Category Archives: Uncategorized

Desi TV 

Desi TV Posted by Picasa

சென்ற பத்து (3)

1. இலங்கையில் இஸ்லாம்
2. தமிழ்ப்புத்தகங்கள்
3. போபால் மதக் கலவரங்கள்
4. கவிஞர்களின் சந்திப்பு
5. மனதைத் தொடும் காட்சிகள்
6. கொந்தி
7. சேதுத் திட்டம்
8. கண்டுபிடி
9. குரோசாவா
10. கலையும் காட்சியும்

அடிக்கற்கள – தமிழருவி மணியன்

ஊருக்கு நல்லது சொல்வேன்! ஒரு சொல் கேளீர்! ::

விண்ணைத் தொடுவது போல் உயர்ந்து நிற்கும் கோபுரங்களைப் பார்த்து விழிகள் வியப்பில் விரிய, பிரமிப்பும் பக்தியும் பிரவாகமாக இதயத்தில் பொங்கிப் பெருக, கைகூப்பி வணங்கும் மனிதர்கள், அந்த அழகிய கோபுரத்தைத் தாங்கு வதற்காக மண்ணில் மறைந்து நிற்கும் அடிக்கற்களை மறந்தும் நினைப்பதில்லை! விரிந்திருக்கும் கிளைகள் பரப்பும் மரத்தின் நிழலில் இளைப்பாறி, பழுத்திருக்கும் கனிகளைப் பறித்து உண்ணும் வழிப்போக்கர்கள் யாரும் அந்த மரத்தின் வேர்களுக்கு நன்றி சொல்வதில்லை.

அடிக்கற்கள் இல்லாமல் கோபுரங்கள் இல்லை. ஆணிவேர் இல்லாமல் மரங்கள் இல்லை. இந்த உண்மை தெரிந்திருந்தும், மனிதர்கள் அவற்றை ஆராதிப்பதில்லை!

‘உழைக்கும் காளை மாடு கொல்லைப் புறத்தில்; குரைக்கும் நாய் பட்டுப் படுக்கையில்!’ என்பதுதான் இன்று சமூக நீதி.

1919 – ஏப்ரல் 13… ஞாயிற்றுக் கிழமை. நான்கு பக்கம் மதிற்சுவரும், ஒரு குறுகிய வழியும் கொண்ட ஜாலியன் வாலாபாக் திறந்தவெளி மைதானத்தில், ரௌலட் சட்டத்தை எதிர்த்து அமைதியாக ஒரு பொதுக் கூட்டம் நடந்தது.

திடீரென்று, கூட்டத்தில் ஜெனரல் டயர் தலைமையில் நுழைந்த பிரிட்டிஷ் காவல்படை, துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. 1600 முறை குண்டுச் சத்தம். 379 பேர் பலி. ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் படுகாயம். நாட்டின் ஆன்மாவை நடுங்கச் செய்த இந்தச் சம்பவத்தால் மனம் உடைந்துபோனான் பகத்சிங்!

லாகூர் தேசியக் கல்லூரி மாணவனாக இருந்தபோது, புரட்சிகரமான சிந்தனைப் போக்கு உள்ள நண்பர்கள் சிலருடன் ‘நவ ஜவான் பாரத் சபா‘ என்னும் அமைப்பைத் தொடங்கினான் பகத்சிங். காந்தியக் கொள்கைகளுக்கு எதிராக ஒரு புரட்சி இயக்கம் கட்டுவதற்கு முயன்று, சிதறிக்கிடந்த புரட்சியாளர் களை ஒன்று திரட்டி, சந்திர சேகர் ஆசாத் தலைமையில் ‘இந்துஸ்தான் சோஷலிஸ்ட் ஜனநாயக சங்கம்‘ உருவாக்கினான்.

1928 – அக்டோபர் 30 அன்று சைமன் கமிஷன் லாகூர் வந்தபோது, அதை எதிர்த்து மாபெரும் மக்கள் கூட்டம் லாலா லஜபதிராய் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. மிருகத்தனமான போலீஸ் தாக்குதலில் லஜபதிராய் படுகாயமுற்று, பதினேழு நாட்களுக்குப் பின்பு மண்ணை விட்டு மறைந்தார்.

‘பாரதத் தாய்க்கு நேர்ந்துவிட்ட இந்தக் களங்கம் துடைக்கப்பட வேண்டும்’ என்று பகத்சிங் துடித்தான். பஞ்சாப் சிங்கம் கண் மூடி முப்பது நாள் முடிவதற்குள், லாகூர் தலைமைக் காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த டி.எஸ்.பி. சாண்டர்ஸை பகத் சிங்கும் அவன் தோழன் ராஜகுருவும் சுட்டு வீழ்த்தினர். அவர்களைப் பிடிக்க முயன்ற கான்சிங் என்ற தலைமைக் காவலரை ஆசாத்தின் துப்பாக்கி தீர்த்துக் கட்டியது. இதற்கு நான்கு மாதங்களுக்குப் பின், நாடாளுமன்றத்தில் தொழிலாளர்கள் உரிமைகளைப் பறிக்கும் தொழில் தகராறு மசோதா, பாதுகாப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, பகத் சிங்கும் பட்டுகேஸ்வரதத்தும் பார்வை யாளர்கள் பகுதியிலிருந்து ஆளில்லாத இடத்தில் வெடிகுண்டு வீசினர். ‘செவிடாகிப் போன அரசுக்கு எங்கள் குரல் கேட்கவேண்டும் என்பதைத் தவிர, யாருடைய உயிரையும் பறிக்கும் எண்ணம் இல்லை’ என்ற அறிவிப்பைக் கொண்ட துண்டுப் பிரசுரங்களை வீசிவிட்டு, ‘தொழிலாளர் வர்க்கம் வாழ்க! ஏகாதிபத்தியம் ஒழிக! புரட்சி ஓங்குக!’ என்று முழங்கினர்.பகத்சிங்கையும் புரட்சியாளர்கள் பலரையும் அரசு கைது செய்து சிறையில் தள்ளியது.

1931 – மார்ச் 23. இந்திய விடுதலை வரலாற்றில் மறக்க முடியாத துக்க நாள். அன்றுதான் புரட்சிக் கொடி பிடித்து, லட்சியப் பயணம் நடத்திய பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூவரும் மாலைப்பொழுதில் லாகூர் சிறையில் தூக்குக்கயிற்றில் மரணத்தை முத்தமிட்டனர்.

—சந்தா வழங்கி விகடனில் படிக்க வேண்டிய விடுபட்ட பகுதிகள்—

பகத்சிங்கும் அவருடைய தோழர்களும் மரணத்தைத் தழுவியபோது, 25 வயதைக்கூட எட்டிப் பிடிக்கவில்லை. அகிம்சை ஆயுதத்தை மறுதலித்து, வன்முறை சித்தாந்தத்தை வளர்த்து எடுத்ததால் விளைந்த விபரீதம் இது. சுதந்திரப் போரை வேகப்படுத்தும் முயற்சியில் தங்கள் வாழ்க்கையை விரும்பியே வேகமாக முடித்துக்கொண்ட வீரர்கள் இவர்கள். இந்த லட்சியவாதிகளின் தியாகத்துக்கு, இவர்களின் வன்முறையை ஏற்காத மகாத்மாவாலும் தலை வணங்காமல் இருக்க முடிய வில்லை. ‘அரசியல் வன்முறையை எந்த வடிவத்திலும் ஏற்க மறுக்கும் காங்கிரஸ் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் செய்திருக்கும் தியாகத்தையும் அவர்களுடைய வீரத்தையும் வியந்து பாராட்டுகிறது’ என்று காந்தியத் தலைமை தீர்மானம் நிறைவேற்றியது. ஆனாலும், காந்தி – இர்வின் ஒப்பந்தத்தில் கையப்பம் இடுமுன், காந்திஜியால் பகத் சிங்கைக் காப்பாற்ற முடிய வில்லை என்று நாடு முழுவதும் இளைஞர்கள் கோபம் கொண்டனர். கராச்சி காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற அண்ணலுக்கு எதிராகக் கறுப்புக் கொடி காட்டினர்.

மகாத்மா, அவர்களிடம் வன்முறையின் பலவீனத்தையும் அகிம்சையின் ஆற்றலையும் விளக்கினார். வன்முறை மூலம் ஏற்படும் சமூக மாற்றங்களைத் தொடர்ந்து பராமரிக்க வன்முறையே அவசியமாகிறது. எனவேதான், ‘நிரந்தர நன்மைகளை வன்முறை ஒருபோதும் வழங்கமுடியாது’ என்றார்.

‘புரட்சியின் பலிபீடத்தில் ரத்தம் சிந்துவது தவிர்க்க முடியாதது’ என்ற வன் முறைச் சித்தாந்தத்துக்கு நாம் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

அதே சமயம், பகத்சிங் போன்ற இந்திய விடுதலை வரலாற்றில் இடம் பெற்ற மற்றும் இடம்பெறாத எண்ணற்ற இளைஞர்களின் தியாக வாழ்க்கைதான், நம் சுதந்திர மாளிகையின் அடிக்கல். தங்களை முற்றாக எரித்துக்கொண்டு, அவர்கள் வழங்கிய வெளிச்சத்தில்தான் தேசத்தின் அடிமை இருள் விலகியது. அதை நாம் மறந்துவிடக்கூடாது. கோபுரங்களைக் கொண்டாடுபவர்கள், அடிக்கற்களை அவமதிக்கக்கூடாது.

இதோ, சர்தார் பகத்சிங் சொல்வதைச் செவி மடுப்போம்…

‘வைரங்கள் மாளிகையின் அழகை அதிகரிக்கலாம். காண்பவரை வியப்பில் ஆழ்த்தலாம். ஆனால், நிறுத்தி வைக்க முடியாது. பல நூற்றாண்டுகள் தம் தோள்களில் சுமந்திருக்க முடியாது. நாம் இதுவரை வைரங்களைத் திரட்டினோம். அடிக்கற்களைத் திரட்டவே இல்லை. அதனால்தான் நாம் இத்தனை மாபெரும் தியாகங்கள் புரிந்தும், இன்னும் மாளிகையைக் கட்ட ஆரம்பிக்கவில்லை. இன்று நமக்குத் தேவை அடிக்கற்களே!’

அப்துல் ரகுமான் அழகாகச் சொல்வார்… ‘ஏற்றப்பட்ட விளக்கைவிட ஏற்றிவைத்த தீக்குச்சியே உயர்வானது!’

கள்ள மார்க்கம்

என்.வினாயகம் ::

சில தினங்களுக்கு முன் பெங்களூர் செயின்ட் ஜான்ஸ் ரோட்டில் என்னுடைய டூவீலரில் வந்து கொண்டிருந்தேன். அங்கே ஒரு ஓரமாக நின்றுகொண்டு ரோட்டில் செல்லும் வாகனங்களை வீடியோ கேமராவில் ஒருவர் படம் பிடித்துக் கொண்டிருந்தார். நான் உட்பட யாரும் அவரை சட்டை செய்யாமல்தான் கடந்து சென்றோம். ஆனால், அவர் வீடியோ எடுத்ததற்கான காரணம்… பதினேழு நாட்களுக்குக்குப் பிறகுதான் தெரிந்தது.

‘நீங்கள் ஒருவழிப் பாதையில் சென்றிருக்கிறீர்கள். அதற்கான வீடியோ ஆதாரம் இருக்கிறது. எனவே நூறு ரூபாய் அபராதம் கட்டுங்கள்’ என்று பெங்களூர் நகர போக்குவரத்துக் காவல் துறையிலிருந்து கடிதத்தை அனுப்பி வைத்திருந்தார்கள். தவறு செய்ததை உணர்ந்த நான் உடனடியாக பணத்தைக் கட்டிவிட்டேன்.

போக்குவரத்து விதிகள் மீறப்படும்போது சம்பந்தப்பட்ட நபர்களை மடக்கி வைத்துக் கொண்டு, காவலர்கள் போராடுவதை விட, இப்படிச் செய்தால் சத்தமில்லாமல் விதி மீறல்கள் குறைய வாய்ப்பிருக்கிறது என்றே தோன்றுகிறது. தமிழகத்திலும் இதை பின்பற்றலாமே ?

பிரமேயம்

THANGAIKKOR GEETHAM ::

தட்டிப் பார்த்தேன்
கொட்டாங்கச்சி
தாளம் வந்தது
பாட்ட வச்சி

தூக்கி வளர்த்த
என் அன்புத் தங்கச்சி
தூக்கி எறிஞ்சா
கண்ணு குளமாச்சி

தேனாக நெனச்சுத்தான்
உன்ன வளர்த்தேன்
நீயும்
தேளாகக் கொட்டிவிட
நானும் துடிச்சேன்

தோள் மீது
தொட்டில் கட்டி தாலாட்டினேன்
தாய் போல
நான்தானே சீராட்டினேன்

யாரென்று நீ கேட்க
ஆளாகினேன்
போவென்று நீ விரட்டும்
நாயாகினேன்

மலராக நெனச்சுத்தான்
உன்ன வளர்த்தேன்
நீயும் முள்ளாக தைச்சு விட
நானும் தவிச்சேன்

பாதியில வந்த சொந்தம்
பெருசு என்றே
ஆதி முதல் வளர்த்த என்ன
வெறுத்து விட்டே

பாசம் வச்ச என் நெஞ்சு
புண்ணாகவே
புருஷன் பக்கம்
பேசிவிட்ட தங்கச்சியே

கிளியாக நெனச்சுத்தான்
உன்ன வளர்த்தேன்
நீயும் கொட்டி விட
வலியில நானும் தவிச்சேன்

பொண்ணா பொறக்கலையே போ

வே சேஷாசலம்

கோல விழியிலையே கொஞ்சும் மொழியிலையே
சேல உடம்புலயுஞ் சுத்தலையே – எலேடேய்
இன்னா கவிபடிச்சும் அப்ளாஸ் நமக்கில்லையே
பொண்ணா பொறக்கலையே போ.

நன்றி: தன்னம்பிக்கை – நவ. 2004

குறிப்பு: ‘பாரதி சின்னப் பயல்’ போல் அர்த்தத்தை மாற்றும் எசப்பாட்டு வெண்பாக்கள், ‘பொண்ணா பொறக்கலையே போ’ ஈற்றடிகளுடன் கிடைக்குமா?

இடஞ்சுட்டல்: ஆகாசம்பட்டு என்னும் தம் ஊர்ப்பெயரிலேயே கவிதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளார். அத்தொகுப்பு முழுவதும் வெண்பாக்கள்தாம். – பெருமாள் முருகன்

ராமன் ராஜா

கால்டன் கொலைகள் அல்லது காங்கோவின் கண்ணீர் ::

ஒரு டிரான்ஸிஸ்டர் ரேடியோவை நிற்க வைப்பதற்கு மொட்டை மாடியின் கைப்பிடிச் சுவர் போல் முட்டாள்தனமான இடம் வேறில்லை என்ற உண்மையை சமீபத்தில் கண்டுகொண்டேன்.

ஒரு புழுக்கமான மாலை நேரம். மாடியில் ரேடியோ மிர்ச்சி கேட்டபடியே தோசை சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். அப்போது பப்லு அடித்த எதிர்பாராத சிக்ஸர் ஒன்று பறந்து வந்து ரேடியோவைத் தட்டிவிட்டது. ஐந்து வருடமாக எங்கள் வீட்டில் விசுவாசமாக உழைத்துக்கொண்டிருந்த அந்த ரேடியோ, மூன்றாம் மாடியிலிருந்து செங்குத்தாகப் பயணம் செய்து கீழே பால் வாங்கச் சென்றுகொண்டிருந்த பாலு மாமாவின் முடியற்ற மண்டையை கால் இஞ்ச் தூரத்தில் கடந்து கான்க்ரீட் தரையில் விழுந்து சோவியத் யூனியன் போல் சிதறியது.

நான் விசனத்துடன் கீழே போய்ப் பார்த்தபோது ஸ்ப்ரிங்குகளுக்கும் பாட்டரிகளுக்கும் நடுவே குட்டியாக பொடி டப்பிகள் மாதிரி சில கபாஸிடர்கள் சிதறிக்கிடக்க, என் ரேடியோவின் அகால மரணம். அந்த மரணத்தையும் மீறிய மற்றொரு துக்க சிந்தனை எழுந்தது. இந்த கபாஸிடர்களினால் காங்கோ நாட்டில் பல பேர் ரத்தம் சிந்திக்கொண்டிருக்கிறார்கள். நாம் இங்கே மிர்ச்சி கேட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதுதான் அது. எப்படி? விளக்குகிறேன்.

கால்டன் என்பது கொலம்பியம் – டான்டலம் என்ற இரு உலோகங்கள் அடங்கிய தாதுப்பொருள். இதில் டான்டலம் என்கிற சமாச்சாரம் அதிக சூட்டைத் தாங்கக் கூடியதால் அதை உபயோகித்து கபாஸிடர் எனப்படும் மின்னேற்பிகள் செய்கிறார்கள். மின்சாரத்தைத் தேக்கி வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகத் தரவல்ல இந்த மின்னேற்பிகள் இல்லாமல் எலக்ட்ரானிக்úஸ இல்லை! எனவே நம் செல்போன், ரேடியோ, டி.வி. சகலத்திலும் கடவுளுக்கு அடுத்தபடி நீக்கமற நிறைந்திருக்கிறது டான்டலம். உலகில் மிகச்சில இடங்களில் மட்டுமே கிடைக்கும் கால்டனுக்கு ஏகப்பட்ட கிராக்கி.

குறிப்பாக காங்கோ ஜனநாயகக் குடியரசு. உலகத்தின் மொத்த கால்டனில், எண்பது சதவிகிதம் இங்கேதான் கிடைக்கிறது. உலகச் சந்தையிலோ ஏராளமாக டிமாண்ட். இதுவே அராபிய நாடுகள் போல் கொஞ்சம் சதிவேலை தெரிந்திருந்தால் கால்டன் சப்ளையை வைத்துக்கொண்டு மார்க்கெட் விளையாட்டு விளையாடி செமத்தியாகச் சம்பாதித்து, டாலர் நோட்டைக் கொளுத்தி சிகரெட் பற்ற வைப்பார்கள். ஆனால் காங்கோ மக்கள் அப்பாவிகள், கோட்டை விட்டார்கள். ஆளாளுக்கு காங்கோவில் புகுந்து கால்டன் உள்படப் பல இயற்கை வளங்களையும் சூறையாடிவிட்டு, போகிற போக்கில் ஒரு உதையும் கொடுத்துவிட்டுப் போகும் அவல நிலை.

கால்டனை அகழ்ந்தெடுப்பது சுலபமான வேலை. மண்வெட்டியால் மண்ணைத் தோண்டி பக்கெட்டில் போடுங்கள். தண்ணீர் ஊற்றி அலசுங்கள். கால்டனில் சற்று கனமான உலோகங்கள் இருப்பதால் அடியில் தங்கிவிடும். அப்படியே கொண்டுபோய் நிழலான ஏஜெண்ட்டுகளிடம் கொடுங்கள். அவர்கள் மனமுவந்து தரும் சொற்பத் தொகையை வாங்கிக்கொண்டு வழிப்பறித் திருடர்களிடம் மாட்டாமல் வீடு திரும்பினால் அன்றைக்கு வீட்டில் அடுப்பெரியும். ஒரு சுறுசுறுப்பான குழுவால் தினம் ஒரு கிலோ கால்டன் சேகரிக்க முடியும். 450 ரூபாய் வரை கிடைக்கும். தரகர்களைக் கடந்த பிறகு மார்க்கெட்டில் விலை என்ன தெரியுமா?

ரூபாய் இருபதாயிரம்!

காங்கோ பாவம்… சின்ன வயசிலிருந்தே மிகவும் கஷ்டப்பட்ட தேசம். பதினைந்தாம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர்கள் வந்து கால் வைத்த போது ஆரம்பித்தது சனி. ஒரு கட்டத்தில் அவர்கள் கப்பல் கப்பலாக அடிமைகளைப் பிடித்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தார்கள். உள்ளூர் மக்களின் சுதந்திரப் போராட்டம் வெற்றி பெறமுடியவில்லை. காங்கோ மன்னரே ஐரோப்பியர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு கண்ணடித்துவிட்டு வேறுபுறம் திரும்பிக்கொண்டார். நடுவில் வாடிகன் சர்ச் நுழைந்து எரிகிற வீட்டில் பிடுங்கியது. பிறகு பெல்ஜியம் நேரடியாக நாட்டை அடிமைப்படுத்தியது. காலனி ஆட்சியில் காங்கோ மக்கள் அனுபவித்த நிறவெறிக் கொடுமைகளைப் பற்றி நிறையப் பேர் ஆர்ட் படம் எடுத்து அவார்ட் வாங்கியிருக்கிறார்கள்.

1965-ல் சி.ஐ.ஏ. உதவியுடன் ஆட்சியைக் கவிழ்த்துப் பதவியை அபகரித்த தளபதி மொபுடு, நாட்டின் பழைமையான கலாசாரத்தையும் தேசிய கௌரவத்தையும் ஐரோப்பிய மிலேச்சர்களிடமிருந்து காப்பாற்றப் போகிறேன் என்று சூளுரைத்தார். நாட்டின் பெயரை ஜயர் என்று மாற்றிவிட்டு, தன் பெயரையும் ஒரு பாராவுக்கு வைத்துக்கொண்டார். ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக தேர்தலில் நின்று ஜெயித்தார்.

(வாக்குச் சீட்டில், வேட்பாளர் இடத்தில் அவருடைய பெயர் மட்டும்தான்)

மொழிப் பாதுகாவலையும் விட்டு வைக்கவில்லை. “எங்கள் தாய் கோங்கோ மொழி, இன்பக் கோங்கோ எங்கள் உயிருக்கு நேர்’ என்று பாட்டுப் பாடி தார்ச்சட்டியை எடுத்துக்கொண்டு பெயர்ப் பலகைகளிலெல்லாம் ஃப்ரெஞ்சை அழித்தார். பிறகு நாட்டை அழித்தார். தேசத்தில் பாதியை விற்று தன் ஸ்விஸ் வங்கிக் கணக்கில் போட்டார். ராணுவத்துக்குச் சம்பளமே தராமல், நேரடியாகப் பொது மக்களிடமிருந்து முடிந்தவரை அடித்துப் பிடுங்கிக் கொள்ளுங்கள் என்று அவிழ்த்துவிட்டு விட்டார். அராஜகம்!

காங்கோவில் தங்கம், வைரம், தாமிரம் என்று ஏராளமான இயற்கை வளங்கள். வற்றாத ஆறுகள், ஏரி, பொருள்களுக்குக் குறைச்சலே இல்லை. இருந்தும் சராசரிக் குடிமகனின் மாத வருமானம் 400 ரூபாய்; சராசரி வாழ்நாள் 42 வருடங்கள். பணவீக்கம் ஒரு சமயம் ஆறாயிரம் சதவிகிதம் வரை எகிறி நாடே மாபெரும் கப்பரையாகிவிட்டது. காரணம், அரசியல்!

பாம் வெடிக்கும் பிரிவினைவாதிகள், பிரிவினைவாதிகளுக்கு பட்டாசு சப்ளை செய்யும் பக்கத்து நாடுகள், அவ்வப்போது ராணுவ ஆட்சி, ஆட்சியில் பயங்கர ஊழல், ஊழலுக்குத் துணை நிற்கும் மேற்கத்திய நாடுகள், மேற்கத்திய அநியாயங்களை அதட்டிக் கேட்க முடியாமல் முப்பது வருஷமாக அறிக்கைகள் விட்டுக்கொண்டிருக்கும் ஐ.நா.சபை என்று கச்சிதமாக எல்லாம் விதிப்படியே நடந்துகொண்டிருந்தது.

காங்கோவின் தீவிரவாதப் பிரச்னை, பற்பல பரிமாணங்கள் கொண்ட பன்னாட்டுச் சிக்கல். இந்த மொபுடு சும்மா இருக்கமுடியாமல் ருவாண்டா, உகாண்டா, அங்கோலா என்று பல நாடுகளின் உள்நாட்டுச் சண்டையில் தலையிட்டு ஊதித் தொலைத்துவிட்டார். அவரவர்கள் கோபம் கொண்டு ஆளுக்கொரு தீவிரவாதக் குழுவுக்குக் கொம்பு சீவி காங்கோவுக்கு அனுப்பி வைக்க, இந்தப் பிரதேசத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்து வரும் ஃப்ரான்ஸ் மட்டம் தட்டுவதற்காக அமெரிக்காவும் புகுந்த அலம்பல் செய்ய, ஆயுதம் தாங்கிய அகதிகள் பிரச்னை வேறு சேர்ந்துகொள்ள, எல்லாத் தரப்பினரும் காங்கோவை பன் மாதிரி பிய்த்து டீயில் தோய்த்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்!

இந்தப் பின்னணியில் மறுபடி கால்டனுக்கு வருவோம். காங்கோவின் உள்நாட்டுப் போர் முடிவில்லாமல் நீள்வதற்கு கால்டன் தரும் பணம் ஒரு முக்கிய காரணம். கால்டன் சுரங்கங்கள் திட்டமிட்டு சுரண்டப்பட்டு பல தீவிரவாதக் குழுக்கள் கையில் போய்ச் சேருகிறது. பக்கத்து நாடான ருவாண்டாவின் ராணுவம் காங்கோவில் புகுந்து ஒரே வருஷத்தில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கால்டனைக் கடத்தியிருக்கிறது.

காங்கோவின் பல்லாயிரம் வருட சொத்தான ட்ராபிகல் காடுகள் ஐம்பதே வருடத்தில் மழுங்கச் சிரைக்கப்பட்டு எங்கெங்கும் பள்ளம் தோண்டி வேளச்சேரி மெயின் ரோடு மாதிரி ஆகிவிட்டதற்குக் காரணம் கால்டன். உள்ளூர் மக்களின் விவசாய நிலங்களெல்லாம் துப்பாக்கி முனையில் அபகரிக்கப்பட்டு கால்டன் சுரங்கமாக மாறியதன் விளைவு – விலா எலும்பு தெரியும் குழந்தைகள். அப்பாவி பொதுமக்களையும் குழந்தைகளையும் கட்டாயமாக கால்டன் தோண்ட கொத்தடிமையாகவும் பிடித்துப்போகிறார்கள். குடியும் குடித்தனமுமாக அமைதியாக வாழ்பவர்கள் குறைந்துபோய், நாடு முழுவதும் சுரங்கத் தொழிலாளர்களும் போராளிகளும் நிறைந்துவிட்டதால் விபசாரம் மிகவும் பெருகி எங்கு பார்த்தாலும் எய்ட்ஸ்!

சந்தடி சாக்கில் உலக வங்கியும் ஐ.எம்.எஃப்பும் காங்கோவை நெருக்குகின்றன. எல்லா இயற்கை வளங்களையும் சுரங்கம் தோண்டும் உரிமைகளையும் மேற்கத்திய தனியார் கம்பெனிகளின் வசம் ஒப்படைத்தால்தான் உதவித்தொகை வருமாம். சண்டையை நீடித்துக்கொண்டே போவதால் காங்கோவிலிருந்து யாரும் கால்டந் வாங்கக் கூடாது என்று ஐ.நா. சபையில் ஒரு தீர்மானம் போட்டார்கள். ஊகூம். ஐ.நா. தீர்மானத்தை யாராவது மதிப்பார்களா?

அமெரிக்காவில் சில சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் முயற்சியால் இப்போது காங்கோ பிரச்சினையைப் பற்றிய ஞானம் ஓரளவு ஏற்பட்டிருக்கிறது. கெமட் போன்ற பெரிய கபாஸிடர் தயாரிப்பாளர்கள், டான்டலம் வாங்கும்போது அது சட்ட விரோதமாகத் தோண்டப்பட்டதல்ல என்று சர்டிபிகேட் கேட்கிறார்கள். ஆஸ்திரேலியா போன்ற மாற்று சப்ளையர்களிடமிருந்துதான் டான்டலம் வாங்குகிறோம் என்று பொய்ச்சத்தியம் செய்கின்றன சில கம்பெனிகள். கிரீன்லாந்தின் எரிமலைகளுக்குள் நிறைய டான்டலம் இருக்கிறது என்று ஒரு கோஷ்டி தைரியமாக கிட்டே போய் எட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறது. சில தன்னார்வக் குழுக்கள் காங்கோவின் கண்ணீரை உள்ளடக்கிய கம்ப்யூட்டர், டி.வி. போன்றவற்றைப் போட்டு உடையுங்கள் என்று ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.

ஒவ்வொரு முறை நாம் டி.வி. பார்க்கும்போதும் செல்போன் பேசும்போதும் காங்கோவில் யாரோ ஒரு கலூங்காவின் துயரத்திற்கு ஐந்து பைசா அளவுக்குக் காரணமாகிறோம். ஒரு அநியாயம் நடக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்; சம்பவ இடத்திலிருந்து எவ்வளவு தூரம் தள்ளி இருந்தால் நமக்கு அதில் மறைமுகமான பொறுப்பில்லை என்று மனசாட்சி உறுத்தாமல் வாழலாம். பாத்ரூமில் உட்கார்ந்திருக்கும்போது சிந்திக்கவேண்டிய கேள்வி இது.

அடுத்த முறை உங்கள் ரேடியோவைக் குழந்தை உடைக்கும்போது பதறாதீர்கள். குழந்தைகள்தான் நம்முடைய மனசாட்சியின் மனித வடிவமோ என்னவோ?

காலச்சுவடு ஜூலை 2005

  • உலகமயமாக்கலின் பின்னணியில் மொழிக் கொள்கைகளின் அரசியல் :: செ.ச. செந்தில்நாதன்
    ஒரு பெரும்பிரிவு மக்கள் பாதுகாப்பான நிலையை அடைந்திருக்கிறார்கள். அவ்வாறு அடைந்திருப்பவர்களின் பொருளாதாரப் பார்வை (மொழிப் பார்வையும்தான்) வேறு மாதிரி இருக்கும். தலித்துகளும் பிறரும் இந்தச் சலுகை பெற்ற சமூகத்தவரின் முன்னுரிமைகளை முன்மாதிரியாகக் கொள்ளாமல் புதிய உலகளாவிய வாய்ப்புகளை முன்னிறுத்திக்கொண்டுதான் தங்கள் பொருளாதாரப் பார்வையை வகுக்க வேண்டும்.
  • கீழிருந்து எழும் உலகமயம் :: ஜெரமி பிரெச்சர், டிம் கோஸ்ட்டெல்லோ, பிரெண்டன் ஸ்மித் – தமிழாக்கம்: சிங்கராயர்

    காலச்சுவடு வெளியீடாக வரவிருக்கும் கீழிருந்து எழும் உலகமயம் நூலிலிருந்து ஒரு பகுதி கீழே தரப்படுகிறது. இந்நூல் ஜெரமி பிரெச்சர், டிம் கோஸ்ட்டெல்லோ, பிரெண்டன் ஸ்மித் ஆகியோர் எழுதிய Globalization From Below என்னும் நூலின் மொழிபெயர்ப்பு.

    கூட்டுக்கழகங்கள், சந்தைகள், முதலீட்டாளர்கள், மேல்குடிகள்யாவும் உலகமயமாகிக்கொண்டு உள்ளன. பொருளியல் வல்லுனர்களும் மேதைகளும் கூட்டுக்கழக நிர்வாகிகளும் உலகின் பெரும் பணக்கார நாடுகளின் தலைவர்களும் அடிக்கடி கொண்டாடிவரும் உலகமயமானது உண்மையில், அவர்கள் ‘மேலிருந்து திணிக்கும் உலகமயம்’ ஆகும்.

  • அசோகமித்திரனின் கலை மேதை :: சுந்தர ராமசாமி
    ‘கடவு’ இலக்கிய அமைப்பும் கிழக்கு பதிப்பகமும் இணைந்து நடத்திய ‘அசோகமித்திரன் – 50’ நிகழ்வில் சுந்தர ராமசாமி ஆற்றிய உரையின் பதிவு.
  • கல்வி உலகமயமாதல்: சில ஆபத்துகள் :: பி.ஆர். ராமானுஜம்
    (பேராசிரியர் பி.ஆர். ராமானுஜம் புதுதில்லி இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தொலைக் கல்விக்கான ஊழியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (STRIDE) இயக்குநர். 1986இல் ‘இலக்கியக் கோட்பாடுகள்: நவீனத்துவமும் மார்க்சியமும்’ என்னும் தலைப்பில் ஆய்வு செய்து ஹைதராபாதில் உள்ள ஆங்கில மற்றும் வெளிநாட்டு மொழிகளுக்கான மைய நிறுவனத்தில் (CIEFL) முனைவர் பட்டம் பெற்றவர்.
    அறிவுசார்ந்த தேடலும் ஆராய்ச்சியும் கேள்விகள் கேட்பதும் கல்விக்கு அந்நியமானவை என இந்தக் கல்விக்கூடங்கள் நினைப்பதால் கையாலாகாத ஆசிரியர்களும் கற்கும் திறமையற்ற மாணவர்களும் பல்கிப் பெருகும் கல்வித் தொழிற்சாலைகள் மிகவும் லாபகரமாக இயங்குவதற்கு உலகமயமாதல் வசதிசெய்து தருகிறது.
  • தலையங்கம்: தேர்வு முறையைத் திருத்துங்கள்
    சுகாதார வசதி என்பது மிகவும் புறக்கணிக்கப்பட்டதாக இருக்கும் நமது நாட்டில் மருத்துவர்களுக்கு மிகுந்த தேவை உள்ளது. மருத்துவக் கல்வியை விரிவுபடுத்த வேண்டியது அவசியமாகும்.
  • சோரகவி மரபு: ‘லீலா வினோதம்’ :: பெருமாள்முருகன்
    எவ்வளவு பெரிய நூலாக இருந்தாலும், எத்தனை புகழ் பெற்றிருந்தாலும் பயப்பட வேண்டியதில்லை, பெயரை மட்டும் மாற்றித் தன்னுடையதாக்கிக்கொள்ள முடியும் என்பது தமிழ்ச் சூழலில் சாதாரணம். மூலநூல் தொடர்பானவர்கள் உயிருடன் இருப்பினும் பிரச்சினை இல்லை.
  • சிறுகதை: இரட்சகன் வருகிறான் : பொ கருணாக்ரமூர்த்தி
    ‘உங்க தோஸ்த்து ஜெர்மனிக்குப் போயும் இப்ப பத்துப் பதினைந்து வருஷங்களாச்சு, ஒவ்வொரு முறை வாறபோதும் தவறாமல் ‘நீ பாஸ்போட்டை எடு, பாஸ்போட்டை எடு’ என்கிறாரேயொழிய உருப்படியாய்க் கூப்பிடுறதுக்கு வழியொன்றும் பண்றதாய்க் காணமே . . . ‘
  • கீரிப்பட்டி, பாப்பாபட்டி: கதவருகில் நிற்கும் மரணம் :: ரவிக்குமார்
    பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில்கூட நடக்க முடியாத அளவுக்கு இங்கே சாதிக் கொடுமைகள் நடந்துகொண்டிருப்பதைப் பார்த்தால் நாகரீகத்தின் அடையாளமாகவும் முன்னேற்றத்தின் வெளிப்பாடாகவும் கருதப்படும் நகரமயத்துக்குப் பதில் நாடே கிராமமயம் ஆகிவிட்டது என்றுதான் முடிவு செய்யத் தோன்றுகிறது.
  • மொழி: நெஞ்சு பதைக்கிறது :: நஞ்சுண்டன்
    மொழி நடை, மொழி நயம் ஆகியவற்றின் சில நுட்பமான அம்சங்களைப் பற்றி நஞ்சுண்டன் எழுதுகிறார். இலக்கணச் செறிவை மட்டுமன்றி நடைமுறைப் பிரச்சினைகளையும் இப்பகுதி கணக்கில் எடுத்துக்கொள்ளும்.
  • நேர்காணல்: பிரிட்டிஷ் இயக்குநர்கள் ஜானா பிரிஸ்கி – ராஸ் காஃப்மன் :: அ. முத்துலிங்கம்
    கல்கத்தா சிவப்பு விளக்குப் பகுதியைச் சேர்ந்த குழந்தைகளுடன் வாழ்ந்து, அவர்களைப் பற்றி விவரணப் படம் எடுத்து ஆஸ்கார் விருது பெற்றார்கள் ஜானா பிரிஸ்கி, ராஸ் காஃப்மன் என்ற பிரிட்டிஷ் இயக்குநர்கள். இவர்கள் படமெடுத்த கதையும் பேட்டியும்.
  • புதிய வாசல், புதிய வெளிச்சம் :: கலையம்சம் கொண்ட படங்களைப் பரவலாகக் கொண்டுசெல்லும் முயற்சி
    அதிநவீன வசதிகளும் தோற்றப்பொலிவும் கொண்டு, சென்னை மேல்தட்டு மக்களின் கேளிக்கை மையங்களில் ஒன்றாக விளங்கிவரும் சத்யம் திரையரங்க வளாகம், கலை உணர்வுடன் உருவாக்கப்பட்ட திரைப்படங்களையும் ஆவணப் படங்களையும் மாதந்தோறும் இலவசமாகத் திரையிட்டுவருகிறது. இந்த மாற்றம் தானாகவே நிகழ்ந்துவிடவில்லை.
  • மதிப்புரை: உலக சினிமா – முழுமை கூடாத முயற்சி :: அம்ஷன் குமார்
    உலக சினிமா பற்றித் தகுந்த கட்டுரைகளை முதலில் தேர்ந்தெடுத்துக்கொண்டு அவற்றை மொழிபெயர்த்துத் தொகுத்திருக்கலாம். அல்லது தகுதியான ஒரே மூலநூலைத் தேர்ந்து அதைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கலாம். அவ்வாறெல்லாம் செய்யப்பட்டிருந்தால் செம்மையான உலக சினிமா வரலாறு தமிழுக்குக் கிடைத்திருக்கும்.
  • உ.வே.சா. ‘குள்ளமானவர்’ அல்லர்! :: ஐராவதம் மகாதேவன்
    ஐயரவர்கள் தமிழ்ப் பணியில் மட்டுமல்ல, உருவத்திலும் உயர்ந்தவரே!
  • அற்றைத் திங்கள்: ந. முத்துச்சாமியும் நாடகமும்
    மே மாத அற்றைத் திங்கள் நிகழ்வில் பங்கேற்ற முத்துசாமி ‘எழுத்து’ இதழ் காலகட்டத்தையும் அதையொட்டித் தன் பிரக்ஞையைக் கூர்தீட்டிக்கொள்ள உதவிய நட்புகளையும் பற்றிப் பேசினார்; தனது நாடக ஆக்கத்திற்கான முக்கியமான உந்துவிசை புதுக்கவிதை என்றும் அது உருவாகிய புதிதில் தனக்கு ஏற்பட்ட புரியாமையையும் குழப்பத்தினையும் தீர்த்துவைத்தவர் சி.சு. செல்லப்பாதான் என்றும் நினைவுகூர்ந்தார்.
  • இதழ் அறிமுகம்: கூத்தரங்கம்
    ‘கூத்தரங்கம்’ என்னும் பெயரிலான இருமாத நாடக இதழ் ஒன்று, இலங்கையிலிருந்து 2004ஆம் ஆண்டு மார்ச் முதல் தொடர்ந்து வெளிவருகிறது. யாழ்ப்பாணம், திருநெல்வேலியிலிருந்து வெளிவரும் இவ்விதழ் கலை, குறிப்பாக நாடகம், தொடர்பான எல்லாவற்றையும் இடம்பெறச் செய்து பரவலான வாசிப்பை ஏற்படுத்த முயற்சிப்பதாக உள்ளது.
  • கோணங்கள்: அத்வானியின் பயனற்ற சாகசம் :: அரவிந்தன்
    ‘கொள்கைப் பிடிப்புள்ள’ தலைவராகத் தலை நிமிர்ந்து நிற்கவும் முடியாமல் மிதவாதத் தலைவராக மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெருக்கிக்கொள்ளவும் முடியாமல் மானத்தோடு ராஜினாமா செய்துவிட்டுப் போகவும் மனமில்லாமல் தவிப்பது அவரது அரசியல் வாழ்வின் வீழ்ச்சிக்குத் தொடக்கமாக இருக்கலாம்.
  • பழனிவேள் கவிதைகள்

  • அகமும் அயலும்: ‘உயிர் தின்ற காலம்’ :: பிரஸன்னா ராமஸ்வாமி
    >கான் சர்வதேசத் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட ப்ரஸன்னா ராமஸ்வாமி தன் அனுபவங்களை இத்தொடரில் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்.
  • எதிர்வினை: அதுவா அழகரசனின் விருப்பம்?
    முற்போக்காளர்களின் அரசு எதிர்ப்பு, ஆதிக்கச் சாதி எதிர்ப்பாக மாறிய நிலையில் அறிவுஜீவிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டதாக அழகரசன் அவதானிக்கிறார். அந்த நெருக்கடியின் விளைவுகளாகப் பெரியார் குறித்த மறுவாசிப்புக்கான எதிர்வினைகளைக் கருதுகிறார். இது அறிவுஜீவிகளின் அடிப்படையையே சந்தேகிக்கும் மோசமான கருத்து.
  • தேவை தடைகள் அல்ல, கருத்துப் பரிமாற்றம் :: அ. ராமசாமி
    புகைபிடிப்பவர்களே இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என நமது அரசாங்கம் நினைக்கலாம். அப்படி நினைத்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கை திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் புகைபிடிக்கும் காட்சிகளுக்குத் தடை என்னும் சட்டத்தைக் கொண்டுவருவது அல்ல.

  • அஞ்சலி: சிவராம் – கொலையும் குருதியும் ஒரு துளி மையும்
    ஒரு அறிவுஜீவித வறுமைக்குள் ஈழத் தமிழ்ச் சமூகம் சென்றுகொண்டிருக்கிறதா என்று அவர் எழுப்பிய வினாவுக்கு ‘ஆம்’ என்பதாக இருந்தது அவரது படுகொலை.
  • அஞ்சலி: போல் ரிகர் – தத்துவக் கதவுகளைத் திறந்தவர்
    மனித மனசாட்சியின் ஆழங்களையும் ஆழ்மனத்தின் செயல்பாடுகளையும் பற்றி உளவியல் ஆய்வு வாயிலாகவும், உரையியல் வாயிலாகவும் சிந்தித்த போல் ரிகரின் மறைவு ஒரு பெரிய இழப்பு என்றபோதிலும், தத்துவச் சிந்தனை அவரை மறக்க முடியாத அளவுக்குப் பல கதவுகளைத் திறந்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
  • கதா புருஷன்: அடூரின் உலகிற்கு ஒரு சாளரம் :: சு. தியடோர் பாஸ்கரன்
    கதகளிப் பாரம்பரியத்தில் தோன்றி, நாடகத்தில் ஈடுபாடு கொண்டு, பின்னர் சினிமாக் கலையை முறைப்படி கற்ற கோபாலகிருஷ்ணன், நிகழ்கலைகளின் அழகியலில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். சினிமாமீது பரவலாக இருக்கும் உதாசீன நோக்கில் அக்கலை வடிவின் நியாயங்கள், நெறிகள், தனித்தன்மைகள் நீர்த்துப் போய்விடக் கூடாது என்பதில் தீவிர அக்கறை கொண்டவர்.
  • கலை: படித்துறைக் காட்சிகள் :: திவாகர் ரங்கநாதன்
    பொதுவாகப் புகைப்படக் கலைஞர்களுக்குத் தென்படும் வாரணாசிக் காட்சிகளை மட்டுமின்றித் தனது பார்வையையும் தொழில்நுட்பத் திறனுடன் வெளிப்படுத்தியிருக்கிறார் வினோத். இவரது முதல் கண்காட்சி இது.
  • சுந்தர் சி

    எனக்கு பிடித்த பாடல்‘ என்று சுந்தர் சி பட்டியல் போட்டுக் கொண்டிருந்தார். நடிகர்களிடம் இந்த மாதிரி ‘நடித்ததில் பிடித்தது’ என்று கேட்கும்போது ‘politically correct’ நடுநிலைமையான பதில்களை சொல்வார்கள்.

    ‘ரஜினி சார் மாதிரி வருமா… அவர் பெரிய மனுஷத்தனம் இல்லாமப் பழகுவார்.’
    ‘கமல் மாதிரி கலைஞன் இருப்பாரா… எனக்கு நடிப்பு சொல்லித் தந்ததே அவர்தான்!’
    ‘கேப்டனுடன் நடிப்பதற்குக் கொடுத்து வச்சிருக்கணும்… நமக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டு ஒதுங்கி நின்று குழந்தை போல் சிரிப்பார்.’

    என்னும் ரேஞ்சுக்கு அடுக்கி செல்வார்கள்.

    சுந்தர் சி கொஞ்சம் அடக்கி வாசித்தார்.

    1. ‘அதோ அந்தப் பறவை போல’ – ஆயிரத்தில் ஒருவன்

    படம் முடியும் தருணத்தில் வரும் பாடல்களின் தாத்பரியத்தை விளக்கினார். அன்னியனில் ‘ரண்டக்க ரண்டக்க’ வரும்போது பார்வையாளன் கடுப்பாகக் கூடாது. ‘எப்படா படம் முடியும்’ என்றோ, தம்மடிக்கவோ வெளியில் செல்லாமல், பாடலை ரசிக்க வேண்டும். அந்த விதத்தில் தன்னைக் கவர்ந்த பாட்டாக அமைந்திருக்கிறது என்றார்.

    (எம். ஜி. ஆர் ஆச்சு)

    2. ‘மறைந்திருந்து பார்க்கும்’ – தில்லானா மோகனாம்பாள்

    திரைக்கதையுடன் ஒத்திசைவாக அமைந்திருக்கும் பாடலுக்கு எடுத்துக்காட்டாக இதை எடுத்துக் கொண்டார். நகைச்சுவை சேஷ்டைகள், காதல் ரசம், சீரியஸ் நடனம், அப்பாவி ஜனங்கள் என்று பல விஷயங்கள் கலந்து கட்டி எடுப்பதில் உள்ள கஷ்டங்களைப் பகிர்ந்து கொண்டார்.

    (சிவாஜி ஓவர்)

    3. ‘சொன்னது நீதானா’ – நெஞ்சில் ஓர் ஆலயம்

    எனக்கு இந்தப் படத்தில் ‘நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்’ நெஞ்சில் மறக்காத பாடல். அவருக்கு இது பிடித்தமான பாடல். அத்தனை சிறிய அறையில் ஒரு படுக்கை, மெகா வீணை, எல்லாவறையும் சுழலும் கேமிரா கோணங்கள் வைத்து ஸ்ரீதர் படம் பிடித்ததை வியந்தார். ஒளிப்பதிவில் சாதனை கல்லாக தான் கருதும் பதிவு என்ற பிறகுதான் குட்டி ரூமையும், அதில் வரும் காட்சியமைப்பின் மூலம் நிலைமை கை மீறுவதையும் சோகத்தையும் கொண்டு வந்ததை கவனிக்க முடிந்தது.

    4. ‘காதல் வந்தால்’ – இயற்கை

    அந்தக் காலத்துக்கு ஸ்ரீதர். இந்தக் காலத்திற்கு எஸ். பி. ஜகன்னாதன். நல்ல படப்பதிவு, இசை, வரிகள். அமைதியான ஷாம்.

    5. ‘காதல் வளர்த்தேன்’ – மன்மதன்

    என்னென்னவோ காரணம் சொல்லிக் கொண்டிருந்தார். எதுவும் மனதில் நிற்கவில்லை. ‘ஆளவந்தான்’ மூலம் கமல் அழித்தார்; ‘பாபா’ மூலம் ரஜினியும் சுந்தர் சி.யை மூட்டை கட்டினார். ‘யூ டூ சிம்பு!?’ என்று கேட்கும் போல் படம் ஏதாவது இயக்க வாய்ப்பளித்திருக்கிறாரா என்று அறியேன்.

    6. ‘சின்னத் தாயவள்’ – தளபதி

    ரஜினியின் பாடலை சொல்லாமல் எப்படி நிகழ்ச்சியை முடிக்க முடியும். ராக்கம்மா கையைத் தட்டி இருக்கலாம்.

    Yamuna Rajendran (c) Thinnai.com 

    Yamuna Rajendran (c) Thinnai.com Posted by Picasa