Category Archives: Uncategorized

Chandramukhi Audio Cassette 

Chandramukhi Audio Cassette Posted by Hello

லவ்வர் பாய்

எங்கெங்கு காணினும் வில்லனடா: காதலைக் காலி பண்ண ஒரு கூட்டமே அலைகிறது. நிஜத்தில் ரகுவரன்கள், நாசர்கள், பிரகாஷ் ராஜ்களெல்லாம் பல ரூபங்களில் நம் அருகிலேயே உலவிக்கொண்டு இருக்கலாம். அவர்களைக் கண்டுபிடித்துக் களையெடுத்தால் தான் காதல் கத்திரிக்காயைச் செழிப்பாக வளர்க்க முடியும். வில்லன்களைக் கண்டுபிடிக்க இதோ சில ‘கில்லி’ டிப்ஸ்…

1. அதிரடி ஆர்வக் கோளாறு நண்பர்கள்… உங்கள் காதலை வைத்து ஏதாவது அட்வென்ச்சர் பண்ணி ஹீரோவாக ஆசைப்படும் விபரீத வில்லன்கள்.

2.‘நாம காய்ஞ்சு கெடக்கும்போது, ஒரு லட்டு ஃபிகரை தேத்திட்டானே!’எனஅடிவயிற்றில் அல்சருடன் அலைகிற அனகோண்டா டைப் நண்பர்கள்.

3. எதிர் வீட்டு அங்கிள்கள்! ஒரு காலத்தில் கெட்ட ஆட்டம் போட்டு அடங்கியிருக்கும் இவருக்கு நம்முடைய நடவடிக்கைகளை வாட்ச் பண்ணுவதே சுகமான பொழுதுபோக்கு.

4. காதல் தேவதூதர்கள்… வேறு யார்? தெருப் பொடியன்கள்தான்.

இவர்கள் தவிர, லேட்டானால் புதர் இடுக்கில் எட்டிப் பார்த்து விரட்டும் பார்க் வாட்ச்மேன், காம்பஸ் கடலையை வீட்டுக்குத் தெரியப்படுத்தும் வாத்தியார்ஸ்… என எங்கெங்கு திரும்பினாலும் காதல் வில்லன்கள்தான்!


கமல்ஹாசன்: “கமல் & ரஜினி படங்கள் ஒரே நாளில் ரிலீஸாகுது..!”

“எங்கள் இருவரின் படங்களும் ரிலீஸாகிறபோது இருதரப்பு ரசிகர்களுக்கும் திருவிழாதான். ஆனால், எங்களுக்குள் மட்டுமில்ல, எங்களின் ரசிகர்களிடையே கூட கசப்பு உணர்வு இருக்காது. நானும் ரஜினியும் வெகுஜாக்கிரதையா எங்களுக்குள் அப்படி க்ளாஷ் எதுவும் வராமப் பார்த்துக்கிட்டோம். இந்தத் தலைமுறை நடிகர்களிடம் அது கொஞ்சம் மாறியிருக்குனு நினைக்கிறேன். சினிமாவிலேயே திட்டிக்கிறாங்களே!”
….

“பெண்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது! நான் பெண்களோடு சேர்ந்து வளர்ந்தவன். அம்மா, பெரியம்மா, அக்கா, தங்கை, தோழி, காதலினு என்னைச் சுற்றி எப்போதும் பெண்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள்… இருப்பார்கள். எனக்குக் காதல் இன்னமும் இருக்கிறது. உணர்வுகள் இன்னும் இருக்கின்றன. இது மனித இயற்கை!

என்னைப் பற்றி எழுதப்படுவதைத் தவிர்க்கணும்னு கூட நான் நினைக்கலை. ஏனென்றால், நான் அடுத்தவர்களுக்காக வாழவில்லை!”


Friends Of the Disabled: உடல் ஊனத்தையும் மீறி சாதனை புரிந்தவர்களைத் தேசிய அளவில் தேர்ந்தெடுத்து வழங்கப்படும் ‘கெவின்கேர் எபிலிட்டி’ விழாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வந்திருந்தார்.

13 வருடங்களுக்கு முன் ஒரு விபத்தில் சிக்கி, படுத்த படுக்கையாகக் கிடக்க வேண்டிய நிலையிலும், ‘Friends Of the Disabled’ அமைப்பைத் தொடங்கி, நூற்றுக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியிருக்கிற ராஜிந்தர் ஜோகர், தவறான மருந்து தரப்பட்டதால், பார்வை இழந்த நிலையிலும் சி.ஏ. படிப்பை முடித்த, நாட்டின் ஒரே பெண்மணியான ரஜனி கோபால கிருஷ்ணா, ‘சமர்த்யா‘ அமைப்பின் மூலம் உடல் ஊனமுற்றவர்களின் நலனுக்காகப் பல விஷயங்களை உற்சாகமாகச் செய்கிற உதாரணத் தம்பதியான அஞ்சலி – சஞ்சீவ் ஜோடி என இந்த வருடச் சாதனை யாளர்கள் மூவர்.

‘‘வெளிநாட்டுச் சூழ்நிலையும் இந்தியத்தனமும் இணைந்த ‘க்ராஸ் & ஓவர்’ படங்களின் சீஸன் இது… அந்த வகையில் பாப் பாடகிகள் மடோனா, ஜானட், ஜெனிஃபர் லோபஸ், பிரிட்னி ஸ்பியர்ஸ் மாதிரி யாரையாவது இந்திய சினிமாவில் நீங்க பாட வைக்கலாமே?”

‘‘ஐடியா நல்லா இருக்கு! ஆனா, தமிழ் தெரியாதவங்களை அதிகமாகப் பாட வைப்பதாக ஏற்கெனவே என் மீது ஒரு குற்றச்சாட்டு இருக்கு. இன்னும் இப்படியெல்லாம் செய்தேன்னா, ‘இந்திய மொழியே தெரியாதவங் களைப் பாட வைக் கிறேன்’னு தேசிய அளவில் நல்ல பேர்(?!) கிடைச்சுடும்ல!”

நன்றி: ஆனந்த விகடன்.காம்

ஓய்வு நிதி

thatstamil.com: ராஜிவ் கொலை: நளினி உள்ளிட்ட 4 பேர் மே மாதம் விடுதலை?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளான நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய நான்கு பேரின் சிறைக் காவலும் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது.

சிவராசன், தனு, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மன் மற்றும் அகிலா உள்ளிட்ட 41 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டதில் 38 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த தனு, சிவராசன் ஆகிய இருவரும் பெங்களூரில் கமாண்டோ படை சுற்றி வளைத்தபோது சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். மேலும் 12 பேர் வழக்கு விசாரணையின்போது இறந்து விட்டனர்.

இந்த வழக்கில் கடந்த 1998ம் ஆண்டு ஜனவரி மாதம் 28ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. நளினி, அவரது கணவர் முருகன் உள்ளிட்ட 26 பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து 26 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

இதில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டது. ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

தூக்கு மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் நளினி தனது தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி குடியரசுத் தலைவர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு கோரிக்கை விடுத்தார்.

அவரது வேண்டுகோள் ஏற்கப்பட்டு தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. நளினி, பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரது 14 ஆண்டு ஆயுள் தண்டனை சிறைக் காவல் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து இவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட அதே மே மாதத்தில் 4 பேரும் விடுதலை ஆகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெண்டு அணாக்கள்:
‘மஹாநதி’, ‘திருப்பாச்சி’, ‘ஜெண்டில்மேன்’ போன்ற படங்களில் இருந்து தெரிந்த விஷயம்தான் என்றாலும், எந்தவிதமான கொடூரங்கள், குற்றங்கள், கொள்ளைகள் செய்தாலும் நான்கைந்து வருடங்களில் ரிலீஸ் ஆகி, திருடிய பணத்தோடு ஜம்மென்று செட்டிலாகி விடலாம். 401(கே), வைப்புநிதி, காப்பு பத்திரம், சேம நலன் திட்டம் என்றெல்லாம் அறுபது/எழுபது வயது வரை மாங்கு மாங்கென்று கஷ்டப் பட வேண்டாம்.

பல நேரங்களில் மரண தண்டனை பொருத்தமில்லாதது; காட்டுமிரண்டித்தனமானதுதான். ஆனால், சில நாடுகளில் உள்ளது போல் செய்யப்பட்ட நான்கு குற்றங்களுக்கு, ஆறேழு சட்டப்பிரிவின் படி, நான்கைந்து ஆயுள் தண்டனை (4*14 ==> 56; நன்னடத்தையில் பாதியாகக் குறைந்தாலும் இருபத்தெட்டு வருடங்கள்?) விதிக்கும்வரை, இந்தியாவில் இன்னும் நிறைய தூக்கு தண்டனைகள் நிறைவேற்றப் பட வேண்டும்.

போன வாரம் சன் டிவியில் கேட்ட செய்திகளில் கூட பல கோடிகளை வங்கிகளில் லவுட்டிய திருடனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டாலும், அவையிரண்டும் ஒரே சமயத்தில் அனுபவிக்குமாறு (?!) தீர்ப்பளித்திருந்தார்.

‘மஹாநதி’ பாஷையில் சொல்வதானால் ஏழு வருடங்களில் அவன் ரிலீஸ் ஆகி விடுவான். இன்னும் ஏழு வருடம் (ஜெயிலில்) வேலை செய்தால் போதும். பென்ஷன் ரெடி!

கருத்து கந்தசாமி

திருவாளர் பந்தா பளு தூக்கலாமா?

மாலனின் ‘என் ஜன்னலுக்கு வெளியே…’ வலைப்பதிவில் இட்ட மறுமொழி…

காங்கிரஸை (அல்லது இளங்கோவன் போன்ற எவரையும்) வடிவேலுவின் சுய எள்ளல் நகைச்சுவையோடு ஒப்பிடுவது வேதனை தருகிறது. தன்னம்பிக்கையுடன் பேசினால் இது போன்ற உவமானம்தான் கிடைக்குமா? இதே போல் அடுத்து ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாத வைகோ-வின் மதிமுக, தொல். திருமாவளவன் என்று தொடருமா!?

தேசிய கட்சியாக விளங்குவதற்கு மாநில அமைப்புகளுக்கு அபரிமிதமான சுதந்திரங்கள் தேவை. காட்டாக அமெரிக்காவில் ஒன்றுக்கொன்று எதிரெதிரான கோட்பாடுகளைக் கொண்டவர் ஒரே கட்சியில் இருப்பது சர்வ சாதாரணம். காங்கிரசில் அந்த சகிப்புத் தன்மை குறைந்ததால் தேசிய அங்கீகாரத்தை இழந்திருக்கலாம். இது போன்று இன்னும் பல காரணங்கள் இருக்கலாம்.

ஆனால், இன்றைய குரல்களினால் அந்த அந்தஸ்து மீண்டும் கிட்டலாம்.

>>>தலைவரிடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைப்பது —

இது நல்லதா அல்லதா என்றும் தாங்கள் அலசவேண்டும். படிப்பறிவு உள்ளவர்களிடமும் இவ்வாறான போக்கு தமிழகத்தில் காணப்படுகிறதா?

குஜராத், டில்லி போன்ற ஒப்புமைகள் மொத்தமாக உங்கள் தியரியைக் கொண்டுவர பொதுமைப்படுத்தப் பட்டிருக்கிறது. இந்துத்துவா, பூகம்ப மீட்புப் பணி, டில்லியின் வளர்ச்சி என்று பல பரிமாணங்களை சேர்த்துக் கொள்ளாமல் ‘தலை’க்குக் கிடைத்த வோட்டு என்பது சரியான conclusion ஆகாது. தொடர்ந்து நடந்த நாடாளுமன்ற முடிவுகள், குஜராத்தில் வேறு மாதிரி அமைந்ததையும் குறிப்பிடலாம்.

ஜானகி, ஜெயலலிதா என்று தலைவரைப் பார்த்து அப்பொழுது ஓட்டு விழுந்தாலும், அமெரிக்கா முதற்கொண்டு ஆண்டிப்பட்டி வரை (டயலாக் சொருகலுக்கு மன்னிக்க); கெர்ரி முதல் கருணாநிதி வரை பண பலம் அதி முக்கியம்… இந்த டாலர்/ரூபாய்களே தாக்குப்பிடித்தலுக்கு உறுதுணையாக இருக்கிறது. இதன் மூலமே பத்து பன்னிரெண்டாண்டுகள் சட்டசபையைக் கைப்பற்றாவிட்டாலும், 1989களில் ஆட்சியைப் பிடிக்க உதவுகிறது. ஜானகியை விட்டு ‘அற்ற குளத்தில்’ அனைவரும் மூட்டையை கட்ட, வைகோவுக்கும் சிலகாலம் முன்பு அதே நிலைமை… திமுகவை விட்டு அதிமுக-வுக்கும். காங்கிரஸை விட்டு அதிமுகவின் பேச்சாளர் ஆனவர்களும் ‘அறுநீர்ப்பறவையென’ செல்கிறார்கள்.

தங்களின் நூறு வாக்காளர் எடுத்துக்காட்டு ரசிக்கத்தக்கது. இதற்குத் மாற்றாக ஐரோப்பாவின் சில நாடுகளில் இருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றலாம். அனைவருக்கும் தேர்தல் வைத்து, பின் முதல் மூன்று/நான்கு இடங்களில் நிற்போரை மட்டும், மீண்டும் தேர்தல் வைப்பது (அல்லது) திருமாவளவன் சொல்லும் இரட்டை வாக்குரிமை (அல்லது) இவர் முதல் விருப்பம், மற்றவர் இரண்டாவது விருப்பம், மூன்றாவது விருப்பம் என்று பட்டியல் கொடுப்பது போன்றவற்றைக் கொண்டு வரலாம். தலை-யை பார்த்தே வாக்களிக்கிறார்கள்; — எனவே, மாநிலத்தில் கூட்டணி ஆட்சி ஒவ்வாது என்பது நீங்கும்.

ஜெயலலைதாவின் அராஜகப் போக்கு, ஸ்டாலின் மேலான மேம்பால ஊழல் புகார் போன்றவை கூட்டணி ஆட்சியில் வெகுவாக கட்டுக்குள் வரும்.

>>இரண்டாம் பகுதி நிறைவேறும் முன் இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள் குறுக்கு சால் —

அப்படியானால், என்னதான் இகழ்ந்தாலும், சீனியர் மாணாக்கன் போல் ரேகிங் செய்தாலும் பொறுத்துத்தான் போக வேண்டுமா? வார்டனாகிய மக்களிடம் முறையிடுவதல் கூட தவறா!?

>>>>கூட்டணி ஆட்சி பற்றிப் பேசினால் பதவி போனாலும், பழியை கருணாநிதி மீது போட்டு முகத்தைக் காப்பாற்ற்றிக் கொள்ளலாம் —–

பதினாறு எம்.பிக்களை வைத்துக் கொண்டு ஆறோ ஏழோ அமைச்சர்கள். பிஹாரில் ஆட்சி மாற்றம். முலாயமின் மத்திய ஆட்சி வருகை நடக்கலாம். அவர் வைத்துள்ள எம்.பி.க்களுக்கு அனுபவ அடிப்படையில் அல்லாமல், விகிதாசார அடிப்படையில் கேபினெட் பதவிகள் கோருவாரோ என்னும் ஹேஷ்யங்கள். அதற்கு தி.மு.க.வின்
முகத்தைக் காப்பாற்ற்றிக் கொள்ளும் திட்டம்( Face Saving technique) என்று கழுகார் கூறுகிறார்.

ஒன்றுதான்

பாடகர்: டி.எம்.எஸ்.

இரவு வரும்
பகலும் வரும்
உலகம் ஒன்றுதான்

உறவு வரும்
பகையும் வரும்
இதயம் ஒன்றுதான்

பெருமை வரும்
சிறுமை வரும்
பிறவி ஒன்றுதான்

வறுமை வரும்
செழுமை வரும்
வாழ்க்கை ஒன்றுதான்

இளமை வரும்
முதுமை வரும்
உடலும் ஒன்றுதான்

தனிமை வரும்
துணையும் வரும்
பயணம் ஒன்றுதான்

விழியிரண்டு இருந்தபோதும்
பார்வை ஒன்றுதான்

வழிபடவும் வரம் தரவும்
தெய்வம் ஒன்றுதான்

(பாடல் இடம்பெற்ற படத்தின் பெயர் தெரியவில்லை. இடஞ்சுட்டுபவருக்கு என்னுடைய நன்றி)

ஹிப்பாங்… ஜிப்பாங்…

ஹார்லிக்ஸ் குடித்த உற்சாகம் கிடைக்கிறது. பா ராகவனின் ‘புதையல் தீவு’ என்னும் சிறுவர் தொடரைப் படித்தவுடன் எனக்கு ‘ஹார்லிக்ஸ்’ ஞாபகம்தான் வருகிறது.

‘ஹார்லிக்ஸ்’ என்பது ‘புதையல் தீவு’. சிறுவர்களுக்கு சத்தான விஷயம்; அவர்களிடம் நாம் சொல்லவேண்டியதைக் கொண்டு செல்ல அமர்க்களமான தொடர்பு சாதனம்; பெரியவர்களும் மாறுதலுக்காக விரும்புவார்கள்.

பாரா-வே சொல்கிறார்:

மூளையைக் கழட்டிவைத்துவிட்டு மனத்துக்குள் ஒரு சிறுவனாகி, சிறுவர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக மட்டும் யோசித்து எழுதிய நாவல் இது. துளியும் லாஜிக் கிடையாது என்பதே இக்கதையின் மிகப்பெரிய சிறப்பம்சமாக எனக்குத் தோன்றுகிறது. வாசிக்கும் குழந்தைகள் பரபரப்பும் சந்தோஷமும் ஆர்வமும் கொள்ளவேண்டும் என்பதை மட்டுமே இலக்காக வைத்து ஒரு சிறிய துப்பறியும் கதை முயற்சி.

ஹார்லிக்ஸின் (தற்போதைய) விளம்பரத்தில் வருவது போல் சிறுவர்கள் சீரியல் கில்லர்களைப் பிடித்துக் கொடுப்பதில்லை. ஆனால், மாசுபடாத அவர்களின் இதயத்தில் உயர்ந்த கொள்கைகளும் இலட்சியங்களும் அரசோச்சுவதை இந்தக் கதை சொல்கிறது.

‘சாதிக்க முடியாதது என்று ஏதாவது இருக்கிறதா என்ன? சரியான முனைப்புதான் வேண்டும்’ என்பது போன்ற ஊட்ட மருந்துகளை போதையென்னும் கொழுப்பு எதுவும் இல்லாத பாலாடையில் ஃப்ரூட் சாலட் போட்டுக் கொடுத்திருக்கிறார் பாரா.

ஒரு நாள் இரவில் மூன்று பள்ளி நண்பர்கள் கயவர் கூட்டத்தை மடக்கிப் பிடிப்பதே கதை. கவர்ச்சிகரமான விளம்பரம் போல வெகுவிரைவிலேயே ஆழமான பிண்ணனியை அமைத்துக் கொடுக்கிறார். புதுமையான தகவல்களைக் கொண்டு சேர்ப்பதற்காக தண்ணீர் தேசம். உடல் பருமனானவன், பாதியில் பள்ளிப்படிப்பை நிறுத்தியவன், அறிவு ஜீவியல்லாத மற்றுமொருவன் என்று சாதாரணர்களை முக்கிய நாயகர்களாக சம அந்தஸ்து கொடுத்து கதை மாந்தர்களுடன் நம்மை ஒன்ற வைக்கிறார்.

‘சப் குச் சலேகா’ என்னும் எண்ணம் வளர்ந்தவுடன் — திடீரென்று ஒட்டிக் கொள்கிறது. ஆனால், குழந்தையாக இருந்தபோதுதான் எவ்வளவு பிடிவாதம் இருந்தது. சாம்பார் சாதத்துடன் பொரியல் பட்டுவிடக் கூடாது என்பதில் ஆரம்பித்து ஸ்டிக்கர் கடனாக நண்பன் கொடுத்தாலும் பதிலுக்கு அவனுக்குப் பிடித்தமானதை செய்தே ஆக வேண்டும் என்பது போல் சின்னச் சின்ன முனைப்புகள். கோனே ·பால்ஸ் சென்று ‘அருவியில் குளிக்காதே’ என்று சொன்னாலும் சிரமப்பட்டு பி.டி. மாஸ்டருக்குத் தெரியாமல் பாறைகளில் புகுந்து வருவது முதல் கல்சுரல்ஸ் தினங்களில் மேடையில் சொதப்பியதைக் கண்டு மனம் கலங்காமல் கடலை போடுவது வரை உள்ளக் கிடக்கைகளை செய்து பார்க்கும் ஆர்வங்கள்.

இந்தக் காலங்களிலும் காட்டு வழிகளில் பயணம் தொடர்கிறது. கையில் செல்பேசி, கூடவே பூமியில் எங்கே இருக்கிறோம் என்பதை சுட்டும் ஜி.பி.எஸ்., காட்டுப் பாதைகளின் விரிவான வரைபடங்கள், அபாய அறிவிப்பு காட்ட குறைந்தபட்சம் பத்து விதமான பொருட்கள், அப்படியும் மாலை ஆறு மணிக்குள் திரும்பாவிட்டால் காட்டிலாகவுக்கு தகவல் கொடுக்குமாறு கீழே இருப்போருக்கு அறிவுறுத்தல்கள் என்று முன்ஜாக்கிரதை முத்தண்ணாவாகி இருக்கிறேன்.

சிறுவர்களின் உலகம் அலாதியானது. தண்ணீருக்குள் குதி என்றால் குதித்து விடுவார்கள். நீரில் மிதக்க பாதுகாப்பு கவசம் இருக்கிறதா? ஆழம் எவ்வளவு? எப்படி நீந்தத் தெரியாமல் குதிப்பேன்? நீ காப்பாற்றுவாயா? உனக்கு நீந்தத் தெரியுமா? எப்பொழுது தூக்கி விடுவாய்? எனக்கு ஆபத்து உண்டா? தண்ணீர் உட்கொள்வேனா? உட்கொண்டால் ஜலதோஷம் வருமா? என்றெல்லாம் கேள்வி கேட்காமல் செய்து முடிக்கத் துடிப்பவர்கள். பிரகலாதர்களையும் பார்க்கலாம். ஆதிமூலமே என்றெல்லாம் கத்தாத கஜேந்திரர்களையும் இங்கு உணரலாம்.

அங்காங்கே திருக்குறளின் வாய்மை, தீயவன் என்பவன் யார், கொண்ட கருத்தைப் பதமாக எடுத்து வைப்பது, வயதில் பெரியோரிடமும் இதமாக தர்க்கம் செய்வது, போதைக்கு அடிமையாவது, வயதால் மட்டுமே பெரியவர்கள், செயல்களால் உயர்ந்தவர்கள் என்று மெஸேஜ் மயமாக தாக்கினாலும் குறுநாவலுக்கு வேண்டிய பரபரப்பையும் அத்தியாய முடிவுகளில் கொடுக்கும் அதிரடி திருப்பத்தையும் உரிய அளவில் மிக்ஸ் செய்திருப்பதால் பக்கங்களை வேகமாக புரட்டவைக்கிறது.

அதிகமாக சாப்பிடுவது ஆபத்தானது என்பதை பருமனான கதாநயகன் மூலமே புலம்ப வைப்பது, மீனவ மாணவனின் சமயோசிதமும் உலக அறிவும் எவ்வாறு பள்ளி அறிவுக்கு மாற்றான நிகருடையது, பெற்றோர்களின் நம்பிக்கை, நண்பர்களின் பலம் என்று சமூகத்தின் சூட்சுமங்களைத் தொட்டுச் செல்லும் அதே வேகத்தில், சுற்றுப்புறச் சூழல், கறுப்பு சந்தை, எரிபொருளின் அனர்த்தமான பயன்கள், கடல் குறிப்புகள் என்று தகவல் ரீதியாகவும் அடர்த்தியாக நகர்கிறது.

குழந்தைகளுக்கு எழுதுவது அமெரிக்க தூதரகத்தில் விசா படிவத்தை நிரப்புவது போல் சிரமமானது. அதிகமாக விவரித்தால் ‘வளவளா’ என்று விட்டுவிடுவார்கள். எதையாவது சொல்லாமல் விட்டு விட்டு, ‘குறிப்பால் உணர்ந்து கொள்’, ‘பூடகமாகப் புரிந்து கொள்’ என்றால், எக்குத்தப்பாக புரிந்து வைத்துக் கொள்ளும் அபாயம் இருக்கிறது. சொல்வதைச் சுருங்க சொல்ல வேண்டும். முழுமையாகவும் இருக்க வேண்டும். சரியானதாகவும் அமைய வேண்டும். ‘புதையல் தீவு’ குழந்தைகளுக்கு நிறைய செல்வங்களையும் கூடவே கொண்டிருக்கிறது.

‘எதைச் செய்தாலும் நேர்த்தியுடன் செய்யும்போதுதான் சிறக்கிறது’ என்று கதையில் பாலு வியப்பதை போல் நானும் இந்த கோகுலத்தில் வெளிவந்த தொடரை முடித்தவுடன் சொல்ல நினைத்தேன்.

மெளன அஞ்சலி

ஆறாம்திணை : ஜெயபாஸ்கரன்

எல்லோருடனும் சேர்ந்து
எழுந்து நிற்பேன் நானும்.

இறந்துபோன ஒருவருக்காக
ஒரு நிமிடம் அஞ்சலியாம்

இறந்தவருக்கான அஞ்சலியாய்
எழுந்து நிற்பதில் எந்த முரணுமில்லை எனக்கு.

ஆயினும்
அமைதி காக்க நேரும்
அந்த ஒரு நிமிடத்தில்
எதை நினைப்பது என்பதுதான்
எல்லா அஞ்சலியிலும்
என் கவலையாக இருக்கிறது.

கண்மூடி தலைகவிழ்ந்து
என்னருகே நிற்பவரும்
இறந்தவரைத்தான் நினைக்கிறார்
என்பதற்கான ஆதாரமில்லை

ஒரு நிமிடம் எழுந்து நிற்குமாறு
எங்களைக் கேட்டுக் கொண்டவர்
மேற்கொண்ட மெளனத்தில்
கணக்கிடப்படுவது
அமரச் சொல்வதற்கான
மணித்துளிகளாகத்தானிருக்கும்,
இறந்து போன எவரைப் பற்றியும்
நிறையவே நினைப்பதுண்டு நான்.

ஆயினும்
நினைப்பதற்காகவே ஒதுக்கப்படும்
அந்த ஒரு நிமிடம்
அதன் பொருட்டுக் கழிவதில்லை
நானும் எழுந்து நிற்க நேரும்
எந்தவொரு அஞ்சலியிலும்.

சித்திர மண்டபம்

அலாவுதீன்களும் அந்தக்கால செல்பேசிகளும்:

மாயா… மாயா — ஈரநெஞ்சங்களும் கல்தாரகைகளும்:

ஜகதீஷ் அன்றே சொன்னார்… பனி மழை தாங்கும் மரங்கள் யோசிக்கின்றன:

Red Bull Art of the Can Contest: காஃபெய்ன் இருப்பதால் ரெட் புல் என்னும் திரவம் இளைய தலைமுறையிடம் வெகு பிரபலம். வெற்று புட்டிகளில் கலை தீட்டியிருக்கிறார்கள். பாஸ்டனில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. நேரில் பார்க்க முடியாதவர்கள், இணையம் வழியாக ஒரு நாளைக்கு ஒவ்வொன்றாக இந்த மாதம் முழுவதும் முப்பத்தொன்றையும் பார்க்க வேண்டும். (ஒரே நாளிலும் பார்த்து முடித்து விடலாம்… இருந்தாலும் தினசரி ஒன்றாக நிதானித்து கவனிப்பது சுவையாக இருக்கும்.)

தமிழோவியம்.காம்

நையாண்டிதிட்டாந்தப்பேச்சு

ராமதாஸும் திருமாவளவனும் தமிழ்ப் படங்களுக்கு தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும் என்று போராடி வருகிறார்கள். அவர்கள் போராட்டம் வெற்றி பெற்று விட்டால், தொடர்ந்து அறிக்கைப் போராட்டத்திற்கு உபயோகமாக சில எண்ணங்கள்.

* தமிழ்ப் படங்களில் நடிப்பவர்கள் சொந்தக் குரலிலேயே பேச வேண்டும். வேற்று மாநிலத்தில் இருந்து இறக்குமதியானாலும், வெளிநாட்டு குடிமகளாக இருந்தாலும், குரலுக்குப் பிண்ணனி கொடுப்பவர் கூடாது. தாற்காலிகமாக டப்பிங் பேசுபவர்களையே ஹீரோயினாக நடிக்கப் பரிந்துரைக்கும் போராட்டம்.

* தமிழ்ப் படங்களில் தமிழரின் சண்டை முறைகளே முன்னிறுத்த வேண்டும். சிலம்பம், களரி, இந்தியன் தாத்தா அடி போன்ற பழங்கால தமிழரின் போர்க்கலைகளே பயன்படுத்த வேண்டும். ஜூடோ, கங்·பூ, கராத்தே கூடவே கூடாது.

* ஆங்கிலப் படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்யப்பட்டு வெளிவந்தாலும், சன் டிவியில் சனி மதியம் காண்பிக்கப் படக் கூடாது. அவ்வாறு காண்பித்தாலும், அந்தப் படங்களின் முன்னோட்டங்களை நூற்றிமுப்பத்தெட்டு தடவை திரும்ப திரும்ப போட்டுக் காட்டி பிராணனைப் பிடுங்கக் கூடாது.

* தமிழ்ப் படங்களின் கனவுக் காட்சிகளுக்கு ஸ்விஸ், தெற்கு ஆப்பிரிக்கா எல்லாம் பறக்கக் கூடாது. தமிழ் நாட்டின் வளங்களையும் எழிலையும் காட்டுமாறு பாடல்கள் பதியவேண்டும்.

* தமிழ்ப் படங்களுக்கான கதைகளை செரண்டிப்பிட்டி, வாட் வுமன் வாண்ட் போன்ற ஆங்கிலப் படங்களை வைத்து உல்டா செய்யக் கூடாது. தமிழின் வழமையான இலக்கியங்களைத் தழுவியே எடுக்க வேண்டும்.

* டி ராஜேந்தர், திருநாவுக்கரசு போன்றவர்கள் பெயரை மாற்றிக் கொள்வது போல, இதுவரை வெளிவந்த ஆங்கிலம் கலந்த தமிழ்ப் பட பெயர்கள் அனைத்தும் திருத்தப் பட வேண்டும். ‘சென்னையிலிருந்து பாண்டிச்சேரி’, ‘நகரப் பேருந்து’ என்று அவர்களே கால்கோளிட வேண்டும்.

* படத்தின் ஆரம்பத்தில் வரும் நடிக நடிகையர் மற்றும் பங்குபெற்று உதவிய கலைஞர்களின் பெயர்கள் அனைத்தும் தமிழில் மட்டுமே காட்ட வேண்டும். மணிரத்னம் மாதிரி பெரிய இயக்குநர்கள் படமுடிவில் காட்டும் பட்டியல்களும் தமிழில் மட்டும் காண்பிக்க வேண்டும். ‘திஸ் இஸ் எ மூவி பை பாலச்சந்தர்’ போன்றவை கண்டிப்பாக மொழியாக்கம் பெற வேண்டும்.

* ஆங்கிலப் படங்களுக்கு வழங்கும் ஆஸ்கார், சூப்பர் குட் போன்ற தயாரிப்பு நிறுவனங்களின் பெயர்கள் மாற்றப் பட வேண்டும். தயாரிப்பவர்கள் திருத்தப் பட வேண்டும்.

* மேற்கண்ட விதிமுறைகளில் இருந்து பிழற்பவர்களின் படங்கள், பெங்களூரில் வெளியிடப்பட்டதில் இருந்து, இரண்டு மாதம் கழித்தே தமிழ்நாட்டின் வெள்ளித்திரைகளில் காட்டப்படும். அதற்குள் இந்தப் படங்களின் விசிடி வெளியீடு போராட்டம் நடத்தப்பெறும்.

பாஸ்டன் பாலாஜி


நியு இங்கிலாந்து தமிழ் சங்கம்அமெரிக்க மேட்டர்ஸ் : பொங்கல் விழா

நியு இங்கிலாந்து தமிழ் சங்கத்தின் ‘பொங்கல் விழா’. ஐநூறு முதல் அறுநூறு பேர் வரை அமரக்கூடிய லிட்டில்டன் பள்ளியின் அரங்கு. பெப்ரவரி 19-ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் சுமார் நூற்றைம்பது பேர் வந்திருப்பார்கள்.

உணவை உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. மூன்றரைக்கு நிகழ்ச்சி ஆரம்பம். வழக்கம் போல் நினைத்துச் சென்றதால் மூன்றே முக்காலுக்கு பாட ஆரம்பித்த ‘நீராடுங்கடலுடுத்த’-வை தவறவிட்டேன். முதலில் தலைவரின் தலைமையுரை. சென்ற வருட நிகழ்வுகளைச் சொன்னார். சங்கத்தின் சாதனைகளைப் பகிர்ந்து கொண்டார். ஸ்க்ரீனில் பெரிதாகக் கட்டப்பட்டிருந்த வெள்ளை பேனரில் கவனம் சிதறியது. New England Tamil Sangam என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தார்கள்.

அமர்ந்திருந்த அரங்கத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு 130 டாலர் வாடகை. கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் இட வாடகைக்கு மட்டுமே செலவு. இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். பங்குபெறுவோர்களிடம் பண வசூல் கிடையாது. வாசலில் தமிழ் சங்கத்துக்காக ஒரு உண்டியலும், சுனாமி நிதிக்காக மற்றொரு உண்டியலும் வைத்திருந்தார்கள். சிறுவர்களுக்கான பழரசங்கள், பெரியவர்களுக்கான சோடாக்கள் விற்றார்கள். சமோசா, பஜ்ஜி, போண்டா, கைமுறுக்கு இருந்திருக்கலாம்.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பெண்மணி தூய தமிழில் பேசினார். வார்த்தைகளைத் தேடவில்லை. மைக் மக்கர் செய்தாலும் கணீர் குரல் நிவர்த்தி வழங்கியது. மைக் வேலைநிறுத்தம் செய்தபோதெல்லாம் கூட்டத்தில் பலர் ‘மைக்… மைக்…’ என்ரு குரல் கொடுத்தனர். கூட்டத்தில் ஒருவர் மட்டும் ‘ஒலிபெருக்கி வேலை செய்யவில்லை’ என்று சத்தமாக சிரித்துக் கொண்டே அறிவித்தார். மைக் வேறு, ஒலிபெருக்கியின் பயன் வேறு என்று அவரிடம் நான் விளக்க நினைத்தேன். இருட்டில் அடையாளம் காண இயலவில்லை.

கந்தன் புகழ் பாடும் பாட்டுக்கு ஒன்பது அல்லது பத்து வயது மதிக்கத்தக்க சிறுமியர் இருவர் நடமாடினார்கள். இடப்பக்க பெண்மணியிடம் நாட்டியத்துக்குத் தேவையான கம்பீரம். வலப்பக்க நடனமணியும் ஈடு கொடுத்தார்.

தொடர்ந்து பதின்மர் இருவரின் பாம்பு நடனம். தலைக்கு நாகத்தின் கிரீடம் மட்டும் இல்லை. சடை போட்ட நீண்ட கூந்தல் கூட இருந்தது. தலையைக் கால் தொடுவதற்கு ஐந்து இன்ச் இடைவெளி. இன்னொருவருக்கு ஒரு அடி இருக்கும். இருவருக்குமே நடனம் முடியுமட்டும் மாறாப் புன்னகை. இல்லையென்றால் சீறிய சீறல்களுக்குப் பலர் பயந்திருப்போம்.

சிஷ¤-பாரதி சிறுவர்களின் சேர்ந்திசை. பாரதிப் பாடல்களைப் பாப்பாக்கள் பாடினார்கள். ஓரத்தில் பச்சை சூரிதார் போட்ட சிறுமி மனதுக்குள்ளேயே முணுமுணுத்தாள். நாலு வயது குட்டிப் பாப்பா பாதி பாட்டில் மேடையை விட்டு அம்மாவிடம் ஓடிப்போனாள். இவற்றில் எல்லாம் கவனத்தை சிதறவிடாமல் கிட்டத்தட்ட இருபது பெண்களும் நாலைந்து பையன்களும் உணர்ச்சிகரமாக மூன்று பாடல்களைப் பாடினார்கள்.

தொடர்ந்து ஆறேழு வயதே மதிக்கத்தக்க சிறுமியின் அபார நடனம். பாடல் முடியும் தருவாயில் ஒலியில் தகராறு. இருந்தாலும் சமாளித்து வந்தனம் வழங்கிச் சென்றாள்.

அதே சிறுமியே இந்த ஊர் உச்சரிப்பில் ஔவையாகவும் கந்தனாக நாலைந்து வயது குட்டி ஒருத்தனும் சிறிய ஸ்கிட் ஒன்று நடத்தினார்கள்.

இடைவேளைக்குப் பின் அதே சிறுமி ‘அவ்வை ஷண்முகி’ தலைப்புப் பாடலுக்கு இன்னும் இருவருடன் ஆட்டம் கட்டியது.

இடைவேளைக்கு முன் ‘ஜன கன மண’ பாடப் போவதாக சொன்னார்கள். ஏ.ஆர். ரெஹ்மானின் புதியது அல்ல. தேசிய கீதம் பாடவும் இசைக்கவும் ஆரம்பித்து விட யோசித்துக் கொண்டே எழ வைத்தார்கள். ஆங்காங்கே இருக்கையின் மேல் தாவி குதித்தும் ஓடிப்பிடித்தும் விளையாடிய பார்வையாள சிறுவர்களும் அமைதி காத்திருப்பார்கள்.

‘அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்’ பாடலை காரியோகே (Karaoke) போல் பத்து பேர் பாடினார்கள். அர்த்தமுள்ள பாட்டு. தலைவர்கள் உண்டாக்கிய படம். இரண்டு வகையிலும் இளைஞர்களுக்கு சரியான தேர்வு.

இடைவேளை முடிந்தவுடன் வசூல் ராஜாவின் ‘சீனா தானா’. ஆறு பெண்கள் வீணை அபிநயம். பிரபு போன்ற ஆண்பிள்ளைகள் இல்லை. ஒலிநாடாவில் பாடல். ஆடலிலும் ரகஸியாவின் கெட்ட ஆட்டம். பார்வையாளர்கள் விசிலடித்து வரவேற்றார்கள்.

பார்வையாளர்களைப் பங்கு பெற வைக்க சினிமா வினாடி வினா இருந்தது. ‘மிஷன் அக்கம்ப்ளிஷ்ட்’ (Mission Accomplished) என்னும் புஷ்ஷின் வாசகம் தமிழக இயக்குநரிடன் ‘இண்டர்-மிஷன் அக்கம்ப்ளிஷ்ட்’ ஆகும் என்னும் கடி இருந்தது. தமிழில் நூறு படங்கள் இயக்கியவர் யார்? தொட்டால் பூ மலரும் என்று அந்தக் காலத்தில் ம.கோ.ரா. பாடினார். எந்தப் படத்தில்? நேரமின்மை காரணமாக நாலு கேள்வி கூட கேட்க முடியவில்லை. ஒரு மணி நேரத்துக்கு 130 டாலர் கட்டப்படுகிறது.

அடுத்து மிருதங்க இசை ஆர்பாட்டமில்லாமல் ஒலித்தது. சுனாமிக்காக எம்.ஐ.டி. மாணவிகள் கொடுத்த நடனமும் இசையும் உணர்வுகளையும் பர்ஸ¤களையும் தட்டியெழுப்பியிருக்கும். எம்.ஐ.டி.யை சேர்ந்த நால்வர், மூன்று பாடலுக்கு முத்திரை பதித்தார்கள். எல்லா நிகழ்ச்சிகளுக்கும் சிகரம் வைத்தது போன்ற நடன அமைப்பு. கன்னடப் பாடல்களின் அர்த்தம் மட்டும் புரியவில்லை.

மண் சட்டி மாமியாருக்கு ஐந்து படி அரிசி வடித்துக் கொட்டிய அந்தக்கால கதை நாடகமாக்கப் பட்டிருந்தது. கலந்து கொண்ட எல்லோருக்கும் செர்டி·பிகேட்கள் (சான்றிதழ்) வழங்கப் பட்டது. ‘வாழிய செந்தமிழ்’ என்று பொருத்தமான பாடலுடன் குழந்தைகளாலேயே நிறைவு பெற்றது.

நடுவே நிகழ்ந்த பார்வையாளர் போட்டியை சொல்ல விட்டு விட்டேன். தமிழில் எண்கள் எழுத வேண்டும். ஒன்று முதல் பத்து வரை எழுதத் தெரியுமா? (கூகிள் பார்ப்பதற்கு முன் சிறு துப்பு: ஈ-கலப்பை கொண்டு எழுத முடியாது.)

தேவையில்லாத பிற் சேர்க்கை: மேற்படி போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது.

பாஸ்டன் பாலாஜி

(விரிவான விவரங்கள் : http://www.lokvani.com)

ஆனந்த விகடன்

மின்னணு இயந்திரத்தின் நம்பகத்தன்மை: ‘மின்னணு இயந்திரத்தின் மூலம் நடந்த வாக்குப் பதிவு நம்பிக்கைக்கு உரியதாக இல்லை. எனவே ஏற்கெனவே இருந்தபடி வாக்குச்சீட்டு முறையையே கடைப் பிடிக்க வேண்டும்’ — ஜெயலலிதா.

“விஞ்ஞானத் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி ரசாயன உரங்கள் போட்டு விளைச்சலைப் பெருக்குகிறோம். ஆனால், அந்த ரசாயனக் கலவையால் உருவாகிற பொருட்கள் உடலுக்குக் கேடு என்று கண்டுபிடிக்கப்படுகிறது. அதனால் மீண்டும் இயற்கை எரு, தழைகளைப் பயன்படுத்துங்கள்’ என்று விவசாய அமைப்புகளே குரல் கொடுக்கின்றன. — க.சுப்பு (அ.தி.மு.க)

“சில ஆண்டுகளுக்கு முன் இதே குற்றச்சாட்டு கிளம்பியபோது, தேர்தல் கமிஷன் ‘தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்ட எந்த ஒரு இயந்திரத்தையும் எடுத்து பரிசோதித்து, தவறு நடந்திருப்பதாக நிரூபித்துக் காட்டிவிட்டு குற்றம் சொல்லுங்கள்’ என்று பகிரங்கமாக அறிவிப்பு செய்தது. ஆனால், அதற்குப் பதிலே இல்லை.” — எழுத்தாளர் சுஜாதா

‘இனி நான் கோட்டைக்கு காரில் போகமாட்டேன். ஏனென்றால் நிறைய விபத்து ஏற்படுகிறது. அதனால் இனிமேல் பல்லக்கில்தான் பயணிப்பேன்’ எனச் சொல்வது போல் இருக்கிறது மீண்டும் வாக்குச்சீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்பது.” — ஞாநி


தயவு செய்து தமிழ்ல சிரிங்க — இரா.நரசிம்மன்: “ரஜினிகாந்த், விஜயகாந்த், தனுஷ், விஜய், அஜீத், கமல்ஹாசன், த்ரிஷா, ஜோதிகானு நிறைய நடிகர்களும் நடிகைகளும் இப்போ ஆடிப்போய் இருக்காங்களாம்…!”

“ஏன்?”

“சினிமா தலைப்பு மட்டும் இல்லாம நடிகர்களும் நடிகைகளும் கூட தங்கள் பெயரை வடமொழிக் கலப்பு இல்லாம தூய தமிழ்ல வெச்சுக்கணும்னு அரசியல் தலைவர்கள் போராடப் போறாங்களாம்!”


வடி வடிவேலு… வெடிவேலு : ஓரஞ்சாரமா ஒதுங்க வந்தவய்ங்களெல் லாம் ‘ச்சு…ச்சு… நல்லாத்தேன் பாடறானப்பா’னு ஏத்தி விட்டுப் போயிருவாங்க. மனுசப் பயலுக்கு அதுல ஒரு ஆனந்தம். ‘நீயெல்லாம் மொறயா பாட்டு கீட்டு கத்துக்கிட்டா எங்கியோ போயிருவே’னு ஆளாளுக்கு உசுப்பேத்திவிட, நானும் நம்பி, மேலவீதியில ஒரு சங்கீதக்காரரு வீட்டுக்கு ஓசித் தாம்பாளம் வாங்கி மல்லிப்பூ, மாம்பழம், வெத்தல, பாக்குனு வெச்சி பதினோரு ரூவா காணிக்கை யோட போயிக் கதவத் தட்டிப்புட்டேன்.

பாட்டுக்கு மட்டும் ஒரு தனிக் கொணம் உண்டுண்ணே. மனசுக்குப் பிடிச்ச எந்தப் பாட்டைக் கேட்டாலும் அதை முதல்ல எப்போ கேட்டோமோ அந்தக் காலத்துக்கே கூட்டிப் போயி கொஞ்ச நேரம் கொஞ்சிட்டுத்தேன் விடும். அதுனாலயே நான் வீட்ல, கார்லனு எங்கியும் என் மனசுக்குப் புடிச்ச பழைய பாட்டுக்களாக் கேட்டுக் கிருப்பேன்.


ஹாய் மதன்: ‘இரு பறவைகளை ஒன்றாகச் சேர்த்துக் கட்டிப் போடுங்கள். அவற்றால் பறக்க முடியாது. இத்தனைக்கும் இப்போது நான்கு இறக்கைகள்!’ என்கிறார் ஜலாலுதீன் ரூமி. சூஃபி தத்துவம் பற்றிப் பல புத்தகங்கள் (ஆங்கில மொழி பெயர்ப்புடன்) கிடைக்கின்றன. Idries Shah எழுதிய ‘The Way of the Sufi’யிலிருந்து ஆரம்பியுங்கள்.


ஜக்கி வாசுதேவ்: நீங்கள் எதிர்பார்த்தபடி மற்றவர்கள் நடந்துகொள்ளாதபோது, கோபம் வருகிறது. ஆத்திரம் வருகிறது. எங்கே மனிதர்கள் எதிர்த்துக் கேள்வி கேட்காமல், உங்களுக்குப் பணிந்து உங்கள் செய்கைகளைச் சகித்து ஏற்றுக்கொள்கிறார் களோ, அங்கே அமைதியாக உணர்கிறீர்கள். அதாவது, நீங்கள் அமைதியாக இருக்க வேண்டுமென்றால், உங்கள் அகங்காரத்துக்குத் தீனி போட வேண்டி இருக்கிறது.