Tag Archives: கண்டுபிடிப்பு

ஏன் ஐ.பி.எம். வாட்ஸன் ஹெல்த் பின்னடைவு பெற்றுத் தோற்றுப் போனது?

வாட்சன் ஹெல்த் நிறுவனத்தை ஐபிஎம் விற்கப்போகிறது. ஏன் இது தோற்றுப் போனது? மக்கள் தங்கள் செயற்கை நுண்ணறிவு (ஆர்டிஃபிஷியல் இண்டெல்லிஜென்ஸ்) கனவுகளிலிருந்து எழுந்திருக்க வேண்டுமா? இந்தத் தோல்வியிலிருந்து என்ன பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம்?

ஐபிஎம் நிறுவனம் தன்னுடைய சிகிச்சை (ஹெல்கேர்) பிரிவைக் கைவிட்டுவிட்டது. இவர்கள் இரு முக்கிய சந்தைகளில் செயல்பட எத்தனித்தார்கள். முதலாவது செயற்கை நுண்ணறிவு நோயறிதல் ஆகும். இரண்டாவது சிகிச்சை ஆராய்ச்சி மற்றும் அந்த சிகிச்சைக்கான மருந்து தயாரிப்பு மேம்பாடு ஆகும். பத்து ஆண்டுகளாக வாட்ஸன் பிரிவு பணம் சம்பாதிக்கவில்லை. இப்போது, இறுதியாக விற்பதற்காக ஓராண்டிற்கும் மேலாக சந்தையில் உள்ளது. வாட்சன் ஹெல்த் யூனிட் என்பது ஐ.பி.எம் நோயறிதல் மற்றும் சிகிச்சை உரையாடல் பெட்டிகளின் (சாட் செய்யும் ரோபாட்) பகுத்தறிவு அமைப்பாகும். மருத்துவமனைக்கு வரும் வெளிநோயாளிகளுக்கும், வாகன காப்பீட்டு நிறுவனங்களுக்கும் மருந்து நிறுவனங்களுக்கும் தரவு தகவல்களை நிர்வகிப்பதிலும் நோயறிதலுக்கு உதவவும் முக்கியமாகும்.

மனிதரையும் அந்த மனித உடலின் வினோதங்களையும் உடல்நலத்தில் உள்ள இடியாப்ப சிக்கல்களையும் புரியாமல் கால்விட்டதால் – இந்தத் தோல்வி என்று இந்தத் தோல்வியை எளிமையாகச் சொல்ல நினைப்பவர்கள் எளிமையாக்கலாம். ஆனால், இந்த வீழ்ச்சிக்கான காரணங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு எங்கு செல்லுபடியாகும், எப்படி உபயோகிக்கலாம், எவ்வாறு பயன்படும் என்பதைத் தெரிந்து கொண்டு, அங்கு அந்த நுட்பத்தை பிரயோகிப்போம்.

ஐபிஎம் ஹெல்த் துவங்கியபோது இரு இலட்சியங்களை முன்வைத்தது:

  1. புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் வைத்தியம்
  2. தீராத வியாதிகளுக்கு மருந்து கண்டுபிடித்துக் கொடுப்பது.

வாட்ஸன் ஹெல்த்தின் தோல்விக்கு இந்த மாதிரி அகலக்கால் லட்சியங்களே காரணம் என்று வாதிடுவோர் ஒரு தரப்பு இருக்கிறார்கள். ஏற்கனவே இந்தத் துறையில் பல்லாண்டு காலம் பழம் தின்று கொட்டைப் போட்ட ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் கை கோர்த்துக் கொண்டிருக்க வேண்டும். அவர்களின் முந்தைய சறுக்கல்களை அடையாளம் கண்டுகொண்டு, அதற்கு பதிலகளைக் கண்டுபிடித்திருக்க வேண்டும். கடந்த பத்தாண்டுகளில் நிறைய முன்னேற்றங்களை ஐ.பி.எம். ஹெல்த் சாதித்திருக்கிறது. எனினும், பொன் முட்டையிடும் வாத்து ஒன்றைக் கூடக் கொணரவில்லை. ஆயிரம் வாத்துகள் சாகலாம்; அல்லது சாதாரண முட்டைகளைப் பொரிக்கலாம்; ஆனால், ஒரேயொரு பொன்முட்டை வாத்தாவது இருந்தால்தான் இந்த மாதிரி நிறுவனங்கள் செழிக்கும்.

என்னுடைய வேலையில் வருடந்தோறும் அடையவேண்டிய இலக்குகள் இருக்கும். அது தவிர மாதா மாதம், வாரா வாரம் இலக்குகள் வைத்துக் கொள்வோம். ஐ.பி.எம். ஹெல்த் மாதிரி அல்சைமருக்கு ஒரு மாத்திரை, புற்றுநோய்க்கு இன்னொரு மாத்திரை என்று பெரிய இலக்குகள் கிடையாது. புற்றுநோய் ஆராய்ச்சிக்கு உதவுவோம்; புற்றுநோய் எவ்வாறு உருவாகிறது என ஆராய்வோருக்கு கைகொடுப்போம் என்று சின்னஞ்சிறிய இலக்குகள் ஆக வைத்துக் கொள்வோம். ஆனால், இந்த மாதிரி குட்டிக் குட்டியான சிகரங்களை மட்டுமே மனத்தில் வைத்துக் கொண்டால் இமாலய எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி உலகத்திற்கே உச்சாணிக் கொம்பாக முடியாது.

ஐ.பி.எம். சியீஓ ஜின்னி (வர்ஜீனியா) ரொமெட்டி (IBM CEO Virginia Rometty) இதைத் தெளிவாகவே சொன்னார். இது முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போல். மூன் ஷாட் – பூமியில் இருந்து கொண்டு ஆகாசத்தில் இருக்கும் நட்சத்திரத்தைக் குறி வைத்து கில்லி அடிப்பது போல்.

ஏன்?

செயற்கை அறிவைக் கொண்டு வெறுமனே மருத்துவ மொழியாக்கங்களையும் மருந்து ஆராய்ச்சிகளையும் எல்லோருக்கும் எளிதில் கொண்டு போவது எல்லோரும் செய்யக் கூடிய வித்தை. அது எங்களுக்குப் போதுமானது அல்ல. அதன் மேற்சென்று, நோயாளிகளுக்கு என்ன நோய் வந்திருக்கும், அவருக்கு எந்த மருந்து எப்பொழுது, எப்படி கொடுக்கவேண்டும்; என்று முழுமையாகக் குணப்படுத்துவதும், அந்த நோயே மீண்டும் ஜென்ம ஜென்மத்திற்கும் தலையெடுக்காமல், அடியோடு அழிப்பது – எங்கள் குறிக்கோள் என்கிறார்.

இது அபாரமான முயற்சி. குறிப்பிடத்தக்கக் குறிக்கோள். எங்கே சறுக்கினார்கள்? பிற்காலத்தில் இதே இலட்சியத்தை கையில் எடுக்கும் செயற்கை நுண்ணறிவு ஆய்வாளர்கள் எதை கவனத்தில் கொள்ள வேண்டும்?

நான்கு படிப்பினைகள்

1. சந்தையாக்கம் முக்கியம்தான்; ஆனால், அறிவியல் அஸ்திவாரம் அதைவிட வெகு முக்கியம்

2011ல் ஜெப்பர்டி என்னும் நிகழ்ச்சியில் ஐ.பி.எம். வாட்ஸன் பங்கெடுக்கிறது. அந்தப் போட்டியில் தில்லாலங்கடியான இருவரை வீழ்த்தி வெற்றிவாகை சூடுகிறது. அது ஒரு பொது அறிவுப் போட்டி. விஸ்வநாதன் ஆனந்த் எத்தனை வாரங்கள் கிராண்ட்மாஸ்டராக விளங்கினார், எத்தனை சாமி படங்களை ஹரி எடுத்தார் போன்ற கேள்விகள் கேட்கப்படும். அதில் ஞாபக சக்தியும் கொஞ்சம் சூட்சும புத்தியும் இருந்தால் போதும்.

அதே மாதிரி மருத்துவத் துறையிலும் நுழைந்து டாக்டர்களையும் ஓரங்கட்டுவோம் என்று ஐ.பி.எம். விளம்பரம் செய்கிறார்கள். இனிமேல் பெரிய மருத்துவமனைகளும் தொடர் சோதனைகளும் தேவையே இல்லை. வீட்டுக்கொரு எந்திரன் கணினி. அந்த வாட்சன் கணினியிடம் உங்கள் ரத்தத்தையும் சரித்திரத்தையும் கொடுத்தால் போதும். எல்லாவற்றையும் கணித்து ஆருடம் சொல்வது போல் பூரண நலனையும் அலசி ஆராயும். என்ன சிக்கல், எப்படி தீர்வு என்று சொல்லிவிடும்.

இந்த மாதிரி விளம்பரம் செய்யும்போது நோய் சிகிச்சை ஆராய்ச்சியும் ஆரம்பமாகவில்லை. மருத்துவர்களுடனுடம் கலந்தாலோசிக்கவில்லை. சிகிச்சை மையங்களுடனும் தொடர்பில் இல்லை. வெறுமனே ஒரு க்விஸ் போட்டியில் வென்றதை வைத்து காதில் பூ சுற்ற ஆரம்பிக்கிறார்கள். சட்டியில் ஏதாவது இருந்தால்தானே அகப்பையில் வரும்?

புற்றுநோய் ஆராய்ச்சியைப் பொருத்தவரை வாட்சன் திறன்படவே செயல்பட்டது. ஆனால், புற்றுநோய் என்பது ஒரு கடல். மூளை, மார்பகம் என்று ஆயிரக்கணக்கான நோய் அறிகுறிகளும் சிகிச்சை மாறுபாடுகளும் இருக்கின்றன. மார்பகப் புற்றுநோய் என்பது எளிமையாக சுருக்கினால் கூட, அதில் கூட மரபியல் மாற்றம் பொருத்து பல்வேறு காரணிகள் தோற்றுவாயாக உள்ளன. (மேலும்: IBM’s Watson supercomputer recommended ‘unsafe and incorrect’ cancer treatments, internal documents show)

2016ல் டெக்சாஸ் பல்கலைக்கழகம் இந்தத் தோல்விக்கான காரணங்களை முழுமையாக ஆராய்ந்து ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது (The University of Texas System Administration: Special Review of Procurement Procedures Related to the M.D. Anderson Cancer Center Oncology Expert Advisor Project). அறுபத்தி இரண்டு மில்லியன் டாலர் (கிட்டத்தட்ட 450 கோடி ரூபாய்) செல்வழித்த பின் அந்தத் திட்டத்தைக் கைவிட்டு இருக்கிறார்கள். எந்திர தற்கற்றலுக்கும் (மெஷின் லெர்னிங்) மருத்துவ நலனுக்கும் சம்பந்தமேயில்லாமல் இருந்தது முதல் பிரச்சினை. மருத்துவர்களின் தேவைகளுக்கும் எந்திரம் சொல்லும் விஷயங்களுக்கும் சம்பந்தமேயில்லாமல் இருந்தது இரண்டாவது பிரச்சினை.

அதாவது புற்றுநோய் நோயாளிகளின் தகவல்களை வாட்சன் உள்ளிழுத்துக் கொண்டது. இதுவரை கண்டுபிடித்த, ஆராய்வு முடிவுகளை உள்ளிழுத்துக் கொண்டது. இந்த இரண்டையும் வைத்து நல்லதொரு வழிமுறையைச் சொல்லும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், நோயாளியின் வயது, அவரின் சொந்த ஊர், இனம், மொழி, அவருடைய நோய்க்கட்டியின் அளவு, இதுவரை எந்த சிகிச்சைகளைக் கையாண்டிருக்கிறார்கள், அதன் பக்கவிளைவுகள் – என எல்லா விஷயத்தையும் கருத்தில் கொள்ளவில்லை வாட்சன். ஒரு தடவை ஒரு டாக்டர் பிழையைச் சொல்கிறார்; பல டாக்டர்கள் எத்தனை தடவை அதே கணினியிடம் மன்றாடுவார்கள?

பயன்படுத்துவதை விட்டுவிட்டனர்.

செயற்கை நுண்ணறிவும் கணினி செயலிகளும் சட்டுபுட்டென்று உங்களின் திடம், மணம், குணம், நிறத்திற்கேற்ப மாறாது. அதற்கென்று உள்ள விதிமுறைகளை அது பின்பற்றும், இன்று நீங்கள் ஒரு மாற்றத்தைக் கேட்டீர்கள் என்றால், அதை செய்து முடிக்க எனக்கு (ஒரு நிறுவனத்திற்கு) ஆறேழு வாரங்கள் பிடிக்கும். அதன் பின் களத்தில் சோதனை. அதை செய்து முடிக்க ஒன்னொரு ஆறேழு மாதங்கள். அதன் பின் அந்த டாக்டர் இன்னொரு பிழையைக் கண்டுபிடிப்பார். அதை கணினி நிரலியில் சரி செய்து, சோதித்து முடிக்க இன்னொரு ஆறு மாதம். அதற்குள் வைத்தியக்காரரை தேடி வந்தவர்கள் எல்லோரும் பரலோகம் போய் சேர்ந்திருப்பார்கள்.

எனவே, முதலில் சரியான நிரலியை எழுதி முடியுங்கள். ஓரளவாவது ஒழுங்காக வேலை செய்யட்டும். அதன் பின் அதை விற்கும் வேலையைத் துவங்குங்கள்.

உங்களுக்கு அத்யந்தமான சிலரிடம் உங்களின் செயலியைக் கொடுங்கள். பரிசோதனையில் விடுங்கள். அவர்களின் மறுமொழியைக் காதுகொடுத்துக் கேளுங்கள். அவர்கள் சொல்வதை நிறைவேற்றுங்கள்.

எடுத்தோமா… கவிழ்த்தோமா… என்றில்லாமல் களத்தில் கால் வைப்பதற்கும் முன் புடமிட்ட பொன் ஆக்குங்கள்

2. ஒரு சிக்கலைத் தேர்ந்தெடுங்கள்; சரியான சிக்கலாகத் தேர்ந்தெடுங்கள்

அர்ச்சுனர் கதை தெரிந்திருக்கும். எதையும் நீங்கள் எவ்வளவு கவனமாக பார்க்கிறீர்கள் என்பதையும், எவ்வளவு தூரம் உங்கள் கவனத்தை தொடர்ந்து அதிலேயே தக்க வைத்துக் கொள்ள முடிகிறது என்பதையும் பொறுத்திருக்கிறது.

துரோணர் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் வில்வித்தை திறனை பரிசோதித்து பார்க்க விரும்பினார். எனவே ஒரு மரத்தின் உச்சியில் மரத்தாலான கிளி பொம்மையை தொங்கவிட்டார்.

அனைத்து மாணவர்களையும் பார்த்து, “இளவரசர்களே, ஒரு வீரனுக்கு தேவையான பல்வேறு வித்தைகளை நீங்கள் கற்றுக்கொண்டு விட்டீர்கள். இப்போது பரீட்ச்சைக்கான நேரம் வந்து விட்டது. உங்கள் திறன்களை எனக்கு காண்பிக்கும் நேரம் வந்து விட்டது. இப்போது, வில்வித்தையில் உங்களது திறனை எனக்கு நீங்கள் காட்ட வேண்டும். அதோ, அந்த மரத்தின் மீது கண்களுக்கு மட்டும் வர்ணம் பூசப்பட்ட ஒரு மர பறவையை வைத்துள்ளேன். அதை குறி வைத்து, அதன் கண்ணை தாக்க வேண்டும்” என கூறினார்.

முதலில் அழைக்கப்பட்டது யுதிஷ்டர். பறவையை குறி வைக்கும் படி அவனிடம் துரோணாச்சாரியார் கூறினார். ஆனால் அம்பை விடுவதற்கு முன் தன் கேள்விக்கு பதிலளிக்க கூறினார். யுதிஷ்டர் தயாரான போது, “யுதிஷ்டிரா, உன் கண்களுக்கு என்ன தெரிகிறது என கூற முடியுமா”, என துரோணாச்சாரியா கேட்டார். “எனக்கு பறவை, மரம், மரத்தில் உள்ள பழங்கள் மற்றும் இன்னும் அதிகமான பறவைகள் தெரிகிறது.” என யுதிஷ்டிரா துரோணாச்சாரியாரிடம் கூறினான். வில்லையும் அம்பையும் வைத்து விட்டு போக சொன்னார். ஆச்சரியமடைந்த யுதிஷ்டர் குருவின் சொல்லை மதித்து அவர் சொன்னபடி செய்தான்.

அடுத்தது துரியோதனின் முறை. அவனிடமும் அதே கேள்வியை கேட்டார். அதற்கு அவனோ, “குருதேவா, எனக்கு பறவை, மரம், இலைகள், பழங்கள், மற்றொரு பறவை தெரிகிறது” என கூறினான். ஆனால் அவன் வாக்கியத்தை அவன் முடிப்பதற்குள்ளேயே, “நீ போகலாம்” என துரோணாச்சாரியா கூறினார். கோபமடைந்த துரியோதனன் அம்பையும் வில்லையும் தரையில் தூக்கிப்போட்டு விட்டு சென்றான்.

அடுத்தது பீமனின் முறை. மறுபடியும் அவனிடம் அதே கேள்வியை கேட்டார் துரோணாச்சாரியார். “குருதேவா, எனக்கும் பறவை, மரம், பழங்கள்…” என அவன் கூறிக்கொண்டிருக்கும் போதே அவனை தடுத்து நிறுத்தி ஓரமாக நிறக் சொன்னார்.

அடுத்தது இரட்டையர்களின் முறை. அவர்களுக்கும் அதே கேள்வி கேட்கப்பட்ட போது, “எனக்கு மக்கள், மரங்கள் மற்றும் பறவை தெரிகிறது” என நகுலன் கூறினான். சகாதேவனோ “எனக்கு பறவை, பழங்கள் மற்றும் மரம் தெரிகிறது” என கூறினான்.

கடைசியாக வந்தது அர்ஜுனன். அர்ஜுனன் தயாரான போது “அர்ஜுனா, உனக்கு என்ன தெரிகிறது?” என அவனிடம் துரோணாச்சாரியார் கேட்டார். “குருதேவா, எனக்கு பறவையின் கண்கள் மட்டுமே தெரிகிறது. வேறு எதுவும் தெரியவில்லை.” என கூறினார். “அம்பை விடு!” என புன்னகையுடன் துரோணாச்சாரியார் கூறினார். குறியைப் பார்த்த அர்ஜுனன் அம்பை செலுத்தினான்.

மற்ற இளவரசர்களிடம் திரும்பிய துரோணாச்சாரியா, “இந்த சோதனையின் நோக்கம் உங்களுக்கு புரிந்ததா? ஒன்றை குறி வைக்கும் போது, குறியை தவிர நீங்கள் வேறு எதையும் கவனிக்க கூடாது. தீவிரமான கவனம் இருந்தால் மட்டுமே உங்களால் குறியை தவற விட முடியாது. உங்களுக்கு மரம், இலைகள் மற்றும் மக்கள் மட்டுமே தெரிந்தனர். அதற்கு காரணம் உங்களுக்கு கொடுத்த வேலையில் உங்களுக்கு கவனம் இல்லை. அர்ஜுனன் மட்டுமே சரியாக கவனம் செலுத்தினான். இப்போது புரிகிறதா, அர்ஜுனன் ஏன் சிறந்த மாணவன் என்று?” என கேட்டார்.

இவ்வளவு நீட்டி முழக்கி இந்தக் கதையை மீண்டும் சொல்வது எதற்காக?

வாட்சன் எல்லாவற்றிலும் கால் வைத்தார். மரபணுத்தொகுதியியல் ஆராய்ச்சி; நம் மரபணுத் தொகுதி எவ்வாறு வகுக்கப்பட்டிருக்கிறது என்று பட்டியல் போட்டு வரிசைமுறைப்படுத்தல் செய்தல் எல்லாம் ஒரு பக்கம் சென்று கொண்டிருந்தது.

இன்னொரு பக்கம் சேமநல நிறுவனங்களில் மோசடியை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதற்கான நிரலியும் விற்கப்பட்டது. காப்பீடு தருவோரை ஏமாற்றும் பல காரியங்கள் நடக்கும். போலியாக உடம்பு சரியில்லாதது போல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, அந்த சிகிச்சைக்கு ஆயிரக்கணக்கில் பணம் செல்வழித்ததாகக் காண்பிக்கும் மருத்துவமனைகளும் மருத்துவர்களும் அதிகம். அவர்களை அடையாளம் கண்டு, காட்டிக் கொடுக்கும் செயலிகளையும் ஐபிஎம் கணினி செயற்கை நுண்ணறிவு கொண்டு செயல்பாட்டில் விட்டு வருகிறது.

இதெல்லாம் உள்ளே, நிஜமாகவே பணம் ஈட்டும் செயற்பாடுகள். ஆனால், வெளியில், பொது அரங்கில் இன்னொரு முகத்தை ஐ.பி.எம் வாட்ஸன் காண்பித்து வந்தார். அது புற்று நோய் சிகிச்சை.

புற்று நோய் சிகிச்சையில் கூட குறிப்பிட்ட இடங்களில் செயற்கை நுண்ணறிவு கைகொடுத்து, மருத்துவர்களுடன் கை கோர்க்கும் விஷயங்கள் இருக்கின்றன. உதாரணமாக ஆயிரக்கணக்கான முலை ஊடுகதிர்ப்படம் சோதனைப்படங்களும் எக்ஸ்ரேக்களும் குவிந்திருக்கும். அதில் இருந்து தனித்துத் தெரிபவர்களை, அபாயத்தில் சிக்கியிருக்கக் கூடியவர்களை மட்டும் கண்டுபிடிக்கலாம். அவர்களை மட்டும் அடுத்த கட்ட சோதனைகளுக்கு பரிந்துரைக்கலாம்.

இதையும் கூட தனியாக விற்றிருக்கலாம். அதுவும் வாட்ஸன் செய்யவில்லை. மருத்துவர்களுக்கும் அவர்களின் உதவியாளர்களுக்கும் ஒவ்வொருத்தராக சோதிப்பது, ஒவ்வொருவரின் சோதனைக்குப் பின்பும் செவியுணரா ஒலி சோதனையா அல்லது அதீத ஒலிப்படப் பரிசோதனையா என்று முடிவெடுப்பது – என்று இது மீண்டும் மீண்டும் செய்யவேண்டிய அலுப்பூட்டும் வேலை. இதை மட்டும் வாட்சன் ஹெல்த் பரிபூரணமாக செய்திருந்தால் கூட வெற்றி பெற்றிருக்கும்.

ஆனால், வாட்ஸன் ஹெல்த் அவ்வாறு செயல்படவில்லை. என்ன நோயானாலும் எங்கிட்ட வாங்க… அத்தனையும் எனக்குத் தெரியும் என்று முழங்கிக் கோட்டை விட்டது.

ஒரு வில்! ஒரு சொல்!! ஒரு இல்!!!

3. தரவுகளை சேகரிப்பதும் சேமித்த விஷயங்களை ஒருங்கிணைப்பதும் அத்தனை சுளுவான காரியமல்ல

உங்கள் நிறுவனம் எப்படி வேகமாக வளர முடியும்? புதிய உத்திகள், புதிய வாடிக்கையாளர்கள், புதிய சந்தைகள் – எல்லாவற்றிலும் டக் டக்கென்று கால்வைப்பது எப்படி?

உங்களின் போட்டியாளர்களை, மற்ற நிறுவனங்களை லபக் லபக்கென்று சாப்பிடுவதன் மூலம் இதெல்லாம் சாத்தியம். ஐபிஎம் ஹெல்த்தும் இதைச் செய்கிறது – ட்ரூவென், எக்ஸ்ப்ளோரிஸ், ஃபைடெல், மெர்ஜ் ஹெல்த்கேர் போன்ற நிறுவனங்களை விழுங்குகிறது.

விலை கொடுத்து வாங்குவது எளிது. வாங்கிய பொருளை கட்டி மேய்ப்பதும் அதை உங்களின் பிற சந்தையாக்கப்பட்ட நிரலிகளுடன் இணைப்பதும் சிரமம்.

புதியதாக ஒரு நிறுவனத்தை வாங்கிப் போடுவது என்பதை பல்வேறு காரணங்களுக்காகச் செய்வோம். பல சமயம் அந்த நிறுவனத்தை மொத்தமாக சந்தையில் இருந்து நீக்குவதற்காக மட்டுமே இதைச் செய்வோம். ஆனால், ஐ.பி.எம். ஹெல்த் – அந்தக் காரணங்களுக்காக இந்த நான்கு நிறுவனங்களை வாங்கவில்லை. அந்த நிறுவனங்களின் மென்பொருள்கள் நன்றாக செயல்பட்டது. அந்த நிறுவனங்களின் தரவு சேமிப்பு ஒன்றையொன்று மாறுபட்டு இருந்தது. இந்த நான்கு நிறுவனங்களையும் ஒருங்கிணைத்தால் ஒரு புதிரின் நான்கு பாகங்களை ஒருங்கிணைப்பது போல் சிறப்பாக கைகோர்க்கும். எனினும், இந்த மாதிரி புதிரை சட்டென்று விடுவிப்பது எளிதேயல்ல.

ஒரு நிறுவனம் விண்டொஸ் இயங்குதளம் கொண்டிருக்கும். இன்னொருவர் எல்லாவற்றையும் அமேசான் கிளவுட் கொண்டு சேகரிப்பார். ஒரு நிறுவனத்தின் சந்தாதாரர் எந்தத் தகவலையும் கொடுக்கக் கூடாது / பகிரக் கூடாது என்று மிரட்டி வழக்கு தொடுப்பார். இதற்கு அமெரிக்க சட்டமான ஹிப்பா (HIPAA) கை கொடுக்கும். அனைத்தையும் ஒரு இடத்தில், ஒரே மூலமாக ஆக்குவது என்பது வருடக்கணக்கான வேலை.

மெர்ஜ் ஹெல்கேர் நிறுவனம் படங்களையும் இயல்நிலை வரைவுகளையும் கொணர்ந்தது. காப்பீட்டு நிறுவனங்களின் விவரங்களையும் காப்புறுதி இழப்பீட்டுக் கோருரிமைகளையும் ட்ரூவென் கொணர்ந்தது. பிணி சார்ந்த தகவல்களையும் முந்தைய பிணியாளர்களின் சரித்திரங்களையும் ஃபைடெல் நிறுவனமும் எக்ஸ்ப்ளோரிஸ் நிறுவனமும் கொணர்ந்தது.

ஒன்று ஏ.டபிள்யூ.எஸ். கிள்வுட் எஸ்3 (AWS S3). இன்னொன்று என்.எஃப்.எஸ். எனப்படும் Network File System. ஒவ்வொன்றும் ஒரு இடத்தில் இருக்கும். ஒவ்வொன்றும் விதவிதமாக சேமிக்கப்பட்டிருக்கும். ஒன்றில் பிணியின் பெயர் ; மற்றொன்றில் நோய்ப்பெயர் எனப்பட்டிருக்கும்; இன்னொன்றில் நோயின் பெயர்; இன்னொன்றில் வெறும் பெயர் என நாமகரணம் சூடப்பட்டிருக்கும்.

வாங்கிப்போடுவது எல்லோராலும் முடியும். ஒரே கீதமாக, ஒரே நாதமாக ஒலிக்கச் செய்வது ஒரு சிலரால மட்டுமே முடியும்.

வாங்கி மட்டும் போடக்கூடாது. வாங்குவதற்கு முன் ஆயிரம் முறை யோசிக்க வேண்டும்; அலச வேண்டும்; திட்டமிட்டு ஒருங்கிணைக்க வேண்டும்.

4. ஒவ்வொரு மாதமும் லாபம் காட்டுவது என்பது சாத்தியமேயல்ல; இது தொலைதூரப் பயணம்

ஐ.பி.எம். போன்ற நிறுவங்கள் பங்குச் சந்தையில் இயங்குகின்றன. வால் ஸ்ட்ரீட்டுக்கு ஒரேயொரு கேள்விதான் – நேற்றைய தினத்தில் எவ்வளவு லாபம் சம்பாதித்தாய்?

ஒரு வருடத்திற்கு நான்கு காலாண்டுகள். அந்தந்தக் காலாண்டில் எவ்வளவு வரவு? எவ்வளவு செலவு? எத்தனை புதிய நுகர்வோர்? எம்புட்டு வருமானம்? சென்ற காலாண்டோடு ஒப்பிட்டால், இந்தக் காலாண்டில் இரட்டிப்பு இலாபம் கிடைத்ததா? அல்லது மூன்று பங்கு வருமானமா?

ஏதாவது சறுக்கினால், உடனடியாக தலைமைப் பதவியில் இருப்பவர்களை நீக்கு என்று முதலீட்டாளர்களின் கோஷம் கூரையைப் பிய்க்கும். அந்தப் பகுதியையே இழுத்து மூட வேண்டி வரும்.

அரச மரத்தைச் சுற்றி வந்தவுடன் அடிவயிற்றை ஸ்கேன் செய்து “ஆணா? பெண்ணா?” என்று கேட்கும் நிறுவனமாக இயங்கினால், ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்சில் ஜெயிக்க முடியாது.

வாட்சன் எவ்வாறு வேலை செய்கிறது: மருத்துவத்துறையில் ஐ.பி.எம்.

புத்தியுள்ள செயலி எல்லாம் வெற்றி காண்பதில்லை

வெற்றி பெற்ற செயலி எல்லாம் புத்திசாலி இல்லை என்றும் சொல்லலாம்.

2011இல் நல்வாழ்வியல் துறைக்குள் வாட்ஸன் அடியெடுத்து வைக்கிறது. அதன் பிறகு ஐம்பதிற்கும் மேற்பட்ட உடன்படிக்கைகள். எல்லாவற்றிலும் ஒரே குறிக்கோள் – செயற்கை நுண்ணறிவை மருத்துவத்தின் சகல மூலை முடுக்குகளிலும் நுழைப்பது. இவற்றில் சில பயன்பாடுகள் மருத்துவர்களுக்கான கருவிகள்; சில நம்மைப் போன்ற இறுதிகட்ட நுகர்வோருக்கான செயலிகள்; வீட்டில் இருந்தபடியே நம் உடல் உபத்திரவங்களைக் குணப்படுத்திக் கொள்வதற்கான செயல்பாடுகள் (அப்ளிகேஷன்கள்) முனைந்தெடுக்கப்பட்டன. மேலும் பற்பல ஆராய்ச்சிகள், பெருநிறுவனங்களின் துணைகொண்டு வளர்த்தெடுக்கப்பட்டன. அதிலிருந்து முக்கியமான திட்டங்களும், அவற்றின் இன்றைய நிலையையும் கீழேக் காணலாம் (நன்றி ஐஈஈஈ ஸ்பெக்ட்ரெம்):

தேதிஐ.பி.எம். இணையாளர்திட்டம்இப்போதைய நிலை
2011
ஃபெப்.
நுவான்ஸ் (Nuance Communications)Diagnostic tool and clinical-decision support toolsபயன்பாட்டில் எந்த கருவியும் இல்லை
செப்.வெல்பாயிட் / ஆந்தெம் (WellPoint – இப்பொழுது Anthem)Clinical-decision support toolsபயன்பாட்டில் எந்த கருவியும் இல்லை
2012
மார்ச்
Memorial Sloan Kettering Cancer CenterClinical-decision support tool for cancerபுற்றுநோயியலுக்கான வாட்ஸன் (Watson for Oncology)
அக்.க்ளீவ்லாந்து க்ளினிக் (Cleveland Clinic)Training tool for medical students;
clinical-decision support tool
பயன்பாட்டில் எந்த கருவியும் இல்லை
2013
அக்.
MD Anderson Cancer CenterClinical-decision support tool for cancerபயன்பாட்டில் எந்த கருவியும் இல்லை
2014
மார்ச்
New York Genome CenterGenomic-analysis tool for brain cancerபயன்பாட்டில் எந்த கருவியும் இல்லை
ஜூன்GenieMDConsumer app for personalized medical adviceபயன்பாடு எதுவும் கிடைக்கவில்லை.
செப்.மேயோ க்ளினிக் (Mayo Clinic)Clinical-trial matching toolமருத்துவ சோதனை பொருத்தத்திற்கான வாட்ஸன் (Watson for Clinical Trial Matching)
2015
ஏப்.
ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் (Johnson & Johnson)Consumer app for pre- and postoperation coaching; consumer app for managing chronic conditionsபயன்பாடு எதுவும் கிடைக்கவில்லை.
ஏப்.மெட்டிரான்க் (Medtronic)Consumer app for personalized diabetes managementSugar.IQ app
மேஎபிக் (Epic)Clinical-decision support toolபயன்பாட்டில் எந்த கருவியும் இல்லை
மேவட க்ரோலினா பல்கலைக்கழகம் (University of North Carolina, others)Genomic-analysis tool for cancerமரபணுத் தொகுதியியலுக்கான வாட்ஸன் (Watson for Genomics)
ஜூலைசி.வி.எஸ். ஹெல்த் (CVS Health)Care-management tool for chronic conditionsபயன்பாட்டில் எந்த கருவியும் இல்லை
செப்.டெவா ஃபார்மாசியூடிகல்ஸ் (Teva Pharmaceuticals)Drug-development tool; consumer app for managing chronic conditionsபயன்பாட்டில் எந்த கருவியும் இல்லை
செப்.பாஸ்டன் குழந்தைகள் மருத்துவமனை (Boston Children’s Hospital)Clinical-decision support tool for rare pediatric diseasesபயன்பாட்டில் எந்த கருவியும் இல்லை
டிச.நியூட்ரினோ (Nutrino)Consumer app for personalized nutrition
advice during pregnancy
பயன்பாடு எதுவும் கிடைக்கவில்லை
டிச.நோவொ நார்டிஸ்க் (Novo Nordisk)Consumer app for diabetes managementபயன்பாடு எதுவும் கிடைக்கவில்லை
2016
ஜன.
அண்டர் ஆர்மர் (Under Armour)Consumer app for personalized athletic coachingபயன்பாடு எதுவும் கிடைக்கவில்லை
ஃபெப்.அமெரிக்க இதயநலக் கழகம் (American Heart Association)Consumer app for workplace healthபயன்பாடு எதுவும் கிடைக்கவில்லை
ஏப்.அமெரிக்க புற்றுநோய்க் கழகம் (American Cancer Society)Consumer app for personalized guidance during cancer treatmentபயன்பாடு எதுவும் கிடைக்கவில்லை
ஜூன்அமெரிக்க நீரிழிவுக் கழகம் (American Diabetes Association)Consumer app for personalized diabetes managementபயன்பாடு எதுவும் கிடைக்கவில்லை
அக்.க்வெஸ்ட் நோய் நாடல் இயல் (Quest Diagnostics)Genomic-analysis tool for cancerWatson for Genomics from Quest Diagnostics
நவ.செல்க்னி கார்ப். (Celgene Corp.)Drug-safety analysis toolபயன்பாட்டில் எந்த கருவியும் இல்லை
2017
மே
MAP Health ManagementRelapse-prediction tool for substance abuseபயன்பாட்டில் எந்த கருவியும் இல்லை

உசாத்துணை

எதிர்காலத்தில் என்ன நடக்கும்? – ப்ரூஸ் ஸ்டெர்லிங் பேட்டி

சொல்வனத்தில் இந்தப் பேட்டியின் மேம்பட்ட வடிவம் வெளியாகி இருக்கிறது. மொழிபெயர்ப்பின் முதல் டிராஃப்ட் இங்கே:

கோரி டாக்டொரொவ்: தொழில்நுட்பத்தினால் உலகம் மெருகேறியுள்ளதாக உணர்கிறீர்களா?

புரூஸ் ஸ்டெர்லிங்: நம்மைப் போல் மனிதர் அல்லாத எந்த ஜீவனிடமும் இந்தக் கேள்வியை கேட்டால், அதன் கோணத்தில் பார்த்தால், சர்வ நிச்சயமாய் ’முன்னேறவில்லை’ என்பதுதான் பதில். நிறமிழந்த முயல்களும் மரபணு ஒட்டு போட்ட புகையிலைச் செடிகளும் ‘ஆமாம்’ வாக்கு போடலாம். தொழில்நுட்பம் என்னும் வார்த்தையை புழங்க ஆரம்பித்த கிரேக்கர்கள் காலம் துவங்கி வாழ்ந்து வரும் பவளப் பாறைகளிடமோ கற்பகத்தரு மரங்களையோ கேளுங்கள். நிறைய சோகக் கதைகளை கேட்பீர்கள்.

மாத்யூ பாட்டில்ஸ்: நாளைக்கு என்ன நடக்கும் என்று எண்ணுவதே மனிதனின் நித்திய கலக்கம். வருங்காலம் இப்படி சொக்குப்பிடி போட்டு வைத்திருப்பதில் பிரத்தியேகமாக எதாவது உண்டா?

புரூஸ் ஸ்டெர்லிங்: நம்மைப் போன்ற புதிய தலைமுறையிnar, சரித்திர காலத்தில் இருந்து வரும் ஜோசியர் கையில் எதிர்கால ஆருடங்களை ஒப்படைக்க மாட்டோம். சமீபகாலமாக, வருங்கால ஆருடம் என்று பார்த்தால் நிறைய விஷயம் இருக்கிறது. முதலாவதாக, “வளர்ச்சி” என்றால் என்ன என்றே இப்பொழுது தெரியவில்லை. நம் பழமைவாதிகள் எல்லோரும் புரட்சியாளராகி விட்டார்கள். முற்போக்காளர்கள் எல்லோரும் பழமைவாதிகளாகி விட்டார்கள்.

நம்முடைய எல்லா வகையான சமூகப் போக்கு குறித்தும் அனைவரின் பழக்கவழக்கங்கள் குறித்தும் சேதி சேகரிக்க விரும்புகிறோம். முன்னெப்போதும் இருந்ததை விட அதி பிரும்மாண்டமாக, ஒவ்வொருத்தருடைய அந்தரங்க வாழ்க்கையையும் சமூகச்சங்கிலித் தொடர்புகளையும் கோர்த்து விஷயங்களை பெரிய அளவில் சேமிக்கிறோம். புதுக்கருக்கு இன்னும் போகாமல் இருப்பதால் இப்பொழுது இதில் நிறைய ஆர்வம்; இதெல்லாம் பயனுள்ளதாக மாற்றும்வரை இதில் நமக்கு ஆச்சரியம் இருக்கும்.

ஜியுஸெப்பி கிரானியெரி: உங்களுடைய ‘காதல் விநோதாமானது’ புத்தகத்தில் காவின்ஸ் சொல்வார்: ‘நான் கணினி கிறுக்கன் போல் ஆடை அணிவதில் கவனம் செலுத்தாதவனாக இருக்கலாம்; ஆனால், என்னால் மக்களின் போக்குகளை கணிக்க முடியும்.’ உங்களால் அடுத்த ஐந்தாண்டுகளில் கவனிக்கப்பட வேண்டிய ஐந்து போக்குகளை பொறுக்க முடியுமா?

புரூஸ்: உங்களுடைய கற்பனையை எப்படியாவது குதிரையாக்கினால்தான் என்னுடைய வருங்கால போக்குகளை பொறுக்கமுடியும்.

எதிர்கால கணிப்புகளிலேயே மிக மிக முக்கியானதென்றால், அது வானிலை மாற்றம். மனிதருக்கு அதைப் பார்ப்பதற்கே வெறுப்பாக இருக்கிறது. குற்றவுணர்ச்சியால் குமைகிறார்கள்; அல்லது தோள் குலுக்கி கண்டுங்காணாமல் ஒதுக்குகிறார்கள். ஆனால், நாளைய தேதியில் பெரிய வித்தியாசத்தை, வேறு எந்த சமகால நிகழ்வை விட வெகு ஆழமான பாதிப்பை உருவாக்குவதென்றால், அது இதுதான்.

தனிப்பட்ட முறையில் பார்த்தால், எனக்கு பல விஷயங்களில் நாட்டம் உண்டு. அமெரிக்காவில் தோன்றாத ஆனால் உலகத்தின் பிற நாடுகளின் புகழ் பெற்ற இசை பிடிக்கும். அருகிப் போன ஊடக சாதனங்களை நோட்டமிடுவேன். எண்வய மிடையத்தில் தோன்றும் புதுப் புது கணிமொழிகள் கற்பேன். ஊட்டம் சேர்த்த எதார்த்தம் கொண்டு இயங்கும் கணிப்பொறிகளை விரும்புகிறேன். இணையத்தின் பொருளாக ஒவ்வொரு பொருளிலும் நீக்கமற இணையம் நிறைந்திருக்கும் சாத்தியத்தினை ஆராய்கிறேன்.

உலகத்தில் இதெல்லாம் முக்கியமான போக்குகள் அல்ல. ஆனால், எனக்கு முக்கியமாகப் படுபவை. புரிந்து கொண்டு, ஆழமாகப் படித்து அறிந்து கொள்ள விரும்புபவை. இவை எல்லாமே என்னுடைய வலைப்பதிவில் முக்கியமானதாகவும் அடிக்கடி எழுதப்படுவதாகவும் இருக்கிறது.

இந்த உலகம் முழுக்க பல்வேறு போக்குகாளால் ஆனவை. ஆயிரக்கணக்கில் புத்தம்புது பாதைகள் இருக்கின்றன. ஆனால், ஒன்றே ஒன்றை எடுத்து அதனுள் சென்றால்தான், அந்த நுட்பத்தின் சூட்சுமத்தை நம்மால் பயன்படுத்திக்க முடியும்.

உதாரணத்திற்கு புகை பிடித்தால் உடல்நலம் கெடலாம் என்பதை எடுத்துக்கலாம். அனைவரும் அதை சொல்கிறார்கள். இவ்வளவு ஏன்… அந்த சிகரெட் பாக்கெட்டிலேயே புற்றுநோய் படம் எல்லாம் போட்டிருக்கு. எனவே, விளைவுகளில் எந்த ரகசியமும் இல்லை. ஆனால், முழிப்பு வருகிற வரைக்கும் விடப்போவதில்லை. நமக்குனு வந்துச்சுனாத்தான் வெளங்கும். இது ஒரு பாதிப்பு. அது நம்மைத் தாக்கி உணரவைக்கிற வரைக்கும் தெரியப் போவதில்லை. இப்படித்தான் ஒவ்வொரு ‘போக்கு’ம். நமக்கு அந்தப் போக்கின் விளைவுகள் சொந்தமாவதற்கு நாம் அது கூட உறவாடணும்.

கோரி டாக்டொரொவ்: கணினியில் உருவாக்கும் ஓவியத்திற்கும் பேப்பரில் வரைவதற்கும் நடுவே உள்ளே பிரிவினை என்றாவது இல்லாமல் ஆகுமா? அல்லது ஏற்கனவே மின்னணுவியல் கலைக்கும் துணியில் தீட்டும் கலைக்குமான வித்தியாசங்கள் நீங்கிவிட்டதா?

புரூஸ்: இந்த பாகுபாடு எல்லாம் பாம்பு இரப்பை மாதிரி. மோனே, வான் கோ மாதிரி புகழ்பெற்ற ஓவியர்களின் வேலையை வாங்குவதற்கு ஏலப் போட்டி எதை வைத்து நடக்கிறது? அந்த ஓவியத்தின் கணினி பிரதியை வைத்துதானே.

மின்னணுவியல் கலைகளில் ஒரு வகையை மட்டும் சர்வ நிச்சயமாய் “மின்னணுவியல்” என்று பொதுமைப்படுத்தலாம் — அந்த கலை வடிவத்தில் கம்பிகள் காணக் கிடைக்கும்; மின்சக்தி பாயும்; நிஜமாகவே ஷாக் அடிக்கலாம். அந்த மாதிரி கலைப் படைப்பு நீடித்த தாக்கத்தை உண்டாக்காது.

ஆனால், எப்பொழுது இது துவங்குகிறது? எங்கே முடிகிறது? இந்த அனுபவத்தை சொல்லால் அளந்து விடுவது மிகவும் சிரமமான காரியம். விழியங்கள் எப்பொழுது கலை உன்னதத்தைத் தொடுகிறது? படம் பார்த்த பின்பு அந்த படத்தின் பாதிப்பு எப்பொழுது தீர்ந்து போகிறது?

ஐ-போனில் கிடைத்த அனுபவத்தையும் கம்பிப் பின்னல்களின் நடுவே குவிந்து கிடக்கும் கம்ப்யூட்டர் கலைத் தோற்றங்களையும் கணிமொழியில் நிரலியாளர் நிகழ்த்திய அற்புத சாத்தியங்களையும் எப்படி அந்த விஷயங்களின் நுட்பங்களை தோற்றமும் மறைவும் என்று அறுதியிட்டு பகிர முடியும்?

முன்பு நாடகம் இருந்தது. அது மட்டுமே கலை. இப்பொழுது சினிமாவும் அதற்கு நிகரான கலை. நாளைக்கு மின்னணுவியலில் உருவானவை மட்டுமே கலாவடிவமாகுமா என்பதை மேடையில் கூத்து கட்டின காலத்தில் திரைப்படம் கலையாக ஆகுமா என்று வினவுவதற்கு ஒப்பிடலாம்.

எனக்கு அப்படி மின்கல கலைக் காலத்தை கற்பனை செய்ய இயலுகிறது. ஆனால், நிஜத்தில் நிகழுமா என்றால் மாட்டேன் என்று மனசு சொல்கிறது. ரத்தமும் சதையுமான வடிவத்தை விட்டு விலகும் சமுதாயம் எனக்கு அன்னியமாகப் படுகிறது.

பால் டி ஃபிலிப்போ: எண்பதுகளிலே நீங்கள் அறிவியல் புனைவுகளை எழுத ஆரம்பித்ததற்கு பதிலாக, இன்றைக்கு நீங்கள் அறிபுனை எழுத்தாளராக எழுதத் துவங்கினால், என்ன உத்தியை உபயோகிப்பீர்கள்? புதிய அறிபுனை எழுத்தாளர்களுக்கு தங்கள் பெயரை பரவலாக்க, புகழ்பெற எந்த வியூகம் சரியானது? சுருக்கமாக சொன்னால், 2013ன் நிதர்சனங்கள் என்ன?

புரூஸ்: இது கொஞ்சம் கஷ்டமான கேள்வி. ஒரு விஷயத்தை மட்டும் சிருஷ்டிகர்த்தாவாக பிடித்துக் கொண்டு காலந்தள்ளுவதென்பது இப்பொழுது இயலாதது. இன்றைக்கு அறிபுனை படைப்பாளியாக கலக்க வேண்டுமானால் உங்களுக்கு வலைப்பதிய தெரிய வேண்டும்; கருத்தரங்குகளில் பேச வேண்டும்; காமிக்ஸ் உலகிலும் வளைய வர வேண்டும்; கொஞ்சம் தொலைக்காட்சி; கொஞ்சம் சினிமா…

அறிபுனை எழுத்தாளராக இருந்து கொண்டு புத்தகங்கள் போட்டு, பத்திரிகைகளில் மட்டும் எழுதிக் கொண்டிருந்ததெல்லாம் இறந்த காலமாகிப் போயாச்சு.

எழுத்தாளராவதற்கான முதல் அடி என்பது உங்களுக்கு என்ன வாசிக்க பிடித்திருக்கிறதோ, அதைப் பற்றி எழுதுவது. அதற்கு அடுத்ததாக, நீங்கள் எழுதுவதை எவர் கவனமூன்றி வாசிக்கிறார்கள் என்று அறிந்து கொள்ளுங்கள். அவர்கள் ஏன் நீங்கள் எழுதுவதை விரும்புகிறார்கள் என்று புரிந்து கொள்ளுங்கள்.

உங்களுடைய அதிமுக்கியமான, மிகப் பெரிய அலைகளை உருவாக்கக்கூடிய படைப்புகளுக்கு, எந்த வெளியீட்டாள்ரும் பணம் தரவோ, எவரும் புத்தகமாக வெளியிடவோ வராவிட்டால் ஆச்சரியமே பட வேண்டாம்.

டெட் ஸ்ட்ரிஃபாஸ்: உங்களுடைய எழுத்து நடையையோ, கதைகளின் கருவையோ, தற்கால கணினி உலகிற்காக மாற்றிக் கொண்டீர்களா? வைய விரிவு வலை காலத்தின் புத்தகத் தயாரிப்பும் விநியோகமும் வாசகரோடு தொடர்பு கொள்ளும் முறையும் மாறினதால் எழுத்தாளருக்கு என்ன பின்விளைவுகள் ஏற்பட்டுள்ளன?

புரூஸ்: இந்தப் பிரச்சினையால், எண்பதுகளில் இருந்தே என்னுடைய எழுத்துலகம் மிகவும் சிரமதசையில் இருக்கிறது. இணையத்திற்காக நிறைய எழுதுகிறேன்; அதற்கும் என்னுடைய புத்தகங்களுக்கும் சம்பந்தமேயில்லை. இந்த கஷ்டத்தின் பின்விளைவுகளை சொல்வது சிரமம். ஆனால், அனுமானித்து வைக்கிறேன்.

என்னுடைய நடை கெட்டுப் போயிருக்கிறது. என்னால் எப்படி எல்லாம் பலவிதமாக வெளிப்படுத்திக் கொள்ள முடியும் என்று நான் முழுக்க முழுக்க முனைப்பு எடுத்து பயிலவே இயலவில்லை. ஆனால், அதுவே என்னை விழிப்பாகவும் நெகிழ்வாகவும் வைத்திருந்திருக்கிறது. இதற்கு, தற்கால இசைக் கலைஞரிடம் உள்ள டிஜிட்டல் இசையின் பாதிப்பை ஒப்பிடலாம். நிறைய புதுமையான சத்தங்களை உண்டாக்குகிறார்கள். அவற்றை அவசரமாக உருவாக்குகிறார்கள். ஆனால், அதனால் மட்டும் இசையில் லயிக்க முடிவதில்லை.

என்னுடைய எழுத்தின் மூலம் உலகத்தின் மூலை முடுக்கில் உள்ள அனைவரிடமும் பேச முடிகிறது என்று உணர்ந்தபோது மிகவும் கடமை கொண்ட படைப்பை கொடுக்க முடிந்தது. ஆனால், உலகளாவிய பார்வையினால், தேசிய பதிப்பாளரின் சட்டதிட்டங்களுக்கு அப்பால் என் எழுத்து என்னைக் கொண்டு போய்விட்டது. உலக மக்களுக்காக சர்வதேச சந்தையில் புத்தகம் போடும் பதிப்பாளர்கள் கிடைக்காத காரணத்தால் நூல் எழுதி வெளியிடும் ஆர்வம் குறைந்து போனது.

நடுவண் குடிமக்களுக்காக மட்டுமே அச்சடிக்கும் புத்தக வெளியீட்டாளர்கள் என்னை மறைத்து ஒதுக்குகிறார்கள். ஆங்கிலத்தில் எழுதும் எந்த மேற்கத்திய படைப்பாளிக்கு இந்த மாதிரி புறந்தள்ளல் சகஜமானது. உலகமயமாக்கலின் பொதுப் பிரச்சினை இது.

டெட் ஸ்ட்ரிஃபாஸ், ஜான் சண்ட்மான்: பெருங்கதைகளின் அந்திமக் காலம் நெருங்கி விட்டதாகவும், இனி வரும் காலம் சின்னச் சின்ன கதைகளிலும் குட்டிக் கதைகளை கோர்த்ததாகவும் விளங்கும் என்று சிலர் சொல்கிறார்களே. அதைப் பற்றிய தங்கள் கருத்து என்ன?

புரூஸ்: கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். 2062ல் எவராவது ‘2012ஆம் ஆண்டின் மிகச் சிறந்த ட்வீட்கள்’ என்னும் நூலை வாங்கிப் படிப்பாரா? ‘தலை சிறந்த லைக் பட்டியல்’ என்று கற்பனை செய்ய முடியுமா? நான் வலையில் பதிபவன். கலைத்துப் போட்டு தொகுக்கும் விவரணை எனக்கு பிடிக்கும்தான். வலைப்பதிவு என்பது குறைந்த காலத்தில் கெட்டுப் போகும் பதார்த்தம் போன்றது. நீங்கள் வடிவேலுவின் அவ்வ்வ்வ் காமெடியை ரசிக்கலாம்; பகிரலாம்.

டெட் ஸ்ட்ரிஃபாஸ்: நல்ல அறிபுனை எழுத்தாளர்களைப் போல் நீங்களும் புதிய சொல்லாட்சிகளை ஆங்கிலத்தில் உலவ விட்டிருக்கிறீர்கள். தெரிந்த வார்த்தைகளை வித்தியாசமாகக் கலைத்துப் போட்டு புதிய மொழியை உருவாக்குவது எழுத்தை உயிர்ப்போடு வைத்திருந்தாலும், தேவைதானா?

புரூஸ்: சமூக மாற்றம் மொழியில் உள்ள போதாமையை உணர்த்துகிறது. அதனால், நான் மொழியை அடுத்த கட்டத்திற்கு தள்ளுவதாக தோன்றுகிறது. உதாரணமாக, ’பொருட்களின் இணையம்’ என்னும் உபயோகத்தை எடுத்துக்கலாம். ’பொருள்’ என்றால் எதைக் குறிக்கிறது? எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்களின் கார், ஃப்ரிட்ஜ், செல்பேசி… இப்படி… எந்தப் பொருளாக வேண்டுமானாலும் இணையத்தின் முழு சாத்தியத்தை உள்ளடக்கி இருக்கலாம்.

அடுத்ததாக ‘ஸ்பைம்’ – விண்வெளிகளில் கால வர்த்த பரிமானங்களை அளப்பதற்கான எளிய சொல். மறு சுழற்சி, முப்பரிமாண உருவாக்கம், பொய்த் தோற்றங்களுக்கான மெய்நிகர் என்றெல்லாம் விலாவாரியாக விளக்குவதற்கு பதிலாக ஸ்பைம் என்று சொல்லிப் போய்விடலாம். வேணுங்கிறவங்களுக்கு இருக்கு.

ஒரு பிரச்சினை இருக்கு; அதைக் குறித்து பேசணும்; பொது வெளியில் பரவலாக விவாதிக்கணும்; அதைக் குறித்து முன் கதை சுருக்கம் எல்லாம் சொல்லாமல் சுலபமாக எல்லோரையும் சென்றடைய வார்த்தை உபயோகங்களை உருவாக்குவதில் என்ன கொறஞ்சு போச்சு? ஆங்கிலத்தில் கொச்சை மொழியில் ஆயிரக்கணக்கான புது கிளைமொழிகள் உருவாகிக் கொண்டே இருக்கிறது.

‘பக்கிஜங்க்’ என்று நான் புது வார்த்தை உருவாக்குவதால் ஆங்கிலம் அழிந்துவிடப் போவதில்லை. மறு சுழற்சிக்கு உள்ளாக்க முடியாத கரிம நுண்குழாய்கள் குப்பை போடுகின்றன என்பதற்கு வட்டார வழக்கு உருவாக்குகிறேன்.

‘குப்பைவெளி’ (junkspace) என்றும் உருவருபெருவுரு (blobject) என்றும் கவித்துவமாக நான் பேசுவதாக சிலர் நினைக்கிறார்கள். அது நான் இல்லை. இந்த சொல்லாட்சிகளை கண்டுபிடித்து புழக்கத்தில் விட்டது மட்டுமே நான். அதனால் என்ன போச்சு? நான் அறிபுனை எழுத்தாளன். புது வார்த்தைகளை பயன்படுத்துவதற்காக நான் கைதாகப் போவதில்லை.

மாத்யூ பேட்டில்ஸ்: நாம் எதிர்பாரா வகையில் எது நம் காலங்கடந்து நிற்கும்?

புரூஸ்: பெரும்பாலும், பழங்கால சமாச்சாரங்கள்தான் நம் காலங்கடந்து தாக்குப் பிடிக்கிறது. பிரமிடுகளை எடுத்துக் கொள்ளலாம். மனிதனின் மற்ற எல்லா விஷயங்களை விட நீண்டகாலமாக இருக்கிறது. நாம் சேமிக்கும் இணையக் கோப்புகளை விட பேப்பர் நிலைத்து நீடிக்கும் என்று சொன்னால் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால், வன்தட்டுகள் எளிதில் அழியக் கூடியவை; பிட்டு பிட்டாக பிட்டுகள் உதிர்ந்து போகும்.

மற்ற நாகரிகத்தைப் போல் நாமும் இருந்தால், நம்முடைய குப்பை கூளங்களில்தான் சிறப்பான துப்புகளை விட்டுச் செல்வோம். குப்பை நம்மிடம் நிறையவே இருக்கிறது. பிரமிடு கோபுரம் மாதிரி நிலம் நிரப்பி, குப்பை மலை கொண்டிருக்கிறோம்.

ரிச்சர்ட் நாஷ்: நீங்க முன்பொரு முறை பேசும்பொழுது ’என்னிடம் வருங்காலத்தைப் பற்றி அறுதியிட்டு சொல்ல வேண்டுமென்று கேட்டுக் கொண்டால், நமக்கு வயதாவது மட்டுமே’ என்று குறிப்பிட்டீர்கள். அனைவரின் ஆயுளும் அதிகரித்து வரும் இந்தச் சூழலில் என்ன மாற்றங்கள் நிகழும் என்று சொல்வீர்கள்?

புரூஸ்: இன்றைய முதியோர் பாதுகாப்பங்களில் நம்முடைய வருங்காலத்தை உணரலாம். ஐரோப்பாவில் மூத்த நகரமாக ஜெனீவாவை சொல்கிறார்கள். அதிக அளவில் வயதானோர் வாழ்வதால் அந்த அடைமொழி கிடைத்திருக்கிறது.

ஒவ்வொரு நிறுத்தத்திலும் நின்று நிதானித்து, தடுமாறி ஏறி இறங்கும் முதியோர் நிறைந்த பயணங்களினால் பேருந்துகள் தாமதமாக ஓடுகின்றன. தாத்தா, பாட்டி நிறைந்த காபி கடைகளில் அவசரம் இல்லை; சத்தம் இல்லை.

குழந்தைகளோ அவர்கள்பாட்டுக்கு தங்கள் வயதொத்தவர்களுடன் தனியாக சேர்ந்து அவர்கள் இடங்களில் சுற்றுகிறார்கள். ஜெனீவா கிழவிகளானால் நிறைந்த இடமாக இருக்கிறது. மருத்துவ முன்னேற்றத்தினால் ஆயுள் எதிர்பார்ப்பு அதிகரிக்க, அதிகரிக்க, ஆண் – பெண் பால் சமநிலை சரிகிறது.

இது ஒன்றும் ஆச்சரியமான மாற்றம் அல்ல. ஆனால், மாஸ்கோவுடன் ஒப்பிட்டு பார்ப்போம். அங்கே ஆயுள் எதிர்பார்ப்பு ஜெனீவா போல் நீண்ட நாள் அல்ல. இரைச்சலும் கவர்ச்சியும் கூச்சலும் நிறைந்திருக்கும் மாஸ்கோவில் வாழ்வதும் கடினமே.

ரிச்சர்ட் நாஷ்: ஆயுள் எதிர்பார்ப்பு எல்லோருக்கும் கூடி வரும் காலகட்டத்தில் கலாச்சார மாற்றங்களாக என்ன நடக்கும்? ஒரு பக்கமோ அபரிமிதமான வளம்; இன்னொரு பக்கத்திலோ கடுமையான கருவுறுதிறன் பஞ்சம். வயதாகிப் போன முதியோரும் இந்த செழுமை ஏற்றத்தாழ்வும் எவ்வாறு ஒன்றை ஒன்று தொடுகிறது?

புரூஸ்: கருவளம் கம்மியாவதெல்லாம் கொஞ்ச காலம்தான் நடக்கும். அதற்கப்புறம் எந்த குழுவோட கருத்தரிக்கும் திறன் கம்மியாச்சோ, அவங்கள இன்னொரு குழு ரொப்பிரும். இன்னொரு வார்த்தையில் சொல்லணும்னா, பணக்காரங்களுக்கு குழந்தை பிறக்கவில்லையென்றால், புது பணக்கார வர்க்கம் முளைச்சுரும்.

ஆயுசு ஜாஸ்தியாகிக் கொண்டே போனால், முதியவர்களின் மக்கள்தொகை அதிகரிக்கும்; அதனால், இளசுகளின் குறைவான மக்கள்பேறு விகிதத்திற்கும், கிழவர்களின் எண்ணிக்கைக்கும் சமனாகிப் போச்சு என்று சிலர் வாதிடுகிறார்கள். அந்த மாதிரி கணக்கு என்னிக்குமே வேலை செய்ததில்லை.

இப்பொழுது நிறைய பேர் நிறைய ஆயுட்காலம் வரை வாழ்கிறார்கள். அது கொஞ்சம் எளிது. ஆனால், எல்லாவிதமான மனிதர்களும் நிறைய ஆயுள் வாழவில்லை. அதை சாத்தியமாக்க ரொம்பக் குறைவான முயற்சியே செய்திருக்கிறோம். நான் முடியாதுனு சொல்லவரல. இந்த மாதிரி நோய்வாய்ப்பட்டவர், மூன்றாம் உலகத்தவர்னு எல்லோருடைய வயதும் நீடித்து இருக்கக்கூடியதைப் பற்றி நிறைய அறிபுனை கதை கூட நான் எழுதியிருக்கிறேன். ஆனால், நிஜத்தில் பார்த்தால், ஒண்ணும் நடக்கல.

சோதனை எலியின் ஆயுளைக் கூட ஐந்து அல்லது பத்து மடங்கு அதிகரிக்க முடியல. இரண்டு வருஷம் வாழுகிற எலி, இன்னொரு வருஷம் கூடுதலாக வாழுது. அதை பத்து வருஷமா மாற்ற இன்னும் இயலவில்லை. அப்படி செய்ய முடிஞ்சா என்னோட கருத்து உடனடியாக மாறும்; கூடவே நிறைய கவலையும் வரும்; அரசியலில், சட்டத்தில், பொருளாதாரத்தில், அறத்தில், சமூகத்தில் என்று எல்லா துறைகளிலும் திரும்பிச் செல்ல முடியாத மாற்றங்களுக்கு உட்படுவோம்.

மரியான் டி பியர்ஸ்: நெடுங்காலம் வாழ்வதைப் பற்றி பேசும் இந்த சமயத்தில் மனித குலத்தை காப்பாற்றும் குணாதிசயமாக எதை சொல்வீர்கள்? வருங்காலத்தில் உங்களுக்கு எந்த விஷயம் பெருத்த நம்பிக்கையைத் தருகிறது?

புரூஸ்: என்ன நடக்குதுனே தெரியாமல் பொதுஜனங்கள் இருப்பதுதான் எனக்கு பெருத்த நிம்மதியைத் தருகிறது. கணிக்கவே முடியாத தகவல்களுக்குள் தடுக்கி விழுவதுதான் காலங்காலமாக நடந்து வருகிறது. புதுசு புதுசா தப்பு செய்யும்போதுதான் நாம குண்டுசட்டிய விட்டு வெளியே வருகிறோம். அகிலத்தில் பல ஆச்சரியங்கள் நமக்காக காத்திருக்கின்றன.

நம்மைக் காப்பாற்றி வருவது தூரதிருஷ்டி பார்வை அல்ல… சூது வாதில்லாத தன்மைதான்.

நீல்ஸ் கில்மேன்: உலக இலக்கியங்களில் இருந்து வருங்காலமறியும் தரிசனமும் ஞானதிருஷ்டியும் கொண்ட பார்வை தந்ததில் முக்கியமானது எவை என்று பட்டியலிடுங்களேன்?

புரூஸ்: நிச்சயமாய் வன்னேவார் புஷ் எழுதிய ‘நாம் யோசிக்கும்படி’ (As We May Think) சொல்வேன். ஆனால், அது தற்கால அறிவியல் குறித்த கட்டுரை. அதனால், ‘இலக்கியம்’ என்று ஒத்துக் கொள்ள மாட்டார்கள். எனினும், அசாத்தியமானது.

‘வீரமிக்க புது உலக’த்தில் (Brave New World) ஆல்டஸ் ஹக்ஸ்லி நிறைய கணிப்புகளை சரியாக சொல்லி இருந்தார். அவை நம்மை பயமுறுத்தா விட்டாலும், ஹக்ஸ்லியை அச்சுறுத்தியது.

ஜூல்ஸ் வெர்னின் முதல் நாவலான ’இருபதாம் நூற்றாண்டின் பாரிஸு’ம் அநாயசமாக ஆருடம் கணித்திருந்தது. ஆனால், வெர்னால் அதை அச்சுப் புத்தகமாக்க முடியவில்லை. அதனால் அநாயசமாகவில்லை.

பின்வருவதை முன்பே சொன்னதில் ஆல்பர்ட் ரொபிதாவின் கேலி சித்திரங்களும் சாதனை படைத்தவை.

ஜியூலியானா க்வாஜரோனி: ஊட்டம் சேர்த்த எதார்த்தம் கொண்டு இயங்கும் பொறிகள், நம் வருங்கால தொழில்நுட்பத்திற்கும் இணையத்திற்கும் புனைவுகளுக்கும் எவ்வளவு முக்கியம்?

புரூஸ்: நான் ’மிகைப்படுத்திய எதார்த்த’த்தின் மிகப் பெரிய விசிறி. இந்தத் துறை பலவிதங்களில் பிளவுபடப் போகிறது. விதவிதமான மென்பொருள்களும், கருவிகளும், பிரத்தியேகமான வழிகளும் இந்தத் துறையில் வரும். சிலது பெரிய அளவில் புகழடையும்; சில காணாமல் போகும்.

கணினித்துறை ’ஊட்டம் சேர்த்த எதார்த்தம்’ மூலமாக மீமெய்யியல் லட்சியங்களைத் தொடுகிறது. எது நிஜம்? நிதர்சனத்திற்கு நான் என்ன செய்ய முடியும்? கணினித் துறையினால் யதார்த்தத்திற்கு எந்த ஆபத்துமில்லை.

“விழியத் துண்டுகளை எவ்வாறு கைபேசியில் ஒட்டி வெட்டலாம்?” போன்ற எளிமையான கேள்விகளின் பதிலிலேயே சுவாரசியமான எதார்த்தங்கள் ஒட்டியிருக்கும்.

அடுத்த கூகிள் யார்?

எனக்கு வேலை போகும் போதுதான் உத்வேகம் பிறக்கும். அன்றாட உத்தியோகத்தில் உழலும்போது எந்த வித செயலூக்கமும் இன்றி ஒன்பதில் இருந்து ஐந்து வரை உழைத்துக் கொட்டும் செக்குமாடாக இருப்பேன். வேலையை விட்டு நீக்கப்படும்போதோ, புதிய வேலையை தேடும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகும்போதோ, புத்துணர்ச்சியும் சந்தோஷமும் தைரியமும் நிறைந்து இருக்கும்.

அமெரிக்காவும் என்னைப் போலத்தான்.

ஜெராக்ஸ் எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அது ஆரம்பிக்கப்பட்டது அமெரிக்காவின் தொழில்துறையின் கஷ்டதிசையில்.

கூகிள் எல்லோரும் உபயோகிக்கிறோம். அது துவங்கியது அமெரிக்காவின் டாட் காம் நம்பிக்கையின்மையின் உச்சகட்டத்தில்.

இப்பொழுது அமெரிக்காவும் ஐரோப்பாவும் கடனில் தத்தளிக்கும் காலகட்டம். 2007ல் துவங்கிய பொருளாதாரத் தேக்கத்தில் இருந்து தள்ளாடி எழுந்திருக்க முடியாமல் ஸ்பெயினும் இத்தாலியும் இன்ன பிற அண்டை நாடுகளும் கடன் சுமையில் மஞ்ச நோட்டிஸ் தரும் காலம். சீனாவின் கடன் கொடையினால் அமெரிக்காவே அடிமைப்பட்டு ஏற்றுமதிக்கு புதிய நாடுகளைக் கோரும் காலம். இந்தோனேசியாவும் பிரேசிலும் உலகத்தின் போக்கை நிர்ணயிக்கும் காலம்.

இந்த நேரத்தில் எந்த புதிய துறைகள் அமெரிக்காவிற்கு மீண்டும் பிராணவாயு கொடுக்கும்? எந்த முன்னேற்றங்கள் உடனடி லாபமும் தொலைதூரப் பார்வையும் கொண்டு செல்வாக்கை நிலைநாட்டும்?

சில தூரதிருஷ்டி பார்வைகளும், சகுனங்களை முன்வைத்த கணிப்புகளும், பத்தாண்டு பலன்களும்:

எண்ணெய் & எரிவாயு

சவுதி அரேபியாவை நம்பி மட்டும் இருந்தால் பிரயோசனமில்லை என்பது ஒபாமா கட்சி வாதம். உள்நாட்டில் அமெரிக்காவின் அலாஸ்காவில் இருந்து எண்ணெய்க் கிணறுகளை முழு மூச்சாக தோண்டி உபயோகிக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சி ரிபப்ளிகன் வாதம். கனடாவை உபயோகிக்கலாம்; பெட்ரோல் அதிகம் குடிக்காத கார்களை பயனுக்கு கொணரலாம் என்பது ஒபாமா வாதம்.

எது எப்படியோ இந்த எரிவாயு மற்றும் இயற்கை சக்தி துறைகளில் நிறைய முதலீடு நடந்திருக்கிறது. ஒபாமா மீண்டும் அரியணை ஏறாவிட்டால், அவை எல்லாம் அப்படியே முடங்கி பாதியில் வயிறுடைத்த காந்தாரி மகன்கள் கௌரவராக பாண்டவர் பூமியான இரான்+இராக் இடம் தோற்று இருக்கும். ஆனால், சகுனி எக்ஸான் மோபில் எண்ணெய் நிறுவனங்கள் ஆதரவுடன் புதிய பராக்கிரமத்துடன், பீஷ்மர் டெட்ராயிட் ஜெனரல் மோட்டார்ஸ் வழிகாட்டுதலுடன் ரத கஜ பலத்துடன் களத்தில் சின்னப் பையலாய் குதிக்கும்.

வாகன தயாரிப்பின் மாற்றங்களும் சுற்றுச்சுழல் அச்சுறுத்தல்களும் கரியமில கட்டுப்பாடுகளும் உள்ளூர் எண்ணெய் வர்த்தகமும் அமெரிக்காவை மீண்டும் கார் துறையின் மூலம் வால் ஸ்ட்ரீட்டை உயர்த்தி ஷாங்காயை தட்டி வைக்கும்.

முப்பரிமாண அச்சு

1930களின் மின்ஒளிவரைவியல் துறையில் கால்பதித்த ஜெராக்ஸ் ஐம்பதாண்டுகளாக தொழில்துறையில் முன்னோடியாக இருந்த மாதிரி, அடுத்த ஜாக்பாட் – 3டி அச்சுப்பொறி.

எனக்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் உருவான தண்ணீர்க் குடம் வேண்டும். இரண்டு கேலன் கொள்ளளவு இருக்க வேண்டும். எனக்குப் பிடித்த வடிவமைப்பாளர் கொடுக்கும் உருவில் தயாராக வேண்டும். இதெல்லாம் இப்பொழுது ஆயிரக்கணக்கில் பணம் செல்வழித்தால் ஒழிய சாத்தியமில்லை. ஆனால், வெகு கூடிய விரைவில் சிகாகோவில் தயாரகும் கேட்/கேம் (கணிப்பொறிவழி வடிவமைப்பு) ஓவியங்கள் கொண்டு சிவகாசியிலும் சீனாவிலும் சல்லிசான விலையில் திடப் பொருட்கள் எனக்கே எனக்காக உருவாகும். மின்னல் வேகத்தில் வந்தடையும்.

இன்றைக்கு கூகிள் செய்திகளை நம் வசதிக்கேற்ப மாற்றிக் கொள்வது மாதிரி. நம் விழைவிற்கேற்ப வீட்டுப் பொருட்களை வாங்கலாம்.

உடல்நலம் & மரபியல்

ஒபாமா என்றாலே அமெரிக்கர்களுக்கு எப்போதும் நினைவில் வரும் சொல்லாக ஒன்றை நிலை நாட்டியிருக்கிறார்: ஒபாமா கேர் – அவரின் எதிராளிகளும் இந்தச் சொல்லாலேயே ஒபாமாவை தூஷணை செய்து, ஒபாமாவின் உடல்நல காப்பீடு திட்டம் பெரிய அளவில் எதிர்பார்ப்புகளையும் சமூக சீர்திருத்தங்களையும் உருவாக்கி இருக்கிறது.

அது இருக்கட்டும்.

இருபது வருடங்களாக நடந்து வரும் மனிதகுல மரபுரேகைப் பதிவு திட்டம் ஆகட்டும். சமீபத்திய மருத்துவ முன்னேற்றங்கள் ஆகட்டும். மரபியல் சார்ந்து மருந்துகளை பரிந்துரைக்கும் உத்தி வெகு விரைவில் பரவலாக பிரபலமடையும்.

எனக்கு இருக்கும் கொழுப்பு; எனக்கு இருக்கும் எதிர்ப்பு சக்தி; அன்றாடம் உட்கொள்ளும் மது; முட்டி வலியின் தீவிரம் போன்ற ஆயிரத்தி முன்னூற்றி அறுபத்தியெட்டு விஷயங்களையும் கணக்கில் கொண்டு, எனக்கே எனக்கான அனாசின் மின்னல் வேகத்தில் தயாராகும்.

உங்களுக்கும் அதே டைலனால்; எனக்கும் அதே இருநூறு மில்லிகிராம் டைலனால் என்னும் காலம், கூடிய சீக்கிரமே காலாவதியாகும். இதை எல்லாம் வாங்கும் பலம் நடுத்தர வர்க்கத்திற்கும் சென்றடைய ஒபாமாவின் சேமநல காப்புறுதி திட்டம் கால்கோள் இடும்.

செயற்கை உயிரியல்

மனிதனுக்குத் தெரிந்து இந்த மண்ணில் ஒண்ணே முக்கால் மில்லியன் ஜந்துக்கள் இருக்கின்றன. ஆனால், கடந்த ஐம்பதாண்டுகளில் அதை விட பன்மடங்கு உயிரினங்களை சோதனைச்சாலைகளில் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.

காருக்கு பெட்ரோல் வேண்டுமா… அதற்கு ஒரு உயிரினம் தயாரிக்கலாம்.

சுற்றுச்சூழல் கெடுகிறதா… அதற்கு ஒரு உயிரினம் உருவாக்கலாம்.

இவை எல்லாம் இன்றே கிட்டத்தட்ட சாத்தியம் என்றாலும், பலருக்கும் அணுக்கமாக கிடைக்குமாறும் குறைந்த பொருட்செலவில் உருவாக்குதலிலும் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் விலகவும் சோதனைச் சாவடிகளில் விடை கிடைக்கும் என்று முதலீட்டாளர்கள் எண்ணுகிறார்கள்.

தண்ணீர்… தண்ணீர்

அடுத்த இருபதாண்டுகளில் நல்ல நீருக்கான தேவை இரட்டிப்பாகும். உலகெங்கும் சுத்த குடிநீருக்கான அவசியம் விஞ்ஞானத்தை நோக்கி விடை கோரி கையேந்துகிறது.

கரிமம் மூலம் உண்டான கிராஃபீன் தகடுகள் கடல்நீரில் நிறைந்திருக்கும் உப்புகளை நீக்கி குடம் குடமாக தண்ணீரை வெகு எளிதாக அதிவிரைவாக தயாரிக்கும் முறைகள் பரிசோதனையில் வெற்றி கண்டிருக்கிறது. நீராலான உலகை உப்பு நீரில்லாத உவப்பான நீராக மாற்றும் வித்தையில் கண்ட வெற்றி பொருளாதார மாற்றங்களை பல இடங்களுக்கு கொண்டு செல்லும்.

இறுதியாக…

நானோ தொழில்நுட்பம் மூலம் சில்லுகளை சேர்ப்பது முதல் கடைகளில் பொருள்களை கண்காணிப்பது வரை பல பயன்கள் நம்மை சென்றடைந்திருக்கிறது. கார்பன் நுண்ணிய டியுப்கள் மூலமாக கிடைக்கும் லாபாங்கள் எல்லாம் பொதுமக்களுக்கு வரத்துவங்கினால் இண்டெர்னெட் புரட்சி போல் அடுத்த பூதாகாரமான வளர்ச்சியும் வரப்பிரசாதங்களும் பிரமிக்கவைக்கும்.

அதற்கெல்லாம் எதிர் நீச்சல் போடும் தைரியமும் துணிச்சலாக ஆபத்தான செலவுகளை செய்து பார்க்கும் தன்னம்பிக்கையும் வேண்டும்.

சிறு தொழில் முதலீடுகளில் பின்னடைந்தாலும் சரி… நசிவு கண்ட முனைவோர்களையும் சரி… அமெரிக்காவில் எப்போதுமே எள்ளி நகையாடாமல், அடுத்த வாய்ப்பு தந்து தட்டிக் கொடுத்து அவர்களிடம் இருந்து வெற்றியை வரவழைக்கும் வித்தையை தக்க வைத்திருக்கும் வரை, இந்த முன்னோடி + முதலிடம் தட்டிப் போகாது.