Daily Archives: ஒக்ரோபர் 10, 2005

அவுரங்கசீப்

முன்னுமொரு காலத்தில் நான் ஒரு கதை கேட்டேன்: “நடந்த கதை. அவர் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர். அதை விட புகழ்பெற்ற பத்திரிகையாளர். அவர் ஒருக்கா ரயில்ல மெட்ராஸ்லேர்ந்து தூத்துக்குடி வரைக்கும் செகண்ட் க்ளாஸ்ல போனாராம். பக்கத்து சீட் ஆசாமி கையில மேற்படி எழுத்தாளரோட புஸ்தகம் ஒண்ணு இருந்தது. பார்ட்டி படு சுவாரசியமா படிச்சிட்டு வருது.

நம்மாளுக்கு அவன் முடிச்சதும் என்ன மாதிரி முகபாவம் காட்டப்போறான்னு ஒரு இது. வண்டி முக்கா தூரம் கடந்ததும் படிச்சி முடிச்சவன், இவராண்ட, “பார்த்துக்கிட்டே வர்ரீங்களே, வேணுமா?”ன்னு கேட்டிருக்கான்.

அதுக்கு அவர் ‘நீங்க படிச்சீங்களே, எப்படி இருக்கு’ன்னு கேட்டாரு.

வந்த பதில்: “இவன் கதையை விட இவன் பத்திரிகை ரொம்ப நல்லா இருக்கும்”

ஆசிரியர் தாந்தான் அந்த இவன் என்று முன்னமேயே சொல்லியிருந்தா அந்த உண்மையான, ராவான, பாமர உள்ளக் கருத்து வந்திருக்குமா?

புரிஞ்சிருக்கும். அந்த மனிதர் பேர் எஸ்.ஏ.பி. அந்த புஸ்தகம் “காதலெனும் ஏணியிலே”

இப்படியொரு அறிமுகத்துடன் வந்தாலும், ‘அவுரங்கசீப்’ என்னும் லட்சணமான பெயரை பா ராகவன் என்று வெளிப்படுத்திக் கொண்டதால்தான், இணையத்து வாசகர்களின் உரிமையான இடித்துரைத்தல்களையும் schadenfruede அறிக்கைகளையும் பெற்று வருகிறார்.

இன்னசண்ட் எரிந்த்ரா, பெரியாத்தா கருமாதி, எம்.டி. ராமனாதன் குரலில் பாட்டு கேட்பது போன்ற குந்தர் அண்ணனின் டின் ட்ரம் என்று பட்டியல்களும், விவரிப்புகளும், அனுபவங்களும் பகிர்வதைப் படித்தால் வலைப்பதிவுகளின் சாத்தியக்கூறுகள் விளங்கியது.

‘புத்தகப்புழு’வில் பதினெட்டே முக்கால் மறுமொழிகளும் ராயர் காபி கிளப்பில் அறிமுகமும் கிடைத்த தைரியத்தில் ‘பாரா’வை சந்திக்க அழைத்தேன். தொய்வில்லாத பேச்சு. ‘ஏதாவது எழுதுங்க’ என்ன்னும் ஊக்குவிப்பு. வெங்கடேஷுடன் மறுதலிக்கும் கருத்துக்களில் வெளிப்படையான விவாதிப்பு. வலைப்பதிவுகளை நோட்டம் விட்டுக் கொண்டே அலுவலக server-இல் யாராவது ஊடுருவுகிறாளா என்று ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருப்பது போல் மாலை நேரத்தில் நண்பர்களின் உரையாடலுக்கு நடுநடுவே பதிப்பகத்தின் முதல் ப்ரிண்டுகளையும், அலுவலக வேலைகளையும் தவறாமல் கவனித்தல்.

அர்ஜுனன் அம்பை எடுத்ததுதான் தெரியும்; பாரா பான் பராக் ஜர்தாவை எடுப்பதுதான் தெரியும். பல லட்சம் மக்கள் படிக்கும் குமுதம் ஜங்ஷன் ஆசிரியராக இருந்தபோதும் எளிதாக சந்திக்க முடிந்தது. பத்திரிகைகளுக்கும் ஒப்புக்கொண்ட தொடர்களூம் எழுதவே நேரமில்லாத போதும், பதிப்பாசிரியராக திட்டமிட்ட புத்தகங்களும் எழுதியவர்களும் நெருக்குதல்களுக்கிடையேயும் ஜெயா டிவியில் கெட்டிமேளம் கொட்டுவதற்கு நடுவிலும் நண்பர்களூடன் உரையாடுகிற சந்தோஷத்துக்காகவே பல முறை தொடர்ந்து சந்திக்க வரவழத்தவர்.

கடைசியாகப் பேசிக் கொண்டிருந்தபோது, கோவை மண்டல இருளர் ஆதிவாசி சமூகத்தினரை குறித்த ஓர் ஆய்வைச் செய்துவருவதாக சொல்லியிருந்தார். அக்டோபர் எட்டு பிறந்த நாளுக்கு, எப்பொழுது எனக்கு முடிகிறதோ அப்பொழுது தொலைபேசும்போது, அது ஃபிலிம் டிவிஷனுக்கான டாக்குமெண்டரி ஆகிவிட்டதா என்று விசாரிக்க வேண்டும்.

ஒரு வித்தியாசமான பேட்டி | கிழக்கு பதிப்பகம் – பா. ராகவன் | Tamiloviam Tamil Ebooks | அலகிலா விளையாட்டு – நாகரத்தினம் க்ருஷ்ணா | மெல்லினம் – பாஸ்டன் பாலாஜி

பாரா எழுத்தில் சேமித்ததில் சில…..

  • ஆரம்ப எழுத்தாளர்கள் கற்கவும் சந்தேகம் தீர்க்கவும் புதிய விஷயங்கள் குறித்து அறிந்துகொள்ளவும் இணையம் மிகச் சிறந்த கருவியாகச் செயல்படமுடியும். ஒரு உதாரணத்துக்கு இரண்டுபேரை மட்டும் சொல்கிறேன். மாலன், இரா. முருகன் போன்ற மிகச் சிறந்த படைப்பாளிகள் குழுக்களுக்கு வருகை தந்து / நடத்தித் தந்து உதவும் அற்புதமான காலகட்டமாக இது இருக்கிறது. ஆனால் எத்தனைபேர் இந்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்? இணைய எழுத்தாளர்களில் எத்தனைபேருக்குத் தெரியும்? மாலன் மாதிரி ஒரு ஆசிரியர் வெகு அபூர்வம். அவரிடமிருந்து பயின்று பூத்தவர்கள் தான் இந்தத் தலைமுறை தமிழ்ப் பத்திரிகைத் துறையை ஆக்கிரமித்திருக்கிறார்கள். அவர் அடையாளம் காட்டிய எந்த இடத்திலும் ஊற்று பீறிடாமல் இருந்ததில்லை.
  • மேஜிக்கல் ரியலிசம் என்கிற இலக்கிய உத்தியை ஒரு பூச்சாண்டி மாதிரி பயன்படுத்திக்கொண்டிருந்த தமிழ் எழுத்துலகுக்கு முதல்முறையாக அந்த உத்தியை அதன் அதிகபட்ச எளிமையுடன் அறிமுகப்படுத்தியவர் முருகன். சிறுகதைகளில் அவரடைந்த உயரங்கள் மிக அதிகம். ஆனால் யாராவது ஒருத்தர்? ஒருத்தராவது படைப்பின் சூட்சுமங்கள் குறித்து அவருடன் விவாதித்திருக்கிறார்களா? சந்தேகம் கேட்டிருக்கிறார்களா? கலந்துரையாடியிருக்கிறார்களா?
  • சாப்பிட்டுப் பல்குத்திக்கொண்டு என்னவாவது எழுதலாமா என்று யோசிக்கிற பார்ட்டைம் எழுத்தாளர்கள் வேறு. எழுத்தைத் தவிர வேறெதையும் எப்போதும் நினைக்கத் தெரியாத எழுத்தாளர்கள் வேறு.
  • ஊடகங்களை மாற்றிப் பார்க்கிறேன். உள்மனசு மாறவில்லை. எழுதுகிற ஒவ்வொரு சொல்லும் உயிரைத் தின்றுகொண்டுதான் இருக்கிறது. சாகாத எழுத்து சாத்தியமா என்கிற முயற்சியில் சாகும்வரை எழுதிக்கொண்டிருக்க நிச்சயித்திருக்கிறேன்.
  • தயவுசெய்து உங்கள் உடைந்த ஸ்கேலை என் பக்கத்தில் வைத்து அளந்துபார்க்காதீர்கள்.

    பாராவின் ‘அலகில்லா விளையாட்டு’ உபயம்:

  • அவரவர் நியாயங்களின் உட்புறச் சுவரைக் குடைந்துபார்க்க எல்லாருக்கும் சாத்தியமில்லை.
  • உணர்ச்சி மிகுந்தால் அழுகை வருகிறது. கோபம் வருகிறது. சிரிப்பு வருகிறது. அறிவு மிகுந்தால் அமைதி வருகிறது. புத்தி விழித்துக்கொண்டு நாலையும் யோசித்துத் தெளிவு பெறுகிறது.
  • கூடியவரை நல்லது செய்ய முயற்சி செய்துகொண்டே இருக்கவேண்டியது தான். நமக்கே செய்துகொண்டாலும் நல்லது நல்லது தான்.
  • ஆனால் லட்சியம் உள்ளவர்களுக்கெல்லாம் காரியம் கைகூடிவிடுகிறதா என்ன?