G.O.A.T என்றால் ஆடு
அப்புறம் ஃபெடரரா? நடாலா??
எனக்கு நம்பி கிருஷ்ணன்.
எஸ். ராமகிருஷ்ணனால் பாடல் பெற்றவர்.
பி.ஏ. கிருஷ்ணன் மூலமாக அறிமுகம் ஆனவர்.
பாண்டியாட்டம், அவதரிக்கும் சொல், நரி முள்ளெலி டூயட் போன்ற நூல்களை எழுதியவர்.
சொல்வனம் என்றில்லாமல் பதாகை, தமிழினி, கனலி, வனம் என்று எல்லாவிடங்களிலும் விஷயதானம் வழங்குபவர்.
கோட் என்றால் ?
—> கோட்டம் – நம்பி தனக்கென நாடு வைத்திருக்கிறார். நாட்டம் பிடித்தவர்களை வாசிக்கிறார். விலாவாரியாக அனுபவிக்கிறார். நமக்கும் தருகிறார்.
—> கோட்டை – நம்பி அறிமுகப் படுத்திய டாவன்போர்ட் பற்றி இப்படிச் சொல்வார்கள். எட்கர் ஆலன் போ-வின் இறுதி ஊர்வலத்தில் கவிஞர் வால்ட் விட்மான் வருவார் குகையோவியங்களில் பிகாஸோ நடமாடுவார். எமர்சனும் தொரோவும் உரையாடுவார்கள்.
நம்பியின் அபுனைவுகளில் அந்தப் பாய்ச்சல் இருக்கும். ஒவ்வொரு பத்திக்கும் சில பல கூகுள் தேடல் தேவை. வார்த்தைகளுக்கு அகரமுதலியில் அர்த்தம் போதாது. பிரிட்டானிக்கா வேண்டும். முழு அனுபவமும் கிடைக்க மூல நூலையும் படித்து, அசல் இடங்களையும் சுற்றிப் பார்த்து, நம்பியுடனும் நான்கைந்து முறை பேசிவிட வேண்டும்.
அவருக்கு பிறந்த நாள்.
’கோட்’ நம்பிக்கு வாழ்த்துகள்.
அவரின் புத்தம் புதிய கதையை சொல்வனத்தில் வாசித்து விட்டீர்களா?












நம்பியின் எழுத்துகளையும் விமர்சனங்களையும் அறிமுகங்களையும் தொடர்ந்து வாசிப்பதால் இந்த சிலாகிப்பு. ஒரு கதையை மட்டும் வாசித்தால் அதை உணர முடியாது.
இன்னொன்றும் இருக்கிறது…
அவரின் எழுத்து எல்லோருக்குமானது இல்லை. அதாவது, அந்த பாணி அன்னியம் ஆக்கலாம். உழைப்பைக் கோருவதால் மனம் பிறிதொன்றுக்கு தாவி விடலாம். பாஷையின் சிக்கலும் விவரிப்பின் அடுக்குகளும் – இந்தப் பதிவை படிப்பதற்கு படம் பார்க்கலாமே என்று கூட எண்ண வைக்கலாம்.
நானும் வடிகட்டின சோம்பேறிதான்.