Name the Author & the Novel

புகழ் பெற்ற நாவகளின் தொடக்கங்கள்.

என்ன கதை, யார் எழுதியது என்று தெரிகிறதா?

1. அதிகாலை முகுந்தன் கனவு கண்டான். மொத்தம் ஒரு ஓவர்தான் பாக்கியிருக்கிறது. எடுக்கவேண்டிய ரன்களோ பதினெட்டு. விக்கெட்டு ஒன்பது விழுந்து விட்டது. கடைசி ஓவர் போடப் போவது யார் என்று அவர்கள் யோசிக்கிறார்கள். திடீர் என்று பெவிலியனுக்குச் செய்தி போய் இம்ரான்கான் வருகிறான். எப்படி வாளாடி டீமில் இம்ரான்கான் வரமுடியும் என்று காப்டனைக் கேட்கிறான். அதற்கு அவன், அப்படித்தான் அது, இப்போது புதுசா ரூல் கொண்டு வந்திருக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் கடைசி ஓவரில் போடலாம் என்று வந்திருக்கிறது என்கிறான்.

2. ஒரு சாரை எறும்புகள் ஊரை விட்டு விலகிய பாதையில் அவசரமாகச் சென்று கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தபோது நாகுவிற்கு பதினோறு வயது நடந்து கொண்டிருந்தது.

தெருக்களிலும் வீட்டு உத்திரங்களிலும் வேம்பிலும் அலைந்து கொண்டிருந்த எறும்புகள் சில நாட்களாகவே ஊரை விலக்கிச் சென்று கொண்டிருந்தன. காலை நேரத்தில் அவை மண்சுவர்களை விட்டு மெதுவாகக் கீழிறங்கித் தலையைச் சிலுப்பியபடி தெருவின் நீண்ட தனிமையில் பயத்தோடு, கால்கள் பரபரக்க ஊர்ந்து செல்வதைப் பார்த்துக் கொண்டேயிருந்தா. அவன் வீட்டு வேம்படியில் இருந்த எறும்புகள் நேற்றோடு முற்றாக வெளியேறிப் போய்விடன. எறும்புகளின் சரசரப்பு ஓசையும் அற்றுப் போனபிறகு மரத்தில் காற்று துளிர்ப்பது கூட ஒடுங்கி விட்டது. இலைகள் தலைகவிழ்ந்தது போல நிசப்தித்துவிட்டன. எறும்புகள் எங்கே செல்கின்றன என்றே தெரியவில்லை.

3. கணேசன் கண் விழித்ததும் அவன் முதலில் பார்த்த பொருள் ஒரு நட்சத்திரம். ஜன்னலுக்கு வெளியே வெகு தொலைவில் அற்புதமாய் மின்னிக் கொண்டிருக்கிற விஷயம்.

எழுந்தவுடன் நட்சத்திரம் பார்ப்பது நல்லதா, கெடுதலா? உள்ளங்கையைப் பரக்கத் தேய்த்துப் பார்ப்பது தான் கணேசனுடைய தினசரி வழக்கம். அப்படி பார்க்காத நாளெல்லாம் சிரமப்படுத்தும் என்பது தீர்மானம். ஆனால், இன்றைக்கென்னவோ எழுந்தவுடன் முதலில் பார்த்த பொருள் நட்சத்திரம்தான்.

புலருமுன் தெருவில் விளக்கணைத்து விட்டார்கள். அறைக்குள்ளே இருட்டு கனமாக அழுந்திக் கொண்டிருக்க நட்சத்திரம் சிரித்துக் கொண்டிருந்தது. வெகு தூரத்தில் சிவப்பாய், கனமாய், அழகாய் அந்தச் சுடர் மின்னிக் கொண்டிருந்தது. பிசுபிசுத்த இமைகளூடே ஒளிக்கதிரால் முத்தமிட்டது. இத்தனை அழகாய், அமைதியாய் சிரிக்கிற சுடர் கெடுதலைத் தருமா? கணேசன் விழிகளை அசைக்கிற பக்கமெல்லாம் அதுவும் நகர்ந்த்து. விழிகளைத் திறந்ததும் ஜன்னலுக்கப்பால் வெகு தொலைவில் போய் ஒட்டிக் கொண்டது.

“இதென்ன விளையாட்டு உனக்கு. சாவித்திரி மாதிரி?”

4. மெலிந்த மேகங்கள் தெருவிற்கு மேலே கடந்து போயின. அதற்கு எதிர்த்திசையில் கூட்டமாக விரைந்து பயணிப்பதாய் பிரமை கொடுத்த நட்சத்திரங்கள் நுட்பமாகத் துடித்தன. மண்ணிலிருந்து எதையோ கவர மாமரத்தின் புல்லுருவிக் கொடிகள் ஊசலாடித் தொங்கின. வேப்பம்பழத் தோல்களுக்குள்ளிருந்து வெளியேறியிருந்தன சிற்றெறும்புகள். வேம்பின் அடர்ந்த கிளைகளொன்றிலிருந்து பால் கசிகிறது கையறு நிலைக்கண்ணீர் போல. மரத்தின் இருட்டந்தரங்கத்தில், உச்சிப்பாதுகாப்பில் வழிகிறது. யாரும் அறிந்திருந்தால் அப்போதே அது மாரியம்மனாயிருக்கும். அடிமரத்தில் மஞ்சள் பாவாடை கட்டப்பெற்றிருக்கும். தொழ வந்திருக்கும் பெருங்கூட்டம். திண்ணைச் சுவருக்கும் ஓட்டிற்குமான இடைவெளியில் பெரியண்ணன் எப்போதோ கோந்து தயாரிப்பதற்காக, முருங்கைப் பிசினில் நீர் ஊற்றி ஊற வைத்திருந்த தகர டப்பாவிற்குள்ளிருந்து மீள முடியாமல் அமிழ்ந்தது பாச்சை. வேம்பையும் வீட்டுத் திண்ணை உத்தரத்தையும் பிணைந்திருந்த கம்பிக்கொடியில் உலர்ந்தது வேஷ்டி. தென்னங்கீற்றுகளில் நிழல்கள் வேஷ்டியில் விழுந்து விரல்களாக முறுக்கிக் கொள்கின்றன். பிசைந்து கொண்டு பிரிந்து கூடி நடுங்குகின்றன.

திண்ணையில் படுத்திருந்த பெரியண்ணனின் கால்களை மடியில் வைத்து அம்மா தடவிக் கொடுத்தாள். பெரியண்ணன் பேச இயலாதிருந்தான். கூர்ந்தொளிந்து துலங்கியது பார்வை. தாவித்தாவி அலைக்கழித பார்வை அம்மாவின் முகத்தில் நிலைத்தது ஏக்கமாக. கசங்கிக் கிழிந்து தொய்ந்த தளிரைப் போல உடல் முழுதும் முற்றும் சோர்ந்திருந்தது. அக்கா, அவன் தாகத்திற்கு குளுகோஸ் கரைத்த சுடுநீரை ஸ்பூனல் புகட்டினாள்.

5. எதைப் பார்த்தாலும் சிரிப்பு வருகிறது. கலியாணப் பந்தலைப் பார்த்தால் சிரிப்பு. மணமகள் தலைகுனிந்து நாணத்திலும் அடக்கத்திலும் முழுகிப் போய் உட்கார்ந்திருக்கிறாள். அதைப் பார்த்தால் சிரிப்பு. அகல மார்பும் இடைச்சரிவும் வழவழத் தோலுமாக, மணமகன் அக்னியில் நெய்யை வார்க்கிறான். அதைப் பார்த்தால் சிரிப்பு. இதைப் பார்த்துக் கொண்டிருக்கிற கிழவர்களையும் நடு வயதுக்காரர்களையும் பார்த்தால் சிரிப்பு. இத்தனை இரைச்சல்களையும் கவனிக்காமல், சீவாளியைக் குழந்தைக் கடியாக் கவ்விக் கொண்டு, ஆகாசத்திற்கும் பூமிக்குமாக நாயனத்தை வீசி வளைத்துக் கொண்டிருக்கிறாரே, அவரைப் பார்த்தால் சிரிப்பு. எதற்கு ‘உம்’மென்று இந்த முகம்! இந்தக் கன்ன உப்பல்! நாயன் துவாரங்களை இத்தனை கண்ணும் கருத்துமாகத் தடவி, எந்த ஸ்வர சுத்தத்துக்கோ பயந்து கொண்டு வேதனைப் படுவதைப் பார்த்தால்… கலியாணத்துக்குக் கூடியிருக்கிற இத்தனை சாயல்களை, பற்களை, நெற்றிகளை, கால்களை, சிரிப்புகளை, புருவந்தூக்கும் கவலைகளை, முகங்களில் படர்ந்திருக்கிற பூசணி வெள்ளைகளை, தானே பேசுகிற குழந்தைகளை, வருடங்கள் கழிந்து சந்திக்கும் தாயாதிகளை – ஒன்றையும் பார்க்காமல் ஏன் இப்படி கண்ணை மூடி நாயனத்தில் வதை கொள்ள வேண்டும்?

கண்டுபிடித்தவர்கள் பின்னூட்டமிடவும்.


| |

Chidambaram temple deekshidars to take important decision today

Chidambaram temple deekshidars to take important decision today

சிதம்பரம் நடராஜர் கோவில் சர்ச்சை: தீக்ஷிதர்கள் இன்று முக்கிய ஆலோசனை

சிதம்பரத்தில் உள்ள பிரபலமான நடராஜர் கோவிலில் தேவாரம், திருவாசகம் ஆகியவற்றைப் பாட, கோவிலை நிர்வகித்து வரும் தீக்ஷிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக சிதம்பரம் நீதிமன்றத்தில் தடை உத்தரவும் வாங்கி வைத்துள்ளனர்.

முதல்வரின் கருத்து தீக்ஷிதர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில், நடராஜர் கோவிலுக்குள் தேவாரம், திருவாசகம் பாட சிதம்பரம் நீதிமன்றம் விதித்திருந்த தடையுத்தரவு நேற்றுடன் முடிந்தது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தடையை நீடிக்கக் கூடாது என்று தமிழார்வலர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதாடினர். ஆனால் தீக்ஷிதர்கள் சார்பில் வக்கீல்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந் நிலையில் தீக்ஷிதர்களுக்கு ஆதரவாக அர்த்தஜாம சிவபுராண வழிபாட்டுக் குழு, தில்லை திருமறை கழகம், பவுர்ணமி வழிபாட்டுக் குழு, தில்லை காளி வார வழிபாட்டு மன்றம் ஆகியவை கிளம்பியுள்ளன.

இந்த அமைப்பினர் இன்று மாலை சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள நடராஜர் கிருபா திருமண மண்டபத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தள்ளனர். இதில் தீக்ஷிதர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதுதொடர்பான அழைப்பிதழில்,

தமிழை மட்டுமே தாய் மொழியாகக் கொண்ட தீக்ஷிதர் சமுதாய பெருமக்கள், தமிழுக்கு விரோதிகள் போல ஒரு மாயை உருவாக்கப்படுகிறது. அதையே காரணம் காட்டி, பாரம்பரியமாக நமது முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ள ஆலய வழிபாட்டு முறைகளை விமர்சனம் செய்து ஒரு கூட்டம் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

எனவே நடராஜ பக்தர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்

என்று கூறப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் தீக்ஷிதர்கள் தரப்பில் என்ன முடிவெடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தமிழார்வலர்களிடையே எழுந்துள்ளது.

S Ve Sekar talks on ‘EVR Periyar Movie’ & Mylapore

Dinamani.com – TamilNadu Page

மனைவிக்கு நன்றி கூறி கன்னிப் பேச்சைத் தொடங்கினார் எஸ்.வி.சேகர்

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் அவர் பேசினார்.

பெரியார் படம்: சத்யராஜ் நடிப்பில் தயாரிக்கப்பட்டு வரும் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்கு ரூ. 95 லட்சம் நிதி உதவி அளிப்பதாக அரசு அறிவித்துள்ளது. முதல்வர், கதை வசனகர்த்தாவாக இருந்து திரைப்படத்துறை பற்றித் தெரிந்தவர். அந்த படத்தை ரூ. 70 லட்சம் செலவில் தயாரிக்க முடியும். ரூ. 95 லட்சம் நிதி உதவி கொடுப்பதால் படத்தின் உரிமையை அரசு பெற்றுக்கொள்ள வேண்டும். ஒரு தனி நபருக்கு நிதி உதவி செய்வது சரியல்ல. இதுபோன்று மூதறிஞர் ராஜாஜி, ஆலய பிரவேசம் செய்ய போராடிய வைத்தியநாத அய்யர் ஆகியோரது வாழ்க்கை வரலாறும் திரைப்படமாக எடுக்கப்படுமா? என்று அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

மெட்ரோ ரயில் வேண்டாம்: சென்னையைப் பொறுத்தவரை மெட்ரோ ரயிலை விட மோனோ ரயில் திட்டம்தான் சிறந்தது என்பது ஆய்வு செய்யப்பட்டுள்ளது. எனவே அதைச் செயல்படுத்த வேண்டும்.

மாநகராட்சி கழிப்பிடங்களில் ரூ. 2 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 4 பேர் இருக்கும் நிலையில் ரூ. 8 தேவைப்படுகிறது. ரூ. 2-க்கு அரிசி வாங்கி சாப்பிட்டுவிட்டு கழிப்பிடம் செல்ல ரூ. 8 செலவு செய்ய வேண்டியதிருக்கும். எனவே, இலவச கழிப்பிடம் தேவை.

மயிலாப்பூர் தெப்பக் குளத்தைச் சுற்றியுள்ள ஹோட்டல்களில் “போர்’ மூலம் தண்ணீர் எடுக்க தடை விதிக்க வேண்டும். மந்தைவெளியில் புதிதாக துணை மின்நிலையம் அமைக்க வேண்டும். தகவல் பெறும் உரிமை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதுகுறித்து விளம்பரப் படுத்தவேண்டும் என்றார் எஸ்.வி. சேகர்.

Indian Parliament’s New TV

Dinamani.com – Headlines Page

மக்களவைக்காக புதிய தொலைக்காட்சி

பொதுமக்களுக்கும், மக்களவைக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைப்பதற்காகவும், அவை நடவடிக்கைகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளவும் “மக்களவைச் சேனல்’ என்ற புதிய தொலைக்காட்சி துவங்கப்பட்டுள்ளது.

மக்களவையில் திங்கள்கிழமை துவங்கிய குளிர்கால கூட்டத்தொடரில் இதன் ஒளிபரப்பு துவங்கியது.

இது குறித்து மக்களவைத்தலைவர் சோம்நாத் சட்டர்ஜி கூறியதாவது:

இத் தொலைக்காட்சி மூலம் மக்களவை ஒரு புதிய அத்யாயத்திற்குள் அடியெடுத்து வைக்கிறது. இதன் மூலம் அவையின் நடவடிக்கைகளை மக்கள் அறிந்து கொள்ள முடியும். உறுப்பினர்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் இத்தொலைக்காட்சி வெற்றி பெறும்

என்றார்.

நாடாளுமன்ற நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்ப துவங்கப்பட்ட 24 மணிநேர தொலைக்காட்சி இது.

  • உங்கள் எம்பி-யை தெரிந்து கொள்ளுங்கள்,
  • அவைத்தலைவரின் விமர்சனம்,
  • இந்த வாரப்பிரச்சினை,
  • கிராமத்துக்குரல் மற்றும்
  • தேசிய பாரம்பரியம்,
  • கலாச்சாரம் தொடர்பான நிகழ்ச்சிகள்
    இதில் ஒளிபரப்பாக உள்ளன.
  • Mine is a Dravidian Party – Vijayaganth

    Former DMK mla joins Vijaykanth’s party

    எங்கள் கட்சி திராவிட கட்சி: விஜய்காந்த்

    நான் கதாநாயகன் ஆவேன் என்று நினைத்ததில்லை, சொந்தப்படம் எடுப்பேன் என்று நினைத்ததில்லை, கட்சி தொடங்குவேன் என்றும், தேர்தலில் வெற்றி பெறுவேன் என்று நினைத்ததில்லை. இவையெல்லாம் என்னைத் தேடி வந்தவை

    என தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறினார்.

    விழுப்புரம் மாவட்டம் முகையூர் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ ஏஜி.சம்பத் தலைமையில் மாவட்ட பாமக முன்னாள் தலைவர் குரு ஜெயக்குமார், மாவட்ட பாரதீய ஜனதா கட்சி தலைவர் ராஜ்குமார் மற்றும் அந்த மாவட்டத்தை சேர்ந்த திமுக, மதிமுக, பாமக, காங்கிரஸ் ஆகிய கடசிகளை சேர்ந்த 1,000 பேர் தேமுதிகவில் இணைந்தனர்.

    புதிதாக சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கிய விஜயகாந்த் பேசியதாவது:

    திமுக தலைவர் கருணாநிதி நம்மை திராவிட கட்சியில்லை என்று சொல்லியிருக்கிறார். நாம் வளர்ந்து வரும் கட்சி. நம்மை அவர் விமர்சனம் செய்திருப்பதை நினைத்து நான் சந்தோஷப்படுகிறேன். அந்த அளவுக்கு நாம் வளர்ந்திருகிறோம்.

    இது 3வது தலைமுறை. நாம் திராவிட கட்சியா, இல்லையா என்பதை மக்கள் உணர்த்துவார்கள். நாம் கைபர் கணவாய் வழியாக வந்தவர்கள் இல்லை.

    திராவிடம் என்பது தமிழ், தெலுங்கு கன்னடம் உள்பட 7 மொழி பேசுபவர்கள் சேர்ந்தது. இங்கிருக்கும் அனைவரும் தமிழர்கள் தான். நம்மைப் பார்த்து இப்படி ஒரு கருத்தை அவர் சொல்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவர் மீது நான் ஒரு மரியாதை வைத்திருக்கிறேன்.

    தமிழக பட்ஜெட்டில் அறிவித்திருப்பது திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய இலவச கலர் டிவி, 2 ஏக்கர் நிலம், விவசாய கடன் தள்ளுபடி தவிர மற்ற அனைத்துமே தேமுதிக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது தான். இதில் ஏழை, எளிய மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் என்ன இருக்கிறது என்று கேட்டேன்.

    இதை சொன்னதற்காகவும், ஏஜி சம்பத் நமது கட்சியில் இணையப் போவதை உளவுப்பிரிவு போலீஸ் மூலம் தெரிந்து கொண்டும் தான் என்னை விமர்சித்திருக்கிறார்.

    உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் தான் வரியில்லாத பட்ஜெட் போட்டிருக்கிறார்கள். வரி எப்படி போடாமல் இருக்க முடியம். பெட்ரோல், டீசல் விலை உயராது என்று சொல்லிக் கொண்டே உயர்த்துவது இல்லையா, அதுபோல வரியையும் நிச்சயம் போடுவார்கள்.

    சட்டசபை தேர்தலில் 8.5 சதவீதம் ஒட்டு பெற்றிருக்கிறோம். அதனால் நம்மை வளர விட்டு விடாதீர்கள் என்று கூறி வருகிறார்கள். எல்லோரும் தனியாக நில்லுங்கள். உங்களது சக்தியை காட்டிவிட்டு கூட்டு வையுங்கள்.

    என்னுடைய மண்டபத்தை இடிப்பதாக பயம் காட்டுகிறார்கள். தாராளமாக இடித்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டேன். போனால் போகிறது, இன்னொரு முறை சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால் கட்சியை மட்டும் அழிக்க விடமாட்டேன்.

    ஒரு குழியில் சிறுவன் விழுந்துவிட்டான், அவனை காப்பாற்ற 2 நாட்களாக போராடினார்கள் என்று அவனை மீட்டவர்களை பாராட்டுகிறார்களே. அந்த குழியை மூடாதவர்களை கைது செய்தார்களா?

    நான் சினிமாவுக்கு வில்லனாகத்தான் வந்தேன். கதாநாயகனாக வருவேன் என்று நினைக்கவில்லை. சொந்தப்படம் எடுப்பேன் என்று நினைக்கவில்லை. நடிகர் சங்க கடனை அடைப்பேன் என்று நினைக்கவில்லை. கட்சி தொடங்குவேன் என்றும், தேர்தலில் வெற்றி பெறுவேன் என்று நினைக்கவில்லை. அதெல்லாம் என்னைத் தேடி வந்தது.

    நமது கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் ஒரு பெரிய மாறுதல் ஏற்படும். நமது தேர்தல் அறிக்கையை பட்ஜெட்டில் அறிவித்ததே நமக்கு கிடைத்த வெற்றி தான். ஏன் அவர்கள் தேர்தல் அறிக்கையில் கூறிய கியாஸ் அடுப்பு பற்றி பட்ஜெட்டில் கூறவில்லை.

    எம்எல்ஏக்களுக்கு அதிகாரம் இல்லை. உள்ளாட்சி நிர்வாகிகளுக்கு தான் மக்களுக்கு நேரடியாக நன்மைகள் செய்யக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். எனவே உள்ளாட்சி தேர்தலில் நாம் வெற்றி பெற நீங்கள் பாடுபட வேண்டும்.

    நாம் வளர்ந்து கொண்டே இருந்தால் தான் ஆளுங்கட்சியில் இருப்பவர்கள் பயந்து கொண்டு மக்களுக்கு நன்மை செய்வார்கள் என்றார் விஜய்காந்த்.

    Terror training camps in Theni forest?

    Terror training camps in Theni forest?

    தேனி காடுகளில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி?

    கோவையில் ஆரூண் பாஷா, மாலிக் பாஷா, ரவி என்கிற திப்பு சுல்தான், போலோ சங்கர் என்கிற அத்தக் கூர் ரகுமான், சம்சுதீன் ஆகிய 5 தீவிரவாதிகள் வெடி குண்டுகளுடன் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் கோவையில் 8 இடங்களில் வெடிகுண்டு வைத்து தகர்க்க திட்டமிட்டு இருந்தது தெரியவந்ததுள்ளது. இதையடுத்து கைதான 5 போரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    குண்டுகளுடன் கைதானவர்களிடம் இருந்து சில இந்து மத தலைவர்களின் வீட்டு முகவரி, போட்டோ, அவர்கள் வந்து செல்லும் பாதைகளின் வரைபடங்கள், கோவையில் குண்டு வைக்க தேர்வு செய்த இடங்கள் அனைத்தும் இடம் பெற்று இருந்த சிடிகள், டெலிபோன் எண் அடங்கிய டைரி, வெடி மருந்துகள், பைப் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    அவர்களிடம் விசாரணை நடத்தியதில் தீவிரவாதிகள் பல்வோறு குழுக்களாக பிரிந்து கோவை, சேலம், ஈரோடு நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களிலும் ஊடுருவி இருப்பதாகத் தெரிய வந்தது.

    கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதிகள் கேரளாவில் ஆயுத பயற்சி பெற்றவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் கொடுத்த தகவலையடுத்து கோவையில் மேலும் 4 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

    அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கேரள மாநிலம் மலப்புரம், பாலக்காடு, சேலம் போன்ற பகுதிகளுக்கு தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பது தெரியவந்துள்ளது. எனவே இப்பகுதிகளுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

    கைதான தீவிரவாதிகளுக்கு மனித நீதி பாசறை சார்பில் பயிற்சியளிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் அதன் தலைவர் மறுத்து விட்டார். நாங்கள் மத கல்வி பயிற்சி மட்டுமே அளிக்கிறோம் என்றார்.

    ஆனாலும் தேனி காடுகளில் தீவிரவாதிகளுக்கு ஆயுதப்பயிற்சி அளிக்கப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் போலீசார் அங்கு விரைந்துள்ளனர். தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

    அனைத்து ரயில்களுக்கும், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் உடமைகள் அனைத்தும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தப்படுகிறது. மேலும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகளை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    மேலும் 2 இமாம் அலி கூட்டாளிகள் கைது:
    பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்ட இமாம் அலியின் கூட்டாளியான சுல்தான் முகம்மது மதுரையில் 2 நாட்களுக்கு முன் வெடிகுண்டுகளுடன் கைது செய்யப்பட்டார். இமாம் அலியை போலீஸாரிடம் காட்டிக் கொடுத்த இப்ராகிம் என்பவரைக் கொலை செய்வதற்காக அவர் வந்தபோது பிடிபட்டார்.

    இந்த நிலையில் இன்று மேலும் 2 தீவிரவாதிகளை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் இப்ராகிம். அவரும், சுல்தானை கொல்வதற்காக திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதன் மூலம் மதுரையில் பெரிய அசம்பாவிதத்தை போலீஸார் தடுத்துள்ளனர்.

    இப்ராகிம் வீட்டை சோதனையிட்ட போலீஸார் அங்கிருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர்.

    Govt. will look into Chidambaram temple Issue – TN CM

    Webulagam : Govt. will look into Chidambaram temple Issue – TN CM!

    சிதம்பரம் கோயிலில் திருவாசகம் : கருணாநிதி பதில்

    சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் திருவாசகம், தேவாரம் உள்ளிட்ட தமிழ் பக்தி பாக்களை இசைக்க சட்ட ரீதியாக என்ன தடை உள்ளது என்பது குறித்து ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

    தமிழக சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கையின் மீது இன்று நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் வேல்முருகன், சிதம்பரம் நடராஜர் கோயிலில் திருவாசகம், தேவாரம் பாடல்களை பாட முடியவில்லை. தமிழுக்கு தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள இந்நிலையை தடுத்த நிறுத்த வேண்டும் என்று முதலமைச்சரைக் கேட்டுக் கொண்டார்.

    இதற்கு பதிலளித்த முதலமைச்சர் கருணாநிதி,

    “சிதம்பரத்தை பொறுத்தவரை அங்குள்ள தீட்சிதர்கள் ஆதிக்கத்தில்தான் நடராஜர் இருப்பதாகவும், அதை மீறி யாரும் எதையும் செய்ய முடியாது என்று ஐதீக கருத்து அழுத்தம் திருத்தமாக இருப்பதாகக் கூறி தேவாரம் பாடிய ஒரு தமிழரை வெளியேற்றியுள்ளார்கள்.

    அந்த சட்டப் பிரச்சனை என்ன என்பதை மூத்த வழக்கறிஞர்களுடன் ஆராய்ந்து எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கை பற்றி ஆராய்ந்து ஆவன செய்யப்படும்.

    இந்து ஆலயச் சுவர்களில் தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்று எழுதப்பட்டிருக்கிறது. இதைக் கண்டு உண்மையான தமிழர்கள் மகிழ்ச்சியடையவில்லை. அவர்களுக்கு கொந்தளிப்புதான் ஏற்படும். தமிழ் இவ்வளவு இலக்காரமாகப் போய்விட்டதா? தமிழ் உணர்வு அடிப்படையில் இந்த அரசின் சார்பாக இனி எந்த ஆலயத்திலும் தமிழிலும் அர்ச்சனை என்று எழுதப்படமாட்டாது. ஏற்கனவே எழுதப்பட்டிருந்தாலும் அவை அழிக்கப்படும்”

    என்று கூறினார்.

    Siruthavoor Encroachment by Jayalalitha

    BBCTamil.com

    தலித்துகள் நிலத்தில் முன்னாள் முதல்வர் தங்கியிருந்த பங்களா: சர்ச்சை வலுக்கிறது

    தமிழக தலைநகர் சென்னையை அடுத்த சிறுதாவூரில் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா தங்கி வந்த சொகுசு பங்களாவின் ஒரு பகுதி, 1967 ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் அண்ணாவால் தலித்துகளுக்கு இலவசமாக வழங்கப்பட்ட 53 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாக எழுந்துள்ள சர்ச்சை, தமிழக அரசியலில் தீவிரமடைந்துள்ளது.

    ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது அவருடைய தோழி சசிகலாவின் ஆட்களால், இந்த நிலம் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டதாகவும், அந்த நிலத்தை தமிழக அரசு மீட்டு, மீண்டும் தலித்துகளுக்கே வழங்கவேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட தலித் குடும்பங்களும், அவர்களின் சார்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

    தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி, அவர்கள் பல்வேறுவகையான போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

    இதன் தொடர்ச்சியாக இந்த விவகாரம் பற்றி சம்பந்தப்பட்ட அரசு துறைகளிடம் அறிக்கை கேட்டிருப்பதாகவும், அந்த அறிக்கை கிடைக்கப்பெற்றதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் மு கருணாநிதி அறிவித்தார்.

    இதற்கு பதிலளித்த ஜெயலலிதா, சிறுதாவூரில் தானும், தனது தோழி சசிகலாவும் தங்கியுள்ள பங்களா தங்களுக்குச் சொந்தமானதல்ல என்றும், வாடைக்குத்தான் அந்த பங்களாவை தாங்கள் எடுத்துள்ளதாகவும் விளக்கமளித்தார்.

    சிறுதாவூரில் பங்களா வாடகைக்கு விடப்படுகிறது என்று பத்திரிக்கைகளில் வந்த விளம்பரத்தைப் பார்த்துத்தான், அந்த பங்களா தன் சார்பில் வாடகைக்கு எடுக்கப்பட்டதாகவும், அந்த பங்களா கட்டப்பட்டுள்ள இடம் தொடர்பான சர்ச்சை ஏதேனும் இருந்தால், அதை அந்த பங்களாவுக்கு சொந்தக்காரரிடம் தான் கேட்கவேண்டும் என்றும், ஜெயலலிதா கூறினார்.

    இது தொடர்பாக தன் மீது அவதூறு பரப்பி, தன் மீது பழி போடவும், தனது நற்பெயரை களங்கப்படுத்தவும் இந்த பொய்யான குற்றச்சாட்டு கூறப்படுவதாகவும் இதை தாம் சட்டரீதியாக சந்தித்து உண்மையை நிலை நாட்டப்போவதாகவும் அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து கருத்து வெளியிட்ட கருணாநிதி, சிறுதாவூர் பங்களாவுக்கு ஜெயலலிதாவோ, சசிகலாவோ உரிமையாளர் இல்லை என்றால் அதன் உண்மையான உரிமையாளர் யார் என்று கேள்வி எழுப்பினார்.

    குறிப்பாக சிறுதாவூர் பங்களாவுக்கு உண்மையான உரிமையாளருக்கும், ஜெயலலிதா, சசிகலாவுக்கும் என்ன தொடர்பு? அந்த பங்களாவுக்கான வாடகையை யார் கொடுத்தது? என்று அவர் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.

    கருணாநிதியின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், தனக்குச் சம்பந்தம் இல்லாத சிறுதாவூர் பங்களா குறித்து கேள்வி கேட்கும் கருணாநிதி, அவர் பெயரிலும் அவரது சொந்த, பந்தங்களின் பெயரிலும் இருக்கும் சொத்து விவரங்களை பகிரங்கமாக வெளியிடத் தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ளளர்.

    சிறுதாவூர் பங்களாவுக்கான வாடகையை தாமே தமது சொந்த பணத்தில் கொடுத்ததாகவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே, இந்த விவகாரத்தில் முழு உண்மைகளையும் வெளியில் கொண்டு வரும் பொருட்டு, தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    புதிய தமிழகம் உள்ளிட்ட சில தலித் அமைப்புகளும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன. அதேசமயம் அஇஅதிமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் இது தொடர்பில் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

    தமிழக அரசால் தலித்துகளுக்கு இலவசமாக வழங்கப்பட்ட நிலம், ஆட்சியில் இருப்பவர்களுக்கு வேண்டப்பட்டவர்களாலேயே ஆக்கிரமிக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை, தற்போது தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மற்றும் இன்னாள் முதல்வரின் குடும்ப சொத்துகணக்கு எவ்வளவு என்கிற விவாதமாக திசைமாறிச் செல்வதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

    Train, Sun, Big Dig, Wiki

    கிழிமுறி உதிர் ஏடல்கள்

    சன் டிவியில் ‘லஷ்மி’ ஆரம்பித்திருக்கிறது. ஹிந்தி சூப்பர்மேன் ‘கிர்ரிஷ்’ போல் மதங்கொண்ட யானையை நிறுத்தாமல், அறிவியல்பூர்வமாகக் கையாண்டதாக காண்பித்தார்கள். குஷ்புவை சின்னத்திரையில் ‘குங்குமம்’ சீரியல் மூலம் அறிமுகப்படுத்திய சுஜாதா விஜயகுமார் தயாரிப்பு. தற்போதைய வேலையை விட பெரிய வேலை கிடைத்தால், நிறைய சம்பளத்துக்கு ஜாகை மாறுவது போல் ‘செல்வி’ சீரியலை இயக்கி வந்த சுந்தர் கே விஜயன் இங்கே குதித்து விட்டார்.

    தொலைக்காட்சி நெடுந்தொடர்களின் ஆரம்பம் விறுவிறுப்பாய் இருக்கும். புதிய கதாபாத்திரங்கள் அறிமுகம் ஆவார்கள். அவசரம் காட்டாத நிதானமாக படப்பிடிப்பு. தொழில் சிரத்தையோடு கூடிய பயம். புதுமுக எழுத்தாளராக தேவிபாலா இல்லாவிட்டாலும், டி.ஆர்.பி. ரேட்டிங் குதிரையில் முந்த வேண்டிய அவசியம்.

    ரஜினி குதிரையைப் பற்றி சொன்னவுடன், எந்த ஒப்புமைக்கும் ரேக்ளா ரேஸ் நினைவுக்கு வருகிறது. ‘எனக்குப் பிடித்த பாடலில்’ ராஜப்பா வந்திருந்தார். முதல் பாடல்: ‘பொதுவாக என் மனசு தங்கம்

    ‘பிறந்த ஊருக்கு புகழைத் தேடு
    வளர்ந்து நாட்டுக்கு பெருமை தேடு
    நாலு பேருக்கு நன்மை செஞ்சா’

    துள்ளல்

    சாந்தோம் பள்ளிக்கும் செயிண்ட் பீட்ஸ் பள்ளிக்கும், சென்னையில் எப்போதும் போட்டி நிலவும். பக்கத்து பேட்டை செயிண்ட் ஆண்டனி முதல் லேடி சிவசாமி வரை பாதுகாத்து வீட்டில் சேர்த்து விடுவதில் ஆரம்பித்து, ஷூட்டிங் நடப்பது வரை எதிரும் புதிரும் அக்னி நட்சத்திரங்கள். ‘அன்புள்ள ரஜினிகாந்த்‘ ரஜினி அங்கிள் எடுத்தது எங்க ஏரியா என்றால், ‘படிக்காதவ’னின் ‘ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி’யில் வருவது செயிண்ட் பீட்ஸ். அந்தப் பள்ளியில் படித்தவர்கள் ரஜினியை முதுகில் குத்தியவர்கள் (ரஜினியின் தம்பி வீட்டோடு மாப்பிள்ளை ஆக சென்று விடுவார்) என்று சண்டைக்கு சென்றோம்.

    இரவு வீட்டுக்குத் திரும்பும் இரயிலில் மீண்டும் ஏசி ரிப்பேர். இந்தியாவாக இருந்தால், ‘இது மட்டும் அமெரிக்காவாக இருந்தால்’ என்று புலம்பி தீர்த்திருக்கலாம். பாஸ்டனிலும் ஊழல் அதிகம். பாலம் கட்டுவதில் காசு பார்ப்பது போல் பில்லியன் டாலர் சாலை அமைப்பதில் சரிவர முடிக்காமல், கட்டி முடித்த சில வருடங்களுக்குள் மழைத் தண்ணீர் உள்புகுவதும், ஆங்காங்கே இடிந்து விழுவதுமாக லஞ்சத்தைக் காட்டிக் கொடுக்கிறது. விசாரணை கமிஷன் போட்டிருப்பதாக செய்தித்தாள் தலைப்பு. ‘நான் பொறுப்பில்லை’ என்று கவர்னருக்கு நிற்கும் இருவரும் பொதுவாக ஒருவரை நோக்கி குற்றஞ்சாட்டுகிறார்கள். அரசியல்வாதிகள் எங்கும் கூட்டுக் களவாணிகள் என்னும் அக்மார்க் நடுத்தர வர்க்க ஓட்டம் வருகிறது.

    காசு வாங்கியும் குளிர்சாதனத்தை பழுது பார்க்காத கருமி ஊர். தூக்கம் வரவில்லை. மாற்றுக் கருத்து, எதிர் சிந்தனை, என்று ஏட்டிக்குப் போட்டியாக பேசி பகை வளர்த்து விரோதிகளை வளர்ப்பதுதான் நான் இணையத்தில் மறுமொழியாக செய்து வருகிறேனோ என்று இருவுள் வாயில் பயணத்தில் யோசித்து வந்தேன். அதன் பிறகு, வலையின் மூலம் புதிய நண்பர்களை சந்தித்தோம். அவர்களுடன் தானே மோதி வருகிறோம். நிஜ உலகத்தில் இருக்கின்ற பிற தொடர்புகளுக்கு எதுவும் பாதகமில்லையே என்று தேற்றிக் கொண்டேன்.

    மாலன் முன்பொரு கட்டுரையில் என்னைக் குறித்து எழுதியிருந்தது போல், எந்த ஏடலுக்கும் ஒரு மாற்றுப் பார்வை வைத்துக் கொண்டு விவாதிக்கும் அன்பர் என்னும் பிம்பத்துக்குள் விழாமல் இருக்க வேண்டும் என்று தீர்மானித்த போது இறங்க வேண்டிய இடம் வந்து சேர்ந்தது.

    ‘தேவர் மகனை’ மீண்டும் பார்க்க வேண்டும். அப்பாவுக்கும் மகனுக்கு நடக்கும் உரையாடலில், ‘போயிடறேன்பா’ என்று தப்பிக்க பார்க்கும் கமலைப் பார்த்து சிவாஜி, ‘அய்யா, விதைச்சவன் என்னிக்காவது மரம் வளர்ந்து பயனை அனுபவிக்கிறானா? எங்க பாட்டன் வெதைச்சத நான் பழமா சாப்பிடறேன்… இங்கே நெல் விளைவிச்சு, உன்னை லண்டனில் படிக்க வச்சதுக்கு எதுக்காக?’ என்பார்.

    ரொம்ப யோசிக்காமல் தோன்றியதில் விக்கிப்பீடியா என்பது விதை. உடனடியாக பலன் கிடைக்காது. ஆனால், சிந்தாமல் சிதறாமல், பூத்துக் குலுங்கும் தோட்டம்.

    தகவல் உதவி: சீரியலுக்கு வருகிறார் மீனா :: மு.மணி:


    | |

    Israel vs Lebanon with Hezobollah, Syria, Iran et al

    இரண்டாம் உலகப் போர் ஆரம்பத்தில் ஹிட்லருக்கு சோதனைச் சாவடி தேவைப்பட்டது. ஸ்பெயினில் நடந்த உரிமைப் போராட்டத்தில் ஜெர்மனியின் புஜபலத்தைக் காட்டி சோதித்து, இரண்டாம் உலகப் போருக்கு கால்கோளிட்டார். ஈரானுக்கும் தன்னுடைய இராணுவ மிடுக்கை பரிசோதிக்க ஆசை. ஹெசபொல்லாவைத் தூண்டி விட்டு இஸ்ரேலுக்கு எதிராக லெபனான் அப்பாவிகளைக் கொன்று தளவாடங்களை production environment-இல் விட்டுப் பார்த்திருக்கிறார்.

    ஈரானுக்கு எதிராக முக்கிய முடிவுகள் எதுவும் ஜி-8 மாநாட்டில் எடுக்கக் கூடாது; என்ன வழி என்று யோசித்தது ஈரான். அடியாள் ஹெசபொல்லாவை அழைத்து கண்ணீர்ப் புகை குண்டுகள் போல் இஸ்ரேலிய படைவீரர்களைக் கைப்பிடித்தது.

    இஸ்ரேலில் இராணுவத்தில் சேருவது இந்தியாவைப் போல் விருப்பப் பாடம் அல்ல. தமிழ்நாட்டில் தமிழ் போல் கட்டாயப் பாடம். வயதுக்கு வந்தவுடன் வாக்களிக்கிறார்களோ, இல்லையோ, இராணுவத்தில் பணிபுரிய வேண்டும். ஏழை உயிர்தானே… போனால் போகிறது என்று பொதுஜனம் விட்டேத்தியாய் விடாமல், செய்தித்தாள் படித்து விட்டு எல்லையில் இருவர் இறப்பு என்று புறந்தள்ளாமல், ‘நம்மில் ஒருவர்’ என்று ஒவ்வொரு இஸ்ரேலியும், நமக்கும் இந்த மாதிரி நிலை வந்திருக்கலாமே (வரலாமே) என்று எண்ணும் சமூகம்.

    இஸ்ரேலைக் கட்டுப்படுத்த அமெரிக்கா குரல் கொடுக்கும் என்று ஈரான் எதிர்பார்க்கிறது. லெபனானும், பாலஸ்தீனமும் தேர்தல் நடத்தும் சுதந்திர நாடுகளாக இருப்பது தான் அமெரிக்காவையும் அதன் தலைவர் புஷ்ஷின் ‘எங்கெங்கு காணினும் சுதந்திர நாடடா’ கொள்கையையும் அசைத்துப் பார்க்கும் என்றும் நம்புகிறது. ஈராக் போருக்கு கூறப்படும் காரணங்கள் இந்த இரட்டை நிலையினால் உலக அரங்கில் தவிடு பொடியாகியுள்ளது.

    2000-த்தில் லெபனான் ஆக்கிரமிப்பை இஸ்ரேல் விலக்கியவுடன், ஜனநாயக முறையில் போராளிக் குழுவான ஹெசபொல்லா தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன் பிறகும் லெபனான் இராணுவம், லெபனான் எல்லையருகே நிறுத்தப்பட முடியவில்லை. சிரியாவின் ஆதிக்கம் பன்மடங்கு அதிகரித்தது. லெபனானின் பிரதம மந்திரியே ஹெசபொல்லாவை ‘எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஹெசபோல்லா, தயவு செய்து தங்கள் தீவிரவாதப் போக்கைக் கைவிட வேண்டும்’ என்று வேண்டுகோள் வைக்குமளவு கையாலாகதவராக தன்னை நிலைநிறுத்தி (ப்ரொஜெக்ட்) செய்து கொள்கிறார்.

    கோலன் ஹைட்ஸின் ஷாபா ஃபார்ம்ஸ் தொடர்பாக சிரியா இன்னும் கோபத்தில் இருக்கிறது. பாலஸ்தீன விடுதலைக்குப் பின் தேர்தலில் வென்று அரியணை ஏறிய பிறகும், ஹமாஸின் நடவடிக்கைகளில் எந்த வித தொய்வும் காணப்படவில்லை. இரகசியமாக பள்ளம் தோண்டி திருட்டுத்தனமாய், இஸ்ரேலுக்குள் கன்னம் போடுவது, குண்டு வெடிப்பது என்று ஹமாசும்; பாலஸ்தீனத்துக்கு நியாயமாக சேரவேண்டிய அவர்களின் வரிப்பணத்தைக் கொடுக்காமல் அடாவடி செய்வது, அன்றாடம் வேலை செய்தவர்களை உள்ளே நுழைய விடாமல் தினக்கூலியில் கைவைப்பது என்று இஸ்ரேலும் விளையாடிக் கொண்டிருக்கிறது.

    இது நவீன போர்களின் காலம். ஈராக் போரில் சதாம் தலைமை இல்லாவிட்டாலும், அந்த நாட்டு இராணுவமே பொதுமக்களை பாதுகாக்க நினைத்தாலும், கெரில்லா போரில், அமெரிக்காத் தோற்றுப் போய் பல ஆண்டுகள் கடந்து விட்டது. (ஈராக் – அமெரிக்க போர் குறித்து இந்த வருட ஆரம்பத்தில் எழுதிய ரிப்போர்ட்)

    கடவுளின் கட்சிக்கு கிட்டத்தட்ட 6,000 வீரர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்களை அழிப்பது இஸ்ரேலுக்குப் பெரிய விஷயமாக இருக்காது. ஆனால், தப்பித்துப் போவது ஒரு சிலரேயானாலும், ஈராக்கை போல் புதிய போராளிகளை நியமிப்பது, குடும்பத்தை இழந்தவர்களுக்கு தூபம் போட்டு தீவிரவாதி ஆக்குவது, கொரில்லா யுத்தத்தைத் முன்னெடுத்து செல்வது போன்றவற்றை சளைக்காமல் தொடர்வார்கள்.

  • ஈரானின் தற்போதைய பிரதம மந்திரி Mahmoud Ahmadinejad-இன் ‘நாஸி அடக்குமுறையே கிடையாது. யூதர்கள் பம்மாத்து செய்கிறார்கள்’ என்று பொதுவில் பேசி, சிரியாவின் மூலமாக ஹெசபொல்லாவைத் தூண்டி விட்டு – செய்யும் அரசியலையும்;
  • ஹமாஸ் வளர்வதால் இஸ்ரேலும் அமெரிக்காவும் அடங்கிப் போகும் சாத்தியக் கூற்றில், ரஷியாவை மீண்டும் ஆதிக்க சக்தியாக்கும் ப்யூடினின் திட்டத்தையும்;
  • மீசையில் மண் ஒட்டியதைத் தட்டிவிட இஸ்ரேல் தலைவர் Ehmud Olmert, ‘தானும் அடித்து ஆட வல்லவன்’ என்று நிரூபிக்கும் ஆண்மை பிரஸ்தாபிப்பையும்; சேர்த்துப் பார்க்காமல், ‘இஸ்ரேலின் தற்காப்பு/பயங்கரவாதம்’ என்று பொதுமையாக்க இயலாது.

    இஸ்ரேலின் இந்தத் தாக்குதலில் தொலைதூரப் பார்வை இருக்கிறதா, வெற்றி பெறுமா என்பதைத்தான் – ஏற்றி விட்டு வேடிக்கை பார்க்கும் இரானும், நிரந்த்ரப் பகை பாராட்டும் சிரியாவும், விஷயமே தெரியாமல் தாக்கிக் கொண்டிருக்கும் ஹிசபொல்லாவும் ஆராய வேண்டும். அமெரிக்காவைத் தாக்காத வரைக்கும் உலகம் எக்கேடு கெட்டுப் போனாலும் அமெரிக்காவுக்கு கவலையில்லை. இரானிய் பிரதமருக்கும் இதே எண்ணம்தான். ஈரானை நேரடியாக பிறர் தாக்க முடியுமா, எப்படி தற்காத்துக் கொள்ள முடியும் என்று சோதனைச்சாலையாக லெபனானைப் பயன்படுத்துகிறார்.

    ஹெசபொல்லா என்னும் அண்டை வீட்டார் சொற்படி நடக்கும் முரட்டு குழந்தையைக் கட்டுப் படுத்த முடியாததால், லெபனான் தன்னுடைய வீட்டையே பாழாக்கிக் கொண்டிருக்கிறது.

    இந்த விவகாரம் குறித்து கிலோபைட் குவித்துக் கொண்டே போகலாம். நான் ஒத்துப் போகும், லாஜிக் உடைய எண்ணப் பதிவுகளை படிக்க கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொள்வது சாலச் சிறந்தது:

  • New conflicts in an old war in the Middle East – The Boston Globe
  • Guardian Unlimited | Special reports | On the brink of chaos
  • Guardian Unlimited | Special reports | The war gets wider and worse

    இஸ்ரேலுக்கும் அண்டை நாடுகளுக்குமான பிரச்சினை குறித்து கீழ்க்கண்ட பதிவுகள் படிக்க கிடைத்தது:

    1. தமிழ் சசி

    2. ஸ்ரீகாந்த் மீனாக்ஷி

    3. முத்து (தமிழினி)

    4. வஜ்ரா ஷங்கர்

    இஸ்ரேலும் அதன் சுற்றுப்புறமும் தொடர்பான என்னுடைய முந்தைய பதிவுகள்:
    1. தி சிரியன் ப்ரைட் (திசைகள்)

    2. யாஸர் அராஃபத் (தமிழோவியம்)

    3. சண்டக்கோழி அமெரிக்கா :: Why We Fight (தமிழோவியம்)

    தொடர்பான தகவல்கள்:

  • Guardian Unlimited | Special reports | What the papers said
  • Fighting on Two Fronts
  • Welcome to World War Three — or as the neocons call it, World War Four
  • Dar Al Hayat – When is Terrorism Not Considered as Terrorism (Ayoon Wa Azan) :: (லெபனான் சார்பு கருத்தாக்கம்)
  • Israel’s Invasion, Syria’s WarNew York Times
  • மத்திய கிழக்குப் பகுதியை நன்கு அறிந்த ஏழு வல்லுநர்களின் எண்ணக்கோர்வை
  • Watching, blogging … bombing

    கார்டியன் நாளிதழ் :: Interactive guides
    இஸ்ரேலின் சரித்திரம் | ஜூன் 2006: காஸா நுழைவு | அஹ்மத் யாஸின் | ஜெனின் போர் | இஸ்ரேலும் லெபனானும் | ஹெசபொல்லா – லெபனான் : தற்கால நிகழ்வுகள்

    சமீபத்திய நிகழ்வுகள் – வரிசைப்படி
    1999 | 2000 | 2001 (1) | 2001 (2) | 2002 (1) | 2002 (2) | 2002 (3) | 2002 (4), 2003 | 2004 | 2005


    | |