True Star – Maa Sivakumar

இந்த வாரம் நான் தமிழ்மண நட்சத்திரமாக இருந்தாலும், பரவலான பதிவுகளாகப் போட்டுக் கலக்கிக் கொண்டிருப்பவர் மா சிவகுமார்.

அவருடைய பதிவுகளைப் படிக்க:

  • எது ஆடம்பரம்?
  • உடல் பருமனைக் குறைக்க
  • பொதுவுடமை சமூகம் சாத்தியமா
  • எங்கே போகிறோம் (கம்யூனிசம்)
  • பொதுவுடமை அல்லது உடோபியா
  • கம்யூனிசம் – என் பார்வையில் :: சந்தையும் சுயநலமும்
  • தாலிடோமைடு (Thalidomide)
  • மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள்
  • பெண்களை “விற்கிறார்கள்”
  • இந்தியாவின் மதச்சார்பின்மை
  • தகவல் தொழில்நுட்பத் துறையில் வாய்ப்புகள்
  • எழுத்து :: வலைப்பூ எழுத்தாளர்களின் அந்த முதிர்ச்சி, உழைப்பு, வளத்தை நான் பார்ப்பது டிபிஆர் ஜோசப், ரோஸா வசந்த், கைப்புள்ள, முத்து தமிழினி ஆகியோரின் பதிவுகளில். பத்ரியின் ஆய்வு செய்து எழுதப்படும் பதிவுகளிலும், கவிதாவின் சமூகப் பார்வைகளும், டோண்டு ராகவனின் அனுபவப் பாடங்களும் கவர்ந்து இழுத்தாலும் வலைப் பதிவு என்ற நிலையைத் தாண்டி விடவில்லை அவை.
  • பின்னூட்ட மட்டுறுத்தல் தேவையா
  • வாழ்க்கை

    செம வேகம்… படிச்சுட்டு வாங்க :-D)


    | |

  • Chitti – Lifesketch

    ‘சிட்டி’ பெ. கோ. சுந்தரராஜன்
    பிறப்பு: ஏப்ரல் 20, 1910
    மறைவு: ஜூன் 24, 2006

    வாழ்க்கை

  • திரைப்பட விமர்சகர்
  • பட்டதாரி ஆசிரியர்
  • அகில இந்திய ரேடியோ வானொலி இதழ்ப் பொறுப்பாசிரியர்
  • அ.இ.ரேடியோ முதுநிலை நிருபர்
  • வானொலி பணி நிறைவு: 1968
  • மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக சோ. சிவபாதசுந்தரத்துடன் இணைந்து பணியாற்றியவர்.
  • 1875இல் “ஆதியூர் அவதானி” – முதல் தமிழ்க் கவிதை நூலை வெளியிட்டவர் (சிவபாதசுந்தரத்துடன் கண்டுபிடித்து வரலாற்று முறையிலான முன்னுரை எழுதி 1994இல் வெளியானது)

    விருதுகள்

  • ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டில் இந்தியப் பிரதமரால் கௌரவிக்கப்பட்ட தமிழறிஞர்
  • பிரபல மணிக்கொடி எழுத்தாளர்
  • 1989இல் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ‘ரோல் ஆஃப் ஹானர்’ விருது வழங்கப் பெற்றவர்.
  • ‘தமிழ் சிறுகதை: வரலாறும் வளர்ச்சியும்’ – சோ சிவபாதசுந்தரத்துடன் எழுதிய நூலுக்கு ‘இலக்கியச் சிந்தனை’ விருது பெற்றவர்.

    நூல்கள்

  • அந்தி மந்தாரை (சிறுகதைத் தொகுப்பு)
  • சில விஷயங்கள் (நகைச்சுவைக் கட்டுரைகள்)
  • கண்ணன் என் கவி (கு.ப.ரா.வுடன் சேர்ந்து பாரதியார் படைப்புகள் பற்றி எழுதிய திறனாய்வு)
  • தமிழ் நாவல் நூற்றாண்டு வளர்ச்சி (சிவபாதசுந்தரத்துடன் சேர்ந்து எழுதிய இலக்கிய வரலாறு)
  • நடந்தாய் வாழி காவேரி (தி ஜானகிராமனுடன் சேர்ந்து எழுதிய பயணநூல்)

    தமிழ் மொழிபெயர்ப்புகள்

  • கே ஏ நீலகண்ட சாஸ்திரி
  • Verrier Elwin
  • Lester Brown
  • JS Pruthi
    ஆகியோர் நூல்கள்

    ஆங்கிலப் படைப்புகள்

  • தி லைஃப் ஆஃப் சத்தியமூர்த்தி
  • தி பரமாச்சார்யா

    | |

  • Chitti Anjali – Narasayya

    சிட்டி என்னும் சிரிப்பாளி – நரசய்யா

    ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்த இவரை ஈர்த்த ஆங்கில எழுத்தாளர்கள் பி.ஜி. வுட்ஹௌவுசும் ஜி.கே. செஸ்டர்னும்தான். ஆங்கிலத்தில் ஹாஸ்யம் கலந்த கட்டுரைகளை 1930ல் பச்சையப்பன் கல்லூரி நாட்க்ளிலேயே எழுதியிருக்கிறார்.

    தன்னை ‘சர்க்கஸில் வரும் கோமாளி‘ என்று வருணித்துக் கொள்ளும் சிட்டி, அப்படித்தான் வாழ்க்கையிலும் இருந்தார்.

    சாலிவாஹனன் (வி.ரா. ராஜகோபாலன்) இவ்வாறு கலாமோஹினியில் குறிப்பிட்டிருந்தார்.

    “இவர் ஒரு பொல்லாத பேர்வழி என்று இவரது தோற்றத்திலிருந்தே தெரிகிறதல்லவா? பார்வைக்கு பரம சாது போலிருந்தாலும் பரிகாசம் என்று வந்துவிட்டால், போதும். படாதபாடு படுத்திவிடுகிறார். ஆங்கில இலக்கியத்தில் செஸ்டர்டன் என்பவர் கையாண்டதைப் போன்று கண்ணியமான பரிகாசத்தை இவர் தமிழில் கையாள்வது நிச்சயமாக ஆறுதலளிக்கக் கூடிய ஒரு விஷயம்தான்” (கலாமோஹினி :: 1943)

    ஆங்கில எழுத்தாளர் ஸ்டீஃபன் லீ காக் நகைச்சுவையைப் பற்றிச் சொல்லும்போது, ‘நகைச்சுவை எவரையும் புண்படுத்தக் கூடாது’ என்று கூறுவார். அவரைப் போலவே சரித்திர எழுத்தாளரும் நகைச்சுவை எழுத்தாளருமான சிட்டி இதை முற்றிலும் கடைபிடித்தவர்.

    அவர் வாழ்க்கை சிரமம் இல்லாமல் இருக்கவிலை; ஆனால் எந்த சிரமம் வந்தாலும் அதை ஒரு புன்னகையுடன் ஏற்றுக் கொள்ளும் திறமை அவரிடம் இருந்தது. அதேபோல மற்றவர்களுக்கு ஏதாவது கஷ்டம் இருந்தபோதெல்லாம் அவர்கள் இவரிடம் வந்துப் பேசினாலே அவை தீர்ந்து விடுமெனவும் நம்பினார்கள்.

    சமீபத்தில் அவர் ஒரு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனியில் இருந்தபோது கூட, இந்த வயதிலும், அவரது நகைச்சுவை சற்றும் குறையாத நிலையில் அவரைப் பார்த்த சிறந்த மருத்துவர்கள் அவரது “பாசிடிவ் அவுட்லுக்” என்பதைப் பற்றி என்னிடம் கூறினார்கள். அதில் ஒருவர், சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர், “இந்தப் பெரிய மனிதருக்கு சிகிச்சை வெற்றியடைந்ததற்குக் காரணம் அவரது சிறந்த மனோதிடம்தான்” என்றார். இந்த மனோதிடம் நகைச்சுவையாளர் அனைவருக்கும் உண்டென்பதுதான் உண்மை!

    (டிசம்பர் 2004)


    | |

    Chitti PG Sundarrajan – Memoir

    சிரிக்க வைக்கிறார் சிட்டி – திருப்பூர் கிருஷ்ணன்

    விஷமம், நையாண்டி, கிண்டல், கேலி, நகைச்சுவை ஆகிய எல்லா அர்த்தங்களையும் புலப்படுத்துகிற மாதிரி தமிழில் ஒரே சொல் உண்டா? உண்டு.

    அந்த சொல்தான் ‘சிட்டி!’ தி.ஜா.வின் நெருங்கிய நண்பராயிருந்த எழுத்தாளர் சிட்டி பி.ஜி. சுந்தரராஜன்.

    வெறும் 94 வயது ம்ட்டுமே ஆன குறும்புக்கார இளைஞர்! அவருடன் அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு மினி பேட்டி:

    கே: நீங்கள் எழுதிய முதல் படைப்பு என்ன? எந்த வயதில் எழுதினீர்கள்?

    ப: என் ஐந்து வயதிலேயே அதை எழுதி விட்டேன். அதன் சிறப்பு காரணமாக, எத்தனையோ வருஷங்களுக்குப் பிறகு, இன்றுகூட ஏராளமான தமிழர்கள் அந்தப் படைப்பை ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள். அனா, ஆவன்னா ஆகிய உயிரெழுத்துகள் தான் அந்தப் படைப்பு!

    கே: முதல் கதையை எழுதியபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

    ப: ஒருவேளை என் கதைக்கு நோபல் பரிசு கிடைத்து விட்டால், பரிசை எந்த வாக்கியங்களால் நிராகரிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்!

    இப்படித்தான் பேசிக் கொண்டிருப்பார் சிட்டி. சிடுமூஞ்சிச் சிகாமணிகள் முகத்தில் கூட, ஒரு சின்னப் புன்னகைக் கீற்றையாவது மலரச் செய்கிற சாமர்த்தியம் அவருக்கு உண்டு.

    சிட்டி, தி.ஜா.வின் ‘அம்மா வந்தாள்‘ நாவல் பற்றி என்னிடம் ஒரு கமெண்ட் அடித்தார். அதன் கதாநாயகியான அலங்காரத்தம்மாள் கள்ளக் காதலனுடன் உறவாடுபவள். அவள் தன் பாவத்தைத் தொலைக்க, கடைசியில் தன்னந்தனியே காசிக்குப் போக நினைப்பதாய் நாவல் முடியும்.

    ‘காசிக்குப் போகும்போது தன் கள்ளக் காதலனையும் கூட்டிக் கொண்டு போவதாகத்தான் அவர் நாவலை முடித்திருக்க வேண்டும். அலங்காரத்தம்மாளுக்கு அந்த அளவுக்குக் கொழுப்பு ஜாஸ்தி!’ என்றார் சிட்டி. இதை தி.ஜா.விடம் சொன்னேன். அவர் வெகு நேரம் சிரித்துக் கொண்டிருந்தார்.

    சிட்டியின் தனி சிறப்பு, பேசும்போதே சடாரென்று அழகழகான ஆனால் விஷமம் நிறைந்த குட்டிக் கதைகளை உண்டு பண்ணிச் சொல்வது. கும்பகோணத்திலிருந்து ஓர் எழுத்தாளர் வந்தார். சிட்டியைப் பார்க்க விரும்பினார். அழைத்துச் சென்றேன்.

    சிட்டி என்னிடம் ‘உனக்கு ராமாயணம் தெரியுமோ?’ என்று ஆரம்பித்தார். எனக்கு ஜாக்கிரதை அதிகம். ஏதோ கொஞ்சம் தெரியும் என்று தயக்கத்தோடு சொல்லி வைத்தேன். சிட்டி தன் ராமாயணத்தை ஆரம்பித்தார்.

    “ராமன், சீதை, லட்சுமணன் மூவரும் காட்டில் போய்க் கொண்டிருந்தார்கள். திடீரென லட்சுமணன் “அண்ணா, நான் ஏன் உன்னுடன் வர வேண்டும்? உன்னைத்தானே அப்பா காட்டுக்குப் போகச் சொன்னார்? நீ மனைவியோடு வந்திருக்கிறாய். நான் ஊர்மிளையை விட்டு வந்துவிட்டேன். சே!” என்று சலித்துக் கொண்டு திரும்பி நடந்தான்.

    சீதை “பிராணநாதா! நான் இதுவரை படித்த எந்த ராமாயணத்திலும் இது போன்ற சம்பவம் வந்ததில்லையே!” என்றாள்.

    “கொஞ்சம் பொறு. புரியும்” என்றார் ராமர். சற்று நேரம் சென்றது. லட்சுமணன் ஓடோடி வந்தான்.

    “அண்ணா, நான் ஏன் அப்படிப் பேசினேன் என்று எனக்கே தெரியவில்லையே! நானே விரும்பித்தானே உன்னுடன் வந்தேன். உன்னைப் பிரிந்து என்னால் எப்படி இருக்க முடியும்!” என மன்னிப்புக் கேட்டுக் கொண்டு உடன் நடந்தான்.

    ராமன் சீதையிடம் “புரிந்ததா?” என்று கேட்டார்.

    “புரியவில்லையே!” என்றாள் சீதை.

    “நாம் இதுவரை நடந்து வந்த பூமி கலியுகத்தில் கும்பகோணம் என்று ஷேத்திரமாகப் போகிறது. அது தன் சுபாவத்தை இப்போதே காட்ட ஆரம்பித்து விட்டது!” என்றார் ராமர்!”

    (வந்த் எழுத்தாளர் வெகு நேரம் சிரித்து அவர் கண்ணில் நீர் கட்டிக் கொண்டது. இந்தக் கதையில் கும்பகோணம் என்ற ஊர், வரும் எழுத்தாளரைப் பொறுத்து திருநெல்வேலி, மதுரை என்று வித்விதமாகப் பெயர் மாற்றம் கொள்ளும்!)

    சத்தியவான் சாவித்திரியை நினைவுபடுத்தும் வகையில் ‘காரடையான் நோன்பு’ என்று ஒரு பண்டிகை. பெண்கள் வெல்ல அடை தட்டி அந்தப் பலகாரத்திக் கடவுளுக்குப் படைப்பர்கள். பின் மங்கலச் சரடைக் கழுத்தில் கட்டிக் கொள்வார்கள். அந்த அடை சிட்டிக்குப் பிடிக்காது. அதை எதிர்த்து அவர் ‘நவீன சாவித்திரி’ என்று ஒரு கதை உண்டு பண்ணியிருக்கிறார்!

    கணவன் உயிரைத் தருமாறு எமனிடம் வேண்டினாள் சாவித்திரி. எமன் தரமுடியாது என்று கறாராகச் சொல்லிவிட்டான். வேறு வழியில்லாத அவள், ஒரு யுக்தி செய்தாள். பலகாரம் சாப்பிட்டுச் செல்லுமாறு எமனை உபசரித்து இந்த் அடையைச் செய்து போட்டாள். சாப்பிட்டான் எமன். உலகில் இப்படியும் ஒரு பலகாரமா என்று தாளாத துக்கத்தில் எமன் உயிரை விட்டுவிட்டான். அதனால் பிழைத்தான் சத்தியவான்!

    (பெண்கள் கௌத்தில் கட்டிக் கொள்ளும் சரடு ஒருபுறமிருக்க, இந்தக் கதையைக் கேட்பவர்கள் சிட்டி விடும் சரடை எண்ணிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள்!)

    சிட்டி பரமாச்சாரியாளின் பக்தர். இலக்கியத்தில் பழங்கால இரட்டைப் புலவர்கள் போல், இரட்டையரில் ஒருவராக இயங்குவஹிலேயே மகிழ்ச்சி காண்பவர்.

  • கு.ப.ரா.வுடன் ‘கண்ணன் என் கவி’
  • தி.ஜா.வுடன் ‘நடந்தாய் வாழி காவ்ரி
  • சிவபாத சுந்தரத்துடன் நாவல், சிறுகதை வரலாறுகள்
  • பெ.சு. மணியுடன் வ.ரா. வரலாறு

    எனச் சிட்டி இணைந்து படைத்த நூல் ஒவ்வொன்றும் பெரும் சாதனை.

    பி.ஜி. உட்ஹவுஸ் தனிப்பட்ட முறையில் சிட்டிக்கு எழுதிய கடிதம் ஒன்று சிட்டியிடம் உண்டு. வேளாண் விஞ்ஞானி, எம்.எஸ். சுவாமிநாதனின் மாமியாரான எழுத்தாளர் கிருத்திகாவும் சிட்டியும் பைண்டிங் நோட்டுப் புத்தகங்களில் எழுதிக் கொண்ட மிக நீண்ட கடிதங்கள் இலக்கிய வரலாறாய்த் திகழ்பவை. எழுத்தாளர் நரசய்யா எழுதிய, ‘சாதாரண் மனிதன்‘ என்ற சிட்டியைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல் அவர் பெருமையைப் பேசுகிறது.

    தில்லி, பாண்டிச்சேரி போன்ற சில இடங்களில் சில கூட்டங்களுகு நானும் சிட்டியும் ஒன்றாகப் போயிருக்கிறோம். அப்போது அவருடன் த்ங்கிக் கழித்த நாட்கள் நான் மலர்ச்சியுடன் சிரித்துச் சிரித்து வாழ்ந்த பொன்னானா நாட்கள். அறிவாளிகள் என்றால், நகைச்சுவை உணர்வற்று சீரியஸ் ஆகத்தான் இருப்பார்கள் என்ற பொதுவிதிக்குச் சிட்டி விதிவிலக்கு. எந்த சோக்த்தாலும் பாதிக்கப்படாத அவரது அபாரமான நகைச்சுவை உணர்வுக்கு இயற்கை தந்த் அன்புப் ப்ரிசுதா அவருடைய முதிய வயது.

    டிசம்பர் 2003
    சுவடுகள் – திருப்பூர் கிருஷ்ணன்
    வெளியீடு: திருப்பூர் குமரன் பதிப்பகம்

    அஞ்சலிக் குறிப்புகள்: பத்ரி | நா கண்ணன்


    | |

  • Chat Meet – Chokkan

    விகடனில் வல்லினம்… மெல்லினம்… இடையினம் என்று தற்கால கணினியாதிக்கத்தை நுட்பமாக எழுதுபவர். தினம் ஒரு கவிதை தொடங்கி விகடன் தொடர் வரை எது எடுத்துக் கொண்டாலும் சிரத்தையும் உழைப்பும் பளிச்சிடும். சொக்கனுடன் மின்னஞ்சல் பேட்டி:

    1. அயோத்தி, வீரப்பன், ஹமாஸ், ருஷ்டி என்று பிரச்சினையை புத்தகமாக்கி சுமக்கிறீர்களே… சுவாரசியமாய் இருக்கிறாய்;பயமாய் இருக்கிறது? என்பது போல் மிரட்டல் ஏதாவது?

    கதையல்லாத படைப்புகளில் அதிக கவனம் செலுத்துகிறவர்கள் எல்லோருக்கும், இந்தப் பிரச்னை ஏதேனும் ஒரு ரூபத்தில் வந்தே தீரும் என்று நினைக்கிறேன்.

    என்னைப்பொறுத்தவரை, எந்தப் பிரச்னையிலும் சார்பு நிலை எடுக்காமல் எழுதுவதில் கவனமாக இருக்கிறேன். ஆகவே, இருதரப்பு வாதங்களையும் (சில சமயங்களில் ஊகங்களையும்கூட) தெளிவாக, நேர்மையாக முன்வைத்துவிடுவதால், அயோத்திபோன்ற சர்ச்சைக்குரிய தலைப்புகளைக்கூட, முழுமையாகவும் நடுநிலைமையோடும் பதிவு செய்வது சாத்தியமாக இருக்கிறது.

    மற்றபடி, படைப்பாளிபற்றிய முன்முடிவுகளோடு படைப்புகளை அணுகுகிறவர்கள் சிலர் எப்போதும் இருக்கிறார்கள். அதுபற்றி நாம் எதுவும் சொல்வதற்கில்லை, செய்வதற்கில்லை.

    2. இருபது, முப்பது வருடம் முன்புவரை பிரபலமான தமிழ் எழுத்தாளர் என்றால் நாவல் / சிறுகதை எழுதுபவர். இன்று இது மாறி இருக்கிறதா? உங்களை எப்படி இந்த காலச்சக்கரம் பாதித்திருக்கிறது?

    புனைவு, அபுனைவு ஆகிய இருவகைகளிலுமே எழுத்தாளரின் முக்கியத்துவம் குறைந்து, படைப்புக்கு அதிக கவனம் கிடைக்கத் தொடங்கியிருப்பதாக நினைக்கிறேன்.

    அதாவது, இதற்குமேல் ‘என்னுடைய ரீடர்ஸ்’ என்று சொந்தம் கொண்டாடிக்கொண்டு ஒரு சூப்பர் ஸ்டார் எழுத்தாளர் வரமுடியும் என்று தோன்றவில்லை. படைப்பில் தரம் இல்லாவிட்டால், எத்தனை பெரிய எழுத்தாளராக இருந்தாலும் நிராகரிக்கப்பட்டுவிடுகிற சாத்தியங்கள்தான் அதிகமாகத் தெரிகின்றன. இது ஆரோக்கியமான முன்னேற்றம்தான்.

    நாவல் / சிறுகதைகளைப் பொறுத்தவரை அவற்றைக் கதைகளாகப் படித்து ரசித்துக்கொண்டிருந்த பெரும்பான்மையினர், இப்போது அதேமாதிரியான, சொல்லப்போனால் இன்னும் அதிகத் திருப்பங்களோடு கூடிய சம்பவங்கள், புனைவுக் காட்சிகளைத் தொலைக்காட்சிவழியே பார்த்துவிடுகிறார்கள். அநேகமாக எல்லாப் பிரபல இதழ்களும் புனைவு சார்ந்த படைப்புகளுக்குத் தரும் முக்கியத்துவத்தை வெகுவாகக் குறைத்துக்கொண்டுவிட்டதை இதற்குச் சான்றாகச் சொல்லலாம்.

    ஆகவே, சம்பவங்களுக்கு அதிக முக்கியத்துவம் தராத, மொழியழகில் கவனம் ஈர்க்கும் புனைவுப் படைப்புகளுக்குதான் இனி வரவேற்பு இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

    3. ஒரு புத்தகம் எழுத எத்தனை நாள்/நேரம் ஆகிறது? வீட்டையும் வேலையையும் வாசகனையும் எப்படி மேய்க்கறீர்கள்? முழு நேர புத்தக ஆசிரியராகக் காலந்தள்ள முடியுமா?

    புத்தகம் எழுதுவதற்கான கால அளவு, முழுக்க முழுக்க, நாம் எடுத்துக்கொள்ளும் தலைப்பைப் பொறுத்ததுதான். ஒரு வாரத்தில் எழுதியதும் உண்டு, மாதக்கணக்கில் நீட்டி முழக்கியதும் உண்டு.

    நேர நிர்வாகம்மட்டும் புரிந்துவிட்டால் வீடு, வேலை, வாசகன் ஆகிய மூன்றையும் கட்டி மேய்ப்பது அப்படியொன்றும் சிரமமில்லை. காலம்காலமாக எல்லா எழுத்தாளர்களும் செய்துவருகிற காரியம்தானே ஸ்வாமி? 🙂

    முழு நேர எழுத்தாளராக இருப்பது சாத்தியம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஆனால், துணிந்து ஆற்றில் இறங்கிப் பார்க்காதவரை நிச்சயமாகச் சொல்வதற்கில்லை, இந்தக் கேள்வியைமட்டும், தகுதியுள்ள இன்னொருவரிடம் ரீடைரக்ட் செய்துவிடுங்கள்!

    4. புத்தகம் வெளிவந்ததின் ஆய பயன், ‘the special moment’ என்று எந்த தருணத்தை சொல்வீர்கள்?

    அபூர்வமாகக் கிடைக்கும் சில வாசகர் கடிதங்கள்!

    காரணம், வீடுமுழுதும் சமையலறைதவிர எல்லா இடங்களிலும் புத்தகங்களை நிரப்பிவைத்திருக்கும் நான், எந்த எழுத்தாளருக்கும் வாசகர் கடிதம் எழுதியதில்லை. காரணம், புத்தகத்தைக் காசு கொடுத்து வாங்கிப் படிப்பதே அந்த எழுத்தாளருக்குச் செய்யும் கௌரவம் என்று நினைக்கிற படுசோம்பேறி நான்.

    அப்படியிருக்கையில், என்னுடைய புத்தகத்தைப் படித்துவிட்டு, யாரோ ஒருவர் நேரம் செலவழித்துக் கடிதமோ, மின்னஞ்சலோ எழுதுகிறார் என்று நினைக்கையில், நிஜமாகவே மெய்சிலிர்க்கிறது.

    5. விரும்புவதை எழுதுவதற்கு நூல்கள்; வாசகனின் விருப்பத்திற்கு வளைவதற்கு பத்திரிகைத் தொடர்கள் – ஸ்டேட்மண்ட் சரியா…?

    பத்திரிகைத் தொடர்களில் எல்லாவிதமான விஷயங்களையும் எழுதமுடிவதில்லை என்பது உண்மைதான். அதோடு ஒப்பிடுகையில், நேரடிப் புத்தகங்களில் கனமான தலைப்புகளைக் கையாளமுடிகிறது.

    ஆனால், புத்தகங்களை, அவை பேசும் தலைப்புகளுக்காகவே காசு கொடுத்து வாங்குகிறார்கள் என்பதையும் கவனிக்கவேண்டும். பத்திரிகைத் தொடர்களின் விஷயம் அப்படியில்லை. எல்லாவிதமானவர்களுக்கும் பொருந்தும்படியாக எழுதவேண்டியிருக்கிறது, கலகலப்பான உதாரணங்கள், புகைப்படங்கள், ஓவியங்கள், துணுக்குச் செய்திகளில் கவனம் கவரவேண்டியிருக்கிறது. அதேசமயம், தகவல் ஒழுங்கு சிதறிவிடாமலும் சொல்ல வந்த விஷயம் நீர்த்துப்போய்விடாதபடியும் கவனித்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.

    இப்படி ரொம்ப மெனக்கெட வேண்டியிருந்தாலும், பத்திரிகைத் தொடர்களின் வீச்சு அதிகம் என்பதால், No Complaints!

    ***

    என். சொக்கன்
    20 06 2006


    | |

    Absolut Navya Torture

    82 குப்பிகளை ஒளிச்சு வச்சிருக்காங்க (ஆட்டத்தை ஏமாற்ற மாதிரிப் படம் கீழே உள்ளது). கொடுக்கப்பட்ட நேரத்தில் என்னால் 20-ஐ மட்டுமே சுட முடிந்தது. உங்களால் அத்தனையும் கண்டுபிடிக்க முடியுமா?

    அருமையான போதை ஏற்றும் ஆட்டம். (துப்பு காட்டியவர்)


    பாரதிராஜாவை ‘கல்லுக்குள் ஈர’த்துடன் மூட்டை கட்டியது போல் ‘செண்ட்டி சோகர்சேரனையும் எப்பொழுதோ இயக்கத்தோடு நிறுத்தி வைத்திருக்க வேண்டும். இப்போது நிலைமை எல்லை மீறிவிட்டது 🙂


    படத்தைப் பாருங்கள்…
    கவிதை தாருங்கள்…

    என்னோட சின்னஞ்சிறு கதை:

    சென்னைக்கு தொலைபேசி.

    ‘என்னம்மா எப்படி இருக்கே?’

    ‘சொல்லுடா… இங்கேயிருந்து என்ன வேணும்?’

    ‘கோபுரம் சீயக்காய் தூள் வேணுமே… போஸ்ட்டில் அனுப்புகிறாயா?’

    வாசல் கதவு தடதடத்து அதிர்ந்தது.

    ‘அம்மா… அப்புறம் பேசறேன்.’

    ஓடிப் போய் திறந்தேன். கைதானேன்.

    தொடர்புள்ள செய்தி: அமெரிக்க நகரில் வானுயர் கட்டிடங்களை தாக்க முயற்சி


    | |

    Chakkaa Maara

    கப்பி பய அழைத்ததற்கு நன்றி. என்னுடைய ஆறு:

    சேவை நிறுவனங்களுக்கு வருட சம்பளத்தில் ஒரு சதவிகிதமாவது மேற்கத்திய நாடுகளில் ஈந்து வருகிறார்கள். தேவை உள்ளவர்களுக்கு உதவுவதை மாதாந்திர செலவாக செய்கிறார்கள். கத்ரீனா, நிலநடுக்கம் போன்ற அழிவுகளின் சமயம் மட்டும் அல்லாமல், எப்போதும் உதவிக் கொண்டே இருக்கும் மனம் கொடுக்க இறைவனை வேண்டுகிறேன்.

    1. Sneha India – How You Can Help: தற்கொலையின் விளிம்பில் இருப்பவர்களை காக்கும் அமைப்பு. தொலைபேசியில் உறுதுணை ஆலோசனை, விழிப்புணர்வு என்று கடந்த பதினேழு ஆண்டுகளாக சென்னையில் செயல்பட்டு வருகிறது. ஸ்னேஹாவைத் துவக்கிய லஷ்மி விஜயகுமார், தற்போது சன் டிவியிலும் மனநலக் குறிப்புகளை ‘வணக்கம் தமிழக’த்தில் சொல்லி வருகிறார். (மறை வெளியீடு: என்னுடைய சகோதரன் ஸ்னேஹாவில் தன்னார்வலராகவும் பொறுப்பாளராகவும் இயங்கி வருகிறார்.)
    2. DISHAA.ORG: பிட்ஸ், பிலானியிலும் சாந்தோம் பள்ளியிலும் இணைந்து படித்த சகாவினால் நடத்தப் படுகிறது. எளிய முறையில், மிகமிகக் குறைவான நிர்வாகச் செல்வுகளுடன் சேவை நிறுவனங்களுக்கு உதவுகிறார்கள்.
    3. AID – Home: நேரடியாக இவர்களின் நடவடிக்கையைக் காணும் வாயப்பு கிடைத்திருக்கிறது. தன்னார்வலர்களில் பலர் மேற்கத்திய நாடுகளில் இருந்து, உவப்புடன் கிராமப்புறங்களில் தொண்டாற்றி வருகின்றனர்.
    4. Udavum Karangal: அனைவரும் அறிந்த, நம்பிக்கையான அமைப்பு. நம்முடைய பணம் எவ்வாறு சென்றடைகிறது என்பதை தொலைபேசியில் உரையாடவும் செய்யலாம்.
    5. Save the Children: Helping Children in Poverty and Children in Crisis: நான் வேலை பார்க்கும் நிறுவனம் போல் பல நிறுவனங்களில் செஞ்சிலுவை மற்றும் சேவ் தி சில்ரன் போன்ற அமைப்புகளுக்குக் கொடுக்கும் உதவியை இரட்டிப்பாக்குமாறு matching செய்கிறார்கள்.
    6. Child Aid Foundation: குழந்தைத் தொழிலாளிகளைத் தவிர்க்க உதவுகிறார்கள். நண்பர்களில் பலர் ஆர்வமுடன் பங்கெடுக்கும் அமைப்பு.


    ஆறு மேற்கோள்கள்; மொழிபெயர்ப்பவருக்கு நன்றிகள் 🙂

    1. He wrapped himself in quotations- as a beggar would enfold himself in the purple of Emperors.
      – Rudyard Kipling
    2. Never interrupt your enemy when he is making a mistake.
      – Napoleon
    3. In the part of this universe that we know there is great injustice, and often the good suffer, and often the wicked prosper, and one hardly knows which of those is the more annoying.
      – Bertrand Russell
    4. There is a luxury in self-reproach. When we blame ourselves we feel that no one else has a right to blame us.
      – Oscar Wilde
    5. Before we set our hearts too much upon anything, let us examine how happy they are, who already possess it.
      – Francois de la Rochefoucauld
    6. A witty saying proves nothing
      – Voltaire


    | |

    Tamil Movie Songs f***in rock maan!

    விவிதபாரதியில் தமிழ்ப் பாடல்கள் ஒலிபரப்பினால், வானொலி வீட்டில் ஒலித்துக் கொண்டேயிருக்கும். காலையில் இத்தனை மணிக்கு இன்ன விளம்பரம் என்று அத்துப்படி. சில விளம்பரங்களைக் கேட்டால், பள்ளிக்கூடத்துக்கு வெகு தாமதம் என்று வயிற்றைக் கலக்கும்.

    விளம்பரதாரர் நிகழ்ச்சியில் ‘உங்கள் பிரபு’ என்று அட்டகாசமாய் எதிரொலியுடன் சொல்வார்கள். ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்திற்கு ‘எது பிடித்த பாடல்’ என்று போட்டி வைப்பார்கள். ‘வாடீ என் கப்பக்கிழங்கே’ பாடலைத் தடை செய்தாலும், ‘அலைகள் ஓய்வதில்லை’ வெளிவந்த அன்றே ‘ஆயிரம் தாமரை மொட்டுகள்’ பலமுறை ஒலித்தது.

    சாயங்கால நிகழ்ச்சி ரசனையாக ‘நிலாப் பாடல்கள்; சகலகலா வல்லவனில் இருந்து ‘அம்மன் கோயில் கிழக்காலே..’ ஒலித்த பின் அதன் தொடரும் பாடலாக சென்ற பாடலின் துவக்கத்தைப் படத்தின் தலைப்பில் கொண்ட திரைப்படத்திலிருந்து ‘சின்ன மணிக் குயிலே’; நாகேஷ், முத்துராமன் என்று ஒரு நடிகரின் பாடல்கள்; ஷைலஜா, சசிரேகா என்று ஒரு பாடகரின் தொகுப்பு; மெட்ராஸ், காசி என்று ஊர்களின் அணிவரிசை; இயக்குநர்களின் முத்திரைப் பாடல்கள்; ஒத்த சூழ்நிலை (அனைத்துப் பாடல்களும் ரேடியோ பதிவாக அல்லது மேடைக் கச்சேரியாக அல்லது எடக்கு மடக்கு எசப் பாட்டாக); ஒவ்வொரு நாளும், இன்று என்ன pattern என்று கண்டுபிடிப்பதே சுகம்.

    அடுத்த நாள் பரீட்சை இருந்தாலும் பாடல் ஒலிக்காவிட்டால் பாடம் ஓடாது. ‘இவனுக்கு இளையராஜா இசையமைத்தால்தான் சயின்ஸ் ஒப்பிக்கப் போறான்’ என்று கோபம் தெறித்தாலும், வானொலியை யாரும் நிறுத்தியதில்லை. தேனிசையாக மும்மதப் பாடலுடன் தொடங்கி, ‘புத்தம்புதுசு’ என்று புதுப்பட விளம்பரத்துடன் முடியும் விவிதபாரதியுடன் வாலிபம்.

    பாடலைப் பல முறை கேட்டு மட்டுமே இருப்பதால், காட்சியை வெள்ளித் திரையிலோ தூர்தர்சனிலோ பார்க்கும்போது சில சமயம் ஏமாற்றமும் பல சமயம் கற்பனைக்கேற்ற திருப்தியும் கிடைக்கும். பாடலே கேட்டிராமல் முதல் நாள் முதல் காட்சியில் படம் பார்த்த அனுபவம் நிறைய உண்டு. அதன் பின் மீண்டும் மீண்டும் பாடலைக் கேட்பது இன்னொரு ரகம்.

    ராஜாவின் பாடல் என்றால் கண்ணை மூடிக் கொண்டு காஸெட் வாங்கச் சொல்லுவேன். மாதத்திற்கு மூன்று/நான்கு இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள் வெளிவரும். கோவைத் தம்பி, ஆர் சுந்தர்ராஜன், விஜயகாந்த், ஆர்வி உதயகுமார், கங்கை அமரன் என்றால் ராஜா ஸ்பெஷலாக போட்டிருப்பார் என்பது நம்பிக்கை. சந்திரபோஸும் சங்கர்-கணேஷும் எப்பொழுதாவது ஓரிரு பாடல்களை முணுமுணுக்க வைப்பார்கள்.

    படித்த தெர்மோடைனமிக்ஸ் விதிகள் மறந்தாலும் தெம்மாங்குப் பாடல்களின் மெட்டும் வரிகளும் எங்கோ உட்கார்ந்து கொண்டிருக்கின்றன.

    என்றென்றும் அன்புடன் பாலா தான் அடிக்கடி இந்த மாதிரி பல்லவியும் சரணமும் நடத்துவார். பாடல் நடுவே வரும் சரணங்கள் இங்கே. படமும் பல்லவியும்???

    எல்லாமே மிகவும் விருப்பமான பாடல்கள். சோகம் ததும்பும் துக்கப்பாடல்கள் மிகவும் பிடிக்கும் என்றாலும், அழுது வடியாமல் இருக்க ஓரிரண்டு குத்துப் பாடல்களை சேர்த்துள்ளேன். ராஜாவாக ரொம்பி வழிந்ததில் இருந்து சிலவற்றை கழித்து காதல் டூயட் ஒன்றிரண்டை கூட்டி, தற்காலம் என்று சேர்த்து பாடல் மிக்ஸ் ரெடி:

    1. பாவை வண்ணம் கோவில் ஆகும்

      மாலை வண்ணம் கைகள் ஆகும்
    2. கொஞ்சம் மறைஞ்சு பார்க்கவா
      இல்ல முதுகு தேய்க்கவா

      சின்னக் காம்புதானே பூவை தாங்குது

    3. ‘கிருதாவை வைக்கச் சொன்னியே
      வெச்சேனே…

      மீசையத்தான் எடுக்கச் சொன்னியே
      எடுத்தேனே…

      பந்தான்னு நான் நெனச்சேன்
      என்னை பாகவதராக்கிப்புட்டியே

    4. நாயரு மேயராகும் எழுத்து மாறினா
      லோயரும் அப்பருதானே எழுத்த மாத்தினா
      சின்னச்சின்னத் தலையில் நீ எழுதும் எழுத்தில
      என்னன்னமோ நடக்குதிங்கே ஒண்ணும் புரியலே

    5. ஓடும் பொன்னும் ஒன்றாய் எண்ணும் இதயம் வேண்டுமே

      என்னை உன்னைக் கேட்டா வாழ்க்கைப் பயணம் போகுது?

    6. தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்
      கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே
      பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும்
      அந்த மேகம்தன்னில் ஏது நீ சொல்வாய் கண்ணா

      ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தரநிலவோ
      நாளும் நிலவது தேயுது மறையுது
      நங்கை முகமென்று யாரதை சொன்னது

    7. முத்தம் தரும் ஈரம் பதிந்திருக்கும்
      முல்லை இளம் பூவெடுத்து முகம் துடைக்கும்
      நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும்
      மேனியெங்கும் பூ வசந்தம்

    8. வயசோட வந்ததெல்லாம் வெளங்கலியே அப்போது
      விளங்காத கேள்விக்கெல்லாம் விடை வருதே இப்போது
      கருப்புமில்லே வெளுப்புமில்லே
      கண்ணுலதானே பேதமிருக்கு

    9. கங்கை நீயென்றால் கரை இங்கு நானடா

    10. கனவிலாடும் நினைவு யாவும் இனிய பாவம்


    | |

    Chat Meet – Peyarili

    இலங்கை-ஈழம் குறித்த என்னுடைய கேள்விகளுக்கு பதிலளித்த பெயரிலிக்கு நன்றி.

    இலங்கையை விட்டு நான் வெளியே வந்து பதினான்கு ஆண்டுகள். ஊருக்குப் போய் பத்தாண்டுகள். இந்நிலையிலே, ஈழம் குறித்த அண்மையநிகழ்வுகளின் நேரடி அனுபவம் என்னிடமில்லை. ஆக, அங்கே வாழ்ந்த கால உணர்தலும் தொடர்ந்து ஈழம் குறித்து அவதானிப்பதும் அங்கிருக்கும் நண்பர்களோடான தொடர்புமே கைவசமுள்ளவை. அதனால், இக்கேள்விகளுக்கு என்னைவிட இணையத்திலே பல ஈழ நண்பர்கள் மிகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் பதிலளிக்கலாம். இப்பதிவின் பின்னூட்டத்திலே பதில் தருவார்களென நம்புகிறேன்.

    1. தற்போதைய ஈழப் பிரச்சினை எந்தப் பாதையில் செல்கிறது?

    பொதுவிலே கண்காட்சிகளிற் கிணற்றுக்குள்ளே வண்டி ஓட்டுகின்ற பாதையிலேதானெனத் தோன்றுகின்றது. மேலும் கீழுமாக எந்நிலையிலும் சமனம் தப்பினாற் சரியுமென்ற ஆபத்தான பாதையின் கிணற்றைவிட்டு வெளிவராமல் ஓடிக்கொண்டிருக்கின்றதெனலாம். ஏதோவிதத்திலே பெயரளவிலே ஒப்பந்தமும் நடைமுறையிலே மறைமுகப்போருமான இந்தக்காலகட்டம் கடக்கப்படும். இவ்வாண்டுக்குள்ளே கடந்து ஒரு தெளிவான நிலை ஏற்படுமென்றே நினைக்கிறேன். தெளிவான நிலை என்றால், விரும்பப்படாத வெளிப்படையான போராகவே இப்போதைய காரணிகளை வைத்துப் பார்க்க எனக்குத் தோன்றுகிறது.

    2. சூடான் போன்ற படுகொலைகளும் ஈராக் போர் அநியாயங்களும் கூட இந்திய மற்றும் மேற்கத்திய ஊடகங்களில் பரவலான கவனிப்பைப் பெற்று ஐ.நா. தீர்வை எதிர்நோக்குகிறது. ஈழத்தில் இவ்வாறு தார்மீகக் கோபமும் ஒப்பந்தத்தை நோக்கிய பயணமும் எவ்வித செயல்பாடுகளினால் நிகழக்கூடும்?

    கவனிப்பு என்பது ஒவ்வொருவரினதும் ஈடுபாட்டினைப் பொறுத்துத் தோன்றுவது. இலங்கை குறித்து ஐநாவும் உலகவூடகங்களும் அறியாதனவல்ல. முதலிலே உலக அரங்கிலே இலங்கைப்பிரச்சனை குறித்த சரியான விளக்கம் உலக மக்களிடமும் முறையான அணுகுமுறை அரசாங்கங்களிடையேயும் ஏற்பட வேண்டும். மேற்கத்தைய ஊடகங்களுக்கு இலங்கை குறித்த ஈடுபாட்டுக்கான தேவை, சூடான், ஈராக் போல இல்லை. இந்திய ஊடகங்கள் – என்னைப் பொறுத்தமட்டிலே- இலங்கைப் பிரச்சனையிலே ஒரு சார்நிலைப்பாட்டினை எடுத்துக்கொண்டு செயற்படுகின்றன. இச்சார்நிலைப்பாடுக்கு இந்திய அரசும் விடுதலைப்புலிகளும் ஒரு வகையிலே தூண்டுதலாக இருக்கின்றனர். இலங்கைப்பிரச்சனையின் தீர்விலே தமக்கு ஈடுபாடிருப்பதாகக் காட்டிக்கொள்ளும் உலக அரசுகள் பலவற்றுக்கு தம் இலாபம் கருதிய நிலைப்பாடுகள் உண்டு. நோர்வே, ஐஸ்லாந்து தவிர்ந்த மிகுதி நாடுகளின் அரசுகள் இங்கே அடக்கம். இவ்வகையான நிலைப்பாடின் விளைவே, இலங்கைப்பிரச்சனையின் இரு தரப்புகளையும் சமனாகக் கருதாமையும் நடத்தாமையுமாகும். கதிர்காமர்-எதிர்-பரராஜசிங்கம், கௌசல்யன்-எதிர்-பொன்சேகா, வங்காலை,பேசாலை,மட்டக்கிளப்பு, திருகோணமலை, அல்லைப்பிட்டி -எதிர்-கெப்பற்றிபொலாவ இப்பாதிப்புகளின்பின்னே உலக அரசுகளும் ஊடகங்களும் நடந்து கொண்ட முறைகளைப் பார்த்தீர்களானால், இப்பாரபட்சநடத்துதல் குறித்துத் தெளிவாகத் தெரியும். விடுதலைப்புலிகளுக்குத் தடைவிரித்த உலக அரசுகள் விடுதலைப்புலிகளைப் பேச்சுவார்த்தையிலே ஈடுபட வற்புறுத்துதலும் தமது கண்காணிப்பாளர்களைச் சேவையாற்ற வைப்பதும் அபத்தத்தின் உச்சம். இவற்றினை இவ்வரசுகள் நிச்சயமாக அறியாதனவல்ல. இலங்கை அரசுக்கு ஆயுத உதவியினையும் பொருளாதார ரீதியிலான கடனையும் ஈழச்சிக்கலின்மீதான மனிதவுரிமைக்கேடுகள் குறித்து எக்கேள்வியுமின்றித் தரும் நாடுகளிருக்கின்றன.

    இந்நிலையிலே அகில அரசுகள் கடந்து தம்மை மக்களிடையே நன்முகத்தோடு அறியச்செய்ய விடுதலைப்புலிகள் முயலவேண்டும். இதற்கு அவர்கள் தமது சிறிய தவறுகளையும் தம் ஆதரவாளர்கள் சிலரின் அடாவடித்தனமான செயற்பாடுகளையும் களைந்தெடுக்க முயலவேண்டும். இன்றைக்கு அவர்களுக்கு அவசியம் தேவையானது, தடைசெய்த ஐரோப்பிய ஒன்றியக்கண்காணிப்பாளர்களை அனுமதிக்கமாட்டோமென்ற தர்க்கம்பொருந்திய பதிலடி தரும் இராஜதந்திரமும் மிகவும் பசுத்தோல் போர்த்திய காருண்ய விளம்பரமுகமுமே. வெறும் முகத்திலடித்தாற்போன்ற பேச்சுகள் நெடுங்கால நோக்கிலே கெடுதலையே விளைவிக்கும். மேலாக, தற்போது நிகழ்ந்து வரும் கவனயீர்ப்புப்போராட்டங்கள் நல்லனவெனிலுங்கூட, அது எமக்குள்ளே கூடிப் பழங்கதை பேசுவதாக முடிவடைந்து விடுகின்றன. அதற்கு அப்பாலும், உலகநாடுகளிலே மக்களிடம் சென்றடைய, உலகநாடுகளிலே தம் நலனைக் காத்துத்தரக்கூடிய பலம் பொருந்திய தமிழரல்லாத நண்பர்களை ஈழத்தமிழர் தரப்பு ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.

    3. ‘வாட்டர்’, ‘நோ மேன்ஸ் லாண்ட்’, ‘ஹோட்டல் ருவாண்டா’ போன்ற பல திரைப்படங்கள் தற்கால கொடூரங்களை சினிமா மூலமாக எளிதில் அணுகச் செய்கிறது. இலங்கை-ஈழம் நிலை குறித்த சினிமா இருக்கிறதா? ஏன் பரவலாக படைப்பாளிகளையோ பார்வையாளர்களையோ சென்றடையவில்லை?

    In the name of Buddha ஞாபகத்துக்கு வருகின்றது. விதானகேயின் Pura Handa Kaluwara (Death on a Full Moon Day) இனையுஞ் சொல்லலாம். இன்னும் சில குறுந்திரைப்படங்களைக் கண்டிருக்கின்றேன். அப்பால்-தமிழ்.கொம் இலே கண்டவை. ஈழத்தமிழர்களின் உள்வட்டத்துள்ளே சுழலும் குடும்பம்-பாசம்-போர்-இழப்பு போன்றவை கலந்த உணர்வுமயப்பட்ட படங்கள் குறித்து வாசித்திருக்கின்றேன். தெனாலி, கண்ணுக்குள் முத்தமிட்டால், (நந்தா) போன்ற திரைப்படங்கள் தமிழகத்திலேயே வந்தாலுங்கூட, கதைமையப்படுத்தப்பட்ட புள்ளிகளையிட்டு ஈழப்பிரச்சனை கவனிப்புக்கு உள்ளாகாமற்போகிறன; அல்லது, எதிர்விளைவுகளையே ஏற்படுத்துகிறது. நேர்முகமானதல்லாத Terrorist, அமெரிக்காவிலே வரும் வாரம் தொலைக்காட்சியிலே வரவிருக்கும் “No more tears Sister” போன்ற விவரணம்சார் படங்களும் எதிர்விளைவினையே ஏற்படுத்துமென்றபோதிலுங்கூட, அவற்றினையும் காணவேவேண்டும். மூன்றாம் உலகநாடுகளின் துயரைப் படமாக்கினால், அவற்றோடு ஏதோவிதத்திலே சம்பந்தப்பட்ட முதலாமுலகநாடுகளிலே குற்றவுணர்வினைக் குறைக்கவும் விற்பனைக்கும் உதவும். ஈழம் குறித்து தெனாலி வந்த வேளையிலே, புகழேந்தி வெளியிட்ட “காற்றுக்கென்ன வேலி”யை உணர்வோடு சம்பந்தப்பட்ட தமிழகத்திலேயே தணிக்கைக்குழு அமுக்கிவிட்டது. விற்பனையை முன்னிறுத்தும் உலக அரங்கிலே என்னத்தை எதிர்பார்க்கலாம்?

    (‘வாட்டர்’ தற்காலக்கொடூரங்களைச் சொல்கிறதா? :-))

    4. விடுதலை இயக்கங்கள், தமிழகத் தமிழர்கள் இலங்கைக்கு புலம் பெயர்ந்த வரலாறு, 1983, இராஜீவ் என்று செறிவாக, அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் எளிதாக அறிய விரும்புபவருக்கு தாங்கள் எந்தப் புத்தகங்களைப் பரிந்துரைப்பீர்கள்? இவற்றை எங்கு/எப்படி பெறலாம்?

    போன ஆண்டு இரண்டு பக்கங்களையும் பார்த்துக்கொள்ளுங்களென ஒரு பட்டியல் தந்தேனே 🙂 தொலைந்துவிட்டதா?

    Check for any book by Dr. Stanley Tambiah, Dr. Manoharan for contemporary histroy. However their writing mainly came from Tamil point of view. (Both are dead in the last five years)

    There are number of other books. For ancient history, number of books are there. Let me check get a list soon. Gowever in the internet there are some interesting readings;

    One by one Gunaratnam (on ancient history), and ther other by one T. Sabaratnam (still continues in Sangam.org, on Pirapakaran; His writing should be read along with Dr. Sankaan Krishna’s books on Sri Lanka-India and Narayanaswamy’s book on PirapAkaran, as they two have anti-LTTE stand). On Sri Lankan Refugees, there is a book by a Swedish/ Norwegian lady, who did her PhD on their plaight.

    Sri Lanka: Witness to History – A Journalist’s Memoirs, 1930-2004
    by Subramaniam Sivanayagam ISBN 0-9549647-0-5 : hard cover, 700 pages
    – published, 2005, by Sivayogam, 180-186, Upper Tooting Road,
    London, SW17 7EJ
    – UK£20, USA $40, Canada $50, Australia $50, Europe – euro 30
    – for contact and book inquiries: info@orupaper.com
    – you may buy this book online at: http://www.orupaper.com/witness/

    Another film to be added: THE FORSAKEN LAND (it shows in ny this weekend)

    5. இலங்கையில் சுமுகமான அமைதி திரும்ப (status quo) தமிழகத்
    தமிழர்கள் என்ன செய்யலாம்?

    தமிழகத்தமிழர்கள் என்ன செய்யலாமென்பது குறித்து என் விருப்பு வெறுப்பு கலந்து நான் கருத்துத் தெரிவிப்பின், அராஜகவாதி ஆகிவிடுவேனாதலால், இலங்கையிலே சுமுகமான அமைதி திரும்ப தமிழகத்தமிழர்கள் தமக்கும் இலங்கைக்கும் சரிப்படுமெனத் தோன்றுவதைச் செய்யலாமெனச் சொல்லிவிடுகிறேன் 😉


    | |

    Ash or Not

    கப்பல் கவிழ்ந்த மாதிரி தலையில் கை. திரைச்சீலை போல் ஆடை. கழுத்தை இறுக்கும் கொடி. எதிர்மாறாக, நகை விளம்பர மாவிலை ஆபரணம்.

    போர்வை மெத்தை விளம்பரமோ…? சீயக்காய்த் தூள் விளம்பரமோ…? ஏதாவது ஜுவல்லரியின் புது வரிசை அறிமுகமோ…? தலைவலி? ஜன்னல் மறைப்புத் துணி? லேஸிக் சிகிச்சை… வியர்வைத் தடுப்பான்…

    எந்த விளம்பரத்தில் இந்த இரண்டு புகைப்படங்கள் பொருந்தும்?

    நண்பனுடன் வாக்குவாதம்.

    நான் இந்தப் புகைப்படத்தை பார்த்து ‘இவர் ஐஷ்வர்யா ராய்’க்கு டூப் போடுகிறவர். ஐஸ்வர்யா ராய் அல்ல‘ என்கிறேன்.

    நண்பனோ நூறாயிரம் பென்னி பெட் கட்டுகிறான்.

    நிச்சயம் முன்னாள் உலக அழகி ஐஷ்வர்யாவேதான் என்கிறான்.

    என்னுடைய சந்தேகம் தீர்ந்தபாடில்லை.

    உங்களுக்காவது நிச்சயமாகத் தெரியுமா?

    கையில் மச்சம் இருக்குமாமே (அல்லது தழும்பா?) கண்ணில் படுகிறதா?

    ரொம்ப நேரம் உற்றுப் பார்த்து மானிட்டரை ரிப்பேர் ஆக்கிடாதீங்க…

    ஆனால், என் சந்தேகத்திற்கு விளக்கம் சொன்னால் தன்யனாவேன் சாமீ!


    | |