Tag Archives: அனிமேஷன்

Elemental – எலிமெண்டல்

டிஸ்னியுடன் சேர்ந்த பிறகு பிக்ஸாரின் படங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதல பாதாளத்திற்குச் செல்ல ஆரம்பித்தன, அதன் உச்சகட்ட தீவிரமாக சமீபத்திய படத்தைச் சொல்லலாம்.

கலக்கல் படங்களை எடுத்தவர்கள்: அப், இன்கிரெடிபிள்ஸ், கோக்கோ, டாய் ஸ்டோரி, இன்சைட் அவுட், மான்ஸ்டர்ஸ் இன்க், கார்ஸ், ஃபைண்டிங் நீமோ, இன்சைட் அவுட்.

கடந்த படமான “டர்னிங் ரெட்” (சிவப்பாக மாற்றம்) – பெரும் ஏமாற்றம். இந்தப் படம் அதன் அடுத்த கட்டம்.

எல்லோரையும் திருப்தி செய்யும் விதமாக கதை எழுத முடியாது! அனைவரையும் உள்ளடக்கி பூர்வகுடி முதல் பல்லுயிர் பேணல் வரை வோக் கலாச்சாரமாக சர்வ ரோக நிவாரணியாக சினிமா எடுக்கக் கூடாது. லத்தீன் அமெரிக்கர்கள், இஸ்லாமிய மதப் பற்றாளர்கள், ஐரிஷ் வந்தேறிகள், ஆஃப்கன் அன்னியமாக்கப்பட்டவர்கள், தெற்காசிய அயல்வாசிகள் – எல்லோரையும் குறிப்பால் உணர்த்துகிறார் இயக்குனர் – நெருப்புக்காரர்கள்.

வெள்ளையர்கள் போல் தண்ணீர்காரர்கள். அவர்கள் இயல்பாக அவர்களின் நாடாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். கலை, பண்பாடு என்று செழுமையாக்கிக் கொண்டிருப்பவர்கள். நதி போலே ஓடிக் கொண்டிருப்பவர்கள். வளைந்து கொடுப்பவர்கள்.

அயல்தேசிகளும் உள்ளூர்வாசிகளும் – தீயும் நீரும் – இணைந்தால்?

இதுதான் முடிச்சு.

வழக்கம் போல் சுவாரசியமான வசனங்கள். பிரமிப்பான ஜவலிப்புகள். ரசனையான பின்னணி அணிகலன்கள். அர்த்தபுஷ்டியான கதாமாந்தர்கள். நுணுக்கி செதுக்கப்பட்ட சின்னச் சின்ன வர்ணணைகள். எல்லாமே பிக்சார் தரம்.

எல்லாவற்றிலும் வென்று உச்சத்தை எட்ட விரும்பும் பொறியும் + ஏதொவொன்றில் திருப்திப்பட்டு கிடைத்த வாழ்க்கையில் திருப்தியுறும் ஓடையும் – ஒரு குடித்தனத்தில் மணமுடிக்க இயலுமா!?

இதெல்லாம் வைத்து கலக்கியிருக்க வேண்டாமா அனிமேஷன் படம்? இந்த பின்பிலத்தைக் கொண்டு பிக்சார் பின்னி சிம்மாசனமிட்டிருக்கலாமே!

ஆனால் – அன்னியோன்யம்? மனதில் நிற்கும் சித்தரிப்பு?? உள்ளுணர்வை உரசி சிந்தையை ஆக்கிரமித்து உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உணர்வு பூர்வமான கொந்தளிப்பு!? எல்லாம் கோட்டை விடுகிறார்கள்.

ஒரு காலத்தில் பாரதிராஜா என்றால் நம்பிக்கையாகப் போவேன். என்னுயிர் தோழன். புது நெல்லு புது நாத்து, நாடோடித் தென்றல் என்று தொடர் சறுக்கல்களில் ‘சரக்கு தீர்ந்து போச்சு மாஸ்டர்!’ என்று விட்டு விட்டேன். அது போல் பிக்சரும் தங்களின் காயல்கல்பத்தை காற்றில் தொலைத்து இன்னும் தங்களின் ஆன்மாவை ரத்தமும் சதையுமாக மென்று கடித்து துப்பியிருக்கிறார்கள்.

சற்றே இலகுவாக, ஜாலியாக, உண்மையாக லேசாக்கி ஊதியிருக்கலாம்.

Kochadaiyaan – கோச்சடையான் விமர்சனம்

தமிழராக இருப்பதற்காக இரண்டு பேரை மரியாதையுடன் பாராட்டத் தோன்றும். ஒருவர் சாங் முதற்கொண்டு எல்லாவற்றிலும் பரிபூரணமாய் இயக்கும் சாங்கர் எனப்படும் இயக்குநர் ஷங்கர். இவரோடு ரஜினிகாந்த் இரண்டு படம் செய்திருக்கிறார். இரண்டாவது விமர்சனத்தில் கறார்தன்மையும் அந்த மாதிரி விமர்சனம் தன்னிடம் வராமல் இருக்க செதுக்கும் ஸ்வச்ச எழுத்துக்காரர் ஜெயமோகன். இவருடன் மணிரத்னம் படம் செய்திருக்கிறார்.

அதன் பிறகு “கோச்சடையான்” போன்ற ஆக்கங்களும் தமிழ்ச்சூழலில் இயங்குகின்றன.

கதை மட்டும் வெகு சிரத்தையாக முழுமையாக உருவாக்கி இருக்கிறார்கள். அந்தக் கதைக்கு எந்த மாதிரி காட்சிகள் வைத்தால் அசைப்படம் (அனிமேஷன்) சிறப்பாக இருக்கும் என்பதையும் அறிந்தே இருக்கிறார்கள். ஆனால், அந்த நுட்பம் ஓரளவாவது பார்க்க சகிக்கக் கூடியதாக அமைந்திருக்கிறதா என்பதில் அசிரத்தையா? அலட்சியப் போக்கா? அறியாமையா? என விவாதிக்க வைக்கிறார்கள்.

“வேட்டையாடு விளையாடு” படம் பார்த்தவுடன் அமெரிக்கத் தொலைக்காட்சியில் வாராவாரம் ஒளிபரப்பாகும் சி.எஸ்.ஐ. போன்ற எந்த போலீஸ் சீரியலும் நம்பகத்தன்மையிலும் கதாம்சத்திலும் பரபரப்பிலும் “வே… வி.”ட்டை விட பன்மடங்கு சிறப்பாக இருக்குமே என தமிழ்ப்படங்களின் நிலையை எண்ணி வருத்தப்பட வைத்தது. அதே போல் சாதாரண டிவி அனிமேஷன் கூட உயிர்ப்போடும் உள்வாங்க வைக்கும் விவரங்களோடும் சூழலின் தீர்க்கமான துல்லியமான விவரணைகளுடனும் அமைந்திருக்கும். அந்த அளவு தர உந்துதல் கூட இல்லாத அசிரத்தை ஒவ்வொரு ஃப்ரேமிலும் கோச்சடையானில் மின்னுகிறது.

வெறும் ரஜினிகாந்த் பெயரை வைத்து கல்லா கட்டலாம் என மகள் நினைக்கிறார். அதற்கேற்ப அரங்குகளும் அகிலமெங்கும் நிறைகிறது. எவருக்கும் மோசமானப் படைப்பை பார்க்கிறோம் என தர்மசங்கடம் எழவில்லை. படம் உருவாக்கியவருக்கும் அல்ப பவிஷுடன் பழுதான பொருளை சந்தையில் தள்ளுகிறோம் என்னும் மனக்கிலேசமும் எழவில்லை. இப்படியான அரசியல், கலை, விளையாட்டு, சூழலில் இயங்க இந்தியாப் பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறது.

எல்லா கதாபாத்திரங்களுக்கும் ஒன்றரைக்கண். அவர்களின் பின்புலத்தில் படு கேவலமான கிராபிக்ஸ். நடுவில் சலனப் பதிவு சல்லியடிப்பு. தீபிகா படுகோனேயை ஒரு கோணத்தில் பார்த்தால் ஐஷ்வர்யா ராயைப் போல் இருக்கிறார். சண்டைக் காட்சியிலும் சிரிக்கும் முகபாவனை. காதலனை சிறையில் போட்டாலும் அதே சிரிக்கும் முகபாவம். அசப்பில் ரானா (ரஜினி கதாபாத்திர)த்தின் தங்கையைப் போலவே இருக்கிறார். இருவருக்கும் ஆடை மட்டுமே வித்தியாசம்.

“அரவான்” ஆதியைப் பார்த்தால் ராம்ராஜ் வேட்டிகள் விளம்பரத்தில் வரும் நட்சத்திரங்கள் போல் முகமற்று சொரணையற்று பாவமற்று பூசி மெழுகின களிமண் சிற்பம் போல் இருக்கிறது. டிஸ்னி படங்களில் வரும் வர்ணஜாலம் வேண்டாம். டோரா போல் கொஞ்சமாவது மினுக்கியிருக்கலாம்.

இவ்வளவு சிரமப்பட்டு சலனப் பதிவு அசைவூட்டப் படம் எடுப்பதற்கு பதிலாக அசல் ரஜினியை வைத்து எடுத்திருந்தாலே படம் பாந்தமாயிருந்திருக்கும்.