Category Archives: Blogs

Amu – Movie

Thamizmanam Introductions – Observations for Life: Tamil bloggers perceptions

thamizmaNam : தமிழ்மணம் « முகப்பு « நட்சத்திரம் – காசி

வாழ்க்கையை நிலை நிறுத்துவதற்கும், விரும்பிய துறை அறிவுக்கும் தேவைப்படுவதைத் தவிர பெரிதாக வாசித்ததில்லை.
மொழி ஒரு மனிதருக்குக் கருவி மட்டுமில்லை, அது ஒரு சமுதாய அடையாளம் என்ற நம்பிக்கை. எந்த ஒரு மொழியும் இன்னொருமொழியை விட சிறந்ததில்லை என்பதும், அதே சமயம் தாய்மொழியை உதாசீனப்படுத்தும் சமுதாயம் தலைநிமிர்ந்து வளருவது கடினம் என்பதும் கூட நம்பிக்கைகள். இந்த நம்பிக்கைகளே தமிழில் இணைய எழுத்துக்கள், கணினி நுட்பங்கள் வளரவேண்டும் என்று ஆசைப்படவும், அதற்கு ஆன பங்களிப்பைச் செய்யவும் தூண்டுகோலாய் இருக்கின்றன.

thamizmaNam : தமிழ்மணம் « முகப்பு « “வற்றாயிருப்பு” சுந்தர்

தொழில் : உண்மையைச் சொன்னால் நிறைய பொய் சொல்லி வாடிக்கையாளர்களிடம் ‘சேவை’யை விற்று வருவாயீட்டும் பொட்டி தட்டும் தொழில்! ‘விற்பனை’ என்ற பெயரில் பில் கேட்ஸின் பவர் பாயிண்ட்டை வைத்துக்கொண்டு படம் போட்டு நான் செய்யும் அநியாயங்களுக்கு எனக்கு விமோசனமே கிடைகாது என்று தெரிந்தாலும், I love my job!

thamizmaNam : தமிழ்மணம் « முகப்பு « Chameleon – பச்சோந்தி

நான் ஒரு திரிலோக சஞ்சாரி.
நான் சஞ்சரிக்கும் மூவுலகங்கள்.

1.பாதாள உலகம்
தொழிலாளி, அதிகாரி, முதலாளி.

2. பூவுலகம்
கைநாட்டு, பட்டதாரி, முனைவர்.

3. தேவ உலகம்
குழந்தைகள், பெரியோர், முதியோர்.

thamizmaNam : தமிழ்மணம் « முகப்பு « ROSAVASANTH

உலகத்தின் எந்த பகுதியிலும் காணவியலாத வகையில், போலித்தனத்தை வாழ்வின் அத்தனை தளங்களிலும் பேணுவதாக (இன்னமும்) நினைக்கும் சென்னைக்கு, அதன் போலித்தனத்தை எதிர் கொள்வதிலிருந்து எல்லா வகையிலும் தப்ப விரும்பிய மனநிலையை, காலத்தின் போக்கில் தாக்குபிடிக்கும் அளவிற்கு கரைத்துக் கொண்டு, மிக விரும்பி மிகுந்த மனத் தெளிவுடன் இங்கே வாழ்வதை தேர்ந்தெடுத்துள்ளேன்.

ரோஸாவசந்த் என்ற பெயரை மிக எதேச்சையாக திண்ணை விவாதகளத்தில் எழுத (குறிப்பாக சின்னக் கருப்பன் அவர்களுக்கு ஒரு எதிர்வினை வைக்க) தீர்மானித்த தருணத்தில் தேர்ந்தெடுத்தேன். ஒரு எதிர்வினையாக மட்டுமே, இணையம் அளிக்கும் வசதி மற்றும் சுதந்திரத்தினால் எழுதத் தொடங்கினேன். எழுதியதில் பெரும் விழுக்காடு எதிர் வினைகளாகவும், போலமிக்ஸாகவும் இருப்பதை ஒப்புகொள்வதில் எந்த தயக்கமும் இல்லை. சுயநினைவுடன், அதற்கான தேவை கருதி அதன் எல்லைகளை கணக்கில் கொண்டே, வாய்திருக்கும் வசதிகொண்டு, முடிந்தவரை அதை செய்வதாக நினைக்கிறேன்.

thamizmaNam : தமிழ்மணம் « முகப்பு « பொடிச்சி

வலைப்பதிவுகளின் வருகை தணிக்கையற்ற (சுயதணிக்கைகளைத் தவிர) விவாதங்களிற்கு வழிவிட்டிருக்கிறது. பெரும்பான்மைக் குரல்களுக்குள் சக்திவாய்ந்த மாற்றூடகம் என்ற வகையில் தடைகளற்று எழுதுவது பிடித்திருக்கிறது (சிலவேளை அலுப்படித்தாலும்). எல்லாவற்றிலும் விட, நான் வாழ நேர்கிற இந்த உலகில் எதிர்கொள்கிற அத்தனை முரண்பாடுகள் குறித்தும் — பல சமயங்களில் எழுதுவது தவிர வேறு வழியில்லாததால் எழுதிக் கொண்டிருக்கிறேன்!

thamizmaNam : தமிழ்மணம் « முகப்பு « அசுரன்

இணையத்தில் எழுத தூண்டுகோலாக இருந்தது இங்கு பிற்போக்கு சக்திகள் கேள்வி கேட்க ஆளின்றி பொய்களையும், புரட்டுகளையும் பரப்பி வந்ததும், உலகமய பொருளாதாரத்தில் வளப்பமுறும் நடுத்தர வர்க்கத்தின் ஒரு சிறு பகுதி, தமது சம்பளத்திற்க்கு மதிப்பை கொடுக்கும் பெரும்பான்மை இந்திய மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் குறித்து கிஞ்சித்தும் கவலையின்றி சுயநலத்திலும், பிழைப்புவாதத்திலும் மூழ்கி இருப்பதுமே ஆகும். இந்த இரண்டையும் எதிர்த்தே இங்கு எனது எழுத்து ஆரம்பித்தது.

சுய திருப்தியையும், ஒரு அல்பவாதிக்குரிய குணங்களையும், தற்பெருமையையும் ஊக்குவிக்கும் சூழல் ப்ளாக்குகளில் நிலவுகின்றன. இது தவிர்க்க முடியாதது.

thamizmaNam : தமிழ்மணம் « முகப்பு « இலவசக்கொத்தனார்

ஆதங்கம் : இன்று வலைப்பதிவுகள் மூலம் எவ்வளவோ சாதிக்க இருக்க, மீண்டும் மீண்டும் இங்கு நடக்கும் குடுமிப்பிடி சண்டைகளும் தனிமனிதத் தாக்குதல்களும்தான். எவ்வளவுதான் ஒதுங்கிப் போனாலும் மீண்டும் மீண்டும் இதே நடப்பதால் சில சமயங்களில் நாமும் வரிந்து கட்டிக் கொண்டு இறங்கிவிடும் வீக்னெஸ்.

thamizmaNam : தமிழ்மணம் « முகப்பு « கைப்புள்ள

எல்லோருக்கும் எல்லாமுமாக இருக்க வேண்டும் என்று நான் நினைப்பது உண்மை. நம்மால் யாரும் எவ்விதத்திலும் புண்படக் கூடாது, மனம் நோகக் கூடாது என்ற எண்ணம் எனது ஒவ்வொரு நடவடிக்கையிலும், செயலிலும் இருக்கிறது என்று பெரிதும் நம்புபவன். கண்காட்சியில் வண்ண விளக்குகளையும் விதவிதமான விளையாட்டு பொம்மைகளையும் கண்டு அதிசயித்து வாய் பிளந்து நிற்கும் ஒரு சிறுவனைப் போன்றே அமைந்துள்ளது இது வரையிலான என் பயணம். அப்பயணத்தில் நான் மிகவும் ரசித்து வாய் பிளந்த விஷயங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் ஒரு கருவியாகவே என் வலைப்பூவைக் காணுகிறேன்.

A Song and a Blog Post

உண்மையில் நான் ஒரு கடிகாரம்
ஏன் சுற்றுகிறேன் என்று தெரியாமல்
சுற்றுதம்மா என் வாழ்க்கை

உண்மையில் என் மனம் மெழுகாகும்
சில இருட்டிற்குதான் அது ஒளி வீசும்
கடைசி வரை தனிமையில்தான் உருகும்

பிறரின் முகம் காட்டும் கண்ணாடி
அதற்கு முகம் ஒன்றும் இல்லை
அந்த கண்ணாடி நான்தானே
முகமே என்னிடம் இல்லை

காகிதத்தில் செய்த பூவுக்கும்
என மனதிற்கும் ஒற்றுமை உண்டோ
இரண்டுமே பூஜைக்கு போகாதோ

பூமிக்குள் இருக்கின்ற நெருப்புக்கும்
என் ஆசைக்கும் சம்பந்தம் இருக்கிறதோ?
இரண்டுமே வெளி வர முடியாதோ

செடியை பூ பூக்க வைத்தாலும்
வேர்கள் மண்ணுக்குள் மறையும்
உதட்டில் புன்முறுவல் பூத்தாலும்
உள்ளே சறுகாய் கிடக்கிறேதே.

Raji’sView: மனதைத் தொட்ட ஒரு நிகழ்வு:

அனைவரும், எதோ ஒரு வகையில் சம்பாதித்து, அவர்கள் பிள்ளைகளை வாழ வைத்து விட்டு வாழ்க்கயின் விடுமுறையை அனுபவிக்கத் தொடங்குகிறார்கள்। ஆனால், விடுமுறையை சுகமாக அனுபவிக்க இயலாமல், நோய் வாய் பட்டு, நடக்க இயலாமல், கோல் ஊன்றி கஷ்டப்பட்டு கழிக்கிறார்கள்.

New Jersey Bloggers Meet – Tamil Blog Attendant

The test of a first-rate intelligence is the ability to hold two opposing ideas in the mind at the same time and still retain the ability to function. One should, for example, be able to see that things are hopeless yet be determined to make them otherwise.
– F. Scott Fitzgerald

நியூ ஜெர்சி சந்திப்பு – சில நினைவுகள்

  • ரசோய்‘ உணவகத்தில் பஃபே பிரமாதம். அதுவும் ‘பன்னீர் புருஜி‘ செய்திருந்தார்கள். ரொம்பவே yummy.
  • பன்னீர் புரிஜி தவிர பாவ் பாஜி, ஆலு டிக்கி சாட், மலாய் சிக்கன் ஆகியவையும் ருசிகரம்.
  • சனிக்கிழமையில் போக்குவரத்து ‘மாமா’க்கள் கார்-ஆட்டம் அதிகம் இல்லை. தைரியமாக 80+ ஓட்டலாம்; அபராத டிக்கெட் கிடைக்காது.
  • ஜார்ஜ் வாஷிங்டன் பாலத்தில் எந்த பொழுதில் சென்றாலும் கூட்டம் நெக்கும். தவிர்த்தல் நலம்.
  • கனெக்டிகட்-இல் பெட்ரோல் விலை அதிகம்; நியூ ஜெர்சியில் காரில் உட்கார்ந்தவாறே சொகுசாக கேஸ் போட்டு விடுகிறார்கள்; விலையும் குறைச்சல்.
  • இரவில் வண்டி ஓட்டினால் தூக்கம் வரும். பக்கத்தில் வெட்டிப்பயல், தென்றல் போல் எவராவது நகைக்க வைத்தார்களோ… பிழைத்தோமோ 😉
  • 80 ஜிபி ஐ-பாட்-இல் பாடல்கள் ரொப்ப வேண்டாம். மூன்றரை ஜிபி நிரப்பினாலே பத்து மணி நேரத்துக்குத் தாக்குப் பிடிக்கும்.
  • ஆஸி-இலங்கை ஆட்டம் ஒளிபரப்பாகும் என்று தெரிந்திருந்தால் சீக்கிரமே போய் சேர்ந்திருக்கலாம்.
  • சென்னையில் ஒரு பெண் பதிவர். இங்கே இருவர்.
  • (வீ)எஸ்.கே. மைசூர்பாகு, முறுக்கு, ராஜாவின் திருவாசகம் கொடுத்தார்.
  • சென்னப்பட்டணம் ‘சாகரன் அஞ்சலி மலர்’ வழங்கியது.
  • சூடான பாப்-கார்ன், சல்சாவுடன் சிப்ஸ், குளிர்ந்த பெப்சி, தாகத்துக்கு தண்ணீர் – நொறுக்ஸ் ஏராளம்.
  • அண்டத்திலேயே முதன்முறையாக பவர்பாயிண்ட் புல்லட் போட்ட முதல் பதிவர் அரங்கு.
  • அகில லோகத்திலேயே தென்றல் முதல்முதலாக கலந்துகொண்ட சந்திப்பு.
  • சேரியமாகப் கதைத்ததை, பதிவாக்க கேயாரெஸ் ரவி அல்லது வெட்டிப்பயல் பாலாஜி, இணையத் தமிழின் முதன்முதலாக minutes எழுதுவதாக வாக்களித்த சந்திப்பு.

The measure of success is not whether you have a tough problem to deal with, but whether it’s the same problem you had last year.
– John Foster Dulles

Thamizmanam’s newest User Interface (alpha)

Thamizmanam Interface Logic

Boston Tamil Bloggers Meet – Minutes, Agenda, Talk, Notes

பாஸ்டன் சந்திப்பு – பாபாவின் பார்வையில்

இந்த சந்திப்பு இலக்கியத் தரமாக இல்லை என்று குற்றஞ்சாட்டி விடக்கூடாது என்பதற்காக, பதிவை இலக்கியத்தரமாக்கும் முயற்சியாக இரு கவிதைகள்:

சந்திப்புகள் என்பவை சுவருடைத்தல் – எஸ்.பாபு : ஈ – தமிழ் | பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்: சந்திப்புகள்

பத்மா அரவிந்த் பாஸ்டன் வரப்போவதாக தெரிய வந்ததுதான் இந்த சந்திப்புக்கு கால்கோள். பத்மா அரவிந்தை சந்திக்க பலரும் பிரியப்படவே, அதையே பாஸ்டன் வலைப்பதிவர் சந்திப்பாக ஆக்கலாம் என்னும் எண்ணம் எழுந்தது.

பத்மா வரப்போகிறார் என்று அறிந்தவுடன் இந்த வார நட்சத்திரம் (வெட்டிப்பயல்) பாலாஜியை தொடர்பு கொண்டு, நத்தார் தினத்தை முன்னிட்டு வரவேற்பு கொடுக்கலாம் என்னும் கருத்தை முன்வைத்தேன். அங்கிருந்து வி.பி. பாலாஜி மற்ற ஒருங்கிணைப்புகளை முழுவதுமாக கவனித்துக் கொண்டார். நியூ ஜெர்சியில் இருந்து கண்ணபிரான் ரவி ஷங்கரை வரவழைத்தார். சந்திப்பு களை கட்டியது.

யாரெல்லாம் வந்திருந்தார்கள்?

1. தேன் துளி பத்மா அரவிந்த்

2. மாதவிப் பந்தல் கண்ணபிரான் ரவி ஷங்கர்

3. வெயிலில் மழை ஜி

4. வெட்டிப்பயல் பாலாஜி

5. பாடும் நிலா பாலு! சுந்தர்

6. Navan’s weblog நவன்

7. பார்வை மெய்யப்பன்

8. வேல்முருகன்

9. ‘பிரக்ஞை’ ரவி ஷங்கர்

10. அரை பிளேடு

கடைசி நேரத்தில் வர இயலாதவர்கள்:

1. Blogger: User Profile: சனியன்

2. வெற்றியின் பக்கம் வெற்றி

ஆத்திகம் எஸ்கே, செல்வன், சிகாகோவில் இருந்து தேன் சிறில் அலெக்ஸ், அட்லாண்டாவில் இருந்து சந்தோஷ்பக்கங்கள் சந்தோஷ் ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்துக்களைப் பகிர்ந்தது மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாக டானிக்காகவும் இருந்தது.

என்ன பேசினோம்?

மதியம் 1 மணிக்கு ஆரம்பித்த கூட்டம், பின்னிரவு இரண்டு மணி வரை தொடர்ந்தது. இதனாலேயே பேசிய பலதும் மறந்து போகுமளவு ஆயிற்று. விளையாட்டுப் போட்டியை நேரடியாக, லைவ் ரிலேவாக ரசிப்பதுதான் சுகம். ஆடி முடித்து, முடிவு தெரிந்தபிறகு ஹைலைட்ஸ் பார்ப்பது பிடிக்கும் என்றாலும், ஆட்டத்தை, இருக்கை நுனியில் அமர்ந்து, நகம் பிய்த்துக் கொண்டு, ரீப்ளே கடுப்பாகி சுவைப்பது போல் வராது. வித்தியாசமான பந்துவீச்சுகளும், முக்கிய திருப்பங்களும் ஆளுக்கு ஆள் மாறுபடுவதில்தான் வல்லுநர் பார்வையே அடங்கியிருக்கிறது.

எனக்கு ஆரம்பத்தில் பேசின விஷயங்கள் மட்டுமே மனதில் நிற்கும் எனபதற்கேற்ப துவக்கத்தில் பிரக்ஞை ரவி பகிர்ந்த இரு கட்டுரைகளை சொல்லலாம்.

சோமாலியாவில் இருந்து அகதிகள் அமெரிக்காவில் தஞ்சம் புகுகிறார்கள். அன்னிய தேசம்; புரியாத மொழி. தங்கள் மொழி பேசுபவர்கள் மெயிண் (Maine) மாகாணத்தின் கிராமமொன்றில் இருப்பதை கண்டுபிடித்து அங்கு படையெடுக்கிறார்கள். ஏற்கனவே அங்கு வசிப்பவர்களும் சோமாலியர்கள்தாம் என்றாலும், அவர்கள் வேறொரு இனம். அவர்களை அடக்கியாண்ட இனத்தை சேர்ந்த அகதிகள் இப்போது தங்கள் மொழி பேசுபவர் அருகாமையை நாடி அந்த இடத்திற்கு அடைக்கலம் கோருகிறார்கள்.

ஏற்கனவே தங்களை அடக்கியாண்டவர்களுடன் என்ன உறவு வேண்டிக் கிடக்கிறது என்று ஒரு சாரார் கோபம் கொள்கிறார்கள். ‘இவர்கள் அடிமைகளாக இருக்க வாய்க்கப்பட்டவர்கள்தானே… இப்படிப்பட்டவர்கள் இன்றைய சூழ்நிலையிலும் மேலோர் ஆகிய நமக்கு உதவ வேண்டும்’ என்று காரசாரமான மாற்றுக் கருத்துடன் இன்னொரு சாரார்.

சமகாலப் பிரச்சினைகளுக்கு இது ஒரு தேர்ந்த ஒப்புமையாக இருக்கும் என்பதை நான் இங்கு எழுதியதை விட இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக விளக்கினார்.

பேச்சு சுவாரசியத்தில் அறிவார்ந்த முடிவெடுக்கும் திறனுக்கு திரும்பினோம். Rationale என்னும் பதமே கேள்விக்குறியது. வாழ்க்கையே பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதாக artificial intelligence வல்லுநரும் அறிபுனை எழுத்தாளருமான எம்.ஐ.டி. பேராசிரியர் கருதுகிறார்.

‘தண்ணீர் மேலே விழுந்தால் குடை பிடிக்க வேண்டுமா?’ என்று கேட்டுத் தெரிந்து கொள்கிறது ரோபோ.

‘ஆம்’

‘மழைக்கு சரி. ஆனால், காலையில் நீங்களே பூத்துவாலைக்கடியில் போய் நிற்கிறீர்களே! அப்போதும் நான் குடை பிடிக்கத்தானே வேண்டும்?’ மீண்டும் ரோபோவின் வினயமான லாஜிக்கலான கேள்வி.

சமீபத்தில் உறுப்பு மாற்று சிகிச்சை தருவதற்கு முதியோரை விட இளைஞர்களுக்கு வாய்ப்பு அதிகம் கிடைப்பது எனக்கு நினைவுக்கு வருகிறது. கிட்னி மாற்றினாலும், அறுவை சிகிச்சை வெற்றியடையும் வாய்ப்பு (இளமையை விடக்) குறைவு; மேலும் வாழ்ந்து முடித்தவர்கள் என்று rational-ஆக வயதானோரை தீர்த்துக் கட்டலாமா என்று விவாதம் சென்றது.

வலைப்பதிவுகள்

பெரும்பாலான பேச்சு இதை சுற்றியே அமைந்தது. பிடித்த வலைப்பதிவுகள் எது? ஏன் பிடிக்கிறது? எது பிடிக்கவில்லை?

எப்பொழுது படிப்பீர்கள்? எத்தனை நேரம் செலவிடுவீர்கள்? நண்பர் எழுதினால் படித்தே தீருவீர்களா? எப்படி ‘அதிகம் பார்வையிடப்பட்டவை’ ஆவது? எவ்வாறு வாசகர் பரிந்துரை நட்சத்திரங்களை ஏற்றுவது? பூங்கா, கில்லி பரிந்துரைகள் எவ்வாறு இருக்கிறது? புதிய பதிவர்களுக்கு உதவி எவ்வாறு கிடைக்கிறது?

வெளிப்படையாக எழுதுதல் அவசியமா? சாத்தியமா? வலைப்பதிவை எவ்வாறு மதிப்பிடுவது? எது சிறந்த பதிவாகக் கருதப்படும்? பார்வையாளர் எண்ணிக்கை முக்கியமா? பின்னூட்டங்களுக்கு மயங்கலாமா?

பதிவுகளில் என்ன எழுதுவது என்பது குறித்து எவருக்கும் சந்தேகங்கள் இல்லை.

பத்மா அரவிந்த்

சனி மாலையின் நட்சத்திர விருந்தினரான பத்மா மிகக் குறைவாகவே பேசினார். நல்ல எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும், சிறப்பான மேடைப் பேச்சாளராக இருக்க வேண்டாம் என்பது போல், அவ்வப்போது சன்னமான குரலில் எண்ணங்களை ஓடவிட்டார்.

கேம்பஸ் இண்டர்வ்யூ நேர்காணலில் நடக்கும் க்ரூப் டிஸ்கசன் போன்ற அடிதடி சூழலில், கவர்ச்சிகரமான தலைப்புகளும், புரட்சிகரமான தடாலடிகளும் மேலெழுந்தது. இன்னும் கொஞ்சம் பத்மாவை கேள்வி கேட்டு, அனைவரின் வினாக்களும் பதிலளிக்குமாறு அமைத்திருக்கலாம்.

பிரக்ஞை ரவி

தேர்ந்த சினிமா விமர்சகர்; மானுடவியலாளர் என்பதற்கு ஒப்ப, பல இடங்களில் விவாதங்களை ஒழுங்குப்படுத்தினார். பெண் வலைப்பதிவருக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து கேட்டுத் தெரிந்து கொண்டார். அமெரிக்க இதழியலில் வெளிவரும் சினிமா விமர்சனங்களின் கூறுகளை சுவையாக விளக்கினார்.

‘எந்த ஒரு ஊடகமுமே ஆரம்பத்தில் தரத்தை கொண்டிருப்பதில்லை; உச்ச நிலையையும் எளிதில் அடைவதில்லை’ என்னும் கருத்து வலைப்பதிவுகளில் நிலவும் க்வாலிடி குற்றத்திற்கு சிறப்பான சமாதானமாக இருந்தது.

கண்ணபிரான் ரவி கேயாரெஸ்

விளையாட்டாக சென்ற தருக்கங்களையும் கிண்டல்களையும் பல இடங்களில் நேர்படுத்தினார். திடீரென்று உணர்ச்சிவேகமாகப் போய்விடும் தருணங்களில் ஸ்பாண்டேனியஸ் நகைச்சுவையால் இயல்பாக்கினார்.

  • ‘பதிவரின் வீட்டில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், எதிர்கொள்ளும் நிகழ்வுகள் என்ன?’;
  • ‘பாலியல் குறித்த கட்டுரைகள், புனைவுகள் ஏன் மிக அரிதாகவே வலைப்பதிவுகளில் வெளியாகிறது?’
  • ‘ஆன்மிகம் என்றால் என்ன? ஏன் எல்லோரும் ஆன்மிகத்தை நாட வேண்டும்?’

    என்று பல சேரியமான வித்துக்களைத் தூவி உரையாடலை உற்சாகமாக்கினார்.

    மற்றவர்கள்

    ‘வெயிலில் மழை’ ஜி ஆர்வமாக கவனித்துக் கொண்டிருந்தார். ‘வெட்டிப்பயல்’ பாலாஜி தன் கருத்துக்களை தெளிவாக முன்வைத்து ஜோராக உரையாடினார். கொஞ்சம் தாமதமாக வந்ததாலோ என்னவோ, நைட் வாட்ச்மேன் போன்று ஒரமாக நின்று கொண்டே ‘பாடும் நிலா பாலு’ சுந்தர் அமைதி காத்தார். அதிகம் வலைப்பதியாததால் ஒவர் ஹெட் ட்ரான்ஸ்மிஷன் ஆன சில நிகழ்வுகளை விழிப்புடன் நவன் கேட்டுக் கொண்டிருந்தார்.

    ‘பார்வை’ மெய்யப்பன் இன்னும் பல இடங்களில் தன் விரிவான வாசிப்பையும் பரந்துபட்ட அவதானிப்புகளையும் முன்வைத்திருக்கலாம் என்று எண்ணினேன். சபாநாயகராக வேல்முருகன் அதிகம் அறியாத தகவல்களை முன்வைத்து தன் கருத்துக்களை காரசாரமாக விவாதித்து சந்திப்புக்கு உரமூட்டினார். அரை பிளேடு பல மறுமொழிகளுடன் தருக்கங்களுக்கு பொருள் கூட்டினார்.

    கேட்க மறந்த கேள்விகள்

    ஏன் வலைப்பதிகிறோம்? எப்படி பதிவுகளை உருவாக்குகிறோம்? பதிவினால் என்ன சாத்தியாமாகும் என்று நம்புகிறோம்? வலைப்பதிவதால் என்ன கிடைக்கிறது? தொடக்கத்தில் கிட்டும் என்று நினைத்ததற்கும், தற்போதைய நிலைக்கும் உள்ள தூரம் என்ன? இன்றைய நிலையில் ஏன் தொடர்கிறோம்?

    அடுத்த சந்திப்புகளில் கருத்தில் கொள்ள சில ஆலோசனைகள்

    விவாதங்களை மூன்றாக பிரிக்கலாம். முதல் பகுதியில் அனைவரும் பங்கு கொள்ள அவசியம் வாய்ப்பு தரப்படும். கலந்துகொள்பவர்களின் கேள்விக்கு அனைவரும் தங்கள் எண்ணங்களைப் பகிர வேண்டும். ஒரு பதிவர் குறைந்தது ஒரு கேள்வியாவது கேட்க வேண்டும். ஒரு கேள்விக்காவது முதல் ஆளாக பதில் தர வேண்டும். ஆம்/இல்லை போன்று இல்லாமல் பதில்கள் அமையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இரண்டாவது பகுதியாக வலைப்பதிவு சுவாரசியங்கள்: என்னுடைய பதிவில் வந்த ரசமான பின்னூட்டம், அதிக மறுமொழிகள் பெறுவது, வார்ப்புரு மாற்றுவது, மறுமொழி பெறுவது போன்ற அவசியமான துப்புகள். சந்தேக விளக்கங்கள். பல காலமாக எழுதித் தள்ளுபவரின் அனுபவ ஆலோசனைகள்.

    மூன்றாவதாக இலக்கியம், அரசியல், நாட்டுநடப்பு குறித்த விவாதங்கள்: கடந்த வருடத்தில் எந்தப் புத்தகம் முக்கியமானது? ரெஹ்மான் தமிழுக்கு துரோகம் இழைக்கிறாரா? ஈழம் குறித்து என்ன செய்கைகள் செய்யலாம்? எவ்வாறு நமது தொண்டு ஆர்வங்களை ஒருங்கிணைத்து பலப்படுத்தலாம்?

    கடைசியாக…

    என் மனைவிக்கு நன்றி.

    எங்களின் ஆழ்ந்த வலைப்பதிவர் வாக்குவாதத்தின் நடுவே ‘அடுத்து நான் என்னப்பா செய்யலாம்?’ என்று குதித்த குழந்தையை மேய்த்தது; சமோசா, சல்ஸா என்று விதம் விதமாகப் பரிமாறியது; சந்திப்புக்கு உறுதுணையாக நின்று, உவகையுடன் செயல்பட்டது. நன்றிகள் பல!

    அடுத்து…

    விட்டதை பங்கு கொண்ட மற்றவர்கள் தங்கள் பார்வையில் பகிர வேண்டும். நியூ ஜெர்சியில் சந்திப்பு போட வேண்டும்.

    – பாலாஜி
    பாஸ்டன்

  • Chennai Cutchery Dev’s Interview

    SUNDAY WITH பாபா – 1

    பாபா – இந்தப் பட்டம் பிடிச்சிருக்கா?

    வெட்டிப்பயலிடம் பேசும்போது கிட்டத்தட்ட இதே கேள்வியை அவரிடம் நண்பர் கேட்டார்.

    ‘உங்களை வெட்டி என்று கூப்பிடும்போது வருத்தமாக இருக்காதா?’

    வெட்டி பதில் சொல்வதற்குள் அவசரக்குடுக்கையாக நான்,
    இந்தியர்கள் எப்போதுமே சூப்பர் ஸ்டார், தளபதி, லிட்டில் மாஸ்டர், ரோஜா மாமா என்று அடைமொழி சூட்டி மகிழ்பவர்கள். அதே குணம்தான் பதிவுலகுக்கும் நீண்டிருக்கிறது.

    எனக்கு பாபா என்றழைப்பது அரசியல்/சினிமா/கிரிக்கெட்டின் தொடர்ச்சியாக பிடித்திருக்கிறது. அழைப்பவருக்கு அன்னியோன்யத்தைக் கொடுக்கிறது. பாலாஜி அவர்களே என்று நீட்டி முழக்காமல், ‘அடேய் பாபா… இது ஓவர்டா’ என்று ரைமிங்காக நட்பாக ஆக்குகிறது

    வெட்டி-பாலாஜி வேறுகோணத்தில் ஆராய்ந்தார். வெட்டி என்பது பிராண்ட் நேம். என்னுடைய எழுத்தின் மதிப்பாகத்தான் இந்த விளிப்பை நான் பார்க்கிறேன். சுஜாதா என்றால் அது அவருடைய கதைகளுக்கு கிடைக்கும் உடனடி ரெகக்னிஷன். அதே மாதிரி வெட்டி என்று அழைத்தால், இந்தப் படைப்புக்கு உரிமையானவர்; பதிவின் மூலமாக என்னை அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.

    இதைப் பட்டம் என்பதை விட எளிமையாக பரிச்சயம் கொள்ள ஒரு புனைப்பெயர்.

    அது என்ன E-Tamil, snapjudgement, விளக்கம் சொல்லமுடியுமா?

    நான் பதிவு தொடங்கிய காலம் டாட்.காம் அணைய ஆரம்பித்த நேரம். எனினும், எல்லா வார்த்தைக்கும் ஈ(e) அல்லது ஐ (i) முன்னாடிப் போட்டுக் கொள்வது வெப் 1.0-வின் சாமுத்ரிகா லட்சணம். அந்த மாதிரிதான் ஈ-தமிழ்.

    தற்போதைய Tamil News-இன் பூர்விகம். தமிழ் இதழ்களில், வலையகங்களில் வருவதில் பிடித்தவற்றை சேமிக்கும் கிடங்கு. எலெக்ட்ரானிக் தமிழாக, பல வலையகங்களில், விதவிதமான எழுத்துருவில் வந்தவற்றை ஒருங்குறியாக்கி, ஒரே இடத்தில் பிட்டு பிட்டாக்கி தொகுக்கும் இடம்.

    கொஞ்ச நாள் கழித்து ‘சொந்த சரக்கு கிடையாதா?’, ‘ஏன் நாங்கள் படித்ததையே மீண்டும் மீண்டும் பதிவாக்குகிறீர்கள்?’ போன்ற செல்ல சிணுங்கலினால், நானும் இரண்டு வரி மறுமொழி எழுதி, எழுத்தாளன் ஆகிப் போனேன்.

    மறுமொழிகளைத் தொகுத்து தனிப்பதிவாக்குவது இரண்டாண்டுகள் முன்பு ஃபேஷனாக இருந்தது. நொடி நேரத்தில் யோசித்து, பதிவு குறித்த தீர்ப்புகளை சுருக்கமாகத் தருவதால் பின்னூட்டம் என்பது ஸ்னாப் ஜட்ஜ்மெண்ட். கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, பின்னூட்டங்கள் எதுவுமே இல்லாமல், படிக்க வேண்டிய/படித்ததில் பிடித்த பதிவுகளை சேமிக்கும் தளமாக Snap Judgement ஆகிப் போனது.

    இப்போ எல்லாம் வெறும் பார்வையாளரா மட்டுமே இருக்குறீங்களே என்னக் காரணம்?

    இப்பொழுதும் க்விக்கா யோசி; பக்காவானால் பாசி! என்று நினைப்பதை கிறுக்கிக் கொண்டுதான் இருக்கிறேன். பின்னூட்டங்கள் போடுவது, கில்லியில் இணைப்பது போன்றவையும் தொடர்கிறது.

    நீண்ட பதிவுகள் எழுதாமல் இருப்பதற்கு பல காரணங்கள். தெரிந்தவர்/நெருங்கியவர் மறைந்தவுடன் தோன்றும் ‘வாழ்க்கை அநித்தியம்’; வருடந்தோறும் ஒரு சில மணித்துளிகளாவது புதிய நுட்பங்களையும் நிரலிகளையும் கற்றுக் கொள்ளும் சுய நிர்ப்பந்தம்; ஹாய்யாக டிவி, அப்பா தேவைப்படும், அப்பாவின் காலை சுற்றும் குழந்தை; போன்ற generic காரணங்களையும் சொல்லி வைக்கலாம்.

    வலைப்பதிவது இன்னும் அலுக்கவில்லை 🙂

    நான்கு வருடப் பதிவுலக அனுபவம்.. மாற்றங்கள்ன்னு எதாவது நடந்துருக்கா.. ஏற்றமா? இறக்கமா? தனிப்பட்ட மற்றும் பொதுவானப் பார்வை ரெண்டும் சொல்லுங்க பாலா?

    ஆரம்பத்தில் இவ்வளவு பேர் கிடையாது. வாசகர்களும் குறைவு. ஆனால், எல்லாப் பதிவுகளையும் கிட்டத்தட்ட எல்லா சக பதிவர்களும் படிப்பார்கள். குழுமம் மாதிரி இருந்தாலும், குழுவிற்குறிய குணங்கள் இல்லாத தனித்துவத்துடன் இயங்கியது. சொந்தக் கதையை நிறைய பேசினார்கள். தனி நபர் வாழ்வியல் சிக்கல்களை மனமுவந்து பகிர்ந்து வாசகனுக்கு செழுமையூட்டினார்கள்.

    இப்பொழுது 2000+ பதிவுகள். நிறைய வாசகர்கள். நன்றாக இருந்தால் மனமுவந்து பாராட்டும், பார்வையிடும், பரிந்துரைக்கும் விரிந்த ஊடகம்.

    செய்திகள், இடதுசாரி, முதலாளித்துவம், விளையாட்டு, பொருளாதாரம், அறிவியல் என்று ஓரிருவரை மட்டுமே வலம்வந்து, குண்டுச்சட்டியில் குதிரையோட்டிய தமிழ்ப்பதிவுலகம் பரந்துபட்டு, ‘அவர் இல்லாவிட்டால் இன்னொருவர்’ என்று மாற்று ஊடகமாக மிளிர்கிறது.

    உலகத்தின் மூலை முடுக்கில் நிகழ்வதை அறிய சற்றுமுன், பல்சுவை கட்டுரைகளை அறிய பூங்கா, பல்வேறு பதிவர்களின் விருப்பத்தை அறிய மாற்று, பெண்பதிவர்களின் வீச்சை அறிய கூகிள் ரீடர் சக்தி என்று புதிய முயற்சிகள் தொடங்கி வீறுநடை போடுகிறது.

    ‘நான் மட்டுமே வாசகன்’ என்னும் அளவில் வலைப்பதிவை துவங்கினேன். கஷ்டப்பட்டு ஒவ்வொருத்தராக அழைத்து, நண்பர்களைப் படிக்க வைத்து, சுட்டி கொடுத்து வலைவீசி வாசகரைத் தேடி, கூகிளை நம்பி தேடல் வார்த்தைகளை நிரப்பி, கூட்டம் சேர்க்கும் நிர்ப்பந்தம் இன்று கிடையாது.

    கை சொடுக்கில் தமிழ்மணம், தேன்கூடு, கில்லி, மாற்று கிடைக்கிறது. பார்வையாளர் வருகையேட்டு எண்ணிக்கையை மின்னல் வேகத்தில் உச்சாணிக் கொம்பில் ஏற்றும் வாய்ப்பு கிடைப்பது, புதிய பதிவர்களுக்கு pressure ஏற்படுத்தி பரபரப்புக்கும் உள்ளாக வைக்கிறது. இதனால் அடுத்தவரின் அனுபவத்தைப் பகிரும் அன்னியோன்யம் குறைந்து நாட்டு நடப்பை உலகியலாக ஆராயும் போக்கு மட்டுமே பெருகி வருவது இறக்கம்.

    பதிவுகளில் கிளாஸ் – மாஸ் இருக்கா? தேவையா?

    கிளாசுக்கு இங்கே போகவும்: வரவனையான்
    மாஸுக்கு: ஞானபீடம்: வீரன்

    கொஞ்சம் சேரியமாய் பார்த்தால், ‘பிதாமகன்’ படத்தில் சிம்ரன் ஆடுவது போல், ரோசாவசந்த் பதிவில் ஆண்குறி மாஸ்.
    என்னுடைய பதிவில் எப்போதாவது கிளாஸ். நடிகைக்கு கவர்ச்சிக்கும் ஆபாசத்துக்கும் வித்தியாசம் தெரியும். உருப்படியான பதிவரும் அதே மாதிரிதான்.

    ஆங்கிலப் பதிவுப் போட்டவங்க இன்னைக்கு இதையே ஒரு முழு நேரத் தொழிலாச் செய்யுமளவுக்கு பதிவுகள் அவனுக்கு வளம் கொடுத்திருக்கு… இங்கே நம்மாலே அதெல்லாம் முடியுமா? உங்க கருத்தைச் சொல்லுங்க? CAN BLOGGING BE A FUTURE CARREER?

    ஆங்கிலத்தில் சிறு பத்திரிகைகள் சக்கைபோடு போடுகிறது. எல்லா வெரைட்டி எழுத்தாளர்களையும் கொண்டாடுகிறார்கள். தமிழிலும் இதே நிலை இப்போது(தான்) உருவாகிறது. வலைப்பதிவும் கொஞ்ச நாள் கழித்துதான் வேகம் எடுக்கும்.
    எடுத்துக்காட்டாக, சினிமாவைப் பற்றி மட்டும் பதிவு எழுதலாம். அந்தப் பதிவர், ‘சித்திரம் பேசுதடி’ போன்ற அதிகம் புகழ் பெறாத படங்கள் வரும்போது, படத்தை சந்தைப்படுத்த உதவலாம். அவருடைய பதிவில் எக்ஸ்க்ளூசிவ் கொடுக்கலாம். அதன் மூலம் நுழைவுச்சீட்டுகளை ஏலம் விட்டு பணம் சம்பாதிக்கலாம். படம் சம்பந்தப்பட்ட விஷயங்களை வணிகத்தளத்தில் விற்கலாம். இலவசமாகக் கொடுக்க தயாரிப்பாளர்களிடம் நிறைய வஸ்து இருக்கும். அவற்றை போட்டி போட்டுக் கொண்டு வாங்க நுகர்வோர் தயாராக இருப்பார்கள். இருவருக்கும் பாலமாக, பதிவர் அமைவார்.
    இவ்வாறே இசை, ஓவியம், புத்தகம், விழியம், நாடகம் போன்ற பிற கலைத் துறைகளிலும் நிறையவே வாய்ப்புகள் இருக்கிறது.
    சம்பந்தப்பட்டோரை தொடர்பு கொள்வது, அவர்களிடம் viral marketing, word of mouth, buzz creation என்று சந்திரபாபு நாயுடு ரேஞ்சுக்கு பவர்பாயிண்ட் காட்டினால் மயங்காதோரும் உண்டோ?

    ஆங்கிலப் பதிவுகள் புத்தகங்களாக மாறுகிறது. தமிழ்ப் பதிப்புலகம் ‘சொந்தக் கதை’ அல்லது புகழ் பெற்றவர் அல்லாத தனி மனித வரலாற்றை மதிப்பதில்லை. புனைவுக்கு இடமுண்டு; அதுவும் பெயரெடுத்தவராக இருக்க வேண்டும் அல்லது பின் நவீனத்துவம் எழுதுபவராக இருத்தல் வேண்டும் போன்ற நிர்ப்பந்தங்களில் சிக்கியுள்ளது.

    ஆங்கிலத்தில் அவ்வாறு இல்லாமல் புற்றுநோயிலிருந்து மீண்டவர், தொலைதூரம் ஓடியவர் வரலாறுகளும் வெளியாகிறது. பெருவாரியாக விற்பனையாகிறது. தமிழ்ப்பதிவர்களில் வெங்கட் போன்ற சிலர்தான் தொடர்ச்சியாக ஒரே துறையில் சுவாரசியமான கட்டுரைகளை அளிக்கிறார்கள். அனேகருக்கு ஒரு நாள் சினிமா, இன்னொரு நாள் விமர்சனம் என்று பல மரம் கண்ட தச்சனாக புகுந்து புறப்படுவதால், புத்தகமாகத் தொகுக்க இயலாத நிலை.

    இந்த நிலையும் காலப்போக்கில் மாறும். துறைசார் பதிவுகளின் லாபத்தன்மை கருதியோ, சொந்த விருப்பத்தின் உந்துதலிலோ, குழுப்பதிவுகளும், தொடர்ச்சியும் அமையப்பெறும். இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளில் இந்தப் போக்குகளை நிறுவனப்படுத்த ஏதாவது கூகிள் போன்ற பிசினஸோ, தன்னார்வ அமைப்போ, விகடன்/குங்குமம் போன்ற வெளியீட்டாளர்களோ முயற்சிகளை எடுத்து, சரியான பாதையை வகுத்து, வலைப்பதிவதை லாபகரமான பொழுதுபோக்காக மாற்றலாம்.

    SUNDAY WITH பாபா – 2

    பதிவு உலகில் வியாபாரம் சாத்தியமா? துட்டுப் பாக்க வழி இருக்கா?நம்ம பிரிண்ட் மீடியா அளவுக்கு நெட் மீடியா வளர சாத்தியங்கள் இருக்கா?

    ஆங்கிலப் பதிவுகளிலேயே இன்னும் காசு பெரிய அளவில் புரள்வதில்லை.
    பண்டமாற்று முறையில் சில்லறை விற்பனை; காமம் தொடர்பான வியாபாரம்; தேர்ந்தெடுத்த துறையில் நற்பெயர் ஈட்டி, அந்தப் புகழைக் கொண்டு தொழில் முறைப் பேச்சு/புத்தகம்/குந்துரத்தல் என்று வேறு வழிகளில் சம்பாதிப்பது போன்றவை சாத்தியம்.

    ரவியின் Top 10 உலக மொழிகள்-இலிருந்து: “திரைப்படம், இலக்கியம், ஆன்மிகம், சமையல், சோதிடம் அப்படின்னு ஒரு மிகச்சிறிய வட்டத்துக்குள்ள தான் தமிழ் இருக்கு.”

    இப்போதைக்கு தமிழ் சஞ்சிகைகள் மேற்சொன்னவற்றுள் ஏதோவொன்றை வைத்து பணம் புரள வைக்கிறது. இணைய சஞ்சிகைகளுக்கும் ஆன்மீகம், ஜோதிடம் போன்றவை நிச்சயம் லாபம் தரும் தொழில். இவற்றில் இலக்கியம் என்பது இணையத்தில் சுஜாதா, கிரேசி மோகன், எஸ்வி சேகர் போன்றவர்களோடு நின்று விடும்.

    ஒரு பதிவின் வெற்றிக்குப் பெரிதும் உதவுது கருத்தா? இல்லை நல்ல மார்க்கெட்டிங்க்கா?

    மேட்டர் முக்கியமில்லை. மார்க்கெடிங் மட்டுமே போதும். மார்க்கெடிங் என்றால்…
    எப்போது எழுதுகிறீர்கள், எவருக்கு சுட்டி கொடுக்கிறீர்கள், உங்களின் பழக்கப்பட்ட நிலையில் இருந்து எவ்வளவு தூரம் விலகி அதிர்ச்சி தரும் விகிதத்தில் வழங்குகிறீர்கள் போன்றவை சந்தைக்காக எழுதுவதன் குணாம்சங்கள்.

    பதிவின் வெற்றிக்கு நேர்மை முக்கியம். கொண்ட கருத்தில் ஈடுபாடு அவசியம். உணர்ச்சிகரமாகவே எழுதி வருபவர், அவ்வப்போது நடையை வித்தியாசப்படுத்தி நக்கலாக எழுதும் மாறுபாடு என்னும் மார்க்கெடிங்குக்கும் பங்கு உண்டு.
    நான் சினிமாப் பைத்தியம். வெகுசன சினிமாப் பைத்தியம்.
    ‘அன்பே சிவம்’ நல்ல (கருத்துள்ள) படம். போதிய அளவு மார்க்கெடிங்கும் இருந்தது. தேவையான விகிதாசாரத்தில் மாதவன், கிரண், சண்டை எல்லாம் தூவி இருந்தது. இருந்தாலும், ‘போக்கிரி’ பெற்ற வெற்றியை அடைய முடியவில்லை.

    கிட்டத்தட்ட அதே மாதிரி தரம், குணம், சுவை உள்ள ஜெகத்தையும் பெயரிலியையும் எடுத்துக் கொள்வோம். இருவருமே பெரிதாக சந்தைப்படுத்தல் எதுவும் செய்வதில்லை. அதே தமிழ்மணம், அதே தேன்கூடு. இருந்தாலும் ஜெகத்தை விட பெயரிலி பதிவுகள் அதிக கவனம் பெறும். பல ஆண்டுகளாக எழுதுவதால் உள்ளர்த்தம் கிடைக்காதா என்று நோண்டும் சுபாவம், தமிழ்மணத்தின் நிர்வாகிகளில் ஒருவர் என்பதால் இருக்கும் விஷய்த்தை விட்டு இல்லாததைத் தேடும் மனோலயம் எல்லாம்தான் பதிவின் வெற்றிக்கு பெரிதும் உதவுவது. இது போன்ற சுவாரசியங்கள் இல்லாவிட்டால், அதே நண்பர் வட்டம், அதே பின்னூட்ட ஃபிகர்கள் என்றென்றும் தொடரும்.

    .அலைஞனின் அலைகள்: குவியம்.: இராவணன்வெட்டு பின்னூட்டத்தில் இருந்து: “மொக்கை, மொள்ளை, கொள்ளை, கும்மி பதிவெல்லாம் வருகுது. நாமும் சும்மா பின்னூட்டங்களைக் கணக்குப் பாத்துப் பாத்து, தமிழ்மணம் வலதுமேல்மூலைத்தலைப்பைச் சுத்தி நிக்கிற மாதிரி கொஞ்சம் கொஞ்சமா இழுத்தடிச்சால், கவுண்டு எப்பிடி எகிறிது எண்டு பாக்க விளையாடினதுதான் உந்தப்பின்னூட்டமும் பேனூர்வலமும். சும்மா சொல்லக்கூடாது எகிறெண்ட எகிறு எகிறித்தான் இருக்குது. மினக்கெட்டு மினக்கெட்டு ஆறேழு மணித்தியாலம் இருந்து போட்ட பதிவுகள்கூட இருபது பேரைத் தாண்டாது போயிருக்கேக்க, இப்பிடி உயரத்திலையிருந்து உருட்டிவிட்ட குண்டு போல கையில வந்ததும் வராததுமா அடிச்ச எழுத்துக்கழிசலெல்லாம் நானூறைப் பிடிக்க நிக்கிறத எண்ணிச் சிரிக்கிறதோ அழுகிறதோ? ஷில்பா ஷெட்டி சங்கதிதான் எனக்கும் நடந்திருக்குது. There is nothing called BAD PUBLICITY.”

    உங்க கேள்விக்கே வருவோம். பதிவின் வெற்றி என்று எதை நினைக்கிறீர்கள்? சொந்த அனுபவத்தினால் கற்றதும் பெற்றதும் பலரால் படிக்கப் பெறுவதா? பார்க்கப் பெறுவதா? பதியம் போட்டு அசை போடப் பெறுவதா?

    பலரால் பார்க்கப் பெற்றால், அவர்களுள் பெரும்பானவர்களால் படிக்கப் பெற்று, அவர்களுள் ஒரு சிலர் மட்டுமாவது பதியம் போட்டு பழுக்கக் காயப்போட்டுக் கொள்வார்கள்.

    இலக்கிய ரீதியாப் பதிவுலகம் எதாவது தாக்கம் ஏற்படுத்தியிருக்கா? அதற்கு வாய்ப்புக்கள் இருக்கா? இலக்கியவாதிகள் பதிவுலகம் பக்கம் வராமல் இருப்பதற்கு என்னக் காரணம்? IS IT LACK OF TECHNICAL KNOWLEDGE OR LACK OF RESPECT FOR FELLOW BLOGGERS ABILITIES?

    எல்லாமே Logical Fallacy: Loaded Question என்றாலும் இதற்கும் என்னுடைய ரெண்டணாவை வீசிடறேன்.

    அ) இலக்கிய ரீதியாகப் பதிவுலகம் எதாவது தாக்கம் ஏற்படுத்தியிருக்கா?

    பதிவுலகில் மட்டுமே குப்பை கொட்டிக் கொண்டு, ‘இல்லை’ என்று சொன்னால், நான் செய்வது எல்லாம் குப்பை என்றாகி விடும். அதற்காக பதிலை ‘ஆமாம்’ என்றால், கபடியில் இந்தியா தங்கப் பதக்கம் பெறுவது போல் முதுகில் தட்டிக் கொள்வது எனலாம்.

    தாக்கம் என்றால் என்ன? BLANK NOISE PROJECT போன்ற செயல்கள் இலக்கிய ரீதியாக இல்லாமல் செயல்ரீதியாக செய்து காட்டியிருக்கிறது. இலக்கியத்தின் ஆய பயனாக ரசிகரை மகிழ்விப்பது, உற்சாகம் ஊட்டி வாழ்வை மாற்றியமைப்பது எனலாம். பதிவுலகம் அதற்கு மேலும் சிந்தனைகளை வளப்படுத்தி இலக்கியத்தின் பலாபலன்களை நிறைவேற்றுகிறது.

    ஆ) இலக்கியவாதிகள் பதிவுலகம் பக்கம் ஏன் வரவில்லை?

    மாலன், இரா முருகன் (தினமணிக் கதிர்), சாரு நிவேதிதா (தப்புத் தாளங்கள்), சுஜாதா (க.பெ., ஸ்ரீரங்கத்து எஸ்.ஆர்) போன்றவை பதிவுகள்தான். அவர்களுக்கு தட்டினால் துட்டு. நமக்கு தட்டினால் ஹிட்டு.

    இ) ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன் போன்ற இலக்கியவாதிகள் வராமல் இருப்பதற்கு பிற பதிவரின் திறமைகளை மதிக்காதது காரணமா?

    நேற்று வரை கர்ம சிரத்தையாய் அனுதினம் கிறுக்கும் வலைப்பதிபவர், நாளை ‘விடைபெறுகிறேன்’ என்று ஓடிப் போகிறார். இந்த மாதிரி பாதியில் கடையை மூடுவதற்கு – சக பதிவர்களின் பின்னூட்ட சிக்கல்; தமிழ்ப்பதிவுகளின் ஜனநாயக அரசியல்; ‘கடைவிரித்தேன், கொள்வாரில்லை’ புலம்பல்; அலுவல் வேலை கெடுபிடி; என்று பல காரணங்கள். They have better things to worry about.

    நம்மப் பதிவர்கள் விருப்பப்பட்டு பதிவு படிக்கிறாங்களா வழி இல்லாமப் பதிவு படிக்கிறாங்களா… நீங்க என்னச் சொல்லுறீங்க?

    நான் விருப்பப்பட்டுத்தான் பதிவுகளை படிக்கிறேன். என்னுடைய ரசனைக்கு உகந்த, நான் அறிய வேண்டிய விஷயங்களைத் தேடிப் பிடித்து மேய்கிறேன்.

    மீண்டும் metaphor-க்கு மன்னிக்கவும். காலை எழுந்ததும் தினசரியை ஏன் புரட்டுகிறேன்?
    ராத்திரி ஒன்பது மணிக்கு மேலே ராக்ஸ்பரி (சென்னை தாதாக்கள் போல் பாஸ்டன் வஸ்தாதுகள் உலவும் இடம்) அருகே வீட்டு வாசலில் நின்றவர் கொலை என்பார்கள். ஓ… சரி! அந்தப் பக்கம் வீடு பார்க்காமல், வேறு எங்காவது ஜாகை பார்ப்போம் என்று முடிவெடுப்பேன். சற்றுமுன் அடுத்தவருக்கு நிகழ்வது, எனக்கு நிகழ்ந்து விடக்கூடாது என்னும் தற்காப்பு; பயம்.

    கொஞ்ச நாள் போன பிறகு, எல்லா செய்தித் தலைப்புகளையும் மேயப் பொறுமையில்லை. இரவு பத்து மணிக்கு அரை மணி நேர செய்தி வாசிப்பில், எல்லா கொலை, வன்முறைகளையும் படம் பிடித்து ஒளிபரப்புகிறார்கள். பார்க்க ஆரம்பிக்கிறேன். செய்தித்தாள் நிறுத்தி விட்டாயிற்று.
    பத்து மணிக்கு வீட்டுக்கு வர முடியாத ராப்பிசாசு வேலை. பக்கத்துவீட்டுக்காரியின் வலைப்பதிவில் செய்திகளைக் கோர்த்துக் கொடுக்கிறாள். என்ன, எங்கே, எப்படி நடந்தது என்பதை சுருக் தைக்கிறாள். விருப்பமான பதிவாக இல்லாவிட்டாலும், வேறு வழி இல்லாமல் படிக்க வேண்டிய தேவையான பதிவாக அமைகிறது.

    மக்களுக்கு நேரம் குறைச்சல். அதில் வழி இல்லாமல் படிப்பது என்பதற்கான பேச்சே இல்லை.

    பாஸ்டன் பாலா.. எதாவது செய்யணும் என்ற ஆர்வம் உடையவர் ஆனால் எதுவும் செய்யாமல் மெளனமாய் வெறும் வேடிக்கையோடு நிற்பவர்ன்னாச் சொன்னாக் கோபப்படுவீங்களா?

    அடுத்த கேள்வியைப் பார்க்கவும்.

    நீங்க ஒரு நல்ல விமர்சகர்.. தமிழ்மணம்..அதில் உலாவும் பதிவர்கள்.. தமிழ் மண நிர்வாகம் ஒரு மினி விம்ர்சனம் கொடுங்களேன்?

    முந்தின கேள்வியைப் படிக்கவும் என்பதுதான் பதில்.
    நிர்வாகத்தில் இல்லாதவர்களால் நிர்வாகிகளின் மண்டையிடி என்ன என்பது தெரியாது. வெளியாள் சுளுவாக விமர்சித்து சென்று விடலாம். தமிழ்மணம் குறித்து போதும் போதுமென்கிற அளவு, ஏற்கனவே அவ்வப்போது எழுதி மாய்ந்தாயிற்று.

    தற்போதைய கண்ணீரும் கம்பலையுமான டாபிக் ஆன பூங்கா குறித்து, முன்பு Desipundit plans to close shop என்று தேசிபண்டிட் அலசல் கிட்டத்தட்ட பொருந்தும்.

    கடைசியா.. சென்னைக் கச்சேரிக்காக…. ஒரு மெக்ஸிக்கன் ஜோக் ப்ளீஸ்…

    ஏற்கனவே சொல்லியாச்சு… ஈ-தமிழ்: கேள்வியும் நானே… பதிலும் நானே!

    Thanks Dev!

    Boston Bala said…
    என் பதிவுகளை எவராவது படிக்கிறார்களா என்னும் சந்தேகம் எனக்குண்டு. ஓரளவு தொடர்ந்து படித்ததனால்தான் இப்படி பொருத்தமான கேள்விகளை கேட்க முடிந்திருக்கிறது. அதற்காக மனமார்ந்த வணக்கங்கள்.

    சன் டிவியில் நடிகைகளை சந்திக்கும் போது ‘உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்?’, ‘உங்களுடையது காதல் கல்யாணமாக அமையுமா’ என்று வார்ப்புரு கேள்விகளைக் கேட்டு பழக்கப்பட்டவனுக்கு, ‘குடைக்குள் மழை’ பார்த்திபனை ருத்ரன் ஆராயும் அளவிற்கு அளந்தாராய்ந்து, வினாத் தொடுத்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

    நட்சத்திர வாரத்தில் தன் பதிவுக்கு மட்டும் தமிழ்மணத்தின் சூரிய ஒளியை எடுத்துக் கொள்ளாமல், எனக்கும் என் எண்ணங்களுக்கும் இடம் கொடுத்ததற்காக ஆச்சரியமான சந்தோஷங்கள் 🙂

    3:43 PM, April 01, 2007

    métier

    வலைப்பதிவருக்கு டிப்ஸ், புதிதாய் பதிபவர்களுக்கு வழிகாட்டிகள், வலைப்பதிவரின் மனோபாவங்கள் என்று கடந்த சில வருடங்களில் மாதந்தோறும் ஒன்றிரண்டு தடவையாவது எழுதியிருப்பேன். இருந்தாலும் இணையத்தின் வழியாக பரிச்சயமான முக்குறி (த்ரீ ஸைன்ஸ்) கேட்டுக் கொண்டதற்கிணங்க வாசகர் விருப்பப் பதிவு.

  • ப்ளாக்ஸ்பாட்டை விட வோர்ட்ப்ரெஸ் சிறந்தது. யார் பின்னூட்டம் இடுகிறார்கள், எப்படி வருகை புரிகிறார்கள் போன்ற சில்லறை விஷயங்களிலிருந்து போலிகளைக் கட்டுபடுத்துவது வரை மேம்பட்ட முறையில் செயல்படுகிறது. இதுவரை வலைப்பதிவு தொடங்காவிட்டால் வோர்ட்பிரஸ் பயன்படுத்தவும்.
  • கல்யாணம் என்றால் மாப்பிள்ளை வீடு, மாமியார் வீடு ரெண்டும் முக்கியம்; அது போல், தேன்கூடு, தமிழ்மணம் இரண்டிலும் பதிவை சமர்ப்பித்து விடவும்.
  • சாஃப்ட்வேருடன் வரும் manual-களை ஏறெடுத்தும் சீந்தாத சாதியைச் சேர்ந்தவர்கள் நாம். என்றாலும், கில்லியின் தமிழ் தட்டச்சு பக்கம், Indian Language Development WebSite போன்ற உதவிப் பக்கங்களைப் பொறுமையாக ஒரு முறையாவது முழுவதுமாக சிரத்தையாக படித்து மனதில் ஏற்றிக் கொள்ளவும்.
  • டெக்னோரட்டி, ரோஜோ, போன்ற அகில உலக தில்லாலங்கடி சேவைகளிலும், அனிதா போரா, காமத், போன்ற லோக்கல் தாதா லிஸ்டிங்களிலும் முன்மொழிந்து மொய் போல் சுட்டியை வலைப்பதிவில் சேர்த்துவிட்டு அவர்களின் நோட்டு புத்தகத்தில் இடம் பிடித்துவிடவும்.
  • இனி எழுத வேண்டியதுதான் பாக்கி. ஆரம்பத்தில் எழுத நிறைய விஷயம் இருக்கும். சின்ன வயசில் சைட் அடித்த கோடி வீட்டு ராமைய்யா, முதன் முதலாக தாவணி கட்டித் தழும்பானது, சுரிதார் பறக்க ஸ்கூட்டி ஓட்டியது, லயன் கிங் படத்திற்கு அலுவலக கும்பலுடன் சென்றது, தக்சின் உணவகத்தில் குலோப் ஜாமூனுடன் வெண்ணிலா ஐஸ்க்ரீமை வாங்கிக் கொடுத்தவன் என்று நினைவலைகளில் தொடங்கவும்.
  • ப்ராஜெக்ட் டெலிவரி ஆனபிறகு சப்போர்ட் கடுப்படிக்கும். அது போல் நாளடைவில் நனவோடைகள் போரடிக்க, சினிமா, தொலைக்காட்சி, புத்தகம் போன்ற கலைத் துறை விமர்சனங்களை முன் வைக்கவும்.
  • இதுவும் தீர்ந்து போக தினசரி செய்திகளை மேயவும். எல்லோரும் தினத்தந்தி, தினமலர், தினகரன் படிப்பதால் தி ஹிந்து, டெக்கான் * போன்ற ஆங்கில நாளிதழ்களை வாட்ச் செய்யவும். விகடன், குமுதம், கல்கி, துக்ளக், கீற்று.காம் போன்றவற்றையும் கண்காணிக்கவும்.
  • தொடர்ந்து சரக்கில்லாவிட்டால், இந்தியா டுடே, ஃப்ரண்ட்லைன், தி வீக், அவுட்லுக் பக்கம் பார்வையைத் திருப்பவும். இதுவும் redundant ஆனால், எகனாமிஸ்ட், ஃபாரின் பாலிசி,ஃபோர்ப்ஸ் என்று மேற்கத்திய வெகுஜன ஊடகங்கள் உதவும்.
  • நியுஸ்லெட்டர்ஸ் கொடுக்கும் தளம் அனைத்திலும் பெயரையும் மின்மடலையும் பதிவு செய்து, அவர்களின் வலையகம் அப்டேட் ஆகும்போதெல்லாம் தெரிவிக்க வசதி செய்து கொள்ளவும்.
  • இவ்வளைவையும் படித்து அப்படியே கொடுக்க செய்திகள் ஹார்லிக்ஸ் அல்ல என்பதை புரிந்து கொள்ளவும். நமக்கு முக்கியமாகப் படுவதை, புல்லட் பாயிண்ட்டாக கொடுத்தால் நேரப் பற்றாக்குறையால் திண்டாடும் படிப்பாளிகளுக்கு வசதியாக இருக்கும். நம்ம கருத்தை சுருக்+நறுக்காக பக்கத்திலேயே சொந்தமாக கிறுக்கலாம். புகைப்படம் இட்டால், காசி சொல்வது போல் (மேலும் விரிவாக இங்கே) எளிதில் வலைப்பதிவில் தோன்ற வகை செய்யவும்.
  • சிந்தையைக் கிளறுவதாக தோன்றும் பதிவுகளில் நிறைய பின்னூட்டங்கள் இடவும். நமக்குப் பிடித்த பதிவுகளாகத் தேர்ந்தெடுத்து இடவும். நமக்குக் கருத்து இருந்தால் மட்டுமே இடவும். கண்டிக்கிறேன், பிடிக்கவில்லை, ரசிக்கவில்லை, நீங்க நல்லா எழுதலை போன்ற பெரிய மனுசத்தனமான மறுமொழிகள் தேவையில்லாதது; அப்படியும் கை அரித்தால் ஏன் என்றாவது சொல்லி விடவும். நம்ம அலுவல்/வீட்டு ஐ.பி முகவரி தெரியக் கூடாது என்றால் பிகேபி சொல்வது போல் செயல்படவும்.
  • அனானியாக பின்னூட்டமிடுவதை முடிந்தவரை தவிர்க்கவும். நம்ம வலைப்பதிவிற்கு சக கருத்து உடையவரை (& vice versa) வரவேற்பதற்கும் காமெண்ட்கள் உதவுகிறது; அதே சமயம் நம்ம crap-ஐ நாமே சொந்தம் கொண்டாடா விட்டால், வேறு யார் உரிமை பாராட்டுவார்கள்?
  • நேர்மையாக சொல்ல வந்ததை எழுதவும். நம்ம மனசுக்குப் பட்டதை ஒத்துக் கொண்டு எழுதினால் அதற்கு கிடைக்கும் வரவேற்பே தனி. மேலும், எழுத்திலும் வெளிப்படையான எண்ணம் தெரியவரும். அதற்காக சொல்ல வந்ததை அப்படியே சொல்கிறேன் என்று உடனடியாக போஸ்ட் செய்து விடாமல், ஒரு தடவையாவது ப்ரூஃப் பார்த்து தட்டச்சுப் பிழைகளை கூடிய மட்டும் திருத்திப் போட்டால் வாசகரை கௌரவிக்கும்.
  • வலைப்பதிவுகள் பலவற்றைத் தொடர்ந்து படித்து வரவும். கில்லி, தேஸிபண்டிட், தேஸிகிரிடிக்ஸ் போன்ற பரிந்துரைகளைப் பார்க்கவும். தினசரி தெருமுக்கு பிள்ளையாருக்கு அரகரா போடுவது போல் தேன்கூடு, தமிழ்மணம், மறுமொழி நிலவரம், வாசகர் பரிந்துரை, நட்சத்திரப் பதிவர். அதிகம் பார்வையிடப்பட்டவை ஆகியவற்றை தரிசித்து விடவும். [இந்த வலைப்பதிவரும் கில்லியின் பங்களிப்பாளர் போன்ற disclosureகளை சொல்லிவிடவும்]
  • வலைப்பதிவு என்பது தனி நபர் மடலுக்கு ஈடாகாது. நீங்கள் வலைப்பதிவராக இல்லாவிட்டால், இந்தப் பதிவை நான் உங்களுக்கு மட்டும் ஸ்பெஷலாக அஞ்சலிட்டிருப்பேன். ஆனால், இந்தப் பதிவு வேறு எவரையும் புண்படுத்தாது என்றும் உணர்ந்தால் மட்டுமே பொதுவில் இடவும்.
  • நக்கலுக்கும் நரகலுக்கும் ஒரு எழுத்துதான் வித்தியாசம். நமக்கு நக்கலாகப் படுவது இன்னொருவருக்கு நரகலாகத் தெரியும் அபாயம் இருக்கும். இன்னொருவரை மிதித்து, திட்டி, கிடைக்கும் பாராட்டைத் தவிர்க்கவும்.
  • மேலே உள்ள கருத்திற்கு பொது வாழ்க்கைக்கு வந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் விதிவிலக்கு. அரசியல்வாதிகள், நடிகர்கள், மருத்துவர்கள் போன்றவர்களைத் திட்டாவிட்டால் வலைப்பதிவுக்கு மேட்டரே கிடைக்காது.
  • வார்ப்புருவில் மாட்டிக் கொண்ட வலையகம் போல் ஒரே மாதிரி monotonous-ஆக எல்லா பதிவுகளும் அமைத்துக் கொள்ளாமல், ஒரு பதிவில் நினைவலை, அடுத்தது அரசியல், தொடர்ந்து சினிமா, கொஞ்சம் வலைப்பதிவு வட்ட அரசியல், சொல்ப தமிழ், லிட்டில் ஆங்கிலம், குடும்ப ரசாபாசம் என்று கலந்து கட்டி கூட்டாஞ்சோறாகக் கொடுக்கவும்.
  • ஃப்ரீயா கொடுத்தா பினாயில் குடிப்போம் என்பதற்காக என்னைப் போல் நிறைய சுட்டிகளையும், ஜாவாஸ்க்ரிப்ட் ஜாலங்களையும் வலைப்பதிவில் இணைப்பதால், அகலபாட்டை இல்லாமல் வருபவர்களுக்கு ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படம் எப்போது முடியும் என்று பொறுமையிழப்பது போல் கோபம் வரும். டெம்பிளேட்டில் அதிகம் கை வைத்தால் சரக்கு கம்மி என்று அர்த்தம். உலகெங்கும் உலாவிகள் தோறும் அதிவேகத்தில் வலைப்பதிவு மின்ன, சின்ன வார்ப்புரு வைத்திருக்கவும்.
  • கொதிப்பு உயர்ந்து வருகிறதா… பதிவு செய்யலாம்; கருத்தை நிறைக்கிறதா… பகிரவும்; அசத்தல் திரைப்படமா… சொல்லவும்; போன பதிவில் பின்னூட்டமிட்டவருக்கு இந்த விஷயம் பிடிப்பதால் மட்டும் பதிய நினைக்கிறோமா… பதிவதற்கு முன் யோசிக்கவும்.
  • அதிகம் ஈஷிக் கொள்ளாமல், முன்முடிவுகளுடன் நட்புக்காக சங்கடமான எண்ணங்களைத் தவிர்க்காமல், இன்றைக்கு மட்டும் நான்கு பதிவுகள் இட்டு விட்டோமே என்று சுயக்கட்டுப்பாடுகள் இட்டுக் கொள்ளாமல், பெருசு போல் டி ஆர் விஜயகுமாரி கண்களுக்கு மயங்குகிறோமே என்று மறைத்து வைக்காமல், தனித்துவமாக நினைத்த விஜய்காந்த் முதல் நாளே சட்டசபை மட்டம் போடும் உள்முரண்களை இருட்டினுக்குள் தட்டிக் கொள்ளாமல் எழுதினால் லேஸிகீக் சொல்வது போல் Raw, naive and unfettered ஆக இருந்தால் வரப்பிரசாதம்.ஏதோ சொல்ல நினைத்து, எங்கோ இழுத்து சென்றால் ஃப்ரீயா வுடுங்க… அதுதான் ப்ளாக் போஸ்ட்! இந்தப் பதிவில் ஒரு பயனும் இல்லாவிட்டாலும் தலைப்பு வார்த்தையாவது புத்சு.

    | |