பதினைந்தாண்டுகளுக்கு முன்பு எடுத்த படம்.
மைலாப்பூர் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில் உற்சவத்தின் கிளை வைபவம்.
அடுத்த தலைமுறையை உருவாக்குவது எப்படி?
ஒரு பாரம்பரியத்தின் தொடர்ச்சியைத் தக்கவைப்பது எப்படி?
வாழையடி வாழையாக உங்களின் கலாச்சாரத்தையும் கொண்டாட்டத்தையும் கற்றுக் கொடுத்து, உணர்வுபூர்வமாகவும் செயல்ரீதியாகவும் பங்கெடுக்க வைத்து அர்ப்பணிப்புடன் ஈடுபட வைப்பது எப்படி?
இப்படித்தான்…
பெருமாளுக்கு பெரிய தேரா? இவர்கள் சின்னஞ்சிறிய தேரை இழுப்பார்கள்.
நந்தகோபாலனாக உற்சவர் மாறுகிறாரா? குட்டி கிருஷ்ணனும் பின்னாடியே சின்ன்னஞ்சிறிய பாலகர்களின் கைவண்ணத்தில் உலா வருவார்.
வீதி ஊர்வலங்களின் போது யானையின் தும்பிக்கை மட்டும் தனித்து ஆடும். யானை வாகனத்தின் பின் அர்ச்சகர் சாமரம் வீசினால், அதே போல் வேலைப்பாடுகள் நிறைந்த அம்பாரி கொண்ட சிற்றுரு கஜ வாகனமும் அதே ஒய்யாரங்களுடன் மாடவீதியுலா வரும்.
அலங்காரம் ஆகட்டும்; பக்தி ஆகட்டும்; திவ்விய பிரபந்த கோஷம் ஆகட்டும் – எந்தக் குறையும் இருக்காது.
எந்தவொரு இயக்கத்தையும் சித்தாந்தத்தையும் இரத்தமும் சதையுமாக நரம்பெல்லாம் பாய்ச்சுவது இப்படி வழித்தோன்றல்களை உருவாக்குவதில் உள்ளது.
அவர்களுக்குள் தென்கலையா… வடகலையா? என்னும் கோஷ்டிச் சண்டையும் இப்படித்தான் உருவேற்றம் காண்கிறதா என்றால்…
உற்சவமூர்த்தியும் பால்யமூர்த்தியும் ஒன்று என்பது அத்வைதம்,
பெரிய வாகனத்தில் வரும் பெருமாள் வேறு; குழந்தைகளுக்கான பொம்மைப் பெருமாள் வேறு என்பது துவைதம்,
வேறெனினும், பரமாத்மாவுக்குள் ஜீவாத்மா அடக்கம் என்பது விசிஷ்டாத்வைதம்.













