Books_Stuart_Little_Charlottes_Web_Trumpet_Swan_New_Yorker_Kids_Children

5. காத்தரின் வொயிட் (Katharine White)

ஒன்றரை பக்க நாளேடாக வந்து கொண்டிருந்த துண்டுப் பத்திரிகையை ”நியூ யார்க்கர்டா!” எனச் சொல்ல வைத்தவர். நியு யார்க்கருக்கு வாழ்க்கையை அர்ப்பணித்த ஈபி. ஓயிட்டை மணந்தவர்.

American_Humor_Classics_New_Yorker_Katharine_White_EB_Books

ஹிரோஷிமா

Hiroshima_New_Yorker_1946_Issue

இந்த நூலின் 12ஆம் அத்தியாயம் நியு யார்க்கரின் சில அதிரடி இதழ்களையும் கருத்துக்களையும் குறித்துப் பேசுகிறது.

நியூ யார்க்கர் இதழோ கிண்டல் கொண்ட கருத்துப் படங்களும் கேலிச்சித்திரங்களும் கொண்டது. ஊரில் நடக்கும் டிராமா, சினிமா, இசைக் கச்சேரி, ஓவியக் கண்காட்சி, அருங்காட்சியகத்தின் நிகழ்வுகள், நல்ல உணவு, புதிய கலைகள் என்று வாழ்க்கையைக் கொண்டாடித் தீர்ப்பதைக் கொள்கையாகக் கொண்டது. அது போன்ற இதழில் இரண்டாம் உலகப் போரின் தீவிரத்தை எப்படிக் கொணர்வது?

ஒரு நாட்டின் அரசன் கொலையுண்டால் அதைக் குறித்து செய்திக் கட்டுரை வெளியிடலாம். அமெரிக்காவின் பொம்மலாட்ட ராஜாங்கமான இராக் அரசரின் ஆட்சி கவிழ்ந்தால் அதை ஆராயலாம். லெபனானுக்கு அமெரிக்க இராணுவத்தை அனுப்புவதையும் கியூபாவில் காஸ்ட்ரோ அரியணையை நெருங்குவதையும் அலசலாம். ஹங்கேரியின் தலைவரான இம்ரே நகி வெட்டவெளியில் வெட்டப்படுவதை விவரிக்கலாம். ஸ்புட்னிக் விண்வெளிக்கோளும் எக்ஸ்ப்ளோரர் விண்கலங்களும் ஏவப்படுவதை அறிவியல் தகவல் கட்டுரைகளாக்கலாம். தலைக்கு மேலே சுற்றும் செயற்கைகோள்கள் எல்லாம் அணுஆயுதங்களாகச் சுழலும் அபாயத்தை சங்கு கொண்டு முழங்கலாம்.

அதே ரீதியில் எண்பது மில்லியன் அமெரிக்கர்கள் இறந்த கொடுமையை எப்படி உரைப்பது? ஒரு நாட்டின் மீது குண்டு போட்டு மேலும் பல கோடி மக்களைக் கொன்று குவித்ததை எவ்வாறு எடுத்துரைப்பது. ஆகஸ்ட் 31, 1946ஆம் ஹிரோஷிமா இதழாக வெளியானது: 1946-08-31 – The New Yorker

இதழ் முழுக்க ஒரேயொரு கட்டுரைதான். 31,347 வார்த்தைகள் கொண்டு நேரடியாக ஜப்பான் சென்று வந்தவரின் அனுனவப் பகிர்வு. அது மட்டுமே ஒரு இதழ் முழுக்க ஓடுகிறது.

சமீபத்தில் நியு யார்க் வந்திருந்தபோது 911 நினைவுச்சின்னம் சென்று வந்தேன். அங்கே எல்லா சம்பவங்களையும் காலவாரியாக நிகழ்வுவாரியாக தெளிவாக புகைப்படங்களுடன் போட்டிருந்தார்கள். அதில் ஒரு இடத்தில் ரொனால்டு ரேகனும் அப்பா புஷ்ஷும் தாலிபான் தலைவர்களுடன் சமபந்தி பேச்சுவார்த்தை நடத்துவதைச் சொல்லும். அதை ஒட்டி அப்போதே ஈ.பி. ஒயிட் எழுதுகிறார்:

Build the museum, O builders! Have it ready for me when I come.
Then, when the radioactivity has been dissipated and the rays no longer threaten my white corpuscles,
Letter the proper sign and let me in. And don’t forget
To give the date. I like dates.
July 16, 1945.
Give the hour, the minute, the very second of the blast.
Exactly five-thirty A.M. “Beginning of the atomic age.”
Alamogordo, Alamogordo — my last pilgrimage. Earliest bomb crater in the atomic world. Most famous deathsite [sic].
Note, ladies and gentlemen, how the effect radiates in all directions,
With color and shading gradually growing darker like the petals of a flower.
Those who are hungry will find an appetizing, moderately priced
Meal in the Nuclear Snack Bar, just outside the gate, and
Clean rest rooms.
Take home a souvenir of atomiste [sic] for the children.

oOo

முதலாளி ராஸ் காலமான பிறகு நியு யார்க்கருக்கு என்னவாகும் என்று எல்லோரும் பயந்த போது, நியூ யார்க்கரின் அடுத்த எடிட்டர் சொல்கிறார்: ”சிக்மண்ட் பிராயிட் இறந்த பிறகும் மனோவியல் ஆராய்ச்சித் தொடர்கிறது அல்லவா…”. இன்றும் நியு யார்க்கர் அன்றைய தரமும் விழுமியங்களும் வழுவாமல் வெளியாகிறது.

அப்படி என்ன சித்தாந்தம்?

அவருடன் பழகியவரைக் கேட்டால், “ராஸுக்கு இரண்டு தெய்வங்கள் இருந்தார்கள்: பெரிய எழுத்து மற்றும் சிற்றெழுத்து (uppercase and lower case)”.

கொஞ்சம் வெளியில் இருந்து நோக்கினால், ‘பொய்மையை அம்பலப்படுத்துவோம். போலித்தனத்தை வெளிக்கொணர்வோம்!’

வில்லியம் சரோயன் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர். ‘தி புயூடிஃபுல் பீப்பிள்’ வெளியிடுகிறார். நியு யார்க்கர் விமர்சனத்தில் ‘சுத்த நான்சென்ஸ்’ என்று போட்டுடைக்கிறார்கள்.

சாமர்செட் மாம் குறித்து: “நம்முடைய தரம் எவ்வளவு தாழ்ந்து போயிருக்கிறது என்பதற்கு இவர் ஒரு குறிப்பிடத்தக்க வெளிப்படையான அடையாளம்.”

இப்படி எல்லாம் நேர்மையாக எழுதினாலும் எல்லாவற்றையும் விளையாட்டாக, அனைத்திலும் குழந்தைத்தன்மையோடு அணுகுவது நியு யார்க்கரின் சித்தாந்தம் எனலாம். மெரிட் நெல்சன் என்னும் பள்ளி மாணவன் நியு யார்க்கருக்கு கடிதம் எழுதிக் கேட்கிறான்: “உங்களின் நோக்கமும் குறிக்கோளும் என்னவென்று சொல்ல முடியுமா?”. அவனுக்கு பதில் தபால் வந்தது: “எங்களுக்கு எந்த இலட்சியமும் கிடையாது.”

நூலை எழுதிய தாமஸ் வின்சிகுவேரா (Thomas Vinciguerra) நாற்பத்தியேழு பக்கங்களுக்கு அனுபந்தமாக அடிக்குறிப்புகளையும் தொடர்பான கட்டுரைகளையும் சுட்டுகிறார். மேலும் பத்து பக்கங்களுக்கு இந்த ஆராய்ச்சித் தொடர்பான புத்தகங்களையும் இந்த நால்வர் (ஐவர்?) எழுதிய ஆக்கங்களையும் குறிப்பிடுகிறார். தொண்ணூறு வருட நியு யார்க்கர்களைப் படிப்பது மட்டுமில்லாமல் கிப்ஸ் குடும்பம், அவரின் பல மனைவிகள், மகன்கள், மகள்கள் என்று ஊர் ஊராக வாழ்ந்த இடங்களையும் மனிதர்களையும் தேடித் தேடி பேட்டியெடுத்து நூலை எழுதியிருக்கிறார். இதே மாதிரி மணியனுக்கும் ‘ஜெமினி’ வாசனின் மகனான விகடன் எஸ். பாலசுப்ரமணியத்திற்கும் இடையே உள்ள பிணக்குகளையும் சாவிக்கும் அசோகமித்திரனுக்கும் இடையே உள்ள நட்பையும் காலச்சுவடு கண்ணனுக்கும் உயிர்மை எஸ். அப்துல் ஹமீது (மனுஷ்யபுத்திரனுக்கும்) நடுவே உள்ள பரஸ்பர புரிதல்களையும் தொகுக்க வேண்டும்.

தழற்சொல் – சிறுகதை பரிந்துரை

Thomas_Pierce_This_is_an_alert_New_Yorker

இந்தக் கதையை நியு யார்க்கர் இதழில் வாசிக்கலாம்: This Is an Alert – The New Yorker

இந்தக் கதையைப் படித்தால் அறிபுனை கதையைப் படிப்பது போல் இருக்கிறது. வருங்காலத்தில் எங்கெங்கும் பீடித்திருக்கும் போர் மற்றும் போர்ச்சூழலினால் தோன்றும் அச்சத்தையும் பிரதிபலிக்கிறது. அறிவியலின் வளர்ச்சியான ஆளில்லாமல் பறக்கும் தூரயியங்கி விமானங்களின் ஆபத்துகள் நிறைந்த அவநம்பிக்கையான சமூகத்தைச் சுட்டுகிறது. அறிவியல் குறைவாகவும், புனைவு அதிகமாகவும் காணப்படுவதால் அறிபுனை என்னும் வகையில் இந்தக் கதையை வைக்கிறேன்.

பதினான்கு வயது மகளுடனும் மனைவியுடனும் மாமியார் வீட்டிற்கு விருந்துண்ணச் செல்பவனின் நிகழ்வுகளை தாமஸ் பியர்ஸ் எழுதி இருக்கிறார். கதையின் தலைப்பில் சொல்வது போல், ‘இது ஒரு எச்சரிக்கை’ என்னும் அறிவிப்பு, அவர்களை அன்றாடம் துரத்துகிறது. எப்போது அந்த அபாய அசரீரி ஒலிக்கும், எதற்காக அதற்கு அடிபணிகிறோம், எவ்வளவு நேரம் அந்த எச்சரிப்பு நீடிக்கும் என்று தெரியாது.

பதின்ம வயதில் மகளுக்கு நிகழும் மாற்றங்களும் குழப்பங்களும் இயல்பாக வந்து போகின்றன. மார்பகப் புற்றுநோஇல் இருந்து மீண்ட மாமியாரின் செய்கைகள், வயதானோரின் பாதுகாப்புணர்வை சொல்கின்றன. கணவன் உடன்பிறந்தான் பார்க்கும் காமப் பார்வைகள் வருங்காலக் கதைக்கு உயிரூட்டுகின்றன. சொட்டைத் தலையை நினைத்து வருந்தும் நடுத்தர வயதினன் கதையோடு ஒன்ற வைக்கின்றன.

ரொம்பவே போரடித்து விடக் கூடிய களம். அதை எப்படி கதாசிரியர் சுவாரசியமாக்குகிறார்? கொஞ்சம் போல் பாலுணர்வு உலவ விடுகிறார். துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை குறித்த விவாதத்தை எழுப்புகிறார். இதுதான் இறுதி முடிவு என்று சொல்லாமல் விட்டு வைக்கிறார். ஆறு கதாபாத்திரங்கள் இருந்தாலும் நாய்க்குக் கூட போதிய அளவு விவரிப்புகளும் குறியீடுகளும் கொடுக்கிறார்.

ஐஸிஸ் வளராமல் இருக்க எங்கோ இருக்கும் சிரியாவில் குண்டு போடுகிறார்கள். ஹௌத்திகள் வளராமல் இருக்க யேமனில் பறந்து பறந்து தாக்குகிறது சவுதி அரேபியா. தலைக்கு மேலே எங்கோ நடக்கும் சண்டைகள். அமெரிக்காவில் நிலத்தில் வாழ்வோருக்கும் இந்தப் போர்களுக்கும் சம்பந்தமே இல்லை. அந்தச் செய்திகளை, தொலைக்காட்சியிலும், தினசரிகளிலும், இணையத்திலும் மட்டுமே பார்க்கிறோம். அவர்கள் கெட்டவர்கள் என்பதால் தாக்குகிறோம். இந்தக் கதையில் வான்வெளியில் நடப்பதாகச் சொல்லப்படும் டிரோன் போர்கள் அதை நினைவுக்குக் கொணர்ந்தது. ”இந்த நாட்டிற்குச் செல்லாதே” என்னும் கபர்தார் அறிக்கைகள், அவ்வப்போது வரும் அசரீரிகள் உணர்த்தின.

தாமஸ் உடன் ஆன நேர்காணலை இங்குப் படிக்கலாம்: » INTERVIEW: Thomas Pierce, author of Hall of Small Mammals

சிறுகதைத் தொகுப்பு புத்தகத்திற்கான விமர்சனம்: ‘Hall of Small Mammals,’ Short Stories by Thomas Pierce – NYTimes.com

சாது மிரண்டால்: சிக்கல் பின்னல்

வாசிக்க: “Labyrinth” – The New Yorker

Amelia Gray is the author of the novel “Threats” and the short-story collection “Gutshot,” which will be published by FSG Originals in April. Amelia Gray’s “Labyrinth” was originally published in the February 16, 2015 issue of The New Yorker.

Amelia+Gray_Labyrinth_New_Yorker_Fiction_Story

அமீலியா கிரே எழுதியதில் இது சற்றே சாதாரணமான கதை. பழங்காலத் தொன்மத்தை, நவீன யுகத்திற்கு ஏற்ப சொல்வது அமீலியாவின் வழக்கம். இந்தக் கதையும் அவ்வாறே முன்னுமொரு யுகத்தில் நம்பப்பட்ட கதையை, தற்காலச் சூழலில் விவரிக்கிறது.

சிக்கல்வழி என்னும் இந்தக் கதைக்கு கிரேக்கப் புராணத்தில் வரும் தீஸியஸ் கதை தெரிந்திருப்பது அவசியம். ஹிந்து மதத்தில் வரும் நந்தி போல் கிரேக்க ஹெல்லனிய தொன்மத்தில் மினடோர் இருக்கிறான். கீழே அவனைப் பார்க்கலாம். பாதி மனிதன்; பாதி எருது.

minotaur-Nandhi_Theseus_Greek_Hellenic_Mythology_Apis_Egypt

பேரரசன் மினோஸ் என்பவருக்கும் அவரின் அரசியார் ஆன பாஸிஃபே என்பவருக்கும் மகனாகப் பிறக்கிறார் மினொடார். சூஸ் (Zeus) அனுப்பிய காளையோடு அரசி பாஸிஃபே உறவு கொண்டு, அந்தக் கள்ள உறவினால் ரிஷபத்தின் தலையும் மானுட உடலுமாகப் பிறக்கிறான் மினொடார். இதைக் கண்டு அரசன் மினோஸ் வெட்கம் கொண்டு, வினோத மினொடார் குழந்தையை ’இடர்ப்பின்னல்’ (labyrinth)ல் அடைத்து வைக்கிறான்.

நாட்டில் குற்றம் புரிபவர்களையும், போரில் சிறைப் பிடித்தவர்களையும் இந்த இடர்ப் பின்னலுக்குள் அனுப்பி வைப்பான் அரசன் மினோஸ். அவர்களால், அந்த சிக்கலில் இருந்து வெளியே வர இயலாது. மாட்டிக் கொள்வார்கள்; முழிப்பார்கள். இந்த முரட்டுக் குழந்தைக்கு தீனியாவார்கள்.

காலம் ஓடுகிறது. அரசன் மினோஸின் இன்னொரு மகன் ஆன இளவரசன் ஆண்ட்ரோஜியஸ் (Androgeus) ஒலிம்பிக்ஸில் கலந்துகொள்ளச் செல்கிறான். ஏஜியஸ் (Aegeus) அரசனின் சொந்த ஊரில் ஏத்தனிய (Panathenaic) போட்டிகள் நடக்கின்றன. போட்டிக்குச் சென்ற இடத்தில் தன்னுடைய அம்மாவை முறைதவறி உறவு கொண்ட காளையோடு மராத்தான் ஓட்டம் ஓடுகிறான். அந்தக் காளை, மினொடாரின் தந்தை. மினொடாரின் தந்தை, இளவரசன் ஆன்டிரோஜியஸைக் கொன்று விடுகிறது.

ஏஜியஸ் அரசனின் ஆளுகைக்கு உட்பட்ட இடத்தில் நடந்த இந்தப் பலிக்கு பிராயச்சித்தமாக ஒவ்வொரு வருடமும் ஏழு ஆண்களையும், ஏழு பெண்களையும் பலியாகத் தருமாறு அரசன் மினோஸ் ஒப்பந்தம் போடுகிறான். ஏஜியஸ் அரசனும், இந்த பலிக்கடாக்களை மினோடார் இருக்கும் சிக்கல் வளைக்குள் அனுப்பி இரையாக்குகிறான்.

மகாபாரதத்தில் பீமனின் பகாசுர வதம் நினைவுக்கு வரலாம். ஏகசக்ர நகரத்தில் பாண்டவர்கள் தங்கியிருந்தபோது பீமனால் பகாசுர வதம் நடைபெற்றது. பகன் என்னும் அசுரன் இந்த நகரத்தை ஒட்டிய மலையடிவாரத்தில் இருந்துகொண்டு ஊரில் உள்ள அவ்வளவு பேரையும் அடித்துக் கொன்று ஊரையே ரணகளமாக்கியிருந்தான். இதனால் அவர்கள் ஒன்று திரண்டு பகாசுரனை சந்தித்து ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன்படி பகாசுரன் பசிக்கு உணவாக “எள்ளு அன்னம், மூன்று வகையான பருப்பு உருண்டைகள், பொரி, அப்பம், கள், சாராயக் குடங்கள், கரடி, பன்றி மாமிசம், கறுப்பு நிறம் கொண்ட இரண்டு காளைமாடுகள், ஒரு நரனாகிய மனிதன்” என்று ஒரு பட்டியலை தயார்செய்து தினமும் வேளை தவறாமல் அனுப்பி வைப்பதாக ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தனர்.

பீமன் வண்டி நிறைய உணவு இருக்க அந்த வண்டியை ஓட்டிக்கொண்டு மலையடிவாரத்துக்கு சென்று, பகாசுரனையும் யுத்தம் செய்ய அழைத்து அவனோடு மோதி, அவன் குடலை உருவி மாலையாகவே போட்டுக்கொள்கிறான். குடல் மாலையோடு பகாசுரனை தலைக்கு மேல் தூக்கி வந்து ஊர் எல்லையில் கொண்டுவந்து போட, ஊரே ஊர்வலம் போல வந்து இறந்துகிடந்த பகாசுரனைப் பார்த்து மகிழ்கிறது.

ஆனால், கிரேக்கக் கதை கொஞ்சம் மாறுபடுகிறது.

இரண்டாண்டுகளாக ஏஜியஸ் அரசன் தன்னுடைய குடிமக்களை அனுப்பி வைக்கிறான். மூன்றாம் ஆண்டு ஏஜியஸ் அரசனின் மகன் தீஸியஸ் (Theseus) “என்னை அனுப்பு! அந்த அதிகாரநந்தியைக் கொல்கிறேன்!” எனச் சூளூரைக்கிறான்.

கடலில் செல்வதற்கு முன் கடைசியாகச் சொல்கிறான். “நான் வெற்றியோடு திரும்பினால், இந்தப் பாய்மரப் படகில் வெள்ளை நிறப் பாய் பறக்கும். மினாடொரிடம் பலியாகி விட்டால், கறுப்பு நிறப் பாய் இருக்கும்! அதை வைத்து உன்னைக் காப்பாற்றிக் கொள்!” என முன் ஜாக்கிரதையாக இருக்குமாறு சொல்லியும் செல்கிறான்.

மினொடாருக்கு ஏரியாட்னி (Ariadne) என்னும் மகள் இருக்கிறாள். எல்லா இளவரசிகளையும் போலவே, இவளும் பேரழகி. ஆண்வாடையே பார்க்காமல் வளர்ந்தவள். வந்த ஒன்றிரண்டு ஆண்களும் அப்பா மினொடாருக்கு இறையாகிப் போனவர்கள். தீஸியஸைக் கண்டதும் காதல் வருகிறது. தீஸியஸிற்கு மினொடார் இருக்கும் சிக்கல் வளையின் நுட்பங்களைச் சொல்கிறாள்.

ஒரு நூற்கண்டைக் கொடுக்கிறாள். உள்ளே நுழைவது எளிது. நடுவை அடைந்து விடுவதும் எளிது. மினோடாரை கொன்று விடுவது கூட எளிது. ஆனால், கொன்ற பிறகு எவ்வாறு வெளியேறுவது? அபிமன்யு போல் சக்கர வியூகத்தை பிளந்து கொண்டு நட்ட நடு வலைப்பின்னலில் வந்து விடலாம். அந்த இடர்ப்பின்னலில் இருந்து சுருக்கே வெளிப்பாதை கண்டுகொள்வது எவ்வாறு? அந்த நூற்கண்டை வைத்து, உள்ளே வந்த வழியை அடையாளம் காணலாம். நூற்கண்டின் வாலைப் பிடித்தால், வெளிச்சம் கிட்டும் என்கிறாள்.

அவனும் இளாவரசி ஏரியாட்னி சொற்படியே நடக்கிறான். நூலைப் பிரித்துப் போட்டுக் கொண்டே இடர்ப்பின்னல் உள் செல்கிறான். Mazerunner படம் போல் இருக்கிறது. மினொடார் நந்திதேவரை வீழ்த்துகிறான். நூல் போட்ட பாதையிலேயே வெளி வந்து இளவரசி ஏரியாட்னியின் கைப்பிடிக்கிறான்.

இங்கே சுபம் போட்டிருக்கலாம். ஆனால், கதை நீள்கிறது.

வெற்றிக் கொடி கட்டிய தீஸியஸ் படகை நடுவில் இளைப்பாறலுக்காக நக்ஸோஸ் (Naxos) தீவில் நிறுத்துகிறான். உல்லாசமாகப் பொழுது போகிறது. விடியற்காலையில் எழுந்து படகை செலுத்துகிறான். இளவரசி ஏரியாட்னியை தீவிலேயே மறந்து (?!?) விட்டுவிடுகிறான். அவளைப் பிரிந்த துக்கம் தாளாது, தன்னுடையக் கப்பலில் கறுப்புக் கொடியைப் பறக்கவிட்டுத் திரும்புகிறான்.

கறுப்புப் பாய்மரத்தை பார்த்த அப்பா ஏஜியஸ், மினோடார் வருகிறான் என பயந்து, கடலில் குதித்து தற்கொலை செய்துகொள்கிறான்.

இப்பொழுது, மீண்டும் நியு யார்க்கர் கதைக்கே வந்துவிடலாம். அதற்கு முன் எனக்கு ஏன் அமீலியா கிரே பிடிக்கும் என்பதைச் சொல்லிவிடுகிறேன்.

நியு யார்க்கர் பேட்டியில் அமீலியா இவ்வாறு சொல்கிறார்: “நான் புராணத்திலும் பைபிளிலும் தொன்மக் கதைகளிலும் வளர்ந்தவள். எந்தப் புத்தகத்தை எடுத்தாலும், அதில் உள்ள மிக மிகச் சிறியக் கதையில்தான் படிக்கத் துவங்குவேன். குறைந்த வார்த்தைகளில் என்ன சொல்ல முடியும்? அதை எப்படி இந்தக் கதாசிரியர் சொல்கிறார்? பெரிய நாவல் எழுதும்போது கூட குட்டி விஷயங்களில் தனித்து நிற்கும் காட்சிப்பரப்பைக் கண்டுகொள்வதில் தனி சுகம் கிடைக்கிறது!”

என்னதான் ஜெயமோகனைக் கும்பிட்டாலும், இந்த மாதிரி சுறுக் புனைவுகள் தரும் சுகம் அலாதியானது.

Amelia Gray on October 28, 2010

உள்ளுர் திருவிழாவில் நியு யார்க்கர் கதை துவங்குகிறது. ரங்க ராட்டினம் ஒரு புறம். விதவிதமான தின்பண்டங்கள் இன்னொரு புறம். வருடா வருடம் நடக்கும் அறுவடைக் கொண்டாட்டம். அதன் ஒரு அங்கமாக மனிதனை விட உயரமாக வளர்ந்து இருக்கும் கதிர்களின் நடுவே கண்ணாமூச்சி விளையாட்டு இருக்கிறது. இந்த வருடம் அது கிடையாது.

ஒரு இடத்தில் துவங்கி, இன்னொரு இடத்தில் முடியும் புதிர்பாதை (corn maze) கிடையாது. வாழ்க்கை போல், இதுதான் ஆரம்பம், இது நடுப்பகுதி, இது இறுதி இடம் என்று சென்று முடிக்க முடியாது. இந்த வருடம் கதையின் தலைப்பில் வரும் ‘சுருள் வளைவு சிக்கல் அமைப்பு’ (labyrinth). இதன் மையத்தை அடைந்தால் “உங்களுக்கு வாழ்க்கையில் என்ன வேண்டுமோ, அதை உணர்வீர்கள்!” என்கிறார், இந்த அமைப்பைக் கட்டியவர்.

எவருமே அந்தச் சுழலுக்குள் செல்ல விரும்பவில்லை. தலையை எதற்கு தேவையில்லாமல் நுழைக்க வேண்டும்? வழக்கம் போல், எல்லா வருடங்களும் போல், கூட்டம் கூட்டமாக, மந்தை மந்தையாக, சாரி சாரியாக, ஒன்று சேர்ந்து, ஒரு பாதையில் செல்வோம். நடுவே வழி தெரியாமல் தொலைந்து போவோம். எல்லோருடனும், ஒன்றாக வெளியேறுவோம். அதைத்தான் ஆசைப்படுகிறோம் என்கிறார்கள்.

சுழல்பாதையைக் கட்டியவனுக்கோ கோபம்; அப்படியே நிறைய வருத்தம்; கூடவே கழிவிறக்கம். என்னடா இது! ஒருவருக்குக் கூடவா, இந்தப் பாதைக்குள் நுழைந்து பார்க்க திராணி இல்லை! எதற்காக ஆசைப்படுகிறோம் என்பதைக் கண்டு அடைவதுதானே, இந்தச் சுழலின் நோக்கம்? அதைச் செய்து பார்க்காமல், ஒதுங்கி, கரையிலேயே தேங்கி இருக்கிறார்களே!

கரையிலேயேத் தேங்கி இருக்கிறோம் என்று பிறர் சொல்வதை நாம் ஏன் குற்றமாகப் பார்க்கிறோம்? எதற்காக, யாருக்கு நிரூபிப்பதற்காக எந்தவொரு விஷயத்தையும் கையில் எடுக்கிறோம்? மற்றவர்களின் சான்றிதழுக்காகத்தான் போட்டிகளில் குதிக்கிறோமா?

கோட்டையில் ஏறி கொடியை நாட்டியபின், கீழிறங்கும் வித்தை உங்களுக்குத் தெரியுமா? சுழலை வெற்றிகரமாக முடித்துவிட்டபின், அந்த சுழலை முழுமையாகப் புரிந்துகொண்டபின், அதைவிட்டு, வெளியேற முடியுமா?

இந்தக் கதையைப் படித்தபின் உங்களுக்கு என்ன கேள்விகள் தோன்றின…?

சரி… இந்த சாதாரணக் கதையை நியு யார்க்கர் ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? இரு பதிப்பாசிரியர்களின் உரையாடலை இங்கேக் காணலாம்:

Collectors – Daniel Alarcón – New Yorker

நியு யார்க்கரில் டேனியல் அலர்க்கான் (Daniel Alarcón) எழுதிய Collectors வாசித்தேன்.

தற்கால தலைமுறையில் டேனியல் முக்கியமான எழுத்தாளர். கிரந்தா போன்ற ஆங்கில சிறுபத்திரிகைகளால் கண்டெடுக்கப்பட்டு, ஹார்ப்பர்ஸ் போன்ற நடுவாந்தர சஞ்சிகைகளுக்கு முன்னேறி, இப்பொழுது வெகுஜன இதழ்களுக்கு வந்தடைந்திருக்கிறார். தெற்கு அமெரிக்க நாடான பெரு-வில் பிறந்திருந்தாலும், பெரும்பாலும் அமெரிக்காவில் வளர்ந்தவர். லத்தீன் அமெரிக்க படைப்பாளியின் இரத்தமும் சதையும் கொண்டு அமெரிக்கர்களுக்கு உவந்த மாதிரி கதை புனைகிறார்.

கொட்டடிக்காரர்கள் (Collectors) கதை இருவரைப் பற்றியது. இருவரும் சிறைக்கு எப்படி வந்தார்கள் என்பதைப் பற்றியது. சிறைக்கைதிகளானவர்களின் வாழ்க்கையை பற்றியது. சிறைக்கு வரக் காரணமானவர்களைப் பற்றியது. கூண்டுக்குளே போவதற்கு முன் இருந்த குடும்ப சூழலைப் பற்றியது.

ரொஜீலியோ (Rogelio) பிறப்பிலே ஏழை. மாற்றுத் திறனாளி. அதனால், பள்ளியில் ஏச்சுக்குள்ளாகுபவன். அண்ணன் வழியில் சில்லறைக் கடத்தலில் ஈடுபடுகிறான். லஞ்சம் தராமல் மாட்டிக் கொள்கிறான். வெளி உலகில் ஜீவனம் நடத்தத் தெரியாதவன், ஜெயிலில் பிழைக்கக் கற்றுக் கொள்கிறான்.

காவற்கூடத்தில் அவனுடைய நண்பனாக ஹென்றி அறிமுகமாகிறான். புரட்சிக்காரன். இடதுசாரி. ’அசட்டு ஜனாதிபதி’ நாடகம் போடுகிறான். தீவிரவாதி என குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளே வைக்கப்படுகிறான். அவனை வெளியே எடுப்பதில் அக்காகாரி உட்பட ஊடகங்களும் பங்கு வகிக்கின்றன.

சிறைவாசிகளை மனிதர்களாக உலவவிடுகிறார் டேனியல். அச்சமுறும் செய்கை புரிந்தவர்களின் குணாதிசயங்களையும் நடவடிக்கைகளையும் விவரிக்கிறார். கதாநாயகர்களுக்கிடையே நட்பினால் விளைந்த காமத்தையும் சொல்கிறார். இலட்சியவாதியின் சமரசங்களையும் சாமானியனின் இலட்சியங்களையும் போகிற போக்கில் உணர்த்துவது பிடித்திருந்தது. கிராமத்துக்காரனின் எல்லைகளில்லா பயணமும் கொள்கைவாதியின் குறுகல்களும் பிரச்சாரமாக நெடி அடிக்காதது பிடித்திருந்தது. இருபதிற்கு மேற்பட்ட பக்கங்களை இலயிக்க வைத்தது பிடித்திருந்தது.

Fiction: Zadie Smith: “MOONLIT LANDSCAPE WITH BRIDGE”

ஜேடி ஸ்மித்தின் முழுக் கதையும் நியு யார்க்கரில் வாசிக்கக் கிடைக்கிறது.

Van_der_Neer_-_Moonlit_Landscape_with_Bridgeஇது தேர்தல் காலம். தர்மபுரி இளவரசன் இறந்தால், தொல் திருமாவளவன் தலைவராகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர் தீக்குளித்தால், இரவிக்குமாருக்கு தொகுதி கிடைக்கிறது. அந்த மாதிரி மந்திரி ஒருவரின் வாழ்க்கையை இந்தப் புனைவு சித்தரிக்கிறது.

சிறுகதையை நீங்கள் எப்படித் துவங்குகிறீர்கள்? முடிவுக்கு மிக அருகேவா? அல்லது கதையின் சாரத்தைக் குறியீடாக முன்வைத்தா? பிணத்தை அலங்கரித்து நடுக்கூடத்தில் வைப்பது போன்ற தோரணையுடன் கதை துவங்குகிறது. ஆப்பிரிக்காவிலோ அல்லது ஃபிலிப்பைன்ஸிலோ அல்லது அது போன்ற சுரண்டல் தேசத்தின் தலைவர், தன்னுடைய சொந்த நாட்டை விட்டு சொர்க்கபுரிக்கு ஓடுவதுதான் கதை.

கதையின் நடுவில் தலைப்பு வந்து சேர்கிறது. வான் டெர் நீர் (Aert van der Neer) வரைந்த ஓவியத்தை எடுத்துப் போகிறார் அமைச்சர். அவருக்கு அது சொந்த ஊரை நினைவூட்டுகிறது. அயல்நாட்டு ஓவியனை வைத்துதான் தன்னுடைய பிறந்த கிராமத்தை அறியுமளவு அவர் அன்னியப்பட்டுப் போயிருக்கிறார். நெதர்லாந்து எப்படி இவ்வளவு பெரிய சக்தியாக மாறியது? கடல் கொள்ளையர்களாக இருந்த ஆதி டட்ச்காரர்கள், ஊர் விட்டு ஊர் வந்தவுடன் முதலீட்டாளராக மாறுகிறார்கள். அதே போல் லஞ்ச அமைச்சரும் தன்னுடைய திருட்டுப் பணத்தைக் கொண்டு பிரெஞ்சு நாட்டில் செல்வந்தராகிறார்.

ஏழ்மையை விவரிக்கும்போது பச்சாதாபத்தை சிலர் உருவாக்குவார்கள். அதன் மூலம் பணத்தை நன்கொடையாக வழங்கும் எண்ணம் உருவாகும். சிலர் பசியையும் பட்டினியையும் காரண காரியத்தோடு விளக்குவார்கள். அதன் மூலம் அறிவும் தர்க்கமும் பெருகுவதாக நினைப்பு உருவாகும். இந்தக் கதையில் வறியவர்களின் நிலை, இயற்கையைப் போல் சூறாவளியாக, இயற்கையாக தரப்படுகிறது. இயற்கை நிகழ்வு நடந்தபிறகுதான் தெரிந்து கொள்ள முடிகிறது. கொஞ்சம் அசௌகரியமாக இருக்கிறது. கொஞ்சம் போல் ஆத்திரமும் கோபமும் எழுகிறது. பைத்தியக்காரத்தனமாகவும் தோன்றுகிறது.

கதையின் உவமைகளும் செழுமையானவை.

தன்னுடைய கொட்டில் கதவை மெல்ல முட்டும் பசு போல் அமைச்சருடைய கையை வேலைக்காரி பற்றினாள்.

அமைச்சர் கட்டப் போவதாக சொல்லி பாதியில் நிற்கும் அணைக்கட்டைப் பார்த்தால் கிரேக்க காலத்து நாடக மேடையின் காலி இருக்கை போல் தென்பட்டது.

கதையின் முடிவு எல்லாவற்றையும் விட அதிர்ச்சியானவை. நல்லவன் வாழ்வான்; அல்லது செய்தவன் அழிவான என்னும் நீதிக்கதை படித்து வந்தவனுக்கு, இந்த முடிவு ஏற்பில்லைதான். ஆனால், நிஜத்தில் அதுதானே நடக்கிறது?

நகரம் & கிராமம்: மாறும் வாழ்க்கை

பாஸ்டன் நகரம் பக்கமாக இருக்கும் கிராமப்புறத்தில் வசிக்க வந்தேன். அது மெதுவாக நகர்ப்புறமாக மாறுவதைப் பார்க்கிறேன். அந்த மாற்றத்தை “Coming Soon” என்று ஸ்டீவன் மில்லவுஸர் (Steven Millhauser) சிறுகதையாக படம் பிடித்திருக்கிறார். நியு யார்க்கரில் வெளியான புனைவு. இங்கே, அந்தக் கதைக்கான புகைப்படம் உருவான கதை.

தீஸியஸின் கப்பலைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது போல் கதாநாயகனின் உலகமும் மீளுருவாக்கமாகவே நீள்கிறது. நேற்று வீடு இருந்த இடத்தில், இன்று அடுக்கு மாடி கட்டிடம். சில நாள் முன்பு காபி கடை. சில நாள் கழித்து தொடர் அங்காடி வளாகம். இன்னும் சில நாள் கழித்து நவநாகரிக விற்பனை மையம். மாறிக் கொண்டே இருக்கிறது. கடந்த இருபது வருடங்களாக அமெரிக்காவில் இதை சகஜமாகப் பார்க்கிறேன். தொண்ணூறுகளில் இருந்த கடைகள் இப்பொழுது இல்லை. அவற்றுக்கு பதிலாக அதே இடங்களில் வேறு விஷயங்கள் முளைத்திருக்கும்.

இது அமெரிக்காவிற்கு மட்டும் உரித்தானதும் அல்ல. சீனப் பாம்பும் இப்படி புதுப்புது தோல் உடுத்திக் கொண்டே இருக்கிறது. பெரிய தோட்டம் கொண்ட வீடு; வீட்டில் இருந்து இரண்டு தப்படி நடந்தால் முக்கு கடையில் செய்தித்தாள். அங்கிருந்து பொடிநடையாக சென்றால் நதிக்கரை. நகரத்திற்கு எதிர்ப்பதமாக அமைதியான வாழ்க்கை. நெரிசல் இல்லாத சாலை. மீன் வாசனை இருக்கும்; ஆனால், மூத்திர வாசனை கொண்ட பேருந்து பயணம் இருக்காது. இருபது மாடி கட்டிடத்தில் இருந்து கீழே இருப்பதை ரசிப்பதை விட படகில் சென்று பக்கவாட்டில் தூரமாகும் வாழ்க்கையின் அழகை நீரோடையாக பார்க்கச் சொல்லும் நிதானம் கொண்டது.

வெறுமனே விவரிப்புகள் மட்டும் கதை ஆகாது என்பதில் வெகு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதே போல் பழைய கதைகளை மறுபடி தூசி தட்டுவதிலும் ஆர்வம் கிடையாது. இந்த இரண்டையும் இந்தக் கதை கட்டுடைக்கிறது. “விரைவில் வரப்போகிறது” பெரும்பாலும் தன்னுடைய கவனிப்புகளை மட்டுமே முன்வைக்கிறது. அதே சமயம் நல்ல சிறுகதை விட்டுப் போகும் தாக்கங்களையும் மீண்டும் மீண்டும் வாசிக்க வைக்கும் ஆர்வம் உள்ளடக்கிய நடையும் வைத்திருக்கிறது. பள்ளிக்காலத்தில் படித்த ரிப் வான் விங்கிள் நினைவுக்கு வந்தாலும், இவர் நவீன உலகின் கொசு அசுரன்.

ஜெமோ எஃபெக்ட்: படிப்பதில் எல்லாம் வெண்முரசு

Benji_Chinelo_Short_Story_Fiction_Red_New_Yorkerநியு யார்க்கரில் சினேலோ (Chinelo Okparanta) எழுதிய ”பென்ஜி” கதை வாசித்தேன். நாற்பதுகளைத் தாண்டிய பின்னும் மனைவியைத் தேடிக் கொண்டிருக்கும் குள்ளமாய், பணக்காரனாய், அம்மா கோந்தாக இருக்கும் ஆப்பிரிக்கனை பற்றிய கதை. மூன்று முக்கிய கதாபாத்திரங்கள். அம்மா, குள்ளப் பையன், அம்மாவின் புதுத் தோழி. நடுநடுவே வீட்டில் வேலைப் பார்க்கும் தோட்டக்காரரும், சிப்பந்திகளும் வந்து போகிறார்கள்.

பத்து… பன்னிரெண்டு வருடக் கதையை சிறுகதையில் கொடுக்கிறார். அம்மாவிற்கும் தோழிக்கும் நடுவே நடக்கும் உரையாடல், தோழிக்கும் பையனுக்கும் உரையாடல், கூடவே நிறைய சம்பவங்கள் என அமைதியாக நகர்கிறது. நைஜீரியா அறிமுகமாகிறது. முடிவெல்லாம் ஊகிக்க முடிந்தாலும் மனிதர்களின் குணாதிசயமும் சாமர்த்தியமும் சமரசமும் சுவாரசியமாக்குகிறது.

வெண்முரசு வாசித்து வரும் சமயத்தில் இந்தக் கதையும் வாசித்ததால், அந்தத் தோழி கதாபாத்திரத்தை சத்தியவதிக்கு ஒப்பிட்டுப் பார்த்தேன். பணக்கார நாற்பதுவயசுக்காரனை பீஷ்மராக வைத்துக் கொள்கிறேன். மகாபாரதத்திற்கு இப்படி ஒரு முலாம் பூசிப் பார்த்தால் மகாபாரதத்தின் சூட்சுமங்களை இன்னும் வெளிப்படையாக எழுத்தாளரும் விவரிக்கலாம். அந்த கதாபாத்திரங்களின் நிர்ப்பந்தங்களையும் நிராசைகளையும் வாசகரும் எளிதில் அணுகலாம்.

கதையில் இருந்து..

”பணம் போதலை போதவில்லையென் சிலர் எப்பொழுதும் புலம்பிக் கொண்டே இருப்பார்கள். அப்படி அலட்டுபவர்களிடம்தான் பணம் கொட்டிக் கிடக்கும். அல்லது பணம் குறைவாக இருப்போர்தான் செல்வச்செழிப்பில் இருப்பது போல் பாவ்லா காட்டுகிறார்கள் எனலாம். இந்த இரண்டு வர்க்கத்தில் அவள் எந்த ரகம்?”

தேர்தல் கார்ட்டூன்: தி நியு யார்க்கர்

தொடர்புள்ள இடுகை: Therthal 2009: Top 10 Quotes « 10 Hot

New Yorker Cartoons

1. அபின் ↔ மதம், வலை, திரைப்படம்

எலி ↔ ¿ ¡ ?

ஆய்வாளர் ↔ வலைப்பதிவாளர், அச்சு எழுத்தாளர், விமர்சகர்

Mouse Addiction


2. பொருள்பட அளவளாவுதல்

heart to heart - Open Discussions


3. கருத்துப் பகிரலும் பகைவர் பந்தமும்


Happy Holidays


4. ‘அய்யோ பாவம்’
Appearances are deceptive


5. விளங்கக்கூடிய மனிதர்


unravel-human-new-yorker-cartoons-comics-images.gif

Cartoons from the Issue of April 7th, 2008: Issue Cartoons: The New Yorker