சொல்றாங்க சொல்றாங்க

1. தனக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளை விடுதலைச் சிறுத்தைகளுக்காக விட்டுக்கொடுத்தால் அதை ஏற்கமாட்டோம். பாமகவுக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த கருணாநிதி முயற்சிக்கிறார். – திருமாவளவன்.

2. மக்களுக்கு நன்மைகள் செய்வதே அரசியல்வாதிகளின் முக்கியக் கடமை. – முன்னாள் நடிகர், இன்னாள் ஃபார்வர்ட் ப்ளாக் கட்சித் தலைவர் கார்த்திக்

விகடனும் விஷமும் – கருணாநிதி

சென்ற வார விகடனில், சிரிப்பு நடிகர் செந்தில் – கருணாநிதியை ‘ஏய் கருணாநிதி’ என்றும் ‘ஒண்டிக்கு ஒண்டி’ அழைத்து மேடையில் பேசியதை அட்டைப்படத்தில் வெளியிட்டு விகடனும் விஷம் கக்க ஆரம்பித்துள்ளது என்றபடி உடன்பிறப்புக்கு சீறச்சொல்லும் மு.கவின் மடல்.. வலைப்பதிவர் பார்வைக்கு. (செந்தில் போன்றவர்கள் இவ்வாறு பேசுவது அதுவும் வயதில், அரசியலில் மூத்த ஒரு தலைவரை பேசுவது ஹும். அதற்கு விகடனும் பப்ளிசிடி கொடுப்பது அதைவிட டூமச். விகடன் இனிமேல் ‘கக்குகிறான் கணேஷ்’ மாதிரி கவர் ஸ்டோரிகள் வெளியிடுவதுதான் சரி இல்லை நமீதா, ஸ்ரேயா படங்கள் வெளியிட்டு புண்ணியம் தேடிக்கொள்ளட்டும்.

-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0–0-0-0-0-0-0-0-0-0-0-0-0-

Click the link below for full view.
நன்றி: தினகரன்: 24-பிப்ரவரி 2006

திருமா குமுறல்

அ.தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்று அவர் கருதினால் 125 இடங்களை வைத்துக் கொண்டு மற்ற இடங்களை தியாகம் செய்யலாம். மத்தியில் கூட்டணி ஆட்சி வேண்டும் தமிழ்நாட்டில் மட்டும் வேண்டாம் என்று நினைப்பது ஜனநாயக விரோதம்

திருமாவின் குமுறல் நியாயமானதே. வெற்றி பெற மட்டும் கூட்டணி வேண்டும், பதவி தனக்கு மட்டும் வேண்டும் என்று கலைஞர் நினைப்பது ஜனநாயக விரோதமே..

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியில் வர இயலா விட்டாலும் பா.ம.க.- விடுதலை சிறுத்தை கள் நட்புணர்வு தொடர வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் சொல்லட்டும். அப்படி அவர் சொன்னால் விடுதலை சிறுத்தைகள் தேர்தலை புறக்கணித்து விட்டு பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளில் அக்கட்சி வேட்பாளர்களுக்கு வேலை செய்ய தயாராக இருக்கிறது.

இதைச் சொல்வது திருமாவா ?

கடந்த சட்டமன்ற தேர்தல்/ பாராளுமன்ற தேர்தல் வரை ராமதாசை கடுமையாக விமர்சித்த திருமாவா இப்படி சொல்கிறார்.

ஆனாலும் திருமா எப்படி அரசியல் நடத்த வேண்டும் என்று ராமதாசிடம் பாடம் கற்கலாம். அது தான் அவருக்கும் அவரைச் சார்ந்த இயக்கத்திற்கும் உடனடி தேவை

திமுக கூட்டணிக்கு அடுத்தச் சிக்கலாக, ராமதாஸ் மூன்றாவது அணி தொடங்கக் கூடும் என்று தினமலர் கூறுகிறது. தினமலர் தனது “ஆசையை” இவ்வாறு யூகங்கள் மூலம் வெளியிடுவது வாடிக்கையாகி விட்டது.

ஒட்டகம் வாடகைக்கு

ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதை (தினமணி)

ஓர் ஊரில் ஒரு காய்கறி வியாபாரி, பழ வியாபாரி, மண்பானை வியாபாரி, கண்ணாடி வியாபாரி, ஒட்டகத்தை வாடகைக்கு விடும் ஒருவர் ஆகியோர் இருந்தனர். அவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஊருக்கு நன்மை செய்வதாகக் கூறி கூட்டு அமைத்தனர். அதாவது தில்லிக்கு சென்று மலிவி விலையில் பொருள்களை வாங்கி அவற்றை மக்களுக்குக் குறைந்த விலையில் தருவதாகக் கூறி மக்களிடமிருந்து பெரும் தொகையை முன்பணமாகப் பெற்றனர்.

தில்லிக்குச் சென்று பொருள்களையெல்லாம் வாங்கி, அவற்றை ஒரு கயிற்றில் கட்டினர். ஒட்டகத்தின் ஒரு பக்கத்தில் காய்கறிகளையும் பழங்களையும் தொங்கவிட்டனர். மற்றொரு பக்கத்தில் மண்பாண்டங்களையும் கண்ணாடிப் பொருள்களையும் தொங்கவிட்டனர். ஒட்டகம் முன்னால் செல்ல இவர்கள் அதைத் தொடர்ந்து சென்றார்கள். சிறிது நேரத்தில் வியாபாரிகள் களைத்துப் பின்தங்கிவிட்டனர். ஒட்டகத்தை வாடகைக்கு விடுபவர் ஒட்டகத்துடன் முன்னே சென்றுவிட்டார்.

ஒட்டகம் சற்று திரும்பிப் பார்த்தது. அதன் கண்முன்னே தெரிந்த காய்கறிகளையும் பழங்களையும் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்று தீர்த்துவிட்டது. பின்னால் வந்துகொண்டிருந்த வியாபாரிகளின் பார்வையில் வழியில் ஆங்காங்கே விழுந்து கிடந்த காய்கறித் துண்டுகளும் பழத்துண்டுகளும் தென்பட்டன. உடனே வேகமாக ஓடிவந்து ஒட்டகக்காரரைப் பார்த்து “இது நியாயமா? நீங்கள் தடுத்திருக்க வேண்டாமா?” என சப்தம் போட்டனர்.

ஒட்டக உரிமையாளருக்கு அது தெரியாமலில்லை. ஆனால் தீனிச் செலவு மிச்சம் என்று, காய்கறிகளையும் பழங்களையும் ஒட்டகம் தின்பதற்கு விட்டுவிட்டார். அவர்களிடையே வாக்குவாதம் முற்றியது. அப்போது ஒட்டகம் சற்று நகரவே ஒரு பெரிய சப்தம் கேட்டது. ஒட்டகத்தின் ஒரு பக்கத்திலிருந்து காய்கறிகளும் பழங்களும் காலியாகிவிட்டதால் மறுபக்கம் இருந்த கண்ணாடிப் பொருள்களும் மண்பாண்டங்களும் பாரம் தாங்காமல் விழுந்து உடைந்துவிட்டன. அதுதான் அந்த சப்தத்துக்குக் காரணம்.

ஊர் மக்களிடம் வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. சில நாள்களுக்குப் பிறகு அந்த வியாபாரிகள் மீண்டும் ஒன்றுகூடி, சென்னை சந்தையில் மலிவு விலையில் பொருள்களை வாங்கித் தருகிறோம் என்று கூறி முன்பணம் கேட்டனர். ஆனால் ஊர் மக்கள் இப்போது அவர்களிடம் ஏமாறத் தயாராக இல்லை.

அந்த ஊர் மக்களைப் போலவே தமிழக மக்களும் தங்களுக்கு நம்பிக்கைத் துரோகம் இழைத்தது யார் என்பதையும் நம்பிக்கைகு உரியவர் யார் என்பதையும் அறிவார்கள். எனவேதான் நாங்கள் மக்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டிருக்கிறோம். தமிழக மக்களும் எங்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

சொல்றாங்க சொல்றாங்க

1. பழங்கால மன்னர்களைப் போல மாறுவேடம் அணிந்து நகர்வலம் வந்து மக்கள் குறைகளைக் கண்டறிவேன். – விஜயகாந்த்

2. மக்கள் கூட்டணி என்னுடன் இருக்கும்போது என்னை யாராலும் வீழ்த்த முடியாது. – ஜெயலலிதா [வைகோவுடன் கூட்டணி நடக்காது என்று தெரிந்தவுடன் மீண்டும் மக்கள் கூட்டணிக்கு மாறியுள்ளார் முதல்வர்.]

3. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எங்களுடன் இருந்ததால்தான் அதிமுக ஆட்சியைப் பிடித்தது. – காங்கிரஸின் வீரப்ப மொய்லி

4. பாமகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளிலிருந்து விடுதலைச் சிறுத்தைகளுக்குத் தொகுதிகள் ஒதுக்குவதில் எங்களுக்குப் பிரச்னையில்லை. – கருணாநிதி (சன் நியூஸ்)

அரசியலில் நேர்மை

இமேஜா, அதிக இடங்களா என்று யோசித்து விட்டு இமேஜ் தான் முக்கியம் என்று வைகோ முடிவு செய்து விட்டார் என தெரிகிறது. திமுக கூட்டணியில் முன்பு கூறியதை விட சற்று அதிக இடங்களை வைகோ பெறக் கூடும். அந்த வகையில் வைகோவின் எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது.

வைகோவின் முடிவு திமுக கூட்டணியை வலுவாக்கும். திமுகவை கோட்டையின் அருகே இந்த முடிவு அழைத்து சென்றிருக்கிறது என்று சொல்லலாம்.

திமுகவின் தலைமையை (கலைஞர், ஸ்டாலின்) பலப்படுத்துவதாக உள்ள இந்த முடிவு வைகோவின் எதிர்காலத்திற்கு எந்தவகையில் உதவி செய்யும் என்பதும் விவாதத்திற்குரியது. திமுக ஆளும்கட்சியாக இருக்கும் பட்சத்தில், எத்தகைய சூழ்நிலையிலும் திமுகவில் விரிசல் ஏற்படாது என்று உறுதியாக சொல்லலாம்.

அதே சமயத்தில் வைகோவின் இந்த முடிவு திமுக தொண்டர்கள் மத்தியில் வைகோவின் மரியாதையை உயர்த்தும்.

வைகோவின் அறிக்கை

அரசியல் நாணயத்தையும் நாகரிகத்தையும் கட்டிக் காக்கும் உன்னதமான குறிக்கோளோடு கடந்த 12 ஆண்டுகளாக இயங்கி வருகின்ற ம.தி.மு.க., இந்த அரசியல் பண்பாட்டைப் பாதுகாக்கக் கொடுத்து இருக்கின்ற விலை அதிகமாகும்.

இதற்காக ஏற்றுக்கொண்ட துன்ப துயரங்கள் ஏராளம். அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, இலட்சியத்தில் உறுதி என்ற தாரக மந்திரத்தை நிலை நாட்டவும், செயல்படுத்தவும் குறுகிய தற்காலிக லாபங்களைக் கருதாமல், நாடாமல் தமிழகத்தின் உயர்வையும் திராவிட இயக்கத்தின் நலனையும் உயிராகக் கருதி இயங்கி வருகிறோம்.

கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க. கூட்டணியை விட்டு விலகிச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டபோதும்கூட சட்டமன்றத்தில் சில இடங்கள் கிடைத்தால் போதும் என்று கருதி இன்னொரு கூட்டணியில் இடம் பெற எண்ணிடவும் இல்லை என்பதைச் சுட்டிக் காட்டுவது அவசியம் ஆகும்.

அரசியல் நாணயத்தையும் அரசியல் நாகரிகத்தையும் இரு கண்களாகப் போன்றுகின்ற இயக்கம்தான் ம.தி.மு.க. என்பதைக் கடந்த 17 ஆண்டுகளின் செயல்பாடுகள் திட்டவட்டமாக விளக்கக் கூடியவை ஆகும்.

பொது வாழ்வைப் பாழ்படுத்தும் அரசியல் வர்த்தகச் சூதாட்டத்தை அறவே அகற்றுவதே எங்கள் நோக்கம். ஒளிவு மறைவு இன்றி, எடுக்கின்ற முடிவுகளைச் செயல்படுத்தும் திறந்த புத்தகமாகவே ம.தி.மு.க. திகழ்கிறது. தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் ம.தி.மு.க., அக் கூட்டணியை வலுப்படுத்தவும், தேர்தல் களத்தில் கூட்டணியை வெற்றி பெறச் செய்யவும் உறுதி பூண்டு இருக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ ஜ.மு.கூ-வில் தொடர்கிறார்?

தி ஹிந்து

மதில்மேல் பூனையாகத் தொடரும் இந்த விவகாரத்தில் இன்று வைகோ தான் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் தொடர்வதாகச் சொல்லியிருக்கிறார். கருணாநிதி இதை வரவேற்றிருக்கிறார்.

ராமதாஸ் இன்று கருணாநிதியைச் சந்தித்துள்ளார். பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடந்துள்ளதாக அறிவித்திருக்கிறார்.

ஆனால் பிரச்னை இத்துடன் முடிந்துவிட்டதாக எனக்குத் தோன்றவில்லை. மார்ச் மாதம் முதல் வாரம் வரையில் சஸ்பென்ஸ் தொடரும் என்றே நினைக்கிறேன்.

சொல்றாங்க சொல்றாங்க

1. திமுக கூட்டணியில்தான் வைகோ இருக்கிறார். – அன்புமணி

2. எதிர் அணியில் பேரம் பேசும் தந்திரத்தை மதிமுக கடைப்பிடிக்கிறது. – ஆர்க்காடு வீராசாமி

3. இயற்கையைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். எறும்புகள் வரிசையாகச் செல்கின்றன. தூக்கனாங்குருவி கஷ்டப்பட்டு கூடு கட்டுகிறது. இப்படி, பல பழமொழிகள், அடுக்கு மொழிகள், உணர்ச்சிப் பிழம்புச் சித்திரங்கள் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, ‘இனிப்பு தரும் கனியிருக்க கசப்பான காயைத் தேர்ந்தெடுப்பது’ பற்றியும் வைகோ ஏதோ சொல்லியிருக்கிறார். இதற்கு பதில் மவுனமாக இருந்திருப்பதே சாலச் சிறந்தது!

4. ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் பரஸ்பரம் மரியாதையையும் நீக்குப்போக்கையும் கடைப்பிடித்தால் சட்டப் பேரவைத் தொகுதிப் பங்கீட்டுப் பணி எளிதாக முடியும். – வீரப்ப மொய்லி. அதே சூட்டோடு, “2004-க்குப் பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சி அடைந்திருக்கிறது. தொகுதிப் பங்கீட்டின்போது அதையும் கருத்தில் கொள்ள வேண்டும்” என்கிறார்!

புதிய வாரிசு

டாக்டர் ராமதாஸ் மற்றொரு புதிய வாரிசை அறிமுகப்படுத்துகிறார். அவரது மகள் கவிதா இந்தத் தேர்தலில் பாமக சார்பாக போட்டியிடப்போவதாக விகடன் தெரிவிக்கிறது.

தமிழக அரசியலில் “மகளை” வாரிசாக களமிறக்கும் முதல் அரசியல்வாதி டாக்டர் ராமதாஸ் தான்.

மகன் டெல்லிக்கு, மகள் சென்னை கோட்டைக்கு

வைகோ விலகினால்…

செய்திகள் சொல்வது போல் ஒரு வேளை வைகோ அதிமுக கூட்டணிக்கு மாறிவிட்டால், திமுக கூட்டணிக்கு லாபம்தான்.

1. கூட்டணியில் இருக்கும் கட்சிகளில் சட்டமன்றத் தேர்தல்களில் நிரூபிக்கப்படாத கட்சி ம.தி.மு.க ஒன்று தான். இதுவரை தனித்தே போட்டியிட்டு தனது சட்டமன்ற அரசியல் பலத்தை சற்றும் காட்டியிருக்காத கட்சி அது ஒன்று தான். பா.ம.க, காங்கிரஸ், ம.தி.மு.க ஆகியவற்றில் பலம் குறைந்ததும் அது தான்.

2. பா.ம.க, காங்கிரஸ் இரண்டையும் இன்னமும் தொகுதி ஒதுக்கி திருப்தி செய்ய முடியும். அக்கட்சிகளின் தொண்டர்கள் இன்னமும் உற்சாகத்துடன் உழைக்க வழி வகுக்கும்.

3. தி.மு.கவிற்கும் அதிகம் இடங்கள் கிடைக்கும்; தனித்து ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் அதிகமாகும்.

4. பா.ம.க, காங்கிரஸ், ம.தி.மு.க ஆகியவற்றில், அ.தி.மு.கவுடன் மிகக் குறைந்த அளவு பொருந்துவது ம.தி.மு.க தான். அக்கட்சியின் இந்த கடைசி நிமிட முடிவு மக்களிடையே அதன் செல்வாக்கைக் குறைக்கும். ஆதலால், ம.தி.மு.க போட்டியிடும் தொகுதிகளில் அதன் வெற்றி வாய்ப்புகள் குறையும்.

5. அ.தி.மு.க கூட்டணியில் இருந்து கொண்டு வைகோ தான் சிறை சென்று வந்ததைப் பற்றி ரொம்பப் பேசி பிரசாரம் செய்ய முடியாது. அவரது ஒரு முக்கிய பலம் இதனால் குறையும்.

இவை தவிர, இது வைகோவின் எதிர்கால தி.மு.க சார்ந்த திட்டங்களை பாதிக்கும். தி.மு.கவின் எதிர்காலத் தலைமை பற்றிய கொஞ்ச நஞ்ச சந்தேகங்களும் இதனால் கலையும் என்ற அளவில் கலைஞருக்கு மகிழ்ச்சியாகவே இருக்கும். மேலும், கடந்த சில நாட்களாக கருணாநிதி ‘தம்பி தன்னைக் கை விடமாட்டான்’ என்ற அளவில் பேசி வருவது, இந்த கூட்டணித் தாவலால் தான் வஞ்சிக்கப்பட்டதாகக் கூறிப் பிரசாரம் செய்யவும் உதவும்.