Tag Archives: சினிமா

Benny Dayal – A Performer

பென்னி தயால் பாடி நீங்கள் கேட்டிருப்பீர்கள். ரவியைப் போல் மெச்சியிருப்பீர்கள். அவர் பாடி நீங்கள் பார்த்ததுண்டா?

மெகா டிவி புண்ணியத்தில் ‘சங்கர்ஷ் 2010’ நிகழ்ச்சியில் பார்த்தேன். கொண்டாட்டமாக ஆடினார்; உற்சாகமாக ‘ஊலலா’ ரீங்காரித்தார்; இளமைத் துள்ளலுக்கு definition கேட்டால் உத்தரவாதமாக பென்னியை சொல்லலாம்.

Infectious enthusiasm என்பார்கள். ‘வேதம் புதிது’ அமலாவின் ஜாக்கெட்டுக்குள் நுழைந்த மீன் என்பேன். அமலாவின் நளினம்; மீனின் லாவகம் – இரண்டும் குழையும் குரலுடன்,மேடையில் நடனமாடியது.

கர்னாடக சங்கீதம் பதினைந்து வருடம்; தாம்பரம் கிறிஸ்டியன் கல்லூரி வாசம்; அபு தாபி வளர்ப்பு; இவையெல்லாம் போதாதென்று பரதநாட்டியமும் பயின்றுவிட்டார்.

ஹிந்தியிலும் கொஞ்சுகிறார். சின்னச் சின்ன ஆசையில் துவங்கி, ‘ஒமானப் பெண்’ண்ணிற்கு சிரமமில்லாமல் பாய்கிறார். சகாக்களை சுவாரசியமாக அறிமுகம் செய்கிறார்.

ஹரிஹரன், ஷங்கர் மகாதேவன் எல்லாம் ஸோ நைன்ட்டீஸ்… பென்னி இஸ் இன்!

அங்காடித் தெரு: இலக்கியம், குறியீடு, அரசியல் – Extrapolation

திரைப்படத்தை நாம் என்றுமே, திரைப்படமாக மட்டும் பார்ப்பதில்லை. எழுதவேண்டிய ஆக்கம் என்றால், மூர்மார்க்கெட்டில் இருந்து கோயம்பேடுக்கு ரோடு போடுவோம். உள்நோக்கம், குறியீடு, படைப்பு அரசியல் என்று விரிய வைக்கலாம்.

அப்படி சமகோட்டுப் பார்வையில் ஜெயமோகன் வசனம் எழுதிய ‘அங்காடி தெரு‘ சினிமாவிற்கான சித்திரம் இது.

உண்மையில் இதைத்தான் சொல்ல வந்தாரோ, இவரைத்தான் குறிப்பிடுகிறாரோ, இந்த சண்டையைத்தான் இவ்வாறு முடிச்சுப் போடுகிறாரோ என்று எண்ண வைக்கும் கதாபாத்திர ஒப்பீட்டு பத்து.

  1. சேர்மக் கனியாக வரும் அஞ்சலி: ஜெயமோகன்
  2. (நாயகன்) ஜோதிலிங்கம்: தமிழ் சினிமாவுலகம்
  3. ஜவுளிக் கடை முதலாளி அண்ணாச்சி: சுந்தர ராமசாமி
  4. ஊழியர்களின் கண்காணிப்பாளர் – கருங்காலி: ‘காலச்சுவடு’ கண்ணன்
  5. ஹீரோவின் தோழர் மாரிமுத்து: வசந்தகுமார்
  6. நகராட்சி கழிவறையை உபயோகித்து சம்பாதிக்கும் வழிப்போகன்: சாரு நிவேதிதா
  7. பாலியல் தொழிலாளியை மணந்து கொள்ளும் உயரம் குறைவானவர்: சுஜாதா
  8. பிளாட்பாரத்தில் கைக்குட்டை விற்கும் இசுலாமியப் பெரியவர்: ‘உயிர்மை’ மனுஷ்யபுத்திரன்
  9. மகளை ஆஸ்பத்திரியில் அம்போவென்று விட்டுச்செல்லும் தந்தை: ஜாலியாக லிங்க் போடும் இடத்தில், சீரியஸாக நிஜ வாழ்க்கைக்கு தொடுப்புக் கொடுக்கலாமா!
  10. நடிகை சினேகா: வேற யாருங்க… இதில் கூடவா குறி வைக்க முடியும்?

உதவிய பதிவுகள்:

அங்காடித் தெரு, பார்ப்பனீயம், சாதி, பெண்ணியம் – திருமலை ராஜன்

தொடர்புள்ள செய்தி:

:: By NILANJANA S. ROY (NYT) – In India, thousands of women are participating in movements against the abuse of women in public spaces.
முந்தைய இடுகை :: ஜாதி: தேவையா? வேண்டாமா?

முதலில் அங்காடித் தெரு சினிமாவில் நீங்கள் வைத்திருந்த பிராமணப் பெண்ணின் பாத்திரம் உங்கள் கதைப் படி, கதையின் வலுவிற்குத் தேவையான ஒரு பாத்திரம் என்பதையும் அந்தப் பெண்மணியின் மூலமாகவே நீங்கள் மாத விலக்கைத் தீட்டாகவும் அதே நேரத்தில் புனிதமாகவும் கருதும் இந்து மதத்தின் இரு வேறு எல்லைகளை விளக்குவதற்கும் அதன் மூலம் சேர்மக்கனி பெறும் மன தைரியத்தை விளக்குவதற்கும் அந்தப் பாத்திரத்தை நீங்கள் படைத்திருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். நிச்சயம் உங்களது பாத்திரப் படைப்பிற்கு உள்நோக்கம் கற்பிக்கவும் மாட்டேன். அதன் நோக்கம் பற்றி நன்கு அறிந்தவன். மேலும் அந்த வழக்கத்தைக் கடைப்பிடிக்கும் ஒரு பிராமணப் பெண்ணைக் காட்டினால் மட்டுமே அந்தக் காட்சிக்கு யதார்த்தமும், நிஜத்தன்மையும் கிட்டும் என்பதற்காக நீங்கள் அதை வைத்திருக்கிறீர்கள் என்பதையும் நான் நன்கு அறிவேன்.

நிச்சயமாக நீங்கள் பிராமணர்களை இழிவு செய்யும் நோக்கத்தில் அந்தப் பாத்திரத்தை வைக்கவில்லை என்பதை நன்கு அறிவேன். அதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. ஒரு காட்சிக்கு அதன் களனும், அந்தப் பாத்திரங்களின் நம்பகத்தன்மையும், களனின் யதார்த்தமும், ஏன் பாத்திரங்கள் கையாளும் மொழியும் கூட முக்கியமானவை என்பதை மலையாளப் படங்களையும், பிற முக்கியமான உலகப் படங்களையும் தொடர்ந்து பார்ப்பவன் என்ற முறையில் இந்தக் காட்சிக்கு நீங்கள் பயன் படுத்தியிருக்கும் பாத்திரத்தின் ஜாதியின் முக்கியத்துவம் குறித்தும் நான் வேறு எவரையும் விட மிக நன்றாகவே அறிவேன்.

நம்பூதிரிகளைக் காட்டாமல் ஒரு பரிணயம் எடுக்கவியலாது. மீனவர்களைக் காட்டாமல் ஒரு செம்மீன் சாத்தியமேயில்லை. கம்னியுஸ்டுகளைக் காட்டாமல் ஒரு அரபிக் கதாவை எடுத்திருக்க முடியாது. நாயர்களைச் சொல்லாமல் ஈழவர்களைச் சொல்லாமல் பெரும்பாலான மலையாளப் படங்களை எடுத்திருக்கவே முடியாது. முஸ்லீம்களைச் சொல்லாமல் ஒரு மிழிகள் சாட்சி எடுத்திருக்க முடியாது. கிறிஸ்துவர்களைக் காண்பிக்காமல் ஒரு அச்சன் உறங்காத வீட்டையோ, ஒரு சின்சையோ தொட்டிருக்கக் கூட முடியாது.

ஆகவே ஒரு படைப்பில் அது சினிமாவாக இருந்தாலும் சரி, நாவலாக இருந்தாலும் சரி அந்தக் கதையில் ஒரு குறிப்பிட்ட இனக்குழுவைச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டாலோ அதைச் சொல்லியே ஆக வேண்டும். அப்படிச் சொல்லாமல் மழுப்பினால் அது மணிரத்தினத்தின“இருவர்” சினிமா போல ஒரு வெளிறிப் போன ஒரு அபத்தமான படைப்பாகவே போய் முடியும். அந்தப் படைப்பின் நம்பகத்தன்மையே கேள்விக்குரியதாகி அந்தப் படைப்பே கேலிக்குரியதாகி விடும். ஆகவே ஒரு படத்திலோ ஒரு நாவலிலோ ஒரு ஜாதியோ, ஒரு கட்சியோ, ஒரு இனமோ, ஒரு மதமோ சொல்ல வேண்டிய தேவை அந்தக் கதைக்கு இருப்பின் அதைத் தயங்காமல் சொன்னால் மட்டுமே ஒரு நல்ல படைப்பு உருவாகும் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் ஆட்சேபணையும் கிடையாது.

அதே அடிப்படையில் எனக்கும் அங்காடித் தெரு படத்தில் நீங்கள் படைத்திருக்கும் பாத்திரங்களில் எந்தவித உள்நோக்கமும் கிடையாது என்பதை நான் நிச்சயமாகத் தயங்காமல் சொல்வேன். அப்படி எவ்வித சந்தேகமும் இருந்திருப்பின் மிக நீண்ட இரு பெரும் பதிவுகளை அந்தப் படம் குறித்து

http://solvanam.com/?p=7588
http://solvanam.com/?p=7575

நான் சொல்வனத்தில் எழுதியே இருக்க மாட்டேன்.

இரண்டாவதாக நான் எந்த ஜாதியின் பிரதிநிதியாகவும் என்னை நிறுத்திக் கொண்டு இங்கே எழுதவில்லை. முதலில் அப்படி நிறுத்திக் கொள்ளும் தகுதி எனக்குக் கிடையாது. அப்படியே நான் நிறுத்திக் கொள்ள முயன்றாலும் அதே ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்னைக் கல்லால் அடித்து இறக்கி விட்டு விடுவார்கள். ஆகவே அந்த சந்தேகமும் உங்களுக்கு வேண்டியதில்லை. நான் இங்கு என் சார்பாக மட்டுமே என் அனுபவத்தின் அடிப்படையில் விளைந்த சில கருத்துக்களை மட்டுமே இங்கு பகிர்ந்து கொள்கிறேனே அன்றி நான் யாரையும் எந்த ஜாதியின் பிரதிநிதியாகவும் பேசவில்லை என்பதை தெளிவாகச் சொல்லிக் கொள்கிறேன்.

வேறு எந்த ஜாதிக்கு வேண்டுமானாலும் ஒரு ஒற்றுமையான பிரதிநிதி இருந்து விட முடியும் ஆனால் பிராமணர்களுக்கு மட்டும் அந்த ஒற்றுமை உணர்வு சாத்தியமே இல்லை என்பது என் தீர்மானமான எண்ணம். அங்கு ஒரே ஒருவர் மட்டும் மிச்சம் இருந்தால் கூட நிச்சயம் இரண்டு விதமான கருத்து அந்த ஒருவரிடமிருந்தே கிளம்பும் அவ்வளவு ஒற்றுமையுள்ள சமூகம் அது. ஆகவே நான் எனக்காக மட்டுமே இங்கு பேசுகிறேன் என்பதையும் தெளிவு படுத்தி விடுகிறேன்.

ஆனால் ஒருவர் ஒரு குழுவிற்காக பேசுவதில் எந்த தப்பும் இல்லை என்பது என் கருத்து. இஸ்லாமியத் தீவீரவாதத்தால் குண்டு வெடிப்புகளால் பாதிக்கப் படும் எந்தவொரு ஹிந்துவும் ஹிந்துக்கள் சார்பாகப் பேசினால் அதை நாம் தவறாக கருத முடியாது என்பதே என் எண்ணம்.

இன்று தமிழ் நாட்டில் ஏழை பள்ளி மாணவர்களில் கிறிஸ்துவர்களுக்கும், முஸ்லீம்களுக்கு மட்டுமே பண உதவி அரசாங்கத்தால் செய்யப் பட்டு வருகிறது. அதை விடக் கீழான ஏழ்மையில் இருக்கும் இந்து மாணவர்களுக்கு அந்தச் சலுகை மறுக்கப் படுகிறது. வருடத்திற்கு ஒரு கிறிஸ்துவ/முஸ்லீம் மாணவனுக்கு அரசாங்கமே கல்லூரிப் படிப்பிற்காக ஒரு லட்சம் ரூபாய்கள் வழங்குகிறது ஆனால் அதே வேளையில் கடும் ஏழ்மைச் சூழலில் வாழும் இந்து மாணவனுக்கு அது கிடையாது என்னும் பொழுது அந்த ஒரு லட்ச ரூபாய்க்காக அந்த ஏழை இந்து மாணவன் மதம் மாற வாய்ப்புகள் உண்டு.

ஆக அரசாங்கமே மதமாறத்தை ஊக்குவிக்கிறது என்ற அநியாயத்தைக் கருதி ஒரு இந்துவாக நான் குரல் கொடுத்தால் நிச்சயமாக அதை ஒரு குழுவின் பிரதிநிதியாக என்னைக் கருதிக் கொள்கிறேன் என்று நீங்கள் குறை சொல்ல மாட்டீர்கள் என்றே எண்ணுகிறேன். அப்படிச் சொன்னால் அது தவறு. ஆக ஒரு சில இடங்களில் பிரதிநித்த்துவக் குரல்கள் ஒலிப்பதில் தவறில்லை என்றே நான் கருதுகிறேன்

இந்த இரண்டு சுய விளக்கங்களுடன் என் கருத்துக்களை வைக்கிறேன்.

முதலில் தமிழ் சினிமக்களில் பிராமண ஜாதி பாத்திரங்கள் இழிவாகக் காண்பிக்கப் படுவது குறித்து சில கருத்துக்கள்.

தமிழ் சினிமா, இலக்கிய, கலைச் சூழலில் இன்று நீங்கள் எந்த ஜாதியையும், எந்த கட்சியையும் குறை கூறும் வகையில் சொல்லி விட முடியாது. ஆனால் அதற்கு ஒரே ஒரு விதிவிலக்கு பிராமணர்கள் மட்டுமே. பிராமணர்களை சினிமாக்களில் இழிவாகவும், கேலிக்குரியவர்களாகவும், ஆபாசமாகவும் காண்பிக்கப் படுவது எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் பல வருடங்களகாகத் தமிழ் நாட்டில் தொடர்ந்து வருகிறது. இதை ஆரம்பித்து வைத்தவர்களே பிராமண சினிமாக்காரர்கள் தான் என்பதையும் சொல்ல வேண்டும்.

சூர்யா போன்ற இயக்குனர்கள் பிராமணப் பெண்களைக் காட்டும் விதம் போல் வேறு எந்த விதப் பெண்களையும் பெயர் சொல்லிக் காண்பித்து விட முடியாது. சினிமாக்களில் மட்டும் அல்ல பத்திரிகைகள், இணைய தளங்கள், ப்ளாகுகள் ஆகிய இடங்களிலும் கூட இந்த ஆபாசம் தொடர்கிறது. அதற்கு எந்த விதமான நியாயத்தையும் சொல்லி விட முடியாது. ஒரே காரணம் அவர்கள் எண்ணிக்கையில் குறைவானவர்கள். எதிர்த்துப் பேச விருப்பம் இல்லாதவர்கள் அல்லது அதற்கான ஒற்றுமை இல்லாதவர்கள்.

ஏற்கனவே தமிழக அரசியலில் அவர்கள் கொடுமையானவர்களாகவும் ஆதிக்க ஜாதியினர்களாகவும் பெரும் வில்லன்களாகச் சித்தரிக்கப் பட்டவர்கள். ஆகவே அவர்களை எப்படி சித்தரித்தாலும் யாரும் எதிர்த்து கேள்வி கேட்க்க மாட்டார்கள், அப்படியே ஒரு சிலர் வந்தாலும் அவர்களை அடித்து விரட்டி விடலாம் என்ற எண்ணம் மட்டுமே இவ்வித சித்தரிப்புக்களுக்குக் காரணம். இதையே நான் எந்த ஜாதியைச் சேர்ந்தவனாக இருந்தாலும் சொல்லியிருந்திருப்பேன்.

ஒரு ஜாதியினரை ஒரு கதையின் நம்பகத்தன்மை கருதி காண்பிக்கக் கூடாதா என்றால் அதற்குப் எனது பதில் தாராளமாக காண்பிக்கலாம் காண்பிக்க வேண்டும் என்பதே. ஆனால் தமிழ் சினிமாக்களில் சமீப காலமாக அந்த வித யதார்த்த நோக்கம் கருதி பிராமணர்கள் காண்பிக்கப் படுவதில்லை. அவர்களது உடை, தோற்றம், மொழி ஆகியவற்றைக் கேலி செய்யும் நோக்கிலும் பெண்களை விரக் தாபத்தில் அலையும் பெண்களாகச் சித்தரிக்கும் நோக்கிலும் மட்டுமே அந்த ஜாதியினர் காண்பிக்கப் படுகிறார்கள் என்பதைத் தமிழ் படங்களைத் தொடர்ந்து பார்க்கும் எவரும் அறிவர்.

இதனால் உனக்கு என்ன? நீ ஏன் அவர்களது பிரதிநிதியாக வருகிறாய் ? என்று நீங்கள் கேட்க்கலாம்.

நான் யாருடைய பிரதிநிதியாகவும் இங்கு வரவில்லை. நான் என்னுடைய பிரதிநிதியாக மட்டுமே இங்கு பேசுகிறேன்.

ஒரு பிராமணப் பெண்ணை தொடர்ந்து தமிழ் சினிமாக்களில் விரக தாபம் மிக்க பெண்களாக சித்தரிப்பதன் மூலம் அந்த ஜாதிப் பெண்கள் தெருவில் வரும் பொழுது அவர்களைக் காணும் எந்தவொரு விடலைப் பையன்கள் மனதிலும், எந்தவொரு பொறுக்கியின் மனதிலும், எந்தவொரு லும்பன்களின் மனதிலும் அவர்களை கேலிப் பொருளாக எளிதில் வக்கிரமாகக் கைக்கொள்ளும் மனோநிலையே ஏற்படும். இதில் படிதவர்களுக்கும் தெருவில் சுற்றும் ரவுடிகளுக்கும் கூட வித்தியாசம் இல்லை.

அதனால்தான் அமெரிக்காவில் பி எச் டி செய்யும் பொறுக்கிகள் கூட இணையத்தில் பாட மறுக்கும் பாப்ப்பாத்திகள் என்று எளிதாக எழுதி விட்டு முற்போக்குப் பட்டமும் வாங்கிக் கொண்டு போய் விட முடிகிறது.

சினிமாக்களில் மட்டும் அல்லாமல் ஒவ்வொரு தெருமுனை தி க, தி மு க, தனித் தமிழ் கூட்டங்களிலும் இதே விதமான வக்கிரப் பிரச்சாரமே தமிழ் நாட்டில் கடந்த அறுபது வருடங்களாக அவிழ்ந்த்து விடப் பட்டிருக்கிறது. இவ்வாறான ஒரு சூழலில் சினிமாக்களும் சேர்ந்து கொள்ளும் பொழுது பிராமணப் பெண்களும் ஆண்களும் தெருவில் செல்லும் பொழுது ஏற்படுத்தப் படும் அவமானகரமான செயல்பாடுகளுக்கு இந்த விதமான சினிமாக்களே பொறுப்பாகின்றன. இதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் தமிழ் இணைய ப்ளாகுகளையும் அதில் வெளியிடப் படும் பின்னூட்டங்களையும் ஒரு நாள் உலாவிப் பார்த்தாலே புரிந்து விடும்.

பிராமணப் பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் கூட கடுமையான கேலிக்கும் தாக்குதலும் அடிக்கடி உள்ளாகின்றனர். ஆவணி அவிட்டம் என்ற பிராமணர்களின் பூணூல் அணியும் சடங்கு முடிந்து அவர்கள் வீடுகளுக்குத் திரும்புகையில் தாக்கப் படுவதும் ஆபாசமாகக் கிண்டல் செய்யப் படுவதும் இன்றும் தமிழ் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளில் நடை பெறுகின்ற ஒரு காட்சியே. ஒரு முஸ்லீம் பெண் பர்தா அணிந்து வரும் பொழுது செய்யப் படாத ஒரு கிண்டல், ஒரு முஸ்லீம் குல்லா போட்டு வரும் பொழுது, மீசையை மழித்து விட்டுத் தாடி மட்டும் வைத்துக் கொண்டு செல்லும் பொழுது செய்யப் படாத ஒரு கேலி, ஒரு சர்தார் தாடி வைத்து, டர்பன் வைத்துக் கொண்டு போகும் பொழுது செய்யப் படாத அவமானம், ஒரு பாதிரியார் பாவாடை அணிந்து கொண்டு போகும் பொழுது செய்யப் படாத ஒரு ஏளனம், ஒரு பிராமணப் பெண் மடிசார் கட்டிக் கொண்டு போகும் பொழுதும், ஒரு பிராமணப் புரோகிதர் குடுமி வைத்துக் கொண்டு செல்லும் பொழுதும், ஒரு பிராமணர் பூணூல் அணிந்து கொண்டு போகும் பொழுது மட்டுமே செய்யப் படுவதன் காரணம் என்ன? தமிழ் நாட்டின் இன வெறுப்பு அரசியல் மற்றும் ஆபாச சினிமாக்கள் இரண்டுமே காரணம் என்று நான் சொல்கிறேன்.

இதை நீ ஏன் சொல்கிறாய் என்று கேட்டால் என் மனைவியோ, அம்மாவோ, அப்பாவோ, மகளோ செல்லப் படும் பொழுதும் இதே அவமானத்திற்கும் தாக்குதலுக்கும் உள்ளாகக் கூடிய சாத்தியங்கள் இருப்பதினால் சுயநலம் கருதி நான் இவற்றைக் கடுமையாக எதிர்க்கிறேன். கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்.

இதனால் பாதிக்கப் படாத இந்த நிலைகளையெல்லாம் அறிய நேராத நீங்களோ வேறு எவருமோ இதையெல்லாம் வெற்றுப் புலம்பல் என்று கருதி மிக எளிதாக இடது கையால் ஒதுக்கி விட்டுப் போய் விடலாம் அல்லது ஒரு குழுவின் பிரதிநிதியாக தன்னைக் கருதிக் கொண்டு அநாவசியமாகப் புலம்புகிறான் என்று மிக எளிதாக ஒதுக்கி விடலாம். உண்மை அதுவல்ல இன்றும் இவை போன்ற அவமானத் தாக்குதல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன அதற்குப் பெரும் அளவில் நம் அரசியல் கட்சிகளும், ஆதிக்க ஜாதியினரின் பழியைப் பிறரிடம் தள்ளி விடும் போக்கும், சினிமாக்களுமே காரணம் என்று நான் கருதுகிறேன். அந்தக் காரணங்களினால் நான் சொந்த வாழ்வில் நானும் என் குடும்பத்தாரும் பாதிக்கப் படும் பொழுதும் அவ்வாறு பாதிக்கப் படும் சாத்தியம் இருக்கும் பொழுதும் அதற்கான காரணங்களை ஒது தனிப்பட்ட ஒரு அநாதயான குரலாகவேனும் ஒரு சிறிய பலவீனமான எதிர்ப்பையாவது பதிய முயல்கிறேன்.

இப்படி சினிமாக்களில் பிராமணர்களை அவமானப் படுத்தும் போக்குகளை ஒரு ஞாநியோ, ஒரு தி ஹிந்து ராமோ ஒரு கமலஹாசனோ கேள்வி கேட்க்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்களின் சுய அடையாளங்களை மறைப்பதற்கே அவர்கள் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்கிறார்கள்.

மேலும் ஒரு கமலஹாசனின் குடும்பப் பெண்களோ, ஒரு பாலச்சந்தரின் குடும்பப் பெண்களோ டவுண் பஸ்ஸில், தாம்பரம் பீச் ட்ரெயினில் செல்பவர்கள் அல்லர், ரேஷன் அரிசிக்காக க்யூவில் நிற்கும் பிராமணர்கள் அல்லர், தனியார் வேலைக்குச் செல்பவர்கள் அல்லர். ஆகவே அவர்களுக்கு இது குறித்து எவ்விதக் கவலையும் கிடையாது, மாறாக ஒரு ஜெயமோகனை தலித்துக்களை அவமானப் படுத்தி விட்டார் என்று சொன்னால் அவர்களுக்கு முற்போக்கு பட்டம் கிட்டும் அவர்களின் ஜாதி அடையாளத்தை மறைக்க உதவும் அதனால் அதை வேகமாகச் செய்வார்கள்.

ஆகவே பாதிக்கப் படுபவர்கள் மட்டுமே இது குறித்து ஏதேனும் சொல்ல முடியும். நான் இந்த விஷயத்தில் மிகக் கடுமையாகப் பாதிக்கப் பட்டவன். சிறு வயதில் நான் அனுபவதித்த ஒரு கொடூரமான தாக்குதலின் பயங்கரத்தில் இருந்து இன்றும் மீள முடியாத கடுமையான கசப்பில் உழல்பவன் என்ற முறையில் இவை போன்ற சினிமாக்களை ஒரு தனி மனிதனாக கண்டித்தால் அது தவறு ஏதும் இருக்க முடியாது என்றே கருதுகிறேன்.

சினிமாவில் பிராமணப் பெண் அலைவதாகக் கவர்ச்சி மதிப்பு கருதி மட்டும் காண்பிக்கப் படும் பொழுது அதைப் பார்க்கும் ரோட்டில் அலையும் ரவுடிக்கு அவன் காணும் பிராமணப் பெண்களின் இடுப்பைக் கிள்ளச் சொல்லும் தைரியத்தை அளிக்கிறது. சினிமாவில் குடுமி வைத்த ஒரு புரோகிதர் இழிவு செய்யப் படும் பொழுது ரோட்டில் அதே போலச் செய்யும் ஒரு புரோகிதர் அசிங்கமாக ஏசப் படுகிறார் சமயங்களில் தாக்குதலுக்கும் உள்ளாகிறார். இவையெல்லாம் நடக்கின்றன, நானே கண்டிருக்கிறேன். உங்கள் சூழலில் நடக்கவில்லை என்பதினால் இப்படி நடப்பதேயில்லை என்று சொல்லி விடாதீர்கள்.

ஏன் தமிழ் நாட்டில் தலித்துக்கள் அவமானப் படுத்தப் படுவதில்லையா, கொடுமைக்குள்ளாவதில்லையா நீ அவமானப் பட்டால் என்ன உன் முன்னோர் செய்த பாவத்திற்கு நீ கொடுக்கும் விலை இது என்பது அடுத்த பதிலாக வரும். நிச்சயமாக ஒடு தலித் படும் வேதனைக்கும் அவமானத்திற்கும் வேறு எந்த அவமானமும் ஈடு இணையாகாது. ஆனால் அவர்களை சினிமாவில் அப்படிச் சித்தரிக்க யாரும் துணிவதில்லை.

கட்சி மேடைகளில் யாரும் பேசுவதில்லை. அவர்கள் படும் அவமானம் அந்தந்தப் பகுதிகளில் வாழும் பிராமணர்கள் அல்லாத பிற ஜாதியினரால் உண்டாக்கப் படுவது மட்டுமேயன்றி சினிமாக்கள் காரணமாக இருப்பதில்லை.

எனக்கு ஜெயமோகனைத் தெரியும், ஒரு சினிமாவிலோ ஒரு படைப்பிலோ தேவை கருதி ஒரு ஜாதியோ ஒரு இனமோ, ஒரு மதமோ ஒரு கட்சியோ சித்தரிக்கப் பட வேண்டுமானால் அதன் அவசியம் குறித்து நன்கு தெரியும். ஆகவே அங்காடித் தெருவில் நீங்கள் எந்த வித உள்நோக்கமும் இன்றி அந்தக் கதையின் நம்பகத்தன்மைக்காகவும், அதன் நிஜத்தன்மைக்காகவும் மட்டுமே அந்தக் காட்சியை வைத்திருக்கிறீர்கள் என்பதும் நன்கு தெரியும்.

ஆனால் உங்களை அறியாத உங்கள் எழுத்துக்களைப் படித்தறியாத, உங்கள் நோக்கங்களை அறிந்திராத, தமிழ் சினிமாவில் வழக்கமாக பிராமணர்கள் சித்தரிக்கப் படுவதைக் கண்டு வெறுப்பும், அவநம்பிக்கையும் கொண்ட அதனால் பாதிக்கப் பட்ட ஒரு சராசரி பிராமணப் பெண்ணோ ஆணோ, அப்படிச் செய்யும் சினிமாக்காரர்களையும் உங்களையும், வசந்த பாலனையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கவே செய்வார்கள். அது புரியாமல் உங்களைப் பற்றி அறியாமல் செய்யும் ஒரு செயலாகவே நான் கருதுவேன்.

அடுத்து அடையாளம் குறித்து. எனக்கு அடையாளங்கள் ஏதும் கிடையாது. எனக்கு அடையாளங்களின் அவசியமும் தேவையும் கிடையாது. எந்த பிராமணர்களிடத்தும் போய் எதற்காகவும் கெஞ்சி நின்றதும் கிடையாது. ஜாதி என்பது உறவுகளைப் பேணவும் உணவு, சடங்குகள் போன்ற ஒரு சில கலாச்சார அடையாளங்களை தொடர்வதற்காகவும், ஒருவருக்கு ஒருவர் தேவைப் பட்டால் கஷ்டப் படுவதற்கு உதவுவதற்காகவும் வேண்டுமானால் ஜாதிகள் தேவைப் படுமே ஒழிய அவற்றை மீறி அதன் தேவைகள் ஏதும் இல்லை என்ற கொள்கைகள் உடையவன்.

மேலும் ஒருவர் எந்த ஜாதியில் பிறந்தாலும் பிறப்பின் அடிப்படையில் அவர்கள் யாருக்கும் உயர்வானவர்களோ தாழ்வானவர்களோ கிடையாது என்ற நம்பிக்கையும் உடையவன். ஆனாலும் நான் பிறந்த குழுவின் அடிப்படையில் என் மீது நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சில அடையளங்கள் திணிக்கப் படுகின்றன. அதற்கு நான் பொறுப்பாக முடியாது, நீ இந்த ஜாதி ஆகவே இப்படித்தான் நடந்து கொள்வாய் என்ற தெளிவான முன் தீர்மானங்கள் கொண்டே இன்று தமிழ் நாட்டில் எவரும் அணுகப் படுகிறார்கள்.

ஆகவே என் மீது திணிக்கப் படும் ஜாதி சார்ந்த அடையாளங்களுக்கு நான் பொறுப்பாக முடியாது. ஆகவே ஒரு ஜாதியின் அடையாளமாக நான் இதைச் சொல்லாமல் தனிப்பட்ட அளவில் பாதிக்கப் பட்ட பாதிக்கப் படும் வாய்ப்புள்ளவன் என்ற அளவில் மட்டுமே நான் இதை அணுகுகிறேன் என்பதை மீண்டும் ஒரு முறை தெளிவு படுத்திக் கொள்கிறேன்.

அங்காடித் தெருவில் அந்த பிராமணர் பாத்திரம் குறித்தும் பக்தியுள்ள இந்துக்கள் வில்லன்களாக காண்பிக்கப் படுவதும் குறித்தும் நீங்கள் உள்நோக்கம் கருதி அவற்றை வைக்காவிட்டாலும் கூட வக்கிரம் புரையோடிப் போன நம் தமிழ் சூழலில் அவை எவ்வாறு புரிந்து கொள்ளப் படும் என்ற என் அச்சத்தை எனது அங்காடித் தெருவின் சமூகப் பார்வை என்ற கட்டுரையில்

http://solvanam.com/?p=7588

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். குறை உங்களிடம் இல்லை நம் பார்வையாளர்களிடம் உள்ளது என்பதைச் சொல்லியிருக்கிறேன். நீங்கள் ஒரு பிராமணப் பெண்ணை அப்படிச் சித்தரிப்பதினால் எல்லா பிராமணப் -பெண்களுமே அப்படித்தான் என்று சொல்ல வரவில்லை. நீங்கள் ஒட்டு மொத்த ஜாதியையும் சொல்ல வரவில்லை என்பதை ரப்பர் படித்த, பி தொ நி குரல் படித்த, காடு படித்த, அனைத்து கட்டுரைகளையும் படித்த, ஜெயமோகனுடன் நெருங்கிப் பழகி நேரில் அறிந்த நான் நன்கு அறிவேன். அதில் எனக்கு எவ்விதச் சந்தேகமும் கிடையாது.

ஆனால் இதை அறியாத பொதுவாகவே கடந்த அறுபது எழுபது வருடங்களாக தமிழ் நாட்டில் நிலவி வரும் கடுமையான பிராமணக் காழ்ப்புச் சூழலில் வளர்ந்த பிராமணர்கள் என்றாலே கொடூரமான வெறியர்கள் என்று சொல்லி வளர்க்கப் பட்ட தமிழர்களில் பலருக்கும் இந்தக் காட்சி பிராமணர்களை கடுமையாக வெறுக்க மற்றும் ஒரு காரணத்தைக் கற்றுக் கொடுக்கும் அது போன்ற குரோத மனப்பான்மைக்கு தூபம் போடும்.

இது சினிமாவில் அதை வைத்த உங்கள் நோக்கம் வேறு ஆனால் அது பெரும்பான்மை தமிழர்களிடம் ஏற்படுத்தும் விளைவு வேறு. நீங்கள் அறியாமலேயே விளைவது அந்தக் குரோதம். இந்தச் சூழல் கேரளாவில் கிடையாது. அங்கு படம் பார்ப்பவனுக்குத் தெரியும். சினிமாவில் ஒரு நம்பூதிரியோ, ஒரு முஸ்லீமோ, ஒரு கிறிஸ்துவனோ மோசமாக காண்பிக்கப் பட்டால் அது அதே இனத்தைச் சேர்ந்த அனைவரின் ஒட்டு மொத்தக் குணமும் கிடையாது என்பதை ஒரு எளிய மலையாள ரசிகன் கூட புரிந்து கொள்வான்.

ஆனால் தமிழ் நாட்டில் அந்த நிலை இல்லை. ஆகவேதான் தமிழ் சினிமாக்களில் ஜாதிகளை வெளிப்படையாகக் காண்பிப்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. இங்கு நிலவும் சூழலில் ஒரு கட்சியையோ, ஜாதியையோ, தலைவர்களையோ படைப்பின் யதார்த்தம் கருதி கூட அப்படியே காண்பித்து விட முடியாது என்பதுதான் தமிழ் நாட்டு யதார்த்தம். ஆனால் பிராமணர்களை காண்பிக்கலாம் அதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலோனோர் அதை உரிய விதத்தில் புரிந்து கொள்வார்கள். கையை, தலையை வெட்ட வரமாட்டார்கள்.

உண்மைதான்.

அதனால் உங்களைப் போன்ற ஒரு சில படைப்பாளிகள் நேர்மையான காரணங்களினால் ஒரு சின்ன சுதந்திரம் எடுத்துக் கொள்கிறீர்கள் அதில் தப்பும் இல்லை. ஆனால் அந்த சின்ன சுதந்திரம் கூட அப்படிப் பெருந்தன்மையுடன் புரிதலுடன் அமைதி காக்கும் ஒரு தரப்பாருக்கும் கூட எதிர் மறையான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன என்பதே என் ஆதங்கம்.

இன்றைய தமிழ் சூழலில் ஒரு சிவாஜி, ஒரு எம் ஜியாரை விமர்சிக்க முடியாது. பிராமணர்களைத் தவிர வேறு எந்தவித ஜாதியினரையும் பெருமைப் படுத்துவது அன்றி வேறு எந்த விதமாகவும் விமர்சித்து விட முடியாது. பா ஜ க போன்ற ஒரு சில கட்சிகளைத் தவிர வேறு எந்த கட்சியினரையும் சினிமாவில் விமர்சித்து விட்டு உயிரோடு இருந்து விட முடியாது.

இப்படியாகப் பட்ட ஒரு சூழலில் படைப்புச் சுதந்திரம் கருதி எதிர்ப்புத் தெரிவிக்காத ஒரு சமூகத்தை மட்டும் எப்படியும் காண்பிக்கலாம் என்பது நிச்சயம் படைப்பாளிக்கு எந்த வித எதிர்ப்பையும் ஏற்படுத்தாது ஆனால் அந்த சமூகத்தின் மீது தமிழ் நாட்டுச் சூழலில் ஒரு வித புரிதல் இல்லாத எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்த அவை போன்ற யதார்த்தம் கருது உள்நோக்கமின்றி வைக்கப் பட்ட காட்சிகள் காரணமாகி விடுகின்றன என்று கருதுகிறேன்.

இன்றைய சூழலில் தமிழ் நாட்டில் நான் ஒரு சினிமா இயக்குனராக இருந்தால், ஒரு சமுதாயம் அல்லது ஒரு கட்சி மட்டுமே தன் பலவீனம் காரணமாகவோ, எண்ணிக்கை காரணமாகவோ, பெரும் தன்மை காரணமாகவோ, சரியான புரிதலின் காரணமாகவோ அல்லது வேறு எந்த விதமான காரணமாகவோ தன்னைப் பற்றிய நேர்மையான, ஆபாசமான, கேலியான, உள்நோக்குள்ள்ள, இல்லாத அனைத்து விதமான சித்தரிப்புகளையும் பொறுமையுடனும் புன்னகையுடனும் அனுமதிக்கிறது என்றாலும் கூட என் படைப்புகளில் நான் அந்த சமூகத்தை மட்டுமே பயன் படுத்த மாட்டேன். என்று எனக்கு எல்லாவிதமான சமூக அமைப்புகளையும், ஜாதிகளையும்,கட்சிகளையும், தலைவர்களையும் ஒரே விதமாக விமர்சிக்கும், சித்தரிக்கும் உரிமை மறுக்கப் படுகிறதோ அந்தவிதமான ஒரு விஷச் சூழலில் நான் ஒரு சமூகத்தை மட்டும் அது அனுமதிக்கிறது அல்லது அது அனுமதிக்கும் அளவிற்கு பலவீனமாக இருக்கிறது அல்லது பெருந்தன்மையாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக என் படைப்புகளில் அந்தச் சமூகத்தைப் பயன் படுத்திக் கொள்ள மாட்டேன் என்பதே என் நிலைப்பாடாக இருக்கும்.

எமர்ஜென்சியின் பொழுது யாரும் இந்திராவையோ அவரது கட்சியையோ ஆட்சியையோ விமர்சிக்க முடியாது. கடுமையான சென்சார், கடுங்காவல் எல்லாம் அமுலில் இருந்தது. அப்பொழுது கவிழ்க்கப் பட்ட தி மு க ஆட்சியும் ஒன்றும் யோக்யமான ஆட்சி அல்ல அது மாநில அளவில் எதோச்சிகாரமும் ஊழலும் அராஜகமும் செய்து கொண்டிருந்த கட்சிதான் (இன்றைக்கும் அதே கதைதான்) அப்பொழுது சோ வுக்கு கருணாநிதியையும் அவர் ஊழல்களையும் விமர்சிக்க முழு உரிமையும் அனுமதியும் இருந்தது.

அன்று சோ தனது துக்ளக்கில் தாராளமாகக் கருணாநிதியை விமர்சிக்கலாம் ஆனால் இந்திராவை விமர்சிக்க முடியாது. அப்பொழுது சோ ஒரு தீர்மானம் எடுத்தார் எப்பொழுது என்னால் ஒரு கட்சியை விட்டு விட்டு இன்று கவிழ்க்கப் பட்டு பலவீனமாக இருக்கும் மற்றொரு கட்சியை மட்டுமே விமர்சிக்க முடிகிறதோ அப்பொழுது நான் கருணாநிதியையும் விமர்சிக்கப் போவதில்லை. என்று என்னால் இந்திராவை விமர்சிக்க எனக்கு அனுமதியும் பேச்சுரிமையும் மீண்டும் கிடைக்கிறதோ அன்றுதான் நான் கருணாநிதியையும் விமர்சிப்பேன் என்று கூறினார்.

சோவின் நிலைப்பாடே என் நிலைப்பாடாகவும் இருக்கும்

என் அச்சங்கள் தேவையற்றதாகவும், அதீதமானதாகவும் நீங்கள் கருதலாம். பாதிக்கப் படாத யாரும் அவ்வாறே கருதுவார்கள். நான் சொல்வது என் அனுபவத்தின் அடிப்படையில் நான் கண்ட சம்பவங்களின் அதன் காரணங்களாக நான் கருதுபவற்றின் அடிப்ப்டையில் அமைந்தவை மட்டுமே. இதையே நான் மலையாள சினிமா சூழலுக்குச் சொல்ல மாட்டேன். அங்கு இயக்குனர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் எல்லா ஜாதியினரைப் பற்றியும், மதத்தினரைப் பற்றியும், கட்சியினரைப் பற்றியும் துணிவுடன் விமர்சிக்கும் சுதந்திரம் நேற்று வரை இருந்தது. இன்று கைகள் வெட்டப் பட்ட கிறிஸ்துவ கல்லூரி ஆசிரியருக்குப் பின்னால் கேரளத்திலும் கூட தமிழகத்தில் நிலவும் சூழல் வந்து விட்டிருக்கிறதோ என்ற அச்சம் நிலவுகிறது.

இருந்தாலும் நேற்று வரை இருந்த மலையாள படைப்புலகச் சூழலில் எந்த ஜாதியினரை விமர்சிப்பதிலும் யாரும் தயக்கம் இருந்ததில்லை அதற்கான தேவையும் பெரும்பாலும் இல்லை. ஆனால் தமிழ் நாட்டின் சூழல் வேறு. இங்கு கருணாநிதியையும், எம் ஜி யாரையும் குறிப்பிட்டு ஒரு சாதாரண சினிமா கூட எடுக்க முடியாத சூழல் தான் நிலவுகிறது. மலையாள அரபிக் கதாவில் சர்வ சாதாரணமாக பிரணையில் விஜயனும், அச்சுதானந்தனும் பேசப் படுகிறார்கள். போப்பும், நம்பூதிரிகளும், சங்கராச்சாரியர்களும் மிகச் சுதந்திரமாக விமர்சிக்கப் படும் சூழல் உள்ளது. அங்கு தாராளமாக படைப்புச் சுதந்திரத்தைப் பயன் படுத்தலாம்.

ஆனால் புரையோடிப் போயிருக்கும் தமிழ் நாட்டுச் சூழலில் வேறு விதமாகச் செயல் பட வேண்டிய கட்டாயமே எந்தவொரு படைப்பாளிக்கும் நிலவுகிறது. அந்த சூழல் மாறும் ஒரு காலம் வரும் பொழுது என்று எல்லா ஜாதியினரையும் சமமாக விமர்சிக்கலாம் என்ற காலம் வரும் பொழுது, என்று எல்லா கட்சியினரையும் அரசியல்வாதிகளையும் எவ்வித அச்சமும் இல்லாமல் பகிரங்கமாக நேர்மையாக விமர்சிக்கலாம் என்ற நிலை வரும் பொழுது பிராமணர்களையும் அவர்களில் பலரது சிறுமைகளுக்காகவும், ஆணவங்களுக்காகவும், ஜாதி மேலாண்மைக்காகவும், தீண்டாமைக்காகவும் கட்டாயம் கடுமையாக விமர்சிப்பதில் எந்த வித ஆட்சேபணையும் இருக்க முடியாது.

Aayirathil Oruvan is Ravanan

எதெதற்கோ முடிச்சுப் போடுகிறோம்! செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஐயும் மணி ரத்னத்தின் ‘இராவணன்‘ஐயும் கோர்த்து விட முடியாதா?

படத்தின் துவக்கம் கடத்தல். தொல்பொருள் ஆய்வாளர் பிரதாப் போத்தன் காணாமல் போவதில் ஆ.ஒ. ஆரம்பிக்கிறது. ஐஸ்வர்யா ராய் கடத்தப்படுவது ராவணன் முதற்காட்சி.

இரண்டு படங்களிலும் முக்கியமாக சொல்லப்படுவது ஜென்ம ஜென்மமாகத் தொடரும் வன்மம்; தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே உள்ள தீராப்பகை. சோழரும் பாண்டியரும் இரண்டாயிரம் வருடங்களாக சண்டை போடுகிறார்கள். காவல்துறையும் ராபின் ஹூட்களும் அனுமார் காலத்தில் இருந்தே பிணக்கில் இருக்கிறார்கள்.

சோழர் மகன் காணாமல் போய், அதன் பின் கடல் கடந்தது ஐதீகம். இராமர் கடலில் பாலம் கட்டி அதை வானர சேனையுடன் கடந்ததும் நம்பிக்கை. இராவணன் சீதையை விட்டுவிடுவான் என்பது மட்டும் நம்பக்கூடியதா என்ன?

பிரதாப் போத்தன் புகைப்படத்தை வைத்து அடையாளம் கேட்டு அடுத்த இடங்களுக்கு செல்வது போல், வீராவின் நிழற்படமும் படம் நெடுக முக்கிய பாத்திரம்.

‘நீ என்ன பொட்டையா?’ என்று ஆணைப் பார்த்து ஆயிரத்தில் ஒருத்தி கேட்பாள். அவனிடம் இல்லாத அதே தைரியத்தை ராகினியிடம் பார்த்து வியப்பது ‘இராவணன்’.

தசரதன் தன் மகனைக் காட்டுக்கு அனுப்பியது போல் அப்பாவும் மகளுக்கும் பிரச்சினையால் வீட்டை விட்டு வந்து காடு/மலை என்று கஷ்டப்படுபவள் லாவண்யா – ஆண்ட்ரியா.

சீதை தன்னுடைய நகைகளை வழித்தடத்தில் விட்டுப் போனது காப்பியம். பிரதாப் தன்னுடைய கறுப்புப் பையை விட்டுப் போவது ஆயிரத்தில் ஒருவன்.

ஆ.ஒ. சோழ சாம்ராஜ்யத்தில் நார்த் இந்தியன் ஸ்டைல் கோவில் கட்டுகிறார்கள்; திருநெல்வேலியில் உள்ள ஆரிய சமாஜத்தில் திருமணம் கட்டுகிறார் இராவணன்.

வாலியை மறைந்திருந்து தாக்குகிறான் இராமன். ஆயிரத்தில் ஒருவன் கிளாடியேட்டர் மைதானத்தில் நேருக்கு நேர் போர் புரிகிறான்.

வாலிக்கு பயந்து குகையில் பரிவாரங்களுடன் வாழ்ந்தவன் சுக்ரீவ ராஜா. சோழ அரசரும் பாண்டியனுக்கு பயந்து அடங்கி, மறைந்து வாழ்கிறார்.

‘மண்டையோடுகள் மண்டிய நாட்டை மன்னன் ஆளுவதோ’ என்பான் சோழன். வீராவும் அங்ஙனமே பலி கொடுத்து வாழ்கிறான்.

இடர்வழி

ஆயிரத்தில் ஒருவனில் ஏழு சிக்கலைக் கடந்து இறுதி லட்சியத்தை அடைகிறார்கள்.

முதலில் கடல். ஜெல்லி ஃபிஷ் தாக்குதல்; அட்டை போல் ஒட்டிக் கொண்டு இராணுவ வீரர்களைப் பறிக்கிறது. இராவணனில் ஓடும் ஜீப்களில் ஏறி இராணுவத் தளவாடங்களைப் பறிக்கிறது.

இரண்டாவது காட்டுவாசிகள். வீராவிற்கு இல்லாத டியாள் கூட்டமா!

அடுத்தது காவல் வீர்களில் எறிகணைத் தாக்குதல். நடுக்காட்டில் போட்ட கூடாரம் சீரழிகிறது. பலர் இறக்கிறார்கள். அங்கேயும் வெடிகுண்டுகளுடன் வலியோரை நோக்கிய வெறிப் பாய்ச்சலும் பேரழிவும் உண்டு.

தொடர்வது சர்ப்பம். பாம்பில் இருந்து தப்பிக்க தண்ணீர் உபாயம். இராவணனில் சதா சர்வகாலமும் தண்ணீரில் குதித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். பின்னிப் பிணையும் பாம்பை உருவகமாகப் பார்த்தால், பாசத்தை சொல்லலாம். பசுமையான சூழலில் தான்தோன்றியாக உருவாகும் நாகம் போல் பச்சிளம் காரிகையைப் பார்த்தவுடன் வீராவிற்கு தடாலடியாக உதிக்கும் காதல்.

பின் பசி, தாகம் & புதைகுழி. நடராஜன் வடிவத்தில் சுரிமண். இராமேஸ்வரத்தில் சிவனை வழிபட்டுத்தானே கிளம்புகிறார் இராம்ர். அதே போல் இங்கேயும் இறைவணக்கம்.

கடைசியாக கிராமம். அங்கே மான் கேட்டாள் சீதை. இங்கே ஒட்டகம் கேட்கிறான் கார்த்தி.

மேம்போக்கு வழி

தற்கால பெரும் பொக்கீடு படங்களின் அடியொற்றி, தசாவதாரம் போல் பட்டாம்பூச்சி விளைவை இரண்டுமே குறிப்பால் உணர்த்துகின்றன. ‘ஓ லீசா… எல்லீஸா’வில் பட்டர்ஃப்ளை தலை காட்டுகிறது. அங்கே ஐஸ்வர்யாவினால் ஃப்ளை விரிவடைகிறது.

இராமனையும் இலக்குவனையும் பின் தொடர்ந்தது சீதை. அனிதாவையும் ஆன்ட்ரியாவையும் பின் தொடர்வது பருத்திவீரன்.

குரங்கு கூடவே வருவது போல் கார்த்தி இறுதி வரை துணை இருக்கிறார். தோளில் பையனைத் தூக்கி கடல் கடக்கிறார்.

ஆயிரத்தில் ஒருவனை ஆந்த்ரபாலஜிஸ்ட்டை பைத்தியமாக்கிறார்கள். இராவணனில் இராச்சிய விசுவாசத்தை கேலிக்குள்ளாக்குகிறார்கள்.

Ravanan & Angaadi Theru

குரங்கு மாதிரி கார்த்திக் மட்டும் அல்ல; அங்காடித் தெரு இராமனின் உற்ற நண்பர் மாரிமுத்துவும் குதிக்கிறார் என்பது இந்தப் பதிவின் தோற்றுவாய். அங்காடித் தெருவிலும் தாழ்த்தப்பட்டவரை ‘பன்றி’ என்று விளிக்கும்போது வெகுண்டெழாத சமூகம் ஆசனவாய்.

இராவணன் பிரும்மாண்டம். அங்காடித் தெரு குடிசை வீடு. இருந்தாலும் இந்த வருடம் வந்ததில் இந்த இரண்டு மட்டுமே முக்கியமான ஆக்கம்.

இரஜினிகாந்த் படங்களில் வருவது போல் ஐஸ்வர்யா, விக்ரம், பிரபு, கார்த்திக் நட்சத்திரப் பட்டாளம் கொண்டது ராவணன். புதுமுகங்களும் கூடிய சீக்கிரமே கூத்துப் பட்டறை கலைராணி மாதிரி அலுத்துவிடக் கூடிய விக்கிரமாதித்யர்களும் நிறைந்தது ‘அங்காடி தெரு’.

அங்காடித் தெருவில் வசனம் பலம். சுஜாதா இல்லாத உயிர்மையை ஜெயமோகன் மட்டும் வாழவைக்காவிட்டாலும், சாரு நிவேதிதாவிற்கும் வசனம் வராதது மணி ரத்னத்தின் இராவணப் பிரச்சினை.

பவிசு, பரதேசம், சில்லாட்டை என்று வட்டார வழக்கு ஆகட்டும்; வேலையில் சக்கை பிழியபட்டு வீடு திரும்புபவரின் செல்பேசி அலறல் பதில் அன்யோன்யம் ஆகட்டும். வசந்தபாலன் இயக்கமும் ஜெயமோகன் உரையாடலும் நகைச்சுவையையும் வாழ்க்கையையும் இழையவிடுகிறது. இராவணனில் ‘வினவு‘ தளத்துக்கு நுழைந்துவிட்ட அஜீரணம் கலந்த பிரச்சாரப் போலி பித்தளை.

சகோதரிகளுக்கு அப்பாவின் சட்டை; சரவணா ஸ்டோர்சுக்கு ஜோதிலிங்கம் கிளம்பும்போது பள்ளிக்கூட சீராடை. கேரளா விளக்கைத் தூக்கும்போது நெருங்கும் கை; போன்ற நுணுக்கங்கள் நிறைந்தது ‘ரங்கநாதன் தெரு’. இராமாயணத்தில் அன்றும், இன்றும், என்றும் லாஜிக் இல்லா மேஜிக் ரியலிசம்.

இவ்வளவு வித்தியாசம் நிறைந்த படங்களை எப்படி ஒரே பதிவாக்கலாம்?

நான் அங்காடித் தெருவிற்கு விமர்சனம் எழுதவில்லை; படம் வந்தும் நாளாகி க்ளாசிக் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது முதல் காரணம்.

இரு படங்களுமே ஜாலியான மசாலா என்பது முக்கிய காரணம்.

இரண்டு படங்களிலும் அசல் வாழ்க்கை நாயகர்களான காவல்துறையும் தொழில் துறையும் வில்லன்கள்.

மெதுவாகத்தான் அறிமுகம் ஆகிறார்கள். மிடுக்கோடு; கொஞ்சம் அப்பாவியாக; அவர் தொழிலுக்கு பக்தி என்றால், அண்ணாச்சி இறைபக்தி.

அங்கே ராமர்/சீதை/அனுமன்/இலக்குவன்/ஜடாயு/சூர்ப்பநகை சொல்ல பிரும்மப் பிரயத்தனம் என்றால், இங்கே சரவணா ஸ்டோர்ஸுக்கு பல்வேறு முன்னிறுத்தல்.

சாதாரணமாக நாயகியின் அப்பா, எதிர்மறை கதாபாத்திரம் செய்வார். அங்கே நாயகியின் கணவன். இங்கே நாயகிக்கு சம்பளம் தருபவர். இந்த இடத்தில் பெரும்பாலான திரைப்படங்களை ஒத்தே அமைந்திருக்கிறது. மூவருமே நிஜ வாழ்வில் சிம்ம சொப்பனம். அவர்கள் கிண்டலடிக்கப்படும்போது ஒடுக்கப்பட்ட மனம் கிளர்வது இயல்பு.

‘ஓசியில கொடுக்க அரசாங்கமா’ என்னும் கலைஞர் டிவி நையாண்டி அங்கே; ‘எந்தப் பொந்தில் போய் ஒளிஞ்சுண்டிருக்கான்’ என்று வாலியை மறைந்தடித்த ராமரும் இராவணரில் உண்டு.

இரண்டு படத்திலும் மூலக்கதைக்கு சம்பந்தமில்லாத தொகுப்புக் காட்சிகளும் கதாபாத்திரங்களும் மான்டேஜ் சித்திரங்களாக எக்கச்சக்கம். அவை பிரமிக்க வைக்கின்றன; அல்லாட வைக்கின்றன.

சத்தமாக அருளாசி வழங்குவதில் அங்காடித் தெரு ஜொலி சொலிக்கிறது. இராவணனில் புனித பிம்பங்களைக் குறித்து வினா மட்டுமே வைக்கப்படுகிறது.

படத்திற்கும் பாடல்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும், மணி ரத்தினம் அதற்கான கெத்தை நிலைநாட்டுகிறார். இரண்டாவது பல்லவியும் வராதா என்று ஏங்கவைக்கிறார். ‘நான் கடவுள்’இல் ‘பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்’ பாடல் எம்டிவி அடியொற்றி உண்டியல் குலுக்கியது. ஜெயமோகனின் இந்தப் படத்திலும் ‘கண்ணில் தெரியுது வானம்’ நீர் கோர்க்க வைக்கும் புலம்பல். அடுத்ததாக ஜெயமோகனார், சாஃப்ட்வேர் எஞ்சினீயர்களின் பிரச்சினைகளை முன்வைத்து அழுவாச்சி மூன்று நிமிஷம் கொடுக்க விண்ணப்பம் வைத்துவிடுகிறேன்.

இட்டமொழியில் பாரம்பரியச் சின்னம் போன்ற கோவில் இருப்பதை ஆராய முடியாது. அதே போல் திருநெல்வேலியில் வாரணாசி கோபுரமும் கிடைக்கும்.

அ.தெ.வில் ‘வானாகி மண்ணாகி’ காதல் ஊடல். இராவணனில் வீராப்புடன் கோபாவேச பாரதியார் வசன கவிதை.

சூர்ப்பனகைக்கு ஒரு நியாயம்? சீதைக்கு இன்னொரு கற்பு நிலையா? என்று கேட்பது மணிரத்னமாயணம். படி ஏறி இறங்காத நாயகி கனி (அஞ்சலி)க்கு ஒரு நியாயம்? நாயகன் அடி வாங்கும்போது மட்டும் இரக்கநிலையா என்று வினவுவது அங்காடி இராமாயணம்.

காதலியைக் காப்பாற்ற இயலாத கையாலாகாதவர்களினால்தான் இரு கதைகளுமே முன்னகருகிறது. ப்ரியாமணியின் கணவன் நடுங்குகிறான். கன்னுக்குட்டி செல்வராணி சௌந்தரபாண்டியனால் அனாதரவாகும் காட்சி அதனினும் மிரட்சி.

வேலையைத் தக்கவைத்துக் கொள்ளும் ஆபத்பாந்தவம் லிங்குவிடமும் உண்டு; எஸ்.பி.யும் அதே பயத்துடன் நாயகியை நிராகரித்து வீராவிடமே அனுப்பி வைக்கிறார். இரு இடங்களிலும் ஏமாற்றம்.

அண்ணாச்சி அறியாமல் கனியும் காதல் அங்கே; அண்ணன் ராமனுக்குத் தெரியாமல் மலரும் காதல் இங்கே.

சரி… காதல் எத்தனை வகை?

1. ஆசை: அங்காடித் தெருவில் அஸ்வினி வகை. இராவணனில் வீராவிற்கு வருவது – காமம்; உடல் சார்ந்தது.

2. உடைமை: இது வீராவிற்கும் கைக்கடிகாரத்திற்கும் இடையே உள்ளது. ‘என்னுடைய வாட்ச்’ என்னும் ஆக்கிரமிப்பு சார்ந்தது. பயம் கொணர்வது.

3. சார்புநிலை: அங்கே லிங்குவிற்கும் கனிக்கும் இடையே உள்ளது.

4. சுய அடையாளம்: எஸ்.பி பிருத்விராஜூக்கு இருக்கும் தொழில்பக்தி. காதலுக்கு பதில் அகந்தை தலைதூக்கும்.

சினேகாவின் ஒரிஜினல் பெயர் சுகாசினி. ராவண் வசனம் எழுதியவர் சுஹாசினி. இரண்டு பேருமே இரு படத்திலும் சம்பந்தமில்லை என்பதுதான் சம்பந்தம்.

Ravanan movie with Kamba Ramayanam

கம்பராமாயணம் என்பதற்கு பதிலாக கம்பராவணாயணம் என்பதே பொருத்தமோ என்பது போல், கம்பன், வில்லனைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். எனவே, மணி ரத்னத்திற்கும் ஆர் எஸ் மனோகருக்கும் இன்ஸ்பிரேசன் கம்பர் (அல்லது வான்மீகி?)

ராவணனின் வீரத்தைப் புகழும் கம்பர்:

காளி போன்றனன் இராவணன்; வெள்ளிடைக் கலந்த
பூளை போன்றதப் பொருசினத் தரிகள்தம் புணரி

மலர் மென்மையானது. [ஐஸ்வர்யா ராயை சொல்லவில்லை]. பூளைப்பூ காற்றால் சிதறியோடுவதை, வீரர் முன் வீரமிலாப் படை சிதறியோடுவதற்கு உவமையாக்குகிறார் கம்பர்.

இராமனை இகழும் இராவணன்:

தேறுதி; நாளையேயல் விருபது திண்டோள் வாடை
வீறிய பொழுது, பூளை வீயென வீவன்.

கரன் [கனகவேல் காக்க அல்ல] போன்ற தளபதிகள் இறந்தார்கள் என்னும் சூர்ப்பனகையின் சொல்லைக் கேட்டவுடன் கிளர்ந்தெழுந்த சினத்தன்மை:

ஆழித்தீயில் நெய் ஊற்ற ஆழித்தீ கனல்தலென இராவணன் சினந்தான்

மலையில் தோன்றிப் பாய்ந்த நீர், ஆறாக ஓடிக் கடலோடு கலந்தது. – ப்ருதிவிராஜில் தொடங்கும் காதல், விக்ரமில் சங்கமம் ஆகிறது.

தொடக்கத்தில் ஒரே இடத்தில் தோன்றிப் பல இடங்களில், பல்வேறு விதமான அளவுகளிலும் வடிவத்திலும் பாய்ந்து, வழிநெடுகிலும் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு, இறுதியில் கடலில் கலந்து, வேறுபாடின்றிக் கலக்கும் உயிர்களின் தன்மைக்கு விளக்கமாக இரு தரப்பினரும் உரைப்பதை ஒத்து இருந்தது.

கல்லிடைப் பிறந்து, போந்து, கடலிடைக் கலந்த நீத்தம்,
எல்லை இல் மறைகளாலும் இயம்ப அரும் பொருள் ஈது’ என்னத்
தொல்லையில் ஒன்றே ஆகி, துறைதொறும், பரந்த சூழ்ச்சிப்
பல் பெருஞ் சமயம் சொல்லும் பொருளும்போல், பரந்தது அன்றே.

ராமன் உலாவரும் காட்சியைக் கண்ட மிதிலைப் பெண்களின் நிலையைக் கூறுமிடத்தில், இராமனையே முழுமையாகப் பார்க்காதவர்கள் என்னும் நையாண்டி:

தோள்கண்டார் தோளேகண்டார் தொடுகழற் கமலமன்ன
தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கைக்க ண்டாரும் அஃதே
வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்
ஊழ்கண்ட சமயத்து அன்னார் உருவு கண்டாரை ஒத்தார்

சீதையைப் பற்றி கம்பர் எப்படி வர்ணிக்கிறார்?

  • மாதரார் வடிவு கொண்ட, நஞ்சு தோய் அமுதம்
  • சீதை என்று ஒரு கொடுங் கூற்றம்
  • சனகி எனும் பெரு நஞ்சு உன்னைக் கண்ணாலே நோக்கவே, போக்கியதே உயிர்;

போர்க்களத்தில் சமையல் நடக்கும் பாடலில், யானைகளின் மேலிடும் தவிசும், அம்பும், தேரும், வில் முதலிய படைகளும் — கொடிய விறகுகளாய் அமைய, இறந்த வீரர்களுடைய சினமிக்க கண்களாகிய தீயில் பிணங்கள் வெந்து அவை பேய்கட்கு உணவாகின்றன:

சிந்துரங்களின் பருமமும், பகழியும், தேரும்,
குந்து வல் நெடுஞ் சிலை முதல் படைகளும், கொடியும்,
இந்தனங்களாய், இறந்தவர் விழிக் கனல் இலங்க,
வெந்த வெம் பிணம் விழுங்கின, கழுதுகள் விரும்பி

வீராவின் [படத்தில் விக்ரம்] மற்றொரு பாதி அவனின் தங்கை. அவளுக்கு நடந்த வன்முறை பிறரால் அன்று. இராவணனாலேயே நிகழ்ந்தது. தோன்றாதவை, அல்லது தோன்றியவை அவனைத் தவிர வேறொன்றும் இல்லை. அவன் கொலை செய்கிறான்; அல்லது வாழவைக்கிறான். பற்பலவற்றைப் படைத்த பிறகும் அவன் மட்டுமே எச்சம். ஊரார் எல்லாம் அவனின் தோற்றங்களே. பல்வேறு வகைப்பட்ட இவற்றின் அழிவிற்குப் பிறகும், அவனே இருப்பான்:

வில்லும் வேலும்வெங் குந்தமும் முதலின விறகாய்
எல்லு டைச்சுட ரெனப்புக ரெஃகெலா முருகத்,
தொல்லை நன்னிலை தொடந்துபே ருணர்வன்ன தொழிலச்
சில்லி யுண்டையிற் றிரண்டன படைக்கலச் சாலை

எம்.ஃபில்லோ, முனைவரோ ஆகுமளவு மணி ரத்தினமும் கம்ப ராமாயணத்தை அடியொற்றியே ‘இராவணன்’ அமைந்திருக்கிறார்.

நாயகனின் ‘அந்தி மழை மேகம்’ உங்களுக்குப் பிடிக்குமா? கிழவிகள் கொட்டமடிக்கும் ‘ருக்குமணி ருக்குமணி’ ரீங்காரமிடுகிறதா? ‘திருடா திருடா’வின் லாஜிக்கின்மை கவருகிறதா? உங்களுக்கு இந்தப் படம் பிடித்துப் போகும் வாய்ப்பிருக்கிறது.

ப்ரியாமணியுடையது, பருத்தி வீரனில் ஏற்கனவே செய்யப்பட்ட கதாபாத்திரம்! பிருத்விராஜைப் பார்த்தால் ‘டூயட்’ ரமேஷ் அர்விந்த் மாதிரி ஐஸ்வர்யாவோடு பொருந்தாமை!! வீரப்பன், நக்சல்பாரி, விடுதலைப் புலிகளின் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன், ‘பேராண்மை‘ என்றெல்லாம் +2 படிக்கும் மாணக்கனாக பக்கம் பக்கமாக பதிபவரா நீங்கள்? உங்களுக்கு இந்தப் படம் நிறையவே பின்னூட்ட வருகை பிராப்திரஸ்து ஆசீர்வதிக்கும்.

அவ்தார் போன்ற கொடுமையை மெச்சும் ஹாலிவுட் அர்ச்சகரா? ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்று பச் பச்சென்று பறித்த சாலட் கொறிப்பாளரா? உயிர்மை போன்ற நவீன குமுதங்களில் இடம்பிடிக்க விழைபவரா? உங்களுக்கும் உள்ளேன் அய்யா போட்டுக் கொள்ளலாம்.

அங்காடித் தெரு’ போன்று கருப்பு வெள்ளையாக எல்லா கதாபாத்திரமும் உங்களுக்கு உலா வர வேண்டுமா? ‘மெகாதீரா‘ போன்று அல்டாப்பு நிறைந்த மாய்மால ரசிகரா? ‘Shutter Island‘ போன்று குப்பாச்சு, குழப்பாச்சு மூக்குச்சுற்றி மூச்சுத்திணறல்களின் விரும்பியா? ஐ எம் வெரி சாரி மேடம். வெயிட் ஃபார் ‘யாவரும் கேளிர்’.

Avatar: அவதார்

1. அமெரிக்கா வந்த புதுசு. ஜேம்ஸ் கேமரான் குறித்து தெரியாத வயசு. கூடவே நாலஞ்சு பொண்ணுங்க வேற கூப்பிடறாங்க. டிக்கெட் எளிதாக கிடைத்துவிடுகிறது. ‘டைடானிக்’ மட்டும் மூழ்கவில்லை. வலைப்பதியாத அந்தக் காலத்திலேயே படம்  பார்த்தபிறகு எழும் இயலாமை ‘உன்னைக் கொடு என்னைத் தருவேன்’ பார்த்த எஃபக்ட் கொடுத்தது.

அந்தப் படத்திலாவது பிறந்த மேனி கேட் வின்ஸ்லட் ஆறுதல். அதுவும் இங்கே லேது. மிஷேல் ரோட்ரிக்ஸ் இருந்தும் அவதாரில் ஏமாற்றம்.

2. தமிழருக்கு லாஜிக் ஓட்டை சொல்லாமல் இருக்க வேண்டுமானால், சிம்பு படமாக இருக்க வேண்டும் அல்லது ‘சிவாஜி’யாக இருக்க வேண்டும்.

3. கடவுள் என்றாலே லேட்டாகத்தான் வருவார். ‘காக்க காக்க’வில் அன்புச்செல்வன் அனைத்தையும் இழந்தாலும் ஹீரோ என்றறியப்படுவது போல்  ஈவா தெய்வமும் வெகு தாமதமாக, தன்னை வணங்கும் கூட்டம் பஸ்மமான பிறகே தலை நீட்டுகிறது.

4. ஜூராசிக் பார்க்கில் பார்த்த டைனோசார். ஜுமாஞ்சியில் பார்த்த இரணகளம். ஆவியோடு பேசும் Defending Your Life. அவியல் பிடிக்கும்தான். அவதார் அவியல் அல்ல; ஆட்டோவில் கொட்டிப்போன கேரியர் சாப்பாடு.

5. அமரும் இடத்தில் கூட அதிர்வு கொடுக்கும் 3டி நுட்பம் வெகு அபாரம். தூக்கம் எட்டிப்பார்த்தால், எழுப்பிவிடுகிறது.

6. நாவிக்கள் என்ன சாப்பிடுகிறார்கள்? அஜீரணம் உண்டாகுமா? ரத்தம் ஒரே நிறமா? அபான வாயு காமெடி எல்லாம் கிடைக்குமா?

7. ஜேம்சுக்கு படம் எடுக்கத் தெரியாவிட்டாலும் சந்தையாக்கத்தில் கெட்டி. இவருடன் எந்தப் படமும் போட்டி போடாமல் இருப்பது உபரி. உலகவெம்மை ஆதரவாளர்களும், இராக் ஆக்கிரமிப்பு அசூயைக்காரர்களும், அமெரிக்கன் காப்பாற்றுவான் வலதுசாரிகளும் தங்கள் கொள்கை, இலட்சியங்களுடன் பிணைத்துப் பார்க்க வைக்கும் மார்க்கெடிங் மாயாஜாலத்துக்கு ஜெய் ஹோ!

8. புத்தம்புது பூமி வேண்டும்! நானும் நாவியாக மாறி இளவரசியுடன் ஜொள்ளு விட்டு, பொருளாதார வீக்கம் கவலை மறந்து, நாளொரு சி#ம், பொழுதொரு Perlம் கற்காமல், குதிரையில் பறந்து… பறந்து…

9. வாடகை வீட்டை காலி பண்ண சொன்னால், ஜாகையை மாற்றுவீர்களா? இல்லையா? நாவிக்கள் கூட வேற மரம் பார்த்து குடிபோயிருக்கலாம் என்று இயக்குநர் எண்ண வைக்கிறார்.

10. வெள்ளித்திரையிலோ, டிவிடியிலோ பார்க்குமளவு பெரிய விஷயம் எதுவும் இல்லை என்று தோணவைத்தது எது? நமீதாவா? அய்யனாரின் இரானியப் பட விமர்சனங்களா? வீட்டிலேயே கிடைக்கும் 60″ டிவியா? எது…

சில பார்வைகள்:

  1. தமிழ்ஹிந்து » திரைப்பார்வை: அவதார்
  2. jeyamohan.in » Blog Archive » அவதார் – ஒரு வாக்குமூலம்
  3. ஏன் இப்படி…!: அவதார் – இது சினிமா மட்டுமல்ல!
  4. Op-Ed Columnist – The Messiah Complex – NYTimes.com
  5. IdlyVadai – இட்லிவடை: அவதார் – விமர்சனம்
  6. அதிஷா: ஆ… அவதார்!
  7. Cameron’s Avatar: The emerging zeitgeist? :: Vijayvaani.com
  8. ‘Avatar’ team brought in UC Riverside professor to dig in the dirt of Pandora | Hero Complex | Los Angeles Times
  9. இளையதளபதியின் அவதார்…அவதார் படத்தில் விஜய் நடித்திருந்தால்….
  10. கணேஷின் பக்கங்கள்!: இவள மாதிரி பொண்ணு பாரும்மா?

Microsoft Excel நாமாவளி

அசல்: Kandasamy: Ithellaam Dooppu; Kanthasamythaan Taappu

சி ஷார்ப்பு, டாட் நெட்டு, ஏயெஸ்ப்பி, ஜாவா, பீன்சு, அபாச்சி, லீனக்ஸு, சீக்வலு, ஆரக்கிளு, டிபீட்டூ, வெப்ஸ்பியரு, டிப்கோ, சாப்பு, பீப்பிள்சாஃப்டு, பாஸ்கல், பியெச்பி, பெர்ல், ஐஐஎஸ்ஸு, பிஸ்டாக்கு, அஷூரு, கோ, எர்லாங்கு, அடோபு, ப்ளாசு, அஜாக்சு, எச்டியெமலு, எக்செமல்லு, அதா, சி, போர்ட்ரானு, அசெம்பிளி, வோர்டு, யூனிக்சு, கோபாலு, ட்விட்டரு, பேஸ்புக்கு, பயர்பாக்சு, சிப்ளசுபிளஸு, 68330, 8085…

இதெல்லாம் டூப்பு, எக்ஸெல்தான் டாப்பு ஏஏஏ
இதெல்லாம் டூப்பு, எக்ஸெல்தான் டாப்பு

வாசக அனுபவம்: கன்னியாகுமரி: ஜெயமோகன்

தொடர்புள்ள பதிவு: நாவலில் என்னைக் கவர்ந்த சில இடங்கள், வரிகள், நிகழ்வுகள், கருத்துகள்

மூன்று என்பது முக்கியமான எண். ட்விட்டரில் கூட விசாரித்திருந்தேன்.

சைவத்தில் படுக்கப்போட்ட மூன்று பட்டை; வைணவத்தில் நிற்கும் நாமத்தில் 3 வரிகள்; ராமரும் அணில் முதுகில் 3 கோடு. முப்புரி நூலும் உண்டு. ஏன் #3 ?

orupakkam: 3றிற்கு ஒரு விளக்கம். முழுமையான வடிவை உருவாக்க குறைந்தபட்ச தேவை. triangle is the polygon with min sides. #trilogy

கன்னியாகுமாரியில் மூன்று கடல் சங்கமிக்கிறது. பிரம்மா, சிவன், விஷ்ணு மூன்று பேரும் சேர்ந்த ஸ்தாணுமாலயன். எல்லாம் 3. ஜெயமோகனின் கன்னியாகுமரி நாவலின் நாயகி அந்த இடத்தில்தான் படைக்கப்படுகிறாள்; காக்கப்படுவதாக வாக்களிக்கப் படுகிறாள். ருத்ரனால் சுட்டெரிக்கப்படுகிறாள்.

அந்த மூன்றும் நாயகனுக்கும் அரங்கேறுவதுதான் நாவலின் அபாரம்.

பெண்ணைக் குறித்து ஆண் தெரிந்துகொள்ள விரும்புகிறான். பெண்ணின் உடை புடைவைக்குள் சுருண்டு புதிராக இருக்கிறது என்பதில் ஆரம்பித்து, எதைக் கண்டு பயப்படுவாள்? எதை ரசிப்பாள்? என்பது போன்ற உளவியல் கூறுகள் தொட்டு அனைத்திலுமே ஆணுக்கு, பெண் புரியாத புதிர்.

இந்தப் புதிரைக் கண்டு கொண்டு, சினிமா மூலம் கொஞ்சமே கொஞ்சம் தொட்டுக் காட்டியவனின் கதை கன்னியாகுமரி.

பதின்ம வயதில் உண்டாகும் இனக் கவர்ச்சி. மணமாகியவளிடம் கிடைக்கும் நிபந்தனையற்ற திருமண பரமபத விளையாட்டு. முறை தவறி நடக்கும்போது கிளறும் குற்றநெஞ்சுறுத்தல். மூன்று நிலையிலும் பெண்களைக் கண்டு அச்சமுறும் ஆண் என்று கதையை சுருக்கலாம்.

சினிமாத் தொழிலில் இருக்கும் ஏற்றத்தாழ்வு. ஸ்டோரி டிஸ்கசன் என்றால் என்ன? அட்ஜஸ்ட்மென்ட் செய்துகொள்வது எப்படி? எங்ஙனம் திரைக்கதை – வசனம் – இயக்கம் உருவாகிறது? எவ்வாறு கதைக்காக அலைகிறார்கள் என்பது backdrop.

கன்னியாகுமரி அம்மன் ஆன்மிக புராண வரலாற்றின் குறியீடு — கதாநாயகி; அல்லது நாயகனின் மௌனசாட்சியான மனப்பிராந்தி. அவற்றில் மொழு மொழு கற்பாறைகள் என கட்டி தட்டிப் போன பிம்பங்கள். எத்தனை நாள் காத்திருந்தும் வராத மூர்த்தமாக அடுத்த சினிமாவுக்கான சூப்பர்ஹிட் கதை. உப்புக் கரிக்கும் கடல் அலைகளென மனதில் மீண்டும் மீண்டும் அடிக்கும் நினைவுகள். இந்த மாதிரி குறியீடுகள் மீள் வாசிப்பைக் கோரும் இலக்கியத்தன்மையைக் கொடுக்கிறது.

சினிமாவுக்குள் முழு மூச்சாக நுழைவதற்கு முன்பே ஜெயமோகன் இந்தக் கதையை நல்ல வேளையாக வெளியிட்டுவிட்டார். இல்லையென்றால் பா ராகவனின் ‘நிலா வேட்டை’யில் சொன்ன இயக்குநரின் மறுபாதி போல் இருக்கிறதே என்றெல்லாம் ஹேஷ்யங்கள் வந்திருக்கும். ஜெயமோகனை நான் சந்தித்த பிறகு, நான் படிக்கும் அவரின் முதல் நாவல் என்பதாலோ என்னவோ, பல இடங்களில் அவரே முன்னே வந்து என்னிடம் பேசுவது போல் எனக்குள் பாவனை எழுந்தது. எழுத்தாளரை சந்திப்பது அபாயகரமானது. 🙂

சமீபத்தில் பார்த்த படங்களை ஒப்புமைக்குக் கொன்டு வருவது என்னிடம் உள்ள கெட்ட பழக்கம். அந்த மாதிரி சில படங்களும் இந்த நாவலும்:

1. மௌன கீதங்கள்: ஆனாதிக்க மனோபாவத்தின் உச்சத்திற்கும், அத்தகைய வெளிப்படையான சிலாகிப்பின் பெருமிதங்களுக்கும் பாக்கியராஜ் என்றால், ஆணாதிக்க கோர முகத்தின் பல்லிளிப்புகளுக்கும், தலைதூக்கும் தருணங்களுக்கும் — கண்ணாடியாக கன்னியாகுமரி அமைகிறது.

தன் மனைவியைத் தவிர பிறிதொருவரை கணவன் சுகித்தால் கண்டுகொள்ளக் கூடாது என்பது மௌன கீதங்களின் சப்பைக்கட்டு. அதுவே, மனைவிக்கு என்றால், சட்டதிட்டங்கள் எவ்வாறு மாறும்? கன்னியாகுமரி போட்டு உடைத்தது போல் சொன்னாலும், அழுத்தந்திருத்தமாக உணர்வுபூர்வமாக சந்திக்கு கொண்டு வருகிறது.

2. சிவா மனசில சக்தி: இந்தப் படத்துடன் எல்லாம் ஒப்பிடுவதற்கு ஷமிக்க வேண்டும். என்றாலும், புத்திசாலி பெண் தன்னுடன் அறிவார்ந்த வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அதில் ஆண் சிந்தனை வெல்வது என்பது கன்னியாகுமரியின் ஹீரோ இயக்குநர் ரவிக்கு காமத்தின் உச்சம். ஷார்ப்பான வளைவுகளும் துடிப்பான மூளையும் கொண்டவள் ‘சிவா மனசுல சக்தி’யின் கதாநாயகி. இவ்வாறாகவே அனைத்து பெண்களும் அமைவதெல்லாம் கற்பனையின் உச்சம். வெள்ளித்திரையிலும் அச்சு இலக்கியங்களிலும் மட்டுமே நம்பக்கூடிய வகையில் வெளியாகும் fantasy ecstasy.

காதலைத் திரையில் காட்சியாக்குவது நிறைய பார்த்திருக்கிறோம். அந்தக் காதலை தமிழ் எழுத்தில் வடித்து பெரும்பாலும் படித்ததில்லை. கன்னியாகுமரியில் காமத்தின் உச்சகட்டங்கள் வருகின்றன. விவரிக்கப்படுகின்றன. விலாவாரியாக பின்னணியோடு சொல்லப்படுகின்றன. அவற்றை வெகு லாவகமாக கையாண்டதற்காகவே Hats off சொல்லவேண்டும்.

கன்னியாகுமரி இந்தியாவின் வேர். முக்கடல் சங்கமத்தில் உருவாகும் வித்தில், இந்தியாவே வளர்ந்து நிற்பதாகக் கொள்ளலாம். மூலஸ்தானம். எல்லாவற்றுக்கும் துவக்கமாக இருப்பதால் அங்கே வந்து தங்கள் படத்திற்கான கருவைத் தேடுகிறார்கள். கன்னியாகுமரியும் காத்திருக்கிறாள். இவர்களும் தக்க விதைக்காக காத்திருக்கிறார்கள். குமரியிடம் கருவைத் தேடுவதா? அவளே இன்னும் குமாரிதானே?

மேலே சொன்ன மாதிரி மொத்தமாக நாவல் எழுதினால் பெரும்பாலாரிடம் கொண்டு செல்ல இயலாது. அதை ஜெயமோகன் அறிந்தே இருக்கிறார். அதனால், தாய்மையைக் குறித்து, பாரதம் எழுந்து மரமாக கிளைவிடும் தோற்றுவாய் குறித்து, வாக்குவாதங்களில் ஈடுபடும் துணைவி அதில் சாமர்த்தியமாக தோற்பது குறித்து, நல்ல சினிமா குறித்து, மிட் லைஃப் போராட்டங்கள் குறித்து, வாழ்ந்து கெட்டது போல் பேர் வாங்கத் துடிக்கும் படைப்பாளியின் கோராமை குறித்து, முன்னேற வேண்டுபவர்களின் சமரசங்கள் குறித்து கதையாகவும் குறியீடுகளாகவும் பேசியிருக்கிறார்.

அ முத்துலிங்கத்தை சந்தித்தபோது ஜெயமோகன் குறித்து சொன்ன விஷயம் இது:

இன்னும் கொஞ்ச நேரத்தில் சென்னை ஒளிரும் பொற்கம்பளமாக கீழே இறங்கி இறங்கி காணாமல்போகும் நானும் சில அன்னியர்களும் இருண்ட வானில் மிதந்து கொண்டிருபோம் என நினைக்கிறேன்.

ஒரு சாதாரண வலைப்பதிவை முடிக்கும்போது கூட இவ்வாறு கவித்துவ எழுச்சியுடன், அசாதரணமான சித்தரிப்புடன், படம் பிடிக்கும் ஒளிக்கலைஞனின் சிரத்தையுடன் விட்டுச் செல்கிறார்!’ என்பது அ முத்துலிங்கத்தின் பாராட்டு. இந்த புனைவிலும் ஒவ்வொரு அத்தியாயத்தின் உச்சகட்டத்திலும் அதே போன்ற காட்சியமைப்பு இருக்கிறது. அந்தப் பகுதிக்கு முத்தாய்ப்பாக, எண்ணங்களை விட்டு அகலாத படிமமாக, நுரை என்னும் ட்விட் போன்ற வார்த்தைகளையும், அலை என்னும் அனுபவம் போன்ற நிகழ்வுகளையும், கடல் என்னும் வாழ்க்கை போன்ற புரிதல்களையும் மீண்டும் மீண்டும் எழுப்புகிறது.

ஜே ஜே சில குறிப்புகளின் ஜே ஜே போல் இங்கும் ஒரு அவார்டு டைரக்டர் இருக்கிறார். பெயர் கூட ஜார்ஜ். நாவலில் வரும் ஜார்ஜ் ஆதர்ச நெறியாளுநர். ஜோசப் ஜேம்ஸை ஒத்த குறிப்பிடத்தக்க படைப்பாளி.

எண்பதுகளில் வந்த தமிழ் சினிமாவில் வில்லன்களுக்கு மைக்கேல், சூசை என்று கிறித்துவப் பெயர் சூடப்பட்டிருக்கும். அதே போல், அனால், குமரி மாவட்டத்தில் நிறைய மைனாரிட்டி இருப்பதாலும் நாவலில் புழங்கும் எதிர்மறை கதாபாத்திரத்திற்கு ஸ்டீபன் என்று பேர் வைக்கப்பட்டிருக்கிறது.

புனைவு எழுத்தாளர்களுக்கு எழுதக் கற்றுத்தரமுடியாது என்பது என்னுடைய தீவிரமான நம்பிக்கை. விசிறியிலிருந்து காற்றை வரவழைக்கலாம். வெளியில் வெக்கையடித்தால், விசிறியும் வேகும். ஆனால், மாலை நேர கடற்கரைக் காற்றில் (என்னதான் கார்பன் நச்சு கலந்திருந்தாலும்), அந்தக் காற்றை வாங்கப் போகும் சுகமே அலாதி. உணர்ச்சிகளை, உள்ளப் பிரவாகத்தை, ஆழ்மனக் கிடக்கையை அப்படியே தங்குதடையின்றி சொல்லிக் கொண்டு போகிறார்.

கன்னியாகுமாரியின் பிரச்சினைகள் என்று பார்த்தால் முன்னுரையில் உரிமை துறப்புகள் (சற்று இளைப்பாறும் பொருட்டு நான் எழுதிய நாவல் இது. இதன் எளிய கதை நகர்வின்…), உத்தம தமிழச்சியாக வந்துபோகும் நாயகி, சினிமாத்தனமாக இயங்கும் சில பெண் கதாபாத்திரங்களை சொல்ல வேண்டும்.

உரையாடல்களினாலும் எண்ணவோட்டங்களினாலும் சம்பவங்களினாலும் இயக்குநரின் மனைவி இரமணிக்கு கொடுக்கும் விவரிப்பும் அழுத்தமான சித்தரிப்பும் பிற பெண்களுக்கு உருவாகவில்லை.

ஆண்களின் குழப்பங்களைக் குறித்து அறிந்துகொள்ள வேண்டுமா? அவர்களின் வெளிப்படையான புன்சிரிப்புக்கு கீழே புதைந்து கிடக்கும் அழுக்குகளை அவசியம் ஆராய வேண்டுமா? ஆணாகிய நீ படித்தாலும் தன்னிரக்கத்தோடு தன்னல செய்கையை புரிய வைக்க முடியுமா? ‘ஜெமோ’வின் கன்னியாகுமரியை எடுங்கள்.

பிற விமர்சனங்கள்:

1. வ.ந.கிரிதரன்: இந் நாவலிற்கான கரு கி.ராஜநாராயணின் கன்னியாகுமரியை மையமாக வைத்துப் ,பின்னப் பட்ட சிறுகதைகளிலொன்றான ‘கன்னிமை’ என்னுமொரு சிறுகதையினை மையமாக வைத்து உருவானதாக நாவலின் நாயகன் ரவிகுமாரினூடாக நாவலாசிரியர் ஜெயமோகன் நினைவு கூருகின்றார்.

2. ஹரி வெங்கட்: ரவி மற்றும் வேணு ஆகியோர் வார்த்தைகளில் அவர் அறிந்த சினிமாவை பேசுகிறார். மேலும், “அவளை துளைத்து மறுபக்கத்தை அடைந்து மெத்தையின் வெறுமையை அடையலாம்”, எனும் வரியில் ஜெயமோகனின் காமம் தெரிக்கிறது.

3. ஜெயக்குமார்: பொதுவாக ஆண்களுக்கு முதிர்ச்சியான மனநிலை கொண்ட பெண்களைப் பார்த்ததும் ஏற்படும் பயமும் அவர்கள் பால் ஏற்படும் இனம் புரியாத பயமும் அவர்களை தவிர்க்க முடியாமல் நேசிக்கவும் செய்யாமல் செய்துவிடுகிறது.

Separated at Birth: MDMK leader VaiKo vs Director Mahendran

முந்தைய பதிவு: தமிழ் சினிமா | நடிகைகள் | வலைப்பதிவு | தொலைக்காட்சி | இலக்கியம் | வில்லன் | இயக்குனர்