Bottlencks in electing Dalits as Local Body Leader – Theni : Okkaraipatti

Dinamani.com – TamilNadu Page

தலைவர் பதவி தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு: உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடாமல் புறக்கணிப்பு

தேனி, செப். 28: தேனி மாவட்டம் ஒக்கரைப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் பதவி சுழற்சி முறையில் தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதால், இவ் ஊராட்சியின் வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடாமல் இவ்வூர் மக்கள் புறக்கணிப்பு செய்துள்ளனர்.

இந்த ஊராட்சியின் தலைவராக 1965-ம் ஆண்டிலிருந்து அங்கு பெரும்பான்மையாக வசிக்கும் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தலைவராக பதவி வகித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சுழற்சி முறையில் ஊராட்சித் தலைவர் பதவி, இத்தேர்தலில் தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தலைவர் பதவிக்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 4 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஆனால் 6 வார்டு உறுப்பினர் பதவிகளில் 4 பேர் பொதுப் பிரிவிற்கும், 2 பேர் தாழ்த்தப்பட்டோருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஊராட்சிமன்றத் தலைவர் பதவியை தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்த ஊராட்சி மக்கள் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மனுத்தாக்கல் செய்யவில்லை.

இதனால் ஊராட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், வளர்ச்சித் திட்டப்பணிகளை நிறைவேற்ற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வேட்புமனு வாபஸ்?: ஊராட்சிமன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு கிராம மக்கள் மனுத்தாக்கல் செய்யாமல் புறக்கணித்துள்ளதால், தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்துள்ள 4 பேரும் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெறக்கூடும் என்ற கருத்து நிலவுகிறது. இல்லையெனில் அங்குள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கிராம மக்கள் வாக்களிக்காமல் தேர்தல் புறக்கணிப்புச் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.

Pappapatty & Keeripatty gets Electoral candidates after 10 Years

Dinamani.com – TamilNadu Page

10 ஆண்டுகளுக்குப் பின்னர் கீரிப்பட்டி ஊராட்சிக்கு மனு தாக்கல்

உசிலம்பட்டி, செப். 28: தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டதால் 10 ஆண்டுகளாகத் தேர்தல் நடைபெறாமல் இருந்த மதுரை மாவட்டம், கீரிப்பட்டி ஊராட்சித் தலைவர் பதவிக்கு தற்போது வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று பாப்பாபட்டி, நாட்டார்மங்கலம் ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கும் வேட்புமனுக்கள் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த கிராமங்களில் ஜனநாயக நடைமுறையை மலரச் செய்ய மாவட்ட ஆட்சியர் த. உதயசந்திரன் மேற்கொண்ட முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு பால்ச்சாமி, எஸ்.பரமன், ஏ.சுப்பன் ஆகியோர் புதன்கிழமை மனு தாக்கல் செய்தனர்.

கீரிப்பட்டி 1-வது வார்டுக்கு காசிமாயன், பழனியம்மாள். 2-வது வார்டுக்கு சுப்பையா, தவசித்தேவர், 3-வது வார்டுக்கு சுப்பன், நாகஜோதி ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

பாப்பாபட்டி: பாப்பாபட்டி ஊராட்சித் தலைவர் பதவிக்கு பேச்சியம்மாள், பெரியகருப்பன், ஜெயக்கண்ணன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

பாப்பாபட்டி 1-வது வார்டுக்கு தேவராஜ், பாண்டி, ராஜேஸ்வரன், தவமணி, சின்னத்தாய், முருகன் ஆகியோர் மனுச் செய்தனர்.

2-வது வார்டுக்கு மொக்கராஜ், ராஜப்பன், அலமு, மாயன், பேச்சியம்மாள், மோளத்தேவர் ஆகியோர் உதவித் தேர்தல் அதிகாரி தர்மராஜிடம் மனு தாக்கல் செய்தனர்.

நாட்டார்மங்கலம்:நாட்டாமங்கலம் 1-வது வார்டுக்கு கென்டியான் மகன் பெருமாள், ராஜா மனைவி வசந்தா, 2-வது வார்டுக்கு பூசாரி சிங்கம் மனைவி பவுன்தாய் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

உசிலம்பட்டி நகராட்சி: உசிலம்பட்டி நகராட்சி 5-வது வார்டுக்கு மதிமுக சார்பில் அடைக்கலம், 19-வது வார்டுக்கு ஜே.டி.குமார், 9-வது வார்டு (ஊராட்சி) பழனித்துரை, 3-வது வார்டுக்கு சிவனம்மாள் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

One More Papparapatti, Keeripatti in the Making

Dinamani.com – TamilNadu Page

கூத்தப்பார் பேரூராட்சித் தலைவர் பதவி: ஒருவர்கூட மனுச் செய்யவில்லை

திருச்சி, செப். 28: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள கூத்தப்பார் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு ஒருவர்கூட மனு தாக்கல் செய்யவில்லை.

18 வார்டுகளைக் கொண்டது கூத்தப்பார் பேரூராட்சி. திருச்சி மாநகருக்கு அருகிலுள்ள இப்பேரூராட்சித் தலைவர் பதவி சென்ற தேர்தல் வரை பொதுத் தொகுதியாக இருந்தது. இதுவரை கிராமத்தினர் ஒன்றுகூடி தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஒருமனதாகத் தேர்வு செய்துள்ளனர்.

சுழற்சிமுறையில் ஏற்பட்ட மாற்றத்தில் கூத்தப்பார் பேரூராட்சித் தலைவர் பதவி, எஸ்சி-எஸ்டி வகுப்பினருக்கான தொகுதியாக ஒதுக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் கூத்தப்பார் பேரூராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுக்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

22-ம் தேதி 7 மனுக்களும், 23-ம் தேதி 1, 25-ம் தேதி 1, 26-ம் தேதி 21, 27-ம் தேதி 11 என 41 மனுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடைசிவரை ஒருவர்கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதுகுறித்து பேரூராட்சியின் செயல் அலுவலரும் தேர்தல் அலுவலருமான பி. அழகிரிசாமி கூறியது:

மனுக்களை வாங்கிச் சென்றவர்களும்கூட மனு தாக்கல் செய்யவில்லை. இது தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விளக்கமளித்து விட்டேன்’ என்றார்.

இதுவரை ஊர்க் கூட்டத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஒருமனதாகத் தேர்வு செய்து வந்த பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தற்போது எஸ்சி தொகுதியாகத் தலைவர் பதவி ஒதுக்கப்பட்டதையடுத்துப் புதிய தலைவரைத் தேர்வு செய்வதில் திணறியதாகக் கூறப்படுகிறது.

திமுக, அதிமுக உள்ளிட்ட எந்தப் பெரிய கட்சியும் வேட்பாளர்கள் தேர்வுப் பட்டியலிலும் கூத்தப்பாரைக் குறிப்பிடவில்லை.

What can I codemn today?

பாடலும் பகிஷ்கரிப்பும் – பகிரங்க பயங்கரம்

பரபரப்பாக எவரையாவது கண்டிக்க மனம் பதைபதைத்தது. கிடைத்ததை வன்மையாக நையப் புடைக்க விஷயம் தேடும்போது ‘பேரரசு’வும் ‘கேடி’யும் போட்டி போட்டனர். கடைசியில் வென்றது என்னவோ ‘கேப்டன்’ விஜய்காந்த்தான். இந்த முறை விமர்சிக்க ‘பேரரசு’க்கு வாய்ப்பு கிடைத்தாலும், நாளைக்கு சமாசாரம் எதுவும் அகப்படாவிட்டால், ‘கேடி’யையும் விடமாட்டேன் என்பதை அரங்கில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

முதலில் பாடலைக் கேட்க (Raaga.com)

பொண்டாட்டியா நீ கிடைச்சா
கொண்டாட்டம்தான் எனக்கு

மனைவி கிடைத்தால் மகிழ்ச்சியா? மணமுடித்த எவரைக் கேட்டாலும் ‘பாய்ஸ்’ படத்தில் வரும் ‘காதில் வளையம் போட்டால் தப்பு…’ பாடலைப் போல் மனமொடிந்து வருந்துவாரே! ‘அலைபாயுதே’ திரைகானமான ‘செப்டம்பர் மாத’த்திற்கு எசப்பாட்டாகவும் இந்தப் பல்லவியை கருதி மன்னிக்கலாம்.

என்னை நீயும் கட்டிக்கிட
சம்மதமா உனக்கு

இந்த வரிகள் அப்படியே சமீபத்திய திரைப்படத்தின் அப்பட்டமான காப்பி என்பதை வாசகர்கள் உணர்ந்திருக்கலாம். ‘சம்திங் சம்திங்’ என்று நாமகரணமிட்டிருப்பதால் அரசியல்வாதிகளின் அலுவலைக் குறிப்பதால் கண்டிக்கப்பட்டு சம்திங் வாங்காமல் ‘உனக்கும் எனக்கும்’ என்று உருமாறிய டைட்டில் இங்கே கையாளப்பட்டிருப்பது கற்பனைப் பஞ்சத்தை சுட்டுகிறது.

புருசனாக நீ கெடைக்க
கொடுத்து வச்சிருக்கு

வரதட்சிணை வாங்குவதும் தருவதும் சட்டப்படி குற்றம் என்றறியாத பாடலாசிரியர் நீதிமன்ற அவமதிப்புக்குள்ளாகிறார். ‘கொடுத்து வைத்திருக்கிறது’ என்பது முன்பணம் போல் கையூட்டாக சொல்வது, சமூக சீரழிவை வாழ்த்தி வரவேற்பது கண்டிக்கத்தக்கது.

பத்து டஜன்
பிள்ளை கூட
பெத்து தாரேன் உனக்கு

தாங்கள் பாடல் எழுதும் திரைப்படங்களை பாடலாசிரியர்களே பார்ப்பதில்லை போலும். ‘திருப்பதி’யில் (படிக்க :: திருப்பதியில் – பேரரசு சொன்ன தீர்வு) நாயகன் எவ்வளவோ அறிவுறுத்தியும் இன்னும் மருத்துவர்களை நோகடிக்க 120 மகவுகளை ஈன்றெடுப்பேன் என்று மிரட்டுவது சமுதாய விடிவெள்ளிக் கருத்துக்களை நசுக்குவதற்கு ஒப்பானது.

வெட்டவெளியில் உனக்கு
இந்த கெட்ட குறும்பு எதுக்கு

வெளியே தெரியாமல் வீட்டுக்குள்ளே செய்தால் ‘கெடுதலும் நன்மை பயக்கும்’ என்று பொருள்படுவது சொல்லொண்ணா வருத்தத்தில் ஆழ்த்துகிறது. ‘உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்’ என்னும் இராமலிங்க வள்ளலாரின் மொழிக்கு மாற்றாக அமைந்துள்ள இந்த வரிகள் கண்களில் கண்ணீரை சொரிய வைக்கிறது.

கிட்ட நெருங்குன உனக்கு
பட்டம் கொடுக்கறேன் இருக்கு

பட்டம் வாங்குவது என்ன சுளுவான சமாச்சாரமா? நான்கு வருடம் கழிந்து விடும். ‘கப்பு’கள் சேரும். ‘முஸ்தபா முஸ்தபா’க்கள் பாடப்படும். திரையரங்குகள் நிறைக்கப்படும். இப்படி எவ்வளவோ இருக்க, எதோ, காதல் தேசத்தில் உரசினாலே பட்டம் கொடுத்து விடுவார்கள் என்பது போன்ற வெந்த புண்ணில் வேர்க்கடலை போட்டுக் குளிர் காய்வது, நெஞ்சத்தை வறுத்தெடுக்கிறது.

திருடித் தின்னா ருசி அதிகம்
தெரியாதா உனக்கு

இங்கு இரண்டு திரைப்படங்களை குறிப்பால் உணர்த்தி வாசகனை குழப்பத்தில் ஆழ்த்துகிறார். முதலில் ‘அழகி’. சிறுவயது நாயகனும், அவனுடைய பள்ளித் தோழியும் திருடுவது பாடல் நடுவில் காட்டப்படும். மற்றொரு படம் சமீபத்திய ‘திருட்டுப் பயலே’. அப்பாஸும் திருடி உண்கிறான். ஜீவனும் திருடியே சாப்பிடுகிறான். இருவரும் இறக்கிறார்கள். இந்த மாதிரி முடிவுகளைத்தான் விரும்புகிறதா இந்தப் பாடல்?

உன்னப் பெத்தவள பார்த்தா
கோயிலே கட்டுவேண்டி ஆத்தா

‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்பதற்கேற்ப அமைந்த வரிகளைப் பாராட்ட நினைக்கும்போதே, உறுத்தும் சொற்களை நடுவில் ஊடாடவிட்டு மனம் வெதும்ப வைக்கிறார். ஹீரோயினுக்கு கோயில் எழுப்புவது தொன்று தொட்டு அமைந்த தமிழ் மரபு. த்ரிசாவுக்கு பாலாபிஷேகம் செய்து அழகு பார்ப்பது திராவிட நாகரிகம். நாயகியின் அம்மா அழகாகவே இருந்தாலும் அக்கா வேடத்தோடு நிறுத்திக் கொல்லும் கலாச்சாரத்தை, கட்டுடைத்தலாக அமைந்திருக்கும் வரிகள், தொன்று தொட்டு நிலவி வரும் பழக்க வழக்கங்களை சின்னாபின்னமாக்க அழைக்கிறது.

இதற்கு மேல் தட்டச்ச பலகை பதவிசாக அழைத்தாலும், பொறுமை சோதிக்கிறது. வாசகர்கள் தங்கள் மேலான கோபங்களைத் தொடர்ந்து மிச்ச சொச்ச வரிகளுக்கும் போட்டு விடுமாறு கடுமையாக எச்சரிக்கிறேன்.

எடுத்துக்காட்டாக இரண்டு:

1. இடுப்பு இறக்கத்திலே ஏற்றம் இறச்சிடவா?
உடம்ப உழுதுபோட்டு உசிரை அதில் விதச்சிடவா?

எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றமிறைத்தாயா? நாற்று நட்டாயா? களை பறித்தாயா? அல்லது கழனி வாழ் உழவருக்கு நீ கஞ்சிக்கலையம் சுமந்தாயா? அல்லது நீ மாமனா? மச்சானா? மானம் கெட்டவனே..

போரடித்து நெற்குவிக்கும் தமிழ் நாட்டு மறவர் கூட்டம் கவிஞர்களின் உடல்களை போரடித்து தலைகளை நெற்கதிர்களாய் குவித்து விடும்.. ஜாக்கிரதை!

2. கொஞ்சம் இடங்கொடுத்தா
குடித்தனம்தான் நடத்தறியே

பாட்டெழுதும் புலவர் பேச்சிலராக சென்னை மாநகரத்திலே வசித்ததுண்டா? ‘வீடு’ திரைப்படத்தை கண்ணுற்றதுண்டா? காதல் மணம் புரிந்தவர்கள், புலால உண்ணுபவர்கள், மது அருந்துபவர்கள், வலைப்பதிபவர்கள் என்று ஒரு கண்ணில் வெண்ணெய்.. ஒரு கண்ணில் சுண்ணாம்பு பார்க்கும் சமூக அவலத்தை நேரடியாக அனுபவித்த வலி அறிந்திருந்தால், இவ்வாறு கூப்பாடு போட்டிருக்க மாட்டார்.


முழுப் பாடலைப் படிக்க:

ஆண்:
பொண்டாட்டியா நீ கிடைச்சா
கொண்டாட்டம்தான் எனக்கு
என்னை நீயும் கட்டிக்கிட
சம்மதமா உனக்கு

பெண்:
புருசனாக நீ கெடைக்க
கொடுத்து வச்சிருக்கு
பத்து டஜன்
பிள்ளை கூட
பெத்து தாரேன் உனக்கு

ஆண்:
வெட்டவெளியில் உனக்கு
இந்த கெட்ட குறும்பு எதுக்கு

பெண்:
கிட்ட நெருங்குன உனக்கு
பட்டம் கொடுக்கறேன் இருக்கு

திருடித் தின்னா ருசி அதிகம்
தெரியாதா உனக்கு

ஆண்:
உன்னப் பெத்தவள பார்த்தா
கோயிலே கட்டுவேண்டி ஆத்தா

பெண்:
உடம்பு ரேகையெல்லாம் உதட்டால் எண்ணிடவா?
உச்சந்தலையிலேறி ஒத்தைக்காலில் நின்றிடவா?

ஆண்:
இடுப்பு இறக்கத்திலே ஏற்றம் இறச்சிடவா?
உடம்ப உழுதுபோட்டு உசிரை அதில் விதச்சிடவா?

பெண்:
நீ…
கள்வடியும் தென்னை
தினம் மயக்குறியே என்னை
நான் நம்புறேனே உன்னை
அட…
வேற என்ன பண்ண

ஆண்:
நீ…
தேன் வடியும் பூவு
நல்லா திரண்டு நிற்கிற தீவு
உன்னத் தின்னா தீரும் நோவு
நான் போடப் போறேன் காவு

ஆண்:
உன்னப் பெத்தவள பார்த்தா
கோயிலே கட்டுவேண்டி ஆத்தா

ஆண்:
செவ்வாழக் குருத்துப் போல
செவந்து நிக்கறியே

கொஞ்சம் இடங்கொடுத்தா
குடித்தனம்தான் நடத்தறியே

பெண்:
கருத்த உடம்புக்குள்ள
நெருப்ப வச்சிருக்கே

நானும் கண்ணசந்தா
எம்மடியில இறக்கி வப்ப

ஆண்:
முந்திரியப் போல கொஞ்சம் முட்டி முளைச்சதால
நீ சீண்டுறடி ஆள
வேணாம்…
பொறப்பட்டுடும் காள

பெண்:
நீ வாங்கிக் கொடு சேல
நான் கால் முளைச்ச சோல
நீ எழுதிக் கொடு ஓல
நான் புடிச்சி வுடறேன் கால

ஆண்:
உன்னப் பெத்தவள பார்த்தா
கோயிலே கட்டுவேண்டி ஆத்தா


இந்தப் பதிவில் குறித்த இன்னொரு இன்னிசையை (கேட்டு) கண்டிக்க: உன்னப் பெத்த ஆத்தா


| |

Official website for Tamil Nadu Local Body Elections

Dinamani.com – TamilNadu Page

இணையதளத்தில் உள்ளாட்சித் தேர்தல் விவரங்கள்

சென்னை, செப். 27: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான செய்திக் குறிப்புகள், நன்னடத்தை விதிகள் மற்றும் வேட்பாளர்களுக்கான கையேடுகள் ஆகியன இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இந்தத் தகவல்கள் அடங்கியுள்ளன.

இணையதள முகவரி: www.tnsec.tn.nic.in

Vijayganth Chooses ‘Dheepam’ as Electoral Symbol

Dinamani.com – TamilNadu Page

தீபம் சின்னத்தில் போட்டியிட விஜயகாந்த் கட்சி முடிவு

சென்னை, செப். 27: உள்ளாட்சித் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிடர் கழக வேட்பாளர்கள் தீபம் சின்னத்தில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் ராமுவசந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை:

நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் அனைத்து இடங்களிலும் போட்டியிடுகிறது. இதில் கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறுகின்ற மாவட்ட ஊராட்சி குழு வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர், மாநகராட்சி வார்டு உறுப்பினர், நகராட்சி வார்டு உறுப்பினர், பேரூராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தீபம் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே மேற்கண்ட பதவிகளுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் தங்களுடைய வேட்புமனுவில் தீபம் சின்னத்தை குறிப்பிட்டு வேட்பு மனுத் தாக்கல் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

DMK Alliance Details for Local Body Polls

Headline News – Maalai Malar

தி.மு.க. கூட்டணி இடப்பங்கீடு முழு விபரம்: கருணாநிதி வெளியிட்டார்

சென்னை, செப். 26-
முதல்-அமைச்சர் கருணாநிதி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தலில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்களை அறிவித்தார்.

இது தொடர்பாக முதல்- அமைச்சர் கருணாநிதி கூறிய தாவது:-

முதல்நிலை நகராட்சி :: மொத்தம்- 102

தி.மு.க.- 52
காங்கிரஸ்- 25
பா.ம.க.- 12

மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு- 8
இந்திய கம்ïனிஸ்டு- 5

3-ம் நிலை நகராட்சி :: மொத்தம்- 50

தி.மு.க.- 23
காங்கிரஸ்- 13
பா.ம.க.- 6

மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு- 4
இந்திய கம்ïனிஸ்டு- 4

பேரூராட்சி :: தலைவர் பதவி – மொத்தம்- 561

தி.மு.க.- 284
காங்கிரஸ்- 134
பா.ம.க.- 70

மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு- 45
இந்திய கம்ïனிஸ்டு- 28

ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் :: மொத்தம்- 385

தி.மு.க.- 185
காங்கிரஸ்- 95
பா.ம.க.- 60

மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு- 25
இந்திய கம்ïனிஸ்டு- 20

மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி :: மொத்தம்- 29

தி.மு.க.- 12
காங்கிரஸ்- 7
பா.ம.க.- 5

மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு- 3
இந்திய கம்ïனிஸ்டு- 2

மாநகராட்சி மேயர் பதவி :: மொத்தம்- 6

தி.மு.க.- 4
காங்கிரஸ்- 2

தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் இந்திய ïனியன் முஸ்லிம் லீக், தமிழ் மாநில தேசிய லீக், அகில இந்திய பார்வர்டு பிளாக் (வல்லரசு பிரிவு), எம்.ஜி.ஆர். கழகம், உழவர் உழைப்பாளர் கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கப்படும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.

Art Appreciation Series – PA Krishnan : Part IV

பகுதி ஒன்று | இரண்டு | மூன்று.
தொடரைப் பகிர்ந்து கொண்ட பிஏ கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி

உயிருண்ட ஓவியங்கள் :: பி.ஏ.கிருஷ்ணன்

1

எனக்குப் பிடித்த சிறுகதைகளில் ஒன்று அனடோல் பிரான்ஸ் எழுதிய The Procurator of Judea. இந்தக் கதை ஏசுநாதர் சிலுவையில் அறையப் பட்ட போது எருசெலத்தில் இருந்த இரு ரோமாபுரி படைத் தலைவர்களைப் பற்றியது. பல வருடங்கள் கழித்து இருவரும் சந்தித்துக் கொள்கின்றனர். ஒருவர் மற்றொருவரிடம் கேட்கிறார்: “உனக்கு நினைவு இருக்கிறதா? நாசரத்தின் ஜீஸஸை? சிலுவையில் அறையப் பட்டாரே.”

“எனக்கு நினைவு இல்லை.”

ஏசுநாதர் அவர் காலத்திற்கு அருகாமையில் வாழ்ந்தவர்களுக்கு அதிகம் தெரிந்திராதவர். கிறிஸ்தவ மதம் ஐரோப்பாவில் ஊன்ற ஆரம்பித்தது ஏசுவின் மறைவிற்கு முன்னூறு ஆண்டுகளுக்குப் பிறகு. பேரரசர் கான்ஸ்டன்டைன் தனது மிலன் அறிக்கையில் கிறித்தவ மதத்திற்கு அங்கீகாரம் அளித்த பின்.

கிறித்தவ மதம் வளரத் தொடங்கிய உடனேயே ஓவியங்களில் அந்த மதத்தின் தாக்கம் வளரத் தொடங்கி விட்டது. முதல் கிறித்தவர்களுக்கு ஓவியங்களின் மீது அவ்வளவு நாட்டம் இல்லை. மேலாக ஒரு வெறுப்பு இருந்தது. யூத மதத்தின் தாக்கம் அது. ஆனாலும் ஒரு ஓவியம் அசையாது, இருந்த இடத்தில் இருந்து கொண்டு எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கும் செய்தி படிக்காத மக்களை எளிதாகச் சென்றடையும் என்பதையும் முதற் கிறித்தவர்கள் அறிந்திருந்தார்கள். எனவே ஓர் இரட்டை மனப்பான்மையோடு அவர்கள் ஓவியத்தை அணுகினார்கள். கிரேக்க ரோம ஓவியங்களில் இருந்த துடிப்பு அவர்களது ஓவியங்களிலும் மொசைக் சித்திரங்களிலும்-சில விதி விலக்குகளைத் தவிர- அநேகமாக இல்லை. நளினமும், இயற்கையும், மூன்றாவது பரிமாணத்தின் ஆழத்தைக் காட்ட வேண்டும் என்ற தவிப்பும் இந்த ஒவியங்களில் மறைந்து போயின. ஓவியங்கள் உடலைச் சித்தரிப்பதை விட உடலுள் இருக்கும் ஆன்மாவைச் சித்தரிக்க முயல வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி நின்றது.

ரவெனா என்ற இத்தாலிய நகரத்து தேவாலயத்தில் இருக்கும் ஒரு மொசைக் சித்திரம் ஒரு விதி விலக்கு. பைபிளில் வரும் ஒரு அற்புதத்தைக் கூற முயல்கிறது. ஏசு பிரான் ஐந்து ரொட்டிகளையும், இரு மீன்களையும் வைத்துக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளிக்கும் அற்புதம் அது. பின் புலம் தங்க நிறத்தில் இருக்கிறது. ஏசு பிரான் தலையைச் சுற்றிய ஒளிவட்டம் தெளிவாகத் தெரிகிறது. ஒளி வட்டம் கிரேக்க ரோமக் கடவுளர்களின் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தது. ஏசு பிரானுக்கு பின்னால் இப்போது வந்து விட்டது. இந்த ஏசு தாடி வைத்த ஏசு அல்ல. பெரிய கண்களையுடைய ஒரு முப்பதாண்டு இளைஞர். கைகளை விரித்துக் கொண்டு ஆசி அளிக்கிறார். ஊதா மேலாடை அவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. இரு புறமும் வெள்ளை ஆடை அணிந்த அப்போஸ்தலர்கள் அவரிடம் ரொட்டிகளையும் மீன்களையும் கொடுக்க முற்படுகிறார்கள்- துணியால் கைகளை மறைத்து வைத்துக் கொண்டு ஒரு அரசரிடம் காணிக்கை செலுத்துபவர்கள் போல. ஏசுபிரானின் முதன்மையும், உறுதியும், பெருமிதமும் இந்த ஓவியத்தில் தெளிவாகத் தெரிகிறது. இந்தக் கலைஞன் தேர்ந்தவன். அவனுக்கு கற்களின் வண்ண வேறுபாடுகள் மூலம் மனித முகத் தோலின் மென்மையைக் காட்ட முடிந்திருக்கிறது.. நிழல்களைக் கொணர முடிந்திருக்கிறது. ஓவியத்தின் இருபுறங்களிலும் பாறைகளில் முளைத்திருக்கும் பசிய செடிகள். இந்தச் செடிகளே அன்றைய ஓவியக் கலையின் உருவகமோ என்று நம்மை நினக்க வைக்கிறது இந்த மகத்தான மொசைக் சித்திரம்.


2

இது ஒரு எளிய அறிமுகம் என்பதால் பைசாண்டிய ஓவியங்களைப் பற்றி அதிகம் எழுத விரும்பவில்லை. பைசாண்டிய ஓவியங்கள், தங்களுக்குள் கிரேக்க உத்திகளைப் பொதிந்து வைத்துக் கொண்டு, மேற்கத்திய ஓவியங்களுக்கு முன்னோடிகளாக இருந்தன என்று கலை விமரிசகர்கள் கருதுகிறார்கள். நிழல்-ஒளியின் விளையாட்டு, முன்குறுக்கம் போன்ற உத்திகள் பைசாண்டிய ஓவியங்களில் மறைந்து இருந்து கொண்டு ஒரு மேதையின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தன. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் காத்திருக்க வேண்டியிருந்தது. இன்று நினைத்துப் பார்க்கும் போது இந்தக் காத்திருப்பு நமக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. ஆனால் அன்றைய கலைஞர்களிடம் நீங்கள் புதிதாக ஏன் எதுவும் வரையவில்லை என்ற கேள்வி கேட்கப் பட்டிருந்தால் அவர்களுக்கு கேள்வி புரிந்திருக்காது. இன்று பாடும் இசைக் கலைஞர்களிடம் நீங்கள் ஏன் பழைய ராகங்களையே பாடிக் கொண்டிருக்கிறீர்கள், ஏன் புது ராகங்களைக் கண்டு பிடித்துப் பாடக் கூடாது என்ற கேள்வி கேட்கப் பட்டாலும் அவர்களுக்கு அந்தக் கேள்வி புரியாது. தமது மூதாதையர்கள் செய்ததையே திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருந்த இந்த ஓவியர்கள் மாற்றங்களை நாடவேயில்லை என்று கூற முடியாது. ஆனால் மாற்றங்கள் மெதுவாக நிகழ்ந்தன. ஒரு தேர்ந்த விமரிசகன் மட்டுமே புரிந்துக் கொள்ளக் கூடிய மாற்றங்கள். உதாரணமாக நமது கோவில்களின் தூண்களைப் பார்த்த உடனேயே அந்தத் தூண்கள் தாங்கி நிற்கும் கட்டிடம் பல்லவர் காலத்ததா, சோழர் காலத்ததா, அல்லது நாயக்கர் காலத்ததா என்பதை நிர்ணயித்து விடலாம். ஆனால் தேர்ச்சி பெறாத ஒருவருக்கு எல்லா கட்டிடங்களும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும்.

போன இதழில் ஓவியம் கடவுளின் சொற்களைப் படிக்காதவர்களுக்கு விளக்க முயல்கிறது என்று குறிப்பிட்டிருந்தேன். இந்தக் கூற்றின் சொந்தக்காரராக அறியப்படும் Pope Gregory the Great ஓவியத்தின் துணை நின்றார். ஓவியங்கள் தேவாலயங்களுக்குள் அனுமதிக்கப் பட்டது எளிய மக்களிடம் மதத்தைப் பரப்ப எவ்வளவு உதவியாக இருந்தது என்பதற்கு ஒரு உதாரணம் இந்த மத்திய கால பிரெஞ்சுக் கவிதை:

நான் ஒரு பெண், ஏழை, வயதால் முதிர்ந்தவள்
ஒன்றும் தெரியாது, படிக்கவோ முடியாது.
எங்கள் கிராமத்தில் ஓர் எளிய தேவாலயம்
அங்கே ஓர் அழகிய ஓவியம்.

அது காட்டுவது-
இசையால் மயங்கும் இனிய சொர்க்கம்
பாவிகள் வேகும் பயங்கர நரகம்

ஒன்று தரும் என்றும் நிறைவு
மற்றது என்றும் மனதைக் கலக்கும்.

ஓவியங்கள் எளிய மக்களிடம் மட்டும் அல்ல அனைவரிடம் பேசக் கூடும், வெவ்வேறு குரல்களில், வெவ்வேறு அளவைகளில் என்பதை அறிய ஒரு மேதைக்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது.


3

புகழ் பெற்ற இத்தாலியக் கலைஞன் ஒருவன் கிராமப்புறத்திற்குச் செல்ல நேர்ந்தது. அவன் செல்லும் வழியை ஆடுகள் மறைத்துக் கொண்டிருந்தன. ஆடுகளை மேய்க்கும் சிறுவன் அருகே உள்ள பாறையில் ஏதோ வரைந்து கொண்டிருந்தான். இந்தக் கலைஞன் அருகில் சென்று பார்த்தான். வரையப் பட்டது ஒரு ஆட்டின் சித்திரம். . ஒரு தேர்ந்த ஓவியனுக்குக் கூட எளிதில் கிட்டி வராத நேர்த்தி இந்தச் சிறுவனிடம் மண்டியிட்டு கிடப்பதைப் பார்த்து அவன் வியப்பில் ஆழ்ந்து போனான். உடனே அந்தச் சிறுவனின் தந்தையிடம் சென்று சிறுவனை தனது மாணவனாகச் சேர்த்துக் கொள்கிறேன் என்று சொன்னான். சிறுவனின் தந்தை சம்மதித்திருக்காவிட்டால் மேற்கத்திய ஓவியத்தின் வளர்ச்சி இன்னும் சில காலம் பின் தங்கியிருக்கலாம். தந்தை சம்மதித்து விட்டான்.

‘எனது காலத்தின் ஒப்பற்ற கலைஞன்’ என்று தாந்தே தனது Divine Comedy நூலில் ஜியோட்டோவைப் பற்றி எழுதினான். அது வரை நடந்திராத அதிசயம் அது. ஜியோட்டோவின் மேதைமைக்குக் கிடைத்த பரிசு.

ஜியோட்டோ 1267ம் ஆண்டு பிறந்தான். 60 ஆண்டுகள் வாழ்ந்த அவன் சென்ற இடம் எல்லாம் சிறப்பைப் பெற்றவன்.. ஃப்ளாரன்ஸ் நகரில் பயிற்சி பெற்ற அவன் அனேகமாக இத்தாலிய நகரங்கள் எல்லாவற்றிலும் தனது ஓவியச் சொத்துக்களை விட்டுச் சென்றிருக்கிறான். அவனது மிகப் புகழ் பெற்ற சுவர் சித்திரங்கள் பாடுவா நகரின் அரீனா தேவாலயத்தில் இருக்கின்றன. அவற்றில் ஒன்று இரங்கல் (The Lamentation).

புனித மேரி மடியில் இறந்த ஏசுபிரான் கிடக்கிறார். ஒளியிழந்த கண்கள். அவரது தலையை தன் கைகளில் தாங்கிக் கொண்டு தாய் தனது கண்களின் ஒளியைத் தர முயல்கிறார். முடியாது என்பதும் அவருக்குத் தெரிகிறது. அழுகை பீறிட்டுக் கொண்டு வருகிறது. புனித ஜான் சற்று தொலைவில் நிற்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு குனிந்து ஏசுபிரானைப் பார்க்கிறார் அவரது கைகள் இறக்கைகள். ஏசு இல்லாத இடத்தை விட்டு பறந்து போய் விடலாமா என்று தோள்களுக்குப் பின்னால் செல்கின்றன. ‘ஓவியம் சிற்பத்தை விட மிக உயர்ந்தது’ என்று சொன்ன கலைஞன் அவன். ஏன் என்பது இந்த ஓவியத்தைப் பார்த்தால் விளங்கும். இறப்பிற்கு உயிர் கொடுக்கும் சித்திரம் இது.

இந்த ஓவியத்தின் முக்கிய நிகழ்ச்சி ஓவியத்தின் கீழ்ப்பகுதியில் நடக்கிறது. நமது கண்கள் முதலில் செல்லும் பகுதி. மேற்பகுதியில் எங்களையும் அண்ணாந்து பார் என்று கூச்சலிட்டுக் கொண்டிருக்கும் தேவதைகள். அவர்கள் முகங்களைப் பார்த்தால் துயரத்தின் பல வடிவங்கள் தெரிகின்றன. கீழே துயரத்தின் கனம் கண்களிலும் வாய்களின் கோணங்களிலும் வெளிப்பட்டால் மேலே அது தேவதைகளின் சிறகடிப்பில் தெரிகிறது. அவர்களை சில கணங்களில் தரையில் இறக்கி விடுமோ என்று நினைக்கத் தோன்றும் கனம். இன்னும் கூர்ந்து பார்த்தால் மரங்களற்ற மலைச்சரிவும் இலையற்ற மரமும் துக்கத்தைத் பெரிதாக்குகின்றன. இலையற்றது ‘அறிவு மரம்’ என்று குறிப்பிடபடும் மரத்தின் சின்னம். ஆதாம் ஏவாள் செய்த பாவத்தால் தனது இலைகளை இழந்த மரம். ஏசுபிரானின் ஈடில்லாத் தியாகத்தால் தனது பசுமையைப் பெறப் போகும் மரம்.

ஜியோட்டோவிற்கு முன்னால் எந்த ஓவியனும் இத்தகைய முயற்சியில் ஈடுபடவில்லை. எனவே அவனது புகழ் மிக எளிதாகப் பரவியது. அவனுக்கும் தனது திறமை மீது அசாத்திய நம்பிக்கை. ஒரு முறை போப் பெனிடிக்ட் XI புனித பீட்டர் தேவாலயச் சுவர்களில் சில சித்திரங்களை வரைய ஏற்பாடு செய்ய நினைத்தார். அவரிடம் யாரோ ஜியோட்டோவின் பெயரைச் சொல்லியிருந்தார்கள். அவன் எப்படிப் பட்டவன் என்பதை அறிய அவனிடமிருந்து அவன் வரைந்த ஓவியம் ஒன்றை வாங்கி வர ஒருவரை போப் அனுப்பினார். ஜியோட்டோவிடம் அவர் தான் வந்த காரணத்தைச் சொன்னதும் அவன் ஒரு தாளை எடுத்து தூரிகையால் கணத்தில் ஒரு வட்டத்தை வரைந்தான். ‘இதை எடுத்துச் செல்லுங்கள்’ என்று சொன்னான். வந்தவருக்குத் தயக்கம். ‘தயங்காமல் செல்லுங்கள்’ என்று ஜியோட்டோ சொன்னான். போப் அந்தத் தாளைப் பார்த்ததும் என்று தெரிந்து கொண்டார் – ஒரு கையால் ஒரு கணத்தில் அவ்வளவு செம்மையாக வட்டம் ஒன்றை ஒரு அசாதாரணமான கலைஞனால்தான் வரைய முடியும் என்று.

அரீனா தேவாலயத்தில் இருக்கும் மற்றொரு சித்திரம்
‘ஏசு காட்டிக் கொடுக்கப் பட்டது’- The Betrayal of Christ. ஏசுபிரானின் சிலுவைப் பயணத்தின் முதல் கட்டம் இங்கு சித்தரிக்கப் படுகிறது. யூதாஸ் ஏசுபிரானின் கன்னத்தில் முத்தம் கொடுப்பதற்கு முந்தைய தருணம். தான் செய்யப் போவது என்ன என்பது ஏசுபிரானுக்குத் தெரியும் என்று அவன் அறியும் தருணம். ஏசுபிரான் அவனை அமைதியாகப் பார்க்கிறார். தனது செயலின் சிறுமையை அவன் உணர்ந்து கொண்டான் என்பதை யூதாஸின் கண்கள் காட்டுகின்றன. முகம் அவன் மனிதத் தன்மையை இழந்து விட்டான் என்பதை வெளிப் படுத்துகிறது.புனித பீட்டர் கோபத்தில் கத்தியை எடுத்து யூத குருவின் சீடனான மால்சஸின் காதை அறுக்க விழைகிறார். காது போகப் போவதைத் தெரியாத அவன் நடப்பதைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறான். பீட்டரை தடுக்க ஒருவன் முயல்கிறான். சித்திரத்தின் மேற்புறம் உயர்த்திய ஆயுதங்களாலும் தீப்பந்தகளாலும் நிறைந்திருக்கிறது. ஜியோட்ட்டோவின் சித்திரங்களில் அனேகமாக ஆடைகள் உடல்களை இறுக்கமாகச் சுற்றியிருக்கும். வரையப்படுபவரின் உடல் அமைப்பை சுற்றியிருக்கும் ஆடை வரையறுக்க முயலும். இந்தச் சித்திரத்திலும் இது மிக அருமையாக அமைந்திருக்கிறது.

ஜியோட்டோவின் ஓவியங்கள் அவன் காலத்தவரை ஏன் கவர்ந்தன என்பது நமக்கு எளிதாகப் புரிகின்றது. அவனுக்கு முன்னால் வரைந்தவர்கள் மனித உணர்ச்சிகளை வரையவில்லை. மர மனிதர்களை வரைந்தார்கள். ஒரு நிகழ்ச்சியின் ஆழம், அதன் சிக்கல் முதலியற்றை ஓவியத்தில் காட்டலாம் என்பதை அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. ஜியாட்டோ உணர்ச்சிகளை வரைய முயன்றவர்களில் முதலில் இருக்கிறான். மனித வாழ்க்கையின் ஓட்டங்கள், அதிர்வுகள், ஆசைகள், துக்கங்கள், இன்பங்கள் இவையெல்லாவற்றையும் ஓவியம் காட்ட முடியும் என்று நமக்கு முதலில் சொன்னவன் அவன். மூன்றாவது பரிமாணத்தை வெல்ல முதலில் முயன்றவன் அவன்.


4

ஜியோட்டோவைப் போலவே மிகப் புகழ் பெற்ற புனிதர் ஒருவர் பன்னீரெண்டாம் நூற்றாண்டின் முதல் ஆண்டுகளில் இருந்தார்.. கிறிஸ்து போலவே தானும் வாழ வேண்டும் என்று உறுதியாக நினத்தவர் அவர். அஸிஸியின் புனித பிரான்ஸிஸ் இன்றும் உலக முழுவதும் போற்றப் படுபவர். இவருடைய கிறிஸ்து நோயுற்றவர்களுக்கு மருந்தளிப்பவர். ஏழைகளுக்கு உதவுபவர். பணம் கையில் வைத்துக் கொள்ளாதவர். சொத்து என்ற சொல்லையே வெறுப்பவர். கடவுளால் படைக்கப் பட்ட எல்லா உயிர்களுக்கும் கடவுளின் செய்தி சென்றடைய வேண்டும் என்று நினைத்தவர்.

பெரிய தேவாலயங்களும், பணம் படைத்த பாதிரிமார்களும் பெருகியிருந்த காலம் அது. எனவே மக்கள் புனித பிரான்ஸிஸ் பக்கம் திரும்பியதில் ஆச்சரியம் இல்லை. எங்கு சென்றாலும் அவருக்கு வரவேற்பு. கடைசி வரை எளிமையாக வாழ்ந்து மறைந்த அவரை அவருக்கு பின்னால் அந்த நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் பல வகைகளில் கொண்டாடினார்கள். அஸிஸியில் அவர் நினைவாகக் கட்டப் பட்ட தேவாலயத்தின் சுவரில் சித்திரங்கள் வரைய அன்றிருந்த ஓவியர்கள் பலர் போட்டி போட்டார்கள்.ஜியோட்டோ 28 சுவர்ச்சித்திரங்கள் வரைந்தான். பிரான்ஸிஸின் வாழ்க்கையின் பல நிகழ்ச்சிகளைச் விளக்கும் இந்தச் சித்திரங்கள் இன்றும் பலரை அஸிஸி நகருக்கு ஈர்க்கின்றன.

எனக்கு பிடித்த ஜியோட்டோவின் (http://www.abcgallery.com/G/giotto/giotto121.html) மற்றொரு சித்திரம் The Adoration of the Magi. கிழக்கேயிருந்து வந்த பெரியவர்கள் குழந்தை ஏசுவை வணங்குவது. மூவரில் ஒருவர் ஏசுவை மண்டியிட்டு வணங்க மற்றைய இருவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நீலக் கண்களுடைய ஒட்டகம் போன்ற ஒன்று நடப்பதைக் கவனித்துக் கொண்டிருக்கிறது. பெருந்தாடி வைத்த ஜோஸப். குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு பெரியவரைக் கனிவோடு பார்க்கும் மேரி. வானத்தில் வால் நட்சத்திரம். இந்த நட்சத்திரம் Halley’s Comet எனப்படும் நட்சத்திரம். 1301ம் ஆண்டு தோன்றியது. ஹாலி வால் நட்சத்திரத்தை பதிவு செய்யவே ஜியோட்டோ இந்தச் சித்திரத்தை வரைந்திருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. தன்னை சுற்றியிருக்கும் உலகைக் கூர்மையாகக் கவனித்தவன் அவன் என்பது இந்தச் சித்திரத்திலிருந்து தெளிவாகிறது.

ஃப்ளாரன்ஸ் நகரில் ஜியோட்டோவின் கல்லறை இருக்கிறது. அதில் எழுதியிருக்கும் வாசகம் இது:

நான் ஓவியத்திற்கு உயிர் கொடுத்த மனிதன். இயற்கையில் காணும் எல்லாவற்றையும் என் கலையில் காண முடியும்.

பி ஏ கிருஷ்ணன்

Betrayal.jpg | Lamentation.jpg | Detail of Christ and Judas


| |

ADMK Alliance Apportioned & Thirumavalavan Interview

தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிமுக தொகுதிப் பங்கீடுBBC

அஇஅதிமுக தனது முக்கிய தோழமைக்கட்சிகளுடன் உள்ளாட்சித் தேர்தல்களுககான தொகுதிப்பங்கீட்டினை இறுதி செய்துவிட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மதிமுகவிற்கு 17.5 சத தொகுதிகளும், விடுதலைச் சிறுத்தைகளுக்கு 4 சதமும் ஒதுக்கப்பட்டிருப்பதாக அஇஅதிமுக தலைமைக்கழகத்தின் செய்தி அறிக்கை கூறுகிறது.

நகராட்சி, பஞ்சாயத்துக்களின் தலைவரகளுக்கு நேரடி தேர்தல்கிடையாது, உறுப்பினர்களே தேர்ந்தெடுப்பார்கள் என்ற நிலையில், தலைவர்களே தனித்தனித் தொகுதிகளை அடையாளம் காணவேண்டிய அவசியமில்லை, மாறாக அந்தந்த வட்டார நிர்வாகிகளிடமே அப்பொறுப்பை விட்டுவிடலாம் என ஜெயலலிதா வைகோவிடமும், திருமாவளவனிடமும் கூறிவிட்டதாகக் கூறப்படுகிறது.


Headline News – Maalai Malar :: விடுதலை சிறுத்தைகளுக்கு இட பங்கீடு போதாது ஆனாலும் திருப்தி அளிக்கிறது: திருமாவளவன் பேட்டி

சென்னை, செப். 25- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித் தார். அவர் கூறியதாவது:-

  • உள்ளாட்சி தேர்தல் கால அவகாசம் தராமல் திடீர் என தமிழக அரசு அறிவித்தது மரபு மீறிய செயல், வேதனை அளிக்கும் செயல். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
  • முஸ்லிம்களின் ரம்சான் நோன்பு நடக்கும் காலத்தில் இஸ்லாமியர்களை மதிக்காமல் தேர்தல் நடத்துவது வேதனை அளிக்கும் செயல்.
  • மேயர், நகரசபை தலைவர்களை உறுப்பினர்களே தேர்ந் தெடுக்கும் நடவடிக்கையின் மூலம் ஆள்கடத்தல், லஞ்ச லாவண்யம் கொடுத்து சட்ட மீறல் ஆகியவற்றுக்கு வழி வகுக்கும். மேலும் மறைமுக தேர்தலை நடத்தக்கூடாது என்று இன்று ஒரு வழக்கு தொடரப்படுகிறது.
  • தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு செய்த குளறுபடியை எடுத்துக் கூறியும், அதையும் மிறி தேர்தலை நடத்துகிறார்கள். இது தொடர்பாக ஐகோர்ட்டில் 3 வழக்குகளை தொடர்ந்துள்ளோம்.
  • ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பதவி, நகரசபை தலைவர், பேரூராட்சி துணைத் தலைவர், மேயர், துணை மேயர் பொறுப்புகளில் கடந்த 10 ஆண்டுகளாக தாழ்த்தப் பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கவில்லை. இந்த பொறுப்புகளில் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.
  • மக்கள் தொகை அடிப்படையில் கீழ் இறங்கும் வரிசையில் தனித்தொகுதி ஒதுக்க வேண்டும். சென்னை மாநகராட்சியில் 14 சதவீத தலித் மக்கள் உள்ளனர். மற்ற மாநகராட்சி பகுதிகளை விட இங்கு 3 சதவீதம் அதிகம் இருக்கிறார்கள். இதனால் சென்னை மாநகராட்சியை தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்று ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணி உள்ளாட்சி தேர்தலில் ஆருடமாக வெற்றி பெறும். எங்களுக்கு போதுமான இடங்கள் தரவில்லை என்றாலும் அவர்கள் ஒதுக்கிய 4 சதவீதம் திருப்தி அளிக்கிறது. கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவோம். எப்போணீஜ்து எங்கு இருந்தாலும் உண்மையாக இருப்போம். நேற்று அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தையில் முதல் நிலை மாவட்டங்கள் 10 கேட்டு இருக்கிறோம். மற்ற மாவட்டங்களில் எங்களது வாய்ப்பு அடிப்படையில் ஒதுக்க வேண்டும் என்று கேட்கிறோம்.

    சென்னை மாநகராட்சியில் கூடுதலாக வார்டுகளை ஒதுக்கு மாறு கேட்டு வருகிறோம். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 4 சதவீத கணக்கின்படி எங்களுக்கு 7 வார்டுகள்தான் கொடுக்கப்படுகிறது. ஜிப்மர் மருத்துவமனைக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கும் முயற்சியை கைவிட வேண்டும்.

    கல்லூரி விரிவுரையாளர்கள் பின்னடைவு காலி யிடங்களை நிரப்பக்கோரி 28-ந்தேதி சென்னையில் எனது தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண தமிழ் எம்.பி.க்களை அழைத்து பேச வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் தமிழன் டி.வி. நிர்வாக இயக்குனர் கலைக்கோட்டுதயம், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்தார்.

    பேட்டியின்போது எம்.எல்.ஏ.க்கள் ரவிக்குமார், செல்வ பெருந்தகை ஆகியோர் உடன் இருந்தனர்.

  • Bidding War for Local Body Elections

    Dinamani.com – TamilNadu Page :: பேரூராட்சி தலைவர் பதவியைப் பெற முயற்சி

    சேந்தமங்கலம், செப். 25: ரூ.20 லட்சம் விலை கொடுத்து காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சித் தலைவர் பதவியைப் பெறும் முயற்சியைப் போலீஸôர் முறியடித்துள்ளனர்.

    நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகேயுள்ளது காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி. இப் பேரூராட்சிக்குட்பட்டு 15 வார்டுகள் உள்ளன. தற்போது, நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் தலைவர் பதவியை ஏலம் விடுவது என முடிவு செய்யப்பட்டு, பேரூராட்சி வளர்ச்சிக்காக யார் அதிக தொகை வழங்குகின்றனரோ அவருக்கே தலைவர் பதவியை விட்டுக் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டிருந்தது.

    பேரூராட்சிப் பகுதியில் உள்ள 3 கோயில்களுக்கும் பேரூராட்சி வளர்ச்சிப் பணிகளுக்கும் ரூ.20 லட்சம் வழங்குபவருக்குப் பதவியை விட்டுத்தரவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

    இது குறித்து, சேந்தமங்கலம் போலீஸôருக்குத் தகவல் கிடைத்ததும் காளப்பநாயக்கன்பட்டிக்கு வெள்ளிக்கிழமை வந்து பேரூராட்சிப்பகுதி முக்கியப் பிரமுகர்களிடம் விசாரணை நடத்தினர். தேர்தல் விதிமுறைகளைப் பின்பற்றி தலைவர் பதவியைத் தேர்ந்தெடுப்போம் என எழுத்து மூலமாக அவர்களிடம் கடிதம் பெற்றனர். ஏலம் விடுவது தொடர்பாக யாரேனும் கூட்டம் நடத்தினாலும், தேர்தல் விதிமுறைகளை மீறினாலும் தொடர்புடையோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.


    ரூ.4 லட்சத்துக்கு தலைவர், ஒன்றியக் கவுன்சிலர் பதவிகள் ஏலம்

    செஞ்சி, செப். 25: செஞ்சி வட்டத்தில் பஞ்சாயத்துத் தலைவர், ஒன்றியக் கவுன்சிலர் பதவிகள் ரூ.4 லட்சத்து 37ஆயிரத்துக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளன.

    செஞ்சி வட்டம் பொன்னங்குப்பம் மற்றும் துத்திப்பட்டு கிராமங்களைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை சக்கரபாணி என்பவர் ரூ.3 லட்சத்துக்கு ஏலம் எடுத்து விட்டதாக இந்த கிராமங்களில் தண்டோரா மூலம் அறிவிப்பு செய்துள்ளனர்.

    இதே போல் பொன்னங்குப்பம், துத்திப்பட்டு, அணேயேரி, முள்ளூர்புதூர், கோணங்குட்டை கிராமங்களைச் சேர்ந்த ஒன்றியக் குழு உறுப்பினர் பதவியை ரூ.1லட்சத்து 27ஆயிரத்துக்கு சிகாமணி என்பவர் ஏலத்தில் எடுத்துள்ளாக இந்த ஊர்களில் தண்டோராமூலம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளனர்.

    இதேபோல் செஞ்சி பகுதியில் பல கிராமங்களில் பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் ஒன்றியக் கவுன்சிலர் பதவிகளை ஏலத்தில் விட பேரம் பேசி வருகின்றனர்.


    ஏலம் போகும் ஊராட்சித் தலைவர் பதவிகள்

    தருமபுரி, செப். 25: தருமபுரி மாவட்டத்தில் 2 ஊராட்சித் தலைவர் பதவிகள் விலை பேசப்பட்டுள்ளன

    தருமபுரிக்கு அருகேயுள்ளது செம்மாண்டகுப்பம் ஊராட்சி. இதுவரை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இந்த ஊராட்சி, இம்முறை பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    கடந்த முறை அருள்மொழி சரவணன், அதற்கு முன்பு பி.பானு பூமணி ஆகியோர் ஊராட்சித் தலைவர்களாக இருந்தனர்.

    இந்த ஊராட்சியில் 7 கிராமங்கள் இருப்பினும், குண்டல்பட்டி, எஸ்.கொட்டாவூர் இடையேதான் பிரதானப் போட்டி. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக குண்டல்பட்டியைச் சேர்ந்த ஒருவரே வெற்றிக்கனியைப் பறித்து வருகிறார்.

    வழக்கம்போல் இம்முறையும் கடும் போட்டி ஏற்பட இருந்த சூழலில், குண்டல்பட்டியில் இருந்து ஊராட்சித் தலைவர் பதவிக்கு பொது வேட்பாளரை நிறுத்த ஊர் மக்கள் முடிவு செய்துள்ளனர்.

    இதற்காக ஊர் பொதுத்திடலில் கடந்த வியாழக்கிழமை ஊர்த் தலைவர்கள், பொது மக்கள் திரண்டனர்.

    ஊரில் பொதுநிதி இல்லாததால் பள்ளிக்குக் கூடுதல் கட்டடம் வந்தும் அதற்கான நிலத்தை வாங்கிட இயலவில்லை; மாரியம்மன் கோயில் கட்டுமானப் பணிகள் பாதியில் நிற்கின்றன. எனவே பொதுப்பணிக்குப் பணம் தேவை என ஊர் தலைவர்கள் “கூட்டப் பொருளை’ முன்வைத்துள்ளனர்.

    அதில் பூமணி என்பவர் ஊர் நலனுக்காக ரூ.4.02 லட்சம் பணம் தருவதாக ஒப்புக் கொண்டதால் அவர் அக் கிராம பொது வேட்பாளராக ஏற்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அதேபோல், கடத்தூரை அடுத்த வெங்கடதாரஅள்ளி ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட ரூ.1.58 லட்சம் விலை பேசியுள்ளனர் வி.புதூர் கிராம மக்கள்.

    கடந்த முறை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த வெங்கடதாரஅள்ளி ஊராட்சித் தலைவர் பதவி, இம்முறை பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை மங்கம்மாள் பசவன் ஊராட்சித் தலைவராக இருந்தார்.

    வெங்கடதாரஅள்ளி, வி.புதூர் ஆகிய 2 கிராமங்களை மட்டுமே கொண்ட அந்த ஊராட்சியில் பெரும்பான்மை வாக்குகள் வி.புதூரில் உள்ளன

    இந்நிலையில் வி.புதூர் ஊர்ப் பொதுத்திடலில் ஞாயிற்றுக்கிழமை ஊர் கூடியது. ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட உள்ள பி.சண்முகம், ஏசுந்தரம், டி.கோவிந்தன், மகளிர் குழு நிர்வாகி எஸ்.மீனா ஆகியோரிடம் கோயில் விழாவுக்கு எனக்கூறி ரூ.10 ஆயிரம் வீதம் முதலில் டெபாசிட் பெறப்பட்டுள்ளது.

    பின்னர், கோயில் திருவிழாவுக்கு அதிக நிதி தருவோர் போட்டியிடுவது எனத் தீர்மானிக்கப்பட்ட நிலையில் ரூ.1.58 லட்சம் அளிப்பதாகக் கூறிய பி.சண்முகம், பொது வேட்பாளராக அங்கீகரிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன ஏனையோருக்கு பணம் வாபஸ் தந்துள்ளனர்.

    ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு:

    செம்மாண்டகுப்பம், வெங்கடதாரஅள்ளி ஊராட்சித் தலைவர் பதவிகள் விலை பேசப்பட்டது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்குத் தகவல் கிடைத்துள்ளது.

    இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியரை விசாரிக்க மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான பங்கஜ்குமார் பன்சல் உத்தரவிட்டுள்ளார்.

    மேற்கண்ட ஊராட்சித் தலைவர் பதவி விலை பேசப்பட்டது நிரூபணமானால் உள்ளாட்சித் தேர்தல் விதிகள்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதில் ஐயமில்லை என்றார் ஆட்சியர்.