Tag Archives: புனைவுகள்

ஆயக்கல் – Solvanam #300 Issue

சியாமந்தக மணியை உங்களுக்குத் தெரிந்திருக்கும், ஜய்ரொலைட் (Gyrolite, NaCa16(Si23Al)O60(OH)8·14H2O) தெரியுமா?

அருங்காட்சியகத்தில் பார்த்தேன். மஹாராஷ்டிராவின் தானே பகுதியில் பாறைகளுக்குள் தங்கமாக, மலையினுள் மறைந்து சுடர் விட்டுக் கொண்டிருக்கிறது.

இது போல் எத்தனை எத்தனை ஆளுமைகள்? இசை ஞானிகள்? எழுத்தாளர்கள்? பேராசிரியர்கள்? பேச்சாளர்கள்?

இவர்களின் சங்கீதத்திலும் புனைவிலும் படைப்பிலும் ஆய்விலும் சிந்தனையிலும் உரையாடலிலும் – அவற்றை மகோன்னதமான செயல்பாட்டில் செழுமையாக்கிய வித்தையையும் அறிந்து தெளிந்து கொள்ள அம்பையின் “துவாரம் மங்கத்தாயாரு” போன்ற சொல்வனம் கட்டுரை உதவுகிறது.

சொல்வனத்தின் இந்த முன்னூறாவது இதழிலும் நிறைய பேர் இவ்வாறான தெரிந்த, தெரியாத பெயர்களையும் சிறுகதையாசிரியர்களையும் நெடுங்கதைகளையும் அறிமுகம் செய்திருக்கிறார்கள்.

கமலராகம், பதுமராகம் போன்ற அருங்கல்லான ஜய்ரொலைட் கல்லின் பெயர் – ‘குரொஸ்’ என்னும் கிரேக்க வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. ‘குரொஸ்’ என்றால் முழுமை; வட்டத்தின் பரப்பு – பலம்.

சொல்வனத்தின் பலமே இந்த மாதிரி இரத்தினங்களை அறிமுகம் செய்து, அவர்களின் வாழ்க்கைப் பாதையை உணர்த்தி, ஊன்றுகோல் வழிகாட்டிகளை பரிச்சயப்படுத்தி, தேர்ந்தெடுத்த துறையில் சாதனையை விவரித்து – அவர்களைப் போல் அரிய காரியங்களுக்கு உங்களையும் கிரியா ஊக்கியாக இலட்சியங்களை அடையாளங்காட்டுவது

நான் இப்போதுதான் மே மாதம் வெளியான கட்டுரையே வாசிக்கிறேன். நீங்களாவது 300வது இதழின் ஆக்கங்களை உடனடியாக வாசித்து விடுங்கள்.

இதழ்-300 – சொல்வனம் | இதழ் 300|13 ஆகஸ்ட் 2023 (solvanam.com)

புதிய இதழில் கவனப்படுத்திய எந்தப் படைப்பாளியை நீங்கள் வாசித்திருக்கிறீர்கள்?
எவர்களைத் தவறவிட்டுவிட்டார்கள்?
எந்த கட்டுரைகள் விமர்சனங்களாக இல்லாமல் வெறும் அறிமுகமாக நின்று விட்டது?
அருமைகளையும் பாஷாணங்களையும் சொல்லவும்

Solvanam #297

புத்தம்புதிய சொல்வனம் இதழ் #297 வெளியாகி இருக்கிறது.

நான் இருக்கும் இடத்தில் மூன்று மாதம் வெயில் அடிக்கும். கோடைக் காலங்களில் கொண்டாட்டம், சுற்றங்களோடு ஊர் சுற்றல் என்றிருப்பதால் இதழை ஆற, அமர படிக்கவில்லை.

இதழ்-297 – சொல்வனம் | இதழ் 297 |25 ஜூன் 2023 (solvanam.com)

எனினும், தொடர்களை விடக்கூடாது.

இரா முருகன் எழுதும் மிளகு அத்தியாயம் நாற்பத்தெட்டு வெளியாகி இருக்கிறது.
(48 அம்மாடீ! 24 மாதங்கள்!! இரண்டு வருடங்களுக்கும் மேல்!!!)

நாகரத்தினம் கிருஷ்ணா மொழியாக்கத்தில் அதிரியன் நினைவுகள் – 16ஆம் பாகம் கிடைக்கிறது.
அதே போல் பானுமதி. ந. தமிழாக்கத்தில் ராஜேஷ்குமாருக்கு முன்பே எட்கர் ஆலன் போ எழுதிய துப்பறியும் கதையான மார்க் தெரு கொலைகள்- இறுதிப் பகுதியுடன் முடிகிறது.

இதெல்லாம் இலக்கியம்.

தற்கால உலகத்தை அமெரிக்க மேற்குலகை அற்புதமாக அறிமுகம் செய்து சமீபத்திய வரலாற்றை செவ்வியல் ஆக்கும் அமர்நாத் அவர்களின் உபநதிகள் – ஒன்பது உள்ளது.
அவர் ஜாஜா-வின் தெய்வநல்லூர் கதைகள் – ஐந்தாம் அத்தியாயத்திற்கு சரியான போட்டி.

எழுத்தாளர் அமர்நாத் கதைகளும் சரி…
சிரித்தே சொக்க வைக்கும் ஜா. ராஜகோபாலன் புனைவும் சரி…
எந்தப் பாணியிலும் இல்லாமல், ஏற்கனவே தமிழ் கூறும் நல்லுலகுக்கு அறிமுகமான எழுத்தாளர்களின் நடையையும் நினைவுறுத்தாமல், அது பாட்டிற்கு செவ்வனே சிறப்புற அமைக்கப் பெற்று “பேஷ்!” போட வைக்கிறது.

இந்த மாதிரி தொடர்கதைகளை வாசிக்கிறீர்களா?
இன்றைய ஆறு நொடி டிக்-டாக் சமூக அவசரத்தில் பொறுமையாக ருசித்து ரசிக்கிறீர்களா?
சமீபத்திய “தொடரும்” போடும் இணையக்கதைகளில் எதை விரும்பீனீர்கள்?

பெட்டிகளும் பூட்டுகளும் திறப்புகளும்

ரொம்ப நாள் கழித்து நல்ல கதை ஒன்றைப் படித்த திருப்தி பிரஜேஷ்வர் மதன் எழுதிய “தபால் பெட்டி”யில் கிடைக்கிறது.

ஆங்கிலம் வழி தமிழாக்கம் என்பது அமெரிக்க உணவகங்களில் இந்தியச் சாப்பாடு உண்பது போல், “உங்களுக்கு காரம் எவ்வளவு வேண்டும்? மைல்ட்? மீடியம்?? ஹாட் அண்ட் ஸ்பைசி???” என்பது போல் தூவப்பட்ட மசாலாவோடு இருக்கும்.

தலைப்பாகட்டிக்கோ அஞ்சப்பருக்கோ போனால் அதெல்லாம் கேட்கமாட்டார்கள். அவர்களாக இஷ்டத்துக்குப் போட்டுத் தருவார்கள். ஹிந்தி வழி தமிழாக்கம் செய்யும் அனுராதா க்ருஷ்ணஸ்வாமி அந்த வகை லோக்கல். எல்லாம் சரியாக இருக்கும்.

இந்தக் கதை ஏன் கவர்கிறது?

  • சும்மா அங்குமிங்கும் பாய்கிறார்: தபால் பெட்டியை வைத்து என்னைக் குறி வைக்கிறார் பிரஜெஷ்வர் மதான்.
  • சிந்து பைரவியில் ஜனகராஜ் கதாபாத்திரம் போன்று இதுவும் செம்மையாக செதுக்கப்பட்டிருக்கிறது.
  • சம்பிரதாயமான சம்பவங்கள்; முடிவை நோக்கி பயணிக்கும் பாணி இல்லை. அதுபாட்டுக்கு இழுத்துச் செல்கிறது.
  • அதற்காக கோணங்கித் தனமாக புரியாமல், நான்கைந்து வாட்டி வாசித்தாலும் குழப்பாமல் சீராகச் சொல்லப்பட்டிருக்கிறது.
  • எல்லாம் இரட்டை அர்த்தம்; ஆனால், வலிந்து எல்லாம் திணிக்கவில்லை. எல்லாம் குறியீடு; எனவே, உங்கள் அனுபவத்திற்கேற்ப சொடேர் சொடேரென்று அடிக்கும்.

முன்னுமொரு காலத்தில் மாந்திரீக யதார்த்தம் எல்லாம் உலா வந்து கொண்டிருந்த காலத்தில் இப்படியாகப் பட்ட புனைவுகளை தமிழிலும் சந்தித்து இருக்கிறேன். இன்றைய காலகட்டத்தில் எவர் இப்படி கொடுக்கிறார்கள்?

தபால் பெட்டிக்குள் உங்களால் புக முடிந்ததா?

சொல்லுங்களேன்…