Drones


2008ன் ஜனாதிபதி தேர்தலில் நின்ற ஒபாமா நிறைய வாக்குறுதிகள் கொடுத்தார். அவற்றில் ஒன்றை செவ்வனே நிறைவேற்றி இருக்கிறார். பாகிஸ்தானிலும் இன்ன பிற தேசங்களிலும் பதுங்கியிருக்கும் அல் கொய்தா தீவிரவாதிகளை டிரோன் கொண்டு குறி வைத்து தாக்கி அழிப்பேன் என்றார். ’இளம் அமெரிக்க உயிர்களை இழக்கக்கூடிய ஆபத்து நிறைந்த காலாட்படை அனுப்ப மாட்டேன். கடுமையானப் பொருட்செலவில் அதிவேக விமானங்களை அனுப்ப மாட்டேன். அதே சமயம் தீவிரவாதிகள், நம்மை தாக்கி அப்பாவி உயிர்களை கொல்வதையும் தடுப்பேன். அதற்கு டிரோன் உபயோகிப்பேன்.’ என்றார்.

அதை எப்படி தொழில்நுட்பம் கொண்டு நிறைவேற்றினார் என்பதைப் பார்ப்போம்.

சொல்வனம் இதழ் 59ன் மகரந்தத்தில் இந்தக் குறிப்பு இடம் பெற்றிருக்கிறது:

கொல்லுவதை மட்டும் மேன்மேலும் கூர்மையாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் கொலையாளிகள் மறைந்து இருந்து கொல்லும் ராட்சத யுத்தம் மேன்மேலும் பெருகி வருகிறது. மறைந்து கொல்வதை விமான குண்டு வீச்சு, ராக்கெட் குண்டு வீச்சு, பன்னாடு தாண்டித் தாக்கும் மிஸைல்கள்-இப்படிப் படிப்படியாக தூரத்திலிருந்தும், உயரத்திலிருந்தும் தாக்குவதை முனைந்து வளர்க்கிறார்கள் மேலையர். ஒரு காரணம், மிக அடிப்படையானது. இதை எத்தனை பேர் யோசித்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. மேற்கில் குழந்தைகள் பிறப்பது மிகவும் குறைந்து விட்டது. போருக்குப் போய்ச் சாக இளைஞர்கள் முன்னளவு தயாராக இல்லை, அத்தனை எண்ணிக்கையிலும் அவர்கள் இல்லை. முதியோர்கள் கூட்டம் பெருத்து வருகிறது. உலக வளங்களில் பெரும்பகுதியை இன்னமும் கபளீகரம் செய்து வாழும் மேற்குக்குத் தம் வாழ்விலும் வசதி குறையக் கூடாது, தம் நிலங்களில் இதர நிலப்பகுதிகளிலிருந்து மனிதர்கள் உள்ளே நுழையக் கூடாது. அதே நேரம் பிற நிலப்பகுதிகளில் கிட்டும் கனிமங்களும் எரிபொருட்களும், தொழிலுற்பத்திப் பொருட்களும் தம் நாடுகளுக்கு மலிவு விலையில் பாய்ந்த வண்ணம் இருக்க வேண்டும். இப்படிப் புலி வாலைப் பிடித்த கதை அவர்களுடையது.

எனவே போர்களில் ஆட்களை இழக்காது ஆயுதங்களால் மட்டும் தாக்க மேன்மேலும் திட்டமிட்டு சாதிக்கிறார்கள். கொல்லப்படும் மனிதரை அருகில் பார்த்தால், தொலைக்காட்சிகளில் ஊறி வளர்ந்து எதையும் உளநிலைப் பார்வையிலேயே பார்த்துப் பழக்கமான முதலியப் பண்பாட்டு மனிதர்களுக்கு மிக்க மன உளைச்சல் ஏற்படுகிறதாம். ஆனால் அதனால் கொல்வதை விடுவார்களா என்றால் அதெப்படி முடியும்? அது பண்பாட்டில் ஊறிப் போய் விட்டது. அதனால் நேரில் பார்க்காமல் பல ஆயிரம் அடி உயரத்திலிருந்து கொல்வதை ஒரு பெரும் தொழில் நுட்பமாக வளர்க்கிறார்கள். ட்ரோன் என்று அழைக்கப்படும் ஆளில்லாப் போர் விமானங்கள் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவை மிக்க பயனுள்ளவையாக இன்று ஆகி விட்டன என்றாலும், அதையும் விட அணுக்கமாகத் தாகக வேண்டும், ஆனால் சிறிதும் குறி தவறாமல் தாக்க வேண்டும். எப்படி? ராட்சதப் போராளிகளுக்குக் கற்பனையா பஞ்சம். இந்திரஜித்தர்களாயிற்றே. எனவே இந்தக் கருவி தயாராகிறது. இது ட்ரோன்கள் குஞ்சு பொறித்தால் எப்படி இருக்கும் அது போல, முட்டையிட்டு முட்டைகளைத் தரையெங்கும் உருள விடுவது போல. உருண்டு வரும் சாவு இது. படியுங்கள், நேற்றைய அறிவியல் கதைகளில் வந்த கற்பனை உத்திகள் இன்று நிஜமாகின்றன என்பது புரியும்.

அமெரிக்காவில் இருந்து கொண்டு கூடுவாஞ்சேரியில் பறக்கும் விமானத்தை இயக்கினால், அந்த விமானத்தை டிரோன் எனச் சொல்லலாம். துவக்க காலத்தில் பெரும்பாலும் வேவு பார்ப்பதற்கு ட்ரோன்கள் உதவின. கொஞ்ச நாள் கழித்து தொலைதூர கண்காணிப்புக்கு டிரோன்கள் பயன்படுத்தப்பட்டன. இப்பொழுது, குறி பார்த்து அடிக்கவும் டிரோன்கள் செயல்படுகின்றன. தீவிரவாதிகளின் வீட்டை முகவரி தேடி, அவர்கள் இருக்கும் இருப்பிடத்திற்கு வண்டியோட்டியோ, பொடி நடையாகவோ செல்லும் காலத்திற்குள், தீவிரவாதிகள் வீடு மாற்றி விடுகிறார்கள். அப்புறம், அந்த வீட்டின் முகவரியைத் தேடும் படலம், என கண்ணாமூச்சி விளையாடாமல், இருந்த இடந்த்திலிருந்து ரிமோட் பொத்தானை அமிழ்த்தி, தொலைக்காட்சியை இயக்குவது போல், தொலைக்கட்டுப்பாட்டில் தீவிரவாதியைப் போட்டுத் தள்ள டிரோன்கள் இயங்குகின்றன.

உலக வர்த்தக மையம் தகர்க்கப் பட்டபிறகு இதன் உபயோகம் அதிகரித்தது. செய்திகளில் பரவலாக அடிபட்ட மட்டில் – யேமன், சொமாலியா, ஆஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் ஆளில்லா விமானங்கள் மூலமாக தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. அமெரிக்க வான்படையில் 2,300த்து சொச்சம் விண்கலங்கள் இருக்கின்றன. படைவீரர் ஓட்டிச் செல்லும் விமானங்க்ளில் இருக்கும் பல விஷயங்கள் டிரோன்களிலும் இருக்கின்றன. தானியங்கியாகப் பறக்கும் வசதி உண்டு; எந்த இடத்தில் இருக்கிறோம், எங்கு செல்ல வேண்டும் என்பதை அறியும் புவிநிலை காட்டி (GPS) உண்டு; கொடூரமான ஆயுதங்களும் உண்டு; ஆனால், விமான ஓட்டி மட்டும் கிடையாது. எனவே, இவற்றை ‘ஆளில்லா விமான வாகனங்கள்’ (unmanned aerial vehicles) அல்லது ’தொலை ஓட்டுந‌ர் விமானங்கள்’ (remotely piloted aircraft) என அழைக்கிறோம்.

ஆங்கிலத்தில் டிரோன் என்றால் ஆண் தேனீ. இவற்றால் தேன் சேமிப்பில் பங்குபெற இயலாது. பிறரை கொட்ட இயலாது. சோம்பேறி. ஒவ்வொரு தேனீக்கூடாக சென்று, அங்கு, இனப்பெருக்கம் செய்வது மட்டுமே, இதன் ஒரே வேலை. இந்த அப்பாவி ஆண் தேனீயான ’ட்ரோன்’, எப்படி ஆபத்தான தானியங்கி விமனத்திற்கு பெயர் ஆனது?

1935ல் இங்கிலாந்தில் தொலைதூரத்தில் தானியங்கியாகப் பறக்கும் விமானத்தை இன்னொரு விமானம் இயக்கும். அதற்கு டி.எச். 82பி இராணித் தேனீ (DH 82B Queen Bee) எனப் பெயரிட்டார்கள். இராணி இல்லாமல் அந்த மற்றொரு தேனீ இயங்காது என்பதால், அந்த பலிகடா விமானத்திற்கு ‘டிரோன்’ எனப் பெயர் சூட்டினார்கள். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனிக்கு எதிராகப் பயிற்சிக்கு உபயோகித்த இலக்குகளை டிரோன் என அழைக்கத் துவங்குகிறார்கள். அன்று இலக்காக பயன்பட்ட டிரோன்கள், இன்று தங்கள் இலக்குகளை பலி கொள்கின்றன.

வியட்நாம் போரின் போது மட்டும் ஆறாயிரத்து சொச்சம் விமானிகளை அமெரிக்கா இழந்தது. அது தவிர பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்களை இழக்கிறது. விமானங்கள் தரைக்கு அருகே பறப்பது முதல் காரணம். விமானிகளால் டக்கென்று தப்பித்து ஓட முடியாத சரேல் திருப்பங்கள் செய்ய இயலாத விமானங்கள் இரண்டாம் காரணம். விமானியின் திறமைக்கேற்பவே விமானம் இயங்கும்; அந்த சாமர்த்தியம் இல்லாத விமானிகள் மூன்றாம் காரணம். இந்தப் பிழைகளை ஆளில்லா விமானங்கள் போக்குகின்றன.

ஆளில்லா டிரோன்களில் உயிர்ச்சேதம் கிடையவே கிடையாது. அதாவது, தாக்குபவர், தாக்கப்படுவார் என்பதற்கு இடமே கிடையாது. தரைக்கு ஐந்து மைல் மேலே நின்று கொண்டிருக்கும் டிரோன்களை கண்டுகொள்வது வெகு துர்லபம். அதே சமயம் ஒரே இடத்தில் ஸ்திரமாக இருபத்து நான்கு மணி நேரம் கூட நிற்கும் திறமை கொண்டது. மனிதரைப் போல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும், காலைக்கடன் கழிக்க வேண்டும் போன்ற உடல் உபாதைகளும் பசியும் கிடையாது. ஒரே வேலையையே, திரும்பத் திரும்பச் செய்யச் சொன்னால், ‘போரடிக்கிறது’ என அலுத்துக் கொள்ளாமல் இயந்திரகதியில் மீண்டும் மீண்டும் துல்லியமாக கண்காணிக்கும்; கால் கடுக்க விழி இமைக்காமல் தன் பிடியில் சிக்கியவர் எங்கெல்லாம் செல்கிறாரோ, அங்கெல்லாம் பின் தொடர்ந்து அவரும் அறியாவண்ணம் காவல் காக்கும்.

விமானி இயக்கும் சண்டை ஜெட்களை இரண்டு மணி நேரத்திற்கு மேல் இயக்க இயலாது. போனோமா.. வந்தோமா என்று இருக்க வேண்டும். கடைசியாக, டிரோனிற்கு ஆகும் செலவும் கம்மி. விமானியுள்ள போர்விமானத்தில் ஒரு கிலோமீட்டர் செல்வதற்கு ஆகும் செலவில், டிரோன் விமானங்கள் முன்னூறு கிலோமீட்டர் பறந்துவிடும். அவ்வளவு இலேசானது. காரைப் போல் எடை கொண்டது. சோப்புத் துண்டு போல் போர் விமானம் கனக்கும். டிரோன்களோ நுரை போல் பறக்கும். விமானியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இருக்கும் இராட்சத உபகரணங்களோ, பாதுகாப்பு அம்சங்களோ, துரத்துவோரிடமிருந்துத் தப்பித்துச் செல்ல அதிவேகமாக பறக்கவேண்டும் என்னும் நிர்ப்பந்தமோ இந்த உலோகப்பறவையிடம் இல்லை. எதிராளி தாக்க வந்தால் தற்கொலப் படை – மௌனமாக தன்னுடைய விஷக்குப்பியை அருந்துவது போல், தன்னைத் தானே வெடித்துக் கொள்ளக் கூட முடியும்.

ஏன் இதெல்லாம் திடீரென்று முக்கியமாகிறது?

இராக்கில் இப்பொழுது அமெரிக்கப் படை இல்லை. ஆப்கானிஸ்தானை விட்டும் கூடிய சீக்கிரமே அமெரிக்கா மூட்டை கட்டப் போகிறது. இன்றைய நிலையில் பாகிஸ்தானில் வசிக்கும் பயங்கரவாதிகளைத் தாக்க ஆப்கானிஸ்தானில் இருந்து டிரோன்களை அனுப்ப முடிகிறது. ஆனால், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வாசஸ்தலம் இல்லாவிட்டால். உள்ளூர் ஃப்ளோரிடாவில் இருந்தும், நெவாடாவில் இருந்தும் டிரோன்களை அனுப்பலாம். மணிக்கு ஐநூறு மைல் வேகத்தில் ஐம்பதாயிரம் அடியில் பறக்கும் டிரோன்களைக் கொண்டு சொமாலியா அல்க்வெய்தாவும் பாகிஸ்தான் தாலிபான் தலைவர்களும் என்ன திட்டமிடுகிறார்கள் என்பதை அறியலாம். தேவைப்பட்டல், அவரின் தலை மட்டுமே சகஸ்ரபத்தலாக வெடிக்குமாறு ஆணையும் பிறப்பிக்கலாம்.

இப்போதைக்கு இந்த உளவாளி டிரோன்களை இயக்கும் பொறுப்பு முழுக்க முழுக்க சி.ஐ.ஏ. (மத்திய புலனாய்வுத் துறையிடம்) இருக்கிறது. அதாவது, உளவு பார்ப்பது உளவுத்துறையின் வேலை. எனவே, உளவு பார்க்க டிரோன்கள் அனுப்புவது உளவுத்துறையின் கடமை. ஆனால், இப்பொழுதோ, உளவு என்பதைத் தாண்டி, தாக்குதல் என்னும் பயனிற்காக டிரோன்களை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம். இதை இராணுவத்திற்கு மாற்றிக் கொடுக்குமாறு ஒபாமா விண்ணப்பித்திருக்கிறார். இதை இரகசியமாகச் செயல்படும் சிஐஏ-வில் இருந்து ஓரளவு வெளிப்படையாக இயங்கும் பெண்டகனுக்கு மாற்றிவிட்டால், ஒபாமா மேல் பாயும் ஊடகங்களும் இடதுசாரி கருத்துடைமையாளர்களும் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் மீது தங்கள் விமர்சனத்தைச் செலுத்துவார்கள்.

ஏன் இராணுவத்திற்கு கை மாற வேண்டும்?

மூன்றடி நீளமே இருக்கிறது ‘ரேவன்’ (Raven). இராணுவ வீரரின் தோள்பையில் அடக்கமாக உட்கார்ந்திருக்கும். எப்பொழுது தேவையோ, அப்பொழுது பையில் இருந்து வெளியில் எடுத்து, கை கால் நீட்டி. முழு உருவமும் கொடுத்து, பேப்பர் ராக்கெட் விடுவது போல், அம்பைப் போல் கையால் வீச வேண்டும். அதன் பிறகு, பொம்மை ஹெலிகாப்டர் ஓட்டுவது போல், அதை எங்கு வேண்டுமானாலும் பறக்க வைக்கலாம். பாகிஸ்தான் இராணுவத்திடம் கூட நூற்றுக்கணக்கான இந்த ரேவன் டிரோன்கள் இருக்கின்றன.

ஒசாமா பின் லாடனைப் பிடிக்க சி.ஐ.ஏ. செண்டினல் (sentinel) டிரோன் விமானத்தை உபயோகித்தது. ஆனால், அதே போன்ற பழைய பஞ்சாங்க டிரோன்களை சீனாவிற்கும் ருஷியாவிற்கும் வேவு பார்க்கவோ, வெடி வெடிக்கவோ அனுப்பித்தால் பாதி வழியிலேயே நசுக்கி விடுவார்கள். அதற்கு அடுத்த தலைமுறை கொலைகார டிரோன்கள் தயாரிக்க வேண்டும். நீர்மூழ்கிக் கப்பல்களிலிருந்து, தானியங்கியாக வெளிவந்து, சமயம் பார்த்து விண்ணில் பறந்து, அயல்நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கேயே யார் கண்ணிற்கும் எந்த ரேடாருக்கும் தெரியாமல் பறக்கும் டிரோன்கள் தேவை. அதற்கு இராணுவத்தின் பணபலமும் தேவை.

இங்கிலாந்தில் இந்த மாதிரி புத்தம்புதிய டிரோன்களை டரானிஸ் (Taranis) என பறக்க விடுகிறார்கள். பிரான்சும் நியுரான் (Neuron) தயாரித்திருக்கிறது. இரானும் சவூதி அரேபியாவும் வைத்திருக்கிறார்கள். அமெரிக்காவில் நான்கு நிறுவனங்கள் விதவிதமான பெயர்களில் கள்ளமாக தாக்கும் டிரோன்களைத் தயாரிக்கின்றன. நார்த்ரப் (Northrop) டிரோன்களுக்கு எக்ஸ் 47பி (X-47B) என மறைபெயர் சூட்டியிருக்கிறது. லாக்ஹீட் மார்டின் (Lockheed Martin) ஆர்.கியூ 170 (RQ-170); ஜெனரல் அடாமிக்ஸ், போயிங் என எல்லோரும் எம்.க்யூ 9 (MQ-9 Reaper) ரீப்பர் வடிவமைப்பில் மும்முரமாக இருக்கிறார்கள்.

உங்கள் செல்பேசியில் இருக்கும் புகைப்படக் கருவிகள்தான் இங்கேயும் பயன்படுத்தப்படுகிறது. செல்பேசியில் மிஞ்சி மிஞ்சிப் போனால் இரண்டு கேமிராக்கள் இருக்கும். இந்த புதிய வகை டிரோன்களில் அது போல் ஐநூறு கேமிராக்கள் அதன் உடலெங்கும் பதிக்கப்பட்டிருக்கிறது. இதனால், தன் அடியே நடக்கும் அனைத்து விஷயங்களையும் வெகு துல்லியமாக கண்காணிக்க இயலுகிறது. அதே சமயம், பருந்துப் பார்வையாக, மொத்த விஷயங்களையும் பார்க்க முடிகிறது. அதாவது கூகுள் வரைபடத்தில், கொஞ்சம் கொஞ்சமாக ஆழமாக பெரிதாக்கிக் கொண்டே போய், உங்கள் வீட்டினுள் நுழைவதைப் போல் ஐம்பதாயிரம் அடியில் இருந்து இந்த டிரோன்கள் உங்களை இருபத்து நான்கு மணி நேரமும் ரோந்து சுற்றலாம். அப்படியே ஒட்டும் கேட்கலாம். எந்த வீடு எப்பொழுது தேவையோ, அந்த வீட்டின் செயல்பாடுகளை மட்டும் தேவைக்கேற்ப அகலமாக பிக்சல் பிக்சலாக விருத்தியாக்கி நோக்கலாம். அங்கே நடக்கும் உரையாடலை பதிவு செய்ததைப் போட்டு தானியங்கியாக மொழிபெயர்க்கலாம்.

இந்த வகை டிரோன்களிடம் இப்போதைக்கு எதிர்ப்பு சக்தி என்பது ரொம்பவேக் குறைவு. காலுறை கிழிந்தால் தூக்கிப் போட்டுவிட்டு, புதியது மாற்றிக் கொள்வது போல், அவ்வப்போது ஒரு டிரோன் பழுதாகிவிட்டாலோ, எதிரியால் சுடப்பட்டாலோ, அதை தாரை வார்த்துவிட்டு, புதிய டிரோனை அதே பகுதிக்கு ஏவுவது வழக்கம். ஆனால், அதற்கு பதில் எதிராளியின் விமானத்தை சுதந்திரமாகத் தாக்குவது, தற்காப்பாக ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துவது என ரோபோ போல் தனக்குத் தானே முடிவெடுக்கும் திறனும் எடுத்த முடிவை செயலாக்கும் வசதியும் அமையப் பெற்றால், இவ்வகை டிரோன்களை அயல்நாட்டால் அழிக்க இயலாது.

முதலாம் உலகப் போரின் போது விமானங்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டதோ அவ்வாறுதான் இப்போது டிரோன்கள் இளம்பிராயத்தில் இருக்கின்றன. இனிமேல்தான் முழுமூச்சில் என்னவெல்லாம் பிரச்சினைகள் வரும், எப்படியெல்லாம் உபயோகிக்கலாம், எங்ஙனம் கட்டுப்பாடுகள் வைக்கலாம், எங்கே பறக்கலாம், எவர் கையில் கொடுக்கக் கூடாது போன்ற சட்டதிட்டங்களையும் சமூக வழக்கங்களையும் தயாரிக்க வேண்டும்.

அவற்றை பிறகு பார்ப்போம்.

புருஷ லட்சணம்வேறு; பொறி லட்சணம் வேறு என்று வித்தியாசப்படுத்தாமல், இயந்திரங்களுக்கும் சிந்தித்து முடிவெடுக்கும் திறனும் பிறரின் எண்ணங்களை உணரும் குணநலனும் அமையப்பெறுவதை அறி-புனை கதைகளில் மட்டுமே படித்து வந்த காலம் போயே போயாச்சு. இன்றைய ரோபோக்கள், தரைப் பெருக்குவது, நீச்சல்குளத்தை சுத்தம் செய்வது போன்ற ஒரேயொரு வேலையை மட்டும் செய்வதற்காக தயாரிக்கப்படுவதில்லை.

உதாரணத்திற்கு வீட்டிற்கு வீடு வந்து, கதவு தட்டி வாடிக்கையாளர்களின் பொருள்களை விநியோகிக்கும் அமேசானின் தூரயியங்கியை (டிரோன்) எடுத்துக் கொள்வோம். அதைப் பாதி வழியில் திருடர்கள் வழி மறிக்கிறார்கள். அந்த தூரயியங்கியிடமிருந்து திருடுகிறார்கள். இதை அந்தத் தூரயியங்கியே தடுத்தாட் கொள்ளும் வசதியைத் தரலாமா? இன்னொருவருக்கு சொந்தமான பொருளைத் திருடு போகாமல் பாதுகாக்கலாமா? யாராவது தாக்கினால், திருப்பி அவர்களையே அடிக்கும் சக்தியை தூரயியங்கிகளுக்கு வழங்கலாமா?

தூரயியங்கிகளுக்கு இந்த தற்காப்பு சக்தி வழங்காவிட்டால், அவற்றை நடுவில் யாராவது அபகரித்து தவறான காரியங்களுக்குப் பயன்படுத்தும் ஆபத்து இருக்கிறது. ஆனால், அவற்றிற்கான சட்டதிட்டங்கள் இன்னும் உருவாகவில்லை. இப்போதைக்கு தூரயியங்கியை ஆளில்லா காடுகளில் மட்டுமே உபயோகிக்கிறார்கள். ஆர்க்டிக் முனையில் பனிப்பாறைகள் எவ்வாறு உருகுகின்றன என்பதை தூரயியங்கி படம்பிடித்து நமக்கு அனுப்புகிறது. துருவங்களில் தெரியும் புவிவெப்பமயமாதலை உடனடியாக அறிய முடிகிறது. ஆப்பிரிக்க, அமேசான் காடுகளில் அருகிவரும் உயிரினங்களை கண்காணிக்க தூரயியங்கியை பயன்படுத்துகிறார்கள்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு மும்பையின் ஃப்ரான்செஸ்கோ பீட்சா கடை தூரயியங்கி மூலம் பீட்சாவை தந்திருக்கிறது. டி.சி.எஸ்.ஸின் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் துப்பு துலக்க தமிழகக் காவல்துறை தூரயியங்கியைப் பயன்படுத்தியது. உரிமம் பெறாமல் கருங்கற்களை உடைப்பதையும் மணற்கொள்ளையையும் கண்காணிக்க தூரயியங்கியை மதுரை காவல்துறை பயன்படுத்துகிறது. இமானுவேல் சேகரனின் நினைவாஞ்சலி ஊர்வலத்தை தள்ளி இருந்து பதிவு செய்யவும், தேவர் குரு பூஜையில் சட்டம் ஒழுங்கைப் பேணவும் தொண்ணூறு இலட்ச ரூபாய் செலவில் மூன்று தூரயியங்கிகள் உதவியிருக்கின்றன. ராஜ் தாக்கரே ஊர்வலங்களில் தூரயியங்கி கடமையாற்றி இருக்கிறது. 2013ல் மட்டும் 1,467 ஆர்ப்பாட்டங்களிலும், 1,183 தர்ணாக்களிலும், 683 ஊர்வலங்களிலும், இன்ன பிற 6,500 இடங்களிலும் தூரயியங்கிகள் களத்தில் பறந்திருக்கின்றன.

ஆபத்தான வேலைக்குப் போகும் காவல்துறைக்கு தூரயியங்கி துணை போகலாம் என உலகெங்கும் இப்பொழுது முடிவெடுக்க ஆரம்பித்திருக்கின்றனர். பெருந்திரளான கொந்தளிப்படந்த மக்கள் கூட்டத்தின் நடுவே கண்ணீர் புகை போடவும், மாலடோவ் குண்டு வீசுபவனை குறி பார்த்து வீழ்த்தவும் தூரயியங்கி உபயோகமாகிறது. தூரயியங்கி கொண்டு இந்த மாதிரி போராட்டங்களை கண்காணிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவை சட்டத்தின் உதவியோடு காவலர்களுக்கு நெடுங்காலமாக உதவுகிறது. ஆனால், அதே தூரயியங்கியிடம் துப்பாக்கியும் பிளாஸ்டிக் தோட்டாக்களும் கண்ணில் மிளகாய்ப்பொடியை தூவும் வசதியையும் கொடுத்தனுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

தென்னாப்பிரிக்க சுரங்கத் தொழிலாளர் போராட்டங்களை நசுக்க ஸ்கன்க் (Skunk) நிறுவனம் இவற்றைத் தயாரிக்கிறது. ஐம்பதாயிரம் அமெரிக்க டாலர்களுக்கு இவை விற்கப்படுகின்றன. நாலாயிரம் துப்பாக்கி ரவைகளையோ மிளகாய்ப்பொடி பொட்டலங்களையோ ஒரே சமயத்தில் வைத்திருக்கும். ஒரு திசை வீதம் நொடிக்கொருமுறை இருபது பொட்டலங்களை குறி பார்த்து ஏவும். எனவே, ஒவ்வொரு நொடியிலும் நாலாபக்கமும் எண்பது குட்டி குண்டுகள் போடலாம். போராட்டக்காரர்களை பல்வேறு வகையினராகப் பிரித்து குறிப்பிடும் வசதியும் இவற்றில் இருக்கிறது. ‘சிவப்பு’ வகையினர் என்றால் கையில் பயங்கரமான ஆயுதங்களை வைத்திருப்பவர்; இவருக்கு துப்பாக்கி ரவை கொண்டு தாக்குதல். ‘நீல’ வகையினர் என்றால் மூர்க்கமாக தாக்குபவர்; இவர்களுக்கு மிளகாய்த்தூள் அபிஷேகம். ‘பச்சை’ வகையினர் என்றால், வேடிக்கை பார்க்கவோ, வலைப்பதியவோ வந்து நடுவில் திருதிருவென முழிப்பவர்; இவர்களை எந்தவித உபத்திரவமும் இல்லாத பிரகாசமான ஒளிவிளக்கு கொண்டு ஸ்தம்பிக்கச் செய்கிறார்கள். இவ்வாறு இலக்கு அறிந்த தாக்குதல்களை ’பாலை ஓநாய்’ (Desert Wolf) கொண்டு நிகழ்த்தலாம். குறி தவறாது. ‘நாங்கள் போராட்டத்தில் ஈடுபடவே இல்லை!’ என கற்பூரம் அடித்து மறுத்தாலும், தான் செய்யும் ஒவ்வொரு தாக்குதலையும் அதற்கு முன்னும் பின்னும் நிகழ்ந்தவற்றையும் விழியமாகப் பதிந்தும் வைத்துக் கொள்கிறது.

இந்த மாதிரி தூரயியங்கி கொண்டு வருமுன் காப்போனாக கிளர்ச்சிகளின் போதும் நிகழும் வன்முறையையும், அதன் பிற்பாடு நிகழும் எண்ணற்ற ஊரடைப்புகளும், பழிவாங்கல்களும், பதற்ற நிலையையும் முளையிலேயேக் கிள்ளலாம். அமைதியானப் போராட்டம் நிகழும்வரை, தூரயியங்கி வெறுமனே கண்காணித்திருக்கும். போராட்டத்தை அசம்பாவிதமாக்க ஒருசிலர் தோன்றினால், அவர்களை மட்டும் நசுக்கும். அதை வைத்து அடுத்த கட்டத்திற்குக் கிளர்ச்சியை கிண்டிவிட நினைப்போருக்கு வீடியோ ருசுவை உடனடியாகப் பகிரங்கமாகப் போட்டுக் காட்டும். உயிர்ச்சேதம் கிடையாது; ஊழல் வராது; வெளிப்படையான செயல்பாடாகவும் இருக்கும். ஆனால், பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் சமாதான உடன்படிக்கையைக் கையெழுத்திடவும் இன்னும் மனிதர்கள்தான் தேவைப்படுகிறார்கள்.

எல்லாவிதமான தூரயியங்கிகளிலும் பலவிதமான ஒளிப்படக் கருவிகள் இருக்கின்றன. சிலவற்றில் ஆயிரக்கணக்கில் உள்ளன. இரவில் படம் பிடிக்க உதவும் அகச்சிவப்பு (infrared) படமிகள் இருக்கும். வெப்பம் சார்ந்து (Thermographic – thermal imaging) இயங்கக் கூடிய படமிகள் இருக்கும். இந்த உணரி (sensor) கீழே இருக்கும் மனிதர்களையோ, இன்ன பிற விஷயங்களையோ துல்லியமாகக் குறிக்க உதவுகின்றன. லேசர் கொண்டு இவர்களை தொடர்ச்சியாக பின் தொடர் முடிகிறது. அந்த லேசர் எங்கே சுட்டுகிறதோ, அந்த இடத்தை ஏவுகணைகள் மூலம் தாக்குகின்றன. இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் வரும் பிரம்மாஸ்திரம், நாகாஸ்திரம் போல் விதவிதமாக செயல்படுகிறது.

இப்போதைக்கு தூரயியங்கி விமானங்களை தானியங்கியாக செயல்பட அமெரிக்க இராணுவம் ஒப்பவில்லை. அதை இயக்க, கண்காணிக்க, இருவர் கொண்ட அணி இயங்குகிறது. கீழே இருக்கும் பயங்கரவாதியை சுடுவதானாலும் சரி; இருபத்து நான்கு மணி நேர கண்காணிப்பு தூரயியங்கி ஆனாலும் சரி; அதை எப்பொழுதுமே மேற்பார்வையிட விமானிகளை வைத்திருக்கிறார்கள். இது கொந்தர்களிடமிருந்து (hackers) விமானத்தை மீட்கவும் உதவுகிறது. ‘இவன் நமது எஜமானன்; இவன் எதிரி’ என்று தூரயியங்கியை சிந்தித்து பிரித்துப் பார்க்க வைப்பதெல்லாம் நிரலியும் அதை இயக்க வைத்திருக்கும் ரகசிய கடவுச் சொற்களும்தான். அவற்றை யாராவது நடுவில் வந்து கொத்திக் கொண்டு போய்விட்டால்?

மூன்றாண்டுகள் முன்பு இந்த மாதிரி வேவு பார்த்த அமெரிக்க தூரயியங்கியை இரானியர்கள் கடத்திச் சென்றுவிட்டார்கள். தூரயியங்கிக்கும் தான் கைப்பற்ற பட்டோம் என்று கண்டுபிடிக்கத் தெரியவில்லை. தன்னுடைய செயல்பாடு, தன்னை இயக்கும் நிரலி, தூரயியங்கியைத் தயாரிக்கும் மூலப்பொருள் என எல்லாவற்றையும் வெகுளியாக சொல்லிவிட்டது. அந்த நிரலியையும் தொழில்நுட்பத்தையும் வைத்தே ஈரான், தன்னுடைய தூரயியங்கி நுட்பத்தை மேன்மேலும் வளர்த்துக் கொண்டது. இப்போது இந்த மாதிரி தூரயியங்கி விமானக் கடத்தல்கள நீக்குவதற்கு இரண்டு உபாயங்களை அமெரிக்கா வைத்திருக்கிறது. எவராவது தூரயியங்கியைக் கைப்பற்றினால், அதை வெடிக்க வைத்துவிடுவது; அல்லது அதனிடம் சேமிக்கப் பெற்ற அத்தனை விஷயங்களையும் அழித்துவிடுவது.

1990கள் வரை இஸ்ரேலிடமிருந்துதான் தூரயியங்கிகளை(http://www.indiandefencereview.com/news/uavs-gaining-currency-with-indian-armed-forces/0/ ) இந்தியா வாங்கி வந்தது. ஆனால், 2000 ஆண்டில் இருந்து டி.ஆர்.டி.ஓ. (Defence Research and Development Organisation – DRDO) வழிகாட்டலில் சொந்தமாக தூரயியங்கியைத் தயாரிக்கத் துவங்கியது. காற்றினூடே செல்ல ஏதுவான வடிவமைப்பு, தொலைவுக் கணிப்பியல், மூலப்பொருள் ஆராய்ச்சி, முன்செலுத்தலில் புதிய வழிமுறை, விமானத்தை இயக்கும் நிரலி, பதிவு செய்தவற்றை இரகசியமாக பாதுகாக்கும் தகவல்மறைப்பியல், உணரிகள், பொறிகள் என ஒவ்வொரு பாகத்திலும் தனித்தன்மையும் தற்கால தொழில்நுட்பத்தையும் கொண்டு புதிய வகை தூரயியங்கியை உருவக்கி இருக்கிறார்கள்.

பெங்களூரூவிற்கு அருகில் இருக்கும் சித்ரதுர்காவில் தூரயியங்கி கட்டுப்பாடு மையம் அமைந்திருக்கிறது. காஷ்மீர், அருணாச்சல் பிரதேசம் போன்ற பிரச்சினைக்குரிய எல்லைப் பிரதேசங்களில் பாகிஸ்தானின் அத்துமீறலையும் சீனாவின் நடவடிக்கைகளையும் கண்காணிக்க இவற்றை இந்தியா உபயோகிக்கிறது. அது தவிர கடற்படையில் மீனவர்களைப் பாதுகாக்கவும் கடத்தல்களை வேவு பார்க்கவும் கேரளா, குஜராத் போன்ற எல்லை மாநிலங்களும் தூரயியங்கியை புழக்கத்தில் வைத்திருக்கின்றன. 2008 சுனாமியின் போது தூரயியங்கி கொண்டு மீட்புப் பணியில் ஈடுபட்டார்கள். மாவோயிச செயல்படுகள் அதிகம் உள்ள பிஹார், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களிலும் சிறிய கிராமங்களையும் மரங்களால் மூடப்பட்ட வனங்களையும் ஊடுருவி உளவுபார்க்க தூரயியங்கியை இந்தியா செயல்படுத்துகிறது.

ஆனால், அடர்ந்த காடுகளிலும் தொடர்ந்து பெருமழை பொழியும் புயல் சமயங்களிலும் இந்தத் தூரயியங்கி பெரிதாக கைகொடுக்கவில்லை. இதற்கெனவே 1,163 கோடி ரூபாய் செலவில் ‘லஷ்யா’ என்னும் தூரயியங்கியை இந்தியா கண்டுபிடித்திருக்கிறது. சூரிய ஒளியில் பறக்கும் தூரயியங்கி மேகங்கள் மூடிய மழைக்கால தூரயியங்கி என பற்பல கண்டுபிடிக்கப்பட்டாலும், இன்னும் தானியங்கியாக கிளம்பி, தான்கியங்கியாக தறை இறங்கும் நுட்பத்தை இந்தியா பெறவில்லை. இந்தியாவில் ஓய்வுபெற்ற அல்லது உடல் ஊனமுற்ற முன்னாள் விமானிகளையே இந்த தூரயியங்கியை செயல்படுத்த வைக்கிறார்கள்.

அமெரிக்கா இதற்கு நேர் எதிர். முன்னாள் விமானிகளுக்கு விமானம் ஓட்டி பழக்கம் என்பதால் அதே எண்ணத்திலேயே இந்த தூரயியங்கியையும் இயக்குகிறார்கள். அது சரிப்படவில்லை. இந்தப் புதிய வகை போர்விமானங்கள் போல் வேகமாக செயல்படுவதில்லை. எதிராளியிடமிருந்து அழித்துக்கொண்டால் போதும். தப்பிக்கவேண்டிய அவசியம் இல்லை. அதாவது வீடியோ விளையாட்டில், உங்கள் குறிக்கோள் என்பது அதிக அளவு மதிப்பெண் எடுப்பது என்பது போல், அதிக நேரம் விமானத்தை கண்காணிக்க வைத்தால் போதுமானது. கணினி விளையாட்டில் எத்தனை முறை உயிரிழந்தோம் என்பது முக்கியமேயல்ல என்பது போல், எவ்வளவு தூரயியங்கி இழந்தோம் என்பது பொருட்டே அல்ல.

இதனால்தான் 1970களிலும் எண்பதுகளிலும் இருபது மணி நேரத்திற்கு ஒரு முறை தூரயியங்கி வெடித்துச் சிதறியது. மில்லியன் டாலர் கணக்கில் செலவழித்தாலும் நம்பகமாக நீடித்துப் பறக்கும் தூரயியங்கிக் கிடைக்கவே இல்லை. ரிமோட் மூலமாக இயக்குதல் – ரேடியோ அலைகள் மூலம் இயக்குதல் என்பது பல பத்தாண்டுகளாக இருக்கிற தொழில் நுட்பம். ட்ரோன் வருவதற்குப் பல பத்தாண்டுகள் முன்பே அண்ட வெளியில் பயணிக்கும் பயனீயர் விண்கலங்களை நாசா இயக்கிக் கொண்டுதான் இருக்கிறது. ஆளில்லாக் கலங்களை இயக்குதல் என்பதும் பல பத்தாண்டுகளாக இருக்கிறது. சிறுவர் விளையாட்டுப் பொருட்களிலும் தானியங்கி விளையாட்டுச் சாமான்களும் சரி, ரிமோட் மூலமாக கட்டுப்படுத்தப் படக்கூடிய சிறு கருவிகளும் இருந்திருக்கின்றன. விமானம், ஹெலிகாப்டர் போன்றன கூட சிறுவர் விளையாட்டுக் கருவிகளாகக் கொஞ்ச வருடங்களாக இருக்கின்றன. அப்படி இருக்கையில் பெரிய அளவு விமானங்களை, ஆளில்லாது தொலைதூரத்திலிருந்து கட்டுப்படுத்தி இயக்கப்படக் கூடிய விமானங்களைத் தயாரிக்க இந்தனை காலம் ஆனது ஏன்?

இங்கேதான் ஆபிரஹாம கரீம் (Abraham Karem) வருகிறார். வெறும் பதினெட்டாயிரம் டாலர் செலவில் ஐயாயிரம் மணி நேரமாகப் பறந்தாலும் வீழாத தூரயியங்கியைக் கண்டுபிடிக்கிறார். அந்த மூல தூரயியங்கியை வைத்துதான் இன்றைய பெரும்பாலான டிரோன்கள் உருவாகின்றன.

கரிம் முதல் காரியமாக விமானத்தின் ஓட்டுங்கருவியையும் இயக்குறுப்புகளையும் பின்னுக்கு தள்ளினார். முன்புறத்தில் இருக்கும் உணரிகளுக்கும் படப்பிடிப்புக் கருவிகளுக்கும் இதனால் எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் விழியங்களைப் பதிய முடிந்தது. அடுத்ததாக விமானத்தின் வால் இறக்கைகளை கீழ்நோக்கி அமைத்தார். சாதாரணமாக மேல்நோக்கியோ, பக்கவாட்டிலோ தூரயியங்கியின் வால் இருக்கும். சிறப்பாக பறப்பதற்கு இந்த வடிவமைப்பு உதவும். ஆனால், தூரயியங்கிக்கோ வேகமாக எழும்புவது என்பது இலட்சியம் அல்லா. கரடுமுரடான பிரதேசங்களில் கூட பாதுகாப்பாக தரையிறங்கி தன்னுடைய இயக்கத்தைத் தொடர்ச்சியாக வைத்திருப்பதற்கு, இந்த கீழ்நோக்கிய வால் வடிவமைப்பு இன்றளவும் உதவுகிறது.

கரீம் வடிவமைத்த தூரயியங்கி, ஆல்பட்ராஸ் என அழைக்கப்படுகிறது. அண்டரண்டப்பறவையைப் போலவே இந்த தூரயியங்கியும் இருந்த இடத்தில் இருந்து எழும்பி, உயரத்தில் பறக்கக் கூடியவை. வேகத்தை விட நீடித்துப் பறப்பவை. தன்னுடைய உடலைவிட இருபது மடங்கு பெரிய அகலமான இறகுகளைக் கொண்டது. இந்தத் தூரயியங்கிக்கு எஞ்சினாக டிவிஎஸ்-50 போன்ற கோ-கார்ட் (go-cart) பொறியை பயன்படுத்துகிறார். அதுவரை இராட்சத விமானத்திற்குறிய பொறியை உபயோகுத்தவர்களுக்கு இந்த வழிமுறையெல்லாம் அதிர்ச்சியைத் தந்தது. எனினும், முடிவுகளைப் பார்த்தால், விமானத்தைப் பார்த்து உருவாக்கிய தூரயியங்கியை விட கரீம் கண்டுபிடித்த தூரயியங்கி சிறப்பாக, நெடுநாளைக்கு, இடையூறுகளைத் தவிர்த்து செயல்பட்டது.

கரீம் கண்டுபிடித்த பறக்கும் வடிவமைப்பு, செயற்கைகோள்களின் வளர்ச்சி, இயந்திரமே சொந்தமாக முடிவெடுக்கும் சக்தி, புவிநிலை காட்டி (GPS) முன்னேற்றங்கள், தொலை தூரத்திற்கு தகவல் அனுப்பும் வசதி, அறை முழுக்க அடைத்துக் கொண்டிருக்கும் கணினி நுட்பத்திற்கு பதிலாக மடியில் வைத்துக் கொண்டு இயக்கும் புதிய தலைமுறை கணிப்பொறிகள், இலேசாக இருந்தாலும் தொடர்ந்து தாக்குப் பிடிக்கும் மூலப்பொருள்களின் வருகை, விமானத்தை அனலாக் முறையில் இயங்குவதை விட்டு டிஜிட்டல் வழியில் கட்டுபடுத்தும் பொறிகள் என பல தொழில்நுட்பங்கள் ஒன்று சேர்ந்துதான் இன்றைய தூரயியங்கிக்கு வித்திட்டு இருக்கின்றன.

Open_Source_Arducopter_Quad_3d_Robotics_drones_Military_Army

இணையம் வந்த புதிதில் பலரும் கேட்ட கேள்வி. ‘இன்டெர்நெட்டினால் என்ன பயன்? தினசரி இரண்டு ஜோக் மடல் அனுப்பலாம்… அதைத் தவிர என்ன மாறப் போகிறது!’

தூரயியங்கி இன்னும் விடலைப் பருவத்தில் இருக்கும் இந்தக் காலத்திலும் இதே கேள்வி புழக்கத்தில் இருக்கிறது. ‘டிரோன்களினால் என்ன உபயோகம்? அடுத்த வீட்டை எட்டிப் பார்க்கலாம்… சாலையில் கார் ஓட்ட வயதிற்கு வராத பாலகர்கள் வேண்டுமானால் கூரையேறாமல் கோழி பிடிக்கலாம்!’ என்கிறார்கள்.

நிஜத்தை சொல்லப் போனால், தூரயியங்கிகளால் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதன் சாத்தியக்கூறுகளுக்கான ஆராய்ச்சிகளையும் அதன் முழுமையான பயன்களையும் நாம் இன்னும் துவங்கக் கூட இல்லை. ஐஃபோன் போல் எல்லோர் கைகளிலும் தூரயியங்கி வைத்திருக்கும் காலம் இன்னும் ஐந்தாண்டுகளுக்குள் நிகழும். அப்பொழுதுதான் தூரயியங்கிகளின் உண்மையான வீச்சு எல்லோருக்கும் ஓரளவிற்காவது தெரியவரும்.

உலக நாடுகளின் இராணுவத்திடம் உள்ள தூரயியங்கிகளை விட இரண்டு மடங்கு அதிகமான அளவில் தனிநபர்கள் தங்களுடைய ஓய்வு நேரத்தில் தங்களுக்குச் சொந்தமான தூரயியங்கிகளை இயக்குகிறார்கள். இராணுவத்தினால் குண்டு போட முடியும்; இந்த தனி நபர் பரிசோதனைகளில் குண்டு போட முடியாது என்பதைத் தவிர வேறு எந்த வித்தியாசமும் இந்த தூரயியங்கிகளில் கிடையாது.

அடுத்த வருடத்தில் (2015ல்) இருந்து வர்த்தக வேலைக்காக தூரயியங்கிகளை எவர் வேண்டுமானாலும் இயக்க ஆரம்பிக்கலாம். தூரயியங்கிகளை எவ்வாறு செய்வது, எப்படி வடிவமைப்பது என்னும் திட்டங்களையும் வரைபடங்களையும் தன்னார்வலர்கள் பலர் இணையக் குழுமங்களில் பகிர்கிறார்கள். இதைக் கொண்டு சீனாவில் இருந்து எக்கச்சக்கமான இரகவாரியான தயாரிப்புகள் சந்தைக்குள் புகுகின்றன. காசே இல்லாமல் செய்முறை சொல்லப்பட்டு, மிகக் குறைவான பொருட்செலவைக் கொண்ட உபகரணங்களைக் கொண்டு உருவாகி, திறமுல நிரலிகளை உள்ளடக்கிய இந்த தூரயியங்கிகள் ஆயிரக்கணக்கில் விற்கப்படுகின்றன.

உதாரணத்திற்கு டேவிட் ஷ்மேல் (David Schmale http://www.popsci.com/science/article/2013-09/david-schmale) என்னும் காற்றியல்-உயிரியல் வல்லுநரை எடுத்துக் கொள்வோம். காற்று வழியாகப் பரவும் நுண்ணுயிரிகளைக் கண்டுபிடிக்க தூரயியங்கிகளை இவர் பயன்படுத்துகிறார். மேகத்தினூடே பயணிக்கும் நுண்கிருமிகளையும் வான்வெளியில் சஞ்சரிக்கும் நுண்ணுயிரிகளையும் கண்டுபிடிக்க, துரும்பைப் போல் எங்கும் தாவி, சோதனைச் செய்யப்படும் ஜந்துக்களுடனேயே பயணிக்க தூரயியங்கிகளைக் கொண்டு சோதனைகளை வெற்றிகரமாக முடித்திருக்கிறார். இவரின் கண்டுபிடிப்புகள் நடைமுறைக்கு வரும்போது, வருமுன் காப்போனாக பயிர்களைக் காப்பாற்றலாம். நோய்களைத் தடுக்கலாம்.

ஆப்பிரிக்காவில் இருந்து வரும் எபோலாவை அறிய இந்த ட்ரோன் முறை பயன்படும். ஆனால், ஆப்பிரிக்காவில் இணையத்தை பரவலாக்கவும் ட்ரோன்கள் பயன்படுகின்றன.

WWW_Internet_Usage_Worldwide_Web_Mobile_Computing_LIght_up_Reach_Ping_GlobaL_Devices_Tech_Reach

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இந்தியாவிலும் ஃபேஸ்புக் நீக்கமற நிறைந்திருக்கிறது. இது போன்ற இடங்களில் இணையப் பயன்பாடும் செல்பேசிகளும் சிறு கிராமங்களையும் அனைத்து வயதினரையும் சென்றடைந்திருக்கின்றன. ஆனால், ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் எல்லாவிடங்களிலும் வையவிரிவு வலை கிடைப்பதில்லை. பலரிடம் செல்பேசியும் செயற்கைகோள் கொண்டு தொலைபேசும் வசதியும் இருந்தாலும், அந்த செல்பேசியில் இணையம் கிடைப்பதில்லை. இணையம் கிடைத்தால்தான் ஃபேஸ்புக் பார்க்க முடியும். ஃபேஸ்புக் பார்க்க முடிந்தால், அதன் மூலம் அந்தத் தளத்தின் பயனர்களும், அதனால் கிடைக்கும் விளம்பரங்களும், வருவாயும் பல்கிப் பெருகும்.

இண்டு இடுக்குகளையும் இணையம் சென்றடைய என்ன வழி?

சூரிய ஒளியில் இயங்கும் தூரயியங்கியை ஆப்பிரிக்காவின் மூலை முடுக்கில் எல்லாம் ஃபேஸ்புக் நிறுத்தப் போகிறது. ஆப்பிரிக்காவில் வருடம் முழுக்க நல்ல வெயிலும் அடிக்கிறது. கடுமையான வெப்பத்தைத் தேக்கி வைக்கும் இராட்சத சக்தியும் தூரயியங்கியின் உள்ளே அமைக்கப்பட்டிருக்கிறது. எனவே, அடிக்கடி பெட்ரோல் போட வேண்டும் என்னும் தடையும் இல்லை. ஃபேஸ்புக் நிறைய பணம் வைத்துக் கொண்டிருப்பதால், இது போன்ற பிரும்மாண்டமான திட்டங்களை செயலாக்குவதில் எந்த சிரமமும் இல்லை. மேலும், பங்குச்சந்தையில் உலவும் பணத்தை விட, அசையாச் சொத்துக்களான விமானங்கள், அந்த தூரயியங்கிகளின் மூலம் இணையச் சேவை என்று நிலையான முதலீடுகளில் கால்கோள் இடவும் ஃபேஸ்புக் விரும்புகிறது. அதே சமயம், இணையம் என்றால் ஃபேஸ்புக்; ஃபேஸ்புக் என்றால் இணையம் என்று புதுப்பயனர்கள் நெஞ்சில் ஊன்றிப் பதியவும், நிரந்தமாக அடையாள இலச்சினை போட்டு குடிகொள்ளவும் ‘ஃபேஸ்புக தூரயியங்கிகள்’ உதவுகின்றன.

ஃபேஸ்புக வந்துவிட்டால் கூகுள் சும்மா இருப்பாரா?

கூகிளைப் பொருத்தமட்டில் அது சேவை இயங்குத்தளத்தில் இருக்கிறது. பணம் பரிமாற வேண்டுமா? கூகுள் வாலே (wallet) நாடுகிறோம். விளம்பரம் செய்ய வேண்டுமா? கூகுள் ஆட்வோர்ட்ஸ் (AdWords) நாடுகிறோம். செல்பேசியை இயக்க வேண்டுமா? ஆன்டிராய்ட் நாடுகிறோம்.

அதே போல், ஏதாவது பொருளை எங்காவது கொடுக்க வேண்டுமா… அதற்கும் கூகிளை நாடுங்கள் என்று உலகெங்கும் சொல்வதற்கு தூரயியங்கியை சேவையாகத் தருவதற்கு கூகுள் திட்டமிட்டு வருகிறது. தானியங்கியாக ஓடும் கார்களை கூகுள் வைத்திருக்கிறது. அதே போல், தானியங்கியாக ட்ரோன்களை நீங்களே துவக்கலாம்; எங்கு வேண்டுமோ அங்கே இறக்கலாம்; பொருள்களை பட்டுவாடா செய்யலாம்.

ஒரு பொருளை பயன்படுத்தியபின் என்ன செய்கிறோம்? அதை வீட்டின் மூலையில் போட்டு வைக்கிறோம். அதன் பிறகு அந்த சுத்தியலோ, தயிர் கடையும் மத்தோ, இன்ன பிற உபகரணமோ பயனின்றி உறங்கிக் கிடக்கும். அனைவருக்கும் அனைத்தும் என்று வாழும் காலம் இது; அதே சமயம் வீட்டை அடைத்து வைத்துக் கொண்டிருக்கும் பொருள்களும் இல்லாமல் எளிமையாக வாழ வேண்டும் என்னும் விருப்பமும் உள்ள காலம்; தேவை என்னும்போது தருவிக்கலாம்; தேவை முடிந்தபின்பு இன்னொருவருக்கு தந்து உதவலாம் எனக் கூட்டுச் சமுதாயச் சிந்தனைக்கும் தூரயியங்கிகள் உதவுகின்றன.

உங்களுக்கு எந்தப் பொருள், எப்பொழுது வேண்டுமோ, அப்பொழுது, அந்தச் சமயத்தில், தூரயியங்கிக் கொண்டு அந்தப் பொருளை தருவிக்கலாம். உங்களின் தேவை முடிந்தபின்பு ‘யதாஸ்தானம் ப்ரதிஷ்டயாமி’ என்று பொதுவிடத்தில் கொடுத்துவிடலாம். சிக்கனமாகவும் இருக்கலாம். சுற்றுச்சூழலையும் பேணலாம்.

தூரயியங்கிகளின் வளர்ச்சியை தனித்துப் பார்க்க முடியாது. முப்பரிமாண நகலி (3D printing http://solvanam.com/?p=25176), எந்திரனியல் (robotics) போன்ற பிற துறைகளுடன் இணைத்தே தூரயியங்கிகளின் சாத்தியங்களைப் பார்க்க வேண்டும். இதுதான் அமேசான்.காம் வர்த்தகத் தளத்தின் திட்டம்.

வானகத்தில் ஆங்காங்கே, நகரத்திற்கு ஒன்றாகவோ, மாவட்டத்திற்கு ஒன்றாகவோ மாபெரும் தூரயியங்கிகள் நிறுத்தப்பட்டிருக்கும். அதனுள்ளே முப்பரிமாண வார்ப்பி (3D Printer) இருக்கும். அவை சிறிய பொருள்களை அச்செடுத்துக் கொடுக்கும். அந்தக் குட்டி குட்டி வடிவங்களை ஒருங்கிணைக்க எந்திரன்கள் உள்ளே இருக்கும். முழுப்பொருளும் தயாரானவுடன் அதை தரையிறக்க இன்னும் சில வேறுவகையான தூரயியங்கிகள் உதவும். இவையெல்லாம் நொடி நேரத்தில் நடக்கும்.

சீனாவை நம்பி இறக்குமதி செய்யவேண்டாம். மாபெரும் தொழிற்சாலைகள் உருவாக்க வேண்டாம். ஒவ்வொருவரும் தயாரிக்கலாம். உங்களுக்கான செருப்பை நீங்களே உருவாக்கலாம். உங்களின் முகத்தின் கோணல்களுக்கேற்ப கண்ணாடியை செதுக்கலாம். வீட்டின் மூலையில் அமர்ந்தபடி தயாரிக்கலாம்.

நீங்கள் தயாரா?

உதவியவை:

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.