Tag Archives: SC

மனுசங்கடா – தமிழ் சினிமா: வணிகமும் விருதுப் படமும்

இன்று மனுசங்கடா திரைப்படம் காணக் கிடைத்தது. கூடவே, ‘திண்ணை’ கோபால் ராஜாராமும் இருந்தது படத்தைக் குறித்த பார்வையை விசாலாமாக்கியது.

படத்தைக் குறித்து சில எண்ணங்கள்:

  1. கோலப்பனாக நடித்தவர் அம்ஷனின் மகனாமே! நன்றாக செய்திருக்கிறார். அழகாகாவும் இருக்கிறார்.
  2. பையனே அப்பாவை ‘பாடி’ என்று சொல்வது சற்றே நெருடியது.
  3. அம்ஷனின் முந்தையப் படம் ‘ஒருத்தி’ சற்றே மறந்து போனது. ‘மனுஷங்கடா’ நிறைய தசாப்தம் நினைவில் நிற்குமாறு இருக்கிறது.

  1. கீழ்வெண்மணி என்றவுடன் நெஞ்சம் படபடக்கும். அதை சொல்லாமல் சொல்லும் காட்சியமைப்பு பதைபதைக்க வைத்தது.
  2. தமிழகத்தில் கூட படம் எடுக்க முடியாமால், மொழி புரியாத ஆந்திராவிற்குச் சென்று காட்சியாக்கமும் ஒளிப்பதிவும் செய்தது, இந்தியாவைக் குறித்த எதிர்மறை எண்ணத்தை அய்ர்வாக எழச் செய்தது.
  3. “அண்ணன்” ஆக நடித்தவருக்கு நல்ல குரல்வளம். ஆனால், நடிப்பு சற்றே சீரியல்தனம்

  1. உணர்ச்சிக் கொந்தளிப்புடன் கதையைக் காட்சியாக்கி இருக்கிறார். கிட்டத்தட்ட ஷங்கர் படம் பார்த்த ஆக்ரோஷத்துடன் படம் முடிகிறது. இந்த மனித உரிமை மீறல் அக்கிரமத்தை படம் பார்த்த திருப்தியோடு கை கழுவாமல் இருக்க வேண்டும்.

 

முந்தைய குறிப்புகள்:

மனுசங்கடா திரைப்படம் குறித்த மற்ற பார்வைகள்:

சுரேஷ் கண்ணன்

வாழும் போது மட்டுமல்ல, வாழாமல் செத்த பிறகும் சாவிலும் கூட விடாமல் துரத்துகிறது சாதியம். சட்டமும் நீதியும் கூட கெட்டி தட்டிப் போன அந்த இறுக்கத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. கோலப்பன் தேடுவது தந்தையின் பிணத்தையல்ல, இந்தியாவின் ஜனநாயகத்தை, அதன் அரசியல் அமைப்பு சட்டத்தையே குழிகளில் தேடுகிறான் என்கிற சமிக்ஞையோடு படம் முடிந்ததாக எனக்குப் பட்டது.

எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் எளிய அலங்காரத்துடன் படம் நேர்மையாக நகர்கிறது. இதனாலேயே சிலர் சலிப்படையக்கூடும். ஜோடனைகள் இல்லாத உண்மை அத்தனை சுவாரசியமானதாக இருக்காதுதான்.

சமீபத்தில் நிகழ்ந்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு நோ்மையானதொரு தலித் சினிமாவை உருவாக்கியிருக்கிறார் அம்ஷன் குமார். ‘தீண்டாமை என்பது பெருங்குற்றம்’ என்பது பாடப்புத்தகங்களில் அல்ல, மனித மனங்களில் ஆழமாக எழுதப்பட வேண்டியது என்கிற செய்தியை இயல்பாக சொல்லிச் செல்கிறது இந்த திரைப்படம்.

இதில் வரும் நடிகர்கள் இயல்பான நடிப்பைத் தந்துள்ளனர். சினிமா ஆர்வலர்களின் ஆதரவு நிச்சயம் தரப்பட வேண்டிய திரைப்படம் இது.

விரிவான கட்டுரை வரும்.

மனுஷ்யபுத்திரன்

இன்று காலை அம்ஷன் குமாரின் ‘ மனுசங்கடா’ திரைப்படத்தை தியாகராய நகர் ஏஜிஸ் ல் பார்த்தேன். இரண்டு மூன்று வரிசைகளே நிரம்பியிருந்தன. பெரும்பாலான இருக்கைகள் காலியாக கிடந்தன. சென்னையில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு ஏழாம்தர குப்பைப்படத்தைக் கூட முன்பதிவு செய்யமல் பார்த்துவிடமுடியாது. இன்றைய காலி அரங்கம் எனக்கு மனதை பிசைவதாக இருந்தது. நண்பர்களுக்கான தனிப்பட்ட ஒரு ஷோ போல இருந்தது.

இத்தனைக்கும் ‘ மனுசங்கடா’ தமிழின் மிக முக்கியமான படம். சாதியத்தின் கோரமுகத்தை வெளிப்படுத்தும் படம். தன் தந்தையின் பிணத்தை பொதுவழியில் இடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல உயர்நீதிமன்றம்வரை சென்றுபோராடும் ஒரு தலித் இளைஞனின் கதை. எந்த வணிக சமரங்களும் இல்லை. அவலத்தின் நடுவே காதல் கிளுகிளுப்புகளின் பூச்சுகள் இல்லை. ஒரு மனிதன் இறந்து அடக்கம் செய்யப்படும் வரையிலான இரண்டு நாளின் கதை. படத்தில் பிண்ணனி இசை என்று தனியாக எதுவும் இல்லை. சுற்றுச் சூழலின் அசலான ஒலிகளே பிண்ணனி இசை. சினிமாவின் அலங்காரங்கள் இல்லாமல் எதார்தத்தை மறுபடைப்பு செய்ய அம்ஷன் குமார் படம் முழுக்க முனைகிறார். அதில் பார்க்கும் கோர்ட் நாம் நிஜத்தில் பார்க்கும் கோர்ட். நாம் பார்க்கும் வருவாய் துறை அதிகாரியும் காவல்துறை அதிகாரியும் நாம் அன்றாடம் காணும் அதிகாரிகள். அதில் வரும் தலித் சமூக தலைவரை நானே நேரில் பலமுறை சந்தித்திருக்கிறேன்.

இந்தப்படம் தெளிவாக சொல்லும் செய்தி ஒன்று உண்டு. இந்த நாட்டில் அரசியல் சாசனமோ நீதிமன்ற உத்தரவுகளோ சாதிய அதிகாரத்தை, அதன் சட்டங்களை வெல்ல முடியாது என்பதுதான். ஒடுக்கப்பட்ட மக்கள் வன்முறையின் மூலமாகவோ போலி சமரசங்கள் வாயிலாகவோ பொய் வாக்குறுதிகள் மூலமாகவோ தங்கள் உரிமைகளை விட்டுத்தர நிர்பந்திக்கப்படுகிறார்கள். தன் தந்தையின் பொதுவழியில் கொண்டு சென்று புதைப்பதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெற்றுவரும் இளைஞனால் கடைசியில் தன் தந்தையை காவல்துறையினர் பலவந்தமாக எங்கே புதைத்தார்கள் என்பதைக்கூட அறியமுடியாமல்போவது அவலத்தின் உச்சம்.

நடிகர்கள் தங்கள் பாத்திரத்தின் எல்லைமீறாமல் நடித்திருந்தார்கள். நவீன நாடகபாணியிலான நடிப்புமுறை சில இடங்களில் தூக்கலாக வெளிப்படுவதை தவிர்த்திருக்கலாம். எந்த ஊர் அடையாளமும் சாதி அடையாளமும் வெளிப்பட்டுவிடாமல் கதையை நகர்த்தியிருப்பது இயக்குனரின் வெற்றி என்றாலும் ஒரு முழுமையான எதார்த்த சினிமாவாக அது மாறுவதை பலவீனப்படுத்துகிறது. ஆனால் அத்தகைய அடையாளங்களை சுட்டினால் படம் வெளியே வந்திருக்காது. உயர் சாதிகளை சாதிப்பெருமை பேச மட்டுமே திரைப்படங்களில் வெளிப்படுத்த லைசன்ஸ் உண்டு. அம்ஷன் குமாரின் திரைப்பயணத்தில் நிச்சயம் இப்படம் அவருக்கு மிக முக்கியமான இடத்தைப்பெற்றுத்தரும்.

பல சர்வதேச விழாக்களில் படம் காட்டப்பட்டு கவனமும் பாராட்டும் பெற்றிருக்கிறது. விழாக்களில் மட்டுமல்ல, பொது சமூகத்தின் மனசாட்சியை இதுபோன்ற படங்கள் உலுக்கவேண்டும். பெரும் போராட்டத்திற்குப்பிறகு சென்னையின் சில திரையங்குகளில் சில காட்சிகள் மட்டுமே இந்த மூன்று நாட்களில் இப்படம் திரையிடப்ப்பட்டது
நாளை இருக்குமா என்று தெரியவில்லை. விளம்பரத்திற்கு கோடிகளை கொட்ட முடியாத, தியேட்டர்களை பிடிக்கும் வலிமையற்ற குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்கும் ஒரு சமூகமாற்றத்திற்கான இயக்குனர் தமிழ்சினிமாவின் மிருகவிதிகளின் முன் தன் படைப்பை அத்தோடு மறந்துவிட வேண்டியதுதான்.

சினிமா என்பது தமிழர்களின் கலை அல்ல, அபின். இங்குவேண்டப்படுவது மிகையுணர்ச்சிகளின் அதீத நாடகமேயன்றி எதார்த்தத்தின் சித்திரங்கள் அல்ல

பொன் சுதா

இன்குலாப்பின் கனல் தீராத கவிதை வரியை தலைப்பாக்கி வெளியாகி இருக்கும் திரைப்படம்.

நேற்றுப் பார்க்க வாய்த்தது.

சாதியத்தின் கோரமுகத்தை மூக்கு உரசும் தூரத்தில் உணர்ந்த அனுபவம்.

திருநாள்கொண்டசேரி சம்பவம் திரையாக்கமாகி இருக்கிறது.

பிறப்பில் துவங்கி ஒவ்வொரு நொடியிலும் உணரும் சாதிய ஒடுக்கு முறையை இறந்த பின்னாலும் பிணமாய் அனுபவிக்க நேரும் கொடூரமே கதைக் களம்.

பொது வழியில் ஒடுக்கப் பட்டோரின் பிணங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்க மறுக்கும் சாதிய திமிர் கொழுத்த கிராமங்களில் ஒன்று அம்மையப்பன் கிராமம்.

ஒடுக்கப் பட்டவர்களின் பிணத்தை எடுத்துச் செல்ல ஒதுக்கப் பட்ட தனிப் பாதை என்பது வெறும் முட்காடு. அதை பாதையாக்க எந்த முயற்சியும் செய்யாத ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள்.

இறந்த தன் தந்தையை பொதுவழியில் எடுத்துச் செல்ல முடிவு செய்து நீதிமன்றத்தை நாடுகிறான் கதாநாயகன் கோலப்பன். அதிசயமாய் நீதி வெல்கிறது. பொதுப்பாதையில் பிணத்தை எடுத்துச் செல்ல உத்தரவிடுகிறார் நீதிபதி. பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கும் அதிகாரிகளுக்கும் ஆணையிடப்படுகிறது.

அந்த தீர்ப்பின் படி, பிணம் பொது வழியில் அனுமதிக்கப் பட்டதா? எப்படி ஆதிக்க சாதியினரும் அதிகாரிகளும் அதற்கு எதிர்வினை ஆற்றினார்கள் என்பதே ஆழமும் அழுத்தமுமான கதை.

உண்மையின் கதையாடல்கள் வலியோடு பதிவாகி இருக்கிறது. எவ்வளவு கேவலமான சமூகத்தில் வாழ்கிறோம் என்கின்ற எதார்தத்தின் சூடு கட்டாயம் உரைக்கும் உணர்வுள்ளவர்களுக்கு.

சிறிய முதலீட்டில் சமூக அக்கறையுள்ள படைப்பை வழக்கிய அம்ஷன் குமார் அவர்களுக்கு மதிப்பு மிகுந்த வாழ்த்துக்கள்.

திரைக்கதையில் உதவிய எழுத்தாளர் அழகிய பெரியவன் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

சாதியை வெறுக்கும் முற்போக்கு மனநிலை உள்ளவர்கள், மாற்றுத் திரைப்படங்களை ஆதரிப்பவர்கள், கொஞ்சம் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கும் திரையரங்களில் மனுசங்கடாவைப் பார்ப்பதை தனது கடமையாக உணர வேண்டும்.

அது அப்படி இருந்திருக்கல்லாம், இது இப்படி இருந்திருக்கலாம் என்கிற சில லாம்கள் உண்டு தான்.

அதையெல்லாம் மீறி உண்மையும் நேர்மையுமான அக்கறையுமான ஒரு திரைப்படம் என்பதை உறுதியாய் உணர முடிகிற படைப்பு மனுசங்கடா ..

R R Srinivasan

அம்பேத்கரின் நூற்றாண்டு விழாவிற்குப் பிறகு எழுந்த ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி கலை இலக்கியங்களில் பிரதிபலித்தது. சாதி குறித்த பார்வையும் அழுத்தமும் பல விதங்களில் வெளிப்பட்டன, அப்பார்வையை ஆவணப்படங்கள்
அர்ப்பணிப்போடு முன்னெடுத்துச் சென்றன,,,ஆனால் நம்முடைய புனைவுத் திரைப்படங்களோ 25 வருடங்களுக்கு மேலாகியும் நேரடியாகச் சாதி குறித்துப் பேசவில்லை அல்லது தயங்குகின்றன. எளிமையான ஆவணத்தன்மையுடன் “மனுசங்கடா” அதனைப் பேசுகிறது. 25 வருடங்களாக நடந்த சாதி குறித்த விவாதங்களைப் புறக்கணிக்காமல் சாதி வன்கொடுமையைப் பேசுவது , சாதியை நேரடியாகத் தாக்குவது இக்காலத்தின் தவிர்க்க முடியாத கருப்பொருளாகும்.

வில்லன் -கதாநாயகன் என்ற எதிர்நிலைகளை உருவாக்கி ஒருவொரையொருவர் வெற்றி கொள்வது, தோல்வி அடைவது இது வணிக சினிமா மனோபாவம், மனுசங்கடா படத்தில் எதிரிகளில் குறிப்பிட்ட நபர்கள் என்று யாருமில்லை, வெகு தூரத்தில் அவர்கள் யாரென்று தெரியாமலே படமாக்கப்படுள்ளது, ஏனெனில் எதிரி தனிப்பட்ட ஒருவர் அல்ல,, அமைப்புதான்(System) எதிரி.அதை விவாதிப்பதே முக்கியம்.

சாதிக்கொடுமைகளின் உச்சமான அன்றாடம் நடக்கும் “புதைக்கும் உரிமை” மறுக்கப்பட்ட சமூகத்தின் குரல் திரைப்படத்தில் புனையப்பட்டது வரலாற்று முக்கியத்துவமானது.

மனுசங்கடா: “கோர்ட்டாவது மயிராவது..”   | கருப்பு

திருநாள்கொண்டசேரி. நாகப்பட்டினம் மாவட்டம் , மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள வழுவூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமம். இக்கிராமத்தில் வசிக்கும் தலித் மக்களுக்கு தனியாக வசிப்பதற்கென சேரி ஒதுக்கப்பட்டிருப்பது போல, செத்துப் போனால் புதைப்பதற்கென தனியாக இடுகாடு ஒதுக்கப்படவில்லை. ஒரே இடுகாடு என தப்பர்த்தம் கொள்ள வேண்டாம். இடுகாடே கிடையாது. ஒதுக்கப்படவில்லை.

பிறகு, செத்துப் போகிறவர்களை எப்படித்தான் அடக்கம் செய்வார்களாம் என்றால், அக்கிராமத்திலிருத்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் மதிமலை என்கிற இடத்தின் ஆற்றங்கரையில்தான் புதைக்க வேண்டும். அதுதான் அந்த பகுதியில் காலங்காலமான நடைமுறை. அவ்வளவு தூரம் சுமந்து சென்றுதான் பிணங்களைப் புதைத்து வருகிறார்கள் தலித் மக்கள்.

ஆனால் ஒரு கண்டிஷன். அவர்கள் பிணத்தைத் தூக்கிக் கொண்டு ஊரின் பொதுப் பாதையில் செல்லக் கூடாது, கல்லும் முள்ளும் பாவிக் கிடக்கும் வரப்பின் வழியாகத்தான் பிணத்தை எடுத்துச் செல்ல வேண்டும். எப்பேர்ப்பட்ட நீதிபதிகளும் கூட மீறவியலாத இந்த கண்டிஷனை போட்டு வைத்திருப்பது அக்கிராமத்தின் சாதி இந்துக்கள்.

அவர்களுடைய அடாவடியிலிருந்து விலகியிருக்க நினைக்கும் தலித் மக்கள் , தங்கள் பகுதியிலேயே தங்களுக்கென தனித்த சுடுகாடு வேண்டும் என்கிற கோரிக்கையை வைக்கிறார்கள். ஓராண்டில்லை. ஈராண்டில்லை. சுமார் நாற்பதாண்டு காலமாக எழுப்பப்பட்டு வரும் அந்த கோரிக்கையை அரசாங்கம் கண்டுகொள்ளவேயில்லை. ஆயிரமாயிரம் புகார்கள். ம்ஹூம். நடவடிக்கையே இல்லை. தலித் மக்களில் எவரேனும் இறந்து போகும் ஒவ்வொரு முறையும், சாதி இந்துக்கள் தங்களின் மனநோயை வெளிப்படுத்தத் தவறியதே இல்லை. பொதுப் பாதையில் பிணம் எடுத்துச் செல்ல முயற்சிக்கும் தலித்துகளை கடுமையாகத் தாக்கியும் அவமானப்படுத்தியும் வருகின்றனர்.

இந்நிலையில், கடுமையான ஒரு மழை காலத்தில், தலித் மூதாட்டி ஒருவர் இறந்து போகிறார். வழக்கமாகப் பிணம் தூக்கிச் செல்லும் வரப்பில் தண்ணீர் அதிகமும் தேங்கி இருந்ததால் பொதுப்பாதையில் செல்ல காவல் துறையினரிடமும் மாவட்ட ஆட்சி நிர்வாகத்தினரிடமும் அனுமதி கேட்கின்றனர் தலித் மக்கள். அப்படிப்பட்ட தனிமனித உரிமைக்கான சட்டம் இருப்பதையும் எடுத்துச் சொல்லி கெஞ்சுகின்றனர். தலித் மக்கள் பொதுப்பாதையில் சடலத்தைத் தூக்கிச் செல்லலாம் என கோர்ட் ஆணையிட்டுவிட்டது. தலித் மக்களின் கெஞ்சலைக் கண்டும் கோர்ட் ஆணையை நிறைவேற்றும் பொருட்டும் போலிஸ்காரர்கள் சாதி இந்துக்களிடம் செல்கின்றனர். அவர்களிடம் கெஞ்சுகின்றனர். “ஐயா.. போனா போகட்டுங்யா.. எப்படியாவது அவங்களுக்கு வழி உட்ருங்யா ப்ளீஸ்” எந்த கெஞ்சுதல், வேண்டுதல், சாதி இந்துக்களிடத்தில் நிறைவேறியிருக்கிறது?

அவர்கள்தான் மனநோயாளிகளாயிற்றே! கொஞ்சமும் மசியவில்லை. மட்டுமின்றி, காவல் துறையினரையும் கூட மிரட்டுகின்றனர். அவர்களின் மிரட்டலுக்கு அடிபணிந்து, அவமானப்பட்ட காவல்துறையினர் அந்த அவமானத்தால் கொண்ட ஆத்திரத்தையும் வெறித்தனத்தையும் தலித் மக்கள் மீது காட்டியுள்ளனர்.

“பொணத்த நீங்க எடுக்குறீங்களா? இல்ல நாங்க எடுக்கட்டுமா?”

“தலித் மக்கள் பொதுப்பாதை வழியாக சடலத்தைக் கொண்டு செல்லலாம்” என்கிற தீர்ப்பை கனம் கோர்ட்டாரே சொல்லிய பிறகும் அதை ஒரு டேஷ்க்கும் மதிக்காமல் ’கோர்ட்டாவது மயிராவது’ எனச் சொல்லி ( நன்றி : பாஜகவின் ஹெச். ராஜா ) போலிசையே எதிர்க்கும் ஆற்றல் சாதி இந்துக்களுக்கு இருக்கிறது என்றால் அந்த ஆற்றல் எங்கிருந்து வருகிறது? ஏன் வருகிறது?

சாதியுணர்வு ஒரு மனநோய் என்று பாபாசாகேப் அம்பேத்கர் சொன்னது எவ்வளவு உண்மை.
அந்த மன நோயாளிகளிடம் மல்லுக்கட்ட முடியாமல் போலீசே பிணத்தைச் சுமந்து சென்று அடக்கம் செய்திருக்கிறது. (இச்சம்பவம் தோழர் எவிடென்ஸ் கதிர் அவர்களின் கட்டுரை ஒன்றிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. அவருக்கு நன்றி. )

இப்படியான கேவலமான ஒரு செயல் உலகில் எந்த நாட்டிலாவது நடக்குமா?
இப்படியான சம்பவங்கள் ஒருமுறை இருமுறை, மும்முறைகளல்ல. காலங்காலமாக நடந்து வருகின்றன. இன்றைய டிஜிட்டல்இந்தியா வரை. இந்த டிஜிட்டல் தேசத்தைக் காறித்துப்ப வைக்கும் இப்படிப்பட்ட நிலைமை ஒவ்வொரு நாளும் ஏதோவொரு சேரியில் நடந்து கொண்டிருந்துதானிருக்கிறது.

அன்னாடம் நடந்துவருகின்ற இப்படியான சாதிய அசிங்கங்கள் குறித்து நம்மூரார் யாரேனும் வாய் திறக்கிறார்களா என்றால் இல்லை. மட்டார்கள். அவர்களுக்கு வேறு பல கேளிக்கைகள் இருக்கின்றன. சமயங்களில் இப்படிப்பட்ட செய்திகள் ஊடகங்களில் இடம் பெறும்தான். மற்ற செய்திகள் ஏதும் கிடைக்காத போது.

செத்தாலும் மறையாத இப்படிப்பட்ட சாதியக் கொடுமைகளை, (வெகுசன) அச்சு ஊடகங்களிலேயே சொல்ல முடியாத போது, திரைப்படங்கள் என்கிற வெகுமக்களுக்குப் பிடித்தமான கலையின் மூலம் காட்டுவது என்பதெல்லாம் சாத்தியமில்லாத ஒன்று. ஆனால், அதை சாத்தியப்படுத்தியிருக்கிறது ‘மனுசங்கடா’ திரைப்படம்.

பல்வேறு ஆவணப்படங்கள், ‘ஒருத்தி’ உள்ளிட்ட சுயாதீன படம் ஆகியவற்றின் இயக்குனரும், எழுத்தாளருமான அம்ஷன் குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். பல்வேறு படவிழாக்களில் கலந்து கொண்டு அங்கீகாரத்தைப் பெற்ற இப்படம் இப்போது, வெகுமக்களின் பார்வைக்கு வந்துள்ளது.
திருநாள்கொண்டசேரியில் நடந்தைப் போல பல்லாயிரம் கிராமங்களில் இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கும் சாதிய அசிங்கத்தை அப்பட்டமாகவும் அதிர்ச்சியுடனும் காட்டியிருக்கிறது இப்படம். மட்டுமின்றி, சமத்துவம் பேசும் திரைப்படங்களைக் கூட பல கோடிகளில்தான் உருவாக்க முடியும் என்கிற மாயையையும் இப்படம் உடைத்திருக்கிறது.

சினிமா என்கிற கலையை எளிய மக்கள் அனைவராலும் உருவாக்க முடியும், (உருவாக்க வேண்டும்) அதில் மக்களின் பாடுகளைச் சொல்ல முடியும் (சொல்ல வேண்டும்) என்கிற வகையிலும், சாதியத்தின் அசிங்கத்தைக் அவ்வளவு வெளிப்படையாகக் காட்டியிருக்கும் வகையிலும் ’மனுசங்கடா’ முக்கியமான அரசியல் படமாகின்றது. படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டுகிறேன்.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ட்ரைபாட் இல்லாமல், காமிராவை கையால் வைத்தபடியே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனாலும் நேர்த்தியான படப்பதிவு. டப்பிங்கே இல்லை என்பதை நம்ப முடியவில்லை. துல்லியமான ஒலிப்பதிவு. சபாஷ் அம்ஷன் குமார் & குழுவினர்.

படத்தில் நடித்திருக்கும் அத்தனை நடிகர்களும் (ஓரிரு இடங்களைத் தவிர) நேர்த்தியாக நடித்திருக்கின்றனர். குறிப்பாக மையப்பாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் ராஜிவ் ஆனந்த் கவனிக்க வைக்கிறார். படம் தொடங்கியதிலிருந்து இறுதிவரை கொந்தளிப்பான முகத்தை கடைபிடித்திருக்கிறார் அவர். எல்லோரும் நவீன நாடக கலைஞர்கள். ஆகவே, ஒரு தேர்ந்த நடிப்பு வெளிப்பட்டிருக்கிறது ( அந்த வழக்கமான மாடுலேஷனை மட்டும் அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்).

நீதிமன்ற காட்சி அதன் சமன் குலையாமல் இருக்கிறது. அக்காட்சி முழுக்க, முழுக்க பாபாசாகேப் அம்பேத்கரின் கருத்தியலை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டிருக்கிறது என்பேன். அவர் உருவாக்கிய சட்டம் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமைகளையும் மனதில் கொண்டு அவற்றைப் பாதுகாக்கும் நோக்கத்தில் மட்டுமே இருக்கிறது. அப்படிப்பட்ட சமத்துவ சிந்தனையாளர் அண்ணல் அம்பேத்கர்.
அரசின் சட்ட விதிமுறைகள் யாவும் அனைவருக்கும் சமமாகத்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதில்தான் பாகுபாடுகளும் தாழ்வுகளும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன என்கிற அவலத்தை சமரசமின்றி சொல்லிச் செல்கிறது இப்படம்.

பெரும்பாலான வழக்குகளில் நீதிமன்றங்கள் நீதியற்ற தீர்ப்புகளைச் சொல்லி தங்களை அம்பலப்படுத்திக் கொள்கின்றன. அரிதாக, எப்போதாவது நீதிமன்றமே நீதியை நிலைநாட்டச் சொன்னாலும் கூட, அந்த தீர்ப்பு சாதியத்தின் மசுருக்குக் கூட சமானமாவதில்லை என்பதாகத்தான் இருக்கிறது.
அப்படிப்பட்ட அவலத்தைத் தான் பேசியிருக்கிறது இப்படம்.

சமூகத்தின் மீது அக்கறை கொண்டியங்கும் ஒவ்வொருவரும் அவசியம் காண வேண்டிய திரைப்படம் இது. இப்படத்தை ஒவ்வொருவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டிய, விவாதிக்க வேண்டிய அக்கறையும் பொறுப்பும் நமக்கிருக்கிறது.

வணிக அடிப்படையில் பார்த்தால் இம்மாதிரியான சுயாதீன திரைப்படங்களுக்கான ஆரோக்கியமான சூழல் இல்லாததால் குறைந்தளவு காட்சிகள் மட்டுமே திரையிடப்படுகின்றன. ஆகவே, உடனடியாக இப்படத்தைப் பார்த்து விடுங்கள் தோழர்களே!

மேலும், இப்படிப்பட்ட அக்கறையான படங்களுக்காகவும் நம் குரல் ஒலிக்க வேண்டும். சமூக வலைதளங்களில் அதற்கான குரல் வலுவாக எழுப்பப்பட வேண்டும். இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலமாக சுயாதீன படங்களுக்கான ஆரோக்கியமான வெளியை உருவாக்க முடியும். அதன் மூலமாக வணிக சினிமா உருவாக்கியிருக்கும் கவர்ச்சியையும் அதுசார்ந்த போலியான பிம்பங்களையும் உடைக்க முடியும்.

இறுதியாக, ஒரு வேண்டுகோள் தலித்துகள் சாதி இந்துக்களைப் பார்த்து, ’நாங்க மனுசங்சடா…’ ’நாங்க மனுசங்கடா..’ என்கிற உண்மையைப் பலகாலமாகச் சொல்லி வருகிறார்கள். இனி கேட்க வேண்டியது, சாதி இந்துக்களைப் பார்த்துத்தான்.

“நீங்க மனுசங்களாடா?”

மனுசங்கடா – வெளி ரங்கராஜன் | malaigal.com

அண்மையில் சென்னையில் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டுமே திரையிட வாய்ப்புகள் பெற்ற அம்ஷன்குமாரின்
மனுசங்கடா திரைப்படம் இன்றைய தமிழ் சமூகத்தின் முக்கிய பிரச்னையான சாதிய கட்டுமான இறுக்கத்தை ஒரு நேரிடையான மிகையற்ற யதார்த்த மொழியில் அதற்குரிய தீவிரத்தன்மையுடன் தோலுரித்துக்காட்டிய ஒரு சிறப்பான திரைப்படம்.

அண்மைக்காலங்களில் விளிம்புநிலை வாழ்வியல் பற்றிய சித்தரிப்புகள் குறித்த ஆர்வங்கள் தமிழ் சினிமாவில்பெருகத் துவங்கியிருக்கிற ஒரு சூழலில் தமிழ் சினிமாவின் வழமையான ரொமாண்டிசிஸத்தையும்,குரூரத்தையும் தவிர்த்துதீவிரத்தன்மை கெடாத ஒரு யதார்த்த சூழலை வடிவமைத்திருப்பது ஒரு சிறப்பான உத்தி.

அண்மைக்காலங்களில் தீண்டாமைச் சுவர்களும்,ஆணவக் கொலைகளும்தமிழ் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கிக்கொண்டிருக்கிற ஒரு காலகட்டத்தில்தலைநகரத்திலிருந்து நூறு கிலோமீட்டர் தூரமே உள்ள ஒருகிராமத்தில் இன்றும் நிலவிவரும் ஒரு தீண்டாமை நடைமுறையை திரைமொழியின் வீச்சுடன் அம்பலப்படுத்தியிருப்பது ஒரு சமூக நோக்கம்கொண்ட துணிச்சலான முயற்சி.

இன்றைய ஜனநாயக அமைப்பில் தங்களுடைய அடிப்படை உரிமைகளைப் பெற நீதிமன்றம் மற்றும் ஊடகங்களை நாடுவதற்கு வாய்ப்பு பெற்றுள்ள கல்வி அறிவு பெற்ற தலித் இளைஞர்கள் கூட சாதியக் கட்டுமானம் ஆழமாக ஊடுருவியுள்ள கிராமிய அடிமட்ட அமைப்புகளை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாத அவல நிலைதான் இத்திரைப்ப டத்தில் காட்சிகளாக வடிவம் பெறுகிறது.

நகரத்தில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு தலித் இளைஞன் கிராமத்திலுள்ள தன்னுடைய தந்தையின் திடீர் மரணச் செய்தி கேட்டு துக்கத்துடன் கிராமத்துக்கு விரைகிறான்.அங்கு பொதுவழியில் தந்தையை மயானத்துக்கு எடுத்துச் செல்லமுடியாத சூழல் நிலவுகிறது.அவர்களுக்கென்று உள்ள முட்கள் நிறைந்த பாதை உபயோகிக்க பயனற்றதாக இருக்கிறது. பொதுவழியை உபயோகிக்கும் தங்கள் உரிமையை நிலைநாட்ட நீதிமன்றத்தை அணுகி உத்தரவுபெற்ற பிறகும் கூட கிராமிய அதிகாரிகளும் காவல்துறையும் ஆதிக்க சக்திகளுக்கு துணைநின்று பிணத்தைப் பறித்து தாங்களே எடுத்துச்சென்று புதைக்கின்றனர்.தந்தையின் புதைக்கப்பட்ட இடத்தைக்கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியாதஅவலத்தையேயே தலித் எதிர்கொள்கிறான். .மரணத்துக்குப்பிறகும்ஒரு தலித் உடல் அவமானத்துக்குரிய பொருளாகவேஇருக்கிறது. மூன்று நாட்களில் நடைபெறும் இச்சம்பவங்களின் மூலமாக இன்றைய கிராமிய
யதார்த்தம் ஒரு வலுவான அழகியல் ஆவணமாக முன்நிறுத்தப்படுகிறது.

எந்தவிதமான செயற்கைத்தன்மையும் அற்று ஒரு இயல்பான உயிரோட்டம் கொண்ட பாத்திரங்களாக நடிகர்கள் இயங்குகின்றனர்.ஹீரோதன்மை அற்ற ஆனால் இயல்பான கோபம் கொண்ட தலித் இளைஞன்,கூட வேலை பார்க்கும் அவன் சுக துக்கங்களில் பங்குகொள்ளும் சகதோழி,நிலைமைகள் குறித்த புரிதலும் அணுகுமுறையும் கொண்ட தலித் தலைவர்,விரைந்து செயலாற்றி நீதிபெற்றுத்தர உறுதிபூணும் வக்கீல்,நிலைமைகளை உணர்ந்து தெளிவான தீர்ப்பு வழங்கும் நீதிபதி,கணவன் இறந்த துக்கத்தை ஒப்பாரிப்பாடல்களால் அரற்றித் தீர்க்கும் வேளையிலும் தன் மகனுக்கு மனைவியாகப் போகிறவளை வாஞ்சையுடன் தடவிப் பார்க்கும் தாய் என பாத்திரங்கள் மிகவும் உயிர்ப்புடன் வெளிப்படுகின்றன. பிணத்தை வீட்டுக்குள் எடுத்துச் சென்று தாழிட்டுக் கொள்வது, காவல்துறை அச்சுறுத்தல்களுக்கிடையிலும் பிணத்தை தர மறுப்பது, இறுதியில் காவல்துறை வன்முறையை பிரயோகித்து பிணத்தை பறித்துப் புதைப்பது என இறுதிக்காட்சிகள் ஒரு அதிகபட்ச நாடக உயிர்ப்புடன் வெளிப்படுகின்றன.

இத்தகைய மிகைத்தன்மையோ குரூரங்களோ அற்ற ஒரு இயல்பான காட்சிமொழி க்கு நம் பொது தமிழ்சினிமா மனநிலை அதிகம் பழக்கப்படாததால் இது ஒரு நவீன நாடகம் போன்றும் ஆவணப்படம் போன்றும் நகர்வதாக நம் சூழலில் தயக்கங்கள் நிலவுகின்றன.ஆனால் மாற்று சினிமா குறித்த அறிவும்,ஆவணப்பட அனுபவமும்,நவீன நாடக நடிகர்களை தன்னுடைய படைப்புகளில் தொடர்ந்து உபயோகப்படுத்தியும்வரும் இயக்குனர் அம்ஷன்குமார் இத்துறைகளின் ஊடாட்டத்தை ஒரு செறிவான காட்சிமொழியாக இத்திரைப்படத்தில் உருமாற்றி இருப்பதை பல காட்சிகளில் காண முடிகிறது.

முக்கியமாக பிணத்தை எடுப்பதற்கு முன்பாக அந்த தலித் இளைஞர்கள் ஆடும்பறையாட்டமும்,தான் குழியில் தள்ளப்பட்டு மண்வீசப்படுவதாக அந்த தலித் இளைஞன் காணும் முடிவற்ற கனவும் காலம்காலமான கூக்குரலின் குறியீடுகளாக உள்ளன.

வெற்று முழக்கங்களோ,உரத்த குரல்களோ இன்றி ஒரு படைப்புக்கலைஞன்செய்யத்துணியும்இத்தகைய ஆதிக்கத்துக்கு எதிரானஅழகியல் பதிவுகள் தான். இப்பிரச்னை குறித்த அதிகபட்ச கவனத்தை வேண்டுவதாக இருக்கின்றன.

அம்ஷன் குமார்

தோழர் ஆர்.நல்லகண்ணு (ஆர்என்கே) தோழர் சி .மகேந்திரன் ஆகியோருக்கு மனுசங்கடா படத்தை போட்டுக்காட்டினேன். 93வயதான பெருமதிப்பிற்குரிய தோழர் ஆர்என்கே அவர்கள் இந்திய கம்னியூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர். மக்கள் நலப்போரட்டங்களும் தியாகங்களும் நிறைந்த நெடிய வரலாறாக அவரது வாழ்க்கை விளங்குகிறது. படத்தை வெகுவாகப் பாராட்டினார். திரையரங்குகளைத் தாண்டி படத்தை மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் கொண்டுசெல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தினார். பள்ளிகளில் திரையிட்டுக் காட்டவேண்டும் என்றார். மனுசங்கடா பாடல் எழுதிய கவிஞர் இன்குலாப் பற்றி பேச்சு எழுந்தது. படத்திற்காக சமீபத்திய சாதி வெறித்தனங்களை அவர் பாடல் வரிகளில் சேர்த்திருப்பதை கூறினேன். அதனால் பழைய பாடல் வரிகளில் இடம் பெற்ற குளப்பாடி சம்பவம் இதில் இடம் பெறவில்லை என்பதை தெரிவித்தேன்.1980 இல் பெரம்பலூரிலுள்ள குளப்பாடி கிராமத்தில் ஜாதி வெறிபிடித்த சிவசாமி தனது கிணற்றில் தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் குளித்தது பொறுக்கமுடியாமல் நீரில் மின்சாரம் பாய்ச்சிக் கொன்ற சம்பவம் இன்குலாபை பின்வருமாறு எழுத வைத்தது.

`குளப்பாடி கிணத்து தண்ணி புள்ளைய சுட்டது
தண்ணியும் தீயாய் சுட்டது `

தோழர் ஆர் என்கே அவர்கள் அச்சமயம் விவசாய சங்கத் தொழிலாளர் தலைவராக இருந்தார்.அவரது முயற்சியின் விளைவாக அப்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரான திரு.அழகர்சாமி சட்டமன்றத்தில் இதுபற்றிய கவனத்தைக் கொண்டுவந்தார்.

தோழர் சி.மகேந்திரன் எனது நெடுநாளைய அன்புத்தோழர். படம் பற்றி நுணுக்கமாக பல கருத்துகளை தெரிவித்தார். இருவர் பேசியதையும் விரைவில் காணொளியாக யூடிபில் பார்க்க முடியும். அவர்களுக்கு படத்தைக் காட்ட முடிந்தது எனக்கு வாய்த்த அரிய சந்தர்ப்பம்.

கும்கி: பார்க்கலாமா? போரா?

பத்து நிமிடத்தில் எடுக்க வேண்டியதை முழு நீளப் படமாக்கினால் எப்படி எடுக்கக் கூடாது என்பதற்கு ‘கும்கி’ நல்ல உதாரணம்.

ஹிட் ஆன பாடல்கள். ஓவர் ஆக்டிங்கில் சீனியர் சிவாஜியாக மிளிரும் தம்பி ராமையா. முறைப்பும் உடற்பயிற்சியும் ஆகிய இரண்டு பாவங்கள் மட்டுமே அறிந்த ஜூனியர் சிவாஜியாக விக்ரம் பிரபு.

எருமையைக் கண்டு யானை பின்வாங்குவது படத்தின் ஹைலைட். யானைகளுக்கும் லைசன்ஸ் பேப்பர் வேண்டும் என்றறிய வைத்தார்கள். இவ்வளவு மரங்கள் நிறைந்த காடுகளுக்கு தப்பிச் செல்லாமல் போயிட்டோமே என்று வீரப்பன் & கோ வருந்தியிருப்பார்கள்.

என்னதான் செல்லப் பிராணி வளர்த்தாலும், காதலின் முன் அது தூசு என்பது படத்தின் நீதி. அடிதடியை விட பாசமும் ப்ளாக்மெயிலும் காதலை உடைக்க கை கொடுக்கும் என்பது கொசுறு மெஸேஜ்.

ஒரு படமோ, இரண்டு படமோ நன்றாக இயக்கிவிட்டு, அதன் பிறகு, அசிஸ்டெண்ட் இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்து தயாரிப்பில் இறங்கி, பிறரின் படங்களை மெருகேற்றுவதுதான் இப்போதைய டிரெண்ட். பிரபு சாலமனும் அவ்வாறே ஷோ யானையாக மாறி கும்கிகளை அடையாளம் காட்டணும்.

olla podrida

ரெண்டு மாசம் இருக்கும் போல் தோன்றியது. ஆனால், ஒரு மாசம் மட்டுமே ஆகியிருக்கிறது. தமிழ்மணம் பக்கம் சென்று ரெண்டு மாசம் இருக்கும் போல் தோன்றியது.

நித்தியானந்தாவிற்கு டாப் 10 போட கொள்ளை ஆசை. நேரம் அமையவில்லை. இப்பொழுதும் போடலாம். அட்லீஸ்ட் ட்விட்டரில் கிடைத்த சம்பாஷணைகளில் கவர்ந்ததைத் தொகுக்கலாம்.

ரோமன் கத்தோலிக்க மதகுருமாரால் மேற்கொள்ளப்பட்ட சிறார் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு வணக்கத்துக்குரிய பிதா, பாப்பரசர் பெனடிக்ட்டும் உறுதுணை நின்றிருக்கிறார். திருச்சபையின் திரைமறை திருப்பலி களப்பணி.

அரசியல்வாதிக்கு அடுத்த தேர்தலில் நிற்க வேண்டாம் என்றால் துணிச்சல் வரும். ஒபாமா போன்றவருக்கு அதுவே அபயம் என்றால் ஜிம் பன்னிங் (Jim Bunning) போன்ற சிலருக்கு அசட்டுத் துணிச்சல். மறுமுறை வாக்கு கோரினால் நிச்சயம் தோல்வி என்பதால் அதீத நிலைப்பாடா? அல்லது டெமொக்ரடிக் ஆளுங்கட்சியே காசு கொடுத்து கூவச் சொல்லியதா?

கிறித்துவிற்கு முன் பிறந்த போப்பை விமர்சிக்கும் இந்தப் பதிவில் 1907ல் இயற்றப்பட்டது நீங்குவது பாராட்டுவதுதானே பொருத்தம்?

இல்லை… தேர்தல் நிதிக்கு தரப்படும் பணம் எப்படி வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும், கொடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஒபாமாவிற்கும் ஹில்லரிக்கும் இதனால் பெரும்பாதிப்பு இருக்காது. ஆனால், அமெரிக்காவில் பென்ச் நீதிபதிகளுக்கும் தேர்தல் உண்டு. அவர்கள் உள்ளூர் வழக்கொன்றில், நிறுவனத்திற்கு எதிராக தீர்ப்பளித்திருப்பார். அவர், மறுபடி வாக்காளரை சந்திக்கும்போது, அதே நிறுவனம் அசுர பலத்துடன் மீடியாவில் எதிர்மறை விளம்பரத்தை சுழலடிக்கும். போட்டி வேட்பாளருக்கு பற்றுடன் வரவு வைக்கும்.

இதே போல் மாநில சட்டமன்றத்திலும், பெருவணிகர்களைப் பகைத்துக் கொள்ளும் சட்ட மசோதாக்களை ஆதரிக்க அரசியல்வாதிகள் அஞ்சும் சூழல் தோன்றும். இன்று வணிக ஸ்தாபனத்திற்குப் பிடிக்காத சட்ட வரைவை நிறைவேற்றினால், நாளைய பொழுதில் பில்லியன் டாலர் கணக்கில் தீர்த்துக் கட்டப்படுவோம் என்பது அவருடைய லிபிதம்.

ஒவ்வொரு அரசியல்வாதியாக, ஒவ்வொரு நீதிபதியாக, ஒவ்வொரு தேர்தலாக இந்த மாதிரி செலவழிக்க வேண்டாம். வணிக நிறுவனத்தின் பலம் என்பது அல் க்வெய்தாவின் ஆள்சேர்ப்பு மாதிரி. எங்கேயாவது ஒரு வெடிகுண்டு போதும். பூரா பாகிஸ்தானும் தீவிரவாதிகளின் தேசம் மாதிரி தோன்றும். அதே போல், எங்காவது ஒரு சாம்பிள் போதும். ‘அவனுக்கு நேர்ந்த கதி, உனக்கும் ஆவணுமா?’ என்றே மிரட்டி, அனைவரையும் வழிக்குக் கொணரலாம்.

தொடர்புள்ள இடுகை: ஒரு பில்லியனைத் தாண்டிய 2008 தேர்தல் வசூல்! « US President 08

Democrats Far Outspend Republicans On Field Operations, Staff Expenditures – WSJ.com

In 2004, the Democratic Party spent nearly $120 million on advertising in support of then-nominee John Kerry, compared to only $500,000 this fall

தலைப்புக்கு என்ன அர்த்தம்?

1. An incongruous mixture.
2. A spicy stew of seasoned meat, vegetables, chickpeas, etc.

ETYMOLOGY: From Spanish olla podrida (literally, rotten pot), from olla (pot) + feminine of podrido (rotten).

USAGE: “Alice Randall’s collection of cookbooks is formidable, an olla podrida of Junior League and soul food cookbooks and classics like The Joy of Cooking.”
– Penelope Green; What Matters Most; The New York Times; Sep 16, 2009.

துவக்கத்தில் எதற்கு தமிழ்மணம் பேச்சு? அன்றாடம் வராவிட்டால், கவர்ந்திழுக்கிற மாதிரி தமிழ்மணத்தில் எதுவுமேயில்லை. திடீரென்று வந்து விழுபவருக்கு சென்னைக்குப் போன அமெரிக்கன், சேனல்களைத் தாண்டிய கதையாக, டிவியை அணைக்கவைக்கிறது. ‘சூப்பர் சிங்கர்’ எங்கே, துணையெழுத்தோடு ‘ராமாயணம்’ அங்கே என்று காட்ட வேண்டாமோ?

Want to disclose assets: To reveal or not? Should Indian judges be above the law?

முந்தைய பதிவு: Language of Lawyers – Tamil Nadu Courts Official Talk « தமிழ்நாட்டில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள்

நீதித்துறையில் சீர்திருத்தங்கள்

நீதிபதிகள் சொத்து மசோதாவுக்கு மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு

மாநிலங்களவையில் மத்திய சட்ட அமைச்சர் எம். வீரப்ப மொய்லி, நீதிபதிகள் தங்களது சொத்து விவரங்களை வெளியிடும் சட்ட மசோதா 2009-ஐ கொண்டு வந்தார். ஆனால் இந்த மசோதாவில் பிரிவு 6-ல் குறிப்பிட்டுள்ள விவரத்துக்கு பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

அதாவது உச்ச நீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் அந்த விவரம் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட மாட்டாது என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி ஆளும் காங்கிரஸ் உறுப்பினர்களிடமும் இந்த மசோதா தாக்கலுக்கு போதிய ஆதரவு கிடைக்காது என்பதை உணர்ந்த மொய்லி, இந்த மசோதா தாக்கல் செய்வதை ஒத்திவைப்பதாகக் கூறினார்.

245 பேரடங்கிய மாநிலங்களவையில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி உறுப்பினர்களின் எண்ணிக்கை 79 ஆகும்.

“தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தனது சொத்து விவரத்தை தாக்கல் செய்வது கட்டாயமாக உள்ளது. அவர் தாக்கல் செய்த விவரம் பின்னர் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இதே சட்ட விதிமுறைதான் நீதிபதிகளுக்கும் பொருந்தும். எனவே நீதிபதிகள் தாக்கல் செய்யும் சொத்து விவரத்தை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட முடியாது என்ற 6-வது பிரிவை நீக்க வேண்டும்,” என்று பாஜக தலைவர் அருண் ஜேட்லி கூறினார்.

நீதிபதிகளின் சொத்து விவரத்தை வெளியிட இதுவரை தனியான சட்டம் கொண்டுவரப்படவில்லை. தற்போது நீதித்துறையில் பரவலான ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. அதைத் தடுக்கும் வகையில் இந்த மசோதா கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. – மொய்லி.

நீதித்துறையில் ஊழல் சார்ந்த புகார்கள் குறித்து மிகக் குறைந்த எண்ணிக்கையிலான புகார்களே பதிவாகியுள்ளன. தற்போது ஒரே ஒரு வழக்குதான் நிலுவையில் உள்ளது. இதை விசாரிக்க மாநிலங்களவைத் தலைவர் ஹமீத் அன்சாரி ஒரு தனி குழுவை நியமித்துள்ளார் என்று மொய்லி குறிப்பிட்டார்.

“தகவல் அறியும் உரிமை சட்டத்தில் (ஆர்டிஐ) உள்ள சாதக அம்சங்களுக்கு எதிரானதாக இந்த மசோதாவின் 6-வது பிரிவு உள்ளது,” என்று காங்கிரஸ் உறுப்பினர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்தார்.

“நீதித்துறையின் சுதந்திரமான செயல்பாடுகளை சீர்குலைக்கும் வகையில் இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம் அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் நீதிபதிகளை நிர்பந்திக்க வழி ஏற்படும். இதன் மூலம் நீதித்துறை ஆதாயம் எதிர்பார்த்து செயல்படுவதைப் போன்ற தோற்றம் உருவாகும்,” என்று பிரபல வழக்கறிஞர் ராம் ஜேத் மலானி கூறினார்.

“சட்டத்துக்கு முன்பு அனைவரும் சமம். சட்டத்திலிருந்து எவருக்குமே விதிவிலக்கு கிடையாது. அந்த வகையில் இந்த மசோதாவை ஏற்கவே முடியாது,” என்று இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி. ராஜா கூறினார்.

Supreme-Court-Pending-lawsuits-US-America-comparison-vacation-holidays-numbers


சீர்பெற்று இயங்குமா நீதித்துறை?

உ . ரா. வரதராசன்

15-வது மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் அறிக்கையில் நீதித்துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்ற வாக்குறுதி இடம்பெற்றிருந்தது. இதர கட்சிகளும்கூட இந்தப் பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தத் தவறவில்லை. மன்மோகன் சிங் தலைமையிலான தற்போதைய அரசு பதவியேற்ற பின்னர், நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளின் கூட்டுக் கூட்டத்தைத் துவக்கி வைத்து உரையாற்றிய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், ஆறு மாதங்களில் நீதித்துறை சீர்திருத்தத்திற்கான திசை வழி தீர்மானிக்கப்பட்டு ஒரு காலக்கெடுவுக்கு உள்பட்டு அது செயல்படுத்தப்படும் என்று ஒரு திட்டவட்டமான முடிவையும் அறிவித்திருந்தார். மத்திய அரசின் சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி அண்மையில், இது தொடர்பாக அரசு விரைவில் முடிவெடுத்துச் செயல்படும் என்றும், இதற்கான சட்டமுன் வடிவுகள் அரசின் பரிசீலனையில் உள்ளன என்றும் பேசி வருகிறார்.

இது “சீர்திருத்தங்களின் காலம்’. எனவே நீதித்துறையையும் ஒரு சீர்திருத்தச் செயல்திட்டத்தின் கீழ் உட்படுத்துவது தவிர்க்க இயலாதது. ஆனால்,

  • இந்த சீர்திருத்தங்களின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்?
  • இவை எதை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டும்?

என்ற கேள்விகள் ஆட்சியாளர்கள் மற்றும் நீதித்துறையினர் முன் உள்ளனவா என்பது சந்தேகமாகவே உள்ளது.

நீதித்துறை தொடர்பான அண்மைத் தகவல் ஒன்று நம்மை அதிர்ச்சியில் உறைய வைப்பதாக உள்ளது. இந்திய நாட்டின் மக்கள்தொகையில் 91 சதவிகிதம் பேர் நீதிமன்றங்களை அணுகவே தயக்கம் காட்டுகிறார்கள் என்ற செய்திதான் அது. கூடவே இந்தியத் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் நமது நாட்டின் நீதிமன்றங்களில் மூன்றரை கோடி வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன என்றும், புதிதாகப் பதிவாகிற வழக்குகள் ஆண்டொன்றுக்கு 28 சதவிகிதம் என்ற அளவில் அதிகரித்து வருகின்றன என்றும் கூறியுள்ளார்.

9 சதவிகித மக்கள் மட்டுமே நீதிமன்றங்களின் கதவுகளைத் தட்ட முற்படுகிற கட்டத்திலேயே இந்த நிலைமை என்றால், இன்னும் கூடுதலான மக்கள் பிரிவினர் நீதிமன்றங்களை அணுக முற்பட்டால், நிலைமை என்னவாகும் என்ற மருட்சியும் ஏற்படுகிறது.
ஒரு ஜனநாயக அமைப்பில் ஆட்சியாளர்கள், நிர்வாக இயந்திரம், நீதித்துறை ஆகிய அனைத்துமே மக்களின் நலன் கருதியே இயங்கக் கடமைப்பட்டவை என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள். நம் நாட்டின் அரசியல் சட்டம் அதன் முகவுரையிலேயே சமூக – பொருளாதார – அரசியல் நீதி உத்தரவாதம் செய்யப்படும் என்ற வாக்குறுதியை மக்களுக்கு நல்கியிருக்கிறது. 18 வயதை எட்டிய அனைவருக்கும் வாக்குரிமை என்ற அரசியல் உரிமை மட்டுமே மக்களுக்கு அரசியல் சட்டம் உத்தரவாதம் அளித்துள்ள நீதியை வழங்குவதாகிவிடாது. ஏற்றத்தாழ்வுகளும், சமூக அவலங்களும், ஒடுக்குமுறையும், நீடித்து நிலவுகின்ற இந்திய சமூகம் உண்மையான நீதியை மக்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய நெடுந்தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

  • இந்தப் பின்புலத்தில் நீதித்துறை இன்று எங்கே நிற்கிறது?
  • எப்படிச் செயல்படுகிறது?
  • யாருக்காக இயங்குகிறது?

என்ற கேள்விகளுக்கான பதிலினைத் தேடினால், அது ஏமாற்றம் அளிப்பதாகவே அமைகிறது. “தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி’ என்ற சொல்லலங்காரம் நமது காதுகளில் ரீங்காரமிட்டாலும், இன்றைய நீதித்துறை அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதியைக் காலத்தே வழங்குகிற நிலையில் இல்லை. நீதிமன்றங்களை நாடி வழக்குத் தொடருவது என்பது பெருஞ்செலவுகளை உள்ளடக்கியதாகவே இருக்கிறது. லவச சட்ட உதவி என்கிற ஏற்பாடு ஏட்டளவில் நிற்கிறதே தவிர, மக்கள் பயன்பாட்டுக்கு உதவுவதாக இல்லை.

நீதித்துறையின் பல்வேறு அடுக்குகள், சிக்கல்கள் மிகுந்த நடைமுறைகள், வழக்குகள் கையாளப்படுகிற விதம் இவையாவுமே சாதாரண மக்களுக்கும், நீதித்துறைக்கும் இடையே ஓர் ஆழமான அகழியைத் தோற்றுவித்துள்ளன.

பொதுவாகவே சுதந்திர இந்தியாவின் அரசாங்கச் செயல்பாடுகள் பிரிட்டிஷ் காலனியாதிக்கக் காலத்து மரபுகளையும், பாணிகளையும் அடியொற்றி அமைந்துள்ளன. அரசு நிர்வாகம், நாடாளுமன்றம், நீதிமன்றங்கள் போன்ற எல்லாவற்றிலும் இதைக் காண முடியும். நமது நாட்டுச் சட்டங்களும், நீதிமன்ற நிர்வாகமும் இத்தகைய பாரம்பரியத்தைப் பெற்றிருப்பதானேலேயே அவற்றுக்கும், சாதாரண குடிமக்களுக்கும் இடையே இந்த இடைவெளி ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் மற்ற அங்கங்களைப் போலவே, நீதித்துறையிலும் காலாவதியாகிவிட்ட பழைய நடைமுறைகளைத் தொலைத்துக்கட்டி, இன்றைய காலச்சூழலுக்கேற்ப, சாமானியர்களும் எளிதில் அணுகக்கூடிய முறையில், வெளிப்படையான நடைமுறை மாற்றங்கள் கொண்டு வரப்படுவது இன்றைய தேவை.

நமது நாட்டின் சட்டங்கள் எளிமையாக்கப்படுவதும், அவற்றைச் செயல்படுத்தும் காவல்துறை மற்றும் அரசு நிர்வாகப் பிரிவுகளின் நடவடிக்கைகளில் உரிய மாற்றங்களைக் கொணர்வதும் இன்றியமையாத முதல்படியாகும். இன்றைய சட்டங்கள் மக்களுக்காக உருவாக்கப்பட்டனவா அல்லது வழக்கறிஞர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டனவா என்ற ஐயப்பாடே எழுகிறது. இதைக் களைவது அவசியமாகும்.

  • நீதித்துறையில் இன்று நிலவுகிற வழக்குகள் தேக்கம்,
  • காலதாமதம் ஆகியவற்றை
  • எதிர்கொள்ள ஒரு தொலைநோக்குப் பார்வையுடனான திட்டமிடல்,
  • நீதிமன்றக் கிளைகள்,
  • நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது,
  • வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தும் வகையிலான ஏற்பாடுகளை மேம்படுத்துதல்,
  • கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துவது புதிய தொழில்நுணுக்க வளர்ச்சிகளை நீதிமன்ற நிர்வாகத்திற்குப் பொருத்தமான விதத்தில் பயன்படுத்துவது

ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

நீதித்துறை சீர்திருத்தம் பற்றிய விவாதத்தில் முக்கிய இடம் பெறுவது, நீதிபதிகள் நியமனம் மற்றும் அவர்களது பொறுப்புணர்வு, நேர்மை, கடமையாற்றிடும் பண்புகள் சம்பந்தப்பட்டவையாகும். நீதித்துறையின் ஆரம்ப அடுக்குகளுக்கு நியமன ஏற்பாடு என்பது மாநில அளவிலான பணியாளர் தேர்வு ஆணையம் மூலமாக நடைபெறுகிறது. ஆனால் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகிய உயரடுக்கு நீதிபதிகளின் நியமனம் இன்று அந்தந்த நீதிமன்றங்களின் நீதிபதிகள் அடங்கிய குழுவின் பரிந்துரை அடிப்படையிலேயே அமைவதற்கான ஒரு நடைமுறை, உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய கிளையின் ஒரு தீர்ப்பின் மூலம் உருவாக்கிவிட்டது.

இன்று பதவியில் இருப்பவர்களே, அந்தப் பதவிகளுக்கு அடுத்து வருபவர்கள் யார் என்பதைத் தீர்மானிப்பார்கள் என்பது முறையான ஏற்பாடு ஆகுமா என்ற கேள்வி எழுவது இயல்பு.

அந்தக் குறிப்பிட்ட தீர்ப்புக்கூட 5க்கு 4 என்ற முறையில், நீதிபதிகள் கருத்து முரண்பட்டு ஒரு நூலிழைப் பெரும்பான்மையில் எடுக்கப்பட்ட முடிவாகும். “உலகமயம்’ பேசப்படும் இந்தக் காலக்கட்டத்தில் நீதிபதிகள் நியமனம் குறித்த இத்தகைய நடைமுறை வேறு பல நாடுகளில் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள மறுப்பது ஏன் என்பது புரிந்துகொள்ள முடிவதில்லை.

  • நீதிபதிகள் நியமனம்,
  • அவர்களின் இடமாற்றம்,
  • பணிநீக்கம்,
  • பொறுப்புணர்வுடனான செயல்பாடு

குறித்த முடிவுகளை மேற்கொள்ள தேசிய நீதித்துறை ஆணையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்; அதன் உறுப்பினர்களாக நீதித்துறை, நிர்வாகத்துறை, நாடாளுமன்றம், வழக்கறிஞர் சங்கங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கை உடனடியாகப் பரிசீலிக்கப்பட்டு, உரிய அரசியல் சட்டத் திருத்தங்கள் மூலமாகச் செயல்படுத்த வேண்டியது மிக மிக இன்றியமையாததாகும்.

இன்றைய சமூகச் சூழலில் பல்வேறு நிலைகளில் நிலவுகிற ஊழல் நீதித்துறையையும் விட்டு வைக்கவில்லை என்பதற்கான உதாரணங்கள் பல உண்டு. நீதித்துறையை ஊழலுக்கு அப்பாற்பட்டதாகச் செயல்பட வைப்பது ஒரு சவாலாகவே நிற்கிறது. ஊழல், அரசியல் தலையீடுகள், செல்வாக்கு மிக்க வழக்கறிஞர்களின் குறுக்கீடுகள் போன்றவை பரவலாக இல்லாவிட்டாலும், நீதித்துறையின் மாண்பைக் குலைப்பதாகவும், அதன் மீதான மக்களின் நம்பகத் தன்மையை ஊனப்படுத்துவதாகவும் அமைவது கவலையோடு பரிசீலிக்க வேண்டிய ஒன்று.

உச்ச நீதிமன்றம் நீதிபதிகளுக்கான ஒழுக்கக் கோட்பாடு ஒன்றைத் தானாகவே வரையறுத்துக் கொண்டுள்ளது. இது ஒரு நல்ல முன்முயற்சி என்றபோதிலும், இதற்கு சட்ட அடிப்படை ஏதுமில்லை.

மேலும் இதன்கீழ் நீதிபதிகள் அவர்களது சொத்து விவரங்களைத் தலைமை நீதிபதிக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும், அது ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஒழுக்கக் கோட்பாடுகளை மீறுகிற நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் தலைமை நீதிபதியே ஒரு நடைமுறையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் அதில் இடம்பெற்றுள்ளது. இதே உச்ச நீதிமன்றம்தான் தேர்தலில் போட்டியிடுகிற வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டிய சொத்து விவரப் படிவத்தை வரையறுத்துத் தந்துள்ளது. அது பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்ற நடைமுறையும் பின்பற்றப்படுகிறது.

இப்போது மத்திய அரசு பரிசீலிப்பதாகச் சொல்லப்படும் சட்டமுன்வடிவிலேயும் நீதிபதிகள் சொத்துக் கணக்கைக் காட்டுவது நீதிமன்ற நிர்வாகத்தின் உள் – ஏற்பாடு என்ற அளவோடு நிறுத்திக் கொள்ளப்படுவதற்கே வகை செய்யப்படுவதாகப் பேசப்படுகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டமும் நீதித்துறைக்குப் பொருந்தாது என்று வரம்பு கட்டி நிறுத்தப்பட்டுள்ளது.

ஆட்சியாளர்கள், அரசு நிர்வாகத்தின் அனைத்து அடுக்குகள், நாடாளுமன்றம் – சட்டமன்றம் உள்ளிட்ட அனைத்தையும் தன் முடிவுக்கு உள்ளடக்குகிற எல்லையற்ற அதிகாரத்தைச் செலுத்துகிற நீதித்துறை, அதன் செயல்பாடுகள் குறித்து யாருக்கும் பதில் அளிக்க வேண்டிய பொறுப்பை ஏற்க வேண்டியதில்லை என்ற இன்றைய நிலைமை நீடிப்பது ஆரோக்கியமானதல்ல.

நீதிமன்ற அவமதிப்பு என்பது ஒரு பெரும் குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் நீதிமன்றங்கள் நியாயமான விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவையாக இருக்க முடியாது.

“நீதித்துறையை அவதூறு செய்வது, நீதிமன்றங்களின் மதிப்பைக் குலைக்கும் வகையில் கருத்துத் தெரிவிப்பது’ ஆகியவை நீதிமன்ற அவமதிப்புக் குற்றமாகக் கருதப்படும் என்று தற்போதுள்ள சட்டம் திருத்தப்படுவதும் அவசியமாகும்.

மாநில ஆட்சி மொழிகள் உயர் நீதிமன்ற நிர்வாக மொழியாக அமைய வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் கிளை தென்மாநிலம் ஒன்றில் அமைய வேண்டும் என்ற கோரிக்கைகள் இன்றளவும் ஏற்கப்படாத நிலை தொடருவது, பாமர மக்களுக்குப் பயன்படும்விதமாக நீதித்துறையின் செயல்பாடு அமைவதற்கு இடந்தராது. நீதித்துறை சீர்பெற்று விளங்க இந்த அம்சங்களும் கவனத்தோடு பரிசீலிக்கப்பட வேண்டும்.

Pending-court-cases-Delhi-Civil-criminal-law-order-judges-justice


நல்லது நடந்திருக்கிறது!

தினமணி தலையங்கம்

நீதிபதிகளின் சொத்துக் கணக்குகளை அறிவிக்க வகைசெய்யும் மசோதா, மாநிலங்களவையின் கடுமையான எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் அரசால் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளின் கருத்துகளைக் கேட்டறிந்து ஒருசில மாற்றங்களுடன் இந்த மசோதா அவையின் ஒப்புதலுக்கு வைக்கப்படும் என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்திருக்கிறார்.

அறிமுகக் கட்டத்திலேயே முடக்கப்பட்டுவிட்டிருக்கும் இந்த மசோதாவில் காணப்பட்ட சில பிரிவுகள் எதிர்க்கட்சியினர் மட்டுமன்றி ஆளும் கூட்டணித் தரப்பில்கூட சிலருக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை என்பதுதான் உண்மை. மத்திய சட்ட அமைச்சருக்கேகூட அந்த மசோதாவில் முழுத் திருப்தி இருக்க வழியில்லை என்பது அவரது முந்தைய சில கருத்துகளிலிருந்து யூகிக்க முடிகிறது.

இப்போதைய நிலையில் உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது சொத்துக் கணக்குகளை தலைமை நீதிபதியிடம் தெரிவிப்பதாகவும், அதைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனின் கருத்து. தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி நீதிபதிகளின் சொத்துக் கணக்கை பொதுமக்கள் கோர முடியாது என்பதில் நீதிபதிகள் பிடிவாதம் பிடிக்கிறார்கள். இந்த நிலையில், நீதிபதிகளையும் ஒரு சில அடிப்படை விஷயங்களில் வெளிப்படைத்தன்மை உடையவர்களாக்குவதுதான் இந்த மசோதாவின் உள்நோக்கம் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால், நீதிபதிகள் சொத்துக் கணக்கு அறிவிப்பு மசோதா 2009-ன்படி, உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது சொத்துக் கணக்கை சம்பந்தப்பட்ட தலைமை நீதிபதியிடம் ஆண்டுதோறும் தாக்கல் செய்தாக வேண்டும் என்கிற சட்ட நிர்பந்தம் ஏற்படுகிறது. அதேநேரத்தில், இந்த மசோதாவின் பிரிவு எண் 6-ன் படி, நீதிபதிகள் தாக்கல் செய்த சொத்து விவரங்களை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது இல்லை என்றும் காணப்படுகிறது.

தலைமை நீதிபதியிடம் சொத்து விவரம் தரப்பட்டு, அது வெளியில் யாருக்கும் தெரிவிக்கப்படாமல் இருப்பதற்கு சட்டமும் மசோதாவும் எதற்கு என்பதுதான் கேள்வி.

சமீபகாலமாக, பல நீதிபதிகளின் மீது பகிரங்கமாக ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன. தங்களது வருமானத்துக்கு மீறிய சொத்துகளுக்குச் சொந்தக்காரர்களாகப் பல நீதிபதிகள் இருக்கின்றனர் என்று பரவலாகவே ஒரு கருத்து நிலவுகிறது.

இந்த நிலையில், ஆண்டுதோறும் நீதிபதிகள் தங்களது சொத்துக் கணக்கை வெளியிட்டு, அது பொதுமக்கள் பார்வைக்கு உள்படுத்தப்படுமானால், தவறுகள் தடுக்கப்படாவிட்டாலும், குறையுமே என்கிற எதிர்பார்ப்புத்தான், இப்படி ஒரு மசோதாவுக்கான அடிப்படை.

தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் தங்களது சொத்துக் கணக்கை வாக்காளர்களுக்குப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும், மக்களாட்சியில் அப்படிப்பட்ட வெளிப்படைத்தன்மை இருந்தால்தான் வாக்காளர்கள் தங்களது வேட்பாளர்களின் தகுதியை சீர்தூக்கி வாக்களிக்க முடியும் என்றும் தீர்ப்புகூறி, தேர்தலில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்தது நீதித்துறைதான்.

தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளுக்கு என்ன சட்டமோ அதுதானே நீதித்துறைக்கும் இருக்க வேண்டும்? தனக்கொரு நீதி, அடுத்தவர்களுக்கு இன்னொரு நீதியென்று நீதித்துறையே சொல்வது நீதியாகுமா?

இந்திய அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 19 (1) (அ)வின் படி ஒவ்வோர் இந்தியக் குடிமகனுக்கும் தகவல் பெறும் உரிமை தரப்பட்டிருக்கிறது. இதை உச்ச நீதிமன்றம் பலமுறை உறுதியும் செய்திருக்கிறது. இந்த நிலையில் துணிவாக, நீதித்துறையிலும் சில வெளிப்படைத் தன்மை வேண்டும் என்று அரசும், அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் எதிர்பார்ப்பதில் என்ன தவறு?

இதனால் நீதித்துறையின் சுதந்திரம் பாதிக்கப்படும் என்று கூறுவது வாதமல்ல, வறட்டுப் பிடிவாதம்.

இப்படி ஒரு சர்ச்சைக்கு வழிகோலியதே நீதித்துறைதான். நமது நீதிபதிகள் தங்களது சொத்துக் கணக்குகளை மக்கள் பார்வைக்கு உள்படுத்தி, தாங்கள் லஞ்ச ஊழல் மற்றும் சொத்துக் குவிப்புக் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்திருக்க வேண்டாமா? எங்கள் சொத்துக் கணக்கை யாரும் கேள்வி கேட்கவோ, பரிசோதிக்கவோ கூடாது என்று நீதிபதிகள் அடம்பிடிப்பது, “அப்பன் குதிருக்குள் இல்லை’ என்கிற கதையாக இருக்குமோ என்கிற தேவையில்லாத சந்தேகத்தை அல்லவா கிளப்பி இருக்கிறது.

வெளிப்படைத் தன்மை என்பது மக்களாட்சியில் நீதித்துறை உள்பட ஆட்சியில் எல்லா பிரிவுகளுக்கும் இருந்தாக வேண்டும். நீதிபதிகளின் சொத்துக் கணக்கு அறிவிப்பு மசோதா 2009-லிருந்து 6-வது பிரிவு அகற்றப்பட்டு, மக்கள் மன்றத்தின் முன் நீதிபதிகளும் தங்களது நேர்மையை நிரூபிக்க சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.

சமீபத்தில் சட்டக் கமிஷன் தலைவர் ஏ.ஆர். லெட்சுமணனின் புத்தக வெளியீட்டு விழாவில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கூறியிருப்பதைப்போல, “மக்களின் எதிர்பார்ப்புகளைப் பிரதிபலிக்கும் வகையில் நீதித்துறை நடந்து கொள்ள வேண்டும்’!

HT-Domestic-Violence-Dowry-Laws-Reality-India-Women-Kids-Marriages


சொத்து விவரங்களை வெளியிட்டார் உயர் நீதிமன்ற நீதிபதி

நீதிபதிகள் சொத்து விவரங்களை வெளியிடுவது தொடர்பான சர்ச்சை உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்ற நீதிபதி கே.கண்ணன் தனது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார்.

நீதிபதிகள் தங்கள் சொத்து விவரங்களை தாங்களாகவே முன்வந்து வெளியிட வேண்டும் என நாடு முழுவதும் 600 நீதிபதிகளுக்கு வழக்கறிஞரும், சமூக நல ஊழியருமான பிரசாந்த் பூஷண் கடந்த ஜனவரியில் கடிதம் எழுதினார்.

அவரது கடிதத்துக்கு நீதிபதி கே.கண்ணன் மட்டுமே பதிலளித்துள்ளார். தனது பெயரில் ரூ.1.03 லட்சம் வங்கி இருப்பில் உள்ளதாகவும், ரூ.3.87 லட்சத்தை முதலீடு செய்துள்ளதாகவும், தனது மனைவி பெயரில் ரூ.10.59 லட்சம் வங்கி இருப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இப் பிரச்னை குறித்து தனது இணையதளத்தில் நீதிபதி கண்ணன் தெரிவித்துள்ளதாவது:

நீதித் துறை சரியாக செயல்படுவதற்கு நீதித் துறைக்கு உள்ளேயே வழிவகை காண வேண்டும். நீதித் துறையில் ஊழலை ஒழிக்க தற்போதுள்ள முறைகள் பயன் அளிக்கவில்லை எனில், நீதிபதிகளை நியமிக்கவும், நீக்கவும் புதிய வழிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

நீதிபதிகள் சொத்து விவரங்களை அறிவிக்கலாம் – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி: நீதிபதிகள் தங்கள் சொத்து விவரங்களை அறிவிக்க விரும்பினால் யாரும் தடுக்கப் போவதில்லை என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: நீதிபதிகள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என சட்டம் இயற்றப்படவில்லை எனில், அது தொடர்பாக நீதிபதிகளிடையே கருத்தொற்றுமை ஏற்படுத்தப்பட வேண்டும்.

நீதிபதிகள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என 1997-ல் அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மா கொண்டு வந்த தீர்மானத்தை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பின்பற்றி வருகின்றனர். சில உயர் நீதிமன்றங்கள் இந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்றார்.

நீதிபதிகள் சொத்து விவரங்களை வெளியிடத் தேவையில்லை என்ற தொனியில் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்திருந்ததாக கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி டி.வி.சைலேந்திர குமார் ஒரு கட்டுரையில் குற்றம்சாட்டியிருந்தார்.

அதற்கு மேற்கண்டவாறு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.


சட்டமெனும் இருட்டறை!

தினமணி தலையங்கம்

எப்போது ஒரு பிரச்னை ஆட்சியாளர்களை அலட்டுகிறதோ, சிந்திக்க வைக்கிறதோ அப்போதே அந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு விரைவிலேயே ஏற்படும் என்கிற நம்பிக்கையும் பிறக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் ஆகிய மூவரும் கலந்துகொண்ட முதல்வர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாட்டில் அனைவரும் ஒத்த கருத்தினராக இருந்து கவலை தெரிவித்த விஷயம் தீர்ப்புக்காகத் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் பற்றியது.

ஜூன் 30, 2009 நிலவரப்படி,

  • உச்ச நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் 52,592.
  • பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் 40,17,596.
  • மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளோ ஏறத்தாழ மூன்று கோடி.

இந்தப் புள்ளிவிவரங்களை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே வழங்கி இருக்கிறார். பிரதமரும் தமது உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த அளவுக்கு வழக்குகள் தேங்கிக் கிடப்பதற்கு என்ன காரணம்? உச்ச நீதிமன்றக் குறிப்புப்படி, தேங்கிக் கிடக்கும் இந்த வழக்குகளை விசாரித்து

  • ஒரு வருடத்தில் அத்தனை வழக்குகளையும் பைசல் செய்வதற்கு 1,500 உயர் நீதிமன்ற நீதிபதிகளும்,
  • 23,000 கீழமை நீதிமன்ற நீதிபதிகளும் தேவை.
  • உயர் நீதிமன்றங்களில் மட்டும் சுமார் 280 நீதிபதிகள் நியமிக்கப்படாமல் இருக்கிறார்கள்.

முதலில் நீதிபதிகளுக்கான பணி இடங்கள் முறையாகவும் விரைவாகவும் நிரப்பப்பட வேண்டும்.

இப்போது உடனடியாக ஓய்வுபெற்ற நீதிபதிகளை ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விசாரிக்க நியமிக்கலாமே.

சமீபத்தில், சென்னையில் சட்ட அமைச்சர் முன்னிலையில் “மெகா லோக் அதாலத்’ என்ற பெயரில் ஒரே நாளில் 15,650 வழக்குகளைப் பைசல் பண்ண முடிந்திருக்கிறதே?

இதேபோல போர்க்கால அடிப்படையில் எல்லா நீதிமன்றங்களிலும் வழக்குகள் பைசல் செய்யப்படுவதில் என்ன தடை இருக்க முடியும்?

தேவையில்லாமல், காலனி காலத்திய நீதிபதிகளின் பாணியில் அளவுக்கு அதிகமான விடுமுறைகளை இப்போதும் நமது நீதிபதிகள் அனுபவித்துக் கொண்டிருப்பதே தார்மிகக் குற்றம். இத்தனை வழக்குகள் தேங்கிக் கிடக்கும்போது, பொறுப்புணர்வுடன் விடுமுறைகளைக் குறைத்துக் கொண்டு வழக்குகளைப் பைசல் செய்ய வேண்டும் என்கிற அக்கறை நீதிபதிகளுக்கும், நமது வழக்கறிஞர்களுக்கும் ஏன் வருவதில்லை?

பண்டைக் காலங்களில் கிராமப் பஞ்சாயத்துகள் இருந்தன. ஊர்ப் பெரியவர்கள் கூடித் தீர்ப்பளித்தனர். அதே பாணியில் மத்திய அரசு கொண்டுவர இருக்கும் கிராம் நியாயாலய மசோதா வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அரசு நீதித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு அளித்து, நீதிமன்றச் செயல்பாடுகளை நவீனப்படுத்த உதவ வேண்டும். நீதிமன்ற ஆவணங்கள் கணிப்பொறியின் உதவியுடன் பதிவு செய்யப்பட வேண்டும்.

இன்றைய நிலையில், இந்தியாவில் வழக்கு விசாரணைக்கான சராசரி கால அளவு என்ன தெரியுமா? 15 ஆண்டுகளாம்.

இதை மூன்று ஆண்டுகளாகக் குறைக்க முயற்சிப்பதாகச் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

அதுபோல, கொலைக் குற்றங்களை விசாரித்துத் தீர்ப்பளிப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாக அந்த மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

உதாரணமாக, தில்லியில் மட்டும் ஆண்டொன்றுக்கு 380 கொலைகள் நடப்பதாகவும், ஆனால் சுமார் 250 வழக்குகளைத்தான் பைசல் செய்ய முடிகிறது என்றும் கவலை தெரிவித்தனர்.

இதே நிலைமைதான் ஏனைய மாநிலங்களிலும். இந்தப் பிரச்னைக்கு உடனடியாக முடிவு காணப்பட வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.

இந்தியச் சிறைச்சாலைகளில் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை திடுக்கிட வைக்கிறது.

  • இந்தியாவில் உள்ள சுமார் 1,500 சிறைச்சாலைகளில் இரண்டரை லட்சம் கைதிகளைப் பாதுகாப்பதற்கான வசதிகள்தான் உள்ளன.
  • ஆனால் சிறைகளில் இருக்கும் கைதிகளின் எண்ணிக்கையோ மூன்றரை லட்சத்துக்கும் அதிகம்.
  • இதில் 70 சதவிகிதம் கைதிகள் விசாரணைக் கைதிகள். அதாவது, இவர்கள் குற்றம் செய்தார்களா என்பதுகூட நிரூபிக்கப்படாமல், சிறையில் காலத்தைக் கழிப்பவர்கள்.

இதைவிடக் கொடுமையான விஷயம் என்ன தெரியுமா? இந்த விசாரணைக் கைதிகளில் 70 சதவிகிதம் பேர், சிறு குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டவர்கள். இவர்களில் பலர் தண்டிக்கப்பட்டால்கூட ஒரு சில நாள் தண்டனைதான் கிடைக்கும். ஆனால் தீர்ப்பு எழுதப்படாமல், குற்றம் நிரூபிக்கப்படாமல் மாதக் கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிரபராதிகளின் அவலம் எழுத்தில் எழுதி மாளாது.

உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் பலமுறை, இதுபோன்ற விசாரணைக் கைதிகளை சொந்த ஜாமீனில் விடும்படி அறிவுறுத்தியும், காவல்துறையினரும் கீழமை நீதிமன்றங்களும் அதை சட்டை செய்வதாகத் தெரியவில்லை.

விசாரணைக் கைதிகள் என்கிற பெயரில் மூன்று மாதத்திற்கும் அதிகமாக, சிறு குற்றங்களில் கைது செய்யப்பட்ட யாரையும் சிறையில் வைத்திருப்பது மனித உரிமை மீறல் என்று கருதப்பட வேண்டும். அப்படிப்பட்ட மனித உரிமை மீறல்களுக்குச் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும். கீழமை நீதிமன்றங்கள் இந்தப் பிரச்னையில் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

பிரதமரையும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியையும் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தேசத்தையும் சிந்திக்க வைக்கும் பிரச்னையாக இது மாறினால் மட்டும்தான் இதற்குத் தீர்வு ஏற்படும்.


In US, disclosure of judges’ wealth is mandatory – India – NEWS – The Times of India: US, Argentina, Latvia, Mongolia and South Korea are some of the countries that have laid down legal procedures for disclosure. A report prepared by the Commonwealth Human Rights Initiative (CHRI) pointed out that in Russia and Philippines, there were some restrictions to accessing information but not complete denial.

Concerns consensus: “It takes some doing for the CPM’s Brinda Karat, the ruling Congress’s Jayanthi Natarajan, and the BJP’s Arun Jaitley, not to mention maverick-in-chief Ram Jethmalani, to agree on anything. This is the doing of the Judges (Declaration of Assets and Liabilities) Bill, denounced by its variegated critics as placing the judiciary above the rule of law.”

Judges and public scrutiny – Should judges declare their assets to the public? Views – livemint.com: “The government’s legislation to have judges declare assets, but not to the public, is only making the judiciary vulnerable to public perception of corruption and political interference”

OUTLOOK –
BLOGS / Sundeep Dougal :: What The SC Judges Must Do
: “first time in history that before introduction in Parliament the Bill has been circulated to the judicial institution itself, and it is on their objection that this clause 6 has been introduced”

Judges’ Assets Bill in LS today, not to cover independent kin: “the proposed law should make it mandatory for the judges to declare the assets of their “independent” children too, the Bill doesn’t have any such provision.”

Bibek Debroy Column : The jury is in on the Judges Bill: “First, to paraphrase what former Chief Justice Verma said, you maintain confidentiality only if you have something to hide. Second, it differentiates among India’s citizens (and public servants), be it on grounds of Article 19 or otherwise. Third, it is possible selective disclosure of this “confidential” information may make judiciary more amenable to executive pressure. Fourth, in absence of information on assets, what happens to possible inquiries against judges?”

காதல் கடிதம் எழுதினேன்; கொலையானேன்

பெயர்: மனிஷ் குமார்

வயது: 15

வசிப்பிடம்: கோரார் கிராமம், கைமுர் மாவட்டம், பிகார்

சாதி: ரவிதாஸ் (தலித்)

விரும்பியது: தோட்டி மகள் (தலித்)

முதல் குற்றம்: மூன்று மாதம் முன்பு காதல் கடிதம் எழுதியது

இரண்டாம் குற்றம்: விரும்பியவளின் விருப்பத்துடன் நேசித்தது

தண்டனை: ரயிலுக்கு அடியில் தள்ளி மரணம்

பார்வையாளர்: மனீஷ்குமாரின் தாயார்

தண்டனை கொடுத்த இடம்: துர்காவதி கிராம காவல் நிலையம்

காவல்துறை: உடந்தையாக இருந்ததற்காக சப்-இன்ஸ்பெக்டர் இடைநீக்கப்பட்டிருக்கிறார்.

மேலும் விவரங்களுக்கு:

1. Teenager murdered for writing love letter to girl of higher caste – Times Online: “Prakash Louis, a sociologist based in Bihar, said ∑ “Caste-based atrocities are common here: rapes, murders, beatings. The privileged prey on the weak,” said Uday Kumar, a director of the Bihar-based Dalit Association for Social and Human Rights Awareness. Similar abuses are reported regularly across India. Alamelu, the leader of a group of Dalit women in the southern state of Tamil Nadu, said:”

2. Boy thrown in front of train for falling in love – India – The Times of India: “Lalita Devi alleged that cops had told her to settle the dispute ‘outside the police station’ when she, along with her son, went to them for help after the boy was tonsured and paraded around the market. She said the accused assaulted her and her son outside the police station and dragged them to a railway track. Despite her repeated pleas for her son’s life, the killers threw the boy in front of a train on the Gaya-Mughalsarai section.”

நியு யார்க் டைம்ஸ் – செய்தி, கட்டுரை

1. Inmate Count in U.S. Dwarfs Other Nations’ – By ADAM LIPTAK: The U.S. has less than 5 percent of the world’s population but almost a quarter of its prisoners.

2. The Accidental Rebel – By PAUL AUSTER: மூவ் ஆன்.ஆர்க் அடுத்த இராக் போராட்டத்தை துவங்கியிருக்கிறது. ஹில்லரி க்ளின்டனோ இரானை ரெண்டு சாத்து சாத்தி மூலையில் உட்கார வைக்க வேண்டும் என்று வாக்குறுதி கொடுக்கிறார். இந்த சமயத்தில் இந்த மாதிரி எழுச்சி ஒன்றில் பங்கு கொண்டவரின் நினைவலை.

3. China May Give Up Attempt to Send Arms to Zimbabwe – New York Times: ஜிம்பாப்வேயில் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. முன்னாள் பண்ணையார் இங்கிலாந்து தொடங்கி அனைத்து மேற்கத்திய உலகமும் கர்ம சிரத்தையாக செய்திகளைப் பின் தொடர்கின்றன. சீனாவில் இருந்து அன்புடன் அனுப்பி வைக்கப்பட்ட ஆயுதங்கள் திருப்பி அனுப்பப்பட்ட காதை.

4. Europe Turns Back to Coal, Raising Climate Fears – By ELISABETH ROSENTHAL: எல்லோரும் அணுசக்திக்கு மாறினால், இத்தாலி சரித்திரத்தை புரட்டிப் போட்டு, நிலக்கரிக்கு மாறுகிறது. தொடர்பான விரிவான ஆராய்ச்சி.

5. Cruel and Unusual History – By GILBERT KING: இந்தியாவைப் போல் ‘ஆயுள் தண்டனை’ என்றால் நன்னடத்தை எல்லாம் கூட்டிக் கழித்து ஏழாண்டுகளில் விடுதலை கிடைக்காது. சாகும் வரை சிறைவாசம் இருந்தாலும் அமெரிக்க உச்சநீதிமன்றம் மரண தண்டனையை நேசிக்கிறது. க்ரீன் மைலில் காட்சியாக்கப்பட்டது எல்லாம் நிஜமாகவே நடந்தேறியிருக்கிறது என்று விவரிக்கும் பதிவு. (ஐந்தாண்டுகள் முன்பு பதிந்தது – Points to ponder against Capital Punishment)

அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் சார்பு நிலை குறித்த நச் காட்சி (நன்றி: ஏபிசி டிவி – பாஸ்டன் லீகல்)

6. He Wrote 200,000 Books (but Computers Did Some of the Work) – By NOAM COHEN: பொதுவில் கிடைக்கும் தகவல்களைக் கொண்டு அறுபது/எழுபது கணினிகளின் துணையுடன் நூற்றைம்பது பக்க புத்தகங்களைக் கோர்த்து, மின்வடிவில் அனுப்பி வைக்கும் பேராசிரியர் குறித்த அறிமுகம்.

7. High School Project on Genocide Was a Portent of Real-Life Events – By SAMUEL G. FREEDMAN: பள்ளிக்கூடத்தில் பாடம் படிப்போம்; சரித்திரக் கேள்விகளுக்கு பதில் சொல்வோம். இந்தப் பள்ளியின் ஆசிரியரோ சமகால செய்திகளையும் வராலாறையும் கோர்த்து வினாத் தொடுத்து மாணவர்களுக்குப் புரிய வைக்கிறார். இந்த மாதம் ‘இனப்படுகொலைகளை நினைவுகூறும் மாதம்‘. நியு யார்க் டைம்ஸ் கட்டுரையில் குறிப்பிட்ட ஆசிரியரும் யுகோஸ்லேவியா, கெமர் ரூஜ் (சிவப்பு கம்போடியா) எல்லாம் பாடசாலையில் அறிமுகப்படுத்தினாலும் ஈழத்தை கண்டுகொள்ளவில்லை.