Monthly Archives: ஜூன் 2023

Solvanam #297

புத்தம்புதிய சொல்வனம் இதழ் #297 வெளியாகி இருக்கிறது.

நான் இருக்கும் இடத்தில் மூன்று மாதம் வெயில் அடிக்கும். கோடைக் காலங்களில் கொண்டாட்டம், சுற்றங்களோடு ஊர் சுற்றல் என்றிருப்பதால் இதழை ஆற, அமர படிக்கவில்லை.

இதழ்-297 – சொல்வனம் | இதழ் 297 |25 ஜூன் 2023 (solvanam.com)

எனினும், தொடர்களை விடக்கூடாது.

இரா முருகன் எழுதும் மிளகு அத்தியாயம் நாற்பத்தெட்டு வெளியாகி இருக்கிறது.
(48 அம்மாடீ! 24 மாதங்கள்!! இரண்டு வருடங்களுக்கும் மேல்!!!)

நாகரத்தினம் கிருஷ்ணா மொழியாக்கத்தில் அதிரியன் நினைவுகள் – 16ஆம் பாகம் கிடைக்கிறது.
அதே போல் பானுமதி. ந. தமிழாக்கத்தில் ராஜேஷ்குமாருக்கு முன்பே எட்கர் ஆலன் போ எழுதிய துப்பறியும் கதையான மார்க் தெரு கொலைகள்- இறுதிப் பகுதியுடன் முடிகிறது.

இதெல்லாம் இலக்கியம்.

தற்கால உலகத்தை அமெரிக்க மேற்குலகை அற்புதமாக அறிமுகம் செய்து சமீபத்திய வரலாற்றை செவ்வியல் ஆக்கும் அமர்நாத் அவர்களின் உபநதிகள் – ஒன்பது உள்ளது.
அவர் ஜாஜா-வின் தெய்வநல்லூர் கதைகள் – ஐந்தாம் அத்தியாயத்திற்கு சரியான போட்டி.

எழுத்தாளர் அமர்நாத் கதைகளும் சரி…
சிரித்தே சொக்க வைக்கும் ஜா. ராஜகோபாலன் புனைவும் சரி…
எந்தப் பாணியிலும் இல்லாமல், ஏற்கனவே தமிழ் கூறும் நல்லுலகுக்கு அறிமுகமான எழுத்தாளர்களின் நடையையும் நினைவுறுத்தாமல், அது பாட்டிற்கு செவ்வனே சிறப்புற அமைக்கப் பெற்று “பேஷ்!” போட வைக்கிறது.

இந்த மாதிரி தொடர்கதைகளை வாசிக்கிறீர்களா?
இன்றைய ஆறு நொடி டிக்-டாக் சமூக அவசரத்தில் பொறுமையாக ருசித்து ரசிக்கிறீர்களா?
சமீபத்திய “தொடரும்” போடும் இணையக்கதைகளில் எதை விரும்பீனீர்கள்?

Solvanam 296th Issue: சொல்வனம் மின்னிதழ்

296ஆம் இதழை – சொல்வனம்.காம் புதிய பதிப்பை – கவிதை குவிமைய இதழ் எனலாம்.

முகப்புக் கட்டுரையாக நம்பி கிருஷ்ணன். நான் அறிந்ததெல்லாம் ஷெல்லி, ஷேக்ஸ்பியர். இவர் வழக்கம் போல் தெரிந்து கொள்ளத்தக்க, வாசிக்க வேண்டிய மற்றுமொரு முக்கியமான எழுத்தாளரை ரசித்து, விதந்தோதுகிறார்: ”*எலிசபெத் பிஷப்*: இரு மொழிபெயர்ப்புகளும் சில குறிப்புகளும்”

அடுத்ததாக, மீனாக்ஷி பாலகணேஷ். ஆங்கிலத்தில் அரவிந்தரை வாசிக்க இலகுவாக இல்லை என்று சொன்னவுடன், அவரின் உன்னத காவியமான ஊர்வசீயை அழகுத் தமிழில் கொணர்ந்திருக்கிறார். இந்திய இலக்கியம் பலவிதமான தொன்மங்கள் மற்றும் புனைவுகளில் நிறைந்துள்ளது. அதில் அப்ஸரசுகளுக்கு முக்கிய சிம்மாசனம் உண்டு. இங்கே ரிக் வேதத்தில் வந்த புராணக் கதையை கவிதையாக்கின ஸ்ரீ அரவிந்தரை தமிழாக்கம் செய்துள்ளார்.

காம்பின்றித்‌ தானே மலர்ந்த மலரென ஊர்வசியை வர்ணிக்கிறார்‌. அவள்‌ இந்தியக்‌ கவிகளை வரலாறு நெடுகிலும்‌ கடுக்க முடியாத வலிமையுடன்‌ ஈர்க்கும்‌ தன்‌ கவர்ச்சிக்கு உட்படுத்தியிருக்கிறாள்‌. ஸ்ரீ அரவிந்தர்‌ இவ்விஷயத்தை மிகமேம்பட்ட முறையில்‌ தீட்டியுள்ளார்‌. இக்காவியத்தின்‌ மாண்பு அவலச்சுவை அடங்கியிருக்கும்‌ நிலையிலோ காமத்தின்‌ வெறியுணர்ச்சி துடிதுடிக்கும்‌ நேரத்திலோ, ஓவ்வொரு நிலையிலும்‌ வெளிப்படுகின்‌றது.

உட்பொருளானது இரு காதலரும்‌ தாம்‌ தகுதியுடன்‌ பெற்ற இன்பத்தைக்‌ கடந்து இருக்கின்றது. உண்மையாகவே, புரூரவஸ்‌ மரணத்திற்குட்பட்ட இம்மண்ணுலக மானுட நிலையிலிருந்து மரணமிலாத்‌ தேவர்‌ வாழும்‌ விண்மண்டலத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளான்‌. காதலர்‌ இப்புவியை அடியோடு துறந்து விட்டனர்‌. ஆயினும்‌, கீழே தொலைவிடத்தில்‌ மோனம்‌ நிறைந்ததும்‌ வல்லமை வாய்ந்ததுமான அண்டவெளியின்‌ ஊடே பசுமை நிறைந்ததும்‌, விடாமுயற்சியும்‌ சுறுசுறுப்பும்‌ உடையதுமான இப்பூமி இடைவிடாமல்‌ சுழன்று கொண்டேதான்‌ வருகின்றது.

சுழல்வது என்றவுடன் 300ஆம் இதழ் நினைவிற்கு வருகிறது. நீங்கள் வாசித்த புதிய எழுத்தாளர்களை, தற்கால புனைவுகளை, சமீபத்திய புத்தகங்களைக் குறித்து எழுதி விட்டீர்களா?

உடனடியாக அவற்றை solvanam.editor@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.