Category Archives: Tamil Blog

தூங்காவனம் – ஸ்லீப்லெஸ் நைட்

கமல் படத்திற்கு விமர்சனம் எழுதுவதற்கு நிறைய பிரயத்தனம் வேண்டும். 1980ல் ஸ்டான்லி க்யூப்ரிக் ‘தி ஷைனிங்’ என்ற படம் எடுத்தார். அந்தப் படத்தில் என்னவெல்லாம் குறியீடுகள் இருந்தன, அந்தக் காட்சியமைப்பின் உள்ளே பொதிந்திருக்கும் விஷயங்கள் என்னவென்று சொல்வதற்காகவே ரூம் 237 என்ற ஆவணப்படத்தை சிரத்தையாக வெளியிட்டு இருக்கிறார்கள்.
Thoonga_VanamTelugu_-Kamal-Cheekati-Rajyam

உத்தம வில்லனுக்குக் கூட இந்த மாதிரி நிறைய கதை கட்டி விட்டிருக்கிறார்கள். வருடத்திற்கு மூன்று படம் என்றானபின், ஜெயமோகன் எழுதும் மஹாபாரதம் போல் கமலின் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் விலாவாரியான அலசல் தேவையிருக்காது.

பாபநாசம் போல் உன்னைப் போல் ஒருவன் போல் ஃப்ரெஞ்சுப் படமான ‘Nuit blanche’ம் அவ்வாறே ஒரு மறு-பதிப்பு. இந்தப் படத்தில் கமலைப் பார்ப்பதற்கு பதில் ஃபிரெஞ்ச் அசலை பார்ப்பது மேல் என்பது போன்ற விமர்சனங்கள் நாளைய தினங்களில் ஃபேஸ்புக்கில் உலாவுவதற்கு முன், அசல் படம் குறித்து பார்த்து விடுவோம்.

வேட்டையாடு விளையாடு‘ போன்ற துள்ளல் போலீஸிற்கும், தூங்காவனம் படத்தின் காவல்துறைக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. முன்னது நம்பவியலா சாகசங்கள் புரியும் கூரையேறி கோழி பிடிக்கும் இராமாயணம். ‘ஸ்லீப்லெஸ் நைட்’ உள்ளே அழுகிக்கிடப்பதை மெதுவாக அரங்கேற்றும் சண்டைப்படம்.

மிகையுந்துரத்தவெம்பிணியுந் துரத்த
வெகுளியான துந்துரத்த
மிடியுந்துரத்த நரை திரையும் துரத்தமிகு
வேதனைகளுந் துரத்த
பகையுந்துரத்த வஞ்சனையுந் துரத்த
பசியென் பதுந்துரத்த
பாவந்துரத்த பதிமோகந்துரத்த
பலகாரியமுந் துரத்த
நகையுந் துரத்த ஊழ் வினையுந் துரத்த
நாளும் துரத்த வெகுவாய்
நாவரண் டோடிகால் தளர்ந்திடும் என்னை
நமனுந் துரத்து வானோ ?
அகில உலகங்கட்கும் ஆதார தெய்வமே !
ஆதிகடவூரின் வாழ்வே !
அமுதசீர் ஒருபாகம் அகலாத சுகபாணி !
அருள்வாமி அபிராமியே !

திருக்கடையூர் அபிராமி பட்டர் (இயற்பெயர்: சுப்ரமணிய ஐயர்) நினைவிற்கு வருகிறார். அவருக்கு இன்னல் வரும்போது அந்தாதி இயற்றினார். இன்றைய காலத்துப் பசங்களை அடுத்த மாதத்திற்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும் என்று குளிரூட்டப்பட்ட அறையில் உட்கார்த்தினால் கூட அந்தாதியை ‘கிட்-ஹப்’பில் தேடி, திருடத் தெரியாத அசமஞ்சங்கள் ஆக இருக்கிறார்கள். அவரோ, கீழே குழி, சுட்டெரிக்கும் நெருப்பு ஜ்வாலைகளைக் கக்க, அம்பிகை வருவாளோ என்னும் பயமும் துரத்த, அவர் பாட்டுக்கு தன் வேலையை, பாடல் புனைவதை செய்து முடிக்கிறார்.

ஸ்லீபெலெஸ் நைட் நாயகன் வின்செண்ட்டும் அம்பிகை பட்டர் போல், கடும் பிரச்சினைகளுக்கு நடுவில் சாந்தமாக செயல்படுகிறான். ஆனால், அபிராமி பட்டரைப் போல் உத்தமன் அல்லன். கொஞ்சம் கெட்டவன்; போதை மருந்து தடுப்புப் பிரிவில் இருந்தாலும், அதற்கு மாறாக, சொந்த ஆதாயத்திற்காக செயல்படுபவன். கள்ளக்கடத்தல் நடப்பதாக கிடைத்த துப்பை வைத்து, அந்த பரிமாற்றத்தைத் தடுத்து, போதைப் பொருள் அனைத்தையும் தனதாக்கிக் கொள்ளப் பார்க்கிறான்.

போதைப் பொருளின் அசல் உரிமையாளர் வெகுண்டு எழுகிறார். கதாநாயகன் வின்சென்ட்டின் மகனைக் கடத்துகிறார். தனக்குச் சொந்தமான போதைப் பொருளை தன்னிடமே ஒப்படத்துவிட்டால், வின்சென்ட் – தன்னுடைய மகனை மீட்டெடுக்கலாம்.

வின்சென்ட் மீது நம்பிக்கையில்லாமல், அவனுடைய காவல்துறையின் உயரதிகாரிகள், வின்செண்ட்டை பின் தொடர்கிறார்கள். ஆனால், அந்த உயரதிகாரியும் அத்தனை உத்தமரில்லை. அவரும் இன்னொரு வில்லன். வின்செண்ட் விற்பதாக இருந்த போதைப் பொருளை, வின்சென்ட்டின் காவல்துறை உயரதிகாரியே, திருடி, தனதாக்கப் பார்க்கிறார். அதற்கு, அப்பாவி த்ரிஷா போல் ஒரு அழகியை நியமிக்கிறார்.

த்ரிஷாவும் காவல்துறை உயரதிகாரியும் கமலை… அல்ல… வின்செண்ட்டை துரத்துகிறார்கள்.

தன்னுடைய மகனைத் தேடி, மதுபான சாலையெங்கும் வின்சென்ட் தேடியலைகிறான்.

வின்சென்ட் பதுக்கி வைத்திருக்கும் போதை சரக்கை, கள்ளக்கடத்தல்காரர்கள் தேடியலைகிறார்கள்.

மூவரும் ஒருவரை ஒருவர், மூர்க்கமாகத் தாக்குவது, உண்மையை அறிவது, கொஞ்சம் பாசத்தைக் கூட அவ்வப்போது பொழிவது எல்லாம் நடக்கிறது. தந்தை என்னும் பாசத்தைச் சொல்வதும் செயலில் காட்டி நிரூபிப்பதும் வின்சென்ட்டிற்கு அவசியம். புதியவளாக, பெண்ணாக, இளையவளாக இருந்தாலும் நேர்மையான கொம்பராக இருப்பது த்ரிஷாவிற்கு அவசியம். போதைப் பொருளைக் கடத்தி பணம் குவிப்பது அதன் உரிமையாளருக்கு அவசியம். மதுசாலை நடத்துபவருக்கு தன் உணவகத்தின் கெத்து அவசியம். சகுனியாக எட்டப்பனாக இருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி அவசியம். தாய்க்கு தன் மகனின் உயிர் அவசியம்.

இவர்களுக்குள் நடக்கும் போராட்டத்தை அன்றாட வாழ்வின் உபகரணங்களைக் கொண்டு அவர்கள் வெட்டிக் கொண்டு சாவதை கத்திக் குத்துக்களோடும், சுவாரசியமான சண்டைக்காட்சிகளுடனும் ஸ்லீப்லெஸ் நைட் காண்பிக்கிறது.
Sleepless_Night_French_Movies_Films_Thoongavanam_nuit-blanche-2
குழப்பமான சினிமா என்பது கவர்ச்சிகரமான மிக்சர் போல் மாதுளை காக்டெயில் போல் மயக்குறச் செய்யும். கோயன் சகோதரர்களின் ‘பர்ன் ஆஃப்டர் ரீடிங்’ கூட இதே வகையிலான ‘குழப்ப சினிமா’க்கள்தான். ஆனால், கோயன் சகோதரர்கள் மெதுவாக ஆற அமரச் செல்வார்கள். அவர்களுக்கு அவசரம் கிடையாது.

ஆனால், ஸ்லீப்லெஸ் நைட் போன்ற படங்கள் வேறு வகையான குழப்பங்களில் திளைப்பவை. எது நிஜம்… எது பொய்… எது சாத்தியம்… எது நடக்கவியலாது… யார் எங்கே இருக்கிறார்கள்… எவர் எங்கே வருவார்கள்… என்ன நடக்கும்… எப்பொழுது ஒழுங்கு பிறக்கும்? எல்லோரும் எல்லாவிடங்களிலும் பார்த்தாலும் யாருக்கும் எவரும் தெரிவதில்லை. இந்த உலகம் என்பது சந்து பொந்துகள் நிறைந்த ஹோட்டல் போல் அறைகளும் பாதைகளும் நிறைந்த கேளிக்கை மண்டபம். அங்கே ஒரு வாயிலில் நுழைந்தால் பார்; மற்றொரு வாயிலில் வெளியேறினால் சமையலறை. அவையிரண்டிற்கும் நடுவே ஓராயிரக்கணக்கானோர் கூத்தாடுகிறோம். சத்தத்தில் சுற்றிவர என்ன நடக்கிறது என்றறியாமல் திளைக்கிறோம். புறத்தோற்றத்தில் ஆடையின் நிறத்தில் மயங்குகிறோம். கேட்பதற்கு ஜென் தத்துவம் போல் ஜேகே சொற்பொழிவு போல் குழப்பம் ஏற்படலாம். படம் பார்த்தால் தெளிவு பிறக்கும்.

Sleepless_Night_Thoonga_Vanam_Kamal_nuit_blanche

விமர்சனம் + அபிப்பிராயம் ≠ நம்பிக்கையின்மை

சொல்வனம் – வெ.சா. நினைவாக இதழ்

வெளியிட்டிருக்கிறது. அதை முன் வைத்து…

“என் அனுபவம் என்பது நான் எதை பொருட்படுத்த ஒப்புக்கொள்கிறேன் என்பதைப் பொறுத்தது. நான் கவனிக்கும் பொருட்கள் மட்டுமே என் சிந்தையை வடிவமைக்கிறன.”
மனவியல் கொள்கை: வில்லியம் ஜேம்ஸ்

எடுத்த விஷயங்களில் உண்மையான கருத்துகளைச் சொல்வதால் அவநம்பிக்கையையும் சலிப்பையும் இடையறாத கடுமையுடன் வெளிப்படுத்தாமல் இருக்க குழந்தைகளுக்கும் குடுகுடுகிழவர்களுக்கும் மட்டுமே முடிகிறது. நடுவில் இருக்கும் நம் எல்லோரும் இரு புறமுமாக வடமிழுக்கும் போட்டியில் அறிவார்ந்த சிந்தனையையும் நப்பாசையையும் மோதவிட்டு பலப்பரிட்சை செய்கிறோம்.

நப்பாசை இல்லமல் செய்யப்படும் அறிவார்ந்த சிந்தனை என்பது வெறுமையை நோக்கி இட்டுச் செல்லும். அறிவார்ந்த சிந்தனையின் அடிப்படையில் எழாத நப்பாசை, முட்டாள்தனமான மூடநம்பிக்கை ஆகிவிடும்.

எதையெடுத்தாலும் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டிருப்பது விரக்தியில் கொண்டு போய் விடுகிறது. சூம்படைதல் என்றால் என்ன? நிர்க்கதியே கதி என்று எண்ணங்கொள்ளுவதும், அந்த கதியை மாற்ற முடியாது என்பது சப்பைக்கட்டு வாதங்களை முன்வைத்து தற்காத்துக் கொள்வதும் சூம்படைந்தவரின் குணம். வெற்று நம்பிக்கையில் எதிர்காலத்தில் நல்லதே நடக்கும் என்று நம்புவது எவ்வளவுக்கு எவ்வளவு அறிவிலித்தனமோ, அத்தனைக்கு அத்தனை சூம்படைந்தலும் பயனற்ற எதிர்வினையாக இருக்கிறது.

‘எல்லாம் நன்மைக்கே’ என்று நினைத்துவிட்டால், நாளைய விளைவுகளை நம் செய்கைகள் கொண்டு மாற்றலாம் என்னும் நம்பிக்கை அற்றுப் போகும். ஒரு குழுவாக, ஓரினமாக, தனி மனிதராக முன்னேற, அறிவார்ந்த சிந்தனையும் நப்பாசையையும் பூட்டிய இந்த இரட்டை மாட்டுச்சவாரி அவசியம்.

இதையெல்லாம் வெங்கட் சாமிநாதன் உணர்ந்து இருந்ததால்தான் தன்னுடைய கடுமையான விமர்சனத்தை தமிழ்ச்சூழலில் முன்வைத்தார். செடிக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அளவாக ஊற்ற வேண்டும். அப்போது மட்டுமே அந்தச் செடி தழைத்தோங்கி வளரும். அதிகம் ஊற்றினால் அழுகிவிடும். கொஞ்சமாய் ஊற்றிக் கொண்டிருந்தால், உள்ளே காய்ந்துவிடும். இதைத்தான் வெ.சா. செய்தார்.

தற்காலத்திற்கேற்ப இன்னொரு உவமையையும் பார்க்கலாம். வலைப்பக்கங்களுக்கு மேல்நிலை தரவுகளாக அந்தந்தப் பக்கங்களில் தலைப்பில் சில பகுப்புக்களையும் குறிச்சொற்களையும் தரவேண்டும். சரியான அளவில் தரவேண்டும். அளவுக்கதிமாக கொடுத்தால், கூகுள் / பிங் /யாஹூ போன்ற தேடுபொறிகள் குழம்பிப் போய் நிராகரித்துவிடும். மிகவும் குறைவாகக் கொடுத்தால், தேடுபவர்களுக்குப் பொருத்தமான விஷயமாக தேடல் முடிவுகளில், அந்த வலைப்பக்கம் வந்து சேராது.

எதற்காக இந்த இன்னொரு உவமை?

இன்று ஃபேஸ்புக்கின் தேர்ந்தெடுப்புகளுக்குக் கட்டுப்பட்டு தலைவணங்கி நாம் வாழ்கிறோம். ஃபேஸ்புக் நிரலி நமக்கு என்ன பிடிக்கும், நம்முடைய நண்பர்களின் செய்திகளில் எதைக் காட்டலாம்; செய்தித்தாள்களில் இருந்த எந்தச் செய்தியை நீங்கள் படிக்க வேண்டும் என்று முடிவெடுத்து வழங்குகிறது. ஃபேஸ்புக் போன்ற ஊடகங்களுக்கு சில குறிக்கோள் இருக்கிறது: மீண்டும் மீண்டும் வரவழைக்குமாறு தூண்டிலிட்டு, தன் பக்கங்களை மயங்கியிருக்க வைத்து, கட்டிப் போடுவது. அப்போது அவர்கள் எந்தவிதமான ரசனை உங்களுக்குப் பிடிக்குமோ அதனையேத் தீனி போட்டு, உரம் கொடுத்து வளர்த்தெடுப்பார்கள். நீங்கள் அறிவாளிதான்; ஆனால், நீங்கள் உபயோகிக்கும் பயன்பாட்டுச்செயலிகளும் நிரலிகளும் ஆழமில்லாத அறிவுக்கூர்மையற்ற மந்தை உலகிற்குள் உங்களை உழல வைக்கும்.

விமர்சகரின் பங்கு என்னவாக இருக்க வேண்டும்? அவரின் பணிகள் என்ன – ஈ.பி. வொயிட் சொல்லக் கேட்போம்: “எழுத்தாளருக்கு எது முக்கியமாகப் படுகிறதோ எதைக் குறித்துக் கவலை கொள்ள வேண்டும். எது அவரின் இதயத்தைத் துடிக்க வைக்கிறதோ, எது அவரின் சிந்தனையை மொய்ம்புறச் செய்கிறதோ, எது அவருடைய தட்டச்சு விசையை பொறி பறக்கச் செய்கிறதோ, அதைக் குறித்தெல்லாம் அக்கறை கொள்ளவேண்டும். எனக்கு அரசியல் குறித்து கருத்துச் சொல்லும் கடமை கிடையாது. சமூகத்தைக் குறித்து அச்சாவதில் எனக்கு பொறுப்பு இருப்பதாக உணர்கிறேன். ஏனோதானேவென்று மேம்போக்காக பட்டும் படாமல் இருப்பது எழுத்தாளருக்கு அழகல்ல; சுத்தமாக இருக்கவேண்டும். உண்மையைச் சொல்லவேண்டும்; உயிர்பெற்றெழுமாறு வார்த்தைகள் அமையவேண்டும்; முழுமையாகவும் துல்லியமாகவும் எழுதவேண்டும். தன் சஹிருதயரை உயர்த்த வேண்டும்; கீழே இறக்கக் கூடாது. எழுத்தாளர் என்பவர் வெறுமனே வாழ்க்கையை பிரதிபலிக்கவும் பொருள் கொள்ளவும் எழுதுபவர் அல்லர்; உயிரை உணர்த்தவும் வாழ்க்கையை வடிவமைக்கவும் போராடுபவர்.

தன் சமூகத்தை, தன்னுடைய உலகத்தை எழுத்தின் மூலமாகப் புரிந்து கொள்ள வைப்பது முதல் கடமை. அதே சமயம் உத்வேகம் தரவேண்டும்; வழிகாட்டியாகவும் ஒளிபாய்ச்சவேண்டும்; சவால்களுக்கு அறைகூவல் விடுத்து பிசகு சொல்லி ஆஷேபணைகளை எழுப்பதுவும் ஆகும்.

எழுத்தாளரின் பாத்திரம் என்பது பாதுகாவலர் போல், காப்பாளர் போல்… எனலாம். அறிவியலும் தொழில்நுட்பமும் அந்தப் பொறுப்பை அதிகப்படுத்தியிருக்கிறதேயொழிய மாற்றவில்லை. எழுதும் பணியைச் செய்யும் செயலாளராக என்னைக் கருதும் நான், நம்மை வசியப்படுத்தும் எதையும் பாதுகாக்கும் பணிக்கு நியமிக்கப்ப்பட்டிருக்கிறேன். அதிசயிக்கப்படும் அந்த வஸ்து எத்தனை சின்னஞ்சிறியதாக இருந்தாலும், காணாமல் போகாமல் பத்திரமாகப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்திருக்கிறார்கள். சொக்கவைக்கும் எதுவும் தொலையாமல் காவல் காக்கிறேன் என்று இதையெல்லாம் எளிதில் தெரிவிக்கமுடியாது.”

வெ.சா.வின் கருத்துலகை சுந்தர ராமசாமி நான்கு பகுதிகளாகப் பிரிக்கிறார்:

1. நமது இலக்கியம், கலைகள், தத்துவம், சிந்தனை ஆகியவற்றின் நேற்றைய, இன்றைய நிலைகளை ஆராய்ந்து அவற்றின் வெறுமையை அம்பலப்படுத்தும் கருத்துகள்.

2. இலக்கியம் பற்றியும் பிற கலைகள் பற்றியும் தன் பார்வையை முன்வைக்கும் கட்டுரைகள்.

3. கலைஞனின் இயக்கத்திற்குச் சூழல் ஆற்றும் பங்கு.

4. கலை உலகை ஊடுருவி உண்மைக்கு எதிராக இயங்கும் சக்திகளைப் பற்றிய விமர்சனம்.

கலைப் பார்வைக்கும் தொழில்திறனுக்குமுள்ள வேற்றுமையை வற்புறுத்தி, தொழில்திறனை அதற்குரிய ஸ்தானத்தில் பின்னகர்த்தி கலை உணர்வுகள் செழுமைப்படும் சூழ்நிலையை உருவாக்குவதே வெ.சா.வின் ஆதார முயற்சி.

இதை முன்வைத்து வெங்கட் சாமிநாதனைக் குறித்த விமர்சனங்களை நான்கு மேற்கோள்களில் வகுக்கலாம்:

1. உள்வட்டம் x வெளிவட்டம்: ஹண்டர் எஸ் தாம்ஸன்: “புறநிலையில் இயங்குவது என்பது போன்ற பம்மாத்து எதுவும் இல்லை. புறவயமான கருத்தியல் என்ற சொற்றொடரின் அடிப்படையில் ஆடம்பரமான முரண்பாடு இருக்கிறது.”

2. ஆளுமை / நான் என்னும் அகங்காரம்: ஜே டி சாலிங்கர் குறித்து டேவிட் ஷீல்ட்ஸ்: “தன்னுடைய படைப்பின் மூலமாக சாலிங்கர் என்னும் நாயக கதாபாத்திரமாக வாசகர் வரித்துக் கொண்டதை அவர் அதீதமாக கொழுந்துவிட்டெறியச் செய்தார். தன்னுடைய புனைவில் கண்டித்ததை, நிஜ வாழ்க்கையில் கொண்டாடிக் கொண்டிருந்தார்.”

3. எண்ணிக்கை / எண்ணங்களை எழுத்தாக்கும் திறமை: வன்னேவார் புஷ்: ”இது நம்முடைய கூட்டு நினைவகம். துல்லியமாகவும் இருக்க வேண்டும்; உத்தரவாதமும் ஏற்க வேண்டும். கலாச்சார மீத்தங்கலின் சாறெடுத்துத் தர வேண்டும்”

4. தீதும் நன்றும் பிறர்தர வாரா: மரியா பொப்போவா: ”மற்றவர்களைக் குறித்து என்னவெல்லாம் கட்டுக்கதைகளை நீங்களை கற்பனை செய்கிறீர்களோ, அவையனைத்தும் மற்றவர்களை விட உங்களின் கற்பிதங்கள் குறித்து அதிகம் உணர்த்தும்.”

வெ.சா. இணையத்தில் எழுதியதை வெங்கட்ரமணன் தொகுத்து இருக்கிறார். இந்தத் தொகுப்பில் மட்டும் 858 பதிவுகள் இருக்கிறது. அது தவிர இன்னுமொரு 858ஆவது அவருடைய அறுபதாண்டு காலப் பதிவுகளில் அச்சில், கையெழுத்தில் இருக்கும்.

அவர் எழுத வந்த ஐம்பதுகளும் அறுபதுகளும் எழுத்தாளர்களுக்கு பொற்காலம். திபெத்தில் இருந்து தலாய் லாமா ஓடி வருகிறார். சீனாவுடன் சண்டை; கல்கத்தாவில் எல்லோரும் சீன மொழி கற்கத் துவங்கும் அளவு பயம் மேலோங்கி இருந்த காலகட்டம். பாகிஸ்தானுடன் விதவிதமான போர்கள் எல்லாம் நடந்தது. லால் பகதூர் சாஸ்திரி வந்தார்; மறைந்தார். பதினைந்து வருடமாகத் தயாரிப்பில் இருந்த ‘முகல் ஏ அசம்’ வெளியாகிறது. இந்தியாவில் வெறும் பதினெட்டு சதவிகித மக்களுக்கே படிப்பறிவு இருந்த காலகட்டத்தில் வெ.சா. இலக்கிய உலகில் தன் விமர்சனங்களுடன் உள்நுழைகிறார்.

vesa_solvanam_Vesaa_Venakt

ஜெயமோகன் எழுதிய “வெ.சா-ஒருகாலகட்டத்தின் எதிர்க்குரல்” -இல் இருந்து:

இலக்கியமும் கலையும் அடைந்துள்ள நுண்மையையும் ஆழத்தையும் புறக்கணித்து விட்டு பெருவாரியான மக்களுக்கு என ஓர் இலக்கியத்தையோ கலையையோ உருவாக்கிவிடவே முடியாது என்று அவர் (வெ.சா.) வாதிடுகிறார். ராஜ்கபூரின் சினிமா ருஷ்யாவில் பரவலாக ரசிக்கப்படுவதைப் பற்றிப் பேசும் சாமிநாதன்:

”நம்மூர் முற்போக்குகள் (இது ஒரு விசித்திர ஜாதி) போதிக்கிற சித்தாந்தங்களைக் கொண்டு பார்த்தால் கோடிக்கணக்கான ரஷ்ய மக்களைத் தன்பால் ஈர்த்துள்ள ராஜ்கபூர்தான் ‘மக்கள் கலைஞர்’ ஆகவும் அக்கோடிகள் தாம் ‘பாட்டாளி மக்கள்’ எனவும் ட்ஸைக்கோவஸ்க்கியையும், ஐஸன்ஸ்டைனையும் புடோவ்கினையும், ஸாஸ்டகோவிச்சையும் ரசிக்கும், ஒரு சில ஆயிரம் ரஷ்யர்கள் ‘மக்களிடமிருந்து’ அன்னியப்பட்டு போன பூர்சுவா மேல்தட்டு வர்க்க உயர்குழுக்கள் எனவும் எனவே மக்கள் விரோதிகள்’ ஆகவும ஆகிவிடுவார்கள்” (இரண்டு தலைமுறைகளுக்கிடையில்கொல்லிப்பாவை” ) என்று கூறுகிறார்.

கலையின் இயல்பு மேலும் மேலும் நுட்பத்தையும் ஆழத்தையும் தேடுவதே. அது தன்னிச்சையானது. கலைஞனின் அக இயக்கத்தால் மட்டுமே முன்னெடுத்துச் செல்லப்படுவது. அதைக் கட்சிப்பிரச்சாரத்திற்கான கருவியாகப் பார்க்கும்போது அந்தத் தன்னிச்சையான இயக்கம் முற்றாகவே அழிக்கப்படுகிறது. அதன் பிறகு அமைப்பு உருவாக்கி அளிக்கும் கோஷங்களை எதிரொலிப்பதாக அது மாறிவிடுகிறது. இந்நிலையில் அந்தக் கலையும் இலக்கியமும் மனித இதயங்களைத் தீண்டி எழுப்பும் சக்தியை இழந்துவிடுகின்றன. எவரையுமே அவற்றால் ஈர்க்க முடிவதில்லை. ஆகவே அவை பரப்பியக் கலையின் கேளிக்கை உத்திகளைத் தாங்களும் ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கின்றன. தாங்களும் ஒருவகை பரப்புகலையாக பரப்பிலக்கியமாக மாறிவிடுகின்றன. முதல்வகைப் பரப்பிலக்கியம் வெறும் கேளிக்கை; இது பிரச்சாரம் கலந்த கேளிக்கை.

இந்த விவாதத்தின் விளைவாகவே சாமிநாதன் உள்வட்ட வெளிவட்டக் கோட்பாட்டுக்குச் செல்கிறார். … உண்மையில் சாமிநாதன் உள்வட்டத்தில் நிகழும் எந்த ஒரு கலையிலக்கிய உச்சமும் காலப்போக்கில் வெளிவட்டத்திற்கும் சென்று சேரும் என்றே சொல்கிறார். உள்வட்டத்து இலக்கியம்தான் வெளிவட்டத்தில் வெகுஜன வாசிப்புக்காக உருமாற்றம் கொள்கிறது. ஆகவே ஒரு சிறு வட்டத்திற்குள் நிகழும் இலக்கிய, கலைவளர்ச்சி என்பது அர்த்தமில்லாத ஒன்றல்ல. ஒரு சிறிய மக்கள் கூட்டத்திற்கு மட்டும் உரியதுமல்ல. அது அனைவருக்கும் உரியதுதான். அது மக்கள் விரோதமானதல்ல, அது மக்களுக்காகவே நிகழ்கிறது. இவ்வளவுதான் வேறுபாடு.

வெங்கட் சாமிநாதனின் வீச்சைப் பார்க்கும்போது கார்ல் சாகன் காஸ்மோஸ் தொடரில் சொன்னது நினைவுக்கு வருகிறது: “மனிதர்களால் மாயாஜாலம் செய்யமுடியும் என்பதற்கு புத்தகங்களில் ஆதாரம் இருக்கிறது. தட்டையான பொருள்; மரங்களால் தயார் ஆனது; ஆங்காங்கே கருப்புக் கிறுக்கல்கள் கொண்டது. ஒரேயொரு தரிசனம் போதும். இன்னொருவரின் மூளைக்குள் சென்றுவிடுவீர்கள். அவர் நேற்று இறந்தவராகக் கூட இருக்கலாம். ஆனால், இன்றும் அவர் உங்களுடன் உரையாடுகிறார். நேரடியாகவும்… அமைதியாகவும்…”

சொல்வனம் – வெ.சா. இதழ்

In Time – Movie Review

ஆண்ட்ரூ நிக்கல் (Andrew Niccol) என்னும் திரைப்படக்காரரை எனக்கு ரொம்ப நாளாகவேத் தெரியும். அமெரிக்கா வந்த புதிதில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெள்ளித்திரையில் சினிமா பார்த்துக் கொண்டிருந்தபோது, ’ட்ரூமன் ஷோ’ (The Truman Show) திரைப்படத்தை எழுதியவர் என்ற முறையில் எனக்கு ஆண்ட்ரு அறிமுகமானார். வாழ்க்கையே ஒரு நாடக மேடை. நாம் எல்லாம் எங்கிருந்தோ ஆட்டுவிக்கப் படுகிறோம். அதை தொலைக்காட்சிக்காக நிஜ நாடகமாக எடுத்தால் எப்படி இருக்கும் என்பதை இந்தக் கால ரியாலிடி தொடர்கள் வருவதற்கு ரொம்ப காலம் முன்பே திரையில் காண்பித்தவர்.

ஆண்ட்ரூவின் அடுத்த படம் எப்பொழுது வரும் எனக் காத்துக் கொண்டிருந்தேன். கொஞ்ச நாள் கழித்து கெடாக்கா (Gattaca) வந்தவுடன் ஆண்ட்ரூ சிந்தனையை எரியூட்ட வந்த ஜோதிப்பிழம்பாகவே தெரிந்தார். அதன் பிறகு Lord of War. நான்காண்டுகளுக்கு முன்பாக இவரின் சமீபத்திய படம் காலத்தே (In Time) வெளியானது.

‘Gattacca’ படம் எதிர்கால மக்களை குறித்தது. அறிவியல் புனைகதை வகையைச் சேர்ந்தது. வருங்காலத்தில் அனைத்து குழந்தைகளும் செயற்கை முறையிலேயே கருத்தரிக்கப்படுகின்றது. பிறக்கப்போவது ஆணா, பெண்ணா என்பது முதல், அறிவாளியா, விஞ்ஞானியா, விளையாட்டு வீரனா, அறிவியல் மேதையா, பங்குச்சந்தை வித்தகரா, எவ்வளவு வயது வாழலாம், என்ன கலர் கண், எவ்வளவு உயரம், முக்கிய உறுப்புகளின் அங்க அளவுகள் வரை அனைத்தும் தீர்மானிக்கப்பட்ட பின்பே செய்ற்கை முறையில் குழந்தை பிறக்கிறது. இவ்வாறு பிறப்பவர்களின் தகுதியை முன்கூட்டியே நிர்ணயித்து, என்ன வேலை, என்ன படிப்பு, எப்பொழுது ப்ரோமஷன் என்பது வரை கருவிலேயே அட்டவணை போட்டு பெற்றோர், பள்ளி, கல்லூரி, கம்பெனி, கோல்·ப் க்ளப் என அனைவருக்கும் அப்பாயிண்ட்மண்ட் கொடுத்து விடுகிறார்கள்.

இந்த மாதிரி செயற்கை குழந்தை வேண்டாம், இயற்கையான கருத்தரிப்பே வேண்டும் என்று பிறக்கும் குழந்தைகளுக்கு சமுதாயத்தில் மவுசு கிடையாது. ஈனப்பட்டவர்களை போல் பார்க்கப்படும் அவர்கள், தகுதியிருந்தாலும் தாழ்த்தியே வைக்கப் படுகிறார்கள். கதையின் நாயகன் இயற்கை முறையில் பிறந்தவன். வில்லனாக வருபவன் அவனுடைய தம்பி. செயற்கை முறையில் பிறந்தவன். முன்கதை சுருக்கம் போதும்.

கதையில் ஒரு காட்சி: அண்ணன், தம்பி இருவரும் சிறு வயது முதலே, ஆற்றில் நீச்சல் போட்டி நடத்திக் கொள்கிறார்கள். ஒவ்வொரு தடவையும் இயற்கை முறையில் பிறந்து சாதாரண மானுடர்களுக்கு வரும் நோய்களால் தாக்கப்பட்டு, கண் பார்வை குறைச்சலினால் கண்ணாடி போட்டுக் கொண்டு, மலேரியா முதல் ஜாண்டிஸ் வரை எல்லா வைரஸ்களும் குடியிருக்கும் அண்ணனே வெல்கிறான். அற்புதமான உடற்கட்டு, மனநலன், திரண்ட தோள்கள், நல்ல பாக்டீரியாக்கள் மட்டுமே உடலில் வைத்த செயற்கை தம்பி எல்லா நீச்சலோட்ட போட்டிகளிலும், அனைத்து வயதிலும் தோற்கிறான்.

எப்படி???

படத்தின் இறுதியில் தெரியவரும். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

Gattaca_Prisoner_His_Her_Cell_Movies_Niccol_Scifi

கெடாக்காவில் பேசப்படுபவை மூன்று விஷயங்கள்:

1. மரபுப் பொறியியல் (genetic engineering) வளர்ச்சி அடைவதால் வரும் விழுமிய மாற்றங்களும், அதனால் உண்டாகும் சட்டம் சார்ந்த சிக்கல்களும்
2. ஏற்றத்தாழ்வுகள் இன்று ’பணத்தால்’ ஏற்படுகிறது; இதுவே மரபணுவினால் ஏற்பட்டால்?
3. கடவுள் மனிதரைப் படைக்கிறார்; குறைகளோடு உண்டாக்குகிறார். அறிவியல் அந்தக் குறைகளை நீக்கி, கடவுளுக்கே கடவுள் ஆகிறது. மதம் போச்சு; விஞ்ஞானம் பீடம் ஏறுகிறது.

காலத்தே (In Time) படத்திலும் இதே போல் மூன்று கருப்பொருள்கள் உலாவுகின்றன:

1. விஞ்ஞான வளர்ச்சியினால் யாருமே முதுமை அடைவதில்லை. வயதானவர்கள் கூட இளமையாக இருக்கிறார்கள். ஆனால், நேரம் = பணம்.
2. ஏற்றத்தாழ்வுகள் இன்று ’பணத்தால்’ ஏற்படுகிறது; இதுவே நமக்கு நேரத்தினால் ஏற்பட்டால்?
3. இரண்டு படங்களுமே பிழற்ந்த உலகை, டிஸ்டோபிய சமூகத்தை முன்வைக்கிறது. மரபணு வளர்ச்சியினால், சௌக்கியமற்றவர்களும் சுகமடையலாம் என நினைப்பது யுடோப்பியா. மரபணு வளர்ச்சியினால், சௌக்கியமற்றவர்கள், மேலும் பலவீனமாவார்கள் என நினைப்பது.

காலத்தே (In Time) திரைப்படத்தின் உலகில் உள்ள எல்லோரும் தங்களுடைய இருபத்தைந்தாம் வயது வரை வழக்கம் போல் வளர்கிறார்கள். அவர்களுடைய 25ஆம் வயது நிறைந்தவுடன், அவர்களுக்கு ஒரே ஒரு வருடம் மட்டுமே ஆயுள் காலம் தரப்படும். அதன் பிறகு, தன்னுடைய ஆயுளை உழைத்து சம்பாதிக்கலாம்; பிறரிடமிருந்து திருடி எடுக்கலாம்; கடன் வாங்கலாம்; வங்கியில் சேமிக்கலாம்.

ஒவ்வொருவருடைய கையிலும் அவர்களுடைய ஆயுள்கணக்கு சின்னத்திரையில் காட்டப்படும். இன்னும் இந்த உலகத்தில் எவ்வளவு நேரம் பாக்கி இருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக எல்லோருக்கும் தெரியும். அந்த உலகில், உடலும் அங்கங்களும் மூப்பே அடையாது; மாறவே மாறாது. ‘என்றும் 25’ ஆக, இளமையாக ஜொலிக்கும். ஆனால், உரிய நேரத்திற்குள் அடுத்த நொடியை செலுத்திக் கொள்ளாவிட்டால், செத்துவிடுவார்கள்.

எவ்வளவு நேரம் கையில் வைத்து இருக்கிறோமோ, அத்தனைக்கு அத்தனை அவர் பணக்காரர்.

தற்போதைய அறிவியல் ஆராய்ச்சியின் படி மனிதனின் ஆயுளை அதிகரிப்பதற்கு எல்லாவிதமான சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன. சில காலம் முன்பு வரை சஷ்டியப்த பூர்த்தி கண்டாலே பெரிய விஷயமாக இருந்தது. இப்பொழுது ஓரளவு உடல் ஆரோக்கியத்துடன் ஆயிரம் பிறை காணுகிற சதாபிஷேகம் சாதாரணமாகி இருக்கிறது. இது இன்னும் 100 வயது, 120 வயது என அதிகரிக்கும். ஆனால், படத்தில் உள்ளது போல் தேகக்கட்டு செய்யும் வித்தையை விஞ்ஞானம் இப்போதைக்கு கண்டுபிடிக்கப் போவதில்லை.

படத்தின் கதாநாயகனாக ஜஸ்டின் டிம்பர்ளேக் (Justin Timberlake) நடித்திருக்கிறார். கொஞ்சம் அடிதடி; நிறைய துள்ளல்; அவ்வப்போது காதல் பார்வை என செவ்வனே தனக்கு இடப்பட்ட வேலையை நிறைவேற்றுகிறார். இவருக்கு அம்மாவாக, அவரை விட எடுப்பான தோற்றத்துடன் ஒலிவியா (Olivia Wilde) வருகிறார். திரைப்படத்தில் அம்மாவாக நடிக்கும் ஒலிவியா, மகனாக நடிக்கும் ஜஸ்டின் டிம்பர்ளேக்கை விட மூன்று வயது சிறியவர். அப்படியானால், இந்தப் படம் எவ்வளவு பசுமையாக இருக்க முடியும் என நினைத்துப் பாருங்கள்!

நிஜத்தில் திரைப்பட நடிகர்கள் இளமையாக இருந்தாலும், அவர்கள் வாழும் சூழல் நரகம் போலவே காண்பிக்கப்படுகிறது. பஞ்சத்தில் வாடும் தினப்படி மனிதர்களைக் காட்டுகிறார்கள். தினசரி உழைக்க வேண்டும்; அதற்கு இருபத்து நான்கு மணி நேரம் சம்பளம் தரப்படும். மீண்டும் அடுத்த நாள் உழைக்க வேண்டும். உழைக்காவிட்டால் செத்துவிடுவோம்.

ஆனால், பணக்காரர்களுக்கு அந்த நிலைமை அல்ல. அவர்கள் கோடி கோடியாக மணித்துளிகளை வங்கியில் சேமித்து வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஏழு மணி நேரம் நிம்மதியாக உறங்குவார்கள். ஒவ்வொரு சாப்பாட்டையும் ருசித்து புசிக்கிறார்கள். அவசர அவசரமாக ஓடிக் கொண்டே வாழ்க்கையை நடத்துவதில்லை. நேரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் செலவழிக்கிறார்கள்.

அந்தப் பணக்காரர்கள் ஏழு கண்டம் தாண்டி வசிக்கிறார்கள். அந்த இடத்துக்குப் போவதற்கு பல்லாண்டுகள் செலவாகும். அவ்வளவு நேரம் எந்த உழைப்பாளியின் கையிலும் கிடையாது. எனவே, பாட்டாளிகள் தங்களுடைய தொழிற்சாலை நகரத்திலேயே உழலுகிறார்கள். அவர்களை அவ்வாறு கீழ்மையான நிலையில் வைத்திருக்கும் செல்வந்தர்கள், வேறொரு தூரத்து சொர்க்கத்தில் நிம்மதியாக நடமாடுகிறார்கள்.

திடீரென்று ஒரு நாள் செல்வந்தபுரியில் இருக்கும் நூறாண்டுகளைக் கையில் வைத்திருக்கும் ஹென்ரி என்பவருக்கு வாழ்க்கை போரடித்து விடுகிறது. இத்தனை நேரத்தை வைத்துக் கொண்டு சுதந்திரமாக எங்கும் சென்று வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க முடியவில்லையே என எல்லாமே அனர்த்தமாக உணர்கிறார். தன்னுடைய நூறாண்டு கால ஆயுளை, கதாநாயகனுக்குள் செலுத்திவிட்டு, இறந்துவிடுகிறார்.

இந்தத் தருணத்தில் ஹென்றி ஹமில்டன் பேசும் வசனம் சிந்தனையைத் தூண்டுமாறு இருக்கிறது:

ஹென்றி: “சிலர் அமரராக வாழ, பலர் இறக்க வேண்டும்.”
ஜஸ்டின்: “ஒரு எழவும் புரியலே!”
ஹென்றி: “உனக்கு நெஜமாவே புரியலே… இல்லியா? எல்லோரும் என்றென்றும் வாழ முடியாது. எங்கே வச்சுப்போம்? எதற்காக தடைக்கற்கள் போட்டு ஏழெட்டு அடுக்கு தாண்டி இருக்கும் தூரத்து ஊர்களை உண்டாக்கி அங்கே தங்கி இருக்கோம்? அனுதினமும் சேரியில் வாடகையும் அத்தியாவசியப் பொருளும் விலை உயர்ந்துண்டே இருக்கே… ஏன்? வாழ இயலாமல் குடிமக்கள் சாகணும். அப்பொழுதுதான் நான் வைத்திருக்கும் மில்லியன் பத்திரமா என்கிட்டயே இருக்கும். உனக்கு தினசரி கவலை மட்டுமே மிஞ்சி இருக்கும். உண்மையைச் சொன்னா… எல்லோருக்கும் வேணுங்கிற அளவு இங்க எல்லாமே நிறைஞ்சிருக்கு. யாருமே அகாலமா சாக வேண்டாம். என்னிடம் இருக்கும் இத்தனை ஆண்டுக்காலம் என்னும் அரியபொருள், உன்னிடம் இருந்தால், நீ என்ன செய்வாய்?”

அதன் பிறகு ஜஸ்டின் என்ன ஆகிறான்? எவ்வாறு உலகை மாற்றப் பார்க்கிறான்? நேரம் பறிபோகாமல் எப்படி முழுக்க உபயோகிக்கிறான்? அதனால் நேரும் விளைவுகள் என்ன என்று படம் தொடர்கிறது.

பிலிப் கே டிக் புத்தகத்தைப் படிப்பது போல் இருக்கிறது. ‘நேரமே இல்லை… நான் ரொம்ப பிஸி!’ என்கிறேன். குழந்தையோடு உல்லாசமாக காலம் போக்க அவகாசம் கிடையாது. அலுவலில் ஏதாவது உதவி கேட்டால், தட்டிக் கழிக்கிறேன். கொஞ்சம் வரும் நாயை புறந்தள்ளுகிறேன். சவரம் செய்ய நேரம் கிடைக்கவில்லை. காரோட்டிக் கொண்டே காலை உணவு. வேலை விஷயமாக தொலைபேசிக் கொண்டே மதிய உணவு. டிவி பராக்கு பார்த்துக் கொண்டு இரவு உணவு.

உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் எந்தவொரு சிரமமும் இன்றி ஆயிரமாயிரம் ஆண்டு காலம் வாழ முடியும் என்னும் உலகை இந்தப் படம் கற்பனை செய்கிறது. மனிதனின் நச்சுப் பொருள் உள்ளீட்டால் உண்டாகும் உலக வெம்மையாக்கம், உணவுப் பொருள் விலையேற்றம், புவிமாசுபடுதல், நிலத்தில் வாழ இடமில்லாமல் போகுதல் போன்ற அச்சுறுத்தல்களால், ஏழைகள் உழைப்பாளிகளாக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள். உலகெங்கும் இப்பொழுதே ஏழு பில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இப்படியே வளர்ந்து கொண்டிருந்தால் என்னாவது?

In_Time_Movie_Justin_ArmClock_Watch

காலத்தே (In Time) திரைப்படத்தில் எல்லாவற்றுக்கும் நேரம் மட்டுமே மூலதனம். காபி வாங்க வேண்டுமா? நான்கு நிமிடம் கொடுக்க வேண்டும். கார் வாங்க வேண்டுமா? அறுபது ஆண்டுகள் கொடுக்க வேண்டும். அதெல்லாம் நன்றாக இருக்கின்றன. ஆனால், ஒரு மாமியார் – மருமகள் பிரச்சினையே சமாளிக்க முடியாமல் அல்லாடும் பலரை எனக்குத் தெரியும். இந்தத் திரைப்படம் சித்தரிக்கும் காலத்தில், பத்து பாட்டிகள், அவர்களின் மாமியார்கள், அவர்களின் மருமகள்கள் எல்லோரும் ஒன்று கூடும் இடத்தில் நடக்கும் வம்புகளையும் அரங்கேறும் கலகங்களையும் கிரேசி மோகன் நன்றாக படம் பிடித்திருப்பார். ’இன் டைம்’ பட இயக்குனர் நிக்கோல் தவறவிட்டுவிட்டார்.

அது மட்டுமல்லா. வேறு சில குழப்பங்களும் படத்திலும் உண்டு.

அரிதான விஷயங்களுக்கு நிறைய செலவு செய்ய வேண்டும் என்பது உண்மை. தொப்பை போட்ட பணக்காரர் போல் நீண்டிருக்கும் தொலைக்காட்சிகளில் இருந்து தட்டையான டிவி தோன்றிய போது, எக்கச்சக்கமாய் பணம் கேட்டார்கள். மடிக்கணினி என்பது அலுவலில் கொடுத்தால் மட்டுமே கட்டுப்படியாகும் என்று இருந்த காலமும் நினைவில் இருக்கிறது. செங்கல் போன்ற செல்பேசிகள் கூட ஆயிரக்கணக்கான டாலர் விலை வைத்து விற்கப்பட்டதை பார்த்திருக்கிறேன். வயாக்ரா போன்ற சொகுசு மாத்திரைகள் எட்டாக்கனியாக இருந்த காலமும் உண்டு. ஆனால், நாளடைவில், அந்த நுட்பங்கள் சல்லிசான விலையில் பலருக்கும் அனுகூலமான இடத்தில் நிறைய விற்பனையாகும் பண்டம் ஆக மாறுகிறது.

’இன் டைம்’ படம் இதைக் கருத்தில் கொள்ளவில்லை. எப்போதும் நேரம் என்பதும், மரபணுவில் நீண்ட காலம் வாழ்வதும் கொடிய விலை கொடுத்து வாங்கும் பண்டமாகவே நிலைத்து இருக்கும் என்னும் கருதுபொருளை நினைக்கிறது. நிறைய விற்பனை ஆனால், நிறைய இலாபம்; நிறைய பேருக்கு விற்றால், இன்னும் நிறைய இலாபம் என்று எண்ணும் முதலிய சூத்திரம் கொண்ட நாட்டில் இது போன்ற கொள்கை செல்லுபடியாகாது.

அடுத்ததாக, நேரம் என்பது பண்டமாற்றூப் பொருள் அல்ல. ஒருவரிடம் இருந்து இன்னொருவர் கொடுத்தால்தான் சரிப்படும் என்று சொல்வது படத்திற்கு சுவாரசியமாக இருக்கும். ஆனால், நிஜத்தில் பொருத்தமாக இல்லை. வானத்தில் இருந்து மழை பொழிந்தால், அது என் மேல் ஒரு துளி, பக்கத்தில் இருப்பவனுக்கும் ஒரே துளி என எண்ணியெண்ணிக் கணக்கு பார்த்து விழுவதில்லை. மொத்தமாகப் பொழியும். எவ்வளவு நனைகிறோமோ, அவ்வளவு குளிர்ச்சி.

நண்பருடன் திரைப்படத்தை பார்த்து முடித்தவுடன் என்னிடம் கேட்டார்: “உனக்கு சோஷலிஸம் ரொம்பப் பிடிக்குமா? இருப்பவனிடம் இருந்து திருடி இல்லாதவனிடம் தானமாகக் கொடுக்கிறான். ஆனால், அவனிடம் இருந்து கொள்ளை அடிக்க திருடர்கள் இருக்கிறார்கள். வரிச்சுமையை அதிகரிக்க அரசாங்கம் இருக்கிறது. பொருளாதாரத்தை பலவீனமாக்கும் நிதி நிறுவனங்கள் திட்டம் போடுகின்றன. மார்க்சிஸத்தைப் பிரச்சாரம் பண்ணும் படம்!”

அவர் சொன்னது சரியே. தொழிலாளிகளின் ஒரே பலம் அவர்களுடைய உழைப்பு மட்டுமே என்று காரல் மார்க்ஸ் சொன்னார். அந்த உழைப்பை முடிந்த மட்டும் உறிஞ்ச முயல்வதே முதலாளித்துவத்தின் நோக்கம் என்றார். உழைப்பாளி உயிர் வாழத் தேவையானதையும், உழைக்க உந்துதல் வரப் போதுமானவரையும் — முதலியக்காரர் விட்டுவைப்பார் என்றார் மார்க்ஸ். காலத்தே (In Time) திரைப்படத்தில் அந்த முதலிய பலம் வெகு சிலர் கையில் இருக்கிறது. அவர்களுக்கு இருதயம் இருந்தாலும், இரக்கம் கிடையாது. அடிமைகளாக தங்களுடைய பாட்டாளி வர்க்கத்தை நடத்துகிறார்கள். ’மூலதனத்திற்கு இறப்பே கிடையாது; அதை வைத்திருப்போர் இறக்கலாம்’ என்றார் மார்க்ஸ். ‘நேரம் போவதே தெரியாது; அதை பயன்படுத்தத் தெரியாதவர்தான் ஏழைகள்’ என்கிறார் இயக்குநர் நிக்கொல்.

in_Time_is_power_Money_Justin_Timberlake_Movie_Niccol_Films_Scifi_25_Clock_Watches

காட்டுக்கு எறித்த நிலா

பெண் அழகு.
பெண்ணின் கண் அவளினும் அழகு.
அவளின் கண்ணில் ஒளிரும் வெளிச்சம் எல்லாவற்றிலும் அழகு.
அந்த வெளிச்சம் நிலாவில் இன்று காணக் கிடைத்தது.

முழு சந்திரன் இருந்தார். அப்புறமாக அவரைக் கொஞ்சம் கொஞ்சமாக ராகுவும் கேதுவும் விழுங்க ஆரம்பித்தார்கள். வெள்ளை நிலா, கறுப்பு வானத்தில் மறையத் துவங்கியது. ஆனாலும், பால் நிலாவின் வெளிச்சத்தில் முக்கால் பிறை கிருஷ்ணபஷம் போல்தான் தோன்றியது. அந்தக் கரிய நிறம், மெள்ள சிவப்பாக மாறி, செந்நிற வட்டமாகி விட்டது.

வீட்டின் எல்லா விளக்கையும் அணைத்துவிட்டு, பின் வாயில் வழியாக அந்த தகதகக்கும் சிவப்பு சோமனைப் பார்க்கின்ற வேளையில், மரத்தில் இருந்து ஏதோ பறவை ‘கெர்… கெர்’ என்று தன் துணையை அழைத்து அதே வட்ட நிலாவை தன்னுடைய தோழிக்கும் காட்டிக் கொண்டிருந்தது.

ஜெயமோகன் சொன்னது நினைவிற்கு வந்தது: “யாராவது இயற்கையை ரசிக்கும்போது, ‘அப்படி இருந்தால் நல்லாயிருக்கும்… நான் போனமுறைப் பார்த்தப்ப இன்னும் நல்லா இருந்துச்சு! இந்த சமயத்தில் கூடவே அது இருந்திருக்கணும்’ என்று ஒப்பிடாமல், ரசிக்கும்படி, அந்தப் பட்சியிடம் வேண்டிக் கொண்டேன். அவர்களும் மௌனமாக, அந்தச் சுடரை விழுங்கத் தொடங்கினார்கள்.

இத்தனை நாட்சத்திரங்கள். அமைதியாக உலாவும் வாவு. இத்தனையும் எப்போதும் காணக்கிடைக்க கண்.

எதிர்கொள்ளூ ஞாலந் துயிலாரா தாங்கண்
முதிர்பென்மேன் முற்றிய வெந்நோ யுரைப்பிற்
கதிர்கண் மழுங்கி மதியு மதிர்வதுபோ
லோடிச் சுழல்வது மன்

eclipse-moon-4-4-2015-Lunar_Blood_Red

பெரியாரும் பணமும்

பெரியாரும் பாசிசத்தின் கூறுகளும் என்று பி.ஏ.கிருஷ்ணன் எழுதியிருக்கிறார்.

தமிழகத்தில் பெரியார் எப்படி இவ்வளவு பெரிய ஆளுமையாக இருக்கிறார்?

இந்தக் கேள்விக்கு விடையாக, கீழ்க்கண்ட தகவல்கள் தேவையாகின்றன:

  1. தமிழ்நாடு அரசுத்துறையில் எவ்வளவு நூலகங்கள் இருக்கிறது?
  2. தமிழில் எத்தனைப் பதிப்பகங்கள் இருக்கின்றன?
  3. ஒரு பதிப்பகத்தில் இருந்து எத்தனை பெரியார் புத்தகங்கள் (எவ்வளவு ஆசிரியர்களின் பெயர் போட்டு) வருகின்றன?
  4. ஒவ்வொரு வருடமும் (அல்லது எப்பொழுதெல்லாம் லைப்ரரி ஆர்டர் கொடுக்கிறதோ, அப்பொழுதெல்லாம்) தமிழக அரசு எவ்வளவு கோடியை பெரியார் புத்தகங்களுக்காக ஒதுக்குகிறது?
  5. பஞ்சாயத்துதோறும்  நூல் நிலையம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டபோது எவ்வளவு பணம் புத்தகங்களுக்காக திட்டமிடப்பட்டது? அவை எந்த / எவ்விதமான நூல்களை வாங்குவதற்காக செலவிடப்பட்டன?
  6. பெரியார் நினைவு சமத்துவபுரம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், போன்று தமிழ்நாட்டில் எத்தனை திட்டங்கள் இருக்கின்றன?
  7. பெரியார் உருவப்படங்கள் திறப்பிற்கு எவ்வளவு செலவிடப்படுகின்றன? ஆண்டுதோறும் வேறு எவர் எவர், பிறந்தநாளை முதலமைச்சரும் மந்திரிகளும் வலுக்கட்டாயமாகக் கொண்டாடுகின்றனர்?
  8. ஈ.வெ.ரா. பெயரில் எத்தனை விருதுகள் இயங்குகின்றன? தாழ்த்தப்பட்டவர்களுக்கான கல்வி உதவித்தொகைகளும் பள்ளிப்படிப்பிற்கான ஸ்காலர்ஷிப்களும் அவருடைய பெயரின் தலைப்பில் இயங்குவதைப் போல் வேறு எவருக்காவது நடத்தப்படுகிறதா?
  9. எத்தனை சாலைகள் அவருடைய பெயர் தாங்கி இருக்கிறது? எத்தனை இடங்களில் ஒரே பெயர், பெரியாரின் பெயரை தன் தலைப்பில் வைத்திருப்பதால் குழப்பம் உண்டாகிறது?

பெரியார் நாமம் வாழ்க! பாசிஸ்ட் குரல் ஓங்குக!

Periyaar_EVR_Thanthai_Thandhai_EV_Ramasamy_Naicker_Ramasami

அச்சன் செருக்கு

A Father’s Pride | The Moth

நீல் கெமன் எழுத்துக்கள் சுவாரசியமானவை. இங்கே தந்தைமை குணத்தைப் பற்றி பேசுகிறார். உருக்கமான சொற்பொழிவில் சிரிப்பும் வருகிறது. நகைச்சுவைக்கு நடுவே அழுகைத்துளிக் கூட வந்துவிடலாம்.

அவர் சொல்லும் சமபவங்களில் சில என் வாழ்வில் நடந்திருக்கிறது. கிரிக்கெட் விளையாடும்போது, இரு அணிகளுக்கு ஆள் எடுப்பார்கள். புளியங்கொட்டை போல் உள்ளங்கைக்குள் அடங்கும் சிறிய விஷயத்தை இரு அணியின் கப்தான்களும் எடுத்துக் கொள்வார்கள். அதை ஒருவர், ‘எந்தக் கை’யில் வைத்திருக்கிறார் என்று இன்னொரு அணித்தலைவர் சொல்ல வேண்டும். சரியாகச் சொன்னால், முதலில் அழைக்க ஆரம்பிக்கலாம். தன் அணியில் எவர் விளையாடுவார் என்று ஒவ்வொருவராகக் கூப்பிடுவார்.

அவன் அந்த அணி; இவன் அந்த அணி என்று இரு பக்கமும் எல்லோரும் போய்விடுவார்கள். கடைசியில் இருவர் இருப்பார்கள். ஒரு பக்கம் சோடா பாட்டில் கண்ணாடியுடன் நான். இன்னொரு பக்கம், என்னைவிட நாலு வயது இளையவளான எதிர்வீட்டு இலச்சுமி. அப்போது, அவளைத் தேர்ந்தெடுத்து, என்னை விட்டுக் கொடுக்கும் பெருந்தன்மையாகச் சொல்வார் எதிரணியின் கேப்டன்.

கையில் திறன்பேசி இல்லாமலே, கற்பனைக் கோட்டையாக நகவிரலில் நகாசு செதுக்கி சிந்தனைவயப்பட்டிருக்கும்போது, ‘மொட்டை…. மொட்டை’ என்று எவரோ கதறுவது — கிணற்றுக்குள் இருந்து கூவுவது போல் அரசல்புரசலாகக் காதில் விழும். நிமிர்ந்து பார்த்தால், டென்னிஸ் பந்து என்னை நோக்கி விரையும். அதை அவதானித்து, கீழே விழுந்தபின் தூர்தர்ஷனில் பார்த்த அவார்டுப் படத்தில் வாசலில் கோமூத்திரமும் சாணமும் போடும்வரை காத்திருந்து, பின் ‘பஷூ’ என்று அழைக்கும் மலையாளக்காரர் போல், ‘பந்து’ என்று சொல்லும்போது, “ஏண்டா… உன்னை எனக்குக் கொடுத்தாங்க” என்று திட்டும் அணித் தலைவரை நினைவுகூறும் சமபவம், இவருக்கும் நிகழ்ந்திருக்கிறது.

அவர்… பெரிய, முக்கியமான, புகழ்பெற்ற, விருதுகள் குவிக்கும் எழுத்தாளர். நான் இன்னும் உங்களுடன் பதிவில் பேசிக் கொண்டிருக்கிறேன்.

Neil_Gaiman-Freelancer

பிட்காயின் 101

பணத்தினால் வெற்றியை உருவாக்க முடியாது. ஆனால், பணத்தை உருவாக்கும் சுதந்திரத்தினால் வெற்றியைப் பெற்றுத் தர இயலும்.
நெல்சன் மண்டேலா

பிட்-காயினால் எதை வேண்டுமானாலும் வாங்க இயலும். ஒரு துண்டு பீட்ஸா முதல் அதிஆடம்பரமான விலையுயர்ந்த மாட மாளிகை வரை என்ன பொருள் வேண்டுமோ, அதை நீங்கள் பிட்காயினை (bitcoin) விலையாகக் கொடுத்துப் பெற்றுக் கொள்ளலாம். பிட்காயினின் மதிப்பு ஒரு சில டாலரில் துவங்கி ஆயிரக்கணக்கான ரூபாய் வரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கும். சில சமயம் பிட்காயின் பற்றிய தகவல்கள் துப்பறியும் நாவல் போல் இருக்கும்; பல சமயங்களில் பிட்காயின் பற்றிய சாத்தியங்களை அறியும்போது மின்சாரத்தைக் கண்டுபிடித்தபோது ஏற்படும் அதிசயம் உண்டாகும். ’தூணிலும் இருப்பான்! துரும்பிலும் இருப்பான்!!’ என இறைவரைச் சொல்வது போல், எங்கெங்கு காணினும் பிட்காயின் என பரந்த உலகின் இண்டு இடுக்கான பிரதேசங்களிலும் பிட்காயினைப் பார்க்கலாம். அதே சமயம் அதே இறைவரை எங்கும் கண்டறியமுடியாத பேதைமை போல், பிட்காயின் ஒளிந்துகொண்டு மறைபொருளாக இருப்பதையும் சுட்ட முடியும்.

பிட்காயின் என்றால் என்ன? எதற்காக இந்த பிட்காயின் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்?

இது கணியுலகு. இலக்கங்களும் எண்ணியலும் சார்ந்த உலகு. இந்த எண்ணியல் (digital) உலகிற்கான எண்ணியல் நாணயமாக பிட்காயின் இருக்கிறது. அரசல புரசலாக செய்தித்தாள்களை புரட்டி இருந்தால் கீழ்க்கண்ட செய்திகளைப் படித்து இருப்பீர்கள்:

1. மாலைமலர்: பிட்காயின் பயன்பாடு மோசடிக்கு வழிவகுக்கும்: இந்த நாணயத்தின் பயன்பாடு குறித்து எந்த நாடுகளும் தெளிவான ஒழுங்குமுறை விதிகளை இதுவரை வெளியிடவில்லை. இந்த நாணய முறைக்கென எந்த குறிப்பிட்ட விதிமுறைகளும் இல்லாமல் முதலீட்டுத் தயாரிப்பாக வளர்ந்து வரும் இதன் பிரபல்யம், மின்னணு பதிப்பின் மிகப் பெரிய முதலீட்டாளர் மோசடியாக வெடிக்கக்கூடும் என்ற கவலை அரசு அதிகாரிகளுக்கும், பொருளாதார நிபுணர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. சீனா மற்றும் பிரான்ஸ் நாடுகள் இந்த நாணயமுறைக்கு எதிராக முடிவெடுத்துள்ளது.

2. தினகரன்: பிட்காயின்: இந்தியர்களுக்கு ரூ.100 கோடி இழப்பு: கடந்த மாதம் இந் நிறுவனம் திவால் நோட்டீஸ் அனுப்பியது. இதன் கணக்கில் இருந்த சுமார் ரூ.3,000 கோடி மதிப்புள்ள 8 லட்சத்து 50 ஆயிரம் பிட்காயின்கள் திருடு போனதாக அறிவித்தது. பிட்காயின் வர்த்தகத்தில் இந்தியர்கள் உட்பட 1.27 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். இதில் ரூ.35 ஆயிரம் பிட்காயின் வைத்திருந்த இந்தியர்களுக்கு சுமார் ரூ.100 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

3. நாணயம் விகடன்: அமெரிக்காவை அல்லல்படுத்தும் புது மோசடி: பிட்காயின்… உஷார், உஷார்! : அமெரிக்க அரசாங்கமோ, இது முழுமை பெறாத அரைவேக்காட்டு சிஸ்டம். அமெரிக்காவுக்குள், பிட்காயின் பொருட்களுக்கு எதிராக மாற்றப்பட்டால் பண்டமாற்று சட்டம் அதைக் கண்காணிக்கும். யார் எத்தனை காயின் மாற்றுகிறார்கள், யாருக்குப் பணம் போனது என்று விசாரிப்போம் என்று எச்சரிக்கிறது அமெரிக்கா. இதுவும் தவிர, வருமானம், கேப்பிட்டல் கெயின்ஸ் டாக்ஸ் என்ற குழப்பமெல்லாம் வேறு இதில் நிறையவே இருக்கிறது.

4. தி ஹிந்து: பிட்காயின் = நாணயமான நாணயமா? – இராம.சீனுவாசன்: பிட்காயின் சட்டவிரோத நடவடிக்கை களுக்கும் பயன்படுவதாக அமெரிக்க காவல் துறை கண்டுபிடித்துள்ளது. சில்க் ரோட் என்ற இணையதளம் மூலம் சட்டவிரோத வியாபாரம் செய்த ஒரு நிறுவனத்தில் நடந்த சோதனையில் அவர்கள் 26 ஆயிரம் பிட்காயின்களை வைத்திருப்பது தெரியவந்தது. இதே போன்று மற்றொரு மெய்நிகர் பணம் 2006ல் உருவாக்கப்பட்டு பல சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதை அமெரிக்க அரசு கண்டுபிடித்து அழித்தது. இதனால்தான் இந்த மெய்நிகர் பணமான பிட்காயினை பயன்படுத்த வேண்டாம் என்று பல நாடுகள் கூறுகின்றன.

5. தினமணி: பிட் காயின்: ஓர் எச்சரிக்கை மணி – எஸ். ராமன்: பிட் காயின்கள் எந்த ஒரு பொருளாதார கட்டுப்பாட்டுக்கும் உள்படாத, ஊக வணிகத்தை மட்டுமே அடிப்படையாக கொண்ட கற்பனை கஜானாவில் பிறந்த நாணய மாற்று முறை. அந்த நாணய புழக்கத்திற்கு பின்னால், அறிவிக்கப்பட்ட நிஜ சொத்துகள் கிடையாது. அதன் மதிப்பில் ஏற்படும், யூகங்களுக்கு அப்பாற்பட்ட ஏற்ற தாழ்வுகளால்,அந்த நாணய மாற்று முறையை பின்பற்றுபவர்களுக்கு பெருத்த நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

இந்த பண பரிவர்த்தனை மூலம், போதை மருந்து கடத்தல் நடந்திருப்பதை கண்டுபிடித்த அமெரிக்க புலனாய்வு துறை, 28.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள பிட்காயின்களை பறிமுதல் செய்திருக்கிறது. போதை மருந்து கடத்தல் தவிர, 10 சதவீத அளவிலான சர்வதேச பிட் காயின் பண பரிவத்தனை, ஆன் லைன் சூதாட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. பல பாதுக்காப்பு வளையங்களையும் மீறி, பிட் காயின் கஜானாவில் சேமிக்கப்படும் தொகைகள், இணையதள கடத்தல் மூலம் களவு போய்க்கொண்டிருக்கும் நிகழ்வுகளுக்கும் குறைவில்லை.

இவ்வளவு பேர் பயமுறுத்தும்போது, ஓரிரு ஆக்கபூர்வமான பார்வையும் கிட்டியது:

அ) ஆழம்: பிட்காயின் என்றொரு அதிசயம்: இந்திய ரிசர்வ் வங்கி,‘வேண்டுமென்றால் உபயோகித்துக்கொள், பிரச்னை என்றால் என்னைக் கேட்காதே’ என்பது மாதிரியான வழிகாட்டுதலையே அளித்திருக்கிறது. இதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. 2013ல் ஒரு பிட்காயினின் மதிப்பு 16,000 ரூபாய். ஆனால் அடுத்த நாளே ஒரு ரூபாய் ஆனாலும் யாரையும் போய் கேட்கமுடியாது. .அதுமட்டுமில்லாமல் இதற்கு இவ்வளவு மதிப்பு இருக்கிறது என்கிற நம்பிக்கை அனைவருக்கும் இருக்கும் வரைதான் அந்த மதிப்பு தக்கவைக்கப்படும். (இது எல்லா பண்டங்களுக்குமே பொருந்தும்).
பிரசன்னா

ஆ) குங்குமம் : “பிட்காய்ன் என்ற மின்பணம்”: மறையீட்டுச் செலாவணி (CryptoCurrency) என்பது எண்ணியல் செலாவணியில் ஒரு நவீன வகை. நேரடியாக அல்லாமல் மறையீடுகளின் (Cryptography) அடிப்படையில் எண்ணியல் செலாவணியைப் பயன்படுத்துகிறது இது. I LOVE YOU என்பதை 143 என்கிறார்களே, அதுவே ஒரு மறையீடு தான். நடந்த பரிமாற்றம் Block Chain என்ற பகிரப்பட்ட பொது கணக்கேட்டில் பதியப்படும். இந்தக் கணக்கேட்டின் பிரதி பயனர் மென்பொருள் வைத்திருக்கும் அனைவரிடமும் இருக்கும். எந்தவொரு பரிமாற்றமும் நடந்த 10 நிமிடங்களுக்குள் உலகம் முழுக்க இருக்கும் பயனர்களின் கணக்கேட்டில் அது பதியப்பட்டு விடும்.
சி. சரவணகார்த்திகேயன்

மேற்கண்ட கட்டுரைகளைப் படித்தால், பிட்காய்ன் என்றால் என்ன, எப்படி அதைப் பெறுவது, எவ்வாறு அது உருவாகிறது என்பது தெரியவரும். சுருக்கமாக, பிடிகாயினின் ஆய பயன்கள் என்ன என்று பட்டியலிட்டால்:

  • சங்ககால பண்டமாற்றை தற்காலத்திற்பேற்ப இயக்கும் நவீன பணம்
  • தங்கத்தைப் போன்ற அசையா முதலீட்டுகளை நம்பாமல், பொருளுக்கேற்ற மதிப்பைப் பெற்றுதரும் நாணயம்
  • அமெரிக்காவின் டாலர், பெட்ரோல் பணம், ரிலையன்ஸ் பங்கு என்று வழக்கமாகக் கொழிப்போரைத் தவிர்க்கும் பரிமாற்றம்
  • நடுவே புகுந்து சேவைக் கட்டணம் விதிக்கும் தரகர்களும், வைப்பு நிதிக்குக் கூட மாதாந்திர கட்டணம் போடும் வங்கிகளையும் நீக்கும் சமச்சீர் உலகிற்கான மதிப்பீடு
  • ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பணத்தை நம்பகமாக மாற்றும் வலைச்சாதனம்
  • ஸ்கொயர், கூகுள் வாலெட் (Google Wallet), ஆப்பிள் பே (Apple Pay), பேபால் (PayPal) போல் இணையம் வழியாகவும் பெருநிறுவனங்களின் முதுகில் ஏறியும் சாதாரணர்களைப் பிணைக்க எண்ணாமல், தன்னார்வலர்களின் படைப்புத்திறனின் மூலமாகவும் தனிமனிதர்களின் கால்கோள் முயற்சிகளை ஒருங்கிணைப்பதாலும் உருவாகும் நாடுகளைக் கடந்த மெய்நிகர்நிதி (virtual currency)

பிட்காயின் எவ்வாறு மாறும், எப்படி முக்கியத்துவம் அடைகிறது என்பதற்கு தொலைபேசியை உதாரணமாகச் சொல்லலாம். துவக்க காலத்தில் தெருவிற்கு ஒரு தொலைபேசி இருக்கும். நான் கல்லூரிக்கு சென்றபோது, என்னுடைய பக்கத்துவீட்டிற்கு எதிர்த்த வீட்டிற்கு டிரங்க் கால் போட்டு, நான் ஐந்து நிமிடம் கழித்து அழைப்பதாகச் சொல்வேன். அவர்களும், என் வீட்டிற்குச் சென்று என் குடும்பத்தாரை அழைத்து வருவார்கள். ஐந்து நிமிடம் கழித்து, ஒரு நிமிடம் மட்டும் பேசிவிட்டு, வைத்துவிடுவேன். இப்போது எல்லோரின் கையிலும் செல்பேசி. எப்போது வேண்டுமோ, எப்படி வேண்டுமோ, அவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள்.

அதே போல், தனியொரு மனிதனுக்கு முக்கியத்துவம் தரும் சாதனமாக பிட்காயின் உருவாகிறது. ஒவ்வொருவரைத் தொடர்பு கொள்ள ஒவ்வொரு சாதனம் இருக்கிறது. சிலருக்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும். சிலருக்கு ஸ்னாப்சாட் மூலம் படம் போட வேண்டும். சிலருக்கு வாட்ஸ்ஸாப். வேறு சிலருக்கு ஃபேஸ்புக் தூதுவன். இதே போல் தனி மனிதனின் விருப்பத்திற்கேற்ற உலகை ‘பிட்காயின்’ உண்டாக்குகிறது. குடும்பத்திற்கு ஒரு வங்கிக் கணக்கு வைத்துக் கொண்டு, மொத்த வரவு-செலவுக் கணக்கை அந்த ஒரு நிறுவனத்தின் மூலம் திருப்தி செய்த காலம் காலாவதியாகிக் கொண்டு இருக்கிறது.

வங்கிகளின் சேவையைப் பெறவியலாமல் கோடிக்கணக்கானோர் இருக்கிறார்கள். சரியாகச் சொன்னால், உலகெங்கும் இருநூற்றைம்பது கோடி பேர்களுக்கு வைப்பகக் கணக்கு கிடைக்கவில்லை. அதாவது, இவர்களின் குடும்பத்தையும் சேர்த்துக் கொண்டால், கிட்டத்தட்ட ஐநூறு கோடி மக்களுக்கு வங்கி மூலமாக பணப் பரிமாற்றம் என்பது கற்பனையில் மட்டுமே சாத்தியமாகவுள்ளது. சேமிப்புக் கணக்கு துவங்க இயலாது. நினைத்தவுடன் வேண்டாம்; நூறு மைல் நடந்தாலும், நடப்புக் கணக்கை ஆரம்பித்து, சம்பளத்தை பாங்கில் போட முடியாது. தவணை அட்டைப் பெற முடியாது; கடன் அட்டைக்கு விண்ணப்பிக்க முடியாது.

இதில் ஒரேயொருவரின் கதையைப் பார்ப்போம்.

அகதியாக ஈரானில் புகலிடம் பெற்று, இலக்கியமும் அறிவியலும் படித்தவர் ஃபெரெஷ்டே ஃபொரோ (Fereshteh Forough). அதன்பிறகு 2012ல் தாய்நாடான ஆஃப்கானிஸ்தானிற்கே திரும்பச் செல்கிறார். ஆஃப்கானிஸ்தான் பெண்களை வறுமையில் இருந்தும் அடக்குமுறையிலும் இருந்து விடுவிப்பதற்காக ‘பெண்களுக்கான அடித்தள இணைப்பகம்’ (Women’s Annex Foundation) அமைப்பை நிறுவுகிறார். அந்த அமைப்பின் சார்பில் ஆஃப்கானிஸ்தானின் பல சிறுநகரங்களிலும், கிராமங்களிலும் மகளிருக்கான கணினிக் கல்வியும் ஆங்கிலப் பயிற்சியும் கொடுக்கும் பள்ளிகளை அமைக்கிறார்.

கணினியில் நிரலி எழுதுபவர் பெங்களூரூவில் இருந்தால் என்ன? காபூல் நகரத்தில் பணிபுரிந்தால் என்ன? ஒடெஸ்க் (oDesk.com), ஈலான்ஸ் (Elance.com), ஃப்ரீலான்ஸர் (Freelancer.com), ஸ்டாஃப் (Staff.com), டாப்டால் (TopTal.com) என இணையம் மூலமாக இத்தனை ரூபாய்க்கு இன்ன வேலை என்று செய்து முடிக்கத் தெரிந்தவர்களை ஃபெரெஷ்டே ஃபொரோ உருவாக்குகிறார். ரூபி, ஜாவாஸ்க்ரிப்ட், மருத்துவக் குறிப்புகளை எழுதுதல் போன்றவற்றிற்கு ஆஃப்கான் பெண்மணிகளைத் தயார் செய்கிறார். இவர்களால் நுணுக்கமான தகவல்களை மணிக்கணக்காக பொறுமையாகவும் பிழையின்றியும் கணினியில் உள்நுழைக்க இயலும். வீட்டில் இருந்தே வேலை பார்க்கக் கூடிய தொழில்களை இராப்பகலாக செய்ய முடியும். பயனர்களோடு சரளமாக ஆங்கிலத்தில் உரையாடி அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும் தெரியும்.

இருந்தாலும் வேலை கிடைக்கவில்லை. மேற்கண்ட வலையகங்களில் கடை விரித்தாலும், கொள்வாரில்லை. ஏன்?

இவர்களுக்கு எப்படி சம்பளம் கொடுப்பது? உழைப்பதற்கான ஊதியத்தை எவ்வாறு தருவது என்பது சிக்கலாக இருந்தது. பணத்தைப் பரிமாற, வங்கிக் கணக்கு தேவை. வங்கிக் கணக்கைத் துவக்குவதற்கு வங்கிகள் தேவை. இதுவோ தாலிபான் பிரதேசம். தாலிபானோ, உள்ளூர் தாதாவோ, வங்கிகளைக் கொள்ளையடிக்கும் தேசம். அப்படியே வங்கிகள் இயங்கினாலும், ஆண்களுக்கு மட்டுமே வங்கிகள் இயங்கும் தேசம். இஸ்லாமியச் சட்டங்களின்படி கட்டுப்பெட்டியாக பெண்களை வங்கிக் கணக்கு துவக்கவிடாத தேசம். ’மனைவிக்கு பணம் தருவதா!’ என்று பிடுங்கி வைத்துக் கொள்ளும் தேசம்.

இங்கேதான் பிட்காயின் உள்ளே நுழைகிறது. கையில் செல்பேசி இருந்தால் போதும். செல்பேசியில் ஒரு பணப்பை (wallet) செயலியை நிறுவினால் போதும். வேலை செய்தால் கூலி. நடுவில் மூக்கை நுழைத்து கமிஷன் அள்ளும் இடைத்தரகர்கள் கிடையாது. அரசாங்கத்தின் வருமானவரி கிடையாது. உள்ளூர் காவல்துறையின் லஞ்சங்கள் கிடையாது. அடியாள் தாதா/ரவுடி கும்பல்களுக்குத் தரவேண்டிய மாமூல் கிடையாது. அப்படி தரகுப்பணம், வருமானவரி எல்லாம் நீக்கினாலும் கணவனின் பறிமுதலும் கிடையாது. அத்தனை பணமும் உழைத்தவருக்கே முழுமையாகச் சென்றடையும்.

இந்த ஆஃப்கானிஸ்தானிய பெண்கள் எல்லாம் கணி வித்தகர்கள் இல்லை. கொந்தர்கள் இல்லை. அறிபுனை படித்துத் திரியும் வருங்கால யுடோபிய கற்பனாவதிகள் இல்லை. அவர்கள் வாழ்விற்கு ஆதாரம் பணம். அது பெருவதற்கான கருவியாக பிட்காயின் அமைந்திருக்கிறது. அவ்வளவுதான்!

இது மாதிரி ஐநூறு கோடி பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு பிட்காயின் வரப்பிரசாதம்.

அடுத்த பகுதியில் இந்த பிட்காயின் ஏன் நிலைத்து நிற்கும் என்பதையும், எவ்வாறு இயங்குகிறது என்பதையும், போலி நோட்டு அச்சிடுவது எவ்வாறு இயலாது என்பதையும், மோசடிகளை எவ்வாறுத் தவிர்க்கிறது என்பதையும் பார்ப்போம்.

நோக்குநூல்கள்:

1. The Age of Cryptocurrency: How Bitcoin and Digital Money Are Challenging the Global Economic Order by Paul Vigna and Michael J. Casey

2. Bit by Bit: How P2P Is Freeing the World by Jeffrey Tucker

3. The Book Of Satoshi: The Collected Writings of Bitcoin Creator Satoshi Nakamoto by Phil Champagne

4. Bitcoin: A Peer-to-Peer Electronic Cash System – Satoshi Nakamoto

சந்தேசமும் படைக்கலங்களும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

தொடர்ச்சியாக தொடர்பில் இருப்பதற்கு பல கருவிகள் வந்துவிட்டன. வாட்ஸ்ஸாப், நிலைத்தகவல், செல்பேசி அழைப்பு, ஸ்லாக் என தினுசு தினுசாக வந்துவிட்டாலும், அந்தக் கால கடிதம் போல், சுவாரசியமாக எதுவும் இருப்பதில்லை. நான் பழமைவிரும்பி என இந்தக் கால தலைமுறை நினைப்பார்கள்.

இந்தப் பதிவைக் கண்டேன்: http://www.jeyamohan.in/77515#.VceRGflViko

அதை நான் இவ்வாறும் பார்க்க நினைக்கிறேன். ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் துள்ளலோடு இயங்குபவர்களை இரு வகையாகப் பார்க்கிறேன். முதல் பிரிவினர் செய்தியைக் கொண்டு செல்ல விரும்புபவர்கள். இரண்டாம் பிரிவினர் அந்தச் செய்திக்கான கருவியை விரும்புபவர்கள்.

நான் இதில் இரண்டாம் ரகம். எனவே அந்தப் பிரிவைப் பற்றி எளிதில் விவரிக்க முடியும். எனக்கு ஃபேஸ்புக், டம்ப்ளர், லிங்க்ட் இன், டிவிட்டர் போன்ற சமூக வலையகங்கள் பிடிக்கும். அதில் சமையலைக் குறித்தும் பதிவு செய்கிறேன். இலக்கியத்தைக் குறித்தும் பதிவு செய்கிறேன். ஃபெட்னா போன்ற நிகழ்வுகளில் நடக்கும் விஷயங்களை பத்திரிகை நிருபர் போல் நேரடியாகச் சென்று பதிவு செய்கிறேன். கிசுகிசு, கிறுக்கல், கவிதை, கட்டுரை எல்லாம் பதிவு செய்கிறேன்.

ஃபேஸ்புக், வலைப்பதிவு போன்றவை எனக்கு ஆயுதமாக இல்லை. துணைக்கருவியாக உதவுகிறது. இன்றைக்கு சினிமா விமர்சனம் போட நான் இந்த இடைமுகத்தை நாடுகிறேன். நாளை சினிமா என்னும் வஸ்து தீர்ந்துவிட்டால், மின்விசிறிகளின் நுட்பவியல் என்பது குறித்து எழுத அதே இடைமுகத்தை – என்னுடைய கருவியாக வைத்துக் கொள்வேன்.

இதை புத்தக வெளியீட்டோடு ஒப்பிடலாம். அது ஒரு கருவி. நூல்வகைகளில் தன்முன்னேற்றம், குழந்தை வளர்ப்பு, ஜோசியம், வாஸ்து என்று பலவிதமாக அச்சுத்தாள்களை நிரப்ப புத்தகங்கள் பயன்படுகின்றன. அதே நூல்கள் பல மொழிகளில் வெளியாகின்றன. அமேசான் கிண்டில், மின் புத்தகம், தடி அட்டை என பல சாதனங்களில் கிடைக்கின்றன. இரண்டாம் வகையினருக்கு கருவி முக்கியம். உள்ளடக்கம் அவ்வளவு முக்கியமில்லை.

இப்பொழுது முதல் சாராரைப் பார்ப்போம்.

இவர்கள் ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களை ஆயுதங்களாகக் கருதுகிறார்கள். புத்தகத்தினால் புரட்சி ஏற்படுத்துவது, எழுதுவதினால் சமூகத்தில் மாற்றம் உண்டாக்குவது போன்றவற்றில் தீவிர ஆர்வம் கொண்டவர்கள். அந்த ஆர்வத்தை அவருடைய நம்பிக்கை என்று அவரை பின் தொடர்பவர்கள் எண்ணக்கூடும்.

என்னுடைய கார் நிறுத்தும் இடத்தில் திருகுகள், மரையாணிகள், திருப்புளி என நூற்றீபத்தியெட்டு விதமானக் கருவிகள் கொண்ட பெட்டி இருக்கும். இதனால் நான் மெக்கானிக் ஆகமுடியாது. என்னிடம் காடு மலைகள் ஏறுவதற்கான காலணிகள் இருக்கிறது. இதனால் நான் கடுமையான மலையேற்றங்களை மேற்கொள்பவன் என ஆகாது. என் வீட்டில் விலையுயர்ந்த பியானோ இருக்கும். இதனால் நான் இளையராஜா என எடுத்துக் கொள்ளமுடியாது.

இவ்வளவு ஏன்?

எனக்கு சி#, எச்.டி.எம்.எல். போன்ற நிரலிகள் எவ்வாறு எழுத வேண்டும் எனத் தெரியும். இதனால் நான் திறமையான நிரலாளர், வடிவான இணையத்தளங்களை உருவாக்குபவர் என்று சொல்லவியலாது.

கருவிகளைக் கையகத்தே வைத்திருப்பவர், திறமையானவர் என்று எப்படிச் சொல்ல முடியாதோ, அதே போல், ஃபேஸ்புக் போன்ற தளங்களில் புழங்குபவர் அவரவருக்கான தேர்ந்தெடுத்த துறைகளில் கரைகண்ட சாமர்த்தியசாலி என்றும் அறிய முடியவில்லை.

இதை இன்னொரு விதமாகவும் பார்க்கலாம். ஃபிலிம்ஃபேர் விருதுகள் அல்லது ஐபிஎல் துவக்க விழாக்களை பார்க்கும்போது இது எளிதில் தெரியவரும். இந்த விழாக்கள் பிரும்மாண்டமானவை என்பது மனதில் பதியவைக்கப்படும். பல முக்கியஸ்தர்களும், புகழ்பெற்றவர்களும், கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்கள் என்பது மீண்டும் மீண்டும் அல்லோல்லகல்லப்படும். கிரிக்கெட் பந்தயத்தில் எவ்வாறு போட்டி பலமாக நிலவுகிறது, அந்த ஆட்டம் எவ்வளவு சுவாரசியமாக இருந்தது என்பதை விட இடைவேளையில் எந்த கச்சேரி நடக்கிறது, எந்த நடிகர்கள் மேடையேறுகிறார்கள் என்பது முன்னிறுத்தப்படும். மோசமான சித்தாந்தத்தைக் கூட விலாவாரியான தயாரிப்பு வேலை முலாம் போடுவதால் மறைத்து, மட்டமான தயாரிப்பைக் கூட சந்தையில் விற்றுவிடலாம்.

ஃபேஸ்புக் கொந்தளிப்பாளர்களையும் இவ்வாறு சொல்லலாம். இவர்களுக்கு எந்த ஊடகத்தில் எவ்வாறு இயங்க வேண்டும் என்பது தெரிந்திருக்கிறது. பலவிதமான செல்பேசி அப்ளிகேஷன்களையும் திறன்பேசிக்கேற்ற முழக்கங்களையும் விளம்பரம் போல் எளிதில் விற்கமுடிகிறது. அதற்கு நிறைய நேரமும் தேவைப்படும். அதுவும் அபரிமிதமாக செலவிட இவர்களுக்கு வாய்ப்பு அமைந்திருக்கிறது.

ஃபேஸ்புக்கில் எப்பொழுது பதிவிட்டால், எவ்வளவு கவனம் பெறும்? எவ்வாறு பதில்களை இட்டால், மேலும் மேலும் மறுமொழிகளைப் பெறலாம்? எவ்வகையில் படங்களை அமைத்தால் பெரும்பாலோரின் விருப்பத்திற்கேற்ப கவர்ச்சிகரமாக விளம்பர வாசகம் போல் ஈர்க்கும்? மூன்று விநாடிக்குள் வீடியோவிற்குள் விழவைத்து பார்வையாளரை சுண்டியிழுப்பது எப்படி? வெகுஜன ஊடகங்களுக்கு எவ்வாறு இந்தச் செய்தியை கொண்டுசெல்வது? லைக்குகளையும் மறுமொழிகளையும் எங்ஙனம் பொறுக்குவது? பொதுநலச்சேவை என்னும் போர்வைக்குள் பதுங்கிக் கொண்டு, எவ்வாறு விவாதத்தை திசை திருப்புவது? – போன்றவற்றிற்கு இந்த முதலாம் ரகத்தினர் வழிகாட்டி எழுதுளவு தேர்ச்சிப் பெற்றவர்கள்.
—–

தங்களின் பதிவுகளுக்கு பதில் போடுவது போல், ’வெண்முரசு’க்கும் பதில் போட வேண்டும். அதற்கு இன்னும் நிறைய உழைப்பு தேவை.
அன்புடன்
பாஸ்டன் பாலா

Tamil Literary Magazines: Internet Publications

நம்முடைய கைபேசியிலோ, கணினியிலோ, இணைய இணைப்பு இல்லாத போதும் வாசிப்பதற்கு வசதியாக பதாகை இதழ் பிடிஎஃப் வடிவிலும் கிடைக்கிறது. அதைப் பற்றி சில குறிப்புகள்.

முதலில் உள்ளடக்கம்: இரண்டு மணி நேரத்திற்குள் வாசித்து முடிக்கும் அளவுதான் இருக்கிறது, வாரந்தோறும் வெளிவருவதால், இந்த சுருக்கமான 27 பக்க இதழ் என்று முடிவெடுத்திருப்பார்கள்.

மொழியாக்க கதைகள், சுவாரசியமான கட்டுரைகள், தொடர்கதையின் பகுதிகள் என்று எல்லாமும் கிடைக்கிறது. இந்த இதழ் வெளியானவுடன் ‘To Kill a Mockingbird’ கதை உருவான கதை வாசித்தேன். அந்தக் கட்டுரையை தமிழுக்குக் கொணர்ந்த உடனடித்தனமும் அந்த சம்பவங்களின் சுவாரசியமும் நம்முடைய இந்தியச் சூழலுக்கு எவ்வாறு பொருந்துகிறது என்று எண்ணிப் பார்க்க வைக்கும் உறுத்தாத மொழிபெயர்ப்பும் – இந்த இதழை முக்கியமாக்குகின்றன.

இனி *பிடிஎஃப்* புறத்தோற்றம் பற்றிய எண்ணங்கள்:

1. பிடிஎஃப் கோப்பின் முதல் பக்கத்தில் எந்த இதழ், எத்தனையாவது வெளியீடு, எப்பொழுது வந்தது போன்ற முகப்பு தலைப்புகள் எதுவும் காணக் கிடைக்கவில்லை.

2. இரண்டாம பக்கமாக – இம்பிரிண்ட் விவரங்களைப் போடலாம். யாரைத் தொடர்பு கொள்வது, எவ்வாறு படைப்புகளை அனுப்புவது, யார் இதை இணையத்தில் போடுகிறார்கள் என்றும் காப்புரிமை குறித்த விவரங்களையும் சேர்க்கலாம்.

3. தலைப்பிலேயே ஆசிரியர் பெயர் போடுவது உவப்பாக இல்லை. எழுதியவர் பெயரை – இன்னொரு எழுத்துருவிலும் (அல்லது சிறிய எழுத்து அளவில்); மொழியாக்கியவர் பெயரை மற்றொரு lineல் கொடுத்தால் – யார் படைப்பாளி என்பது தெளிவாகத் தெரியும்.

4. லூயிஸ் கரோலின் Alice’s Adventures in Wonderland நாவல் குறித்த பதிவு நன்றாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

5. சுட்டிகளை க்ளிக் செய்தால், அந்த தளத்தின் முகவரிக்கே செல்லுமாறு அமைக்கலாம். இப்பொழுது, காபி/பேஸ்ட் செய்துதான் அந்த உரல்களைச் சென்றடைய முடிகிறது.

7. Header and Footer போடலாம். ஒவ்வொரு பக்கத்தின் தலைப்பில், பதாகையின் இதழ் எண், எந்த நாளில் வெளியானது என்று சொல்ல வேண்டும். ஒவ்வொரு பக்கத்தின் அடியில் எந்தக் கட்டுரையை வாசிக்கிறோம் என்பதைச் சொல்லலாம்.

8. எல்லாக் கவிதைகளும் இடது பக்கமாக alignment கொண்டிருப்பதற்கு பதில், சிலவற்றை நடுவாந்தரமாக போடுவது, சிலதை வலதுபக்கமாக நெறிப்படுத்துவது என்று வித்தியாசமாக செய்தால், வாசகருக்கு ஆர்வம் அதிகரிக்கும்.

9. ஆக்கங்களின் பக்க இறுதியில், தொக்கி நிற்கும் கவிதை பத்திகளோ, கட்டுரையின் பாக்கி சொச்சங்களோ இல்லாமல், புதிய பாராக்கள், புதிய பக்கத்தில் துவங்குமாறு செய்யலாம்.

10. பார்டர் போட்டு கட்டம் கட்டலாம்.

நீங்கள் வாசித்துவிட்டீர்களா?

ரெட்டை வால் குருவி – திரைப்படம்

Titles_Arivumathy_Balu_Magendhira_director_Rettai-Vaal-Kuruvi_Movie_Films_Cinema

அந்தக் கால திரைப்படம், அக்கால வாழ்க்கை, எண்பதுகளின் உடைகளும் பாவனைகளும் என்று நொஸ்டால்ஜியாவில் மூழ்கினால், கைகொடுப்பதற்கு எப்பொழுதுமே பாலு மகேந்திரா இருக்கிறார்.

பள்ளிப்பருவத்தை திரும்பி பார்த்தால் ‘அழியாத கோலங்கள்’ கிடைக்கும். அந்தக் காலத்தில் ஸ்கூல் டீச்சரை நினைத்து ஏங்காத ஆண்கள், ரத்தம் உறிஞ்சாத கொசுக்கள் போல் காணக் கிடைக்க மாட்டார்கள்.

மூடுபனி’ இன்னொரு விதமான பழைமை நினைவுகளைக் கிளறும் கதை. அம்மா கோந்து; தாய்மையை மனைவியிடம் தேடும் குழந்தை மனதுடன் சிக்கல்களும் நிறைந்த பிரதாப் போத்தன் கிடைத்தார்.

இந்த trilogyஇன் மூன்றாம் வடிவமாக ‘மூன்றாம் பிறை’. வளர்ந்த, நாகரிகமான பெண், தன்னுடைய பால்ய கால, சிறுவயதிற்கு திரும்ப நேரிடுகிறது. அதை அப்படியே கொண்டாடி, குட்டிப்பாப்பாவாகவே வைத்திருக்கும், ரசிக்கும் கமல் கிடைத்தார்.

இதன் முழுமையான இறுதி வடிவமாக ‘ரெட்டை வால் குருவி’ திரைப்படத்தைப் பார்க்கிறேன்.

Rettai-Vaal-Kuruvi_Movie_Films_Cinema

இந்தப் படத்தின் துவக்கத்தில் வரும் ‘சுதந்திரத்தை வாங்கிப்புட்டோம்; அதை வாங்கி சுக்குநூறா உடைச்சுப்புட்டோம்’ பாடலில், பாலு மஹேந்திராவின் பிற்கால மனைவி மௌனிகா அறிமுகமாகிறார். இன்னொரு காட்சியில், ’மகராஜனோடு ராணி வந்து சேரும்’ என்று சதி லீலாவதியில் நாயகியான ஹீரா, ராதிகாவின் தோழியாக, ஹோட்டலில் உடன் சாப்பிடுபவராக எட்டிப் பார்க்கிறார். அந்தக் காலப் படங்களில், அந்தக் காலத்தில் பிரபலமாகாத பிரபலங்களின் அந்தக் கால தோற்றங்களை மேக்கப்பும் க்ளோசப்பும் இல்லாமல் பார்ப்பது, பாதி வெந்தும் வேகாத உருண்டோடும் மைசூர்பாகை சுடச்சுட வாயில் போட்டுக் கொள்வது போல் சுவையானது.

உதவி இயக்குநராக அறிவுமதி பணியாற்றி இருக்கிறார். பாஸ்டன் பக்கம் வந்தபோது விசாரித்து இருக்கலாம். தவறவிட்டுவிட்டேன்.

’தேவர் மகன்’ திரைப்படத்தில் “காத்துதாங்க வருது” என்று ரேவதி, திக்கித் திணறிப் பாடும் ‘இஞ்சி இடுப்பழகா’ பாடலுக்கு முன்னோடி போல் ‘திங்கார வேலனே… தேவா’ என்று காமெடி செய்கிறார்கள். எண்பதுகளில் வந்த படத்தில் கம்ப்யூட்டர் எஞ்சினியரிங் பற்றிய அசத்தலான டயலாக் வருகிறது. இனி யாராவது, “நீங்க எப்படி பிரொகிரமரா ஆனீங்க ப்ரோ?” எனக் கேட்டால், “ரெட்டை வால் குருவி படத்தில் ஓப்பனிங் சாங் முடிந்தவுடன் ஒரு விடலைப் பய சொல்வான். அதைக் கேட்டுத்தான்!” என்று தயங்காமல் பதில் சொல்லலாம்.

படம் முழுக்க எல்லோருமே சந்தோஷமாக இருக்கிறார்கள். பல் தெரிய, முகம் மலர்ந்து சிரிக்கிறார்கள். தானாகவே நடனமாடுகிறார்கள். பாடலைக் கேட்டால் உற்சாகம் அடைகிறார்கள். சாந்தமான துள்ளல் என்பதை குழந்தையின் கை கால் உதைத்து பொக்கைவாய் புன்னகையாகச் சொல்லத் தோன்றுகிறது.

படத்தில் இரு வீடுகள். பெரிய வீடு, அர்ச்சனாவின் வீடு. அந்த வீடு அந்தக் காலத்தில் மட்டுமல்ல, இந்தக் காலத்தில் கூட கனவு இல்லம். ’அஞ்சலி’ ரகுவரன் வருவதற்கு பன்னெடுங்காலம் முன்பே பந்தாவான, ஆனால் நடுத்தர வர்க்கத்தையும் பிரதிபலிக்கும் இல்லம். மினிமலிஸ்டிக் பொருள்கள். பார்த்து பார்த்து இருக்கும் அலங்காரம். ஐந்தாவது மாடியில் விசாலமான அறையும், திறந்த சமையல் வெளியும் கொண்ட அந்தப்புரம். வீட்டில் இருந்து பார்த்தால் தூய நதி (கூவம் தான்; அடையாறு அழுக்குதான்; ஆனால், தெளிவாக இருந்தது போல் கண்ணுக்குத் தெரியும் சென்னை). செக்ஸ் முடிந்தபிறகு பசிக்கு ஃப்ரிட்ஜைத் திறக்கும் தம்பதியினர். ’டூயட்’ பாட கதரி கோபால்நாத் சாக்ஸஃபோனில் ஜாஸ் இசைக்கிறார்.

அந்த வீட்டிற்கே பாந்தம் சேர்ப்பது ‘அர்ச்சனா’ கதாபத்திரம். “ஏன்யா…” என அவர் குழையும்போது பாதாம் அல்வாவை ஃபிரான்ஸில் கிண்டுவது போல் சுண்டியிழுக்கிறது. இந்த கதாபாத்திரம் ”மூன்றாம் பிறை”யின் சில்க் ஸ்மிதா போல் கவர்ச்சி கொண்டவள். ஆனால், ”மூடுபனி”யின் ஷோபா போல் இல்லத்தரசி பக்குவத்தில் இருப்பவள். பெஸ்ட் ஆஃப் எல்லா பாலு மகேந்திரா ஹீரோயின்ஸ்.

நான் பார்த்ததிலே இந்த துளசி கதாநாயகியைத்தான் ஏன் சிறந்தது என்று இப்படி சொல்கிறேன்?

Rettai_Vaal_Kuruvi_Archana_Mohan_Films_Balu_Mahendra_Songs_Cinema

இந்தக் கால மாந்தர் அணியும் பேண்டோரா போன்ற மரகதமும் மாணிக்கமும் பதித்த கல் வளையங்களை அன்றே அணிந்தவர் துளசி. அழகாக, நீட்டமாக, ‘இரண்டு குடங்களைக் கொண்ட தம்பூராவை மீட்டிச் செல்வதற்கான’ நாத தும்பிகளாக பின்னி, கருங்கூந்தல் கொண்டவர் துளசி. எப்பொழுதும் புடைவையிலே வலம் வருபவர். (அதற்காக, “அப்பொழுது கூடவா?” என்றால், அதற்கு பதில் இல்லைதான்) தலை நிறைய மல்லிகைப் பூ வைத்திருப்பவர் துளசி. தாயுமானவனாக கணவன் பின்னி விட தலை தருபவர் துளசி. பசியில் இருக்கும் கணவனுக்கு டைனிங் டேபிள் அமர்ந்து ஊட்டி விடுபவர் துளசி.

அதான்… சொல்லிவிட்டேனே… நொஸ்டால்ஜியாவிற்கு கை, கால், புருவம், இமை, பொட்டு, உதடு எல்லாம் வைத்தால் துளசி = அர்ச்சனா.

இரண்டாம் வீடு, சின்ன வீடு. அந்த வீட்டிற்கு, ராதிகா தலைவி. கள்ளக் காதலி. அம்மா இல்லாதவர். அப்பாவும் மைக்ரோ பருந்தாக கண்காணிக்கப் படாதவர். செக்ஸ் எஜுகேஷன் தேவையா என்னும் கேள்விக்கு பதில் சொல்லும் திராணி கொண்டவர் ’ராதா’ என்னும் ராதிகா கதாபாத்திரம். இன்றைய காலகட்டத்தில், பலான படம் பார்க்கத் தடை வரும் காலகட்டத்தில், இவ்வளவு தைரியமாக தொலைக்காட்சியில் முகம்காட்டி கருத்து சொல்லும் பெண்மணி என்பது மார்கழியில் மாம்பழம் கிடைப்பது போல் அரிய சீஸன்.

Rettai-Vaal-Kuruvi_Movie_Films_Cinema_Radhika_Mohan_Baalu_Mahendira

சில படங்களுக்கு பாடல்கள் பலம். சில படங்களுக்கு நாயகரோ, நாயகியோ பலம். சில படங்களுக்கு க்ளைமேக்ஸ் பலம். சில படங்களுக்கு சண்டைக்காட்சிகள் பலம். சில படங்களுக்கு மசாலா பலம். இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் – வசனம்.

’விஷயம் முடிஞ்சாப் போதுமே… அப்புறம் தொட வுடமாட்டியே…’ (துளசி)
’மூக்கும் முழியுமா… இல்ல! முழியும் முழியுமா!!’ (ராதா)
– ’ஒட்டிக்கறதுக்கு மட்டும் வர…’ (யாரா இருந்தால் என்ன… நிதர்சனம் : )
’நான் பார்க்காத வியாழக்கெழமையா கண்ணு!’ (பூக்காரி – பாட்டி)

இந்தப் படத்தில் விகே ராமசாமி பாடும் டைம்லியான பாடல்களை தனியாகப் பட்டியல் போட வேண்டும்:

குற்றம் புரிந்தவன்… வாழ்க்கையில் நிம்மதி கொள்வது என்பது ஏது!?
மன்மத லீலையை வென்றார் உண்டோ?
சட்டி சுட்டதடா…

இதில் கிடைத்த மற்றொரு விநோதமான பாடல் ‘பூனைக் கண்ணை மூடிக் கொண்டால் இருண்டு போகுமோ… மியாவ்… மியாவ்!’

பல மணிரத்னம் படங்களுக்கு இந்தப் படம் முன்னோடியாக இருந்திருக்கிறது. ”அக்னி நட்சத்திரம்” படத்தில் ‘என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா’ ஜனகராஜ் + வி கே ராமசாமி நகைச்சுவைக்கு, இந்தப் படம் கால்கோள் இட்டிருக்கிறது. ”ஓகே கண்மணி” படத்தில் லிவிங் டுகெதர், என்று கல்யாணம் ஆவதற்கு முன் சேர்ந்து வாழ்வதற்கான அஸ்திவாரங்கள், 1987ல் போடப்பட்டிருக்கிறது. கமல்ஹாசனின் எண்ணற்ற படங்களில் வந்த கிரேசி மோகன் ஸ்டைல் ஆள் மாறாட்ட பிரச்சினை நகைச்சுவை இங்கே வெள்ளித்திரை கண்டிருக்கிறது. காத்தாடி ராமமூர்த்தி போட்ட ‘அய்யா… அம்மா… அம்மம்மா’ நடை ஜோக்குகள் சரளமாக உருவப்பட்டு உலாவுகின்றன. நேற்றைய ஷங்கர் படமான ரஜினியின் ‘சிவாஜி’ படத்தில் டாக்ஸிக்குள் வேட்டி மாற்றும் நகைச்சுவை, இந்தப் படத்தில் தோன்றி இருக்கிறது.

காதலன்’ திரைப்படத்தில் எஸ்பிபி பாடியே கரைக்கும் “ஞாயிறு என்பது கண்ணாக” கூட இங்கே விகே ராமசாமியின் வெண்கலக் குரலில் “ஞாயிறு ஒளிமழையில் திங்கள் குளிக்க வந்தாள்” என்று ஒலிக்கிறது. அவரின் பாடல்கள் படம் நெடுக வருகின்றன.

மேலேயுள்ள பாட்டில் ‘சங்கர சங்கர சம்போ… இந்த சம்சாரி விஷயத்தில் ஏன் இந்த வம்போ?!’ என அவர் குத்தும்போது ‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி’ சிந்து நிழலாடுகிறது.

அந்தக் காலத்தில் தமிழ் நன்றாகப் பேசினார்கள். சேரியில் தமிழ் நன்றாக புழங்கியது. குடிசை வாழ் மக்களுக்கு ‘செக்ஸ்’ என்னும் வார்த்தைக்கு அர்த்தமே தெரியவில்லை. பாலுறவு என்றாலும் புரியவில்லை. கலவி என்றாலும் தெரியவில்லை. அந்தக் காலத்தில் தமிழ் கொச்சைப்படுத்தவில்லை. எல்லோரும் டிரேட் ஃபேர் சென்றார்கள். வீட்டிற்கு ஒரு சாலிடேர் டிவி வைத்திருந்தார்கள்.

கிடைக்காததை எண்ணி ஏங்குவது என்பது நொஸ்டால்ஜியா எனப்படும். திருமணம் ஆனபின் இன்னொரு பெண்ணுக்கு ஆசைப்படுவது என்பது ‘கோபி’த்தனம் எனப்படும். சைக்கிளில் டபுள்ஸ் போகலாம். ரங்கராட்டினம் சுற்றலாம். பாடகியுடன் ஊர் சுற்றலாம். தட்டிக் கேட்பார் கிடையாது. அதிகாரபூர்வ மனைவியின் ஒப்புதலும் உண்டு. குழந்தை ஒன்றுக்கிருந்தால் டயாப்பர் மாற்றும் சிக்கலும் கிடையாது. வேலையில் அரட்டையும் உண்டு. இப்படி எல்லாம் கற்பனையில் வாழ்வதுதானே சினிமா? அந்தக் செல்லுலாயிட் கற்பனையை தமிழ் முலாம் பூசி கலைப்படைப்பாகத் தருவதற்காகத்தானே பாலு மகேந்திரா!

ஐ மிஸ் நொஸ்டால்ஜியா அண்ட் அன்கரப்டட் வுமன். ஐ மீன்… ஐ மிஸ் பாலு.