Tamil Weblogs Feature Presentation

சன் டிவியில் நேற்று (வியாழன், ஜூன் 8, 2006) காலை இடம்பெற்ற சன் செய்திகளில் வலைப்பதிவுகள் குறித்தும், தமிழ் ப்ளாகுகள் குறித்தும் இடம்பெற்ற செய்தித் தொகுப்பு:

this is an audio post - click to play

| |

Thoughts in Tamil on ‘Lessons on Tamil’

கட்டாயப் பாடம் – தொண்டைக்குழித் திணிப்பு?

சனி மதியம் கே டிவியில் ‘பட்டணத்தில் பூதம்‘ திரையிடப் போவதாக, அறிவிப்பு அடிக்கடி சொல்லிக் கொண்டேயிருந்தது. சாப்பாடுக் கடையை மூடிவைத்துவிட்டு, திரைச்சீலையெல்லாம் இழுத்துவிட்டு, ஆசையாக உட்கார்ந்தால் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு ‘பொறுத்தது போதும் பொங்கியெழு’ என்று மனோகராவிற்கு மாறிவிட்டார்கள்.

இதே மாதிரி பிறந்த நாளுக்காக ‘கிளாசிக் மேட்டினி’யை ‘நண்பகல் நல்விருந்து’ என்று அடுக்குமொழியில் கொடுத்தால் இருவரும் சந்தோஷப்படுவார்கள். இங்கே இருவர் என்பது நானும் தர்மசங்கடத்தில் சன் டிவி குழுமத்தைத் தள்ளி வைத்து அழகு பார்க்கும் கலைஞரும்.

ஆங்கிலக் கேள்விகளுக்கு தமிழ் கலந்த ஆங்கிலத்தில் பதிலளிக்கும் தங்க வேட்டை; நாடக மொழியில் அடைமொழி அதிர்ச்சிகளுடன் சன் செய்திகள்; சன் டிவி யில் தமிழ் கலந்த ஆங்கிலத்தில் பேசுகிறார்களே, விகடன் சஞ்சிகைகள் ஆங்கிலத்தைத் தமிழில் எழுதுகிறதே என்று புலம்புவது பழங்கதை.

தமிழ் பாடமாக பயிற்றுவிப்பதை வரவேற்பதே சென்ற வார in-thing.

பத்ரி: ‘தமிழே என் உயிர்’ என்று கோஷம்போடும் பலரும்கூட படு மோசமான தமிழில் எழுதுகிறார்கள். இன்பத்தமிழ், வெல்லத்தமிழ் என்று பாரதிதாசனிடமிருந்து மேற்கோள்கள் பெறும் அன்பர்கள்கூட காதுவலிக்கும் தமிழில்தான் எழுதுகிறார்கள்.

அனேகமாக, ஆங்கிலம் கூட நான் இப்படித்தான் எழுதுவேன். மைக்ரோசாஃப்ட் வோர்ட் என்னும் நிரலி இல்லாவிட்டால்… தட்டச்சுப் பிழை செய்தால் சிவப்பு மசி; இலக்கணப் பிழை என்றால் பச்சை மசி கோடு என்று தவறுகளை இலகுவாக சுட்டிக் காட்டுகிறது. அந்த மாதிரி MS-Word-க்கு ஒரு plugin கொடுத்து விட்டால் வலைஞர்கள் எல்லாரும் தூய தமிழில் தட்டச்சி கலைஞரை மேலும் பாராட்டலாம்.

ஒருமை/பன்மை கலத்தல், ஒற்று விதிகள், கால மயக்கம், று/ரு போன்ற பொருட்குற்றம், ஈறு கெட்டவற்றை சரியாகக் கெடுத்தல் என்று அனைத்து விதிகளையும் நினைவில் நிறுத்த முடியாதவர்களுக்கு, கணினியின் நினைவில் நிற்குமாறு செயலி எழுதினால், ‘செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பது நிரலிப்பழக்கமாக கைகூடும்.

கவனக்குறைவினாலோ நினைவின்மையாலோ நிகழும் வழுக்களை சுட்டிக் காட்டுவதற்கு மென்கலன் எழுதுவதற்கு தமிழறிஞர்களும் பரி நிரலாளர்களும் இந்தக் கட்டாயப் பாடத்தினால் வருவார்கள்.

கலைஞருக்கு பாராட்டுக்களும் மேலும் சில பாராட்டுக்களும் :: சின்னக்கருப்பன்: “பாமக உறுப்பினர் ஜி.கே மணி கூறியதை இங்கு ஆதரிக்கிறேன். இது முதல் வகுப்புக்கு மட்டுமே கட்டாயம், ஒவ்வொரு வருடமும் அடுத்த வருடத்துக்கு கட்டாயம் என்று இருப்பதை நீக்க வேண்டும். எல்லா வகுப்புகளுக்கும் இந்த வருடமே கட்டாயமாக்கப்பட வேண்டும்.”

ராஜன்: if a person gets transfer to TN and if his kid is studying in, say 9 Std. That student would have been studying say Oriya as his/her first language in his/her previous place. Now how come suddently that student is expected to learn and pass 9th standard level Tamil? So forcing non Tamil speaking pupils to learn Tamil as the first language amounts to linguistic fanaticism.

இன்னும் பத்து வருடம் கழித்து இந்தியா சென்றால் அமெரிக்காவில் இருப்பது போன்ற English immersion law எதுவும் கிடைக்காது. கண்டிப்பாக அனுசரிக்குமாறு சட்டதிட்டங்கள் இயற்றுவது ‘மாரோ மாரோ’ என்று கோபத்தை வரவைத்து மொழி மீதே வெறுப்பை உண்டாக்கும் அளவுக் கோபத்தை வரவைக்கும். ‘ஆஹா… மெல்ல நட மெல்ல நட…’ என்று பரிவோடு பிற மாநில/நாட்டு குடியேறிகளுக்கு மொழியைப் பயிற்றுவிப்பதில்தான் தமிழின் ருசியும் நலனும் நாவில் தனித்து நிற்கும்.

தீர அலசாமல் நெடுங்காலப் பிரச்சினைகளுக்குக் குறுகிய கால அவசரப் பிரகடனங்கள் இட்டு எம்.எல்.சி. தேர்தலில் வாக்குகளை அள்ளுவது கட்சிகளின் தொலைதூரப் பார்வை. சின்னக்கருப்பனின் ‘எல்லோருக்கும் உடனடியாக அமல்படுத்த வேண்டும்’ என்பதில் எனக்கு ஒப்புதல் உண்டு. அதே போல், ராஜனின் ‘சிறுபான்மையினரின் நலனைக் கருத்தில் கொள்ள வெண்டும்’ என்பதில் மாற்ற முடியாத நம்பிக்கை இருக்கிறது.

இரண்டையும் ஒருங்கே அமல்படுத்த ‘விரைவுத் தமிழ் அமிழ்தல்’ என்பது போன்ற முழுமையான திட்டங்கள் தேவை. விடுமுறைக் காலத்தில் தமிழ் கற்க சிறப்பு வகுப்புகள் வைக்கலாம்; வெண்பாக்களை மனனம் செய்து ஒப்பிக்காமல் கம்பராமயணத்தின் கவர்ச்சியையும் (நான் சீதையின் வருணனைகளைச் சொல்லவில்லை) திருக்குறளின் உள்குத்துகளையும் ரசமாக விளக்கினால், மயங்காதவர் எவரும் உண்டோ?

வேற்று நாடுகளில் இருந்து (மெக்ஸிகோ போன்ற ஸ்பானிஷ் மொழியைத் தாயகமாகக் கொண்டவர்களுக்கு) படிப்படியாக ஆங்கிலத்தை எவ்வாறு நுழைக்கிறார்கள் என்பதை மேலும் அறிய: Implementing Sheltered English Immersion (SEI) and Improving the Academic Performance of English Language Learners. இவ்வாறு பதவிசாக அறிமுகம் செய்வதற்கே கடும் எதிர்ப்பு இங்கு நிலவுகிறது என்பது விரிவாக விவரிக்கவேண்டிய வேறு விஷயம்.

பத்து ஆண்டுகள் கழித்து ஃபோர்ட் வேலையில் சேர உத்தர பிரதேசத்தில் இருப்பவருக்கு வேலை கிடைக்கிறது. ஏழாவது படிக்கும் மக்ள், ஒன்பதாவது படிக்கும் மகன் கொண்ட குடும்பம். கணவன் மட்டும் தனியாக உ.பி.யிலேயே தங்கிவிட, மனைவி மட்டும் சென்னையில் வேலை. வாரயிறுதிகளில் விமானத்திற்கு செலவழித்து சொந்த ஊருக்கு செல்வதா? அல்லது கிடைக்கும் கொஞ்ச நஞ்ச ஓய்வை அமல்படுத்தி இளைப்பாறுவதா?

ஏழாவது தமிழை எப்படி அவர்களால் நேரடியாகப் படிக்க முடியாது. அதற்காக தமிழை சொல்லிக் கொடுக்காமலும் விடக் கூடாது. முப்பது நாளில் தமிழ் என்னும் ரேபிடெக்ஸ் வழியில் கொஞ்சம், முதலாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரையிலான பாடத் திட்டங்களில் கொஞ்சம் என்று கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வருடம் முழுக்க பயிற்றுவிக்க வேண்டும்.

மதங்களுக்கிடையே துவேஷம் வளர்வது போல் மொழிகளுக்கிடையேப் பிரிவினையும் தனிமைப்படுத்தலும் இந்த மாதிரி ‘உடனடிக் கட்டாயத் தீர்வு’களினால் நிகழும். வேற்று மாநிலக் குழந்தைகள் தனிமைப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் தாய்மொழி போல் கற்கவியலாத கோபமும் கழிவிறக்கமும் வருத்தமும் உளவியலை பாதிக்கும். அதன் பின் கொஞ்ச நாள் கழித்து ‘ரேகிங்’ கொடுமை, பாலியல் வக்கிரங்கள், ‘மத மாச்சரியங்கள்’ என்று உளவியலைக் கொண்டு அலச எனக்கு புதுத் தலைப்பு கிடைப்பது மட்டுமே இந்தக் கட்டாய பாடத்தின் பக்கவிளைவாக இருக்க கூடாது.

தடி எடுத்தவன் தண்டல்காரன் என்பது போல் கட்டாயப் பாடமாக்கும் செய்கை சட்டமாகிறது. அனைத்து சாராரையும் கருத்தில் கொள்ளாமல், மொழிப் பயிற்சியை உலகத் தரத்தோடு மதிப்பிட்டு மாற்றாமல், தற்காலப் போக்குகளை சமச்சீராக நெறிப்படுத்தாமல், பள்ளியில் மட்டும் போதிப்பதினால் ‘பயனில சொல்லாமை’ அதிகாரத்துக்கு எடுத்துக்காட்டாக ஆகாமல் இருந்தால் தமிழர் அனைவருக்கும் மகிழ்ச்சியே.

நன்றி: தமிழோவியம்


| |

SV Rajadurai on DaVinci Code Movie Ban

Dinamani.com – Editorial Page

டாவின்ஸி கோடு: தடையும் தர்க்கமும் :: எஸ்.வி. ராஜதுரை
மிக அதிகமாக விற்பனையாகும் நாவல்கள் (best sellers) “காலத்தை வென்ற’ மிகச் சிறந்த படைப்புகளாகவும் அமைவது உலகில் மிக அரிது. நானூறு ஆண்டுகளுக்கு முன் வெளியான ஸ்பானிய நாவல் “டான் க்யோட் டி லா மான்ச்சா’ (Don Quixote de la Mancha) அன்றைய வாசகர் எண்ணிக்கை, வாங்கும் திறன் முதலியவற்றைக் கருத்தில் கொள்கையில் மிக அதிக அளவில் விற்பனையான ஒரு நாவலாகக் கருதப்படுகிறது. செர்வாண்டெஸின் இந்த ஆக்கம் நாவல்களின் தாய் எனக் கருதப்படுவதுடன் உலகின் முக்கிய மொழிகள் பலவற்றில் தொடர்ந்து மொழியாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் வில்லியம் ஃபாக்னரின் முக்கிய நாவல்களிலொன்று “அப்ஸலம், அப்ஸலம்‘. 1936இல் வெளியான இந்த நாவலின் விற்பனை ஐந்நூறைத் தாண்டவில்லை. அதே ஆண்டில், மற்றொரு அமெரிக்க எழுத்தாளர் ஹார்வி அல்லென் என்பார் எழுதிய “அந்தோய் அட்வெர்ஸ்’ என்னும் நாவல் பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையாகி புத்தகச் சந்தையில் “சாதனை’ படைத்தது. ஆனால், இலக்கிய உலகில் இந்த எழுத்தாளரையோ அவரது நாவலையோ இன்று யாரும் நினைவு கூர்வதில்லை. ஆனால் ஃபாக்னரின் படைப்புகள் இலக்கியவாதிகளுக்கு இன்னும் உள்உந்துதல் தந்து கொண்டிருக்கின்றன.

மற்றொரு அமெரிக்க நாவலாசிரியர் டான் ப்ரெüன் எழுதிய “டாவின்ஸி கோடு’ நாவலின் விற்பனை, 2003 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை பல கோடிப் பிரதிகளைத் தாண்டிவிட்டது. இதுபோக பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட இந்த நாவலின் பிரதிகளும் அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. படிப்பதற்கு சுவாரசியமான இந்த நாவலின் சம்பவங்கள், பாரிஸிலுள்ள கலை அருங்காட்சியகமான லூவ்ரில் அதன் காப்பாளர்களில் ஒருவர் கொலை செய்யப்பட்டதிலிருந்து தொடங்குகின்றன. கொலையுண்டவர் பிணமாகக் கிடந்த கோலம், அவரது உடலில் எழுதி வைக்கப்பட்டிருந்த சில எழுத்துகள் ஆகியவற்றின் துணையுடன் குறியீட்டியல் பேராசிரியர் ஒருவரும் கொலை செய்யப்பட்டவரின் மகளும் “துப்பு’ துலக்க முற்படுகையில் பல்வேறு மர்ம முடிச்சுகள் அவிழத் தொடங்குகின்றன.

“புனிதக் கிண்ணம்’ எனச் சொல்லப்படுவதைத் தேடிக் கண்டுபிடிக்க அவர்கள் மேற்கொள்ள முயல்கையில் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர். நாவலின் புனைவுப்படி, “புனிதக் கிண்ணம்’ என்பது மேரி மக்தலேனா என்பவரையே குறிக்கிறது; தனது சீடகோடிகளில் ஒருவரான இவரை ஏசு மணம் புரிந்து கொண்டாரென்றும் தனது கொள்கை நெறிகளைப் பரப்ப அந்த மாதையே ஏசு நியமித்தார்; இவர்களது சந்ததியினர் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்; உலகப் புகழ்பெற்ற ஓவியர் லியனார்டோ டாவின்ஸியின் “கடைசி இரவு உணவு’ என்னும் ஓவியத்தில் ஏசுவுக்கு அருகே அமர்ந்திருப்பவராகக் காட்டப்படும் சீடர் மேரி மக்தலேனாதான்; டாவின்ஸி, மோஸôர்ட் போன்ற கலைஞர்கள் இந்த மேரி மக்தலேனாவைப் புனிதராகக் கருதும் ஒரு சமயக் குழுவைச் சேர்ந்தவர்கள்; ஏசுவுக்கும் மக்தலேனாவுக்கும் இருந்த தொடர்பு குறித்த செய்திகளை அழிப்பதற்காக “ஒபெஸ் டெய்’ என்னும் கிறிஸ்துவ அமைப்பு- வத்திகானுக்கு நெருக்கமான அமைப்பு -அனைத்து முயற்சிகளையும் செய்து வருவதாகவும் இந்த நாவல் கூறுகிறது.

இந்த நாவலின் ஆங்கில மூலமும் ஐரோப்பிய மொழியாக்கங்களும் கடந்த மூன்றாண்டுகளாக அந்த நாட்டு மக்களிடையே எந்தச் சிக்கலையும் ஏற்படுத்தவில்லை. அந்த நாடுகள் ஒவ்வொன்றிலும் நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காட்டினர் கிறிஸ்தவர்களே. கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமைப் பீடமான வத்திகானின் ஆட்சேபணையை அலட்சியம் செய்த அந்த நாட்டு மக்களிடையே இந்த நாவலின் திரைப்பட வடிவமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பால்ஸக், தோஸ்தோவ்ஸ்கி, தோல்ஸ்தாய், காஃப்கா போன்ற மகத்தான கலைஞர்களின் படைப்புகள் தரும் உள்ளொளி எதனையும் இந்த நாவலில் காணமுடிவதில்லை என்பதும் இன்னும் இருபதாண்டுகளுக்குப் பிறகு இதைப் பற்றி யாரும் பெரிதாகப் பேசப் போவதில்லை என்பதும் வேறு விஷயம். ஆனால் ப்ரெüனின் நாவலும் அதைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமும் கிறிஸ்துவ நம்பிக்கைகளைப் புண்படுத்துகிறது என்னும் வாதம் அர்த்தமற்றது.

இன்றுவரை கத்தோலிக்க உயர்பீடம் சார்லஸ் டார்வினின் பரிணாமக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை; கருத்தடை உரிமையை ஒப்புக்கொள்ளவில்லை. வத்திகான் பயன்படுத்தும் அதே விவிலியத்திலிருந்து “விடுதலை இறையியலை’ உருவாக்க முயன்ற தென்னமெரிக்கக் கத்தோலிக்கப் பாதிரியார்களை போப் ஆதரிக்கவில்லை. ஆறு நாட்களில் உலகம் கடவுளால் படைக்கப்பட்டதாக நம்புபவர்களின் மத அடிப்படையையே தகர்க்கும் டார்வினின் கோட்பாட்டைப் பாடப் புத்தகங்களில் இடம்பெறாமல் தடுக்கும் அடிப்படைவாதச் சக்திகள் அமெரிக்காவிலும்கூட இருக்கின்றன. ஆனால் அவையும்கூட “டாவின்ஸி கோடு’ நாவலுக்கோ, திரைப்படத்திற்கோ தடைவிதிக்கும்படி போராட்டம் நடத்தவில்லை.

கோபர்னிகஸ், கலிலியோ, டார்வின் முதல் இன்றைய மரபணு ஆராய்ச்சி விஞ்ஞானிகள் வரை, “”மத உணர்வுகளைப் புண்படுத்தாமல்” அறிவியல் வளர்ந்ததில்லை.

கருத்துச் சுதந்திரம் என்னும் பெயரால் மாற்று மதத்தவரை வேண்டுமென்றே வம்புக்கு இழுக்கும் செயல்கள் உலகில் நடைபெறத்தான் செய்கின்றன. எடுத்துக்காட்டாக, ஐரோப்பியப் பத்திரிகையொன்று வெளியிட்ட முகமது நபி பற்றிய கேலிச்சித்திரங்கள். இதைச் சாக்காக வைத்துக்கொண்டு, “”மற்றவர்களின் உணர்வுகள் புண்படும்” என்னும் பெயரால் கலை, இலக்கியப் படைப்புகளைத் தடை செய்வதும் எதிர்த்துப் போராடுவதும் பாசிசக் கலாசாரத்தையே உருவாக்கும்.

சிவாஜி பற்றிய நூலொன்றை காங்கிரஸ் வசமுள்ள மராத்திய அரசாங்கம் தடை செய்தது; தஸ்லிமா நஸ்ரீன் படைப்பொன்றை மேற்கு வங்க இடதுசாரி அரசாங்கம் தடை செய்தது; இலண்டனில் எஃப்.எம். ஹூúஸனின் ஓவியக் கண்காட்சிக்கு எதிராக “இந்தியப் பண்பாட்டுக் காவலர்கள்’ ரகளையில் ஈடுபட்டனர்; நீதிக் கட்சியின் வரலாறு ஜெயலலிதா ஆட்சியின்போது பாடப்புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டது; தலைசிறந்த கன்னட எழுத்தாளர் குவேம்பின் பெயர் சூட்டப்பட்ட பல்கலைக்கழகத்தின் பாடத் திட்டத்திலிருந்து தேவெ கெüட கர்நாடக முதலமைச்சராக இருந்த காலத்தில் குவேம்புவே எழுதிய படைப்பொன்று (“மத உணர்வுகளைப் புண்படுத்தியதால்’) நீக்கப்பட்டது.

எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல, பா.ஜ.கவின் குஜராத் அரசாங்கம், நர்மதா அணைத் திட்டத்தை விமர்சித்தார் என்ற ஒரே (மதச்சார்பற்ற) காரணத்திற்காக ஆமிர்கான் நடித்த திரைப்படத்தை அந்த மாநிலத்தில் திரையிடக்கூடாதென ஆணை பிறப்பித்தது. இத்தகைய தடைகள் செய்வதற்கு அந்தந்த மாநில அரசாங்கங்கள் சொன்ன அதே தர்க்கவாதங்களின் அடிப்படையிலேயே பெரியார் மரபுக்கு உரிமை கொண்டாடும் தி.மு.க. தலைமையிலான தமிழக அரசாங்கம் “டாவின்ஸி கோடு’ திரைப்படத்திற்குத் தடை விதித்துள்ளது. தமிழக முதல்வர் தானும் ஒரு எழுத்தாளர், கலைஞர் என்பதையும் திராவிட இயக்கத்தினரின் நாடகங்களும் திரைப்படங்களும் பத்திரிகைகளும் பெரியார் காலத்திலிருந்து நேற்று வரை தணிக்கைகளுக்கும் தடைகளுக்கும் உள்ளாயின என்பதையும் மறந்துவிட்டார் போலும்!

உண்மையான கிறிஸ்துவ நெறிகளைப் புண்படுத்தும் வேறு காரியங்களுக்கு இங்கு பஞ்சமில்லை. தலித்துகளுக்குத் தனிச் சுடுகாடு, அகமண முறை, வரதட்சிணை, ஆணாதிக்கம், சுரண்டல் எனப் பல்வேறு வடிவங்களில் ஏசுநாதர் மீது கடுந்தாக்குதல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இன்டெர்நெட்டும் அசல் அல்லது திருட்டு விசிடி/டிவிடியும் இருக்கும் யுகத்தில் எந்தவொரு விஷயத்தையும் யாராலும் தடைசெய்துவிடலாம் என நினைப்பது எத்தகைய அறியாமை! அடுத்த ஆண்டு ஏதெனுமொரு வெளிநாட்டுத் தொலைக்காட்சி சானலில் “டாவின்ஸி கோடு’ ஒளிபரப்பப்படுமானால் நமது ஆட்சியாளர்கள் என்ன செய்வர்? சீன, ஈரானிய ஆட்சியாளர்களைப் பின்பற்றுவார்களா?

Thalayangam – Kalki

சட்டசபையில் ஜெயலலிதா!

ஜெயலலிதா சட்டசபைக்கு வருகை தந்ததன் மூலம் ஆரோக்கியமான ஜனநாயக மரபுகள் மிக கௌரவமாகக் கடைப்பிடிக்கப்பட்டன. தமது கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் அவை நீக்கம் செய்யப்பட்டதால் அவர் சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்க முடிவெடுத்தது வரவேற்கத்தக்கதே. அவ்வாறு அவர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டிராவிடினும் ஜெயலலிதா சட்டமன்றத்துக்கு வந்திருக்கலாம் என்பது வேறு விஷயம். ஆனால், இப்படி ஒரு முகாந்திரம் கருதி அவர் சட்டசபைக்கு வந்ததற்கே இன்று தமிழகம் மகிழ்ந்துபோயிருக்கிறது.

இரு முக்கிய கட்சித் தலைவர்கள் நேருக்கு நேர் சந்தித்திருக்கிறார்கள் – மிக நீண்ட காலம் கழித்து! சபாநாயகர் ஆவுடையப்பன், எதிர்கட்சியினர் பேசுவதற்குப் போதுமான அவகாசத்தை ஒதுக்க வேண்டும் என்று கருணாநிதி அவரை வரவேற்றுப் பேசும்போதே கேட்டுக் கொண்டார். அதற்கேற்ப, ஜெயலலிதாவுக்கு, ஆளுனர் உரைமீதான விவாதத்தில் உரையாற்ற நேரம் ஒதுக்கப்பட்டது. ஜெயலலிதாவும் ஒரு சீரிய எதிர்கட்சித் தலைவராகச் செயல்பட்டு, குறிப்புகளையும் தயாரித்து எடுத்து வந்து, நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் வழங்கும் வாக்குறுதி குறித்தும் விவசாய கூட்டுறவு கடன் ரத்து திட்டம் குறித்தும், அழுத்தமான, நியாயமான கேள்விகளை, புள்ளி விவரங்களின் துணையோடு எழுப்பியிருக்கிறார்!

‘‘பொதுவாக, இவ்விவாதத்தின்போது எதிர்கட்சித் தலைவருக்கு முக்கால் மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஒதுக்குவது வழக்கம். ஆனால், எனக்கு அரை மணி நேரம்தான் ஒதுக்கப்பட்டது’’ என்று அ.தி.மு.க. தலைவர் குறைபட்டுக் கொண்டாலும், இந்த விவாதத்தில் அவர் பேச எடுத்துக்கொண்ட நேரம் 42 நிமிடங்கள்! இதனை அவைத் தலைவர் அனுமதித்தும் இருக்கிறார்; அதிகம் குறுக்கிடாமல், உறுப்பினர்கள் அவர் உரையை முழுதும் கேட்டிருக்கிறார்கள்; உரிய கட்டத்தில் பதில்களும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற ஆரோக்கியமான, ஆக்கபூர்வமான நிகழ்வுகளைத்தான் தமிழக சட்டசபையில் நாம் மேலும் மேலும் காண விரும்புகிறோமே தவிர, முதல் நாளே அ.தி.மு.க. உறுப்பினர்கள் எழுப்பியது போன்ற ரகளையையும் வன்முறையையும் அல்ல!

தமது கட்சி எம்.எல்.ஏக்களுக்கு ஜெயலலிதா பாடம் நடத்தி வன்முறை, பழித்துப் பேசுதல் போன்றவற்றைத் தவிர்க்கச் செய்ய வேண்டும். கவன ஈர்ப்புத் தீர்மானம், ஒத்திவைப்பு தீர்மானம், கேள்வி நேரம் போன்றவற்றை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என முன்கூட்டியே எதிர்கட்சி உறுப்பினர்கள் கலந்துபேசி, ஒரு திட்டம் வகுத்து, அதன்படி அவையில் இயங்க வேண்டும்.

எதிர்கட்சி என்பது வெறுமே எதிர்ப்பதற்கு அல்ல; நல்ல யோசனைகள் கூறி ஆளுங்கட்சியின் சிறந்த செயல்பாடுக்கு உதவுவதற்கும் ஆளுங்கட்சி தவறிழைக்கும்போது தட்டிக் கேட்பதற்கும் ஏற்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியிலிருந்தபோது, தி.மு.க.வுக்கு இப்படிப்பட்ட எதிர்கட்சியாக இயங்க சந்தர்ப்பமே கிடைக்கவில்லை. அப்போதைய சபாநாயகர் இத்தகைய ஆரோக்கிய போக்குகளுக்கு இடமளிக்கவே இல்லை.

இன்று, ஆவுடையப்பன் அவைத் தலைமையில், அ.தி.மு.க.வுக்கு அர்த்தமுள்ள எதிர்கட்சியாக இயங்க வாய்ப்பு நிறைய உண்டு. அப்படி நடந்து கொள்வதற்குப் பதில், வீண் கூச்சல், கலாட்டா, வன்முறை என்று இறங்கிவிட்டு, அதற்குரிய தண்டனை பெறும்போது, ‘‘ஜனநாயகப் படுகொலை’’ என்று கூக்குரல் எழுப்பினால், அந்த நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள். மக்களிடையே செல்வாக்கைத் திரும்பப் பெறும் அரிய வாய்ப்பையும் அ.தி.மு.க. தலைவர் இழந்து விடுவார்.

Bored

Photobucket - Video and Image Hosting

மறுப்புக்கூறு(கள்):

  • கவர்னர் பர்னாலாவையோ சுப்பிரமணிய சுவாமியையோ வைகோவையோ இதன் மூலம் எள்ளவில்லை.
  • எந்த அரசியல்வாதியையும் அவர்கள் மேல் ஏறி நிற்கும் தொண்டர்களையும் அரசியல் களத்தையும் இந்தப் படம் சுட்டவில்லை.
  • நான் பிஸி; அதனால் வலைப்பதிய முடியவில்லை என்று எல்லாம் பந்தா விடுவதற்காக இப்படி சுட்டு ஓட்டவில்லை.
  • இந்தப் புகைப்படம் தமிழ்ப்பதிவர்களைக் குறிப்பதற்காக இடவில்லை.
  • மனிதர் ஒன்று கூடும் சந்திப்பு அடுக்குகள் போர் அடிக்கும் என்று மெஸேஜ் விடுவது நோக்கம் கிடையாது.

    படம் மின்மடலில் வந்தது. இட்டு ரொப்புகிறேன்.


    | |

  • Summa oru thaali kattudaa

    Kokki
    சன் டிவியின் ‘டாப் 10’ திரைப் பட்டியலில் சேரியமாய் உடையணிந்து, முகத்தில் புன்னகை எட்டிப் பார்க்காமல் பேசினாலும், நம்மை சிரிக்க வைத்து விடுவார்கள். அதே போல், தெலுங்கு குத்துப் பாட்டு போல் ‘டன் டனக்கு’ இசைத்தாலும், ராஜஸ்தானி பாலவன அன்னியச் சூழலிலும் தமிழக அரசியலுக்கானப் பாடலை சுட்டிக் காட்டும் பதிவொன்றை கில்லியில் படிக்க நேரிட்டது.

    பெண்:
    சும்மா ஒரு தாலி கட்டுடா
    சும்மா ஒரு வீடு கட்டுடா
    சும்மா ஒரு பிள்ளை கொடுடா
    அத ஸ்குலுக்குதான் கூட்டிக்கிட்டு போயி வுடுடா

    அதிமுக தேர்தல் அறிக்கையில் திருமணங்களுக்கு தாலி கொடுப்பதாக சொல்லப்பட்டது. தரிசு நிலங்களை விவசாயிகளுக்குக் கொடுத்து விவசாயமும் வசிப்பிடமும் கட்டிக் கொள்ள வசதி செய்து தருவதாக திமுக அறிக்கை சொன்னது. விஜயகந்த்தின் வீட்டுக்கு ஒரு காராம்பசு கொடுத்து அதன் மூலம் இலவசமாக கன்று பிறந்து பிள்ளை கொடுப்பதையும் கவிஞர் மறக்கவில்லை. இங்கு பாடலாசிரியர் சமகால அரசியல் களத்தைச் சுட்டுகிறார்.

    கடைசியாக தன்னுடைய கிச்கிச் கீச்சுக் குரலில் அனுராதா ஸ்ரீராம் வாயிலாக, இந்த மாதிரி சும்மா கொடுப்பதற்கு பதில், பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினால், மேற்சொன்ன எல்லாமே எளிதில் கிடைத்துவிடுமே என்று சுட்டுவதில்தான் பெண்ணின் குரல் முழுமையடைகிறது. அந்த வைர வரியிலும், கிராமப்புற கல்விச்சாலைகள், அருகில்/எளிதில் சென்றடையும் தூரத்தில் இல்லாமல், தொலை தூரத்தில் இருப்பதை பொதிவாக நுழைப்பது, இன்றைய நிஜத்தை ‘சி’ செண்டருக்கும் உறைக்க வைக்கிறது.

    ஆண்:
    சும்மா ஒரு தாலி வருமா
    சும்மா ஒரு வீடு வருமா
    சும்மா ஒரு பிள்ளை வருமா
    வேற வேலை வெட்டி இல்லையா
    ஆள விடும்மா

    இங்கு பொருளாதார அலசல் எளிமையாக்கித் தரப்படுகிறது. இலவசம் எல்லாமே இலவசம் அல்ல; அதற்கான விலை என்ன என்று யோசிக்க வைக்கும் கருத்துக்கள். வேலைவாய்ப்புப் பெருக்கம் மூலமே சும்மாக்கள் ஒழியும் என்று உணர்கிறோம்.

    மேலும், ஒரு தாலி கேட்பவர்கள், இரண்டு, மூன்று என்று தொடர்வார்கள். ஒன்று என்று கேட்பதின் அபத்தத்தையும் ஆண் குரல் வினா எழுப்புவதை கவனிக்கலாம்.

    கடைசியாக, வந்தபின் காப்போனாக இல்லாமல், வருமுன் அலசல்காரனாக, கணவன் வந்தபின் ஏற்படும் மணச்சிக்கல்களையும், வீடு வந்தபின் தேவைப்படும் மின்சார/வரி/செப்பனிடுதல் செலவுகளையும், கன்றுக்குட்டி பிறந்தபின் பால் தடவல்களையும் அலசி ஆராய்ந்தபின் முடிவெடுப்பதை வலியுறுத்துகிறார்.

    பெண்:
    நான் மானா வீனா சுனா பானா
    அக்கா பொன்னுடா
    நான் உன்ன நம்பி ஓடி வந்தேன்
    சொன்னால் கேளுடா

    மானா என்றால் மாறன்; வீனா என்றால் விஜய்காந்த்; சுனா என்றால் (இருள்நீக்கி) சுப்பிரமணியம்; பானா என்றால் பணம்.

    உடன் பிறவா சகோதரி குடும்பத்துப் பெண்களின் ஆதிக்கம் நிலவுவதை இரண்டாம் வரி குறிப்பிடுகிறது.

    மாறனின் சன் டிவி குழுமத்தை நம்பியும், தேமுதிக வாக்குகளைப் பிரிக்கும் என்று நினைத்தும், ஜெயந்திரரின் ஆதரவுடனும் பணத்தின் ஆளுமையுடனும் திமுக மக்கள் மன்றத்தை சந்திப்பதை இரட்டுற மொழிதல் வெள்ளிடை மலை.

    ஆண்:
    நான் வீனா பானா கானா போனா
    நான் அக்கா பையன் டீ
    என்ன நம்பி வந்தால்
    மோசம் போயி காஞ்சி நிப்படி

    வீனா என்றால் வீரப்பன்; பானா என்றால் பன்னீர்செல்வம்; கானா கருணாநிதி; போனா என்றால் போண்டி.

    அக்கா பையன் என்பது டிடிவி தினகரன் எம்.பி.யையா அல்லது முன்னாள் வளர்ப்பு மகனா அல்லது வருங்கால வாரிசா என்று இந்த கட்டுரையாசிரியருக்கு விளங்கவில்லை. நடராஜன் – சசிகலா family tree-ஐ ஆழமாக அறிந்தவர்களுக்கு மட்டுமே இதன் உண்மை விளங்கும்.

    வீரப்பன் வதை, பன்னீர்செல்வம் நம்பிக்கை, கருணாநிதி முதுமை, போண்டியாகும் பயம் என்று அதிமுக தேர்தலை எதிர்நோக்குவதை சொல்லும் மாணிக்க விநாயகம், கூடவே இருந்து குழி பறிப்பவர்களை நம்பினால் காஞ்சி ஜெயந்திரர் போல் நிற்கப் போவதாக ஜெயலலிதாவுக்கு அறிவுறுத்துகிறார்.

    மேலும் சொல்ல ஆசைதான்…

    கவிதையை ஆராயக் கூடாது; அவை கேட்பவரின் பிணி தீர்க்கும் வல்லமையுடன் வாசிக்கும் தகைமைக்கு ஏற்ற அனுபவத்தைத் தரவல்லது என்னும் நான்மறைக்குக் கூற்றுக்கு ஏற்ப மற்றவற்றை கேட்போருக்கே விட்டு விடுகிறேன்: கொக்கி பாடலை ருசிக்க


    | |

    75 Years of Tamil Cinema – Lakshman/Sruthi Chennai…

    75 Years of Tamil Cinema – Lakshman/Sruthi Chennai Celebrations :: Duncan to Mishkin by Raj TV with Brooke Bond 3 Roses Posted by Picasa

    Madras University Refurbishing – Thinamalar.com 

    Madras University Refurbishing – Thinamalar.com Posted by Picasa

    Browse 2.0

    Plum: சொந்த சிக்கல்களுக்காக ‘தைராய்ட்’ எப்படி வரும்? என்ன தீர்வு? இயற்கை மருந்துகள் என்ன? நச்சென்று விளக்கும் வலையகங்கள் எது? தொடர்ந்து அவதிப்படுபவரின் வலைப்பதிவுகள் எவை என்றெல்லாம் அலசி ஆராய்ந்து வைத்திருந்தேன்.

    பிறிதொருவருக்கும் இந்தத் தேடல் முடிவுகள் இலகுவாக உதவலாம். வலையகத்தில் போட்டு வைத்தால் கூகிளாண்டவரின் முடிவில் நூல் பிடித்தால்தான் உண்டு. தற்காலத்திற்கு ஏற்றவாறு கூட்டுப்புழுவாக உலகோடு பகிர்வது எப்படி…

    Plum பயன்படும்.


    Sharpcast: என்னுடைய புகைப்படங்களில் சில கேமிராவிலேயே உட்கார்ந்து கொண்டிருக்கும். சிலது வெகு பாதுகாப்பாக backup ஆகி புற கடிவறையில் தூங்கும். மற்றவை காம்பாக்ட்-ஃப்ளாஷ், எஸ்-டி நினைவகம், குறு எஸ்டி, மெமரி ஸ்டிக், என்று ஏதாவதொன்றில் கண்ணாமூச்சி விளையாடும். முக்கியமானவை கணினிக்குள் பதுங்கும்.

    இவ்வளவையும் நொடி நேரத்தில் கண்ணாரப் பார்த்து அலுங்காமல் ஒருங்கிணைக்க வேண்டுமா?

    Sharpcast பயன்படும்.


    JAJAH – web-activated telephony: ஸ்கைய்ப்புடன் கடமுடா வரலாம் என்று பயமுறுத்துகிறார்கள். வில்லன் போல் பாவிக்காமல், ஹீரோ போன்ற சேவையைத் தேர்ந்தெடுக்க விருப்பமா? இந்தியாவிற்கு 0.1361 டாலர் ஆகிறதால், ரிலையன்ஸை விட கம்மியாகக் கொடுப்பதில்லை.

    என்றாலும், இஸ்ரேல், இத்தாலி போன்ற நாடுகளுக்கு லோக்கல் கால் போல் பேசவேண்டுமா?

    ஜ.. ஜா… பயன்படும்.


    Prosper: The online marketplace for people-to-people lending: கடன் கொடுக்க யாருமே இல்லையா? உங்கள் நம்பிக்கைக்கு சான்றுப் பத்திரம் தர மக்கள் க்யூவில் நிற்கிறார்களா? $25,000 வரை கைமாற்றுக் கொடுத்து இடுக்கண் களைகிறார்கள். உங்களிடம் பணம் சேமிப்பில் தூங்கிக் கொண்டிருந்தால், மற்றவர்களுக்கு கடன் கொடுத்து உதவிய திருப்தியும் கிடைக்கும்; கொஞ்சம் டப்பும் பார்க்கலாம்


    Lala – Discover, Listen, Enjoy: கேட்கவேண்டிய அருமையான ஆங்கிலப் பாடல்களின் ப்ட்டியல் பர்ஸை கரைக்கும் என்று பயமாய் இருக்கிறதா? அந்த மாதிரி மாபெரும் இசைத்தட்டு எல்லாமும் இலவசமாக வீடு தேடி வர வேண்டுமா? ஒரே ஒரு டாலர் செலவழித்தால் போதுமானது.

    நீங்கள் கேட்டு கேட்டு போரடித்துப் போன ஒலிக்கோப்பைகளை வேண்டுபவர்களுக்குக் க்டாசி விடுங்கள். உங்களுக்குத் தேவையானதை கேளுங்கள்… கொடுக்கப்படும்… ஊ… ல… லா…


    FilmLoop: என்னிடம் நயாகரா புகைப்படங்கள் ஐம்பது இருக்கும். அழகாக வீடியோவே செய்து விடலாம். காலையில் எப்படி இருக்கும்; ஹெலிகாப்டரில் இருந்து… படகில் இருந்து… வெகு அருகில் இருந்து… இரவில்… எல்லாவற்றையும் கோர்த்து படச்சுருள் ஆக்குவதற்கு வகை செய்கிறார்கள்.

    நண்பர்களிடம் கனடாவில் இருந்து எடுத்த மேலும் சில புகைப்படங்கள் உள்ளது. நயாகரா அருகிலேயே இருக்கும் பஃபோலோ ஊர்க்காரரிடம் பனிக்காலப் படங்கள் கிடைக்கும். இவற்றை சொருக வேண்டிய இடத்தில் இட்டு, மற்றவர்களால் செப்பனிடவும் வழி செய்து தருகிறார்கள்.

    படம் எல்லாம் எடுப்பது டைம் வேஸ்ட் என்று நினைப்பவரா நீங்க? வாங்க… கொட்டிக் கிடக்கும் பொக்கிஷங்களைப் பார்ப்பதற்கு நீங்கதானே தேவை 🙂


    Mercora – Music Search and Internet Radio Network: நீங்கள் ஜெத்ரோ டல் பிரியரா? அதே போன்ற கலக்கலான ஆனால் ‘டல்’ போன்று அதிகம் பிரபலாமாகாத இசைக்குழுக்களையும் பாடல்களையும் மற்றவர்களுடன் பகிர விரும்புகிறீர்களா? நாப்ஸ்டர், வக்கீல், சம்மன் என்று எல்லாம் பயப்படாமல் உங்களுக்கே உங்களுக்கான ரேடியோவைத் தொடங்க விருப்பமா?

    Mercora பயன்படும்.

    உதவி: Who’s Building the Next Web? – Next Frontiers – MSNBC.com


    | | |

    Boston Cambridge in Symphony

    இந்த மாத திசைகள் வலையிதழில் என்னுடைய ‘பாஸ்டனுக்கு வரலாம்‘ சுற்றுலா கட்டுரை வெளியாகியுள்ளது. திசைகள்.காமுக்கும் அருணா ஸ்ரீனிவாசனுக்கும் நன்றிகள் 🙂

    இந்த வலையகங்களுடன் சௌகரியம் என்னவென்றால், இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், ·பயர்·பாக்ஸ் என்று விதவிதமான உலாவியில் பார்த்தாலும், 640×480 என்று டைனோசார் காலத்து அரங்குகளில் ஆரம்பித்து உள்ளங்கைக் கணினி வரை எல்லாவிதமான திரைகளிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தெரியும்.

    பெரும்பாலான அமெரிக்க நகரங்கள் இதே மாதிரிதான். நியுயார்க், அட்லாண்டா, சிகாகோ என்று முக்கிய நகரங்கள் அனேகமாக வார்ப்புருவில் உருவான வலையகம் போல் காட்சியளிக்கும்.

    ஊர் நடுவே ஒரு பெரிய அடுக்கு மாடி கட்டிடம். நகரத்தை சுற்றிக் காட்ட சிறப்பு பேருந்துகள். கலை அருங்காட்சியகம், செத்த அருங்காட்சியகம், உயிர் காட்சியகம், மீன் காட்சியகம் என்று விருப்பத்துக்கு ஏற்றவாறு சுற்றலாம்.

    ஐந்து வயதுக்குட்ப்பட்ட குழந்தைகள் இருந்தால் விலங்கியல் பூங்கா. ஐந்துக்கு மேல் குழந்தைகள் இருந்தால் ஆட்டம் போட்டு தள்ளிவிடும் மாபெரும் சவாரிகள் கொண்ட தீம் பார்க். அம்பதுக்கு மேற்பட்ட பெருசு இருந்தால் சரித்திரத்தையும் சிற்பங்களையும் அள்ளிவிடும் ம்யூஸியம் என்று வகை செய்து வைத்தல் நலம்.

    இந்த மாதிரி நகரங்களுக்கு பாஸ்டனும் விதிவிலக்கல்ல. நயாகரா என்றால் பெரிய அருவி ஒன்று, சிற்றருவி ஒன்று; லாஸ் வேகாஸ் சூதும் சூதாட்டமும் சார்ந்த இடம்; மவுண்ட் ரஷ்மோரில் வெறுமனே கோபுர சிற்ப தரிசனம்; ·ப்ளோரிடாக்களில் டிஸ்னி பங்குக் குறியீடுகள் உயர விதவித மொந்தையில் ஒரே கள் என்றில்லாமல் கொஞ்சம் வித்தியாசமாகவும் கொஞ்சம் பழக்கமான தலங்களும் துளி மெனக்கிட்டால் பூரிப்படைய வைக்கும் தனித்துவமான இடங்களும் கொண்டது.

    அலுவல் சம்பந்தமாக பாஸ்டன் பக்கம் வர வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. ஆனால், அரை நாள்தான் ஊர் சுற்ற ஒதுக்க முடியும் என்று வைத்துக் கொண்டால்…

    அவசியம் ‘பாஸ்டன் வாத்து சிற்றுலா’ என்றழைக்கப்படும் பாஸ்டன் டக் டூர் சென்று விடுங்கள். டிக்கெட் கிடைப்பது கொஞ்சம் சிரமமானது. பைசாவும் நிறையவே பிடுங்குவது போலும் தோன்றலாம். ஆனால், ஒன்றேகால் மணி நேரத்தில், உங்களுக்கு பாஸ்டன் குறித்த சரித்திரத்தை நகைச்சுவை உணர்வோடு விவரித்து இடஞ்சுட்டி விளக்கி விடுவார்கள்.

    மீதம் இருக்கும் காலரைக்கால் நாளில் ஊருக்கு நடுவே இருக்கும் ப்ருடென்சியல் கோபுரத்தின் ஐம்பதாவது மாடியைத் தொட்டு, கண்ணாடிக் கூண்டில் இருந்து அக்ரோ·போபியா இல்லாமல் கண்குளிர மாநகரத்தை தரிசிக்கலாம். ஏறக்குறைய தண்ணீரில் இறங்கும் விமானங்கள் கொண்ட லோகன் விமான நிலையம், கண்ணுக்கெட்டிய தூரத்தில் எம்.ஐ.டி, ஹார்வார்ட் போன்ற பல்கலைகள், குத்துச்சண்டைக்குக் கூவும் சமபலம் கொண்ட வீரன் போல் அறுபது மாடிகளுடன் ஜான் ஹான்காக் டவர், ஈராக்கில் கடத்திப் பிணையாக இருந்த ஜில் கரோல் போன்றோரை நிருபராகக் கொண்ட கிறிஸ்டியன் சயின்ஸ் மானிட்டர் கட்டிடங்கள் என்று வனப்பாக பரந்த பார்வை நோக்கலாம்.

    அரை நாள்தான் அவகாசம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து, வேலை சீக்கிரமே முடிந்துவிட்டு, மதிய உணவுக்கு கம்பெனிக் கொடுப்பவளும் டேக்கா கொடுத்துவிட, ஒரு நாள் முழுக்கக் கிடைத்துவிட்டால்…

    அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் தலைநகரங்களாக இருப்பதில்லை. நியு யார்க் மாகாணத்துக்கு எங்கோ மூலையில் இருக்கும் ஆல்பனி; லிங்கனின் இல்லினாய்க்கும் சிகாகோ கிடையாது. அமெரிக்காவுக்கு தலையான வாஷிங்டன் டிசி-யிலோ, அமெரிக்க பாராளுமன்றத்தைப் பார்வையிட ஏழு கடல் ஆறு மலை என்பது போல் தடைக்கற்கள் மிக அதிகம். அமெரிக்க செனேட்டரைப் பார்க்க வேண்டும்… கையெழுத்துடன் சிபாரிசுக் கடிதம் வாங்க வேண்டும்… ஒரு மண்டலம் முன்பே ஒப்புதல் கொடுக்க வேண்டும்… நடக்கிற (சாரி…) பார்க்கிற காரியமா அது?!

    அந்த மாதிரி எதுவும் இல்லாமல், கவர்னர் அறை, மாஸாசூஸட்ஸ் மக்களின் பிரதிநிதிகள் சண்டமாருதம் பொழியும் அவை, செனேட்டர்கள் கர்ஜிக்கும் விவாதக் களம், பெருந்தலைவர்கள் வந்தால் விருந்து கொடுக்கும் சபா மண்டபம், சிலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் என்று விளக்கமாக அறிய, பார்வையிட ‘ஸ்டேட் ஹவுஸ்‘ செல்ல வேண்டும்.

    அப்படியே அங்கிருந்து பொடி நடையாக பாஸ்டன் பொதுமக்கள் பூந்தோட்டத்தையும், சோலைகளையும் மேயலாம். புல்தரையில் மடி மீது தலை வைத்து சூரியன் மறையும் வரை வெயில்காயும் ஜோடிகளைக் காணலாம். டாவின்சி கோட் புரட்டும் படிப்பாளிகளைத் தாண்டலாம். பூத்துவாலைக் குளியலில் குதியாட்டம் கட்டும் சிறார்களோடு இளைப்பாறலாம்.

    அங்கிருந்து நடையைக் கட்டி, ‘சுதந்திரச் சுவடுகள்’ என்று நாமகரணமிட்டிருக்கும் ‘Freedom Trail’-ஐ பின்பற்றி கையெழுத்துக்கே இலக்கணம் வகுத்த ஜான் ஹான்காக், சோமபானுத்துக்கு இலக்கணமான சாமுவேல் ஆடம்ஸ் போன்ற பலரின் சமாதிகளை அரகரா போட்டுக் கொண்டே கழைக்கூத்தாடிகளும் இசைக் கலைஞர்களும் முக்குதோறும் காணப்படும் க்வின்சி மார்க்கெட் வந்து சேருவோம்.

    ‘எனக்கு பீட்ஸா பிடிக்காது; புரீடோ மட்டும்தான் வேணும்’, ‘இட்லி மட்டும்தான் வெளியில் சாப்பிடற பழக்கம்’; ‘சூடா டிகிரி காபி கிடைக்குமா?’, ‘ஐ லைக் ஒன்லி ட்யூட்டி ·ப்ரூட்டி ஐஸ்க்ரீம்’, ‘எலும்பு இல்லாம என்னய்யா சிக்கன்! செட்டி நாட்டு கோழி மாதிரி வருமா?’ என்று விதவிதமாய் மெனு கேட்டு ருசிப்பவர்களுக்கு இது ஏற்ற இடம். அண்டார்டிகா பெங்குயின் முதல் ஆர்க்டிக் பனிக்கரடி வரை சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அனைத்து வகையறாவும் எப்படியெல்லாம் சமைக்கமுடியுமோ அனைத்தும் ஒருங்கே பரிமாறுவார்கள்.

    வெளியில் வந்தால் நாஜிகளினால் கொல்லப்பட்டவர்களுக்கான ‘Holocaust’ நினைவுச்சின்னம். ஆஸ்ஷ்விட்ச் உட்பட ஏழு இடங்களில் விஷவாயு செலுத்தி பலியானதன் குறியீடாக ஏழு கண்ணாடி கோபுரங்கள். தப்பித்தவர்களின் நேரடி அனுபவங்களில் இருந்து சில மேற்கோள்கள், நேரடியாக பார்த்தவர்களின் சாட்சிக் குறிப்புகள், காலவரிசை, ஹிட்லரின் செய்முறை என்று உறைய வைக்கும் நினைவாலயம்.

    இன்னுமொரு நாள் இருக்கிறதா?

    கடல்வாழ் உயிர்காட்சிசாலை, விலங்கியல் பூங்கா, அருங்காட்சியகம் போன்றவை உலகத்தரமானது. உங்களின் வெறுப்பிற்கேற்ப எதைத் தவிர்க்க வேண்டுமோ அதை விடுத்து ஏதாவது ஒன்றுக்கு செல்லலாம்.

    அட… நாள்களை எண்ணாதே! ரசிக்க வேண்டியதை நின்று நிதானமாகப் பார்த்துக் கொள்வோம் என்கிறீர்களா?

    மார்த்தாவின் பழரசத் தோட்டம் என்னும் ரசமான பெயருடைய Marthas Vineyard அல்லது நான்ட்டுக்கெட் தீவுகளுக்கு கடல் வழியாக கப்பல் பயணத்தில் சென்றடையலாம். வெயிலில் திராவிடனாகும் வரை காயலாம். கடற்கரையோரமாக சைக்கிளில் சுற்றலாம். நகரத்தின் நச்சுப்புகையும் அவசர மனிதர்களும் விரட்டல் மனப்பானமையும் ·பாஸ்ட் ·புட் உணவும் இல்லாமல் கிராமத்தின் அன்னியோன்மும் தீவின் தனிமையும் மலையின் குளிரையும் மணல் ஒட்டிய கால்களுடன் மகிழலாம்.

    வடக்கு பக்கமாக சென்றால் கோடை காலத்தில் கூட பனியை தன்னகத்தே வைத்துக் கொண்டிருக்கும் வாஷிங்டன் மலை. நன்றாக வண்டியோட்டுவேன் என்பவர்கள் கூட நடுங்கிக் கொண்டே வண்டியோட்டும் ஒரு வழிப்பாதை மலையேற்றம். காரோட்டி திகிலில் இன்புறாவிட்டால், சிக்குபுக்கு ரயில் பயணம். காட்டுவழிப் போக ஆயிரம் பாதைகள். வரைபடங்களும் கொடுத்து விடுவதால் ‘ப்ளேர் விட்ச் ப்ராஜெக்ட்’ போல் பயப்படத் தேவையில்லை. ஆற்றோடு துடுப்பு போட்டு துள்ளலாம். ஏரி நீரில் ஜெட் ஸ்கீயும் பாயலாம்.

    ஊர் சுற்றி விட்டு ஏறக்கட்டும்போது பாஸ்டன் ட்ரினிட்டி தேவாலயத்திலும் நியு இங்கிலாந்து மஹாலஷ்மி கோவிலிலும் சொல்லிக் கொண்டு போக மறந்து விடாதீர்கள்.

    நண்பரின் பாஸ்டன் புகைப்படங்கள்


    | |