Tag Archives: winners

Sahitya Academy winner & Noted Tamil writer Nanjil Nadan at Boston – Quick Notes

முந்தைய பதிவு: அமெரிக்காவில் எழுத்தாளர் நாஞ்சில் நாடனுடன் வாசகர் சந்திப்புகள்

பொத்தான் நீக்காத முழுக்கை நீளும் வெளிர் நீல சட்டை. இஸ்திரி கலையாத கருநீல முழுக்கால் சட்டை. அமெரிக்க பொறியியலாளர்களுக்கு போட்டியாக விப்ரோ ஏற்றுமதி செய்யும் நாற்பதாயிர வெள்ளி சமபளத்திற்கு நிறைவான வேலை நல்கும் குந்துரத்தர் போல் தெரியும் நாஞ்சில் நாடன் வந்தார்.

முதல் முறை அமெரிக்க பயணம். ஆனாலும், வரும் வழியில் இரு குடும்பத்தாருக்கு அவர்களுக்கு உரிய விமானத்தை வழி காட்டி, ஆங்கிலம் தெரியாத மூன்று முதல் விஜயத்தாருக்கு படிவங்களை நிரப்பி உதவி வழியனுப்பி, இன்னும் சில சந்தேகப் பேர்வழிகளின் ஐயங்களை நீக்கி வழிநடத்தி தானும் வந்து சேர்ந்தார்.

கம்ப ராமாயணத்தில் குகனுடன் ஐவரானோம் மாதிரி அவர்கள் எல்லோரும் நாஞ்சிலுடன் இணைந்தார்களா என்று தெரியவில்லை. ஆனால், அவர்களுக்கு தமிழ் தெரிந்திருந்தால், கம்பனின் சுவையை அவர்களின் நுனி நாக்கில் ஏற்றி இருந்திருப்பார்.

நாஞ்சில் நாடனுக்கு நேம் டிராப்பிங் என்றால் பொய்கையாழ்வார், குமரகுருபரர், தேம்பாவணிக்கு உரை எழுதிய புனித *%$#&@+>, சீறாப்புராணத்திற்கு பதம் பிரித்த புண்ணியவான் ஆகியோர்.

இந்த மாதிரி சிறப்பு விருந்தினர்களை வருவித்து விருந்தினராக்குவதற்காக ராஜனுக்கு சிறப்பு நன்றி.

வாசர்களையும் தமிழ் சிந்தனையாளர்களையும் கோர்க்கும் பெருமை திருமலை ராஜனையே சாரும். முன்னதாக ஜெயமோகன் வந்தார். இப்பொழுது நாஞ்சிலார். கிழக்கு கடற்கரை நண்பர்களை ஒருங்கிணைப்பதில் ஆகட்டும்; புதிதாக அணுக நினைப்பவர்களை இயல்பாக்குவதில் ஆகட்டும்; எல்லோரிடமும் நிதி வசூலிப்பது ஆகட்டும்; வாரயிறுதி மட்டுமே கோறுபவர்களிடம் கறாராக பேசுவதில் ஆகட்டும்; விசா நடைமுறைகளை சிக்கலின்றி பெற்றுத் தருவதில் ஆகட்டும்.

ராஜன் இல்லாவிடில் இந்த மாதிரி இயல்பான அன்னியோன்யமான சந்திப்புகள் சாத்தியப்படாது.

என்னை மாதிரி எழுதுவோரை நாஞ்சில் நாடன் அம்பறாத் துணியில் சில்லறையைப் போட்டு வில்லேந்துபவராக வருணிப்பார்.

அதாவது எதிர்த்தாப்பில் இராவணன். ஒரு கணம் தாமதித்தாலும் மோதி பஸ்மமாக்கி விடுவான். அப்பேர்ப்பட்ட அவசரத்தில் விநாடி நேரம் கூட வீணாக்காத இராமன். அம்பறாத்துணியில் அம்பு நிறைந்திருக்க வேண்டும். சரியான அஸ்திரமாக இருக்க வேண்டும். உடனடியாக கையில் வர வேண்டும். விரல்களை பதம் பார்க்காமல், வில்லில் வகையாக ஏறி, வில்லனை வீழ்த்த வேண்டும்.

எழுத்தாளனுக்கு வார்த்தையும் இப்படி சுழல வேண்டும். அவனுடைய அம்பறாத்துணியாகிய மூளையில் சிந்தனை வில்லுக்கேற்ற சொற்கள் சிக்க வேண்டும். எல்லா இடத்திலும் பற்றி, என்று, ஆகவே போன்று தேய்வழக்கு கூடாது.

இது எப்படி சாத்தியம்?

எவர் கர்ம சிரத்தையாக சங்க இலக்கியமும் காப்பியங்களும் கீழ்க்கணக்கையும் வில்லியையும் வாசிக்கிறோம்?

நாஞ்சில் நாடனைப் போல் வாத்தி கிடைத்தால் எவரும் வாசிப்போம்.

நிறுத்தி நிதானமாக கம்பனின் வெண்பாக்களை நினைவு கூர்கிறார். சீதையைத் தேடி வரும் மாயமானைப் போல் கம்பரின் செய்யுளை சொல்லும்போது பளபளப்பாக இருக்கிறது; ஆனால் கைவசம் சிக்காமல், நழுவுகிறது; எனினும் ஆசையாக மனம் உத்வேகம் கொள்ள வைக்கிறது.

நண்பர் பாஸ்டன் வேல்முருகன் ஜென் கதையை அடிக்கடி சொல்வார்:

ஜென் துறவி மாதிரி நானும் மையமாக தலையாட்டி வைத்தேன். இதை யாரும் அவருக்கு சொல்லி விடாதீர்கள்.