Team Leader, Developer & Product Manager 

Team Leader, Developer & Product Manager Posted by Picasa

வாக்கு வாணி

என்ன வேணாலும் குப்பையானாலும் எழுது. தொடர்ந்து எழுது.

திரைப்படங்களில் திடீர் என்று தத்துவ மொழி வரும். புத்தகங்களில் கதாசிரியரோ, கட்டுரையாளரோ மேற்கோள் காட்டத்தக்க மொழியை உதிர்ப்பார்கள்.

சிறுபத்திரிகை கவிதைகளில்,
குழந்தைகளின் கேள்விகளில்,
தொலைக்காட்சித் தொடரின் இறுதிகளில்,
அச்சுப்பிழையான செய்தித்தாள்களில்,
கூகிள் ஆட்சென்ஸில்,
உங்கள் மேனேஜரின் கருத்துக்களில்
கொட்டிக் கிடக்கும் குறிப்பிடத்தக்க சொற்றொடர்களை இங்குப் பகிர்வேன்.

இன்றைய மண்டகப்படி என்னுடைய சொந்த முத்து:

‘செய்தித்தாள்களை படிப்பவர்கள் உலகத்துக்கு பயந்து வாழ்க்கையை நடத்துகிறார்கள். பக்கத்து வீட்டார் என்ன சொல்வார்களோ என்று அஞ்சி அஞ்சி சாவார்கள். நியுஸ் ஜன்க்கியா இல்லாதவர்களே சுதந்திரமாக முடிவெடுப்பார்கள்.’


| |

Fucked up Blogging 

Fucked up Blogging Posted by Picasa

பார்

கூகிள் கொடுக்கும் எடுபிடிக்கருவியைப் போலவே தமிழோவியமும் Toolbar கொடுக்கிறது. அன்றாடம் வருகை தரும் தமிழ் வலையகங்கள், இசையருவி, உலாவியை பெருக்கித் துடைத்தல் என்று பல கருவிகள் கொண்டிருக்கிறது. எளிமையாக உபயோகிக்க முடிகிறது.

அடுத்த வெளியீட்டில் மேலும் பல தமிழ் பக்கங்களின் சுட்டிகள், அகரமுதலிகள், நிரலிகள், உதவி சுட்டிகள், தகவல் திரட்டிகள் என்று கொண்டிருக்கவும், பயனருக்கு ஏற்றவாறு விருப்பங்களை தெரிவு செய்யவும் ஏதுவாக்கினால் மேலும் பயனுள்ளதாகவும், தவிர்க்க முடியாததாகவும் கருவிப்பட்டி அமையும்.

‘ப்ரிண்ட் மேகஸின்’ என்பதற்கு பதிலாக, அனைத்து பெயர்களும் தமிழிலேயே அமைந்தால் மேலும் சிறப்பாக இருக்கும்!

தமிழோவியத்தின் எடுபிடிக்கருவி: Tamiloviam TOOLBAR / Free Software for Readers

கொசுறு: ப்ளாக் உலாவி பயன்படுத்தி பார்த்தீர்களா? (Flock)


| |

புஷ்பேக் விமானங்கள்

tamiloviam.com: விமானத்தில் ஏறும்போது கடமுடா வஸ்துக்களை உணவருந்தி விட்டு ஏறக்கூடாது. தவிர்க்க இயலாமல் வயிற்றுக்குள் ஜிகிர்தண்டா கொடுக்கும் பதார்த்தங்களை உட்கொண்டாலும் ஜன்னலோர இருக்கைக்கு கைகுட்டை போட்டு பிடிக்காதீர்கள். நுழைவு வாயில் சோதனைக்காவலர் ‘அலைகள் ஓய்வதில்லை’ ரசிகர் என்று தெரிகிறது. பூணூலையும் அரைஞான் கயிறையும் வெகு நேரம் ஆராய்வார். இன்னும் கொஞ்ச நேரத்தில் ‘எங்கே பிராமண்’, எப்படி ஆவணி அவிட்டம் என்று வினவ ஆரம்பிப்பதற்குள் தப்பிக்க வேண்டும்.

பிறருக்கு உதவ நினைக்கும் மனம் இருந்தாலும் கைப்பெட்டியை வைக்க இடம் தேடும்போது, உள்ளிருக்கும் மிருகம் எட்டிப் பார்த்து குட்டியும் போடும். வசந்த கால விடுமுறையில் போகும் சக மாணவி பக்கத்தில் உட்கார விரும்புபவனின் கேள்விக்கு பதில் முசுடாக கொடுக்கும்.

பிரிட்டிஷ் ஏர்வேஸின் உபசரிப்பு மாப்பிள்ளை வீட்டாரை தாலி கட்டுவதற்கு முன் கவனிக்கும் மாமனார் போல இருக்கிறது. காலை உணவு தயார் என்று இன்முகத்தோடு சொல்வதற்கு முன் ‘குடிக்க பியர் வேணுமா? வைன் வேண்டுமா?’ என்பார்கள். ‘தண்ணீர் போதும்’ என்றவுடன் வினோத டைனோசாரை அறிந்தது போன்ற முகபாவனையுடன் ‘வோட்கா இருக்கிறது; ஜின் இருக்கிறது. எப்படி வேண்டும்?’ என்று சமையல் காண்ட்ரா¡க்டரை அடுக்களைக்குளிலிருந்து அழைப்பது போல் உபசரிப்பார்கள். அர்த்தராத்திரிக்கு அவர்கள் கொடுத்த இலைதழைகளை சாப்பிட்டு முடித்தவுடன் மீண்டும் அதே வைன், பியர், ஜின், வோட்கா இன்ன பிற தண்ணி உபசரிப்பு. பொண்ணு வீட்டுக்காரனாக இருக்க ஏற்றவர்கள்.

சாப்பிட ஆரம்பித்தவுடன்தான் முன்னே அமர்ந்திருப்பவனுக்கு தன்னுடைய இருக்கையுடன் விளையாட ஆர்வம் எழும். எவ்வாறு முன்னே இழுப்பது, எப்படி சாய்த்துக் கொள்வது, எங்ஙனம் அமர்ந்தால் பிருஷ்டம் பொருந்துகிறது, முதுகை எத்தனை விதங்களில் சாய்க்கலாம் என்றெல்லாம் ‘இருக்கைப் பயிற்சி’ எடுத்துக் கொள்வான். அவரைச் சொல்லியும் குற்றமில்லை. நடு ராத்திரி ப்ரேக்·பாஸ்டுக்கு முன்பு ரெண்டு 40 ப்ரூ·ப் வைனும், உணவிற்கு பின்பு ரெண்டு வைனும் உள்ளே சென்றதன், சீட் விளைவாக இருக்கலாம்.

ஆரம்பத்தில் காசு அதிகம் கொடுத்த முதல் வகுப்புப் பயணிகள், அதற்கும் முன்பு வயதான சக்கர நாற்காலி முதியவர்கள் மற்றும் சக்கர நாற்காலி தேவையில்லாவிட்டாலும் துண்டு போட்டு இடம் பிடித்துப் பழகிய மத்யமப் பெரியோர்கள், கைக்குழந்தைகளுடன் வருபவர்கள், எட்டு வயது பச்சிளம் பாலகருடன் பயணம் செய்வோர், அதன் பின் விமானத்தின் பிற்பகுதியில் அமர்வோர் என்று மண்டலவாரியாக பிரித்து அழைக்கப்பட்டாலும், அவற்றைப் பொருட்படுத்துபவர்கள் எவருமில்லர். விமானத்தினுள் நுழைந்தவுடன் பாஸ்டனோ, சென்னையோ வந்துவிடும் என்பது தவறான கணிப்பு என்று அறிவுறுத்த நினைத்தேன். அதன் மூலம் நான் சீக்கிரம் உள்ளே போக முடியும் என்னும் நப்பாசை காரணமாகவும் அறிவுரை கூற விரும்பி இருக்கலாம்.

சில வருடம் முன்புவரை இந்தியர்களுக்கு மட்டுமே பொறுமை குறைவு என்றும், நம்மவர்கள் மட்டுமே அவசர அவசரமாக உள்ளே நுழைய விரும்புபவர்கள் என்று நினைத்திருந்தேன். அதற்கு உரிய காரணமும் உண்டு. அண்ண பல்கலையில் இடம் வேண்டுமா? முதல் நாற்பது தரப்பட்டியலில் உள்ளோருக்கு மட்டுமே. ரேஷனில் பாமாயில்? உங்கள் கேன் இருபது மீட்டர் எல்லைக் கோட்டுக்குள் இருக்க வேண்டும். பால் க்யூ, மண்ணெண்ணெய் லைன் என்று முந்தி முந்தி விநாயகருக்குக் கடமைப்பட்டவர்கள்.

கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன என்பதன் அடையாளமாக மேற்கத்தி மக்களும் இப்பொழுது நம்மை பின்தொடர ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களும் முண்டியடித்து கர்சீப், கைத்துண்டு, ஜாக்கெட், இன்ன பிற போட்டு ரிசர்வ் செய்த சீட்டை உறுதிபடுத்துகிறார்கள்.

சென்னை பல்லவனில் உராசியவர்களுக்கு இப்பொழுது அமெரிக்காவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. பாதுகாவலர்களின் சோதனையில் அவர்கள் சிறப்பாக பணிபுரிகிறார்கள். உடலெங்கும் தடவுவது, மேடுகளையும் பள்ளங்களையும் விலாவாரியாக ஆராய்வது, இடுக்குகளில் கைவிட்டு சோதிப்பது என்று அமெரிக்கர்கள் முயற்சித்தாலும், சென்னை பல்லவன் மேய்ப்பர்கள் அளவுக்கு மேம்பட்டவர்களாக இல்லை. அங்கே நடக்கும் ஆராய்ச்சிகள் உயர்தரமானவை. அவர்களை அமெரிக்காவில் விட்டால், பின் லாடெனுக்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுப் போயிருக்கும்.

பாத்ரூம் சுவரில் கிறுக்கவென்றே ஒரு வெள்ளைப்பலகை வைத்திருக்கிறார்கள். ‘பாரத் மாதா கீ ஜே’ போன்ற தகவல்கள் கிடைக்கிறது. விட்டால் லக்னத்தில் சனி, ஏழாம் இடத்தில் குரு என்று கட்டம் போட்டுவிடுவார்கள். அமெரிக்காவில் எஸ்கலேட்டர் வேலை செய்வது அபூர்வம். ஜெர்மனியில் பரவாயில்லை.

ஜெர்மனி விமான நிலையத்தில் புகை பிடிக்கக் கூடிய இடத்துக்கும் புகை தடை செய்யப் பட்ட இடங்களுக்கும் அதிகபட்சமாக ஓரங்குல தூரம் இருக்கும். ரொம்ப நாளாக பாஸிவ் ஸ்மோகிங் செய்யாதவர்களுக்கு ·ப்ரான்க்·பர்ட் விமான நிலையம் வரப்பிரசாதம்.

வைன் ஊட்டி விடுவதில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பணிப்பெண்கள் கர்மசிரத்தை என்றால் ஓசியில் பேப்பர் கொடுப்பதில் ·ப்ரான்க்·பர்ட்டை யாருமே அடித்துவிட முடியாது. ஒரே ஒரு நிபந்தனை. ஜெர்மானிய மொழி தெரிந்திருந்தால் குறைந்தது ஆறு நாளிதழ்களும் எட்டு சஞ்சிகைகளும் கிடைக்கும்.

ஆனால், மொழியெல்லாம் தேவையே இல்லாத ‘ஸ்போர்ட்ஸ் இல்லுஸ்ட்ரேடடி’ன் நீச்சலாடை சிறப்பு வெளியீடு எல்லா புத்தகக் கடைகளிலும் விற்பனைக்கு வைக்கப் பட்டிருக்கிறது. அனைவரும் எடுத்து எல்லாப் பக்கங்களையும் மாடல்களையும் புரட்டிவிட்டு, நூற்றி நாற்பத்தேழாம் பக்கத்தில் யாஸ்மின் ப்ளீத் அணிந்திருந்த ஒற்றைக்கல் நெக்லஸை வாங்கிக் கொடுக்கத்தான் முறைத்துக் கொண்டிருந்ததாக காதலியிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மேற்படி அம்மணி நீச்சலுடை ஸ்பெஷலில் நீச்சலாடையே இல்லாமல் தோன்றியிருந்தது முரண்நகை.

விளைக்கை அணைத்த பிறகு மும்தாஜுக்கும் இரண்டு கண்கள்தான், கமலா காமேஷ¤க்கும் இரண்டு கால்கள்தான் என்பது போல் வானத்தில் இருந்து பார்த்தால் சஹாராவும் சொர்க்கபுரியாகத்தான் தெரியும். தூரத்து மெர்க்குரி விளக்கு கண்ணுக்கு மின்னல் கீற்று.

நமது பெட்டியைத்தான் நாம் தள்ளிக் கொண்டு வெளியே வருகிறோம் என்று கஸ்டம்ஸ்காரர்களுக்கு தெரிந்திருக்கிறது. எனக்கு ரொம்ப நாளாக ஒரு ஆசை. பெட்டி எதையும் செக்-இன் செய்யாமல், லண்டனோ, சிகாகோவோ பறக்க வேண்டும். அமைதியாக பேகேஜ் எடுக்கும் இடத்திற்கு சென்று அனுமாரை கண்மூடி தேமேவென்று சுற்றும் பக்தர் போல ஒரு சுற்று சுற்றிவிட்டு அனாதையாக மறுபடி அடுத்த ரவுண்டு ஆரம்பிக்கும் பெட்டியிரண்டை லபக் செய்துகொண்டு வெளியேறிவிட வேண்டும். இவ்வாறு நான்கைந்து முறை தப்பித்துவிட்டால், பின் வாயிற்காப்போன்களிடம் கொஞ்சம் சிரத்தை அதிகரிக்கலாம்.

காதல் இனிது; கல்யாணம் கூட இனிது; ஆனால் மழலைச் செல்வத்துடன் பயணம் புரிவது மில்லியன் டாலர் ப்ராஜெக்ட்டை முரண்டு பிடிக்கும் அவுட்சோர்ஸிங் மக்களுடன் மூன்றே மாதத்தில் மல்லுக்கட்டுவது போன்றது. விமானம் கிளம்பும்போது சீட் பெல்ட் போடாவிட்டால், விமானத்தில் இருந்து தூக்கியெறியப்பட்டு அட்லாண்டிக் மகாசமுத்திரத்தில் ஐக்கியமாகி விடுவீர்கள் என்று பயமுறுத்தாத குறையாக ஆறு மாத குழந்தையை அழ அழ கயிறு போட்டு இறுக்கிவிட்டுச் செல்வாள், வைன் உபசரிப்பு பிரிட்டிஷ் ஏர்வேஸ் பணிநாயகி.

அங்கே ஆரம்பிக்கும் வ்வ்வ்வ்வ்வ்வீவீவீல் அழுகை விமானத்தில் இருந்து தப்பித்து குடியேறல்/கடவுச்சீட்டுப் பரிசோதனை வரை தொடரும். குழந்தைகளுக்கு என்று சிறிய விளையாட்டு அரங்கம் ஒன்றை உள்ளே நிர்மாணித்தால் நன்றாக இருக்கும். குட்டி சறுக்கு மரம், ஓரிரண்டு சாய்ந்தடம்மா குதிரைகள், கொஞ்சம் பலூன்கள் என்று வைக்கலாம்.

ஆங்கிலப் படங்களில் பாத்ரூமில் செக்ஸ் வைத்துக்கொள்வதாக வரும் காட்சிகள் பிரசித்தம். அவர்களை அடுத்தமுறை லண்டனிலிருந்து கிளம்பும் ஏர் இந்தியாவிலோ, அல்லது, டாக்காவிலிருந்து புகைமூட்டத்திற்கு (சிகரெட்தான்) நடுவே புறப்படும் பிமானிலோ (பங்களாதேஷின் சேவை) படப்பிடிப்பை வைக்க சொல்ல வேண்டும். அவற்றை விட சிறந்த சூழல் எங்கும் இராது. சாதாரணமாகவே ஆங்காங்கே மிச்சம் மீதி ஒட்டிக் கொண்டும், கமகம மணத்திலும், கதவைத் தட்டும் பொறுமையிலர்களும் நிறைந்த லெமூரியா லெட்ரீனின் இண்டு இடுக்குகளில் காதல் காட்சிகளை வைத்துக் கொள்ளும் அவசரக்காரர்களைக் கறபனை செய்ய முடிகிறதோ?

மொத்தத்தில் விமானப் பயணம் என்பது தெய்வீக அனுபவம்.

திருப்பதியில் ஏழுமலையானைக் காண்பதற்காகக் கூண்டைத் திறந்தவுடன் ஓடியே சென்று முண்டியடித்து தரிசிப்போம். ஆனால், ‘ஜருகண்டி சேவா’ முடிந்தவுடன் அமைதியாகப் பிரகாரத்தில் உட்கார்ந்து கூட்டத்தில் தொலைந்துபோன கூட வந்த நண்பர்களுடனும் உறவினர்களுடனும் சிறிது சிரித்து, உட்கார்ந்து, கதைத்து, வேடிக்கை பார்த்துவிட்டு கிளம்பிடுவோம்.

விமானங்களிலும் முண்டியடிப்பது உறவுகளையும் நட்புகளையும் கண்டு தெளியும் ஆன்மிகப் பயணத்துக்காகத்தான். இறைவர்களுடன் எப்போதும் இருந்தால் செய்யும் தொழில் மெய்மறக்கும்.


| |

சிதறல்

Qu’ils mangent de la brioche

நான் வலையில் பதிவது என்பதே, கோர்வையில்லாமல் தோன்றும் எண்ணங்களுக்கும், நிகழ்வுகளுக்கும், ஒரு தொடர்ச்சியை கொடுத்து அழகு பார்க்கத்தான். மனதில் தோன்றியதை எழுதி, பதிந்தால் சில சமயம் ‘நல்லாயிருக்கே’ என்று பதில் வரும்.

ஏபிசிடி-களின் தீபாவளி கதையை அகஸ்மாத்தாக படித்த உறவினர், செம கடுப்பாக பதில் எழுதியிருந்தார்:

Your story stinks…….. it is not worth the space on which it is written…

உள்ளத்தில் நினைத்ததை வெளிப்படையாக சொல்லும் பதில்கள் அரிதான காலகட்டத்தில் எனக்கு வந்த பதிலை ஆர்வத்துடன் பார்த்து வைத்துக் கொண்டேன். வலைப்பதிவுகளுக்கு வந்த பிறகு சொரணை மழுங்கி விட்டதோ என்று எண்ணவும் வைத்தது 🙂

சொரணை என்பதை வெறும் கோபமாக மட்டும் வெளிப்படுத்திவிட்டு போகாமல், செயலில் காண்பித்த ‘ரோஸா பார்க்ஸ்‘ நினைவுக்கு வந்தார். பெண்கள் இருக்கையில் ஆண் உட்கார்ந்திருந்தால் கூட ‘அட்ஜஸ்ட் செய்து கொள்வோமே‘ என்று விட்டுப் போகும் சென்னை போல் இல்லாமல், கொண்ட கொள்கைக்காக புறக்கணிப்பை முன்னிறுத்தி, தொடர்ச்சியாக, பாதிக்கப்பட்டவர்களை வீறு கொள்ள செய்தவர்.

ஆரம்பத்தில் பதவியில் இருப்பவர்கள் அலட்சியம் செய்யத்தான் போகிறார்கள். பிரெஞ்சு ராணி மேரி (Marie-Antoinette) உப தலைப்பில் (Qu’ils mangent de la brioche) சொன்னது போல் ‘பட்டினியில் வாடினால் என்ன? அவர்களை கேக் சுவைக்க சொல்லுங்கள்!‘ என்பது போல் அதிகாரபூர்வமில்லாமல் சிரித்துக் கொண்டிருப்பார்கள்.

பிரான்ஸில் இனக் கலவரம் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியா, இஸ்ரேல், ஸ்லோவேனியா, ருவாண்டா என்று இருந்த கோஷ்டி பூசல்கள் வளர்ந்த நாடுகளுக்கும் க்ளோபலைஸ் ஆகிறது.

அன்றாட செய்திகளையும் அத்தியாவசிய கவலைகளையும் மறக்க தொலைக்காட்சி ஏதுவானது. பிகேயெஸ் முன்பு மொழிபெயர்த்த Martin Niemöller-இன் கடைசியாக என்னைத் தேடி வந்தார்கள் கவிதையை ‘பாஸ்டன் லீகலி’ல் வாதத்துக்கு உபயோகப்படுத்திக் கொண்டார்கள்.

‘ஹாலோவீன்’ பண்டிகை குறித்து கல்வெட்டு விலாவாரியாக எழுதியிருக்கிறார். அமெரிக்காவில் ‘ஹாலோவீனை’ கொண்டாடக் கூடாது என்று கத்தோலிக்க குழுவும் சூனியக்கார குழுவும் வழக்குத் தொடுக்கிறது. இவர்களுக்காக ஆஜரான வக்கீல்தான் மார்டினை துணைக்கழைத்துக் கொண்டு ‘இப்பொழுது கத்தோலிக்க நம்பிக்கைகளை கிண்டல் செய்கிறார்கள்; நாளை?’ என்று ஜூரிகளை நோக்கி கேள்வி எழுப்பினார்கள்.

மாற்று வினாக்களை டிவி தொடர்கள் திறம்பட எழுப்புகிறது.

‘கருக்கலைப்புக்கு நீங்கள் ஆதரவாளர் என்கிறீர்கள்… சரி. ஆணா, பெண்ணா என்று கருவைப் பார்த்து தேர்ந்தெடுத்து கலைப்பதும் சரியா? மூன்று மாதக் கருவின் புத்திசாலித்தனம் சராசரியாக இருந்தால் கலைத்து விடுவேன் என்று ஒருவர் வாதிட்டாலும் நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா?’

என்று வெஸ்ட் விங்கில் கேட்டார்கள். முன்முடிவோடு அணுகும் பிரச்சினைகளுக்கும் மாற்று கருத்தைப் பாங்குற சொன்னார்கள்.

தற்கால அரசியல் வாதங்கள் போல் இல்லாமல், நிஜமான வாக்குவாதத்தை நேற்று ஒளிபரப்பினார்கள். தமிழில் ‘மெட்டி ஒலி’ சில புதுமைகளை செய்தது. பேசாத, வார்த்தைகளே இல்லாத முப்பது நிமிடங்கள் என்று சொல்லி, உரையாடல்கள் இருக்க வேண்டிய முக்கிய நிமிடங்களிலும் மௌனம் சாதித்து கழுத்தை அறுத்தார்கள்.

ஆனால், ‘வெஸ்ட் விங்‘ நேரடி ஒளிபரப்பாக தங்களின் சுதந்திர கட்சி வேட்பாளருக்கும் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளருக்கும் இடையேயான, வாக்குவாதத்தை இரு முறை நிகழ்த்திக் காட்டியது. அனுபவித்து, ரசித்து, மகிழ்ந்த நிகழ்ச்சி. குடியேறல், சுகாதாரம், காப்புரிமை, பணவீக்கம், வேலை உருவாக்கம், பொது சேமநிதி என்று பல தலைப்புகளில் நறுக் வாதங்கள். நிஜ ஜனாதிபதிகளும் இப்படி முட்டிக் கொண்டால், அவர்களின் உண்Mஐ திறமைகளும், கொள்கைகளுக்கும் வெளிச்சம் கிட்டும்.

முடிந்தால் பாஸ்டன் க்ளோப் போல் விரிவாக எழுத வேண்டும்.

Commander in Chief-தான் ‘நீங்க நல்லவரா…. கெட்டவரா?’ என்று மனிதருக்கு இரு நிறங்கள் மட்டுமே உண்டு என்று விளிக்கிறது. உலகின் எல்லா பிரச்சினைகளையும் அமெரிக்க ஜனாதிபதி தீர்த்து விடுகிறார். அனேகமாக, கனடா-வில் இந்த தொடர் வரவேற்பை பெறாது என்று நினைக்கிறேன். தனி மனிதனாக, குடும்ப பாரத்தையும் சுமக்கிறார். கொஞ்சம் ரியாலிடியும் கலந்தடித்தால் நம்பும்படியாக இருக்கும்.

இந்தியா சென்றபோது நிகழ்ந்த சந்திப்பொன்றில், பதிவு என்றால் ஏதாவது தொக்கி நிற்க வேண்டும் என்று ஐகாரஸ் பிரகாஷ் எனக்கு துப்புக் கொடுத்திருந்தார். அந்தக்கால சரத்பாபு மாதிரி என்றால் ‘நூல்வேலி’, ‘கீழ்வானம் சிவக்கும்’ மாதிரியா என்று எனக்குத் தோன்றுவதைப் போல் உங்களுக்கும் ஏதாவது உதித்தால் சொல்லுங்கள்.

‘அடியைப் பிடிடா பாரத பட்டா’ என்பது போல் மனதில் தோன்றியதை எழுதி, பதிந்தால் சில சமயம் ‘நன்று’ என்று பதிலும் வரலாம். ஆனால், உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக வெளிப்படையாக சொல்லும் பதில்கள் ஆத்திரமும் ஊட்டி விடலாம் ;-))


| |

Navarathri Webulagam Golu Competition 

Navarathri Webulagam Golu Competition Posted by Picasa

ஒரு வார்த்தை ஐயா

ரமணாவுக்குத் தமிழில் பிடிக்காத வார்த்தை ‘மன்னிப்பு’ என்று அறிந்து கொண்டேன்.

அப்ப்டியே கொஞ்சம் சேரியமில்லாமல் யோசித்தால்…

1. ஜெயலலிதாவுக்கு ‘மன்னிப்பு’
2. நடிகனுக்கு ‘பரிசோதனை’
3. குஷ்பூவிற்கு ‘புனிதப் பூச்சு’
4. தங்கர் பச்சனுக்கு ‘சிகையலங்காரம்’
5. கமலுக்கு ‘கலைப்படம்’
6. தினேஷ் கார்த்திக்கிற்கு ‘தோனி’
7. தயாநிதி மாறனுக்கு ‘வாரிசு’
8. அன்புமணிக்கு ‘செஞ்சிலுவை’
9. பீஹாருக்கு ‘தேர்தல்’
10. சோனியாவுக்கு (காங்கிரஸ்) ‘முதல்வர்’


வலைப்பதிவர்கள் சிலரிடம் விசாரித்தபோது, ‘பெயர்’களை வெளியிட வேண்டாம் என்று வேண்டுகோளை வைத்து விட்டு, தங்களின் pet hate-ஐ பகிர்ந்து கொண்டார்கள்:

1. வாத்து
2. தமிழ்மணம்
3. ஜெயமோகன்
4. அறிஞர்
5. அமெரிக்கா
6. தொடுப்பு
7. நன்றி
8. தீபாவளி
9. ஐ.பி. முகவரி
பத்து கட்டளை


|

தீபாவளி படங்கள்

தீபாவளிக்கு ஸ்வீட்கள் நிறைய கிடைக்கும். சன் டிவியில் தீபாவளி நிகழ்ச்சிகளில் சினிமா நிறைய கிடைக்கும். லேகியம் உடலுக்கு நல்லது என்று சொல்லிக் கொண்டே, மணக்க மணக்க நெய்யில் செய்வார்கள். தமிழ் பேசுகிறோம் என்று பட்டிமன்றம் பழைய மருந்தாக இருந்தது.

அசின் நடித்த படங்கள் தவிரவும் வேறு சில வந்திருப்பதை தெரிந்து கொள்ள நேரிட்டது.

எஸ்.பி.பி. தெலுங்கில் ‘ஸ்ரீவேங்கடேசா… ஸ்ரீனிவாசா‘ என்பது போல், ‘அது ஒரு கனாக்காலம்’ தனுஷ்ஷின் ‘கண்டக்டர் பொண்ணை யார் வெட்றா மாமே… யார் வெட்றா மாமே‘, தமிழ் கலாசாரத்திற்கு ஏற்பட்ட இழுக்கு என்று அ.ராமசாமி நடையில் விமர்சனம் எழுத தட்டச்சுப் பலகையை ரா…ரா… என்றது.

ஹரிணியின் ச்சிச்சீச்சிச்சீ பிரயோகத்தைக் கண்டவர்கள் எல்லாரும் சிங்காரவேல ‘ககாகிகீக்குகக்கேக்குக்கூகொக்கோகேக்கே’ போல் இன்ஸ்டண்டா பிடித்துக் கொண்டு ‘என்ன பழக்கம் இது… சின்ன புள்ள போல‘ என்று மஜாவாக்கினார்கள்.

ஜெயமோகன் வசனம் எப்படியிருக்கிறதாம்?


ஆறாம்திணை.காம் :: Cini News – Deepavali Padangal – கே.டி.ஸ்ரீ

சிவகாசி

‘திருப்பாச்சி’க்கு பிறகு விஜய் – பேரரசு கூட்டணியில் உருவாகியுள்ளது ‘சிவகாசி’. சிவகாசியில் விஜய்யுடன் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார் அசின். அசின் மட்டுமல்லாது இப்படத்தில் நயன்தாரா ஒரே ஒரு நடனம் ஆடி அசத்தியிருக்கிறார்.

தங்கை சென்டிமெண்டை அடிப்படையாக கொண்டு தன்னுடைய முந்தைய படத்தை இயக்கிய இயக்குநர், இப்படத்தில் அம்மா – மகன் சென்டிமெண்டை வைத்து கதையை நகர்த்துகிறார். படத்தில் கீதா அம்மாவாக நடித்திருக்கிறார்.

விஜய், அசின், நயன்தாரா, கீதாவுடன் ராஜேஷ், அருண்குமார், எம்.எஸ். பாஸ்கர், முரளி மற்றும் சிட்டிபாபு ஆகியோர் நடித்திருக்கின்றனர். பிரகாஷ்ராஜ் இப்படத்தில் வில்லனாக வருகிறார்.

இப்படத்திற்காக சென்னையில் புகழ்பெற்ற தி.நகர் ரங்கநாதன் தெரு போன்ற ஒரு செட்டை வாகினி ஸ்டூடியோவில் அமைத்து அசத்தியிருக்கிறார் இயக்குநர். சூர்ய மூவிஸ் நிறுவனத்தினருக்காக ஏ.எம். ரத்தினம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிவகாசி’க்கு ஸ்ரீகாந்த்தேவா இசையமைத்திருக்கிறார். ‘சந்திரமுகி’ புகழ் சேகர் ஜோசப் படத்திற்கான ஒளிப்பதிவை செய்திருக்கிறார்.

தீபாவளியின் இந்த ‘சிவகாசி’ வெடி தூள் கிளப்புமா?

சென்னையில் சிவகாசி திரையிடப்பட்ட அரங்குகள்: தேவி, தேவிபாலா, சங்கம், உதயம், மினி உதயம், அகஸ்தியா, மாயாஜல், வெற்றி, கங்கா, ராக்கி, தேவிகுமாரி, தியாகராஜா, சுந்தர், எம்எஸ்எம்.


மஜா

‘அந்நியன்’ வெற்றியை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் வெளியாகிருக்கிறது ‘மஜா’. மலையாளத்தில் மம்முட்டி, பிஜுமேனன் நடித்த ‘தொம்மனும் மக்களும்’ என்கிற வெற்றிப்படமே ‘மஜா’.

நாயகியாக நடித்திருக்கிறார் அஸின். பிதாமகனுக்கு ஒளிப்பதிவு செய்த பாலசுப்ரமணியன் இப்படத்திற்கான ஒளிப்பதிவை கவனிக்கிறார். வித்தியாசாகர் இசையை உருவான ‘மஜா’ அந்நியன் போலவே ஒரு பிரம்மாண்டமான தயாரிப்பாகும்.

பசுபதி, மணிவண்ணன், மலையாள படஉலகின் புகழ்பெற்ற நடிகர் பிஜுமேனன் வித்தியாசமான வேடத்தில் இப்படத்தில் நடித்திருக்கிறார்.

மஜா திரையிடப்பட்டிருக்கும் திரையரங்குகள்: சத்யம், ஆல்பர்ட், அபிராமி, பாரத், ஸ்ரீபிருந்தா, காசி, பிரார்த்தனா டிரைவ்இன், ஆராதனா, மாயாஜால், சாலிகிராமம், எஸ்.எஸ்.ஆர். பங்கஜம், வித்யா, வேலன், லட்சுமி


கஸ்தூரிமான்

புகழ்பெற்ற மலையாளபட இயக்குநர் லோகிதாஸ் முதன்முதலாக ‘கஸ்தூரிமான்’ மூலம் தமிழ்திரைப்பட உலகில் காலடி எடுத்து வைக்கிறார். இவரின் மலையாள படமான ‘கஸ்தூரிமானை’ அதே பெயரில் தமிழில் தயாரித்திருக்கிறார்.

மீராஜாஸ்மீன் நாயகியாக நடிக்கும் இப்படத்தின் கதை அவரைச் சுற்றியே பின்னப்பட்டுள்ளது. படத்தில் பிரசன்னா நாயகனாக நடிக்க, மீரா ஜாஸ்மின் நாயகியாக நடிக்கிறார்கள். வழக்கம் போல் காதல், அதனால் ஏற்படும் சிக்கல்கள் என்று கதை செல்கிறது.

படத்தைப் பற்றிய முக்கிய செய்தி என்னவென்றால் −ப்படத்திற்கான வசனத்தை எழுதுகிறார் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன்.! ‘கஸ்தூரிமான்’ மூலம் தமிழ்த்திரைப்பட உலகில் முதன்முதலாக காலடி எடுத்து வைக்கிறார் ஜெயமோகன்.


அது ஒரு கனா காலம்

பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவருகிறது ‘அது ஒரு கனா காலம்’. தனுஷ், பிரியாமணி நடிக்கின்றனர். தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படம் தனுஷிற்கு மீண்டும் தமிழ் திரைப்பட உலகில் நல்ல இடத்தை தேடி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு தடைகளையும் தாண்டி ‘அது ஒரு கனா காலம்’ தீபாவளிக்கு தமிழக திரையரங்குகளில் வெளிவரவிருக்கிறது.

சென்னையில் திரையிடப்பட்ட திரையரங்குகள்: உட்லாண்ட்ஸ், சிம்பொனி, அபிராமி காம்ப்ளக்ஸ், பேபி ஆல்பர்ட், கமலா, எம்.எம். தியேட்டர்.


tamilcinema.com:: பம்பரக்கண்ணாலே

ஸ்ரீகாந்த் படமாச்சே, மெல்லிய காதலாக இருக்கும் என்று உள்ளே போனால், ஆயிரம் வாலா பட்டாசை அசராமல் கொளுத்தி போடுகிறார்கள். ஜில்லாலக்கடி ஜில்லாக்கோ, திருப்பி போடு மல்லாக்கோ என்று குஷியாட்டம் போடுகிறது கோஷ்டி மொத்தமும். அட…ஸ்ரீகாந்த் படங்களில் இது வேற ரகமுங்கோ…

குடியிருப்பு பெண்களுக்கு சைக்கிள் கற்று கொடுப்பதும், அதை தொடர்ந்து வருகிற டயலாக்குகளும் முனியாண்டி விலாசின் அசைவ மெனு! க்ளைமாக்சில் நடனம்-சண்டை-பாடல் என்று புதுமையான கலவையை தந்திருக்கிறார் இயக்குனர் பார்த்தி பாஸ்கர்.


| |

மலரும் ஆலோசனைகள்

:: நினைவலை, நனவோடை, மலரும் நினைவுகள், ‘அந்த நாள் ஞாபகம்’ என்று பல பெயரில் அழைத்தாலும், வாழ்ந்த காலத்தை அசை போடுதல் மிகவும் விருப்பமான விஷயம். நிகழ்காலத்தை விட்டுவிட்டு, இனிமையான பழங்காலத்திற்கு ஓடிப் போக முடியும். கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த கதையை பகிர முடியும். தனக்கு மட்டும் உரியதான அனுபவங்களை மற்றவர்களுக்கு சொல்ல முடிகிறது. எல்லாவற்றையும் விட நீங்கள் வாழ்ந்த கணங்களில் தவறவிட்டதை கண்டெடுக்க ‘டயரி’ உதவுகிறது.

எல்லோரும் அலையடித்தாலும், போரடிக்காமல் விரும்பிப் படிக்க வைக்க தலை பத்து ஆலோசனைகள்:

1. எழுத ஆரம்பிப்பதற்கு முன் எதை குறித்து பகிர்ந்து கொள்ளப் போகிறோம் என்பதை முழுமையாக அசை போடாதீர்கள். ரத்து செய்யப்பட்ட விமானப் பயணியை போல எழுத்தை அமைத்துக் கொள்ளலாம். செல்ல வேண்டிய இடம் தெரியும். ஆனால், எப்படி போகப் போகிறோம், எங்கே விமான கனெக்ஷன் கிடைக்கும் என்ற துல்லிய விவரங்கள் தெரிந்து கொள்ள வேண்டாம்.

2. காலவரிசைப்படி எழுத வேண்டாம். முதலில் இது நடந்தது, அதன் பின் இவ்வாறு என்று தொடங்குவதற்கு பதிலாக, மிகவும் முக்கியமாக கருதும் நிகழ்வில் ஆரம்பிக்கலாம். ரசமான சம்பவத்தில் தொடங்கி, அதை விவரித்துத் தொடர்ந்தால், வாசகருடன் தொடர்பை ஏற்படுத்துவது எளிமையாகும்.

3. கணினியில் எழுதுவதில் எண்ணவோட்டங்கள் தடைப்படலாம். நாம் நினைப்பதை அப்படியே, நாம் சொல்வதை அவ்வாறே, நாம் கண்டதை கண்டபடியே கொண்டு வர முடியாமல் போகும். டேப் ரிகார்டரில் பதிவு செய்து கொள்ளலாம். அல்லது வெள்ளைத்தாளில் நமக்குப் பிடித்த பிள்ளையார் சுழி, 786 எல்லாம் போட்டு துவங்கி, பேனா கொண்டு எழுதலாம். கணினி எழுத்தில் தோன்றும் அயர்வை, ஒரே விதமான உணர்ச்சியற்ற நடையைக் கொண்டு உணர்ச்சிபூர்வமான சம்பவங்களை விவரிப்பதை, தவிர்க்க வேண்டும்.

4. சந்தி மிகும், மிகா இடங்கள், அ·றிணை, பன்மை ஒற்றுமைகள், தூய தமிழ் சொல் என்றெல்லாம் யோசனையை அலைபாய விட வேண்டாம். முழுவதுமாக எழுத வேண்டியதை கொட்டிய பின், இரண்டு நாள் கழித்து, பிழை திருத்தம், பொருத்தமான தமிழ் பதங்கள், இலக்கண திருத்தங்கள் போன்றவற்றை செய்யத் தொடங்கலாம்.

5. #2-வில் சொன்னபடி சுவாரசியமான சம்பவங்களை நினைவு கூர்ந்த பின், அவற்றை முறையாகத் தொகுக்கவும். கோர்வையில்லாத கூட்ஸ் ட்ரெயினின் பெட்டிகளைப் போல் நிகழ்வுகள் தோன்றினாலும், அதன் பின்னணியில் இருந்து ‘சிக்கு புக்கு’ சத்தம் தாளம் பிசகாமல் எழுந்து, தண்டவாளமாக வாசகனை கூட்டிச் செல்ல வேண்டும்.

6. முதல் முறை எழுதிய நினைவலையை அலசி திருத்தும்போது, மீண்டும் படித்து பார்க்கும்போது, அனுபவத்தின் பல பரிமாணங்களை உணர முடியலாம். வெறுமனே கதையை சொல்லாமல், தவறவிட்ட ஆழ்நிலை தரிசனங்களை வாசகருக்கு கொடுக்க வேண்டும்.

7. உண்மையை எழுத வேண்டும். எழுதும்போது நம்மை எதிர்பாராததை கண்டுகொள்ள நேரிடலாம். அதிர்ஷ்டவசமாக கண்டுபிடித்த புதையல்களை சொல்லுங்கள்.

8. கட்டுரைகளில், கதைகளில் வினையுரிச்சொல், இடைச்சொல், பெயருரிச்சொல், பண்புகொள்பெயர் என்று போட்டு நிரப்புவது சுவாரசியமாக்கலாம். ஆனால், நினைவலைகளில் ஒவ்வொரு பெயர்ச்சொல்லுக்கும், வினைச்சொல்லுக்கும் அடைமொழி கொடுப்பது வீரியத்தைக் குறைத்துவிடும்.

9. அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல் மட்டுமே போதுமானது. வாசகர் எவ்விதம் பிரதிபலிக்க வேண்டும், எவ்வாறு உணர வேண்டும், என்ன யோசிக்க வேண்டும் என்று உபதேசிக்க வேண்டாம். அனுபூதியைக் கொடுத்தவுடன் நம்முடைய கடமை முடிந்து போனது.

10. எழுதிய முடித்தவுடன், எவருடனும் உடனே பகிர்ந்து கொள்ள வேண்டாம். ஒரு முறை சரி பார்த்து, இரு முறை திருத்தி முடிக்கும் வரை பொறுமை காக்கவும். அதன் பின் மின்னஞ்சலையும், வலைப்பதிவையும் அனுப்பவும்.

இவ்வளவும் யோசித்து, அனுபவங்களையும் சுவாரசியமாக மீண்டும் அனுபவிக்க வேண்டும்.


| |