தங்களுக்கு விஷயம் தெரியும் என்று நினைப்பவர்கள், எதையும் கற்றுக் கொள்வதில்லை
– லாவோ சூ
நட்பாஸ் போகிற போக்கில், கீழ்க்கண்ட முன்முடிபை சொல்லிப் போகிறார்:
சமகாலத்தில் நம்மைப் போன்ற முட்டாள்கள்தான் அதிகம், புரிகிறது
இதைத்தானே பெர்ட்ரண்ட் ரஸல் அன்றே சொன்னார்:
”இந்த உலகத்தில் என்ன பிரச்சினை என்றால், முட்டாள்கள் இரும்புப்பிடி முடிவுகளுடனும், அறிவாளிகள் சந்தேகவாதிகளாகவும் இருப்பதுதான்”
– Bertrand Russell, The Triumph of Stupidity in Mortals and Others: Bertrand Russell’s American Essays, 1931-1935 (Routledge, 1998), p. 28
பெர்ட்ரண்டு ரஸ்ஸல் சொன்னது ஒரு எண்ணம். வெறும் விவாதம் இதை விலாவாரியாக ஆராய்ந்து, பல பேரிடம் கணிப்பு நடத்தி, அந்தத் தரவுகளைக் கோர்த்து, ஜஸ்டின் க்ரூகர் (Justin Kruger) என்பவரும் டேவிட் டன்னிங் (David Dunning) என்பவரும் கார்னெல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி நடத்தினார்கள். இந்த சிந்தனையை ஆதாரபூர்வமாக நிரூபித்தார்கள். இதற்கு டன்னிங் – குருகர் விளைவு (Dunning-Kruger Effect) என பெயரிட்டார்கள்.
அது என்ன சொல்கிறது?
1. திறமையற்றவர்களிடம் தங்கள் திறமை பற்றி அளவுக்கதிகமான மதிப்பீடு இருக்கிறது
2. தங்களை விட அதிதிறன் கொண்டவர்களை திறமையற்றவர்கள் சரியாக மதிப்பிடுவதில்லை
3. தங்களின் போதாமைகளையும் தங்களுக்குத் தெரியாத விஷயங்களையும் அறியும் சக்தியை – திறமையற்றவர்கள் பெற்றிருக்கவில்லை.
4. அந்த மாதிரி திறமையற்றவர்களுக்கு போதிய அளவு பயிற்சியும் முறையாகக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பும் கொடுத்தால், தங்களின் திறனற்ற தன்மையை புரிந்து கொள்வார்கள்.
இதையே கொஞ்சம் நீட்டித்து,
– கமல் கவிதை எழுதுவதையும்,
– பத்மா சேஷாத்ரி / ஐஐடி மாணவர்கள் எல்லோரும் தங்களை முதல் மாணவர்கள் என எண்ணம் உருவாக்கிக் கொள்வதையும்,
– ஜெயமோகனின் எல்லா நிலைப்பாடுகளும் தெளிவானவை என்று அவர் நினைப்பதையும்
– மகஸேசே விருது குறித்து உலகமே பெருமிதப் படுவதாக சில தமிழ் பாடகர்கள் கருதுவதையும்
– ஏற்கனவே குண்டாக இருக்கும் என் போன்றோரிடம் கிருஷ்ண ஜெயந்தி பட்ஷணம் எடுத்துக் கொண்டாயா எனக் கேட்டால், ‘ரெண்டே ரெண்டு விள்ளல்’ என்று பதில் அளிப்பதையும்
நினைத்துப் பார்க்கலாம்.
டிரம்ப் தேர்தலில் நிற்பதையும், அவருடைய ஆதரவாளர்கள் எப்படி டொனால்ட் டிரம்ப் சொல்வதையெல்லாம் நம்புகிறார்கள் என்பதும் கூட இதே டன்னிங்-க்ரூகர் தாக்கம் என்கிறார் மிச்சிகன் பல்கலை தத்துவப் பேராசிரியர்.