தினமலர்: வன்னியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியான விருத்தாசலத்தில் போட்டியிடப் போவதாக விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதன்மூலம் பா.ம.க.,வின் கோட்டையிலேயே அதன் வேட்பாளருக்கு கடும் சவாலாக விஜயகாந்த் களமிறங்க உள்ளார். விஜயகாந்தின் சொந்த ஊர் மதுரை. இம்மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியில் தான் அவர் போட்டியிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அல்லது தலைநகர் சென்னையில் போட்டியிடலாம் என்று அவரது கட்சியினர் கூறி வந்தனர்.
எனினும் மதுரை நகரில் உள்ள தொகுதிகளில் விஜயகாந்த் சார்ந்துள்ள நாயுடு இனத்தவர் அதிகளவில் இல்லாததால், அந்த ஜாதியினர் அதிகம் உள்ள பகுதிகளில் இவர் போட்டியிடுவார் என அரசியல் கட்சியினர் எதிர்பார்த்தனர். இதற்காக விருதுநகர் மாவட்டம் அல்லது வேலுõர் மாவட்டத்தில் குறிப்பிட்ட தொகுதிகளில் இவர் போட்டியிடுவார் என கூறப்பட்டது.
ஆனால், யாரும் எதிர்பார்க்காத விதமாக விருத்தாசலம் தொகுதியை விஜயகாந்த் தேர்ந்தெடுத்துள்ளார். பா.ம.க., மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு அதிக ஓட்டு வங்கி உள்ள தொகுதி கடலுõர் மாவட்டம் விருத்தாசலம் சட்டசபை தொகுதி. இங்கு வன்னியர்கள் அதிகளவில் உள்ளனர். இதனால், இம்முறை இந்த தொகுதியில் பா.ம.க., சார்பில் கோவிந்தசாமி என்பவரும் அ.தி.மு.க., சார்பில் காசிநாதன் என்பவரும் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருமே வன்னியர்கள்.
இதுதவிர கடந்த லோக்சபா தேர்தலின் போது இத்தொகுதியில் திருமாவளவன் 34 ஆயிரத்து 387 ஓட்டுக்களை பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அ.தி.மு.க., ஆதரவுடன் போட்டியிட்ட பாரதிய ஜனதா வேட்பாளர் 24 ஆயிரம் ஓட்டுக்களை பெற்று மூன்றாவது இடத்தையே பிடிக்க முடிந்தது. தற்போது அ.தி.மு.க.,வும் விடுதலைச் சிறுத்தைகளும் ஒரே அணியில் உள்ளதால், விடுதலைச் சிறுத்தைகளின் தாழ்த்தப்பட்டோர் ஓட்டு வங்கியும், அ.தி.மு.க., வேட்பாளரின் வன்னியர் ஓட்டு வங்கியும் சேர்ந்து அக்கட்சிக்கு வலு சேர்க்கும் என கருதப்பட்டது.
இதுதவிர இந்த தொகுதியில் பா.ம.க., இதுவரை வலுவாகவே இருந்து வந்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் இத்தொகுதியில் தான் அதிக அளவாக 75 ஆயிரத்து 620 ஓட்டுக்களை பா.ம.க., வேட்பாளர் பெற்றார். இப்படி இரு பெரிய அணிகளுமே வலுவாக உள்ள இந்த தொகுதியை விஜயகாந்த் தேர்வு செய்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், வன்னியர் ஓட்டுக்களை இரு அணிகளின் வன்னியர் வேட்பாளர்கள் பிரிக்கும் பட்சத்தில் இதர ஓட்டுக்களை பெற்று வெற்றி பெறலாம் என்ற கணக்கில் விஜயகாந்த் இந்த தொகுதியை தேர்வு செய்திருக்கலாம் என பா.ம.க.,வினர் கருதுகின்றனர். உண்மையில் வன்னியர்களின் ஓட்டுக்களை பெரிதும் நம்பியே விஜயகாந்த் இத்தொகுதியில் போட்டியிடுவதாக கூறப்படுகிறது.
பா.ம.க.,வுக்கு சவால் விடும் வகையில் அவர்களது கோட்டையிலேயே போட்டியிட்டு வெற்றி பெற்று காண்பிக்க வேண்டும் என்பதே விஜயகாந்தின் திட்டம் என்று அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். விஜயகாந்துக்கு இப்பகுதிகளில் அதிகளவு ரசிகர்கள் உருவாகி வந்ததால் தான் அவருடன் மோதல் போக்கை ஆரம்பத்திலேயே பா.ம.க., துவக்கியதாக கூறப்படுகிறது. மேலும், கட்சியை துவக்கி தமிழகம் முழுவதும் பிரசாரத்தை விஜயகாந்த் ஆரம்பித்த போது விருத்தாசலத்தில் தான் அதிக அளவிற்கு கூட்டம் கூடியுள்ளது. இதன் காரணமாகவே இந்த தொகுதியை அவர் தேர்வு செய்ததாக அவரது ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த தொகுதியில் இவருக்கு அதிகளவு ரசிகர் மன்றங்களும் உள்ளன. இதில், அதிக அளவிற்கு வன்னியர்கள் தான் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு விஜயகாந்த் போட்டியிட வேண்டுமென 15 பேர் மனு கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இரண்டு நாட்கள் இந்த தொகுதியை விஜயகாந்த் சுற்றி வந்தாலே அவர் வெற்றி பெறுவது நிச்சயம் என ரசிகர் மன்றத்தினர் கூறுகின்றனர்.






















