Tag Archives: சுவாரசியம்

டேய்… அவனா நீ

என்னோட பள்ளித் தோழனை 96 படம் மாதிரி இருபதாண்டு கழித்து பார்த்த போது நடந்த உரையாடல்.

“பொழுதுபோக்கிற்கு என்னடா பண்றே!?”

“எழுத்தாளரா இருக்கேண்டா…”

“அச்சச்சோ… உங்கிட்ட கவனமா இருக்கணுமே! எத எடுத்தாலும் ஆராஞ்சுண்டு, எதிலும் குத்தம் கண்டுபிடிச்சுண்டு, எல்லாவத்தையும் காமாலக் கண்ணோடு பாக்கிறவனா நீயு!”

“அப்படியெல்லாம் பொத்தாம் பொதுவில் சொல்ல முடியாதுடா! அலுவலில் கூட இப்படி பாக்கிறவங்கள QAனு சொல்லி மரியாதையா டெஸ்ட்டர், குவாலிடி அஷுயூரன்ஸ், பிசினஸ் அனலிஸ்ட்னு சொல்லிண்டு இருக்கோமே?”

“என்ன வேணா சொல்லிக்க மச்சீ… நீங்க எல்லாம் கிட்டத்தட்ட சைக்கோ! வாழ்க்கைய எப்படி அனுபவிக்கணும்னு தெரியாம திண்டாடற ஜென்மங்கதான் எழுத்தாளராத் திரியுது!”

”டேய்… ஏண்டா இந்த கொலவெறி?”

“நான் ஃபேஸ்புக்கில் ஆரம்பிச்சு அந்துமணி வர பாத்துட்டேண்டா! எல்லோரும் கோணப் பார்வை பாக்கிறேன்… என்னது கேவலமாப் போகும்னு யோசிக்கிறேனு பைத்தியமா ஆக்கி; சகாக்களை பயமுறுத்தி; பார்க்காத நீலிய பொண்டாட்டியா ஆக்கி; அமாவாசக்கும் அப்துல் காதருக்கும் முடிச்சுப் போட்டு தீவிரவாதம் துவங்கி டைவோர்ஸ் வரை… நம்ம சிக்கலுக்கு சிரிப்புத் திருடன் சிங்காரவேலுவாக சித்தரிக்க வேண்டியவங்க — சாஹித்ய அகாடெமி ஆசையில் சின்னாபின்ன அச்சுபிச்சு சித்தாளாக சீரியசாக்கி வைக்கிறாங்க!”

”அதுதாண்டா… அடையாள நெருக்கடி. உனக்கு என்ன பிரச்சினை என்று அறிந்து கொள்ள உதவ நல்ல கட்டுரைகளையும் கதைகளையும் என்னால் பரிந்துரைக்க முடியும்.”

“வேணாண்டா…”

“வெறுமனே சூப்பர் சிங்கர், பிக் பாஸ், ரீல்ஸ் பார்க்காம, சமூகச் சிக்கல்களையும் குடும்பப் பிரச்சினைகளையும் தனி மனித உரிமைகளையும் உணர, அறிய, புரிந்து கொள்ள… நாங்க வேணும்!”

“வேணாண்டா…”

“பொது புத்தி, திரள் மந்தை, கூட்ட மந்தி அறிவிலித்தனத்தில் இருந்து அறிவார்ந்த தளத்திற்கு மாற்றும் கடமை எனக்குண்டு தோழா! தமிழ்ச் சமூகமே ராம்ஜி யாஹூ ஆக மாறும் போது பத்ரித்தனமாக நாங்கள் தேவை”

பரட்டையை சப்பாணி பளாரென்று அடித்துவிட்டான்.

“அண்ணாத்த… சப்பாணிகளுக்கு மயிலு கிடைக்கிறார்கள். ஆனால், இருபதாண்டு கழித்து இங்கிலீஷ் விங்லிஷ் அஜீத் கிடைப்பார்களா என்னும் இருத்தலிய யதார்த்தவாத மாந்திரீக அகநிலைக் கருத்துமுதல்வாதத்தின் நவீன வடிவமாக நேர்காட்சிவாதம் இது நண்பா”

அவன் அழ ஆரம்பித்து விட்டான்.
லிட்ஃபெஸ்ட்டுக்கு வர ஒப்புக் கொண்டு விட்டான்.

நன்றாக எழுத என்ன தேவை?

ஏழாம் வகுப்பு இறுதித் தேர்விற்கு மகள் தயாராகிக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு உதவும் நோக்கில் சில கட்டுரைகள் படிக்க ஆரம்பித்தேன். அவள்தான் எடுத்துக்காட்டுகளை பரிந்துரைத்து படிக்க வைத்தாள்.

சென்ற வருடம் பரீட்சை எழுதியவர்களின் பதில்கள்தான் இந்தக் கட்டுரைப் பரீட்சையில் என்ன கேள்விகள் கேட்கிறார்கள்?

1) உங்கள் வாழ்வை இன்னொருத்தராக வாழ நினைத்தால், எவராக மாறுவீர்கள்?
2) மற்றொரு நாட்டில் பத்தாண்டுகளாவது வசிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டால், எந்த இடத்தைத் தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன்?
3) ஒருவரிடம் எந்த குணாதிசயம் அவசியம் அமைந்திருக்க வேண்டும்? ஏன்?
4) பள்ளி அல்லாமல், பிற இடங்களில் நீங்கள் கற்றுக் கொள்ளும் ஏதாவது ஒரு செயலையோ, கலையையோ, நுட்பத்தையோ, சொல்லுங்கள். அது எப்படி உபயோகமாகும் என்பதையும் எதனால் ஆர்வத்துடன் தெரிந்து கொள்கிறீர்கள் என்பதையும் சொல்லுங்கள்.

இப்படி, எல்லாமே சுயம் சார்ந்த கட்டுரைகள்.

பள்ளியில் இரண்டு மணி நேரம் தந்திருக்கிறார்கள். முதலில் ஒரு அரை மணி நேரம் குறிப்பெடுக்கிறார்கள். யோசிக்கிறார்கள். அதன் பிறகு கடகடவென எழுதி விடுகிறார்கள். நான் படித்தவை பெரும்பாலும் நல்ல கட்டுமானத்துடன் நீளமான கட்டுரைகள். 1500 வார்த்தைகளாவது இருக்கும்.

ஒருவர் Zeus ஆகப் போவதாக எழுதியிருந்தார். ஏ4ல் நான்கைந்து பக்கங்கள் நீளம். செம சுவாரசியம். நடை மட்டும் இனிப்பாக இல்லாமல், ஜீயஸ் பற்றிய தகவல்களும் எக்கச்சக்கம். சாதகங்களைப் பட்டியலிட்டார்; பாதகங்களையும் தற்குறிப்பேற்று விளக்குகிறார். இயல்பான நகைச்சுவை. முதல் இரண்டு பத்தியில் ‘யாராகப் போகிறாரோ!’ என்னும் ஆர்வத்தைத் தூண்டினார்.

இதே போல் பத்து, பனிரெண்டு கட்டுரைகளை வாசித்தேன். மேற்கத்திய உலகில் ‘எப்படி எழுதுவது?’ என்பதை சின்ன வயதில் இருந்தே கற்றுக் கொடுக்கிறார்கள். தொடர்ச்சியாக, ஒவ்வொரு வகுப்பிலுமே, எழுதுவதை ஊக்குவிக்கிறார்கள்.

நான் படித்த காலத்தில் திருக்குறளுக்கு உரையாகட்டும்; உரைநடைக்கு பதிலாகட்டும். இம்மி அகன்றால் கூட மதிப்பெண் கிடைக்காது. இப்பொழுதைய நிலை எப்படியோ!?

ஆங்கிலப் பாடத்திலும் கற்பனைக்கும் சொந்தத் திறமைக்கும் பதில் இலக்கணம் பிசகாத எழுத்தில் மட்டுமே கவனம் கொண்டிருப்போம். மேற்கிலும் இலக்கணத்திற்கு மரியாதை கொடுக்கிறார்கள். ஆனால், தன்னிலை சார்ந்த நீள் கட்டுரைகளையும், படித்துப் பார்த்து புரிந்து கொண்டதற்கான வாசக அனுபவங்களையும் விரிவாக எழுத வைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இணையத்தில் தமிழ் எழுத்துகள் நிறைய கிடைக்கிறது. எனக்குத் தமிழில் எழுதத் தெரிவதால் தமிழ்ப்பதிவுகளை உருவாக்குகிறேன். சிந்திக்கத் தெரிந்ததாலோ, சிரிக்க வைக்கத் தெரிவதாலோ, தமிழ்ப்பதிவுகளை உருவாக்கவில்லை.

இது உருவாக்கும் சாராரின் நிலை. இதை உட்கொள்பவரின் மனநிலையில் இருந்து இன்னொரு தன்னிலை விளக்கம் கொடுப்பேன். ஆனால், இரண்டையுமே நான் சரியாக செய்வதில்லை என்றே எண்ணுகிறேன்.