பொறியியல் – கல்விக்கு அப்பால்: வாசகர் மறுவினை

Jobs_lost_Employment_Gained_Sectors_Industries_Work_Compensation_Industry_Salary_WSJ_Graphics

பொறியியல் – கல்விக்கு அப்பால் கட்டுரை வாசித்தேன். தமிழ் பதிப்புலகில் அதிகம் பேசப்படும் சினிமாவும் அரசியலும் தவிர்த்த கட்டுரை என்ற அளவிலேயே கட்டுரை எடுத்துக் கொண்ட பேசுபொருளும், அதன் தொடர்பான எண்ணங்களும் முக்கியமானவை. மதிப்பெண்களைத் துரத்தும் கல்விமுறை குறித்தும் அசலான ஆய்வுகளை ஊக்குவிக்கும் வழிமுறைகள் குறித்த ஆசிரியரின் கருத்தோடு பெரும்பாலும் ஒத்துப் போகிறேன்.

எனினும், கட்டுரையில் ஆங்காங்கே தடாலடி பொதுமையாக்கங்கள் இருக்கின்றன. தான் அறிந்த சூழலை வைத்து, அதை இந்தியா முழுக்க நீட்டும் சூத்திரங்களும் இருக்கின்றன. இவை இரண்டும் கட்டுரை சொல்லும் கருவிற்கு பங்கம் உண்டாக்குகின்றன. பின்குறிப்பின் மூலம், இந்த வாதத்தை நிராகரித்து முற்றுப்புள்ளியும் வைக்கிறார்.

இப்பொழுது கேள்விகள்:

1. ஆராய்ச்சியைத் தூண்டும் கல்வியை ஊக்குவிக்க மூன்று காரணிகள் இருக்கின்றன: புதிய கண்டுபிடிப்புகளினால் ’செல்வம்’ சேர்க்கும் வாய்ப்பு; தேடலின் முடிவில் கிடைக்கும் சமூக ’அந்தஸ்து’; நாம் வாழும் உலகை மாற்றியமைக்கும் நாகரிகத்தை முன்னெடுத்தோம் என்னும் ஆத்ம ’திருப்தி’. இவற்றை இந்திய அமைப்புகள் தரும் சூழல் நிலவுகிறதா?

2. டிப்லோமா படிப்புகள் – இவை செயல்முறையை முன்னிறுத்தும் கல்வி. அவற்றை பொறியியல் படிப்போடு ஒப்பிட்டுப் பார்க்க இயலுமா?

3. மேற்குலகில் பொறியியல் படிக்காதவர்களும் பொறியியல் சார்ந்த வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இந்தியச் சூழலில் பொறியியல் பட்டயம் என்பது ”இவர் பொறுப்பானவர்; ஒழுங்காக வேலை செய்வார்; எதைக் கொடுத்தாலும் கற்றுக் கொள்வார்.” என்பதற்கான சான்றாதாரமாக விளங்குகிறதா?

4. கணிமொழியியல் – அமெரிக்காவில் கணித்துறை சார்ந்த வேலைக்கு பொறியியல் படிப்பு தேவையாக இருப்பதில்லை. பத்தாவது படித்தவரை வேலைக்கு அமர்த்துகிறார்கள். கணிவிளையாட்டுகளைக் கொண்டு பரிசோதித்து, அதில் திறம் வாய்ந்தவராக இருந்தால் கணினித்துறையில் நல்ல பதவியில் அமர்த்துகிறார்கள். இந்த நிலை இந்தியாவில் உருவாகுமா? (அதாவது பத்தாம் வகுப்புத் தேர்வு முடிந்து, ஓரளவு பக்குவம் வந்தவுடனேயே, டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள், மாணவர்களைப் பயிற்சிக்கு அழைத்துச் சென்றுவிடும். மூன்று வருடக் கால வேலை+பயிற்சிக்குப் பின் அசல் வேலையில் அமர்த்திக் கொள்வார்கள்.)

5. ஆராய்ச்சிக் கல்வி – இதற்கான சமூக அந்தஸ்து இந்தியாவில் எப்படி இருக்கிறது? நிறுவனத்தில் டைரக்டர், வைஸ் பிரசிடெண்ட் என்றால் அதிக மதிப்பு கிடைக்கிறதே! அதே சமயம் கண்டுபிடிப்புகளை காசாக்கும் சூழல் இந்தியாவில் எப்படி நிலவுகிறது?

6. மேற்குலகில் mentor எனப்படும் வழிகாட்டியை வாழ்நாள் முழுக்க துணையாக வைத்துக் கொள்கிறார்கள். இந்தியச் சூழலில், இதை மாமா, சித்தப்பா போன்ற குடும்ப உறவுகளும் கிராம சமூகங்களும் நிரப்பின. இன்றைய நகரமயமாக்கப்பட்ட நிலையில் உற்றாரின் ஆலோசனைகளும் கேட்பதில்லை. அண்டை வீட்டாரும் சொந்த விஷயங்களில் கருத்துச் சொல்வதை அந்தரங்கத்தின் குறுக்கீடாகவே எடுத்துக் கொள்கிறோம். இந்த வழித்துணைகளின்ம் உதவி கிடைத்தால் ஒவ்வொருவரின் தனித்தன்மையும் ஆர்வமும் தூண்டப் பெற்று ஆராய்ச்சிப் பாதைகளில் தெளிவு கிடைக்குமோ?

7. இதன் தொடர்ச்சியாக பத்ரி சேஷாத்ரி எழுதிய ”தமிழகத்தின் பல பொறியியல் கல்லூரிகளில் ஐ.டி என்ற பாடப்பிரிவை நீக்கியிருக்கிறார்கள்”, த.நி. ரிஷிகேஷ் ராகவேந்திரன் எழுதிய “தரகர், அலுவலர்,வேலை பெற்றுத் தருபவர் தேவை- ஆசிரியர்கள் தேவையில்லை” வாசிக்கப் பெற்றேன். தங்கள் கட்டுரையைப் போன்றே பெங்களூரூ சாணக்கியன் எழுதிய ‘வேலை’ கடிதம் வாசித்தீர்களா?

8. ஜெயமோகன் தளத்தில் கல்வியைக் குறித்தும் பாடத்திட்டத்தின் தேர்வுமுறைகள் குறித்தும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். அவற்றில் அவர் குழந்தைகளுக்குக் கொடுக்கும் சுதந்திரத்தையும் தான் பழகிய ஆசிரியர்களையும் கல்வி குறித்த செய்திகளையும் அலசுகிறார். அதில் குறிப்பாக பெற்றொரின் பங்கு குறித்து நிறைய எழுதியிருக்கிறார். நம்முடைய பெற்றோர் இட்ட கட்டளைக்குப் பணிந்து நடப்பது போல், பொறியியல் கல்விக்கு அப்புறமும் மேலாளரின் கட்டளைக்கு அடிபணிய விழைகிறோமா?

9. வேலைக்குப் புதியதாகச் சேரும் எவரையும் எந்த நிறுவனமும் உடனடியாக பொறுப்புகளை சுமத்துவதில்லை. அதிலும் கல்லூரியில் இருந்து புத்தம்புதிதாக வருபவரை இரண்டு வாரங்களுக்காவது தனிப் பயிற்சிக்கு அனுப்புகிறார்கள். தங்கள் அலுவலில் பயன்படுத்தும் நுட்பங்களையும் வழிமுறைகளையும் விவரமாகக் கற்றுத் தருகிறார்கள். அதன் பிறகு இரண்டு மாதங்களுக்காவது, பரீட்சார்த்தமான வேலைகளில் மட்டுமே ஈடுபடுத்துகிறார்கள். மூன்று மாதம் ஆன் பிற்பாடு, நிஜ வேலைக்குள் நுழையும்போது துணை நிற்க அனுபவசாலி ஒருவரை கூடவே கண்காணிப்பாக வைக்கிறார்கள். இதை முதலீடாகக் கருதுகிறார்கள். இந்தியாவின் ஆய்வுத்துறையில் இவ்வாறு ஒவ்வொரு ஆராய்ச்சியாளருக்கும் தனிப்பட்ட கவனம் வழங்க பொருளும் மனிதவளமும் இருக்கின்றதா?

10. வாழ்க்கை ஆதாரமாக கல்வியும், அந்தக் கல்வியினால் கிடைக்கும் வேலையும் அமைந்திருக்கிறது. மேற்குலகில் இருபதில் இருந்து முப்பது வரை பரீட்சார்த்தமாக வாழ்வதை நடைமுறையாக வைத்திருக்கின்றனர். அதாவது, தனக்குப் பிடித்த விஷயத்தில் இளவயதில் தீவிரமாக இயங்குவது; அதில் வெற்றி பெற்றால் கோடிகளை அள்ளுவது; தோல்வி அடைந்தால் மீண்டும் கல்லூரிக்குச் சென்று வேறொரு பாதையைத் தேர்ந்தெடுப்பது. – ஒரு முறையோ, பல முறையோ கீழே விழுந்தால், அஞ்சாமல், கைதூக்கி ஊக்கமும் மீண்டும் நிதியும் கொடுக்கும் சமூக அமைப்பு இந்தியாவில் வர வேண்டுமா?

destroying.jobs_.chart_Decoupling_Productivity_Unemployment_Manufacturing_Economhy_Income_GDP_USA_America_Automation

அறிவியல் புனைவுகள்: 2014 சிறுகதை சிறப்பிதழ்

தினமலரில் அறிவியல் புனைவுகளை சென்னை தினம் 375 – சிறுகதை சிறப்பிதழாக வெளியிட்டிருக்கிறார்கள். அது குறித்த பார்வை.

1. “சக்கரம்” – பிரசன்னா

ஒரே கதையில் எக்கச்சக்கமாய் திணித்திருக்கிறார் பிரசன்னா. ஒரு இடத்தில் நிலைக்கும் சூரியன் போல் கதை நகர வேண்டும். இங்கோ மழை போல் மூத்திரம் அடிக்கிறது. தினமலர் என்பதால் இது போதும் என்று முடிவெடுத்து இருப்பார் கதாசிரியர். வாசகனிடம் எந்தவித கருத்துருவாக்கமும் எண்ணவிதைப்பும் உருவாக்காத ஆக்கம். அதைவிட படு பொருத்தமில்லாத ஓவியங்கள் இந்தக் கதையின் நடுவே வருகிறது. கதையில் அறிவியல் என்பதே கிடையாது. வருங்காலத்தில் நடப்பதாக பாவ்லா செய்கிறது. அந்த வருங்காலத்தைக் குறித்தும் கற்பனாசக்தி இல்லாத கதை. புனைவு என்றால் நம்பகத்தன்மை வேண்டும். முக்கிய கதாபாத்திரத்துடன் ஒன்ற வேண்டும். புதியதாக ஏதாச்சும் விஷயம் இருக்க வேண்டும்.

ஒன்றுமே இல்லாமல் அறிபுனை கதை என்கிறார். அதாவது மேஜிகல் ரியலிசமாக வருங்காலமும் இக்காலம் போல்தான் இருக்கும் என்கிறார்.

  1. ஒரு காப்ஸ்யூல் சோறு – சுதாகர் கஸ்தூரி
  2. கால இயந்திரக் கைதி – ஜீவ.கரிகாலன்
  3. சென்னை 2114 – ஆயிஷா இரா.நடராசன்
  4. போகம் தவிர் – இரா.முருகன்
  5. 2047 ஆகஸ்ட் 15 – ராஜேஷ்குமார்
  6. நாளை மற்றுமொரு – தவமணி வசீகரன்
  7. இன்னும் 5 நிமிடங்களில் – ஜி.பி

யுவ புரஸ்கார் விருது பெற்ற பின்வினைப் பயன் என்ன?

Yuva_Puraskar_Natarjan_Abilash_Chandran_Sahitya_Academy_2014_Awards_Prizes_Tamil_Authors_Writers_Literature_Story_Fiction_Kids
எழுத்துத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கான சிறுவர் இலக்கியத்திற்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் பால சாகித்ய விருது, தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள் என்ற படைப்பை எழுதிய இரா. நடராஜனுக்கும், 35 வயதுக்குள்பட்ட இளம் படைப்பாளிகளுக்கான ’யுவ புரஸ்கார்’ விருதுக்கு கால்கள் என்ற படைப்புக்காக, எழுத்தாளர் ஆர். அபிலாஷ் சந்திரனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் வாழ்த்துகள்.

யுவ புரஸ்கார் விருதிற்கும் கணிதத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்காக வழங்கப்படும் ஃபீல்ட்ஸ் மெடலுக்கும் ஒரு முக்கிய ஒற்றுமை உண்டு. கணித ஆராய்ச்சி பரிசு பெறுவதற்கு நாற்பது வயதிற்குள் இருக்க வேண்டும். சாகித்ய அகாதெமியின் இளவயது விருது பெற முப்பத்தைந்திற்குள் இருக்க வேண்டும். ஃபீல்ட்ஸ் மெடல் பெற்றால் ஒரு மில்லியன் அமெரிக்க டாலராவது கைவசம் கிட்டும். யுவ புரஸ்கார் கிடைத்தால் இருபத்தைந்தாயிரம் ரூபாய்கள் கிடைக்கிறது.

இரண்டு விருதுகளுமே தத்தம் துறைகளில் செயல்படுபவர்களை மேலும் ஆர்வத்துடன் இயக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது. கணிதத்தில் என்ன உட்பிரிவில் விருப்பமோ, அந்தப் பகுதியில் பணத்தட்டுப்பாடின்றி ஆராயவும் நேரஞ்செலவழிக்கவும் ஃபீல்ட்ஸ் பதக்கம் தருகிறார்கள். பல்கலைக்கழகத்திடம் கையேந்த வேண்டாம். பெருநிறுவனத்தின் ஆமையும் முயலும் பந்தயங்களில் கலந்துகொண்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம். ஊர் ஊராகச் சென்று நிதி கேட்டு புரவலர்களை எதிர்நோக்க வேண்டாம். கணித மேதைகள் தேர்ந்தெடுத்து சாதித்த துறையில் மேலும் தீவிரமாக ஆராயவும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் இந்த மில்லியன் டாலர் பரிசு உதவும்.

ஆனால், நடப்பது என்ன?

ஃபீல்ட்ஸ் பதக்கத்தை வெல்லாதவர்கள், இன்னும் ஆழமாக, புதியதாக, வித்தியாசமாக ஆய்வுகளையும் ஆராய்ச்சிகளையும் வெளியிடுகிறார்கள். ஃபீல்ட்ஸ் பதக்கத்தை வென்றவர்கள் வெளியிடும் ஆராய்ச்சிகளை விட கிடைக்காதவர்களின் ஆய்வேடுகள் எண்ணிக்கை அளவில் அதிகம் என்கிறார்கள். இது வரை பதக்கம் வென்றவர்கள் வெளியிட்டதையும் பதக்கம் வெல்லாதவர்கள் நாற்பது வயதிற்கு பிறகு வெளியிட்டதையும் Kirk Doran at Notre Dame and George Borjas at Harvard அலசினார்கள்.

பரிசு வென்றவர்கள் தங்களின் மூல ஆராய்ச்சியை விட்டு ஒதுங்கிவிட்டார்கள். தங்களின் திறமையை வேறு துறைக்கு கொண்டு செல்கிறார்கள். ஆனால், இந்தப் புதிய துறையில் புத்தம்புதியதாகக் கற்றுக் கொள்ளவும் புரிந்து கொள்ளவும் நிறைய நாளாகி இருக்கிறது. அதனால், அவர்களால், அதிக அளவு ஆழமான ஆராய்ச்சிகளை செய்யமுடிவதில்லை. பரிசு வெல்லாதவர்களோ, பண ஆதாரம் இல்லாத நிலையில், தங்களின் முதல் துறையிலேயே கவனமாக ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து இருக்கிறார்கள். அதனால், மென்மேலும் பல்வித புதிய எழுத்துகளை ஊக்கத்துடனும் புதிய தரிசனங்களுடனும் உண்டாக்க முடிந்திருக்கிறது.

இந்தியப் புனைவுலகில் ஒரு கதை எழுதியவுடனேயே ஒருவர் இலக்கிய விமர்சகராகவும் சமூக சிந்தனையாளராகவும் பீடம் போட்டுக் கொள்வதால், ‘யுவ புரஸ்கா’ருக்கு இந்த அபாயம் இருப்பதாகத் தெரியவில்லை.

பருவகாலங்கள்: ஈஸ்டர் ஞாயிறு

பனிக்காலம் முடிந்து குளிர் விலகுவதை ஒவ்வொரு இனக்குழுவும் அந்தக் காலத்தில் கொண்டாடி வந்தது.

ஒருவர் புனித வெள்ளி முடிந்து ஈஸ்டர் என்கிறார். இன்னொருவர் வண்ணப் பொடி தூவி ஹோலி என்கிறார். இஸ்ரேலியர்கள் passover என கொண்டாடுகிறார்கள். மார்கழியில் பெரிய குளிர் இல்லாவிட்டாலும் மாசி மகம் அன்று ‘தீர்த்தமாடும் நாள்‘. எத்தனை நாள்தான் குளிக்காமல் அட்டு மாதிரி தோய்க்காத பழைய கோட்டு சூட்டுகளையேப் போட்டுத் திரிவது!

பூப்பூக்கும் காலம். அதுவரை வாடி வதங்கிய புல்லும் மரங்களும் துளிர்க்கும் காலம். முட்டையில் இருந்துதான் கோழி வந்தது என நம்புவதைப் போல் முட்டைகளுக்குள் மிட்டாயை ஒளித்து, அவற்றைத் தோட்டத்தில் புதைத்து, குழந்தைகளைத் தோண்டச் சொல்லி தூர் வாரும் காலம். அந்தக் கால pagan கொண்டாட்ட முட்டையில் இருந்துதான் இந்தக் கால இயேசு உயிர்த்தெழுந்திருக்கிறார்.

தமிழ்ப் புத்தாண்டும் ஏப்ரல் 14ஆம் தேதி பிறக்கிறது. முஸ்லீம்களுக்கும் யுகாதி ஆண்டுத் துவக்கத்திற்கும் தொப்புள்கொடு உறவு. இஸ்லாமில் ஷியா பிரிவினரும் நௌரூஸ் (Nowruz) என மார்ச் 21ஆம் தேதியை புது வருடப் பிறப்பாகக் குறிக்கிறார்கள். சங்க காலத்திலும் இளவேனிற் காலம் பாடல் பெற்றிருக்கிறது.

”வேனிற் பாதிரிக் கூன்மல ரன்ன” (குறந்தொகை : 147 : 1)
“கான விருப்பை வேனல் வெண்பூ”(குறந்தொகை : 329 : 1)

அனைவருக்கும் வசந்த காலம் பிறக்க புனித ஞாயிறு வாழ்த்துகள்.

மனைவி இல் நானும், முதலாளி இல் அங்காடியும்

Grocery_101_Done

சாதுவான மனித இயல்பு எப்பொழுது விஸ்வரூபம் எடுக்கும் என்று சொல்ல இயலாது. அதுபோல் அமெரிக்காவில் தொழிலாளர்கள் எப்பொழுது பொங்குவார்கள் என்பதும் சொல்ல முடியாது. தங்கள் தலைவரை நிர்வாகத்தில் இருந்து நீக்கி விட்டார்கள் என்று மார்க்கெட் பாஸ்கெட் ஊழியர்கள் அதிகார பூர்வமற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மாஸசூஸட்ஸ் மாநிலத்தில் ஒவ்வொருவரின் வீட்டிற்கு அருகேயும் சல்லிசான விலையில் மளிகைப் பொருள்களும் காய்கறிகளும் அன்றாடத் தேவைகளும் கிடைக்கும் பல் பொருள் அங்காடி – மார்கெட் பாஸ்க்கெட்.

சிகாகோவில் பள்ளி ஆசிரியர் வேலை நிறுத்தம், உள்ளூரில் மின்சார விநியோகம் செய்யும் நிறுவன ஸ்டிரைக் என்று விதவிதமாக பார்த்திருக்கிறேன். (முந்தைய பதிவு: நியு யார்க் நிறுத்தம்) அந்த விதத்தில் இது கொஞ்சம் வித்தியாசமான ஸ்ட்ரைக். நுகர்வோர்கள் இதை வரவேற்கிறார்கள். பணி புரிபவர்களுக்கும், நிச்சயம் இதே போன்ற வேறு வேலையோ, அல்ல து இதே வேலையோ நிச்சயம் கிடைக்கும். எப்படியாக இருந்தாலும், குறைந்தபட்ச ஊதியத்திற்கு பணிபுரிபவர்கள். மார்க்கெட் பாஸ்கெட் இல்லாவிட்டால், ஆல்பர்ட்சனஸ்… ஆல்பர்ட்சன்ஸ் மூடிவிட்டால் ஷாப் ரைட்.

தங்களுடைய மேலாளருக்காக, கோடி கோடியாக சம்பாதிக்கும் முதலாளிக்காக, முதலிய தேசத்தில் போராட்டம் வெடிக்கிறது என்பது மிகப்பெரிய நம்பவியலாத நகைமுரண். தினம் ஒரு கார், ஊருக்கு ஒரு வீடு, பரம்பரை சொத்து என்று செல்வத்தில் திளைக்கும் தலைவருக்காக, நூற்றுக்கணக்கான கிளைகளில் ஆயிரக்கணக்கான தினக்கூலிகள் தெருவில் இறங்கி கோஷம் போடுகிறார்கள் என்பதைப் பார்க்கும்போது திராவிடத் தலைவர்களைப் பார்த்து ‘பெரியார் வாழ்க! அண்ணா நாமம் ஓங்குக’ என்று முழங்கும் தமிழகத் தொண்டர்கள் நினைவுக்கு வந்து சிரமப்படுத்துகிறார்கள்.

இவர்களின் வேலைக்கு வராத கைங்கர்யத்தால், வேறொரு அங்காடிக்கு சென்றேன். கொஞ்சம் தட்டுத் தடுமாறி, என்னுடைய வழக்கமான வாழ்க்கைப் பொருட்கள் எங்கே இருக்கின்றன என்பதை கண்டுகொண்டேன். மனைவி வேறு ஊரில் இல்லாததால், நிதானமாக, ஒவ்வொரு சந்திலும் நுழைந்து, அதில் இருக்கும் அனைத்து வரிசைகளையும் ஆராய்ந்து, புதிய அறிமுகங்களையும் அறிமுகமான நண்பர்களையும் பார்க்க முடிந்தது.

சொட்டு நீலம் போன்ற டப்பா வடிவில் ஊக்கம் தரும் நீர்ச்சொட்டுகள் வந்திருக்கின்றன; கிரேக்கமும் மெக்சிகோவும் பல வீதியிலும் தங்கள் பங்கை ஆக்கிரமித்திருக்கின்றன; கலப்படம் இல்லா ஆர்கானிக் தயாரிப்புகள் நிறைந்திருக்கின்றன. கை நோகாமல், நேரமும் செலவழியாமல் வீட்டில் இருந்தபடியே உண்ணும் சோம்பேறி உணவுகளை வாங்கினேன்.

மேலே பார்த்திருப்பீர்களே!?

மைக்ரோவேவ் அடுப்பினால் ஆபத்தா?

இணையம் விநோதமான இடம். புரிகின்ற ஆங்கிலத்தில் புரியாத நடையில் கரடுமுரடான ஆராய்ச்சிகள் இருக்கிறது. ஆயிரக்கணக்கான திரைப்படங்களும் புத்தகங்களும் திருட்டுத்தனமாக இலவசமாகக் கிடைக்கிறது. அரை லூசு அறிவியலும் கிடைக்கிறது. ஆனால், எது முழு கிறுக்கு, எது முக்கால் கிறுக்கு, என்று தெளிவதற்குள் நாமே எழுத ஆரம்பித்துவிடக் கூடாது என்பதுதான் விதி.

அப்படி பார்த்த ஒரு கபர்தார் செய்தி: ‘நுண்ணலை அடுப்பினால் விளையும் 12 ஆபத்துகள்!’

மேற்குலகில் எங்கு பார்த்தாலும் மைக்ரோவேவ் ஓவன். பால் சுட வைப்பது முதல் பால்கோவா காய்ச்சுவது வரை நுண்ணலை அட்டுப்பில்தான் நடக்கிறது. அதனால் ஆண்மை பறிபோகிறது. புரதச் சத்து இழந்த உணவை உண்கிறோம். நல்ல சாப்பாட்டை நச்சு சாப்பாடு ஆக்குகிறோம். கதிரியக்க வீச்சு பாய்ந்த பொருளைக் குடலுக்குள் தள்ளுகிறோம். விட்டமின் சத்தை இழக்கிறோம். புற்றுநோய் உருவாகும்.

இந்தப் பதிவை நீங்கள் லைக் செய்யாவிட்டால், வேதியியல் பட்டப்படிப்புக்கு உள்ளாவீர்கள். இந்தப் பதிவை நாற்பது பேரிடம் பகிராவிட்டால், கியாஸ் அடுப்பு கிடைக்காமல் கெரஸீன் தேடி தெருதெருவாய் அலைவீர்கள்! ஜாக்கிரதை.

Kutti Revathi: குட்டி ரேவதி

Kutti_Revathi

சித்த மருத்துவராய்ப் பணியாற்றும் இவர், சென்னையில் வசிக்கிறார். சில செய்திப் படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். 15-6-1974-இல் திருவெறும்பூரில் பிறந்தவர். இனவரை மருந்தியல் துறையில் (சித்த மருத்துவத் துறையில்) முனைவர் பட்ட ஆராய்ச்சி. இவர் 90களில் எழுதத் தொடங்கினார். ‘பனிக்குடம்’ எனும் இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்தார், பெண்சார் திரைப்படங்கள் குறித்துத் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். பெண்சார் திரைப்பட இயக்கமான ‘கண்ணாடி’யில் முனைப்பாகப் பங்கு கொண்டுள்ளார். சில செய்திப் படங்களின் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். தற்போது துணை இயக்குநராக இருக்கிறார். ஆங்கிலக் கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார்.

அவர் சிறந்ததொரு புகைப்படக் கலைஞர். காந்திக்கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையும் பாரதியார் ஆய்வகமும் நடத்திய “பாரதிக்குப் பின் : பெண்ணும் கவிதையும்” கருத்தரங்கில் “பெண்ணியக் கவிதை : அதன் கலைச்செயல்பாடும் சமூகப் பயன்பாடும்” தலைப்பில் பேசினார். இடிந்தகரை அணு உலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். 2011ல் Audi Ritz Icon விருது பெற்றார். சிவகாமியின், ‘கதவடைப்பு’ கவிதை நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கிறார்.

இவர் கவிதைகளில் பிரமிளை நினைவூட்டும் உணர்வுத் தீவிரம் தெரிகிறது. தேவதேவனின் இயற்கை ஈடுபாடு ஆகிய பாதிப்பும் உண்டு. இருவரும் இவருக்கு ஆதர்சங்கள். K.M. இசை நிறுவனத்தின், ‘பெண் எழுச்சியை’ மையமாகக் கொண்ட “இரசாயன ரோஜாக்கள்” ஆல்பத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இஷ்ரத், ரிஹானாவின் குரல்களில் ‘என்னிலே மகா ஒளியோ!’ என்றொரு பாடல் எழுதியிருக்கிறார். இவருடைய கவிதைகளை கல்யாணராமனும் லஷ்மி ஹோம்ஸ்ட்ரமும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

பரதவர்களின் வாழ்வியலை ‘ஆழி சூழ் உலகு’ புதினத்தில் பதிவு செய்த ஜோ.டி. குரூஸ் வசனகர்த்தாவாகப் பணியாற்றியுள்ள ‘மரியான்’ திரைப்படத்தில், இரண்டாண்டுகளுக்கு மேலாக கவிஞர் குட்டி ரேவதியும் இணை இயக்குநராகப் பணியாற்றியதோடு ஒரு பாடலையும் எழுதியுள்ளார். இயக்குநர்களுக்கு திரைக்கதையை எழுதும் பணியைச் செய்து வருகிறார். சில திரைப்படங்களுக்கும், ஆல்பங்களுக்கும் பாடல்கள் எழுதுகிறார். மெல்ல, தான் இயக்கவிரும்பும் திரைப்படத்திற்கான பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வேன் என்கிறார்.

பெண் இயக்குநர்களுடன் இணைத்து, ‘விறலி விடு தூது’ என்னும் திரைத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். மூலக்கதை ஆசிரியர், திரைக்கதை ஆசிரியர், திரை இயக்குநர், திரைத் தயாரிப்பாளர் இவர்களை ஒருங்கிணைத்துத் திரைப் படைப்புகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவதுதான் இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் முதன்மையான நோக்கம். ’விறலி’ என்றால் கலைகளை வளர்ப்பவள் என்பது பொருள்.

கடவுள் நம்பிக்கை இல்லாத இவர், கௌதம புத்தரின் ‘விபாஸனா’ என்ற யோகக்கலையின் மீது விருப்பம்கொண்டு அதைக் கடைப்பிடித்து வருகிறார்.

Aan_Kuri_Maiya_Punaivai_Sithaitha_Pradhigal_kutti revathi

அவரின் குரலில், அவரைப் பற்றி:

” மலைகள் சூழ்ந்த இயற்கை சூழலில்தான் நான் வளர்ந்தேன். பதினைந்து வயது வரையில் எனக்கு திருவெறும்பூர் தவிர்த்து வேறு எந்த ஊருடனும் பெரிதாகத் தொடர்பு இல்லை. என்னுடைய அந்தக் காலகட்டங்களை முழுக்க முழுக்க திருவெறும்பூர்தான் ஆக்கிரமித்து இருந்தது. அங்குதான் நான் எட்டாம் வகுப்புவரை ஒய்.டபிள்யூ.சி.ஏ. எனும் தமிழ்ப் பயிற்றுப் பள்ளியில் படித்தேன். என்னுடைய இளமைப் பருவத்தில் எனக்குத் தேவையான நம்பிக்கையையும் தெம்பையும் அந்தப் பள்ளிதான் வழங்கியது. அங்கு இருந்த ஆசிரியர்கள் பள்ளிக் குழந்தைகளை தங்கள் குழந்தைகளாகப் பாவித்துக் கல்வி கற்பித்தனர். எங்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே அப்படி ஓர் இணக்கமான சூழல் நிலவியது. கட்டுரை, பேச்சு என அனைத்து போட்டிகளிலுமே நான் பங்கெடுத்துப் பரிசுகள் பெற்றிருக்கிறேன். இன்றுகூட என்னால் 1,330 திருக்குறளையும் முழுதாகச் சொல்ல முடியும். இதற்கெல்லாம் காரணம், என் பள்ளி ஆசிரியர்கள்தான்.

திருவெறும்பூரில் எறும்பீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் ஆதிச்சசோழன் காலத்தில் அவன் பெற்ற வெற்றிகளைத் தொடர்ந்து காவிரிக் கரையோரம் வரிசையாகக் கட்டிய பல கோயில்களில் இதுவும் ஒன்று. மாலை நேரங்களில் பள்ளி முடித்துவந்து உடை மாற்றிவிட்டு எறும்பீஸ்வரர் கோயில் வளாகத்தில் எங்கள் அப்பாவோடு நானும் என் தம்பி தங்கையும் நடப்பதை வழக்கமாகவே வைத்து இருந்தோம். அப்போது என் தந்தை எனக்கு சொல்லிக்கொடுத்த தேவாரமும் திருவாசகமும் அப்படியே என் மனதில் பதிந்துள்ளது. பொதுவாக எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால், அந்த இலக்கியங்களில் இருந்த மொழிநடை என்னை மிகவும் ஈர்த்தது. எறும்பீஸ்வரர் கோயில் பற்றிப் பேசும் இந்த நேரம் எனக்குக் கோயில் பிரகாரத்தில் வீசும் காற்றின் சுகந்தம் நினைவுக்கு வருகிறது.

பி.ஹெச்.எல். டவுன்ஷிப்பில் இருந்த நூலகம் எனக்கு இன்றியமையாத ஒன்று. பள்ளியில் படிக்கும்போது பேச்சு, கட்டுரை போட்டிகளுக்குத் தேவையான தகவல்களைச் சேகரிக்கச் சென்றபோதுதான் அந்த நூலகம் அறிமுகம் ஆனது. கூடவே எழுத்தின் வழி சுஜாதாவும் பாலகுமாரனும் அறிமுகமானார்கள். சங்க இலக்கியங்களைத் தேடித்தேடி படிக்க ஆரம்பித்தேன்.

பி.ஹெச்.எல். போகும் அந்தப் பிரதான சாலையை என்னால் மறக்கவே முடியாது. ஏனெனில், அங்குதான் நான் முதன்முதலாக சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டேன். இன்றும் அந்த இடத்தைப் பார்க்கும்போது என்னால் அந்த நினைவுகளை மீட்க முடிகிறது.

எனக்கு அப்போது வசந்தி, ஜோதி, மீனா என மூன்று நெருங்கிய தோழிகள் இருந்தனர். நாங்கள் மூவரும் திருச்சியின் அழகை முழுதாக ரசித்தோம். 80-களின் இறுதியில் அப்படி எல்லாம் பெண் பிள்ளைகள் சுதந்திரமாக இருப்பது சாதாரண விஷயம் இல்லை. அந்த விஷயத்தில் என் அப்பா எனக்கு முழு சுதந்திரத்தை அளித்திருந்தார்.

என் அப்பா சுயம்புலிங்கம் பி.ஹெச்.எல். நிறுவனத்தில் ஒரு சாதாரண கடைநிலை ஊழியராகப் பணியாற்றியவர். இருப்பினும் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க மிகவும் பாடுபட்டவர். அப்படிப்பட்ட என் தந்தையை நான் கடைசியாகப் பார்த்தது திருவெறும்பூர் ரயில் நிலையத்தில்தான். நான் சென்னையில் இருந்தபோது அவர் மாரடைப்பால் இறந்துபோனார். அதன் பிறகு நான்கு வருடங்கள் திருவெறும்பூருக்கு வரவே இல்லை. ஏனெனில், அவருடைய ஞாபகங்கள் என்னை மிகவும் பாதித்து இருந்தது. நான் மிகவும் நேசித்த திருவெறும்பூரை அந்தக் காலகட்டத்தில் கொஞ்சம் வெறுத்திருந்தேன் எனச் சொல்லலாம்.

இன்றும் திருவெறும்பூர் திருவேங்கட நகரில் எங்களுடைய சொந்த வீடு இருக்கிறது. வேலை காரணமாக அடிக்கடி ஊருக்கு வரமுடியவில்லை என்றாலும், வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் தவறாமல் இங்குவந்து திருவெறும்பூரின் அழகை ரசிக்க நான் மறப்பதில்லை!”

150256_525948294105568_268739038_n

2012 புத்தகக் கண்காட்சி

1. மாமத யானை – புதிய கவிதைத் தொகுப்பு (வம்சி வெளியீடு)
இது என்னுடைய ஆறாவது கவிதைத் தொகுப்பு! எத்தனை நூல்கள் வந்தாலும் கவிதை நூல் தரும் களிப்பை வேறு ஏதும் தர முடிவதில்லை!
கவிதைக்குள் தான், நான் என் முழு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் நிறைத்துத் தரமுடிகிறது! பல சமயங்களில், நான் கவிஞரின்றி வேறு யாருமல்ல என்று கூடத் தோன்றுகிறது! மற்ற எனது ஆளுமைகள் எல்லாம் அதை ஒட்டியிருக்கும் பிசிறுகள் தாம்! அடுத்தடுத்தக் கட்டத்திற்கான முந்தைய கட்டமாக ஒரு கவிதை நூல் மாறி, என் அகவெளியை உறுதிசெய்கிறது! உரமூட்டுகிறது! சகப் படைப்பாளிகளினும், வாசகர்கள் தாம் என்றும் என் ஊக்கமாயிருந்திருக்கிறார்கள்! எனக்கு நிழலாயிருந்திருக்கிறார்கள்! இந்தப் படைப்பும் அவர்களால் தான் சாத்தியமாயிற்று என்று நம்புகிறேன்!

2. ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப்பிரதிகள் – தம் உடலரசியலால் தமிழ் எழுத்தின் மரபை மாற்றியமைத்த தமிழ்ப்பெண் கவிதைகள் பற்றிய கட்டுரைத் தொகுப்பு (நாதன் வெளியீடு)

3. இந்தக் கோடைக்காலத்தை உனக்காகவே அழைத்துவந்தேன் – காதல் கவிதைகள் தொகுப்பு (ஆழி பப்ளிஷர்ஸ்)

4. முதல் காதல் அனுபவங்கள் – வெவ்வேறு படைப்பாளிகளின் உணர்ச்சிப்பூர்வமான முதல் காதல் அனுபவங்களின் தொகுப்பு (ஆழி பப்ளிஷர்ஸ்)

5. நிழல் வலைக்கண்ணிகள் – பெண்ணிய அரசியல் கட்டுரைகள் (வம்சி வெளியீடு)
– Book of feminist essays, predominantly discuss caste, gender and body.
பெண்ணியக் கட்டுரைகளளின் பெருந்தொகுப்பு. தமிழகத்தில் பெண் உரிமை கோரும் இயக்கங்கள், நிறுவனங்கள், தளங்கள், உரையாடல்கள் பலமுறை எழுந்தும் அவை முழுமையான வடிவம் எடுக்காதபடிக்கு, தனி நபர் அல்லது குழுவினரின் ஆதிக்கத்தால் தீவிரமாக ஒடுக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் அது சுயநலம், சுயலாபம் பொருட்டாகவே இருந்திருக்கிறது. இன்று அதற்கான விளைவுகளைப் பெருவாரியாக நாம் அனுபவித்தும் இறுக்கமான மெளனம் கடைபிடிக்கப்படுகிறது. அந்நிழல் வலைக்கண்ணிகளை எழுத்தின் வழியாக என் இடத்திலிருந்து பார்த்திருக்கிறேன். அவ்வலைக்கண்ணிகளை நாம் இனம் காண இந்நூல் ஒரு கையேடாக இருப்பின் மகிழ்வேன்!

புத்தகத்திற்கான முன்னுரை

Idintha_Karai_Kutty_Revathy_Kadal_Penngal_Kavidhaigal

6. யானுமிட்ட தீ – கவிதைத் தொகுப்பு (அடையாளம் வெளியீடு) (2010)
சாதியப்படுத்தப்பட்ட மூடுண்ட மனித உடலை இக்கவிதைகள் இயல்பூக்கத்துடன் திறக்கின்றன. உடலையே இயக்கமாக்கி அதை அதன் ஆதி நிலைக்குத் திருப்புகின்றன. தொல் அறத்தை மீட்டெடுக்கின்றன. வரலாற்றிலிருந்து உடலின் விடுதலை என்பது மோதலில் மட்டுமே நிகழ முடியும். அத்தகைய மோதலின் உக்கிரமான ஒரு புள்ளியில் இக்கவிதைகள் பீறிடுகின்றன. இதுவே இக்கவிதைகளை உயிர்த்துடிப்புடன் இயங்க வைக்கிறது.

7. ‘பூனையைப் போல அலையும் வெளிச்சம்’ (2000)
தொண்ணூறுகளில் கவனம் பெற்ற முக்கியமான கவிதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இக்கவிதைகள் கோபம் கொள்கின்றன; காதல் வயப்படுகின்றன; காமம் துய்க்கின்றன.. வாழ்வின் வெம்மை பொறுக்க முடியாமல் போகும்போது நிழலைத் தேடும் மன நிலை, ஜீவிதத்தின் உயிர்த்துடிப்பு, பேரனுபவத்தை சுட்டிக் காட்டும் தன்மை; இருமை எதிர்வுகளை வெகு இயல்பாகப் படிமமாக்கிக் காட்டும் அழகியல் ஆகியவற்றுடன் இயங்கும் இக்கவிதைகள் தங்கள் அளவில் தனித்து நிற்கின்றன. ஆணால் வடிவமைக்கப்பட்டு பெண்ணுக்கு வழங்கப்பட்ட பெண் சிந்தனையைப் பார்த்து கெக்கலி கொட்டிச் சிரிக்கின்றன. புதிய சொல்லாட்சிகளும், புதுப்புது சொல்லிணைகளும், மின் தெறிப்பாய் தெரிந்து மறையும் படிமங்களும் இக்கவிதைகளை நினைவுகூறுமாறு செய்கின்றன.

8. ‘முலைகள்‘ (2002)
பெண்ணின் உடலரசியலைப் பேசும் இந்தப் பிரதி முலைகள் துடைத்தகற்ற முடியாத இரு கண்ணீர்த்துளிகள் என்று அறிவித்து பெண்ணை நுகரும் உடலாகப் பார்க்கும் ஆணாதிக்கப் பொதுப்புத்தியைத் தகர்க்கிறது. இத்தொகுப்பில் இயங்கும் கவிதை மனம் வாழ்க்கையின் முட்களில் சிராய்த்துக் கொண்டு கண்ணீர் வடிக்கிறது. அதே சமயத்தில் வாழ்வின் அதீதமான தருணங்களை போகிற போக்கில் தரிசிக்கவும் செய்கிறது. உத்வேகத்துடன் அலைவுறும் கவிதை மனம் விடுதலை வேட்கையுடன் இயங்கும் இக்கவிதைகளில் படிமங்கள் அழகாகக் கைகோர்க்கின்றன. இயல்பான தன்மையுடன் நடனமாடுகின்றன.

9. ‘தனிமையின் ஆயிரம் இறக்கைகள்’
நவீன தமிழ்க்கவிதை வெளியில் பெண் குரல், பெண் உடல், உடலரசியல் போன்ற தளங்களில் ஒலிக்கும் ஒரு குரலை இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் பதிவு செய்திருக்கின்றன. ஏக்கம், நிராசை,காமம், மரணம் போன்ற அனுபூதிகள் இக்கவிதை வரிகளில் சாகாவரம் பெற்று இயங்குகின்றன. இயற்கையின் மீதான அவதானிப்பு இக்கவிதைகளில் பெண்ணியத்தின் குறியீடுகளாக மிளிர்கிறது. பெண்ணிடமிருந்து விலக்கப்பட்ட சொற்களை இவை துணிந்து உச்சரிக்கின்றன. அந்தச் சொற்கள் ஆணாதிக்க மனத்தின் செவிப்பறைகளில் போய் மோதி அதிர்கின்றன. இதுவே இத்தொகுப்பை பிற கவிதைத் தொகுப்புகளிலிருந்து வித்தியாசப்படுத்திக்காட்டுகிறது.

10. ‘உடலின் கதவு’ கவிதை நூல் அடையாளம் பதிப்பகத்தால் மறு பதிப்பும் பெற்றுள்ளன.
ஆணாதிக்கச் சமூகத்துக்கெதிரான ஒரு பெண் மனத்தின் சீற்றம் இக்கவிதைகளில் தெறிக்கிறது.காமம், புணர்ச்சி,கருவுறுதல் என்று விரியும் குறியீடுகள் இந்தப் பிரபஞ்சத்தையே ஒரு பெண்ணின் உடலாகவும், ஒரு பெண்ணின் உடலையே பிரபஞ்சமாகவும் உருவகித்துக் காட்டுகின்றன. கவிதை வரிகள் தோறும் படிமங்களும், தொடர் உருவகங்களும் காட்டாற்று வெள்ளம் போல் பிரவகித்துப் பாய்கின்றன. சில தருணங்களில் வெள்ளம் வடிந்த பின் படியும் நுரையாய் மனத்தில் ஒட்டிக் கொள்கின்றன. கவிதையில் உற்பவிக்கும் உணர்ச்சிப் பெருக்கு கவிஞரிடமிருந்து வாசகனையும் தொற்றிக் கொள்ளும் அதிசயம் இந்தத் தொகுப்பில் சாத்தியப்பட்டிருக்கிறது.

11. கட்டுரை நூல் – காலத்தைச் செரிக்கும் வித்தை (2009)

12. முத்தத்தின் அலகு

ஆழி பதிப்பகத்தின் செந்தில்நாதன், என் காதல் கவிதைகளை நூலாக வெளியிட தொகுத்துத் தரக் கேட்டபோது, உண்மையில் அது ஒரு விநோதமான அனுபவமாகவே இருந்தது. ‘காதல்’ பற்றிய நமது சமூகத்தின் குரல்களும் தனிமனிதக் குரல்களும் எப்போதுமே முரண்பட்டிருக்கின்றன. நுணுகிப் பார்த்தால், ஒடுக்குமுறையை ஆதரிக்குமொரு மனம் தான் காதலை எதிர்க்கிறது! அல்லது, தன்னளவில் உருவான ‘காதல் உணர்வை’ எதிர் நபருக்குச் சரியான முறையில் தெரிவித்து, அதைச் சாத்தியப்படுத்திக் கொள்ள முடியாமல் போனவர்கள் தாம் காதலை எதிர்த்திருக்கிறார்கள்! இன்னொரு மனிதருடன் என்றால், அம்மனிதரின் குடும்பம், வர்க்கம், சாதி, மதம், மனம், உடல், நிறம் என எல்லா பேதங்களுடனும் மோத வேண்டியிருக்கிறது, இல்லையா! ஆனால், இதையெல்லாம் தாண்டி காதல் என்பது தனிமனித அளவில் மிகவும் தூய்மையா கவும் நேர்மையுடனும் உணர்ச்சிப்பூர்வமாகவும் இருக்கிறது!

என்னளவில் காதல் இன்னும் இன்றும் அழகானதாகவே இருக்கிறது! என் காதல் கவிதைத் தொகுப்பிற்கு, ‘முத்தத்தின் அலகு’ என்று பெயரிட்டிருக்கிறேன்.

13. ‘இடிந்த கரை’ நூல் – கடல், பெண்கள், கவிதைகள்

14. ‘முள்ளிவாய்க்காலுக்குப் பின்’ என்ற பெயரில் ஈழத்து இனப்படுகொலையை வைத்து புலம்பெயர்ந்த ஈழப் படைப்பாளிகள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு நூல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

Tamil_poetess_Little_Revathy

 

காதல் குறித்து:

நான் எப்பொழுதும் காதலின் பக்கம்.

எல்லா ஆண்களும் ஒரே மாதிரி தான் என்பதே என்னுடைய கருத்து என்றாலும், பெண்ணிடம் காதலை வெளிப்படுத்துவதில் மட்டும் தான் ஒருவரிடமிருந்து மற்றவர் வேறுபடுகிறார் என்பது என் முடிந்த முடிபு.

வீட்டில் ‘தந்தை அன்பின்’ போதாமையால், ‘சகோதர அன்பின்’ போதாமையால், ‘ஆண் அன்பின்’ போதாமையால் மகளின் காதல் வேகம் பெறுகிறது, வீர்யம் பெறுகிறது. காதல் வழியாக எல்லா ஆண்களிடமும், மகள் தந்தையைத் தான் தேடுகிறாள். தவறாகி, பிழையாகி, பின் ஏதோ ஒரு மட்டில் காதல் நிறைவாகும் வழிகளைத் தேடிக் கொள்கிறாள். தந்தையின் முழுமையான அன்பைப் பெறும் மகளும் காதலில் தன் தந்தையைத் தான் தேடிக் கொண்டிருப்பாள், ஆண்களில் காதலைத் தேடுவதற்குப் பதிலாக.

நான் எப்பொழுதும் காதலின் பக்கம். இன்னும் மானுடம் வெல்ல நம்மிடம் இருக்கும் ஒரே அறிவு காதலே. இதே வார்த்தைகளில் அம்பேத்கர் சொல்லவில்லை என்றாலும், சாதியை வெல்லவும் நம்மிடம் இருக்கும் ஒரே வெளிப்பாடு காதலே.

Kutty_Revathy

அ) நேர்காணல்: கவிஞர் குட்டி ரேவதி-பகுதி-1
http://tamilnathy.blogspot.com/2007/03/blog-post_959.html
– இந்த நேர்காணல் இலங்கையில் வீரகேசரியின் வார வெளியீட்டில் தொடராக வந்தது.

பகுதி-2
http://tamilnathy.blogspot.com/2007/03/blog-post_05.html
– ”’நல்ல எழுத்துத்தான் கடைசிவரை நிக்கும்… அக்கப்போர்களைக் கண்டுகொள்ளாதீர்கள்’”

மறுமொழிகளில் இருந்து:

///ஆண்கள் எப்படி பெண்களைக் கொச்சைப்படுத்துகிறார்களோ பாலியல் உறுப்புகள் குறித்து எழுதுகிறார்களோ அதைப் போலத்தானே இவர்களும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்… இவர்கள் எப்படிப் பெண்ணியவாதிகளாக இருக்க முடியும் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள். அதற்கு என்னுடைய பதில் என்னவென்றால் ‘நாங்கள் முன்வைக்கும் அரசியல் வேறு’என்பதாகும்.///

இதற்கு கவிஞர் சரியான பதிலை சொல்ல வில்லையோ என்று தோன்றுகிறது.

நிறைவுப்பகுதி
http://tamilnathy.blogspot.com/2007/03/blog-post_06.html
– திராவிட இயக்கங்கள் வந்த பிறகு இந்த அழகியல் என்பது அற்றுப்போய்விட்டது என்று சொல்லலாம்

ஆ) எஸ்.ஆர்.எம். எம்.ஏ. பாடப் புத்தகம்

http://www.srmuniv.ac.in/tamilperayam/tamil_courses/Lessons/MA_Tamil/I_Year/matt01/html/mat01007pp2b.htm
‘ஒளி சொட்டச் சொட்டக் குளித்து வந்தாய், பாதங்களில் வழிந்து பாதையெல்லாம் தீக்காயங்கள்’, ‘சுண்ணாம்பு வெயில்.. தன் ஒற்றைக் காலால் என் முகத்தின் மீது நடந்து சென்றது வெயில்’ என்பனபோன்ற அழகும் தீவிரமும் கொண்ட படிமங்களை இவர் கவிதைகளில் காணலாம். காலவெளி, பிரபஞ்ச ஓவியம், பாழ்விண், உட்குகை இருள், இருட்சுவர், காலாதீதம், உதிரநதி, புவனம் போன்ற சொல்லாட்சிகளும் படிமங்களும் பிரமிளின் செல்வாக்கைத் தெளிவாகக் காட்டுவன.

‘ஆண்டாள் தன் காதல்நோய் பற்றிப் பேசியதன் உணர்வுத் தொடர்ச்சியைப் பல நூற்றாண்டுகள் கழித்து ரேவதியிடம் கேட்கிறோம்’ என்கிறார் க.மோகனரங்கன். கவிதை சொல்லியின் பாலியல் அடையாளங்களுடன் தனித்துவமும் தீவிரமும் கூடிய பெண்குரலாக வருவது குட்டி ரேவதி கவிதை என்கிறார். சமூகத் தணிக்கைக்கு உட்படாத சுதந்திரமான ரேவதியின் மொழி, விமர்சனத்திற்கு உள்ளாகலாம் எனவும் அவர் குறிப்பிடுகிறார் (சொல் பொருள் மௌனம், ப.187)

இ) பிறவழிப் பாதைகள் : அன்புள்ள குட்டி ரேவதி
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20601202&edition_id=20060120&format=html
– கோபால் ராஜாராம்

ஈ) பெண்கவிகள் சந்திப்பு – 2002 இடம்-புதுவை நாள்-11.9.02
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60209171&edition_id=20020917&format=html
– இச்சந்திப்பில் பேசப்பட்ட பகிர்வுகளில் மிக முக்கியமாக கருதுகின்ற சில விவாதங்கள் அல்லது கேள்விகள்

உ) உடலின் மொழியும் மொழியின் உடலும் – குட்டி ரேவதியின் கவிதைகள் குறித்து
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60308224&edition_id=20030822&format=html
– எச் பீர்முகம்மது

ஊ) தலித்துகளைக் காப்பாற்றும் பொறுப்பு – கண்ணன்
http://www.kalachuvadu.com/issue-91/kannottam.asp
உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான பெரும் பான்மை ஆட்சி, தலித்-உயர்சாதிச் சமூகக் கூட்டணியால் ஏற்பட்டுள்ள பின்னணியில் ‘அவுட்லுக்’ ஜூன் 24, 2007 இதழ், தெற்கில் மேற்படி நிகழ்வு ஏற்படுத்தியுள்ள எதிர்வினைகளைச் செய்திக் கட்டுரையாக வெளியிட்டுள்ளது. இக்கட்டுரையில் கவிஞர் குட்டி ரேவதி மேற்கோள்காட்டப்பட்டுள்ளார். அவரது கருத்து இது:
”பிராமணர்கள் உத்தரப் பிரதேசத்தில் ஆதிக்கம் செய்யத் தொடங்கிவிடுவார்கள். அவர்கள் தலித்துகளை விழுங்கிவிடுவார்கள் . . . இது பற்றி கருத்துக் கூறும் நேரம் வரவில்லை.”

எ) SEA, OH SEA YOU ARE MY BODY – documentary PMANE

in the background of the evocative song Kadale, Kadale by famous Tamil Poetess Kutti Revathi set to tune by S. Sreekumar of M.B.S.Youth Choir.
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்திற்கு மக்களின் குரலாய் எழுதிய பாடல் இது. கேரளத்து நண்பர்கள் சதீஷ், அனிதா மற்றும் நண்பர்கள் இணைந்து இதற்கு பாடல் வடிவம் கொடுத்துள்ளனர். இசையமைப்பாளர் எஸ். ஶ்ரீகுமார் அவர்கள் இசை அமைத்துள்ளார்

ஏ) interview to Vani Viswanathan of the Spark magazine:
http://www.sparkthemagazine.com/?p=4399
Language is the One Tool that can Liberate Women’s Bodies: Kutti Revathi

ஐ) உதிர்த்த வார்த்தைகளைத் திரும்பப் பெற இயலாது! சிவகாமி அவர்கள் கருத்தின் மீதான விவாதத்தை முன்வைத்து….
http://www.kuttyrevathy.blogspot.in/2013/09/blog-post_15.html

ஒ) பிடித்த புத்தகம்
http://www.amazon.com/dp/0571172865/ref=cm_sw_r_fa_dp_P20zpb0GH377Q/187-8838555-9646736
A graphic novel. The story can differ with each reader and each reading. The central imagery deals with winged dream-people, whose wings are opened books rather than feather and flesh.

Neraiya_Araigal_Ulla_Veedu

ஓ) ஒரு மேற்கோள்
“In writing about a woman’s body and its sexuality, one is also writing about the political history of the human body!”.

கொசுறு:

எழுத்தாளர் நிலையிலிருந்து, கட்சி அரசியல் நிலைக்கு நகர்ந்தது என்பது பெரும்பாலும் பெண் எழுத்தாளர்களுக்குத் தான் நடந்திருக்கிறது! சமூக அசைவின் ஒரு பகுதியாகவே இது பார்க்கப்படவேண்டும்! ஆனால், சமூகத்தின் அரசியல் ஊக்கத்தை மதிக்காத அப்பெண்கள், தன் சுயநிலைகளை மட்டுமே பொருட்படுத்தியவர்களாக இருந்த நிலை உள்ளங்கை நெல்லிக்கனி போல இன்று! எல்லா அரசியல் ஆதாயங்களையும் தன் தனிமனித கோபுரங்களை எழுப்பிக் கொள்ளவே பயன்படுத்தினர்! தி.மு. க. அரசியலின் அடித்தளம் ஆட்டம் கண்டிருக்கும் இந்நேரத்தில், அதில் ஈடுபட்டு முதுகெலும்பு இழந்தவர்கள், சமூகத்தின் பிற ஒடுக்கப்பட்டப் பெண்களின் குரலாய் மாறாத இந்த அரசியல் பெண்கள் இனி எப்படி தம் சமூகக் குரலை அடையாளப்படுத்துவார்கள்? ’அவர்கள் அறச்சீற்றம் கொண்டால் எத்தகையதொரு கேலிக்கூத்தாகிறது என்று சொல்லத்தேவையில்லை!”

கொசுறுக்கு கொசுறு:

‘தனித்த’ தமிழ்த்தேசியம் பேசுவோர் கொஞ்சம் எல்லாவற்றிலும் மிகையான உணர்ச்சிகளுடன் கொந்தளிப்பது, நடக்க இருப்பதையும் நடக்கவிடாமல் செய்துவிடுகிறது என்பதைப் பலமுறைப் பார்த்திருக்கிறேன். ‘தலித்தியம்’, அல்லது ‘சாதி மறுப்பியம்’ என்பதே தமிழ்த்தேசியம் என்று ஆகிவிடக்கூடாதே என்ற பதற்றம் தான் இந்தக் கொந்தளிப்பின் ரகசியம் என்பதையும் பலமுறைகள் உணரமுடிந்திருக்கிறது.

‘காமம் தாண்டி காதல்’ என்பதே கடுமையானதொரு சாதிய மனப்பான்மை. உடலை அவமதிக்கும் செயல். எப்படி தீண்டாமை உடலை அவமதிக்கிறதோ அதையே பின்பற்றும் ஒரு சாதிய மனநிலை தான் இது. காலங்காலமாக நம்மில் ஊறிய சாதிய மனநிலையே, ‘காமம் தாண்டிய காதல்’ என்ற கண்டுபிடிப்புகளை நிகழ்த்தத்தூண்டுகிறது.

தமிழ் இனம் – சாதி மறுப்பு = தமிழ்த்தேசியம், என்பதை பலரும் பல சமயங்களில் வலியுறுத்திக் கொண்டே இருக்கின்றனர்.

யாருக்கு இதனால் நட்டம்? நம்மைப் பிளவு படுத்திக் குளிர்காயும் சனாதனிகளுக்கு இது மிகுந்த மகிழ்ச்சியையும், கொண்டாட்டத்தையும் கொடுக்கும். தமிழகம் என்று தனியே ஒரு நாடு உருவானால் கூட, பின் இருக்கப்போகும் ஒரே பிரச்சனை நீங்கள் தாம்: தீண்டாமையின் புதிய வடிவமைப்பை, பெண் பாலியல் ஒடுக்குமுறையின் புதிய வழிமுறையை நீங்கள் செயல்படுத்துவீர்கள்!

இந்தியா சுதந்திரமடைந்து 67 ஆண்டுகளுக்குப்பின்னும் சாதிய வன்முறை பகிரங்கமாக, காட்டுமிராண்டித்தனத்தின் அடையாளமாக நடக்கிறது. தொடர்கிறது. சக மனிதனை மலம் அள்ள வைக்கிறோம். இசுலாமியர்கள் மீதான வன்முறைகளும் பாரபட்சமும் தொடர்கின்றன. பெண்கள் மீதான பாலியல் வன்முறை முன்னெப்பொழுதையும் விட தற்பொழுது அதிகமாயிருக்கிறது.

6400 சாதிப்பிரிவுகளையும் அதற்கான ஏற்றத்தாழ்வுகளையும் அது ஏற்படுத்தும் ஊழலையும் வைத்துக் கொண்டு ஒருமித்த இந்தியா என்று போற்றுவதும் பாராட்டுவதும் உணர்ச்சிப் பெருக்கெடுப்பதும் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது இல்லையா? இது கண்டிப்பாக சுதந்திர இந்தியா இல்லை. இன்னொரு சுதந்திரத்திற்காக நாம் எல்லோரும் போராடவேண்டியிருக்கும் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்கிறேன்.

Nizhal_Valai_Kannigal_Book

ஔ) குட்டி ரேவதி – தீராநதி நேர்காணல்
http://ntmani.wordpress.com/2006/02/22/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF8/

க) கோவில்கள், சிற்பங்கள், ஓவியங்கள் – ஸ்ரீனிவாசனுடன் உரையாடல்
http://www.yaavarum.com/archives/2590

ங) ’இந்தியா டுடே’யின் ரஜினி சிறப்பிதழ் கட்டுரை
http://kuttyrevathy.blogspot.com/2011/12/blog-post.html
– ‘நான் நம்பர் ஒன், என் புருஷன் நம்பர் டூ’ என்ற வசனமும் ரஜினி என்ற கதாநாயகனும்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை, ரஜினி என்ற கதாநாயகனின் ஆணாதிக்க வசனங்களைப் பற்றிய சிறிய அலசல்!

Breasts: (original ‘Mulaigal’ by Kutti Revathi), translated by N. Kalyan Raman

Breasts are bubbles, rising
In wet marshlands
I wondrously watched- and guarded-
Their gradual swell and blooming
At the edges of my youth’s season
Saying nothing to anyone else,
They sing along
With me alone, always:
Of Love,
Rapture,
Heartbreak
To the nurseries of my turning seasons,
They never once failed or forgot
To bring arousal
During penance, they swell, as if
straining
To break free; and in the fierce tug of
lust,
They soar, recalling the ecstasy of music
From the crush of embrace, they distil
The essence of love; and in the shock
Of childbirth, milk from coursing blood
Like two teardrops from an unfulfilled
love
That cannot ever be wiped away,
They well up, as if in grief, and spill over

Ref: Literery review, The Hindu, January 1st 2006

Wild_Girls_Wicked_Words_Lakshmi_Holmstrom

ச) ‘புறனடை’ இதழில் வெளியான என் நேர்காணல்

இத்தகைய நிதானமான நேர்காணலை எடுக்கும் பணிக்கு நண்பர்கள் ரவிச்சந்திரன், பிரவீண், ராஜ், கஜேந்திரன், ஜே. ஜெய்கணேஷ் தங்களின் நிறைய நேரத்தைச் செலவழித்தார்கள். நான் முன்வைக்கும் அரசியல் நிலைப்பாடு குறித்தும், அதை நோக்கிய என் எழுத்துப் பயணம் குறித்துமான நேரடியான பதிலை திருத்தமானதோர் உரையாடல் வழியாக என்னிடமிருந்து பெற்றார்கள்! வழக்கத்திற்கு மாறாக, நிறைய நண்பர்கள் இந்நேர்காணலை வாசித்துவிட்டு தங்கள் வாழ்த்துகளையும் கருத்துக்களையும் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் வழியாகப் பகிர்ந்து கொண்டார்கள்.

என்னை ஒரு தனிமனிதராகப் பார்க்காமல், எழுத்து இயக்கத்தின் ஒரு பகுதியாகவே என்னைப்புரிந்து கொண்டு, இதைத் தன் இணையத்தளத்தில் பதிப்பித்த, ‘தமிழ் ஸ்டுடியோ’ அருண் அவர்களுக்கும் என் நன்றி!

குட்டி ரேவதி (Kutti Revathi) கவிதை படைப்புகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
http://eluthu.com/kavignar/Kutti-Revathi.php

அவரின் வலைப்பதிவு: http://www.kuttyrevathy.blogspot.com/

 

 

திமிங்கிலமும் எழுத்தாளரும்: பயணச் சிக்கல்

New_England_Aquarium_Whale_Watch

கோடை காலத்தில் பாஸ்டனின் அட்லாண்டிக் கடலில் நிறைய திமிங்கிலங்களைக் காணலாம். ஒரு மணி நேர அளவில் கப்பலில் கடலுக்குள் பயணித்தால், குட்டியுடன் விளையாடும் தாய், கூட்டமாக இரை பிடிக்கும் இளைஞர் கூட்டம் என விதவிதமாகப் பார்க்கலாம். அடைத்து வைக்கப்பட்ட மீன்காட்சியகத்தில் தரிசிக்காமல், பரந்த வெளியில் சுதந்திரமாக நீந்தும் திமிங்கிலங்களை இயற்கையான பரப்பில் காணலாம்.

பி.ஏ.கே. பசிஃபிக் சமுத்திரத்தில் விதவிதமான திமிங்கிலங்களைப் பார்த்த காட்சிகளை ஒளிப்படமாக இட்டிருந்தார். பாஸ்டனுக்கு வரும் பிரபலங்களுடன் இந்தப் பயணம் செல்வது குதூகலமான நிகழ்வு. ஆசுவாசமாக மூன்று மணி நேரம் உரையாடலாம். வெளியே விரிந்திருக்கும் எல்லையற்ற நீர்ப்பரப்பின் அமைதியோடும், வெயில் கொளுத்தினாலும் கடலின் குளுமையாலும், செல்பேசி இடைவேளிகளும் இடையூறுகள் தவிர்க்கப்பட்டதாலும் ரம்மியமான உல்லாசமான நேரம். சூரியவொளி புகாத ஆழ்க்கடலில், தன்னுடைய இரையின் இருப்பிடத்தைத் துல்லியமாக அறிந்து அவற்றைப் பிடிக்க எதிரொலி உத்தியை திமிங்கலங்கள் பயன்படுத்தும். அதே போல், வந்திருக்கும் எழுத்தாளர்களும் தங்களுடைய எழுத்துக்கான ’குரலை’ எவ்வாரு அறிந்து கொண்டார்கள் என்று அறிந்துகொள்ள ஏற்ற தருணமாக இந்தப் பயணங்கள் அமையும்.

திமிங்கிலம் காணச்செல்லும் இந்தக் கடல் பயணத்தின் முதல் சிக்கல் – எல்லோரும் வாந்தி எடுப்பது. அலைகளைக் கிழித்துக் கொண்டு எதிர்க்காற்றில் கப்பல் செல்லும். அது எதுக்களிக்கும். கோபம் எழும்போது தேவையில்லாத கதைகளை எப்பொழுதோ வாசித்திருந்த இலக்கியப் புத்தகங்களில் இருந்து நினைவுகூர்வேன். அதற்கொப்ப, எப்பொழுதோ உட்கொண்ட உணவை வெளிக்கொணரும். கப்பல் எங்கும் ஓக்காள உமிழ்வுகள்.

இன்னொரு சிக்கல் திமிங்கிலத்தின் அபான வாயு. கருவாட்டு வாயால் மூச்சுவிட்டால் கூட பொறுத்துக் கொள்ள முடியாத மீன்வாடை. திமிங்கிலத்தின் நாக்கில் ஐம்பது பேர் அமர்ந்து செல்லலாம். ஐம்பது பேரும் ஒரே சமயத்தில் குசு விட்டால் எப்படி இருக்கும்?

இப்பொழுது நேற்று நடந்த புதிய பிரச்சினை. வழக்கம் போல் அந்தப் பயணமும் கடலுக்குக் கிளம்பி இருக்கிறது. ஆனால், கார்னிவல் நிறுவனத்தின் கப்பல் பயணங்கள் போல் நடுக்கடலில் சிக்கிக் கொண்டுவிட்டது. சேராத இடம் சேர்ந்து கப்பலின் வடம் பாஸ்டனுக்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களுடன் மாட்டிக் கொண்டது. ”அரை மணி நேரத்தில் சரியாகிவிடும்; ஒரு மணி நேரத்தில் கரை திரும்பிடுவோம்” என்று சால்ஜாப்பு சொல்லியவர்கள், கடைசியாக இரவு முழுக்க முழுக்க கடலிலேயே தத்தளித்து இருக்கிறார்கள்.

இந்தப் பதிவில் எந்தக் குறியீடும் எல்லை.

தேயிலைக் கட்சி: டீ பார்டி அடையாளம்

Nisha_Curt_Clawson_State_Dept_House_Tea_Florida_Congress_biswal
இத்தாலியர்கள் சிலர் அமெரிக்காவில் இருக்கிறார்கள். அமெரிக்கர்களில் சிலர், முன்னாள் இத்தாலிய பிரஜைகளாக இருந்தவர்கள். அமெரிக்காவில் வசிக்கும் இத்தாலியப் பெற்றோருக்கு, பிறந்தவர்கள் அமெரிக்கர்களாகவேக் கருதப் படுகிறார்கள். அதே போல், இந்தியர்களும் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். இந்தியர்களில் சிலர் அமெரிக்கர்களாகவும் மாறிவிடுகிறார்கள். அமெரிக்கர்களில் சிலர் இந்திய வம்சாவழியினருக்குப் பிறக்கிறார்கள்.

அமெரிக்க சட்ட்சபையில் கர்ட் கிளாசன் (Curt Clawson) அங்கம் வகிக்கிறார். புகழ்பெற்ற பர்டியூ பல்கலைக்கழகத்தில் பயின்றவர். அதன்பிறகு ஹார்வார்டுக்கு சென்று மேலாண்மையில் மேற்படிப்பு பட்டயம் வாங்கியவர். ”அமெரிக்காவில் அரசாங்கமே வேண்டாம்” என்னும் கொள்கையை முன்வைக்கும் குடியரசுக் கட்சியின் ஒரு பிரிவின் ஆதரவைப் பெற்றவர்.

கடந்த வியாழன் அன்று கிளாசனுக்கு முன் அமெரிக்க உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த நிஷா பிஸ்வாலும், அமெரிக்க வர்த்தகத் துறையை சேர்ந்த அருண் குமாரும் காங்கிரஸுக்கு (ஹவுஸ் ஆஃப் ரெப்ரசண்டேடிவ்ஸ்) சென்றிருந்தார்கள். ஆசியா மற்றும் பசிஃபிக் துணைக்குழுவின் சார்பாகத் தகவல்களைத் தருவதற்காக நாடாளுமன்ற வெளியுறவு குழு முன் ஆஜர் ஆனார்கள்.

’இருவரும் அமெரிக்கர்கள்; தனக்காக உழைக்கிறார்கள்; அமெரிக்காவின் நலனை உலகெங்கும் நிலைநிறுத்த பாடுபடுகிறார்கள்’ என்பதை கிளாசன் உணரவில்லை.

“உங்கள் நாடு எனக்கு ரொம்பப் பிடிக்கும். உங்கள் நாட்டுடன் வர்த்தகம் மேம்பட வேண்டும். உங்கள் நாட்டில் புதியதாக தலைவர் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். அவரை எங்களுடன் ஒத்துழைக்கச் சொல்லுங்கள். உங்கள் பாலிவுட் படங்களின் குத்துப் பாடல்கள் எனக்கு அதி விருப்பம்.”

– இந்த ரீதியில் இவரின் பேச்சு செல்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த நிஷாவும் அருணும் இருக்கையில் நெளிகிறார்கள். டீ கட்சியை சேர்ந்தவரை அவமானமும் செய்யக் கூடாது. அதே சமயம் அவருடைய நாட்டிற்காகத்தான் சேவகம் செய்கிறோம் என்பதையும் ரிபப்ளிகன் கட்சிக்காரருக்கு உணர்த்த வேண்டும். பழுப்பு நிறம் கொண்டவரெல்லாம் இந்தியரல்ல என்பதைச் சொல்ல வேண்டும்.

அந்த விழியம்:

Finding the Essence of Innovation in Creative Pairs by Joshua Wolf Shenk

Powers_Of_Two_Joshua_Wolf_Shenk_Books_People_Creative_Innovation

மணி ரத்தினத்தின் இருவர் பார்த்திருக்கிறோம். அது போல் இரட்டையராக இருந்து சாதனை புரிந்தவர்களை ‘பவர் ஆஃப் டூ’ புத்தகத்தில் ஜோஷுவா ஷென்க் கவனிக்கிறார்.

ஒருவரால் என்ன சாதிக்க முடியும்? மார்டின் லூதர் கிங், ஸ்டீவ் ஜாப்ஸ், பில் கேட்ஸ், ஃபிராயிட் என்கிறோம். ஆப்பிள் துவக்கத்தில் ஸ்டீவ் ஜாப்ஸுக்கு கை கொடுக்க வோஸ்னியாக் இருந்தார். ரொம்ப நாள் கழித்து திரும்பி வந்தபோது ஜோனதன் ஐவ் இருந்தார். பில் கேஸுக்கு ஸ்டீவ் பால்மர். விஸ்வநாதனுக்கு ராமமூர்த்தி. இளையராஜாவிற்கு வைரமுத்து.

ஒருவரிடம் இல்லாத விஷயங்களை ரொப்ப இன்னொருத்தர் தேவை. முதலாமவருக்கு கற்பனா சக்தி அதிகம் இருக்கலாம். மற்றவருக்கு செய்துமுடிக்கும் காரிய சூட்சுமம் இருக்கும். போட்டி போட்டுக் கொண்டு வேலை செய்ய வைக்கும். பகலும் இரவுமாக இருக்கலாம். மயிலும் வான்கோழியுமாக இருக்கலாம். ஆனால், பெரும்பாலானோருக்கு ஈரசைகள் கை கொடுக்கின்றன.

ட்விட்டர் துவங்கியது இருவர்; சவுத் பார்க் கார்ட்டூன் ஆரம்பித்தது இருவர்; சி.எஸ். லூயிசும் ஜே. ஆர். ஆர். டோல்கியனும் அந்தக்கால இலக்கிய சகாக்கள்; வாரன் பஃபேயின் வெற்றிக்கு சார்லி மங்கர் முக்கிய காரணம்; வில்லியம் வோர்ஸ்வொர்த்துக்கு அவரின் தங்கை டோரத்தி; ஃபேஸ்புக் மார்க் ஜக்கர்பர்கிற்கு சி.ஓ.ஓ. ஷெரில் சாண்ட்பெர்க்; டேனியல் கானிமானுக்குக் கூட ஏமோஸ் ட்வெர்ஸ்கி இருக்கிறார்; சச்சின் டெண்டுல்கரும் பிரையன் லாராவும் என இரண்டு இரண்டாக முடிச்சுப் போடலாம்.

தமிழ் உலகத்தில் கண்டுபிடிப்புகள் குறைச்சல். அதனால் அதை விட்டு விடுகிறேன். சினிமாவில் இரட்டையர் எக்கச்சக்கம். இலக்கியத்தில் எப்பொழுது பார்த்தாலும் இருவர் பேப்பர்கத்தி சண்டை போடுகிறார்கள்.

ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண் இருப்பாள். ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் வயது இருக்கும். ஆகவே, எங்கேயும் இருவர்.