காரணங்கள்:
1. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தற்போதைய தலைவரான மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக-வில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி ஆகிய இருவரில் யார் கலைஞரின் அடுத்த அரசியல் வாரிசு என்ற கருத்துக்கணிப்பு முடிவுகளை 2007 ஆம் ஆண்டு மே 9-ம் தேதி தினகரன் நாளிதழ் வெளியிட்டது. தினகரன் நாளிதழ் கலைஞரின் பேரன் கலாநிதி மாறனின் சன் டி.வி குழுமத்தின் அங்கமாகும். கலைஞரின் அரசியல் வாரிசு யார் என்ற கருத்துக்கணிப்பில் மு.க.ஸ்டாலினுக்கு மக்களின் ஆதரவு அதிகம் இருப்பதாக முடிவுகளை வெளியிட்டது தினகரன் நாளிதழ். மு.க.அழகிரியின் ஆதரவாளரும், திமுக தொண்டரணி அமைப்பாளருமான அட்டாக் பாண்டி தலைமையிலான குண்டர்கள் மதுரையில் இருந்த தினகரன் அலுவலகத்தை தாக்கினர். பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி, பெட்ரோல் குண்டுகளை வீசியதில் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்களாகப் பணியாற்றிய வினோத், கோபி மற்றும் காவலாளி முத்து ராமலிங்கம் ஆகிய மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
அந்த நிகழ்வை நினைவு கூறுவதற்காக, சிம்பாலிக் ஆக, அந்த அப்பாவி உயிர்களை நினைவு கோருகிறார் எழுத்தாளர் அழகிய பெரியவன்.
2. தினத்தந்தி பத்திரிகையை இதே ‘குற்றத்துக்காக’ எரிக்க முடியுமா? நாடார் படைகள் வந்து சுளுக்கெடுத்துவிடும் என்கிற பயமா?
(என்னும் கேள்வியை அழகிய பெரியவனிடம் முன் வைக்கிறார் ஒத்திசைவு) வெ. ராமசாமி
3. அதிமுக கொடுத்த பணத்தை எரிக்க முடியாது. தினகரன் கும்பல் கைமாற்றிய பிட் காயினைப் பற்ற வைக்க முடியாது. அதெல்லாம் நிஜமாகவே காசு செலவாகிற விஷயம். எனினும், வாளாவிருக்க இயலாது. அதற்காக பைசா பிரயோசனம் இல்லாத அறச்சீற்றத்தைக் கையாள்கிறார் ரைட்டர் அழகியபெரியவன்.
4. ஹோமம் செய்தால் ஆன்மிகம் ஆகி விடும். அக்கினி வளர்த்தால் பிராமணக் கட்சி ஆகி விடும். எனவே, இவ்வாறு யக்ஞம் செய்கிறார் அழகிய பெரியவன்.
5. எல்லாப் பேப்பரையும் வாங்கி எரிப்பது நிஜமாகவே போர் அடிக்கும் வேலை. பாதி செய்தித்தாள் கடைகள் இயங்குவதில்லை. அன்றாடம் செய்தித்தாள் வாங்காவிட்டால், செய்தித்தாளே கையில் கிடைக்காது. தினசரி படிப்பதைத்தானே எரிக்க முடியும் என்கிறார் அழகிய பெரியவன்.
6. செய்தித்தாள்கள் எல்லாம் இது காலம் மட்டும் நிஜமாகவே “நான்காவது தூண்” என்று நம்பிக் கொண்டு இருந்தார் அழகியபெரியவம். அந்த போலி சாயம் போய் வெளுத்துவிட்டதில் அதிர்ச்சி அடைகிறார். அன்றாட பேப்பர்கள், ஊடகங்கள், மீடியாக்கள் எல்லாமே காசுக்காக அச்சிடுபவை என்றும் பணம் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் செய்தியாக வெளியிடும் என்பதை உணர்கிறார் அழகியபெரியவன். அதனால் வந்த ஆத்திரம் இவ்வாறு வெளிப்பட்டது.
7. ஃபேஸ்புக், வாட்ஸப், ட்விட்டர் போன்ற ஊடகங்கள் மட்டுமே இவ்வாறு ஃபேக் நியூஸ் போட வேண்டுமா என்று போட்டிக்கு பிள்ளைப் பெற்றது தமிழக தினசரிகள். அன்றாடம் ஃபேஸ்புக், வாட்ஸாப் பார்க்காமல் இருக்க முடியாது. அந்த அப்ளிகேஷன்களை ஐஃபோனை விட்டு நீக்கவும் முடியாது. ஆப்பிள் ஃபோனையும் எரிக்க முடியாது. “எடுடாப் பேப்பரா… எரிடா பொறுப்பா!” என்று செயலில் இறங்கி ஃபேஸ்புக்கில் தன் கண்டனத்தைப் பதிவு செய்கிறார் அழகியபெரியவன்.
8. தேர்தலில் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. தேர்தல் நாளன்று பேசப்பட விரும்பி, இச்செயலை நிறைவேற்றினார் அழகியபெரியவன்.
9. அமெரிக்காவில் “Burning Man” புகழ்பெற்ற விழா. அது வீடு அடங்கிக் கிடந்த காலத்தில் தள்ளிப் போடப்பட்டது. அதைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு செல்கிறார் அழகியபெரியவன்.