Daily Archives: செப்ரெம்பர் 16, 2013

சிரியா – ஒபாமா நலமா?

சிரியா பிரச்சினையின் 101 என்ன என்பதை பா ராகவன் தி ஹிந்துவில் எழுதுகிறார். சிரியா ஏன் திடீரென்று செய்திகளில் அடிபடுகிறது?

ஒபாமாவிற்கு இந்த மூன்று மாத காலம் சிரமதசை நடக்கிறது. இதற்கு மாற்றாக குரு பார்வை, சுக்கிர பலம் எல்லாம் கிடைத்தால் நன்றாக இருக்கும். குரு போன்ற முக்கிய கிரகம் பார்ப்பதுதான் சிரியா மீது போர்மேகங்கள் சூழ்வதற்கான அஸ்திவாரம்.

இந்த மாத இறுதியில் ஒபாமாவின் சேமநல காப்பீடு திட்டம் முழுவீச்சுடன் இயங்கப் போகிறது. அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் சகல அமெரிக்கருக்கும் உடல்நல பாதுகாப்பு திட்டத்தை முடக்க எதிர்க்கட்சி திட்டம் போட்டிருந்தது. இந்த மாதிரி தொடர்ந்து முட்டுக்கட்டைப் போட்டு தலைவலி கொடுக்கும் ரிபப்ளிகன் கட்சியை எப்படி சமாளிப்பது? முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பது போல் குடியரசு கட்சிக்கு பிடித்தமான நாட்டுப்பற்றை முதலில் கையில் எடுத்தார் ஒபாமா.

ஸ்னோடென் கிடைத்தார். அவரும் உலக மகா ரகசியம் போல் அமெரிக்கா வேவு பார்க்கிறது என்பதை சொல்கிறார். தேசநலன், தீவிரவாதிகளை கண்காணித்தல், அமெரிக்காவை பாதுகாத்தல் போன்ற விஷயங்கள் செய்தியில் அடிபடுகின்றன. Tea party செயல்பாடுகளை வருமானவரித்துறை மூலம் ஒடுக்கியதில் இருந்து ஒபாமா மீள்கிறார். தேயிலைக் கட்சிகாரர்களின் கெடுபிடிகளை மறக்கடித்து கொடி காத்த குமரனாக பராக் ஒபாமா மிளிர்கிறார்.

கொஞ்ச நாள் போனதும் எட்வர்ட் ஸ்னோடென் பழைய செய்தியாகிப் போகிறார். மீண்டும் ஒபாமா கேர் தடுக்கப்பட வேண்டும் என்று போர் முரசு கொட்டுகிறார்கள் ரிபப்ளிகன் கட்சியினர். எப்படித் தப்பிப்பது? இப்பொழுது Wag the Dog சமயம். அமெரிக்காவே சண்டக்கோழி. இதில் மிகப் பெரிய சண்டியர்களாக குடியரசுக் கட்சிக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களின் அஸ்திரம்தான் ”போர்”. ஒபாமாவே அதை கையில் எடுத்தால்…?

ஒபாமா கேர் பின்னுக்குத் தள்ளப் படுகிறது. சேமநலத் திட்டத்தை தடுத்து நிறுத்துவதைப் பற்றி பேசுவதற்கு பதில் போர் மூண்டால் எவ்வளவு ஏவுகணை விற்கும்… எத்தனை எஃப்16 தயாரிக்கலாம்… என்று முட்டைக்கணக்கு போடத் துவங்கி இருக்கிறார்கள். பெட்ரோடாலரும் வலுக் கொண்டது. ரூபாயும் போன்ற இன்ன பிற நாணய மதிப்புகளும் வீழ்ச்சி முகம் கொண்டன. இது பொக்கீடு (பட்ஜெட்) சமயத்தில் ஒபாமாவின் கரத்தை வலுப்படுத்தும். அப்படி இல்லாமல், அப்பொழுதும் பால் ரையான் & மார்க்கோ ரூபீயோ கோஷ்டியினர் தர்ணா நடத்தினால், சிரியா மீது நிச்சயம் குண்டு விழும்.

அதெல்லாம் சரி… சிரியாவில் எண்ணெய் இருக்கிறது என்கிறதே கட்டுரை… எவ்வளவு இருக்கிறது? சுவத்துக் கீரை வழிச்சுப் போடுடி, சொரண கெட்ட வெள்ளாடச்சி என்போமே அது போல் உலகத்தின் மொத்த பங்கில் 0.4% (0.004)! அது சும்மா அடுப்பு பொங்கக் கூடக் காணாது.

’தி இந்து’ நாளிதழ் தமிழில் – சிந்தனைக் களம் கட்டுரைகள்

தி இந்துவின் தமிழ்ப் பதிப்பு வெளியாக ஆரம்பித்திருக்கிறது. ”சிந்தனைக் களம்” பகுதியில் ’சிறப்புக் கட்டுரைகள்’ வெளியிடுகிறார்கள். தினமணி போன்ற பெத்த பெயரை வைத்துக் கொண்டு (தினகரனின்) தமிழ் முரசு போன்ற உள்ளடக்கம் கொண்டிருக்கிறது.

சிரியாவைக் குறித்து பாரா எழுதிய மேலோட்டமான கட்டுரை கிடைக்கிறது. ஜெயமோகன் பத்தி எழுத்தாளர் ஆனால் நடக்கப் போகும் அபாயமும் தெரிகிறது.

என்னைப் போன்ற சாதாரண விமர்சகர் கூட நாவலின் ஓரிரு பக்கங்களை மட்டும் ஆங்காங்கே படித்துவிட்டு தேர்ந்த அறிமுகத்தைக் கொடுத்துவிட முடியும். அந்த மாதிரி அவ்வப்போது சந்தித்த மனிதர்கள், ஆங்காங்கே பார்த்த தொலைக்காட்சி, இணையத்தில் மூழ்கடிக்கும் நிலைத்தகவல்கள் மட்டுமே கொண்டு மேக்ரோ பார்வை கொடுப்பதன் ஆபத்தை மீண்டும் மீண்டும் ஜெயமோகன் உணர்த்திக் கொண்டேயிருக்கிறார். ஊடகத்தை கவனிப்பதற்கென்றே பிரத்தியேகமாக இயங்கும் medianama.com , fourth-estate-critique, thehoot.org போன்ற பல்வேறு தளங்களின் உதவியைக் கோரி கொஞ்சமாவது ஆராய்ந்து எழுதியிருக்கலாம்.

அந்தக் காலத்தில் நேருவும் கென்னடியும் மட்டுமே செய்தியாளர்களுக்கு முக்கியமானவர்கள். இந்தக் காலத்தில் பக்கத்து மாநகராட்சி கவுன்சிலரும், பையன் ஆடும் கிரிக்கெட் அணியும், முக்குத்தெருவில் உதயமான பவானி அம்மனும் செய்தியை ஆக்கிரமிக்கிறார்கள். எங்கோ 2ஜி கொள்ளை அடிப்பதை நினைத்து அங்கலாய்ப்பதை விட உள்ளூர் ஊழல்களைத் தடுப்பதிலும், பக்கத்து வீடு காதல்களை அங்கீகரிப்பதிலும் செயலூக்கத்தோடு இயங்கவும் ஊடகங்கள் உதவுகின்றன.

செய்தித்தாள் என்பது மேற்கை பொறுத்தவரை இறந்த காலம். வாஷிங்டன் போஸ்ட் கிட்டத்தட்ட திவால் ஆகி அமேசான்.காம் எடுத்துக்கொண்டுவிட்டது. சிகாகோ ட்ரிப்யூன், நியு யார்க் டைம்ஸ் என்று இணையத்துக்கு முந்தைய முன்னுமொரு நூற்றாண்டில் கோலோச்சிய பதிப்புகள் எல்லாம் கணக்கு வைப்பு புத்தகங்களில் சிவப்பு மையை கக்கி கடைசி இரத்தங்களை சுரண்டிக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்க இந்தியாவில் மட்டும், எப்படி புதுப் புது பத்திரிகைகள், தினசரிகள், நாவல்கள், வார இதழ்கள் முளைக்கின்றன?

காலை எழுந்தவுடன் ஐ-பேட் கொண்டு கக்கூஸ் போகுபவர்கள் குறைந்த அளவில் இருப்பதால்… வலை மேய்வதற்கான கட்டணம் இரவு நேரங்களில் மட்டும் சல்லிசாக இருப்பதால்… எல்லோருடைய செல்பேசியிலும் தமிழ் எளிதாகத் தெரியாததால்… கட்சிக்கொரு பேப்பர் நடத்துவதால்…

”நாவலாசிரியயர்கள் சொற்றொடர்களாக சிந்திப்பதில்லை; அத்தியாயங்களாக யோசிப்பவர்கள்” என்பார் வர்ஜீனியா வுல்ஃப். நல்ல புனைவாளர்களை முன்னூறு வார்த்தைகளுக்குள் வாரா வாரம் கிறுக்க வைக்கும் சுரேஷ் கண்ணன்கள் ஆக்கி விடாதீர்கள் என்று எண்ண வைத்திருக்கிறது தமிழில் வரும் ’தி இந்து’.