செட் தோசையும் கெட்டிச் சட்னியும் சாப்பிடப் போகிறேன். சூடாக ரவா கேசரி செய்திருப்பதாக சொல்கிறார்கள். அப்படியே, அதையும் வரவைத்து சாப்பிடுகிறேன்.
அதே மாதிரி புற்றுநோய் வந்து இருக்கிறது. அதற்காக மருத்துவரிடம் செல்கிறேன் மரபணு அலகிடுதலுக்கு (Genome Scan) அனுப்புகிறார்கள். அலகிட்டதில் அல்ஜெய்மர்ஸ் வருவதற்கான அறிகுறி இருப்பது தெரியவருகிறது. இதை நோயாளியிடம் சொல்லலாமா? மறைத்து விட வேண்டுமா?
ஸ்டக்ஸ்னெட் வைரஸ் தாக்குதலுக்கு கணினி உள்ளாகி இருக்கிறது. நீக்குவதற்கு நார்ட்டன் கிருமிநாசினியை உபயோகிக்கிறோம். ஸ்டக்ஸ்னெட் நச்சுநிரலை மட்டுமா நீக்குவோம்? கூடவே வேறு என்ன எல்லாம் நச்சுப்பொருள் நம் கணினியில் அமைதியாக உட்கார்ந்திருக்கிறதோ… பார்த்து களைந்து விடுகிறோம்.
இருமலுக்காக டாக்டரிடம் சென்றால் கூட நிம்மோனியா இருக்கிறதா என்று பரிசோதிப்பார். அதே மாதிரி Genome Scan செய்யும்போது லூ ஜெரிக் நோயோ, மறதி வியாதியோ வரும் அபாயம் உண்டு என்று அறிந்து வைத்துக் கொள்வதில் என்ன பிரச்சினை?
ஒரு சாரார் எல்லாவிதமான சாத்தியக்கூறுகளையும் அலசி ஆராய்ந்து நோயாளிக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்கிறார்கள். நாளைக்கு வரக்கூடிய உபாதையை இன்றே அறிவதால், வருமுன் காப்போனாக அரண் அமைக்கலாம். மருந்துகள் தரலாம். கவனமாக பக்கவிளைவுகளை கையாண்டு கொடிய நோயில் இருந்து காப்பாற்றலாம்.
இன்னொரு சாரார் நிம்மதி போய் விடும் என்கிறார்கள். மேலும் மூன்று இடத்தில் ஒரே ஒருத்தரின் மரபணுவை அலகிட்டதில், மூன்று விதமான முடிவுகள் வந்திருக்கிறது. ஒரு கணினி நிரலி இவருக்கு ‘புற்றுநோய் அபாயம் அதிகம்; ஆனால், ALS வாய்ப்பு குறைவு’ என்கிறது. இன்னொன்று நேர் எதிராக ‘புற்றுநோய்க்கு சான்ஸே இல்ல; ஆனா, நிச்சயமாக ALS வந்துவிடும்’. இப்படி மரபணு வினைச்சர முரண்பாடுகளைக் களையும் வரையில் மக்களை பயமுறுத்தக் கூடாது. நமக்கு என்ன தேவைக்காக அலகிடுகிறோமோ அதை மற்றும் தெரிவித்தால் போதும்.
யாராவது பதில் போட்டிருக்கிறார்களா என்று அறிய ஃபேஸ்புக் பக்கம் வந்தேன். அதை மட்டுமா செய்கிறேன்? விளையும் புற்றுநோயை முளையிலேயே அறிந்து கொண்டால் என்ன போச்சு?