தீரன் சின்னமலை


செ. இராசு ::

ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் வட்டம் மேலப்பாளையம் என்னும் ஊரில் 17.4.1756 அன்று பிறந்தவர் சின்னமலை. பெற்றோர் இரத்தினச் சர்க்கரை – பெரியாத்தா தம்பதியினர். அவர்களின் ஐந்து ஆண்மக்களில் இரண்டாவது குழந்தை சின்னமலை.

இளம்பருவத்தில் தம்பாக்கவுண்டர் என்று அழைக்கப்பட்டார். பள்ளிப் பருவத்தில் தீர்த்தகிரிச் சர்க்கரை எனப் பெயர் பெற்றார். பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு. அவர்கள் பரம்பரையில் அனைவருக்கும் ‘சர்க்கரை’ என்பது பொதுப்பெயர். ‘புவிக்கும் செவிக்கும் புலவோர்கள் சொல்லும் கவிக்கும்’ இனிமை செய்ததால் அப்பெயர் பெற்றார்களாம்.

இளவயதிலேயே தம்பியர் பெரியதம்பி, கிலேதார் ஆகியவர்களோடு மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் சின்னமலை கற்றுத் தேர்ந்தார்.

மதுரை நாயக்கர் வசமிருந்த கொங்கு நாட்டுப் பகுதியை மைசூரார் கைப்பற்றியதால் கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது.

ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி மைசூர் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகட்கு வினியோகித்தார். வரி தண்டல்காரரிடம் ‘சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல்‘ என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் ‘சின்னமலை’ என்ற பெயர் வழங்கலாயிற்று.

கிழக்கிந்தியக் கம்பெனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார். மலையாளத்திலும் சேலம் பகுதியிலும் காலூன்றிய கம்பெனிப்படை ஒன்றுசேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார்.

7.12.1782 இல் ஐதர்அலி மறைவிற்குப் பின் திப்புசுல்தான் மைசூர் சீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து ‘வெள்ளைத்தொப்பியரை’ எதிர்த்துக் கடும் போர் செய்து வந்தார். சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார். சின்னமலையின் ‘கொங்குப்படை‘ சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைகட்குக் கொங்குப்படை பெரும் சேதத்தை உண்டாக்கியது.

நெப்போலியனிடம் படை உதவி கேட்டுத் திப்பு சுல்தான் அனுப்பிய தூதுக்குழுவில் சின்னமலையின் மெய்க்காப்பாளன் கருப்பசேர்வையும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காம் மைசூர்ப் போரில் 4.5.1799-இல் கன்னட நாட்டின் போர்வாள் ஆன திப்புசுல்தான் போர்க்களத்தில் வீரமரணம் எய்திய பின் சின்னமலை கொங்குநாடு வந்து ஓடாநிலை என்னும் ஊரில் கோட்டை கட்டிப் போருக்குத் தயார் ஆனார்.

ஏற்கெனவே 18.4.1792-இல் தான் வாங்கிய சிவன்மலை – பட்டாலிக் காட்டில் வீரர்கட்குப் பயிற்சி அளித்தார். ஆயுதங்கள் தயாரித்தார். ஓடாநிலையில் பிரெஞ்சுக்காரர் துணையோடு பீரங்கிகளும் தயாரிக்கப்பட்டன.

தீர்த்தகிரிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் என்று சின்னமலை தன்னைப் பாளையக்காரராக அறிவித்துக் கொண்டு கொங்குநாட்டுப் பாளையக்காரர்களை ஓரணியில் சேர்க்க முற்பட்டார்.

போராளிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி விருப்பாட்சி கோபால நாயக்கர், திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக், பரமத்தி அப்பாச்சி ஆகியவர்களோடு இணைந்து 3.6.1800 அன்று கோவைக் கோட்டையைத் தகர்த்து அங்கிருந்து லெப்டினன்ட் கர்னல் கே. மக்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ஆம் பட்டாளத்தை அழிக்க கோவைப்புரட்சிக்குச் சின்னமலை திட்டமிட்டார். முந்தியநாளே போராளிகள் அணியில் சிலர் அறிவிப்பின்றிச் சண்டையைத் தொடங்கியதால் கோவைப்புரட்சி தோல்வியுற்றது.

இடையறாத போர் வாழ்விலும் பல கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தார். புலவர் பெருமக்களை ஆதரித்தார். சின்னமலை கோயில் கொடை பற்றிய கல்வெட்டுகள் சிவன்மலை, பட்டாலி, கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ளன.

சமூக ஒற்றுமை சின்னமலையிடம் மிகச் சிறப்பாக விளங்கியது. அவர் கூட்டமைப்பில் வேளாளர், நாயக்கர், வேட்டுவர் பாளையக்காரர்கள் பலர் இருந்தனர். ஓமலூர் சேமலைப் படையாச்சி, கருப்பசேர்வை, ஃபத்தே முகம்மது உசேன், முட்டுக்கட்டைப் பெருமாத்தேவன் சென்னிமலை நாடார் ஆகியோர் பலர் சின்னமலை படையில் முக்கியம் பெற்றிருந்தனர்.

சில பாளையக்காரர்களும், சிற்றரசர்களும் ஆங்கில ஆட்சி வேரூன்றுவதை எதிர்த்ததற்குத் தங்கள் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவே என்ற கருத்தும் சிலரிடம் உண்டு. ஆனால் சின்னமலை தன் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள அல்ல, உண்மையான நாட்டுப்பற்றுடன் போரிட்டார்.

எப்படியாவது சின்னமலையை ஒழிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் முடிவு செய்தனர். 1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அறச்சலூரிலும் நடைபெற்ற போர்களில் சின்னமலையே பெரும் வெற்றி பெற்றார். ஓடாநிலைப் போரில் ஆங்கிலத் தளபதி கர்னல் மேக்ஸ்வெல் தலையைக் கொய்து மொட்டையடித்துச் செம்புள்ளி கரும்புள்ளி குத்தி ஊர்வலம் விட்டது குறிப்பிடத்தக்கது. சின்னமலையின் ஓடாநிலைக் கோட்டையைத் தகர்க்கக் கள்ளிக்கோட்டையிலிருந்து மிகப்பெரும் அளவில் பீரங்கிப்படை வந்தது. சுபேதார் வேலப்பன் அறிவுரைப்படி சின்னமலை ஓடாநிலையிலிருந்து தப்பிப் பழனிமலைத் தொடரில் உள்ள கருமலை சென்றார்.

போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம் (??!), சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி 31.7.1805 அன்று தூக்கிலிட்டனர். தம்பியரும், கருப்ப சேர்வையும் உடன் வீரமரணம் எய்தினர்.

சின்னமலை நினைத்திருந்தால் கொங்குநாட்டு நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு வரிவசூலில் பத்தில் மூன்று பங்கு பெற்றுத் தொடர்ந்து ஆட்சி செலுத்தி சுதேச சமஸ்தானம்போல 1947 வரை விளங்கியிருக்கலாம். ஆங்கிலேயரும் அவ்வாறே வேண்டிக்கொண்டனர். ஆனால் சின்னமலை அதை மறுத்து வீரமரணம் அடைந்தார்.

சின்னமலை ஆங்கில வெள்ளத்தைத் தடுக்கும் பெருமலையாக விளங்கினார். முன்பு அவர் நினைவாகப் போக்குவரத்துக் கழகமும், தனி மாவட்டமும் இருந்தது. தீரன் சின்னமலைக்குத் தமிழக அரசு சென்னையில் உருவச்சிலை ஒன்றை அமைத்தது. தமிழக அரசின் சார்பில் ஓடாநிலையில் சின்னமலை நினைவு மணிமண்டபம் உருவாகி வருகிறது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் தீரன் சின்னமலை மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏப்ரல் 17 அன்று அவர் பிறந்த நாளிலும், அவர் மறைந்த ஆடிப் பதினெட்டு நாளிலும் அவருக்கு அஞ்சலி செலுத்திக் கொங்கு மக்கள் தங்கள் நன்றியைச் செலுத்துகின்றனர்.

இந்திய அரசின் தபால்தந்தி தகவல் தொடர்புத்துறை 31.7.2005 அன்று தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலை வெளியிடுகிறது.

(நாளை (31.7.2005) தீரன் சின்னமலையின் 200 ஆம் ஆண்டு நினைவு நாள்)

| |

2 responses to “தீரன் சின்னமலை

  1. very good..
    can i able to get his photos

  2. BE A PROUD THAT WE ARE KONGU

    i want the audio songs (life history) theeran chinnamalai.where do i get.

R.P. -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.