Category Archives: Tamil Blog

வேட்டையன் வ.கே.கே.

1. இது ரஜினி படமா?
ஆமாங்க… அப்படித்தாங்க தலைப்பிலும் முன்னோட்டத்திலும் சொல்லிக் கொள்கிறார்கள்

2. அனிருத் இசை எப்படி?
ரஜினி படத்துக்கு யார் இசையமைச்சாலும் ஒரே மாதிரிதானே இருக்கும்! தர்பார் மாதிரி, ஜெயிலர் மாதிரி… ஒரே மாதிரி!

3. படம் எப்படி இருக்கு?
ரஜினி வெறியர்னா பல முறை பார்க்கலாம். இயக்குநர் ஞானவேல் பிரியர்னா இரண்டு முறை. சினிமா தாகம் கொண்டவர்னா நீலச்சட்டை மாறன் அலுக்கும் வரை.

4. உங்களுக்கு படம் பிடிச்சிருந்ததா?
நான் ப்ரியா முதல் லிங்கா வரை எல்லாமே நல்லா இருந்ததா நெனக்கிறவன். அவர் நடிச்சா அது ஆஸ்கார்.

5. அபிராமி?
முத்தமென்றால் கமலின் விருமாண்டி..
நடிப்பென்றால் ரஜினியின் வேட்டையன்.
நினைப்பென்றால் ஹம்மா… ஹம்மா (மிடில் கிளாஸ் மாதவன்)

6. வெள்ளித்திரையில் ஓடுமா?
தீபாவளிக்கு சன் டிவி.
கிறிஸ்துமசுக்கு அமேசான்.
அதன் பிறகு ஐபிடிவி.

7. இது யாருடைய படம்?
ஃபாஹத் ஃபாசில் மீண்டும் மீண்டும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பின்னப்படும் என்பதை நிரூபிக்கும் படம்.

8. கதையும் வசனமும்?
அதெல்லாம் ரஜினி படத்தில் தேவையா என்ன? இருந்தாலும் ஓரிரண்டு ‘பேட்ட’ போன்ற அரிதாரங்களும் ’உன்னையக் கட்டிப் பிடிச்சுக்குவேன்; இல்லே வெட்டி சரிச்சுடுவேன்’ போன்ற அண்ணாத்த பன்ச்கள் கூட இல்லாதது ஞானவேலின் திமிர் கலந்த அலட்சியம்.

9.படம் உங்களுக்குப் பிடிக்கலையா?
இந்தியன் 2 போன்ற ஷங்கர் கொடுமைகளுக்கு இதெல்லாம் கோடி தரம் மேல். மெக்காலே என்பவர் இந்திய நவீனக் கல்வியின் பிதாமகன் என்பதெல்லாம் கோடி தரம் புளித்துப் போன பிரச்சாரம். படம் வேலை செய்வது இந்த இரண்டு துருவ உச்சநிலைகளுக்கு நடுவே எங்கேயோ கேட்ட குரல்.

10. லிங்கா போல்… பாபா போல் இருக்கிறதா?
அதெல்லாம் மசாலா. இது தீபாவளி லேகியம்.

சொல்வனத்தில் நோபல் கட்டுரைகள்

யூடியூப் விழியங்களோடு பேசும் இயந்திர தற்கற்றல் நுட்பம் தெரியும்.
’புள்ளியியல் இயற்பியல்’ என்னும் துறை இருப்பது தெரிய வந்திருக்கிறது.
இயந்திர கற்றலில் இயற்பியலும் சேர்ந்து நரம்பியல் பின்னலமைப்புகளும் பொறி பறந்து நோபல் பரிசு கிடைத்திருக்கிறது.

இதை எல்லாம் இன்றைய #solvanam கட்டுரையில் அறிமுகம் செய்கிறார் அருணாச்சலம் ரமணன்.

இன்று செயற்கை நுண்ணறிவு காலம்.
விருதுக்காரர்கள் இலக்கியத்திற்கும் இயற்றறிவு (gen AI)க்கு கொடுக்கும் காலம் எந்த ஆண்டு என்று பின்னூட்டத்தில் சொல்லுங்கள். (என் கணிப்பு – 2030)

அதற்கு முன் சொல்வனத்தில் கட்டுரையை வாசித்து விடுங்கள்.

குட்டி ஆர்.என்.ஏ.

கிரி அறிவியல் புனைவொன்றை எழுதுகிறார்.

மருத்துவத்திற்கான நோபல்பரிசு இன்று அறிவிறிக்கிறார்கள்.

இரண்டையும் தெரிந்து கொள்ள சொல்வனம் வர வேண்டுகிறோம்.

நன்றி பேராசிரியர் ரமணன்.

புரதத்தின் எம்ஆர்என்ஏவை மாற்றியமைப்பதன் மூலம் மற்ற புரதங்களை ஒழுங்குபடுத்தும் மைக்ரோஆர்என்ஏ (மைஆர்என்ஏ) ஐ அவர்கள் கண்டுபிடித்தனர், புரதத்தின் படியெடுத்தல் அல்ல.

இதற்கு முன்னர், மரபணுக்கள் (புரதங்கள்) பெரும்பாலும் டிஎன்ஏவின் வரிசைமுறைகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன என்று கருதப்பட்டது, அவை படியெடுத்தல் காரணிகளைக் கட்டுப்படுத்தின.

புரத உற்பத்தியை நிறுத்துவதன் மூலம் படியெடுத்தல் காரணிகளைக் காட்டிலும் மரபணு வெளிப்பாட்டின் செயல்பாட்டில் பிற்பகுதியில் இந்த ஒழுங்குமுறை ஏற்படுவதை நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் கவனித்தனர்.

விவரங்களை அறிய:

உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2024 – சொல்வனம் | இதழ் 327 | 22 செப் 2024 (solvanam.com)

கண்கூலி

சொல்வனம் இதழின் 326வது வெளியீட்டில் ‘சகுனங்களும் சம்பவங்களும்’ மூன்றாம் பகுதி வந்திருக்கிறது.

#solvanam பத்திரிகைக்கு நன்றி

ஒரு நாடகம்.
ஒரு உயர்தனிச் செம்மல் (வார்த்தை உதவி பி.ஏ.கே அவர்கள்)
ஒரு பரிந்துரை.

இவை மூன்றுமே ஆழமாகவும் இந்திய தத்துவத்துடனும் வாத்தியார்களின் துணை கொண்டும் எழுதியிருக்க வேண்டும். அவ்வாறு எழுத வேண்டும் என்று 326 குறிப்புகள் வரைவோலையாகக் கிடப்பில் இருக்கிறது.

சொ.வ. இதழில் இதை விட மூன்று முக்கியமான ஆக்கங்களும் வெளிவந்துள்ளன:
1. டொரொண்டோ வெங்கட்ரமணன் எழுதிய இருளையும் ஒளியையும் வென்றவன் – ஆதி பகவன் மாதிரி பத்ரியும் வெங்கட்டும்: அவர்கள் முதற்றே பதிவுலகு
2. நிர்மல் எழுதிய பொற்குகை ரகசியம் – சிறுகதைத் தொகுப்பு: வாசிப்பு அனுபவம் – ஆங்கில விஷயங்களுக்கு சாட்ஜிபிடி இருக்கிறது. தமிழ் நூலுக்கு விமர்சனம்/அறிமுகம் கொடுப்பதற்கு சுய சரக்கு தேவை.
3. சிறுகதை சிறப்பிதழ்

வெளியான கதைகளில் எது உங்களுக்கு #1?

ஆயிரம் கொக்குக்குக் கண்ணியை வைத்து

அம்மா ஓர் அர்த்த ராத்திரி எழுத்தாளர். எல்லோரும் உறங்கிய பிறகு எழுதுவது அவருக்கு உகந்த நேரம். கணவன் காபி கேட்க மாட்டார். பிள்ளை பிஸ்கெட் தொணப்ப மாட்டான். கடைக்கான வேலைகள் முடிந்து ஏறக்கட்டப் பட்டிருக்கும். சமையல் செய்வது, பாத்திரம் கழுவுவது, விருந்தினர் வருவது, துணி துவைப்பது, சாமி கும்பிடுவது என்று கடமைகள் இடையூறு செய்யாது.

பக்கத்தில் மிக்சர். பிற்காலத்தில் மேரீ பிஸ்கெட். சிந்தனையை எழுத்தில் வடிக்க கொறிப்பதற்கு ஏதேனும் ஒன்று.

அவர் இராப் பிசாசு. அதற்காக காலையில் தாமதமாக எழுந்திருக்க மாட்டார். எனக்கு முன்பே எழுந்து வாசல் தெளித்து, வீடு பெருக்கி, காய்கறி நறுக்க ஆரம்பித்திருப்பார்.

எனினும், அவருக்கு எழுத வேண்டும். ஒரு திட்டத்தை ஆரம்பித்து விட்டால் அதை திருப்திகரமாக முடிக்கும் வரை ஓட்டம். மூடு இருந்தால் இருபது பக்கம். உடல் ஒத்துழைக்காவிட்டால் அன்றைய தினத்திற்கு நாலைந்து பக்கமாவது விஷயம் நகர வேண்டும்.

அவரின் பிசாசு என்னிடம் ஏற வேண்டும் என்பது என் அவா. மிக்சர் உண்டு. மாரியும் உண்டு. தமிழகத்தைப் போல் மின்வெட்டுகள் இல்லாத இரவும் உண்டு.

ஏக சிந்தனை கிட்ட என்ன வேண்டும்?

ஆயிரம் கொக்குக்குக் கண்ணியை வைத்துநான்
அப்பாலே போயொரு மிப்பா யிருக்கையில்
மாயிரும் காகங்கள் ஆயிரம் பட்டு
மறைத்து விறைத்துக் கிடப்பது போலவே
காயம் ஒடுங்கிக் கிடந்தது கண்டுநான்
கண்ணி சுழற்றி நிலத்திலே வைத்தபின்
சேயிழை தன்பொருட் டாலேபஞ் சாக்கரம்
செபித்த மன்னவன் பாவம்போ னாற்போலப் – போ

குற்றாலக் குறவஞ்சி 68 Kutralak kuravanji 68

ஆயிரம் கொக்குக்குக் கண்ணி வைத்தேன்
அப்பால் சென்று பதுங்கி இருந்தேன்.
அதில் ஆயிரம் காக்கைகள் பட்டுச் செத்து விறைத்துக் கிடப்பது போல் தோன்றியது.
அதைக் கண்ட நான் என் கண்ணிவலையைச் சுற்றி வைத்தேன்.
பெண்ணால் தவ வலிமையை இழந்த விசுவாமித்திர மன்னவன் மீண்டும் “நமசிவாய” பஞ்சாக்கர மந்திரம் ஓதியது போலச் சுருட்டி வைத்தேன்.

Happy Birthday – Nambi Krishnan

G.O.A.T என்றால் ஆடு
அப்புறம் ஃபெடரரா? நடாலா??

எனக்கு நம்பி கிருஷ்ணன்.
எஸ். ராமகிருஷ்ணனால் பாடல் பெற்றவர்.
பி.ஏ. கிருஷ்ணன் மூலமாக அறிமுகம் ஆனவர்.
பாண்டியாட்டம், அவதரிக்கும் சொல், நரி முள்ளெலி டூயட் போன்ற நூல்களை எழுதியவர்.
சொல்வனம் என்றில்லாமல் பதாகை, தமிழினி, கனலி, வனம் என்று எல்லாவிடங்களிலும் விஷயதானம் வழங்குபவர்.

கோட் என்றால் ?

—> கோட்டம் – நம்பி தனக்கென நாடு வைத்திருக்கிறார். நாட்டம் பிடித்தவர்களை வாசிக்கிறார். விலாவாரியாக அனுபவிக்கிறார். நமக்கும் தருகிறார்.

—> கோட்டை – நம்பி அறிமுகப் படுத்திய டாவன்போர்ட் பற்றி இப்படிச் சொல்வார்கள். எட்கர் ஆலன் போ-வின் இறுதி ஊர்வலத்தில் கவிஞர் வால்ட் விட்மான் வருவார் குகையோவியங்களில் பிகாஸோ நடமாடுவார். எமர்சனும் தொரோவும் உரையாடுவார்கள்.

நம்பியின் அபுனைவுகளில் அந்தப் பாய்ச்சல் இருக்கும். ஒவ்வொரு பத்திக்கும் சில பல கூகுள் தேடல் தேவை. வார்த்தைகளுக்கு அகரமுதலியில் அர்த்தம் போதாது. பிரிட்டானிக்கா வேண்டும். முழு அனுபவமும் கிடைக்க மூல நூலையும் படித்து, அசல் இடங்களையும் சுற்றிப் பார்த்து, நம்பியுடனும் நான்கைந்து முறை பேசிவிட வேண்டும்.

அவருக்கு பிறந்த நாள்.
’கோட்’ நம்பிக்கு வாழ்த்துகள்.

அவரின் புத்தம் புதிய கதையை சொல்வனத்தில் வாசித்து விட்டீர்களா?

பெயர்த்திரிசொல்

சாட்ஜிபிடி இடம் சில கேள்விகள் எழுப்பினேன்:

1. சினிமாவில் எவ்வாறு செவ்வியல் இசை இடம் பிடிக்கிறது?
அருமையான பதில் வந்தது. கூடவே…
அது பதில் கேள்வி போட்டு தொக்கி நின்றது:

உங்களுக்குப் பிடித்த படத்தின் பின்னணி இசை, எவ்வாறு செவ்வியல் தாக்கத்துக்கு உள்பட்டது?

2. புகழ் பெற்ற ஹாலிவுட் படங்களையும் அதில் வரும் பாரம்பரிய இசையையும் சொல்லுக:
மீண்டும் தகவல்களும் துல்லியமும் கொண்ட விடை.
அதன் கேள்வி:

மீளொலி (Leitmotifs) எவ்வாறு திரைப்படங்களில் பயன்படுத்துகிறார்கள் எனத் தெரியுமா?

3. இல்லை. சொல்லேன்…
சொன்னது. என்னிடம் சற்றே கடுப்பு எட்டிப் பார்க்கிறது.
அதன் மறுவினா:

எளிமையியின் உச்சம் (மினிமலிசம்) எவ்வாறு கதாமாந்தர்களோடும் காட்சியோடும் ஒன்ற வைக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறீரா?

பிரமிக்க வைக்கும் பிரவாகம்! அசரடிக்கும் அறியாவினாக்கள். எனக்கு ‘கற்றது விரலளவு’ என்று உணரும் தருணம். சாட்ஜிபிடி-யை பார்த்து நகையாட வைத்தது…
அது வரை ஆங்கிலம். இனி… கேட்டேன் பார் கேள்வியை – தமிழில்.

4. எனக்கு ராஜாவின் இசையில் தனித்துவம் தெரியும். அவரின் ராஜ்ஜியத்தில் சக்திவாய்ந்த அணுகுமுறை சாத்தியம். அதற்கு உதாரணங்கள் தர வேண்டுகிறேன்

ரொம்ப நேரம் யோசித்தது:

“மூன்றாம் பிறை” படத்தில் “வாழ்வே மாயம்” பாடல் இதற்கு ஒரு உதாரணம்.

பத்தியா? டைரியா? கிறுக்கலா?

’கற்றதும் பெற்றதும்’; ‘தெரிந்தது மட்டும்’; ‘ராயர் காபி கிளப்’; ‘பா.கே.ப.’; ‘கோணல் பக்கங்கள்’; ‘நேசமுடன்’; ‘துணையெழுத்து’…

என்று துவங்கி நிறைய பத்தி எழுத்தாளர்கள் உண்டு.

இன்றைக்கு கே. என். செந்தில், தமிழினி கோகுல் பிரசாத், முகமூடி ராஜேஷ், வெ. சுரேஷ், போகன், தமிழ்நதி என்று எண்ணற்ற ஃபேஸ்புக் பதிவுகளின் தொடர்ச்சியும் உண்டு.

பிழைத்துக் கிடந்து, கடவுளின் நல்லாசியும் கொண்டு, அத்யந்தமான அனுபங்களும் கிடைத்து, தொடர்ச்சியாக எனக்குக் கிடைத்த விஷயங்களைப் பகிர வேண்டும்.

அதுதான் ”சகுனங்களும் சம்பவங்களும்”.

வெளியிட்ட சொல்வனம் இதழுக்கு நன்றி. படித்துப் பார்த்து உங்கள் எண்ணங்களைப் பகிருங்களேன்!

சொல்வனம் 325-ல் பல முக்கிய ஆக்கங்கள்.

தலைப்புக் கட்டுரையாக அனுபவப் பகிர்வு – லோகமாதேவி: உண்மை என்பதாலும் அயல்நாடு விஷயத்தினாலும் உணர்ச்சிகரமாக, நெருக்கமாக எழுச்சியுற வைக்கிறது.
விஷ்ணுபுரம் விருது நாயகரின் 77ஆம் அத்தியாயம் – மிளகு: இரா. முருகன் என் ஆசிரியர். அவர் ஊக்குவிக்கா விட்டால் எழுதவே வந்திருக்க மாட்டேன்.

இந்த இதழை ஓவியச் சிறப்பிதழ் எனலாம்.
எஸ் எச் ராஸா வந்த அரா கவிதைகள்.
மாதுரி தீட்சித் வந்த ‘வருணன் கவிதைகள்’
ஆர் ஸ்ரீனிவாசன் எழுதிய ஓவியர் ஃப்ரான்சிஸ் பேகன் (Francis Bacon) அனுபவம் + ஆராய்ச்சிக் கட்டுரை
வெங்கட் ரமணன் வழக்கம் போல் உச்சங்களைத் தொடும் ரெனே மக்ரிட் (René Magritte) – அஞ்சனம் + ஆஞ்சநேயம்

இந்தக் கட்டுரை சொல்வனத்தில் வெளிவருமா! சரியான தளத்தில் தான் இருக்கிறோமா? என சற்றே தொடர்புயர்வுநவிற்சி கொள்ள வைத்த பாகிஸ்தானிய சமூகவியலாளரும், முற்போக்கு எழுத்தாளருமான ரஸா நயீம் எழுதிய சிந்து சமவெளியின் சோஷலிச சூஃபியின் தியாகம் – வாசிக்க வேண்டிய பட்டியலில் காத்திருக்கிறது!

ஆனால், வாசித்து ரசித்த கதை = ஸ்ரீருத் எழுதிய அமானுஷ்யம்: திவ்வியதிருஷ்டியும் மந்திரசித்தியும் உபசுருதி ஏற்றிய கனவு.
நான் எழுதுவதை செயற்கை நுண்ணறிவு இன்னும் நன்றாக எழுதுமோ என யோசிக்க வைக்கும் ரவி நடராஜன் புகைப்பட க(வ)லை கட்டுரை – வாசிக்க லகு.

AI Generated

அப்படியெல்லாம் நான் யோசிக்காமல் எழுதிய சகுனங்களும் சம்பவங்களும் – இரண்டாம் பகுதி.

முதலில் பி.ஜி. பகிரப்பா குருபசப்பா ஹலகட்டி (PG Phakirappa Gurubasappa Halakatti) தென்பட்டார். அவரிடம் இருந்து வசன சாஹித்தியம் கிடைத்தது.
அடுத்தது பிரபு தேவா நடனம். அவரிடம் இருந்து இடுப்பொடிக்கும் ஆட்டம். எவர் சிறப்பாக ஆடுகிறார் என்னும் போட்டி.
கடைசியாக, அந்தாதி போன்று அகமாட்சி – ரேவதி என்னும் நடிகையை வைத்து ஒரு ஆட்டம்.

தான் எழுதுவது மற்றவர்களுக்குப் பிடிக்கிறதா? புரிகிறதா? புதியதாக இருக்கிறதா? என்பது ஒட்டக்கூத்தர் காலத்தில் இருந்து தோன்றும் மனக்கிலேசம்.

உங்கள் எண்ணங்களைச் சொல்லுங்கள்.

அவதூறு வழக்கும் அவதூதர்களும்

மஹராஜ் – அசப்பில் மோடியைச் சொல்கிறார்களோ என்னும் சம்சயம்.

எல்லோருக்கும் குழந்தையைத் தருகிறேன் என்கிறார்.
தான் மனிதனே அல்ல என நம்புகிறார். தெய்வாம்சம் ஆகவே நடந்து கொள்கிறார்.
அவரின் சீடர்கள் மகராஜை தெய்வமாகவேப் பார்க்கிறார்கள்.

நல்ல வேளை. கவனமாக எந்த நேரடி ஒப்பிடலோ, மறைமுக வசனமோ, குறிப்பால் உணர்த்தும் காட்சியோ பா.ஜ.க.வையோ பிரதம மந்திரி நரேந்திர மோடியையோச் சொல்லவில்லை.

இரு நூறாண்டுகள் முன்பு நடந்த அசல் சம்பவங்கள். நிஜ நாயகரின் பெயர் கர்சன் தாஸ் முல்ஜி – தயானந்த சரஸ்வதி போல்… ராஜா ராம் கோகன் ராய் போல்…

சமூக சீர்திருத்தவாதிகளைக் குறித்து பள்ளி புத்தகங்களில் படித்தவுடன், இவர்களை ஏன் படமாக எடுக்காமல், தூர்தர்ஷனில் நாடகமாக மட்டுமே போடுகிறார்கள் என்னும் சந்தேகம் கலந்த சோகம் எழுந்ததுண்டு. அப்பொழுது ஆமிர் கான் நடிக்க வந்த காலம்.

இப்பொழுது, ஆமிர் கான் மகனின் முதல் படம்.
முந்தையத் தலைமுறை நாயகர்கள் எல்லாம் மசாலாப் படங்களில் அறிமுகம் ஆனவர்கள்.

ஃபூல் அவுர் காண்டே – அஜய் தேவ்கன்
மைனே பியார் கியா – சல்மான் கான்
சான்வரியா – ரன்பீர் கபூர்
கஹோ நா பியார் ஹை – ஹ்ரிதிக் ரோஷன்
பான்ட் பாஜா பாராத் – ரன்வீர் சிங்
பாபி – ரிஷி கபூர்
ஹீரோ – ஜாக்கி ஷ்ராஃப்
பர்சாத் – பாபி தியோல்
கயாமத் ஸே கயாமத் தக் – ஆமிர் கான்
தீவானா – ஷாரூக் கான்

எல்லோரும் ஆடலும், பாடலும், காதலும், அடிதடியும் கொண்டு வெள்ளித்திரைக்குக் கொணரப்பட்டவர்கள். ஆனால், ஜுனைத் கான் வேறு மாதிரி களத்தில் இறங்கி இருக்கிறார்.

ஆஸ்காருக்கு பாடுபட்ட ‘டைட்டானிக்’ நாயகர் லியொனார்டோ டிகப்ரியோ வரலாற்று நாயகர்களாக பல படங்களில் நடித்தவர். அவர்களின் சரித்திரங்களையும் சாகசங்களையும் தகிடுதத்தங்களையும் நடித்து அகாதெமி விருது பெற்றவர்.

ஆமிர் பையனுக்கும் அதே ஆசை. ஹாலிவு படங்களில் கொஞ்சம் நியாயம் இருக்கும். வில்லனுடைய பார்வையைச் சொல்வார்கள். சமய, சந்தர்ப்பங்களை விளக்குவார்கள். சூழ்நிலைக் கைதியாவதை உணர்த்துவார்கள்.

மஹாராஜ் – இங்கெல்லாம் சறுக்குகிறது. ஹவேலி ஏன் உருவானது? எவ்வாறு அதன் உறுப்பினர்களைக் கட்டுக்குள் வைத்திருந்தது? பெரிய சமாஜ், சங்கர மடம் போன்றவற்றிற்கு ஏன் அவ்வளவு செல்வாக்கு கிடைத்தது? எப்படி வியாபாரத்தை உள்குழுவிற்குள் வைத்து, செல்வத்தைப் பெருக்கினார்கள்? – இது போன்ற சம்பவங்களைக் கொணர்ந்திருக்க வேண்டும். மகராஜின் இன்னொரு முகத்தைக் காண்பித்திருக்க வேண்டும்.

ஒரு வில்லன்; ஒரு கெட்ட விஷயம்; ஒரு நல்லவன் – எவ்வாறு தன் நாவன்மையாலும் எழுத்துத் திறமையாலும் அதிகாரத்தை வீழ்த்துகிறான் என்பதற்கு ஊறுகாயாக இரண்டு காதலிகளை வைத்து கச்சிதமாகக் கதையை முடித்து இருக்கிறார்கள். சுவாரசியமான, பார்க்க வேண்டிய படம்.

ஜெய்தீப் அலாவத் – வாழ்ந்திருக்கிறார். அடுத்த படத்தில் நவாசுதின் சித்திக்கி மாதிரி ரஜினி கையால் அடி வாங்குமளவு அசத்தியிருக்கிறார்.

ஆமிரும் புத்திரரும் அடுத்து எந்த மதகுருவை கையில் எடுப்பார் என நினைக்கிறீர்கள்?

பீறற் கூறை உடுத்தோர் பத்திரங்கட்டி வெட்டினராய்

பூடான், பாகிஸ்தான், இலங்கை, ஆஃப்கானிஸ்தான், நேபாளம், பங்களாதேசம், மாலத்தீவுகள் என்பதெல்லாம் நம்மவங்க செஞ்ச மோசம்.
இதெல்லாம் வெறும் சார்க் என்னும் கனவாக, ராஜீவ் காந்தியின் இந்திய ஐக்கிய நாடுகள் என்னும் திட்டமாக சுருங்காமல், ஒழுங்காக, ஒன்றாக திரண்டு எழுந்து உருவாகியிருக்க வேண்டியவை.

அமெரிக்கா என்பது ஐம்பது நாடுகள்.
யூரோ என்பது சில பல சிற்றரசுகள்.
சீனா போல்… UAE போல்…

ஒரு அகண்ட பாரதமாகத் தோன்றியிருக்க வேண்டிய நாடு.

எவரிடம் கோபம் கொள்வது?
காந்தியா – அவர் பதவியில் இருந்தவர். இன்றைய ராகுல் காந்தி போல் நிறைய பேசியவர்; தூண்டியவர்.

எவரை நினைத்து வருத்தம் கொள்வது?
சுபாஷ் சந்திர போஸா – அவர் நாஜிக்களிடமும் ஃபாசிசத்துடனும் தன்னுடைய லட்சியத்திற்காக துணை போனவர். குறிக்கோள் உன்னதமாக இருந்தாலும் பாதை முக்கியம் அல்லவா?

எவரிடம் பரிதாபம் அடைகிறேன்?
சர்தார் வல்லபாய் படேல் – அவர் நிச்சயம் அந்த மகாராஜாக்களிடம் பேசியிருப்பார். கெஞ்சியிருப்பார். என்ன வேண்டுமென்றாலும் தந்திருப்பார். இருந்தாலும், கூட்டை உடைத்து விட்டார்.

எவரிடம் அச்சப்படவேண்டும்?
நேரு – பதவியாசை. பெண்ணாசை. பணத்தாசை. பரம்பரை ஆசை. பொம்மையாக இருந்தாலும் பிரதம மந்திரியாகும் வெறி. அதைத் தன் சந்ததியிடம் ஊட்டிய விஷம்.

பீறற் கூறை உடுத்தோர் பத்திரங்
கட்டி வெட்டினராய்ச்
சூறைப் பங்கிய ராகி நாள்தொறுங்
கூறை கொள்ளும்மிடம்
மோறை வேடுவர் கூடிவாழ் முருகன்
பூண்டி மாநகர்வாய்
ஏறு காலிற்ற தில்லை யாய்விடில்
எத்துக்கு இங்கிருந்தீர் எம்பிரா னீரே.

தெளிவுரை : எம்பெருமானே, குற்றமுடைய வேடுவரே கூடி, வழிப்பறி செய்த பொருளின் பங்காகிய பொருளை உடையவராய் வாழ்கின்ற இம்முருகன் பூண்டி மாநகர் அவர்கள் கிழிந்த உடையை உடுத்திக் கொண்டு அதற்குள் உடைவாளையும் கட்டிக் கொண்டு வருவோரை அவ்வுடைவாளால் வெட்டி, நாள்தோறும் அவர்களது உடைகளைப் பறித்துக் கொள்ளும் இடம்; உமது எருது கால் ஒடியாமல் நன்றாக இருந்தால் அதன் மேல் ஏறி அப்பாற் போகாமல் இதன்கண் இங்கு எதற்காக இருக்கின்றீர்?