Left parties to meet to review Two years of the Govt.


Dinamani.com – Headlines Page

மத்திய அரசின் 2 ஆண்டு செயல்பாடு: இடதுசாரி கட்சிகள் பரிசீலிக்க முடிவு

புதுதில்லி, செப். 7: மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாண்டு செயல்பாடு குறித்து பரிசீலிக்க இடதுசாரிக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன.

இத்தகவலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் ஏ.பி.பரதன், வியாழக்கிழமை புதுதில்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தெரிவித்த இதர விவரம்:

இடதுசாரிக் கட்சிகள்-ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் செப்டம்பர் மாத மூன்றாவது வாரத்தில் நடைபெற உள்ளது. அப்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இரண்டாண்டு செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும்.

உயர்கல்வி நிறுவனங்களில் பிற்பட்டோருக்கு இடஒதுக்கீடு விவகாரம், கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் ஆகியவை குறித்தும் மத்திய அரசின் பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் குறித்தும் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

  • சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
  • நாடாளுமன்றத்திலும் மாநில சட்டப் பேரவைகளிலும் மகளிருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.
  • வனப்பகுதி நிலங்களின் உரிமைகளை விவசாயத் தொழிலாளர்களுக்கே உரிமையாக்க சட்டம் இயற்ற வேண்டும் எனவும் இடதுசாரிகள் கோரிவருகின்றனர்.

    குறைந்தபட்ச பொது செயல்திட்டத்திலிருந்து காங்கிரஸ் கூட்டணி அரசு விலகிச் செல்வதை அனுமதிக்க இயலாது. எனவே அரசை சரியான பாதையில் இட்டுச்செல்வதற்கான யோசனைகளை இடதுசாரிகள் தெரிவிப்பார்கள் என்றார் பரதன்.

  • பின்னூட்டமொன்றை இடுக

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.