Satellite City near Chennai – DMK supports & PMK opposes

Dinamani.com – TamilNadu Page

வண்டலூர் அருகே 30 ஆயிரம் ஏக்கரில் துணை நகரம்: பேரவையில் முதல்வர் அறிவிப்பு

சென்னை, செப். 1: சென்னை அருகே வண்டலூர் பகுதியில் துணை நகரம் அமைக்க உத்தேசிக்கப் பட்டுள்ளதாக முதல்வர் மு. கருணாநிதி அறிவித்தார்.

சட்டப் பேரவையில் அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

உலகில் மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக உள்ள நகரங்களில் சென்னையும் ஒன்று. எனவே, உள்கட்டமைப்பு வசதியில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சென்னையில் தற்போது திட்டமிட்ட பணிகளை நிறைவேற்றத் தேவையான இடவசதியும் இல்லை.

இப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆய்வு மேற்கொண்டது. வண்டலூர் -கேளம்பாக்கம் சாலைக்கு தென்பகுதியில், பழைய மாமல்லபுரம் சாலைக்கும் 45-ம் எண் தேசிய நெடுஞ்சாலைக்கும் இடையில் 1.40 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. அதில் 30 ஆயிரம் ஏக்கர் நிலத்தை உத்தேசமாக இக் குழுமம் தேர்வு செய்துள்ளது.

இப் பகுதியில் தற்போது 13,000 குடும்பங்கள் வாழ்கின்றன. 270 சதுர கிலோமீட்டரில் உள்ள இந் நிலப்பரப்பு, மாசற்ற, நல்ல சுற்றுப்புறச் சூழலில் இருக்கிறது. புதிய நகர அமைப்பிற்கு இது உகந்த பகுதியாகும்.

இப் பகுதியில் பெரும்பாலான நிலங்கள் பயிரிடப்படாமல் தரிசாகவே உள்ளன. இவற்றைக் கையகப்படுத்தும்போது நீர்வளப் பகுதி, குடியிருப்புப் பகுதி, காடுகள் உள்ள பகுதி ஆகியவற்றை நீக்கிவிட்டு, தரிசாகவும், புஞ்சையாகவும் உள்ள நிலங்களே கையகப்படுத்தப்பட உள்ளன.

நிலங்களைக் கையகப்படுத்தும்போது நில உரிமையாளர்களுக்கு நியாயமான மார்க்கெட் விலை வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இப் பகுதியில் வசிக்கும் மக்கள் இடப்பெயர்ச்சி செய்யப்பட மாட்டார்கள். அவர்கள் அந்தந்த இடங்களிலேயே தொடர்ந்து வாழலாம். ஏற்கெனவே மக்கள் வாழும் இப் பகுதிகள், உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய துணை நகரத்தின் வளர்ச்சியுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான சாலை, குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் மேம்பாடு செய்யப்பட்டு, அவர்கள் பயனடையும் வகையில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

புதிய நகரம் அமையும்போது உருவாகும் வேலைவாய்ப்புகள் இப் பகுதியில் ஏற்கெனவே வாழ்ந்து வரும் மக்களுக்கு நல்ல பலனை வழங்கி, அவர்கள் பொருளாதார ரீதியாக உயர்வடைய வழிவகுக்கும்.

இத் துணை நகரத் திட்டம் -வளர்ந்து வரும் சென்னைப் பெருநகரத்தின் நெரிசலைப் பெருமளவுக்குக் குறைப்பதோடு -உலகின் ஒரு முக்கிய தொழில் நகரமாகவும், தகவல் தொழில்நுட்ப நகரமாகவும் வளர்ந்து வரும் சென்னையை நோக்கி மேலும் தொழில் முதலீட்டாளர்களைத் தொடர்ந்து ஈர்த்திடவும், பொதுமக்களுக்குத் தரமான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவும் பயன்படும் என்றார் முதல்வர்.


Dinamani.com – TamilNadu Page :: துணை நகரம் அமைக்கும் திட்டம்: உடனே கைவிட ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை அருகே துணை நகரம் அமைய உள்ள உத்தேச பகுதி

காஞ்சிபுரம், செப். 1: திருப்போரூர் தொகுதியில் துணை நகரம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு உடனே கைவிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

திருப்போரூர் தொகுதிக்குள்பட்ட திருப்போரூர் ஒன்றியம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியங்களில் 44 கிராமங்களில் துணை நகரம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்த கிராமங்களைச் சேர்ந்த பொது மக்களின் கருத்தறியும் கூட்டம் பாமக சார்பில் ஊரப்பாக்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அப்போது ராமதாஸ் பேசியது: விவசாயிகளின் நிலங்களை பறித்து துணை நகரம் அமைக்கத் தேவையில்லை. இத்திட்டம் மேட்டுக்குடி மக்களுக்காக மட்டுமே பயன்படும். இதற்காக நஞ்சை, புஞ்சை நிலங்களை எடுக்கக் கூடாது. 44 கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் தங்கள் நிலங்களை காக்க உயிரையும் துறக்கத் தயாராக உள்ளனர். அரசு அதிகாரிகள் துணை நகரம் அமைக்கும் திட்டம் தொடர்பாக முதல்வருக்கு தவறான தகவலை தந்து வருகின்றனர்.

போராட்டம் நடத்தும் முதல் ஆள்
100 நாள்களில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் முதல்வர் கருணாநிதி. ஆனால் துணை நகரம் அமைக்கும் திட்டத்தால் கெட்ட பெயர் உண்டாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இந்த திட்டத்தை செயல்படுத்தினால் போராட்டம் நடத்தும் முதல் ஆளாக நான் இருப்பேன். எனவே இத்திட்டத்தை உடனே கைவிட வேண்டும்.

வட சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள நிலப் பகுதிகளை பயன்படுத்தி துணை நகரங்கள் அமைக்கலாம். ஓரே இடத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவது நன்றாக இருக்காது. செய்யூர், மதுராந்தகம் வட்டங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்தலாம் என்றார் ராமதாஸ்.

தற்கொலை முயற்சி
பொதுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, முதியவர் ஒருவர் தன்னிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை திறந்து தன் மீது ஊற்றிக் கொள்ள முயன்றார். ஆனால் அதற்குள் அருகே இருந்தவர்கள் அம்முயற்சியை தடுத்து விட்டனர். அவர், கொட்டமேடு கிராமத்தைச் சேர்ந்த தனசேகரன் (60) என விசாரணையில் தெரிய வந்தது.

Periyar Cinema: Maniammai Role & Politicians cast aspersions

Dinamani.com – TamilNadu Page

“பெரியார்’ படத்தில் மணியம்மை வேடத்தில் நடிக்க குஷ்புவுக்கு எதிர்ப்பு

சென்னை, செப். 1: “பெரியார்’ படத்தில் மணியம்மை வேடத்தில் நடிப்பதற்கு நடிகை குஷ்புவுக்கு பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதுகுறித்த விவரம்:

“மோகமுள்’, “பாரதி’ போன்ற தரமான படங்களை இயக்கிய ஞானராஜசேகரன் அடுத்ததாக நடிகர் சத்யராஜை வைத்து “பெரியார்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். வறட்சியான சிந்தனை, மலிவான ரசனைகளுக்கு அப்பாற்பட்ட இவரது படங்கள் யதார்த்த களத்திலிருந்து தடம் புரளாத வகையைச் சார்ந்தவை. ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்து வியாபாரியாக இருந்து 29 அரசு பதவிகளை வகித்த ஈரோடு ராமசாமிக்குள் திடீரென சமூக பிரச்சினை நுழைந்தது எப்படி என்பதையும், சராசரி மனிதனாக இருந்த ஒருவர் பெரியாராக மாறியது எப்படி என்பது பற்றியும் சொல்வதுதான் “பெரியார்’ திரைப்படத்தின் கதை.

பெரியாரின் சமூக சீர்திருத்தக் கருத்துகளை மக்களிடம் மீண்டும் எடுத்துச் செல்லும் வகையில் படம் உருவாகி வருவதால் இந்தப் படத் தயாரிப்புக்கு தமிழக அரசு ரூ.95 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது. இதில் பெரியாரின் முதல் மனைவி நாகம்மை வேடத்தில் “தலைநகரம்‘ படத்தில் நடித்த ஜோதிர்மயி நடித்து வருகிறார். பெரியாரின் இரண்டாவது மனைவியான மணியம்மை வேடத்தில் நடிக்க நடிகை குஷ்பு தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மணியம்மை வேடத்தில் குஷ்பு நடிக்கக் கூடாது என பாமக எம்.எல்.ஏ. வேல்முருகன் சட்டப்பேரவையில் கடந்த திங்கள்கிழமை கேள்வி எழுப்பினார்.

பாமக எம்.எல்.ஏ. வேல்முருகன்: தமிழ் கலாசாரத்தையும், பண்பாட்டையும் மதிக்காமல் “கற்பு’ பற்றி தவறானதொரு கருத்தை வெளியிட்ட ஒரு நடிகை எப்படி மணியம்மை வேடத்தில் நடிக்கலாம்?

மக்கள் வரிப்பணத்திலிருந்து தமிழக அரசு தந்த ரூ.95 லட்சம் நிதியுதவி பெற்ற படம் என்பதால் “பெரியார்’ படத்தில் குஷ்பு நடிக்க அனுமதிக்கக்கூடாது என்றார் வேல்முருகன் எம்.எல்.ஏ.

திருமாவளவன்: மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “பெரியார்’ படத்தில் சர்ச்சைக்குரிய ஒரு நடிகையைத் திணிப்பதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. குஷ்பு நடிக்க பொதுமக்களிடமிருந்து எதிர்ப்பு வந்தால் அது ஒரு களங்கமாகிவிடும். எனவே குஷ்புவை படத்தில் தவிர்ப்பது நல்லது என்றார்.

நடித்தே தீருவேன்: குஷ்பு: “பெரியார்’ படத்தில் மணியம்மையாக நடிக்க நான் தேர்வுசெய்யப்பட்டிருப்பது நானே எதிர்பார்க்காத ஒன்றுதான். இது எனக்குக் கிடைத்த பெரிய வாய்ப்பு. தமிழ் கலாசாரத்தை அவமதித்துவிட்டதாக முன்பு என்மீது குற்றம் சுமத்தப்பட்டது. அந்தப் பிரச்சினை குறித்து நான் மன்னிப்பு கேட்டுவிட்டேன். அதற்குப் பிறகும் எனக்குப் பல பிரச்சினைகள் வந்தன. கற்பு பற்றி நான் சொன்ன விதத்தை அவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. எனவேதான் என்னை எதிர்த்துப் போராட்டம் நடத்தினார்கள்.

இப்போதும் அப்படித்தான் தமிழ்நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன. அதையெல்லாம் விட்டுவிட்டு குஷ்பு மணியம்மை வேடத்தில் நடிப்பது மட்டும்தான் பிரச்சினை என்பது போல் பேசுகிறார்கள்.

இவற்றையெல்லாம் தாண்டி “பெரியார்’ படத்தில் நடிக்கக் கிடைத்திருக்கும் வாய்ப்பின் மூலம் தமிழகத்தில் எனக்கு ஓர் அங்கீகாரம் கிடைத்திருப்பதாகவே கருதுகிறேன். நான் தமிழ்நாட்டின் மருமகள். எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் சரி, நான் நடித்தே தீருவேன் என்கிறார் குஷ்பு.

மணியம்மை வேடத்துக்குப் பொருத்தமானவர் குஷ்புதான்: சத்யராஜ்: படத்தை இயக்கும் ஞானராஜசேகரன் ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரி. “பெரியார்’ பற்றிய தகவல்கள், புகைப்படங்களை மட்டும் ஒரு வருட காலம் திரட்டியிருக்கிறார். திரைக்கதை அமைக்க மூன்று வருட காலம் எடுத்திருக்கிறார். தந்தை பெரியாரின் பல வயதுப் படங்களுடன் எனது புகைப்படங்களை ஒப்பிட்டுப் பார்த்த பின்பே என்னை அந்த வேடத்துக்குத் தேர்ந்தெடுத்தார். மேலும் படத்தில் காந்தி, ராஜாஜி போன்ற கதாபாத்திரங்களும் வருகின்றன. ராஜாஜியாகத் தேர்வானவரின் ஒப்பனையைப் பார்த்து ராஜாஜி குடும்பத்தினரே வியந்திருக்கிறார்கள்.

அதேபோலத்தான் குஷ்புவையும் தேர்ந்தெடுத்திருப்பார். குஷ்புவுடன் பல படங்களில் நடித்திருக்கிறேன். அவரைப் பற்றி நன்கு தெரியும். ஒருவரது கொள்கை, கருத்து வேறாக இருக்கலாம். நடிப்பில் அதையெல்லாம் பார்க்கக்கூடாது. என்னைப் பொருத்தவரை நூற்றுக்கு நூறு சதவிகிதம் இந்த வேடத்துக்கு குஷ்பு பொருத்தமாயிருப்பார் என்றார் சத்தியராஜ்.

படத்திலிருந்து தங்கர்பச்சான் விலகல்?: “பெரியார்’ படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை ஏற்றிருப்பவர் தங்கர்பச்சான்.

கடந்த வருடம் நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறினார் என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதுதொடர்பாக தங்கர்பச்சான் வருத்தம் தெரிவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்தப் பிரச்சினையில் தங்கர்பச்சானுக்கு எதிராக குஷ்பு மிகவும் ஆவேசமான கருத்துகளை கூறினார். தற்போது தங்கர்பச்சானைச் சார்ந்தவர்கள் குஷ்பு படத்தில் பணியாற்றத்தான் வேண்டுமா? அதனால் படத்திலிருந்து விலகிக்கொள்ளுங்கள் என்று கூறியதாகத் தெரிகிறது.

இதுதொடர்பாக தங்கர்பச்சானைக் கேட்ட போது இதுவரை தான் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் இதுகுறித்து பேச விரும்பவில்லை என்றும் கூறினார். பிரச்சினை வலுக்கும் பட்சத்தில் படத்திலிருந்து அவர் விலகுவார் என்று தெரிகிறது.

Something like Sadness

பதிவெழுத உட்காரும்போது போலித்தனம் ஒட்டிக்கொள்வதாக ‘உருப்படாதது‘ நாராயண் (படிக்க: உருப்படாதது: பைனாகுலர் – ஏப்ரல் 2வது வாரம்) எழுதியிருந்தார். அந்தரங்கத்தில் என்ன நினைக்கிறேன் என்று வெளியில் தெரிவதில்லை. பிறருக்கு தெரியாது என்றால் என்ன சொல்வேன் என்று மறைப்பதில் சுவாரசியம் காணுகிறேன்.

கழிவறையில் அந்தரங்கமாக பேசும் சமயத்தில் மைக்கை அணைத்து வைக்க மறந்தார் கைரா ஃபிலிப்ஸ். (படிக்க: Most men are assholes – Oops! CNN Airs Anchor’s Girl Talk Over Bush Speech | NewsBusters.org; பார்க்க: Hot Air » Blog Archive » Potty break mic snafu: CNN’s Phillips chats in the loo during Bush speech)

நேருக்கு நேராக சொல்ல முடியாவிட்டால் இப்படி வலைப்பதிவுகளில் எழுதி பட்டி தொட்டியெங்கும் அறிவிக்க முடிகிறது. பெயர் குறிப்பிடாமல் பொத்தாம்பொதுவாக எழுத முடிகிறது. பதிவெழுதுவது சுத்திகரிப்பு என்பதை விட காழ்ப்பின் வெளிப்பாடுகளாகவே அமைத்து வைத்திருக்கிறேன். நெருப்பு வாயினில் ஓரமாய் எரியும் (படித்து மகிழ: திரை இசைத்தமிழ்: 78. இது என்ன கடவுளே! புரியாது கடவுளே!) என்பதை இரட்டுற மொழிதலாக பதிவருக்கு வைத்துப் பார்த்தாலும் பொருந்துகிறது. இங்கு ‘சில‘, ‘நான் யாரை சொல்கிறேன் என்று தெரியுமல்லவா?‘ போன்ற அடைமொழிகள் கொடுப்பதன் மூலம் இந்தப் பதிவும் இதே வகையில் சேர்த்துக் கொள்ள விரும்புகிறேன்.

சே! ஒரு நிமிஷத்துக்கும் அடுத்த நிமிஷத்துக்கும் எத்தனை பெரிய நிம்மதி வித்தியாசம்!‘ (முழுவதும் படிக்க: தூணிலும் இருப்பான்) என்பார் பா. ராகவன். உல்லாசபுரியில் மகிழுந்துப் பயணம். சிவப்பு விளக்கு முடிந்து பச்சை எரிய ஆரம்பிக்கிறது. திரும்ப எத்தனிக்கிறேன். கார் மக்கர். அங்கேயே நின்று விட, ‘எனக்கு மட்டும் ஏன் ஆண்டவா’ என்று சின்ன விஷயத்துக்கும் இயலாமை கலந்த கோபம் எட்டிப் பார்த்து சினமுற வைக்கிறது.

‘பட்ட காலே படும்’, என்பதாக மதுமிதா உங்க கணினி மட்டும் வைரஸ், லொட்டு லொசுக்கு தாக்காம எப்பவுமே சரியாக இருக்குமா என்று எழுதி முடித்த தட்டச்சுப் பலகை கூட காய்வதற்கு முன் ஐந்தாண்டுகளாக உறவாடிய மடிக்கணினி மரித்தது. என்றோ நடந்தே தீறும் என்று அறிந்திருந்தாலும், தேவையான கோப்புகளை பிறிதொரு இடத்தில் பாதுகாப்பாக சேமித்து வைத்திருந்தாலும், பிரிவுகள் துக்ககரமானவை. மனிதனைப் போல் மடிக்கணி் துர்நாற்றமெடுத்து, நிழல்கள்: சொக்கலிங்கத்தின் மரணம் போல் கதைக்களனாக அமைவதில்லை.

இன்னும் சிதறலாய் சில சம்பவங்கள். எப்படி இயல்பாய் கோர்த்து விடுவது என்று தெரியாமல் தொடரப் போகிறேன். மலேசியாவை களமாகக் கொண்டு ரெ கார்த்திகேசு (மரத்தடி.காம்(maraththadi.com) – Articles by this Author) நிறைய எழுதுவார். புதிதாக பிறக்கும் குழந்தைக்கு கருப்பசாமி என்று பெயர் வைக்க முடியாது என்பதை இடைச்செருகலாகக் கொண்ட நிகழ்வு மலேசியாவை பின்புலமாகக் கொண்ட கதையில் வருமா என்று பார்க்கலாம். (படிக்க: Lost in Media: Malaysia outlaws unsuitable names)

அமெரிக்காவில் திங்கள் அன்று உழைப்பாளர் தினம். உழைப்பவர்கள் எல்லாம் பிற நாடுகளில் இருந்து வந்தவர்கள்தானே? பின் எதற்கு அமெரிக்கர்களுக்கு விடுமுறை என்று நக்கல் செய்யலாம். அதன் பிறகு எவர் வலைப்பதிவில் காலந்தள்ளுவார்கள் (படிக்க: WSJ.com – No Day at the Beach :: Bloggers Struggle With What to Do About Vacation) என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் சேரியமாய கேள்வி எழுப்புகிறது.

இந்தப் பதிவில் உருப்படியான விஷயமே இல்லையா என்று மனம் வருந்த வேண்டாம். தலைப்பில் (Stestí – Something Like Happiness (2005)) சோகம் இருந்தாலும் சந்தோசமாக முடித்துக் கொள்ள விழைகிறேன்.

கோக், பெப்ஸியை கண்மூடித்தனமாக தடை செய்வது, மீண்டும் அனுமதிப்பது என்று அவசர சட்டம் போட்டாலும், பள்ளிக்கூடங்களை லீனக்சுக்கு (படிக்க: Indian state targets Windows – Business – International Herald Tribune) மாற்றும் முயற்சியில் கேரளா இறங்கியிருக்கிறது.

12,500 கல்விச்சாலைகள். 30,000 கணினிகள். 32 மில்லியன் மக்கள் தொகை. 90 விழுக்காடு படிப்பறிவு கொண்ட மாநிலம். சிறிய வயதில் புழங்கியதையே தொடர்ந்து பின்பற்றும் எனக்கு பள்ளியில் PCக்கு பதில் Vi சொல்லிக் கொடுத்திருந்தால் நானும் சின்னவனாக (படிக்க: வான்கோழி கற்ற கவி: வேட்டை(விளை)யாடு :: அருண் வேலை செய்வது சியாட்டலில் , கமல் உபயோகிக்கும் லாப்டாப், Mac , அப்ப கெளதம் Anti-Microsoft?) பில் கேட்ஸின் முதல் எதிரியாகி இருப்பேன்.

என்ன வளம் இல்லை இந்தப் பதிவில் என்று குழம்புவதற்கு முன் பிடித்த பத்தி:

உலகில் யாரும் யாருக்கும் பெரிதாக நன்மைகள் அதிகம் செய்துவிட முடியாது. இவன் ஒரு தடவை இல்லை என்று சொல்லிவிட்டதால் இவன் நண்பன் இல்லை என்று முடிவு கட்டிவிடாதீர்கள். இல்லை என்று சொல்லுமுன்பே நான் உங்களுக்கு நண்பன் இல்லைதான்.

நான் அவ்வளவு மோசம் இல்லை. நான் அது வரை போவதில்லை. என் எல்லை எனக்குத் தெரியும். பேலன்ஸ் தவறி உத்தமன் ஆகிவிடும் ரகம் இல்லை நான்.

தேவை உங்களுக்குத்தானே தவிர எனக்கல்ல என்பதையும் உங்கள் பிரச்னைகள் என்னைத் துளி கூட பாதிப்பதில்லை என்பதையும் தயவுசெய்து மறக்காதீர்கள். இல்லை என்ற வார்த்தை ஆமாம் என்பதை விடத் தெளிவானது. ஆமாம் என்பதற்கு சமயத்தில் இல்லை என்றும் அர்த்தமாகும்.

அவர்களிடம் இல்லை என்று சொல்லிக்கொண்டிருப்பதற்கு பதிலாக ஒரு அரூப ஓவியத்தை வரைந்து காட்டலாம். அதற்கு ‘சுயத்தின் எச்சங்கள்’ என்பது போன்றொரு தலைப்பு வைக்கலாம்.
மைய நீரோட்டம்


| |

How to be an ‘ordinary, decent’ Muslim

இன்றைய கார்டியனில் மேற்கத்திய நாடுகளில் முஸ்லீமாக வாழ்வதற்கு பத்து கட்டளைகள் கொடுக்கிறார்கள்.

  1. குளிரின் ஜன்னி கண்டாலும், பெரிய மேலங்கிகளை அணியாதே.
  2. பெற்றோர் பாகிஸ்தானில் மண்டையைப் போட்டாலும், சொந்த ஊர் பக்கம் எட்டிப் பார்க்காதே.
  3. பஞ்சதந்திரம் படம் பார்த்தோ, பாஸ்கெட்பால் பந்து போடுபவனை பின்பற்றியோ, தாடி வளர்க்காதே.
  4. மின்னஞ்சல் குழுவோ, கோவில் நிர்வாக அமைப்போ, குமுகாயம், கழகம் பக்கம் தலை நீட்டாதே.
  5. பத்தாயிரம் கொடுத்த சல்வார் கமீஸோ, வேலைப்பாடுடன் கூடிய சூரிதாரோ அணியாதே. பர்தா போடாதே.
  6. வாடைகை கம்மியாக இருக்கிறது; தோழன் கூப்பிடு தூரத்தில் இருக்கிறான் என்பதற்காக High Wycombe/ Luton/Beeston/Walthamstow பகுதிகளில் வசிக்காதே.
  7. சக இனத்தவனுக்கு இரக்கப்படாதே.
  8. மக்களுக்கு வழிகாட்டியாக, பிரச்சினைகளை வெளிச்சம் போட்டு குரல் கொடுப்பவனாக, தலைவராக தேர்ந்தெடுக்கப்படாதே.
  9. விளையாட்டில் வெற்றி பெற்று விடாதே.
  10. மற்றவர் கேலி செய்து கார்ட்டூன் வரைந்தாலும், நீ கேலிச் சித்திரம் வரையாதே.

நன்றி: Guardian Unlimited | Special reports | How to be an ‘ordinary, decent’ muslim:


| |

Kallipaalayam Aadi Dravida Status Update – MK Stalin

Dinamani.com – Chennai Page

குண்டடம் அருகே தலித் மக்கள் கிராமத்தை காலி செய்தது ஏன்?: ஸ்டாலின் விளக்கம்

சென்னை, ஆக. 31: தாராபுரம் தொகுதி குண்டடம் ஊராட்சி ஒன்றியம் கள்ளிப்பாளையத்தில் ஆதிதிராவிடர் காலனியில் மக்கள் வெளியேறியதற்கு, அடிப்படை வசதிகள் இல்லாதது காரணமல்ல என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

இதுகுறித்து உறுப்பினர்கள் டி. யசோதா, விடியல் சேகர் ஆகியோர் சட்டப் பேரவையில் புதன்கிழமை கவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.

ஆதிதிராவிடர் காலனியில் இருந்த குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் வேலைக்காக திருப்பூர் சென்றுவிட்ட நிலையில், மற்றவர்கள் வேறு ஊர்களில் உறவினர் வீடுகளுக்குச் சென்று தங்கியிருப்பதாக அமைச்சர் பதில் அளித்தார்.

அந்தக் காலனியில் குடிநீர் வசதி, சாலை வசதி ஆகியவை போதிய அளவுக்குச் செய்திருப்பதாக அவர் விளக்கினார்.

முந்தைய பதிவு: தமிழகத் தேர்தல் 2006: Frustrated Kallipaalayam Dalits Vacate their Native Village

Oh.. Jeez

மன்னிக்க வேண்டுகிறேன். ஆர்வக் கோளாறில் புதிய பதிவில் (E-Tamil Archives) பழைய விஷயங்களை சேர்க்கலாம் என்று நினைத்து செயல்பட்டதில் பத்தி பிரித்தல்களையும் வரிகளுக்கு நடுவே விழுந்த இடைவெளிகளும் காணாமல் போயிருக்கிறது.

கற்றது: ப்ளாகர் இடுகைகளை வோர்ட்பிரெஸுக்கு எளிதாக ஏற்றுமதி செய்யமுடியும். ஆனால், முழுக்க செய்து முடிப்பதற்கு முன் அரை வேக்காடாக அவசரப்பட்டால், சொதப்பலாக முடியும். பொறுத்தார் ப்ளாக் படிப்பார்.

ஏதாவது மாற்று வழிமுறையில் நிவர்த்தி இருந்தால் மின் மடலோ, மறுமொழியோ தரவும். நன்றி!


| |

Tamil Cinema Dialogue Lollu

வெட்டிப்பயல் – லொல்லு படித்தவுடன் எனக்கும் கை பரபரக்க, சிலவற்றை என்னால் முடிந்த அளவு நக்கல் விட்டுள்ளேன். பொறுத்தருள்க…

உதவிய & தொடர்பான பதிவுகள்: டயலாக் டென் | அந்நியலோகம்: டாப் 10 பிரபல ஒற்றைவரி வசனங்கள் | ஒரு குட்டி பூர்ஷ்வாவின் கல(க்)கமும், எண்ணங்களும் சில நல்லிணக்க முயற்சிகளும்…: தத்துவம்

  1. முத்து

    ரஜினி: நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது!

    தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி: அச்சச்சோ… ஹீரோவாச்சே! கால்ஷீட் கொடுத்திருக்கீங்க… அப்படி சொல்லாதீங்க.

    தமிழன்: உங்களுக்கு மட்டுமாவது தெரிஞ்சு வச்சிருக்கீங்களா சார்?

  2. பாபா

    ரஜினி: கதம்… கதம்… முடிஞ்சது முடிஞ்சு போச்சு

    இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா: ஆமா…

  3. பாரத விலாஸ்மகள் மதம் மாறி காதலிப்பதால் கோபப்படுகிறார் சிவாஜி.

    கே ஆர் விஜயா (திரைப்படத்தில் சொன்னது): ‘நீங்க எதற்கு எடுத்தாலும் அதிகமா உணர்ச்சிவசப்படறீங்க!’

    சிவாஜி கணேசன் (திரைப்படத்தில் சொல்லாமல் விட்டது): ‘பின்ன… சும்மாவா நடிகர் திலகம் என்று பட்டம் கொடுத்திருக்கிறார்கள்?!’

  4. பராசக்தி

    சிவாஜி கணேசன்: ஓடினாள்.. ஓடினாள்.. வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள்..

    வழக்கறிஞர்: ஓரம் மட்டும் ஓடினால், வாழ்க்கையில் தடுக்கித்தான் விழுவாள்.

  5. வீரபாண்டிய கட்டபொம்மன்

    சிவாஜி: .’என் குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துக் கொடுத்தாயா?’

    ஆஷ் துரை: ‘யூ மேன்… மெஷின் கொடுக்கறேன் சொன்னேன்… காசு கொடுத்தியா… அதில் மஞ்சள் என்ன… உன் மூளைக்கு மசாலா அரைக்கலாம் மான்’

  6. வள்ளி

    ரஜினி: நீ யாரை காதலிக்கறியோ, அவனைக் கட்டிக்கறதை விட, உன்னை யாரு காதலிக்கிறாங்களோ அவங்களைக் காதலி.

    ப்ரியா ராமன்: அதுக்காக உன்ன மாதிரி கோ ஆப்டெக்ஸ் போர்வை என்னை காதலிச்சா, அதையெல்லாம் கட்டிக்க முடியாது.

  7. மன்னன்

    ரஜினி: ஒண்ணு பெருசா? ரெண்டு பெருசா? ஒரு சாக்லேட்டு வேணுமா? இரண்டு சாக்லேட்டு வேணுமா?

    மாமனார் விசு: நல்ல வேளை மாப்பிள்ளை. ஒரு கூட்டணிக்கு ஆதரவு வேணுமா? ரெண்டு கூட்டணிக்கு ஆதரவா பேசணுமா என்று கேட்காம இருக்கீங்களே.

  8. திருவிளையாடல்

    நக்கீரன்: குறையற்ற பாடலைக் கேட்டால் எம்மை விட மகிழ்ச்சி அடைபவர் எவரும் இங்கு இருக்க மாட்டார்கள். சங்கம் வளர்த்த அரசர், தரமற்ற பாடலுக்கு பரிசு கொடுக்கிறார் என்பதே என் கோபம்.

    இறையனார்: சங்ககாலத்திலேயே விமர்சகர்கள் லொள்ளு தாங்க முடியலியேடா சாமீ

  9. தம்பி

    பூஜா: நான் சூடா எதுவும் சாப்பிட மாட்டேன். because என் நெஞ்சுல இருக்கற அவருக்கு சுட்டுடும்

    பொருத்தமான பதில்கள் வரவேற்கபடுகின்றன:

  10. வேட்டையாடு விளையாடு

    கமல்: யூனிஃபார்ம் போட்ட திமுருன்னு சொன்னியாமே? இப்போ நான் யூனிஃபார்ம்ல வரலை. ஆடகளோட வரலை. ஒரு டிசிபி-யா வரலை. தனி ஆளா ஆம்பளையா வந்திருக்கேன். நீ எப்படி? தம்பி கேட்ட சாத்துப்பா.

    வில்லன்: தம்பி… அப்படியே அந்த சாமானை எடுத்து வச்சுக்கப்பா


| |

Who is the #1 CM in India? – India Today Survey

Dinamani.com – Headlines Page

இந்தியாவில் சிறந்த முதல்வர் ராஜசேகரரெட்டி: ஆய்வில் தகவல்

ஹைதராபாத், ஆக. 28: இந்தியாவில் சிறந்த முதல்வராக ராஜசேகர ரெட்டி அதிக மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இண்டியா டுடே இதழ் தேசிய அளவில் நடத்திய வாக்கெடுப்பில் ராஜசேகர ரெட்டி 79 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் விவசாயிகளுடன் நட்பு முறையில் திறம்பட ஆட்சி நடத்தி வருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிப்படையான நிர்வாகம் நடத்தி வருவதாகவும் அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து கூறிய ராஜசேகர ரெட்டி, ஆந்திர மாநிலத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாற்றுவதே தனது குறிக்கோள் என்றார்.

இவரையடுத்து மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர் 78 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடத்தில் உள்ளனர்.

Vettaiyaadu Vilaiyaadu – Movie Review

சுஜாதாவின் முதல் நாவல் நைலான் கயிறு. குமுதம் இதழில் 1968இல் வெளிவந்த அதே நெடியுடன் இன்னொரு படம் துவங்குகிறது.

கொலை செய்தவன் வாடகை வண்டியை அமர்த்திக் கொண்டிருப்பான். அவன் ஏறிக் கொண்ட இடத்தில் இருந்து ஐந்து நிமிடம் நடந்து சென்று அதிமுக்கிய தடத்தைக் கண்டுபிடிப்பார்.

அவருக்கு முன் அமெரிக்க போலீஸுக்கு இணையாக சித்தரிக்கப்படும் மாதவன் பல விஷயங்களில் சறுக்கியிருப்பார்.

நைலான் கயிற்றில் விமானப் பட்டியலை சரி பார்த்து குற்றவாளியை அடையாளம் காண முயலுவார்கள். இது போல் பல இடங்களில் ‘அட… சுஜாதா!?’ சொல்ல வைக்கிறார் இயக்குநர் கௌதம்.

நைலான் கயிற்றில் இராமநாதன் சீட்டு மாளிகை கட்டுவது போல் தடயங்களையும் லாஜிக்கையும் இணைப்பதாக சொல்வார். முழுக்க முழுக்கக் கற்பித்துக் கொண்ட முடிவுகளையே ஆதரித்துக் கட்டியது என்றாலும் சுவாரசியமான வசன நடையும் கட்டுக்கோப்பான புத்திசாலித்தனத்தையும் கொண்டது.

ரஜினிக்கு ஒரு சந்திரமுகி தேவைப்பட்டது போல் மும்பை எக்ஸ்பிரஸ் சறுக்கலுக்குப் பிறகு கமலுக்கு ‘வேட்டையாடு விளையாடு‘ வேண்டியிருக்கிறது. நிச்சயம் வெற்றிப் படமாக அமையும்.

அதற்கு சில காரணங்கள்:

  • ‘நான் ஆம்பிளைடா’ என்று அமர்க்களமாக அறிமுகக் காட்சியில் முழங்குகிறார். (கொசுறாக அதே ராகவன் குணசித்திரம் ‘நீ என்ன ஹோமோவா?’ என்று மனம்பிழற்ந்தவனை உச்சகட்டத்தில் எகத்தாளமாக வினவுகிறது.)
  • காக்கி சட்டை‘ நினைப்பில் ஒற்றைக் கையில் push-up எடுக்க முயல்கிறார். (முடியவில்லை)
  • ‘ராகவன் instinct’ என்று விளக்க முடியாதவற்றுக்கு கேள்விகள் கேட்டால், பதில் பகர முடியாமல் தமிழ் சினிமா கோட்பாடுகளின் படி நடக்கிறார்.

    இலக்கியப் பிரியர்களுக்கும் இந்தப் படம் தீனி போடும். என் சிந்தையைக் கவர்ந்த சில:

  • சல்மாவின் ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ கவிதைப் புத்தகம் ஜோதிகாவின் மேஜையை அலங்கரிக்கிறது.
  • ம்துமிதாவின் சுபாஷிதம் அட்டைப்படம் போன்ற ஓவியத்துடன் கூடிய இன்னொரு (கவிதை?/ஆத்மாநாம்??) புத்தகம், கமல் & ஜோதிகாவிடையே காதல் சின்னமாக வலு சேர்க்கிறது.
  • Morgue என்பது பிணவரை என்று மொழிபெயர்த்து துணையெழுத்துக்கள் மூலம் தமிழ் பிணவறைக்குள் போனாலும், ப்ரூக்ளின் மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் தமிழில் அளவளாவுவது மகிழ்ச்சி கொடுக்கிறது.

    ரொம்ப ஆராயாமல், மேலோட்டமாக, சன் தொலைக்காட்சி கேட்கும் வாயில் கணிப்பு நடத்தினால்…

  • முப்பது வயது – திருமணமானவர்: படம் அருமை. ரொம்ப ஜாலியா, கொஞ்சம் பயமா, தேவைக்கும் அதிகமான புணர்ச்சிகளுடன் இருக்கிறது. ‘விக்ரம்’ படத்தில் கலக்கல் ‘வனிதாவனி… வனமோகினி’ முடிந்தவுடன் அம்பிகா காலியாவாங்களே… அந்த மாதிரியே இங்கேயும் வைத்திருக்கிறார். ஆனால், பாட்டுதான் மனதில் நிற்கவில்லை.
  • நாற்பது வயது – அமெரிக்க பச்சை அட்டை: இங்கே ‘சீரியல் கில்லர்’ நிறைய பேர் செய்தியில் வந்துகொண்டேயிருப்பார்கள். அவர்களைக் குறித்து அவ்வப்போது திரைப்படங்களும் நிறைய எடுக்கிறார்கள். ஆரம்பத்தில் ஒரு கொலையை சாஷ்டாங்கமாகக் காட்டி, சாவதானமாகக் கொண்டு சென்றாலும், ஒன்றரை மணி நேரத்தில் படத்தை விறுவிறுப்பாக முடித்துவிடுவார்கள். போகப் போக, ‘தொடர் கொலைக்கான காரணம் என்ன?’ என்று லாஜிக்கும், கஷ்டப்பட்டு புத்தியைத் தீட்டி போலீஸ் வலைக்குள் வீழ்த்துவதையும் முடிச்சிட்டு காண்பிப்பார்கள். இங்கே அந்த மாதிரி இல்லாமல், ‘ஏன்/எதற்கு’ என்பதை ஏப்பமிட்டு விட்டு, முடிவிலும் சோப்ளாங்கியாய் ஏனோதானோ என்று எண்பதுகளின் ‘சகல கலா வல்லவன்‘களை விட சப்பையான க்ளைமாக்ஸ் வைத்திருக்கிறார்கள்.
  • அவருடைய மனைவி: ‘சிகப்பு ரோஜாக்கள்‘ கூட சங்கிலிக் கொலைகள்தானே… அங்கு கூட லாஜிக் & முடிவில் அயர்ச்சி ஏற்படாத த்ரில் இருக்கும். ‘கலைஞன்’ படத்தில் சஸ்பென்ஸ் கிடைக்கும். இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றங்களினால், காமிராவை 360 டிகிரி சுற்றி வளைத்து, ஜீப்களை பறக்கவிட்டு, தமிழகக் காவல்துறை ட்ரேட்மார்க் தொந்தியுடன் இருபது வயது காளையை ஓடிப்பிடிக்கவைத்தாலும், கொட்டாவி வரவைக்கிறார்.
  • இருபத்தைந்து வயது – எச்1பி: எப்பொழுதாவது எட்டிப் பார்த்தாலும், கதையோடு ஒட்டிய இயல்பான நகைச்சுவை. ‘கொஞ்சம் சிரிச்சா குறைஞ்சா போயிடுவீங்க’ என்று எண்ண வைக்கும் அளவு அமைதியான கதாபாத்திரத்துக்கு, தேவையான குழப்பத்துடன் ஜோதிகா. தமிழில் கையாளப்படாத சங்கிலிக் கொலைவாணர்களின் செய்கை. நான் பார்த்து தேய்த்த நியு யார்க்கை ‘வாவ்!’ போட வைக்கும் ஒளிப்பதிவு. கமலாலினி ரொமான்ஸ். என்சாய் செய்தேன்.

    ‘வாயை மெல்லுவதற்கு அவல் ஏதாவது கிடைக்குமா’ என்று காத்திருக்கும் அரசியல்வாதிகளுக்காக

  • வில்லன் உருத்திராட்சக் கொட்டை அணிந்திருப்பதாக காட்டுவது எங்கள் மத அம்பிக்கைகளை புண்படுத்துகிறது. இதுவே ஒரு ____கவோ, ____கவோ வைத்திருக்காததன் பின்னணி என்ன?
  • கிராமப்புறங்களில் இருந்து மருத்துவம் படித்து வெளிநாடு செல்பவர்களை, இந்தப் படம் தாழ்மையுணர்ச்சி உடையவர்களாகவும் தற்பால் விரும்பிகளாகவும் ஜோடிப்பது நகரத்தில் வளர்ந்த படைப்பாளியின் ஆழ்மன வெளிப்பாடு.
  • அமெரிக்க காவல்துறை surveillance camera நிறுவாமலும், சமயயோசிதமாக செயல்படாமலும், மோப்ப நாய்களுக்கு கமல் போன்ற சக்தி இல்லாததும் அந்த நாட்டின் காவல்துறை லட்சணத்தை சரியாக சித்தரிக்கவில்லை.
  • தேடுவதற்கு உரிய வாரண்ட் இல்லாமல் அத்துமீறி நுழைவதையும்; போதிய முன்ஜாக்கிரதை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை ஹீரோயிஸமாக பிடிக்க நினைப்பதையும் இந்தப் படம் தூண்டி விடுகிறது.

    | |

  • Katha Vilasam – Ess Ramakrishnan in Vikadan

    கதாவிலாசம் :: எஸ்.ராமகிருஷ்ணன்

    1. திலீப்குமார்
    2. இந்திரா பார்த்தசாரதி
    3. நாஞ்சில் நாடன்
    4. பாவண்ணன்
    5. ச.தமிழ்செல்வன்
    6. மா.அரங்கநாதன்
    7. ஜி.நாகராஜன்
    8. நகுலன்
    9. மௌனி
    10. ஆ.மாதவன்
    11. தி.ஜானகிராமன்
    12. மு.சுயம்புலிங்கம்
    13. ந.முத்துசாமி
    14. அசோகமித்திரன்
    15. கோபி கிருஷ்ணன்
    16. பி.எஸ்.ராமையா
    17. கி.ராஜநாராயணன்
    18. பா.செயப்பிரகாசம்
    19. எம்.வி. வெங்கட்ராம்
    20. வண்ணதாசன்
    21. புதுமைப்பித்தன்
    22. வண்ணநிலவன்
    23. கு.அழகிரிசாமி
    24. கந்தர்வன்
    25. லா.ச.ராமாமிருதம்
    26. கு.ப.ராஜகோபாலன்
    27. சா.கந்தசாமி
    28. கிருஷ்ணன் நம்பி
    29. எஸ்.சம்பத்
    30. கரிச்சான குஞ்சு
    31. கோணங்கி
    32. தமயந்தி

    நன்றி: Tamil Archives


    | |