பாஸ்டன் மாரத்தான் ஓட்டத்தை முதல் முறை பார்த்தது இன்றும் நினைவிருக்கிறது. இருபத்தாறு மைல் மாரத்தான் ஓட்டத்தின் நடுவே என்னுடைய அலுவல் கட்டிடமும் இருந்ததால் அதைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. விதவிதமாக ஓடிக் கொண்டிருந்தார்கள். கால் முடியாதவர்களில் சிலர் கையில் ஊன்றுகோலும் முகத்தில் புன்னகையும் வைத்து ஓடினர். சிலர் சக்கர நாற்காலி துணையுடன் ஓடினர். கண் பார்வையற்றவர் நாயின் துணையுடன் ஓடினர். சிலருக்கு என்னுடைய பாட்டியை விட வயது அதிகமாக இருக்கும். சிலர் உசேன் போல்ட் போல் பறந்தனர். இருபத்து மூன்றாயிரம் விதங்களாக ஒவ்வொரு போட்டியாளரும் வெற்றியை விட எல்லைக் கோட்டைத் தொட்டு விடும் உற்சாகத்தை என்னுள்ளே தொற்றிக்கொள்ள வைத்துவிட்டு ஓடிக் கொண்டிருந்தனர்.
வருடந்தோறும் ஏப்ரல் பதினந்தாம் தேதி என்றால் அமெரிக்காவில் வசிப்போரருக்கு இரண்டு விஷயம் ஞாபகத்திற்கு வரும். ஒன்று வருமான வரி கட்ட கடைசி நாள். இன்னொன்று நாட்டுப்பற்றாளர் தினம் (Patriots day). இனிமேல், பாஸ்டன் நெடுந்தொலை ஓட்ட குண்டு வெடிப்பும் நினைவின் ஓரத்தில் ஒட்டி நிற்கும்.
இந்தப் பதினைந்தாம் தேதியும் வழக்கம் போலவே விடிந்தது. விடிகாலையில் அதி வேகமாக ஓடுபவர்களைக் கொண்டு களப்போட்டியாக பாஸ்டன் மாரத்தான் துவங்கியது. கொஞ்ச நேரம் கழித்து பொதுமக்களும் சாதாரண பிரஜைகளும் கொண்ட சாதனைகள் அல்லாத மாரத்தான் பகுதி துவங்கியது. அவர்களில் பெரும்பான்மையோர் எல்லைக்கோட்டை நெருங்கும் சமயம் பார்த்து ஒரு குண்டு வெடித்தது. பத்து விநாடிக்குள் எதிர் பகுதியில் இன்னொரு குண்டு. நூறு மீட்டர் சதுர அடிக்குள் மக்கள் சிதறுண்டு ஓடுகிறார்கள். இன்னும் எத்தனை குண்டு எங்கிருந்து வெடிக்குமோ என்னும் அச்சம் கொண்ட லட்சக்கணக்கான பார்வையாளர்கள் எங்கே பதுங்குவது என்று அலைபாய்கிறார்கள். அறுபத்து மூவர் போல் கூட்டம். அந்த கூட்டத்தில் நெரிசல் அசம்பாவிதம் நிகழாதபடி பார்த்துக் கொள்ளும் பொறுப்பும் காவலாளர்களுக்கு சேர்ந்து கொள்கிறது.
கள்ளன் பெருசா? காப்பான் பெருசா என்பார்கள். இருபத்தாறு மைல் பாதையை எப்படி பாதுகாப்பது? மில்லியன் மக்களின் கைப்பைகளை எப்படி சோதிப்பது? அரங்கத்தில் கூடும் மக்கள் என்றால், வாயிலில் நிற்க வைத்து பரிசோதிக்கலாம். இதுவோ, ஓட்டப்பாதை.
கடைசி நிலவரப்படி மூன்று பேர் இறந்து விட்டார்கள். இவர்களில் எட்டு வயது சிறுவனும் அடக்கம். பதினேழு பேர் உயிருக்கு ஊசலாடுகிறார்கள். ஏறத்தாழ நூற்றுஎழுபது பேர் கை கால் இழந்து காயமடைந்து இருக்கிறார்கள். அந்தப் பகுதியை பார்க்கவே போர்க்களம் போல் இருக்கிறது.
அது பாஸ்டனின் மிக முக்கியமான வார்த்தகப் பகுதி. ஐம்பது மாடி கட்டிடங்களும் ஆறேழு ஐந்து நட்சத்திர ஹோட்டல்களும் நிறைந்திருந்தாலும் பாஸ்டன் பொது நூலகமும், நார்த் ஈஸ்டர்ன் எனப்படும் வடகிழக்கு பல்கலைக்கழகமும் நிறைந்த எல்லா மக்களும் புழங்கும் பகுதி. அந்த வளாகம் முழுக்க யாரும் நுழைய தடை விதிக்கப் பட்டிருக்கிறது. இன்ச் இன்ச்சாக எஃப்.பி.ஐ. சோதித்து வருகிறது. ஒவ்வொரு குப்பைத் தொட்டியும், ஒவ்வொரு பொருளும் சேமிக்கப்பட்டு ஆராயப்படுகிறது.
இதற்கு முன்பும் மாரத்தான் போட்டியில் குண்டுவெடிப்பு நடந்திருக்கிறது. 2008ஆம் ஆண்டு கொழும்புவில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் பதினான்கு பேர் இறந்தனர். எண்பத்திமூன்று பேர்கள் படுகாயம் அடைந்தனர். ஓட்டப் போட்டி துவங்கும்போது குண்டு வெடித்தது.
பாஸ்டனுக்கு இந்த மாதிரி தீவிரவாதம் ரொம்பவே புதுசு. பாஸ்டனை தலைநகராகக் கொண்ட மாஸசூஸட்ஸ் மாநிலத்தை ‘அமைதிப் பூங்கா’ என்றே சொல்லலாம். துப்பாக்கிகளை வைத்துக் கொள்வதில் கொஞ்சம் கெடுபிடியான சட்டதிட்டங்கள் வைத்திருப்பார்கள். அதனால், கனெக்டிகட் மாநிலத்தின் நியுட்டவுன் பள்ளிக்கூடத்தில் நடந்தது போல் பாடசாலை துப்பாக்கி சூடுகளை பார்க்க முடியாது. அதே சமயம், தற்பாலருக்கு திருமண உரிமை வழங்குவதில் முன்னோடியாக விளங்குபவர்கள். சட்டமன்றத்திற்கு பெண் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது, கறுப்பின கவர்னர் என்று தாராளமாக இருக்கும் பாஸ்டன் என்பதால் ‘பைபிள் பெல்ட்’ என்றழைக்கப்படும் டெக்சாஸ்காரர்களுக்கு எட்டிக்காயாக கசக்கும் மாகாணம்.
அதைவிட மிகப் பெரிய கௌரவம் என்பது பாஸ்டன் பக்கத்தில் இருக்கும் கல்லூரிகள். சார்லஸ் நதிக்கு இந்தப் பக்கம் பத்தாயிரம் மாணவர்கள். அந்தப் பக்கத்தில் உள்ள கேம்ப்ரிட்ஜில், உலகப் புகழ் பெற்ற எம்.ஐ.டி, ஹார்வார்டு போன்ற உயர்தரமான பல்கலைக்கழகங்களில் இன்னொரு பத்தாயிரம் பதின்ம வயது உலகம்.
இவ்வளவு இளைய தலைமுறையினரையும் அச்சுறுத்துவது எளிய காரியம் அல்ல. ஆனால், இந்த குண்டுவெடிப்பு அதை நிறைவேற்றி இருக்கிறது. சீனாவில் இருந்து அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவரும் இந்த குண்டுவெடிப்பில் இறந்திருக்கிறார்.
யார் இந்த கொடூர செயலை நிறைவேற்றியிருக்கக் கூடும்?
2001ல் உலக வர்த்தக மைய தகர்ப்பிற்கு பின் அமெரிக்காவில் நடந்த அனைத்து தீவிரவாதத்திற்கும் அல்-க்வெய்தாவும் தாலிபானும் முழு பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த முறை இரண்டு நிறுவனங்களுமே பாஸ்டன் வெடிப்பை வரவேற்க மட்டுமே செய்திருக்கின்றன. உரிமை கோரவில்லை.
அப்படியானால், குண்டு எப்படி செய்தார்கள் என்பதை வைத்து யார் செய்திருக்கக் கூடும் என்று கண்டுபிடிக்கலாம். அந்த முறையை இப்போது உளவுத்துறை கையாள்கிறது. பிரெஷர் குக்கரில் வெடிகுண்டு வைத்திருக்கிறான். எந்தக் கடையிலும் எளிதில் கிடைக்கக் கூடிய கூரிய பொருள்களை அதனுள்ளே போட்டிருக்கிறான். பறவையை சுடும் துப்பாக்கி ரவை கொஞ்சம், குத்திக் கிழித்தெடுக்கும் ஆணிகள் கொஞ்சம் போட்டு குண்டு வெடிப்பில் சிதறுமாறு அமைத்திருக்கிறான். சமையலறையில் உபயோகிக்கும் காலமுடுக்கியைக் கொண்டு இயக்குகிறான்.
இதெல்லாம் ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் காலங்காலமாக தீவிரவாதிகள் செய்து கொன்று வரும் நுட்பம். மூன்றாண்டுகள் முன்பு நியு யார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் ஃபைசல் ஷசாத் செய்து காட்டி, கிட்டத்தட்ட வெடித்த நுட்பம். எனினும், இந்த முறை உளவுத்துறை வேவு பார்த்ததில் அரட்டைக் கச்சேரிகளில் அந்த மாதிரி சங்கேத மொழியோ, தொலைபேசியில் திட்டத்திற்கான பேச்சோ எதுவுமே வரவில்லை. எனவே, உள்ளூர் கைங்கரியமாகத்தான் இருக்குமோ என அனுமானித்திருக்கிறார்கள்.
கடைசியாக 1970களில் இந்த மாதிரி லோக்கல் தீவிரவாதம் கோலோச்சியது. வியட்நாம் போர், கருப்பின அடிமை அடக்குமுறை, பெண்களுக்கு வாக்குரிமை இல்லாமை போன்றவற்றால் அன்றைய காலகட்டம் பதற்றம் நிரம்பியதாக இருந்தது.
இன்று ஒபாமாவைக் கண்டு குடியரசுக் கட்சியின் தீவிர வலதுசாரியினர் பதறுகிறார்கள்.
என்ன துப்பாக்கிகளையும், யார் வேண்டுமானாலும் எங்கு சென்ராலும் எடுத்து செல்லும் உரிமையை நிலைநட்டக் கோரு 1995ல் ஒக்லஹோமா நகரத்தில் அமெரிக்க வெள்ளை இனம் சார்ந்த டிமொத்தி மெக்வெய் குண்டுவெடித்தார். 168 பேர் இறந்தார்கள். பல மாதம் கழித்துதான் டிமொத்தியை பிடிக்க முடிந்தது.
“கைத்துப்பாக்கி இருக்க உங்களுக்கு எதற்கு ஏகே-47 அடிதடி வகை? மானும் வாத்தும் வேட்டையாட வசதியான சின்னத் துப்பாக்கிகள் போதாதா? இந்த மாதிரி அனைவரின் கையிலும் இராணுவத்திற்கு மட்டுமே உரிய ஆயுதங்கள் தவழுவதால்தான் பள்ளிக்கூடங்களில் சிறார்களைக் கொன்று குவிக்கும் சம்பவங்கள் பெருகுகிறது” என்று உருக்கமான கோரிக்கையை முன்வைக்கிறார். இந்த மாதிரி எண்ணங்கள் டீ கட்சியை (Tea Party) பதற வைத்திருக்கிறது.
முன்னொரு நாளில் பிரிட்டிஷ் அரசாங்க விதித்த வரியை எதிர்த்து பாஸ்டன் துறைமுகத்தில் தேயிலையை கடலுக்குள் தள்ளி ஒத்துழையாமை இயக்கம் நடத்தினார்கள். அந்தப் போராட்டம், அமெரிக்காவின் சுதந்திரத்திற்கு வழி வகுத்தது. அதே போல், இன்றைய நாளில் ஒபாமாவின் சேமநலத் திட்டமும் குடிபுகல்வோருக்கான வரைவும் பெரும்பணக்காரர்களுக்கான வரிச்சுமையும் இன்றைய தேயிலைக் கட்சியைத் தோற்றுவித்திருக்கிறது. அவர்களில் ஒருவர் இந்தச் செயலை வித்தாக நினைத்து செய்திருக்கிறலாம்.
தற்போதைய ஆளுங்கட்சியும் ஒபாமாவும் தற்பால் விரும்பிகள் கல்யாணம் செய்து கொள்ள அனுமதி கொடுத்து விடுவார்கள். ஓரினச் சேர்க்கையாளர்களை இராணுவத்தில் வெளிப்படையாக அறிவித்துக் கொள்ள ஒபாமா சட்டம் இயற்றினார். இந்த மாதிரி செயல்களினால் கோபமுண்ட பல தேவாலயங்கள் ஒபாமாவின் கட்சியை கண்டித்தது. கடவுள் விரோதக் கொள்கை கொண்டு ஒபாமா இயங்குவதால் அதற்கு பதிலடி கொடுக்க அதி தீவிர கிறித்துவம் தலை தூக்கி இருக்கலாம் என்னும் நோக்கிலும் இந்த விசாரணை நடந்து வருகிறது.
இன்னும் சிலர் ஒபாமா அரசே இந்த கொலையை செய்திருப்பார் என்று நம்புகிறார்கள். தொலைபேசி ஒட்டுக்கேட்டலையும் உங்களின் வலை நடவடிக்கைகளை வேவு பார்ப்பதை பரவலாக்குவதற்கும் இந்த செயல் துணை நிற்கும். பாகிஸ்தானில் மட்டுமல்லாது, உள்ளூரிலும் டிரோன் ஏவுகணைகள் கொண்டு மக்களைக் கொல்வதற்கு உள்ளூரில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்த மாதிரி பக்கத்து வீட்டு பயங்கரவாதங்கள், ஒபாமாவின் விமானியில்லாத விமானத் தாக்குதல்களை நியாயப்படுத்தும்.
கடந்த நான்கு வருடங்களில் உள்ளூர் பயங்கரவாதம் 813% உயர்ந்துள்ளதாக அமெரிக்க அரசாங்க 2012ல் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. அதில் மூன்றில் ஒரு பாகத்தை செய்தவர்(கள்) யார் என்பது அமெரிக்கா உளவுத்துறைக் கூட கண்டுபிடிக்க முடியாத ரகசியம்.
இப்போதைக்கு எல்லோரும் சேர்ந்து இறந்தவர்கர்களுக்காக பிரார்த்திப்போம்.