தேர்தல் நேரத்தில் பல்வேறு சுவரொட்டிகள் நம் கவனத்தைக் கவர்கின்றன. அதுவும் நான் வசிக்கும் இடம் மிகவும் பலமான இடம். சரியாக 250 மீட்டர் நடந்தால் கோபாலபுரத்தில் கருணாநிதியின் வீடு. மற்றொரு பக்கம் 500 மீட்டர் நடந்தால் ராயப்பேட்டை அஇதிமுக தலைமை அலுவலகம். அதனால் தினமும் அலுவலகம் செல்லும் வழியில் பார்க்க போஸ்டர்களுக்கு சிறிதும் குறைவில்லை.
இந்த போஸ்டர்களை கேமராவால் படம் பிடித்து தேர்தல்2006 வலைப்பதிவில் போட ஆசைதான். ஆனால் இதற்கென கையில் கேமராவை எடுத்துக்கொண்டு செல்வது அபத்தமாக உள்ளது. என் செல்பேசியில் கேமரா வசதி கிடையாது.
எனவே அவ்வப்போது படம்; மற்ற நேரங்களில் போஸ்டர்களில் கண்ட வாசகங்கள் மட்டும்.
இன்று பார்த்த போஸ்டர்:
“தலைவர் கலைஞர் அவர்களே
சோனியா காந்தி அவர்களே
தமிழகத்திற்கு 13 மந்திரிகள்
ஆனால் நாடார்களுக்கு பட்டை நாமமா?
பதில் சொல்வீர்!
நாடார் பேரவை”
இந்த போஸ்டரில் காமராஜர் படம் இடது மேற்புறம் உள்ளது.
நேற்று நானும் அந்த சுவரொட்டியைப்பார்த்தேன், அதைப்பற்றி பதிய வேண்டுமென்று நினைத்திருந்தேன். அந்த 13 அமைச்சர்கள் இருந்தும் தொலைநோக்கு கொண்ட வளர்ச்சிப்பணிகள் எதுவும் தமிழகத்தில் இல்லாமல் மக்களுக்கு இடப்பட்ட பட்டை நாமம் பற்றி யாருக்கும் கவலை இல்லை, அவரவர் இனத்திற்கு பிரதிநிதி இல்லையென்ற கவலைதான்.. நல்லா இருங்கப்பா…
இது யாரோ எம்மெல்லே சீட்டுக்கு அடிபோடுவது போல் அல்லவா உள்ளது?
இது யாரோ எம்மெல்லே சீட்டுக்கு அடிபோடுவது போல் அல்லவா உள்ளது?
ஹூம்.அது நம்ம குமரி அனந்தனோட இளவலா இருப்பார்னு நினைக்கேன்.
கொங்கு பேரவை, தலித் பேரவை, தேவர் பேரவை என ஜாதீய அலம்பல்கள் தினமும் அரங்கேறும் சுவரொட்டிகளில், நாடார் பேரவை மட்டும் தனிப்படுத்தப் பட்டுக் காட்டப் படுவானேன்? சரத் குமார் விஷயம் சூடு பிடிக்கும்போல் இருப்பதாலா?
தலைப்பைப் பார்த்து, என்னமோ ஏதோன்னு நினைச்சு வந்தேன்…. ஜூனியர் விகடன், ரிப்போர்டர் , தமிழ்முரசு வகையறாவை எல்லாம் அதிகமா படிக்காதீங்க..
அவர்களுக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டியது தான்.
காமராஜர், அம்பேத்கார்,VO சிதம்பரம்,முத்துராமலிங்கதேவர், மற்றும் சிலர் அனைவருக்கும் பொதுவானவர்கள் அவர்களை தமது இனத்துக்குத் துணையா சேர்த்துக்கொள்ளக்கூடாது.
Today’s punch dialogue :-
அதிமுக அவைத் தலைவர் காளிமுத்து
புரட்சித் தலைவர் அவர்கள் திமுகவை அமாவாசையாகிகனார். ராஜ்ஜியத்தை ஆண்ட கருணாநிதி பூஜ்ஜியம் ஆனார்.
1996ல் கம்பங் கொல்லைக்கு காட்டெருமையை காவல் வைத்தது போல, கொய்யா தோப்புக்கு குரங்கை காவல் வைப்பது போல, திருடன் கையில் சாவிக் கொத்தை கொடுப்பது போல கருணாநிதியை முதல்வராக்கிவிட்டனர்
தோல்விப் பள்ளத்தாக்கில் இருந்து அதிமுகவை சிகரத்தில் மீண்டும் அமர்த்தினார் அம்மா. விழுந்ததும் எழுந்தோம், எழுந்ததும் நின்றோம், நின்றதும் வென்றோம்.
கருணாநிதி முல்வராக இருந்தபோது, குண்டுவெடிக்காத நாளே தமிழகத்தில் கிடையாது என்று சொல்லலாம். கோவையில் 26 நிமிடத்தில் 30 குண்டுகள் வெடித்தன.
தமிழக கடற்பகுதிகளை 800 கிலோமீட்டர் வேகத்தில் சுனாமிப் பேரலைகள் தாக்கி சீரழித்தபோது, அப்பகுதிகளை 1,000 கிலோமீட்டர் வேகத்தில் சென்று பார்த்து பரிதவித்த மக்களுக்கு ஆறுதல் கூறினார் ஜெயலலிதா
நிதி மந்திரியாக ப.சிதம்பரம் இருக்கிறார். அவர் சதி மந்திரி. தமிழகத்துக்கு நிதி வராமல் பார்த்துக் கொள்வதே அவர் வேலை. சில கோழிகள் அதிகாலை கூவும், சில சாமத்தில் கூவும். சிதம்பரம் சாமக் கோழி.
நான் என்னமோ எங்க ஊர்லதான் இந்த போஸ்டர்களெல்லாம் நல்லா இருக்குதுன்னு நினச்சிக்கிட்டு இருக்கேன்.
எங்க ஊரு போஸ்டர்ல ஒண்ணு இன்னைக்கிப் பாத்தது பிடிச்சிது. உடனே இனிம அப்பப்போ அந்த மாதிரி போஸ்டர்களைப் படம் பிடிச்சிப் போடறதுன்னு முடிவு பண்ணியிருக்கேன். ஆரம்பிக்கணும்.
அதற்கு இந்த இடுகையைப் பயன்படுத்த முடியுமா? தகவல் தாருங்களேன்..
தருமி: நிச்சயமாக. உங்களையும் ஓர் உறுப்பினராக்கி விட்டால் நீங்கள் படங்களை இங்கே ஏற்றலாம். (நாராயண்?)
தனு/தானு?: நான் குறிப்பாக நாடார் பேரவையைப் பற்றி எழுதவேண்டும் என்று எழுதவில்லை. இதுவரை இதுதான் கண்ணில் பட்டுள்ளது. கண்ணில் படும் அனைத்து போஸ்டர்களையும் பற்றி நிச்சயம் எழுதுவேன்; அல்லது படம் போடுவேன்.
தருமி, என்னுடைய மின்னஞ்சலுக்கு ஒரு மடல் அனுப்புங்கள், உறுப்பினராக்குகிறேன் [narain at gmail dot com] பின்பு பல படங்களை நீங்கள் நேரடியாக இந்த தளத்தில் ஏற்றலாம்.
பத்ரி, அதை விட காமெடியான ஒரு போஸ்டர், கீரிம்ஸ் ரோடு சாலையின் திருப்பத்தில் உள்ளது. பில் கிளிண்டன் “அம்மாவிற்காக” வாக்கு கேட்கிறார். படம் போடுகிறேன் 😉
நாடார் பேரவை எப்போது தனி கட்சி தொடக்கி , நாடார் மக்களை ஒன்னு செக்க போறாங்க ?