Tag Archives: சிக்கல்

சாது மிரண்டால்: சிக்கல் பின்னல்

வாசிக்க: “Labyrinth” – The New Yorker

Amelia Gray is the author of the novel “Threats” and the short-story collection “Gutshot,” which will be published by FSG Originals in April. Amelia Gray’s “Labyrinth” was originally published in the February 16, 2015 issue of The New Yorker.

Amelia+Gray_Labyrinth_New_Yorker_Fiction_Story

அமீலியா கிரே எழுதியதில் இது சற்றே சாதாரணமான கதை. பழங்காலத் தொன்மத்தை, நவீன யுகத்திற்கு ஏற்ப சொல்வது அமீலியாவின் வழக்கம். இந்தக் கதையும் அவ்வாறே முன்னுமொரு யுகத்தில் நம்பப்பட்ட கதையை, தற்காலச் சூழலில் விவரிக்கிறது.

சிக்கல்வழி என்னும் இந்தக் கதைக்கு கிரேக்கப் புராணத்தில் வரும் தீஸியஸ் கதை தெரிந்திருப்பது அவசியம். ஹிந்து மதத்தில் வரும் நந்தி போல் கிரேக்க ஹெல்லனிய தொன்மத்தில் மினடோர் இருக்கிறான். கீழே அவனைப் பார்க்கலாம். பாதி மனிதன்; பாதி எருது.

minotaur-Nandhi_Theseus_Greek_Hellenic_Mythology_Apis_Egypt

பேரரசன் மினோஸ் என்பவருக்கும் அவரின் அரசியார் ஆன பாஸிஃபே என்பவருக்கும் மகனாகப் பிறக்கிறார் மினொடார். சூஸ் (Zeus) அனுப்பிய காளையோடு அரசி பாஸிஃபே உறவு கொண்டு, அந்தக் கள்ள உறவினால் ரிஷபத்தின் தலையும் மானுட உடலுமாகப் பிறக்கிறான் மினொடார். இதைக் கண்டு அரசன் மினோஸ் வெட்கம் கொண்டு, வினோத மினொடார் குழந்தையை ’இடர்ப்பின்னல்’ (labyrinth)ல் அடைத்து வைக்கிறான்.

நாட்டில் குற்றம் புரிபவர்களையும், போரில் சிறைப் பிடித்தவர்களையும் இந்த இடர்ப் பின்னலுக்குள் அனுப்பி வைப்பான் அரசன் மினோஸ். அவர்களால், அந்த சிக்கலில் இருந்து வெளியே வர இயலாது. மாட்டிக் கொள்வார்கள்; முழிப்பார்கள். இந்த முரட்டுக் குழந்தைக்கு தீனியாவார்கள்.

காலம் ஓடுகிறது. அரசன் மினோஸின் இன்னொரு மகன் ஆன இளவரசன் ஆண்ட்ரோஜியஸ் (Androgeus) ஒலிம்பிக்ஸில் கலந்துகொள்ளச் செல்கிறான். ஏஜியஸ் (Aegeus) அரசனின் சொந்த ஊரில் ஏத்தனிய (Panathenaic) போட்டிகள் நடக்கின்றன. போட்டிக்குச் சென்ற இடத்தில் தன்னுடைய அம்மாவை முறைதவறி உறவு கொண்ட காளையோடு மராத்தான் ஓட்டம் ஓடுகிறான். அந்தக் காளை, மினொடாரின் தந்தை. மினொடாரின் தந்தை, இளவரசன் ஆன்டிரோஜியஸைக் கொன்று விடுகிறது.

ஏஜியஸ் அரசனின் ஆளுகைக்கு உட்பட்ட இடத்தில் நடந்த இந்தப் பலிக்கு பிராயச்சித்தமாக ஒவ்வொரு வருடமும் ஏழு ஆண்களையும், ஏழு பெண்களையும் பலியாகத் தருமாறு அரசன் மினோஸ் ஒப்பந்தம் போடுகிறான். ஏஜியஸ் அரசனும், இந்த பலிக்கடாக்களை மினோடார் இருக்கும் சிக்கல் வளைக்குள் அனுப்பி இரையாக்குகிறான்.

மகாபாரதத்தில் பீமனின் பகாசுர வதம் நினைவுக்கு வரலாம். ஏகசக்ர நகரத்தில் பாண்டவர்கள் தங்கியிருந்தபோது பீமனால் பகாசுர வதம் நடைபெற்றது. பகன் என்னும் அசுரன் இந்த நகரத்தை ஒட்டிய மலையடிவாரத்தில் இருந்துகொண்டு ஊரில் உள்ள அவ்வளவு பேரையும் அடித்துக் கொன்று ஊரையே ரணகளமாக்கியிருந்தான். இதனால் அவர்கள் ஒன்று திரண்டு பகாசுரனை சந்தித்து ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன்படி பகாசுரன் பசிக்கு உணவாக “எள்ளு அன்னம், மூன்று வகையான பருப்பு உருண்டைகள், பொரி, அப்பம், கள், சாராயக் குடங்கள், கரடி, பன்றி மாமிசம், கறுப்பு நிறம் கொண்ட இரண்டு காளைமாடுகள், ஒரு நரனாகிய மனிதன்” என்று ஒரு பட்டியலை தயார்செய்து தினமும் வேளை தவறாமல் அனுப்பி வைப்பதாக ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தனர்.

பீமன் வண்டி நிறைய உணவு இருக்க அந்த வண்டியை ஓட்டிக்கொண்டு மலையடிவாரத்துக்கு சென்று, பகாசுரனையும் யுத்தம் செய்ய அழைத்து அவனோடு மோதி, அவன் குடலை உருவி மாலையாகவே போட்டுக்கொள்கிறான். குடல் மாலையோடு பகாசுரனை தலைக்கு மேல் தூக்கி வந்து ஊர் எல்லையில் கொண்டுவந்து போட, ஊரே ஊர்வலம் போல வந்து இறந்துகிடந்த பகாசுரனைப் பார்த்து மகிழ்கிறது.

ஆனால், கிரேக்கக் கதை கொஞ்சம் மாறுபடுகிறது.

இரண்டாண்டுகளாக ஏஜியஸ் அரசன் தன்னுடைய குடிமக்களை அனுப்பி வைக்கிறான். மூன்றாம் ஆண்டு ஏஜியஸ் அரசனின் மகன் தீஸியஸ் (Theseus) “என்னை அனுப்பு! அந்த அதிகாரநந்தியைக் கொல்கிறேன்!” எனச் சூளூரைக்கிறான்.

கடலில் செல்வதற்கு முன் கடைசியாகச் சொல்கிறான். “நான் வெற்றியோடு திரும்பினால், இந்தப் பாய்மரப் படகில் வெள்ளை நிறப் பாய் பறக்கும். மினாடொரிடம் பலியாகி விட்டால், கறுப்பு நிறப் பாய் இருக்கும்! அதை வைத்து உன்னைக் காப்பாற்றிக் கொள்!” என முன் ஜாக்கிரதையாக இருக்குமாறு சொல்லியும் செல்கிறான்.

மினொடாருக்கு ஏரியாட்னி (Ariadne) என்னும் மகள் இருக்கிறாள். எல்லா இளவரசிகளையும் போலவே, இவளும் பேரழகி. ஆண்வாடையே பார்க்காமல் வளர்ந்தவள். வந்த ஒன்றிரண்டு ஆண்களும் அப்பா மினொடாருக்கு இறையாகிப் போனவர்கள். தீஸியஸைக் கண்டதும் காதல் வருகிறது. தீஸியஸிற்கு மினொடார் இருக்கும் சிக்கல் வளையின் நுட்பங்களைச் சொல்கிறாள்.

ஒரு நூற்கண்டைக் கொடுக்கிறாள். உள்ளே நுழைவது எளிது. நடுவை அடைந்து விடுவதும் எளிது. மினோடாரை கொன்று விடுவது கூட எளிது. ஆனால், கொன்ற பிறகு எவ்வாறு வெளியேறுவது? அபிமன்யு போல் சக்கர வியூகத்தை பிளந்து கொண்டு நட்ட நடு வலைப்பின்னலில் வந்து விடலாம். அந்த இடர்ப்பின்னலில் இருந்து சுருக்கே வெளிப்பாதை கண்டுகொள்வது எவ்வாறு? அந்த நூற்கண்டை வைத்து, உள்ளே வந்த வழியை அடையாளம் காணலாம். நூற்கண்டின் வாலைப் பிடித்தால், வெளிச்சம் கிட்டும் என்கிறாள்.

அவனும் இளாவரசி ஏரியாட்னி சொற்படியே நடக்கிறான். நூலைப் பிரித்துப் போட்டுக் கொண்டே இடர்ப்பின்னல் உள் செல்கிறான். Mazerunner படம் போல் இருக்கிறது. மினொடார் நந்திதேவரை வீழ்த்துகிறான். நூல் போட்ட பாதையிலேயே வெளி வந்து இளவரசி ஏரியாட்னியின் கைப்பிடிக்கிறான்.

இங்கே சுபம் போட்டிருக்கலாம். ஆனால், கதை நீள்கிறது.

வெற்றிக் கொடி கட்டிய தீஸியஸ் படகை நடுவில் இளைப்பாறலுக்காக நக்ஸோஸ் (Naxos) தீவில் நிறுத்துகிறான். உல்லாசமாகப் பொழுது போகிறது. விடியற்காலையில் எழுந்து படகை செலுத்துகிறான். இளவரசி ஏரியாட்னியை தீவிலேயே மறந்து (?!?) விட்டுவிடுகிறான். அவளைப் பிரிந்த துக்கம் தாளாது, தன்னுடையக் கப்பலில் கறுப்புக் கொடியைப் பறக்கவிட்டுத் திரும்புகிறான்.

கறுப்புப் பாய்மரத்தை பார்த்த அப்பா ஏஜியஸ், மினோடார் வருகிறான் என பயந்து, கடலில் குதித்து தற்கொலை செய்துகொள்கிறான்.

இப்பொழுது, மீண்டும் நியு யார்க்கர் கதைக்கே வந்துவிடலாம். அதற்கு முன் எனக்கு ஏன் அமீலியா கிரே பிடிக்கும் என்பதைச் சொல்லிவிடுகிறேன்.

நியு யார்க்கர் பேட்டியில் அமீலியா இவ்வாறு சொல்கிறார்: “நான் புராணத்திலும் பைபிளிலும் தொன்மக் கதைகளிலும் வளர்ந்தவள். எந்தப் புத்தகத்தை எடுத்தாலும், அதில் உள்ள மிக மிகச் சிறியக் கதையில்தான் படிக்கத் துவங்குவேன். குறைந்த வார்த்தைகளில் என்ன சொல்ல முடியும்? அதை எப்படி இந்தக் கதாசிரியர் சொல்கிறார்? பெரிய நாவல் எழுதும்போது கூட குட்டி விஷயங்களில் தனித்து நிற்கும் காட்சிப்பரப்பைக் கண்டுகொள்வதில் தனி சுகம் கிடைக்கிறது!”

என்னதான் ஜெயமோகனைக் கும்பிட்டாலும், இந்த மாதிரி சுறுக் புனைவுகள் தரும் சுகம் அலாதியானது.

Amelia Gray on October 28, 2010

உள்ளுர் திருவிழாவில் நியு யார்க்கர் கதை துவங்குகிறது. ரங்க ராட்டினம் ஒரு புறம். விதவிதமான தின்பண்டங்கள் இன்னொரு புறம். வருடா வருடம் நடக்கும் அறுவடைக் கொண்டாட்டம். அதன் ஒரு அங்கமாக மனிதனை விட உயரமாக வளர்ந்து இருக்கும் கதிர்களின் நடுவே கண்ணாமூச்சி விளையாட்டு இருக்கிறது. இந்த வருடம் அது கிடையாது.

ஒரு இடத்தில் துவங்கி, இன்னொரு இடத்தில் முடியும் புதிர்பாதை (corn maze) கிடையாது. வாழ்க்கை போல், இதுதான் ஆரம்பம், இது நடுப்பகுதி, இது இறுதி இடம் என்று சென்று முடிக்க முடியாது. இந்த வருடம் கதையின் தலைப்பில் வரும் ‘சுருள் வளைவு சிக்கல் அமைப்பு’ (labyrinth). இதன் மையத்தை அடைந்தால் “உங்களுக்கு வாழ்க்கையில் என்ன வேண்டுமோ, அதை உணர்வீர்கள்!” என்கிறார், இந்த அமைப்பைக் கட்டியவர்.

எவருமே அந்தச் சுழலுக்குள் செல்ல விரும்பவில்லை. தலையை எதற்கு தேவையில்லாமல் நுழைக்க வேண்டும்? வழக்கம் போல், எல்லா வருடங்களும் போல், கூட்டம் கூட்டமாக, மந்தை மந்தையாக, சாரி சாரியாக, ஒன்று சேர்ந்து, ஒரு பாதையில் செல்வோம். நடுவே வழி தெரியாமல் தொலைந்து போவோம். எல்லோருடனும், ஒன்றாக வெளியேறுவோம். அதைத்தான் ஆசைப்படுகிறோம் என்கிறார்கள்.

சுழல்பாதையைக் கட்டியவனுக்கோ கோபம்; அப்படியே நிறைய வருத்தம்; கூடவே கழிவிறக்கம். என்னடா இது! ஒருவருக்குக் கூடவா, இந்தப் பாதைக்குள் நுழைந்து பார்க்க திராணி இல்லை! எதற்காக ஆசைப்படுகிறோம் என்பதைக் கண்டு அடைவதுதானே, இந்தச் சுழலின் நோக்கம்? அதைச் செய்து பார்க்காமல், ஒதுங்கி, கரையிலேயே தேங்கி இருக்கிறார்களே!

கரையிலேயேத் தேங்கி இருக்கிறோம் என்று பிறர் சொல்வதை நாம் ஏன் குற்றமாகப் பார்க்கிறோம்? எதற்காக, யாருக்கு நிரூபிப்பதற்காக எந்தவொரு விஷயத்தையும் கையில் எடுக்கிறோம்? மற்றவர்களின் சான்றிதழுக்காகத்தான் போட்டிகளில் குதிக்கிறோமா?

கோட்டையில் ஏறி கொடியை நாட்டியபின், கீழிறங்கும் வித்தை உங்களுக்குத் தெரியுமா? சுழலை வெற்றிகரமாக முடித்துவிட்டபின், அந்த சுழலை முழுமையாகப் புரிந்துகொண்டபின், அதைவிட்டு, வெளியேற முடியுமா?

இந்தக் கதையைப் படித்தபின் உங்களுக்கு என்ன கேள்விகள் தோன்றின…?

சரி… இந்த சாதாரணக் கதையை நியு யார்க்கர் ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? இரு பதிப்பாசிரியர்களின் உரையாடலை இங்கேக் காணலாம்:

திமிங்கிலமும் எழுத்தாளரும்: பயணச் சிக்கல்

New_England_Aquarium_Whale_Watch

கோடை காலத்தில் பாஸ்டனின் அட்லாண்டிக் கடலில் நிறைய திமிங்கிலங்களைக் காணலாம். ஒரு மணி நேர அளவில் கப்பலில் கடலுக்குள் பயணித்தால், குட்டியுடன் விளையாடும் தாய், கூட்டமாக இரை பிடிக்கும் இளைஞர் கூட்டம் என விதவிதமாகப் பார்க்கலாம். அடைத்து வைக்கப்பட்ட மீன்காட்சியகத்தில் தரிசிக்காமல், பரந்த வெளியில் சுதந்திரமாக நீந்தும் திமிங்கிலங்களை இயற்கையான பரப்பில் காணலாம்.

பி.ஏ.கே. பசிஃபிக் சமுத்திரத்தில் விதவிதமான திமிங்கிலங்களைப் பார்த்த காட்சிகளை ஒளிப்படமாக இட்டிருந்தார். பாஸ்டனுக்கு வரும் பிரபலங்களுடன் இந்தப் பயணம் செல்வது குதூகலமான நிகழ்வு. ஆசுவாசமாக மூன்று மணி நேரம் உரையாடலாம். வெளியே விரிந்திருக்கும் எல்லையற்ற நீர்ப்பரப்பின் அமைதியோடும், வெயில் கொளுத்தினாலும் கடலின் குளுமையாலும், செல்பேசி இடைவேளிகளும் இடையூறுகள் தவிர்க்கப்பட்டதாலும் ரம்மியமான உல்லாசமான நேரம். சூரியவொளி புகாத ஆழ்க்கடலில், தன்னுடைய இரையின் இருப்பிடத்தைத் துல்லியமாக அறிந்து அவற்றைப் பிடிக்க எதிரொலி உத்தியை திமிங்கலங்கள் பயன்படுத்தும். அதே போல், வந்திருக்கும் எழுத்தாளர்களும் தங்களுடைய எழுத்துக்கான ’குரலை’ எவ்வாரு அறிந்து கொண்டார்கள் என்று அறிந்துகொள்ள ஏற்ற தருணமாக இந்தப் பயணங்கள் அமையும்.

திமிங்கிலம் காணச்செல்லும் இந்தக் கடல் பயணத்தின் முதல் சிக்கல் – எல்லோரும் வாந்தி எடுப்பது. அலைகளைக் கிழித்துக் கொண்டு எதிர்க்காற்றில் கப்பல் செல்லும். அது எதுக்களிக்கும். கோபம் எழும்போது தேவையில்லாத கதைகளை எப்பொழுதோ வாசித்திருந்த இலக்கியப் புத்தகங்களில் இருந்து நினைவுகூர்வேன். அதற்கொப்ப, எப்பொழுதோ உட்கொண்ட உணவை வெளிக்கொணரும். கப்பல் எங்கும் ஓக்காள உமிழ்வுகள்.

இன்னொரு சிக்கல் திமிங்கிலத்தின் அபான வாயு. கருவாட்டு வாயால் மூச்சுவிட்டால் கூட பொறுத்துக் கொள்ள முடியாத மீன்வாடை. திமிங்கிலத்தின் நாக்கில் ஐம்பது பேர் அமர்ந்து செல்லலாம். ஐம்பது பேரும் ஒரே சமயத்தில் குசு விட்டால் எப்படி இருக்கும்?

இப்பொழுது நேற்று நடந்த புதிய பிரச்சினை. வழக்கம் போல் அந்தப் பயணமும் கடலுக்குக் கிளம்பி இருக்கிறது. ஆனால், கார்னிவல் நிறுவனத்தின் கப்பல் பயணங்கள் போல் நடுக்கடலில் சிக்கிக் கொண்டுவிட்டது. சேராத இடம் சேர்ந்து கப்பலின் வடம் பாஸ்டனுக்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களுடன் மாட்டிக் கொண்டது. ”அரை மணி நேரத்தில் சரியாகிவிடும்; ஒரு மணி நேரத்தில் கரை திரும்பிடுவோம்” என்று சால்ஜாப்பு சொல்லியவர்கள், கடைசியாக இரவு முழுக்க முழுக்க கடலிலேயே தத்தளித்து இருக்கிறார்கள்.

இந்தப் பதிவில் எந்தக் குறியீடும் எல்லை.

அமெரிக்காவில் எகிப்து வருமா? சூடான் ஆகுமா?

இது ரொம்ப பழைய கதை. நவம்பரில் நடந்து முடிந்த தேர்தல் கதை

ஒரு ஊரில் ஒருத்தி இருந்தாள். அவள் ஒரு கோழியும் ஒரு சேவலும் வளர்த்தாள். அது நாளொரு முட்டையும் இட்டு வந்தது. சிறு சிக்கன் பல பணம் என்பதற்கேற்ப, ஒன்றை இரண்டாக்கி, இரண்டை பன்மடங்காகப் பெருக்கினாள்.

அவளுக்கு பக்கத்து வீடு மாளிகையாக இருந்தது. அதில் இருந்தவளுக்கு பத்து கோழி இருந்தது. தினந்தோறும் ஆறுமுகனின் கைக்கு ஒன்றாக டஜன் ஈண்டது.

திடீரென்று ஒரு நாள் மாளிகைக்காரிக்கு முட்டை வரத்து குறையத் துவங்கியது. அவள் பக்கத்துவீட்டுக்காரியை சந்தேகப்பட்டாள்.

அரசனிடம் முறையிட்டாள். ஒற்றைக் கோழி வைத்திருப்பவளோ ‘நான் எடுக்கவில்லை’ என மறுக்கிறாள்.

‘அவள் ஏழை. அதனால்தான் எடுக்கிறாள்’ என்கிறாள் பணக்காரி.

குழம்பிப்போன ராஜா, அடுத்த நாளுக்கு ஒத்திவைத்து அனுப்பித்துவிட்டான். விடிந்தது. அரண்மனை வாயிலில் சேறும் சகதியும் ஆக்கிவைக்க சொன்னான். வாயிலைக் கடந்ததும் ஒரு சிறிய கப்பும், இரண்டு வாளி நிறைய தண்ணீரும் வைத்தான்.

இருவரும் வந்தார்கள். ஒத்தை கோழிக்காரி ஒரேயொரு குடுவையளவு நீரை வைத்து, இரண்டு கால்களையும் சுத்தமாக அலம்பிக் கொண்டுவிட்டாள்.

பத்து மாட்டுக்காரிக்கு ஒரு வாளி போதவில்லை. பருத்த கால்கள். கவனம் சிதறிய நடை. சறுக்கி விடக் கூடாதென்ற பயம். எல்லாம் சேர்ந்து முட்டி வரை கரை. முன்னவள் பாக்கி வைத்திருந்த வாளித் தண்ணீரையும் தாராளமாக தாரை வார்த்தாள்.

மரியாதைராமன் பார்த்துக் கொண்டிருந்தார். தன் முட்டை போதாதென்று அடுத்தவர் முட்டையையும் சுடும் பழக்கம் கொண்ட பணக்காரியை கண்டித்து, அபராதம் விதித்தார்.

அங்கே சாட்சியம் இல்லை. அமெரிக்காவில் மீடியம் இருந்தாலும் மக்கள் மருண்டதில் ஒபாமாவின் பிடி தளர்ந்து முட்டை சிதறிவிட்டது.

மரியாதைராமன் போல் குடிமகன்களுக்கும் குழப்பம். நிறைய வைத்திருப்பவர் சிரத்தையாக மேய்த்தால், எதற்காக வளர்ச்சியில் பின் தங்க வேண்டும்? ஒழுங்காக கணக்கு போட்டு, கண்ணுங்கருத்துமாக நிர்வகித்தால், ஏழை பக்கத்துவீட்டுக்கார இந்தியா/சீனா போல் நாமும் முன்னேறலாமே?

இப்போதைக்கு அமெரிக்காவின் விஜயகாந்த் ஆன ‘டீ பார்ட்டி‘யிடம் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள்.

தலைப்புக்கும் இந்தக் கதைக்கும் என்ன சம்பந்தம்?

முதலில் புள்ளிவிவரம்:

கி.பி. 1980: அமெரிக்காவின் மொத்த வருவாயின் பத்து சதவீதத்தை ஒரு சதவீத பெரும்பணக்காரர் ஈட்டுகிறார்கள்.

2007: வெறும் பத்து சதவிகித பெரும்பணக்காரர்கள் 50% (சரி பாதி) வருவாயை வைத்திருக்கிறார்கள்.

2007: நான்கு லட்சம் டாலருக்கு மேல் ஈட்டும் மிகப்பெரும் செல்வந்தர்களிடம் 25% பணம் அடைந்திருக்கிறது.

1973 முதல் இப்போது வரை, பாக்கி 99% சதவிகித சராசரி அமெரிக்கரின் வருவாய் 8.5% உயர்ந்திருக்கிறது.

அதே காலகட்டத்தில் 1% செல்வந்தர்களின் சம்பளம் 190% வளருகிறது.

இப்போது விஜய்காந்த்தின் மதிப்பை உணர்ந்திருப்பீர்கள்.

  • இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க யாருமே இல்லையா?
  • இப்படி பணங்குவிப்பவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டுமா?
  • எட்டு மில்லியன் அமெரிக்கர்களை வேலையில்லாமல் தவிப்பது குற்றமில்லையா?

முழங்கினார்கள்; ‘தேநீர் கட்சி‘ வென்றது.

இப்பொழுது நிகழ்காலம். முதலில் டுனீசியா; நேற்று எகிப்து; நாளை யேமன்? ஜோர்டான்?

Unrest in Arab countries

Political crisis in Egypt

எங்கெல்லாம் புரட்சி வெடிக்கிறது… எப்படி வெடித்தது! ஏன் உருவானது… இதுதான் ஊடகங்களின் பேசு பொருள்.

1848 -இல் ஃப்ரெஞ்சு போராட்டத்திற்கும் அரபு நாடுகளின் எழுச்சிக்கும் முடிச்சுப் போடுகிறது ‘தி வோர்ல்ட்’.

இந்தோனேஷியாவில் 1998 பொங்கி எழுந்த ஏழை வறியோரின் கோபத்தையும் எகிப்தின் போராட்டமும் ஒரு விதத்தில் சரி நிகர் என்கிறது என்.பி.ஆர்.

1989களில் சோவியத் ருஷியா துண்டாடியதும், செக்கோஸ்லோவேகியா பிரிந்ததும், பில் கிளின்டனின் போஸ்னியா போரும் ஒப்பிடத் தக்கது. – அல் ஜஸீரா.

தலைப்புக்கு நிஜமாகவே வந்து விடலாம்.

இனப் போராட்டத்திற்குள்ளான சூடான் இரண்டாகப் பிரிகிறது. அமெரிக்கா இரண்டாகப் பிரியுமா?

சவூதி அரேபியா போல் இஸ்லாமிய நாடாகவும் பிரஸ்தாபிக்காமல், லெபனான் போல் சுதந்திரமும் புழங்காமல் இருக்கும் எகிப்தில் படித்தவர்கள் போராட்டத்தை முன்வைக்க, வறியோர்கள் பின்னெடுத்து செல்கிறார்கள். அமெரிக்காவிலும் ஜீஸஸ் அருளுடன், வீடற்றோர் பொங்கியெழும் ‘டீ பார்ட்டி’ புரட்சி எழுமா?

இந்தியாவைப் பாருங்கள்… உங்கள் வேலையை எடுத்துக் கொண்டு விட்டார்கள்.
சீனாவைப் பாருங்கள்… நீங்கள் உபயோகிப்பவை அனைத்தும் அங்கேதான் தயாராகிறது.

இந்தியனை… வெளியேற்று; சீனாவை… தூக்கியெறி!

பணக்கார ஆசியர் பி.எ.டபில்யூவிலும் லெக்சசிலும் பவனி வரும்போது, அண்டியிருக்க ஓலைக்குடிசைக்கு கூட வக்கிலாதவர்களுக்கு கோபம் வரும். அதுவும், வேற்று நிறத்தவனாகவும் இருந்துவிட்டால்…

உகாண்டாவில் நடந்தது; ஃபீஜியில் நடக்கும்; ஏன் நடக்காது என்பது இன்னொரு நாளைக்கான மேட்டர்.

தொடர்புள்ள நூல்கள்:

1. The Mendacity of Hope: Barack Obama and the Betrayal of American Liberalism by Roger D. Hodge

2. Ill Fares the Land by Tony Judt